காட்சி - 14.
இடம் : திருஅஞ்சைக்களம்.
பின்குரல் : நம்பிகள் பெருமான் சேர மன்னரின் அரண்மனையில் சிலகாலம் இருந்தார். பின்னர் திருவாரூர்ப் பூங்கோயில் வீற்றிருந்த பிரான் ஈர்க்க சேரரிடம் விடைபெற்றுச் சென்றார். தம் தோழராம் நம்பிகளுக்கு சேரர் பெரும் செல்வம் கொடுத்து அனுப்பினார். சேரமான் தோழராயினும், நம்பி ஆதி முதற்கொண்டு தம்பிரான் தோழரல்லவா? இறைவன் அச்செல்வத்தை எல்லாம் திருவிளையாட்டாகச் சிவ பூதங்களைக் கொண்டு பறிமுதல் செய்து மீண்டும் கொடுத்தருளினர். திருவாரூர் சென்று பலகாலம் இருந்த சுந்தரர் மீண்டும் சேரர் மீதுள்ள கேண்மையால் மலை நாடு வந்தனர். அவ்வாறு கொடுங்கோளூரில் இருக்கும் நாட்களில், ஒருநாள் சேர மன்னர் திருமஞ்சனத் தொழிலில் ஈடுபடும்போது, நம்பிகள் பெருமான் தனித்துத் திருஅஞ்சைக்களம் திருக்கோயிலுக்குச் செல்கின்றார்.
நம்பிகள் : பெருமானே, கயிலையில், மலை வல்லியுடன் கூட வென்றி வெள்விடைப் பாகராய் வீற்றிருக்கும் தேவரீர் திருவடியை அடையும் நாள் எந்நாளோ?
பின்குரல் : அரிய செய்கையில் அவனியில் விழுந்து எழுந்து அலைப்புறும் மனை வாழ்க்கை சரிய நம்பிகள், “தலைக்குத் தலைமாலை...” என்ற பதிகத்தைப் பாடுகின்றார்.
தலைக்குத் தலைமாலை அணிந்த தென்னே
சடைமேற்கங் கைவெள்ளந் தரித்த தென்னே
அலைக்கும் புலித்தோல்கொண் டசைத்த தென்னே
அதன்மேற் கதநாகக் கச்சார்த்த தென்னே
மலைக்குந் நிகரொப் பனவன் றிரைகள்
வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்
டலைக்குங் கடலங் கரைமேல் மகோதை
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
வீடின் பயனென் பிறப்பின் பயனென்
விடையே றுவதென் மதயா னைநிற்க
கூடும் மலைமங் கைஒருத் தியுடன்
சடைமேற் கங்கையாளை நீசூடிற் றென்னே
பாடும் புலவர்க் கருளும் பொருளென்
நிதியம் பலசெய் தகலச் செலவில்
ஆடுங் கடலங் கரைமேல் மகோதை
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
எந்தம் அடிகள் இமையோர் பெருமான்
எனக்கென் றும்அளிக் கும்மணி மிடற்றன்
அந்தண் கடலங் கரைமேல் மகோதை
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனை
மந்தம் முழவுங் குழலு மியம்பும்
வளர்நா வலர்கோன் நம்பியூ ரன்சொன்ன
சந்தம் மிகுதண் டமிழ்மாலை கள்கொண்
டடிவீழ வல்லார் தடுமாற் றிலரே
பின்குரல் : நம்பிகளின் பாடலிற்கு இறங்கும் கயிலைநாதனும், முன்னர் தடுத்த செய்கை முடிந்திட, தம் திருவடிச் சார்பினை தந்து அருள்வாராகி, “ஒன்றிய சிந்தை உடைய நம் ஊரனை உம்பர் வெள்ளை யானையின் மேல் ஏற்றிக் கொண்டு இங்கு வாருங்கள்” என பிரமன் முதலாய தேவர்களுக்குக் கட்டளையிட்டார்.
தேவர் : நம்பிகள் பெருமானே, கயிலை வீற்றிறுக்கும் இறைவரின் அருளிப்பாடு, தாங்கள் இவ்வெள்ளை யானையின்மேல் எழுந்தருள வேண்டுகிறோம்.
பின்குரல் : இறைவன் ஆணையினை மறுக்க இயலாதவராய், நம்பிகள் பெருமான் வெள்ளை யானையின்மேல் எழுந்தருளுகின்றார். அப்போது எல்லா உயிர்களும் கழறிய சொற்களை அறிவாராகிய தம் ஆருயிர் தோழனார் சேரமான் பெருமான் நாயனாரை தம் மனத்தினுள் நினைந்தவாறே செல்கின்றார்.
காட்சி - 15.
இடம் : சேரர் அரண்மனை.
பின்குரல் : சேர மன்னர் தன் நித்திய வழிபாட்டில் மூழ்கி இருக்கின்றார்; அப்பொழுது - இறைவர் ஆணையினை ஏற்று நம்பிகள் பெருமான் வெள்ளானையின் மேல் செல்வதை, யாவும், யாரும் கழறின அறியும் சேரமான் பெருமாள் நாயனார் அறிந்து, நம்பிகள் பெருமான் திருவடிகளைப் பற்றித் தானும் திருக்கயிலைச் செல்லத் துணிகின்றார்.
சேர மன்னர் : சிவ சிவ! என் துணையாம் தலைவர், நம்பிகள் பெருமான் வெள்ளை யானையின்மேல் கயிலாயம் செல்கிறார். அவர் திருவடிகளைப் பற்றி அடியேனும் கயிலைச் செல்வேன்.
காட்சி - 16.
இடம் : திருஅஞ்சைக்களம்.
பின்குரல் : சேரமான் பெருமான் நாயனார் ஓர் குதிரையில் மிக வேகமாக திருஅஞ்சைக்களம் செல்கிறார். ஆனால் அதற்குள் நம்பிகள் பெருமான், தேவர்கள் புடைசூழ விண்மேல் செலக்காண்கிறார்.
சேர மன்னர் : நம்பிகள் பெருமானே! என் கண்ணின் மணியாக இருக்கும் தங்களைப் பிரிந்து வாழேன்.
பின்குரல் : சேர மன்னர் தான் வந்த குதிரையின் செவியில் சிவமந்திரத்தை கூற, அக்குதிரை ஆகாயத்திலே பாய்ந்து சென்று வன்தொண்டர் பெருமானைத் தாங்கிச் செல்லும் வெள்ளை யானையை வலங்கொண்டு அதன் முன்னதாகச் சென்றது. சேரமான் பெருமான் நாயனாரின் பெருஞ்சேனை வீரர்கள், தங்கள் அன்புக்குரிய சேரர் பெருமானை பிரிய ஆற்றாது, தத்தம் உடைவாளினால் தங்களை வீழ்த்த, வீர யாக்கையினைப் பெற்று சேரர் பெருமானைச் சார முன்னே சென்று அவரது பணியினை ஏற்றனர். நம்பிகள் பெருமான் “தானெனை முன்படைத்தான்...” பதிகப் பாடலை அருளிச் செய்கிறார்.
தானெனை முன்படைத் தானத
றிந்துதன் பொன்னடிக்கே
நானென பாடலந் தோநாயி
னேனைப் பொருட்படுத்து
வானெனை வந்தெதிர் கொள்ளமத்
தயானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய் தான்நொடித்
தான்மலை உத்தமனே
இந்திரன் மால்பிர மன்னெழி
லார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன் னைமத்த
யானை அருள்புரிந்து
மந்திர மாமுனி வர்இவ னாரென
எம்பெருமன்
நந்தமர் ஊரனென் றான்நொடித்
தான்மலை உத்தமனே
காட்சி - 17.
இடம் : திருக்கயிலை.
பின்குரல் : சேரரை திருக்கயிலைக் காவலர் நந்தியம் பெருமான் தடுத்து நிறுத்த, நம்பிகள் பெருமான் திருக்கயிலாயத்தினுள் இறைவனைக் காண செல்கின்றார்.
இறைவர் : ஊரனே வந்தனை.
நம்பிகள் : கயிலைப் பெருமானே, அடியேன் செய்த பிழையினைப் பொறுத்து எனை ஆட்கொண்டு, என் பிழையினால் போந்த தொடக்கினை நீக்கி முடிவிலா நெறியாகிய தேவரீர் திருவடிப் பேற்றினை தருகின்ற பெரிய கருணை சிறியேனது தரத்திற்கு தகுதியாமோ? கயிலை நாதனே! தேவரீர் அருள்பெற வந்த சேரலன் தேவரீரது கோயிலின் திருஅணுக்கன் திருவாயிலின் புறத்தில் உள்ளார்.
இறைவர் : அவரை அழைத்து வருக.
[சேர மன்னர் சிரமேல் கைகுவித்து வருகிறார்.]
இறைவர் : சேரலனே, நாம் அழையாமல் இங்கு நீ வந்தது என்ன?
சேரர் : பெருமானே, அடியேன் நம்பிகளுடைய திருவடிகளைப் போற்றிக் கொண்டு, அவர் அருளினால் யானையில் முன்னே அவரைச் சேவித்துக் கொண்டு வந்தேன். தேவரீரது பொழிகின்ற கருணைப் பெருவெள்ளமானது அடியேனை முந்திக் கொண்டு வந்து இங்கே நிறுத்தியதால் தேவரீரது திருமுன்பு வந்து சேரும் பேறும் பெற்றேன். மணமுடைய கொன்றை மலர் மாலையினை அணிந்த சடையினையுடைய பெருமானே, மேலும், ஒரு விண்ணப்பம் உள்ளது பெருகுகின்ற வேதங்களும் முனிவர்களும் துதித்தற்கரிய பெருமையை உடையவரே! உமை அன்பினாலே திருஉலாபுறம் பாடினேன் அதனை தேவரீர் திருச்செவி சாத்தி கேட்டு அருள வேண்டும். மருவு பாசம் அகன்றிட வன்தொண்டர் கூட்டம் வைத்தாய்.
இறைவர் : சொல்லுக.
[சேரர் திருக்கயிலாய ஞான உலா பாடுகின்றார்.]
வெண்பா விரித்துரைக்கும் போழ்தில் விளங்கொளிசேர்
கண்பாவு நெற்றிக் கறைக்கண்டன் - விண்பால்
அரிஅரணஞ் செற்றாங் கலைபுனலும் பாம்பும்
புரிசடைமேல் வைத்த புராணன் - எரிஇரவில்
ஆடும் இறைவன் அமரர்குழாம் தற்சூழ
மாட மறுகில் வரக்கண்டு - கேடில்சீர்
வண்ணச் சிலம்படி மாதரார் தாமுண்ட
கண்ணெச்சில் எம்மையே ஊட்டுவான் - அண்ணலே
வந்தாய் வளைகவர்ந்தாய் மாலும் அருந்துயரும்
தந்தாய் இதுவோ தகவென்று - நொந்தாள்போற்
கட்டுரைத்துக் கைசோர்ந் தகமுருகி மெய்வெளுத்து
மட்டிவரும் பூங்கோதை மால்கொண்டாள் - கொட்டிமைசேர்
பண்ணாரும் இன்சொற் பணைப்பெருந்தோள் செந்துவர்வாய்ப்
பெண்ணார வாரம் பெரிதன்றே - விண்ஓங்கி
மஞ்சடையும் நீள்குடுமி வாள்நிலா வீற்றிருந்த
செஞ்சடையான் போந்த தெரு
இறைவர் : ஊரனாகிய ஆலால சுந்தரனுடனே கூடி விரும்பி இருந்து நீவிர் இருவரும் சார நம் கணங்களுக்கு நாயகராகிய தலைமை பெற்று இருப்பீராக.
பின்குரல் : இரு பெருமக்களும் பணிந்து எழுந்து இறைவரது திருவளினை தலைமேல் கொண்டு நிலைபெற்ற வன்தொண்ட பெருமான் ஆலால சுந்தரராகவும், முதன்மை உடைய சேரனாரும் நன்மை சேரும் சிவ கணநாதராகி அவர்கள் செய்யும் விருப்ப மிக்க திருத்தொண்டினை மேற்கொண்டனர். வாழி மாதவர் ஆலால சுந்தரர் திருக்கயிலை நோக்கி வரும் வழியிலே அருளிச் செய்த “தானனை முன்படைத்தான்” எனும் திருப்பதிகத்தினை முந்நீர் கடலின் அரசனாகிய வருணன் திருஅஞ்சைக்களத்தில் சேர்த்து உணர்வித்தான். சேரர் பெருமான் விண்ணப்பித்தருளிய திருக்கயிலாய ஞான உலாவினை கயிலை மலையினில் உடனிருந்து கேட்ட மாசாத்தனார், இந்த நிலவுலகத்தில் வேதியர்கள் வாழும் திருப்பிடவூரில் வெளிபடச் சொல்லி அருளி கடல் சூழ்ந்த இவ்வுலகினில் எங்கும் நன்மையாலே விளங்கிட அருளினார்.
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்றுளார் அடியார் அவர் வான் புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம்
திருச்சிற்றம்பலம்
|