logo

|

Home >

hindu-hub >

temples

திருப்பருப்பதம் - (ஸ்ரீசைலம் ஜோதிர்லிங்கம் )

இறைவர் திருப்பெயர்: மல்லிகார்ச்சுனர், ஸ்ரீசைலநாதர், சீபர்ப்பதநாதர்.

இறைவியார் திருப்பெயர்: பிரமராம்பிகை.

தல மரம்:

கதலி, மல்லிகை, மருது

தீர்த்தம் : கிருஷ்ணவேணி நதி, பர்வத தீர்த்தம், பாலாழி முதலான பல தீர்த்தங்கள் உள்ளன.

வழிபட்டோர்:இராமர், நாரதர், பாண்டவர், ஹிரண்யகசிபு, சம்பந்தர், அப்பர், சுந்தரர், நக்கீரதேவ நாயனார்,பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், சங்கர பகவத்பாதர், ரேணுகாச்சார்யார், அக்க மஹாதேவி, ஹேமரெட்டி மல்லம்மா முதலியோர்

Sthala Puranam

  • வட நாட்டுப் பாடல் பெற்றத் தலங்களில் இது முதலாவது தலமாகும். 
  • மக்கள் வழக்கில் தற்போது "ஸ்ரீசைலம்" என்று வழங்குகிறது.
  • ஸ்ரீ  சைலத்தைப் பல நூல்கள்  புகழ்ந்து பேசுகின்றன. ஸ்கந்த மகா புராணத்தில் வரும் ஸ்ரீ சைல காண்டம், இத்தலத்தைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. மேலும் மகாபாரத வன பர்வம், பத்ம புராண உத்தர காண்டம், மார்க்கண்டேய புராணம், சிவ புராண ருத்ர ஸம்ஹிதை, பாகவத பத்தாம் ஸ்கந்தம்,ஆதித்ய புராண சூத ஸம்ஹிதை,, ரச ரத்னாகர ரசாயன காண்டம், ஆதி சங்கரரின் சிவானந்த லஹரி, சோமேஸ்வரரின் கதா சரித்ர சாகரம், மாலதி மாதவம், பாணபட்டரின் காதம்பரி, ரத்னாவளி, ஆகியவை  இத்தலத்தின் மகிமையைக்  கூறும் நூல்களாகும். 
  • ஒருமுறை, சந்திராவதி என்ற இளவரசி, தவம் மற்றும் தியானம் செய்யக் காட்டிற்குச் செல்ல முடிவு செய்தாள். இதற்காக கதலி வனத்தைத் தேர்ந்தெடுத்தாள். ஒரு நாள், அவள் ஒரு அதிசயத்தைக் கண்டாள். ஒரு கபில பசு பில்வ மரத்தின் கீழ் நின்று கொண்டிருந்தது, அதன் நான்கு மடிகளிலிருந்தும் பால் வடிந்து, தரையில் மூழ்கியது. மாடு இதை அன்றாடம் ஒரு வழக்கமான வேலையாக செய்து வந்தது. சந்திரவதி அந்தப் பகுதியை தோண்டி எடுத்து பார்த்ததில் அதிசயித்தாள். அங்கு ஸ்வயம்பு சிவலிங்கம் இருந்தது. அது சூரியக் கதிர்களைப் போல பிரகாசமாக இருந்தது, மேலும் அது எரிவது போல் இருந்தது, எல்லா திசைகளிலும் தீப்பிழம்புகளை வீசியது. சந்திராவதி இந்த ஜோதிர்லிங்கத்தில் மல்லிகை மலர்களால் சிவபெருமானைப் பூஜித்தாள். அவள் அங்கே ஒரு பெரிய சிவாலயத்தைக் கட்டினாள். அவள் மீது சங்கரர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். சந்திரவதி காற்றில் கைலாசத்திற்குச் சென்றாள். முக்தியையும் பெற்றாள். கோயிலின் கல்வெட்டு ஒன்றில், சந்திராவதியின் கதை செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
  • சிலாத முனிவர் தவஞ்செய்த தலமாதலின் இஃது ஸ்ரீசைலம் எனப்படுகிறது. நந்தியம்பெருமான் இத்தலத்தில் தவஞ்செய்து இறைவனைச் சுமக்கும் ஆற்றலைப் பெற்றார் என்றும்; நந்தியே இங்கு மலையாக இருந்து பெருமானைத் தாங்குகிறார் என்றும் தலபுராணம் கூறுகிறது.
  • சிவபக்தையான அக்கமஹா தேவியை கௌசிகன் என்ற ஜைன அரசன் மணக்க விரும்பியபோது, அதற்கு சம்மதிக்காத அக்கமஹா தேவி, அரசனை வீர சிவன் ஆக்குவேன் எனக் கூறிவிட்டு, அவனை சந்திக்கச் சென்றாள் . அரசனின் தவறான  செய்கையால் மனம் நொந்து, தவத்தை மேற்கொண்டு இறைவனது கழலடிகளை அடைந்தாள். ஸ்ரீ சைல ஆலய வளாகத்தில் அக்க மகா தேவியின் திருவுருவச் சிலை பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது.
  • ஸ்ரீ சைலத்திற்கு அருகிலுள்ள ராமாபுரம் என்ற ஊரில் 14 ம் நூற்றாண்டில் வசித்து வந்த  நாகி ரெட்டி- கௌரம்மாள்  இருவரும் பிள்ளை வரம் வேண்டி ஸ்ரீ சைலம் வந்தனர். இறைவனருளால் அவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது.  அக்குழந்தை மல்லம்மா என்று அழைக்கப்பட்டாள். வயது வந்தவுடன் அவளை ,அருகிலுள்ள சித்தாபுரத்தைச் சேர்ந்த பரமா ரெட்டி என்பவனுக்கு மணம் செய்து வைத்தனர். புகுந்த வீட்டுக்கு மல்லம்மா வந்தவுடன் அங்கு பசுக்களும் விளைச்சலும் பல மடங்கு அதிகரித்தன. ஏழைகளுக்கு மல்லம்மா உதவி செய்து வந்தாள் . இதைக் கண்டு பொறாமை  கொண்ட உற்றார் உறவினர்கள், அவளது கணவனிடம் சென்று   வீண் பழி சுமத்தி அவனைக் கோபமுறச் செய்தார்கள். அதை உண்மை என நம்பிய கணவனும், மல்லம்மாவைக் கொன்று விட நினைத்து அவளிடம் சென்றான். ஆனால் அவளோ மெய் மறந்து சிவபூஜை செய்து கொண்டிருப்பதைக் கண்டு தனது செயலுக்கு வருந்தினான். மல்லம்மாவும், தவறு செய்த அனைவரையும் மன்னித்து, அனைவருக்கும் சிவ மகிமையைப் போதித்து, கடைசியில் பெருமானுடன் ஐக்கியம் ஆனாள்.  ஸ்ரீ சைல ஆலயத்தில் பின் பிராகாரத்தில் மல்லமாவின் பசுத் தொழுவம் இருக்கிறது. அருகில் மல்லம்மாவின் விக்கிரகமும் இருக்கிறது. 
  • மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சோலாப்பூரில் 12 ம் நூற்றாண்டில் முத்தன்ன கெளட் -  சுகுலா தேவி என்ற வயோதிக தம்பதியர் வசித்து வந்தனர். பிள்ளை இல்லாத அவர்களுக்குக் குலகுருவான ரேவண சித்தர்  ஒருநாரத்தம் பழத்தைக் கொடுத்து, சிவ பூஜை செய்து வருமாறு ஆசி வழங்கினார். அப்படியே  செய்த அத்தம்பதியருக்கு ஒரு மகன் பிறந்தான். சித்தர் அருளால் பிறந்ததால் அக்குழந்தைக்கு ஸித்தப்பா  எனப் பெயரிட்டனர். அச் சிறுவனுக்கு ஆறு வயதான போது ஒரு வயோதிகர் அவன் முன் தோன்றித்  தன் பெயர்  மல்லையா என்றும் தான்  மிகவும் பசியோடு இருப்பதாகவும் கூறவே, ஸித்தப்பா  ஓடோடிச் சென்று அவரது பசி தீர்க்க வேண்டி உணவும் பாயசமும் கொண்டு வந்தான். ஆனால் அங்கு வயோதிகர் காணப்படவில்லை. அவரது பெயரைக் கூவிக் கொண்டு ஸ்ரீ சைலம் செல்லும்  பக்தர்களோடு உணவு எதுவும் உட்கொள்ளாமல் ஸ்ரீ சைலத்தை அடைந்தான். மல்லையா என்பவரைப் பார்த்தீர்களா என்று பக்தர்களைக் கேட்டபோது, அதற்கு அவர்கள் மல்லிகார்ஜுன லிங்கத்தைக் காட்டி, " இவரே மல்லையா " என்றனர். சிறுவனானபடியால் அதனை நம்பாமல் தேடுவதைத் தொடர்ந்தபோது ஓரிடத்தில் கையிலிருந்த பாயசத்துடன் ஒரு பள்ளத்தில் தவறிப்போய் விழும் தருவாயில் சுவாமி அவன் முன் தோன்றி அவனைக் காப்பாற்றினார். இன்று அப்பள்ளம் , ஸித்தராமப்பா குளம் எனப்படுகிறது.  பின்னர் தனது ஊரை அடைந்த ஸித்தராமப்பா , அங்கு ஓர் சிவாலயத்தைக் கட்டினான். அதில் வேலை செய்தவர்களுக்குக் குளத்து மண்ணைக் கூலியாகக் கொடுத்தான். அது தங்கத் துகளாக மாறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பின்னர் , தான் வெட்டியகுளத்திலேயே ஜீவசமாதி அடைந்தான். பிற்காலத்தில் அங்கு ஸித்தராமேஸ்வரர்  ஆலயம் எழுப்பப்பட்டது. 
  • ஸ்ரீ சைலத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் கேசப்பா என்ற குயவன் மண்பாண்டங்கள் விற்று அந்த வருமானத்தில் சிவ பக்தர்களுக்கு அன்னம்  பாலித்து வந்தான். அதனைக் கண்டவர்கள் அவனது மண்பாண்டங்களையும் சக்கரத்தையும் உடைத்து விடவே, சிவராத்திரிக்கு வரும் பக்தர்களுக்கு எவ்விதம் உணவு அளிப்பேன் என்ற ஆழ்ந்த கவலையோடு இருந்தான். அப்போது அவனது வீட்டுப் பரணில் சுவாமி தங்கலிங்க மயமாகப் ப்ரத்யக்ஷமாகி, "அஞ்சாதே, உனது வீட்டில் குறைவில்லாமல் எப்போதும் உணவு அளித்து வருவாயாக "  என்று அருளினார்.  வீட்டிற்குள் சென்ற கேசப்பா, பாத்திரங்கள் நிறையப் பல உணவு வகைகளைக் கண்டு, திருவருளை வியந்தவனாக, அடியார்களுக்கு அன்னம் பாலித்தான். அவ்வாறு பெருமான் அவனுக்குக் காட்சி அளித்த இடம், அடிகேச்வரம்  எனப்படுகிறது. 
  • ஸ்ரீசைலத்தைச் சேர்ந்த உமாமகேசுவரத்தில் இருந்த சிற்பி இரு நந்தி சிலைகளைச் செய்தான். அவற்றை கிருஷ்ணா நதியைத் தாண்டி எவ்வாறு ஸ்ரீ சைலத்திற்குக் கொண்டு செல்வது என்று கவலையில் ஆழ்ந்தான். அவனது கனவில் தோன்றிய இறைவன், ஒரு கயிற்றைக் கொடுத்து, அதைக் கொண்டு நந்திகளைத் திரும்பிப் பார்க்காமல் இழுத்துச் செல்லும்படி கட்டளை இட்டார். துயில் நீங்கிக் கயிற்றைக் கண்ட சிற்பி, அதைக் கொண்டு இரு நந்திகளையும் பிணைத்து இழுத்து வரும்போது, ஒரு நந்தி  பாறைகளிடையே சிக்கவே, திரும்பிப் பார்த்தான். அதனால் அந்த நந்தி அங்கேயே நின்று விட்டது. மற்றொரு நந்தியை மட்டுமே ஸ்ரீ சைலத்திற்குக் கொண்டு வந்தான் என்று  சொல்வார்கள். ஆற்றின் நடுவில் உப்பிலி பசவண்ணா என்று பக்தர்களுக்குத் தரிசனம் அளித்து வந்த நந்தி இப்போது ஸ்ரீ சைலம்  அணைக்கட்டில் ஆழத்தில் மூழ்கி இருக்கிறது.
  • மகாசிவராத்திரியின் போது சத்ரபதி சிவாஜி ஜோதிர்லிங்கத்தை தரிசனம் செய்ய வருவார். கோயிலின் வலது பக்கத்தில் ஒரு கோபுரத்தைக் கட்டினார்.  

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்    :   சம்பந்தர்      - 1. சுடுமணி யுமிழ்நாகஞ் (1.118);                     அப்பர்       - 1. கன்றினார் புரங்கள் (4.58);                    சுந்தரர்       - 1. மானும்மரை இனமும்மயில் (7.79); பாடல்கள்     :  சம்பந்தர்       -        மலையினார் பருப்பதந் (1.76.1),                                           அண்ணாமலை (2.39.2),                                            பரிய மாசுணங் (2.95.6);                    அப்பர்        -        போகமார் (4.66.8),                                           பொருப்பனை (5.17.9),                                           நெருப்பி னாற் (5.30.7),                                           தெய்வப் புனற்கெடில (6.07.6),                                           பாரார் பரவும் (6.22.1),                                           வேலைசேர் (6.23.7),                                           திருமணியைத் (6.29.1),                                           மண்ணிலங்கு (6.59.5),                                           கார்மல்கு (6.82.5),                                           உருத்திரனை (6.90.5),                                           குராமலரோ (6.96.11);          நக்கீரதேவ நாயனார்   -        மயலைத் தவிர்க்கநீ (11.10.25 & 35) கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி;     பட்டினத்துப் பிள்ளையார்   -        மணியார் (11.30.57 & 58) திருஏகம்பமுடையார் திருவந்தாதி;        நம்பியாண்டார் நம்பி    -        வையம் மகிழயாம் வாழ (11.34.34) திருத்தொண்டர் திருவந்தாதி,                                           பதிகப் பெருவழி (11.35.2) ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி;             சேக்கிழார்           -        அங்கண் மா மலைமேல் (12.21.348) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                            கூற்றுதைத்தார் (12.28.1027) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                            வட மாதிரத்துப் பருப் பதம் (12.29.198) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்,                                            கங்கை நீர்த் துறை ஆடிக் (12.30.4) திருமூல நாயனார் புராணம்,                                            திருப்புன வாயில் பதியில் (12.37.119) கழறிற்றறிவார் நாயனார் புராணம்.

Specialities

பன்னிரண்டு "ஜோதிர்லிங்கங்களுள்" இத்தலமும் ஒன்று. பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களாவன 1. "சோமநாதம்" - குஜராத்திலும், 2. வைத்தியநாதம், 3. பீமசங்கரம், 4. நாகேசம், 5. த்ரயம்பகம், 6. குஸ்மேசம் முறையே - மகாராஷ்டிரத்திலும், 7. ஸ்ரீசைலம் - ஆந்திராவிலும், 8. ஓங்காரம், 9. உஜ்ஜையினி முறையே - மத்தியப் பிரதேசத்திலும், 10, விச்வேசம் (வாரணாசி), 11. கேதாரம் முறையே - உத்திரப் பிரதேசத்திலும், 12. இராமேசுவரம் - தமிழ்நாட்டிலும் உள்ளன.

 

  • குருக்ஷேத்திரத்தில்  தானங்கள் செய்தல் , கங்கையில் நீராடுதல் , நர்மதைக் கரையில் வாசம் செய்தல் காசியில் வசித்தல் ஆகிவற்றால் ஏற்படும்  பலன்களைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு அதிக பலனை ஸ்ரீ சைல மல்லிகார்ஜுன ஜோதிர் லிங்கத்தைத் தரிசிப்பதால் பெறலாம் என்று ஸ்காந்த மகா புராணம் கூறுகிறது. ஸ்ரீ சைல சிகரத்தைக் கண்டால் மறு பிறவி இல்லை என்று சொல்லப்படும்.
  • அர்ஜுன (மருத) விருக்ஷத்தைக் கொண்ட தலங்கள் மூன்று. அவையாவன, மல்லிகார்ஜுனம்,புடார்ஜுனம் மற்றும் மத்யார்ஜுனம் என்பதாம். இதில் மல்லிகார்ஜுனம் என்பது ஸ்ரீ சைலத்தையும், புடார்ஜுனம் என்பது திருநெல்வேலிக்கு அருகிலுள்ள திருப்புடை மருதூரையும் மத்யார்ஜுனம் என்பது கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருவிடைமருதூரையும் குறிக்கும்.
  • பரந்து விளங்கும் இந்த க்ஷேத்திரத்திற்குப் பிரகாசம் ஜில்லாவிலுள்ள திரிபுராந்தகம் , கிழக்கு வாயிலாகவும், கடப்பா ஜில்லாவிலுள்ள சித்த வடம் தெற்கு வாயிலாகவும், மெகபூப் நகர் ஜில்லாவிலுள்ள அலம்புரம் ,மேற்கு வாயிலாகவும், உமாமகேசுவரபுரம் வடக்கு வாயிலாகவும் விளங்குகின்றன.
  • இதன் தென்கிழக்கில் புஷ்பகிரி க்ஷேத்திரமும், தென்மேற்கில் சோமசீல க்ஷேத்திரமும் , வடமேற்கில் சங்கமேசுவர க்ஷேத்திரமும், வட கிழக்கில் எல்லேச்வர க்ஷேத்திரமும் விளங்குகின்றன. 
  • விஜயவாடாவிலிருந்து ஸ்ரீ சைலம் வரும் வழியில் சுமார் 80 கி.மீ. தொலைவில் குமார கிரியில் திரிபுராந்தகேச்வரர் கோயில் உள்ளது. முற்காலத்தில் ஸ்ரீ சைலத்திற்குக் கால்நடையாகச் சென்ற பக்தர்கள் முதலில் இங்கு தரிசித்து விட்டுச் செல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. முருகப்பெருமான் தாரகாசுரனை வதம் செய்த இடமாதலால் குமார கிரி எனப்பட்டது. திரிபுராதிகளை வென்ற பரமேசுவரன், திரிபுரசுந்தரியோடு இங்கு கோயில் கொண்டுள்ளார். ஸ்ரீ சைல காண்டத்தில் இத்தலத்தின் பெருமை பேசப்பட்டுள்ளது. இங்கு வடபுறம் உள்ள குன்றில் தாரகாசுரன் பூஜித்த சிவலிங்கம், தாமிர தீர்த்தம் ஆகியவை உள்ளன. மேற்புறக் குன்றில் விஷ்ணு பூஜித்த சிவலிங்கம், ஜானவி தீர்த்தம் ஆகியவை உள்ளன. இங்கிருந்து காசிக்கும்,ஸ்ரீ சைலத்திற்கும் சுரங்க வழி இருப்பதாகச் சொல்வர்.
  • ஸ்ரீ சைலத்தின் தென்வாயிலாகக் கூறப்படும் சித்தவடம் சுமார் 500 கி.மீ. பரப்பளவு உடையது. அகஸ்த்ய,அத்ரி,ப்ருகு,வசிஷ்டாதி முனிவர்களும், சித்தர்களும் வாழ்ந்த இடம் இது ஸ்காந்தத்தில் ஸ்ரீ பர்வத காண்டத்தில் இங்கு அனேக வனங்களும், சிகரங்களும், நதிகளும்,தீர்த்தங்களும், சிவ லிங்க மூர்த்திகளும் இருப்பது பற்றி விவரிக்கப்படுகிறது. இங்கு வாசம் செய்து,பினாகினி நதியில் நீராடி சித்தேசுவரரைத் தரிசித்தால் ஜீவன் முக்தி பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. சித்தேசுவரர், பால சித்தேசுவரர், கண்டா சித்தேசுவரர், கன்யா சித்தேசுவரர், இஷ்ட சித்தேசுவரர், வியாம சித்தேசுவரர், பஸ்ம சித்தேசுவரர், பிக்ஷா சித்தேசுவரர், பில சித்தேசுவரர், புரா சித்தேசுவரர், ஜல சித்தேசுவரர், ஆகிய சித்தி தர வல்ல லிங்கங்களை இங்குக் காணலாம். காசிக்குச்  சமமான இங்கு வாசம் செய்வதாலும், உயிர்நீப்பதாலும் லிங்க ஸ்வரூபத்தை அடையலாம் என்று ஸ்காந்தம் விவரிக்கிறது. வட பெண்ணை நதிக்கரையில் உள்ள சித்தவடத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி பிரபலமானது.
  • கர்நூலிலிருந்து ஹைதராபாத் செல்லும் வழியிலுள்ள அலம்புரம் ரயிலடிக்கு9 கி.மீ. தொலைவில் யோகாம்பிகா சமேத பால ப்ரம்மேசுவரர் ஆலயம் உள்ளது. நவ பிரம்மாக்களின் சன்னதியோடு கூடிய இக் கோயிலில் யோகாம்பிகா தேவி சக்தி பீட நாயகியாகக் காக்ஷி  அளிக்கிறாள்.  பயங்கர வடிவுடன் காட்சி அளிக்கும் இத்தேவியைப் பக்தர்கள் நேராகத் தரிசனம் செய்யாமல் பக்க வாட்டில் இருந்தே தரிசிக்கிறார்கள். தக்ஷிண காசியாகச் சொல்லப்படும் இத்தலத்தில் ப்ரம்மேசுவரரே காசி விச்வநாதர்.; துங்க பத்திரையே கங்கை.  காசியைப் போலவே இங்கும் கணபதி, கால பைரவர் சன்னதிகளும் 64 படித்துறைகளும் உள்ளன.  
  • ஸ்ரீ சைலத்தின் வடக்கு வாயிலாகத் திகழும் உமாமகேசுவரபுரம், ஹைதராபாத் செல்லும் வழியில் மன்னனூர் அல்லது ரங்காபுரத்திலிருந்து 3கி.மீ. தொலைவில் உள்ளது.மலை மீதும் அடிவாரத்திலும் இரு சிவாலயங்கள் உள்ளன. இங்குள்ள ருத்ர தாரகையில் நீராடி, சுவாமி தரிசனம் செய்பவர்களைப் பத்து தலைமுறையினர் வணங்குவார்கள். இங்கு செய்யும் தானங்களின் பலன் அளவிட முடியாதது. அந்திம காலத்தை இங்குக் கழிப்பவர்கள், ஈசுவரனோடு இரண்டறக் கலப்பர். குபேரனால் காக்கப்படும் இந்த ஸ்தலத்தை வழிபடுவதற்கு, ரிஷிகளும் சகல தேவதைகளும் மகா சிவராத்திரியன்று வருகிறார்கள் என்று புராணம் கூறும். இங்குள்ள மாமரத்தின் பழத்திலுள்ள வண்டினை நீக்கிவிட்டுப் பாலுடன் கலந்து 21நாட்கள் உண்டு வந்தால் தேகம் வஜ்ரம் போல் ஆகும் என்றும் இங்கிருந்து காத தூரத்திலுள்ள பத்மாவதி குகையிலுள்ள மிருதங்கத்தை வாசித்தால் அம்பிகை தோன்றி, அமிர்தம் வழங்கி தேவ பதவியை அளிப்பாள் என்று ரத்னாகரம் என்ற நூல் கூறுகிறது.
  • ஸ்ரீ சைலத்தின் தென்கிழக்கு வாசலான சோம சீலம் , நெல்லூர்-கடப்பா வழியில் வடபெண்ணை நதிக் கரையில் உள்ளது . ஸ்கந்தன் என்ற ரிஷி தான் கொண்டு வந்த சிவலிங்கத்தை சோம தீர்த்தக் கரையில் வைத்து விட்டு நீராடச் சென்றார். இதற்குள் சிவலிங்கமானது அவ்விடத்திலேயே பிரதிஷ்டை ஆகி விட்டது. அந்த ரிஷியின் பெயரால் சுவாமி ஸ்கந்த ஸோமேசுவரர் எனப்படுகிறார். கோயிலின் முன்பு ஓர் ஆலமரம் உள்ளது.
  • பிரசூனாசலம் எனப்படும் புஷ்பகிரி ஸ்ரீ சைலத்தின் தென்மேற்கு வாயிலாகக் கருதப்படுகிறது. இது கடப்பா ஜில்லாவில் பெண்ணை நதிக் கரையில் உள்ளது. ஒருசமயம் கருடன் இந்திரலோகத்திலிருந்து அமிர்த கலசத்தை எடுத்து வரும்போது அதிலிருந்து ஒரு துளி புஷ்பகிரியில் உள்ள தடாகத்தில் விழவே, அங்கிருந்த மக்கள் அதை அருந்தி, பிறப்பு இறப்பு இன்றி வாழ்ந்தனர். கடைசியில் ஹனுமான் ஒரு பாறையைக் கொண்டு அதனை மூடினான். அம்மலையோ பூவைப்போல அத் தடாகத்தில் மிதந்தது. மும்மூர்த்திகள் அதனை நிலை பெறச் செய்தனர். இங்கு ஆதிகேசுவரர், சந்தான மல்லேசுவரர், லக்ஷ்மி, ஹனுமான் சன்னதிகள் உள்ளன.
  • கர்னூல் ஜில்லா நந்தி கொட்கூருக்கு 20  கி.மீ. தூரத்திலுள்ள சங்கமேசுவரம்,  ஸ்ரீ சைலத்தின் உப த்வாரமாக/ வட மேற்கு வாயிலாக  ஸ்ரீ சைல காண்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. கிருஷ்ணா, வேணி, துங்கா, பத்ரா, பீமரதி,  மால, பவநாசனி ஆகிய ஏழு நதிகளும் இங்கு சங்கமிக்கின்றன. கிரகண காலத்தில் ஏழு கடல்களும், சகல தீர்த்தங்களும் இங்கு சங்கமிக்கின்றன. இதுபோன்ற புண்ணிய காலங்களில் இந்த நிவர்த்திசங்கமத்தில்  நீராடினால் யாக பலன் கிட்டும். கல்மாஷபாதன்,விசுவாமித்திரர், சாண்டில்யர், கபிலர் ஆகிய ரிஷிகளும் இங்கு வந்து தவம் செய்துள்ளனர்.
  • வடக்கு வாயிலான ஏலேசுவரம், பல படை எடுப்புக்களுக்கு ஆளாகித் தற்போது நாகார்ஜுனசாகர் அணையில் மூழ்கியுள்ளது. அதனைத தற்காலத்தில்  புனர் நிர்மாணம் செய்துள்ளனர்.
  • காலப்போக்கில் அழிந்தவை போக , ஐந்து மடங்கள் ஸ்ரீசைல ஆலயத்திற்குத்  தென்மேற்கில் சுமார் 2 கி.மீ. தொலைவில் சிதிலமடைந்து காணப்படுகின்றன. அவையாவன: மிகப் பழமையான கண்டா மடம். இங்கு கண்டா சித்தேசுவரர் சன்னதியும், வற்றாத கண்டா கர்ண தீர்த்தமும் உள்ளன. அருகில் பீமசங்கரர் மடம், வீர பத்திரர் ஆலயம் ஆகியன உள்ளன. மேலும் விபூதி மடம் , ருத்ராக்ஷ மடம் ,சாரங்கேசுவர முனிவர் வாழ்ந்த சாரங்க தாரா மடம் ஆகியவை உள்ளன.
  • சக்தி பீடத்தில் இத்தலம் பிரமராம்பாள் பீடமாகப் போற்றப்படுகிறது.
  • சம்பந்தரும், சுந்தரரும் திருக்காளத்தியை வணங்கிய பின்னர், அங்கிருந்தே வடக்கு நோக்கித்தொழுது பாடிப் பரவினர். அப்பர் பெருமான் தம்முடைய கயிலையாத்திரையில் இத்தலத்திற்கு எழுந்தருளி வழிபட்டுப் பாடியுள்ளார்.
  • சம்பந்தர், அப்பர் திருப்பதிகங்களில் இத்தலம் "திருப்பருப்பதம்" என்றும், சுந்தரர் திருப்பதிகத்தில் "சீபர்ப்பதம்" என்றும் குறிக்கப்படுகிறது.
  • தேவார திருமுறைப் பதிகங்களைப் பெற்றுள்ள மூன்று ஜோதிர்லிங்கத் தலங்களுள் இத்தலமும் ஒன்று. ஏனைய இரண்டும் இராமேசுவரம் மற்றும் திருக்கேதாரம் ஆகும்.
  • இத்தலம் அர்ஜுனத் தலமாகும். மருதமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ள தலங்கள் மூன்று; அவை அர்ஜுனத் தலங்கள் எனப்படுகிறது. இத்தலம் அவற்றுள் மல்லிகார்ஜுனம் எனப்படும். ஏனையவை (1) திருவிடைமருதூர் - மத்தியார்ஜுனம், (2) திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்திற்கு அருகில் உள்ள திருப்புடைமருதூர் - புடார்ச்சுனம் என்பனவாகும்.
  • மேதி, ரவி, ஜுவி என்னும் மூன்று மரங்களின் சேர்க்கையே (மற்றொரு தலமரமான) திரிபலா மரம் என்பர். தத்தாத்ரேயர் இம்மரத்தினடியில் தவஞ்செய்ததால் இஃது தத்தாத்ரேய விருக்ஷம் என்றும் சொல்லப்படுகிறது. இம்மரம் விருத்த மல்லிகார்ஜுனர் கோயிலில் உள்ளது. [இங்கு கரவீரம் என்னும் பழமையான மரமும் உள்ளது.]
  • கோயில் அமைந்துள்ள இம்மலையடிவாரத்தில் கிருஷ்ணா நதி ஓடுகிறது; இந்நதியைப் பாதாள கங்கை என்று கூறுகின்றனர்.
  • இத்தலத்திற்கு அருகில் நந்திமலை, நந்தியால் உள்ளன. இம்மலைப்பகுதியை "பூகயிலாயம்" என்று புகழ்வர் வீரசைவர்கள்.
  • இம்மலையில் எட்டு சிகரங்களும், ஒன்பது நந்திகளும் உள்ளன. அவை முறையே, சிகரங்களாவன - 1. வைடூரிய சிகரம், 2. பரவாளி சிகரம், 3. ரெளப்ய சிகரம், 4. மாணிக்கச் சிகரம், 5. மரகத சிகரம், 6. பிரம்ம சிகரம், 7. க்ஷேமா சிகரம், 8. வஜ்ர சிகரங்கள் ஆகும்; நந்திகளாவன - 1. பிரதம நந்தி, 2. நாக நந்தி, 3. விநாயக நந்தி, 4. கருட நந்தி, 5. சிவ நந்தி, 6. மகா நந்தி, 7. சூரிய நந்தி, 8. விஷ்ணு நந்தி, 9. சோம நந்தி என்பனவாகும். அவ்வாறே இங்கு 1. பிரமேஸ்வரம், 2. ஜனார்த்தனேஸ்வரம், 3. வருணேஸ்வரம், 4. ஹேமேஸ்வரம், 5. சப்தகோடீஸ்வரம், 6. மோக்ஷேஸ்வரம், 7. இந்திரேஸ்வரம், 8. அக்னேஸ்வரம், 9. குக்குடேஸ்வரம் என்று ஒன்பது கோயில்களும் உள்ளன.
  • இக்கோயிலில் பாண்டவர்கள் கட்டியதாக சொல்லப்படும் ஆறு ஆலயங்கள் மேற்குப் பிரகாரத்தில் உள்ளன.
  • இங்கு சஹஸ்ரலிங்கேசுவரர் கோயில், அன்னபூரணி கோயில், பஞ்சநதீஸ்வரர் கோயில், பளிங்குக் கல்லாலான சண்முகர் ஆலயம் ஆகியன தரிசிக்கத்தக்கன.
  • ஜோதிர்லிங்கத் தலமான இத்தலத்தில் சிவராத்திரி வழிபாடு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
  • இங்குள்ள கல்வெட்டுக்களால், அன்னதானத்திற்குக் கட்டளைகள் அமைத்தது, கோயிலில் திருப்பணிகள் செய்தது, தீர்த்தக்குளம் வெட்டியது, கோயில் பணியாளர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தது முதலான பல செய்திகளை அறிய முடிகிறது.
  • இங்குள்ள கல்வெட்டுக்கள் அனைத்தும் விஜயநகர மன்னர்கள், சாளுவகாகதீய மன்னர்கள் காலத்தியவை என்று சொல்லப்படுகிறது.
  • கி.பி. 1 ம் நூற்றாண்டில் இத்தலம் சாத வாகனர்களால் சிரிதான்  என்று வழங்கப்பட்டது. புலமாவி என்ற சாதவாகன மன்னனின் நாசிக் கல்வெட்டு இதனை உறுதிப்படுத்துகிறது. சாதவாகனர்களின் தோழர்களான இக்ஷுவாக்கள் இதனை ஸ்ரீ பர்வதம் என்று அழைத்தார்கள்.
  • பின்னர் நான்காம் நூற்றாண்டில் சிம்ம வர்ம பல்லவன் இப்பகுதியைத் தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டான். த்ரிலோசனபல்லவன் என்பவன் ஸ்ரீ சைலக் காட்டின் ஒரு பகுதியைப் புனரமைத்து அந்தணர்களை அங்கு இருத்தினான். இப்பணியைப் பின்னர் பல்லவர்களை வென்ற சோழர்கள் செய்து முடித்தார்கள். நான்காம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த விஷ்ணுகுண்டியர்கள் இப்பகுதியை ஆண்டனர். அப்போது ஸ்ரீ சைல ஆலயம் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டது. 
  • பின்னர்  கடம்பர்கள் இதனைச்  சிறிது காலம் ஆண்டனர்.  ஆறாம் நூற்றாண்டில் கரிகால் சோழனின் சந்ததியினர் கடப்பா, கர்னூல் பகுதிகளை ஆண்டனர். பின்னர் கி.பி. 973 வரை ராஷ்ட்ரகூடர்கள் இப்பகுதியை ஆட்சி செய்தனர். மீண்டும் சாளுக்கியர்களது ஆட்சி மலர்ந்தபோது, சோழர்கள்  அவர்களை வென்றனர். 12 ம் நூற்றாண்டில் ஸ்ரீசைலம் காகதீயர்களின் வசமாயிற்று.  பிரதாப ருத்ரன் என்பவர் தன்  மனைவியோடு இங்கு வந்து மல்லிகார்ஜுனருக்குத்  துலாபாரம் தந்ததாக வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது.
  • ஆந்திரத்தின் 72 சிற்றரசர்கள் முகமதியர்களோடு போரிட்டு  மீண்டும் இந்து ராஜ்ஜியங்களை நிறுவினார்கள். இவர்களுள் அத்தங்கி வேமா ரெட்டி என்பவர் குறிப்பிடத்தக்கவர். அவரது குல தெய்வம் திரிபுராந்தகத்தில் உள்ள மூர்த்தியே ஆவார். ப்ரோலய ரெட்டி என்பவர் தன்னை  ஸ்ரீசைல மல்லி கார்ஜுனரின்  பாத சரண தாசன் என்று சொல்லிக் கொண்டார். ஸ்ரீ சைல மலை ஏறி வரும் பக்தர்களுக்காக ரெட்டி மன்னர்கள் படிக்கட்டுக்களை அமைத்ததாக சாசனங்கள் மூலம்  அறிகிறோம். ஸ்ரீ சைலத்தில் பாதாள கங்கை எனப்படும் கிருஷ்ணா நதிக்குச் செல்வதற்குப்  படிக்கட்டுக்கள் கட்டப்பட்டன.  அன மேவா ரெட்டியின் ஆட்சிக்கு ஸ்ரீ சைலம், மகா நந்தி பகுதிகள் உட்பட்டன.
  • விஜயநகரப் பேரரசு இப்பகுதியை வசமாக்கிக் கொண்ட பிறகு, ஆலய முன் மண்டபம், தெற்கு கோபுரம்  ஆகியவை கட்டப்பெற்றன. நிறைய தானங்கள் அளிக்கப் பட்டன. கிருஷ்ண தேவ ராயர் காலத்தில் கிழக்கு கோபுரமும் ரத வீதியில் மண்டபங்களும் கட்டப்பட்டன. விமானத்திற்குத் தங்க முலாம் பூசப்பட்டது. பிற்காலத்தில் அனேக பக்தர்கள் மூலம்  கொடிமரம், நந்தவனம், கோயில் மணி ஆகியவை அளிக்கப்பட்டன. 
  • கி.பி. 1674 ல் சத்ரபதி சிவாஜி மகாராஜ்  இக்கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். பிற்காலத்தில் ஸ்ரீ சைல ஆலயத்தின் மீது படையெடுப்பு நிகழ்ந்தபோது மராட்டிய வீரர்கள் கடைசி வீரன் உள்ளவரை போரிட்டதாகக் கூறுவர். அவர்களது சந்ததியினர் இன்றும் ஆண்டுக்கு ஒரு முறை  தங்களது முன்னோரது நினைவாக இங்கு வருகை தந்து வழிபடுகிறார்கள்.
  • ஆலயத்தின் கிழக்குக் கோபுரம் கிருஷ்ண தேவராயரால் 15  ம்  நூற்றாண்டில் கட்டப்பட்டது. வடக்குக் கோபுரத்தை  கி.பி. 1677 ல்  சத்ரபதி சிவாஜி கட்டினார். பின்னர் மேற்கு கோபுரம், 1966 ல் கட்டப்பட்டது. மல்லிகார்ஜுன சுவாமியின் விமானம் கி.பி. 1230 ம் ஆண்டு காகதீய கணபதி ராஜனின் சகோதரி மைலம்ம தேவியால் கட்டப்பட்டது.ஆலயத்தின் முன்புறம் உள்ள ரங்க மண்டபத்தை  விஜய நகர அரசர் இரண்டாம் ஹரிஹர ராயர் கட்டினார்.
  • ஒரு காலத்தில் ஸ்ரீ சைலம் வரை மலை ஏறி வர இயலாதவர்கள் ஸ்ரீ சைல பர்வதங்களிலேயே மிக உயரமான (  2830 அடிகள் ) சிகரேசுவரத்தைத்  தரிசித்தபடியே மல்லிகார்ஜுனசுவாமியைத் தியானிப்பார்கள்.  இங்கிருந்தபடியே, ராமபிரான் , மல்லிகார்ஜுனரைத் தரிசித்ததாகச் சொல்வர்.  8 கி.மீ  தொலைவிலுள்ள இச்சிகரத்தின் மேலுள்ள வீர சங்கர சுவாமிக்குப் பக்தர்கள் செக்கில் எள்ளை  ஆட்டி  அதனைப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து நந்தியின் கொம்புகளுக்கு     இடையிலிருந்து மல்லிகார்ஜுன ஆலய சிகரத்தைத் தரிசிக்கிறார்கள்.
  • பாதாள கங்கையில் கலக்கும் பீமன்குள  ஊற்றுக்கு அருகில் பீமேசுவர சுவாமி ஆலயம் உள்ளது. பாதாள கங்கையிலிருந்து பரிசிலில் கிருஷ்ணா நதியில் சென்று அக்க மகா தேவி தவம் செய்த குகையை அடையலாம். அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள இஷ்ட காமேசுவரி ஆலயத்தையும் பக்தர்கள் பிரார்த்தனைத் தலமாக வழிபடுகிறார்கள். பரிசிலில் அக்கரை  அடைந்தபின், தத்தாத்ரேயர்  தவம் செய்த கதலீ  வனத்தைக் காணலாம். தியானம் செய்வதற்கேற்ற அமைதியான இடம் இது.

நன்றி: திரு. சிவபாதசேகரன் அவர்கள், சென்னை

Contact Address

அமைவிடம் மாநிலம் : ஆந்திரா ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் நந்தியாலுக்கு அருகில் உள்ளது. திருப்பதியிலிருந்து 500 கி. மீ. தொலைவாகும். சென்னையிலிருந்தும் ஸ்ரீசைலத்திற்கு பேருந்து வசதி உள்ளது. தொடர்புக்கு :-08524 - 288881

Related Content

திரு இராமேச்சுரம் - (இராமேஸ்வரம்)

திருஇந்திரநீலப்பருப்பதம்

திருக்கேதாரம் (கேதார்நாத்)

ஸோமநாதம் ஜோதிர்லிங்கம் (சோம்நாத், சௌராஷ்ட்ரம், குஜராத் )

உஜ்ஜைனி மஹாகாலேஸ்வரர் திருக்கோயில் (ஜோதிர்லிங்கம்)