வேத நெறி தழைத்து ஓங்க
மிகு சைவத் துறை விளங்கப்
பூத பரம்பரை பொலியப் புனித
வாய் மலர்ந்து அழுத
சீத வள வயல்
புகலித் திருஞான சம்பந்தர்
பாத மலர் தலைக் கொண்டு
திருத் தொண்டு பரவுவாம். 1
சென்னி வளர் மதி அணிந்த
சிலம்பு அணி சேவடியார் தம்
மன்னிய சைவத் துறையின் வழி
வந்த குடி வளவர்
பொன்னி வளம் தரு நாடு
பொலிவு எய்த நிலவியதால்
கன்னி மதில் மருங்கு முகில்
நெருங்கும் கழுமல மூதூர். 2
அப் பதி தான் அந்தணர் தம்
கிடைகள் அரு மறை முறையே
செப்பும் ஒலி வளர் பூகச்
செழும் சோலை புறம் சூழ
ஒப்பில் நகர் ஓங்குதலால் உகக்
கடை நாள் அன்றியே
எப்பொழுதும் கடல் மேலே மிதப்பது
என இசைந்து உளதால். 3
அரி அயனே முதல் அமரர்
அடங்க எழும் வெள்ளங்கள்
விரி சுடர் மா மணிப் பதணம்
மீது எறிந்த திரை வரைகள்
புரிசை முதல் புறம் சூழ்வ
பொங்கு ஓதம் கடை நாளில்
வரி அரவ மந்தரம் சூழ்
வடம் போல வயங்குமால். 4
வளம் பயிலும் புறம் பணைப்
பால் வாசப் பாசடை மிடைந்த
தளம் பொலியும் புனல் செந்தாமரைச்
செவ்வித் தட மலரால்
களம் பயில் நீர்க் கடல் மலர்வது
ஒரு பரிதி எனக் கருதி
இளம் பரிதி பல மலர்ந்தாற்
போல்ப உள இலஞ்சி பல. 5
உளம் கொள் மறை வேதியர்
தம் ஓமத் தூமத்து இரவும்
கிளர்ந்த திரு நீற்று ஒளியில்
கெழுமிய நண் பகலும் அலர்ந்து
அளந்து அறியாப் பல்லூழி
ஆற்றுதலால் அகல் இடத்து
விளங்கிய அம்மூதூர்க்கு வேறு
இரவும் பகலும் மிகை. 6
பரந்த விளைவயல் செய்ய
பங்கயமாம் பொங்கு எரியில்
வரம்பில் வளர் தேமாவின் கனி
கிழிந்த மது நறு நெய்
நிரந்தரம் நீள் இலைக் கடையால்
ஒழுகுதலால் நெடிது அவ்வூர்
மரங்களும் ஆகுதி வேட்கும் தகைய
என மணந்து உளதால். 7
வேலை அழல் கதிர் படிந்த
வியன் கங்குல் வெண்மதியம்
சோலை தொறும் நுழைந்து புறப்படும்
பொழுது துதைந்த மலர்ப்
பால் அணைந்து மதுத் தோய்ந்து
தாது அளைந்து பயின்று அந்தி
மாலை எழும் செவ்வொளிய
மதியம் போல் வதியுமால். 8
காமர் திருப்பதி அதன் கண்
வேதியர் போல் கடி கமழும்
தாமரையும் புல்லிதழும் தயங்கிய
நூலும் தாங்கித்
தூமரு நுண் துகள் அணிந்து
துளி வருகண்ணீர் ததும்பித்
தேமரு மென் சுரும்பு இசையால்
செழும் சாமம் பாடுமால். 9
புனைவார் பொன் குழை அசையப்
பூந்தானை பின் போக்கி
வினை வாய்ந்த தழல் வேதி
மெழுக்குற வெண் சுதை ஒழுக்கும்
கனை வானமுகில் கூந்தல் கதிர்
செய் வடமீன் கற்பின்
மனை வாழ்க்கைக் குலமகளிர்
வளம் பொலிவ மாடங்கள். 10
வேள்வி புரி சடங்கு அதனை
விளையாட்டுப் பண்ணை தொறும்
பூழியுற வகுத்து அமைத்துப் பொன்
புனை கிண்கிணி ஒலிப்ப
ஆழி மணிச் சிறு தேர்
ஊர்ந்த அவ்விரதப் பொடியாடும்
வாழி வளர் மறைச் சிறார்
நெருங்கியுள மணி மறுகு. 11
விடு சுடர் நீள் மணி மறுகின்
வெண் சுதை மாளிகை மேகம்
தொடு குடுமி நாசி தொறும்
தொடுத்த கொடி சூழ் கங்குல்
உடுஎனு நாள் மலர் அலர
உறு பகலில் பல நிறத்தால்
நெடு விசும்பு தளிப்பது என
நெருங்கியுள மருங்கு எல்லாம். 12
மடை எங்கும் மணிக்குப்பை வயல்
எங்கும் கயல் வெள்ளம்
புடை எங்கும் மலர்ப் பிறங்கல்
புறம் எங்கும் மகப் பொலிவு
கிடை எங்கும் கலைச் சூழல்
கிளர் எங்கும் முரல் அளிகள்
இடை எங்கும் முனிவர் குழாம்
எயில் எங்கும் பயில் எழிலி. 13
பிரமபுரம் வேணுபுரம் புகலிபெரு
வெங்குரு நீர்ப்
பொருவில் திருத் தோணிபுரம்
பூந்தராய் சிரபுரம் முன்
வருபுறவம் சண்பை நகர் வளர்
காழி கொச்சை வயம்
பரவு திருக் கழுமலமாம்
பன்னிரண்டு திருப் பெயர்த்தால். 14
அப்பதியின் அந்தணர் தம் குடி
முதல்வர் ஆசில் மறை
கைப்படுத்த சீலத்துக் கவுணியர்
கோத்திரம் விளங்கச்
செப்பும் நெறி வழிவந்தார்
சீவபாத இருதயர் என்று
இப் புவி வாழத் தவம்
செய் இயல்பினார் உளர் ஆனார். 15
மற்றவர் தம் திரு மனையார்
வாய்ந்த மரபின் வரு
பெற்றியினார் எவ்வுலகும் பெறற்கு
அரிய பெருமையினார்
பொற்புடைய பகவதியார் எனப்
போற்றும் பெயர் உடையார்
கற்பு மேம்படு சிறப்பால்
கணவனார் கருத்து அமைந்தார். 16
மரபு இரண்டும் சைவ
நெறி வழிவந்த கேண்மையராய்
அரவு அணிந்த சடை
முடியார் அடியலால் அறியாது
பரவு திருநீற்று அன்பு
பாலிக்கும் தன்மையராய்
விரவு மறை மனை வாழ்க்கை
வியப்பு எய்த மேவு நாள். 17
மேதினி மேல் சமண் கையர்
சாக்கியர் தம் பொய்ம்மிகுத்தே
ஆதி அருமறை வழக்கம் அருகி
அரன் அடியார் பால்
பூதி சாதன விளக்கம் போற்றல்
பெறாது ஒழியக் கண்டு
ஏதமில் சீர் சிவபாத இருதயர்
தாம் இடர் உழந்தார். 18
மனை அறத்தில் இன்பம் உறு
மகப் பெறுவான் விரும்புவார்
அனையநிலை தலை நின்றே
ஆடிய சேவடிக் கமலம்
நினைவுற முன் பர சமயம்
நிராகரித்து நீறு ஆக்கும்
புனை மணிப்பூண் காதலனைப்
பெறப் போற்றும் தவம் புரிந்தார். 19
பெருத்து எழும் அன்பால் பெரிய
நாச்சியார் உடன் புகலித்
திருத்தோணி வீற்றிருந்தார் சேவடிக்
கீழ் வழிபட்டுக்
கருத்து முடிந்திடப் பரவும்
காதலியார் மணி வயிற்றில்
உருத் தெரிய வரும் பெரும்
பேறு உலகு உய்ய உளதாக. 20
ஆளுடையாளுடன் தோணி அமர்ந்த
பிரான் அருள் போற்றி
மூளும் மகிழ்ச்சியில் தங்கள் முதல்
மறைநூல் முறைச் சடங்கு
நாள் உடைய ஈரைந்து
திங்களினும் நலம் சிறப்பக்
கேளிருடன் செயல் புரிந்து
பெரிதின்பம் கிளர்வுறுநாள். 21
அருக்கன் முதல் கோன்
அனைத்தும் அழகிய உச்சங்களிலே
பெருக்க வலியுடன் நிற்கப்
பேணிய நல்லோரை எழத்
திருக்கிளரும் ஆதிரை நாள்
திசை விளங்கப் பரசமயத்
தருக்கொழியச் சைவம் முதல்
வைதிகமும் தழைத்து ஓங்க. 22
தொண்டர் மனம் களி சிறப்பத்
தூய திருநீற்று நெறி
எண் திசையும் தனி நடப்ப
ஏழ் உலகும் குளிர் தூங்க
அண்டர் குலம் அதிசயிப்ப
அந்தணர் ஆகுதி பெருக
வண் தமிழ் செய்தவம் நிரம்ப
மாதவத்தோர் செயல் வாய்ப்ப. 23
திசை அனைத்தின் பெருமை எலாம்
தென்திசையே வென்று ஏற
மிசை உலகும் பிறவுலகும்
மேதினியே தனி வெல்ல
அசைவில் செழும் தமிழ் வழக்கே
அயல் வழக்கின் துறைவெல்ல
இசை முழுதும் மெய் அறிவும்
இடம் கொள்ளும் நிலை பெருக. 24
தாளுடைய படைப்பு என்னும் தொழில்
தன்மை தலைமை பெற
நாளுடைய நிகழ்காலம் எதிர்காலம்
நவை நீங்க
வாளுடைய மணிவீதி
வளர்காழிப் பதிவாழ
ஆளுடைய திருத்தோணி அமர்ந்த
பிரான் அருள் பெருக. 25
அவம் பெருக்கும் புல் அறிவின்
அமண் முதலாம் பரசமயப்
பவம் பெருக்கும் புரை நெறிகள்
பாழ்பட நல் ஊழி தொறும்
தவம் பெருக்கும் சண்பையிலே
தாவில் சராசரங்கள் எலாம்
சிவம் பெருக்கும் பிள்ளையார்
திரு அவதாரம் செய்தார். 26
சிவன் அருள் எனப் பெருகு
சித்தம் மகிழ் தன்மை
இவண் இது நமக்கு வர
எய்தியது என் என்பார்
கவுணியர் குலத்தில் ஒரு
காதலன் உதித்தான்
அவன் வருநிமித்தம் இது
என்று அதிசயித்தார். 28
பூ முகை அவிழ்ந்து மணம்
மேவும் பொழில் எங்கும்
தே மருவு தாதோடு
துதைந்த திசை எல்லாம்
தூ மருவு சோதி
விரியத் துகள் அடக்கி
மா மலய மாருதமும்
வந்து அசையும் அன்றே. 29
மேலை இமையோர்களும்
விருப்பொடு கரப்பில்
சோலை மலர் போல மலர்
மா மழை சொரிந்தே
ஞாலம் மிசை வந்து வளர்
காழி நகர் மேவும்
சீல மறையோர்கள் உடன்
ஓம வினை செய்தார். 30
பூத கண நாதர் புவி
வாழ அருள் செய்த
நாதன் அருளின் பெருமை
கண்டு நலம் உய்ப்பார்
ஓதும் மறையோர் பிறிது
உரைத்திடினும் ஓவா
வேத மொழியால் ஒலி
விளங்கி எழும் எங்கும். 31
பயன் தருவ பஃறருவும்
வல்லிகளும் மல்கித்
தயங்கு புனலும் தெளிவு
தண்மையுடன் நண்ணும்
வயங்கு ஒளி விசும்பு
மலினம் கழியும் மாறா
நயம் புரிவ புள் ஒலிகள்
நல்ல திசை எல்லாம். 32
அம்கண் விழவில் பெருகு
சண்பை அகல் மூதூர்ச்
சங்கம் படகம் கருவி
தாரை முதலான
எங்கணும் இயற்றுபவர்
இன்றியும் இயம்பும்
மங்கல முழக்கு ஒலி
மலிந்த மறுகு எல்லாம். 33
இரும் புவனம் இத்தகைமை
எய்த அவர் தம்மைத்
தரும் குல மறைத் தலைவர்
தம் பவன முன்றில்
பெரும் களி வியப்பொடு
பிரான் அருளினாலே
அரும் திரு மகப் பெற
அணைந்த அணி செய்வார். 34
காதல் புரி சிந்தை
மகிழக் களி சிறப்பார்
மீது அணியும் நெய் அணி
விழாவொடு திளைப்பார்
சூத நிகழ் மங்கல
வினைத் துழனி பொங்கச்
சாதக முறைப் பல
சடங்கு வினை செய்வார். 35
மா மறை விழுக்குல
மடந்தையர்கள் தம்மில்
தாம் உறு மகிழ்ச்சியொடு
சாயல் மயில் என்னத்
தூ மணி விளக்கொடு
சுடர்க் குழைகள் மின்னக்
காமர் திரு மாளிகை
கவின் பொலிவு செய்வார். 36
சுண்ணமொடு தண் மலர்
துதைந்த துகள் வீசி
உண்ணிறை விருப்பினுடன்
ஓகை உரை செய்வார்
வெண் முளைய பாலிகைகள்
வேதி தொறும் வைப்பார்
புண்ணிய நறும் புனல் கொள்
பொன் குடம் நிரைப்பார். 37
செம் பொன் முதலான பல
தான வினை செய்வார்
நம்பர் அடியார் அமுது
செய்ய நலம் உய்ப்பார்
வம்பலர் நறும் தொடையல்
வண்டொடு தொடுப்பார்
நிம்பம் முதலான கடி
நீடு வினை செய்வார். 38
ஐயவி உடன் பல
அமைத்த புகையாலும்
நெய் அகில் நறுங்குறை
நிறைத்த புகையாலும்
வெய்ய தழல் ஆகுதி
விழுப் புகையினாலும்
தெய்வ மணம் நாறவரு
செய் தொழில் விளைப்பார். 39
ஆய பல செய் தொழில்கள்
அன்று முதல் விண்ணோர்
நாயகன் அருள் பெருமை
கூறும் நலம் எய்த
தூய திரு மாமறை
தொடர்ந்த நடை நூலின்
மேய விதி ஐயிரு
தினத்தினும் விளைத்தார். 40
நாம கரணத்து அழகு
நாள் பெற நிறுத்திச்
சேம உதயப் பரிதியில்
திகழ் பிரானைத்
தாமரை மிசைத் தனி
முதல் குழவி என்னத்
தூ மணி நிரைத்து அணி
செய் தொட்டில் அமர்வித்தார். 41
பெரு மலை பயந்த கொடி
பேணும் முலையின் பால்
அரு மறை குழைத்த
அமுது செய்து அருளுவாரைத்
தருமிறைவியார் பரமர்
தாள் பரவும் அன்பே
திருமுலை சுரந்து அமுது
செய்து அருளுவித்தார். 42
ஆறுலவு செய்ய சடை
ஐயர் அருளாலே
பேறு உலகினுக்கு என
வரும் பெரியவர்க்கு
வேறு பல காப்பு மிகை
என்று அவை விரும்பார்
நீறு திரு நெற்றியில்
நிறுத்தி நிறைவித்தார். 43
தாயர் திரு மடித்தலத்தும்
தயங்கு மணித் தவிசினிலும்
தூய சுடர்த் தொட்டிலினும்
தூங்கு மலர்ச் சயனத்தும்
சேய பொருள் திருமறையும்
தீம் தமிழும் சிறக்க வரு
நாயகனைத் தாலாட்டு
நலம் பல பாராட்டினார். 44
வரும் முறைமைப் பருவத்தில்
வளர் புகலிப் பிள்ளையார்
அரு மறைகள் தலை எடுப்ப
ஆண்ட திருமுடி எடுத்துப்
பெரு மழுவர் தொண்டு அல்லால்
பிறிது இசையோம் என்பார் போல்
திருமுக மண்டலம் அசையச்
செங்கீரை ஆடினார். 45
நாம் அறியோம் பர சமயம்
உலகிர் எதிர் நாடாது
போம் அகல என்று அங்கை
தட்டுவதும் புனிதன் பால்
காமரு தாளம் பெறுதற்கு
ஒத்துவதும் காட்டுவ போல்
தாமரைச் செங்கை களினால்
சப்பாணி கொட்டினார். 46
விதி தவறுபடும் வேற்றுச்
சமயங்கள் இடை விழுந்து
கதி தவழ இரு விசும்பு
நிறைந்த கடிவார் கங்கை
நதி தவழும் சடை முடியார்
ஞானம் அளித்திட உரியார்
மதி தவழ் மாளிகை முன்றின்
மருங்கு தவழ்ந்து அருளினார். 47
சூழ வரும் பெருஞ்சுற்றத்துத்
தோகையரும் தாதியரும்
காழியர் தம் சீர் ஆட்டே
கவுணியர் கற்பகமே என்று
ஏழ் இசையும் பலகலையும் எவ்
உலகும் தனித் தனியே
வாழ வரும் அவர் தம்மை
வருக வருக என அழைப்ப. 48
திரு நகையால் அழைத்து அவர்
தம் செழு முகங்கள் மலர்வித்தும்
வருமகிழ்வு தலை சிறப்ப
மற்றவர் மேல் செலவுகைத்தும்
உருகி மனம் கரைந்து அலைய
உடன் அணைந்து தழுவியும் முன்
பெருகிய இன்புற அளித்தார்
பெரும் புகலிப் பிள்ளையார். 49
வளர் பருவ முறை ஆண்டு
வருவதன் முன் மலர் வரிவண்டு
உளர் கரு மென் சுருள்
குஞ்சியுடன் அலையச் செந்நின்று
கிளர் ஒலி கிண்கிணி எடுப்பக்
கீழ்மை நெறிச் சமயங்கள்
தளர் நடை இட்டு அறத் தாமும்
தளர் நடை இட்டு அருளினார். 50
தாதியர் தங்கைப் பற்றித் தளர்
நடையின் அசைவு ஒழிந்து
சோதி அணி மணிச் சதங்கை
தொடுத்த வடம் புடை சூழ்ந்த
பாத மலர் நிலம் பொருந்தப்
பருவ முறை ஆண்டு ஒன்றின்
மீது அணைய நடந்து அருளி
விளையாடத் தொடங்கினார். 51
சிறு மணித்தேர் தொடர்ந்து உருட்டிச்
செழுமணல் சிற்றில்கள் இழை
நறு நுதல் பேதையார் மழுங்கு
நடந்து ஓடி அடர்ந்து அழித்தும்
குறு வியர்ப்புத் துளி அரும்பக்
கொழும்பொடி ஆடிய கோல
மறுகு இடைப் பேர் ஒளி
பரப்ப வந்து வளர்ந்தருளினார். 52
மங்கையோடு உடன் ஆகி வளர்
தோணி வீற்று இருந்த
திங்கள் சேர் சடையார் தம் திரு
அருட்குச் செய் தவத்தின்
அங்குரம் போல் வளர்ந்து அருளி
அரு மறையோடு உலகு உய்ய
எங்கள் பிரான் ஈர் ஆண்டின் மேல்
ஓர் ஆண்டு எய்து தலும். 53
நாவாண்ட பல கலையும் நா
மகளும் நலம் சிறப்பப்
பூவாண்ட திருமகளும் புண்ணியமும்
பொலிவு எய்த
சேவாண்ட கொடியவர் தம்
சிரபுரத்துச் சிறுவருக்கு
மூவாண்டில் உலகு உய்ய
நிகழ்ந்தது அதனை மொழிகின்றேன். 54
பண்டு திருவடி மறவாப்
பான்மையோர் தமைப் பரமர்
மண்டு தவ மறைக் குலத்தோர்
வழிபாட்டின் அளித்து அருளத்
தொண்டின் நிலை தர வருவார்
தொடர்ந்த பிரிவு உணர்வு ஒருகால்
கொண்டு எழலும் வெருக் கொண்டாற்
போல் அழுவார் குறிப்பு அயலாய். 55
மேதகைய இந் நாளில் வேறு
ஒரு நாள் வேத விதி
நீதி முறைச் சடங்கு நெறி
முடிப்பதற்கு நீர் ஆடத்
தாதையார் போம் பொழுது தம்
பெருமான் அருள் கூடச்
சோதி மணி மனை முன்றில்
தொடர்ந்து அழுது பின் சென்றார். 56
பின் சென்ற பிள்ளையார்
தமை நோக்கிப் பெருந்தவத்தோர்
முன்செல்கை தனை ஒழிந்து
முனிவார் போல் விலக்குதலும்
மின் செய் பொலங் கிண் கிணிக்
கால் கொட்டி அவர் மீளாமை
உன் செய்கை இது ஆகில் போ
என்று அங்கு உடன் சென்றார். 57
கடை யுகத்தில் தனி வெள்ளம்
பல விரிக்கும் கருப்பம் போல
இடை அறாப் பெரும் தீர்த்தம்
எவற்றினுக்கும் பிறப்பு இடமாய்
விடை உயர்த்தார் திருத் தோணிப்
பற்று விடா மேன்மை அதாம்
தடம் அதனில் துறை அணைந்தார்
தருமத்தின் தலை நின்றார். 58
பிள்ளையார்தமைக் கரையில் வைத்துத்
தாம் பிரிவு அஞ்சித்
தெள்ளு நீர்ப் புக
மாட்டார் தேவியொடும் திருத்தோணி
வள்ளலார் இருந்தாரை எதிர்
வணங்கி மணி வாவி
உள்ளிழிந்து புனல் புக்கார் உலகு
உய்ய மகப் பெற்றார். 59
நீர் ஆடித் தருப் பித்து
நியமங்கள் பல செய்வார்
நீர் ஆடும் திரு மகனார்
காண்பதன் முன் செய்து அதன்பின்
ஆராத விருப்பினால் அகமர்
உடம்படிய நீர்
பேராது மூழ்கினார் பெரும்
காவல் பெற்றாராய். 60
மறை முனிவர் மூழ்குதலும்
மற்றவர் தம்மைக் காணாது
இறை தெரியார் எனும் நிலைமை
தலைக்கீடா ஈசர் கழல்
முறை புரிந்த முன் உணர்வு
மூள அழத் தொடங்கினார்
நிறை புனல் வாவிக் கரையில்
நின்று அருளும் பிள்ளையார். 61
கண் மலர்கள் நீர் ததும்பக்
கைம் மலர்களால் பிசைந்து
வண்ண மலர்ச் செங்கனிவாய்
மணி அதரம் புடை துடிப்ப
எண்ணில் மறை ஒலி பெருக
எவ் உயிரும் குதூகலிப்ப
புண்ணியக் கன்று அனையவர்
தாம் பொருமி அழுதருளினார். 62
மெய்ம் மேல் கண் துளி பனிப்ப
வேறு எங்கும் பார்த்து அழுவார்
தம் மேலைச் சார்பு உணர்ந்தோ
சாரும் பிள்ளை மைதானோ
செம் மேனி வெண் நீற்றார்
திருத் தோணி சிகரம் பார்த்து
அம்மே அப்பா என்றென்று
அழைத்தருளி அழுதருள. 63
அந்நிலையில் திருத்தோணி வீற்றிருந்தார்
அருள் நோக்கால்
முன் நிலைமைத் திருத் தொண்டு
முன்னி அவர்க்கு அருள் புரிவான்
பொன் மலை வல்லியும் தாமும்
பொருவிடை மேல் எழுந்தருளிச்
சென்னி இளம் பிறை திகழச்
செழும் பொய்கை மருங்கு அணைந்தார். 64
திரு மறைநூல் வேதியர்க்கும்
தேவியர்க்கும் தாம் கொடுத்த
பெருகு வரம் நினைந்தோதான் தம்
பெருமைக் கழல் பேணும்
ஒரு நெறியில் வரு ஞானம்
கொடுப்பதனுக்கு உடன் இருந்த
அரு மறையாள் உடையவளை அளித்து
அருள அருள் செய்வார். 65
அழுகின்ற பிள்ளையார் தமை
நோக்கி அருள் கருணை
எழுகின்ற திரு உள்ளத்து
இறையவர் தாம் எவ்வுலகும்
தொழுகின்ற மலைக் கொடியைப்
பார்த்தருளித் துணை முலைகள்
பொழிகின்ற பால் அடிசில் பொன்
வள்ளத்து ஊட்டு என்ன. 66
ஆரணமும் உலகு ஏழும்
ஈன்று அருளி அனைத்தினுக்கும்
காரணமாய் வளம் பெருகு
கருணை திருவடிவான
சீர் அணங்கு சிவபெருமான்
அருளுதலும் சென்று அணைந்து
வார் இணங்கு திருமுலைப்பால்
வள்ளத்துக் கறந்து அருளி. 67
எண்ணரிய சிவஞானத்து இன்
அமுதம் குழைத்து அருளி
உண் அடிசில் என ஊட்ட
உமை அம்மை எதிர் நோக்கும்
கண் மலர் நீர் துடைத்து அருளிக்
கையில் பொன் கிண்ணம் அளித்து
அண்ணலை அங்கு அழுகை தீர்த்து
அங்கணனார் அருள் புரிந்தார். 68
யாவர்க்கும் தந்தை தாய் எனும்
இவர் இப்படி அளித்தார்
ஆவதனால் ஆளுடைய
பிள்ளையாராய் அகில
தேவருக்கும் முனிவர்க்கும்
தெரிவரிய பொருளாகும்
தாவில் தனிச் சிவ
ஞான சம்பந்தர் ஆயினார். 69
சிவன் அடியே சிந்திக்கும்
திருப்பெருகு சிவஞானம்
பவம் அதனை அற மாற்றும்
பாங்கினில் ஓங்கிய ஞானம்
உவமை இலாக் கலை ஞானம்
உணர்வு அரிய மெய்ஞ் ஞானம்
தவ முதல்வர் சம்பந்தர் தாம்
உணர்ந்தார் அந்நிலையில். 70
எப்பொருளும் ஆக்குவான் ஈசனே
எனும் உணர்வும்
அப்பொருள்தான் ஆளுடையார் அடியார்கள்
எனும் அறிவும்
இப்படியால் இது அன்றித் தம்
இசைவு கொண்டு இயலும்
துப்புரவில்லார் துணிவு துகளாகச்
சூழ்ந்து எழுந்தார். 71
சீர் மறையோர் சிவபாத
இருதயரும் சிறு பொழுதில்
நீர் மருவித் தாம் செய்யும்
நியமங்கள் முடித்து ஏறி
பேர் உணர்வில் பொலிகின்ற
பிள்ளையார்தமை நோக்கி
யார் அளித்த பால் அடிசில்
உண்டது நீ என வெகுளா. 72
எச்சில் மயங்கிட உனக்கு ஈது
இட்டாரைக் காட்டு என்று
கைச் சிறியது ஒருமாறு
கொண்டோச்சக் கால் எடுத்தே
அச் சிறிய பெருந்தகையார் ஆனந்தக்
கண் துளி பெய்து
உச்சியின் மேல் எடுத்தருளும் ஒரு
திருக்கை விரல் சுட்டி. 73
விண் நிறைந்த பெருகு ஒளியால்
விளங்கு மழ விடைமேல்
பண் நிறைந்த அருமறைகள் பணிந்து
ஏத்தப் பாவை உடன்
எண் நிறைந்த கருணையினால்
நின்றாரை எதிர் காட்டி
உள் நிறைந்து பொழிந்து எழுந்த
உயர் ஞானத் திருமொழியால். 74
எல்லை இலா மறை முதல்
மெய்யுடன் எடுத்த எழுது மறை
மல்லல் நெடும் தமிழால் இம்
மா நிலத்தோர்க்கு உரை சிறப்ப
பல் உயிரும் களிகூரத் தம்
பாடல் பரமர் பால்
செல்லு முறை பெறுவதற்குத்
திருசெவியைச் சிறப்பித்து. 75
செம்மை பெற எடுத்த திருத்
தோடுடைய செவியன் எனும்
மெய்ம்மை மொழித் திருப்பதிகம்
பிரமபுரம் மேவினார்
தம்மை அடையாளங்களுடன்
சாற்றித் தாதையார்க்கு
எம்மை இது செய்த பிரான்
இவன் அன்றே என இசைத்தார். 76
மண் உலகில் வாழ்வார்கள்
பிழைத்தாலும் வந்தடையின்
கண் நுதலான் பெரும் கருணை
கைக் கொள்ளும் எனக்காட்ட
எண்ணம் இலா வல் அரக்கன்
எடுத்து முறிந்து இசைபாட
அண்ணல் அவற்கு அருள் புரிந்த
ஆக்கப்பாடு அருள் செய்தார். 77
தொழுவார்க்கே அருளுவது
சிவபெருமான் எனத் தொழார்
வழுவான மனத்தாலே மாலாய
மால் அயனும்
இழிவாகும் கருவிலங்கும்
பறவையுமாய் எய்தாமை
விழுவார்கள் அஞ்செழுத்தும் துதித்து
உய்ந்த படி விரித்தார். 78
வேத காரணராய வெண் பிறை
சேர் செய்ய சடை
நாதன் நெறி அறிந்து உய்யார்
தம்மிலே நலம் கொள்ளும்
போதம் இலாச் சமண்
கையர் புத்தர் வழியாக்கும்
ஏதமே என மொழிந்தார்
எங்கள் பிரான் சம்பந்தர். 79
திருப்பதிகம் நிறைவித்துத் திருக்கடைக்
காப்புச் சாத்தி
இருக்கு மொழிப் பிள்ளையார் எதிர்
தொழுது நின்று அருள
அருள் கருணைத் திருவாளனார் அருள்
கண்டு அமரர் எலாம்
பெருக்க விசும்பினில் ஆர்த்துப்
பிரசமலர் மழை பொழிந்தார். 80
வந்து எழும் மங்கலமான வான்
அகத் துந்துபி முழக்கும்
கந்தருவர் கின்னரர்கள் கான
ஒலிக் கடல் முழக்கும்
இந்திரனே முதல் தேவர் எடுத்து
ஏத்தும் இசைமுழக்கும்
அந்தம் இல் பல் கண நாதர்
அர எனும் ஓசையின் அடங்க. 81
மறைகள் கிளர்ந்து ஒலி வளர
முழங்கிட வானோர் தம்
நிறை முடி உந்திய நிரை மணி
சிந்திட நீள் வானத்து
உறை என வந்து உலகு
அடைய நிறைந்திட ஓவாமெய்ப்
பொறை பெருகும் தவமுனிவர் எனும்
கடல் புடை சூழ. 82
அணைவுற வந்து எழும் அறிவு
தொடங்கின அடியார் பால்
இணை இல் பவம் கிளர்
கடல்கள் இகந்திட இரு தாளின்
புணை அருள் அங்கணர் பொருவிடை
தங்கிய புணர் பாகத்
துணையொடு அணைந்தனர் சுருதி
தொடர்ந்த பெருந் தோணி. 83
அண்ணல் அணைந்தமை கண்டு
தொடர்ந்து எழும் அன்பாலே
மண்மிசை நின்ற மறைச்
சிறு போதகம் அன்னாரும்
கண் வழி சென்ற கருத்து
விடாது கலந்து ஏகப்
புண்ணியர் நண்ணிய பூமலி
கோயிலின் உள் புக்கார். 84
ஈறில் பெரும் தவம் முன் செய்து
தாதை எனப் பெற்றார்
மாறு விழுந்த மலர்க்கை
குவித்து மகிழ்ந்து ஆடி
வேறு விளைந்த வெருட்சி
வியப்பு விருப்போடும்
கூறும் அரும் தமிழின்
பொருளான குறிப் போவார். 85
தாணுவினைத் தனிகண்டு தொடர்ந்தவர்
தம்மைப் போல்
காணுதல் பெற்றிலரேனும் நிகழ்ந்தன
கண்டு உள்ளார்
தோணி புரத்திறை தன் அருள்
ஆதல் துணிந்து ஆர்வம்
பேணும் மனத்தொடு முன்புகு
காதலர் பின் சென்றார். 86
அப்பொழுது அங்கண் அணைந்தது
கண்டவர் அல்லாதார்
முப்புரிநூல் மறையோர்கள் உரோமம்
முகிழ்ப்பு எய்தி
இப்படி ஒப்பதோர் அற்புதம் எங்கு
உளது என்று என்றே
துப்பு உறழ் வேணியர் கோயிலின்
வாயில் புறம் சூழ. 87
பொங்கு ஒளி மால் விடை மீது
புகுந்து அணி பொன் தோணி
தங்கி இருந்த பெரும்
திரு வாழ்வு தலைப்பட்டே
இங்கு எனை ஆளும் உடையான்
உமையோடும் இருந்தான் என்று
அங்கு எதிர் நின்று புகன்றனர்
ஞானத்து அமுது உண்டார். 88
இன் இசை ஏழும் இசைந்த
செழும் தமிழ் ஈசற்கே
சொன்முறை பாடும் தொழும்பர்
அருள் பெற்ற தொடக்கோடும்
பல் மறை வேதியர் காண
விருப்பொடு பால் நாறும்
பொன்மணி வாயினர் கோயிலின்
நின்று புறப்பட்டார். 89
பேணிய அற்புத நீடு அருள்
பெற்ற பிரான் முன்னே
நீண் நிலையில் திகழ் கோபுர
வாயிலின் நேர் எய்தி
வாண் நிலவில் திகழ் வேணியர்
தொண்டர்கள் வாழ்வு எய்தும்
தோணி புரத்தவர் தாம்
எதிர் கொண்டு துதிக்கின்றார். 90
காழியர் தவமே கவுணியர்
தனமே கலை ஞானத்து
ஆழிய கடலே அதன் இடை
அமுதே அடியார் முன்
வாழிய வந்து இம்மண் மிசை
வானோர் தனி நாதன்
ஏழ் இசை மொழியாள் தன் திரு
அருள் பெற்று அனை என்பார். 91
மறை வளர் திருவே வைதிக
நிலையே வளர் ஞானப்
பொறை அணி முகிலே
புகலியர் புகலே பொருபொன்னித்
துறை பெறு மணியே சுருதியின்
ஒளியே வெளியே வந்து
இறையவன் உமையாள் உடன்
அருள் தர எய்தினை என்பார். 92
புண்ணிய முதலே புனை மணி
அரை ஞாணொடு போதும்
கண் நிறை கதிரே கலை
வளர் மதியே கவின் மேவும்
பண் இயல் கதியே
பருவமது ஒரு மூவருடத்தே
எண்ணிய பொருளாய் நின்றவர்
அருள் பெற்றனை என்பார். 93
என்று இனைய பல கூறி இருக்கு
மொழி அந்தணரும் ஏனையோரும்
நின்று துதி செய்து அவர்தாள் நீள்
முடிக்கண் மேல் ஏந்தி நிரந்த போது
சென்று அணைந்த தாதையர் சிவபாத
இருதயர் தாம் தெய்வ ஞானக்
கன்றினை முன் புக்கு எடுத்துப் பியலின்
மேல் கொண்டு களி கூர்ந்து செல்ல. 94
மாமறையோர் குழாத்தின் உடன் மல்கு
திருத்தொண்டர் குழாம் மருங்கு சூழ்ந்து
தாம் அறுவை உத்தரியம் தனி
விசும்பில் எறிந்து ஆர்க்கும் தன்மையாலே
பூ மறுகு சிவானந்தப் பெருக்காறு
போத அதன் மீது பொங்கும்
காமர் நுரைக் குமிழி எழுந்து இழிவன
போல் விளங்கும் பெரும் காட்சித்தாக. 95
நீடு திருக் கழுமலத்து நிலத்தேவர்
மாளிகை மேல் நெருங்கி அங்கண்
மாடு நிறை மடவார்கள் மங்கலமாம்
மொழிகளால் வாழ்த்தி வாசத்
தோடு மலி நறுமலரும் சுண்ணமும்
வெண் பொரியினொடும் தூவிநிற்பார்
கோடு பயில் குல வரை மேல் மின்
குலங்கள் புடை பெயரும் கொள்கைத்தாக. 96
மங்கல தூர் இயந்து வைப்பார் மறைச்
சாமம் பாடுவார் மருங்கு வேதிப்
பொங்கு மணி விளக்கு எடுத்து பூரண
கும்பமும் நிரைப்பார் போற்றி செய்வார்
அங்கு அவர்கள் மனத்து எழுந்த
அதிசயமும் பெருவிருப்பும் அன்பும் பொங்கத்
தங்கு திரு மலி வீதிச் சண்பை
நகர் வலம் செய்து சாரும் காலை. 97
தம் திரு மாளிகையின் கண் எழுந்து
அருளிப் புகும் பொழுது சங்க நாதம்
அந்தர துந்துபி முதலா அளவில் பெருகு
ஒலி தழைப்ப அணைந்து புக்கார்
சுந்தரப் பொற்றோணி மிசை இருந்த
பிரானுடன் அமர்ந்த துணைவி ஆகும்
பைந்தொடியாள் திரு முலையின் பால்
அறா மதுர மொழிப் பவள வாயார். 98
தூ மணி மாளிகையின் கண் அமர்ந்து
அருளி அன்று இரவு தொல்லை நாத
மா மறைகள் திரண்ட பெரும் திருத்
தோணி மன்னி வீற்று இருந்தார் செய்ய
கா மரு சேவடிக் கமலம்
கருத்திலுற இடையறாக் காதல் கொண்டு
நாம நெடும் கதிர் உதிப்ப நண்ணினார்
திருத் தோணி நம்பர் கோயில். 99
காதல் உடன் அணைந்து திருக் கழுமலத்துக்
கலந்து வீற்று இருந்த தங்கள்
தாதை யாரையும் வெளியே தாங்க
அரிய மெய்ஞ்ஞானம் தம்பால் வந்து
போதம் முலை சுரந்து அளித்த புண்ணியத்
தாயாரையும் முன் வணங்கிப் போற்றி
மே தகைய அருள் பெற்றுத் திருக்கோலக்
கா இறைஞ்ச விருப்பில் சென்றார். 100
பெருக் கோல் இட்டு அலை பிறங்கும்
காவிரி நீர் பிரச மலர் தரளம் சிந்த
வரிக் கோல வண்டு ஆட மாதரார்
குடைந்து ஆடும் மணி நீர் வாவி
திருக் கோலக்கா எய்தித் தேவர்பிரான் கோயில்
வலம் செய்து முன் நின்று
இருக்கோல் இட்டு அறிவு அரிய
திருப்பாதம் ஏத்துவதற்கு எடுத்துக் கொள்வார். 101
மெய்ந் நிறைந்த செம் பொருளாம்
வேதத்தின் விழுப் பொருளை வேணிமீது
பைந் நிறைந்த அரவுடனே பசுங்குழவித்
திங்கள் பரித்து அருளுவானை
மைந் நிறைந்த மிடற்றானை மடையில்
வாளைகள் பாய என்னும் வாக்கால்
கைந் நிறைந்த ஒத்து அறுத்து கலைப்
பதிகம் கவுணியர் கோன் பாடும் காலை. 102
கை அதனால் ஒத்து அறுத்துப் பாடுதலும்
கண்டு அருளி கருணை கூர்ந்த
செய்ய சடை வானவர் தம் அஞ்செழுத்தும்
எழுதிய நல் செம்பொன் தாளம்
ஐயர் அவர் திரு அருளால் எடுத்த
பாடலுக்கு இசைந்த அளவால் ஒற்ற
வையம் எல்லாம் உய்ய வரு மறைச்
சிறுவர் கைத் தலத்து வந்தது அன்றே. 103
காழி வரும் பெரும் தகையார் கையில்
வரும் திருத் தாளக் கருவி கண்டு
வாழிய தம் திருமுடி மேல் கொண்டு
அருளி மனம் களிப்ப மதுர வாயில்
ஏழ் இசையும் தழைத்து ஓங்க இன்னிசை
வண் தமிழ்ப் பதிகம் எய்தப் பாடித்
தாழும் மணிக் குழையார் முன் தக்க
திருக் கடைக் காப்புச் சாத்தி நின்றார். 104
உம்பர் உலகம் அதிசயிப்ப ஓங்கிய
நாதத்து அளவின் உண்மை நோக்கித்
தும்புரு நாரதர் முதலாம் சுருதி இசைத்
துறை உள்ளோர் துதித்து மண் மேல்
வம்பலர் மா மழை பொழிந்தார் மறை
வாழ வந்தருளும் மதலையாரும்
தம் பெருமான் அருள் போற்றி மீண்டருளிச்
சண்பை நகர் சாரச் செல்வார். 105
செங்கமல மலர்க் கரத்துத் திருத்
தாளத்துடன் நடந்து செல்லும் போது
தங்கள் குலத் தாதையார் தரியாது
தோளின் மேல் தரித்துக் கொள்ள
அங்கு அவர் தம் தோளின் மிசை எழுந்து
அருளி அணைந்தார் சூழ்ந்து அமரர் ஏத்தும்
திங்கள் அணிமணி மாடத் திருத் தோணி
புரத் தோணிச் சிகரக் கோயில். 106
திருப் பெருகு பெருங் கோயில் சூழ
வலம் கொண்டு அருளித் திருமுன் நின்றே
அருள் பெருகு திருப்பதிகம் எட்டு
ஒரு கட்டளை ஆக்கி அவற்றுள் ஒன்று
விருப்புறு பொன் திருத்தோணி வீற்று
இருந்தார் தமைப் பாட மேவும் காதல்
பொருத்தமுற அருள் பெற்றுப் போற்றி எடுத்து அருளினார் பூவார் கொன்றை. 107
எடுத்த திருப் பதிகத்தின் இசை
திருத் தாளத்தினால் இசைய ஒற்றி
அடுத்த நடை பெறப் பாடி ஆர்வமுற
வணங்கிப் போந்து அலைநீர்ப் பொன்னி
மடுத்த வயல் பூந் தராய் அவர்
வாழ மழ விளங் கோலத்துக் காட்சி
கொடுத்தருளி வைகினார் குறைவு இலா
நிறை ஞானக் கொண்டலார் தாம். 108
அந் நிலையில் ஆளுடைய பிள்ளையார்
தமை முன்னம் அளித்த தாயார்
முன் உதிக்க முயன்ற தவத் திரு
நன்னி பள்ளி முதல் மறையோர் எல்லாம்
மன்னு பெரு மகிழ்ச்சியுடன் மங்கல
தூரியம் துவைப்ப மறைகள் ஓதிக்
கன்னி மதில் சண்பை நகர் வந்து
அணைந்து கவுணியர் கோன் கழலில் தாழ்ந்தார். 109
மங்கலமாம் மெய்ஞ்ஞானம் மண் களிப்பப்
பெற்ற பெரு வார்த்தையாலே
எங்கணும் நீள் பதி மருங்கில்
இரு பிறப்பாளரும் அல்லா ஏனையோரும்
பொங்கு திருத் தொண்டர்களும் அதிசயித்துக்
குழாங் கொண்டு புகலியார் தம்
சிங்க இளஏற்றின் பால் வந்து அணைந்து
கழல் பணியும் சிறப்பின் மிக்கார். 110
வந்த திருத் தொண்டர்க்கும் மல்கு
செழு மறையவர்க்கும் மற்று உளோர்க்கும்
சிந்தை மகிழ்வுற மலர்ந்து திருவமுது
முதல் ஆன சிறப்பின் செய்கை
தம் தம் அளவினில் விரும்பும் தகைமையினால்
கடன் ஆற்றும் சண்பை மூதூர்
எந்தை பிரான் சிவலோகம் என
விளங்கி எவ்வுலகும் ஏத்தும் நாளில். 111
செழும் தரளப் பொன்னி சூழ் திரு நன்னி
பள்ளி உள்ளோர் தொழுது திங்கள்
கொழுந்து அணியும் சடையாரை எங்கள்
பதியினில் கும்பிட்டருள அங்கே
எழுந்தருள வேண்டும் என இசைந்து
அருளித் தோணி வீற்றிருந்தார் பாதம்
தொழும் தகைமையால் இறைஞ்சி அருள்
பெற்றுப் பிறபதியும் தொழமுன் செல்வார். 112
தாது அவிழ் செந்தாமரையின் அக இதழ்
போல் சீர் அடிகள் தரையின் மீது
போதுவதும் பிறர் ஒருவர் பொறுப்பதுவும்
பொறா அன்பு புரிந்த சிந்தை
மாதவம் செய் தாதையார் வந்து
எடுத்துத் தோளின்மேல் வைத்துக் கொள்ள
நாதர் கழல் தம் முடிமேல் கொண்ட
கருத்து உடன் போந்தார் ஞானம் உண்டார். 113
தேன் அலரும் கொன்றையினார் திரு நன்னி
பள்ளியினைச் சாரச் செல்வார்
வான் அணையும் மலர்ச் சோலை தோன்றுவது
எப் பதி என்ன மகிழ்ச்சி எய்திப்
பானல் வயல் திரு நன்னி பள்ளி
எனத் தாதையர் பணிப்பக் கேட்டு
ஞான போனகர் தொழுது நல் தமிழ்ச்
சொல் தொடை மாலை நவிலல் உற்றார். 114
காரைகள் கூகை முல்லை என
நிகழ் கலை சேர் வாய்மைச்
சீர் இயல் பதிகம் பாடித்
திருக் கடைக் காப்புத்தன்னில்
நாரியோர் பாகர் வைகும் நனி
பள்ளி உள்குவார் தம்
பேர் இடர் கெடுதற்கு ஆணை
நமது எனும் பெருமை வைத்தார். 115
ஆதியார் கோயில் வாயில் அணைந்து
புக்கு அன்பு கூரும்
நீதியால் பணிந்து போற்றி நீடிய
அருள் முன் பெற்றுப்
போதுவார் தம்மைச் சூழ்ந்து
பூசுரர் குழாங்கள் போற்றும்
காதல் கண்டு அங்கு அமர்ந்தார்
கவுணியர் தலைவனார் தாம். 116
அம்பிகை அளித்த ஞானம்
அகிலமும் உய்ய உண்ட
நம் பெரும் தகையார் தம்மை
எதிர் கொண்டு நண்ண வேண்டி
உம்பரும் வணங்கும் மெய்ம்மை
உயர் தவத் தொண்டரோடு
தம் பெரும் விருப்பால் வந்தார்
தலைசை அந்தணர்கள் எல்லாம். 117
காவணம் எங்கும் இட்டுக்
கமுகொடு கதலி நாட்டிப்
பூவணத் தாமம் தூக்கிப்
பூரண கும்பம் ஏந்தி
ஆவண வீதி எல்லாம்
அலங்கரித்து அண்ணலாரை
மாவண மலர் மென் சோலை
வளம் பதி கொண்டு புக்கார். 118
திரு மறையோர்கள் சூழ்ந்து
சிந்தையின் மகிழ்ச்சி பொங்கப்
பெரு மறை ஓசை மல்கப்
பெருந் திருக் கோயில் எய்தி
அரு மறைப் பொருள் ஆனாரைப்
பணிந்து அணிநல் சங்கத்தின்
தரு முறை நெறி அக் கோயில்
சார்ந்தமை அருளிச் செய்தார். 119
கறை அணி கண்டர் கோயில்
காதலால் பணிந்து பாடி
மறையவர் போற்ற வந்து
திரு வலம் புரத்து மன்னும்
இறைவரைத் தொழுது பாடும்
கொடியுடை ஏத்திப் போந்து
நிறைபுனல் திருச் சாய்க்காடு
தொழுதற்கு நினைந்து செல்வார். 120
பன்னகப் பூணினாரைப்
பல்லவ னீச்சரத்துச்
சென்னியால் வணங்கி ஏத்தித்
திருந்து இசைப்பதிகம் பாடிப்
பொன்னி சூழ் புகாரில் நீடு
புனிதர்தம் திருச்சாய்க் காட்டு
மன்னுசீர்த் தொண்டர் எல்லாம் மகிழ்ந்து
எதிர் கொள்ளப் புக்கார். 121
வான் அளவு உயர்ந்த வாயில்லுள்
வலம் கொண்டு புக்குத்
தேன் அலர் கொன்றையார் தம்
திருமுன்பு சென்று தாழ்ந்து
மானிடம் தரித்தார் தம்மைப்
போற்றுவார் மண்புகார் என்று
ஊன் எலாம் உருக ஏத்தி
உச்சி மேல் குவித்தார் செங்கை. 122
சீரினில் திகழ்ந்த பாட்டில் திருக்
கடைக் காப்புப் போற்றிப்
பாரினில் பொலிந்த தொண்டர்
போற்றிடப் பயில்வார் பின்னும்
ஏர் இசைப் பதிகம் பாடி ஏத்திப்
போந்து இறைவர் வெண்காடு
ஆரு மெய்க் காதலோடும்
பணிவதற்கு அணைந்தார் அன்றே. 123
பொன்னிதழ்க் கொன்றை வன்னி புனல்
இள மதியம் நீடு
சென்னியர் திருவெண் காட்டுத்
திருத் தொண்டர் எதிரே சென்று அங்கு
இன்ன தன்மையர்கள் ஆனார் என
ஒணா மகிழ்ச்சி பொங்க
மன்னுசீர்ச் சண்பை ஆளும்
மன்னரைக் கொண்டு புக்கார். 124
முத்தமிழ் விரகர் தாமும்
முதல்வர் கோபுரத்து முன்னர்ச்
சித்த நீடு உவகை யோடும்
சென்று தாழ்ந்து எழுந்து புக்குப்
பத்தராம் அடியார் சூழப் பரமர்
கோயிலைச் சூழ் வந்து
நித்தனார் தம் முன்பு எய்தி
நிலம் உறத் தொழுது வீழ்ந்தார். 125
மெய்ப் பொருள் ஆயினாரை
வெண்காடு மேவினாரைச்
செப்பரும்பதிக மாலை கண் காட்டு
நுதல் முன் சேர்த்தி
முப்புரம் செற்றார் பாதம்
சேரும் முக்குளமும் பாடி
ஒப்பரும் ஞானம் உண்டார் உளம்
மகிழ்ந்து ஏத்தி வாழ்ந்தார். 126
அருமையால் புறம்பு போந்து வணங்கி
அங்கு அமரும் நாளில்
திருமுல்லை வாயில் எய்திச்
செந்தமிழ் மாலை சேர்த்தி
மருவிய பதிகள் மற்றும்
வணங்குவார் மறையோர் ஏத்தத்
தருமலி புகலி வந்து
ஞானசம்பர் சார்ந்தார். 127
தோணி வீற்றிருந்தார் தம்மைத்
தொழுது முன் நின்று தூய
ஆணியாம் பதிகம் பாடி அருள்
பெரு வாழ்வு கூரச்
சேண் உயர் மாடம் ஓங்கும்
திருப்பதி அதனில் செய்ய
வேணியார் தம்மை நாளும்
போற்றிய விருப்பின் மிக்கார். 128
வைகும் அந்நாளில் கீழ் பால்
மயேந்திரப் பள்ளி வாசம்
செய் பொழில் குருகா வூரும்
திருமுல்லை வாயில் உள்ளிட்டு
எய்திய பதிகள் எல்லாம்
இன்புற இறைஞ்சி ஏத்தித்
தையலாள் பாகர் தம்மைப் பாடினார்
தமிழ்ச் சொல் மாலை. 129
அவ்வகை மருங்கு சூழ்ந்த
பதிகளில் அரனார் பொற்றாள்
மெய் வகை ஞானம் உண்ட
வேதியர் விரவிப் போற்றி
உய் வகை மண்உளோருக்கு
உதவிய பதிகம் பாடி
எவ்வகையோரும் ஏத்த இறைவரை
ஏத்து(ம்) நாளில். 130
திரு நீல கண்டத்துப் பெரும்
பாணர் தெள் அமுதின்
வருநீர்மை இசைப்பாட்டு மதங்க
சூளா மணியார்
ஒரு நீர்மையுடன் உடைய
பிள்ளையார் கழல் வணங்கத்
தரு நீர்மை யாழ் கொண்டு
சண்பையிலே வந்து அணைந்தார். 131
பெரும் பாணர் வரவு அறிந்து
பிள்ளையார் எதிர் கொள்ளச்
சுரும்பு ஆர் கமல மலர்த்
துணைப் பாதம் தொழுது எழுந்து
விரும்பு ஆர்வத்தொடும் ஏத்தி
மெய்ம் மொழிகளால் துதித்து
வரும் பான்மை தரு வாழ்வு
வந்து எய்த மகிழ் சிறந்தார். 132
அளவு இலா மகிழ்ச்சியினார்
தமை நோக்கி ஐயர் நீர்
உளம் மகிழ இங்கு அணைந்த
உறுதி உடையோம் என்றே
இள நிலா நகை முகிழ்ப்ப
இசைத்த அவரை உடன் கொண்டு
கள நிலவு நஞ்சு அணிந்தார்
பால் அணையும் கவுணியனார். 133
கோயிலினில் புற முன்றில்
கொடு புக்குக் கும்பிடுவித்து
ஏயும் இசை யாழ் உங்கள்
இறைவருக்கு இங்கு இயற்றும் என
ஆய புகழ்ப் பிள்ளையார் அருள்
பெற்ற அதற்கு இறைஞ்சி
மேய தொடைத் தந்திரி யாழ்
வீக்கி இசை விரிக்கின்றார். 134
தான நிலைக் கோல் வடித்துப்
படி முறைமைத் தகுதியினால்
ஆன இசை ஆராய்வுற்று
அங்கணர்தம் பாணியினை
மான முறைப் பாடினியார்
உடன் பாடி வாசிக்க
ஞான போனகர் மகிழ்ந்தார்
நான் மறையோர் அதிசயித்தார். 135
யாழில் எழும் ஓசையுடன் இருவர்
மிடற்று இசை ஒன்றி
வாழி திருத் தோணி உளார்
மருங்கு அணையும் மாட்சியினைத்
தாழும் இரு சிறைப் பறவை படிந்த
தனி விசும்பு இடை நின்று
ஏழ் இசை நூல் கந்தருவர்
விஞ்சையரும் எடுத்து இசைத்தார். 136
எண்ணரும் சீர் திருத்தோணி
எம் பெருமான் கழல் பரவிப்
பண் அமையாழ் இசை கூடப்பெரும்
பாணர் பாடிய பின்
கண் நுதலார் அருளினால் காழியர்
கோன் கொடு போந்து
நண்ணி உறைவிடம் சமைத்து
நல் விருந்து சிறந்து அளிப்ப. 137
பிள்ளையார் அருள் பெற்ற
பெரும்பாணர் பிறை அணிந்த
வெள்ள நீர்ச் சடையாரை அவர்
மொழிந்த மெய்ப் பதிகம்
உள்ளபடி கேட்டலுமே உருகு
பெரு மகிழ்ச்சியராய்த்
தெள் அமிர்தம் அருந்தினர் போல்
சிந்தை களிப்புறத் தொழுதார். 138
காழியார் தவப்பயனாம் கவுணியர்
தம் தோன்றலார்
ஆழி விடம் உண்டவர் தம்
அடி போற்றும் பதிக இசை
யாழின் முறைமையின் இட்டே
எவ் உயிரும் மகிழ்வித்தார்
ஏழ் இசையும் பணி கொண்ட
நீல கண்ட யாழ்ப்பாணர். 139
சிறிய மறைக் களிறு அளித்த
திருப்பதிக இசை யாழின்
நெறியில் இடும் பெரும் பாணர்
பின்னும் நீர் அருள் செய்யும்
அறிவரிய திருப்பதிக இசை
யாழில் இட்டு அடியேன்
பிறிவு இன்றிச் சேவிக்கப் பெற
வேண்டும் எனத் தொழுதார். 140
மற்றதற்குப் பிள்ளையார் மனம்
மகிழ்வுற்று இசைந்து அருளப்
பெற்றவர் தாம் தம்பிரான் அருள்
இதுவே எனப் பேணிச்
சொற்றமிழ் மாலையின் இசைகள் சுருதி
யாழ் முறை தொடுத்தே
அற்றை நாள் போல் என்றும்
அகலா நண்புடன் அமர்ந்தார். 141
சிரபுரத்தில் அமர்ந்தருளும்
திருஞான சம்பந்தர்
பரவு திருத் தில்லை நடம்
பயில்வாரைப் பணிந்து ஏத்த
விரவி எழும் பெரும்
காதல் வெள்ளத்தை உள்ளத்தில்
தர இசையும் குறிப்பு அறியத்
தவ முனிவர்க்கு அருள் செய்தார். 142
பிள்ளையார் அருள் செய்யப் பெரும்
தவத்தால் பெற்று எடுத்த
வள்ளலார் தாமும் உடன்
செல்வதற்கு மனம் களிப்ப
வெள்ளி மால் வரை என்னத்
திருத் தோணி வீற்றிருந்த
புள்ளி மான் உரியாரைத்
தொழுது அருளால் புறப்பட்டார். 143
தாழ்வில் யாழ்ப் பாணரொடும்
தாதையார் தம்மோடும்
மேவிய சீர் அடியார்கன் புடை
வர வெம் குரு வேந்தர்
பூவின் மேல் அயன் போற்றும்
புகலியினைக் கடந்து போய்த்
தேவர்கள் தம் பெரும் தேவர்
திருத் தில்லை வழிச் செல்வார். 144
நள்ளிருட்கண் நின்று ஆடுவார் உறை
பதி நடுவு கண்டன போற்றி
முள்ளிடைப் புற வெள் இதழ்க்
கேதகை முகிழ் விரி மணம் சூழப்
புள்ளிடைத் தடம் பழனமும் படு
கரும்புடை கழிந்திடப் போந்து
கொள்ளிடத் திரு நதிக்கரை அடைந்தனர்
கவுணியர் குல தீபர். 145
வண்டிரைத்து எழு செழு மலர்ப்
பிறங்கலும் மணியும் ஆரமும் உந்தித்
தண்டலைப் பல வளத்தொடும்
வருபுனல் தாழ்ந்து சேவடிதாழத்
தெண் திரைக் கடல் பவளமும் பணிலமும்
செழு மணித் திரள் முத்தும்
கொண்டிரட்டி வந்தோதமங்கெதிர் கொளக்
கொள்ளிடம் கடந்து ஏறி. 146
பல்கு தொண்டர் தம் குழாத் தொடும்
உடன் வரும் பயில் மறையவர் சூழச்
செல் கதிப் பயன் காண்பவர் போல்
களி சிந்தை கூர் தரக் கண்டு
மல்கு தேவரே முதல் அணைத்து
உயிர்களும் வணங்க வேண்டின எல்லாம்
நல்கு தில்லை சூழ் திரு எல்லை
பணிந்தனர் ஞான ஆரமுது உண்டார். 147
செங்கண் ஏற்றவர் தில்லையே நோக்கி
இத் திருந்து உலகினிற்கு எல்லாம்
மங்கலம் தரு மழவிளம் போதகம்
வரும் இரு மருங்கு எங்கும்
தங்கு புள்ளொலி வாழ்த்துரை எடுத்து
முன் தாமரை மது வாசப்
பொங்கு செம்முகை கரம் குவித்து அலர்
முகம் காட்டின புனல் பொய்கை. 148
கலவ மென் மயில் இனம் களித்து அழைத்திடக்
கடி மணக் குளிர் கால் வந்து
உலவி முன் பணிந்து எதிர் கொளக் கிளர்ந்து
எழுந்து உடன் வரும் சுரும்பு ஆர்ப்ப
இலகு செந்தளிர் ஒளி நிறம் திகழ்தர
இரு குழை புடை ஆட
மலர் முகம் பொலிந்து அசைய மென்
கொம்பர் நின்று ஆடுவ மலர்ச் சோலை. 149
இழைத் தடம் கொங்கை இமய மாமலைக்
கொடி இன் அமுது என ஞானம்
குழைத்து அளித்திட அமுது செய்து
அருளிய குருளையார் வரக் கண்டு
மழைத்த மந்த மாருதத்தினால் நறு மலர்
வண்ண நுண் துகள் தூவித்
தழைத்த பொங்கு எழில் முகம் செய்து
வணங்கின தடம் பணை வயல் சாலி. 150
ஞாலம் உய்ந்திட ஞானம் உண்டவர்
எழுந்தருளும் அந் நலம் கண்டு
சேல் அலம்பும் தண் புனல் தடம்
படிந்து அணை சீத மாருதம் வீசச்
சாலவும் பல கண் பெறும் பயன்
பெறும் தன்மையில் களி கூர்வ
போல் அசைந்து இரு புடைமிடைந்து ஆடின
புறம்பு அணை நறும் பூகம். 151
பவம் தவிர்ப்பவர் தில்லை சூழ்
எல்லையில் மறையவர் பயில் வேள்விச்
சிவம் தரும் பயன் உடைய
ஆகுதிகளின் செழும் புகைப் பரப்பாலே
தவம் தழைப்ப வந்தருளிய பிள்ளையார்
தாம் அணைவுற முன்னே
நிவந்த நீல நுண் துகில்
விதானித்தது போன்றது நெடுவானம். 152
கரும்பு செந்நெல் பைம் கமுகொடு கலந்து
உயர் கழனி அம் பணை நீங்கி
அரும்பு மென் மலர் தளிர் பல
மூலம் என்று அனைத்தின் ஆகரம் ஆன
மருங்கில் நந்தன வனம் பணிந்து
அணைந்தனர் மாட மாளிகை ஓங்கி
நெருங்கு தில்லை சூழ் நெடுமதில் தென்
திரு வாயில் நேர் அணித்தாக. 153
பொங்கு கொங்கையில் கறந்த மெய்ஞ்
ஞானமாம் போனகம் பொன் குன்ற
மங்கை செங்கையால் ஊட்ட உண்டருளிய
மதலையார் வந்தார் என்று
அங்கண் வாழ் பெரும் திருத்தில்லை
அந்தணர் அன்பர்களுடன் ஈண்டி
எங்கும் மங்கல அணிமிக அலங்கரித்து
எதிர் கொள அணைவார்கள். 154
வேத நாதமும் மங்கல முழக்கமும்
விசும்பிடை நிறைந்து ஓங்க
சீத வாச நீர் நிறை குடம் தீபங்கள்
திசை எலாம் நிறைந்து ஆரச்
சோதி மா மணி வாயிலின் புறம் சென்று
சோபன ஆக்கமும் சொல்லிக்
கோதிலாதவர் ஞானசம்பந்தரை எதிர்
கொண்டு புக்கார். 155
செல்வம் மல்கிய தில்லை மூதூரினில்
தென் திசைத் திருவாயில்
எல்லை நீங்கி உள் புகும் திருமருங்கு
நின்று எடுக்கும் ஏத்து ஒலி சூழ
மல்லல் ஆவண மறுகிடைக் கழிந்து போய்
மறையவர் நிறை வாழ்க்கைத்
தொல்லை மாளிகை நிரைத் திரு வீதியைத்
தொழுது அணைந்தனர் தூயோர். 156
மலர்ந்த பேரொளி குளிர் தரச் சிவமணம்
கமழ்ந்து வான் துகள் மாறிச்
சிலம்பு அலம்பு சேவடியவர்
பயில்வுறும் செம்மையால் திருத்தொண்டு
கலந்த அன்பர் தம் சிந்தையில் திகழ்
திருவீதி கண் களி செய்யப்
புலம் கொள் மைந்தனார் எழுநிலைக்
கோபுரம் பணிந்து எழுந்தனர் போற்றி. 157
நீடுநீள் நிலைக் கோபுரத்துள் புக்கு
நிலவிய திரு முன்றின்
மாடு செம் பொனின் மாளிகை வலம்
கொண்டு வானுற வளர் திங்கள்
சூடுகின்ற பேரம்பலம் தொழுது போந்து
அருமறை தொடர்ந்து ஏத்த
ஆடுகின்றவர் முன்புற அணைந்தனர்
அணிகிளர் மணிவாயில். 158
நந்தி எம்பிரான் முதல் கண நாதர்கள்
நலம் கொள்பன் முறை கூட
அந்தம் இல்லவர் அணுகி முன்
தொழுதிரு அணுக்கனாம் திருவாயில்
சிந்தை ஆர்வமும் பெருகிடச் சென்னியில்
சிறிய செங்கை யேற
உய்ந்து வாழ் திரு நயனங்கள்
களி கொள்ள உருகும் அன்பொடு புக்கார். 159
அண்ணலார் தமக்கு அளித்த மெய்ஞ்
ஞானமே ஆன அம்பல முந்தம்
உள் நிறைந்த ஞானத்து எழும் ஆனந்த
ஒரு பெரும் தனிக் கூத்தும்
கண்ணின் முன்புறக் கண்டு கும்பிட்டு
எழும் களிப்பொடும் கடல் காழிப்
புண்ணியக் கொழுந்து அனையவர் போற்றுவார்
புனிதர் ஆடிய பொற்பு. 160
உணர்வின் நேர் பெற வரும் சிவ
போகத்தை ஒழிவு இன்றி உருவின் கண்
அணையும் ஐம் பொறி அளவினும்
எளிவர அருளினை எனப் போற்றி
இணை இல் வண் பெருங் கருணையே
ஏத்தி முன் எடுத்த சொற் பதிகத்தில்
புணரும் இன் இசை பாடினர்
ஆடினர் பொழிந்தனர் விழி மாரி. 161
ஊழி முதல்வர்க்கு உரிமைத்
தொழில் சிறப்பால்
வாழி திருத் தில்லை வாழ்
அந்தணரை முன் வைத்தே
ஏழ் இசையும் ஓங்க
எடுத்தார் எமை ஆளும்
காழியர் தம் காவலனார்
கற்றாங் கெரியோம்பி. 162
பண்ணார் பதிகத் திருக்
கடைக் காப்புப் பரவி
உள் நாடும் என்பும்
உயிரும் கரைந்து உருக்கும்
விண் நாயகன் கூத்து
வெட்ட வெளியே திளைத்துக்
கண்ணார் அமுது உண்டார்
காலம் பெற அழுதார். 163
முன் மால் அயன் அறியா
மூர்த்தியார் முன் நின்று
சொல் மாலையால் காலம்
எல்லாம் துதித்து இறைஞ்சிப்
பல் மா மறை
வெள்ளம் சூழ்ந்து பரவுகின்ற
பொன் மாளிகையை வலம்
கொண்டு புறம் போந்தார். 164
செல்வத் திருமுன்றில் தாழ்ந்து
எழுந்து தேவர் குழாம்
மல்கும் திருவாயில் வந்து
இறைஞ்சி மா தவங்கள்
நல்கும் திரு வீதி
நான்கும் தொழுது அங்கண்
அல்கும் திறம் அஞ்சுவார்
சண்பை ஆண்டகையார். 165
செய்ய சடையார்
திருவேட்களம் சென்று
கை தொழுது சொல் பதிகம்
பாடிக் கழுமலக் கோன்
வைகி அருளும் இடம்
அங்கு ஆக மன்றாடும்
ஐயன் திருக் கூத்துக்
கும்பிட்டு அணைவுறும் நாள். 166
கைம் மான் மறியார்
கழிப்பாலை உள் அணைந்து
மெய்ம் மாலைச் சொற் பதிகம்
பாடி விரைக் கொன்றைச்
செம்மாலை வேணித் திரு
உச்சி மேவியுறை
அம்மானைக் கும்பிட்டு அருந்
தமிழும் பாடினார். 167
பாடும் பதிக இசை
யாழ்ப்பாணரும் பயிற்றி
நாடும் சிறப்பு எய்த
நாளும் நடம் போற்றுவார்
நீடும் திருத்தில்லை அந்தணர்கள்
நீள் மன்றுள்
ஆடும் கழற்கு அணுக்கராம்
பேறு அதிசயிப்பார். 168
ஆங்கு அவர் தம் சீலத்து
அளவு இன்மையும் நினைந்தே
ஓங்கி எழும் காதல்
ஒழியாத உள்ளத்தார்
தேன் கமழும் சோலைத்
திருவேட்களம் கடந்து
பூங்கிடங்கு சூழ் புலியூர்
புக்கு அணையும் போழ்தின்கண். 169
அண்டத்து இறைவர் அருளால்
அணி தில்லை
முண்டத் திருநீற்று மூவாயிரவர்களும்
தொண்டத் தகைமைக் கண
நாதராய்த் தோன்றக்
கண்ட அப் பரிசு
பெரும் பாணர்க்கும் காட்டினார். 170
செல்வம் பிரிவு அறியாத்
தில்லை வாழ் அந்தணரும்
எல்லையில் சீர்ச் சண்பை
இளவேறு எழுந்து அருளி
ஒல்லை இறைஞ்சா முன்
தாமும் உடன் இறைஞ்சி
மல்லல் அணி வீதி
மருங்கு அணைய வந்தார்கள். 171
பொங்கி எழும் காதல் புலன்
ஆகப் பூசுரர் தம்
சிங்கம் அனையார்
திரு முடியின் மேல் குவித்த
பங்கயத்தின் செவ்வி பழித்து
வனப்பு ஓங்கும்
செங்கையொடும் சென்று
திருவாயில் உட்புக்கார். 172
ஒன்றிய சிந்தை உருக
உயர் மேருக்
குன்று அனைய பேரம்பலம்
மருங்கு கும்பிட்டு
மன்றுள் நிறைந்து ஆடும்
மாணிக்கக் கூத்தர் எதிர்
சென்று அணைந்து தாழ்ந்தார்
திருக்களிற்றுப் படிக் கீழ். 173
ஆடினாய் நறு நெய்யொடு பால்
தயிர் என்று எடுத்து ஆர்வத்தால்
பாடினார் பின்னும் அப்பதிகத்தினில்
பரவிய பாட்டு ஒன்றில்
நீடு வாழ் தில்லை நான் மறையோர்
தமைக் கண்ட அந் நிலை எல்லாம்
கூறுமாறு கோத்து அவர் தொழுது
ஏத்து சிற்றம் பலம் எனக் கூறி. 174
இன்ன தன்மையில் இன்னிசைப் பதிகமும்
திருக்கடைக் காப்பு ஏற்றி
மன்னும் ஆனந்த வெள்ளத்தில் திளைத்து
எதிர் வந்து முன் நின்று ஆடும்
பின்னுவார் சடைக் கூத்தர் பேரருள்
பெறப் பிரியாத விடைபெற்றுப்
பொன்னின் அம்பலம் சூழ்ந்து தாழ்ந்து
எழுந்து போந்து அணைந்தனர் புறமுன்றில். 175
அப் புறத்திடை வணங்கி அங்கு
அருளுடன் அணிமணித் திருவாயில்
பொற்புறத் தொழுது எழுந்து உடன்
போதரப் போற்றிய புகழ்ப் பாணர்
நற்பதம் தொழுது அடியனேன் பதி
முதல் நதி நிவாக்கரை மேய
ஒப்பில் தானங்கள் பணிந்திட வேண்டும் என்று
உரை செய அது நேர்வார். 176
பொங்கு தெண்திரைப் புனித நீர்
நிவாக்கரைக் குடதிசை மிசைப் போந்து
தங்கு தந்தையாருடன் பரிசனங்களும்
தவ முனிவரும் செல்லச்
செங்கை யாழ்த் திரு நீலக்
கண்டப் பெரும் பாணருடன் சேர
மங்கையார் புகழ் மதங்க
சூளாமணியாருடன் வரவந்தார். 177
இரும் தடங்களும் பழனமும் கடந்து
போய் எருக்கத்தம் புலியூரின்
மருங்கு சென்றுற நீல கண்டப்
பெரும்பாணனார் வணங்கிக் கார்
நெருங்கு சோலை சூழ் இப்பதி
அடியனேன்பதி என நெடிது இன்புற்று
அருங்கலைச் சிறு மழ இளங்களிறனார்
அங்கணைந்து அருள் செய்வார். 178
ஐயர் நீர் அவதரித்திட இப்பதி
அளவில் மாதவம் முன்பு
செய்தவாறு எனச் சிறப்பு உரைத்து
அருளி அச் செழும்பதி இடம் கொண்ட
மை கொள் கண்டர் தம் கோயிலினுட்
புக்கு வலம் கொண்டு வணங்கி பார்
உய்ய வந்தவர் செழும் தமிழ்ப் பதிகம்
அங்கு இசையுடன் உரை செய்தார். 179
அங்கு நின்று எழுந்து அருளி
மற்றவருடன் அம்பொன்மா மலை வல்லி
பங்கர் தாம் இனிது உறையும்
நற் பதி பல பரிவொடும் பணிந்து ஏத்தித்
துங்க வண்தமிழ்த் தொடை மலர் பாடிப்
போய்த் தொல்லை வெங்குரு வேந்தர்
செங்கண் ஏற்றவர் திரு முது குன்றினைத்
தொழுது சென்று அணைகின்றார். 180
மொய் கொள் மாமணிக் கொழித்து முத்தாறு
சூழ் முது குன்றை அடைவோம் என்று
எய்து சொல்மலர் மாலை வண் பதிகத்தை
இசையொடும் புனைந்து ஏத்தி
செய் தவத் திரு முனிவரும் தேவரும்
திசையெலாம் நெருங்கப் புக்கு
ஐயர் சேவடி பணியும் அப் பொருப்பினில்
ஆதரவுடன் சென்றார். 181
வான நாயகர் திருமுது குன்றினை
வழிபட வலம் கொள்வார்
தூ நறும் தமிழ்ச் சொல் இருக்குக்
குறள் துணை மலர் மொழிந்து ஏத்தி
ஞான போனகர் நம்பர் தம் கோயிலை
நண்ணி அங்கு உள்புக்கு
தேன் அலம்பு தண் கொன்றை யார்
சேவடி திளைத்த அன்பொடு தாழ்ந்தார். 182
தாழ்ந்து எழுந்து முன் முரசு அதிர்ந்து எழும்
எனும் தண் தமிழ்த் தொடை சாத்தி
வாழ்ந்து போந்து அங்கண் வளம்பதி
அதனிடை வைகுவார் மணி வெற்புச்
சூழ்ந்த தண் புனல் சுலவு முத்தாறொடு
தொடுத்த சொல் தொடை மாலை
வீழ்ந்த காதலால் பல முறை
விளம்பியே மேவினார் சில நாள்கள். 183
ஆங்கு நாதரைப் பணிந்து பெண்ணாகடம்
அணைந்து அருமறை ஓசை
ஓங்கு தூங்கானை மாடத்துள் அமர்கின்ற
ஒரு தனிப் பரஞ்சோதிப்
பாங்கு அணைந்து முன் வலம் கொண்டு
பணிவுற்றுப் பரவு சொல் தமிழ் மாலை
தீங்கு நீங்குவீர் தொழுமின்கள் எனும்
இசைப் பதிகமும் தெரிவித்தார். 184
கருவரைப்பில் புகாதவர் கை தொழும்
ஒருவரைத் தொழுது உள்ளம் உவந்து போய்ப்
பெருவரத்தினில் பெற்றவர் தம்முடன்
திரு அரத்துறை சேர்தும் என்று ஏகுவார். 185
முந்தை நாள்கள் ஒரோ ஒரு கால் முது
தந்தையார்பியல் மேல் இருப்பார் தவிர்ந்து
அந்தணாளர் அவர் அருகே செலச்
சிந்தை செய் விருப்போடு முன் சென்றனர். 186
ஆதியார் தம் அரத்துறை நோக்கியே
காதலால் அணைவார் கடிது ஏகிட
தாதையாரும் பரிவுறச் சம்பந்தர்
பாத தாமரை நொந்தன பைப்பய. 187
மறை அனைத்தும் ஒரு வடிவாம் என
நிறை மதிப் பிள்ளை நீள் நிலம் சேர்ந்து எனத்
துறை அலைக் கங்கை சூடும் அரத்துறை
இறைவரைத் தொழுவான் விரைந்து ஏகினார். 188
பாசம் அற்றிலர் ஆயினும் பார் மிசை
ஆசை சங்கரர்கு ஆயின தன்மையால்
தேசு மிக்க திருவுரு ஆனவர்
ஈசனைத் தொழுதே தொழுது ஏகினார். 189
இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட
வந்த வைதிக மாமணி ஆனவர்
சிந்தை ஆரமுதாகிய செம் சடைத்
தந்தையார் கழல் தாழ்ந்து எழுந்து ஏகினார். 190
மாறன் பாடி எனும் பதி வந்துற
ஆறு செல் வருத்தத்தின் அசைவினால்
வேறு செல்பவர் வெய்துறப் பிள்ளையார்
ஏறும் அஞ்செழுத்து ஓதி அங்கு எய்திட. 191
உய்ய வந்த சம்பந்தர் உடன் வந்தார்க்கு
எய்து வெம்மை இளைப்பு அஞ்சினான் போலக்
கைகள் ஆயிரம் வாங்கிக் கரந்து போய்
வெய்யவன் சென்று மேல் கடல் வீழ்ந்தனன். 192
அற்றை நாள் இரவு அப்பதியின் இடைச்
சுற்று நீடிய தொண்டர்கள் போற்றிடப்
பெற்றம் ஊர்ந்த பிரான் கழல் பேணுவார்
வெற்றி மாதவத்தோருடன் மேவினார். 193
இந்நிலைக் கண் எழில் வளர் பூந்தராய்
மன்னனார் தம் வழி வருத்தத் தினை
அன்னம் ஆடும் துறை நீர் அரத்துறைச்
சென்னியாற்றர் திருவுளம் செய்தனர். 194
ஏறுதற்குச் சிவிகை இடக்குடை
கூறி ஊதக் குலவு பொற் சின்னங்கள்
மாறில் முத்தின் படியினால் மன்னிய
நீறு வந்த நிமலர் அருளுவார். 195
நீடு வாழ் பதி யாகு(ம்) நெல் வாயிலின்
மாட மாமனை தோறு(ம்) மறையோர்க்குக்
கூடு கங்குல் கனவில் குலமறை
தேடு சேவடி தோன்ற முன் சென்று பின். 196
ஞான சம்பந்தன் நம்பால் அணைகின்றான்
மான முத்தின் சிவிகை மணிக் குடை
ஆன சின்ன(ம்) நம் பால் கொண்டு அருங்கலைக்
கோன் அவன் பால் அணைந்து கொடும் என. 197
அந்தணாளர் உரைத்த அப்போழ்தினில்
வந்து கூடி மகிழ்ந்து அற்புதம் உறும்
சிந்தையோடும் செழுநீர் அரத்துறை
இந்து சேகரர் கோயில் வந்து எய்தினர். 198
ஆங்கு மற்ற அருள் அடியாருடன்
ஓங்கு கோயில் உள்ளார்க்கும் உண்டாயிட
ஈங்கு இது என்ன அதிசயம் என்பவர்
தாங்கள் அம்மறையோர்கள் முன் சாற்றினார். 199
சால மிக்க வியப்புறு தன்மையின்
பாலர் ஆதலும் பள்ளி எழுச்சியின்
காலம் எய்திடக் காதல் வழிப்படும்
சீல மிக்கார் திருக்காப்பு நீக்கினார். 200
திங்கள் நீர்மைச் செழுந் திரள் முத்தினால்
துங்க வெண் குடை தூய சிவிகையும்
பொங்க ஊதும் பொருவரும் சின்னமும்
அங்கண் நாதர் அருளினால் கண்டனர். 201
கண்டபின் அவர் கை தலை மேல் குவித்து
எண்திசைக்கும் விளக்கி இவையாம் எனத்
தொண்ட ரோடு மறையவர் சூழ்ந்து எழுந்து
அண்டர் நாடும் அறிவுற ஆர்த்தனர். 202
சங்கு துந்துபி தாரை பேரி இம்முதல்
பொங்கு பல்லிய நாதம் பொலிந்து எழ
அங்கணன் அருளால் அவை கொண்டு உடன்
பொங்கு காதல் எதிர் கொளப் போதுவார். 203
மாசில் வாய்மை நெல் வாயின் மறையவர்
ஆசில் சீர்ச் சண்பை ஆண் தகையார்க்கு எதிர்
தேசுடைச் சிவிகை முதலாயின
ஈசர் இன் அருளால் தாங்கி ஏகினார். 204
இத்தலை இவர் இன்னணம் ஏகினார்
அத்தலைச் சண்பை நாதர்க்கும் அவ் இரா
முத்த நற் சிவிகை முதல் ஆயின
உய்த்து அளிக்கும் படி முன் உணர்த்துவார். 205
அள்ளல் நீர் வயல் சூழும் அரத்துறை
வள்ளலார் நாம் மகிழ்ந்து அளிக்கும் அவை
கொள்ளல் ஆகும் கொண்டு உய்த்தல் செய்வாய் என
உள்ளவாறு அருள் செய்ய உணர்ந்த பின். 206
சண்பை ஆளியார் தாம் கண்ட மெய்யருள்
பண்பு தந்தையார் தம்முடன் பாங்கமர்
தொண்டருக்கு அருள் செய்து தொழா முனம்
விண் புலப்பட வீங்கு இருள் நீங்கலும். 207
மாலை யாமம் புலர் உறும் வைகறை
வேலை செய்வினை முற்றி வெண் நீறு அணி
கோல மேனியராய்க் கைம் மலர் குவித்து
ஏல அஞ்செழுத்து ஓதி எழுந்தனர். 208
போத ஞானப் புகலிப் புனிதரைச்
சீத முத்தின் சிவிகை மேல் ஏற்றிடக்
காதல் செய்பவன் போலக் கருங்கடல்
மீது தேரின் வந்து எய்தினன் வெய்யவன். 209
ஆய போழ்தின் அர எனும் ஆர்ப்புடன்
தூய முத்தின் சிவிகை சுடர்க் குடை
மேய சின்னங்கள் கொண்டு மெய் அன்ப ரோடு
ஏய அந்தணர் தாம் எதிர் தோன்றினார். 210
வந்து தோன்றிய அந்தணர் மாதவர்
கந்த வார் பொழில் காழி நன்னாடர் முன்
அந்தமில் சீர் அரத்துறை ஆதியார்
தந்த பேரருள் தாங்குவீர் என்றனர். 211
என்று தங்களுக்கு ஈசர் அருள் செய்தது
ஒன்றும் அங்கு ஒழியாமை உரைத்து முன்
நின்று போற்றித் தொழுதிட நேர்ந்தது
மன்றுளார் அருள் என்று வணங்கினார். 212
மெய்ம்மை போற்றி விடாத விருப்பினால்
தம்மை உன்னும் பரிசு தந்து ஆள்பவர்
செம்மை நித்தில ஆனச் சிறப்பு அருள்
எம்மை ஆளுவிப்பான் இன்று அளித்ததே. 213
எந்தை ஈசன் என எடுத்து இவ்வருள்
வந்தவாறு மற்று எவ் வணமோ என்று
சிந்தை செய்யும் திருப் பதிகத்து இசை
புந்தியார் அப் புகன்று எதிர் போற்றுவார். 214
பொடி அணிந்த புராணன் அரத்துறை
அடிகள் தம் அருளே இதுவாம் எனப்
படி இலாத சொல் மாலைகள் பாடியே
நெடிது போற்றிப் பதிகம் நிரப்பினார். 215
சோதி முத்தின் சிவிகை சூழ் வந்து பார்
மீது தாழ்ந்து வெண் நீற்று
ஒளி போற்றி நின்று
ஆதியார் அருள் ஆதலின் அஞ்செழுத்து
ஓதி ஏறினார் உய்ய உலகெலாம். 216
பல்கு வெண்கதிர்ப் பத்திசேர்
நித்திலச் சிவிகைப்
புல்கு நீற்று ஒளியுடன் பொலி
புகலி காவலனார்
அல்கு வெள் வளை அலைத்து
எழு மணி நிரைத் தரங்கம்
மல்கு பாற்கடல் வளர்மதி
உதித்தது என வந்தார். 219
நீடு தொண்டர்கள் மறையவர்
ஏனையோர் நெருங்கி
மாடு கொண்டு எழு மகிழ்ச்சியின்
மலர்க்கை மேல் குவித்தே
ஆடு கின்றனர் அயர்ந்தனர்
அளவில் ஆனந்தம்
கூடுகின்ற கண் பொழி புனல்
வெள்ளத்தில் குளித்தார். 220
செய்ய பொன் புனை
வெண்டரளத்து அணிசிறக்கச்
சைவ மாமறைத் தலைவர்பால்
பெறும் தனிக் காளம்
வையம் ஏழுடன் மறைகளும்
நிறை தவத்தோரும்
உய்ய ஞானசம்பந்தன் வந்தான் என ஊத. 221
சுற்று மாமறைச் சுருதியின்
பெருகு ஒலி நடுவே
தெற்றினார் புரம் எரித்தவர்
தரு திருச்சின்னம்
முற்றும் ஆனவண் ஞானமே
முலை சுரந்து ஊட்டப்
பெற்ற பாலறா வாயன்
வந்தான் எனப் பிடிக்க. 222
புணர்ந்த மெய்த்தவக் குழாத்தொடும்
போதுவார் முன்னே
இணைந்த நித்திலத்து இலங்கு
ஒளி நலங்கிளர் தாரை
அணைந்த மாமறை முதல்
கலை அகிலமும் ஓதாது
உணர்ந்த முத்தமிழ் விரகன்
வந்தான் என ஊத. 223
தெருளும் மெய்க்கலை விளங்கவும்
பார் உளோர் சிந்தை
இருளும் நீங்கவும் எழுது சொன்
மறை அளிப்பவர் தாம்
பொருளும் ஞானமும் போகமும்
போற்றி என்பாருக்கு
அருளும் அங்கணர் திரு அரத்
துறையை வந்து அணைந்தார். 224
வந்து கோபுர மணி நெடு
வாயில் சேய்த்து ஆகச்
சந்த நித்திலச் சிவிகை நின்று
இழிந்து தாழ்ந்து எழுந்து
சிந்தை ஆர்வமும் மகிழ்ச்சியும்
பொங்கி முன் செல்ல
அந்தி நாண்மதி அணிந்தவர்
கோயிலுள் அடைந்தார். 225
மன்னு கோயிலை வலம் கொண்டு
திரு முன்பு வந்து
சென்னியில் கரம் குவித்து வீழ்ந்து
அன்பொடு திளைப்பார்
என்னையும் பொருளாக இன்
அருள் புரிந்து அருளும்
பொன் அடித்தலத் தாமரை
போற்றி என்று எழுந்தார். 226
இசை விளங்கிட இயல்பினில்
பாடி நின்று ஏத்தி
மிசை விளங்கு நீர்
வேணியார் அருளினால் மீண்டு
திசை விளங்கிடத் திருவருள்
பெற்றவர் சில நாள்
அசைவில் சீர்த் தொண்டர்
தம்முடன் அப்பதி அமர்ந்தார். 228
தேவர் தம்பிரான் திரு அரத்
துறையினில் இறைஞ்சி
மேவு நாள்களில் விமலனார்
நெல் வெண்ணெய் முதலாத்
தாவில் அன்பர்கள் தம்முடன்
தொழுது பின் சண்பைக்
காவலர் அருள் பெற்று உடன்
கலந்து மீண்டு அணைந்தார். 229
விளங்கு வேணு புரத்
திருத் தோணி வீற்றிருந்த
களம் கொள் கண்டர் தம்
காதலியார் உடன் கூட
உளம் கொளப் புகுந்து
உணர்வினில் வெளிப்பட உருகி
வளம் கொள் பூம்புனல் புகலிமேல்
செல மனம் வைத்தார். 230
அண்ணலார் திரு அரத்துறை
அடிகளை வணங்கி
நண்ணு பேரருளால் விடை கொண்டு
போய் நடம் கொண்டு
உள் நிறைந்த பூங்கழலிணை
உச்சி மேல் கொண்டே
வெண்ணிலா மலர் நித்திலச்
சிவிகை மேற் கொண்டார். 231
சிவிகை முத்தினில் பெருகு ஒளி
திசை எலாம் விளக்க
கவிகை வெண்மதிக் குளிர்
ஒளி கதிர் செய்வான் கலப்பக்
குவிகை மேல் கொண்டு மறையவர்
குணலை இட்டு ஆடப்
புவிகைம்மாறு இன்றிப் போற்ற
வந்து அருளினார் போந்தார். 232
உடைய பிள்ளையார் வரும்
எல்லை உள்ள அப்பதியோர்
புடை இரண்டினும் கொடியொடு
பூந்துகில் விதானம்
நடை செய் காவணம் தோரணம்
பூகம் நல் கதலி
மிடையும் மாலைகள் நிறை
குடம் விளக்கொடு நிரைத்தார். 234
அனைய செய்கையால் எதிர்
கொளும் பதிகள் ஆனவற்றின்
வினை தரும் பவம்
தீர்ப்பவர் கோயில்கள் மேவிப்
புனையும் வண் தமிழ் மொழிந்து
அடி பணிந்து போந்து அணைந்தார்
பனை நெடும் கை மா
உரித்தவர் மகிழ் பெரும் பழுவூர். 235
அங்கு அணைந்து இளம்பிறை
அணிந்த சென்னியார்
பொங்கு எழில் கோபுரம்
தொழுது புக்க பின்
துங்க நீள் விமானத்தைச்
சூழ்ந்து வந்துமுன்
பங்கயச் சேவடி
பணிந்து பாடுவார். 236
மண்ணினில் பொலிகுல மலையர்
தாம் தொழுது
எண்ணில் சீர்ப் பணிகள்
செய்து ஏத்தும் தன்மையில்
நண்ணிய வகை சிறப்பித்து நாதரைப்
பண்ணினில் திகழ் திருப்பதிகம் பாடினார். 237
பாவினது இசை வழிபாடி அங்கு அகன்றி
யாவரும் தொழுது உடன் ஏத்த எய்தினார்
மூவுலகு உய்ய நஞ்சு உண்ட மூர்த்தியார்
மேவிய பெரும் திரு விசய மங்கையில். 238
அந்தணர் விசய மங்கையினில் அங்கணர்
தம் தனி ஆலயம் சூழ்ந்து தாழ்ந்து முன்
வந்தனை செய்து கோ தனத்தை மன்னிய
செந்தமிழ் மாலையில் சிறப்பித்து ஏத்தினார். 239
விசய மங்கையின் இடம்
அகன்று மெய்யர் தாள்
அசைவில் வைகாவினில் அணைந்து
பாடிப் போந்து
இசை வளர் ஞான சம்பந்தர் எய்தினார்
திசை உடை ஆடையர் திருப்புறம் பயம். 240
புறம் பயத்து இறைவரை
வணங்கிப் போற்றி செய்
திறம் புரி நீர்மையில் பதிகச் செந்தமிழ்
நிறம் பயில் இசையுடன் பாடி நீடிய
அறம் தரு கொள்கையர் அமர்ந்து மேவினார். 241
அத் திருப்பதி பணிந்து
அகன்று போய் அனல்
கைத் தலத்தவர் பதி
பிறவும் கை தொழும்
முத் தமிழ் விரகராம்
முதல்வர் நண்ணினார்
செய்த் தலைப் பணிலம்
முத்து ஈனும் சேய்ஞலூர். 242
திரு மலி புகலிமன்
சேரச் சேய் ஞலூர்
அரு மறையவர் பதி
அலங்கரித்து முன்
பெரு மறையொடு முழவு
ஒலி பிறங்கவே
வருமுறை எதிர்
கொள வந்து முந்தினார். 243
ஞான சம்பந்தரும் நாயனார் சடைத்
தூ நறும் தொடையல்
முன் சூட்டும் பிள்ளையார்
பான்மையில் வரும் பதி
என்று நித்தில
யானமுன் இழிந்து எதிர்
இறைஞ்சி எய்தினார். 244
மா மறையாளர் வண்
புகலிப் பிள்ளையார்
தாம் எழுந்தருளிடத்
தங்கள் பிள்ளையார்
காமரும் பதியில் வந்து
அருளக் கண்டனர்
ஆமகிழ்வுடன் பணிந்து
ஆடி ஆர்த்தனர். 245
களித்தனர் புண்ணியக் கரக வாசநீர்
தெளித்தனர் பொரிகளும்
மலரும் சிந்தினர்
துளித்தனர் கண் மழை
சுருதி ஆயிரம்
அளித்தவர் கோயிலுள் அவர்
முன்பு எய்தினார். 246
வெங்குரு வேந்தரும் விளங்கு
கோயிலைப்
பொங்கிய விருப்பினால் புடை
வலம் கொடு
செங்கைகள் சென்னிமேல் குவித்துச்
சென்று புக்கு
அங்கணர் முன்புற
அணைந்து தாழ்ந்தனர். 247
வேதியர் சேய்ஞலூர் விமலர்
தம் கழல்
காதலில் பணிந்தவர்
கருணை போற்றுவார்
தாதை தாள் தடிந்த
சண்டீசப் பிள்ளையார்
பாதகப் பயன் பெறும்
பரிசு பாடினார். 248
இன்னிசை வண் தமிழ்
பாடி ஏத்தியே
நன்னெடும் பதி உளோர்
நயக்க வைகிய
பின்னர் வெண்பிறை அணி
வேணிப் பிஞ்ஞகர்
மன்னிய திருப்பனந்தாள்
வணங்கினார். 249
ஆங்கணி சொன் மலர்
மாலை சாத்தி அப்
பாங்கு பந்தணை நலூர்
பணிந்து பாடிப் போய்த்
தீங்கு தீர் மா மறைச்
செம்மை அந்தணர்
ஓங்கும் ஓமாம் புலியூர்
வந்து உற்றனர். 250
மற்ற நற்பதி வட
தளியின் மேவிய
அற்புதர் அடி பணிந்து
அலர்ந்த செந்தமிழ்ச்
சொல் தொடைபாடி அங்கு
அகன்று சூழ் மதில்
பொன் பதி வாழ்
கொளி புத்தூர் புக்கனர். 251
சீர் வளர் கோயிலை
அணைந்து தேமலர்க்
கார் வளர் கண்டர்
தாள் பணிந்து காண்பவர்
பார் புகழ் பதிகங்கள்
பாடி நீடுவார்
வார் பொழில் கடம்பையும்
வணங்கி வாழ்ந்தனர். 252
நம்பரை நலம் திகழ்
நாரையூரினில்
கும்பிடும் விருப்பொடு
குறுகிக் கூடிய
வம்பலர் செந்தமிழ் மாலை
பாடி நின்று
எம்பிரான் கவுணியர்
தலைவர் ஏத்தினார். 253
அப்பதி பணிந்து அரும்
தமிழ் புனைந்து தம்
மெய்ப்படு விருப்பொடு
மேவு நாள் அரன்
பொன் பதி பலவும் முன்
பணிந்து போந்தனர்
பைப் பணியவர்
கருப் பறியலூரினில். 254
பரமர் தம் திருக்
கருப் பறியலூரினைச்
சிரபுரச் சிறுவர் கை
தொழுது செந்தமிழ்
உரை இசை பாடி
அம் மருங்கின் உள்ளவாம்
சுரர் தொழும் பதிகளும்
தொழுது பாடினார். 255
மண் உலகு செய்த தவப் பயனாய் உள்ள
வள்ளலார் அப்பதிகள் வணங்கி ஏகி
எண்ணில் முரசு இரங்கி எழப் பணிலம் ஆர்ப்ப
இலங்கிய காளம் சின்னம் எங்கும் ஊதக்
கண் வளர் மென் கரும்பு மிடை கதிர்ச்
செஞ்சாலி கதலி கமுகுடன் ஓங்கும் கழனி நாட்டுத்
தெண் நிலவு சூடிய தம் பெருமான்
வைகும் திருப் பிரம புரம் சாரச் செல்லும்போது. 256
பிள்ளையார் எழுந்தருளக் கேட்ட செல்வப்
பிரமபுரத்து அருமறையோர் பெருகு காதல்
உள்ளம் மகிழ் சிறந்து ஓங்கத் தோணி மேவும்
உமைப் பாகர் கழல் வணங்கி உவகை கூர
வெள்ள மறை ஒலிபெருக மறுகு தோறும்
மிடை மகர தோரணங்கள் கதலி பூகம்
தெள்ளுபுனல் நிறை குடங்கள் தீப தூபம் செழுங்
கொடிகள் நிரைத்து எதிர்கொள் சிறப்பில் செய்வார். 257
ஆரணங்கள் மதுர ஒலி எழுந்து பொங்க
அரசிலையும் தருப்பையும் பெய்து அணிந்த வாசப்
பூரண கும்பங்கள் நிறை கரகம் ஏந்திப்
புது மலரும் நறும் துகளும் பொரியும் தூவி
வாரணங்கு முலை உமையாள் குழைத்த
செம்பொன் வள்ளத்தில் அமுது உண்ட வள்ளலாரைச்
சீர் அணங்கு மணி முத்தின் சிவிகை மீது
செழுந்தரளக் குடை நிழல் கீழ்ச் சென்று கண்டார். 258
கண்ட பொழுதே கைகள் தலைமேல் கொண்டு
கண் களிப்ப மனம் களிப்பக் காதல் பொங்கித்
தொண்டர்களும் மறையவரும் சென்று சூழ்ந்து
சொல் இறந்த மகிழ்ச்சியினால் துதித்த ஓசை
எண் திசையும் நிறைவித்தார் ஆடை வீசி இரு
விசும்பின் வெளி தூர்த்தார் ஏறு சீர்த்தி
வண்டமிழ் நாயகரும் இழிந்து எதிரே சென்று
வணங்கி அவருடன் கூடி மகிழ்ந்து புக்கார். 259
திங்கள் அணி மணிமாடம் மிடைந்த வீதி
சென்று அணைந்து தெய்வ மறைக் கற்பின் மாதர்
மங்கல வாழ்த்திசை இரண்டு மருங்கு மல்க
வானவர் நாயகர் கோயில் மருங்கு சார்ந்து
துங்க நிலைக் கோபுரத்தை இறைஞ்சிப் புக்குச்
சூழ்ந்து திருத்தோணி மிசை மேவினார்கள்
தங்கள் திரு முன்பு தாழ்ந்து எழுந்து நின்று
தமிழ் வேதம் பாடினார் தாளம் பெற்றார். 260
பரவு திருப்பதிக இசை பாடி நீடும் பரங்
கருணைத் திருவருளின் பரிசு போற்றி
விரவு மலர்க் கண் பனிப்பக் கைகள் கூப்பி
விழுந்து எழுந்து புறம் போந்து வேத வாய்மைச்
சிரபுரத்துப் பிள்ளையார் செல்லும் போது
திருநீல கண்ட யாழ்ப்பாணர் பின்னே
வர அவரை வளம் பெருகு மனையில்
போக அருள் செய்து தம் திரு மாளிகையின் வந்தார். 261
மறையவர்கள் அடி போற்றத் தந்தையாரும்
மருங்கு அணைய மாளிகையில் அணையும்போதில்
நிறை குடமும் மணி விளக்கும் முதலாய்
உள்ள நீதி மறைக் குல மகளிர் நெருங்கி ஏந்த
இறைவர் திரு நீற்றுக் காப்பு ஏந்தி முன் சென்று
ஈன்ற தாயார் சாத்தி இறைஞ்சி ஏத்த
முறைமை அவர்க்கு அருள் செய்து மடத்துப் புக்கார்
முதல்வர் பால் மணி முத்தின் சிவிகை பெற்றார். 262
செல்வ நெடு மாளிகையில் அமர்ந்து நாளும்
திருத் தோணி மிசையாரைச் சென்று தாழ்ந்து
மல்கு திருப் பதிகங்கள் பலவும் பாடி
மனம் மகிழ்ந்து போற்றி இசைத்து வைகுநாளில்
ஒல்லை முறை உபநயனப் பருவம் எய்த
உலகிறந்த சிவஞானம் உணரப் பெற்றார்
தொல்லை மறை விதிச் சடங்கு மறையோர் செய்யத்
தோலொடு நூல் தாங்கினார் சுரர்கள் போற்ற. 263
ஒரு பிறப்பும் எய்தாமை உடையார்தம்மை
உலகு இயல்பின் உபநயன முறைமையாகும்
இருபிறப்பின் நிலைமையினைச் சடங்கு காட்டி
எய்துவிக்கும் மறை முனிவர் எதிரே நின்று
வரு திறத்தின் மறை நான்கும் தந்தோம்
என்று மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால்
பொருவு இறப்ப ஓதினார் புகலி வந்த
புண்ணியனார் எண்ணிறந்த புனித வேதம். 264
சுருதி ஆயிரம் ஓதி அங்கம் ஆன
தொல் கலைகள் எடுத்து இயம்பும் தோன்றலாரைப்
பரிதி ஆயிரம் கோடி விரிந்தால் என்னப்
பரஞ்சோதி அருள் பெற்ற பான்மை மேன்மை
கருதி ஆதரவோடும் வியப்புற்று ஏத்தும் கலை
மறையோர் கவுணியனார் தம்மைக் கண்முன்
வரும் தியானப் பொருள் என்று இறைஞ்சி
தாம் முன் வல்ல மறை கேட்டு ஐயம் தீர்ந்து வாழ்ந்தார். 265
மந்திரங்கள் ஆன எல்லாம் அருளிச் செய்து
மற்று அவற்றின் வைதிக நூல் சடங்கின் வந்த
சிந்தை மயக்குறும் ஐயம் தெளிய எல்லாம் செழு
மறையோர்க்கு அருளி அவர் தெருளும் ஆற்றால்
முந்தை முதல் மந்திரங்கள் எல்லாம் தோன்றும்
முதல் ஆகும் முதல்வனார் எழுத்தஞ்சு என்பார்
அந்தியினுள் மந்திரம் அஞ்சு எழுத்துமே என்று
அஞ்சு எழுத்தின் திருப்பதிகம் அருளிச்செய்தார். 266
அத்தகைமை பிள்ளையார் அருளிச் செய்ய அந்தணர்கள்
அருள் தலைமேல் கொண்டு தாழ்ந்து
சித்தம்மகிழ்வொடு சிறப்பத் தாமும் தெய்வத்
திருத்தோணி அமர்ந்தாரைச் சென்று தாழ்ந்து
மெய்த்த இசைப் பதிகங்கள் கொண்டு போற்றி
விரை மலர்த்தாள் மனம் கொண்டு மீண்டு போந்து
பத்தருடன் இனிது அமரும் பண்பு கூடப் பரமர்
தாள் பணிந்து ஏத்திப் பயிலும் நாளில். 267
பந்து அணை மெல் விரலாளும்
பரமரும் பாய் விடை மீது
வந்து பொன் வள்ளத்து அளித்த
வரம்பில் ஞானத்து அமுது உண்ட
செந்தமிழ் ஞான சம்பந்தர் திறம்
கேட்டு இறைஞ்சு தற்காக
அந்தணர் பூந்தராய் தன்னில்
அணைந்தனர் நாவுக் கரையர். 268
வாக்கின் பெருவிறல் மன்னர் வந்து
அணைந்தார் எனக் கேட்டுப்
பூக்கமழ் வாசத் தடம்
சூழ் புகலிப் பெருந்தகையாரும்
ஆக்கிய நல் வினைப் பேறு என்று
அன்பர் குழாத் தொடும் எய்தி
ஏற்கும் பெரு விருப்போடும் எதிர்
கொள எய்தும் பொழுதில். 269
சிந்தையிடை அறா அன்பும்
திருமேனி தன்னில் அசைவும்
கந்தம் மிகையாம் கருத்தும்
கை உழவாரப் படையும்
வந்திழி கண்ணீர் மழையும் வடிவில்
பொலி திரு நீறும்
அந்தம் இலாத் திரு வேடத்து
அரசும் எதிர் வந்து அணைய. 270
கண்ட கவுணியர்க் கன்றும் கருத்தில்
பரவு மெய்க் காதல்
தொண்டர் திருவேடம் நேரே
தோன்றியது என்று தொழுதே
அண்டரும் போற்ற அணைந்து அங்கு
அரசும் எதிர் வந்து இறைஞ்ச
மண்டிய ஆர்வம் பெருக மதுர
மொழி அருள் செய்தார். 271
பேரிசை நாவுக்கரசைப் பிள்ளையார்
கொண்டு உடன் போந்து
போர் விடையார் திருத்தோணிப் பொற்
கோயில் உட்புகும் போதில்
ஆர்வம் பெருக அணையும்
அவருடன் கும்பிட்டு அருளால்
சீர்வளர் தொண்டரைக் கொண்டு
திருமாளிகையினில் சேர்ந்தார். 272
அணையும் திருத்தொண்டர் தம்மோடு
ஆண்ட அரசுக்கும் அன்பால்
இணையில் திரு அமுது ஆக்கி
இயல்பால் அமுது செய்வித்துப்
புணரும் பெருகு அன்பு நண்பும்
பொங்கிய காதலில் கும்பிட்டு
உணரும் சொல் மாலைகள் சாத்தி
உடன் மகிழ்வு எய்தி உறைந்தார். 273
அந்நாள் சில நாள்கள்
செல்ல அருள் திருநாவுக்கரசர்
மின்னார் சடை அண்ணல் எங்கும்
மேவிடம் கும்பிட வேண்டி
பொன் மார்பில் முந்நூல் புனைந்த
புகலிப் பிரான் இசைவோடும்
பின்னாக எய்த இறைஞ்சிப்
பிரியாத நண்பொடும் போந்தார். 274
வாக்கின் தனி மன்னர் ஏக
மாறாத் திரு உளத்தோடும்
பூக்கமழ் பண்ணைகள் சூழ்ந்த
புகலியின் மீண்டும் புகுந்து
தேக்கிய மாமறை வெள்ளத்
திருத்தோணி வீற்று இருந்தாரைத்
தூக்கின் தமிழ் மாலை பாடித் தொழுது
அங்கு உறைகின்ற நாளில். 275
செந்தமிழ் மாலை விகற்பச்
செய்யுள்களான் மொழி மாற்றும்
வந்த சொல் சீர் மாலை மாற்றும்
வழி மொழி எல்லா மடக்குச்
சந்த வியமகம் ஏகபாதம் தமிழ்
இருக்குக் குறள் சாத்தி
எந்தைக்கு எழு கூற்றிருக்கை
ஈரடி ஈரடி வைப்பு. 276
நாலடி மேல் வைப்பு மேன்மை
நடையின் முடுகும் இராகம்
சால்பினில் சக்கரம் ஆதி
விகற்பங்கள் சாற்றும் பதிக
மூல இலக்கியமாக எல்லாப்
பொருள்களும் முற்ற
ஞாலத்து உயர் காழியாரைப்
பாடினார் ஞான சம்பந்தர். 277
இன்னிசை பாடின எல்லாம் யாழ்ப்
பெரும் பாணனார் தாமும்
மன்னும் இசை வடிவான
மதங்க சூளா மணியாரும்
பன்னிய ஏழ் இசை பற்றிப்
பாடப் பதிகங்கள் பாடிப்
பொன்னின் திருத்தாளம் பெற்றார்
புகலியில் போற்றி இருந்தார். 278
அங்கண் அமர் கின்ற நாளில்
அரும் தமிழ் நாடு எத்தினுள்ளும்
திங்கள் சடை அண்ணலார்தம்
திருப்பதி யாவையும் கும்பிட்டு
எங்கும் தமிழ் மாலை பாடி
ஏத்தி இங்கு எய்துவன் என்று
தம் குலத் தாதையா ரோடும்
தவ முனிவர்க்கு அருள் செய்தார். 279
பெருகு விருப்புடன் நோக்கிப்
பெற்ற குலத் தாதையாரும்
அருமையால் உம்மைப் பயந்த அதனால்
பிரிந்து உறைவு ஆற்றேன்
இருமைக்கும் இன்பம் அளிக்கும் யாகமும்
யான் செய வேண்டும்
ஒருமையால் இன்னம் சிலநாள் உடன்
எய்துவேன் என்று உரைத்தார். 280
ஆண்டகையாரும் இசைந்து அங்கு
அம்பொன் திருத்தோணி மேவும்
நீண்ட சடையார் அடிக்கீழ் பணிவுற்று
நீடு அருள் பெற்றே
ஈண்டு புகழ்த் தாதையார்
பின் எய்திட யாழ்ப்பாணரோடும்
காண் தகு காழி தொழுது
காதலினால் புறம் போந்தார். 281
அத்திரு மூதூரின் உள்ளார்
அமர்ந்து உடன்போதுவார் போத
மெய்த்தவர் அந்தணர் நீங்கா விடை
கொண்டு மீள்வார்கள் மீள
முத்தின் சிவிகை மேல் கொண்டு
மொய் ஒளித் தாமம் நிரைத்த
நித்தில வெண்குடை மீது நிறை
மதி போல நிழற்ற. 282
சின்னம் தனிக் காளம் தாரை
சிரபுரத்து ஆண்டகை வந்தார்
என்னும் தகைமை விளங்க ஏற்ற
திருப் பெயர் சாற்ற
முன் எம்மருங்கும் நிரத்த முரசு
உடைப் பல்லியம் ஆர்ப்ப
மன்னும் திருத்தொண்டரானார் வந்து
எதிர் கொண்டு வணங்க. 283
சங்க நாதங்கள் ஒலிப்பத் தழங்கு
பொற் கோடு முழங்க
மங்கல வாழ்த்துரை எங்கும் மல்க
மறை முன் இயம்பத்
திங்களும் பாம்பும் அணிந்தார் திருப்பதி
எங்கும் முன் சென்று
பொங்கிய காதலில் போற்றப்
புகலிக் கவுணியர் போந்தார். 284
திருமறைச் சண்பையர் ஆளி
சிவனார் திருக்கண்ணார் கோயில்
பெரு விருப்பால் அணைந்து ஏத்திப்
பிஞ்ஞகர் கோயில் பிறவும்
உருகிய அன்பால் இறைஞ்சி உயர்
தமிழ் மாலை கொண்டு ஏத்தி
வரு புனல் பொன்னி வடபால்
குட திசை நோக்கி வருவார். 285
போற்றிய காதல் பெருக
புள்ளிருக்கும் திருவேளூர்
நால் தடம் தோளுடை மூன்று
நயனப் பிரான் கோயில் நண்ணி
ஏற்ற அன்பு எய்த வணங்கி
இருவர் புள் வேந்தர் இறைஞ்சி
ஆற்றிய பூசனை சாற்றி
அஞ்சொற் பதிகம் அணிந்தார். 286
நீடு திரு நின்றியூரின் நிமலனார்
நீள் கழல் ஏத்திக்
கூடிய காதலில் போற்றிக்
கும்பிட்டு வண் தமிழ் கூறி
நாடு சீர் நீடூர் வணங்கி
நம்பர் திருப் புன்கூர் நண்ணி
ஆடிய பாதம் இறைஞ்சி
அருந் தமிழ் பாடி அமர்ந்தார். 287
அங்கு நின்று ஏகி அப்பாங்கில்
அரனார் மகிழ் கோயிலான
எங்கணும் சென்று பணிந்தே
ஏத்தி இமவான் மடந்தை
பங்கர் உறை பழ மண்ணிப்
படிக்கரைக் கோயில் வணங்கித்
தங்கு தமிழ் மாலை சாத்தித்
திருக்குறுக்கைப் பதி சார்ந்தார். 288
திருக்குறுக்கைப் பதி மன்னித்
திரு வீரட்டானத்து அமர்ந்த
பொருப்புவில்லாளரை ஏத்திப் போந்து
அன்னியூர் சென்று போற்றிப்
பருக்கை வரை உரித்தார்
தம் பந்தணை நல்லூர் பணிந்து
விருப்புடன் பாடல் இசைந்தார்
வேதம் தமிழால் விரித்தார். 289
அப்பதி போற்றி அகல்வார்
அரனார் திருமணஞ் சேரி
செப்பரும் சீர்த் தொண்டரோடும் சென்று
தொழுது இசை பாடி
எப்பொருளும் தரும் ஈசர் எதிர்
கொள் பாடிப் பதி எய்தி
ஒப்பில் பதிகங்கள் பாடி ஓங்கு
வேள்விக் குடி உற்றார். 290
செழுந்திரு வேள்விக் குடியில்
திகழ் மணவாள நற்கோலம்
பொழிந்த புனல் பொன்னி மேவும்
புனிதத் துருத்தி இரவில்
தழும்பிய தன்னைமையும் கூடத் தண்
தமிழ் மாலையில் பாடிக்
கொழுந்து வெண் திங்கள்
அணிந்தார் கோடிகாவிற் சென்றடைந்தார். 291
திருக்கோடி காவில் அமர்ந்த
தேவர் சிகாமணி தன்னை
எருக்கோடு இதழியும் பாம்பும்
இசைந்து அணிந்தானை வெள்ளேனப்
பருக்கோடு பூண்ட பிரானைப் பணிந்து
சொல் மாலைகள் பாடிக்
கருக்கோடி நீப்பார்கள் சேரும் கஞ்சனூர்
கை தொழச் சென்றார். 292
கஞ்சனூர் ஆண்ட தம் கோவைக்
கண்ணுற்று இறைஞ்சி முன் போந்து
மஞ்சணி மாமதில் சூழும்
மாந்துறை வந்து வணங்கி
அஞ்சொல் தமிழ் மாலை சாத்தி
அங்கு அகன்று அன்பர் முன்னாகச்
செஞ்சடை வேதியர் மன்னும்
திருமங்கலக் குடி சேர்ந்தார். 293
வெங் கண் விடை மேல் வருவார்
வியலூர் அடிகளைப் போற்றித்
தங்கிய இன்னிசை கூடும் தமிழ்ப்
பதிகத் தொடை சாத்தி
அங்கண் அமர்வார் தம் முன்னே
அருள் வேடம் காட்டத் தொழுது
செங்கண் மாலுக்கு அரியார் தந்திருந்து
தேவன் குடி சேர்ந்தார். 294
திருந்து தேவன் குடி மன்னும்
சிவ பெருமான் கோயில் எய்திப்
பொருந்திய காதலில் புக்குப்
போற்றி வணங்கிப் புரிவார்
மருந்தொடு மந்திரம் ஆகி மற்றும்
இவர் வேடமாம் என்று
அருந்தமிழ் மாலை புனைந்தார் அளவில்
ஞானத்து அமுது உண்டார். 295
மொய் திகழ் சோலை அம் மூதூர்
முன் அகன்று அந் நெறி செல்வார்
செய் தரு சாலி கரும்பு தெங்கு
பைம் பூகத்து இடை போய்
மை திகழ் கண்டர் தம் கோயில்
மருங்கு உள்ள எல்லாம் வணங்கி
எய்தினர் ஞானசம்பந்தர் இன்னம்பர்
ஈசர்தம் கோயில். 296
இன்னம்பர் மன்னும் பிரானை
இறைஞ்சி இடை மடக்கான
பன்னும் தமிழ்த் தொடை மாலைப்
பாடல் புனைந்து பரவிப்
பொன்னங் கழல் இணை போற்றிப்
புறம் போந்து அணைந்து புகுந்தார்
மன்னும் தடம் கரைப்
பொன்னி வட குரங்காடுதுறையில். 297
வட குரங்காடுதுறையில் வாலியார்
தாம் வழிபட்ட
அடைவும் திருப்பதிகத்தில் அறிய
சிறப்பித்து அருளிப்
புடை கொண்டு இறைஞ்சினர் போந்து
புறத்துள்ள தானங்கள் போற்றி
படை கொண்ட மூவிலை வேலர்
பழனத் திருப்பதி சார்ந்தார். 298
பழனத்து மேவிய முக்கண்
பரமேட்டியார் பயில் கோயில்
உழைபுக்கு இறைஞ்சி நின்று
ஏத்தி உருகிய சிந்தையர் ஆகி
விழை சொல் பதிகம் விளம்பி
விருப்புடன் மேவி அகல்வார்
அழனக்க பங்கய வாவி
ஐயாறு சென்று அடைகின்றார். 299
மாட நிரை மணி வீதித்
திருவையாற்றினில் வாழும் மல்கு தொண்டர்
நாடு உய்யப் புகலிவரு ஞான
போனகர் வந்து நண்ணினார் என்று
ஆடலொடு பாடல் அறா அணி
மூதூர் அடைய அலங்காரம் செய்து
நீடு மனக் களிப்பினொடும் எதிர் கொள்ள
நித்தில யானத்து நீங்கி. 300
வந்து அணைந்து திருத்தொண்டர் மருங்கு
வர மான் ஏந்து கையர் தம்பால்
நந்தி திருவருள் பெற்ற நன்னகரை
முன் இறைஞ்சி நண்ணும் போதில்
ஐந்து புலன் நிலை கலங்கும் இடத்து
அஞ்சல் என்பார் தம் ஐயாறு என்று
புந்தி நிறை செந்தமிழின் சந்த இசை
போற்றி இசைத்தார் புகலி வேந்தர். 301
மணி வீதி இடம் கடந்து மால்
அயனுக்கு அரிய பிரான் மன்னும் கோயில்
அணி நீடு கோபுரத்தை அணைந்து
இறைஞ்சி உள் எய்தி அளவில் காதல்
தணியாத கருத்தினோடும் தம்பெருமான் கோயில்
வலம் கொண்டு தாழ்ந்து
பணி சூடும் அவர் முன்பு பணிந்து
வீழ்ந்து எழுந்து அன்பால் பரவுகின்றார். 302
கோடல் கோங்கம் குளிர் கூவிளம்
என்னும் திருப்பதிகக் குலவு மாலை
நீடு பெரும் திருக்கூத்து நிறைந்த
திரு உள்ளத்து நிலைமை தோன்ற
ஆடுமாறு அது வல்லான் ஐயாற்று
எம் ஐயனே என்று நின்று
பாடினார் ஆடினார் பண்பினொடும்
கண் பொழி நீர் பரந்து பாய. 303
பல முறையும் பணிந்து எழுந்து புறம்
போந்து பரவு திருத் தொண்டரோடு
நிலவு திருப்பதி அதன் கண் நிகழும்
நாள் நிகர் இலா நெடுநீர்க் கங்கை
அலையும் மதி முடியார் தம்
பெரும்புலியூர் முதலான அணைந்து போற்றிக்
குலவு தமிழ்த் தொடை புனைந்து மீண்டு
அணைந்து பெருகு ஆர்வம் கூரு நாளில். 304
குடதிசை மேல் போவதற்குக் கும்பிட்டு
அங்கு அருள் பெற்றுக் குறிப்பின்னோடும்
படரும் நெறி மேல் அணைவார்
பரமர் திருநெய்த்தானப் பதியில் நண்ணி
அடையும் மனம் உற வணங்கி அரும்
தமிழ் மாலைகள் பாடி அங்கு நின்றும்
புடைவளர் மென் கரும்பினொடு
பூகமிடை மழபாடி போற்றச் சென்றார். 305
செங்கை மான்மறியார் தம் திருமழபாடிப்
புறத்துச் சேரச் செல்வார்
அங்கையார் அழல் என்னும் திருப்பதிகம்
எடுத்து அருளி அணைந்த போழ்தில்
மங்கை வாழ் பாகத்தார்
மழபாடி தலையினால் வணங்குவார்கள்
பொங்கு மா தவம் உடையார் எனத்
தொழுது போற்றி இசைத்தே கோயில் புக்கார். 306
மழபாடி வயிர மணித் தூண் அமர்ந்து
மகிழ் கோயில் வலம் கொண்டு எய்தி
செழுவாச மலர்க் கமலச் சேவடிக் கீழ்ச்
சென்று தாழ்ந்து எழுந்து நின்று
தொழுது ஆடிப் பாடி நறும் சொல்
மாலைத் தொடை அணிந்து துதித்துப் போந்தே
ஒழியாத நேசமுடன் உடையவரைக் கும்பிட்டு
அங்கு உறைந்தார் சின்னாள். 307
அதன் மருங்கு கடந்து அருளால் திருக்கானூர்
பணிந்து ஏத்தி ஆன்ற சைவ
முதன் மறையோர் அன்பிலாலந் துறையின்
முன்னவனைத் தொழுது போற்றிப்
பதம் நிறை செந்தமிழ் பாடிச் சடைமுடியார்
பயில் பதியும் பணிந்து பாடி
மத கரட வரை உரித்தார் வட கரை
மாந்துறை அணைந்தார் மணி நூல் மார்பர். 308
சென்று திரு மாந்துறையில் திகழ்ந்து உறையும்
திருநதி வாழ் சென்னியார் தம்
முன்றில் பணிந்து அணி நெடு மாளிகை
வலம் செய்து உள்புக்கு முன்பு தாழ்ந்து
துன்று கதிர்ப் பரிதிமதி மருந்துக்கள்
தொழுது வழிபாடு செய்ய
நின்ற நிலை சிறப்பித்து நிறை தமிழில்
சொல் மாலை நிகழப் பாடி. 309
அங்கண் அகன்று அம் மருங்கில் அங்கணர்
தம் பதி பிறவும் அணைந்து போற்றிச்
செங்கமலப் பொதி அவிழச் சேல் பாயும்
வயல் மதுவால் சேறு மாறாப்
பொங்கு ஒலி நீர் மழ நாட்டுப் பொன்னி
வட கரை மிசைப் போய்ப் புகலி வேந்தர்
நங்கள் பிரான் திருப்பாச்சிலாச்சிரமம்
பணிய நண்ணும் போதில். 310
அந் நகரில் கொல்லி மழவன் பயந்த அரும்
பெறல் ஆர் அமுத மென் சொல்
கன்னி இள மடப்பிணையாம் காமரு கோமளக்
கொழுந்தின் கதிர் செய் மேனி
மன்னு பெரும் பிணியாகும் முயலகன் வந்து
அணைவுற மெய் வருத்தம் எய்தித்
தன்னுடைய பெரும் சுற்றம் புலம்பு எய்தத்
தானும் மனம் தளர்வு கொள்வான். 311
மற்று வேறு ஒருபரிசால் தவிராமை
மறி வளரும் கையார் பாதம்
பற்றியே வரும் குலத்துப் பான்மையினான்
ஆதலினால் பரிவு தீரப்
பொற்றொடியைக் கொடு வந்து போர்க்
கோலச் சேவகராய்ப் புரங்கள் மூன்றும்
செற்றவர் தம் கோயிலினுட் கொடு புகுந்து
திரு முன்பே இட்டு வைத்தான். 312
அவ்வளவில் ஆளுடைய பிள்ளையார்
எழுந்தருளி அணுக எய்தச்
செவ்விய மெய்ஞ் ஞானம் உணர்
திருஞான சம்பந்தன் வந்தான் என்றே
எவ்வுலகும் துயர் நீங்கப் பணி மாறும்
தனிக் காளத்து எழுந்த ஓசை
எவ் உயிர்க்கும் அவன் கேளா மெல்லியலை
விட்டு எதிரே விரைந்து செல்வான். 313
மா நகரம் அலங்கரிமின் மகர தோரணம்
நாட்டும் மணி நீர் வாசத்
தூ நறும் பூரண கும்பம் சோதி
மணி விளக்கினொடு தூபம் ஏந்தும்
ஏனை அணி பிறவும் எலாம் எழில்
பெருக இயற்றும் என ஏவித் தானும்
வானவர் நாயகர் மகனார் வருமுன்பு
தொழுது அணைந்தான் மழவர் கோமான். 314
பிள்ளையார் எழுந்தருளப் பெற்றேன் என்று
ஆனந்தம் பெருகு காதல்
வெள்ள நீர் கண் பொழியத் திருமுத்தின்
சிவிகையின் முன் வீழ்ந்த போது
வள்ளலார் எழுக என மலர்வித்த
திருவாக்கால் மலர்க்கை சென்னி
கொள்ள மகிழ்ந்து உடன் சென்று
குலப்பதியின் மணிவீதி கொண்டு புக்கான். 315
மங்க தூரியம் முழங்கும் மணி வீதி
கடந்து மதிச் சடையார் கோயில்
பொங்கு சுடர்க் கோபுரத்துக்கு அணித்து ஆகப்
புனை முத்தின் சிவிகை நின்றும்
அங்கண் இழிந்து அருளும் முறை
இழிந்தருளி அணிவாயில் பணிந்து புக்குத்
தங்கள் பிரான் கோயில் வலம் கொண்டு
திருமுன் வணங்கச் சாரும் காலை. 316
கன்னி இளம் கொடி உணர்வு கழிந்து
நிலம் சேர்ந்து அதனைக் கண்டு நோக்கி
என் இது என்று அருள் செய்ய
மழவன்தான் எதிர் இறைஞ்சி அடியேன் பெற்ற
பொன் இவளை முயலகனாம் பொருவில்
அரும்பிணி பொருந்தப் புனிதர் கோயில்
முன் அணையக் கொணர்வித்தேன் இது
புகுந்தபடி என்று மொழிந்து நின்றான். 317
அணிகிளர் தாரவன் சொன்ன மாற்றம் அருளொடும்
கேட்டு அந் நிலையின் நின்றே
பணி வளர் செஞ்சடைப் பாச்சின் மேய
பரம் பொருள் ஆயினாரைப் பணிந்து
மணி வளர் கண்டரோ மங்கையை வாட
மயல் செய்வதோ இவர் மாண்பது என்று
தணிவில் பிணி தவிர்க்கும் பதிகத்
தண்தமிழ் பாடினார் சண்பை நாதர். 318
பன்னு தமிழ் மறையாம் பதிகம்
பாடி திருக்கடைக் காப்புச் சாத்தி
மன்னும் கவுணியர் போற்றி நிற்க மழவன்
பயந்த மழலை மென் சொல்
கன்னி உறு பிணி விட்டு நீங்கக் கதும்
எனப் பார் மிசை நின்று எழுந்து
பொன்னின் கொடி என ஒல்கிவந்து
பெருவலித் தாதை புடை அணைந்தாள். 319
வன்பிணி நீங்கு மகளைக் கண்ட
மழவன் பெரு மகிழ்ச்சி பொங்கத்
தன்தனிப் பாவையும் தானும் கூடச்
சண்பையர் காவலர் தாளில் வீழ
நின்ற அருமறைப் பிள்ளையாரும் நீர்அணி
வேணி நிமலர் பாதம்
ஒன்றிய சிந்தையுடன் பணிந்தார் உம்பர்
பிரான் திருத்தொண்டர் ஆர்த்தார். 320
நீடு திரு வாச்சிராமம் மன்னும் நேரிழை
பாகத்தர் தாள் வணங்கிக்
கூடும் அருளுடன் அங்கு அமர்ந்து கும்பிடும்
கொள்கை மேற்கொண்டு போந்தே
ஆடல் பயின்றார் பதிபிறவும் அணைந்து
பணிந்து அடிபோற்றி ஏகிச்
சேடர்கள் வாழும் திருப்பைஞ்ஞீலிச்
சிவபெருமானை இறைஞ்சச் சென்றார். 321
பண்பயில் வண்டு இனம்பாடும் சோலைப்
பைஞ்ஞீலி வாணர் கழல் பணிந்து
மண் பரவும் தமிழ் மாலை பாடி
வைகி வணங்கி மகிழ்ந்து போந்து
திண்பெரும் தெய்வக் கயிலையில் வாழ்
சிவனார் பதி பல சென்று இறைஞ்சிச்
சண்பை வளம் தரும் நாடர் வந்து
தடம் திரு ஈங்கோய் மலையைச் சார்ந்தார். 322
செங்கண் குறவரைத் தேவர் போற்றும் திகழ்
திரு ஈங்கோய் மலையில் மேவும்
கங்கைச் சடையார் கழல் பணிந்து
கலந்த இசைப் பதிகம் புனைந்து
பொங்கர்ப் பொழில் சூழ் மலையும் மற்றும்
புறத்துள்ள தானங்கள் எல்லாம் போற்றிக்
கொங்கில் குட புலம் சென்று அணைந்தார்
கோதில் மெய்ஞ்ஞானக் கொழுந்து அனையார். 323
அண்டர் பிரான் ஆலயங்கள்
அம்மருங்கு உள்ளன பணிந்து
தெண்திரை நீர்த் தடம் பொன்னித்
தென் கரையாம் கொங்கின் இடை
வண்டு அலையும் புனல் சடையார்
மகிழ் இடங்கள் தொழுது அணைந்தார்
கொண்டல் பயில் நெடும் புரிசைக்
கொடி மாடச் செங்குன்றூர். 324
அந் நகரில் வாழ்வாரும்
அடியவரும் மனம் மகிழ்ந்து
பன்னெடுந்தோரணமுதலாப் பயில்
அணிகள் பல அமைத்து
முன் உறவந்து எதிர் கொண்டு
பணிந்து ஏத்திமொய் கரங்கள்
சென்னியுறக் கொண்டு அணைந்தார்
சினவிடையார் செழுங்கோயில். 325
தம் பெருமான் கோயிலினுள் எழுந்தருளித்
தமிழ் விரகர்
நம்பரவர் திரு முன்பு தாழ்ந்து
எழுந்து நலம் சிறக்க
இம்பரும் உம்பரும் ஏத்த இன்னிசை
வண் தமிழ் பாடிக்
கும்பிடும் ஆதரவு உடன் அக் கோ
நகரில் இனிது அமர்ந்தார். 326
அப்பாலைக் குட புலத்தில்
ஆறணிந்தார் அமர் கோயில்
எப்பாலும் சென்று ஏத்தித்
திரு நணாவினை இறைஞ்சிப்
பைப் பாந்தள் புணைந்த வரைப்
பரவிப் பண்டு அமர்கின்ற
வைப்பான செங்குன்றூர் வந்து
அணைந்து வைகினார். 327
ஆங்கு உடைய பிள்ளையார்
அமர்ந்து உறையும் நாளின்கண்
தூங்கு துளி முகில் குலங்கள்
சுரந்து பெயல் ஒழிகாலை
வீங்கு ஒலி நீர் வைப்பு எல்லாம்
வெயில் பெறா விருப்பு வரப்
பாங்கர் வரையும் குளிரும்
பனிப் பருவம் எய்தியதால். 328
அளிக்குலங்கள் சுளித்து அகல
அரவிந்தம் முகம் புலரப்
பளிக்கு மணி மரகத வல்லியில்
கோத்த பான்மை எனத்
துளித் தலைமெல் அறுகு பனி
தொடுத்து அசையச் சூழ் பனியால்
குளிர்க் குடைந்து வெண் படாம்
போர்த்து அனைய குன்றுகளும். 329
மொய் பனி கூர் குளிர் வாடை
முழுது உலவும் பொழுதேயாய்க்
கொய் தளிர் மென் சோலைகளும்
குலைந்து அசைய குளிர்க்கு ஒதுங்கி
வெய்யவனும் கரம் நிமிர்க்க மாட்டான்
போல் விசும்பின் இடை
ஐது வெயில் விரிப்பதுவும்
அடங்குவதும் ஆகுமால். 330
நீடிய அப் பதிகள் எலாம்
நிறை மாடத்து உறையுள் தொறும்
பேடையுடன் பவளக்கால் புறவு
ஒடுங்கப் பித்திகையின்
தோடு அலர் மென் குழல் மடவார்
துணைக் கலச வெம் முலையுள்
ஆடவர் தம் பணைத்தோளும்
அணி மார்பும் அடங்குவன. 331
அரிசனமும் குங்குமமும் அரைத்து
அமைப்பார் அயல் எல்லாம்
பரிய அகில் குறை பிளந்து
புகைப்பார்கள் பாங்கு எல்லாம்
எரி உமிழ் பேழ் வாய்த் தோணி
இரும்பு ஈர்ப்பார் இடை எல்லாம்
விரி மலர் மென் புறவு
அணிந்த மீப்புலத்து வைப்பு எல்லாம். 332
அந்நாளில் கொடி மாடச் செங்
குன்றூர் அமர்ந்து இருந்த
மெய்ஞ்ஞானப் பிள்ளையாருடன்
மேவும் பரிசனங்கள்
பன்னாளும் அந்நாட்டில் பயின்ற
அதனால் பனித்த குளிர்
முன் ஆன பிணி வந்து
மூள்வது போல் முடுகுதலும். 333
அந்நிலைமை ஆளுடைய பிள்ளையார்க்கு
அவர்கள் எல்லாம்
முன் அறிவித்து இறைஞ்சுதலும் முதல்வனார்
அருள் தொழுதே
இந்நிலத்தின் இயல்பு எனினும் நமக்கு
எய்தப் பெறா என்று
சென்னி மதி அணிந்தாரைத்
திருப்பதிகம் பாடுவார். 334
அவ்வினைக்கு இவ்வினை என்று எடுத்து
ஐயர் அமுது செய்த
வெவ்விடம் முன் தடுத்து எம்
இடர் நீக்கிய வெற்றியினால்
எவ்விடத்தும் அடியார் இடர்
காப்பது கண்டம் என்றே
செய்வினை தீண்டா திரு நீல கண்டம்
எனச் செப்பினார். 335
ஆய குறிப்பினில் ஆணை
நிகழ அருளிச் செய்து
தூய பதிகத் திருக் கடைக்
காப்புத் தொடுத்து அணிய
மேய அப்பொற்பதி வாழ்பவர்க்கே
அன்றி மேவும் அந்நாள்
தீய பனிப் பிணி அந்நாடு
அடங்கவும் தீர்ந்தது அன்றே. 336
அப்பதியின் கண் அமர்ந்து சில
நாளில் அங்கு அகன்று
துப்புறழ் வேணியர் தானம்
பலவும் தொழுது அருளி
முப்புரி நூலுடன் தோல்
அணி மார்பர் முனிவரொடும்
செப்பரும் சீர்த் திருப்பாண்டிக்
கொடுமுடி சென்று அணைந்தார். 337
பருவம் அறாப் பொன்னிப் பாண்டிக்
கொடு முடியார் தம்பாதம்
மருவி வணங்கி வளத் தமிழ்
மாலை மகிழ்ந்து சாத்தி
விரி சுடர் மாளிகை வெஞ்ச
மாக் கூடல் விடையவர் தம்
பொருவில் தானம் பல
போற்றிக் குணதிசைப் போதுகின்றார். 338
செல்வக் கருவூர்த் திருவானிலைக்
கோயில் சென்று இறைஞ்சி
நல்லிசை வண் தமிழ்ச் சொல்
தொடை பாடி அந்நாடு அகன்று
மல்கிய மாணிக்க வெற்பு
முதலா வணங்கி வந்து
மல்கு திரைப் பொன்னித்
தென் கரைத் தானம் பல பணிவார். 339
பன்னெடும் குன்றும் படர் பெரும்
கானும் பல பதியும்
அந் நிலைத் தானங்கள் ஆயின
எல்லாம் அமர்ந்து இறைஞ்சி
மன்னு புகலியில் வைதிக
வாய்மை மறையவனார்
பொன் இயல் வேணிப் புனிதர்
பராய்த் துறையுள் புகுந்தார். 340
நீடும் பராய்த் துறை நெற்றித்
தனிக் கண்ணர் கோயில் நண்ணிக்
கூடும் கருத்தொடு கும்பிட்டுக் கோதில்
தமிழ்ச் சொல் மாலை
பாடும் கவுணியர் கண்பனி
மாரி பரந்து இழியச்
சூடும் கரதலத்து அஞ்சலி
கோலித் தொழுது நின்றார். 341
தொழுது புறம்பு அணைந்து அங்கு
நின்று ஏகிச் சுரர் பணிவுற்று
எழு திரு ஆலந்துறை
திருச்செந்துறையே முதலா
வழுவில் பல் கோயில்கள் சென்று
வணங்கி மகிழ்ந்து அணைவார்
செழு மலர்ச் சோலைத்
திருக் கற்குடி மலை சேர வந்தார். 342
கற்குடி மாமலை மேல் எழுந்த
கனகக் கொழுந்தினைக் கால் வளையப்
பொன் திரள் மேருச் சிலை வளைத்த
போர் விடையாளியைப் போற்றி இசைத்து
நற்றமிழ் மாலை புனைந்தருளி
ஞான சம்பந்தர் புலன்கள் ஐந்தும்
செற்றவர் மூக்கீச்சரம் பணிந்து
திருச்சிராப் பள்ளிச் சிலம்பு அணைந்தார். 343
செம்மணி வாரி அருவி தூங்கும் சிராப்
பள்ளி மேய செழுஞ்சுடரைக்
கைம் மலை ஈருரி போர்வை சாத்தும்
கண் நுதலாரைக் கழல் பணிந்து
மெய்ம் மகிழ்வு எய்தி உளம் குளிர
விளங்கிய சொல் தமிழ் மாலை வேய்ந்து
மைம் மலர் கண்டர் தம் ஆனைக் காவை
வணங்கும் விருப்பொடு வந்து அணைந்தார். 344
விண்ணவர் போற்றி செய் ஆனைக் காவில்
வெண் நாவல் மேவிய மெய்ப் பொருளை
நண்ணி இறைஞ்சி முன் வீழ்ந்து
எழுந்து நாற்கோட்டு நாகம் பணிந்ததுவும்
அண்ணல் கோச் செங்கண் அரசன்செய்த
அடிமையும் அஞ்சொல் தொடையில் வைத்துப்
பண்ணுறு செந்தமிழ் மாலை பாடிப்
பரவி நின்று ஏத்தினர் பான்மையினால். 345
நாரணன் நான்முகன் காணா உண்மை
வெண் நாவல் உண்மை மயேந்திரமும்
சீரணி நீடு திருக்கயிலை செல்வத்
திருவாரூர் மேய பண்பும்
ஆரணத்து உட் பொருள் ஆயினாரை
ஆனைக் காவின் கண் புகழ்ந்து பாடி
ஏர் அணியும் பொழில் சூழ்ந்த சண்பை
ஏந்தலார் எல்லை இல் இன்பம் உற்றார். 346
கை தொழுது ஏத்திப் புறத்து அணைந்து
காமர் பதி அதன் கண் சில நாள்
வைகி வணங்கி மகிழ்ந்து அணைவார்
மன்னும் தவத்துறை வானவர் தாள்
எய்தி இறைஞ்சி எழுந்து நின்றே இன்
தமிழ் மாலை கொண்டு ஏத்திப் போந்து
வைதிக மாமணி அம்மருங்கு மற்று
உள்ள தானம் வழுத்திச் செல்வார். 347
ஏறு உயர்த்தார் திருப்பாற்றுறையும்
எறும்பியூர் மாமலையே முதலா
வேறு பதிகள் பலவும் போற்றி
விரவும் திருத்தொண்டர் வந்து சூழ
ஈறில் புகழ்ச் சண்பை ஆளியார் தாம்
எண் திசையோரும் தொழுது இறைஞ்ச
நீறணி செம்பவளப் பொருப்பின் நெடுங்கள
மா நகர் சென்று சேர்ந்தார். 348
நெடுங்களத்து ஆதியை அன்பால் நின்பால்
நெஞ்சம் செலாவகை நேர் விலக்கும்
இடும்பைகள் தீர்த்து அருள் செய்வாய் என்றும்
இன் இசை மாலை கொண்டு ஏத்தி ஏகி
அடும் பணிச் செஞ்சடையார் பதிகள்
அணைந்து பணிந்து நியமம் போற்றிக்
கடும் கைவரை உரித்தார் மகிழ்ந்த
காட்டுப் பள்ளிப்பதி கை தொழுவார். 349
சென்று திகழ் திருக்காட்டு பள்ளிச் செஞ்சடை
நம்பர் தம் கோயில் எய்தி
முன்றில் வலம் கொண்டு இறைஞ்சி வீழ்ந்து
மொய் கழல் சேவடி கை தொழுவார்
கன்று அணை ஆவின் கருத்து வாய்ப்பக்
கண் நுதலாரை முன் போற்றி செய்து
மன்றுள் நின்று ஆடல் மனத்துள் வைப்பார்
வாரு மன்னும் முலை பாடி வாழ்ந்தார். 350
அங்கு அப்பதி நின்று எழுந்தருளி
அணிந்திரு வாலம் பொழில் வணங்கி
பொங்கு புனல் பொன்னிப் பூந்துருத்தி
பொய்யிலியாரைப் பணிந்து போற்றி
எங்கும் நிகழ் திருத் தொண்டர் குழாம்
எதிர் கொள்ள எப்பதியும் தொழுது
செங்கயல் பாய் வயல் ஓடை சூழ்ந்த
திருக் கண்டியூர் தொழச் சென்று அணைந்தார். 351
கண்டியூர் வீரட்டர் கோயில் எய்திக்
கலந்து அடியாருடன் காதல் பொங்கக்
கொண்ட விருப்புடன் தாழ்ந்து
இறைஞ்சிக் குலவு மகிழ்ச்சியின் கொள்கையினால்
தொண்டர் குழாத்தினை நோக்கி நின்று
தொடுத்த இசைத்தமிழ் மாலை தன்னில்
அண்டர் பிரான் தன் அருளின்
வண்ணம் அடியார் பெருமையில் கேட்டருளி. 352
வினவி எடுத்த திருப் பதிகம்
மேவு திருக்கடைக் காப்பு தன்னில்
அனைய நினைவு அரியோன் செயலை
அடியாரைக் கேட்டு மகிழ்ந்த தன்மை
புனைவுறு பாடலில் போற்றி செய்து
போந்து புகலிக் கவுணியனார்
துனை புனல் பொன்னித் திரை வலம் கொள்
சோற்றுத் துறை தொழச் சென்று அடைவார். 353
அப்பர் சோற்றுத் துறை
சென்று அடைவோம் என்று
ஒப்பில் வண் தமிழ்
மாலை ஒருமையால்
செப்பியே சென்று
சேர்ந்தனர் சேர்விலார்
முப்புரம் செற்ற முன்னவர்
கோயில் முன். 354
தொல்லை நீள் திருச் சோற்றுத்
துறை உறை
செல்வர் கோயில் வலம்
கொண்டு தேவர்கள்
அல்லல் தீர்க்க நஞ்சு
உண்ட பிரான் அடி
எல்லையில் அன்பு கூர
இறைஞ்சினார். 355
இறைஞ்சி ஏத்தி எழுந்து நின்று இன்னிசை
நிறைந்த செந்தமிழ் பாடி நிலாவி அங்கு
உறைந்து வந்து அடியாருடன் எய்தினார்
சிறந்த சீர்த் திரு வேதிக் குடியினில். 356
வேத வேதியர் வேதி குடியினில்
நாதர் கோயில் அணைந்து நலம் திகழ்
பாத பங்கயம் போற்றிப் பணிந்து எழுந்து
ஓதினார் தமிழ் வேதத்தின் ஓங்கு இசை. 357
எழுது மா மறையாம் பதிகத்து இசை
முழுதும் பாடி முதல்வரைப்
போற்றி முன்
தொழுது போந்து வந்து
எய்தினார் சோலை சூழ்
பழுதில் சீர்த்திரு வெண்ணிப்
பதியினில். 358
வெண்ணி மேய விடையவர் கோயிலை
நண்ணி நாடிய காதலின் நாண் மதிக்
கண்ணியார் தம் கழல் இணை போற்றியே
பண்ணில் நீடும் பதிக முன் பாடினார். 359
பாடி நின்று பரவிப் பணிந்து போய்
ஆடும் அங்கணர் கோயில் அங்கு உள்ளன
மாடு சென்று வணங்கி மகிழ்ந்தனர்
நீடு சண்பை நிறை புகழ் வேதியர். 360
மொய் தரும் சோலை சூழ்
முளரி முள்ளடவி போய்
மெய் தரும் பரிவிலான்
வேள்வியைப் பாழ்படச்
செய்த சங்கரர்
திருச்சக்கரப் பள்ளி முன்பு
எய்த வந்தருளினார் இயல்
இசைத் தலைவனார். 361
சக்கரப் பள்ளியார் தம்
தனிக் கோயில் உள்
புக்கு அருத்தியின் உடன் புனை
மலர்த் தாள் பணிந்து
அக்கரைப் பரமர்பால் அன்பு
உறும் பரிவு கூர்
மிக்க சொல் தமிழினால்
வேதமும் பாடினார். 362
தலைவர் தம் சக்கரப் பள்ளி
தன்னிடை அகன்று
அலைபுனல் பணைகளின் அருகு
போய் அருமறைப்
புலன் உறும் சிந்தையார்
புள்ள மங்கைப் பதி
குலவும் ஆலந்துறைக்
கோயிலைக் குறுகினார். 363
மன்னும் அக் கோயில்
சேர் மான் மறிக் கையர்தம்
பொன் அடித்தலம் உறப்
புரிவொடும் தொழுது எழுந்து
இன்னிசைத் தமிழ் புனைந்து
இறைவர் சேலூருடன்
பன்னு பாலைத் துறைப்
பதி பணிந்து ஏகினார். 364
காவின் மேல் முகில் எழும்
கமழ் நறும் புறவு போய்
வாவி நீடு அலவன் வாழ்
பெடையுடன் மலர் நறும்
பூவின் மேல் விழைவுறும்
புகலியார் தலைவனார்
சேவின் மேல் அண்ணலார்
திருநலூர் நண்ணினார். 365
மன்றலங் கழனி சூழ்
திரு நலூர் மறைவலோர்
துன்று மங்கல வினைத்
துழனியால் எதிர் கொளப்
பொன் தயங்கு ஒளி
மணிச் சிவிகையில் பொலிவுறச்
சென்று அணைந்தருளினார்
சிரபுரச் செம்மலார். 366
நித்திலச் சிவிகை மேல்
நின்று இழிந்து அருளியே
மொய்த்த அந்தணர் குழாம் முன்
செலப் பின் செலும்
பத்தரும் பரிசனங்களும்
உடன் பரவவே
அத்தர் தம் கோபுரம்
தொழுது அணைந்து அருளினார். 367
வெள்ளி மால் வரையை நேர்
விரிசுடர்க் கோயிலைப்
பிள்ளையார் வலம் வரும்
பொழுதினில் பெருகுசீர்
வெள்ள ஆனந்தம் மெய் பொழிய
மேல் ஏறி நீர்
துள்ளுவார் சடையரைத் தொழுது
முன் பரவுவார். 368
பரவு சொல் பதிகம்
முன் பாடினார் பரிவுதான்
வர அயர்த்து உருகு நேர்
மனனுடன் புறம் அணைந்து
அரவுடைச் சடையர்
பேரருள் பெறும் பெருமையால்
விரவும் அப்பதி அமர்ந்து
அருளியே மேவினார். 369
அன்ன தன்மையில் அப்பதியினில்
அமர்ந்து அருளி
மின் நெடும் சடை விமலர்
தாள் விருப்பொடு வணங்கிப்
பன்னும் இன்னிசைப் பதிகமும்
பல முறை பாடி
நன்னெடும் குல நான்
மறையவர் தொழ நயந்தார். 370
நீடும் அப்பதி நீங்குவார்
நிகழ் திருநல்லூர்
ஆடுவார் திருவருள் பெற
அகன்று போந்து அங்கண்
மாடும் உள்ளன வணங்கியே
பரவி வந்து அணைந்தார்
தேடும் மால் அயற்கு
அரியவர் திருக்கருகாவூர். 371
வந்து பந்தர் மாதவி
மணம் கமழ் கருகாவூர்ச்
சந்த மாமறை தந்தவர்
கழல் இணை தாழ்ந்தே
அந்தம் இல்லவர் வண்ணமாம்
அழல் வண்ணம் என்று
சிந்தை இன்புறப் பாடினார்
செழுந் தமிழ்ப் பதிகம். 372
பதிக இன்னிசை பாடிப்
போய்ப் பிறப்பதி பலவும்
நதி அணிந்தவர் கோயில்கள்
நண்ணியே வணங்கி
மதுர முத்தமிழ் வாசகர்
அணைந்தனர் மன்றுள்
அதிர் சிலம்பு அடியார் மகிழ்
அவள் இவள் நல்லூர். 373
மன்னும் அப்பதி வானவர்
போற்றவும் மகிழ்ந்த
தன்மையார் பயில் கோயில்
உள் தம்பரிசு உடையார்
என்னும் நாமமும் நிகழ்ந்திட
ஏத்தி முன் இறைஞ்சிப்
பன்னு சீர்ப் பதி பலவும்
அப்பால் சென்று பணிவார். 374
பழுதில் சீர்த் திருப் பரிதி
நல் நியமும் பணிந்து அங்கு
எழுது மாமறையாம் பதிகத்து
இசை போற்றி
முழுதும் ஆனவர் கோயில்கள்
வணங்கியே முறைமை
வழுவிலார் திருப்பூவனூர் வணங்கி
வந்து அணைந்து. 375
பொங்கு காதலில் போற்றி
அங்கருளுடன் போந்து
பங்கயத் தடம் பணைப் பதி
பலவும் முன் பணிந்தே
எங்கும் அன்பர்கள் ஏத்து ஒலி
எடுக்க வந்து அணைந்தார்
அங்கணர்க்கு இடம் ஆகிய
பழம்பதி ஆவூர். 376
பணியும் அப்பதிப் பசுபதி
ஈச்சரத்தின் இனிது இருந்த
மணியை உள் புக்கு
வழிபடும் விருப்பினால் வணங்கித்
தணிவு இல் காதலினால் தண்
தமிழ் மாலைகள் சாத்தி
அணி விளங்கிய திருநலூர்
மீண்டும் வந்து அணைந்தார். 377
மறை விளங்கும் அப்பதியினில்
மணிகண்டர் பொற்றாள்
நிறையும் அன்பொடு வணங்கியே
நிகழ்பவர் நிலவும்
பிறை அணிந்தவர் அருள் பெறப்
பிரச மென் மலர் வண்டு
அறை நறும் பொழில்
திரு வலஞ் சுழியில் வந்து அணைந்தார். 378
மதி புனைந்தவர் வலஞ்சுழி
மருவு மாதவத்து
முதிரும் அன்பர்கள் முத்தமிழ் விரகர்
தம் முன் வந்து
எதிர் கொள் போழ்தினில் இழிந்தவர்
எதிர் செல மதியைக்
கதிர் செய் வெண் முகில்
குழாம் புடை சூழ்ந்தெனக் கலந்தார். 379
கலந்த அன்பர்கள் தொழுது
எழக் கவுணியர் தலைவர்
அலர்ந்த செங்கமலக் கரம்
குவித்து உடன் அணைவார்
வலஞ்சுழிப் பெருமான் மகிழ்
கோயில் வந்து எய்திப்
பொலம் கொள் நீள் சுடர்க்
கோபுரம் இறைஞ்சி உள் புகுந்தார். 380
மருவலார் புரம் முனிந்தவர்
திரு முன்றில் வலம் கொண்டு
உருகும் அன்புடன் உச்சி
மேல் அஞ்சலியினராய்த்
திருவலஞ்சுழி உடையவர்
சேவடித் தலத்தில்
பெருகும் ஆதரவுடன் பணிந்து
எழுந்தனர் பெரியோர். 381
ஞான போனகர் நம்பர் முன்
தொழுது எழும் விருப்பால்
ஆன காதலில் அங்கணவர்
தமை வினவும்
ஊனமில் இசையுடன்
விளங்கிய திருப்பதிகம்
பானலார் மணிகண்டரைப்
பாடினார் பரவி. 382
புலன் கொள் இன் தமிழ்
போற்றினர் புறத்தினில் அணைந்தே
இலங்கு நீர்ப் பொன்னி
சூழ் திருப்பதியினில் இருந்து
நலம் கொள் காதலின்
நாதர்தாள் நாள்தொறும் பரவி
வலஞ்சுழிப் பெருமான் தொண்டர்
தம்முடன் மகிழ்ந்தார். 383
மகிழ்ந்த தன்தலை வாழும்
அந் நாளிடை வானில்
திகழ்ந்த ஞாயிறு துணைப்
புணர் ஓரை உள் சேர்ந்து
நிகழ்ந்த தன்மையில் நிலவும்
ஏழ் கடல் நீர்மை குன்ற
வெகுண்டு வெம் கதிர்
பரப்பலின் முதிர்ந்தது வேனில். 384
தண் புனல் குளிர் கால்
நறும் சந்தனத் தேய்வை
பண்பு நீடிய வாச மென்
மலர் பொதி பனி நீர்
நண்புடைத் துணை நகை
மணி முத்தணி நாளும்
உண்ப மாதுரியச் சுவை
உலகு உளோர் விரும்ப. 385
அறல் மலியும் கான் ஆற்றின்
நீர் நசையால் அணையுமான்
பெறல் அரிய புனல் என்று
பேய்த்தேரின் பின் தொடரும்
உறை உணவு கொள்ளும் புள்
தேம்பிஅயல் இரை தேரும்
பறவை சிறை விரித்து
ஒடுங்கப் பனிப் புறத்து வதியுமால். 386
நீண் நிலை மாளிகை மேலும்
நிலா முன்றின் மருங்கினும்
வாண் நிழல் நல் சோலையிலும்
மலர் வாவிக் கரை மாடும்
பூண் நிலவு முத்து அணிந்த
பூங்குழலார் முலைத் தடத்தும்
காணும் மகிழ்ச்சியின் மலர்ந்து
மாந்தர் கலந்து உறைவாரால். 387
சண்பை வரும் பிள்ளையார்
சடா மகுடர் வலஞ்சுழியை
எண் பெருகத் தொழுது
ஏத்திப் பழையாறை எய்துதற்கு
நண்பு உடைய அடியார்களுடன்
போத நடந்தருளி
விண் பொரு நீள் மதிள் ஆறை
மேல் தளி சென்று எய்தினார். 389
திருவாறை மேற்றளியில் திகழ்ந்து
இருந்த செந்தீயின்
உருவாளன் அடிவணங்கி உருகிய
அன்பொடு போற்றி
மருவாரும் குழல் மலையாள்
வழிபாடு செய்ய அருள்
தருவார் தம் திரு சத்தி
முற்றத்தின் புறம் சேர்ந்தார். 390
திருச் சத்தி முற்றத்தில்
சென்று எய்தித் திருமலையாள்
அருச்சித்த சேவடிகள் ஆர்வம்
உறப் பணிந்து ஏத்திக்
கருச் சுற்றில் அடையாமல்
கை தருவார் கழல் பாடி
விருப்புற்றுத் திருப் பட்டீச்சரம்
பணிய மேவுங்கால். 391
வெம்மை தரு வேனிலிடை
வெயில் வெப்பம் தணிப்பதற்கு
மும்மை நிலைத் தமிழ்
விரகர் முடிமீதே சிவபூதம்
தம்மை அறியாதபடி தண்
தரளப் பந்தர் எடுத்து
எம்மை விடுத்து அருள் புரிந்தார்
பட்டீசர் என்று இயம்ப. 392
அவ்வுரையும் மணி முத்தின்
பந்தரும் ஆகாயம் எழச்
செவ்விய மெய்ஞ்ஞானம் உணர்
சிரபுரத்துப் பிள்ளையார்
இவ் வினைதான் ஈசர் திரு அருளால்
ஆகில் இசைவது என
மெய் விரவு புளகம் உடன்
மேதினியின் மிசைத் தாழ்ந்தார். 393
அது பொழுதே அணி முத்தின்
பந்தரினை அருள் சிறக்கக்
கதிர் ஒளிய மணிக் காம்பு
பரிசனங்கள் கைக் கொண்டார்
மதுர மொழி மறைத் தலைவர்
மருங்கு இமையோர் பொழிவாசப்
புது மலரால் அப்பந்தர்
பூம் பந்தரும் போலும். 394
தொண்டர் குழாம் ஆர்ப்பு
எடுப்பச் சுருதிகளின் பெருந்துழனி
எண் திசையும் நிறைந்து
ஓங்க எழுந்தருளும் பிள்ளையார்
வெண் தரளப் பந்தர் நிழல்
மீது அணையத் திருமன்றில்
அண்டர்பிரான் எடுத்த திருவடி
நீழல் என அமர்ந்தார். 395
பாரின் மிசை அன்பர்
உடன் வருகின்றார் பன்னகத்தின்
ஆரம் அணிந்தவர் தந்த அருள்
கருணைத் திறம் போற்றி
ஈர மனம் களி தழைப்ப
எதிர் கொள்ள முகம் மலர்ந்து
சேர வரும் தொண்டர்
உடன் திருப்பட்டீச்சரம் அணைந்தார். 396
சென்று அணைந்து திருவாயில்
புறத்து இறைஞ்சி உள்புக்கு
வென்றி விடையவர் கோயில் வலம்
கொண்டு வெண் கோட்டுப்
பன்றி கிளைத்து அறியாத
பாத தாமரை கண்டு
முன் தொழுது விழுந்து எழுந்து
மொழி மாலை போற்றி இசைத்தார். 397
அருள் வெள்ளத் திறம்
பரவி அளப்பரிய ஆனந்தப்
பெரு வெள்ளத்திடை மூழ்கிப்
பேராத பெருங்காதல்
திருவுள்ளப் பரிவுடனே செம்பொன்
மலை வல்லியார்
தரு வள்ளத்து அமுது உண்ட
சம்பந்தர் புறத்து அணைந்தார். 398
அப்பதியில் அமர்கின்ற
ஆளுடைய பிள்ளையார்
செப்பரும் சீர் திருவாறை வட
தளியில் சென்று இறைஞ்சி
ஒப்பரிய தமிழ் பாடி
உடன் அமரும் தொண்டரொடு
எப்பொருளுமாய் நின்றார் இரும்
பூளை எய்தினார். 399
தேவர் பிரான் அமர்ந்த திரு இரும்
பூளை சென்று எய்தக்
காவண நீள் தோரணங்கள் நாட்டி
உடன் களி சிறப்பப்
பூவண மாலைகள் நாற்றிப் பூரண
பொற்குடம் நிரைத்து அங்கு
யாவர்களும் போற்றி இசைப்பத்
திருத் தொண்டர் எதிர் கொண்டார். 400
வண் தமிழின் மொழி
விரகர் மணிமுத்தின் சிவிகையினைத்
தொண்டர் குழாத்து எதிர் இழிந்து அங்கு
அவர் தொழத் தாமும் தொழுதே
அண்டர்பிரான் கோயிலினை அணைந்து
இறைஞ்சி முன் நின்று
பண்டரும் இன்னிசைப் பதிகம்
பரம் பொருளைப் பாடுவார். 401
நிகர் இலா மேருவரை
அணுவாக நீண்டானை
நுகர்கின்ற தொண்டர் தமக்கு
அமுதாகி நொய்யானை
தகவு ஒன்ற அடியார்கள் தமை
வினவித் தமிழ் விரகர்
பகர்கின்ற அருமறையின் பொருள்
விரியப் பாடினார். 402
பாடும் அரதைப் பெரும்
பாழியே முதலாகச்
சேடர் பயில் திருச்சேறை
திருநாலூர் குட வாயில்
நாடிய சீர் நறையூர் தென்
திருப்புத்தூர் நயந்து இறைஞ்சி
நீடு தமிழ்த் தொடை புனைந்து
அந்நெடு நகரில் இனிது அமர்ந்தார். 403
அங்கண் இனிது அமரு நாள்
அடல் வெள் ஏனத்து உருவாய்ச்
செங்கண் நெடுமால் பணியும்
சிவபுரத்துச் சென்று அடைந்து
கங்கைச் சடை கரந்தவர் தம்
கழல் வணங்கிக் காதலினால்
பொங்குமிசைத் திருப்பதிகம் முன்
நின்று போற்றி இசைத்தார். 404
போற்றி இசைத்துப் புனிதர் அருள்
பெற்றுப் போந்து எவ் உயிரும்
தோற்றுவித்த அயன் போற்றும்
தோணிபுரத்து அந்தணனார்
ஏற்றும் இசை ஏற்று உகந்த
இறைவர் தமை ஏத்துதற்கு
நாற்றிசை யோர் பரவும்
திருக் குடமூக்கு நண்ணினார். 405
தேமருவு மலர்ச் சோலைத்திரு
குடமூக்கினில் செல்வ
மாமறையோர் பூந்தராய்
வள்ளலார் வந்தருளத்
தூமறையின் ஒலி பெருகத்
தூரிய மங்கலம் முழங்க
கோ முறைமை எதிர் கொண்டு
தம்பதி உள் கொடு புக்கார். 406
திருஞான சம்பந்தர் திருக்குட
மூக்கினைச் சேர
வருவார் தம் பெருமானை
வண் தமிழின் திருப்பதிகம்
உருகா நின்று உளம் மகிழ்க்
குட மூக்கை உகந்து இருந்த
பெருமான் எம் இறை என்று
பெருகு இசையால் பரவினார். 407
வந்து அணைந்து திருக்கீழ்க் கோட்டத்து
இருந்த வான் பொருளைச்
சிந்தை மகிழ்வுற வணங்கித்
திருத்தொண்டருடன் செல்வார்
அந்தணர்கள் புடை சூழ்ந்து
போற்றி இசைப்ப அவரொடும்
கந்த மலர் பொழில் சூழ்ந்த
காரோணம் சென்று அடைந்தார். 408
பூ மருவும் கங்கை முதல்
புனிதமாம் பெரும் தீர்த்தம்
மா மகம் தான் ஆடுதற்கு
வந்து வழிபடும் கோயில்
தூ மருவும் மலர்க் கையால்
தொழுது வலம் கொண்டு அணைந்து
காமர் கெட நுதல் விழித்தார்
கழல் பணிந்து கண் களித்தார். 409
கண்ணாரும் அருமணியைக்
காரோணத்து ஆர் அமுதை
நண்ணாதார் புரம் எரித்த
நான் மறையின் பொருளானைப்
பண் ஆர்ந்த திருப்பதிகம்
பணிந்து ஏத்திப் பிறபதியும்
எண் ஆர்ந்த சீர்
அடியாருடன் பணிவுற்று எழுந்தருளி. 410
திரு நாசேச் சரத்து அமர்ந்த
செங்கனகத் தனிக் குன்றைக்
கரு நாகத்து உரி புனைந்த கண்
நுதலைச் சென்று இறைஞ்சி
அருஞானச் செந்தமிழின்
திருப்பதிகம் அருள் செய்து
பெரு ஞான சம்பந்தர்
பெருகு ஆர்வத்தின்புற்றார். 411
மா நாகம் அர்ச்சித்த மலர்க்
கமலத் தாள் வணங்கி
நாள் நாளும் பரவுவார் பிணி
தீர்க்கும் நலம் போற்றிப்
பால் நாறும் மணி வாயர்
பரமர் திருவிடை மருதில்
பூ நாறும் புனல் பொன்னித்
தடங்கரை போய்ப் புகுகின்றார். 412
ஓங்கு திருப்பதிகம் ஓடேகலன்
என்று எடுத்தருளித்
தாங்க அரிய பெருமகிழ்ச்சி
தலை சிறக்கும் தன்மையினால்
ஈங்கு எனை ஆளுடைய பிரான்
இடை மருது ஈதோ என்று
பாங்கு உடைய இன்
இசையால் பாடி எழுந்தருளினார். 413
அடியவர்கள் எதிர் கொள்ள
எழுந்தருளி அங்கு அணைந்து
முடிவில் பரம் பொருள் ஆனார்
முதற் கோயில் முன் இறைஞ்சிப்
படியில் வலம் கொண்டு திரு முன்பு
எய்திப் பார் மீது
நெடிது பணிந்தெழுந்து அன்பு
நிறை கண்ணீர் நிரந்து இழிய. 414
பரவுறு செந்தமிழ்ப் பதிகம்
பாடி அமர்ந்த அப்பதியில்
விரவுவார் திருப்பதிகம் பல
பாடி வெண் மதியோடு
அரவு சடைக்கு அணிந்தவர் தம்
தாள் போற்றி ஆர்வத்தால்
உரவு திருத் தொண்டருடன் பணிந்து
ஏத்தி உறையும் நாள். 415
மருங்கு உள நற் பதிகள் பல
பணிந்து மா நதிக்கரை போய்க்
குரங்காடு துறை அணைந்து
குழகனார் குரை கழல்கள்
பெரும் காதலில் பணிந்து
பேணிய இன்னிசை பெருக
அரும் கலை நூல்
திருப்பதிகம் அருள் செய்து பரவினார். 416
அம் மலர்த் தடம் பதிபணிந்து
அகன்று போந்து அருகு
மைம்மலர்க் களத்து இறைவர்
தம் கோயில்கள் வணங்கி
நம் மலத்துயர் தீர்க்க
வந்தருளிய ஞானச்
செம்மலார் திருவாவடு
துறையினைச் சேர்ந்தார். 417
மூவர்க்கு அறிவரும் பொருள்
ஆகிய மூலத்
தேவர் தம் திருவாவடு துறைத்
திருத் தொண்டர்
பூ அலம்பு தண் பொரு புனல்
தடம் பணைப் புகலிக்
காவலர்க்கு எதிர் கொள்ளும்
ஆதரவுடன் கலந்தார். 418
வந்து அணைவார் தொழா முனம்
மலர் புகழ்ச் சண்பை
அந்தணர்க்கு எலாம் அருமறைப்
பொருள் என வந்தார்
சந்த நித்திலச் சிவிகை நின்று
இழிந்து எதிர் தாழ்ந்தே
சிந்தை இன்புற இறைவர் தம்
கோயில் முன் சென்றார். 419
நீடு கோபுரம் இறைஞ்சி உள்
புகுந்து நீள் நிலையான்
மாடு சூழ் திரு மாளிகை
வலம் கொண்டு வணங்கி
ஆடும் ஆதியை ஆவடு
துறையுள் ஆரமுதை
நாடு காதலில் பணிந்தெழுந்து
அருந் தமிழ் நவின்றார். 420
அன்பு நீடிய அருவி கண்
பொழியும் ஆர்வத்தால்
முன்பு போற்றியே புறம்பு
அணை முத்தமிழ் விரகர்
துன்பு போம் மனத் திருத்தொண்டர்
தம்முடன் தொழுதே
இன்பம் மேவி அப்பதியினில்
இனிது அமர்ந்திருந்தார். 421
மேவி அங்கு உறை நாளினில்
வேள்வி செய்வதனுக்கு
ஆவது ஆகிய காலம் வந்து
அணைவுற அணைந்து
தாவில் சண்பையர் தலைவர்க்குத்
தாதையார் தாமும்
போவதற்கு அரும் பொருள் பெற
எதிர் நின்று புகன்றார். 422
தந்தையார் மொழி கேட்டலும்
புகலியார் தலைவர்
முந்தை நாளிலே மொழிந்தமை
நினைந்து அருள் முன்னி
அந்தமில் பொருள் ஆவன
ஆவடு துறையுள்
எந்தையார் அடித் தலங்கள்
அன்றோ என எழுந்தார். 423
சென்று தேவர் தம்பிரான் மகிழ்
கோயில் முன்பு எய்தி
நின்று போற்றுவார் நீள்
நிதி வேண்டினார்க்கு ஈவது
ஒன்றும் மற்றிலேன் உன்னடி
அல்லது ஒன்று அறியேன்
என்று பேரருள் வினவிய
செந்தமிழ் எடுத்தார். 424
எடுத்த வண் தமிழ்ப் பதிக
நாலடியின் மேல் இரு சீர்
தொடுத்த வைப்பொடு தொடர்ந்த
இன்னிசையினால் துதிப்பார்
மடுத்த காதலில் வள்ளலார்
அடி இணை வழுத்தி
அடுத்த சிந்தையால் ஆதரித்து
அஞ்சலி அளித்தார். 425
நச்சி இன் தமிழ் பாடிய
ஞான சம்பந்தர்
இச்சையே புரிந்து அருளிய
இறைவர் இன் அருளால்
அச் சிறப்பு அருள் பூதம்
முன் விரைந்தகன் பீடத்து
உச்சி வைத்தது பசும் பொன்
ஆயிரக் கிழி ஒன்று. 426
வைத்த பூதம் அங்கு அணைந்து
முன் நின்று நல் வாக்கால்
உய்ந்த இக்கிழி பொன்
உலவாக் கிழி உமக்கு
நித்தனார் அருள் செய்தது என்று
உரைக்க நேர் தொழுதே
அத்தனார் திருவருள் நினைந்து தவ
மேனி மேல் பணிந்தார். 427
பணிந்து எழுந்து கை தொழுது
முன் பனி மலர்ப் பீடத்து
அணைந்த ஆடகக் கிழிதலைக்
கொண்டு அருமறைகள்
துணிந்த வான் பொருள் தரும்
பொருள் தூய வாய்மையினால்
தணிந்த சிந்தை அத் தந்தையார்க்கு
அளித்து உரைசெய்வார். 428
ஆதி மாமறை விதியினால்
ஆறு சூழ் வேணி
நாதனாரை முன்னாகவே புரியும்
நல் வேள்வி
தீது நீங்க நீர் செய்யவும்
திருக் கழுமலத்து
வேத வேதியர் அனைவரும்
செய்யவும் மிகுமால். 429
என்று கூறி அங்கு அவர்தமை
விடுத்த பின் அவரும்
நன்றும் இன்புறும் மனத்தொடும்
புகலி மேல் நண்ண
வென்றி ஞான சம்பந்தரும்
விருப்பொடு வணங்கி
மன்றல் ஆவடு துறையினில்
மகிழ்ந்து இனிது இருந்தார். 430
அண்ணலார் திருவாவடுதுறை அமர்ந்தாரை
உள் நிலாவிய காதலினால்
பணிந்து உறைந்து
மண் எலாம் உய வந்தவர்
போந்து வார் சடைமேல்
தெள் நிலா அணிவார்
திருக் கோழம்பம் சேர்ந்தார். 431
கொன்றைவார் சடைமுடியரைக்
கோழம்பத்து இறைஞ்சி
என்றும் நீடிய இன்னிசைப்
பதிகம் முன் இயம்பி
மன்று உளார் மகிழ் வைகல்
மாடக் கோயில் மருங்கு
சென்று சார்ந்தனர்
திருவளர் சிரபுரச் செல்வர். 432
வைகல் நீடு மாடக் கோயில்
மன்னிய மருந்தைக்
கைகள் அஞ்சலி கொண்டு
தாழ்ந்தெழுந்து கண் அருவி
செய்ய இன்னிசைச் செந்தமிழ்
மாலைகள் மொழிந்து
நையும் உள்ளத்தராய்த்திரு
நல்லத்தில் நண்ணி. 433
நிலவு மாளிகைத் திரு நல்ல
நீடு மாமணியை
இலகு சேவடி இறைஞ்சி இன்
தமிழ் கொடு துதித்துப்
பலவும் ஈசர் தம் திருப்பதி
பணிந்து செல்பவர் தாம்
அலை புனல் திருவழுந்தூர்
மாடக் கோயில் அடைந்தார். 434
திரைத் தடம் புனல்
பொன்னி சூழ் திருத்துருத்தியினில்
வரைத்தலைப் பசும் பொன்
எனும் வண் தமிழ்ப்பதிகம்
உரைத்து மெய்யுறப் பணிந்து
போந்து உலவும் அந்நதியின்
கரைக் கண் மூவலூர்க் கண்
நுதலார் கழல் பணிந்தார். 436
மூவலூர் உறை முதல்வரைப்
பரவிய மொழியால்
மேவு காதலில் ஏத்தியே
விருப்பொடும் போந்து
பூ அலம்பு தண் புனல்
பணைப் புகலியார் தலைவர்
வாவி சூழ் திரு மயிலாடு துறையினில்
வந்தார். 437
மல்கு தண்டலை
மயிலாடு துறையினில் மருவும்
செல்வ வேதியர் தொண்டரொடு
எதிர் கொளச் சென்று
கொல்லை மான்மறிக் கையரைக்
கோயில் புக்கு இறைஞ்சி
எல்லை இல்லதோர் இன்பம்
முன் பெருகிட எழுந்தார். 438
உள்ளம் இன்புற உணர்வுறும்
பரிவு கொண்டு உருகி
வெள்ளம் தாங்கிய சடையரை
விளங்கு சொல் பதிகத்
தெள்ளும் இன்னிசைத் திளைப்பொடும்
புறத்து அணைந்தருளி
வள்ளலார் மற்ற வளம்
பதி மருவுதல் மகிழ்ந்தார். 439
அத்திருப்பதி அகன்று போய்
அணிகிளர் சூலக்
கைத்தலப் படை வீரர் செம்
பொன் பள்ளி கருதி
மெய்த்த காதலில் விள நகர்
விடையவர் பாதம்
பத்தர் தம்முடன் பணிந்து இசைப்
பதிகம் முன் பகர்ந்தார். 440
பாடும் அப்பதி பணிந்து
போய்ப் பறியலூர் மேவும்
தோடுலா மலர் இதழியும்
தும்பையும் அடம்பும்
காடு கொண்ட செஞ்சடைமுடிக்
கடவுளர் கருது
நீடு வீரட்டம் பணிந்தனர்
நிறை மறை வேந்தர். 441
பரமர் தம் திருப் பறியலூர்
வீரட்டம் பரவி
விரவு காதலின் வேலையின்
கரையினை மேவி
அரவு அணிந்தவர் பதி பல
அணைந்து முன் வணங்கிச்
சிரபுரத்தவர் திருத்தொண்டர்
எதிர் கொளச் செல்வார். 442
அடியவர்கள் களி சிறப்பத் திருவேட்டக்குடி
பணிந்து அங்கு அலைவாய்ப் போகிக்
கடி கமழும் மலர்ப்பழனக் கழிநாட்டு
அகன் பதிகள் கலந்து நீங்கிக்
கொடி மதில் சூழ் தரும புரம் குறுகினார்
குண்டர் சாக்கியர் தம் கொள்கை
படி அறியப் பழுது என்றே மொழிந்து
உய்யும் நெறி காட்டும் பவள வாயர். 443
தருமபுரம் பெரும்பாணர் திருத்தாயர்
பிறப்பிடமாம் அதனால் சார
வரும் அவர் தம் சுற்றத்தார் வந்து எதிர்
கொண்டு அடி வணங்கி வாழ்த்தக் கண்டு
பெருமை உடைப் பெரும்பாணர் அவர்க்கு
உரைப்பார் பிள்ளையார் அருளிச் செய்த
அருமை உடைப் பதிகம் தாம் யாழினால்
பயிற்றும் பேறு அருளிச் செய்தார். 444
கிளைஞரும் மற்று அது கேட்டுக் கெழுவு
திரு பதிகத்திற் கிளர்ந்த ஓசை
அளவு பெறக் கருவியில் நீர் அமைத்து
இயற்றும் அதனாலே அகிலம் எல்லாம்
வளர இசை நிகழ்வது என விளம்புதலும்
வளம் புகலி மன்னர் பாதம்
உளம் நடுங்கிப் பணிந்து திருநீல
கண்டப் பெரும்பாணர் உணர்த்து கின்றார். 445
அலகில் திருப்பதிக இசை அளவு படா
வகை இவர்கள் அன்றி ஏயும்
உலகில் உளோரும் தெரிந்து அங்கு உண்மையினை
அறிந்து உய்ய உணர்த்தும் பண்பால்
பலர் புகழும் திருப்பதிகம் பாடி
அருளப் பெற்றால் பண்பு நீடி
இலகும் இசை யாழின்கண் அடங்காமையான்
காட்டப் பெறுவன் என்றார். 446
வேத நெறி வளர்ப்பவரும் விடையவர்
முன் தொழுது திருப்பதிகத்து உண்மை
பூதலத்தோர் கண்டத்தும் கலத்தினிலும்
நிலத்த நூல் புகன்ற பேத
நாத இசை முயற்சிகளால் அடங்காத
வகை காட்ட நாட்டுகின்றார்
மாதர் மடப்பிடி பாடி வணங்கினார்
வானவரும் வணங்கி ஏத்த. 447
வண் புகலி வேதியனார் மாதர்
மடப்பிடி எடுத்து வனப்பில் பாடிப்
பண் பயிலும் திருக்கடைக் காப்பு சாத்த
அணைந்து பெரும் பாணனார் தாம்
நண்புடை யாழ்க் கருவியினில் முன்பு
போல் கைக்கொண்டு நடத்தப்புக்கார்கு
எண் பெருகும் அப் பதிகத்து இசை
நரம்பில் இட அடங்கிற்று இல்லை அன்றே. 448
அப்பொழுது திருநீல கண்ட இசைப்
பெரும்பாணர் அதனை விட்டு
மெய்ப் பயமும் பரிவும் உறப் பிள்ளையார்
கழல் இணை வீழ்ந்தெழுந்து நோக்கி
இப்பெரியோர் அருள் செய்த திருப்பதிகத்து
இசை யாழில் ஏற்பன் என்னச்
செப்பியது இக் கருவியை நான் தொடுதலின்
நன்றோ என்று தெளிந்து செய்வார். 449
வீக்கு நரம்பு உடையாழினால் விளைந்தது
இது என்று அங்கு அதனைப் போக்க
ஓக்குதலும் தடுத்து அருளி ஐயரே
உற்ற இசை அளவினால் நீர்
ஆக்கிய இக்கருவியினைத் தாரும் என
வாங்கிக் கொண்டு அவனி செய்த
பாக்கியத்தின் மெய் வடிவாம் பால்
அறா வாயர் பணித்து அருளுகின்றார். 450
ஐயர் நீர் யாழ் இதனை முரிக்கும்
அதென் ஆள் உடையாள் உடனே கூடச்
செய்ய சடையார் அளித்த திருவருளின்
பெருமை எலாம் தெரிய நம்பால்
எய்திய இக் கருவியினில் அளவு
படுமோ நம் தம் இயல்புக்கு ஏற்ப
வையகத்தோர் அறிவுற இக்கருவி அளவையின்
இயற்றல் வழக்கே என்றார். 451
சிந்தையால் அளவு படா இசைப் பெருமை
செயல் அளவில் எய்துமோ நீர்
இந்த யாழினைக் கொண்டே இறைவர்
திருப் பதிக இசை இதனில் எய்த
வந்தவாறே பாடி வாசிப்பீர் எனக்
கொடுப்பப் புகலி மன்னர்
தந்த யாழினைத் தொழுது கைக் கொண்டு
பெரும் பாணர் தலை மேல் கொண்டார். 452
அணைவுறும் அக் கிளைஞருடன் பெரும் பாணர்
ஆளுடைய பிள்ளையார் தம்
துணை மலர்ச் சேவடி பணிந்து
துதித்தருளத் தோணிபுரத் தோன்றலாரும்
இணையில் பெருஞ் சிறப்பருளித் தொண்டருடன்
அப்பதியில் இனிது மேவிப்
பணை நெடும் கை மதயானை உரித்தவர்
தம் பதி பிறவும் பணியச் செல்வார். 453
பங்கயப் பாசடைத் தடம் சூழ் பழன
நாட்டு அகன் பதிகள் பலவும் நண்ணி
மங்கை ஒரு பாகத்தார் மகிழ் கோயில்
எனைப் பலவும் வணங்கிப் போற்றித்
தங்கிசை யாழ்ப் பெரும் பாணருடன்
மறையோர் தலைவனார் சென்று சார்ந்தார்
செங்கை மான் மழு ஏந்தும் சின
விடையார் அமர்ந்து அருளும் திரு நள்ளாறு. 454
நள்ளாற்றில் எழுந்தருள நம்பர் திருத்தொண்டர்
குழாம் நயந்து சென்று
கொள்ளாற்றில் எதிர் கொண்டு குலவி உடன்
சூழ்ந்து அணையக் குறுகிக் கங்கைத்
தெள்ளாற்று வேணியர் தம் திருவளர் கோபுரம்
இறைஞ்சிச் செல்வக் கோயில்
உள்ளாற்ற வலம் கொண்டு திருமுன்பு
தாழ்ந்து எழுந்தார் உணர்வின் மிக்கார். 455
உருகிய அன்புறு காதல் உள் உருகி
நனை ஈரம் பெற்றால் போல
மருவு திருமேனி எலாம் முகிழ்த்து எழுந்த
மயிர்ப் புளகம் வளர்க்கும் நீரால்
அருவி சொரி திரு நயனத்து ஆனந்த
வெள்ளம் இழிந்து அலைய நின்று
பொருவில் பதிகம் போகம் ஆர்த்த பூண்
முலையாள் என்று எடுத்துப் போற்றி. 456
யாழ்நரம்பில் ஆர இயல் இசை
கூடப் பாடியே எண்ணில் கற்பச்
சேணளவு பட ஓங்கும் திருக் கடைக்
காப்புச் சாத்திச் செங்கண் நாகப்
பூண் அகலத்தவர் பாதம் போற்றி இசைத்துப்
புறத்து அணைந்து புவனம் ஏத்தும்
பாணனார் யாழில் இடப் பாலறா
வாயர் அருள் பணித்த போது. 457
பிள்ளையார் திருத்தாளம் கொடு பாடப்
பின்பு பெரும் பாணனார் தாம்
தெள் அமுத இன்னிசையின் தேம் பொழி
தந்திரி யாழைச் சிறக்க வீக்கிக்
கொள்ள இடும் பொழுதின் கண்
குவலயத்தோர் களிகூரக் குலவு சண்பை
வள்ளலார் திரு உள்ளம் மகிழ்ந்து
திருத் தொண்டருடன் மருவும் காலை. 458
மன்னு திரு நள்ளாற்று மருந்தை
வணங்கிப் போந்து வாச நன்னீர்ப்
பொன்னி வளம் தரு நாட்டுப் புறம்பு அணை
சூழ் திருப்பதிகள் பலவும் போற்றிச்
செந் நெல் வயல் செங்கமல முகம்
மலரும் திருச் சாத்த மங்கை மூதூர்
தன்னில் எழுந்தருளினார் சைவ சிகா
மணியார் மெய்த் தவத்தோர் சூழ. 459
நிறை செல்வத் திருச்சாத்த மங்கையினில்
நீல நக்கர் தாமும் சைவ
மறையவனார் எழுந்தருளும் படி கேட்டு
வாழ்ந்து வழி விளக்கி எங்கும்
துறை மலி தோரணம் கதலி கமுகு
நிறை குடம் தூப தீபம் ஆக்கி
முறைமையில் வந்து எதிர் கொள்ள உடன்
அணைந்து முதல்வனார் கோயில் சார்ந்தார். 460
அயவந்தி அமர்ந்து அருளும் அங்கணர் தம்
கோயில் மருங்கு அணைந்து வானோர்
உயவந்தித்து எழு முன்றில் புடை வலம்
கொண்டு உள்புக்கு ஆறு ஒழுகும் செக்கர்
மய வந்தி மதிச் சடையார் முன்
தாழ்ந்து மாதவம் இவ் வையம் எல்லாம்
செய வந்த அந்தணனார் செங்கைமேல்
குவித்து எழுந்து திருமுன் நின்றார். 461
போற்றி இசைக்கும் பாடலினால் பொங்கி
எழும் ஆதரவு பொழிந்து விம்ம
ஏற்றின் மிசை இருப்பவர் தம் எதிர்
நின்று துதித்துப் போந்து எல்லை இல்லா
நீற்று நெறி மறையவனார் நீல
நக்கர் மனையில் எழுந்தருளி அன்பால்
ஆற்றும் விருந்தவர் அமைப்ப அன்பருடன்
இன்புற்று அங்கு அமுது செய்தார். 462
நீடு திரு நீல நக்கர் நெடு மனையில்
விருந்து அமுது செய்து நீர்மைப்
பாடும் யாழ்ப் பெரும் பாணரும் தங்க
அங்கு இரவு பள்ளி மேவி
ஆடும் அவர் அயவந்தி பணிவதனுக்கு
அன்பருடன் அணைந்து சென்று
நாடிய நண்புடை நீல நக்க அடிகளுடன்
நாதர் கழலில் தாழ்ந்து. 463
கோதிலா ஆரமுதைக் கோமளக் கொம்புடன்
கூடக் கும்பிட்டு ஏத்தி
ஆதியாம் மறைப் பொருளால் அரும்
தமிழின் திருப்பதிகம் அருளிச் செய்வார்
நீதியால் நிகழ்கின்ற நீல நக்கர் தம்
பெரும் சீர் நிகழ வைத்துப்
பூதி சாதனர் பரவும் புனித இயல்
இசைப் பதிகம் போற்றி செய்தார். 464
பரவிய காதலில் பணிந்து பாலறா
வாயர் புறத்து அணைந்து பண்பு
விரவிய நண்பு உடை அடிகள் விருப்பு
உறு காதலில் தங்கி மேவும் நாளில்
அரவு அணிந்தார் பதி பிறவும் பணிய
எழும் ஆதரவால் அணைந்து செல்வார்
உரவு மனக் கருத்து ஒன்றாம் உள்ளம்
உடையவர்க்கு விடை உவந்து நல்கி. 465
மற்றவர்தம் பெரும் கேண்மை மகிழ்ந்து கொண்டு
மால் அயனுக்கு அரிய பிரான் மருவு தானம்
பற்பலவும் சென்று பணிந்து ஏத்திப் பாடிப்
பரமர் திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்தக்
கற்றவர் வாழ் கடல் நாகைக் காரோணத்துக்
கண் நுதலைக் கைதொழுது கலந்த ஓசைச்
சொற்றமிழ் மாலைகள் பாடிச் சிலநாள் வைகித்
தொழுதகன்றார் தோணிபுரத் தோன்றலார் தாம். 466
கழிக் கானல் மருங்கு அணையும் கடல்
நாகை அது நீங்கிக் கங்கையாற்றுச்
சுழிக் கானல் வேணியர் தம் பதிபலவும்
பரவிப் போய்த் தோகைமார் தம்
விழிக் காவி மலர் பழனக் கீழ் வேளூர்
விமலர் கழல் வணங்கி ஏத்தி
மொழிக் காதல் தமிழ் மாலை புனைந்தருளி
அங்கு அகன்றார் மூதூர் நின்றும். 467
அருகு அணையும் திருப்பதிகள் ஆனவெலாம்
அங்கணரைப் பணிந்து போற்றிப்
பெருகிய ஞானம் பெற்ற பிள்ளையார்
எழுந்தருளும் பெருமை கேட்டுத்
திரு மருவு செங் காட்டங் குடி நின்றும்
சிறுத் தொண்டரோடிச் சென்று அங்கு
உருகு மனம் களி சிறப்ப எதிர்
கொண்டு தம் பதியுள் கொண்டு புக்கார். 468
சிறுத் தொண்டருடன் கூடச் செங்காட்டங்
குடியில் எழுந்தருளிச் சீர்த்தி
நிறுத்த எண் திக்கிலும் நிலவும் தொண்டர்
அவர் நண்பு அமர்ந்து நீல கண்டம்
பொறுத்து அண்டர் உயக் கொண்டார் கணபதீச்
சரத்தின் கண் போகம் எல்லாம்
வெறுத்து உண்டிப் பிச்சை நுகர்
மெய்த் தொண்டருடன் அணைந்தார் வேதகீதர். 469
அங்கு அணைந்து கோயில் வலம் கொண்டருளி
அரவு அணிந்தார் அடிக் கீழ் வீழ்ந்து
செங்கண் அருவிகள் பொழியத் திருமுன்பு
பணிந்து எழுந்து செங்கை கூப்பித்
தங்கள் பெரும் தகையாரைச் சிறுத் தொண்டர்
தொழ இருந்த தன்மை போற்றிப்
பொங்கி எழும் இசைபாடிப் போற்றி இசைத்து
அங்கு ஒரு பரிசு புறம்பு போந்தார். 470
போந்து மா மாத்தியர் தம் போர்
ஏற்றின் திருமனையில் புகுந்து சிந்தை
வாய்ந்த மாதவர் அவர் தாம்
மகிழ்ந்தருள அமர்ந்தருளி மதில்கள் மூன்றும்
காய்ந்த மால் விடையார் தம் கணபதீச்
சரம் பரவு காதல் கூர
ஏந்து நூல் அணி மார்பர் இன்புற்று
அங்கு அன்பருடன் இருந்த நாளில். 471
திருமருகல் நகரின் கண் எழுந்தருளித்
திங்களுடன் செங்கட் பாம்பு
மருவு நெடும் சடைமவுலி மாணிக்க
வண்ணர் கழல் வணங்கிப் போற்றி
உருகிய அன்புறு காதல் உள்
அலைப்பத் தெள்ளும் இசையுடனே கூடப்
பெருகு தமிழ்த் தொடை சாத்தி அங்கு
இருந்தார் பெரும் புகலிப் பிள்ளையார்தாம். 472
அந் நாளில் ஒரு வணிகன் பதிகன் ஆகி
அணைவான் ஓர் கன்னியையும் உடனே கொண்டு
பொன்னார் மேருச் சிலையார் கோயில் மாடு
புறத்தில் ஒரு மடத்து இரவு துயிலும் போது
மின்னார் வெள் எயிற்று அரவு கவ்வுதலும் கிளர்ந்த
விட வேகம் கடிது தலை மீக் கொண்டு ஏறத்
தன் ஆவி நீங்கும் அவன் தன்மை கண்டு
சாயல் இளம் கன்னி நிலை தளர்ந்து சோர்வாள். 473
வாள் அரவு தீண்டவும் தான் தீண்ட கில்லாள்
மறு மாற்றம் மற்று ஒருவர் கொடுப்பார் இன்றி
ஆளரியேறு அனையானை அணுக வீழ்ந்தே
அசைந்த மலர்க்கொடி போல்வாள் அரற்றும் போது
கோள் உருமும் புள் அரசும் அனையார்
எல்லாக் கொள்கையினாலும் தீர்க்கக் குறையாதாக
நீள் இரவு புலர் காலை மாலை வாச
நெறி குழலாள் நெடிது அயர்ந்து புலம்புகின்றாள். 474
அன்னையையும் அத்தனையும் பிரிந்து நின்னை
அடைவாக உடன் போந்தேன் அரவால் வீடி
என்னை உயிர் விட்டு அகன்றாய் யான் என்
செய்கேன் இவ்விடுக்கண் தீர்க்கின்றார் யாரும் இல்லை
மன்னிய சீர் வணிகர் குல மணியே யானும்
வாழேன் என்று என்று அயர்வாள் மதியினாலே
சென்னி இளம் பிறை அணிவார் கோயில் வாயில்
திசைநோக்கித் தொழுது அழுதாள் செயல் ஒன்று இல்லாள். 475
அடியாராம் இமையவர் தம் கூட்டம் உய்ய அலை
கடல் வாய் நஞ்சு உண்ட அமுதே செங்கண்
நெடியானும் நான்முகனும் காணாக் கோல நீலவிட
அரவு அணிந்த நிமலா வெந்து
பொடியான காமன் உயிர் இரதி வேண்டப்
புரிந்து அளித்த புண்ணியனே பொங்கர் வாசக்
கடியாரும் மலர்ச் சோலை மருங்கு சூழும்
கவின் மருகற் பெருமானே காவாய் என்றும். 476
வந்து அடைந்த சிறு மறையோன் உயிர் மேல்
சீறி வரும் காலன் பெருங்கால வலயம் போலும்
செந்தறு கண் வெள் எயிற்றுக் கரிய கோலம்
சிதைந்து உருள உதைத்து அருளும் செய்யதாளா
இந்த விடக் கொடு வேகம் நீங்குமாறும் யான்
இடுக்கண் குழி நின்றும் ஏறு மாறும்
அந்தி மதிக் குழவி வளர் செய்ய வேணி
அணி மருகற் பெருமானே அருளாய் என்றும். 477
இத் தன்மை சிவன் அருளே சிந்தித்து ஏங்கும்
இளங்கொடி போல் நுடங்கும் இடை ஏழை ஏத்தும்
அத் தன்மை ஓசை எழுந்து எங்கள் சண்பை
ஆண்டகையார் கும்பிட வந்து அணைகின்றார் தம்
மெய்த் தன்மை விளங்கு திருச் செவியில் சார
மேவுதலும் திரு உள்ளக் கருணை மேல் மேல்
வைத் தன்னம் என அயர்வாள் மாடு நீடு
மா தவத்தோர் சூழ எழுந்தருளி வந்தார். 478
சிரபுரத்து மறையவனார் சென்று நின்று சிவபெருமான்
அருள் போற்றிச் சிந்தை நைந்து
பரிவுறுவாள் தனை நோக்கிப் பயப்படேல்
நீ பருவரலும் நும் பரிசும் பகர்வாய் என்னக்
கரமலர்கள் உச்சியின் மேல் குவித்துக் கொண்டு
கண் அருவி சொரிந்து இழியக் காழி வேதப்
புரவலனார் சேவடிக் கீழ் வீழ்ந்து தாங்கள்
போந்ததுவும் புகுந்ததுவும் புகலல் உற்றாள். 479
வளம் பொழில் சூழ் வைப்பூர்க்கோன் தாமன்
எந்தை மருமகன் மற்று இவன் அவற்கு மகளிர்நல்ல
இளம் பிடியார் ஓர் எழுவர் இவரில் மூத்தாள்
இவனுக்கு என்றே உரை செய்தே ஏதிலானுக்குக்
குளம் பெருகத் தனம் பெற்றுக் கொடுத்த பின்னும்
ஓர் ஒருவராக எனை ஒழிய ஈந்தான்
தளர்ந்து அழியும் இவனுக்காத் தகவு செய்து அங்கு
அவரை மறைத்து இவன் தனையே சார்ந்துபோந்தேன். 480
மற்று இவனும் வாள் அரவு தீண்ட மாண்டான்
மறி கடலில் கலம் கவிழ்த்தால் போலநின்றேன்
சுற்றத்தார் என வந்து தோன்றி என்பால் துயரம்
எலாம் நீங்க அருள் செய்தீர் என்னக்
கற்றவர்கள் தொழுது ஏத்தும் காழி
வேந்தர் கருணையினால் காரிகையாள் தனக்கு நல்கப்
பற்றியவாள் அரவு விடம் தீரு மாறு
பணைமருகற் பெருமானைப் பாடலுற்றார். 481
சடையானை எவ்வுயிர்க்கும் தாயானானை சங்கரனை
சசி கண்ட மவுலியானை
விடையானை வேதியனை வெண் நீற்றானை
விரவாதார் புரம் மூன்றும் எரியச் செற்ற
படையானைப் பங்கயத்து மேவினானும் பாம்பு
அணையில் துயின்றானும் பரவும் கோலம்
உடையானை உடையானே தகுமோ இந்த
ஒள்ளிழையாள் உள் மெலிவு என்று எடுத்துப் பாட. 482
பொங்கு விடம் தீர்ந்து எழுந்து நின்றான் சூழ்ந்த
பொருவில் திருத் தொண்டர் குழாம் பொலிய ஆர்ப்ப
அங்கையினை உச்சியின் மேல் குவித்துக் கொண்டு
அங்கு அருள் காழிப் பிள்ளையார் அடியில்வீழ்ந்த
நங்கை அவள் தனை நயந்த நம்பியோடு
நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம்
மங்குல் தவழ் சோலை மலி புகலி வேந்தர்
மணம் புணரும் பெருவாழ்வு வகுத்து விட்டார். 483
மற்றவர்க்கு விடை கொடுத்து அங்கு அமரும்
நாளில் மருகல் நகரினில் வந்து வலியபாசம்
செற்ற புகழ்ச் சிறுத் தொண்டர் வேண்ட மீண்டும்
செங்காட்டங் குடியில் எழுந்து அருள வேண்டிப்
பற்றி எழும் காதல் மிக மேல் மேல் சென்று
பரமனார் திறத்து உன்னிப் பாங்கர் எங்கும்
சுற்றும் அருந்தவரோடும் கோயில் எய்திச் சுடர்
மழு ஆண்டவர் பாதம் தொழுவான் புக்கார். 484
புக்கு இறைஞ்சி எதிர் நின்று போற்றுகின்றார்
பொங்கு திரை நதிப்புனலும் பிறையும்சேர்ந்த
செக்கர் முடிச் சடை மவுலி வெண்ணீற்றார் தம்
திருமேனி ஒரு பாகம் பசுமை ஆக
மைக் குலவு கண்டத்தார் மருகற் கோயில்
மன்னு நிலை மனம் கொண்டு வணங்குவார் முன்
கைக் கனலார் கணபதீச் சரத்தின் மேவும்
காட்சி கொடுத்து அருளுவான் காட்டக் கண்டார். 485
மருகல் அமர்ந்து நிறைந்த கோலம் மல்கு
செங் காட்டங் குடியின் மன்னிப்
பெருகு கணபதி ஈச்சரத்தார் பீடு
உடைக் கோலமே ஆகித் தோன்ற
உருகிய காதலும் மீது பொங்க உலகர்
முன் கொள்ளும் உணர்வு நீட
அருவி கண் வார்வுறப் பாடலுற்றார்
அங்கமும் வேதமும் என்று எடுத்து. 486
கண்டு எதிர் போற்றி வினவிப் பாடிக்
கணபதி ஈச்சரம் காதலித்த
அண்டர் பிரானை வணங்கி வைகும்
அப்பதியில் சில நாள்கள் போற்றித்
தொண்டருடன் அருள் பெற்று மற்றத்
தொல்லைத் திருப்பதி எல்லை நீங்கிப்
புண்டரிகத் தடம் சூழ் பழனப்
பூம் புகலூர் தொழப் போதுகின்றார். 487
சீரின் மலிந்த சிறப்பின் மேவும் சிறுத்
தொண்டர் நண்புடன் செல்ல நல்ல
வேரி நறும் தொங்கல் மற்றவரும்
விடை அருளப் பெற்று மீண்ட பின்பு
நீரின் மலிந்த சடையர் மேவி
நிகழும் பதிகள் பல பணிந்து
பாரின் மலிந்து நிறைந்த செல்வம் பயில்
புகலூர் நகர்ப் பாங்கு அணைந்தார். 488
திருப்புகலூர்த் திருத் தொண்டரோடும் செம்மை
முருகனார் மெய்ம் மகிழ்ந்த
விருப்பொடு சென்று எதிர் கொள்ள வந்து
வேத முதல்வர் தம் கோயில் எய்திப்
பொருப்பு உறழ் கோபுரத்து உட் புகுந்து
பூமலி முன்றில் புடை வலம் கொண்டு
ஒருப் படு சிந்தையொடு உள் அணைந்தார்
ஓதாது ஞானம் எலாம் உணர்ந்தார். 489
புக்கு எதிர் தாழ்ந்து விழுந்தெழுந்து
பூம் புகலூர் மன்னு புண்ணியரை
நெக்கு உருகும் சிந்தை அன்பு பொங்க
நிறை மலர் கண்ணீர் அருவி செய்ய
மிக்க தமிழ்த் தொடை மாலை சாத்தி
மேவிய ஏழ் இசை பாடிப் போந்து
திக்கு நிறை சீர் முருகர் முன்பு
செல்ல அவர் மடம் சென்று புக்கார். 490
ஆங்கு அவர் போற்றும் சிறப்பின் மேவி
அப் பதி தன்னில் அமரு நாளில்
வாங்கு மலைச் சிலையார் மகிழ்ந்த
வர்த்த மானீச்சரம் தான் வணங்கி
ஓங்கிய அன்பின் முருகனார் தம்
உயர் திருத்தொண்டு சிறப்பித்து ஓங்கும்
பாங்கு உடை வண்தமிழ் பாடி நாளும்
பரமர் தம் பாதம் பணிந்து இருந்தார். 491
மற்றத் திருப்பதி வைகு நாளில் வாக்கின்
பெரு விறல் மன்னனார் தாம்
புற்றிடம் கொண்டாரை வந்து இறைஞ்சிப் பொன்
மதில் ஆரூர் புகழ்ந்து போற்றிச்
சிற்றிடைப் பொற்றொடிப் பங்கர் தங்கும்
திருப்புகலூர் தொழச் சிந்தை செய்து
கொற்றவனார் அருள் பெற்ற தொண்டர்
குழாத்துடன் அவ்வூர் குறுக வந்தார். 492
நாவுக்கு அரசர் எழுந்தருளும் நல்ல
திருவார்த்தை கேட்ட போதே
சேவில் திகழ்ந்தவர் மைந்தர் ஆன
திருஞான சம்பந்தர் சிந்தை அன்பு
மேவுற்ற காதல் மிகப் பெருக விரைந்து
எதிர் கொள்ள மெய் அன்பரோடும்
பூவில் பொலி பொய்கை சூழ் புகலூர்ப்
புறம்பு அணை எல்லை கடந்து போந்தார். 493
அங்கணர் ஆரூர் வணங்கிப் போந்த அரசும்
எதிர் வந்து அணைய வாசப்
பொங்கு புனல்தண் புகலி வந்த
பூசுரர் சிங்கமும் பொற்பின் எய்தித்
தங்களின் அன்பின் முறைமை யாலே
தாழ்ந்து வணங்கித் தனித் தனியே
மங்கலம் ஆகிய நல் வரவின்
வாய்மை விளம்பி மகிழும் போது. 494
மெய்த்திரு ஞான சம்பந்தர் வாக்கின்
வேந்தரை நோக்கி விருப்பினாலே
அப்பரை இங்கு அணையப் பெறும்
பேரருள் உடையோம்யாம் அந்தண் ஆரூர்
எப்பரிசால் தொழுது உய்ந்தது என்று
வினவிட ஈறில் பெரும் தவத்தோர்
செப்பிய வண் தமிழ் மாலையாலே
திருவாதிரை நிகழ் செல்வம் சொன்னார். 495
அரசு அருளிச் செய்த வாய்மை கேட்ட
அப்பொழுதே அருள் ஞானம் உண்ட
சிரபுர வேந்தரும் சிந்தையின் கண்
தென் திருவாரூர் வணங்குதற்கு
விரவிய காதலில் சென்று போற்றி மீண்டும்
வந்து உம்முடன் மேவுவன் என்று
உரவு கடல் கல் மிதப்பின் வந்தார்க்கு
உரைத்து உடன்பாடு கொண்டு ஒல்லை போந்தார். 496
சொற் பெரு வேந்தரும் தோணி மூதூர்த்
தோன்றல் பின் காதல் தொடரத் தாமும்
பொற் புகலூர் தொழச் சென்று அணைந்தார்
புகலிப் பிரானும் புரிந்த சிந்தை
விற்குடி வீரட்டம் சென்று மேவி
விடையவர் பாதம் பணிந்து போற்றிப்
பற்பல ஆயிரம் தொண்டரோடும் பாடலன்
நான் மறைப் பாடிப் போந்தார். 497
துணர் இணர்ச் சோலையும் சாலி வேலித்
துறை நீர்ப் பழனமும் சூழ் கரும்பின்
மண மலி கானமும் ஞானமும் உண்டார்
மருங்கு உற நோக்கி மகிழ்ந்தருளி
அணைபவர் அள்ளல் கழனி ஆரூர் அடைவோம்
என மொழிந்து அன்பு பொங்கப்
புணர் இசைச் செந்தமிழ் கொண்டு போற்றிப்
பொன் மதில் ஆரூர்ப் புறத்து அணைந்தார். 498
வான் உயர் செங்கதிர் மண்டலத்து மருங்கு
அணையும் கொடி மன்னும் ஆரூர்
தான் ஒரு பொன் உலகு என்னத் தோன்றும்
தயங்கு ஒளி முன் கண்டு சண்பை வந்த
பால் நிற நீற்றர் பருக்கையானைப்
பதிகத் தமிழ் இசைபாடி ஆடித்
தேனொடு வண்டுமுரலும் சோலைத் திருப்பதி
மற்றதன் எல்லை சேர்ந்தார். 499
பொங்கிய சிந்தை விருப்பின் வெள்ளம்
பொழிந்து புவிமேல் பொலிவது என்ன
எங்கும் குளிர் ஒளி வீசு முத்தின்
இலங்கு சிவிகை இழிந்தருளிச்
செங்கை நிறை மலர் கொண்டு தூவித்
திரு இருக் குறள் பாடி ஏத்தித்
தங்கள் பிரான் அரசாளும் ஆரூர்
தனைப் பணிவுற்றார் தமிழ் விரகர். 500
படியில் ஞானம் உண்டருளிய
பிள்ளையைப் பணிதற்கு
அடியர் சென்று எதிர் கொள
எழுந்தருளும் அஞ்ஞான்று
வடி கொள் சூலத்தர்
மன்னிய பொன்மதில் ஆரூர்க்
கடி கொள் பேரணிப்
பொலிவையார் முடிவுறக் காண்பார். 501
நான மான் மத நளிர்
பெரும் சேற்றிடை நறும் பொன்
தூ நறுந்துகள் சொரிதலில்
சுடர் ஒளிப் படலை
யான வீதிகள் அடி
வலித்து அவை கரைந்தலைய
வான மாரியில் பொழிந்தது
மலர் மது மாரி. 502
ஆடல் நீடுவ துகில் கொடி
அணி குழல் கொடிகள்
தோடு சூழ்வன சுரும்பொடு
தமனியத் தசும்பு
காடு கொண்டன கதலி
தோரணம் நிரைக் கமுகு
மாட மாளிகை மண்டபங்களின்
மருங்கு எல்லாம். 503
மாலை சூழ் புறம் கடைகளின்
மணி நிரை விளக்கின்
கோல நீள் சுடர்
ஒளியுடன் கோத்திடை தூக்கும்
நீல மா மணி நிழல்
பொர நிறம்புகர் படுக்கும்
பால வாயின பவள
வேதிகை மலர்ப் பந்தர். 504
தழை மலர்த்தடஞ் சாலைகள்
தெற்றிகள் சதுக்கம்
குழை முகத்தவர் ஆடரங்கு
இமையவர் குழாமும்
விழை சிறப்பின வியல்
இடம் யாவையும் மிடைந்து
மழை முழக்கு என
இயம்பின மங்கல இயங்கள். 505
விரவு பேரணி வேறு
வேறு இன்னன விளங்கும்
பிரசமென்மலர்ச் சோலை
சூழ் பெருந் திருவாரூர்
அரசளிப்பவர் அருளினால்
அடியவர் குழுவும்
புரிசனங்களும் புறத்து அணைந்து
எதிர் கொள்ளும் பொழுது. 506
வந்து இறைஞ்சும் மெய்த் தொண்டர்
தம் குழாத்து எதிர் வணங்கிச்
சந்த முத்தமிழ் விரகராம்
சண்பையர் தலைவர்
அந்தமாய் உலகு ஆதியாம்
பதிகம் அங்கு எடுத்தே
எந்தை தான் எனை ஏன்று
கொள்ளும் கொல் என்று இசைத்தார். 507
ஆன அத்திருப் பதிகம்
முன் பாடிவந்து அணையும்
ஞான வித்தகர் மெய்த்தவர்
சூழ அந் நகரார்
தூ நறும் சுண்ண மலர்
பொரி தூஉய்த் தொழுது ஏத்த
வான நாயகர் கோயில்
வாயிலின் மருங்கு அணைந்தார். 508
மன்னு தோரண வாயில் முன்
வணங்கி உள் புகுவார்
தன்னுள் எவ்வகைப் பெருமையும்
தாங்கிய தகைத்தாம்
பன் நெடும் சுடர்ப்
படலையின் பரப்பினைப் பார்த்துச்
சென்னி தாழ்ந்து தேவாசிரியன்
தொழுது எழுந்தார். 509
மாடு சூழ் திரு மாளிகை
வலம் கொண்டு வணங்கிக்
கூடு காதலில் கோபுரம்
பணிந்து கை குவித்துத்
தேடு மால் அயற்கு
அரியராய்ச் செழுமணிப் புற்றில்
நீடு வாழ் முன்பு நிலமுறப்
பல முறை பணிந்தார். 510
பணிந்து வீழ்ந்தனர் பதைத்தனர்
பரப்பிய புளகம்
அணிந்த மேனியோடு ஆடினர்
பாடினர் அறிவில்
துணிந்த மெய்ப் பொருள் ஆனவர்
தமைக் கண்டு துதிப்பார்
தணிந்த சிந்தையின் விரைந்து
எழு வேட்கையில் தாழ்ந்தார். 511
செஞ் சொல் வண் தமிழ்த்
திருப்பதிகத்து இசை எடுத்து
நஞ்சு போனகம் ஆக்கிய
நம்பர் முன் பாடி
மஞ்சு சூழ் திரு மாளிகை
வாயிலின் புறம் போந்து
அஞ்சு எழுத்து மெய்
உணர்ந்தவர் திருமடத்து அணைந்தார். 512
அங்கு அணைந்து அமர்ந்து
அருளுவார் அரநெறி அமர்ந்த
செங்கண் ஏற்றவர் சேவடி
வணங்கி முன் திளைத்துப்
பொங்கு பேரொளிப் புற்று
இடம் கொண்டவர் புனிதப்
பங்கயப் பதம் தொழுது
காலம் தொறும் பணிந்தார். 513
புற்றிடம் கொளும் புனிதரைப்
போற்றி இசை பெருகப்
பற்றும் அன்பொடு பணிந்து
இசைப் பதிகங்கள் பாடி
நற்றவத் திருத்தொண்டர்களோடு
நலம் சிறப்ப
மற்ற வண்பதி தன்னிடை
வைகும் அந் நாளில். 514
மல்லல் நீடிய வலி
வலம் கோளிலி முதலாத்
தொல்லை நான் மறை முதல்வர்
தம் பதி பல தொழுதே
எல்லையில் திருப்பதிகங்களால்
பணிந்து ஏத்தி
அல்லல் தீர்ப்பவர் மீண்டும்
ஆரூர் தொழ அணைந்தார். 515
ஊறு காதலில் ஒளி
வளர் புற்றிடம் கொண்ட
ஆறு உலாவிய சடை முடி
ஐயரைப் பணிந்து
நீறு வாழ்வு என நிகழ் திருத்
தொண்டர் களோடும்
ஈறிலாத் திரு ஞான சம்பந்தர்
அங்கு இருந்தார். 516
அங்கு நன்மையில் வைகும்
அந்நாள் சில அகல
நங்கள் தம் திரு நாவினுக்கு
அரசரை நயந்து
பொங்கு சீர்ப் புகலூர்
தொழ அருளினால் போவார்
தங்கும் அப்பதிப் புறம்பணை
சார்ந்தருள் செய்வார். 517
புவன ஆரூரினிற் புறம் போந்து
அதனையே நோக்கி நின்றே
அவம் இலா நெஞ்சமே அஞ்சல்
நீ உய்யுமாறு அறிதி அன்றே
சிவனது ஆரூர் தொழாய் நீ
மறவாது என்று செங்கை கூப்பிப்
பவனமாய்ச் சோடையாய் எனும்
திருப்பதிகம் முன் பாடினாரே. 518
காழியார் வாழ வந்து அருள்
செயும் கவுணியப் பிள்ளையார் தாம்
ஆழியான் அறியொணா அண்ணல்
ஆரூர் பணிந்து அரிது செல்வார்
பாழி மால் யானையின் உரி
புணைந்தார் பனையூர் பணிந்து
வாழி மாமறை இசைப் பதிகமும்
பாடி அப் பதியில் வைகி. 519
அங்கு நின்று அரிது எழுந்தருளுவார்
அகில காரணமும் ஆனார்
தங்கு நற் பதிகளும் பிற
பணிந்தருளி வண் தமிழ் புனைந்தே
எங்கும் மெய்த்தவர் குழாம் எதிர்
கொளத் தொழுதெழுந்து அருளி வந்தார்
பொங்கு தண் பாசடைப் பங்கயப்
புனல் வயல் புகலூர் சார. 520
நாவினுக்கு அரசரும் நம்பி சீர்
முருகரும் மற்று நாமச்
சேவுகைத்தவர் திருத் தொண்டர்
ஆனவர்கள் முன் சென்று சீதப்
பூவினில் பொலி புனல் புகலியார்
போதகத்து எதிர் பணிந்தே
மேவ மற்று அவருடன் கூடவே
விமலர் கோயிலை அடைந்தார். 521
தேவர் தம் தலைவனார் கோயில் புக்கு
அனைவரும் சீர் நிலத்து உற வணங்கி
பாவரும் தமிழ் இசைப் பதிகமும் பாடி
முன் பரவுவார் புறம்பு அணைந்தே
தாவில் சீர் முருகனார் திருமனைக்கு எய்தி
அத் தனி முதற் தொண்டர் தாமே
யாவையும் குறைவறுத்திட அமர்ந்து அருளுவார்
இனிதின் அங்கு உறையும் நாளில். 522
நீல நக்க அடிகளும் நிகழ் சிறுத் தொண்டரும்
உடன் அணைந்து எய்தும் நீர்மைச்
சீல மெய்த்தவர்களும் கூடவே கும்பிடும்
செய்கை நேர் நின்று வாய்மைச்
சால்பின் மிக்கு உயர் திருத் தொண்டின்
உண்மை திறம் தன்னையே தெளிய நாடிக்
காலம் உய்த்தவர்களோடு அளவளாவிக் கலந்து
அருளினார் காழி நாடர். 523
கும்பிடும் கொள்கையில் குறி கலந்திசை எனும்
பதிக முன் ஆன பாடல்
தம் பெரும் தலைமையால் நிலைமை சால்
பதியதன் பெருமை சால்புற விளம்பி
உம்பரும் பரவுதற்கு உரிய சொல் பிள்ளையார்
உள்ளம் மெய்க் காதல் கூர
நம்பர் தம் பதிகள் ஆயின ஏனைப்
பலவும் முன் நண்ணியே தொழ நயந்தார். 524
புள்ளலம்பு தண்புனல் புகலூர்
உறை புனிதனார் அருள் பெற்றுப்
பிள்ளையார் உடன் நாவினுக்கு அரசரும்
பிற பதி தொழச் செல்வார்
வள்ளலார் சிறுத் தொண்டரும் நீல
நக்கரும் வளம் பதிக்கு ஏக
உள்ளம் அன்புறும் முருகர் அங்கு
ஒழியவும் உடன்பட இசைவித்தார். 525
கண்ணகன் புகலூரினைத் தொழுது
போம் பொழுதினில் கடல் காழி
அண்ணலார் திரு நாவினுக்கு அரசர்
தம் அருகு விட்டு அகலாதே
வண்ண நித்திலச் சிவிகையும் பின் வர
வழிக்கொள உறும் காலை
எண்ணில் சீர்த்திரு நாவினுக்கரசரும்
மற்று அவர்க்கு இசைக்கின்றார். 526
நாயனார் உமக்கு அளித்து அருள் செய்த
இந் நலம் கிளர் ஒளி முத்தின்
தூய யானத்தின் மிசை எழுந்து
அருளுவீர் என்றலும் சுடர்த் திங்கள்
மேய வேணியர் அருளும் இவ்வாறு
எனில் விரும்பு தொண்டர்களோடும்
போய தெங்குநீர் அங்கு யான் பின்
வரப் போவது என்று அருள் செய்தார். 527
என்று பிள்ளையார் மொழிந்து அருள்
செய்திட இரும் தவத்து இறையோரும்
நன்று நீர் அருள் செய்ததே செய்வன்
என்று அருள் செய்து நயப்பு உற்ற
அன்றை நாள் முதல் உடன் செல்லும்
நாள் எலாம் அவ் இயல்பினில் செல்வார்
சென்று முன்னுறத் திருவம்பர்
அணைந்தனர் செய்தவக் குழாத்தோடும். 528
சண்பை மன்னரும் தம்பிரான் அருள்
வழி நிற்பது தலைச் செல்வார்
பண்பு மேம் படு பனிக்கதிர்
நித்திலச் சிவிகையில் பணிந்து ஏறி
வண் பெரும் புகலூரினைக் கடந்து
போய் வரும் பரிசனத்தோடும்
திண் பெரும் தவர் அணைந்தது எங்கு
என்று போய்த் திருவம்பர் நகர் புக்கார். 529
அம்பர்மா நகர் அணைந்து
மாகாளத்தில் அண்ணலார் அமர்கின்ற
செம் பொன் மாமதிற் கோயிலை வலம்
கொண்டு திருமுன்பு பணிந்து ஏத்தி
வம்புலா மலர் தூவி முன் பரவிய
வண் தமிழ் இசை மாலை
உம்பர் வாழ நஞ்சு உண்டவர் தமைப்
பணிந்து உருகும் அன்பொடு தாழ்ந்தார். 530
தாழ்ந்து நாவினுக்கரசுடன் தம்பிரான்
கோயில் முன்புறம் எய்திச்
சூழ்ந்த தொண்டரோடு அப்பதி
அமர்பவர் சுரநதி முடிமீது
வீழ்ந்த வேணியர் தமைப் பெறும்
காலங்கள் விருப்பினால் கும்பிட்டு
வாழ்ந்து இருந்தனர் காழியர் வாழ
வந்தருளிய மறை வேந்தர். 531
பொருவு இலாத சொல் புல்கு பொன்
நிற முதற் பதிகங்களால் போற்றித்
திருவின் ஆர்ந்த கோச் செங்கணான்
அந்நகர்ச் செய்த கோயிலைச் சேர்ந்து
மருவு வாய்மை வண் தமிழ்
மலர் மாலை அவ்வளவனைச் சிறப்பித்துப்
பெருகு காதலில் பணிந்து முன்
பரவினார் பேணிய உணர்வோடும். 532
இன்ன வாறு சொல் மாலைகளால் துதித்து
இறைஞ்சி அங்கு அமர் நாளில்
கன்னி மாமதில் திருக்கடவூர் தொழக்
காதல் செய்து அருளிப்போய்
மன்னு கோயில்கள் பிறபதி வணங்கியே
வாக்கின் மன்னவ ரோடும்
அந்நெடும்பதி அணைவுறக் கலையரோடு
அடியவர் எதிர்கொண்டார். 533
மற்ற வண் பதி அணைந்து
வீரட்டத்து மழவிடையார் கோயில்
சுற்று மாளிகை வலம் கொண்டு
காலனை உதைத்து உருட்டிய செய்ய
பொன் சிலம்பு அணி தாமரை வணங்கிமுன்
போற்றி உய்ந்து எதிர் நின்று
பற்று அறுப்பவர் சடை உடையான்
எனும் பதிக இன்னிசை பாடி. 534
பரவி ஏத்தி அங்கு அரிதினில் போந்து
பார் பரவு சீர் அரசோடு
விரவு நண்பு உடை குங்கிலியப்
பெருங் கலயர் தம் மனை மேவிக்
கரையில் காதல் மற்று அவர்
அமைத்தருளிய விருந்து இனிதமர்ந்து அங்குச்
சிரபுரத்தவர் திரு மயானமும் பணிந்து
இருந்தனர் சிறப்பு எய்தி. 535
சிறப்பு உடைத் திருப்பதி அதனிடைச்
சில நாள் அமர்ந்து அருளோடும்
விறல் பெரும் கரி உரித்தவர்
கோயில்கள் விருப்போடும் தொழச் செல்வார்
மறைப் பெரும் திருக் கலயரும்
உடன்பட வணங்கிய மகிழ்வோடும்
அறப் பெரும் பயன் அனைய
அத் தொண்டரோடு அணைந்தனர் திருவாக்கூர். 536
தக்க அந்தணர் மேவும் அப் பதியினில்
தான் தோன்றி மாடத்துச்
செக்கர் வார் சடை அண்ணலைப்
பணிந்து இசைச் செந்தமிழ்த் தொடைபாடி
மிக்க கோயில்கள் பிறவுடன் தொழுது
போய் மீயச்சூர் பணிந்து ஏத்திப்
பக்கம் பாரிடம் பரவ நின்று
ஆடுவார் பாம்புர நகர் சேர்ந்தார். 537
பாம்புரத் துறை பரமரைப் பணிந்து
நற் பதிக இன்னிசை பாடி
வாம்புனல் சடை முடியினார் மகிழ்விடம்
மற்றும் உள்ளன போற்றிக்
காம்பினில் திகழ் கரும்பொடு
செந்நெலின் கழனியம்பணை நீங்கித்
தேம் பொழில் திரு வீழி நன்
மிழலையின் மருங்குறச் செல்கின்றார். 538
அப்பொழுதின் ஆண்ட அரசை
எதிர் கொண்ட
மெய்ப் பெருமை அந்தணர்கள்
வெங்குரு வாழ் வேந்தனார்
பிற்பட வந்து எய்தும் பெரும்
பேறு கேட்டு உவப்பார்
எப் பரிசினால் வந்து அணைந்து
அங்கு எதிர் கொண்டார். 539
நிறை குடம் தூபம் தீபம்
நீட நிரைத்து ஏந்தி
நறை மலர்ப் பொற் சுண்ணம்
நறும் பொரியும் தூவி
மறை ஒலி போய் வான்
அளப்ப மா முரசம் ஆர்ப்ப
இறைவர் திரு மைந்தர் தமை
எதிர் கொள் வரவேற்றார். 540
வந்து திரு வீழி மிழலை மறை வல்ல
அந்தணர்கள் போற்றிசைப்பத் தாமும்
மணி முத்தின்
சந்த மணிச் சிவிகை நின்று
இழிந்து தாழ்ந்து அருளி
உய்ந்த மறையோருடன் அணைந்து
அங்கு உள் புகுவார். 541
அப்போது அரையார் விரிகோவண ஆடை
ஒப்பு ஓதரும் பதிகத்து ஓங்கும் இசைபாடி
மெய்ப் போதப் போது அமர்ந்தார்
தம் கோயில் மேவினார்
கைப் போது சென்னியின்
மேல் கொண்டு கவுணியனார். 542
நாவின் தனி மன்னர்
தாமும் உடன் நண்ண
மேவிய விண் இழிந்த
கோயில் வலம் கொள்வார்
பூவியலும் உந்தியான் போற்றப்
புவிக் கிழிந்த
தேவியலும் மெய் கண்டு
சிந்தை வியப்பு எய்தினார். 543
வலம் கொண்டு புக்கு எதிரே
வந்து வர நதியின்
சலம் கொண்ட வேணித்
தனி முதலைத் தாழ்ந்து
நிலம் கொண்ட மேனியராய்
நீடு பெரும் காதல்
புலம் கொண்ட சிந்தையினால்
பொங்கி இசை மீப்பொழிந்தார். 544
போற்றிச் சடையார் புனல்
உடையான் என்று எடுத்து
சாற்றிப் பதிகத் தமிழ்
மாலைச் சந்த இசை
ஆற்ற மிகப் பாடி
ஆனந்த வெள்ளத்தில்
நீற்றழகர் சேவடிக் கீழ் நின்று
அலைந்து நீடினார். 545
நீடிய பேரன்பு உருகி
உள்ளலைப்ப நேர் நின்று
பாடி எதிர் ஆடிப்
பரவிப் பணிந்து எழுந்தே
ஆடிய சேவடிகள் ஆர்வம்
உற உட்கொண்டு
மாடுயர் கோயில் புறத்து
அரிது வந்து அணைந்தார். 546
வந்து அணைந்து வாழ்ந்து மதில்புறத்து
ஓர் மா மடத்துச்
செந் தமிழ்ச் சொல்
வேந்தரும் செய்தவரும் சேர்ந்தருளச்
சந்த மணிக் கோபுரத்துச்
சார்ந்த வடபால் சண்பை
அந்தணர் சூளா மணியார் அங்கு
ஓர் மடத்து அமர்ந்தார். 547
அங்கண் அமர்வார் அரனார்
அடி இணைக் கீழ்த்
தங்கிய காதலினால்
காலங்கள் தப்பாமே
பொங்கு புகழ் வாகீசரும்
கூடப் போற்றி இசைத்தே
எங்கும் இடர் தீர்ப்பார்
இன்புற்று அமர்கின்றார். 548
ஓங்கு புனல் பேணு
பெருந்துறையும் உள்ளிட்ட
பாங்கர் திலதைப்
பதிமுற்றமும் பணிந்து
வீங்கு ஒலி நீர் வீழி மிழலையினில்
மீண்டும் அணைந்து
ஆங்கு இனிது கும்பிட்டு
அமர்ந்து ஒழுகும் அந்நாளில். 549
சேண் உயர் மாடப் புகலி உள்ளார்
திரு ஞான சம்பந்தப் பிள்ளையாரைக்
காணும் விருப்பில் பெருகும் ஆசை கைம்
மிகு காதல் கரை இகப்பப்
பூணும் மனத்தொடு தோணி மேவும்
பொருவிடை யார் மலர்ப் பாதம் போற்றி
வேணு புரத்தை அகன்று போந்து
வீழி மிழலையில் வந்து அணைந்தார். 550
ஊழி முடிவில் உயர்ந்த வெள்ளத்து
ஓங்கிய காழி உயர் பதியில்
வாழி மறையவர் தாங்கள் எல்லாம்
வந்து மருங்கு அணைந்தார்கள் என்ன
வீழி மிழலையின் வேதியர்கள் கேட்டு
மெய்ஞ்ஞானம் உண்டாரை முன்னா
ஏழ் இசை சூழ்மறை எய்த ஓதி
எதிர் கொள் முறைமையில் கொண்டு புக்கார். 551
சண்பைத் திருமறையோர்கள் எல்லாம்
தம் பிரானாரைப் பணிந்து போந்து
நண்பில் பெருகிய காதல் கூர்ந்து
ஞான சம்பந்தர் மடத்தில் எய்திப்
பண்பில் பெருகும் கழுமலத்தார் பிள்ளையார்
பாதம் பணிந்து பூண்டே
எண் பெற்ற தோணிபுரத்தில் எம்மோடு
எழுந்தருளப் பெற வேண்டும் என்றார். 552
என்று அவர் விண்ணப்பம் செய்த போதில்
ஈறு இல் சிவ ஞானப் பிள்ளை யாரும்
நன்று இது சாலவும் தோணி மேவும்
நாதர் கழல் இணை நாம் இறைஞ்ச
இன்று கழித்து மிழலை மேவும் இறைவர்
அருள் பெற்றுப் போவது என்றே
அன்று புகலி அருமறையோர்க்கு அருள்
செய்து அவர்க்கு முகம் அளித்தார். 553
மேற்பட்ட அந்தணர் சண்பை மேவும்
வேதியர்க்கு ஆய விருந்து அளிப்பப்
பாற் பட்ட சிந்தையராய் மகிழ்ந்து பரம்
பொருள் ஆனார் தமைப் பரவும்
சீர்ப் பட்ட எல்லை இனிது செல்லத்
திருத் தோணி மேவிய செல்வர் தாமே
கார்ப் பட்ட வண்கைக் கவுணியர்க்குக்
கனவிடை முன் நின்று அருள் செய்கின்றார். 554
தோணியில் நாம் அங்கு இருந்த வண்ணம்
தூமறை வீழி மிழலை தன்னுள்
சேண் உயர் விண்ணினின்று இழிந்த இந்தச்
சீர் கொள் விமானத்துக் காட்டுகின்றோம்
பேணும் படியால் அறிதி என்று பெயர்ந்து
அருள் செய்யப் பெரும் தவங்கள்
வேணு புரத்தவர் செய்ய வந்தார்
விரவும் புளகத் தொடும் உணர்ந்தார். 555
அறிவுற்ற சிந்தையராய் எழுந்தே
அதிசயித்து உச்சிமேல் அங்கை கூப்பி
வெறிவுற்ற கொன்றையினார் மகிழ்ந்த
விண்ணிழி கோயிலில் சென்று புக்கு
மறி உற்ற கையரைத் தோணி மேல்
முன் வணங்கும்படி அங்குக் கண்டு வாழ்ந்து
குறியில் பெருகும் திருப்பதிகம்
குலவிய கொள்கையில் பாடுகின்றார். 556
மைம் மரு பூங்குழல் என்று எடுத்து
மாறில் பெரும் திருத்தோணி தன் மேல்
கொம்மை முலையினாள் கூட நீடு
கோலம் குலாவு மிழலை தன்னில்
செம்மை தரு விண்ணிழிந்த கோயில்
திகழ்ந்தபடி இது என் கொல் என்று
மெய்ம்மை விளங்கும் திருப்பதிகம்
பாடி மகிழ்ந்தனர் வேதவாயர். 557
செஞ்சொல் மலர்ந்த திருப்பதிகம் பாடித்
திருக் கடைக் காப்புச் சாத்தி
அஞ்சலி கூப்பி விழுந்தெழுவார் ஆனந்த
வெள்ளம் அலைப்பப் போந்து
மஞ்சிவர் சோலைப் புகலி மேவும்
மா மறையோர் தமை நோக்கி வாய்மை
நெஞ்சில் நிறைந்த குறிப்பில் வந்த
நீர்மைத் திறத்தை அருள் செய்கின்றார். 558
பிரம புரத்தில் அமர்ந்த முக்கட்
பெரிய பிரான் பெருமாட்டி யோடும்
விரவிய தானங்கள் எங்கும் சென்று
விரும்பிய கோலம் பணிந்து போற்றி
வருவது மேற் கொண்ட காதல் கண்டு அங்கு
அமர்ந்த வகை இங்கு அளித்தது என்று
தெரிய உரைத் தருள் செய்து நீங்கள்
சிரபுர மாநகர் செல்லும் என்றார். 559
என்று கவுணியப் பிள்ளையார் தாம்
இயம்பப் பணிந்தருள் ஏற்றுக் கொண்டே
ஒன்றிய காதலின் உள்ளம் அங்கண்
ஒழிய ஒருவாறு அகன்று போந்து
மன்றுள் நடம் புரிந்தார் மகிழ்ந்த
தானம் பலவும் வணங்கிச் சென்று
நின்ற புகழ்த் தோணி நீடுவாரைப்
பணியும் நியதியராய் உறைந்தார். 560
சிரபுரத்து அந்தணர் சென்ற பின்னைத்
திருவீழி மேவிய செல்வர் பாதம்
பரவுதல் செய்து பணிந்து நாளும் பண்பின்
வழாத் திருத் தொண்டர் சூழ
உரவுத் தமிழ்த் தொடை மாலை
சாத்தி ஓங்கிய நாவுக்கரசரோடும்
விரவிப் பெருகிய நண்பு கூர மேவி
இனிது அங்கு உறையும் நாளில். 561
மண்ணின் மிசை வான் பொய்த்து நதிகள் தப்பி
மன் உயிர்கள் கண் சாம்பி உணவு மாறி
விண்ணவர்க்கும் சிறப்பில் வரும் பூசை ஆற்றா
மிக்க பெரும் பசி உலகில் விரவக் கண்டு
பண் அமரும் மொழி உமையாள் முலையின்
ஞானப் பாலறா வாயருடன் அரசும் பார் மேல்
கண் நுதலான் திருநீற்றுச் சார்வினோர்க்கும் கவலை
வருமோ என்று கருத்தில் கொண்டார். 562
வானாகி நிலனாகி அனலுமாகி மாருதமாய்
இரு சுடராய் நீரும் ஆகி
ஊனாகி உயிராகி உணர்வுமாகி உலகங்கள்
அனைத்துமாய் உலகுக்கு அப்பால்
ஆனாத வடிவாகி நின்றார் செய்ய அடி
பரவி அன்று இரவு துயிலும் போது
கான் ஆடு கங்காளர் மிழலை மூதூர்
காதலித்தார் கனவில் அணைந்து அருளிச் செய்வார். 563
உலகியல்பு நிகழ்ச்சியால் அணைந்த தீய உறுபசி
நோய் உமை அடையாது எனினும் உம்பால்
நிலவு சிவ நெறி சார்ந்தோர் தம்மை வாட்டம்
நீங்குதற்கு நித்தம் ஓர் ஓர் காசு நீடும்
இலகு மணிப் பீடத்துக் குணக்கும் மேற்கும்
யாமளித்தோம் உமக்கு இந்தக் காலம் தீர்ந்தால்
அலகில் புகழீர் தவிர்வ தாகும் என்றே
அருள் புரிந்தார் திருவீழி மிழலை ஐயர். 564
தம்பிரான் அருள் புரிந்து கனவின் நீங்கச்
சண்பையர் இள ஏறு தாமும் உணர்ந்து
நம்பிரான் அருள் இருந்த வண்ணம் என்றே
நாவின் இசை அரசரொடும் கூட நண்ணி
வம்புலா மலர் இதழி வீழிநாதர் மணிக்
கோயில் வலம் செய்யப் புகுந்த வேலை
அம்பிகா பதி அருளால் பிள்ளையார் தாம்
அபிமுகத்துப் பீடிகை மேல் காசு கண்டார். 565
காதலொடும் தொழுது எடுத்துக் கொண்டு நின்று
கை குவித்துப் பெரு மகிழ்ச்சி கலந்துபொங்க
நாதர் விரும்பு அடியார்கள் நாளும் நாளும்
நல் விருந்தாய் உண்பதற்கு வருக என்று
தீது இல் பறை நிகழ்வித்துச் சென்ற தொண்டர்
திருவமுது கறி நெய்பால் தயிர் என்று இன்ன
ஏதம் உறாது இனிது உண்ண ஊட்டி அங்கண்
இருதிறத்துப் பெரும் தவரும் இருந்த நாளில். 566
நாவினுக்கு வேந்தர் திரு மடத்தில் தொண்டர்
நாட் கூறு திரு அமுது செய்யக் கண்டு
சே உகைத்தார் அருள் பெற்ற பிள்ளையார் தம்
திருமடத்தில் அமுது ஆக்குவாரை நோக்கித்
தீவினைக்கு நீர் என்றும் அடைவிலாதீர்
திரு அமுது காலத்தால் ஆக்கி இங்கு
மேவு மிக்க அடியவருக்கு அளியா வண்ணம்
விளைந்தவாறு என் கொலோ விளம்பும் என்றார். 567
திருமறையோர் தலைவர் தாம் அருளிச் செய்யத்
திருமடத்தில் அமுது அமைப்போர் செப்புவார்கள்
ஒரு பரிசும் அறிந்திலோம் இதனை உம்மை
உடையவர் பால் பெறும் படிக்காசு ஒன்றும் கொண்டு
கருதிய எல்லாம் கொள்ள வேண்டிச் சென்றால்
காசு தனை வாசி பட வேண்டும் என்பார்
பெரு முனிவர் வாகீசர் பெற்ற காசு
பேணியே கொள்வர் இது பிற்பாடு என்றார். 568
திரு ஞான சம்பந்தர் அதனைக் கேட்டுச்
சிந்திப்பார் சிவபெருமான் நமக்குத் தந்த
ஒரு காசு வாசிபட மற்றக் காசு நன்று
ஆகி வாசி படாது ஒழிவான் அந்தப்
பெரு வாய்மைத் திருநாவுக்கரசர் தொண்டால்
பெறும் காசாம் ஆதலினால் பெரியோன் தன்னை
வருநாள்கள் தரும் காசு வாசி தீரப் பாடுவன்
என்று எண்ணியது மனத்துள் கொண்டார். 569
மற்றை நாள் தம்பிரான் கோயில் புக்கு வாசி
தீர்த்து அருளும் எனப் பதிகம் பாடிப்
பெற்றபடி நல் காசு கொண்டு மாந்தர் பெயர்ந்து
போய் ஆவண வீதியினில் காட்ட
நல் தவத்தீர் இக் காசு சால நன்று
வேண்டுவன நாம் தருவோம் என்று நல்க
அற்றை நாள் தொடங்கி நாள் கூறு தன்னில்
அடியவரை அமுது செய்வித்து ஆர்வம் மிக்கார். 570
அருவிலையில் பெரும் காசும் அவையே
ஆகி அமுது செய்யத் தொண்டர் அளவிறந்துபொங்கி
வரும் அவர்கள் எல்லார்க்கும் வந்தாருக்கும் மகிழ்ந்து
உண்ண இன் அடிசில் மாளாது ஆகத்
திருமுடி மேல் திங்களொடு கங்கை சூடும்
சிவ பெருமான் அருள் செய்ய சிறப்பின் மிக்க
பெருமை தரு சண்பை நகர் வேந்தர்
நாவுக்கரசர் இவர் பெரும் சோற்றுப் பிறங்கல் ஈந்தார். 571
அவனி மிசை மழை பொழிய உணவு மல்கி
அனைத்து உயிரும் துயர் நீங்கி அருளினாலே
புவனம் எலாம் பொலிவு எய்தும் காலம் எய்தப்
புரிசடையார் கழல் பலநாள் போற்றி வைகித்
தவ முனிவர் சொல் வேந்தரோடும் கூடத்
தம்பிரான் அருள் பெற்றுத் தலத்தின் மீது
சிவன் மகிழும் தானங்கள் வணங்கப் போவார்
தென் திருவாஞ்சிய மூதூர் சென்று சேர்ந்தார். 572
நீடு திரு வாஞ்சியத்தில் அமர்ந்த முக்கண்
நீல மிடற்று அருமணியை வணங்கிப் போற்றிப்
பாடொலி நீர்த் தலையாலங்காடு மாடு
பரமர் பெருவேளூரும் பணிந்து பாடி
நாடு புகழ்த் தனிச் சாத்தங் குடியில்
நண்ணி நம்பர் திருக்கரவீரம் நயந்து பாடித்
தேடு மறைக்கு அரியார் தம் விளமர் போற்றித்
திருவாரூர் தொழ நினைந்து சென்று புக்கார். 573
நம்பர் மகிழ் திருவாரூர் வணங்கிப் போந்து
நலம் கொள் திருக் காறாயில் நண்ணி ஏத்திப்
பைம் புனல் மென் பணைத்தேவூர் அணைந்து
போற்றிப் பரமர் திருநெல்லிக்காப் பணிந்து பாடி
உம்பர் பிரான் கைச்சினமும் பரவித் தெங்கூர்
ஓங்கு புகழ்த் திருக் கொள்ளிக்காடும் போற்றி
செம் பொன் மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தித்
திருமலி வெண்துறை தொழுவான் சென்று சேர்ந்தார். 574
மற்றவ்வூர் தொழுது ஏத்தி மகிழ்ந்து பாடி மால்
அயனுக்கு அரிய பிரான் மருவும் தானம்
பற்பலவும் சென்று பணிந்து ஏத்திப் பாடிப் பரவும்
திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்தக்
கற்றவர் வாழ் தண்தலை நீள் நெறி உள்ளிட்ட கனக
மதில் திருக்களரும் கருதார் வேள்வி
செற்றவர் சேர் பதி பிறவும் சென்று போற்றித் திருமறைக்
காட்டு அதன் மருங்கு சேர்ந்தார் அன்றே. 575
காரமண் வெஞ்சுரம் அருளால் கடந்தார் தாமும்
கடற்காழிக் கவுணியர் தம் தலைவர் தாமும்
சேர எழுந்தருளிய அப் பேறு கேட்டுத்
திருமறைக்காட்டு அகன்பதியோர் சிறப்பில் பொங்கி
ஊர் அடைய அலங்கரித்து விழவு கொள்ள
உயர் கமுகு கதலி நிறை குடம் தீபங்கள்
வார் முரச மங்கள நாதங்கள் மல்க
எதிர் கொள்ள அடியருடன் மகிழ்ந்து வந்தார். 576
முன் அணைந்த திருநாவுக்கரசர் தம்மை முறைமையால்
எதிர் கொண்டு களிப்பின் மூழ்கிப்
பின் அணைய எழுந்து அருளும் பிள்ளையார்
தம் பெருகிய பொற்காளத்தின் ஓசை கேட்டுச்
சென்னி மிசைக் கரம் குவித்து முன்பு சென்று
சேண் நிலத்து வணங்குதலும் திருந்து சண்பை
மன்னவரும் மணிமுத்தின் சிவிகை நின்று
வந்திழிந்து வணங்கி உடன் மகிழ்ந்து போந்தார். 577
சொல்லரசர் உடன் கூடப் பிள்ளையாரும் தூமணி
நீர் மறைக் காட்டுத் தொல்லை மூதூர்
மல்கு திரு மறுகின்கண் புகுந்த போது
மாதவர்கள் மறையவர்கள் மற்றும் உள்ளோர்
எல்லை இல்லா வகை அர என்று எடுத்த ஓசை
இரு விசும்பும் திசை எட்டும் நிறைந்து பொங்கி
ஒல் ஒலி நீர் வேலை ஒலி அடக்கி
விண்மேல் உம்பர் நாட்டு அப்புறத்தும் உற்றது அன்றே. 578
அடியவரும் பதியவரும் மருங்கு போற்ற அணி
மறுகினூடு எய்தி அருகு சூழ்ந்த
கொடி நுடங்கு செழுந்திரு மாளிகையின் முன்னர்க்
கோபுரத்தைத் தாழ்ந்து இறைஞ்சிக்குறுகிப் புக்கு
முடிவில் இமையவர் முனிவர் நெருங்கும் தெய்வ
முன்றில் வலம் கொண்டு நேர் சென்று முன்னாள்
படியின் மறை அருச்சித்துக் காப்புச் செய்த பைம்
பொன் மணித் திருவாயில் பாங்கு வந்தார். 579
அரு மறைகள் திருக்காப்புச் செய்து வைத்த அக்கதவம்
திறந்திட அம் மறைகள் ஓதும்
பெருகிய அன்புடை அடியார் அணைந்து நீக்கப்
பெறாமையினால் அன்று முதலாகப் பின்னை
ஒரு புடை ஓர் வாயில் அமைத்து ஒழுகும்
தன்மை உள்ளபடி கேட்டருளி உயர்ந்த சண்பைத்
திருமறையோர் தலைவர் வியப்பு எய்தி
நின்று திருநாவுக்கரசருக்குச் செப்புகின்றார். 580
அப்பரே வேத வனத்து ஐயர் தம்மை
அபிமுகத்துத் திருவாயில் திறந்து புக்கே
எப்பரிசும் நாம் இறைஞ்ச வேண்டும் நீரே
இவ்வாயில் திருக்காப்பு நீங்கு மாறு
மெய்ப் பொருள் வண் தமிழ் பாடி அருளும் என்ன
விளங்கு மொழி வேந்தர் அது மேற்கொண்டு என்னை
இப்பரிசு நீர் அருளிச் செய்தீர் ஆகில் இது
செய்வேன் எனப் பதிகம் எடுத்துப் பாட. 581
பாடிய அப் பதிகப் பாட்டான பத்தும் பாடல்
நிரம்பிய பின்னும் பைம் பொன் வாயில்
சேடு உயர் பொற்கதவு திருக் காப்பு
நீங்காச் செய்கையினால் வாகீசர் சிந்தை நொந்து
நீடு திருக் கடைக் காப்பில் அரிது வேண்டி
நின்று எடுக்கத் திருக்காப்பு நீக்கம் காட்ட
ஆடிய சேவடியார் தம் அடியார் விண்ணோர்
ஆர்ப்பு எழுந்த அகிலாண்டம் அனைத்தும் மூழ்க. 582
மற்றது கண்ட போதே
வாக்கின் மன்னவரை நோக்கிப்
பொற்புறு புகலி மன்னர்
போற்றிட அவரும் போற்றி
அற்புத நிலையினார்கள் அணி
திரு மறைக்காடு ஆளும்
கொற்றவர் கோயில் வாயில்
நேர்வழி குறுகிப் புக்கார். 583
கோயில் உட்புகுவார் உச்சி
குவித்த செங்கைகளோடும்
தாயிலும் இனிய தங்கள்
தம்பிரானாரைக் கண்டார்
பாயும் நீர் அருவி கண்கள்
தூங்கிடப் படியின் மீது
மேயின மெய்யர் ஆகி
விதிர்ப்புற்று விரைவின் வீழ்ந்தார். 584
அன்பினுக்கு அளவு காணார்
ஆனந்த வெள்ளம் மூழ்கி
என்பு நெக்கு உருக நோக்கி
இறைஞ்சி நேர் விழுந்து நம்பர்
முன்பு நிற்பதுவும் ஆற்றார்
மொழி தடுமாற ஏத்தி
மின்புரை சடையார் தம்மைப்
பதிகங்கள் விளம்பிப் போந்தார். 585
புறம்பு வந்து அணைந்த போது
புகலி காவலரை நோக்கி
நிறம் கிளர் மணிக் கபாடம்
நீக்கமும் அடைப்பும் நிற்கத்
திறிந்தவாறு அடைக்கப்பாடி அருளும்
நீர் என்றார் தீய
மறம் புரி அமணர் செய்த
வஞ்சனை கடக்க வல்லார். 586
அன்று அரசு அருளிச்
செய்ய அருமறைப் பிள்ளையாரும்
வென்றி வெள் விடையார் தம்மை
விருப்பினால் சதுரம் என்னும்
இன் தமிழ்ப் பதிகப் பாடல்
இசைத்திட இரண்டு பாலும்
நின்ற அக் கதவு
காப்பு நிரம்பிட அடைத்ததன்றே. 587
அடைத்திடக் கண்டு சண்பை
ஆண்டகையாரும் அஞ்சொல்
தொடைத் தமிழாளி யாரும் தொழுது
எழத் தொண்டர் ஆர்த்தார்
புடைப்பு ஒழிந்து இழிந்தது எங்கும்
பூமழை புகலி வேந்தர்
நடைத் தமிழ்ப் பதிக மாலை
நிரம்பிட நவின்று போற்றி. 588
அத்திரு வாயில் தன்னில் அற்றை
நாள் தொடங்கி நேரே
மெய்த்திரு மறைகள் போல
மேதினி புக்குப் போற்ற
வைத்து எதிர் வழக்கம் செய்த
வரம்பு இலாப் பெருமையோரை
கைத்தலம் குவித்துத் தாழ்ந்து வாழ்ந்தது
கடல் சூழ் வையம். 589
அருமறை ஆன எல்லாம் அகல்
இரு விசும்பில் ஆர்த்துப்
பெருமையின் முழங்கப் பஞ்ச
நாதமும் பிறங்கி ஓங்க
இரு பெரும் தகையோர் தாமும்
எதிர் எதிர் இறைஞ்சிப் போந்து
திரு மடங்களின் முன் புக்கார்
செழும்பதி விழவு கொள்ள. 590
வேதங்கள் எண்ணில் கோடி மிடைந்து
செய் பணியை மிக்க
ஏதங்கள் நம்பால் நீப்பார்
இருவரும் செய்து வைத்தார்
நாதம் கொள் வடிவாய் நின்ற
நதி பொதி சடையார் செய்ய
பாதங்கள் போற்றும் மேலோர்
பெருமையார் பகரும் நீரார். 591
திருமறை நம்பர் தாம் முன்பு
அருள் செய்த அதனைச் செப்பும்
ஒருமையில் நின்ற தொண்டர்
தம்பிரானார் பால் ஒக்க
வரும் அருள் செய்கை தாமே
வகுத்திட வல்லோர் என்றால்
பெரு மறையுடன் மெய்த் தொண்டர்க்கு
இடையீடு பெரிதாம் அன்றே. 592
இவ்வகை திருமறைக் காட்டு
இறையவர் அருளை உன்னி
மெய் வகை தெரிந்த வாக்கின்
வேந்தர் தாம் துயிலும் போதில்
மை வளர் கண்டர் சைவ
வேடத்தால் வந்து வாய்மூர்
அவ்விடை இருத்தும் அங்கே வா
என்று அங்கு அருளிப் போக. 593
கண்ட அப்போதே கைகள் குவித்து
உடன் கடிது செல்வார்
மண்டிய காதலோடு மருவுவார்
போன்றும் காணார்
எண்திசை நோக்குவாருக்கு எய்துவார்
போல எய்தா
அண்டர் தம்பிரானார் தம் பின்
போயினார் ஆர்வத் தோடும். 594
அங்கு அவர் ஏகச்
சண்பை ஆண்டகையாரும் அப்பர்
எங்கு உற்றது என்று
கேட்ப எய்தினார் திருவாய்மூரில்
பொங்கிய காதலால் என்று
உரைத்திடப் போன தன்மை
சங்கை உற்று என்கொல் என்று
தாமும் அங்கு அணையப் போந்தார். 595
அந்நிலை அணைந்த போதில்
அம்பிகை உடனே கூட
மன்னிய ஆடல் காட்டத் தளர்
இளவள ரும் பாடிச்
சென்னியால் வணங்கி வாய்மூர்
அரசொடும் சென்று புக்கு அங்கு
இன் இயல்பு உற முன்
கூடி இருவரும் போற்றி செய்தார். 596
நீடு சீர்த் திருவாய் மூரில்
நிலவிய சிவனார் தம்மைப்
பாடு சொற் பதிகம் தன்னால்
பரவி அப் பதியில் வைகிக்
கூடு மெய் அன்பு பொங்க
இருவரும் கூடி மீண்டு
தேடு மா மறைகள் கண்டார்
திரு மறைக்காடு சேர்ந்தார். 597
சண்பை நாடு உடைய பிள்ளை
தமிழ் மொழித் தலைவரோடு
மண் பயில் சீர்த்திச் செல்வ
மா மறைக் காட்டு வைகிக்
கண் பயில் நெற்றியார் தம்
கழல் இணை பணிந்து போற்றிப்
பண் பயில் பதிகம் பாடிப்
பரவி அங்கு இருந்தார் அன்றே. 598
இவ் வகை இவர்கள் அங்கண்
இருந்தனர் ஆக இப்பால்
செய் வகை இடையே தப்பும்
தென்னவன் பாண்டி நாட்டு
மெய் வகை நெறியில் நில்லா
வினை அமண் சமயம் மிக்குக்
கை வகை முறைமைத் தன்மை
கழிய முன் கலங்கும் காலை. 599
தென்னவன் தானும் முன்
செய் தீவினைப் பயத்தினாலே
அந் நெறிச் சார்வு தன்னை
அறம் என நினைந்து நிற்ப
மன்னிய சைவ வாய்மை
வைதிக வழக்கம் ஆகும்
நன் நெறி திரிந்து மாறி
நவை நெறி நடந்தது அன்றே. 600
பூழியர் தமிழ் நாட்டு உள்ள
பொருவில் சீர்ப் பதிகள் எல்லாம்
பாழியும் அருகர் மேவும்
பள்ளிகள் பலவும் ஆகிச்
சூழ் இருள் குழுக்கள் போலத்
தொடை மயில் பீலி யோடு
மூழி நீர் கையில் பற்றி
அமணரே ஆகி மொய்ப்ப. 601
பறிமயிர்த் தலையும் பாயும்
பீலியும் தடுக்கு மேனிச்
செறியுமுக் குடையும் ஆகித்
திரிபவர் எங்கும் ஆகி
அறியும் அச் சமய நூலின்
அளவினில் அடங்கிச் சைவ
நெறியினில் சித்தம் செல்லா
நிலைமையில் நிகழும் காலை. 602
வரிச் சிலைத் தென்னவன் தான்
உய்வதற்கு வளவர் கோமான்
திரு உயிர்த்து அருளும்
செல்வப் பாண்டிமா தேவியாரும்
குரை கழல் அமைச்சனாராங்
குலச் சிறையாரும் என்னும்
இருவர் தம் பாங்கும் அன்றிச்
சைவம் அங்கு எய்தாதாக. 603
ஆங்கு அவர் தாங்கள் அங்கண் அரும்
பெறல் தமிழ் நாடு உற்ற
தீங்கினுக்கு அளவு தேற்றாச்
சிந்தையில் பரிவு கொண்டே
ஓங்கிய சைவ வாய்மை
ஒழுக்கத்தில் நின்ற தன்மை
பூங்கழல் செழியன் முன்பு புலப்படா
வகை கொண்டு உய்த்தார். 604
இந் நெறி ஒழுகு கின்றார்
ஏழ் உலகு உய்ய வந்த
மன்னிய புகலி வேந்தர்
வைதிக வாய்மைச் சைவச்
செந்நெறி விளக்கு கின்றார்
திரு மறைக்காடு சேர்ந்த
நல்நிலை கன்னி நாட்டு
நல்வினைப் பயத்தால் கேட்டார். 605
கேட்ட அப்பொழுதே சிந்தை கிளர்ந்து
எழு மகிழ்ச்சி பொங்க
நாள் பொழுது அலர்ந்த செந்தாமரை
நகை முகத்தர் ஆகி
வாள் படை அமைச்சனாரும்
மங்கையர்க்கரசியாரும்
சேட் படு புலத்தாரேனும் சென்று
அடி பணிந்தார் ஒத்தார். 606
காதலால் மிக்கோர் தாங்கள்
கை தொழும் கருத்தினாலே
போது அவிழ் சோலை வேலிப்
புகலி காவலனார் செய்ய
பாதங்கள் பணிமின் என்று
பரிசன மாக்கள் தன்மை
மா தவம் சுருதி செய்த
மா மறைக் காட்டில் விட்டார். 607
ஆங்கவர் விட முன்
போந்த அறிவுடைமாந்தர் அங்கண்
நீங்கி வண்தமிழ் நாட்டு எல்லை
பிற்பட நெறியின் ஏகி
ஞாங்கர் நீர் நாடும் காடும்
நதிகளும் கடந்து வந்து
தேன் கமழ் கைதை நெய்தல்
திருமறைக் காடு சேர்ந்தார். 608
திருமறைக்காடு நண்ணிச் சிரபுர
நகரில் வந்த
அருமறைப் பிள்ளையார் தாம்
அமர்ந்து இனிதருளும் செல்வப்
பெருமடத்து அணைய வந்து
பெருகிய விருப்பில் தாங்கள்
வரு முறைத் தன்மை எல்லாம்
வாயில் காவலர்க்குச் சொன்னார். 609
மற்றவர் சென்று புக்கு வளவர்
கோன் மகளார் தென்னர்
கொற்றவன் தேவி யாரும்
குலச்சிறையாரும் ஏவப்
பொற்கழல் பணிய வந்தோம் எனச்
சிலர் புறத்து வந்து
சொற்றனர் என்று போற்றித்
தொழுது விண்ணப்பம் செய்தார். 610
புகலி காவலர் தாம் கேட்டுப்
பொருவிலா அருள் முன் கூர
அகம் மலர்ந்து அவர்கள் தம்மை
அழையும் என்று அருளிச் செய்ய
நகை முகச் செவ்வி நோக்கி
நல்தவ மாந்தர் கூவத்
தகவுடை மாந்தர் புக்குத்
தலையினால் வணங்கி நின்றார். 611
நின்றவர் தம்மை நோக்கி நிகரில்
சீர்ச் சண்பை மன்னர்
மன்றல் அங்குழலியாராம் மானியார்
தமக்கும் மானக்
குன்று என நின்ற மெய்ம்மை
குலச் சிறையார் தமக்கும்
நன்று தான் வினவக் கூறி
நல் பதம் போற்றுவார்கள். 612
கன்னி நாடு அமணர் தம்பால்
கட்டு அழிந்து இழிந்து தங்கள்
மன்னனும் அவர்கள் மாயத்து
அழுந்த மா தேவியாரும்
கொன்னவில் அயில் வேல்
வென்றிக் குலச்சிறையாரும் கூடி
இந்நிலை புகலி வேந்தர்க்கு இயம்பும்
என்று இறைஞ்சி விட்டார். 613
என்று அவர்கள் விண்ணப்பம் செய்த பின்னர்
ஏறு உயர்த்த சிவபெருமான் தொண்டர்எல்லாம்
நன்று நமை ஆள் உடைய நாதன் பாதம்
நண்ணாத எண்ணில் அமண் குண்டர் தம்மை
வென்றருளி வேதநூல் நெறியே ஆக்கி
வெண்ணீறு வேந்தனையும் இடுவித்து அங்கு
நின்ற செயல் சிவனடியார் செயலே ஆக நினைந்து
அருள வேண்டும் என நின்று போற்ற. 614
மற்று அவர்கட்கு அருள் புரிந்து பிள்ளையாரும்
வாகீச முனிவருடன் கூடச் சென்று
பெற்றம் உயர்த்தவர் பாதம் பணிந்து போந்து
பெரிய திருக் கோபுரத்துள் இருந்து தென் நாடு
உற்ற செயல் பாண்டிமா தேவியாரும் உரிமை
அமைச்சரும் உரைத்து விட்ட வார்த்தை
சொற்றனி மன்னவருக்குப் புகலி மன்னர்
சொல்லி எழுந்தருளுதற்குத் துணிந்தபோது. 615
அரசு அருளிச் செய்கிறார் பிள்ளாய் அந்த
அமண் கையர் வஞ்சனைக்கு ஓர் அவதி இல்லை
உரை செய்வது உளது உறு கோள் தானும் தீய
எழுந்தருள உடன்படுவது ஒண்ணாது என்ன
பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால்
பழுது அணையாது எனப் பகர்ந்து பரமர் செய்ய
விரை செய் மலர்த்தாள் போற்றிப் புகலி
வேந்தர் வேயுறு தோளியை எடுத்து விளம்பினாரே. 616
சிரபுரத்துப் பிள்ளையார் அருளிச் செய்த
திருப்பதிகம் கேட்டதற்பின் திருந்து நாவுக்கு
அரசும் அதற்கு உடன்பாடு செய்து தாமும்
அவர் முன்னே எழுந்தருள அமைந்த போது
புரம் எரித்தார் திருமகனார் அப்பர் இந்தப்
புனல் நாட்டில் எழுந்தருளி இருப்பீர் என்று
கரகமலம் குவித்து இறைஞ்சித் தவிர்ப்ப வாக்கின்
காவலரும் தொழுது அரிதாம் கருத்தில் நேர்ந்தார். 617
வேதம் வளர்க்கவும் சைவம் விளக்குதற்கும்
வேதவனத்து அருமணியை மீண்டும் புக்குப்
பாதம் உறப் பணிந்து எழுந்து பாடிப் போற்றிப்
பரசி அருள் பெற்று விடை கொண்டு போந்து
மாதவத்து வாகீசர் மறாத வண்ணம் வணங்கி
அருள் செய்து விடை கொடுத்து மன்னும்
காதலினால் அருமையுறக் கலந்து நீங்கிக்
கதிர்ச் சிவிகை மருங்கு அணைந்தார் காழி நாதர். 618
திருநாவுக் கரசரும் அங்கு இருந்தார் இப்பால்
திருஞான சம்பந்தர் செழுநீர் முத்தின்
பெருநாமச் சிவிகையின் மீது ஏறிப் பெற்றம்
உயர்த்தவர் தாள் சென்னியின் மேல் பேணும் உள்ளத்து
ஒரு நாமத்து அஞ்சு எழுத்தும் ஓதி வெண்ணீற்று
ஒளி விளங்கும் திருமேனி தொழுதார் நெஞ்சில்
வருநாமத்து அன்பு உருகும் கடலாம் என்ன
மாதவர் ஆர்ப்பு ஒலி வையம் நிறைந்தது அன்றே. 619
பொங்கி எழும் திருத்தொண்டர் போற்று
எடுப்பார் நால் திசையும்
மங்கல தூரியம் தழங்க மறை
முழங்க மழை முழங்கும்
சங்க படகம் பேரி
தாரை காளம் தாளம்
எங்கும் எழுந்து எதிர் இயம்ப
இரு விசும்பு கொடி தூர்ப்ப. 620
மலர் மாரி பொழிந்து இழிய
மங்கல வாழ்த்து இனிது இசைப்ப
அலர் வாசப் புனல் குடங்கள்
அணி விளக்குத் தூபமுடன்
நிலை நீடு தோரணங்கள் நிரைத்து
அடியார் எதிர் கொள்ளக்
கலை மாலை மதிச் சடையார்
இடம் பலவும் கை தொழுவார். 621
தெண் திரை சூழ் கடல்
கானல் திரு அகத்தியான் பள்ளி
அண்டர் பிரான் கழல் வணங்கி
அருந்தமிழ் மா மறை பாடிக்
கொண்டல் பயில் மணல் கோடு
சூழ் கோடிக் குழகர் தமைத்
தொண்டருடன் தொழுது அணைந்தார்
தோணிபுரத் தோன்றலார். 622
கண் ஆர்ந்த திரு நுதலார்
மகிழ்ந்த கடிக்குளம் இறைஞ்சி
எண் ஆர்ந்த திரு இடும்பா வனம்
ஏத்தி எழுந்தருளி
மண் ஆர்ந்த பதி பிறவும்
மகிழ் தரும் அன்பால் வணங்கிப்
பண் ஆர்ந்த தமிழ் பாடிப்
பரவியே செல்கின்றார். 623
திரு உசாத் தானத்துத்
தேவர் பிரான் கழல் பணிந்து
மருவிய செந்தமிழ்ப் பதிகமால்
போற்றும் படி பாடி
இரு வினையும் பற்று
அறுப்பார் எண்ணிறந்த தொண்டருடன்
பெருகு விருப்பினர் ஆகிப்
பிற பதியும் பணிந்தணைவார். 624
கருங்கழி வேலைப் பாலைக்
கழிநெய்தல் கடந்தருளித்
திருந்திய சீர்ப் புனல் நாட்டுத்
தென் மேற்பால் திசை நோக்கி
மருங்கு மிடை தடஞ் சாலி
மாடு செறி குலத்தெங்கு
நெருங்கி வளர் கமுகு உடுத்த
நிறை மருத வழிச் சென்றார். 625
சங்கங்கள் வயல் எங்கும் சாலி
கழைக் கரும்பு எங்கும்
கொங்கு எங்கும் நிறை கமலக்
குளிர் வாசத் தடம் எங்கும்
அங்கங்கே உழவர் குழாம்
ஆர்க்கின்ற ஒலி எங்கும்
எங்கெங்கும் மலர்ப் படுகர்
இவை கழிய எழுந்தருளி. 626
தடம் எங்கும் புனல் குடையும்
தையலார் தொய்யில் நிறம்
இடம் எங்கும் அந்தணர்கள்
ஓதுகிடையாக நிலை
மடம் எங்கும் தொண்டர் குழாம்
மனை எங்கும் புனைவதுவை
நடம் எங்கும் ஒலி ஓவா
நற்பதிகள் அவை கடந்து. 627
நீர் நாடு கடந்து அருளி
நெடும் புறவில் குறும்புதல்கள்
கார் நாடு முகை முல்லைக்
கடிநாறு நிலம் கடந்து
போர் நாடுஞ் சிலை மறவர்
புன் புலவைப் பிடை போக்கிச்
சீர் நாடு தென் பாண்டி
நன்னாடு சென்று அணைவார். 628
மன்றல் மலர்ப் பிறங்கல் மருங்கு
எறிந்து வரும் நதிகள் பல
சென்று அணைந்து கடந்து ஏறித்
திரி மருப்பின் கலை புணர்மான்
கன்று தெறித்தன உகைக்கும் கான
அதர் கடந்து அணைந்தார்
கொன்றை நறும் சடை முடியார்
மகிழ்ந்த திருக்கொடுங் குன்றம். 629
கொடுங் குன்றத்து இனிது அமர்ந்த
கொழும்பவளச் செழுங் குன்றை
அடும் குன்றம் உரித்தாரை வணங்கி
அரும் தமிழ் பாடி
நெடும் குன்றும் படர் காணும்
நிறை நாடும் கடந்து மதி
தொடும் குன்ற மதில் மதுரைத்
தொன் நகர் வந்து அணைகின்றார். 630
இந்நிலை இவர் வந்து எய்த
எண் பெரும் குன்றம் மேவும்
அந்நிலை அமணர் தங்கள் கழிவு
முன் சாற்றல் உற்றுப்
பல்முறை வெருக் கொண்டு
உள்ளம் பதைப்பத்தீக் கனாக்களோடும்
துன் நிமித்தங்கள் அங்கு
நிகழ்ந்தன சொல்லல் உற்றாம். 631
பள்ளிகள் மேலும் மாடு பயில்
அமண் பாழி மேலும்
ஓள்ளிதழ் அசோகின் மேலும் உணவு
செய் கவளம் கையில்
கொள்ளு மண்டபங்கள் மேலும்
கூகையோடு ஆந்தை தீய
புள் இனம் ஆன தம்மில்
பூசல் இட்டு அழிவு சாற்றும். 632
பீலியும் தடுக்கும் பாயும்
பிடித்தகை வழுவி வீழக்
கால்களும் தடுமாறாடிக் கண்களும்
இடமே ஆடி
மேல் வரும் அழிவுக்கு ஆக
வேறு காரணமும் காணார்
மால் உழந்து அறிவு கெட்டு
மயங்கினர் அமணர் எல்லாம். 633
கந்தியர் தம்மில் தாமே கனன்று
எழு கலாங்கள் கொள்ள
வந்தவாறு அமணர் தம்மில் மாறு
கொண்டு ஊறு செய்ய
முந்தைய உரையில் கொண்ட
பொறை முதல் வைப்பும் விட்டுச்
சிந்தையில் செற்ற முன்னாத் தீக்
குணம் தலை நின்றார்கள். 634
இப்படி அமணர் வைகும் எப்
பெயர்ப் பதியும் எய்தும்
ஒப்பில் உற்பாதம் எல்லாம்
ஒருவரின் ஒருவர் கூறி
மெய்ப்படு தீக்கனாவும் வேறு
வேறு ஆகக் கண்டு
செப்புவான் புறத்து உளோரும்
தென்னவன் மதுரை சேர்ந்தார். 635
அந்நகர் தன்னில் வாழ்வார் புறம்பு
நின்று அணைவார் கூடி
மன்னவன் தனக்கும் கூறி
மருண்ட உள்ளத்தர் ஆகித்
துன்னிய அழுக்கு மெய்யில்
தூசிலார் பலரும் ஈண்டி
இன்னன கனவு கண்டோம் என
எடுத்து இயம்பல் உற்றார். 636
சீர் மலி அசோகு தன் கீழ்
இருந்த நம் தேவர் மேலே
வேரொடு சாய்ந்து வீழக் கண்டனம்
அதன் பின் ஆக
ஏர் கொள் முக்குடையும் தாமும்
எழுந்து கை நாற்றிப் போக
ஊர் உளோர் ஓடிக் காணக்
கண்டனம் என்று உரைப்பார். 637
குண்டிகை தகர்த்துப் பாயும்
பீறியோர் குரத்தி ஓடப்
பண்டிதர் பாழி நின்றும் கழுதை
மேல் படர்வார் தம்பின்
ஒண்தொடி இயக்கி யாரும் உளை
இட்டுப் புலம்பி ஓடக்
கண்டனம் என்று சொன்னார்
கையறு கவலை உற்றார். 638
கானிடை நட்டம் ஆடும் கண்
நுதல் தொண்டர் எல்லாம்
மீனவன் மதுரை தன்னில்
விரவிடக் கண்டோம் என்பார்
கோன் அவன் தானும் வெய்ய
கொடும் தழல் முழுகக் கண்டோம்
ஆனபின் எழவும் கண்டோம்
அதிசயம் இதுவாம் என்பார். 639
மழவிடை இளம் கன்று ஒன்று
வந்து நம் கழகம் தன்னை
உழறிடச் சிதறி ஓடி
ஒருவரும் தடுக்க அஞ்சி
விழ ஒரு புகலும் இன்றி
மேதினி தன்னை விட்டு
நிழல் இலா மரங்கள் ஏறி
நின்றிடக் கண்டோம் என்பர். 640
ஆவது என் பாவிகாள் இக்
கனாத்திறம் அடிகள் மார்க்கு
மேவிய தீங்கு தன்னை
விளைப்பது திடமே என்று
நோவுறு மனத்தர் ஆகி நுகர்
பெரும் பதமும் கொள்ளார்
யாவது செயல் என்று எண்ணி
இடர் உழன்று அழுங்கினார்கள். 641
அவ்வகை அவர்கள் எல்லாம்
அந்நிலைமையர்கள் ஆகச்
சைவ நன் மரபில் வந்த தட
மயில் மட மென் சாயல்
பை வளர் அரவேர் அல்குல்
பாண்டி மா தேவியார்க்கும்
மெய் வகை அமைச்சனார்க்கும் விளங்கும்
நன் நிமித்தம் மேன் மேல். 642
அளவு இலா மகிழ்ச்சி காட்டும்
அரும் பெரும் நிமித்தம் எய்த
உள மகிழ் உணரும் காலை
உலகெலாம் உய்ய வந்த
வளர் ஒளி ஞானம் உண்டார்
வந்து அணைந்தருளும் வார்த்தை
கிளர்வுறும் ஓகை கூறி
வந்தவர் மொழியக் கேட்டார். 643
அம்மொழி விளம்பினோர்க்கு
வேண்டுவ அடைய நல்கி
மெய்ம்மையில் விளங்கு காதல்
விருப்புறு வெள்ளம் ஓங்கத்
தம்மையும் அறியா வண்ணம்
கை மிக்குத் தழைத்துப் பொங்கி
விம்மிய மகிழ்ச்சி கூர
மேவிய சிறப்பின் மிக்கார். 644
மங்கையர்க் கரசியார் பால் வந்து
அடி வணங்கி நின்ற
கொங்கலர் தெரியலாராம் குலச்சிறை
யாரை நோக்கி
நங்கள் தம்பிரானாராய ஞான
போனகர் முன்பு எய்தி
இங்கு எழுந்தருள உய்ந்தோம் என
எதிர் கொள்ளும் என்றார். 645
மன்றலங் குழலினாரை வணங்கிப்
போந்த அமைச்சனாரும்
வென்றிவேல் அரசனுக்கும் உறுதியே
என விரைந்து
பொன் திகழ் மாட வீதி
மதுரையின் புறத்துப் போகி
இன் தமிழ் மறை தந்தாரை
எதிர்கொள எய்தும் காலை. 646
அம்புய மலராள் போல்வார்
ஆலவாய் அமர்ந்தார் தம்மைக்
கும்பிட வேண்டும் என்று
கொற்றவன் தனக்கும் கூறித்
தம் பரிசனங்கள் சூழத்
தனித் தடையோடும் சென்று
நம்பரை வணங்கித் தாமும்
நல் வரவேற்று நின்றார். 647
திரு நிலவு மணி முத்தின்
சிவிகையின் மேல் சேவித்து
வரு நிலவு தரு மதி போல்
வளர் ஒளி வெண் குடை நிழற்றப்
பெருகு ஒளிய திரு நீற்றுத்
தொண்டர் குழாம் பெருகிவர
அருள் பெருக வரு(ம்) ஞானத்து
அமுது உண்டார் அணைகின்றார். 648
துந்துபிகள் முதலாய
தூரியங்கள் கிளராமே
அந்தணராம் மாதவர்கள் ஆயிரம்
மா மறை எடுப்ப
வந்து எழும் மங்கல நாத
மாதிரம் உட்பட முழங்கச்
செந்தமிழ் மாருதம் எதிர்
கொண்டு எம்மருங்கும் சேவிப்ப. 649
பண்ணிய வஞ்சனைத் தவத்தால்
பஞ்சவன் நாட்டிடைப் பரந்த
எண்ணில் அமண் எனும்
பாவ இருஞ்சேனை இரிந்து ஓட
மண் உலகமே அன்றி வான்
உலகம் செய்த பெரும்
புண்ணியத்தின் படை எழுச்சி போல்
எய்தும் பொலிவு எய்த. 650
துன்னும் முழு உடற்றுகளால்
சூழும் உணர்வின் இற்றுகளால்
அன்னெறியில் செறிந்து அடைந்த
அமண் மாசு கழுவுதற்கு
மன்னி ஒளிர் வெண்மையினால்
தூய்மையினால் வழுதியர் தம்
கன்னி நாட்டிடைக் கங்கை அணைந்தது
எனும் கவின் காட்ட. 651
பானல் வயல் தமிழ் நாடு
பழி நாடும்படி பரந்த
மானம் இலா அமண் என்னும்
வல் இருள் போய் மாய்வதனுக்கு
ஆன பெருகு ஒளிப்பரப்பால் அண்டம்
எலாம் கொண்டதொரு
ஞான மணி விளக்கு எழுந்து
வருவது என நலம் படைப்ப. 652
புரசை வயக் கடக்களிற்றுப் பூழியர்
வண் தமிழ் நாட்டுத்
தரை செய் தவப் பயன் விளங்கச்
சைவ நெறி தழைத்து ஓங்க
உரை செய்திருப்பேர் பலவும் ஊது
மணிச் சின்னம் எலாம்
பரசமய கோளரி வந்தான்
என்று பணிமாற. 653
இப்பரிசு அணையும் சண்பையர் பெருமான்
எழுந்தருளும் பொழுது இசைக்கும்
ஒப்பில் நித்திலப் பொன் தனிப் பெரும் காளம்
உலகு உய்ய ஒலித்து எழும் ஓசை
செப்பரும் பெருமைக் குலச் சிறையார் தம்
செவி நிறை அமுது எனத் தேக்க
அப்பொழுது அறிந்து தலத்தின் மேல் பணிந்தே
அளப்பு அரும் களிப்பினர் ஆனார். 654
அஞ்சலி குவித்த கரங்களும் தலைமேல்
அணைந்திடக் கடிது சென்று அணைவார்
நஞ்சு அணி கண்டர் தம் திருமகனார்
உடன் வரும் நல்தவக் கடலை
நெஞ்சினில் நிறைந்த ஆர்வம் முன் செல்லக்
கண்டு நீள் நிலத்திடைத் தாழ்ந்து
பஞ்சவர் பெருமான் மந்திரித் தலைவர்
பாங்குற அணைந்து முன் பணிந்தார். 655
நிலமிசைப் பணிந்த குலச் சிறையாரை
நீடிய பெரும் தவத் தொண்டர்
பலரும் முன் அணைந்து வணங்கி மற்று
அவர்தாம் படியின் நின்று எழாவகை கண்டு
மலர் மிசைப் புத்தேள் வழிபடும்
புகலி வைதிக சேகரர் பாதம்
குலவி இங்கு அணைந்தார் தென்னவன்
அமைச்சர் குலச்சிறையார் எனக் கூற. 656
சிரபுரச் செல்வர் அவர் உரை
கேட்டுத் திருமுகத் தாமரை மலர்ந்து
விரவு ஒளி முத்தின் சிவிகை நின்று
இழிந்து விரைந்து சென்றவர் தமை அணைந்து
கரகமலங்கள் பற்றியே எடுப்பக் கை
தொழுது அவரும் முன் நிற்ப
வரமிகு தவத்தால் அவரையே நோக்கி
வள்ளலார் மதுர வாக்கு அளிப்பார். 657
செம்பியர் பெருமான் குல மகளார்க்கும்
திருந்திய சிந்தையீர் உமக்கும்
நம் பெருமான் தன் திருவருள் பெருகும்
நன்மை தான் வாலிதே என்ன
வம்பு அலர் அலங்கல் மந்திரி யாரும்
மண் மிசைத் தாழ்ந்து அடி வணங்கித்
தம் பெரும் தவத்தின் பயன்
அனையார்க்குத் தன்மையாம் நிலை உரைக்கின்றார். 658
சென்ற காலத்தின் பழுது இலாத் திறமும்
இனி எதிர் காலத்தின் சிறப்பும்
இன்று எழுந்தருளப் பெற்ற பேறு
இதனால் எற்றைக்கும் திருவருள் உடையேம்
நன்றியில் நெறியில் அழுந்திய நாடும்
நற்றமிழ் வேந்தனும் உய்ந்து
வென்றி கொள் திருநீற்று ஒளியினில்
விளங்கும் மேன்மையும் படைத்தனம் என்பார். 659
இங்கு எழுந்தருளும் பெருமை கேட்டருளி
எய்துதற்கு அரிய பேறு எய்தி
மங்கையர்க் கரசியாரும் நம்முடைய
வாழ்வு எழுந்தருளியது என்றே
அங்கு நீர் எதிர்சென்று அடிபணிவீர்
என்றருள் செய்தார் எனத் தொழுதார்வம்
பொங்கிய களிப்பால் மீளவும் பணிந்து
போற்றினார் புரவலன் அமைச்சர். 660
ஆங்ஙனம் போற்றி அடி பணிந்தவர்
மேல் அளவுஇலா அருள்புரி கருணை
தாங்கிய மொழியால் தகுவன விளம்பித்
தலை அளித்து அருளும் அப்பொழுதில்
ஓங்கு எயில் புடைசூழ் மதுரை தோன்றுதலும்
உயர் தவத் தொண்டரை நோக்கி
ஈங்கு நம் பெருமான் திரு ஆலவாய்
மற்று எம்மருங்கினது என வினவ. 661
அன்பராய் அவர் முன் பணிந்த சீர்
அடியார் அண்ணலார் அடி இணை வணங்கி
முன்பு நின்று எடுத்த கைகளால் காட்டி
முருகு அலர் சோலைகள் சூழ்ந்து
மின் பொலி விசும்பை அளக்கும் நீள்
கொடி சூழ் வியன் நெடும் கோபுரம் தோன்றும்
என்பு அணி அணிவார் இனிது அமர்ந்து
அருளும் திருவாலவாய் இது என்றார். 662
தொண்டர்தாம் போற்றிக் காட்டிடக் கண்டு
துணைமலர்க் கரம் குவித்தருளி
மண்டு பேரன்பால் மண்மிசைப் பணிந்து
மங்கையர்க்கரசி என்று எடுத்தே
எண் திசையும் பரவும் ஆலவாய் ஆவது
இதுவே என்று இருவர் தம் பணியும்
கொண்டமை சிறப்பித்தருளி நற் பதிகம்
பாடினார் குவலயம் போற்ற. 663
பாடிய பதிகம் பரவியே
வந்து பண்புடை அடியவரோடும்
தேடுமால் அயனுக்கு அரியவர் மகிழ்ந்த
திரு ஆலவாய் மருங்கு அணைந்து
நீடுயர் செல்வக் கோபுரம் இறைஞ்சி
நிறை பெரு விருப்புடன் புக்கு
மாடு சூழ் வலம் கொண்டு உடையவர்
கோயில் மந்திரியாருடன் புகுந்தார். 664
ஆளும் அங்கணர் ஆலவாய்
அமர்ந்து இனிது இருந்த
காள கண்டரைக் கண்களின்
பயன் பெறக் கண்டு
நீள வந்து எழும் அன்பினால்
பணிந்து எழ நிறையார்
மீளவும் பல முறை நிலம்
உற விழுந்து எழுவார். 665
அங்கம் எட்டினும் ஐந்தினும்
அளவு இன்றி வணங்கிப்
பொங்கு காதலின் மெய்ம்
மயிர் புளகமும் பொழியும்
செங்கண் நீர் தரும் அருவியும்
திகழ் திரு மேனி
எங்கும் ஆகி நின்று
ஏத்தினார் புகலியர் இறைவர். 666
நீல மா மிடற்று
ஆலவாயான் என நிலவும்
மூலம் ஆகிய திரு இருக்குக்
குறள் மொழிந்து
சீல மாதவத் திருத்
தொண்டர் தம்மொடும் திளைத்தார்
சாலும் மேன்மையில் தலைச்சங்கப்
புலவனார் தம்முன். 667
சேர்த்தும் இன்னிசைப் பதிகமும்
திருக்கடைக் காப்புச்
சாத்தி நல்லிசைத் தண் தமிழ்ச்
சொல் மலர் மாலை
பேர்த்தும் இன்புறப் பாடி வெண்
பிறை அணி சென்னி
மூர்த்தியார் கழல் பரவியே
திருமுன்றில் அணைய. 668
பிள்ளையார் எழுந்தருளி முன்
புகுதும் அப்பொழுது
வெள்ள நீர் பொதி வேணியார்
தமைத் தொழும் விருப்பால்
உள் அணைந்திட எதிர் செலாது
ஒரு மருங்கு ஒதுங்கும்
தெள்ளு நீர் விழித் தெரிவையார்
சென்று முன்பு எய்த. 669
மருங்கின் மந்திரியார் பிள்ளையார்
கழல் வணங்கிக்
கருங்குழல் கற்றை மேல்
குவி கைத்தளிர் உடையார்
பருங்கை யானை வாழ் வளவர்
கோன் பாவையார் என்னப்
பெருங் களிப்புடன் விரைந்து
எதிர் பிள்ளையார் அணைந்தார். 670
தென்னவன் பெருந் தேவியார்
சிவக் கன்றின் செய்ய
பொன்னடிக் கமலங்களில் பொருந்த
முன் விழுந்தார்
மன்னு சண்பையர் வள்ளலார்
மகிழ் சிறந்து அளிக்கும்
இன்னருட் பெரும் சிறப் பொடும்
திருக்கையால் எடுத்தார். 671
ஞான போனகர் எதிர் தொழுது
எழுந்த நல்தவத்து
மானியார் மனக் கருத்து
முற்றியது என மதித்தே
பானலங் கண்கள் நீர்
மல்கப் பவளவாய் குழறி
யானும் என் பதியும் செய்த
தவம் என் கொல் என்றார். 672
யாழின் மென் மொழியார் மொழிந்து
எதிர் கழல் வணங்கக்
காழி வாழ வந்தருளிய
கவுணியர் பிரானும்
சூழும் ஆகிய பர
சமயத்திடைத் தொண்டு
வாழும் நீர்மையீர் உமைக்
காண வந்தனம் என்றார். 673
இன்னவாறு அருள் செய்திடத்
தொழுது அடி வீழ்ந்தார்
மன்னும் மந்திரியார் வரும்
திறம் எலாம் மொழிய
அன்ன மென் நடையார் தமக்கு
அருள் செய்து போக்கித்
துன்னு மெய்த் தொண்டர் சூழ
வந்தருளும் அப் பொழுது. 674
செல்வம் மல்கிய திரு ஆல வாயினில்
பணி செய்து
அல்கு தொண்டர்கள் பிள்ளையார்
மருங்கு அணைந்து இறைஞ்சி
மல்குகார்அமண் இருள்
கெட ஈங்கு வந்து அருள
எல்லையில் தவம் செய்தனம்
என எடுத்து இசைத்தார். 675
அத் திருத் தொண்டர் தங்களுக்கு
அருள் முகம் அளித்து
மெய்த்த காதலின் அவரொடும்
புறத்தினில் மேவிச்
சித்தம் இன்புறும் அமைச்சனார்
திரு மடம் காட்டப்
பத்தர் போற்றிடப் பரிசனத்தொடும்
இனிது அமர்ந்தார். 676
பரவு காதலில் பாண்டிமா
தேவியார் அருளால்
விரவு நண்பொடு குலச் சிறையார்
விருந்து அளிப்பக்
சிரபுரத்து வந்தருளிய செல்வர்
அங்கு இருந்தார்
இரவி மேல்கடல் அணைந்தனன்
எல்லி வந்து அணைய. 677
வழுதி மாநகர் அதனிடை
மாமறைத் தலைவர்
பழுதில் சீர் அடியாருடன்
பகல் வரக் கண்ட
கழுது போல் வரும் கார்
அமண் குண்டர்கள் கலங்கி
இழுது மைஇருட்கு இருள் என
ஈண்டினர் ஒரு பால். 678
அங்கண் மேவிய சமணர்கள்
பிள்ளையார் அமர்ந்த
துங்க மா மடம் தன்னிடைத்
தொண்டர் தம் குழாங்கள்
எங்கும் ஓதிய திருப்பதிகத்து
இசை எடுத்த
பொங்கு பேர் ஒலி
செவிப்புலம் புக்கிடப் பொறாராய். 679
மற்றிவ் வான்பழி மன்னவன்
மாறனை எய்திச்
சொற்றும் என்று தம் சூழ்ச்சியும்
ஒரு படி துணிவார்
கொற்றவன் கடைக் காவலர்
முன் சென்று குறுகி
வெற்றி வேலவர்க்கு எங்களை
விளம்புவீர் என்றார். 680
வாயில் காவலர் மன்னவன்
தனை எதிர் வணங்கி
ஆய மாகி வந்து அடிகள்
மார் அணைந்தனர் என்ன
ஏயினான் அணைவாரென அவரும்
சென்று இசைத்தார்
பாயினால் உடல் மூடுவார்
பதைப்புடன் புக்கார். 681
புக்க போது அவர்
அழிவுறு மனத்திடைப் புலர்ச்சி
மிக்க தன்மையை வேந்தனும்
கண்டு எதிர் வினவி
ஒக்க நீர் திரண்டு அணைவதற்கு
உற்றது என் என்னத்
தக்கது அல்ல தீங்கு
அடுத்தது சாற்றுதற்கு என்றார். 682
ஆவதேல் நுமக்கு அடுத்தது
கூறுவீர் என்று
காவலன் பரிந்து உரைத்தலும்
கார் அமண் கையர்
மாவலாய் உன்தன் மதுரையில்
சைவ வேதியர் தாம்
மேவலால் இன்று கண்டுமுட்டியாம்
என்று விளம்ப. 683
என்று கூறலும் கேட்டு முட்டி
யானும் என்று இயம்பி
நன்று நல் அறம் புரிந்தவா
நான் என்று நகுவான்
கன்றும் உள்ளத்தன் ஆகி
அக் கண்நுதல் அடியார்
இன்று இம்மாநகர் அணைந்தது என்
அவர்கள் யார் என்றான். 684
மாலை வெண் குடை
வளவர் சோணாட்டு வண்புகலிச்
சூல பாணிபால் ஞானம்
பெற்றான் என்று சுருதிப்
பாலன் அன்பர்தம் குழாத்தொடும்
பனி முத்தின் சிவிகை
மேல் அணைந்தனன் எங்களை
வாதினில் வெல்ல. 685
என்று கூறுவார் இத்திறம்
முன்பு தாம் அறிந்தது
ஒன்றும் அங்கு ஒழியா
வகை உரைத்தலும் தென்னன்
மன்றலம் பொழில் சண்பையார்
வள்ளலார் நாமம்
சென்று தன் செவி நிறைத்தலும்
செயிர்த்து முன் சொல்வான். 686
மற்ற மா மறை மைந்தன்
இம் மருங்கு அணைந்தானேல்
உற்ற செய் தொழில் யாது
செய்கோம் என உரைப்பச்
செற்றம் மீக் கொண்ட
சிந்தையும் செய்கையும் உடையோர்
கொற்ற மன்னவன் மொழிக்கு எதிர்
குறித்து உரை செய்வார். 687
வந்த அந்தணன் தன்னை நாம்
வலிது செய்து போக்கும்
சிந்தை அன்றி அச்
சிறுமறையோன் உறை மடத்தில்
வெந்தழல் பட விஞ்சை
மந்திரத் தொழில் விளைத்தால்
இந்த நன்னகர் இடத்திரான்
ஏகும் என்று இசைத்தார். 688
ஆவது ஒன்று இதுவே ஆகில்
அதனையே விரைந்து செய்யப்
போவது என்று அவரைப் போக்கிப்
பொய் பொருளாகக் கொண்டான்
யாவதும் உரையாடாதே
எண்ணத்தில் கவலையோடும்
பூவணை அமளி புக்கான் பொங்கு
எழில் தேவி சேர்ந்தாள். 689
மன்னவன் உரைப்பது இன்றி
இருக்க மா தேவியார்தாம்
என் உயிருக்கு உயிராய் உள்ள
இறைவ நீ உற்றது என்னோ
முன் உள மகிழ்ச்சி இன்றி
முகம் புலர்ந்து இருந்தாய் இன்று
பன்னிய உள்ளத்து எய்தும் பருவரல்
அருள் செய் என்றார். 690
தேவியார் தம்மை நோக்கித்
தென்னவன் கூறுகின்றான்
காவிநீள் கண்ணினாய் கேள்
காவிரி நாட்டில் மன்னும்
தாவில் சீர்க் கழுமலத்தான் சங்கரன்
அருள் பெற்று இங்கு
மேவினான் அடிகள் மாரை
வாதினில் வெல்ல என்று. 691
வெண் பொடி பூசும் தொண்டர்
விரவினார் அவரை எல்லாம்
கண்டு முட்டு அடிகள் மார்கள்
கேட்டு முட்டியானும் காதல்
வண்டுணத் துதைந்த கோதை
மானியே இங்கு வந்த
பண்பு மற்று இதுவேயாகும் பரிசு
வேறு இல்லை என்றான். 692
மன்னவன் உரைப்பக் கேட்டு
மங்கையர்க்கரசியார் தாம்
நின்னிலை இதுவே யாகில்
நீடிய தெய்வத் தன்மை
அன்னவர் வாது செய்தால்
வென்றவர் பக்கம் சேர்ந்து
துன்னுவது உறுதியாகும் சுழிவுறேல்
மன்ன என்றார். 693
சிந்தையில் களிப்பு மிக்குத்
திருக் கழுமலத்தார் வேந்தன்
வந்தவாறு எம்மை ஆள என
வரு மகிழ்ச்சி யோடும்
கொந்தலர் குழலார் போதக் குலச்
சிறையார் அங்கு எய்த
இந்த நன் மாற்றம் எல்லாம் அவர்க்கு
உரைத்து இருந்த பின்னர். 694
கொற்றவன் அமைச்சனாரும் கைதலை
குவித்து நின்று
பெற்றனம் பிள்ளையார் இங்கு அணைந்திடப்
பெறும் பேறு என்பார்
இற்றை நாள் ஈசன் அன்பர்
தம்மை நாம் இறைஞ்சப் பெற்றோம்
மற்று இனிச் சமணர் செய்யும்
வஞ்சனை அறியோம் என்றார். 695
மானியார் தாமும் அஞ்சி
வஞ்சகப் புலையர் தாங்கள்
ஈனமே புரிய வல்லார் செய்வது
என்னாம் என்று எண்ணி
ஞான சம்பந்தர் தம்பால்
நன்மை அல்லாது செய்ய
ஊனம் வந்து அடையில் யாமும்
உயிர் துறந்து ஒழிவது என்றார். 696
இவர் நிலை இதுவே ஆக
இலங்குவேல் தென்னவன் ஆன
அவன் நிலை அதுவாம் அந்நாள்
அருகர் தம் நிலை யாது என்னில்
தவம் மறைந்து அல்ல செய்வார்
தங்கள் மந்திரத்தால் செந்தீ
சிவ நெறி வளர்க்க வந்தார்
திருமடம் சேரச் செய்தார். 697
ஆதி மந்திரம் அஞ்சு
எழுத்து ஓதுவார் நோக்கும்
மாதிரத்தினும் மற்றை மந்திர
விதி வருமே
பூதி சாதனர் மடத்தில்
தாம் புனைந்த சாதனைகள்
சாதியா வகை கண்ட
அமண் குண்டர்கள் தளர்ந்தார். 698
தளர்ந்து மற்று அவர் தாம்
செய்த தீத்தொழில் சரியக்
கிளர்ந்த அச்சம் முன்
கெழுமிய கீழ்மையோர் கூடி
விளங்கு நீள் முடி வேந்தன்
ஈது அறியின் நம் மேன்மை
உளம் கொள்ளான் நமர் விருத்தியும்
ஒழிக்கும் என்று உணர்வார். 699
மந்திரச் செயல் வாய்த்தில
மற்று இனிச் செய்யும்
புந்தியாவது இங்கு இது எனப்
பொதி தழல் கொடு புக்கு
அந்தண் மாதவர் திரு மடப்
புறத்து அயல் இருள் போல்
வந்து தம் தொழில்
புரிந்தனர் வஞ்சனை மனத்தோர். 700
திரு மடப் புறச் சுற்றினில்
தீய பாதகத்தோர்
மருவுவித்த அத்தொழில்
வெளிப்படுதலும் மறுகிப்
பரிசனத்தவர் பதைப்பொடும்
சிதைத்தது நீக்கி
அருகர் இத்திறம் புரிந்தமை
தெளிந்து சென்று அணைவார். 701
கழுமலப் பதிக் கவுணியர்
கற்பகக் கன்றைத்
தொழுது நின்று அமண் குண்டர்
செய் தீங்கினைச் சொன்ன
பொழுது மாதவர் துயிலும்
இத்திரு மடப் புறம்பு
பழுது செய்வதோ பாவிகள்
எனப் பரிந்து அருளி. 702
என் பொருட்டு அவர் செய்த
தீங்கு ஆயினும் இறையோன்
அன்பருக்கு எய்துமோ என்று
பின்னையும் அச்சம்
முன்புற பின்பு முனிவுற
முத்தமிழ் விரகர்
மன் புரக்கும் மெய்ம்முறை வழு
என மனம் கொண்டார். 703
வெய்ய தீங்கு இது வேந்தன்
மேற்று எனும் விதி முறையால்
செய்யனே திரு ஆலவாய்
எனும் திருப்பதிகம்
சைவர் வாழ் மடத்து அமணர்கள்
இட்ட தீத் தழல் போய்ப்
பையவே சென்று பாண்டியற்கு
ஆக எனப் பணித்தார். 704
பாண்டிமா தேவியார் தமது பொற்பில் பயிலும்
நெடு மங்கல நாண் பாதுகாத்தும்
ஆண் தகையார் குலச் சிறையார்
அன்பினாலும் அரசன்பால் அபராதம் உறுதலாலும்
மீண்டும் சிவ நெறி அடையும் விதியினாலும்
வெண்ணீறு வெப்பு அகலப் புகலி வேந்தர்
தீண்டியிடப் பேறு உடையன் ஆதலாலும்
தீப்பிணியைப் பையவே செல்க என்றார். 705
திருந்திசைப் பதிகத் தொடை
திரு ஆல வாயின்
மருந்தினைச் சண்பை மன்னவர்
புனைந்திட அருளால்
விரிந்த வெந்தழல் வெம்மை
போய்த் தென்னனை மேவிப்
பெருந்தழல் பொதி வெதுப்பு
எனப் பெயர் பெற்றதன்றே. 706
செய்ய மேனியர் திருமகனார்
உறை மடத்தில்
நையும் உள்ளத்தராய் அமண் கையர்
தாம் நணுகிக்
கையினால் எரி இட உடன்
படும் எல்லி கரப்ப
வெய்யவன் குண கடலிடை
எழுந்தனன் மீது. 707
இரவு பாதகர் செய்த தீங்கு
இரவி தன் மரபில்
குரவ ஓதியார் குலச் சிறை
யாருடன் கேட்டுச்
சிவபுரப் பிள்ளை யாரை
இத் தீயவர் நாட்டு
வரவழைத்த நாம் மாய்வதே
என மன(ம்) மயங்கி. 708
பெருகும் அச்சமோடும் ஆருயிர்
பதைப்பவர் பின்பு
திரு மடப்புறம் மருங்கு
தீது இன்மையில் தெளிந்து
கரும் உருட்ட மண்கையர்
செய்தீங்கு இது கடைக்கால்
வருவது எப்படியாம் என
மனம் கொளும் பொழுது. 709
அரசனுக்கு வெப்பு அடுத்தது
என்று அருகு கஞ்சுகிகள்
உரை செயப் பதைத்து ஒரு
தனித் தேவியார் புகுத
விரைவும் அச்சமும்
மேற்கொளக் குலச்சிறையாரும்
வரை செய் பொன்புய மன்னவன்
மருங்கு வந்து அணைந்தார். 710
உணர்வும் ஆவியும் ஒழிவதற்கு
ஒரு புடை ஒதுங்க
அணையல் உற்றவர் அருகு
தூரத்திடை அகலப்
புணர் இளம் கதலிக்
குருத்தொடு தளிர் புடையே
கொணரினும் சுருக்கொண்டு
அவை நுண்துகள் ஆக. 712
மருத்து நூலவர் தங்கள்
பல் கலைகளில் வகுத்த
திருத்தகும் தொழில் யாவையும்
செய்யவும் மேல் மேல்
உருத்து எழுந்த வெப்பு
உயிரையும் உருக்குவது ஆகக்
கருத்து ஒழிந்து உரை
மறந்தனன் கௌரியர் தலைவன். 713
ஆனவன் பிணி நிகழ்வுழி
அமணர்கள் எல்லாம்
மீனவன் செயல் கேட்டலும்
வெய்து உயிர்த்து அழிந்து
போன கங்குலில் புகுந்ததின்
விளைவு கொல் என்பார்
மான முன் தெரியா வகை
மன்னன் மாட்டு அணைந்தார். 714
மால் பெருக்கும் சமண்கையர் மருங்கு சூழ்ந்து
வழுதி நிலை கண்டு அழிந்து வந்த நோயின்
மூல நெறி அறியாதே தங்கள் தெய்வ மொழி
நவில் மந்திரம் கொண்டு முன்னும் பின்னும்
பீலிகொடு தைவருதற்கு எடுத்த போது பிடித்த
பீலிகள் பிரம்பினோடும் தீந்து
மேல் எரியும் பொறி சிதறி வீழக் கண்டு
வெப்பின் அதிசயம் நோக்கி வெருவல் மிக்கார். 715
கருகிய மாசு உடை யாக்கைத் தீயோர் தங்கள்
கைத்தூங்கு குண்டிகை நீர் தெளித்துக் காவாய்
அருகனே அருகனே என்றென்று ஓதி அடல்
வழுதி மேல் தெளிக்க அந்நீர்ப் பொங்கிப்
பெருகும் எரி தழல் சொரிந்த நெய் போல் ஆகிப்
பேர்த்தும் ஒரு தழல் அதன் மேல் பெய்தாற் போல
ஒருவரும் இங்கு இருமருங்கும் இராது போம் என்று
அமணரைப் பார்த்து உரைத்து அரசன் உணர்வு சோர்ந்தான். 716
பாண்டி மாதேவியாரும் பயம்
எய்தி அமைச்சர் பாரம்
பூண்டவர் தம்மை நோக்கிப்
புகலியில் வந்து நம்மை
ஆண்டு கொண்டவர் பால் கங்குல்
அமணர் தாம் செய்த தீங்கு
மூண்டவாறு இனையது ஆகி
முடிந்ததோ என்று கூற. 717
கொற்றவன் அமைச்சராம்
குலச்சிறையாரும் தாழ்ந்து
மற்று இதன் கொடுமை இந்த
வஞ்சகர் மதில்கள் மூன்றும்
செற்றவர் அன்பர் தம்பால் செய்தது
ஈங்கு அரசன் பாங்கு
முற்றியது இவர்கள் தீர்க்கின்
முதிர்வதே ஆவது என்பார். 718
இரு திறத்தவரும் மன்னன் எதிர்
பணிந்து இந்த வெப்பு
வரு திறம் புகலி வந்த
வள்ளலார் மதுரை நண்ண
அருகர்கள் செய்த தீய
அனுசிதம் அதனால் வந்து
பெருகியது இதற்குத் தீர்வு
பிள்ளையார் அருளே என்று. 719
காயமும் மனமும் மாசு
கழுவுதல் செய்யார் செய்யும்
மாயமும் இந்த நோயை வளர்ப்பதே
வளர் வெண் திங்கள்
மேய வேணியர்பால் ஞானம்
பெற்றவர் விரும்பி நோக்கில்
தீய இப்பிணியே அன்றி இப்
பிறவியும் தீரும் என்றார். 720
மீனவன் செவியின் ஊடு
மெய் உணர்வளிப்போர் கூற
ஞான சம்பந்தர் என்னும்
நாம மந்திரமும் செல்ல
ஆன போது அயர்வு தன்னை
அகன்றிட அமணர் ஆகும்
மானம் இல்லவரைப் பார்த்து மாற்றம்
ஒன்று உரைக்கல் உற்றான். 721
மன்னவன் அவரை நோக்கி மற்று
இவர் செய்கை எல்லாம்
இன்னவாறு எய்து நோய்க்கே ஏது
ஆயின என்று எண்ணி
மன்னிய சைவ நீதி மா மறைச்
சிறுவர் வந்தால்
அன்னவர் அருளால் இந்நோய்
அகலுமேல் அறிவேன் என்றான். 722
என்று முன் கூறிப் பின்னும்
யான் உற்ற பிணியைத் தீர்த்து
வென்றவர் பக்கம் சேர்வன் விரகு
உண்டேல் அழையும் என்ன
அன்று அவர் உவகை பொங்கி
ஆர்வத்தால் அணையை நூக்கிச்
சென்ற நீர் வெள்ளம் போலும்
காதல் வெள்ளத்தில் செல்வார். 723
பாய் உடைப் பாதகத்தோர்
திரு மடப் பாங்கு செய்த
தீவினைத் தொழிலை நோக்கி
உள்ளழி திரு உள்ளத்தான்
மேய அத்துயரம் நீங்க
விருப்புறு விரைவினோடு
நாயகப் பிள்ளையார் தம்
நற்பதம் பணிவார் ஆகி. 724
மன்னவன் இடும்பை தீர மற்று
அவன் பணி மேல் கொண்டே
அன்னமென் நடையினாரும்
அணிமணிச் சிவிகை ஏறி
மின் இடை மடவார் சூழ
வேற்படை அமைச்சனாரும்
முன் அணைந்து ஏகச் சைவ
முதல்வனார் மடத்தைச் சார்ந்தார். 725
திருமடம் சாரச் சென்று
சேயரிக் கண்ணினார் முன்
வருபரி இழிந்து நின்ற
அமைச்சனார் வந்த பான்மை
சிரபுர பிள்ளையார்க்கு விண்ணப்பம்
செய்வீர் என்னப்
பரிசனத்தவரும் புக்குப் பதம்
அறிந்து உணர்த்து கின்றார். 726
பாண்டி மாதேவியாரும்
பரிவுடை அமைச்சனாரும்
ஈண்டும் வந்து அணைந்தார் என்று
விண்ணப்பம் செய்யச் சண்பை
ஆண் தகையாரும் ஈண்ட அழையும்
என்று அருளிச் செய்ய
மீண்டு போந்து அழைக்கப் புக்கார்
விரைவுறும் விருப்பின் மிக்கார். 727
ஞானத்தின் திரு உருவை நான்
மறையின் தனித் துணையை
வானத்தின் மிசை அன்றி மண்ணில்
வளர் மதிக் கொழுந்தைத்
தேன் நக்க மலர்க் கொன்றைச்
செஞ் சடையார் சீர் தொடுக்கும்
கானத்தின் எழுபிறப்பைக் கண்
களிப்பக் கண்டார்கள். 728
கண்ட பொழுது அமண் கொடியோர்
செய்த கடும் தொழில் நினைந்தே
மண்டிய கண் அருவி நீர்
பாய மலர்க் கை குவித்துப்
புண்டரிகச் சேவடிக் கீழ்ப் பொருந்த
நில முற விழுந்தார்
கொண்ட குறிப் போடு
நெடிது உயிர்த்த கொள்கையராய். 729
உரை குழறி மெய்ந் நடுங்கி
ஒன்றும் அறிந்திலர் ஆகித்
தரையின் மிசைப் புரண்டு அயர்ந்து
சரண கமலம் பற்றிக்
கரையில் கவலைக் கடலுக்கு ஓர்
கரை பற்றினால் போன்று
விரைவுறு மெய் அன்பினால்
விடாது ஒழிவார் தமைக்கண்டு. 730
அருமறை வாழ் பூம்புகலி
அண்ணலார் அடி பூண்ட
இருவரையும் திருக்கையால் எடுத்து
அருளித் தேற்றிடவும்
தெரு மந்து தெளியாதார் தமை
நோக்கிச் சிறப்பு அருளிச்
திருவுடையீர் உங்கள் பால் தீங்கு
உளதோ என வினவ. 731
வெஞ்சமணர் முன் செய்த
வஞ்சனைக்கு மிக அழிந்தே
அஞ்சினோம் திருமேனிக்கு அடாது
என்றே அது தீர்ந்தோம்
வஞ்சகர் மற்று அவர் செய்த
தீத்தொழில் போய் மன்னவன் பால்
எஞ்சல் இலாக் கொடுவெதுப்பாய் எழா
நின்றது எனத் தொழுது. 732
வெய்ய தொழில் அமண் குண்டர்
விளைக்க வரும் வெதுப்பவர் தாம்
செய்யும் மதி மாயைகளால்
தீராமைத் தீப்பிணியால்
மையல் உறு மன்னவன் முன்
மற்று அவரை வென்று அருளில்
உய்யும் எமது உயிரும் அவன்
உயிரும் என உரைத்தார்கள். 733
என்று அவர் உரைத்த போதில் எழில்
கொள் பூம் புகலி வேந்தர்
ஒன்றும் நீர் அஞ்ச வேண்டா
உணர்வு இலா அமணர் தம்மை
இன்று நீர் உவகை எய்த
யாவரும் காண வாதில்
வென்று மீனவனை வெண்ணீறு
அணிவிப்பன் விதியால் என்றார். 734
மொழிந்தருள அது கேட்டு முன்
இறைஞ்சி முகம் மலர்வார்
அழுந்தும் இடர்க் கடல் இடை
நின்று அடியோமை எடுத்து அருளச்
செழும் தரளச் சிவிகையின்
மேல் தென்னாடு செய்தவத்தால்
எழுந்து அருளப் பேறு உடையோம்
என் பெறோம் எனத் தொழலும். 735
ஆவதும் அழிவும் எல்லாம் அவர்
செயல் அமணர் ஆகும்
பாவ காரிகளை நோக்கும் பழுது
உடன் நீங்கி வெல்லச்
சேவுயர் கொடியினார் தம்
திரு உள்ளம் அறிவேன் என்று
பூவலர் பொழில் சூழ்
சண்பைப் புரவலர் போதுகின்றார். 736
வையகம் உய்ய வந்த
வள்ளலார் மடத்தினின்று
மெய்யணி நீற்றுத் தொண்டர்
வெள்ளமும் தாமும் போந்து
கை இணை தலையின் மீது
குவியக் கண் மலர்ச்சி காட்டச்
செய்யவார் சடையார் மன்னும்
திரு ஆல வாயுள் புக்கார். 737
நோக்கிட விதி இலாரை நோக்கி
யான் வாது செய்யத்
தீக் கனல் மேனியானே
திருவுளமே என்று எண்ணில்
பாக்கியப் பயனாய் உள்ள
பாலறா வாயர் மெய்ம்மை
நோக்கி வண் தமிழ் செய் மாலைப்
பதிகந்தான் நுவலல் உற்றார். 738
கானிடை ஆடுவாரைக் காட்டுமா
உரி முன் பாடித்
தேன் அலர் கொன்றையார் தம்
திருவுளம் நோக்கிப் பின்னும்
ஊனமில் வேத வேள்வி என்று
எடுத்துத்து உரையின் மாலை
மானமில் அமணர் தம்மை
வாதில் வென்று அழிக்கப்பாடி. 739
ஆலமே அமுதம் ஆக
உண்டு வானவர்க்கு அளித்துக்
காலனை மார்க் கண்டர்க்காக்
காய்ந்தனை அடியேற்கு இன்று
ஞலம் நின் புகழே ஆக
வேண்டும் நான் மறைகள் ஏத்தும்
சீலமே ஆலவாயில்
சிவ பெருமானே என்றார். 740
நாதர் தம் அருள் முன்பெற்று
நாடிய மகிழ்ச்சி பொங்கப்
போதுவார் பணிந்து போற்றி விடை
கொண்டு புனித நீற்று
மேதகு கோலத்தோடும்
விருப்புறு தொண்டர் சூழ
மூது எயில் கபாடம் நீடு
முதல் திரு வாயில் சார்ந்தார். 741
அம் மலர்க் குழலினார்க்கும்
அமைச்சர்க்கும் அருள வேண்டிச்
செம் மணிப் பலகை முத்தின்
சிவிகை மேல் கொண்ட போதில்
எம் மருங்கிலும் தொண்டர் எடுத்த
ஆர்ப்பு எல்லை இன்றி
மும்மை நீடு உலகம் எல்லாம்
முழுதுடன் நிறைந்தது அன்றே. 742
பல்லிய நாதம் பொங்கப்
படர் திருநீற்றின் சோதி
நல் ஒளி வட்டம் ஆகி
நண்ணி மேல் வருவது என்ன
வில் வளர் தரளக் கோவை
வெண்குடை நிழற்றி வெவ்வேறு
எல்லையில் முத்தின் காளம் தாரை
சங்கு எங்கும் ஓத. 743
கண்ணினுக்கு அணியாய் உள்ளார்
எழுச்சியில் காட்சி பெற்றார்
நண்ணிய சமயம் வேறு
நம்பினர் எனினும் முன்பு
பண்ணிய தவங்கள் என் கொல்
பஞ்சவன் தஞ்சம் மேவிப்
புண்ணிய மூர்த்தி வந்து
மதுரையில் புகுத என்றார். 744
தென்னவர் தேவி யாரும்
திருமணிச் சிவிகை மீது
பின் வர அமைச்சர் முன்பு
பெரும் தொண்டர் குழாத்துச் செல்லப்
பொன் அணி மாட வீதியூடு
எழுந்தருளிப் புக்கார்
கன்னி நாடு உடையான் கோயில்
காழி நாடு உடைய பிள்ளை. 745
கொற்றவன் தன் பால் முன்பு
குலச்சிறையார் வந்து எய்திப்
பொற்றட மதில் சூழ் சண்பைப்
புரவலர் வரவு கூற
முன் துயர் சிறிது நீங்கி
முழுமணி அணிப் பொற் பீடம்
மற்றவன் முடியின் பக்கத்து இடுக
என வல்லன் ஆனான். 746
மந்திரி யாரைப் பின்னும் எதிர்
செல மன்னன் ஏவச்
சிந்தையுள் மகிழ்ந்து போந்தார் செயலை
யான் சமயத்து உள்ளோர்
பைந்துணர் அலங்கல் மன்னன் பரிசு
கண்டு இதுவோ பண்பால்
நம் தனிச் சமயம் தன்னை
நாட்டு மாறு என்று பின்னும். 747
நின் அற நெறியை நீயே
காத்து அருள் செய்தி ஆகில்
அன்னவர் தம்மை இங்கே
அழைத்தனை அவரும் யாமும்
முன் உற ஒக்கத் தீர்க்க
மொழிந்து மற்று அவரால் தீர்ந்தது
என்னினும் யாமும் தீர்த்தோம்
ஆகவும் இசைவாய் என்றார். 748
பொய் தவம் ஆகக் கொண்ட
புன் தலைச் சமணர் கூறச்
செய்தவப் பயன் வந்து எய்தும்
செவ்வி முன் உறுதலாலே
எய்திய தெய்வச் சார்வால்
இரு திறத்தீரும் தீரும்
கைதவம் பேசமாட்டேன் என்று
கைதவனும் சொன்னான். 749
என்று அவன் உரைப்பக் குண்டர்
எண்ணம் கெட்டு இருந்த எல்லைத்
தென் தமிழ் நாடு செய்த
செய்தவக் கொழுந்து போல்வார்
வன் தனிப் பவன முன்னர்
வாயிலுள் அணைந்து மாடு
பொன் திகழ் தரளப் பத்திச்
சிவிகை நின்று இழிந்து புக்கார். 750
குலச்சிறையார் முன்பு எய்த
கொற்றவன் தேவியாரும்
தலத்திடை இழிந்து சென்றார் தண்
தமிழ் நாட்டு மன்னன்
நிலத்து இடை வானின் நின்று
நீள் இருள் நீங்க வந்த
கலைச் செழும் திங்கள் போலும்
கவுணியர் தம்மைக் கண்டார். 751
கண்ட அப்பொழுதே வேந்தன் கை
எடுத்து எய்த நோக்கித்
தண்டுணர் முடியின் பாங்கர்த்
தமனியப் பீடம் காட்ட
வண் தமிழ் விரகர் மேவி
அதன் மிசை இருந்தார் மாயை
கொண்டவல் அமணர் எல்லாம்
குறிப்பினுள் அச்சம் கொண்டார். 752
செழியனும் பிள்ளையார் தம்
திருமேனி காணப் பெற்று
விழி உற நோக்கலாலே வெம்மை
நோய் சிறிது நீங்கி
அழிவுறு மன்னோர் நிற்க
அந்தணர் வாழ்வை நோக்கிக்
கெழுவுறு பதியாது என்று
விருப்புடன் கேட்ட போது. 753
பொன்னி வளம் திருநாட்டுப் புனல்
பழனப் புறம் பணை சூழ்
கன்னி மதில் கழுமலம் நாம்
கருதும் ஊர் எனச் சிறந்த
பன்னிரண்டு பெயர் பெற்றுப்
பரவிய சொல் திருப்பதிகம்
தென்னவன் முன்பு அருள்
செய்தார் திருஞான சம்பந்தர். 754
பிள்ளையார் செம் பொன் மணிப்
பீடத்தில் இருந்த பொழுது
உள்ள நிறை பொறாமையினால்
உழை இருந்த கார் அமணர்
கொள்ளும் மனத்திடை அச்சம்
மறைத்து முகம் கோபத்தீத்
துள்ளி எழும் எனக் கண்கள்
சிவந்து பல சொல்லுவார். 755
காலை எழும் கதிரவனைப் புடை
சூழும் கருமுகில் போல்
பீலி சேர் சமண் கையர்
பிள்ளையார் தமைச் சூழ்வார்
ஏலவே வாதினால் வெல்வதனுக்கு
எண்ணித் தாங்கு
கோலுநூல் எடுத்து ஓதித்
தலை திமிர்ப்பக் குரைத்தார்கள். 756
பிள்ளையார் அது கேளாப் பேசுக
நும் பொருள் எல்லை
உள்ளவாறு என்றருள ஊத்தைவாய்ப்
பறி தலையர்
துள்ளி எழும் அநேகராய்ச்
சூழ்ந்து பதறிக் கதற
ஒள்ளிழையார் அது கண்டு பொறார்
ஆகி உள் நடுங்கி. 757
தென்னவன் தன்னை நோக்கித்
திருமேனி எளியர் போலும்
இன் அருள் பிள்ளையார் மற்று
இவர் உவர் எண்ணிலார்கள்
மன்ன நின் மயக்கம் எங்கள்
வள்ளலார் தீர நல்கும்
பின்னை இவ்வமணர் மூள்வார்
வல்லரேல் பேச என்றார். 758
மாறனும் அவரை நோக்கி
வருந்தநீ என்று மற்றும்
வேறு ஆவது என் கொல் என்மேல்
வெப்பு ஒழித்து அருகர் நீரும்
ஆறு அணி சடையினார்க்கு
அன்பராம் இருவரும் நீங்கள்
தேறிய தெய்வத்தன்மை என்னிடைத்
தெரிப்பீர் என்றான். 759
ஞான ஆரமுதம் உண்டார்
நல்தவத் திருவை நோக்கி
மானினேர் விழியினாய் கேள் மற்று
எனைப் பாலன் என்று
நீ நனி அஞ்ச வேண்டா
நிலையிலா அமணர்க்கு என்றும்
யான் எளியேன் அலேன்
என்று எழும் திருப்பதிகம்பாடி. 760
பெற்றியால் அருளிச் செய்த
பிள்ளையார் தமக்கு முன்னம்
சுற்று நின்று அழைத்தல் ஓவா
அருகர்க்கும் தென்னர் கோமான்
இற்றைநாள் என்னை உற்ற பிணியை
நீர் இகலித் தீரும்
தெற்று எனத் தீர்த்தார் வாதில்
வென்றவர் என்று செப்ப. 761
மன்னவன் மாற்றம் கேட்டு வடிவு
போல் மனத்து மாசு
துன்னிய அமணர் தென்னர்
தோன்றலை நோக்கி நாங்கள்
உன் உடம்பு அதனில் வெப்பை
ஒருபுடை வாம பாகம்
முன்ன மந்திரித்துத் தெய்வ
முயற்சியால் தீர்த்தும் என்றார். 762
யாதும் ஒன்று அறிவு இலாதார்
இருள் என அணையச் சென்று
வாதினில் மன்னவன் தன்
வாம பாகத்தைத் தீர்ப்பார்
மீது தம் பீலி கொண்டு
தடவிட மேன்மேல் வெப்புத்
தீதுறப் பொறாது தென்னன்
சிரபுரத்தவரைப் பார்த்தான். 763
தென்னவன் நோக்கம் கண்டு
திருக்கழு மலத்தார் செல்வர்
அன்னவன் வலப்பால் வெப்பை
ஆலவாய் அண்ணல் நீறே
மன்னும் மந்திரமும் ஆகி
மருந்துமாய்த் தீர்ப்பது என்று
பன்னிய மறைகள் ஏத்திப்
பகர் திருப்பதிகம் பாடி. 764
திருவளர் நீறு கொண்டு
திருக்கையால் தடவத் தென்னன்
பொருவரு வெப்பு நீங்கிப்
பொய்கையில் குளிர்ந்தது அப்பால்
மருவிய இடப்பால் மிக்க அழல்
என மண்டு தீப்போல்
இருபுடை வெப்பும் கூடி
இடம் கொளாதுஎன்னப் பொங்க. 765
உறி உடைக் கையர் பாயின்
உடுக்கையர் நடுக்கம் எய்தி
செறி மயில் பீலி தீய
தென்னவன் வெப்பு உறு தீத்தம்மை
ஏறிய மாகடலும் கன்றி அருகு
விட்டு ஏற நிற்பார்
அறிவுடையாரை ஒத்தார் அறிவு
இலா நெறியில் நின்றார். 766
பலர் தொழும் புகலி மன்னர்
ஒரு புடை வெப்பைப் பாற்ற
மலர்தலை உலகின்மிக்கார் வந்து
அதிசயத்துச் சூழ
இலகு வேல் தென்னன் மேனி
வலம் இடம் எய்தி நீடும்
உலகினில் தண்மை வெம்மை
ஒதுங்கினால் ஒத்தது அன்றே. 767
மன்னவன் மொழிவான் என்னே மதித்த
இக் காலம் ஒன்றில்
வெம் நரகு ஒரு பால் ஆகும் வீட்டு
இன்பம் ஒரு பால் ஆகும்
துன்னு நஞ்சு ஒரு பால் ஆகும்
சுவை அமுது ஒரு பால் ஆகும்
என் வடிவு ஒன்றில் உற்றேன்
இரு திறத்து இயல்பும் என்பான். 768
வெந்தொழில் அருகர் தோற்றீர் என்னை
விட்டு அகல நீங்கும்
வந்து எனை உய்யக்
கொண்ட மறைக்குல வள்ளலாரே
இந்த வெப்பு அடைய நீங்க
எனக்கு அருள் புரிவீர் என்று
சிந்தையால் தொழுது சொன்னான் செல்
கதிக்கு அணியன் ஆனான். 769
திருமுகம் கருணை காட்டத்
திருக்கையால் நீறு காட்டிப்
பெருமறை துதிக்கும் ஆற்றால்
பிள்ளையார் போற்றிப் பின்னும்
ஒருமுறை தடவ அங்கண் ஒழிந்து
வெப்பு அகன்று பாகம்
மருவு தீப் பிணியும் நீங்கி
வழுதியும் முழுதும் உய்ந்தான். 770
கொற்றவன் தேவியாரும்
குலச்சிறையாரும் தீங்கு
செற்றவர் செய்ய பாத தாமரை
சென்னி சேர்த்துப்
பெற்றனம் பெருமை இன்று
பிறந்தனம் பிறவா மேன்மை
உற்றனன் மன்னன் என்றே உளம்
களித்து உவகை மிக்கார். 771
மீனவன் தன் மேல் உள்ள
வெப்பு எலாம் உடனே மாற
ஆன பேரின்பம் எய்தி உச்சி
மேல் அங்கை கூப்பி
மானம் ஒன்று இல்லார் முன்பு
வன் பிணி நீக்க வந்த
ஞான சம்பந்தர் பாதம் நண்ணி
நான் உய்ந்தேன் என்றான். 772
கந்து சீறும் மால் யானை
மீனவன் கருத்து நேர்
வந்து வாய்மை கூற மற்று
மாசுமேனி நீசர் தாம்
முந்தை மந்திரத்து விஞ்சை
முற்றும் எஞ்ச அஞ்சியே
சிந்தை செய்து கைவரும்
திறம் தெரிந்து தேடுவார். 773
சைவமைந்தர் சொல்லின் வென்றி சந்த
இன் சொல் மாலையால்
கைதவன் தன் வெப்பு ஒழிந்த
தன்மை கண்டு அறிந்தனம்
மெய் தெரிந்த தர்க்க வாதம்
வெல்லலால் ஆவது அன்று வேறு
எய்து தீயின் நீரில் வெல்வது
என்று தம்மில் எண்ணினார். 774
பிள்ளையாரும் உங்கள் வாய்மை
பேசுமின்கள் என்றலும்
தள்ளு நீர்மை யார்கள் வேறு
தர்க்கவாதின் உத்தரம்
கொள்ளும் வென்றி அன்றியே
குறித்த கொள்கை உண்மைதான்
உள்ளவாறு கண் புலத்தில்
உய்ப்பது என்ன ஒட்டினார். 775
என்று வாது கூறலும்
இருந்த தென்னர் மன்னனும்
கன்றி என் உடம்பு ஒடுங்க
வெப்புநோய் கவர்ந்த போது
ஒன்றும் அங்கு ஒழித்திலீர்கள்
என்னவாது உமக்கு எனச்
சென்று பின்னும் முன்னும் நின்று
சில்லி வாயர் சொல்லுவார். 776
என்ன வாது செய்வது என்று
உரைத்ததே வினா எனச்
சொன்னவாசகம் தொடங்கி ஏடு
கொண்டு சூழ்ச்சியால்
மன்னு தம் பொருட் கருத்தின்
வாய்மை தீட்டி மாட்டினால்
வெம் நெருப்பின் வேவுறாமை
வெற்றி ஆவது என்றனர். 777
என்ற போது மன்னன் ஒன்று
இயம்பும் முன்பு பிள்ளையார்
நன்று நீர் உரைத்தவாறு
நாடு தீயில் ஏடுதான்
வென்றிடில் பொருள் கருத்து
மெய்ம்மை ஆவது என்றிரேல்
வன் தனிக்கை யானைமன்னன்
முன்பு வம்மின் என்றனர். 778
அப்படிக்கு எதிர் அமணரும்
அணைந்துறும் அளவில்
ஒப்பில் வண்புகழ்ச் சண்பையர்
காவலர் உரையால்
செப்பரும் திறல் மன்னனும்
திருந்து அவை முன்னர்
வெப்புறும் தழல் அமைக்க
என வினைஞரை விடுத்தான். 779
ஏய மாந்தரும் இந்தனம்
குறைத்து உடன் அடுக்கித்
தீ அமைத்தலும் சிகை விடு
புகை ஒழிந்து எழுந்து
காயும் வெவ்வழல் கடவுளும்
படர் ஒளி காட்ட
ஆயும் முத்தமிழ் விரகரும்
அணைய வந்து அருளி. 780
செங்கண் ஏற்றவரே பொருள்
என்று தாம் தெரித்த
பொங்கு இசைத் திருப்பதிக
நன்முறையினைப் போற்றி
எங்கள் நாதனே பரம் பொருள்
எனத் தொழுது எடுத்தே
அங்கையால் முடி மிசைக் கொண்டு
காப்பு நாண் அவிழ்த்தார். 781
சாற்றும் மெய்ப் பொருள்
தரும் திருமுறையினைத் தாமே
நீற்று வண்கையால் மறித்தலும்
வந்து நேர்ந்து உளதால்
நால்தடம் புயத்து அண்ணலார்
மருவு நள்ளாறு
போற்றும் அப்பதிகம் போகம்
ஆர்த்த பூண் முலையாள். 782
அத் திருப் பதிகத்தினை
அமர்ந்து கொண்டு அருளி
மைத்த வெங்கடு மிடற்று
நள்ளாறரை வணங்கி
மெய்த்த நல் திரு ஏட்டினைக்
கழற்றி மெய்ம் மகிழ்ந்து
கைத் தலத்திடைக் கொண்டனர்
கவுணியர் தலைவர். 783
நன்மை உய்க்கும் மெய்ப் பதிகத்தின்
நாதன் என்று எடுத்தும்
என்னை ஆள் உடை ஈசன்
தன் நாமமே என்றும்
மன்னும் மெய்ப் பொருளாம்
எனக் காட்டிட வன்னி
தன்னில் ஆக எனத் தளிர்
இள வளர் ஒளி பாடி. 784
செய்ய தாமரை அக
இதழினும் மிகச் சிவந்த
கையில் ஏட்டினைக் கைதவன்
பேர் அவை காண
வெய்ய தீயினில் வெற்று
அரையவர் சிந்தை வேவ
வையம் உய்ந்திட வந்தவர்
மகிழ்ந்து முன் இட்டார். 785
இட்ட ஏட்டினில் எழுதிய
செந்தமிழ்ப் பதிகம்
மட்டுலாங்குழல் வனமுலை
மலைமகள் பாகத்து
அட்ட மூர்த்தியைப் பொருள்
என உடைமையால் அமர்ந்து
பட்ட தீயிடைப் பச்சையாய்
விளங்கியது அன்றே. 786
மையல் நெஞ்சு உடை அமணரும்
தம் பொருள் வரைந்த
கையில் ஏட்டினைக் கதுவு
செந்தீயினில் இடுவார்
உய்யுமோ இது என உறும்
கவலையாம் உணர்வால்
நையும் நெஞ்சினர் ஆகியே
நடுங்கி நின்றிட்டார். 787
மான மன்னவன் அவையின்
முன் வளர்த்த செந்தீயின்
ஞானம் உண்டவர் இட்ட
ஏடு இசைத்த நாழிகையில்
ஈனம் இன்மை கண்டு
யாவரும் வியப்பு உற எடுத்தார்
பான்மை முன்னையில் பசுமையும்
புதுமையும் பயப்ப. 789
எடுத்த ஏட்டினை அவையின் முன்
காட்டி அம் முறையில்
அடுத்த வண்ணமே கோத்தலும்
அதிசயித்து அரசன்
தொடுத்த பீலி முன்
தூக்கிய கையரை நோக்கிக்
அடுத்த நீர் இட்ட
ஏட்டினைக் காட்டுமின் என்றான். 790
அருகர் தாம் இட்ட ஏடு
வாங்கச் சென்று அணையும் போதில்
பெருகு தீக் கதுவ வெந்து
பேர்ந்தமை கண்ட மன்னன்
தருபுனல் கொண்டு செந்தீத்
தணிப்பித்தான் சமணர் அங்குக்
கருகிய சாம்ப ரோடும் கரி
அலால் மற்று என் காண்பார். 791
செய்வது ஒன்று அறிகிலாதார்
திகைப்பினால் திரண்ட சாம்பல்
கையினால் பிசைந்து தூற்றிப்
பார்ப்பது கண்ட மன்னன்
எய்திய நகையினோடும் ஏடு
இன்னம் அரித்துக் காணும்
பொய்யினால் மெய்யை ஆக்கப் புகுந்த
நீர் போமின் என்றான். 792
வெப்பு எனும் தீயில் யான் முன்
வீடு பெற்று உய்ய நீங்கள்
அப்பொழுது அழிந்து தோற்றீர்
ஆதலால் அதுவாறு ஆக
இப்பொழுது எரியில் இட்ட ஏடு
உய்ந்தது இல்லை என்றால்
துப்புர உடையீர் நீங்கள்
தோற்றிலீர் போலும் என்றான். 793
தென்னவன் நகை உட்கொண்டு
செப்பிய மாற்றம் தேரார்
சொன்னது பயனாகக் கொண்டு
சொல்லுவார் தொடர்ந்த வாது
முன்னுற இருகால் செய்தோம் முக்காலில்
ஒரு கால் வெற்றி
என்னினும் உடையோம் மெய்ம்மை இனி
ஒன்று காண்பது என்றார். 794
தோற்கவும் ஆசை நீங்காத் துணிவிலார்
சொல்லக் கேட்டு இம்
மாற்றம் என் ஆவது என்று
மன்னவன் மறுத்த பின்னும்
நீற்று அணி விளங்கு மேனி
நிறை புகழ்ச் சண்பை மன்னர்
வேற்று வாது இனி என்
செய்வது என்றலும் மேற்கோள் ஏற்பார். 795
நீடு மெய்ப் பொருளின் உண்மை
நிலை பெறும் தன்மை எல்லாம்
ஏடுற எழுதி மற்றவ்
வேட்டினை யாமும் நீரும்
ஓடு நீர் ஆற்றில் இட்டால்
ஒழுகுதல் செய்யாது அங்கு
நாடி முன் தங்கும் ஏடு
நற்பொருள் பரிப்பது என்றார். 796
என்று அமண் கையர் கூற
ஏறு சீர் புகலி வேந்தர்
நன்று அது செய்வோம் என்று அங்கு
அருள் செய நணுக வந்து
வென்றிவேல் அமைச்சனார் தாம் வேறு
இனிச் செய்யும் இவ்வாது
ஒன்றினும் தோற்றார் செய்வது
ஒட்டியே செய்வது என்றார். 797
அங்கது கேட்டு நின்ற அமணரும்
அவர் மேல் சென்று
பொங்கிய வெகுளி கூரப்
பொறாமை காரணமே ஆகத்
தங்கள் வாய் சோர்ந்து தாமே
தனிவாதில் அழிந்தோம் ஆகில்
வெங்கழு ஏற்றுவான் இவ்
வேந்தனே என்று சொன்னார். 798
மற்றவர் சொன்ன வார்த்தை
கேட்டலும் மலய மன்னன்
செற்றத்தால் உரைத்தீர் உங்கள்
செய்கையும் மறந்தீர் என்று
பற்றிய பொருளின் ஏடு படர்
புனல் வைகை ஆற்றில்
பொற்புற விடுவதற்குப் போதுவது
என்று கூற. 799
பிள்ளையார் முன்னம் பைம் பொன்
பீடத்தில் இழிந்து போந்து
தெள்ளு நீர்த் தரளப் பத்திச்
சிவிகை மேல் ஏறிச் சென்றார்
வள்ளலார் அவர் தம் பின்பு
மன்னன் மா ஏறிச் சென்றான்
உள்ளவாறு அறிகிலாதார் உணர்வு
மால் ஏறிச் சென்றார். 800
தென்னவன் வெப்புத் தீர்ந்து
செழுமணிக் கோயில் நீங்கிப்
பின்னுற அணைந்த போது
பிள்ளையார் பெருகும் செல்வம்
மன்னிய மதுரை மூதூர் மறுகில்
வந்தருளக் கண்டு
துன்னிய மாதர் மைந்தர் தொழுது
வேறு இனைய சொன்னார். 801
மீனவன் கொண்ட வெப்பை நீக்கி
நம் விழுமம் தீர்த்த
ஞான சம்பந்தர் இந்த
நாயனார் காணும் என்பார்
பால் நறும் குதலைச் செய்ய
பவளவாய் பிள்ளையார் தாம்
மான சீர்த் தென்னன் நாடு
வாழ வந்து அணைந்தார் என்பார். 802
எரியிடை வாதில் தோற்றது இவர்க்கு
நம் அருகர் என்பார்
புரிசடை அண்ணல் நீறே பொருள்
எனக் கண்டோம் என்பார்
பெருகு ஒளி முத்தின் பைம் பொன்
சிவிகை மேல் பிள்ளையார் தாம்
வரும் அழகு என்னே என்பார்
வாழ்ந்தன கண்கள் என்பார். 803
ஏதமே விளைந்த இந்த அடிகள்
மார் இயல்பால் என்பார்
நாதனும் ஆல வாயில்
நம்பனே காணும் என்பார்
போதம் ஆவதுவும் முக்கண்
புராணனை அறிவது என்பார்
வேதமும் நீறும் ஆகி
விரவிடும் எங்கும் என்பார். 804
அடிகள்மார் முகங்கள் எல்லாம்
அழிந்தன பாரீர் என்பார்
கொடிய வஞ்சனைகள் எல்லாம்
குலைந்தன போலும் என்பார்
வடிகொள் வேல் மாறன் காதல்
மாறின வண்ணம் என்பார்
விடிவதாய் முடிந்தது இந்த
வெஞ்சமண் இருளும் என்பார். 805
நெருப் பினில் தோற்றார் தாங்கள்
நீரில் வெல்வர்களோ என்பார்
இருப்பு நெஞ்சு உடையரேனும்
பிள்ளையார்க்கு எதிரோ என்பார்
பருப் பொருள் உணர்ந்தார் தாங்கள்
படுவன் பாரீர் என்பார்
மருப்புடைக் கழுக்கோல் செய்தார்
மந்திரியார் தாம் என்பார். 806
ஏடுகள் வைகை தன்னில்
இடுவதற்கு அணைந்தார் என்பார்
ஓடும் நீருடன் செலாது
நிற்குமோ ஓலை என்பார்
நீடிய ஞானம் பெற்றார்
நிறுத்தவும் வல்லர் என்பார்
நாடெலாம் காண இங்கு
நண்ணுமா காணீர் என்பார். 807
தோற்றவர் கழுவில் ஏறத்
துணிவதே அருகர் என்பார்
ஆற்றிய அருளின் மேன்மைப் பிள்ளையார்க்கு
அழகு இது என்பார்
நீற்றினால் தென்னன் தீங்கு
நீங்கிய வண்ணம் கண்டார்
போற்றுவார் எல்லாம் சைவ
நெறியினைப் போற்றும் என்பார். 808
இன்னன இரண்டு பாலும்
ஈண்டினர் எடுத்துச் சொல்ல
மின் ஒளி மணிப் பொற்காம்பின்
வெண் குடை மீது போதப்
பன் மணிச் சிவிகை தன்
மேல் பஞ்சவன் நாட்டு உளோர்க்கு
நன்நெறி காட்ட வந்தார்
நான் மறை வாழ வந்தார். 809
தென் தமிழ் விளங்க வந்த
திருக்கழு மலத்தான் வந்தான்
மன்றுளார் அளித்த ஞான
வட்டில் வண்கையன் வந்தான்
வென்றுலகு உய்ய மீள வைகையில்
வெல்வான் வந்தான்
என்றுபன் மணிச் சின்னங்கள்
எண் திசை நெருங்கி ஏங்க. 810
பன் மணி முரசம் சூழ்ந்த
பல்லியம் இயம்பப் பின்னே
தென்னனும் தேவியாரும் உடன்
செலத் திரண்டு செல்லும்
புன் நெறி அமணர் வேறு
ஓர் புடைவரப் புகலி வேந்தர்
மன்னிய வைகை ஆற்றின் கரை
மிசை மருவ வந்தார். 811
கார் கெழு பருவம் வாய்ப்பக்
காமுறும் மகளிர் உள்ளம்
சீர் கெழு கணவன் தன்பால்
விரைவு உறச் செல்லுமா போல்
நீர் கெழு பௌவம் நோக்கி
நிரை திரை இரைத்துச் செல்லும்
பார் கெழு புகழின் மிக்க
பண்புடை வைகை ஆறு. 812
ஆற்றில் நீர் கடுக ஓடும்
மருங்கு உற அரசன் நோக்கி
நீற்று அணி திகழ்ந்த மேனி
நிறை மதிப் பிள்ளையாரும்
வேற்றுரு அருகர் நீரும் விதித்த
ஏடு இடுக என்றான்
தோற்றவர் தோலார் என்று
முன்னுறத் துணிந்து இட்டார்கள். 813
படு பொருள் இன்றி நெல்லில் பதடி
போல் உள் இலார் மெய்
அடுபவர் பொருளை அத்தி நாத்தி
என்று எழுதி ஆற்றில்
கடுகிய புனலைக் கண்டும்
அவாவினால் கையில் ஏடு
விடுதலும் விரைந்து கொண்டு
வேலை மேல் படர்ந்ததன்றே. 814
ஆறு கொண்டு ஓடும் ஏட்டைத்
தொடர்ந்து எதிர் அணைப்பார் போலத்
தேறு மெய் உணர்வு இலாதார்
கரைமிசை ஓடிச் சென்றார்
பாறும் அப்பொருள் மேல் கொண்ட
பட்டிகை எட்டாது அங்கு
நூறுவில் கிடைக்கு முன்னே
போனது நோக்கிக் காணார். 815
காணவும் எய்தா வண்ணம் கடலின்
மேல் செல்லும் ஏடு
நாணிலா அமணர் தம்மை
நட்டாற்றில் விட்டுப் போகச்
சேணிடைச் சென்று நின்றார்
சிதறினார் திகைத்தார் மன்னன்
ஆணையில் வழுவ மாட்டாது
அஞ்சுவார் அணைய மீண்டார். 816
வேறு ஒரு செயல் இலாதார்
வெருவுற்று நடுங்கித் தம்பால்
ஈறு வந்து எய்திற்று என்றே
மன்னவன் எதிர் வந்து எய்தி
ஊறுடை நெஞ்சில் அச்சம்
வெளிப்பட ஒளிப்பார் போன்று
மாறு கொண்டீரும் இட்டால்
வந்தது காண்டும் என்றார். 817
மாசு சேர் அமணர் எல்லாம்
மதியினில் மயங்கிக் கூற
ஆசிலா நெறியில் சேர்ந்த
அரசனும் அவரை விட்டுத்
தேசு உடைப் பிள்ளையார் தம்
திருக்குறிப்பு அதனை நோக்கப்
பாசுரம் பாடல் உற்றார்
பர சமயங்கள் பாற. 818
தென்னவன் மாறன் தானும்
சிரபுரத்துத் தலைவர் தீண்டிப்
பொன் நவில் கொன்றையார்
தம் திருநீறு பூசப் பெற்று
முன்னை வல் வினையும் நீங்கி
முதல்வனை அறியும் தன்மை
துன்னினான் வினைகள் ஒத்துத்
துலை என நிற்றலாலே. 819
உலகியல் வேத நூல்
ஒழுக்கம் என்பது
நிலவு மெய்ந் நெறி
சிவ நெறியது என்பதும்
கலதி வாய் அமணர்
காண்கிலார்கள் ஆயினும்
பலர் புகழ் தென்னவன்
அறியும் பான்மையால். 820
அந்தணர் தேவர் ஆன்
இனங்கள் வாழ்க என்று
இந்த மெய்ம் மொழிப்
பயன் உலகம் இன்புறச்
சந்த வேள்விகள் முதல்
சங்கரர்க்கு முன்
வந்த அர்ச்சனை
வழிபாடும் அன்னவாம். 821
வேள்வி நற்பயன் வீழ் புனல் ஆவது
நாளும் அர்ச்சனை நல் உறுப்பு ஆதலால்
ஆளும் மன்னனை வாழ்த்தியது அர்ச்சனை
மூளும் மற்று இவை காக்கும் முறைமையால். 822
ஆழ்க தீயது என்று ஓதிற்று அயல் நெறி
வீழ்க என்றது வேறு எல்லாம் அரன் பெயர்
சூழ்க என்றது தொல் உயிர் யாவையும்
வாழி அஞ்சு எழுத்து ஓதி வளர்கவே. 823
சொன்ன வையகமும் துயர் தீர்கவே
என்னும் நீர்மை இக பரத்தில் துயர்
மன்னி வாழும் உலகத்தவர் மாற்றிட
முன்னர் ஞான சம்பந்தர் மொழிந்தனர். 824
அரிய காட்சியர் என்பது அவ் வாதியைத்
தெரியலாம் நிலையால் தெரியார் என
உரிய அன்பினில் காண்பவர்க்கு உண்மையாம்
பெரிய நல் அடையாளங்கள் பேசினார். 825
ஆயினும் பெரியார் அவர் என்பது
மேய இவ் இயல்பே அன்றி விண் முதல்
பாய பூதங்கள் பல் உயிர் அண்டங்கள்
ஏயும் யாவும் இவர் வடிவு என்றதாம். 826
பின்பும் ஆர் அறிவார் அவர் பெற்றியே
என்பது யார் உணர்வான்
எனும் சென்று எட்ட ஒணா
மன்பெரும் தன்மையார் என வாழ்த்தினார்
அன்பு சூழ் சண்பை ஆண்தகையாரவர். 827
வெந்த சாம்பல் விரை என்பது தமது
அந்தம் இல் ஒளியல்லா ஒளி எலாம்
வந்து வெந்தற மற்றப் பொடி அணி
சந்த மாக் கொண்ட வண்ணமும் சாற்றினார். 828
தமக்குத் தந்தையர் தாய் இலர் என்பதும்
அமைத்து இங்கு யாவையும்
ஆங்கு அவை வீந்த போது
இமைத்த சோதி அடக்கிப் பின் ஈதலால்
எமக்கு நாதர் பிறப்பு இலர் என்றதாம். 829
தம்மையே சிந்தியார் எனும் தம்மை தான்
மெய்ம்மை ஆகி விளங்கு ஒளி தாம் என
இம்மையே நினைவார் தம் இருவினைப்
பொய்ம்மை வல் இருள் போக்குவர் என்றதாம். 830
எந்தையார் அவர் எவ்வகையார் கொல் என்று
இந்த வாய்மை மற்ற எப்பொருள் கூற்றினும்
முந்தையோரை எக் கூற்றின் மொழிவது என்று
அந்தண் பூந்தராய் வேந்தர் அருளினார். 831
ஆதி ஆட்பாலவர்க்கு அருளும் திறம்
நாதன் மாட்சிமை கேட்க நவிலுங்கால்
ஓதும் எல்லை உலப்பில ஆதலின்
யாதும் ஆராய்ச்சி இல்லையாம் என்பதாம். 832
அன்ன ஆதலில் ஆதியார் தாள் அடைந்து
இன்ன கேட்கவே ஏற்ற கோள் பலவும்
முன்னை வல் வினையும் முடிவு எய்தும் அத்
தன்மையார்க்கு என்றனர் சண்பை காவலர். 833
மன்னும் ஏதுக்களால் எனும் வாய்மைதான்
தன்னது ஒப்பு வேறு இன்மையில் சங்கரன்
இன்ன தன்மையை ஏது எடுத்துக் காட்டு
அன்ன ஆற்றால் அளப்பு இலன் என்றதாம். 834
தோன்று காட்சி சுடர் விட்டு உளன் என்பது
ஆன்ற அங்கிப் புறத்து ஒளியாய் அன்பில்
ஊன்ற உள் எழும் சோதியாய் நின்றனன்
ஏன்று காண்பார்க்கு இது பொருள் என்ற தாம். 835
மாதுக்கம் நீங்கல் உறுவீர்
மனம் பற்றும் என்பது
ஆதிச் சுடர்ச் சோதியை
அன்பின் அகத்துள் ஆக்கிப்
போதித்த நோக்கு உற்று
ஒழியாமல் பொருந்தி வாழ்ந்து
பேதித்த பந்தப் பிறப்பின்
நெறி பேர்மின் என்றாம். 836
ஈண்டு சாதுக்கள் என்று
எடுத்து ஓதிற்று
வேண்டும் வேட்கைய
எல்லாம் விமலர்தாள்
பூண்ட அன்பினில்
போற்றுவீர் சார்மின் என்று
ஆண்ட சண்பை
அரசர் அருளினார். 837
ஆடும் எனவாம் திருப்பாட்டின்
அமைத்த மூன்றும்
நீடும் புகழோ பிறர்
துன்பம் நீத்தற்கோ என்று
தேடும் உணர்வீர் உலகுக்கு
இவை செய்த ஈசர்
கூடும் கருணைத் திறம்
என்றனர் கொள்கை மேலோர். 838
கருதும் கடிசேர்ந்த என்னும்
திருப் பாட்டில் ஈசர்
மருவும் பெரும் பூசை
மறுத்தவர்க் கோறல் முத்தி
தரு தன்மையது ஆதல் சண்டீசர்
தம் செய்கை தக்கோர்
பெரிதும் சொலக் கேட்டனம்
என்றனர் பிள்ளையார் தாம். 839
வேத முதல்வன் எனும்
மெய்த் திருப்பாட்டினினேர்
ஆதி உலகோர் இடர்
நீங்கிட ஏத்த ஆடும்
பாத முதலாம் பதிணெண்
புராணங்கள் என்றே
ஓது என்று உரை செய்தனர்
யாவும் ஓதாது உணர்ந்தோர். 840
பாவுற்ற பார் ஆழி
வட்டத் திருப்பாட்டின் உண்மை
காவல் தொழிலான் எனும்
கண்ணனும் காவல் பெற்றது
யாவர்க்கும் மேலாய ஈசன்
அருள் ஆழி பெற்று
மேவுற்ற சீர் உற்றது
என்றனர் வேத வாயர். 841
மாலா யவன் என்ன
வரும் திருப்பாட்டில் மாலும்
தோலா மறை நான்முகனும்
தொடர்வாம் அமரர்
ஏலா வகை சுட்ட நஞ்சு
உண்டு இறவாமை காத்த
மேலாம் கருணைத் திறம்
வெங்குருவேந்தர் வைத்தார். 842
ஆன அற்று அன்றி என்ற
அத்திருப் பாட்டில் கூடல்
மா நகரத்துச் சங்கம்
வைத்தவன் தேற்றத் தேறா
ஈனர்கள் எல்லைக் கிட்ட
ஏடு நீர் எதிர்ந்து செல்லில்
ஞானம் ஈசன் பால் அன்பே
என்றனர் ஞானம் உண்டார். 843
வெறியார் பொழில் சண்பையர்
வேந்தர் மெய்ப் பாசுரத்தைக்
குறி ஏறிய எல்லை
அறிந்து கும்பிட்டேன் அல்லேன்
சிறியேன் அறிவுக்கு அவர்தம்
திருப்பாதம் தந்த
நெறியே சிறிது யான் அறி
நீர்மை கும்பிட்டேன் அன்பால். 844
அலரும் விரை சூழ் பொழில்
காழியுள் ஆதி ஞானம்
மலரும் திருவாக்கு உடை
வள்ளலார் உள்ள வண்ணம்
பலரும் உணர்ந்து உய்யப்
பகர்ந்து வரைந்து ஆற்றில்
நிலவும் திரு ஏடு
திருக்கையால் நீட்டி இட்டார். 845
திருவுடைப் பிள்ளையார் தம்
திருக்கையால் இட்ட ஏடு
மருவிய பிறவி ஆற்றில் மாதவர்
மனம் சென்றால் போல்
பொரு புனல் வைகை ஆற்றில்
எதிர்ந்து நீர் கிழித்துப் போகும்
இரு நிலத்தோர் கட்கு எல்லாம்
இது பொருள் என்று காட்டி. 846
எம்பிரான் சிவனே எல்லாப் பொருளும்
என்று எழுதும் ஏட்டில்
தம்பிரான் அருளால் வேந்தன் தன்னை
முன் ஓங்கப் பாட
அம்புய மலராள் மார்பன்
அனபாயன் என்னும் சீர்த்திச்
செம்பியன் செங்கோல் என்னத் தென்னன்
கூன் நிமிர்ந்தது அன்றே. 847
ஏடு நீர் எதிர்ந்து செல்லும்
பொழுது இமையோர்கள் எல்லாம்
நீடிய வாழ்த்தில் போற்றி
நிமிர்ந்த பூமாரி தூர்த்தார்
ஆடியல் யானை மன்னன்
அற்புதம் எய்தி நின்றான்
பாடு சேர் அமணர் அஞ்சி
பதைப்புடன் பணிந்து நின்றார். 848
ஆற்றின் மேல் செல்லும் ஏடு
தொடர்ந்து எடுப்பதற்கு வேண்டிக்
காற்றென விசையில் செல்லும் கடும்
பரி ஏறிக் கொண்டு
கோல் தொழில் திருத்த வல்ல
குலச்சிறையார் பின் சென்றார்
ஏற்று உயர் கொடியினாரைப்
பாடினார் ஏடு தங்க. 849
ஏடகம் பிள்ளையார் தாம் வன்னி
என்று எடுத்துப் பாடக்
கூடிய நீரில் ஏடு
குலச்சிறை யாரும் கூடிக்
காடு இடமாக
ஆடுங்கண்ணுதல் கோயில்மாடு
நீடுநீர் நடுவுட் புக்கு நின்ற
ஏடு எடுத்துக் கொண்டார். 850
தலை மிசை வைத்துக்கொண்டு
தாங்கரும் மகிழ்ச்சி பொங்க
அலைபுனல் கரையில் ஏறி அங்கு
இனிது அமர்ந்த மேருச்
சிலை உடையவர் தாள் போற்றி
மீண்டு சென்று அணைவார் தெய்வ
மலை மகள் குழைத்த ஞானம்
உண்டவர் தம்பால் வந்தார். 851
மற்றவர் பிள்ளையார் தம் மலர்
அடி வணங்கிப் போற்றிக்
கொற்றவன் முதலாய் உள்ளோர் காண
முன் கொணர்ந்த ஏடு
பற்றிய கையில் ஏந்திப்
பண்பினால் யார்க்கும் காட்ட
அற்றருள் பெற்ற தொண்டர்
அர ஒலி எழுந்ததன்றே. 852
மன்னவன் மாறன் கண்டு
மந்திரியாரை நோக்கி
துன்னிய வாதில் ஒட்டித் தோற்ற
இச் சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளையார் பால் அனுசிதம்
முற்றச் செய் தார்
கொல் நுனைக் கழுவில் ஏற
முறை செய்க என்று கூற. 853
புகலியில் வந்த ஞானப்
புங்கவர் அதனைக் கேட்டும்
இகல் இலர் எனினும் சைவர்
இருந்து வாழ் மடத்தில் தீங்கு
தகவு இலாச் சமணர் செய்த
தன்மையால் சாலும் என்றே
மிகை இலா வேந்தன் செய்கை
விலக்கிடாது இருந்த வேலை. 854
பண்பு உடை அமைச்சனாரும் பார்
உளோர் அறியும் ஆற்றால்
கண்புடை பட்டு நீண்ட
கழுத்தறி நிரையில் ஏற்ற
நண்பு உடை ஞானம் உண்டார்
மடத்துத் தீ நாடி இட்ட
எண் பெரும் குன்றத்து
எண்ணாயிரவரும் ஏறினார்கள். 855
தோற்றவர் கழுவில் ஏறித்
தோற்றிடத் தோற்றும் தம்பம்
ஆற்று இடை அமணர் ஓலை
அழிவினால் ஆர்த்த தம்பம்
வேற்று ஒரு தெய்வம் இன்மை
விளக்கிய பதாகைத் தம்பம்
போற்று சீர்ப் பிள்ளையார் தம்
புகழ்ச் சயத் தம்பம் ஆகும். 856
தென்னவன் தனக்கு நீறு
சிரபுரச் செல்வர் ஈந்தார்
முன்னவன் பணிந்து கொண்டு
முழுவதும் அணிந்து நின்றான்
மன்னன் நீறு அணிந்தான் என்று
மற்றவன் மதுரை வாழ்வார்
துன்னி நின்றார்கள் எல்லாம் தூய
நீறு அணிந்து கொண்டார். 857
பூதி மெய்க்கு அணிந்து வேந்தன்
புனிதனாய் உய்ந்த போது
நீதியும் வேதநீதி ஆகியே
நிகழ்ந்தது எங்கும்
மேதினி புனிதம் ஆக
வெண்ணீற்றின் விரிந்த சோதி
மாதிரம் தூய்மை செய்ய அமண்
இருள் மாய்ந்தது அன்றே. 858
மீனவற்கு உயிரை நல்கி மெய்ந்
நெறி காட்டி மிக்க
ஊனமாம் சமணை நீக்கி உலகு
எலாம் உய்யக் கொண்ட
ஞான சம்பந்தர் வாய்மை
ஞாலத்தில் பெருகி ஓங்கத்
தேனலர் கொன்றையார் தம்
திருநெறி நடந்தது அன்றே. 859
மறையவர் வேள்வி செய்ய
வானவர் மாரி நல்க
இறைவன் நல் நெறியின் ஓங்க
இகத்தினில் அவனி இன்பம்
குறைவிலது எனினுங் கூற்றை
உதைத்தவர் நாமம் கூறி
நிறை கடல் பிறவித் துன்பம்
நீங்கிடப் பெற்றது அன்றே. 860
அங்கயற்கண்ணி தன்னோடு ஆலவாய்
அமர்ந்த அண்ணல்
பங்கயச் செய்ய பாதம் பணிவன்
என்று எழுந்து சென்று
பொங்கு ஒளிச் சிவிகை ஏறிப்
புகலியர் வேந்தர் போந்தார்
மங்கையர்க்கு அரசியாரும் மன்னனும்
போற்றி வந்தார். 861
எண்ணரும் பெருமைத் தொண்டர்
யாவரும் மகிழ்ச்சி எய்திப்
புண்ணியப் பிள்ளையாரைப் புகழ்ந்துடன்
போற்றிப் போத
மண் எலாம் உய்ய வந்த
வள்ளலார் தம்மைக் கண்டு
கண்ணினால் பயன் கொண்டார்கள்
கன்னி நாட்டவர்கள் எல்லாம். 862
ஆலவாய் அண்ணல் கோயில் அம்
கண் முன் தோன்றக் கண்டு
பால் அறாவாயர் மிக்க பண்பினால்
தொழுது சென்று
மாலும் நான்முகனும் போற்ற
மன்னினார் கோயில் வாயில்
சீல மாதவத்தோர் முன்பு சிவிகை
நின்று இழிந்து புக்கார். 863
தென்னவன் தானும் எங்கள்
செம்பியன் மகளார் தாமும்
நன்னெறி அமைச்சனாரும்
ஞான சம்பந்தர் செய்ய
பொன்னடிக் கமலம் போற்றி உடன்
புகப் புனிதர் கோயில்
தன்னை முன் வலம் கொண்டுள்ளால்
சண்பையர் தலைவர் புக்கார். 864
கைகளும் தலை மீது ஏறக்
கண்ணில் ஆனந்த வெள்ளம்
மெய் எலாம் பொழிய வேத
முதல்வரைப் பணிந்து போற்றி
ஐயனே அடியனேனை அஞ்சல்
என்று அருள வல்ல
மெய்யனே என்று வீடல்
ஆலவாய் விளம்பல் உற்றார். 865
ஒன்று வேறு உணர்வும் இல்லேன்
ஒழிவற நிறைந்த கோலம்
மன்றில் நான் மறைகள் ஏத்த
மானுடர் உய்ய வேண்டி
நின்று நீ ஆடல் செய்கை
நினைப்பதே நியமம் ஆகும்
என்று பூம் புகலி மன்னர்
இன் தமிழ்ப் பதிகம் பாட. 866
தென்னவன் பணிந்து நின்று
திரு ஆல வாயில் மேவும்
மன்னனே அமணர் தங்கள்
மாயையால் மயங்கி யாதும்
உன்னை யான் அறிந்திலேனை உறு
பிணி தீர்த்து ஆட் கொள்ள
இன் அருள் பிள்ளையாரைத்
தந்தனை இறைவ என்றான். 867
சீர் உடைப் பிள்ளையாரும்
சிறப்பு உடை அடியாரோடும்
காரினில் பொலிந்த கண்டத்து இறைவர்
தாள் வணங்கிக் காதல்
ஆரருள் பெற்றுப் போற்றி அங்கு
நின்று அரிது நீங்கி
ஏர் இயல் மடத்தில் உள்ளால்
இனிது எழுந்து அருளிப் புக்கார். 868
நீடு சீர்த் தென்னர்
கோனும் நேரியன் பாவையாரும்
மாடு சென்று இறைஞ்சி நோக்கி
மாளிகை தன்னில் போக்கிக்
கூடிய மகிழ்ச்சி பொங்கக்
கும்பிடும் விருப்பினாலே
நாடி அங்கு இருந்து தங்கள்
நாதரைப் பாடல் உற்றார். 869
திருவியமகத்தின் உள்ளும்
திரு நீல கண்டப் பாணர்க்கு
அருளிய திறமும் போற்றி
அவரோடும் அளவளாவித்
தெருள் உடைத் தொண்டர் சூழத்
திருத் தொண்டின் உண்மை நோக்கி
இருள் கெட மண்ணில் வந்தார்
இனிது அமர்ந்து இருந்தார் அன்றே. 870
பூழியன் மதுரை உள்ளார் புறத்து
உளார் அமணர் சேரும்
பாழியும் அருகர் மேவும்
பள்ளியும் ஆன எல்லாம்
கீழ் உறப் பறித்துப் போக்கிக்
கிளர் ஒளித் தூய்மை செய்தே
வாழி அப் பதிகள் எல்லாம்
மங்கலம் பொலியச் செய்தார். 871
மீனவன் தேவி யாரும்
குலச் சிறையாரும் மிக்க
ஞான சம்பந்தர் பாதம் நாள்
தொறும் பணிந்து போற்ற
ஆன சண்பையர் கோனாரும்
ஆலவாய் அமர்ந்தார் பாதம்
ஊன் அமர்ந்து உருக ஏத்தி
உளம் களித்து உறையும் நாளில். 872
செய் தவத்தால் சிவ பாத
இருதயர் தாம் பெற்றெடுத்த
வைதிக சூளா மணியை
மா தவத்தோர் பெரு வாழ்வை
மை திகழும் திரு மிடற்றார்
அருள் பெற்ற வான் பொருளை
எய்திய பூம் புகலியிலே
இருந்த நாள் மிக நினைந்தார். 873
ஆன புகழ்த் திருநாவுக்கரசர்
பால் அவம் செய்த
மானம் இலா அமணர் உடன்
வாது செய்து வெல்வதற்கும்
மீனவன் தன் நாடு உய்ய
வெண் நீறு பெருக்குதற்கும்
போனவர் பால் புகுந்தபடி
அறிவன் எனப் புறப்படுவார். 874
துடி இடையாள் தன்னோடும்
தோணியில் வீற்றிருந்த பிரான்
அடி வணங்கி அலர் சண்பை
அதனின்றும் வழிக் கொண்டு
படியின் மிசை மிக்கு உளவாம்
பரன் கோயில் பணிந்து ஏத்தி
வடி நெடு வேல் மீனவன்
தன் வள நாடு வந்து அணைந்தார். 875
மா மறையோர் வளம் பதிகளிடைத்
தங்கி வழிச் செல்வார்
தே மருவு நறும் பைந்தார்த்
தென்னவன் தன் திரு மதுரை
தாம் அணைந்து திரு ஆலவாய்
அமர்ந்த தனி நாதன்
பூ மருவும் சேவடிக் கீழ்
புக்கு ஆர்வத்தோடும் பணிந்தார். 876
அங்கணரைப் பணிந்து போந்து அருகு
அணைந்தார் தமை வினவ
இங்கு எம்மைக் கண் விடுத்த
காழியார் இள ஏறு
தங்கும் இடம் திரு நீற்றுத்
தொண்டர் குழாம் சாரும் இடம்
செங்கமலத் திருமடம் மற்று இது
என்றே தெரிந்து உரைத்தார். 877
செப்புதலும் அது கேட்டுத்
திரு மடத்தைச் சென்று எய்த
அப்பர் எழுந்து அருளினார் எனக்
கண்டோர் அடி வணங்கி
ஒப்பில் புகழ்ப் பிள்ளையார் தமக்கு
ஓகை உரை செய்ய
எப்பொழுது வந்து அருளிற்று
என்று எதிரே எழுந்தருள. 878
சிவ பாத இருதயர் தாம்
முன் தொழுது சென்று அணையத்
தவம் ஆன நெறி அணையும்
தாதையார் எதிர் தொழுவார்
அவர் சார்வு கண்டு அருளித்
திருத் தோணி அமர்ந்து அருளிப்
பவ பாசம் அறுத்தவர்
தம் பாதங்கள் நினைவுற்றார். 879
இருந்தவத்தோர் அவர் முன்னே
இணை மலர்க்கை குவித்தருளி
அரும் தவத்தீர் எனை அறியாப்
பருவத்தே எடுத்து ஆண்ட
பெருந் தகை எம் பெருமாட்டி
உடன் இருந்ததே என்று
பொருந்து புகழ்ப் புகலியின் மேல்
திருப் பதிகம் போற்றி இசைத்தார். 880
மண்ணின் நல்ல என்று எடுத்து
மனத்து எழுந்த பெரு மகிழ்ச்சி
உள் நிறைந்த காதலினால்
கண் அருவி பாய்ந்து ஒழுக
அண்ணலார் தமைவினவித் திருப்பதிகம்
அருள் செய்தார்
தண் நறும்பூஞ் செங்கமலத்தார்
அணிந்த தமிழ் விரகர். 881
திருப் பதிகம் திருக்கடைக் காப்புச்
சாத்திச் சிறப்பின் மிகு
விருப்பினால் அவர் தமக்கு விருந்து
அளித்து மேவும் நாள்
அருப்புறு மெய்க் காதல்
புரி அடியவர்கள் தம்மோடும்
பொருப்புறு கைச் சிலையார் சேர்
பதி பிறவும் தொழப் போவார். 882
ஆலின் கீழ் நால்வர்க்கு அன்று
அறம் உரைத்த அங்கணனை
நூலின் கண் பொருள்பாடி
நூல் அறிவார்க்கு ஈந்தானைக்
காலம் பெற்று இனிது இறைஞ்சிக்
கை தொழுது புறம் போந்தார்
சீலம் கொள் தென்னவனும்
தேவியரும் உடன் போத. 883
தேன் நிலவு பொழில் மதுரைப் புறத்துப்
போந்த தென்னவனார் தேவியார் அமைச்சர்சிந்தை
ஊன் நெகிழும் படி அழிந்து அங்கு ஒழுகு
கண்ணீர் பாய்ந்து இழிய உணர்வு இன்றி வீழக் கண்டே
யான் உம்மைப் பிரியாத வண்ணம் இந் நாட்டு
இறைவர் பதி எனைப்பலவும் பணீவீர் என்று
ஞானம் உணர்வார் அருள அவரும் போத
நம்பர் திருப்பரங்குன்றை நண்ணினாரே. 884
ஆறு அணிந்தார் தமை வணங்கி அங்குப்
போற்றி அணி ஆப்பனூரை அணைந்து பணிந்துபாடி
நீறு அணிந்த செல்வர் பதி பிறவும் சேர்ந்து
நிலவு திருப் பதிகங்கள் நிகழப் பாடிச்
சேறு அணிந்த வயற் பழனக் கழனி
சூழ்ந்த சிரபுரத்து வந்தருளும் செல்வர் செங்கண்
ஏறு அணிந்த வெல் கொடியார் திருப்புத்தூரை
எய்தி இறைஞ்சிச் சில நாள் இருந்தார் அன்றே. 885
பற்றார் தம் புரங்கள் மலைச் சிலையால்
செற்ற பரமனார் திருப்புத்தூர் பணிந்து போந்து
புற்று ஆரும் பணி பூண்ட புனிதனார் தம்
பூவணத்தைப் புக்கு இறைஞ்சிப் புகழ்ந்து பாடிக்
கற்றார்கள் தொழுது ஏத்தும் கானப் பேரும்
கைதொழுது தமிழ் பாடிச் சுழியல் போற்றிக்
குற்றாலம் குறும்பலாக் கும்பிட்டு ஏத்திக்
கூற்று உகைத்தார் நெல்வேலி குறுகினாரே. 886
புண்ணியனார் நெல்வேலி பணிந்து போற்றிப்
புரிசடையார் திருப்பதிகள் பிறவும் சென்று
நண்ணி இனிது அமர்ந்து அங்கு நயந்து
பாடி நல்தொண்டருடன் நாளும் போற்றிச் செல்வார்
விண்ணவரைச் செற்று உகந்தான் இலங்கை செற்ற
மிக்க பெரும் பாதகத்தை நீக்க வேண்டித்
திண்ணிய பொற் சிலைத் தடக்கை இராமன் செய்த
திரு இராமேச் சுரத்தைச் சென்று சேர்ந்தார். 887
செங்கண் மால் வழிபட்ட கோயில் நண்ணித்
திருமுன்பு தாழ்ந்து எழுந்து தென்ன னோடு
மங்கையர்க்கு நாயகியார் தாமும் மெய்ம்மை
மந்திரியாரும் சூழ் மணி நீள் வாயில்
பொங்கி எழும் விருப்பினால் உடனே புக்குப்
புடைவலம் கொண்டு உள் அணைவார் போற்றி செய்து
பங்கயச் செங்கை குவித்துப் பணிந்து நின்று
பாடினார் மன்னவனும் பரவி ஏத்த. 888
சேதுவின்கட் செங்கண் மால் பூசை செய்த
சிவபெருமான் தனைப்பாடிப் பணிந்து போந்து
காதலுடன் அந் நகரில் இனிது மேவிக்
கண் நுதலான் திருத் தொண்டனார்க் கெல்லாம்
கோதில் புகழ்ப் பாண்டிமா தேவி யார் மெய்க்
குலச்சிறையார் குறைவு அறுத்துப் போற்றிச் செல்ல
நாதர் தமை நாள் தோறும் வணங்கி ஏத்தி
நளிர் வேலைக் கரையில் நயந்து இருந்தார் அன்றே. 889
அந்நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவி
ஆழிபுடை சூழ்ந்து ஒலிக்கும் ஈழம் தன்னில்
மன்னு திருக்கோண மலை மகிழ்ந்த செங்கண்
மழ விடையார் தமைப் போற்றி வணங்கிப்பாடிச்
சென்னி மதி புனை மாட மாதோட்டத்தில்
திருக் கேதீச் சரத்து அண்ணல் செய்ய பாதம்
உன்னி மிகப் பணிந்து ஏத்தி அன்பரோடும்
உலவாத கிழி பெற்றார் உவகை உற்றார். 890
அப் பதியைத் தொழுது வடதிசை மேல் செல்வார்
அங்கை அனல் தரித்த பிரான் அமரும் கோயில்
புக்கு இறைஞ்சிப் பல பதியும் தொழுது போற்றிப்
புணரி பொரு தலை கரைவாய் ஒழியப் போந்தே
செப்பரிய புகழ்த் திருவாடானை சேர்ந்து செந்தமிழ்
மாலைகள் சாத்திச் சிவனார் மன்னும்
ஒப்பரிய புனவாயில் போற்றி செய்து வணங்கினார்
உலகு உய்ய ஞானம் உண்டார். 891
பதி நிலவு பாண்டி நாடு அதனில் முக்கண்
பரமனார் மகிழ்விடங்கள் பலவும் போற்றி
விதி நிலவு வேத நூல் நெறியே ஆக்கி
வெண்ணீற்றின் சார்வினால் மிக்கு உயர்ந்த
கதி அருளிக் காழிநகர் வாழ வந்தார் கண்
நுதலான் திருத்தொண்டர் பலரும் சூழ
மதி நிலவு குலவேந்தன் போற்றிச் செல்ல
மந்திரியார் பதி மண மேற்குடியில் வந்தார். 892
அந் நகரில் இனிது அமர்வார் அருகு சூழ்ந்த
பதிகளில் நீடு அங்கணர் தம் கோயில் தாழ்ந்து
மன்னு திருத் தொண்டருடன் மீண்டு
சேர்ந்து மன்னவனும் மங்கையருக்கு அரசியாரும்
கொன்னவில் வேல் குலச்சிறையார் தாமும் கூடிக்
குரைகழல்கள் பணிந்து குறை கொண்டு போற்றச்
சென்னி வளர் மதி அணிந்தார் பாதம் போற்றிச்
சிரபுரத்துச் செல்வர் இனிது இருந்த நாளில். 893
பொங்கு புனல் காவிரி நாடு அதனின் மீண்டு
போதுதற்குத் திருவுள்ளம் ஆகப் பெற்று
மங்கையருக்கு அரசியார் தாமும் தென்னர்
மன்னவனும் மந்திரியார் தாமும் கூட
அங்கு அவர் தம் திருப்பாதம் பிரியல் ஆற்றாது
உடன் போக ஒருப்படும் அவ்வளவு நோக்கி
இங்கு நான் மொழிந்ததனுக்கு இசைந்தீர்
ஆகில் ஈசர் சிவநெறி போற்றி இருப்பீர் என்று. 894
சால மிகத் தளர் வாரைத் தளரா வண்ணம்
தகுவன மற்று அவர்க்கு அருளிச் செய்த பின்பு
மேலவர் தம் பணி மறுக்க அவரும் அஞ்சி
மீள்வதனுக்கு இசைந்து திருவடியில் வீழ்ந்து
ஞாலம் உய்ய வந்து அருளும் பிள்ளையாரைப்
பிரியாத நண்பினொடும் தொழுது நின்றார்
ஆல விடம் உண்டவரை அடிகள் போற்ற
அந் நாட்டை அகன்று மீண்டு அணையச் செல்வார். 895
பொன்னி வளம் தரு நாடு புகுந்து மிக்க
பொருவில் சீர்த் திருத் தொண்டர் குழாத்தினோடும்
பன்னகப் பூண் அணிந்தவர் தம் கோயில் தோறும்
பத்தருடன் பதி உள்ளோர் போற்றச் சென்று
கன்னி மதில் திருக்களரும் போற்றிக்
கண்டம் கறை அணிந்தார் பாதாளீச்சுரமும் பாடி
முன் அணைந்த பதி பிறவும் பணிந்து போற்றி
முள்ளிவாய்க் கரை அணைந்தார் முந்நூல் மார்பர். 896
மலைவளர் சந்தனம் அகிலும் தேக்கும் உந்தி மலர்ப்
பிறங்கல் வண்டு இரைப்பச் சுமந்து பொங்கி
அலை பெருகி ஆள் இயங்கா வண்ணம்
ஆறு பெருகுதலால் அத்துறையில் அணையும் ஓடம்
நிலை புரியும் ஓடக் கோல் நிலை இலாமை
நீர் வாழ்நர் கரையின் கண் நிறுத்திப் போகக்
கலை பயிலும் கவுணியர் கோன் அதனைக் கண்டு
அக் கரையின் கண் எழுந்தருளி நின்ற காலை. 897
தேவர் பிரான் அமர்ந்த திருக்கொள்ளம் பூதூர் எதிர்
தோன்றத் திரு உள்ளம் பணியச் சென்று
மேவுதலால் ஓடங்கள் விடுவார் இன்றி
ஒழிந்திடவும் மிக்கதோர் விரைவால் சண்பைக்
காவலனார் ஓடத்தின் கட்டு அவிழ்த்துக் கண்
நுதலான் திருத்தொண்டர் தம்மை ஏற்றி
நாவலமே கோலாக அதன் மேல் நின்று
நம்பர் தமைக் கொட்டம் என நவின்று பாட. 898
உம்பர் உய்ய நஞ்சு உண்டார் அருளால் ஓடம்
செலச் செல்ல உந்து தலால் ஊடு சென்று
செம் பொன் நேர் சடையார் தம் கொள்ளம்
பூதூர் தனைச் சேர அக்கரையில் சேர்ந்த பின்பு
நம்பர் அவர் தமை வணங்க ஞானம்
உண்ட பிள்ளையார் நல் தொண்டருடன் இழிந்து
வம்பலரும் நறும் கொன்றை நயந்தார் கோயில்
வாயிலின் முன் மகிழ்ச்சியொடு வந்து சார்ந்தார். 899
நீண் நிலைக் கோபுரம் அதனை இறைஞ்சி புக்கு
நிகர் இலாத் தொண்டருடன் நெருங்கச் சென்று
வாணிலவு கோயிலினை வலம் கொண்டு எய்தி
மதிச் சடையார் திரு முன்பு வணங்கி நின்று
தாணுவே ஆற்றின் கண் ஓடம் உய்க்கும்
தன்மையால் அருள் தந்த தலைவா நாகப்
பூணினாய் களிற்றுரிவை போர்த்த முக்கண் புனிதனே
எனப் பணிந்து போற்றிச் செய்தார். 900
போற்றி இசைத்துப் புறம் போந்து அங்கு உறையும்
நாளில் பூழியன் முன் புன்சமயத்து அமணர் தம்மோடு
ஏற்ற பெரு வாதின் கண் எரியின் வேவாப்
பதிகம் உடை இறையவரை இறைஞ்ச வேண்டி
ஆற்றவும் அங்கு அருள் பெற்றுப் போந்து முன்னம்
அணைந்த பதிகளும் இறைஞ்சி அன்பர் சூழ
நாற்றிசையும் பரவும் திரு நள்ளாறு எய்தி
நாடு உடை நாயகர் கோயில் நண்ணினாரே. 901
நீடு திருத் தொண்டர் புடை சூழ அங்கண் நித்தில
யானத்திடை நின்று இழிந்து சென்று
பீடு உடைய திருவாயில் பணிந்து புக்குப்
பிறை அணிந்த சென்னியார் மன்னும் கோயில்
மாடு வலம் கொண்டு உள்ளால் மகிழ்ந்து புக்கு
மலர்க் கரங்கள் குவித்து இறைஞ்சி வள்ளலாரைப்
பாடக மெல் அடி எடுத்துப் பாடி நின்று
பரவினார் கண் அருவி பரந்து பாய. 902
தென்னவர் கோன் முன் அமணர் செய்த வாதில்
தீயின் கண் இடும் ஏடு பச்சையாக்கி
என் உள்ளத் துணையாகி ஆலவயில் அமர்ந்து
இருந்தவாறு என் கொல் எந்தாய் என்று
பன்னு தமிழ்த் தொடை சாத்திப் பரவிப்போந்து
பண்பினிய தொண்டருடன் அங்குவைகி
மன்னுப்புகழ்ப் பதி பிறவும் வணங்கச் சண்பை
வள்ளலார் நள்ளாறு வணங்கிச் செல்வார். 903
சீர் நிலவு திருத்தெளிச் சேரியினைச் சேர்ந்து
சிவபெருமான் தனைப் பரவிச் செல்லும் போது
சார்வு அறியாச் சாக்கியர்தம் போதி மங்கை
சார்தலும் மற்று அது அறிந்த சைவர் எல்லாம்
ஆர் கலியின் கிளர்ச்சி எனச் சங்கு
தாரை அளவிறந்த பல்லியங்கள் முழக்கி ஆர்த்துப்
பார் குலவு தனிக் காளம் சின்னம் எல்லாம்
பரசமய கோளரி வந்தான் என்று ஊத. 904
புல் அறிவில் சாக்கியர்கள் அறிந்தார் கூடிப்
புகலியர் தம் புரவலனார் புகுந்து தங்கள்
எல்லையினில் எழுந்து அருளும் பொழுது தொண்டர்
எடுத்த ஆர்ப்பு ஒலியாலும் எதிர் முன் சென்று
மல்கி எழும் திருச்சின்ன ஒலிகளாலும் மனம்
கொண்ட பொறாமையினால் மருண்டு தங்கள்
கல்வியினில் மேம்பட்ட புத்த நந்தி
முதலான தேரர்க்கும் கனன்று சொன்னார். 905
மற்றவர்கள் வெவ்வுரையும் பிள்ளையார் முன்
வருசின்னப் பெருகு ஒலியும் மன்னும் தொண்டர்
பொற்பு உடைய ஆர்ப்பு ஒலியும் செவியின்
ஊடு புடைத்த நாராசம் எனப் புக்க போது
செற்றமிகு உள்ளத்துப் புத்த நந்தி செயிர்த்து
எழுந்து தேரர் குழாம் சூழச் சென்று
வெற்றிபுனை சின்னங்கள் வாதில் எமை வென்றன்றோ
பிடிப்பது என வெகுண்டு சொன்னான். 906
புத்தர் இனம் புடை சூழப் புத்த நந்தி
பொருவில் ஞானப் புனிதர் திருமுன்பு ஊதும்
மெய்த்த விறல் சின்னங்கள் விலக்கும் காலை
வெகுண்டு எழுந்த திருத்தொண்டர் வெறுத்து நோக்கி
இத்தகைய செயற்கு இவரைத் தடிதல் செய்யாது
இது பொறுக்கில் தங்கள் நிலை ஏற்பர் என்று
முத்து நிரைச் சிவிகையின் மேல் மணியை வந்து
முறை பணிந்து புகுந்தபடி மொழிந்து நின்றார். 907
வரும் இடத்தில் அழகு இதாம் நமக்கு வாதில்
மற்று இவர் தம் பொருள் நிலைமை மறாத வண்ணம்
பொரும் இடத்தில் அறிகின்றோம் புத்த நந்தி பொய்ம்
மேற் கோள் எனப் புகலி வேந்தர் கூற
அருமறை சொல் திருப்பதிகம் எழுதும்
அன்பர் ஆளுடைய பிள்ளையார் திருவாக்காலே
உரும் இடித்து விழப் புத்தன் உத்த மாங்கம்
உருண்டு வீழ்க எனப் பொறா உரை முன் விட்டார். 908
ஏறு உயர்த்தார் சைவ நெறி ஆணை உய்க்க
எதிர் விலக்கும் இடையூற்றை எறிந்து நீக்கும்
மாறில் வலி மந்திரமாம் அசனி போல
வாய்மை உரைத் திருத் தொண்டர் வாக்கினாலே
வேறு மொழிப் போர் ஏற்பான் வந்த
புத்தன் மேனியையும் தலையினையும் வெவ்வேறாகக்
கூறுபட நூறி இடப் புத்தர் கூட்டம் குலைந்து
ஓடி விழுந்து வெருக் கொண்டது அன்றே. 909
மற்றவர்கள் நிலைமையையும் புத்த நந்தி வாக்கின்
போர் ஏற்றவன் தன் தலையும் மெய்யும்
அற்று விழ அத்திர வாக்கு அதனால் அன்பர்
அறுத்ததுவும் கண்ட அரன் அடியார் எல்லாம்
வெற்றி தரும்பிள்ளையார் தமக்குச் சென்று விண்ணப்பம்
செய எதிர்ந்த விலக்கு நீங்க
உற்ற விதி அதுவே யாம் அர என்று எல்லாம்
ஒதுக என அவ்வொலி வான் உற்றது அன்றே. 910
அஞ்சி அகன்று ஓடிய அப்புத்தர் எள்லாம்
அதிசயித்து மீண்டும் உடன் அணைந்து கூடி
வஞ்சனையோ இதுதான் மற்றவர்தம் சைவ
வாய்மையோ என மருண்டு மனத்தில் கொள்வார்
எஞ்சலின் மந்திர வாதம் அன்றி எம்மோடு
பொருள் பேசுவற்கு இசைவது என்று
தம் செயலின் மிக்கு உள்ள சாரி புத்தன்
தன்னையே முன் கொண்டு பின்னும் சார்ந்தார். 911
அத்தன்மை கேட்டருளிச் சண்பை வந்த அடல்
ஏறு திரு உள்ளத்து அழகு இது என்று
மெத்த மகிழ்ச்சியினோடும் விரைந்து சென்று வெண்
தரளச் சிவிகையினின்று இழிந்து வேறு ஓர்
சத்திரமண்டபத்தின் மிசை ஏறி நீடு
சைவருடன் எழுந்தருளி இருந்து சாரும்
புத்தர்களை அழைக்க எனத் திரு முன் நின்றார்
புகலி காவலர் ஏவல் போற்றிச் சென்றார். 912
சென்றவர்கள் தேரர் குழாம் அணைந்து நீங்கள்
செப்பிவரும் பொருள் நிலைமை தெரிக்க எங்கள்
வென்றி மழ இளம் களிறு சண்பை யாளி
வேத பாரகன் மும்மைத் தமிழின் வேந்தன்
நன்று மகிழ்ந்து அழைக்கின்றான் ஈண்டநீரும்
நண்ணும் எனக் கூறுதலும் நன்மை சாராத்
தன் தகைமைப் புத்தருடன் சாரி புத்தன்
சத்திர மண்டபம் முன்பு சார வந்தான். 913
அங்கு அணைந்து மண்டபத்துப் புத்தரோடும்
பிள்ளையார் அருகு அணைய நின்ற போதில்
எங்கும் நிகழ் திருச்சின்னம் தடுத்த புத்தன்
இரும் சிரத்தைப் பொடி ஆக்கும் எதிரில் அன்பர்
பொங்கு புகழ்ப் புகலி காவலர் தம் பாதம்
போற்றி அருளால் சாரிபுத்தன் தன்னை
உங்கள் தலைவனும் பொருளும் உரைக்க என்ன
உற்ற வாதினை மேற்கொண்டு உரை செய்கின்றான். 914
கற்பங்கள் அனைத்தினிலும் பிறந்து வீந்து
கதிமாறும் கணபங்க இயல்பு தன்னில்
பொற்புடைய தானமே தவமே தன்மை புரிந்த
நிலை யோகமே பொருந்தச் செய்ய
உற்பவிக்கும் ஒழிவு இன்றி உரைத்த ஞானத்து
ஒழியாத பேரின்ப முத்தி பெற்றான்
பற்பலரும் பிழைத்து உய்ய அறமுன் சொன்ன
பான்மை யான் யாங்கள் தொழும் பரமன் என்றான். 915
என்று உரைத்த சாரி புத்தன் எதிர் வந்து
ஏற்ற இரும் தவத்துப் பெரும் தன்மை அன்பர்தாமும்
நன்று உமது தலைவன் தான் பெற்றான் என்று
நாட்டுகின்ற முத்தி தான் யாவது என்றார்
நின்றவுரு வேதனையே குறிப்புச் செய்கை நேர்
நின்ற ஞானம் என நிகழ்ந்த ஐந்தும்
ஒன்றிய அகந்தத்த விவேமுத்தி என்ன உரை
செய்தான் பிடகத்தின் உணர்வு மிக்கான். 916
ஆங்கு அவன்தான் உரைத்த மொழி கேட்ட
அன்பர் அதனை அனுவாதம் செய்தவனை நோக்கித்
தாங்கிய ஞானத்துடனாங்கு அந்தம் ஐந்தும் தாம்
வீந்து கெட்டன வேல் தலைவன் தானும்
ஈங்கு உளன் என்ற அவனுக்கு விடயம்
ஆக யாவையும் முன் இயற்றுதற்கு விகாரமே செய்து
ஓங்கு வடிவு அமைத்து விழ எடுக்கும் பூசை
கொள்வார் ஆர் உரைக்க என உரைக்கல் உற்றான். 917
கந்தமாம் வினை உடம்பு நீங்கி எம் கோன்
கலந்து உளன் முத்தியில் என்றான் என்னக் காணும்
இந்திரியம் கண் முதல் ஆம் கரணம் தானும்
இல்லையேல் அவர் உணர்ச்சி இல்லை என்றார்
முந்தை அறிவிலன் ஆகி உறங்கினானை நிந்தித்து
மொழிந்து உடல் மீது ஆடினார்க்கு
வந்த வினைப் பயன் போல வழிபட்டார்க்கும் வரும்
அன்றோ நன்மை என மறுத்துச் சொன்னான். 918
சொன்ன உரை கேட்டு அருளி அன்பர்
தாமும் தொடர்ந்த வழிபாடு பல கொள்கின்றானுக்கு
அன்னவற்றின் உடன்பாடும் எதிர்வும் இல்லை ஆன
போது அவன் பெறுதல் இல்லை என்றார்
முன் அவற்றில் உடன்பாடும் எதிர்வும் இன்றி
முறுகு துயில் உற்றானை முனிந்து கொன்றால்
இன் உயிர் போய்க் கொலை ஆகி முடிந்தது
அன்றோ இப்படியால் எம் இறைவற்கு எய்தும் என்றான். 919
இப்படியால் எய்தும் என இசைத்து நீ இங்கு
எடுத்துக் காட்டிய துயிலும் இயல்பினான் போல்
மெய்ப் படிய கரணங்கள் உயிர் தாம் இங்கு
வேண்டுதியால் நும் இறைவற்கு ஆன போது
செப்பிய அக் கந்தத்தின் விளைவு இன்றாகித் திரிவு
இல்லா முத்தியில் சென்று இலனும் ஆனான்
அப்படி அக் கந்தத்துள் அறிவும் கெட்டால்
அம்முத்தியுடன் இன்பம் அணையாது என்றார். 920
அவ் உரை கேட்டு எதிர் மாற்றம் அறைவது
இன்றி அணைந்துடன் அம்முத்தி எனும் அதுவும் பாழாம்
கவ்வையில் நின்றவனை எதிர் நோக்கி ஞானக்
கடல் அமுதம் அனையவர் தம் காதல் அன்பர்
பொய்வகையே முத்தியினில் போனான் முன்பே பொருள்
எல்லாம் உணர்ந்து உரைத்துப் போனான் என்றாய்
எவ்வகையால் அவன் எல்லாம் உணர்ந்த தீதும்
இல்லது உரைப்பாய் எனினும் ஏற்போம் என்றார். 921
உணர்வு பொதுச் சிறப்பு என்ன இரண்டின் முன்
உளவான மரப் பொதுமை உணர்த்தல் ஏனைப்
புணர் சிறப்பு மரங்களில் வைத்து இன்னது என்றல்
இப்படியால் வரம்பு இல்லா பொருள்கள் எல்லாம்
கொணரும் விறகினைக் குவை செய்திடினும் வேறு
குறைத்து அவற்றை தனித்தனியே இடினும் வெந்தீத்து
உணர் கதுவிச் சுடவல்ல வாறு போலத்
தொகுத்தும் விரித்தும் தெரிக்கும் தொல்லோன் என்றான். 922
எடுத்து உரைத்த புத்தன் எதிர் இயம்பும் அன்பர்
எரி உணர்வுக்கு எடுத்துக் காட்டாகச் சொன்னாய்
அடுத்த உணர்வு உரு உடையது அன்று சொன்ன
அனல் வடிவிற்றாம் அதுவும் அறிதி நுங்கோன்
தொடுத்த நிகழ்காலமே அன்றி ஏனைத் தொடர்ந்த
இரு காலமும் தொக்கு அறியும் ஆகில்
கடுத்த எரி நிகழ் காலத்து இட்டது
அல்லால் காணாத காலத்துக் கதுவாது என்றார். 923
ஆதலினால் உன் இறைவன் பொருள்கள் எல்லாம்
அறிந்த நும் முத்தி போல் ஆயிற்று அன்றே
ஏதமாம் இவ் அறிவால் உரைத்த நூலும்
என்றவனுக்கு ஏற்குமாறு அருளிச் செய்ய
வாதம் மாறு ஒன்று இன்றித் தோற்றான் புத்தன்
மற்று அவனை வென்று அருளிப் புகலி மன்னர்
பாத தாமரை பணிந்தார் அன்பர் தங்கள்
பான்மையழி புத்தர்களும் பணிந்து வீழ்ந்தார். 924
புந்தியினால் அவர் உரைத்த பொருளின் தன்மை
பொருள் அன்றாம் படி அன்பர் பொருந்தக் கூற
மந்தவுணர்வு உடையவரை நோக்கிச் சைவம்
அல்லாது மற்று ஒன்றும் இல்லை என்றே
அந்தமில் சீர் மறைகள் ஆகமங்கள் ஏனை அகில
கலைப் பொருள் உணர்ந்தார் அருளிச் செய்யச்
சிந்தையினில் அது தெளிந்து புத்தர் சண்பைத்
திரு மறையோர் சேவடிக்கீழ்ச் சென்று தாழ்ந்தார். 925
அன்று அவர்க்குக் கவுணியர் கோன் கருணை
நோக்கம் அணைதலினால் அறிவின்மைஅகன்று நீங்கி
முன் தொழுது விழுந்து எழுந்து சைவர் ஆனார்
முகைமலர் மாரியின் வெள்ளம் பொழிந்தது எங்கும்
நின்றனவும் சரிப்பனவும் சைவமேயாம் நிலைமை
அவர்க்கு அருள் செய்து சண்பை வேந்தர்
சென்று சிவனார் பதிகள் பணிய வேண்டித்
திருக்கடவூர் அதன் மருங்கு சேர வந்தார். 926
அந்நகரில் அடியார்கள் எதிர்
கொள்ளப் புக்கு அருளி
கொன்னவிலும் கூற்று உதைத்தார் குரை
கழல்கள் பணிந்து ஏத்தி
மன்னி அமர்ந்து உறையும்
நாள் வாகீசமா முனிவர்
எந்நகரில் எழுந்து அருளிற்று என்று
அடியார் தமை வினவ. 927
அங்கு அவரும் அடி போற்றி
ஆண்ட அரசு எழுந்து அருளிப்
பொங்கு புனல் பூந்துருத்தி நகரின்
கண் போற்றி இசைத்து
தங்கு திருத்தொண்டு செயும்
மகிழ்ச்சியினால் சார்ந்து அருளி
எங்கும் நிகழ்ந்திட இருந்தபடி
எல்லாம் இயம்பினார். 928
அப்பரிசு அங்கு அவர் மொழிய
ஆண்ட அரசினைக் காணும்
ஒப்பரிய பெருவிருப்பு மிக்கு
ஓங்க ஒளிபெருகு
மைப் பொருவு கறைக் கண்டர்
கழல் வணங்கி அருள் பெற்றுச்
செப்பரிய புகழ்ப் புகலிப்
பிள்ளையார் செல்கின்றார். 929
பூ விரியும் தடம் சோலை
புடை பரப்பப் புனல் பரக்கும்
காவிரியின் தென்கரை போய்க்கண்
நுதலார் மகிழ்ந்த இடம்
மேவி இனிது அமர்ந்து இறைஞ்சி
விருப்பு உறுமெய்த் தொண்டரோடு
நாவரசர் உழைச் சண்பை
நகர் அரசர் நண்ணுவார். 930
அந்தணர் சூளா மணியார்
பூந்துருத்திக்கு அணித்தாக
வந்தருளும் பெருவார்த்தை
வாகீசர் கேட்டருளி
நம் தமையாளுடையவரை நாம்
எதிர் சென்று இறைஞ்சுவது
முந்தை வினைப்பயன் என்று முகம்
மலர அகம் மலர்வார். 931
எதிர் சென்று பணிவன்
என எழுகின்ற பெருவிருப்பால்
நதி தங்கு சடை முடியார்
நற்பதங்கள் தொழுது அந்தப்
பதி நின்றும் புறப்பட்டு பர
சமயம் சிதைத்தவர் பால்
முதிர்கின்ற பெரும் தவத்தோர் முன்
எய்த வந்து அணைந்தார். 932
திருச்சின்னம் பணிமாறக் கேட்ட
நால்திசை உள்ளோர்
பெருக்கின்ற ஆர்வத்தால் பிள்ளையார்
தமைச் சூழ்ந்த
நெருக்கினிடை யவர் காணா வகை
நிலத்துப் பணிந்து உள்ளம்
உருக்கி எழும் மனம் பொங்கத்
தொண்டர் குழாத்துடன் அணைந்தார். 933
வந்து அணைந்த வாகீசர் வண்
புகலி வாழ் வேந்தர்
சந்த மணித் திருமுத்தின்
சிவிகையினைத் தாங்கியே
சிந்தை களிப்பு உற
வந்தார் திருஞான சம்பந்தர்
புந்தியில் வேறு ஒன்று
நிகழ்ந்திட முன் புகல்கின்றார். 934
அப்பர் தாம் எங்கு உற்றார்
இப்பொழுது என்று அருள் செய்யக்
செப்பரிய புகழ்த் திருநாவுக்
கரசர் செப்புவார்
ஒப்பரிய தவம் செய்தேன்
ஆதலினால் உம் அடிகள்
இப்பொழுது தாங்கிவரப் பெற்று
உய்ந்தேன் யான் என்றார். 935
அவ் வார்த்தை கேட்டு அஞ்சி
அவனியின் மேல் இழிந்தருளி
இவ்வாறு செய்தருளிற்று என்னாம்
என்று இறைஞ்சுதலும்
செவ்வாறு மொழி நாவலர்
திருஞான சம்பந்தர்க்கு
எவ்வாறு செயத் தகுவது
என்று எதிரே இறைஞ்சினார். 936
சூழ்ந்து மிடைந்தருகணையும் தொண்டர்
எல்லாம் அது கண்டு
தாழ்ந்து நிலம் உற வணங்கி
எழுந்து தலை கை குவித்து
வாழ்ந்து மனக் களிப்பினராய் மற்று
இவரை வணங்கப் பெற்று
ஆழ்ந்த பிறப்பு உய்ந்தோம் என்று
அண்டமெலாம் உற ஆர்த்தார். 937
திருஞான சம்பந்தர்
திருநாவுக்கரசர் தமைப்
பெருகு ஆர்வத் தொடும் அணைந்து
தழீஇக் கொள்ளப் பிள்ளையார்
மருவாரும் மலர் அடிகள் வணங்கி
உடன் வந்து அணைந்தார்
பொருவாரும் புனல் சடையார்
மகிழ்ந்த திருப்பூந் துருத்தி. 938
அன்பர் குழாத்தொடும் செல்வார் ஆன்
ஏற்றார் மகிழ் கோயில்
முன் பணித்து ஆகச் சென்று
கோபுரத்தை முன் இறைஞ்சித்
துன்பம் இலாத் திருத்
தொண்டருடன் தொழுது புக்கருளி
என்பு உருக வலம் கொண்டு
பணிந்து ஏத்தி இறைஞ்சினார். 939
பொய்யிலியாரைப் பணிந்து போற்றியே
புறத்து அணைவார்
செய்ய சடையார் கோயில்
திருவாயில் முன்னாக
மையறு சீர்த் தொண்டர் குழாம்
வந்து புடை சூழ உலகு
உய்யவருவார் தங்களுடன் மகிழ்ந்து
அங்கு இனிது இருந்தார். 940
வாக்கின் தனி மன்னர்
வண்புகலி வேந்தர் தமை
போக்கும் வரவும் வினவப்
புகுந்தது எல்லாம்
தூக்கின் தமிழ் விரகர்
சொல்லிறந்த ஞான மறை
தேக்கும் திருவாயால் செப்பி
அருள் செய்தார். 941
காழியினில் வந்த கவுணியர்
தம் போர் ஏற்றை
ஆழி மிசைக் கல்
மிதப்பில் வந்தார் அடிவணங்கி
வாழி திருத்தொண்டு என்னும்
வான் பயிர்தான் ஒங்குதற்குச்
சூழும் பெரு வேலி
ஆனீர் எனத் தொழுதார். 942
பிள்ளையார் தாமும் அவர்
முன் தொழுது பேரன்பின்
வெள்ளம் அனைய புகழ்
மானியர் மேன்மையையும்
கொள்ளும் பெருமைக்
குலச் சிறையார் தொண்டினையும்
உள்ள பரிசு எல்லாம் மொழிந்து
அங்கு உவந்து இருந்தார். 943
தென்னற்கு உயிரோடு நீறு
அளித்துச் செங்கமலத்து
அன்னம் அனையார்க்கும் அமைச்சர்க்கும்
அன்பு அருளித்
துன்னும் நெறி வைதிகத்தின்
தூ நெறியே ஆக்குதலால்
மன்னு புகழ் வாகீசர்
கேட்டு மனம் மகிழ்ந்தார். 944
சொல்லின் பெரு வேந்தர் தொண்டை
வள நாடு எய்தி
மல்கு புகழ்க் காஞ்சி
ஏகாம்பரம் மன்னும்
செல்வர் கழல் பணிந்து
சென்றது எல்லாம் செப்புதலும்
புல்கு நூல் மார்பரும் போய்ப்
போற்றும் திறம் புரிந்தார். 945
அங்கணரைப் போற்றி எழுந்து
ஆண்ட அரசு அமர்ந்த
பொங்கு திரு மடத்தில் புக்கு
அங்கு இனிது அமர்ந்து
திங்கள் பகவணியும்
சென்னியார் சேவடிக்கீழ்த்
தங்கு மனத்தோடு தாள்
பரவிச் செல்லும் நாள். 946
வாகீச மாமுனிவர் மன்னும்
திரு ஆலவாய்
நாகம் அரைக்கு அசைத்த
நம்பர் கழல் வணங்கப்
போகும் பெரு விருப்புப்
பொங்கப் புகலியின்மேல்
ஏகும் பெரும் காதல்
பிள்ளையார் ஏற்று எழுவார். 947
மாடு புனல் பொன்னி
இழிந்து வட கரையில்
நீடு திரு நெய்த்தானம்
ஐயாறு நேர்ந்து இறைஞ்சிப்
பாடு தமிழ் மாலைகளும்
சாத்திப் பரவிப் போய்
ஆடல் புரிந்தார் திருப் பழனம்
சென்று அணைந்தார். 949
செங்கண் விடையார் திருப் பழனம்
சேர்ந்து இறைஞ்சிப்
பொங்கிய காதலின் முன்
போற்றும் பதி பிறவும்
தங்கிப்போய்ச் சண்பை நகர்
சார்ந்தார் தனிப் பொருப்பின்
மங்கை திருமுலைப்பால் உண்டு
அருளும் வள்ளலார். 950
தென்னாட்டு அமண் மாசு
அறுத்துத் திரு நீறே
அந்நாடு போற்று வித்தார் வந்து
அணையும் வார்த்தை கேட்டு
எந் நாள் பணிவது என
ஏற்று எழுந்த மா மறையோர்
முன்னாக வேதம் முழங்க
எதிர் கொண்டார். 951
போத நீடு மா மறையவர் எதிர்
கொளப் புகலி காவலரும் தம்
சீத முத்து அணிச் சிவிகை நின்று
இழிந்து எதிர் செல்பவர் திருத் தோணி
நாதர் கோயில் முன் தோன்றிட நகை
மலர்க் கரம் குவித்து இறைஞ்சிப் போய்
ஓத நீரின் மேல் ஓங்கு கோயிலின்
மணிக் கோபுரம் சென்று உற்றார். 952
அங்கம் மாநிலத் தெட்டுற வணங்கிப்
புக்கு அஞ்சலி முடி ஏறப்
பொங்கு காதலில் புடைவலம் கொண்டு முன்
பணிந்து போற்றி எடுத்து ஓதித்
துங்க நீள் பெரும் தோணியாம்
கோயிலை அருளினால் தொழுது ஏறி
மங்கையோடு உடன் வீற்றிருந்து அருளினார்
மலர்க் கழல் பணிவுற்றார். 953
முற்றும் மெய் எலாம் புளகங்கள் முகிழ்த்து
எழ முகந்து கண் களிகூரப்
பற்றும் உள்ளம் உள் அலைத்து எழும்
ஆனந்தம் பொழிதரப் பணிந்து ஏத்தி
உற்றுமை சேர்வது எனும் திருவியமகம்
உவகையால் எடுத்து ஓதி
வெற்றியாக மீனவன் அவை எதிர்
நதி மிசைவரு கரன் என்பார். 954
தாதையாரும் அங்கு உடன் பணிந்து
அணைந்திடச் சண்பையார் தனி ஏறு
மூது எயில் திருவாயிலைத் தொழுது
போய் முகை மலர்க் குழலார்கள்
ஆதரித்து வாழ்த்துரை இரு மருங்கு
எழ அணி மறுகிடைச் சென்று
காதலித்தவர்க்கு அருள் செய்து தம்
திருமாளிகைக் கடை சார்ந்தார். 956
நறவம் ஆர் பொழில் புகலியில்
நண்ணிய திருஞான சம்பந்தர்
விறலியாருடன் நீலகண்டப் பெரும்
பாணர்க்கு மிக நல்கி
உறையுளாம் அவர் மாளிகை செல
விடுத்து உள் அணைதரும் போதில்
அறலின் நேர் குழலார் மணி விளக்கு
எடுத்து எதிர்கொள அணைவுற்றார். 957
அங்கு அணைந்து அருமறைக் குலத் தாயர்
வந்து அடி வணங்கிடத் தாமும்
துங்க நீள் பெரும் தோணியில் தாயர்
தாள் மனம் கொளத் தொழுவாராய்த்
தங்கு காதலின் அங்கு அமர்ந்து அருளும்
நாள் தம்பிரான் கழல் போற்றிப்
பொங்கும் இன்னிசைத் திருப்பதிகம் பல
பாடினார் புகழ்ந்து ஏத்தி. 958
நீல மா விடம் திரு மிடற்று
அடக்கிய நிமலரை நேர் எய்தும்
காலம் ஆனவை அனைத்தினும் பணிந்து
உடன் கலந்த அன்பர்களோடும்
சால நாள்கள் அங்கு உறைபவர்
தையலாள் தழுவிடக் குழை கம்பர்
கோலம் ஆர்தரக் கும்பிடும் ஆசை
கொண்டு எழும் குறிப்பினர் ஆனார். 959
தண்டகத் திரு நாட்டினைச் சார்ந்து
வந்து எம்பிரான் மகிழ் கோயில்
கண்டு போற்றி நாம் பணிவது என்று
அன்பருக்கு அருள் செய்வார் காலம் பெற்று
அண்டருக்கு அறிவரும் பெரும் தோணியில்
இருந்தவர் அருள் பெற்றுத்
தொண்டர் சூழ்ந்து உடன் புறப்படத் தொடர்ந்து
எழும் தாதையார்க்கு உரை செய்வார். 960
அப்பர் நீர் இனி இங்கு ஒழிந்து
அருமறை அங்கி வேட்டு அன்போடும்
துப்பு நேர் சடையார் தமைப் பரவியே
தொழுது இரும் எனச் சொல்லி
மெய்ப் பெரும் தொண்டர் மீள்பவர் தமக்கு
எலாம் விடை கொடுத்து அருளிப்போய்
ஒப்பு இலாதவர் தமை வழியிடைப்
பணிந்து உருகும் அன்பொடு செல்வார். 961
செல்வம் மல்கிய தில்லை மூதூரினில்
திரு நடம் பணிந்து ஏத்திப்
பல் பெரும் தொண்டர் எதிர் கொளப்
பரமர் தம் திருத்தினை நகர் பாடி
அல்கு தொண்டர்கள் தம்முடன் திருமாணிக்
குழியினை அணைந்து ஏத்தி
மல்கு வார் சடையார் திருப் பாதிரிப்
புலியூரை வந்து உற்றார். 962
கன்னி மாவனம் காப்பு என இருந்தவர்
கழல் இணை பணிந்து அங்கு
முன்ன மா முடக்கான் முயற்கு அருள்
செய்த வண்ணமும் மொழிந்து ஏத்தி
மன்னுவார் பொழில் திரு வடுகூரினை
வந்து எய்தி வணங்கிப்போய்
பின்னுவார் சடையார் திருவக்கரை
பிள்ளையார் அணைவுற்றார். 963
வக்கரைப் பெருமான் தனை வணங்கி
அங்கு அமரும் நாள் அருகாலே
செக்கர் வேணியர் இரும்பை மாகாளமும்
சென்று தாழ்ந்து உடன் மீண்டு
மிக்க சீர் வளர் அதிகை
வீரட்டமும் மேவுவார் தம் முன்பு
தொக்க மெய்த் திருத்தொண்டர் வந்து எதிர்
கொளத் தொழுது எழுந்து அணைவுற்றார். 964
ஆதி தேவர் அங்கு அமர்ந்த
வீரட்டானம் சென்று அணைபவர் முன்னே
பூதம் பாட நின்று ஆடுவார்
திரு நடம் புலப்படும் படி காட்ட
வேத பாலகர் பணிந்து மெய்
உணர்வுடன் உருகிய விருப்போடும்
கோதிலா இசை குலவு குண்டைக்குறள்
பூதம் என்று எடுத்து ஏத்தி. 965
பரவி ஏத்திய திருப் பதிகத்து
இசை பாடினார் பணிந்து அங்கு
விரவும் அன்பொடு மகிழ்ந்து இனிது
உறைபவர் விமலரை வணங்கிப் போய்
அரவ நீள் சடை அங்கணர்
தாம் மகிழ்ந்துறை திரு வாமாத்தூர்
சிர புரத்து வந்தருளிய திருமறைச்
சிறுவர் சென்று அணைவுற்றார். 966
சென்று அணைந்து சிந்தையின் மகிழ்
விருப்பொடு திகழ் திருவாமாத்தூர்ப்
பொன்ற அங்கு பூங்கொன்றையும் வன்னியும்
புனைந்தவர் அடி போற்றிக்
குன்ற வார் சிலை எனும் திருப்பதிகம்
மெய் குலவிய இசை பாடி
நன்றும் இன்புறப் பணிந்து செல்வார்
திருக்கோவலூர் நகர் சேர்ந்தார். 967
கோவல் நீடிய வீரட்டம் அமர்ந்தவர்
குரை கழல் பணிந்து ஏத்தி
ஆவின் ஐந்து உகந்து ஆடுவார்
அறையணி நல்லூரை அணைந்து ஏத்திப்
பாவலர்ந்த செந்தமிழ் கொடு பரவுவார்
பரவு சீர் அடியார்கள்
மேவும் அன்புறு மேன்மையாம் தன்மையை
விளங்கிட அருள் செய்தார். 968
சீரின் மன்னிய பதிகம் முன் பாடி
அத் திரு அறையணி நல்லூர்
வாரின் மல்கிய கொங்கையாள் பங்கர் தம்
மலை மிசை வலம் கொள்வார்
பாரின் மல்கிய தொண்டர்கள் இமையவர்
நாள்தொறும் பணிந்து ஏத்தும்
காரின் மல்கிய சோலை அண்ணாமலை
அன்பர் காட்டிடக் கண்டார். 969
அண்ணாமலை அங்கு அமரர்பிரான்
வடிவு போன்று தோன்றுதலும்
கண்ணால் பருகிக் கை தொழுது
கலந்து போற்றும் காதலினால்
உண்ணா முலையாள் எனும் பதிகம்
பாடி தொண்டருடன் போந்து
தெண்ணீர் முடியார் திருவண்ணாமலைச்
சென்று சேர்வுற்றார். 970
அங்கண் அணைவார் பணிந்து எழுந்து
போற்றி செய்து அம்மலை மீது
தங்கு விருப்பில் வீற்றிருந்தார் தாள்தாமரைகள்
தம் முடி மேல்
பொங்கும் ஆர்வத் தொடும் புனைந்து
புளகம் அலர்ந்த திருமேனி
எங்கும் ஆகிக் கண் பொழியும்
இன்ப அருவி பெருக்கினார். 971
ஆதி மூர்த்தி கழல் வணங்கி
அங்கண் இனிதின் அமரும் நாள்
பூத நாதர் அவர் தம்மைப்
பூவார் மலரால் போற்றி இசைத்துக்
காதலால் அத் திருமலையில் சில
நாள் வைகிக் கமழ் கொன்றை
வேத கீதர் திருப்பதிகள்
பிறவும் பணியும் விருப்புறுவார். 972
மங்கை பாகர் திருவருளால் வணங்கிப்
போந்து வட திசையில்
செங்கண் விடையார் பதி பலவும்
பணிந்து புகலிச் செம்மலார்
துங்க வரைகள் கான் பலவும்
கடந்து தொண்டைத் திருநாட்டில்
திங்கள் முடியார் இனிது
அமரும் திருவோத்தூரைச் சேர்வுற்றார். 973
தேவர் முனிவர்க்கு ஒத்து அளித்த
திருவோத்தூரில் திருத் தொண்டர்
தாவில் சண்பைத் தமிழ் விரகர் தாம்
அங்கு அணையக் களி சிறந்து
மேவும் கதலி தோரணங்கள் விளக்கு
நிரைத்து நிறை குடமும்
பூவும் பொரியும் சுண்ணமும் முன்
கொண்டு போற்றி எதிர் கொண்டார். 974
சண்பை வேந்தர் தண் தரளச்
சிவிகை நின்றும் இழிந்து அருளி
நண்பின் மிக்க சீர் அடியார்
சூழ நம்பர் கோபுரம் சூழ்
விண் பின் ஆக முன் ஓங்கும்
வியன் பொற்புரிசை வலம் கொண்டு
பண்பு நீடிப் பணிந்து எழுந்து
பரமர் கோயிலுள் அடைந்தார். 975
வாரணத்தின் உரி போர்த்த
மைந்தர் உமையாள் மணவாளர்
ஆரணத்தின் உள் பொருளாய் நின்றார்
தன்முன் அணைந்து இறைஞ்சி
நாரணற்கும் பிரமற்கும் நண்ணற்கு
அரிய கழல் போற்றும்
காரணத்தின் வரும் இன்பக்
கண்ணீர் பொழியக் கைதொழுதார். 976
தொழுது விழுந்து பணிந்து எழுந்து
சொல் மாலைகளால் துதி செய்து
முழுதும் ஆனார் அருள் பெற்றுப்
போந்து வைகி முதல்வர் தம்மைப்
பொழுது தோறும் புக்கு இறைஞ்சிப் போற்றி
செய்து அங்கு அமர்வார் முன்
அமுது வணங்கி ஒரு தொண்டர்
அமணர் திறத்து ஒன்று அறிவிப்பார். 977
அங்கை அனல் ஏற்றவர்க்கு அடியேன்
ஆக்கும் பனைகள் ஆன எலாம்
மங்குலுற நீள் ஆண் பனையாய்க்
காயா வாகக் கண்ட அமணர்
இங்கு நீர் இட்டு ஆக்குவன
காய்த்தற்கு அடைவுண்டோ என்று
பொங்கு நகை செய்து இழித்து உரைத்தார்
அருள வேண்டும் எனப் புகல. 978
பரமனார் திருத் தொண்டர் பண்பு
நோக்கிப் பரிவு எய்த
விரவு காதலொடும் விரைந்து
விமலர் கோயில் புக்கருளி
அரவும் மதியும் பகை தீர
அணிந்தார் தம்மை அடி வணங்கி
இரவு போற்றித் திருப்பதிகம்
இசையில் பெருக எடுத்தருளி. 979
விரும்பு மேன்மைத் திருக் கடைக்
காப்பு அதனில் விமலர் அருளாலே
குரும்பை ஆண்பனை ஈனும் என்னும்
வாய்மை குலவு தலால்
நெருங்கும் ஏற்றுப் பனை எல்லாம்
நிறைந்த குலைகளாய்க் குரும்பை
அரும்பு பெண்ணை ஆகியிடக்
கண்டோர் எல்லாம் அதிசயித்தார். 980
சீரின் மன்னும் திருக்கடைக் காப்பு
ஏற்றிச் சிவனார் அருள் பெற்றுப்
பாரில் நீடும் ஆண் பனை
முன் காய்த்துப் பழுக்கும் பண்பினால்
நேரும் அன்பர் தம் கருத்து
நேரே முடித்துக் கொடுத்து அருளி
ஆரும் உவகைத் திருத் தொண்டர்
போற்ற அங்கண் இனிது அமர்ந்தார். 981
தென் நாட்டு அமண் மாசு அறுத்தார்
தம் செய்கை கண்டு திகைத்த அமணர்
அந்நாடு அதனை விட்டு அகல்வார்
சிலர் தம் கையில் குண்டிகைகள்
என்ன ஆவன மற்று இவை என்று
தகர்ப்பார் இறைவன் ஏறு உயர்த்த
பொன்னார் மேனிப் புரிசடையான்
அன்றே என்று போற்றினார். 982
பிள்ளையார் தம் திருவாக்கில் பிறத்தலால்
அத் தாலமும் முன்பு
உள்ள பாசம் விட்டு அகல
ஒழியாப் பிறவி தனை ஒழித்துக்
கொள்ளும் நீர்மைக் காலங்கள்
கழித்துச் சிவமே கூடினவால்
வள்ளலார் மற்று அவர் அருளின்
வாய்மை கூறின் வரம்பு என்னாம். 983
அங்கண் அமரர் பெருமானைப் பணிந்து
போந்து ஆடு அரவினுடன்
பொங்கு கங்கை முடிக்கு அணிந்தார்
மகிழும் பதிகள் பல போற்றி
மங்கை பாகர் அமர்ந்து அருளும்
வயல் மாகறலை வழுத்திப் போய்க்
கொங்கு மலர் நீர்க் குரங்கணி
முட்டத்தைச் சென்று குறுகினார். 984
ஆதி முதல்வர் குரங்கணின் முட்டத்தை
அணைந்து பணிந்து ஏத்தி
நீதி வாழும் திருத்தொண்டர்
போற்ற நிகரில் சண்பையினில்
வேதமோடு சைவ நெறி
விளங்க வந்த கவுணியனார்
மாதோர் பாகர் தாம் மன்னும் மதில்
சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார். 985
நீடு காஞ்சி வாழ்நரும்
நிலாவு மெய்ம்மை அன்பரும்
மாடு சண்பை வள்ளலார்
வந்து அணைந்த ஓகையால்
கூடுகின்ற இன்ப நேர்
குலாவு வீதி கோலினார்
காடு கொண்ட பூகம்
வாழை காமர் தோரணங்களால். 986
கொடி நிரைத்த வீதியில்
கோலவே திகைப்புறம்
கடி கொள் மாலை மொய்த்த
பந்தர் கந்த நீர்த் தசும்புடன்
மடிவில் பொன் விளக்கு எடுத்து
மாதர் மைந்தர் மல்குவார்
படி விளக்கும் அன்பரும்
பரந்த பண்பில் ஈண்டுவார். 987
கோதைமார் ஆடலும் குலாவும்
தொண்டர் பாடலும்
வேத கீத நாதமும்
மிக்கு எழுந்து விம்மவே
காதல் நீடு காஞ்சி வாணர்
கம்பலைத்து எழுந்து போய்
மூது எயில் புறம்பு சென்று
அணைந்து முன் வணங்கினார். 988
சண்பை ஆளும் மன்னர் முன்பு
தொண்டர் வந்து சார்தலும்
பண்பு நீடியான முன்பு இழிந்து
இறைஞ்சு பான்மை கண்டு
எண் பெருக்கும் மிக்க தொண்டர்
அஞ்சலித்து எடுத்த சொல்
மண் பரக்க வீழ்ந்து
எழுந்து வானமுட்ட ஆர்த்தனர். 989
சேண் உயர்ந்த வாயில்நீடு
சீர்கொள் சண்பை மன்னனார்
வாண் நிலாவும் நீற்று
அணி விளங்கிட மனத்தினில்
பூணும் அன்பர் தம்முடன்
புகுந்திடப் புறத்து உளோர்
காணும் ஆசையில் குவித்த
கைந்நிரை எடுத்தனர். 990
வியன் நெடுந் தெருவின் ஊடு
மிக்க தொண்டர் ஆர்ப்பு எழக்
கயல் நெடும் கண் மாதரும்
காதல் நீடு மாந்தரும்
புயல் பொழிந்ததாம் எனப்
பூவினோடு பொற்சு(ண்)ணம்
இயலுமாறு வாழ்த்து எடுத்து
இரு மருங்கும் வீசினார். 991
இன்ன வண்ணம் யாவரும்
இன்பம் எய்த எய்துவார்
பின்னுவார் சடை முடிப்
பிரான் மகிழ்ந்த கோயில்கள்
முன் உறப் பணிந்து போய்
மொய் வரைத் திருமகள்
மன்னு பூசனை மகிழ்ந்த
மன்னர் கோயில் முன்னினார். 992
கம்பவாணர் கோயில் வாயில்
கண்டுகை குவித்து எடுத்து
உம்பர் ஓங்கு கோபுரத்தின் முன்
இறைஞ்சி உள் அணைந்து
அம் பொன் மாளிகைப் புறத்தில்
அன்பரோடு சூழ வந்து
இம்பர் ஞாலம் உய்ய
வந்த பிள்ளையார் இறைஞ்சுவார். 993
செம் பொன் மலைக் கொடி
தழுவக் குழைந்து அருளும் திருமேனிக்
கம்பவரை வந்து எதிர்
வணங்கும் கவுணியர்தம் காவலனார்
பம்பு துளிக் கண்அருவி பாய்ந்து
மயிர்ப் புளகம் வரத்
தம்பெருகு மனக் காதல்
தள்ள நிலமிசைத் தாழ்ந்தார். 994
பல முறையும் பணிந்தெழுந்து
பங்கயச் செங்கைம் முகிழ்ப்ப
மலரு முகம் அளித்த
திரு மணிவாயால் மறையான் என்று
உலகுய்ய எடுத்தருளி உருகிய
அன்பு என்பு உருக்க
நிலவுமிசை முதற்றாளம் நிரம்பிய
நீர்மையில் நிகழ. 995
பாடினார் பணிவுற்றார் பரிவுறும்
ஆனந்தக் கூத்து
ஆடினார் அகம் குழைந்தார் அஞ்சலி
தம் சென்னியின் மேல்
சூடினார் மெய்ம் முகிழ்த்தார்
சூகரமும் அன்னமுமாய்த்
தேடினார் இருவருக்கும்
தெரிவரியார் திருமகனார். 996
மருவிய ஏழ் இசை பொழிய
மனம் பொழியும் பேரன்பால்
பெருகிய கண் மழை பொழியப்
பெரும் புகலிப் பெருந்தகையார்
உருகிய அன்புள் அலைப்ப
உமை தழுவக் குழைந்தவரைப்
பருகிய மெய் உணர்வினொடும்
பரவியே புறத்து அணைந்தார். 997
புறத்து அணைந்த தொண்டருடன்
போந்து அமைந்த திருமடத்தில்
பெறற்கு அரும் பேறு உலகு
உய்யப் பெற்றருளும் பிள்ளையார்
மறப்பரிய காதலுடன் வந்து
எய்தி மகிழ்ந்து உறைவார்
அறப்பெரும் செல்வக் காமக்
கோட்டம் அணைந்து இறைஞ்சினார். 998
திரு ஏகம்பத்து அமர்ந்த
செழுஞ்சுடரைச் சேவடியில்
ஒரு போதும் தப்பாதே
உள் உருகிப் பணிகின்றார்
மருவு திரு இயமகமும்
வளர் இருக்குக்குறள் மற்றும்
பெருகும் இசைத் திருப்பதிகத்
தொடை புனைந்தார் பிள்ளையார். 999
நீடு திருப் பொலிகாஞ்சி
நெறிக்காரைக் காடு இறைஞ்சிச்
சூடு மதிக் கண்ணியார் துணை
மலர்ச் சேவடி பாடி
ஆடும் அவர் இனிது அமரும்
அனேகதங்கா வதம் பரவி
மாடு திருத் தானங்கள் பணிந்து
ஏத்தி வைகும் நாள். 1000
எண் திசையும் போற்றி இசைக்கும்
திருப்பதி மற்று அதன் புறத்துத்
தொண்டருடன் இனிது ஏகித் தொல்லை
விடம் உண்டு இருண்ட
கண்டர் மகிழ் மேற்றளியும்
முதலான கலந்து ஏத்தி
மண்டு பெரும் காதலினால் வணங்கி
மீண்டு இனிது இருந்தார். 1001
அப்பதியில் விருப்பினோடும் அங்கணரைப்
பணிந்து அமர்வார்
செப்பரிய புகழ்ப் பாலித் திரு
நதியின் தென் கரை போய்
மைப் பொலியும் கண்டர் திருமாற்
பேறு மகிழ்ந்து இறைஞ்சி
முப்புரம் செற்றவர் தம்மை
மொழி மாலை சாத்தினார். 1002
திருமாற் பேறு உடையவர் தம்
திருவருள் பெற்று எழுந்தருளிக்
கருமாலும் கருமாவாய்க் காண்பரிய
கழல் தாங்கி
மருவாற்றல் மழவிடையார் திருவல்லம்
வணங்கித் தம்
பெருமாற்குத் திருப்பதிகப் பெரும்
பிணையல் அணிவித்தார். 1003
அங்கு உள்ள பிற பதியில்
அரிக்கு அரியார் கழல் வணங்கி
பொங்கு புனல் பால் ஆற்றின்
புடையில் வடபால் இறைவர்
எங்கும் உறை பதி பணிவார்
இலம்பை அம் கோட்டூர் இறைஞ்சிச்
செங்கண் விடை உகைத்தவரைத்
திருப்பதிகம் பாடினார். 1004
திருத்தொண்டர் பலர் சூழத்
திரு விற் கோலமும் பணிந்து
பொருட் பதிகத் தொடை மாலை
புரம் எரித்த படி பாடி
அருட்புகலி ஆண் தகையார்
தக்கோலம் அணைந்தருளி
விருப்பினொடும் திருவூறல் மேவினார்
தமைப் பணிந்தார். 1005
தொழுது பல முறை போற்றிச்
சுரர் குருவுக்கு இளைய முனி
வழுவில் தவம் புரிந்து ஏத்த
மன்னினார் தமை மலர்ந்த
பழுதில் செழும் தமிழ் மாலைப்
பதிக இசை புனைந்தருளி
முழுதும் அளித்தவர் அருளால்
போந்தனர் முத்தமிழ் விரகர். 1006
குன்ற நெடும் சிலையாளர் குலவிய
பல் பதி பிறவும்
நின்ற விருப்புடன் இறைஞ்சி
நீடு திருத் தொண்டருடன்
பொன் தயங்கு மணி
மாடப் பூந்தராய்ப் புரவலனார்
சென்று அணைந்தார் பழையனூர்த்
திருவாலங் காட்டு அருகு. 1007
இம்மையிலே புவி உள்ளோர் யாரும் காண
ஏழ் உலகும் போற்றி இசைப்ப எம்மை ஆளும்
அம்மை திருத் தலையாலே நடந்து போற்றும்
அம்மையப்பர் திருவாலங் காடாம் என்று
தம்மை உடையவர் மூதூர் மிதிக்க அஞ்சிச்
சண்பை வரும் சிகாமணியார் சாரச் சென்றார்
செம்மை நெறி வழுவாத பதியின் மாடோர்
செழும் பதியில் அன்று இரவு பள்ளி சேர்ந்தார். 1008
மாலை இடை யாமத்துப் பள்ளி கொள்ளும்
மறையவனார் தம் முன்பு கனவிலே வந்து
ஆல வனத்து அமர்ந்து அருளும் அப்பர் நம்மை
அயர்த்தனையோ பாடுதற்கு என்று அருளிச் செய்ய
ஞாலம் இருள் நீங்க வரும் புகலி வேந்தர்
நடு இடை யாமத்தினிடைத் தொழுது உணர்ந்து
வேலை விடம் உண்டவர் தம் கருணை
போற்றி மெய் உருகித் திருப்பதிகம் விளம்பல் உற்றார். 1009
துஞ்ச வருவார் என்றே எடுத்த ஓசைச்
சுருதி முறை வழுவாமல் தொடுத்த பாடல்
எஞ்சல் இலா வகை முறையே பழையனூரார்
இயம்பு மொழி காத்த கதை சிறப்பித்து ஏத்தி
அஞ்சன மாகரி உரித்தார் அருளாம் என்றே
அருளும் வகை திருக்கடைக் காப்பு அமையச்சாத்திப்
பஞ்சுரமாம் பழைய திறம் கிழமை கொள்ளப்
பாடினார் பார் எல்லாம் உய்ய வந்தார். 1010
நீடும் இசைத் திருப்பதிகம் பாடிப் போற்றி நெடும்
கங்குல் இருள் நீங்கி நிகழ்ந்த காலை
மாடு திருத் தொண்டர் குழாம் அணைந்த
போது மாலையினில் திரு ஆல வனத்து மன்னி
ஆடும் அவர் அருள் செய்த படியை எல்லாம்
அருளிச் செய்து அகம்மலரப் பாடி ஏத்திச்
சேடர் பயில் திருப்பதியைத் தொழுது போந்து
திருப்பாசூர் அதன் மருங்கு செல்லல் உற்றார். 1011
திருப்பாசூர் அணைந்தருளி அங்கு மற்றச் செழும்
பதியோர் எதிர் கொள்ளச் சென்று புக்குப்
பொருப்பு அரையன் மடப்பாவை இடப் பாகத்துப்
புராதனர் வேய் இடம் கொண்ட புனிதர் கோயில்
விருப்பினுடன் வலம் கொண்டு புக்குத் தாழ்ந்து
வீழ்ந்தெழுந்து மேனி எல்லாம் முகிழ்ப்ப நின்றே
அருள் கருணைத் திருவாளன் நாமம் சிந்தை இடையார்
என்று இசைப் பதிகம் அருளிச் செய்தார். 1012
மன்னு திருப்பதிக இசைப் பாடிப் போற்றி
வணங்கிப் போந்து அப்பதியில் வைகி மாடு
பிஞ்ஞகர் தம் வெண் பாக்கம் முதலாய் உள்ள
பிறபதிகள் பணிந்து அணைவார் பெருகும் அன்பால்
முன் நிறைந்த திருவாய் மஞ்சன நீர்
ஆட்டும் முதல் வேடர் கண்ணப்ப நாயனாரை
உன்னி ஒளிர் காளத்தி மலை வணங்க
உற்ற பெரு வேட்கையுடன் உவந்து சென்றார். 1013
மிக்க பெரும் காதலுடன் தொண்டர் சூழ
மென்புனல் நாட்டினை அகன்று வெற்பும் கானும்
தொக்க பெருவன் புலக்கான் அடைந்து போகிச்
சூல கபாலக் கரத்துச் சுடரும் மேனி
முக்கண் முதல் தலைவன் இடம் ஆகி உள்ள
முகில் நெருங்கும் காரி கரை முன்னர் சென்று
புக்கு இறைஞ்சி போற்றி இசைத்து அப் பதியில்
வைகிப் பூதியரோடு உடன் மகிழ்ந்தார் புகலி வேந்தர். 1014
இறைவர் திருக்காரிகரை இறைஞ்சி அப்பால்
எண்ணில் பெருவரைகள் இருமருங்கும் எங்கும்
நிறை அருவி நிரைபலவாய் மணியும் பொன்னும்
நிறை துவலை புடை சிதறி நிகழ் பவாகி
அறை கழல் வானவர்க்கு இறைவன் குலிச ஏற்றால்
அற்ற சிறை பெற்றவன் மேல் எழுவதற்குச்
சிறகு அடித்துப் பறக்க முயன்று உயர்ந்த போலும்
சிலை நிலத்தில் எழுந்தருளிச் செல்லா நின்றார். 1015
மாதவர்கள் நெருங்கு குழாம் பரந்து செல்ல மணி
முத்தின் பரிச்சின்னம் வரம்பு இன்று ஆகப்
பூதி நிறை கடல் அணைவது என்னச் சண்பைப்
புரவலனார் எழுந்தருளும் பொழுது சின்னத்
தீதில் ஒலி பல முறையும் பொங்கி எங்கும்
திருஞான சம்பந்தன் வந்தான் என்னும்
நாதம் நிறை செவியினவாய் மாக்கள் எல்லாம்
நலம் மருவு நினைவு ஒன்றாய் மருங்கு நண்ண. 1016
கானவர் தம் குலம் உலகு போற்ற வந்த
கண்ணப்பர் திருப் பாதச் செருப்பு தோய
மான வரிச் சிலை வேட்டை ஆடும் கானும் வான
மறை நிலை பெரிய மரமும் தூறும்
ஏனை இமையோர் தாமும் இறைஞ்சி ஏத்தி
எய்தவரும் பெருமையவாம் எண் இலாத
தானமும் மற்றவை கடந்து திருக் காளத்தி
சார எழுந்தருளினார் சண்பை வேந்தர். 1017
அம்பொன் மலைக் கொடி முலையாள் குழைத்த
ஞானத்து அமுது உண்ட பிள்ளையார் அணைந்தார் என்று
செம்பொன் மலை வில்லியார் திருக்காளத்தி சேர்ந்த
திருத் தொண்டர் குழாம் அடைய ஈண்டிப்
பம்பு சடைத் திரு முனிவர் கபாலக் கையர்
பல வேடச் சைவர் குல வேடர் மற்றும்
உம்பர் தவம் புரிவார் அப்பதியில் உள்ளோற்
உடன் விரும்பி எதிர்கொள்ள உழைச் சென்று உற்றார். 1018
திசை அனைத்தும் நீற்றின் ஒளி தழைப்ப மண்
மேல் சிவலோகம் அணைந்தது எனச் சென்றபோது
மிசை விளங்கும் மணி முத்தின் சிவிகை
நின்றும் வேத பாரகர் இழிந்து வணங்கி மிக்க
அசைவில் பெருந் தொண்டர் குழாம் தொழுது
போற்றி அர எனும் ஓசையின் அண்டம் நிறைப்ப அன்பால்
இசை விளங்கும் தமிழ் விரகர் திருக்காளத்தித்
திருமலை இம் மலைகளில் யாது என்று கேட்டார். 1019
வந்து அணைந்த மாதவத்தோர் வணங்கித்
தாழ்ந்து மறைவாழ்வே சைவ சிகாமணியேதோன்றும்
இந்த மலை காளனோடு அத்தி தம்மில்
இகலி வழிபாடு செய இறைவர் மேவும்
அந்தமில் சீர்க் காளத்தி மலையாம் என்ன
அவனிமேல் பணிந்து எழுந்து அஞ்சலி மேல் கொண்டு
சிந்தை களி மகிழ்ச்சி வரத் திரு விராகம்
வானவர்கள் தானவர் என்று எடுத்துச் செல்வார். 1020
திருந்திய இன்னிசை வகுப்பு திருக் கண்ணப்பர்
திருத் தொண்டு சிறப்பித்துத் திகழப் பாடிப்
பொருந்து பெரும் தவர் கூட்டம் போற்ற வந்து
பொன் முகலிக் கரை அணைந்து தொழுது போகி
அருந்தவர்கள் எம் மருங்கு மிடைந்து செல்ல
ஆளுடைப் பிள்ளையார் அயன் மால் தேடும்
மருந்து வெளியே இருந்த திருக்காளத்தி மலை
அடிவாரம் சார வந்து தாழ்ந்தார். 1021
தாழ்ந்து எழுந்து திருமலையைத் தொழுது கொண்டே
தடம் சிலாதல சோபானத்தால் ஏறி
வாழ்ந்து இமையோர் குழாம் நெருங்கு மணி நீள் வாயில்
மருங்கு இறைஞ்சி உட்புகுந்து வளர் பொற் கோயில்
சூழ்ந்து வலம் கொண்டு இறைவர் திருமுன்பு எய்தித்
தொழுது தலை மேல் கொண்ட செங்கை போற்றி
வீழ்ந்து எழுவார் கும்பிட்ட பயன் காண்பார் போல்
மெய் வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார். 1022
உள்ளத்தில் தெளிகின்ற அன்பின் மெய்ம்மை உருவினையும்
அவ் அன்பின் உள்ளே மன்னும்
வெள்ளச் செஞ்சடைக் கற்றை நெற்றிச் செங்கண்
விமலரையும் உடன் கண்ட விருப்பும் பொங்கிப்
பள்ளத்தில் இழி புனல் போல் பரந்து செல்லப்
பைம் பொன் மலைவல்லி பரிந்து அளித்த செம்பொன்
வள்ளத்தில் ஞான ஆரமுதம் உண்டார் மகிழ்ந்து
எழுந்து பல முறையும் வணங்குகின்றார். 1023
பங்கயக்கண் அருவி நீர் பாய நின்று
பரவும் இசைத் திருப்பதிகம் பாடி ஆடி
தங்கு பெரும் களி காதல் தகைந்து தட்பத்
தம் பெருமான் கழல் போற்றும் தன்மை நீட
அங்கு அரிதில் புறம் போந்து அங்கு அயன் மால்
போற்ற அரியார் தம் திருமலைக் கீழ் அணைந்து இறைஞ்சிப்
பொங்கு திருத்தொண்டர் மடம் காட்ட அங்குப்
புக்கருளி இனிது அமர்ந்தார் புகலி வேந்தர். 1024
யாவர்களும் அறிவரிய இறைவன் தன்னை ஏழ்
உலகும் உடையானை எண் இலாத
தேவர்கள் தம் பெருமானைத் திருக்காளத்தி மலையின்
மிசை வீற்றிருந்த செய்ய தேனைப்
பூவலரும் பொழில் புடைசூழ் சண்பை ஆளும்
புரவலனார் காலங்கள் தோறும் புக்குப்
பாமலர் கொண்டு அடி போற்றிப் பருகி ஆர்ந்து
பண்பு இனிய திருப்பதியில் பயிலும் நாளில். 1025
அங்கண் வடதிசை மேலும் குடக்கின் மேலும்
அரும் தமிழின் வழக்கு அங்கு நிகழாது ஆக
திங்கள் புனை முடியார் தம் தானம் தோறும்
சென்று தமிழ் இசை பாடும் செய்கை போல
மங்கை உடன் வானவர்கள் போற்றி இசைப்ப
வீற்று இருந்தார் வட கயிலை வணங்கிப் பாடி
செம் கமல மலர் வாவித் திருக்கேதாரம்
தொழுது திருப்பதிக இசை திருந்த பாடி. 1026
கூற்றுதைத்தார் மகிழ்ந்த கோ கரணம் பாடி
குலவு திருப் பருப்பதத்தின் கொள்கைபாடி
ஏற்றின் மிசை வருவார் இந்திரன் தன் நீல
பருப்பதமும் பாடி மகிழ்ந்து இறைவர் தானம்
போற்றிய சொல் மலர் மாலை பிறவும் பாடிப்
புகலியார் தம் பெருந் தகையார் புனிதம் ஆகும்
நீற்றின் அணி கோலத்துத் தொண்டர் சூழ
நெடிது மகிழ்ந்து அப்பதியில் நிலவுகின்றார். 1027
தென் திசையில் கயிலை எனும் திருக்காளத்தி போற்றி
இனிது அமர்கின்றார் திரை சூழ் வேலை
ஒன்று திரு ஒற்றியூர் உறைவார் தம்மை
இறைஞ்சுவது திரு உள்ளத்து உன்னி அங்கண்
இன் தமிழின் விரகர் அருள் பெற்று மீள்வார்
எந்தையார் இணை அடி என் மனத்த என்று
பொன் தரளம் கொழித்து இழி பொன் முகலி
கூடப் புனைந்த திருப்பதிக இசை போற்றிப் போந்தார். 1028
மன்னு புகழ்த் திருத் தொண்டர் குழாத்தினொடும்
மறைவாழ வந்தவர் தாம் மலையும் கானும்
முன் அணைந்த பதி பிறவும் கடந்து போந்து
முதல்வனார் உறைபதிகள் பலவும் போற்றிப்
பன் மணிகள் பொன்வர் அன்றி அகிலும் சந்தும்
பொருது அலைக்கும் பாலி வடகரையில் நீடு
சென்னி மதி அணிந்தவர்தம் திருவேற்காடு
சென்று அணைந்தார் திருஞானம் உண்ட செல்வர். 1029
திருவேற்காடு அமர்ந்த செழுஞ் சுடர் பொற் கோயில்
சென்று அணைந்து பணிந்து திருப்பதிகம் பாடி
வரு வேற்று மனத்து அவுணர் புரங்கள் செற்றார்
வலிதாயம் வந்து எய்தி வணங்கிப் போற்றி
உரு வேற்றார் அமர்ந்து உறையும் ஓத வேலை
ஒற்றியூர் கை தொழச் சென்று உற்ற போது
பெரு வேட்கை தருவாழ்வு பெற்ற தொண்டர்
பெரும் பதியோர் எதிர் கொள்ளப் பேணி வந்தார். 1030
மிக்க திருத் தொண்டர் தொழுது அணையத் தாமும்
தொழுது இழிந்து விடையவன் என்று எடுத்துப் பாடி
மைக் குலவு கண்டத்தார் மகிழும் கோயில்
மன்னு திருக் கோபுரத்து வந்து தாழ்ந்து
தக்க திருக் கடைக் காப்புச் சாற்றித் தேவர்
தம் பெருமான் திருவாயில் ஊடு சென்று
புக்கருளி வலம் கொண்டு புனிதர் முன்பு போற்று
எடுத்துப் படியின் மேல் பொருந்த வீழ்ந்தார். 1031
பொன் திரள்கள் போல் புரிந்த சடையார் தம்பால்
பொங்கி எழும் காதல் மிகப் பொழிந்து விம்மிப்
பற்றி எழும் மயிர்ப் புளகம் எங்கும் ஆகிப்
பரந்து இழியும் கண் அருவி பாய நின்று
சொல் திகழும் திருப்பதிகம் பாடி ஏத்தித்
தொழுது புறத்து அணைந்தருளித் தொண்டரோடும்
ஒற்றி நகர் காதலித்து அங்கு இனிது
உறைந்தார் உலகுய்ய உலவாத ஞானம் உண்டார். 1032
இன்ன தன்மையில் பிள்ளையார்
இருந்தனர் இப்பால்
பன்னு தொல் புகழ்த்
திரு மயிலாப்புரிப் பதியில்
மன்னு சீர்ப் பெரும் வணிகர்
தம் தோன்றலார் திறத்து
முன்னம் எய்தியது ஒன்றினை
நிகழ்ந்தவா மொழிவாம். 1033
அரு நிதித் திறம் பெருக்குதற்கு
அரும்கலம் பலவும்
பொரு கடல் செலப் போக்கி
அப் பொருள் குவை நிரம்ப
வரும் மரக்கலம் மனைப்
படப்பு அணைக்கரை நிரைக்கும்
இரு நிதிப் பெரும்
செல்வத்தின் எல்லையில் வளத்தார். 1034
தம்மை உள்ளவாறு அறிந்த
பின் சங்கரற்கு அடிமை
மெய்ம்மையே செயும் விருப்புடன்
மிக்கதோர் அன்பால்
பொய்ம்மை நீக்கிமெய்ப் பொருள் இது
எனக் கொளும் உள்ளச்
செம்மையே புரி மனத்தினார்
சிவநேசர் என்பார். 1035
ஆன நாள் செல
அருமறைக் கவுணியர் பெருமான்
ஞான போனகம் நுகர்ந்ததும்
நானிலம் உய்ய
ஏனை வெம் சமண்
சாக்கியம் இழித்து அழித்ததுவும்
ஊனம் இல் புகழ் அடியர்
பால் கேட்டு உவந்து உளராய். 1037
செல்வம் மல்கிய சிரபுரத்
தலைவர் சேவடிக் கீழ்
எல்லை இல்லதோர் காதலின்
இடையறா உணர்வால்
அல்லும் நண் பகலும்
புரிந்தவர் அருள் திறமே
சொல்லவும் செயல் கேட்கவும்
தொழிலினர் ஆனார். 1038
நிகழும் ஆங்கு அவர் நிதிப்
பெரும் கிழவனின் மேலாய்த்
திகழும் நீடிய திருவினில்
சிறந்து உளர் ஆகிப்
புகழும் மேன்மையில் உலகினில்
பொலிந்து உளார் எனினும்
மகவு இலாமையின் மகிழ்
மனை வாழ்க்கையின் மருண்டு. 1039
அரிய நீர்மையில் அரும் தவம்
புரிந்து அரன் அடியார்க்கு
உரிய அர்ச்சனை உலப்பில
செய்த அந் நலத்தால்
கரியவாங்குழல் மனைவியார் வயிறு
எனும் கமலத்
துரிய பூமகள் என ஒரு
பெண் கொடி உதித்தாள். 1040
நல்ல நாள் பெற ஓரையின்
நலம் மிக உதிப்பப்
பல் பெரும் கிளையுடன் பெரு
வணிகர் பார் முழுதும்
எல்லையில் தனம் முகந்து
கொண்டு யாவரும் உவப்ப
மல்லல் ஆவண மறுகிடைப்
பொழிந்து உளம் மகிழ்ந்தார். 1041
ஆறு சூடிய முடியினார்
அடியவர்க்கு அன்பால்
ஈறு இலாத பூசனைகள்
யாவையும் மிகச் செய்து
மாறு இலா மறையவர்க்கு
வேண்டின எல்லாம் அளித்துப்
பேறு மற்று இதுவே எனும்
பெருங் களி சிறந்தார். 1042
சூத நல் வினை மங்கலத்
தொழில் முறை தொடங்கி
வேத நீதியின் விதியுளி
வழா வகை விரித்த
சாதகத் தொழிற் சடங்குகள்
தச தினம் செல்லக்
காதல் மேவிய சிறப்பினில்
கடி விழா அயர்ந்தார். 1043
யாவரும் பெரு மகிழ்ச்சியால்
இன்புறப் பயந்த
பாவை நல் உறுப்பு அணி
கிளர் பண்பு எலாம் நோக்கி
பூவினாள் என வருதலில்
பூம்பாவை என்றே
மேவும் நாமமும் விளம்பினர்
புவியின் மேல் விளங்க. 1044
திங்கள் தோறும் முன் செய்யும்
அத் திருவளர் சிறப்பின்
மங்கலம் புரி நல்வினை
மாட்சியில் பெருக
அங்கண் மாநகர் அமைத்திட
ஆண்டு எதிர் அணைந்து
தங்கு பேர் ஒளிச்
சீறடி தளிர் நடை பயில. 1045
தளரும் மின்னின் அங்குரம்
எனத் தமனியக் கொடியின்
வளர் இளம் தளிர்க் கிளை
என மணி கிளர் ஒளியின்
அளவில் அஞ்சுடர்க் கொழுந்து
என அணைவுறும் பருவத்து
இள வனப்பிணை அனையவர்க்கு
ஏழி ஆண்டு எய்த. 1046
அழகின் முன் இளம் பதம்
என அணிவிளக்கு என்ன
விழவு கொண்டு எழும்
பேதையர் உடன் விளையாட்டில்
கழலொடு அம்மனை கந்துகம்
என்று மற்று இனைய
மழலை மென்கிளிக் குலம்
என மனையிடை ஆடி. 1047
பொற்றொடிச் சிறு மகளிர்
ஆயத்தொடும் புணர்ந்து
சிற்றில் முற்றவும் இழைத்து உடன்
அடும் தொழில் சிறு சோறு
உற்ற உண்டிகள் பயின்று ஒளி
மணி ஊசல் ஆடி
மற்றும் இன்புறு வண்டல்
ஆட்டு அயர்வுடன் வளர. 1048
தந்தையாரும் அத் தளிர் இளம்
கொம்பு அனாள் தகைமை
இந்த வையகத்து இன்மையால்
இன்புறு களிப்பு
வந்த சிந்தையின் மகிழ்ந்து மற்று
இவள் மணம் பெறுவான்
அந்தமில் எனது அருநிதிக்கு
உரியன் என்று அறைந்தார். 1049
ஆய நாள்களில் அமண் பயில்
பாண்டி நாடு அதனைத்
தூய ஞானம் உண்டு
அருளிய தோன்றலார் அணைந்து
மாய(ம்) வல்ல அமண்
கையரை வாதில் வென்றதுவும்
மேய வெப்பு இடர்
மீனவன் மேல் ஒழித்ததுவும். 1050
நெருப்பில் அஞ்சினார் தங்களை
நீரில் ஒட்டிய பின்
மருப்பு நீள் கழுக்கோலில்
மற்று அவர்கள் ஏறியதும்
விருப்பினால் திருநீறு மீனவற்கு
அளித்து அருளிப்
பொருப்பு வில்லியார் சாதனம்
போற்று வித்ததுவும். 1051
இன்னவாறு எலாம் அறிந்துளார்
எய்தி அங்கு இசைப்பச்
சொன்னவர்க்கு எலாம் இருநிதி
தூசு உடன் அளித்து
மன்னு பூந்தராய் வள்ளலார்
தமைத் திசை நோக்கிச்
சென்னி மேல் கரம் குவித்து
வீழ்ந்து எழுந்து செந்நின்று. 1052
சுற்றம் நீடிய கிளை எலாம்
சூழ்ந்து உடன் கேட்பக்
கற்ற மாந்தர் வாழ் காழி
நாடு உடையவர்க்கு அடியேன்
பெற்று எடுத்த பூம்
பாவையையும் பிறங்கிய நிதியும்
முற்றும் என்னையும் கொடுத்தனன்
யான் என்று மொழிந்தார். 1053
எல்லையில் பெரும் களிப்பினால்
இப்பரிசு இயம்பி
முல்லை வெண் நகை முகிழ்
முலையாருடன் முடியா
மல்கு செல்வத்தின் வளமையும்
மறை வளர் புகலிச்
செல்வரே உடையார் எனும்
சிந்தையால் மகிழ்ந்தார். 1054
ஆற்று நாள்களில் அணங்கு
அனார் கன்னி மாடத்தின்
பால் தடம்பொழில் மருங்கினில்
பனி மலர் கொய்வான்
போற்றுவார் குழல் சேடியருடன்
புறம் போந்து
கோல் தொடித் தளிர்க் கையினால்
முகை மலர் கொய்ய. 1055
அன்பர் இன்புறும் ஆர்வத்தின்
அளித்த பாங்கு அல்லால்
பொன் பிறங்கு நீர்ப் புகலி
காவலர்க்கு இது புணராது
என்பது உள் கொண்ட பான்மை
ஓர் எயிற்று இளம் பணியாய்
முன்பு அணைந்தது போல ஓர்
முள் எயிற்று அரவம். 1056
நாலு தந்தமும் என்பு உறக்
கவர்ந்து நஞ்சு உகுத்து
மேல் எழும் பணம் விரித்து
நின்று ஆடி வேறு அடங்க
நீல வல் விடம் தொடர்ந்து
எழ நேரிழை மென்பூ
மாலை தீயிடைப் பட்டது
போன்று உளம் மயங்கி. 1058
தரையில் வீழ் தரச்
சேடியர் வெருக்கொண்டு தாங்கி
விரை செய் மாடத்தின் உள்
கொடு புகுந்திட வணிகர்
உரையும் உள்ளமும் நிலை அழிந்து
உறு துயர் பெருகக்
கரையில் சுற்றமும் தாமும்
முன் கலங்கினார் கலுழ்ந்தார். 1059
விடம் தொலைத் திடும்
விஞ்சையில் பெரியராம் மேலோர்
அடர்ந்த தீ விடம்
அகற்றுதற்கு அணைந்துளார் அனேகர்
திடம் கொள் மந்திரம் தியானம்
பாவக நிலை முட்டி
தொடர்ந்த செய்வினைத் தனித்
தனித் தொழிலராய்ச் சூழ்வார். 1060
மருந்தும் எண்ணில மாறில
செய்யவும் வலிந்து
பொருந்து வல் விடம் ஏழு
வேகமும் முறை பொங்கிப்
பெரும் தடங்கண் மெல் கொடியனாள்
தலை மிசைப் பிறங்கித்
திருந்து செய் வினை
யாவையும் கடந்து தீர்ந்திலதால். 1061
ஆவி தங்கு பல்
குறிகளும் அடைவில ஆக
மேவு காருட விஞ்சை வித்தகர்
இது விதி என்று
ஓவும் வேலையில் உறு
பெரும் சுற்றமும் அலறிப்
பாவை மேல் விழுந்து அழுதனர்
படர் ஒலிக் கடல் போல். 1062
சிந்தை வெம் துயர்
உறும் சிவநேசரும் தெளிந்து
வந்த செய்வினை இன்மையில்
வையகத்து உள்ளோர்
இந்த வெவ்விடம் ஒழிப்பவர்க்கு
ஈகுவன் என்னுடைய
அந்தமில் நிதிக் குவை
எனப் பறை அறைவித்தார். 1063
முரசு இயம்பலும் மூன்று
நாள் அகவையின் முற்ற
அரசர் பாங்கு உளோர் உள்பட
அவனி மேல் உள்ள
கரையில் கல்வியோர் யாவரும்
அணைந்து தம் காட்சிப்
புரையில் செய்கையில் தீர்ந்திடாது
ஒழிந்திடப் போனார். 1064
சீரின் மன்னிய சிவநேசர்
கண்டு உளம் மயங்கிக்
காரின் மல்கிய சோலை
சூழ் கழுமலத் தலைவர்
சாரும் அவ்வளவும் உடல்
தழல் இடை அடக்கிச்
சேர என்பொடு சாம்பல்
சேமிப்பது தெளிவார். 1065
உடைய பிள்ளையார்க்கு என இவள்
தனை உரைத்த அதனால்
அடைவு துன்புறுவதற்கு
இலையாம் நமக்கு என்றே
இடர் ஒழிந்த பின்
அடக்கிய என்பொடு சாம்பல்
புடை பெருத்த கும்பத்தினில்
புகப் பெய்து வைப்பார் 1066
கன்னி மாடத்தில் முன்பு
போல் காப்புற அமைத்துப்
பொன்னும் முத்தும் மேல்
அணிகலன் பூந்துகில் சூழ்ந்து
பன்னு தூவியின் பஞ்சணை விரைப்
பள்ளி அதன் மேல்
மன்னும் பொன்னரி மாலைகள்
அணிந்து வைத்தனரால். 1067
மாலை சாந்தொடும் மஞ்சனம்
நாள் தொறும் வழாமைப்
பாலின் நேர் தரும்
போனகம் பகல் விளக்கினைய
சாலும் நன்மையில் தகுவன
நாள்தொறும் சமைத்தே
ஏலுமா செய யாவரும்
வியப்பு எய்தும் நாளில். 1068
சண்பை மன்னவர் திரு ஒற்றியூர்
நகர் சார்ந்து
பண்பு பெற்ற நல் தொண்டர்
களுடன் பணிந்து இருந்த
நண்பு மிக்க நல் வார்த்தை
அந் நற் பதி உள்ளோர்
வண் புகழ்ப் பெரு வணிகர்க்கு
வந்து உரை செய்தார். 1069
சொன்னவர்க்கு எலாம் தூசொடு
காசு பொன் அளித்தே
இன்ன தன்மையர் என ஒணா
மகிழ் சிறந்து எய்தச்
சென்னி வாழ் மதியார்
திரு ஒற்றியூர் அளவும்
துன்னு நீள் நடைக்
காவணம் துகில் விதானித்து. 1070
மகர தோரணம் வண்
குலைக் கமுகொடு கதலி
நிகரில் பல் கொடித்
தாமங்கள் அணிபெற நிரைத்து
நகர நீள் மறுகு யாவையும்
நலம் புனைந்து அணியால்
புகரில் பொன் உலகம்
இழிந்ததாம் எனப் பொலிவித்தார். 1071
இன்னவாறு அணி செய்து பல்
குறை அறுப்பு ஏவி
முன்னம் ஒற்றியூர் நகர்
இடை முத்தமிழ் விரகர்
பொன் அடித் தலம் தலைமிசை
புனைவான் என்று எழுவார்
அந்நகர்ப் பெருந் தொண்டரும்
உடன் செல அணைந்தார். 1072
ஆய வேலையில் அருமறைப்
புகலியர் பிரானும்
மேய ஒற்றியூர் பணிபவர்
வியன் நகர் அகன்று
காயல் சூழ் கரைக்
கடல் மயிலாபுரி நோக்கித்
தூய தொண்டர்தம் குழாத்தொடும்
எதிர் வந்து தோன்ற. 1073
மாறில் வண் பெரு
வணிகரும் தொண்டரு மலர்ந்த
நீறு சேர் தவக்
குழாத்தினை நீளிடைக் கண்டே
ஆறு சூடினார் திருமகனார்
அணைந்தார் என்று
ஈறிலாததோர் மகிழ்ச்சியினால்
விழுந்து இறைஞ்ச. 1074
காழி நாடரும் கதிர் மணிச்
சிவிகை நின்று இழிந்து
சூழிரும் பெருந் தொண்டர்
முன் தொழுது எழுந்தருளி
வாழி மாதவர் வணிகர் செய்
திறம் சொலக் கேட்டே
ஆழி சூழ் மயிலா
புரித் திருநகர் அணைந்தார். 1075
அத் திறத்து முன் நிகழ்ந்தது
திரு உள்ளத்து அமைத்துச்
சித்தம் இன்புறும் சிவநேசர்
தம் செயல் வாய்ப்பப்
பொய்த்த அச் சமண்
சாக்கியர் புறத்துறை அழிய
வைத்த அப்பெருங் கருணை
நோக்கால் மகிழ்ந்து அருளி. 1076
கங்கை வார் சடையார்
கபாலீச்சரத்து அணைந்து
துங்க நீள் சுடர்க்
கோபுரம் தொழுது புக்கருளி
மங்கை பங்கர்தம் கோயிலை
வலம் கொண்டு வணங்கிச்
செங்கை சென்னி மேல்
குவிந்திடத் திருமுன்பு சேர்ந்தார். 1077
தேவ தேவனைத் திருக்
கபாலீச்சரத்து அமுதைப்
பாவை பாகனைப் பரிவுறு
பண்பினால் பரவி
மேவு காதலின் விரும்பிய
விரைவினால் விழுந்து
நாவின் வாய்மையில் போற்றினார்
ஞான சம்பந்தர். 1078
போற்றி மெய் அருள் திறம்
பெறு பரிவுடன் வணங்கி
நீற்றின் மேனியில் நிறை
மயிர்ப் புளகங்கள் நெருங்கக்
கூற்று அடர்த்தவர் கோயிலின்
புறம் போந்து அருளி
ஆற்றும் இன்னருள் வணிகர் மேற்
செல அருள் செய்வார். 1079
ஒருமை உய்த்த நல்
உணர்வினீர் உலகவர் அறிய
அருமையால் பெறு மகள் என்பு
நிறைத்த அக் குடத்தைப்
பெரு மயானத்து நடம்
புரிவார் பெருங் கோயில்
திருமதில் புறவாய்தலிற் கொணர்க
என்று செப்ப. 1080
அந்தமில் பெரு மகிழ்ச்சியால்
அவனி மேல் பணிந்து
வந்து தம் திரு மனையினில்
மேவி அம்மருங்கு
கந்த வார் பொழில்
கன்னி மாடத்தினில் புக்கு
வெந்த சாம்பலோடு என்பு சேர்
குடத்தை வேறு எடுத்து. 1081
மூடு பன் மணிச்
சிவிகை உள்பெய்து முன்போத
மாடு சேடியர் இனம் புடை
சூழ்ந்து வந்து அணைய
ஆடல் மேவினார் திருக்
கபாலீச்சரம் அணைந்து
நீடு கோபுரத்து எதிர்
மணிச் சிவிகையை நீக்கி. 1082
அங்கணாளர் தம் அபிமுகத்தினில்
அடி உறைப்பால்
மங்கை என்பு சேர் குடத்தினை
வைத்து முன் வணங்கப்
பொங்கு நீள் புனல்
புகலி காவலர் புவனத்துத்
தங்கி வாழ்பவர்க்கு உறுதியாம்
நிலைமை சாதிப்பார். 1083
மாடம் ஓங்கிய மயிலை
மா நகர் உளார் மற்றும்
நாடு வாழ்பவர் நன்றியில்
சமயத்தின் உள்ளோர்
மாடு சூழ்ந்து காண்பதற்கு
வந்து எய்தியே மலிய
நீடு தேவர்கள் ஏனையோர்
விசும்பிடை நெருங்க. 1084
தொண்டர் தம் பெருங் குழாம்
புடை சூழ்தரத் தொல்லை
அண்டர் நாயகர் கோபுர
வாயில் நேர் அணைந்து
வண்டு வார் குழலாள் என்பு
நிறைந்த மண் குடத்தைக்
கண்டு தம்பிரான் கருணையின்
பெருமையே கருதி. 1085
இந்த மாநிலத்து இறந்துளோர்
என்பினைப் பின்னும்
நந்து நன்னெறிப் படுத்திட
நன்மையாம் தன்மை
அந்த என்பொடு தொடர்ச்சியாம்
என அருள் நோக்கால்
சிந்தும் அங்கம் அங்குடைய
பூம்பாவை பேர் செப்பி. 1086
மண்ணினில் பிறந்தார் பெறும்
பயன் மதி சூடும்
அண்ணலார் அடியார் தமை
அமுது செய்வித்தல்
கண்ணினால் அவர் நல்விழாப்
பொலிவு கண்டார்தல்
உண்மையாம் எனில் உலகர் முன்
வருக என உரைப்பார். 1087
மன்னுவார் சடையாரை முன்
தொழுது மட்டிட்ட
என்னும் நற் பதிகத்தினில்
போதியோ என்னும்
அன்ன மெய்த் திருவாக்கு
எனும் அமுதம் அவ்வங்கம்
துன்ன வந்து வந்து
உருவமாய்த் தொக்கது அக்குடத்துள். 1088
ஆன தன்மையின் அத்திரு
பாட்டினில் அடைவே
போன வாயுவும் வடிவமும்
பொலிவொடு நிரம்பி
ஏனை அக்குடத்து அடங்கி முன்
இருந்து எழுவதன் முன்
ஞான போனகர் பின்
சமண்பாட்டினை நவில்வார். 1089
தேற்றமில் சமண் சாக்கியத்
திண்ணரிச் செய்கை
ஏற்றது அன்று என எடுத்து
உரைப்பார் என்ற போது
கோல் தொடிச் செங்கை தோற்றிடக்
குடம் உடைந்து எழுவாள்
போற்று தாமரைப் போது
அவிழ்ந்து எழுந்தனள் போன்றாள். 1090
எடுத்த பாட்டினில் வடிவு பெற்று
இரு நான்கு திருப்பாட்டு
அடுத்த அம்முறைப் பன்னிரண்டு
ஆண்டு அளவு அணைந்து
தொடுத்த வெஞ்சமண் பாட்டினில்
தோன்றிடக் கண்டு
விடுத்த வேட்கையர் திருக் கடைக்
காப்பு மேல் விதித்தார். 1091
ஆங்கனம் எழுந்து நின்ற
அணங்கினை நோக்குவார்கள்
ஈங்கு இது காணீர் என்னா
அற்புதம் எய்தும் வேலைப்
பாங்கு சூழ் தொண்டர் ஆனோர்
அரகர என்னப் பார்மேல்
ஓங்கிய ஓசை உம்பர்
நாட்டினை உற்றது அன்றே. 1092
தேவரும் முனிவர் தாமும்
திருவருள் சிறப்பு நோக்கி
பூவரு விரை கொள் மாரி
பொழிந்தனர் ஒழிந்த மண்ணோர்
யாவரும் இருந்த வண்ணம்
எம்பிரான் கருணை என்றே
மேவிய கைகள் உச்சி மேல்
குவித்து இறைஞ்சி வீழ்ந்தார். 1093
அங்கு அவள் உருவம் காண்பார்
அதிசயம் மிகவும் எய்திப்
பங்கம் உற்றாரே போன்றார்
பர சமயத்தின் உள்ளோர்
எங்குள செய்கை தான் மற்று
என் செய்தவாறு இது என்று
சங்கையாம் உணர்வு கொள்ளும்
சமணர் தள்ளாடி வீழ்ந்தார். 1094
கன்னி தன் வனப்புத் தன்னைக்
கண்களால் முடியக் காணார்
முன்னுறக் கண்டார்க்கு எல்லாம் மொய்
கருங் குழலின் பாரம்
மன்னிய வதனம் செந் தாமரையின்
மேல் கரிய வண்டு
துன்னிய ஒழுங்கு துற்ற சூழல்
போல் இருண்டு தோன்ற. 1095
பாங்கு அணி சுரும்பு மொய்த்த
பனிமலர் அளகப் பந்தி
தேங்கமழ் ஆரம் சேரும்
திருநுதல் விளக்க(ம்) நோக்கில்
பூங்கொடிக்கு அழகின் மாரி பொழிந்திடப்
புயல் கீழ் இட்ட
வாங்கிய வான வில்லின் வளர்
ஒளி வனப்பு வாய்ப்ப. 1096
புருவ மென் கொடிகள் பண்டு
புரம் எரித்தவர் தம் நெற்றி
ஒரு விழி எரியின் நீறாய்
அருள் பெற உளனாம் காமன்
செரு எழும் தனு அது ஒன்றும்
சேம வில் ஒன்றும் ஆக
இரு பெரும் சிலைகள் முன்
கொண்டு எழுந்தன போல ஏற்ப. 1097
மண்ணிய மணியின் செய்ய வளர்
ஒளி மேனியாள் தன்
கண்ணிணை வனப்புக் காணில்
காமரு வதனத் திங்கள்
தண்ணளி விரிந்த சோதி
வெள்ளத்தில் தகைவின் நீள
ஒண் நிறக் கரிய செய்ய
கயல் இரண்டு ஒத்து உலாவ. 1098
பணி வளர் அல்குல் பாவை
நாசியும் பவள வாயும்
நணிய பேரொளியில் தோன்றும்
நலத்தினை நாடுவார்க்கு
மணி நிறக் கோபம் கண்டு
மற்றது வவ்வத் தாழும்
அணி நிறக் காம ரூபி
அனையதாம் அழகு காட்ட. 1099
இளமயில் அனைய சாயல் ஏந்திழை
குழை கொள் காது
வளமிகு வனப்பினாலும் வடிந்த
தாள் உடைமையாலும்
கிளர் ஒளி மகரம்
வேறு கெழுமிய தன்மையாலும்
அளவில் சீர் அனங்கன் வென்றிக்
கொடி இரண்டு அனையவாக. 1100
வில் பொலி தரளக் கோவை
விளங்கிய கழுத்து மீது
பொற்பமை வதனமாகும் பதும
நல் நிதியம் பூத்த
நற்பெரும் பணிலம் என்னும்
நன்னிதி போன்று தோன்றி
அல்பொலி கண்டர் தந்த
அருட்கு அடையாளம் காட்ட. 1101
எரியவிழ் காந்தள் மென்பூத் தலை
தொடுத்து இசைய வைத்துத்
திரள் பெறச் சுருக்கும் செச்சை
மாலையோ தெரியின் வேறு
கரு நெடுங் கயற்கண் மங்கை
கைகளால் காந்தி வெள்ளம்
அருகு இழிந்தனவோ என்னும்
அதிசயம் வடிவில் தோன்ற. 1102
ஏர் கெழு மார்பில் பொங்கும்
ஏந்து இளம் கொங்கை நாகக்
கார் கெழு விடத்தை நீக்கும்
கவுணியர் தலைவர் நோக்கால்
ஆர் திருவருளில் பூரித்து
அடங்கிய அமுதக் கும்பச்
சீர் கெழு முகிழைக் காட்டும்
செவ்வியில் திகழ்ந்து தோன்ற. 1103
காம வேள் என்னும் வேடன்
உந்தியில் கரந்து கொங்கை
நேமி அம் புட்கள் தம்மை
அகப்பட நேரிது ஆய
தாம நீள் கண்ணி சேர்ந்த
சலாகை தூக்கியதே போலும்
வாமமே கலை சூழ் வல்லி
மருங்கின் மேல் உரோம வல்லி. 1104
பிணி அவிழ் மலர் மென் கூந்தல்
பெண் அமுது அனையாள் செம்பொன்
அணி வளர் அல்குல் தங்கள்
அரவு செய் பிழையால் அஞ்சி
மணி கிளர் காஞ்சி சூழ்ந்து
வனப்புடை அல்குல் ஆகிப்
பணி உலகு ஆளும் சேடன்
பணம் விரித்து அடைதல் காட்ட. 1105
வரிமயில் அனைய சாயல் மங்கை
பொன் குறங்கின் மாமை
கரி இளம் பிடிக்கை வென்று
கதலி மென் தண்டு காட்டத்
தெரிவுறும் அவர்க்கு மென்மைச்
செழு முழந்தாளின் செவ்வி
புரிவுறு பொற் பந்து என்னப்
பொலிந்து ஒளி விளங்கிப் பொங்க. 1106
பூவலர் நறுமென் கூந்தல் பொன்
கொடி கணைக்கால் காமன்
ஆவ நாழிகையே போலும்
அழகினில் மேன்மை எய்த
மேவிய செம்பொன் தட்டின்
வனப்பினை மீதிட்டு என்றும்
ஓவியர்க்கு எழுத ஒண்ணாப் பரட்டு
ஒளி ஒளிர்வுற்று ஓங்க. 1107
கற்பகம் ஈன்ற செவ்விக்
காமரு பவளச் சோதிப்
பொன் திரள் வயிரப் பத்திப்
பூந்துணர் மலர்ந்த போலும்
நற்பதம் பொலிவு காட்ட
ஞாலமும் விசும்பும் எல்லாம்
அற்புதம் எய்தத் தோன்றி
அழகினுக்கு அணியாய் நின்றாள். 1108
எண்ணில் ஆண்டு எய்தும் வேதாப்
படைத்தவள் எழிலின் வெள்ளம்
நண்ணும் நான் முகத்தால் கண்டான்
அவளினும் நல்லாள் தன்பால்
புண்ணியப் பதினாறு ஆண்டு பேர்
பெறும் புகலி வேந்தர்
கண் நுதல் கருணை வெள்ளம்
ஆயிரம் முகத்தால் கண்டார். 1109
இன்னணம் விளங்கிய ஏர்
கொள் சாயலாள்
தன்னை முன் கண்
உறக் கண்ட தாதையார்
பொன் அணி மாளிகைப்
புகலி வேந்தர் தாள்
சென்னியில் பொருந்த முன்
சென்று வீழ்ந்தனர். 1110
அணங்கினும் மேம்படும்
அன்னம் அன்னவள்
பணம் புரி அரவரைப்
பரமர் முன் பணிந்து
இணங்கிய முகில் மதில்
சண்பை ஏந்தலை
வணங்கியே நின்றனள்
மண்ணுளோர் தொழ. 1111
சீர் கெழு சிவ
நேசர் தம்மை முன்னமே
கார் கெழு சோலை
சூழ் காழி மன்னவர்
ஏர் கெழு சிறப்பில் நும்
மகளைக் கொண்டு இனிப்
பார் கெழு மனையில்
படர்மின் என்றலும். 1112
பெருகிய அருள் பெறும்
வணிகர் பிள்ளையார்
மருவு தாமரை அடி
வணங்கிப் போற்றி நின்று
அருமையால் அடியனேன்
பெற்ற பாவையைத்
திருமணம் புணர்ந்து அருள்
செய்யும் என்றலும். 1113
மற்றவர் தமக்கு வண்
புகலி வாணர் நீர்
பெற்ற பெண் விடத்தினால்
வீந்த பின்னையான்
கற்றைவார் சடையவர்
கருணை காண்வர
உற்பவிப் பித்தலால் உரை
தகாது என. 1114
வணிகரும் சுற்றமும்
மயங்கிப் பிள்ளையார்
அணிமலர் அடியில் வீழ்ந்து
அரற்ற ஆங்கு அவர்
தணிவில் நீள் பெருந்துயர்
தணிய வேத நூல்
துணிவினை அருள் செய்தார்
தூய வாய்மையார். 1115
தெள்ளு நீதியின் முறை
கேட்ட சீர்க்கிளை
வெள்ளமும் வணிகரும்
வேட்கை நீத்திடப்
பள்ள நீர்ச் செலவு
எனப் பரமர் கோயிலின்
உள் எழுந்தருளினார்
உடைய பிள்ளையார். 1116
பான்மையால் வணிகரும் பாவை
தன் மணம்
ஏனையோர்க்கு இசைகிலேன் என்று
கொண்டு போய்
வானுயர் கன்னி
மாடத்து வைத்தனர்
தேனமர் கோதையும்
சிவத்தை மேவினாள். 1117
தேவர் பிரான் அமர்ந்து
அருளும் திருக் கபாலீச்சரத்து
மேவிய ஞானத் தலைவர்
விரிஞ்சன் முதல் எவ்வுயிர்க்கும்
காவலனார் பெருங்கருணை கை
தந்த படி போற்றிப்
பாவலர் செந்தமிழ் பாடிப் பன்
முறையும் பணிந்து எழுவார். 1118
தொழுது புறம் போந்தருளித் தொண்டர்
குழாம் புடை சூழப்
பழுதில் புகழ் திருமயிலைப் பதியில்
அமர்ந்து அருளும் நாள்
முழுதுலகும் தரும் இறைவர் முதல்
தானம் பல இறைஞ்ச
அழுதுலகை வாழ்வித்தார் அப்பதியின்
மருங்கு அகல்வார். 1119
திருத்தொண்டர் அங்கு உள்ளார்
விடை கொள்ளச் சிவநேசர்
வருத்தம் அகன்றிட மதுர மொழி
அருளி விடை கொடுத்து
நிருத்தர் உறை பிற பதிகள்
வணங்கிப் போய் நிறை காதல்
அருத்தியொடும் திருவான்மியூர்
பணிய அணைவுற்றார். 1120
திருவான்மியூர் மன்னும் திருத்தொண்டர்
சிறப்பு எதிர
வருவார் மங்கல அணிகள்
மறுகு நிரைத்து எதிர்கொள்ள
அருகாக இழிந்தருளி அவர்
வணங்கத் தொழுது அன்பு
தருவார் தம் கோயில்
மணித்தடம் நெடுங்கோபுரம் சார்ந்தார். 1121
மிக்குயர்ந்த கோபுரத்தை வணங்கி
வியன் திருமுன்றில்
புக்கருளிக் கோயிலினைப் புடைவலம்
கொண்டு உள் அணைந்து
கொக்கு இறகு(ம்) மதிக் கொழுந்தும்
குளிர் புனலும் ஒளிர்கின்ற
செக்கர் நிகர் சடை முடியார்
சேவடியின் கீழ்த் தாழ்ந்தார். 1122
தாழ்ந்து பல முறை பணிந்து
தம்பிரான் முன் நின்று
வாழ்ந்து களிவரப் பிறவி
மருந்தான பெருந்தகையைச்
சூழ்ந்த இசைத் திருப்பதிகச் சொல்
மாலை வினா உரையால்
வீழ்ந்த பெரும் காதலுடன்
சாத்தி மிக இன்புற்றார். 1123
பரவி வரும் ஆனந்த(ம்) நிறைந்த
துளி கண் பனிப்ப
விரவு மயிர்ப் புளகங்கள் மிசை
விளங்கப் புறத்து அணைவுற்று
அரவ நெடும் திரை
வேலை அணிவான்மியூர் அதனுள்
சிரபுரத்துப் புரவலனார் சில நாள்
அங்கு இனிது அமர்ந்தார். 1124
அங்கண் அமர்வார் உலகு
ஆளுடையாரை அரும் தமிழின்
பொங்கும் இசைப் பதிகங்கள்
பல போற்றிப் போந்தருளிக்
கங்கை அணி மணி முடியார் பதி
பலவும் கலந்து இறைஞ்சிச்
செங்கண் விடைக் கொடியார் தம்
இடைச் சுரத்தைச் சேர்வுற்றார். 1125
சென்னி இள மதி அணிந்தார்
மருவு திரு இடைச் சுரத்து
மன்னும் திருத் தொண்டர் குழாம்
எதிர் கொள்ள வந்தருளி
நல் நெடும் கோபுரம்
இறைஞ்சி உள்புகுந்து நற்கோயில்
தன்னை வலம் கொண்டு அணைந்தார்
தம்பிரான் திரு முன்பு. 1126
கண்ட பொழுதே கலந்த காதலால்
கை தலை மேல்
கொண்டு தலம் உற விழுந்து
குலவு பெரு மகிழ்ச்சியுடன்
மண்டிய பேரன்பு உருகி மயிர்
முகிழ்ப்ப வணங்கி எழுந்து
அண்டர் பிரான் திருமேனி
வண்ணம் கண்டு அதிசயித்தார். 1127
இருந்த இடைச் சுரம் மேவும்
இவர் வண்ணம் என்னே என்று
அருந்தமிழின் திருப்பதிகத்து அலர்
மாலை கொடு பரவித்
திருந்து மனம் கரைந்து உருகத்
திருக்கடைக் காப்புச் சாத்திப்
பெரும் தனி வாழ்வினைப் பெற்றார்
பேர் உலகின் பேறு ஆனார். 1128
நிறைந்து ஆரா வேட்கையினால் நின்று
இறைஞ்சி புறம் போந்து அங்கு
உறைந்து அருளிப் பணிகின்றார்
உமைபாகர் அருள் பெற்றுச்
சிறந்த திருத் தொண்டருடன்
எழுந்தருளிச் செந்துருத்தி
அறைந்து அளிகள் பயில் சாரல்
திருக்கழுக் குன்றினை அணைந்தார். 1129
சென்று அணையும் பொழுதின் கண்
திருத்தொண்டர் எதிர் கொள்ளப்
பொன் திகழும் மணிச் சிவிகை
இழிந்தருளி உடன் போந்து
மன்றல் விரி நறும் சோலைத்
திருமலையை வலம் கொண்டு
மின் தயங்கும் சடையாரை
விருப்பினுடன் பணிகின்றார். 1130
திருக்கழுக் குன்றத்து அமர்ந்த
செங்கனகத் தனிக் குன்றைப்
பெருக்க வளர் காதலினால்
பணிந்து எழுந்து பேராத
கருத்தினுடன் காதல் செயும்
கோயில் கழுக்குன்று என்று
திருப்பதிகம் புனைந்தருளிச் சிந்தை
நிறை மகிழ் உற்றார். 1131
இன்புற்று அங்கு அமர்ந்தருளி
ஈறில் பெரும் தொண்டருடன்
மின் பெற்ற வேணியினார்
அருள் பெற்றுப் போந்தருளி
என்புற்ற மணிமார்பர் எல்லை
இலா ஆட்சி புரிந்து
அன்புற்று மகிழ்ந்த திரு
அச்சிறு பாக்கம் அணைந்தார். 1132
ஆதி முதல் வரை வணங்கி
ஆட்சி கொண்டார் என மொழியும்
கோதில் திருப்பதிக இசை
குலாவிய பாடலில் போற்றி
மாதவத்து முனிவருடன் வணங்கி
மகிழ்ந்து இன்புற்றுத்
தீது அகற்றும் செய்கையினார்
சின்னாள் அங்கு அமர்ந்தருளி. 1133
ஏறணிந்த வெல் கொடியார் இனிது
அமர்ந்த பதி பிறவும்
நீறணிந்த திருத்தொண்டர் எதிர்
கொள்ள நேர்ந்து இறைஞ்சி
வேறு பல நதி கானம்
கடந்து அருளி விரிசடையில்
ஆறணிந்தார் மகிழ்ந்த திரு
அரசிலியை வந்து அடைந்தார். 1134
அரசிலியை அமர்ந்து அருளும்
அங்கண் அரசைப் பணிந்து
பரசி எழு திருப்
புறவார் பனங்காட்டூர் முதலாய .
விரை செய் மலர்க் கொன்றையினார்
மேவு பதி பல வணங்கித்
திரை செய் நெடுங் கடல்
உடுத்த திருத்தில்லை நகர் அணைந்தார் 1135
எல்லையில் ஞானத் தலைவர்
எழுந்தருள எதிர் கொள்வார்
தில்லையில் வாழ் அந்தணர்
மெய்த் திருத்தொண்டர் சிறப்பினொடு
மல்கி எதிர் பணிந்து இறைஞ்ச
மணிமுத்தின் சிவிகை இழிந்து
அல்கு பெருங் காதலுடன்
அஞ்சலி கொண்டு அணைகின்றார். 1136
திரு எல்லையிற் பணிந்து சென்று
அணைவார் சேண் விசும்பை
மருவி விளங்குஒளி தழைக்கும்
வடதிசை வாயிலை வணங்கி
உருகு பெருங் காதலுடன் உள்
புகுந்து மறையின் ஒலி
பெருகி வளர் மணிமாடப் பெருந்
திரு வீதியை அணைந்தார். 1137
நலம் மலியும் திருவீதி
பணிந்தெழுந்து நற்றவர்தம்
குல(ம்) நிறைந்த திருவாயில்
குவித்த மலர்ச் செங்கையொடு
தலமுற முன் தாழ்ந்து எய்தித்
தமனிய மாளிகை மருங்கு
வலமுற வந்து ஓங்கிய
பேரம்பலத்தை வணங்கினார். 1138
வணங்கி மிக மனம் மகிழ்ந்து
மால் அயனும் தொழும் பூத
கணங்கள் மிடை திருவாயில் பணிந்து
எழுந்து கண் களிப்ப
அணங்கு தனி கண்டருள
அம்பலத்தே ஆடுகின்ற
குணம் கடந்த தனிக் கூத்தர்
பெருங் கூத்துக் கும்பிடுவார். 1139
தொண்டர் மனம் பிரியாத
திருப்படியைத் தொழுது இறைஞ்சி
மண்டுபெருங் காதலினால் நோக்கி
முக(ம்) மலர்ந்து எழுவார்
அண்டம் எலாம் நிறைந்து
எழுந்த ஆனந்தத்துள் அலைந்து
கண்ட பேரின் பத்தின்
கரையில்லா நிலை அணைந்தார். 1140
அந்நிலைமை அடைந்து திளைத்து
ஆங்கு எய்தாக் காலத்தில்
மன்னு திரு அம்பலத்தை
வலம் கொண்டு போந்தருளிப்
பொன் அணி மாளிகை வீதிப்
புறத்து அணைந்து போது தொறும்
இன்னிசை வண்தமிழ் பாடிக் கும்பிட்டு
அங்கு இனிது இருந்தார். 1141
திருந்திய சீர்த் தாதையார்
சிவ பாத இருதயரும்
பொருந்து திருவளர் புகலிப்
பூசுரரும் மாதவரும்
பெருந் திருமால் அயன்
போற்றும் பெரும்பற்றப் புலியூரில்
இருந் தமிழாகரர் அணைந்தார் எனக்
கேட்டு வந்து அணைந்தார். 1142
ஆங்கு அவரைக் கண்டு சிறப்பு
அளித்து அருளி அவரோடும்
தாங்கரிய காதலினால் தம்
பெருமான் கழல் வணங்க
ஓங்கு திருத் தில்லை வாழ்
அந்தணரும் உடன் ஆகத்
தேன் கமழ் கொன்றைச்
சடையார் திருச்சிற்றம்பலம் பணிந்தார். 1143
தென் புகலி அந்தணரும் தில்லை
வாழ் அந்தணர் முன்
அன்பு நெறி பெருக்குவித்த
ஆண்டகையார் அடி போற்றிப்
பொன் புரி செஞ்சடைக் கூத்தர்
அருள் பெற்றுப் போந்தருளி
இன்புறு தோணியில் அமர்ந்தார்
தமை வணங்க எழுந்தருள. 1144
நற்றவர் தம் குழாத்தோடு நம்பர்
திரு நடம் செய்யும்
பொற்பதியின் திரு எல்லை
பணிந்தருளிப் புறம் போந்து
பெற்றம் உயர்த்தவர் அமர்ந்த
பிறபதியும் புக்கு இறைஞ்சிக்
கற்றவர்கள் பரவு திருக் கழுமலமே
சென்று அடைவார். 1145
பல் பதிகள் கடந்தருளிப்
பன்னிரண்டு பேர் படைத்த
தொல்லை வளப் பூந்தராய்
தூரத்தே தோன்றுதலும்
மல்கு திரு மணிமுத்தின் சிவிகை
இழிந்து எதிர் வணங்கிச்
செல்வமிகு பதி அதன் மேல்
திருப்பதிகம் அருள் செய்வார். 1146
மன்னும் இசை மொழி வண்டார்
குழல் அரிவை என்று எடுத்து
மின்னு சுடர் மாளிகை விண்
தாங்குவ போல் வேணுபுரம்
என்னும் இசைச் சொல் மாலை
எடுத்து இயம்பி எழுந்தருளிப்
புன்னை மணம் கமழ் புறவப்
புறம்பு அணையில் வந்து அணைந்தார். 1147
வாழி வளர் புறம்பு அணையின்
மருங்கு அணைந்து வரி வண்டு
சூழும் மலர் நறும்
தீப தூபங்களுடன் தொழுது
காழி நகர் சேர்மின் எனக்
கடை முடிந்த திருப்பதிகம்
ஏழிசையினுடன் பாடி எயின்
மூதூர் உள் புகுந்தார். 1148
சேண் உயர்ந்த திருத்தோணி
வீற்றிருந்த சிவபெருமான்
தாள் நினைந்த ஆதரவின்
தலைப்பாடு தனை உன்னி
நீள் நிலைக் கோபுரம் அணைந்து
நேர் இறைஞ்சிப் புக்கருளி
வாள் நிலவு பெருங் கோயில்
வலம் கொண்டு முன் பணிந்தார். 1149
முன் இறைஞ்சித் திருவருளின்
முழு நோக்கம் பெற்றேறிப்
பொன் இமயப் பாவையுடன்
புணர்ந்து இருந்த புராதனரைச்
சென்னி மிசைக் குவித்த கரம்
கொடு விழுந்து திளைத்தெழுந்து
மன்னு பெரு வாழ்வு எய்தி
மனம் களிப்ப வணங்குவார். 1150
பரவு திருப் பதிகங்கள்
பலவும் இசையினில் பாடி
விரவிய கண் அருவி
நீர் வெள்ளத்தில் குளித்தருளி
அரவு அணிந்தார் அருள் பெருக
புறம்பு எய்தி அன்பருடன்
சிரபுரத்துப் பெருந்தகையார் தம்
திருமாளிகை சேர்ந்தார். 1151
மாளிகையின் உள் அணைந்து
மறையவர்கட்கு அருள் புரிந்து
தாள் பணியும் பெருங்கிளைக்குத்
தகுதியினால் தலை அளிசெய்து
ஆளுடைய தம் பெருமான்
அடியவர் களுடன் அமர்ந்து
நீளவரும் பேரின்பம் மிகப்
பெருக நிகழு நாள். 1152
காழி நாடு உடைய பிரான்
கழல் வணங்கி மகிழ்வு எய்த
ஆழியினும் மிகப் பெருகும்
ஆசையுடன் திருமுருகர்
வாழி திரு நீல நக்கர்
முதல் தொண்டர் மற்று எனையோர்
சூழும் நெடும் சுற்றமுடன்
தோணிபுரம் தொழுது அணைந்தார். 1153
வந்தவரை எதிர் கொண்டு
மனம் மகிழ்ந்து சண்பையர்கோன்
அந்தமில் சீர் அடியார்கள்
அவரோடும் இனிது அமர்ந்து
சுந்தர ஆரணங்கினுடன்
தோணியில் வீற்றிருந்தாரைச்
செந்தமிழின் பந்தத்தால்
திருப்பதிகம் பல பாடி. 1154
பெரு மகிழ்ச்சியுடன் செல்லப்
பெரும் தவத்தால் பெற்றவரும்
மருவு பெரும் கிளையான
மறையவரும் உடன் கூடித்
திருவளர் ஞானத்தலைவர் திருமணம்
செய்து அருளுதற்குப்
பருவம் இது என்று எண்ணி
அறிவிக்கப் பாங்கு அணைந்தார். 1155
நாட்டு மறை முறை
ஒழுக்கம் ஞான போனகருக்கும்
கூட்டுவது மனம் கொள்வார் கோதில்
மறை நெறிச் சடங்கு
காட்டவரும் வேள்வி பல
புரிவதற்கு ஓர் கன்னிதனை
வேட்டருள வேண்டும் என
விண்ணப்பம் செய்தார்கள். 1156
மற்றவர் தம் மொழி கேட்டு
மாதவத்தின் கொழுந்து அனையார்
சுற்றம் உறும் பெரும் பாசத்
தொடர்ச்சி விடும் நிலைமையராய்
பெற்றம் உயர்த்தவர் அருள்
முன் பெற்றதினால் இசையாது
முற்றியது ஆயினும் கூடாது என்று
அவர் முன் மொழிந்து அருள. 1157
அருமறையோரவர் பின்னும் கை
தொழுது அங்கு அறிவிப்பார்
இருநிலத்து மறை வழக்கம்
எடுத்தீர் நீர் ஆதலினால்
வருமுறையால் அறுதொழிலின் வைதிகமாம்
நெறி ஒழுகும்
திருமணம் செய்து அருளுதற்குத்
திரு உள்ளம் செய்யும் என. 1158
மறை வாழ அந்தணர்தம்
வாய்மை ஒழுக்கம் பெருகும்
துறை வாழச் சுற்றத்தார் தமக்கு
அருளி உடன் படலும்
பிறை வாழும் திருமுடியில் பெரும்
புனலோடு அரவு அணிந்த
கறை வாழும் கண்டத்தார் தமைத்
தொழுது மனம் களித்தார். 1159
திரு ஞான சம்பந்தர்
திரு உள்ளம் செய்ததற்குத்
தருவாய்மை மறையவரும்
தாதையரும் தாங்கரிய
பெருவாழ்வு பெற்றாராய்ப் பிஞ்ஞகனார்
அருள் என்றே
உருகா நின்று இன்பம் உறும்
உள மகிழ்ச்சி எய்துவார். 1160
ஏதமில் சீர் மறையவரில்
ஏற்ற குலத்தோடு இசைவால்
நாதர் திருப் பெருமணத்து
நம்பாண்டார் நம்பி பெறும்
காதலியைக் காழி நாடு
உடையபிரான் கைப்பிடிக்க
போதும் அவர் பெரும் தன்மை
எனப் பொருந்த எண்ணினார். 1161
திருஞான சம்பந்தர் சீர்
பெருக மணம் புணரும்
பெருவாழ்வு திருத்தொண்டர்
மறையவர்கள் மிகப்பேண
வருவாரும் பெரும் சுற்றம் மகிழ்
சிறப்ப மகள் பேசத்
தருவார் தண் பணை
நல்லூர் சார்கின்றார் தாதையார். 1162
மிக்க திருத்தொண்டர்களும்
வேதியரும் உடன் ஏகத்
திக்கு நிகழ் திருநல்லூர்
பெருமணத்தைச் சென்று எய்தத்
தக்க புகழ் நம்பாண்டார்
நம்பிதாம் அது கேட்டுச்
செக்கர் முடிச்சடையார் தம்
திருப்பாதம் தொழுதெழுவார். 1163
ஒப்பரிய பேர் உவகை
ஓங்கி எழும் உள்ளத்தால்
அப்பு நிறை குடம் விளக்கு
மறுகு எல்லாம் அணி பெருக்கிச்
செப்பரிய ஆர்வம் மிகு
பெரும் சுற்றத்தொடும் சென்றே
எப்பொருளும் எய்தினேன் எனத் தொழுது
அங்கு எதிர் கொண்டார். 1164
எதிர் கொண்டு மணி
மாடத்தினில் எய்தி இன்பமுறு
மதுர மொழி பல மொழிந்து
வரன் முறையால் சிறப்பு அளிப்ப
சதுர் முகனின் மேலாய
சண்பை வரு மறையவரும்
முதிர் உணர்வின் மாதவரும்
அணைந்த திறம் மொழிகின்றார். 1165
ஞான போனகருக்கு
நற்றவத்தின் ஒழுக்கத்தால்
ஊனமில் சீலத்து உம்பால்
மகள் பேச வந்தது என
ஆன பேர் அந்தணர் பால்
அருள் உடைமை யாம் என்று
வான் அளவு நிறைந்த பெரு
மன மகிழ்ச்சியொடு மொழிவார். 1166
உம்முடைய பெரும் தவத்தால் உலகு
அனைத்தும் ஈன்று அளித்த
அம்மை திருமுலைப் பாலில்
குழைத்த ஆரமுது உண்டார்க்கு
எம்முடைய குலக் கொழுந்தை
யாம் உய்யத் தருகின்றோம்
வம்மின் என உரைசெய்து
மனமகிழ்ந்து செலவிடுத்தார். 1167
பேர் உவகையால் இசைவு பெற்றவர்
தாம் மீண்டு அணைந்து
கார் உலவு மலர்ச் சோலைக்
கழுமலத்தை வந்து எய்திச்
சீர் உடைய பிள்ளையார்க்கு
அவர் நேர்ந்தபடி செப்பிப்
பார் குலவும் திருமணத்தின்
பான்மையினைத் தொடங்குவார். 1168
திருமணம் செய் கலியாணத்
திருநாளும் திகழ் சிறப்பின்
மருவிய ஓரையும் கணித
மங்கல நூலவர் வகுப்பப்
பெருகு மண நாள் ஓலை
பெரும் சிறப்பினுடன் போக்கி
அருள் புரிந்த நன்னாளில்
அணிமுளைப் பாலிகை விதைத்தார். 1169
செல்வம் மலி திருப்புகலி செழும்
திரு வீதிகள் எல்லாம்
மல்கு நிறை குடம் விளக்கு
மகர தோரணம் நிரைத்தே
எல்லையிலா ஒளி முத்து
மாலைகள் எங்கணும் நாற்றி
அல்கு பெரும் திரு ஓங்க
அணி சிறக்க அலங்கரித்தார். 1170
அருந்தவத்தோர் அந்தணர்கள் அயல்
உள்ளோர் தாம் உய்யப்
பொருந்து திரு நாள் ஓலை
பொருவிறந்தார் கொண்டு அணையத்
திருந்து புகழ் நம்பாண்டார் நம்பி
சிறப்பு எதிர் கொண்டு
வருந்தவத்தான் மகள் கொடுப்பார்
வதுவை வினை தொடங்குவார். 1171
மன்னும் பெரும் சுற்றத்தார்
எல்லாரும் வந்து ஈண்டி
நன்னிலைமைத் திருநாளுக்கெழுநாளாம்
நன்னாளில்
பன்மணி மங்கல முரசம்
பல்லியங்கள் நிறைந்து ஆர்ப்பப்
பொன் மணிப் பாலிகை மீது
புனித முளை பூரித்தார். 1172
சேண் உயரும் மாடங்கள்
திருப் பெருகு மண்டபங்கள்
நீணிலைய மாளிகைகள் நிகரில்
அணி பெற விளக்கிக்
காண வரும் கை வண்ணம்
கவின் ஓங்கும் படி எழுதி
வாண் நிலவு மணிக் கடைக்கண்
மங்கலக் கோலம் புனைந்து. 1173
நீடு நிலைத் தோரணங்கள் நீள்
மருகு தொறும் நிரைத்து
மாடுயரும் கொடி மாலை
மணி மாலையிடைப் போக்கிச்
சேடுயரும் வேதிகைகள் செழுஞ்சாந்து
கொடு நீவிப்
பீடு கெழு மணி முத்தின்
பெரும் பந்தர் பல புனைந்தார். 1174
மன்றல் வினைத் திரு முளை நாள்
தொடங்கி வரும் நாள் எல்லாம்
முன்றில் தொறும் வீதி தொறும்
முக நெடுவாயிகள் தோறும்
நின்று ஒளிரும் மணி
விளக்கு நிறைவாசப் பொற்குடங்கள்
துன்று சுடர்த் தாமங்கள்
தூபங்கள் துதைவித்தார். 1175
எங்கணும் மெய்த் திருத்தொண்டர்
மறையவர்கள் ஏனையோர்
மங்கல நீள் மணவினை நாள்
கேட்டு மிக மகிழ்வு எய்திப்
பொங்கு திருப்புகலிதனில் நாள்தோறும்
புகுந்து ஈண்ட
அங்கண் அணைந்தவர்க்கு எல்லாம் பெரும்
சிறப்பு மிக அளித்தார். 1176
மங்கல தூரிய நாதம் மறுகு
தொறும் நின்று இயம்பப்
பொங்கிய நான்மறை ஓசை கடல்
ஓசை மிசைப் பொலியத்
தங்கு நறும் குறை அகிலின்
தழைத்த செழும் புகையினுடன்
செங்கனல் ஆகுதிப் புகையும் தெய்வ
விரை மணம் பெருக. 1177
எண் திசையில் உள்ளோரும்
ஈண்டு வளத்தொடு நெருங்கப்
பண்ட நிறை சாலைகளும் பல
வேறு விதம் பயில
மண்டு பெரு நிதிக் குவைகள்
மலைப் பிறங்கல் என மலிய
உண்டி வினைப் பெருந்துழனி
ஓவாத ஒலி ஓங்க. 1178
மா மறை நூல் விதிச் சடங்கின்
வகுத்த முறை நெறி மரபின்
தூ மணம் நல் உபகரணம்
சமைப்பவர் தம் தொழில் துவன்றத்
தாமரையோன் அனைய பெரும்
தவ மறையோர் தாம் எடுத்த
பூமருவு பொற்கலசப் புண்ணிய
நீர் பொலிவு எய்த. 1179
குங்குமத்தின் செழும் சேற்றின் கூட்டு
அமைப்போர் இனம் குழுமப்
பொங்குவிரைப் புதுக் கலவைப்
புகை எடுப்போர் தொகை விரவத்
துங்க நறும் கர்ப்பூரச்
சுண்ணம் இடிப்போர் நெருங்க
எங்கும் மலர்ப் பிணை புனைவோர்
ஈட்டங்கள் மிகப் பெருக. 1180
இனைய பல வேறு தொழில்
எம்மருங்கும் நிரைத்து இயற்றும்
மனை வளரும் மறுகு எல்லாம் மண
அணி செய் மறை மூதூர்
நினைவு அரிய பெருவளங்கள்
நெருங்குதலால் நிதிக் கோமான்
தனை இறைவர் தாம் ஏவச்
சமைத்தது போல் அமைந்து உளதால். 1181
மாறிலா நிறை வளம் தரும்
புகலியின் மணம் மீக்
கூறு நாளின் முன்
நாளினில் வேதியர் குழாமும்
நீறு சேர் திருத்தொண்டரும்
நிகர் இலாதவருக்கு
ஆறு சூடினார் அருள்
திருக்காப்பு நாண் அணிவார். 1182
வேத வாய்மையின் விதி
உளி வினையினால் விளங்க
ஓத நீர் உலகில் இயன்
முறை ஒழுக்கமும் பெருகக்
காதல் நீள் திருத்தொண்டர்கள்
மறையவர் கவினார்
மாதர் மைந்தர் பொன் காப்பு
நாண் நகர்வலம் செய்தார். 1183
நகர் வலம் செய்து புகுந்த
பின் நவமணி அணைந்த
புகரில் சித்திரவிதான
மண்டபத்தினில் பொலியப்
பகரும் வைதிக விதிச்
சமாவர்த்தனப் பான்மை
திகழ முற்றிய செம்மலார்
திரு முன்பு சேர்ந்தார். 1184
செம் பொனின் பரிகலத்தினில்
செந்நெல் வெண்பரப்பின்
வம்பு அணிந்த நீள் மாலை
சூழ் மருங்குற அமைத்த
அம் பொன் வாச நீர்ப் பொற்
குடம் அரசு இலை தருப்பை
பம்பு நீள்சுடர் மணி விளக்கு
ஒளிர் தரும் பரப்பில். 1185
நாத மங்கல முழக்கொடு
நல் தவ முனிவர்
வேத கீதமும் விம்மிட
விரை கமழ் வாசப்
போது சாந்தணி பூந்துகில்
புனைந்த புண்ணியம் போல்
மீது பூஞ்சயனத்து இருந்தவர்
முன்பு மேவி. 1186
ஆர்வம் மிக்கு எழும் அன்பினால்
மலர் அயன் அனைய
சீர்மறைத் தொழில் சடங்கு செய்
திருந்து நூல் முனிவர்
பார் வழிப்பட வரும்
இரு வினைகளின் பந்தச்
சார்பு ஒழிப்பவர் திருக்கையில்
காப்பு நாண் சாத்த. 1187
கண்ட மாந்தர்கள் கடி மணம்
காண வந்து அணைவார்
கொண்ட வல்வினையாப்பு அவிழ்
கொள்கைய ஆன
தொண்டர் சிந்தையும் வதனமும்
மலர்ந்தன சுருதி
மண்டு மாமறைக் குலம்
எழுந்து ஆர்த்தன மகிழ்ந்தே. 1188
நிறைந்த கங்குலின் நிதிமழை
விதி முறை எவர்க்கும்
புரந்த ஞான சம்பந்தர் தாம்
புன் நெறிச் சமய
அரந்தை வல்லிருள் அகல
வந்து அவதரித்தால் போல்
பரந்த பேர் இருள் துரந்து
வந்து எழுந்தனன் பகலோன். 1189
அஞ்சிறைச் சுரும்பு அறை
பொழில் சண்பை ஆண்தகையார்
தஞ்சிவத் திருமணம் செயத் தவம்
செய் நாள் என்று
மஞ்சனத் தொழில் புரிந்து என
மாசு இருள் கழுவிச்
செஞ்சுடர்க் கதிர் பேரணி
அணிந்தன திசைகள். 1190
பரம்பு தம் வயின் எங்கணும்
உள்ள பல் வளங்கள்
நிரம்ப முன் கொணர்ந்து
எண் திசையவர் நெருங்குதலால்
தரம் கடந்தவர் தம்
திருக் கல்லி யாணத்தின்
வரம்பில் தன் பயன்
காட்டுவது ஒத்தது வையம். 1191
நங்கள் வாழ்வு என
வரும் திருஞான சம்பந்தர்
மங்கலத் திருமண எழுச்சியின்
முழக்கு என்னத்
துங்க வெண்திரைச் சுரிவளை
ஆர்ப்பொடு சூழ்ந்து
பொங்கு பேரொலி முழக்குடன்
எழுந்தது புணரி. 1192
அளக்கர் ஏழும் ஒன்றாம்
எனும் பெருமை எவ்வுலகும்
விளக்கு மாமண விழாவுடன்
விரைந்து செல்வன போல்
துளக்கில் வேதியர் ஆகுதி
தொடங்கிடா முன்னம்
வளர்க்கும் வேதியில் வலம்
சுழித்து எழுந்தது வன்னி. 1193
சந்த மென் மலர்த் தாது அணி
நீறு மெய் தரித்துக்
கந்தம் மேவும் வண்டு ஒழுங்கு
எனும் கண்டிகை பூண்டு
சிந்தை தூய அன்பர்களுடன்
திருமணம் போத
மந்த சாரியின் மணம்
கொணர்ந்து எழுந்தது மருத்து. 1194
எண் திசை திறத்து யாவரும்
புகலி வந்து எய்தி
மண்டும் அத்திருமண
எழுச்சியின் அணிவாய்ப்பக்
கொண்ட வெண் நிறக் குரூஉச்
சுடர்க் கொண்டல்கள் என்ன
வெண் துகில் கொடி
நிரைத்தது போன்றது விசும்பு. 1195
ஏல இந்நலம் யாவையும்
எழுச்சி முன் காட்டும்
காலை செய்வினை முற்றிய
கவுணியர் பெருமான்
மூலமாகிய தோணி மேல்
முதல்வரை வணங்கிச்
சீலமார் திருவருளினால் மணத்தின்
மேல் செல்வார். 1196
காழி மாநகர் வேதியர்
குழாத்தொடும் கலந்து
சூழும் அன்பர்கள் ஏனையோர்
துதைந்து முன் செல்ல
வாழி மாமறை முழங்கிட
வளம்பதி வணங்கி
நீழல் வெண்சுடர் நித்திலச்
சிவிகை மேற்கொண்டார். 1197
யான வாகனம் ஏறுவார்
யாரும் மேற் கொள்ளக்
கானம் ஆகிய தொங்கல்
பிச்சம் குடை கவரி
மேல் நெருங்கிட விசும்பினும்
நிலத்தினும் எழுந்த
வான துந்துபி முழக்குடன்
மங்கல இயங்கள். 1198
சங்கொடு தாரை சின்னம் தனிப்
பெரும் காளம் தாளம்
வங்கியம் ஏனை மற்று மலர்
துளைக் கருவி எல்லாம்
பொங்கிய ஒலியின் ஓங்கிப்
பூசுரர் வேத கீதம்
எங்கணும் எழுந்து மல்கத்
திருமணம் எழுந்தது அன்றே. 1199
கோதையர் குழல் சூழ் வண்டின் குழாத்து
ஒலி ஒரு பால் கோல
வேதியர் வேத வாய்மை மிகும்
ஒலி ஒரு பால் மிக்க
ஏதம் இல் விபஞ்சி வீணை யாழ்
ஒலி ஒரு பால் ஏத்தும்
நாத மங்கலங்கள் கீத நயப்பு
ஒலி ஒரு பாலாக. 1200
விண்ணினை விழுங்க மிக்க வெண்
துகில் பதாகை வெள்ளம்
கண் வெறி படைப்ப மிக்க
கதிர் விரி கவரிக் கானம்
மண்ணிய மணிப் பூண் நீடும்
அரிசனம் மலிந்த பொற்பின்
எண்ணிலா வண்ணத்தூசின் பொதி
பரப்பு எங்கும் நண்ண. 1201
சிகையொடு மான் தோல் தாங்கும்
இடையும் ஆசானும் செல்வார்
புகை விடும் வேள்விச் செந்தீ
இல்லுடன் கொண்டு போவார்
தகையிலா விருப்பின் மிக்க
பதிகங்கள் விளம்பிச் சார்வார்
வகையறு பகையும் செற்ற
மாதவர் இயல்பின் மல்க. 1202
அறுவகை விளங்கும் சைவத்து
அளவிலா விரதம் சாரும்
நெறி வழி நின்ற வேடம்
நீடிய தவத்தின் உள்ளோர்
மறுவறு மனத்தில் அன்பின்
வழியினால் வந்த யோகக்
குறி நிலை பெற்ற
தொண்டர் குழாமாகி ஏக. 1203
விஞ்சையர் இயக்கர் சித்தர்
கின்னரர் மிடைந்த தேவர்
அஞ்சனம் நாட்ட ஈட்டத்து
அரம்பையர் உடனாய் உள்ளோர்
தஞ்சுடர் விமானம் ஏறித்
தழைத்த ஆதரவினோடு
மஞ்சுறை விசும்பின் மீது
மணஅணி காணச் சென்றார். 1204
மற்றிவர் மிடைந்து செல்லும்
மங்கல வனப்பின் காட்சி
முற்ற இத் தலத்தில் உள்ளோர்
மொய்த்து உடன் படரும் போதில்
அற்புத நிகழ்ச்சி எய்த அணைதலால்
மணம் மேல் செல்லும்
பொற்பு அமை மணத்தின் சாயை
போன்று முன் பொலியச் செல்ல. 1205
தவ அரசு ஆள உய்க்கும்
தனிக்குடை நிழற்றச் சாரும்
பவம் அறுத்து ஆளவல்லார்
பாதம் உள்ளத்துக் கொண்டு
புவனங்கள் வாழ வந்த
பூந்தராய் வேந்தர் போந்து
சிவன் அமர்ந்து உறையும் நல்லூர்
திருப் பெருமணத்தைச் சேர்ந்தார். 1206
பெருமணக் கோயில் உள்ளார்
மங்கலம் பெருகும் ஆற்றால்
வருமணத் திறத்தின் முன்னர் வழி
எதிர் கொள்ளச் சென்று
திருமணம் புணர எய்தும்
சிரபுரச் செம்மலார் தாம்
இருள் மணந்து இலங்கும் கண்டத்து
இறைவர் தம் கோயில் புக்கார். 1207
நாதரைப் பணிந்து போற்றி
நற்பொருள் பதிகம் பாடி
காதல் மெய்யருள் முன் பெற்றுக்
கவுணியர் தலைவர் போந்து
வேதியர் வதுவைக் கோலம்
புனைந்திடவேண்டும் என்னப்
பூத நாயகர் தம் கோயில்
புறத்து ஒரு மடத்தில் புக்கார். 1208
திருவடி மலர் மேல் பூத்த
செழுந்தகைச் சோதி என்ன
மருவிய தரளக் கோவை
மணிச்சரி அணையச் சாத்தி
விரிசுடர்ப் பரட்டின் மீது விளங்கு
பொற் சரட்டில் கோத்த
பெருகு ஒளி முத்தின் தாமம்
பிறங்கிய தொங்கல் சாத்தி. 1210
தண் சுடர் பரிய முத்துத்
தமனிய நாணில் கோத்த
கண் கவர் கோவைப் பத்திக்
கதிர்க் கடி சூத்திரத்தை
வெண் சுடர்த் தரள மாலை
விரிசுடர்க் கொடுக்கின் மீது
வண் திரு அரையின் நீடு
வனப்பு ஒளிவளரச் சாத்தி. 1211
ஒளி கதிர்த் தரளக் கோவை
உதர பந்தனத்தின் மீது
தளிர் ஒளி துளும்பு முத்தின்
சன்ன வீரத்தைச் சாத்திக்
குளிர் நிலவு எறிக்கும் முத்தின்
பூண நூல் கோவை சாத்தி
நளிர் கதிர் முத்து மாலை
நகு சுடர் ஆரம்சாத்தி. 1212
திருக் கழுத்து ஆரம் தெய்வக்
கண்டிகை மாலை சேரப்
பருத்த முத்து ஒழுங்கு கோத்த
படர் ஒளி வடமும் சாத்தி
பெருக்கிய வனப்பின் செவ்விபிறங்கிய
திருவார் காதில்
வருக்க வெண் தரளக் கொத்தின்
வடிக் குழை விளங்கச் சாத்தி. 1214
நீற்று ஒளி தழைத்துப் பொங்கி
நிறை திரு நெற்றிமீது
மேற் பட விரிந்த சோதி
வெண் சுடர் எழுந்தது என்னப்
பாற்படுமுத்தின் பாரப் பனிச்சுடர்த்
திரணை சாத்தி
ஏற்பவைத்து அணிந்த முத்தின் எழில்
வளர் மகுடம் சேர்த்தார். 1215
இவ்வகை நம்மை ஆளும்
ஏர்வளர் தெய்வக் கோலம்
கைவினை மறையோர் செய்யக்
கடிகொள் செங்கமலத் தாதின்
செவ்வி நீள் தாம மார்பர்
திரு அடையாள மாலை
எவ்வுலகோரும் ஏத்தத் தொழுது
தாம் எடுத்துப் பூண்டார். 1216
அழகினுக்கு அணியாம் வெண்ணீறு
அஞ்சு எழுத்து ஓதிச்சாத்திப்
பழகிய அன்பர் சூழப் படர்
ஒளி மறுகில் எய்தி
மழ விடை மேலோர் தம்மை
மனம் கொள வணங்கி வந்து
முழவொலி எடுப்ப முத்தின்
சிவிகை மேல் கொண்டபோது. 1217
எழுந்தன சங்க நாதம்
இயம்பின இயங்கள் எங்கும்
பொழிந்தன விசும்பில் விண்ணேர்
கற்பகப் புதுப்பூ மாரி
தொழுந்தகை முனிவர் தொண்டர்
சுருதியின் வாழ்த்துப் பொங்கி
வழிந்தன திசைகள் மீது
மலர்ந்தன உலகம் எல்லாம். 1218
படர் பெரும் தொங்கல் பிச்சம்
பைம் கதிர்ப் பீலிப் பந்தர்
அடர் புனை செம் பொன்
பாண்டில் அணிதுகில் சதுக்கம் மல்கக்
கடலின் மீது எழுந்து நிற்கும்
கதிர் நிறை மதியம் போல
வடநிரை அணிந்த முத்தின்
மணிக்குடை நிழற்ற வந்தார். 1219
சீரணி தெருவினூடு திருமணம்
செல்ல முத்தின்
ஏரணி காளம் சின்னம் இலங்கு
ஒளித் தாரை எல்லாம்
பேரொலி பெருக முன்னே
பிடித்தன மறைகளோடு
தாரணி உய்ய ஞான சம்பந்தர்
வந்தார் என்று. 1220
மண்ணினுக்கு இடுக்கண் தீர
வந்தவர் திரு நாமங்கள்
எண்ணில பலவும் ஏத்திச்
சின்னங்கள் எழுந்த போது அவ்
அண்ணலார் வதுவை செய்ய
அலங்கரித்து அணையப் பெற்ற
புண்ணிய மறையோர் மாட
மங்கலம் பொழிந்து பொங்க. 1221
முற்று மெய்ஞ்ஞானம் பெற்ற
மூர்த்தியார் செங்கை பற்ற
நற்பெரும் தவத்தின் நீர்மை நலம்
படைத்து எழுந்த தெய்வக்
கற்பகப் பூங்கொம்பு அன்னார்
தம்மையும் காப்புச் சேர்த்துப்
பொற்புறும் சடங்கு முன்னர்ப்
பரிவுடன் செய்தவேலை. 1222
செம் பொன் செய் வாசிச் சூட்டுத்
திருமணிப் புனை பூண் செல்வப்
பைம் பொனின் மாலை வேய்ந்த
பவள மென் கொடி ஒப்பாரை
நம்பன் தன் அருளே வாழ்த்தி
நல் எழில் விளங்கச் சூட்டி
அம் பொன் செய் தீபம் என்ன
அழகு அலங்கரித்து வைத்தார். 1223
மா மறை மைந்தர் எல்லாம்
மணத்து எதிர் சென்று மன்னும்
தூமலர்ச் செம் பொன் சுண்ணம்
தொகு நவமணியும் வீசத்
தாமரை மலரோன் போல்வார்
அரசிலை தருப்பை தோய்ந்த
காமர் பொற் கலச நன்னீர்
இருக்குடன் கலந்து வீச. 1224
விண்ணவர் மலரின் மாரி விசும்பு
ஒளி தழைப்ப வீச
மண்ணகம் நிறைந்த கந்த
மந்த மாருதமும் வீசக்
கண் ஒளி விளக்கம்
மிக்கார் காமர் தோரணங்களூடு
புண்ணிய விளைவு போல்வார்
பூம் பந்தர் முன்பு சார்ந்தார். 1225
பொன் அணி சங்கின் வெள்ளம்
பொலிவுடன் முழங்கி ஆர்ப்ப
மன்னிய தரளப் பத்தி வளர்
மணிச் சிவிகை நின்றும்
பன் மலர் நறும் பொற்
சுண்ணம் பரந்த பாவாடை மீது
முன் இழிந்து அருளி வந்தார்
மூவுலகு உய்ய வந்தார். 1226
மறைக்குல மனையின் வாழ்க்கை
மங்கல மகளிர் எல்லாம்
நிரைத்த நீர்ப் பொற் குடங்கள்
நிரை மணி விளக்குத் தூபம்
நறைக் குல மலர் சூழ் மாலை
நறுஞ் சுடர் முளைப் பொற் பாண்டில்
உறைப் பொலி கலவை ஏந்தி
உடன் எதிர் ஏற்று நின்றார். 1227
ஆங்கு முன் இட்ட செம் பொன்
அணி மணிப் பீடம் தன்னில்
ஓங்கிய ஞான வெள்ளம் உள்
நிறைந்து எழுவது என்னத்
தாங்கிய முத்தின் பைம் பூண்
தண் நிலா எறிப்ப ஏறிப்
பாங்கு ஒளி பரப்பி நின்றார்
பர சமயங்கள் வீழ்த்தார். 1228
எதிர் வரவேற்ற சாயல்
இளமயில் அனைய மாதர்
மதுரமங்கல முன் ஆன வாழ்த்து
ஒலி எடுப்ப வந்து
கதிர் மணிக் கரக வாசக்
கமழ் புனல் ஒழுக்கிக் காதல்
விதி முறை வலம் கொண்டு
எய்திமேவு நல் வினைகள் செய்தார். 1229
மங்கலம் பொலிய ஏந்தி
மாதரார் முன்பு செல்லக்
கங்கையின் கொழுந்து செம் பொன்
இமவரை கலந்தது என்ன
அங்கு அவர் செம்பொன்
மாடத்து ஆதி பூமியின் உட்புக்கார்
எங்களை வாழ முன்னாள்
ஏடு வைகையினுள் இட்டார். 1230
அகில் நறும் தூபம் விம்மி
அணிகிளர் மணியால் வேய்ந்த
துகில் புனை விதான நீழல்
தூமலர்த் தவிசின் மீது
நகில் அணி முத்த மாலை
நகை முக மடவார் வாழ்த்த
இகலில் சீர் மறையோர் சூழ
இனிதின் அங்கு இருந்த வேலை. 1231
திருமகள் கொடுக்கப் பெற்ற செழு
மறை முனிவர் தாமும்
அருமையான் முன் செய்
மெய்ம்மை அருந்தவ மனைவியாரும்
பெருமகிழ்ச்சியினால் பாதம் விளக்குவார்
பிள்ளையார் முன்
உரிமையால் வெண்பால் தூ நீர்
உடன் எடுத்து ஏத்திவந்தார். 1232
வந்து முன் எய்தித் தான் முன்
செய் மா தவத்தின் நன்மை
நந்து நம்பாண்டார் நம்பி ஞான
போனகர் பொற் பாதம்
கந்தவார் குழலினார் பொற் கரக
நீர் எடுத்து வார்ப்ப
புந்தியால் நினை தியானம்
புரி சடையான் என்றுன்னி. 1233
விருப்பினால் விளக்கி மிக்க புனித
நீர் தலைமேல் கொண்டு
பொருப்புறு மாடத்து உள்ளும்
புறத்துளும் தெளித்த பின்னர்
உருப்பொலி உதரத் துள்ளும்
பூரித்தார் உவகை பொங்கி
அருப்புறு கிளைஞர் மேலும்
தெளித்தனர் ஆர்வத்தோடும். 1234
பெருகொளி ஞானம் உண்ட
பிள்ளையார் மலர்க்கை தன்னில்
மருவும் மங்கல நீர் வாசக்
கரகம் முன் ஏந்தி வார்ப்பார்
தரு முறைக் கோத்திரத்தின் தம்
குலம் செப்பி என்றன்
அருநிதிப் பாவை யாரைப்
பிள்ளையார்க்கு அளித்தேன் என்றார். 1235
நல் தவக் கன்னியார் கை
ஞான சம்பந்தர் செங்கை
பற்றுதற்கு உரிய பண்பில் பழுது
இல் நற் பொழுது நண்ண
பெற்றவர் உடன் பிறந்தார் பெரு
மணப் பிணை அ(ன்)னாரைச்
சுற்ற(ம்)முன் சூழ்ந்து போற்றக்
கொண்டு முன் துன்னினார்கள். 1236
ஏகமாம் சிவ மெய்ஞ் ஞானம்
இசைந்தவர் வலப்பால் எய்தி
நாகமார் பணப்பேர் அல்குல்
நல்தவக் கொழுந்து அன்னாரை
மாகமார் சோதி மல்க
மன்னி வீற்றிருந்த வெள்ளை
மேகமொடு இசையும் மின்னுக் கொடி
என விளங்க வைத்தார். 1237
புனித மெய்க் கோல நீடு
புகலியார் வேந்தர் தம்மைக்
குனி சிலை புருவ மென்
பூங்கொம்பனார் உடனே கூட
நனி மிகக் கண்ட போதின்
நல்ல மங்கலங்கள் கூறி
மனிதரும் தேவர் ஆனார்
கண்இமையாது வாழ்த்தி. 1238
பத்தியில் குயிற்றும் பைம் பொன்
பவளக்கால் பந்தர் நாப்பண்
சித்திர விதானத்தின் கீழ்ச் செழும்
திரு நீல நக்கர்
முத் தமிழ் விரகர் முன்பு
முதன் மறை முறையினோடு
மெய்த்த நம் பெருமான் பாதம்
மேவும் உள்ளத்தால் செய்ய. 1239
மறையொலி பொங்கி ஓங்க
மங்கல வாழ்த்து மல்க
நிறை வளைச் செங்கை பற்ற
நேரிழை அவர் முன் அந்தப்
பொறை அணி முந்நூல் மார்பர்
புகரில் பொரிகை அட்டி
இறைவரை ஏத்தும் வேலை
எரிவலம் கொள்ள வேண்டி. 1240
அருப்பு மென் முலையினார் தம்
அணிமலர்க் கைப் பிடித்து அங்கு
ஒருப் படும் உடைய பிள்ளையார்
திரு உள்ளம் தன்னில்
விருப்புறும் அங்கியாவார் விடை
உயர்த்தவரே என்று
திருப் பெரு மணத்தை மேவும்
சிந்தையில் தெளிந்து செல்வார். 1241
மந்திர முறையால் உய்த்த
எரிவலம் ஆக மாதர்
தம் திருக் கையைப்
பற்றும் தாமரைச் செங்கையாளர்
இந்த இல் ஒழுக்கம் வந்து
சூழ்ந்ததே இவள் தன்னோடும்
அந்தமில் சிவன் தாள் சேர்வன்
என்னும் ஆதரவு பொங்க. 1242
மலர் பெரும் கிளையும் தொண்டர்
கூட்டமும் மல்கிச் சூழ
அலகில் மெய்ஞ்ஞானத் தெல்லை
அடைவுறும் குறிப்பால் அங்கண்
உலகின் எம்மருங்கும் நீங்க உடன்
அணைந்து அருள வேண்டிக்
குல மணம் புரிவித்தார் தம்
கோயிலை நோக்கி வந்தார். 1243
சிவன் அமர்ந்து அருளும் செல்வத்
திருப் பெரு மணத்துள் எய்தித்
தவ நெறி வளர்க்க வந்தார்
தலைப்படும் சார்பு நோக்கிப்
பவம் அற என்னை முன்னாள்
ஆண்ட அப்பண்பு கூட
நவம் மலர்ப் பாதம் கூட்டும்
என்னும் நல் உணர்வு நல்க. 1244
காதல் மெய்ப் பதிகம் நல்லூர்ப்
பெருமணம் எடுத்துக் கண்டோர்
தீதுறு பிறவிப் பாசம் தீர்த்தல்
செம் பொருளாக் கொண்டு
நாதனே நல்லூர் மேவும் பெரு
மண நம்பனே உன்
பாத மெய்ந் நீழல் சேரும்
பருவம் ஈது என்று பாட. 1245
தேவர்கள் தேவர் தாமும்
திருவருள் புரிந்து நீயும்
பூவை அன்னாளும் இங்கு உன்
புண்ணிய மணத்தின் வந்தார்
யாவரும் எம்பால் சோதி இதனுள்
வந்து எய்தும் என்று
மூவுலகு ஒளியால் விம்ம
முழுச் சுடர்த் தாணுவாகி. 1246
கோயில் உட் பட மேல்
ஓங்கும் கொள்கையால் பெருகும் சோதி
வாயிலை வகுத்துக் காட்ட மன்னு
சீர்ப் புகலி மன்னர்
பாயின ஒளியால் நீடு பரம்
சுடர்த் தொழுது போற்றி
மாயிரு ஞாலம் உய்ய
வழியினை அருளிச் செய்வார். 1247
ஞான மெய்ந் நெறி தான் யார்க்கும்
நமச்சிவாய அச் சொலாம் என்று
ஆன சீர் நமச்சிவாயத்
திருப்பதிகத்தை அங்கண்
வானமும் நிலமும் கேட்க அருள்
செய்து இம் மணத்தில் வந்தோர்
ஈனமானம் பிறவி தீர
யாவரும் புகுக என்ன. 1248
வரு முறைப் பிறவி வெள்ளம்
வரம்பு காணாது அழுந்தி
உரு எனும் துயரக் கூட்டில்
உணர்வு இன்றி மயங்குவார்கள்
திருமணத்துடன் சேவித்து முன்
செலும் சிறப்பினாலே
மருவிய பிறவி நீங்க
மன்னு சோதியினுள் புக்கார். 1249
சீர் பெருகு நீல நக்கர்
திரு முருகர் முதல் தொண்டர்
ஏர் கெழுவு சிவபாத
இருதயர் நம்பாண்டார் சீர்
ஆர் திரு மெய்ப் பெரும்பாணர்
மற்று எனையோர் அணைந்துளோர்
பார் நிலவு கிளை சூழப்
பன்னிகளோடு உடன் புக்கார். 1250
அணி முத்தின் சிவிகை முதல்
அணி தாங்கிச் சென்றேர்கள்
மணி முத்த மாலை புனை
மடவார் மங்கலம் பெருகும்
பணி முற்றும் எடுத்தார்கள்
பரிசனங்கள் வினைப்பாசம்
துணிவித்த உணர்வினராய்த் தொழுது
உடன் புக்கு ஒடுங்கினார். 1251
ஆறு வகைச் சமயத்தில்
அருந் தவரும் அடியவரும்
கூறு மறை முனிவர்களும்
கும்பிட வந்து அணைந்தாரும்
வேறு திருவருளினால் வீடு
பெற வந்தாரும்
ஈறில் பெரும் சோதியினுள்
எல்லாரும் புக்கதற்பின். 1252
காதலியைக் கைப்பற்றிக் கொண்டு
வலம் செய்தருளித்
தீது அகற்ற வந்து
அருளும் திருஞான சம்பந்தர்
நாதன் எழில் வளர் சோதி
நண்ணி அதன் உள்புகுவார்
போத நிலை முடிந்த வழிப்
புக்கு ஒன்றி உடன் ஆனார். 1253
பிள்ளையார் எழுந்து அருளிப்
புக்கதன்பின் பெரும் கூத்தர்
கொள்ள நீடிய சோதிக் குறி
நிலை அவ்வழி கரப்ப
வள்ளலார் தம் பழைய
மணக் கோயில் தோன்றுதலும்
தெள்ளு நீர் உலகத்துப்
பேறுஇல்லார் தெருமந்தார். 1254
கண் நுதலார் திருமேனியுடன்
கூடக் கவுணியனார்
நண்ணியது தூரத்தே கண்டு
நணுகப் பெறா
விண்ணவரு(ம்) முனிவர்களும்
விரிஞ்சனே முதலானோர்
எண்ணிலவர் ஏசறவு தீர
எடுத்து ஏத்தினார். 1255
அரும் தமிழா கரர் சரிதை
அடியேனுக்கு அவர் பாதம்
தரும் பரிசால் அறிந்தபடி
துதி செய்தேன் தாரணிமேல்
பெருங்கொடையும் திண்ணனவும் பேர்
உணர்வும் திருத்தொண்டால்
வரும் தகைமைக் கலிக் காமனார்
செய்கை வழுத்து வேன்.
வம்பறா வரிவண்டு சருக்கத்தில் திருஞான சம்பந்த நாயனார் புராணம் முற்றிற்று. 1256