பொன்னி வடகரை சேர்நாரை
யூரில் புழைக்கைமுக
மன்னன் அறுபத்து மூவர்
பதிதேம் மரபுசெயல்
பன்னஅத் தொண்டத் தொகைவகை
பல்கும்அந் தாதிதனைச்
சொன்ன மறைக்குல நம்பிபொற்
பாதத் துணைதுணையே. 1
பதிக வகை: தில்லைவாழ் அந்தணர்
செப்பத் தகுபுகழ்த் தில்லைப்
பதியிற் செழுமறையோர்
ஒப்பப் புவனங்கள் மூன்றினும்
உம்பரின் ஊர்எரித்த
அப்பர்க் கமுதத் திருநடர்க்
கந்திப் பிறையணிந்த
துப்பர்க் குரிமைத் தொழில்புரி
வோர்தமைச் சொல்லுதுமே. 2
பதிக வகை: திருநீலகண்ட நாயனார்
சொல்லச் சிவன்திரு
ஆணைதன்தூமொழி தோள்நசையை
ஒல்லைத் துறந்துரு மூத்ததற்
பின்உமை கோன் அருளால்
வில்லைப் புரைநுத லாளோ
டிளமைபெற் றின்பமிக்கான்
தில்லைத் திருநீல கண்டக்
குயவனாம் செய்தவனே. 3
பதிக வகை: இயற்பகை நாயனார்
செய்தவர் வேண்டிய தியாதும்
கொடுப்பச் சிவன்தவனாய்க்
கைதவம் பேசிநின் காதலி
யைத்தரு கென்றலுமே
மைதிகழ் கண்ணியை ஈந்தவன்
வாய்ந்த பெரும்புகழ்வந்
தெய்திய காவிரிப் பூம்பட்
டினத்துள் இயற்பகையே. 4
பதிக வகை: இளையான்குடிமாற நாயனார்
இயலா விடைச்சென்ற மாதவற்
கின்னமு தாவிதைத்த
வயலார் முளைவித்து வாரி
மனைஅலக் கால்வறுத்துச்
செயலார் பயிர்விழுத் தீங்கறி
ஆக்கும் அவன்செழுநீர்க்
கயலார் இளையான் குடியுடை
மாறன்எங் கற்பகமே. 5
பதிக வகை: மெய்ப்பொருள் நாயனார்
கற்றநன் மெய்த்தவன் போல்ஒரு
பொய்த்தவன் காய்சினத்தால்
செற்றவன் தன்னை அவனைச்
செறப்புக லும்திருவாய்
மற்றவன் ‘தத்தா நமரே’
எனச்சொல்லி வான்உலகம்
பெற்றவன் சேதிபன் மெய்ப்பொரு
ளாம்என்று பேசுவரே. 6
பதிக வகை: விறன்மிண்ட நாயனார்
பேசும் பெருமையவ்
வாரூரனையும் பிரானவனாம்
ஈசன் தனையும் புறகுதட்
டென்றவன் ஈசனுக்கே
நேசன் எனக்கும் பிரான்மனைக்
கேபுக நீடுதென்றல்
வீசும் பொழில்திருச் செங்குன்றம்
மேய விறன்மிண்டனே. 7
பதிக வகை: அமர்நீதி நாயனார்
மிண்டும் பொழில்பழை யாறை
அமர்நீதி வெண்பொடியின்
முண்டம் தரித்த பிராற்குநல்
லூரின்முன் கோவணம்நேர்
கொண்டிங் கருளென்று தன்பெருஞ்
செல்வமும் தன்னையுந்தன்
துண்ட மதிநுத லாளையும்
ஈந்த தொழிலினனே. 8
பதிக வகை: சுந்தரமூர்த்தி நாயனார்
தொழுதும் வணங்கியும் மாலயன்
தேடரும் சோதிசென்றாங்
கெழுதும் தமிழ்ப்பழ ஆவணம்
காட்டி எனக்குன்குடி
முழுதும் அடிமைவந் தாட்செய்
எனப்பெற்ற வன்முரல்தேன்
ஒழுகு மலரின்நற் றார்எம்பி
ரான்நம்பி யாரூரனே. 9
பதிக வகை: எறிபத்த நாயனார்
ஊர்மதில் மூன்றட்ட உத்தமற்
கென்றோர் உயர்தவத்தோன்
தார்மலர் கொய்யா வருபவன்
தண்டின் மலர்பறித்த
ஊர்மலை மேற்கொள்ளும் பாகர்
உடல்துணி யாக்குமவன்
ஏர்மலி மாமதில் சூழ்கரு
வூரில் எறிபத்தனே. 10
பதிக வகை: ஏனாதிநாத நாயனார்
பத்தனை ஏனாதி நாதனைப்
பார்நீ டெயினைதன்னுள்
அத்தனைத் தன்னோ டமர்மலைந்
தான்நெற்றி நீறுகண்டு
கைத்தனி வாள்வீ டொழிந்தவன்
கண்டிப்ப நின்றருளும்
நித்தனை ஈழக் குலதீபன்
என்பர்இந் நீள்நிலத்தே. 11
பதிக வகை: கண்ணப்ப நாயனார்
நிலத்தில் திகழ்திருக் காளத்தி
யார்திரு நெற்றியின்மேல்
நலத்தில் பொழிதரு கண்ணிற்
குருதிகண் டுள்நடுங்கி
வலத்தில் கடுங்கணை யால்தன்
மலர்க்கண் இடந்தப்பினான்
குலத்திற் கிராதன்நம் கண்ணப்ப
னாம்என்று கூறுவரே. 12
பதிக வகை: குங்குலியக்கலய நாயனார்
ஏய்ந்த கயிறுதன் கண்டத்திற்
பூட்டி எழிற்பனந்தாள்
சாய்ந்த சிவன்நிலைத் தான்என்பர்
காதலி தாலிகொடுத்
தாய்ந்தநற் குங்குலி யங்கொண்
டனற்புகை காலனைமுன்
காய்ந்த அரற்கிட்ட தென்கட
வூரில் கலயனையே. 13
பதிக வகை: மானக் கஞ்சாற நாயனார்
கலச முலைக்கன்னி காதற்
புதல்வி கமழ்குழலை
நலசெய் தவத்தவன் பஞ்ச
வடிக்கிவை நல்கெனலும்
அலசும் எனக்கரு தாதவள்
கூந்தல் அரிந்தளித்தான்
மலைசெய் மதிற்கஞ்சை மானக்கஞ்
சாறன் எனும்வள்ளலே. 14
பதிக வகை: அரிவாட்டாய நாயனார்
வள்ளற் பிராற்கமு தேந்தி
வருவோன் உகலும்இங்கே
வெள்ளச் சடையாய் அமுதுசெய்
யாவிடில் என்தலையைத்
தள்ளத் தகுமென்று வாட்பூட்
டியதடங் கையினன் காண்
அள்ளற் பழனக் கணமங்
கலத்தரி வாட்டாயனே. 15
பதிக வகை: ஆனாய நாயனார்
தாயவன் யாவுக்கும் தாழ்சடை
மேல்தனித் திங்கள்வைத்த
தூயவன் பாதம் தொடர்ந்துதொல்
சீர்துளை யாற்பரவும்
வேயவன் மேல்மழ நாட்டு
விரிபுனல் மங்கலக்கோன்
ஆயவன் ஆனாயன் என்னை
உவந்தாண் டருளினனே. 16
பதிக வகை: சுந்தர மூர்த்தி நாயனார்
‘அருட்டுறை அத்தற் கடிமைப் பட்டேன்
இனி அல்லன்’என்னும்
பொருட்டுறை யாவதென் னேஎன்ன
வல்லவன் பூங்குவளை
இருட்டுறை நீர்வயல் நாவற்
பதிக்கும் பிரான்அடைந்தோர்
மருட்டுறை நீக்கிநல் வான்வழி
காட்டிட வல்லவனே. 17
பதிக வகை: மூர்த்தி நாயனார்
அவந்திரி குண்டமண் ஆவதின்
மாள்வனென் றன்றாலவாய்ச்
சிவன்திரு மேனிக்குச் செஞ்சந்
தனமாச் செழுமுழங்கை
உவந்தொளிர் பாறையில் தேய்த்துல
காண்டஒண் மூர்த்திதன்னூர்
நிவந்தபொன் மாட
மதுரா புரியென்னும் நீள்பதியே. 18
பதிக வகை: முருக நாயனார்
பதிகம் திகழ்தரு பஞ்சாக்
கரம்பயில் நாவினன்சீர்
மதியம் சடையாற் கலர்தொட்
டணிபவன் யான்மகிழ்ந்து
துதியம் கழற்சண்பை நாதற்குத்
தோழன்வன் றொண்டன்அம்பொன்
அதிகம் பெறும்புக லூர்முரு
கன்எனும் அந்தணனே. 19
பதிக வகை: உருத்திர பசுபதி நாயனார்
அந்தாழ் புனல்தன்னில் அல்லும்
பகலும்நின் றாதரத்தால்
உந்தாத அன்பொ டுருத்திரஞ்
சொல்லிக் கருத்தமைந்த
பைந்தார் உருத்(தி)ர பசுபதி
தன்னற் பதிவயற்கே
நந்தார் திருத்தலை யூர்என்
றுரைப்பர்இந் நானிலத்தே. 20
பதிக வகை: திருநாளைப்போவார் நாயனார்
நாவார் புகழ்த்தில்லை அம்பலத்
தான்அருள் பெற்றுநாளைப்
போவான் அவனாம் புறத்திருத்
தொண்டன்தன் புன்புலைபோய்
மூவா யிரவர்கை கூப்ப
முனியா யவன்பதிதான்
மாவார் பொழில்திகழ் ஆதனூர்
என்பர்இம் மண்டலத்தே. 21
பதிக வகை: திருக்குறிப்புத்தொண்ட நாயனார்
மண்டும் புனற்சடை யான்தமர்
தூசெற்றி வாட்டும்வகை
விண்டு மழைமுகில் வீடா
தொழியின்யான் வீவன்என்னா
முண்டம் படர்பாறை முட்டும்
எழிலார் திருக்குறிப்புத்
தொண்டன் குலங்கச்சி ஏகா
லியர்தங்கள் தொல்குலமே. 22
பதிக வகை: சண்டேசுர நாயனார்
குலமே றியசேய்ஞ லூரில்
குரிசில் குரைகடல்சூழ்
தலமே றியவிறல் சண்டிகண்
டீர்தந்தை தாள்இரண்டும்
வலமே றியமழு வால்எறிந்
தீசன் மணிமுடிமேல்
நலமே றியபால் சொரிந்தலர்
சூட்டிய நன்னிதியே. 23
பதிக வகை: சுந்தரமூர்த்தி நாயனார்
‘நிதியார் துருத்திதென் வேள்விக்
குடியாய் நினைமறந்த
மதியேற் கறிகுறி வைத்த
புகர்பின்னை மாற்றி’டென்று
துதியா அருள்சொன்ன வாறறி
வாரிடைப் பெற்றவன்காண்
நதியார் புனல்வயல் நாவலர்
கோன்என்னும் நற்றவனே. 24
பதிக வகை: திருநாவுக்கரசு நாயனார்
நற்றவன் நல்லூர்ச் சிவன்திருப்
பாதம்தன் சென்னிவைக்கப்
பெற்றவன் மற்றிப் பிறப்பற
வீரட்டர் பெய்கழற்றாள்
உற்றவன் உற்ற விடம்அடை
யார்இட ஒள்ளமுதாத்
துற்றவன் ஆமுரில் நாவுக்
கரசெனும் தூமணியே. 25
மணியினை மாமறைக் காட்டு
மருந்தினை வண்மொழியால்
திணியன நீள்கத வந்திறப்
பித்தன தெண்கடலிற்
பிணியன கல்மிதப் பித்தன
சைவப் பெருநெறிக்கே
அணியன நாவுக் கரையர்
பிரான்தன் அருந்தமிழே. 26
பதிக வகை: குலச்சிறை நாயனார்
அருந்தமி ழாகரன் வாதில்
அமணைக் கழுநுதிமேல்
இருந்தமிழ் நாட்டிடை ஏற்றுவித்
தோன்எழிற் சங்கம்வைத்த
பெருந்தமிழ் மீனவன் தன்அதி
காரி பிரசம்மல்கு
குருந்தவிழ் சாரல் மணமேற்
குடிமன் குலச்சிறையே. 27
பதிக வகை: பெருமிழலைக் குறும்ப நாயனார்
சிறைநன் புனல்திரு நாவலூ
ராளி செழுங்கயிலைக்
கிறைநன் கழல்நாளை எய்தும்
இவனருள் போற்றஇன்றே
பிறைநன் முடியன் அடியடை
வேன்என் றுடல்பிரிந்தான்
நறைநன் மலர்த்தார் மிழலைக்
குறும்பன் எனும்நம்பியே. 28
பதிக வகை: காரைக்கால் அம்மையார்
‘நம்பன் திருமலை நான்மிதி
யேன்’என்று தாள்இரண்டும்
உம்பர் மிசைத்தலை யால்நடந்
தேற உமைநகலும்
செம்பொன் உருவன்’என் அம்மை’
எனப்பெற் றவள் செழுந்தேன்
கொம்பின் உகுகாரைக் காலினில்
மேய குலதனமே. 29
பதிக வகை: அப்பூதியடிகள் நாயனார்
தனமா வதுதிரு நாவுக்
கரசின் சரணம்என்னா
மனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத்
தாங்கவன் வண்தமிழ்க்கே
இனமாத் தனது பெயரிடப்
பெற்றவன் எங்கள்பிரான்
அனமார் வயல்திங்கள் ஊரினில்
வேதியன் அப்பூதியே. 30
பதிக வகை: திருநீலநக்க நாயனார்
பூதிப் புயத்தர் புயத்திற்
சிலந்தி புகலும்அஞ்சி
ஊதித் துமிந்த மனைவியை
நீப்பஉப் பாலவெல்லாம்
பேதித் தெழுந்தன காணென்று
பிஞ்ஞகன் காட்டுமவன்
நீதித் திகழ்சாத்தை நீலநக்
கன்எனும் வேதியனே. 31
பதிக வகை: நமிநந்தியடிகள் நாயனார்
வேத மறிக்கரத் தாரூர்
அரற்கு விளக்குநெய்யைத்
தீது செறிஅமண் கையர்அட்
டாவிடத் தெண்புனலால்
ஏத முறுக அருகரென்
றன்று விளக்கெரித்தான்
நாதன் எழில்ஏமப் பேறூர்
அதிபன் நமிநந்தியே. 32
பதிக வகை: சுந்தரமூர்த்தி நாயனார்
நந்திக்கும் நம்பெரு மாற்குநல்
ஆருரில் நாயகற்குப்
பந்திப் பரியன செந்தமிழ்
பாடிப் படர்புனலிற்
சிந்திப் பரியன சேவடி
பெற்றவன் சேவடியே
வந்திப் பவன்பெயர் வன்தொண்டன்
என்பர்இவ் வையகத்தே. 33
பதிக வகை: திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்
வையம் மகிழயாம் வாழ
அமணர் வலிதொலைய
ஐயன் பிரம புரத்தரற் கம்மென்
குதலைச் செவ்வாய்
பைய மிழற்றும் பருவத்துப்
பாடப் பருப்பதத்தின்
தையல் அருள்பெற் றனன்என்பர்
ஞானசம் பந்தனையே. 34
பந்தார் விரலியர் வேள்செங்கட்
சோழன் முருகன்நல்ல
சந்தார் அகலத்து நீலநக்
கன்பெயர் தான்மொழிந்து
கொந்தார் சடையர் பதிகத்தில்
இட்டடி யேன்கொடுத்த
அந்தாதி கொண்ட பிரான்அருட்
காழியர் கொற்றவனே. 35
பதிக வகை: ஏயர்கோன் கலிக்காம நாயனார்
கொற்றத் திறல்எந்தை தந்தைதன்
தந்தைஎங் கூட்ட மெல்லாம்
தெற்றச் சடையாய் நினதடி
யேந்திகழ் வன்தொண்டனே
மற்றிப் பிணிதவிர்ப் பான்என்
றுடைவாள் உருவிஅந்நோய்
செற்றுத் தவிர்கலிக் காமன்
குடிஏயர் சீர்க்குடியே. 36
பதிக வகை: திருமூல நாயனார்
குடிமன்னு சாத்தனூர்க் கோக்குலம்
மேய்ப்போன் குரம்பைபுக்கு
முடிமன்னு கூனற் பிறையாளன்
தன்னை முழுத்தமிழின்
படிமன்னு வேதத்தின் சொற்படி
யேபர விட்டென்உச்சி
அடிமன்ன வைத்த பிரான்மூலன்
ஆகின்ற அங்கணனே. 37
பதிக வகை: தண்டியடிகள் நாயனார்
கண்ணார் மணிஒன்றும் இன்றிக்
கயிறு பிடித்தரற்குத்
தண்ணார் புனல்தடம் தொட்டலும்
தன்னை நகும்அமணர்
கண்ணாங் கிழப்ப அமணர்
கலக்கங்கண் டம்மலர்க்கண்
விண்ணா யகனிடைப் பெற்றவன்
ஆரூர் விறல்தண்டியே. 38
பதிக வகை: மூர்க்க நாயனார்
தண்டலை சூழ்திரு வேற்காட்டூர்
மன்னன் தருகவற்றால்
கொண்டவல் லாயம்வன் சூதரை
வென்றுமுன் கொண்டபொருள்
முண்டநன் னீற்றன் அடியவர்க்
கீபவன் மூர்க்கனென்பர்
நண்டலை நீரொண் குடந்தையில்
மேவுநற் சூதனையே. 39
பதிக வகை: சோமாசிமாற நாயனார்
சூதப் பொழில் அம்பர் அந்தணன்
சோமாசி மாறன்என்பான்
வேதப் பொருள்அஞ் செழுத்தும்
விளம்பியல் லால்மொழியான்
நீதிப் பரன்மன்னு நித்த
நியமன் பரவையென்னும்
மாதுக்குக் காந்தன்வன் தொண்டன்
தனக்கு மகிழ்துணையே. 40
பதிக வகை: சுந்தரமூர்த்தி நாயனார்
துணையும் அளவும் இல் லாதவன்
தன்னரு ளேதுணையாக்
கணையும் கதிர்நெடு வேலும்
கறுத்த கயலிணையும்
பிணையும் நிகர்த்தகண் சங்கிலி
பேரமைத் தோள்இரண்டும்
அணையும் அவன்திரு வாரூரன்
ஆகின்ற அற்புதனே. 41
பதிக வகை: சாக்கிய நாயனார்
தகடன ஆடையன் சாக்கியன்
மாக்கற் றடவரையன்
மகள்தனந் தாக்கக் குழைந்ததிண்
தோளர்வண் கம்பர்செம்பொன்
திகழ்தரு மேனியிற் செங்கல்
எறிந்து சிவபுரத்துப்
புகழ்தரப் புக்கவன் ஊர்சங்க
மங்கை புவனியிலே. 42
பதிக வகை: சிறப்புலி நாயனார்
புவனியிற் பூதியும் சாதன
மும்பொலி வார்ந்துவந்த
தவநிய மற்குச் சிறப்புச்செய்
தத்துவ காரணனாம்
அவனியில் கீர்த்தித் தென் ஆக்கூர்
அதிபன் அருமறையோன்
சிவன்நிய மந்தலை நின்றதொல்
சீர்நஞ் சிறப்புலியே 43
பதிக வகை: சிறுத்தொண்ட நாயனார்
புலியின் அதளுடைப் புண்ணியற்
கின்னமு தாத்தனதோர்
ஒலியின் சதங்கைக் குதலைப்
புதல்வன் உடல்துணித்துக்
கலியின் வலிகெடுத் தோங்கும்
புகழ்ச்சிறுத் தொண்டன்கண்டீர்
மலியும் பொழில்ஒண்செங் காட்டம்
குடியவர் மன்னவனே. 44
பதிக வகை: சேரமான்பெருமாள் நாயனார்
மன்னர் பிரான்எதிர் வண்ணான்
உடல்உவர் ஊறிநீறார்
தன்னர் பிரான்தமர் போல
வருதலும் தான்வணங்க
என்னர் பிரான்அடி வண்ணான்
எனஅடிச் சேரன்என்னும்
தென்னர் பிரான்கழ றிற்றறி
வான்எனும் சேரலனே. 45
சேரற்குத் தென்னா வலர்பெரு
மாற்குச் சிவன்அளித்த
வீரக் கடகரி முன்புதன்
பந்தி இவுளிவைத்த
வீரற்கு வென்றிக் கருப்புவில்
வீரனை வெற்றிகொண்ட
சூரற் கெனதுள்ளம் நன்றுசெய்
தாய்இன்று தொண்டுபட்டே. 46
பதிக வகை: கணநாத நாயனார்
தொண்டரை யாக்கி அவரவர்க்
கேற்ற தொழில்கள் செய்வித்
தண்டர்தங் கோனக் கணத்துக்கு
நாயகம் பெற்றவன்காண்
கொண்டல்கொண் டேறிய மின்னுக்குக்
கோல மடல்கள் தொறும்
கண்டல்வெண் சோறளிக் குங்கடல்
காழிக் கணநாதனே. 47
பதிக வகை: கூற்றுவ நாயனார்
நாதன் திருவடி யேமுடி
யாகக் கவித்துநல்ல
போதங் கருத்திற் பொறித்தமை
யால்அது கைகொடுப்ப
ஓதந் தழுவிய ஞாலம்எல்
லாமொரு கோலின்வைத்தான்
கோதை நெடுவேற் களப்பாளன்
ஆகிய கூற்றுவனே. 48
பதிக வகை: சுந்தரமூர்த்தி நாயனார்
கூற்றுக் கெவனோ புகல்திரு
வாரூரன் பொன்முடிமேல்
ஏற்றுத் தொடையலும் இன்அடைக்
காயும் இடுதருமக்
கோற்றொத்துக் கூனனும் கூன்போய்க்
குருடனும் கண்பெற்றமை
சாற்றித் திரியும் பழமொழி
யாம்இத் தரணியிலே. 49
பதிக வகை: பொய்யடிமை இல்லாத புலவர்
தரணியிற் பொய்ம்மை இலாத்தமிழ்ச்
சங்கம் அதிற்கபிலர்
பரணர்நக் கீரர் முதல்நாற்பத்
தொன்பது பல்புலவோர்
அருள்நமக் கீயும் திருவால
வாய்அரன் சேவடிக்கே
பொருளமைத் தின்பக் கவிபல
பாடும் புலவர்களே. 50
பதிக வகை: புகழ்ச்சோழ நாயனார்
புலமன் னியமன்னைச் சிங்கள
நாடு பொடிபடுத்த
குலமன் னியபுகழ்க் கோகன
நாதன் குலமுதலோன்
நலமன் னியபுகழ்ச் சோழன
தென்பர் நகுசுடர்வாள்
வலமன் னியஎறி பத்தனுக்
கீந்ததோர் வண்புகழே. 51
பதிக வகை: நரசிங்க முனையரைய நாயனார்
புகழும் படிஎம் பரமே
தவர்க்குநற் பொன்னிடுவோன்
இகழும் படியோர் தவன்மட
வார்புனை கோலம்எங்கும்
நிகழும் படிகண் டவனுக்
கிரட்டிபொன்இட்டவன்நீள்
திகழு முடிநர சிங்க
முனையர சன்திறமே. 52
பதிக வகை: அதிபத்த நாயனார்
திறம்அமர் மீன்படுக் கும்பொழு
தாங்கொரு மீன்சிவற்கென்
றுறஅமர் மாகடற் கேவிடு
வோன்ஒரு நாட்கனக
நிறம்அமர் மீன்பட நின்மலற்
கென்றுவிட் டோன்கமலம்
புறம்அமர் நாகை அதிபத்த
னாகிய பொய்யிலியே. 53
பதிக வகை: கலிக்கம்ப நாயனார்
பொய்யைக் கடிந்துநம் புண்ணியர்க்
காட்பட்டுத் தன்அடியான்
சைவத் திருவுரு வாய்வரத்
தான்அவன் தாள்கழுவ
வையத் தவர்முன்பு வெள்கிநீர்
வாரா விடமனைவி
கையைத் தடிந்தவன் பெண்ணா
கடத்துக் கலிக்கம்பனே. 54
பதிக வகை: கலிய நாயனார்
கம்பக் கரிக்கும் சிலந்திக்கும்
நல்கிய கண்ணுதலோன்
உம்பர்க்கு நாதற் கொளிவிளக்
கேற்றற் குடல்இலனாய்க்
கும்பத் தயிலம்விற் றுஞ்செக்
குழன்றும்கொள் கூலியினால்
நம்பற் கெரித்த கலிஒற்றி
மாநகர்ச் சக்கிரியே. 55
பதிக வகை: சத்தி நாயனார்
கிரிவில் லவர்தம் அடியரைத்
தன்முன்பு கீழ்மைசொன்ன
திருவில் லவரைஅந் நாவரி
வோன்திருந் தாரைவெல்லும்
வரிவில் லவன்வயற் செங்கழு
நீரின் மருவுதென்றல்
தெருவில் விரைகம ழுந்தென்
வரிஞ்சைத் திகழ்சத்தியே. 56
பதிக வகை: ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
சத்தித் தடக்கைக் குமரன்நல்
தாதைதன் தானம்எல்லாம்
முத்திப் பதமொரொர் வெண்பா
மொழிந்து முடியரசா
மத்திற்கு மும்மைநன் தாள்அரற்
காய்ஐயம் ஏற்றலென்னும்
பத்திக் கடல்ஐ யடிகளா
கின்றநம் பல்லவனே. 57
பதிக வகை: சுந்தரமூர்த்தி நாயனார்
பல்லவை செங்கதி ரோனைப்
பறித்தவன் பாதம்புகழ்
சொல்லவன் தென்புக லூர்அரன்
பால்துய்ய செம்பொன்கொள்ள
வல்லவன் நாட்டியத் தான்குடி
மாணிக்க வண்ணனுக்கு
நல்லவன் தன்பதி நாவலூர்
ஆகின்ற நன்னகரே. 58
பதிக வகை: கணம்புல்ல நாயனார்
நன்னக ராய இருக்குவே
ளூர்தனில் நல்குவராய்ப்
பொன்னக ராயநற் றில்லை
புகுந்து புலீச்சரத்து
மன்னவ ராய அரற்குநற்
புல்லால் விளக்கெரித்தான்
கன்னவில் தோள்எந்தை தந்தை
பிரான்எம் கணம்புல்லனே. 59
பதிக வகை: காரி நாயனார்
புல்லன வாகா வகைஉல
கத்துப் புணர்ந்தனவும்
சொல்லின வும்நய மாக்கிச்
சுடர்பொற் குவடுதனி
வில்லனை வாழ்த்தி விளங்கும்
கயிலைபுக் கான்என்பரால்
கல்லன மாமதில் சூழ்கட
வூரினிற் காரியையே. 60
பதிக வகை: நெடுமாற நாயனார்
கார்த்தண் முகில்கைக் கடற்காழி
யர்பெரு மாற்கெதிராய்
ஆர்த்த அமணர் அழிந்தது
கண்டுமற் றாங்கவரைக்
கூர்த்த கழுவின் நுதிவைத்த
பஞ்சவன் என்றுரைக்கும்
வார்த்தை யதுபண்டு நெல்வேலி
யில்வென்ற மாறனுக்கே. 61
பதிக வகை: வாயிலார் நாயனார்
மாறா அருளரன் தன்னை
மனஆ லயத்திருத்தி
ஆறா அறிவாம் ஒளிவிளக்
கேற்றி அகமலர்வாம்
வீறா மலரளித் தன்பெனும்
மெய்யமிர் தம்கொடுத்தான்
வீறார் மயிலையுள் வாயிலான்
என்று விளம்புவரே. 62
பதிக வகை: முனையடுவார் நாயனார்
என்று விளம்புவர் நீடூர்
அதிபன் முனையடுவோன்
என்றும் அமருள் அழிந்தவர்க்
காக்கூலி ஏற்றெறிந்து
வென்று பெருஞ்செல்வம் எல்லாம்
கனகநன் மேருவென்னும்
குன்று வளைத்த சிலையான்
தமர்க்குக் கொடுத்தனனே. 63
பதிக வகை: சுந்தரமூர்த்தி நாயனார்
கொடுத்தான் முதலைகொள் பிள்ளைக்
குயிர்அன்று புக்கொளியூர்த்
தொடுத்தான் மதுர கவிஅவி
நாசியை வேடர்சுற்றம்
படுத்தான் திருமுரு கன்பூண்
டியினில் பராபரத்தேன்
மடுத்தான் அவனென்பர் வன்தொண்ட
னாகின்ற மாதவனே. 64
பதிக வகை: கழற்சிங்க நாயனார்
மாதவத் தோர்தங்கள் வைப்பினுக்
காரூர் மணிக்குவைத்த
போதினைத் தான்மோந்த தேவிதன்
மூக்கை அரியப் பொற்கை
காதிவைத் தன்றோ அரிவதென்
றாங்கவள் கைதடிந்தான்
நாதமொய்த் தார்வண்டு கிண்டுபைங்
கோதைக் கழற்சிங்கனே. 65
பதிக வகை: இடங்கழி நாயனார்
சிங்கத் துருவனைச் செற்றவன்
சிற்றம் பலமுகடு
கொங்கிற் கனகம் அணிந்தஆ
தித்தன் குலமுதலோன்
திங்கட் சடையர் தமரதென்
செல்வம் எனப்பறைபோக்
கெங்கட் கிறைவன் இருக்குவே
ளூர்மன் இடங்கழியே. 66
பதிக வகை: செருத்துணை நாயனார்
கழிநீள் கடல்நஞ் சயின்றார்க்
கிருந்த கடிமலரை
மொழிநீள் புகழ்க்கழற் சிங்கன்தன்
தேவிமுன் மோத்தலுமே
எழில்நீள் குமிழ்மலர் மூக்கரிந்
தானென் றியம்புவரால்
செழுநீர் மருகல்நன் னாட்டமர்
தஞ்சைச் செருத்துணையே. 67
பதிக வகை: புகழ்த்துணை நாயனார்
செருவிலி புத்தூர்ப் புகழ்த்துணை
வையம் சிறுவிலைத்தா
உருவலி கெட்டுண வின்றி
உமைகோனை மஞ்சனம்செய்
தருவதோர் போதுகை சோர்ந்து
கலசம் விழத்தரியா
தருவரை வில்லி அருளும்
நிதியது பெற்றனனே. 68
பதிக வகை: கோட்புலி நாயனார்
பெற்றம் உயர்த்தோன் விரையாக்
கலிபிழைத் தோர்தமது
சுற்றம் அறுக்கும் தொழில்திரு
நாட்டியத் தான்குடிக்கோன்
குற்றம் அறுக்கும்நங் கோட்புலி
நாவற் குரிசில் அருள்
பெற்ற அருட்கடல் என்றுல
கேத்தும் பெருந்தகையே. 69
பதிக வகை: சுந்தரமூர்த்தி நாயனார்
தகுமகட் பேசினோன் வீயவே
நூல்போன சங்கிலிபால்
புகுமணக் காதலி னால் ஒற்றி
யூர்உறை புண்ணியன்தன்
மிகுமலர்ப் பாதம் பணிந்தரு
ளால்இவ் வியனுலகம்
நகுவழக் கேநன்மை யாப்புணர்ந்
தான்நாவ லூர்அரசே. 70
பதிக வகை: பத்தராய்ப் பணிவார்கள்
அரசினை ஆருர் அமரர்
பிரானை அடிபணிந்திட்
டுரைசெய்த வாய்தடு மாறி
உரோம புளகம்வந்து
கரசர ணாதி அவயவம்
கம்பித்துக் கண்ணருவி
சொரிதரும் அங்கத்தி னோர்பத்தர்
என்று தொகுத்தவரே. 71
பதிக வகை: பரமனையே பாடுவார்
தொகுத்த வடமொழி தென்மொழி
யாதொன்று தோன்றியதே
மிகுத்த இயலிசை வல்ல
வகையில்விண் தோயுநெற்றி
வகுத்த மதில்தில்லை அம்பலத்
தான்மலர்ப் பாதங்கள்மேல்
உகுத்த மனத்தொடும் பாடவல்
லோர்என்பர் உத்தமரே. 72
பதிக வகை: சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்
உத்தமத் தானத் தறம்பொருள்
இன்ப மொடியெறிந்து
வித்தகத் தானத் தொருவழிக்
கொண்டு விளங்கச்சென்னி
மத்தம்வைத் தான்திருப் பாத
கமல மலரிணைக் கீழ்ச்
சித்தம்வைத் தார்என்பர் வீடுபே
றெய்திய செல்வர்களே. 73
பதிக வகை: திருவாரூர்ப் பிறந்தார்கள்
செல்வம் திகழ்திரு வாரூர்
மதில்வட்டத் துட்பிறந்தார்
செல்வன் திருக்கணத் துள்ளவ
ரேஅத னால் திகழச்
செல்வம் பெருகுதென் ஆரூர்ப்
பிறந்தவர் சேவடியே
செல்வ நெறியுறு வார்க்
கணித் தாய செழுநெறியே. 74
பதிக வகை: முப்பொழுதுந் திருமேனி தீண்டுவார்
நெறிவார் சடையரைத் தீண்டிமுப்
போதும்நீ டாகமத்தின்
அறிவால் வணங்கி அர்ச் சிப்பவர்
நம்மையும் ஆண்டமரர்க்
கிறையாய்முக் கண்ணும்எண் தோளும்
தரித்தீறில் செல்வத்தொடும்
உறைவார் சிவபெரு மாற்குறை
வாய உலகினிலே. 75
பதிக வகை: முழுநீறு பூசிய முனிவர்
உலகு கலங்கினும் ஊழி
திரியினும் உள்ளொருகால்
விலகுதல் இல்லா விதியது
பெற்றநல் வித்தகர்காண்
அலகில் பெருங்குணத் தாரூர்
அமர்ந்த அரனடிக்கீழ்
இலகுவெண் ணீறுதம் மேனிக்
கணியும் இறைவர்களே. 76
பதிக வகை: அப்பாலும் அடிச்சார்ந்தார்
வருக்கம் அடைத்துநன் னாவலூர்
மன்னவன் வண்தமிழால்
பெருக்கு மதுரத் தொகையில்
பிறைசூடிப் பெய்கழற்கே
ஒருக்கு மனத் தொடப் பாலடிச்
சார்ந்தவர் என்றுலகில்
தெரிக்கு மவர்சிவன் பல்கணத்
தோர்நம் செழுந்தவரே. 77
பதிக வகை: சுந்தரமூர்த்தி நாயனார்
செழுநீர் வயல்முது குன்றினில்
செந்தமிழ் பாடிவெய்ய
மழுநீள் தடக்கையன் ஈந்தபொன்
ஆங்குக்கொள் ளாதுவந்தப்
பொழில்நீ டருதிரு வாரூரில்
வாசியும் பொன்னுங்கொண்டோன்
கெழுநீள் புகழ்த்திரு வாரூரன்
என்றுநாம் கேட்பதுவே. 78
பதிக வகை: பூசலார் நாயனார்
பதுமநற் போதன்ன பாதத்
தரற்கொரு கோயிலையாம்
கதுமெனச் செய்குவ தென்றுகொ
லாமென்று கண்துயிலா
ததுமனத் தேஎல்லி தோறும்
நினைந்தருள் பெற்றதென்பர்
புதுமணத் தென்றல் உலாநின்ற
வூர்தனில் பூசலையே. 79
பதிக வகை: மங்கையர்க்கு அரசியார்
பூசல் அயில்தென்ன னார்க்கன
லாகப் பொறாமையினால்
வாச மலர்க்குழல் பாண்டிமா
தேவியாம் மானிகண்டீர்
தேசம் விளங்கத் தமிழா
கரர்க்கறி வித்தவரால்
நாசம் விளைத்தாள் அருகந் தருக்குத்
தென் னாட்டகத்தே. 80
பதிக வகை: நேச நாயனார்
நாட்டமிட் டன்றரி
வந்திப்ப வெல்படைநல்கினர்தந்
தாட்டரிக் கப்பெற்ற வன்என்பர்
சைவத் தவர் அரையில்
கூட்டுமக் கப்படங் கோவணம்
நெய்து கொடுத்துநன்மை
ஈட்டுமக் காம்பீலிச் சாலிய
நேசனை இம்மையிலே. 81
பதிக வகை: கோச் செங்கட் சோழ நாயனார்
மைவைத்த கண்டன் நெறியன்றி
மற்றோர் நெறிகருதாத்
தெய்வக் குடிச் சோழன் முன்பு
சிலந்தியாய்ப் பந்தர்செய்து
சைவத் துருவெய்தி வந்து
தரணிநீ டாலயங்கள்
செய்வித்த வன்திருக் கோச்செங்க
ணான்என்னும் செம்பியனே. 82
செம்பொன் அணிந்துசிற் றம்பலத்
தைச்சிவ லோகம்எய்தி
நம்பன் கழற்கீழ் இருந்தோன்
குலமுதல் என்பர்நல்ல
வம்பு மலர்த்தில்லை ஈசனைச்
சூழ மறைவளர்த்தான்
நிம்ப நறுந்தொங்கல் கோச்செங்க
ணான்என்னும் நித்தனையே. 83
பதிக வகை: திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்
தனையொப் பரும்எருக் கத்தம்
புலியூர்த் தகும்புகழோன்
நினையொப் பருந்திரு நீலகண்
டப்பெரும் பாணனைநீள்
சினையொப் பலர்பொழிற் சண்பையர்
கோன்செந் தமிழொடிசை
புனையப் பரன்அருள் பெற்றவன்
என்பர்இப் பூதலத்தே. 84
பதிக வகை: சடைய நாயனார்
தலம்விளங் குந்திரு நாவலூர்
தன்னில் சடையன்என்னும்
குலம்விளங் கும்புக ழோனை
உரைப்பர் குவலயத்தில்
நலம்விளங் கும்படி நாம்விளங்
கும்படி நற்றவத்தின்
பலம்விளங் கும்படி
ஆரூரனைமுன் பயந்தமையே. 85
பதிக வகை: இசைஞானியார்
பயந்தாள் கறுவுடைச் செங்கண்வெள்
ளைப்பொள்ளல் நீள்பனைக்கைக்
கயந்தான் உகைத்தநற் காளையை
என்றும் கபாலங்கைக்கொண்
டயந்தான் புகும்அரன் ஆரூர்ப்
புனித அரன்திருத்தாள்
நயந்தாள் தனதுள்ளத் தென்றும்
உரைப்பது ஞானியையே. 86
பதிக வகை: சுந்தரமூர்த்தி நாயனார்
ஞானஆ ரூரரைச் சேரரை
அல்லது நாம்அறியோம்
மானவ ஆக்கை யொடும்புக்
கவரை வளரொளிப்பூண்
வானவ ராலும் மருவற்
கரிய வடகயிலைக்
கோனவன் கோயிற் பெருந்தவத்
தோர்தங்கள் கூட்டத்திலே. 87
பதிக வகை: திருத்தொண்டத்தொகையில் உள்ள தொகை அடியார்கள் தனியடியார்கள்
கூட்டம்ஒன் பானொ டறுபத்து
மூன்று தனிப்பெயரா
ஈட்டும் பெருந்தவத் தோர்எழு
பத்திரண் டாம்வினையை
வாட்டும் தவத்திருத் தொண்டத்
தொகைபதி னொன்றின்வகைப்
பாட்டும் திகழ்திரு
நாவலூராளி பணித்தனனே. 88
பதிக வகை: திருத்தொண்டத் தொகைப் பதிகக் கவிகளின் முதற்குறிப்பு
பணித்தநல் தொண்டத் தொகைமுதல்
தில்லை இலைமலிந்த
அணித்திகழ் மும்மை திருநின்ற
வம்பறா வார்கொண்டசீர்
இணைத்தநற் பொய்யடி மைகறைக்
கண்டன் கடல்சூழ்ந்தபின்
மணித்திகழ் சொற்பத்தர் மன்னிய
சீர்மறை நாவனொடே. 89
பதிக வகை: நூற் பயன்
ஓடிடும் பஞ்சேந் திரியம்
ஒடுக்கிஎன் ஊழ்வினைகள்
வாடிடும் வண்ணம்நின் றெத்தவம்
செய்தனன் வானினுள்ளோர்
சூடிடும் சீர்த்திருப் பாதத்தர்
தொண்டத் தொகையின்உள்ள
சேடர்தம் செல்வப் பெரும்புகழ்
அந்தாதி செப்பிடவே. 90
திருச்சிற்றம்பலம்