நீடு வண் புகழ்ச்சோழர்
நீர்நாட்டு இடை நிலவும்
மாடு பொன் கொழி
காவிரி வடகரைக் கீழ்பால்
ஆடு பூங்கொடி மாடம்
நீடிய அணி நகர் தான்
பீடு தங்கிய திருப்
பெரு மங்கலப் பெயர்த்தால். 1
விழவு அறாதன விளங்கு
ஒளி மணி நெடுவீதி
முழவு அறாதன மொய்
குழலியர் நட அரங்கம்
மழவு அறாதன மங்கலம்
பொலி மணி முன்றில்
உழவு அறாத நல்
வளத்தன ஓங்கிருங் குடிகள். 3
நீரினில் பொலி சடை
முடி நெற்றி நாட்டத்துக்
காரினில் திகழ் கண்டர்
தம் காதலோர் குழுமி
பாரின் மிக்க தோர்
பெருமையால் பரமர்தாள் பரவும்
சீரின் மிக்கது சிவபுரி
எனத் தகும் சிறப்பால். 4
இன்ன வாழ்பதி அதன்இடை
ஏயர் கோக் குடிதான்
மன்னிய நீடிய வளவர்
சேனாபதிக் குடியாம்
தொன்மை மேவிய தொடர்ச்சியால்
நிகழ்வது தூய
பொன்னி நாட்டு வேளாண்மையில்
உயர்ந்த பொற்பினதால். 5
அங்கண் மிக்க அக்குடியினில்
அவதரித்து உள்ளார்
கங்கை வாழ்முடியார் தொண்டர்
கலிக்காமர் என்பார்
தங்கள் நாயகர் அடி
பணிவார் அடிச்சாந்து
பொங்கு காதலின் அவர்பணி
போற்றுதல் புரிந்தார். 6
புதிய நாள் மதிச்சடை
முடியார் திருப்புன்கூர்க்கு
அதிகம் ஆயின திருப்பணி
அநேகமும் செய்து
நிதியம் ஆவனநீறு உகந்தார்
கழல் என்று
துதியினால் பரவித் தொழுது
இன்புறு கின்றார். 7
நாவலூர் மன்னர் நாதனைத்
தூதுவிட்டு அதனுக்கு
இயாவர் இச்செயல் புரிந்தனர்
என்று அவர் இழிப்பத்
தேவர் தம்பிரான் அவர்திறம்
திருத்திய அதற்கு
மேவ வந்த அச்செயலினை
விளம்புவான் உற்றேன். 8
திருத் தொண்டத் தொகை
அருளித் திருநாவலூர் ஆளி
கருத்து ஒன்று காதலினால்
கனக மதில் திருவாரூர்
ஒருத்தர் கழல் முப்பொழுதும்
உருகிய அன்பொடு பணிந்து
பெருத்து எழும்மெய் அன்பினால் பிரியாது
அங்கு உறையும் நாள். 9
தாள் ஆண்மை உழவுதொழில் தன்மை
வளம் தலை சிறந்த
வேளாளர் குண்டை யூரக் கிழார்
எனும் மே தக்கோர்
வாளார் வெண் மதி அணிந்தார்
மறையவராய் வழக்கினில் வென்று
ஆளாகக் கொண்ட வர்தாள்
அடைந்து அன்பால் ஒழுகுவார். 10
செந் நெல்லும் பொன்னன்ன செழும்
பருப்பும் தீம்கரும் பின்
இன் னல்ல அமுதும் முதல்
எண்ணில் பெரும் பலவளங்கள்
மன்னிய சீர் வன் தொண்டர்க்கு
அமுதாக வழு வாமல்
பன் னெடு நாள் பரவையார்
மாளிகைக்குப் படி சமைத்தார். 11
ஆன செயல் அன்பின் வரும்
ஆர்வத்தால் மகிழ்ந்து ஆற்ற
வான முறை வழங்காமல் மா
நிலத்து வளம் சுருங்கப்
போனக நெல் படி நிரம்ப
எடுப்பதற்குப் போ தாமை
மானம் அழி கொள்கை யினால்
மனம் மயங்கி வருந்துவார். 12
வன் தொண்டர் திருவாரூர் மாளி
கைக்கு நெல் எடுக்க
இன்று குறை ஆகின்றது என்
செய்கேன் என நினைந்து
துன்று பெரும் கவலை யினால்
துயர் எய்தி உண்ணாதே
அன்று இரவு துயில் கொள்ள
அங்கணர் வந்துஅருள் புரிவார். 13
ஆரூரன் தனக்கு உன்பால் நெல்
தந்தோம் என்று அருளி
நீரூரும் சடை முடியார் நிதிக்
கோமான் தனை ஏவப்
பேரூர் மற்று அதன் எல்லை
அடங்கவும் நெல்மலைப் பிறங்கல்
காரூரும் நெடும் விசும்பும் கரக்க
நிறைந்து ஓங்கியது ஆல். 14
அவ்விரவு புலர் காலை உணர்ந்து
எழுவார் அது கண்டே
எவ் வுலகின் நெல் மலைதான்
இது என்றே அதிசயித்து
செவ்விய பொன் மலை வளைத்தார்
திரு அருளின் செயல் போற்றிக்
கொவ்வை வாய்ப் பரவையார்
கொழுநரையே தொழுது எழுவார். 15
நாவலூர் மன்னனார்க்கு நாயனார்
அளித்த நெல் இங்கு
யாவரால் எடுக்கல் ஆகும் இச்
செயல் அவர்க்குச் சொல்லப்
போவன் யான் என்று போந்தார்
புகுந்தவாறு அருளிச் செய்து
தேவர் தம் பெருமான் ஏவ
நம்பியும் எதிரே சென்றார். 16
குண்டையூர்க் கிழவர் தாமும் எதிர்
கொண்டு கோதில் வாய்மைத்
தொண்டனார் பாதம் தன்னில் தொழுது
வீழ்ந்து எழுந்து நின்று
பண்டெலாம் அடியேன் செய்த பணி
எனக்கு இன்று முட்ட
அண்டர் தம் பிரானார் தாமே
நெல்மலை அளித்தார் என்று. 17
மனிதரால் எடுக்கும் எல்லைத்து அன்று
நெல் மலையின் ஆக்கம்
இனி எனால் செய்யல்ஆகும் பணி
அன்று இது என்னக் கேட்டு
பனிமதி முடியார் அன்றே பரிந்து
உமக்கு அளித்தார் நெல்என்று
இனியன மொழிந்து தாமும் குண்டை
யூர் எய்த வந்தார். 18
விண் ணினை அளக்கும் நெல்லின்
வெற்பினை நம்பி நோக்கி
அண்ணலைத் தொழுது போற்றி
அதிசயம் மிகவும் எய்தி
எண்ணில் சீர்ப் பரவை இல்லத்து
இந்நெல்லை எடுக்க ஆளும்
தண்ணிலவு அணிந்தார் தாமே தரில்
அன்றி ஒண்ணாது என்று. 19
ஆளிட வேண்டிக் கொள் வார்
அருகு திருப் பதியான
கோளி லியில் தம் பெருமான்
கோயிலினை வந்து எய்தி
வான் அளவு கண் மடவாள்
வருந்தாமே எனும் பதிகம்
மூள வரும் காதல் உடன்
முன் தொழுது பாடுதலும். 20
பகல்பொழுது கழிந்து அதன்பின் பரவை
மனை அளவு அன்றி
மிகப் பெருகும் நெல் உலகில்
விளங்கிய ஆரூர் நிறையப்
புகப் பெய்து தருவன நம்
பூதங்கள் என விசும்பில்
நிகர்ப்பு அரியது ஒருவாக்கு நிகழ்ந்தது
நின் மலன் அருளால். 21
தம்பிரான் அருள் போற்றித் தரையின்
மிசை விழுந்து எழுந்தே
உம்பரால் உணர்வு அரிய திருப்
பாதம் தொழுது ஏத்திச்
செம் பொன் நேர் சடையாரைப்
பிறபதியும் தொழுது போய்
நம்பர் ஆரூர் அணைந் தார்
நாவலூர் நாவலன் ஆர். 22
பூங்கோயில் மகிழ்ந்து அருளும் புரா
தனரைப் புக்கு இறைஞ்சி
நீங்காத பெரும் மகிழ்ச்சி உடன்
ஏத்திப் புறம் போந்து
பாங்கு ஆனார் புடை சூழ்ந்து
போற்றி இசைக்க பரவையார்
ஓங்கு திரு மாளிகை யினுள்
அணைந் தார் ஆரூரர். 23
கோவை வாய்ப் பரவையார் தாம்
மகிழும் படி கூறி
மேவி அவர் தம் மோடு
மிகஇன்புற்று இருந்து அதன்பின்
சேவின் மேல் உமையோடும் வருவார்
தம் திரு அருளின்
ஏவலி னால் அவ் விரவு
பூதங்கள் மிக்கு எழுந்து. 24
குண்டையூர் நெல் மலையைக் குறள்
பூதப் படை கவர்ந்து
வண்டு லாம் குழல் பரவை
மாளிகையை நிறைவித்தே
அண்டர்பிரான் திரு ஆரூர் அடங்கவும்
நெல் மலை ஆக்கி
கண்டவர் அற்புதம் எய்தும் காட்சி
பெற அமைத்தனவால். 25
அவ்விரவு புலர் காலை ஆரூரில்
வாழ் வார் கண்டு
எவ்வுலகில் விளைந்தன நெல் மலை
இவை என்று அதிசயித்து
நவ்வி மதர்த் திரு நோக்கின்
நங்கை புகழ்ப் பரவையார்க்கு
இவ் உலகு வாழ வரும்
நம்பி அளித்தன என்பார். 26
நீக்க அரிய நெல் குன்று தனை
நோக்கி நெறி பலவும்
போக்க அரிது ஆயிடக் கண்டு
மீண்டும் தம்இல் புகுவார்
பாக்கி யத்தின் திரு வடிவாம்
பரவையார்க்கு இந் நெல்லுப்
போக்கும் இடம் அரி தாகும்
எனப் பலவும் புகல்கின்றார். 27
வன்தொண்டர் தமக்கு அளித்த நெல்
கண்டு மகிழ் சிறப்பார்
இன்று உங்கள் மனை எல்லைக்கு
உள்படும் நெல்குன்று எல்லாம்
பொன் தங்கு மாளிகையில் புகப்
பெய்து கொள்க என
வென்றி முரசு அறை வித்தார்
மிக்க புகழ் பரவையார். 28
அணி ஆரூர் மருகு அதனில்
ஆளிஅங்குப் பறை அறைந்த
பணியாலே மனை நிறைத்துப் பாங்கு
எங்கும் நெல் கூடு
அணி யாமல் கட்டி நகர்
களி கூரப் பரவையார்
மணியாரம் புனை மார்பின் வன்
தொண்டர் தமைப் பணிந்தார். 29
நம்பி ஆரூர் திருவா ரூரில்
நயந்து உறை நாள்
செம்பொன் புற்றுஇடம் கொண்டு வீற்று
இருந்த செழும் தேனைக்
தம் பெரிய விருப்பி னொடும்
தாழ்ந்து உணர்வினால் பருகி
இம் பருடன் உம்பர் களும்
அதிச யிப்ப ஏத்தினார். 30
குலவு புகழ்க் கோட்புலியார் குறை
யிரந்து தம் பதிக்கண்
அலகில் புகழ் ஆரூரர் எழுந்து
அருள அடி வணங்கி
நிலவிய வன்தொண்டர் அஃது இசைந்து
அதன்பின் நேர் இறைஞ்சி
பலர் புகழும் பண்பினார் மீண்டும்
தம் பதி அணைந்தார். 31
தேவர் ஒதுங்க திருத் தொண்டர்
மிடையும் செல்வத் திருவாரூர்
காவல் கொண்டு தனியாளும் கடவுள்
பெருமான் கழல் வணங்கி
நாவலூரர் அருள் பெற்று நம்பர்
பதிகள் பிற நண்ணிப்
பாவை பாகர்தமைப் பணிந்து பாடும்
விருப்பில் சென்று அணைவார். 32
மாலும் அயனும் உணர்வு அரியார்
மகிழும் பதிகள்பல வணங்கி
ஞாலம் நிகழ் கோட்புலியார் தம்
நாட்டியத்தான் குடி நண்ண
ஏலும் வகையால் அலங்கரித்து அங்கு
அவரும் எதிர்கொண்டு இனிதுஇறைஞ்சிக்
கோல மணி மாளிகையின் கண்
ஆர்வம் பெருகக்கொடு புக்கார். 33
தூய மணிப்பொன் தவிசில் எழுந்து
அருளி இருக்கத்தூ நீரால்
சேய மலர்ச்சேவடி விளக்கித் தெளித்துக்
கொண்ட செழும் புனலால்
மேய சுடர் மாளிகை எங்கும் விளங்க வீசி உளம் களிப்ப
ஏய சிறப்பில் அர்ச்சனைகள் எல்லாம் இயல்பின் முறை புரிவார். 34
பூந்தண் பனிநீர் கொடு சமைத்த
பொருவுஇல் விரைச்சந்தனக் கலவை
வாய்ந்த அகிலின் நறும் சாந்து வாசம்
நிறைமான் மதச் சேறு
தோய்ந்த புகை நாவியின் நறுநெய்
தூயபசும் கர்ப்பூரம் உடன்
ஏய்ந்த அடைக்காய் அமுது இனைய
எண்ணில் மணிப்பாசனத்து ஏந்தி. 35
வேறு வேறு திருப்பள்ளித் தாமப்
பணிகள் மிக எடுத்து
மாறிலாத மணித் திரு ஆபரண
வருக்கம் பல தாங்கி
ஈறில் விதத்துப் பரிவட்டம் ஊழின்
நிரைத்தே எதிர் இறைஞ்சி
ஆறு புணைந்தார் அடித்தொண்டர் அளவுஇல்
பூசை கொள அளித்தார். 36
செங்கோல் அரசன் அருள் உரிமைச்
சேனாபதி ஆம் கோட்புலியார்
நங் கோமானை நாவலூர் நகரார்
வேந்தை நண் பினால்
தங்கோ மனையில் திருஅமுது செய்வித்து
இறைஞ் சித்தலை சிறந்த
பொங்கு ஓதம்போல் பெரும் காதல்
புரிந்தார் பின்னும் போற்றுவா. 37
ஆன விருப்பின் மற்று அவர்தாம்
அருமையால் முன் பெற்று எடுத்த
தேனார் கோதைச் சிங்கடியார் தமையும்
அவர்பின் திரு உயிர்த்த
மானார் நோக்கின் வனப்பகையார் தமையும்
கொணர்ந்து வன் தொண்டர்
தூ நாண் மலர்த்தாள் பணிவித்துத்
தாமும் தொழுது சொல்லுவார். 38
அடியேன் பெற்ற மக்கள் இவர்
அடிமைஆகக் கொண்டு அருளிக்
கடிசேர் மலர்த்தாள் தொழுது உய்யக்கருணை
அளிக்க வேண்டும் எனத்
தொடிசேர் தளிக்கை இவர் எனக்குத்
தூய மக்கள் எனக்கொண்டப்
படியே மகண்மையாக் கொண்டார் பரவையார்
தம் கொழு நனார். 39
கோதை சூழ்ந்த குழலாரைக் குறங்கின்
வைத்து கொண்டு இருந்து
காதல் நிறைந்த புதல்வியராம் கருத்து
உட்கசிவால் அணைத்து உச்சி
மீது கண்ணீர் விழ மோந்து
வேண்டுவனவும் கொடுத்து அருளி
நாதர் கோயில் சென்று அடைந்தார்
நம்பி தம்பிரான் தோழர். 40
வென்றி வெள்ளேறு உயர்த்து அருளும்
விமலர் திருக்கோபுரம் இறைஞ்சி
ஒன்றும் உள்ளத் தொடும் அன்பால்
உச்சி குவித்த கரத்தொடும்
சென்று புக்குப் பணிந்து திருப்பதிகம்
பூணாண் என்று எடுத்துக்
கொன்றை முடியார் அருள் உரிமை
சிறப்பித்தார் கோட்புலியாரை. 41
சிறப்பித்து அருளும் திருக்கடைக் காப்பு
அதன் இடைச் சிங்கடியாரைப்
பிறப்பித்து எடுத்த பிதாவாகத் தம்மை
நினைத்த பெற்றி யினால்
மறப்பில் வகைச் சிங்கடிஅப்பன் என்றே
தம்மை வைத்து அருளி
நிறப்பொற்பு உடைய இசைபாடி நிறைந்த
அருள் பெற்று இறைஞ்சுவார். 42
அங்கு நின்றும் எழுந்து அருளி
அளவில் அன்பின் உள்மகிழச்
செங்கண் நுதலார் மேவு திருவலி
வலத்தைச் சேர்ந்து இறைஞ்சி
மங்கை பாகர் தமைப் பதிகம்
வலிவலத்துக் கண்டேன் என்று
எங்கும் நிகழ்ந்த தமிழ் மாலை
எடுத்துத் தொடுத்த இசைபுனைவார். 43
நன்று மகிழும் சம்பந்தர் நாவுக்
கரசர் பாட்டு உகந்தீர்
என்று சிறப்பித்து இறைஞ்சி மகிழ்ந்து
ஏத்திஅருள் பெற்று எழுந்துஅருளி
மன்றின் இடையே நடம் புரிவார்
மருவு பெருமைத் திருவாரூர்
சென்று குறுகிப் பூங்கோயில் பெருமான்
செம்பொன் கழல் பணிந்து. 44
இறைஞ்சிப் போந்து பரவையார் திரு
மாளிகையில் எழுந்து அருளி
நிறைந்த விருப்பின் மேவும் நாள்
நீடு செல்வத் திருவாரூர்ப்
புறம்பு நணிய கோயில்களும் பணிந்து
போற்றிப் புற்று இடமாய்
உறைந்த பெருமான் கழல் பிரியாது
ஓவாஇன்பம் உற்று இருந்தார். 45
செறிபுன் சடையார் திருவாரூர்ப் திருப்
பங்குனி உத்திரத் திருநாள்
குறுக வரலும் பரவையார் கொடைக்கு
விழாவில் குறைவறுக்க
நிறையும் பொன் கொண்டு அணைவதற்கு
நினைந்து நம்பி திருப்புகலூர்
இறைவர் பாதம் பணிய எழுந்து
அருளிச்சென்று அங்கு எய்தினார். 46
சென்று விரும்பித் திருப்புகலூர் தேவர்
பெருமான் கோயில் மணி
முன்றில் பணிந்து வலம்கொண்டு முதல்வர்
முன்பு வீழ்ந்து இறைஞ்சித்
தொன்று மரபின் அடித்தொண்டு தோய்ந்த
அன்பில் துதித்து எழுந்து
நின்று பதிக இசைபாடி நினைந்த
கருத்து நிகழ் விப்பார். 47
சிறிது பொழுது கும்பிட்டுச் சிந்தை
முன்னம் அங்கு ஒழிய
வறிது புறம்போந்து அருளி அயல்
மடத்தில் அணையார் வன்தொண்டர்
அறிவுகூர்ந்த அன்பர் உடன் அணி
முன்றிலின் ஓர்அருகு இருப்ப
மறி வண்கையார் அருளேயோ மலர்கண்
துயில் வந்து எய்தியதால். 48
துயில் வந்து எய்தத் தம்பிரான்
தோழர் அங்குத் திருப்பணிக்குப்
பயிலும் சுடுமண் பலகை பல
கொணர்வித்து உயரம் பண்ணித்தேன்
அயிலும் சுரும்பார் மலர்ச் சிகழி
முடிமேல் அணியா உத்தரிய
வெயில் உந்திய வெண்பட்டு அதன்மேல்
விரித்துப் பள்ளி மேவினார். 49
சுற்றும் இருந்த தொண்டர்களும் துயிலும்
அளவில் துணைமலர்க் கண்
பற்றும் துயில் நீங்கிடப் பள்ளி
உணர்ந்தார் பரவை கேள்வனார்
வெற்றி விடையார் அருளாலே வேமண்
கல்லே விரிசுடர்ச் செம்
பொற்றிண் கல்லாயின கண்டு புகலூர்
இறைவர் அருள் போற்றி. 50
தொண்டர் உணர மகிழ்ந்து எழுந்து
துணைக்கைக் கமல முகைதலைமேல்
கொண்டு கோயில் உள் புக்குக்
குறிப்பில் அடங்காப் பேர்அன்பு
மண்டு காதல் உற வணங்கி
வாய்த்த மதுர மொழிமாலை
பண்டு அங்கு இசையில் தம்மையே
புகழ்ந்து என்று எடுத்துப் பாடினார். 51
பதிகம் பாடித் திருக்கடைக்காப் பணிந்து
பரவிப் புறம் போந்தே எதிரில்
இன்பம் இம்மையே தருவார் அருள்
பெற்று எழுந்து அருளி நிதியின்
குவையும் உடன் கொண்டு நிறையும்
நதியும் குறை மதியும் பொதியும்
சடை யார் திருப் பனையூர்
புகுவார் புரிநூல் மணி மார்பர். 52
செய்ய சடையார் திருப் பனையூர்ப்
புறத்துத் திருக் கூத்தொடும் காட்சி
எய்த அருள் எதிர்சென்று அங்கு
எழுந்த விருப்பால் விழுந்து இறைஞ்சி
ஐயர் தம்மை அரங்கு ஆட
வல்லார் அவரே அழகியர் என்று
உய்ய உலகு பெறும் பதிகம்
பாடி அருள் பெற்று உடன்போந்தார். 53
வளம் மல்கியசீர்ப் திருப்பனையூர் வாழ்வார்
ஏத்த எழுந்து அருளி அளவில்
செம் பொன் இட்டி கைகள்
ஆள்மேல் நெருங்கி அணி ஆரூர்த்
தளவ முறுவல் பரவையார் தம்
மாளி கையில் புகத் தாமும்
உளமன்னிய தம் பெரு மானார்
தம்மை வணங்கி உவந்து அணைந்தார். 54
வந்து பரவைப் பிராட் டியார்
மகிழ வைகி மருவும் நாள்
அந்தண் ஆரூர் மருங்கு அணிய
கோயில் பலவும் அணைந்து இறைஞ்சிச்
சிந்தை மகிழ விருப் பினொடும்
தெய்வப் பெருமாள் திருவாரூர்
முந்தி வணங்கி இனிது இருந்தார்
முனைப் பாடியார் தம் காவலனார். 55
பல நாள் அமர்வார் பரமர் திரு
அருளால் அங்கு நின்றும் போய்ச்
சிலை மா மேரு வீரனார்
திரு நன்னிலத்துச் சென்று எய்தி
வலமாக வந்து கோயிலின்
உள் வணங்கி மகிழ்ந்து பாடினார்
தலமார்கின்ற தண் இயல் வெம்மை
யினான் என்னும் தமிழ் மாலை. 56
பாடி அங்கு வைகிய பின்
பரமர் வீழி மிழலையினில்
நீடு மறையால் மேம்பட்ட அந்தண்
ஆளர் நிறைந்து ஈண்டி
நாடு மகிழ அவ்அளவு நடைக்
காவணம் பாவாடை உடன்
மாடு கதலி பூகம் நிரை
மல்க மணித்தோரணம் நிரைத்து. 57
வந்து நம்பி தம்மை எதிர்
கொண்டு புக்கார் மற்றவரும்
சிந்தை மலர்ந்து திரு வீழிமிழலை
இறைஞ்சிச் சேண் விசும்பின்
முந்தை இழிந்த மொய் ஒளிசேர்
கோயில் தன்னை முன்வணங்கி
பந்தம் அறுக்கும் தம் பெருமான்
பாதம் பரவிப் பணிகின்றார். 58
படங்கொள் அரவில் துயில் வோனும்
பதுமத் தோனும் பரவிய
விடங்கன் விண்ணேர் பெருமானை விரவும்
புளகம் உடன் பரவி
அடங்கல் வீழி கொண்டு இருந்தீர்
அடியேனுக்கும் அருளும் எனத்
தடம்கொள் செஞ்சொல் தமிழ் மாலை
சாத்தி அங்குச் சாரும்நாள். 59
வாசி அறிந்து காசு அளிக்க
வல்ல மிழலை வாணர்பால்
தேசு மிக்க திருஅருள் முன்
பெற்று திருவாஞ்சியத்து அடிகள்
பாசம் அறுத்து ஆட்கொள்ளும்
தாள்பணிந்து பொருவனார் என்னும்
மாசில் பதிகம் பாடி அமர்ந்து
அரிசில்கரைப் புத்தூர் அணைந்தார். 60
செழுநீர் நறையூர் நிலவு திருச்
சித்தீச்சரமும் பணிந்து ஏத்தி
விழுநீர் மையினில் பெரும் தொண்டர்
விருப்பினோடும் எதிர்கொள்ள
மழுவோடு இளமான் கரதலத்தில் உடையார்
திருப் புத்தூர் வணங்கி
தொழுநீர் மையினில் துதித்து ஏத்தித்
தொண்டர்சூழ உறையும் நாள். 61
புனிதனார் முன் புகழ்த் துணையார்க்கு
அருளும் திறமும் போற்றிசைத்து
முனிவர் போற்ற எழுந்து அருளி
மூரி வெள்ளக் கங்கையினில்
பனிவெண் திங்கள்அணி சடையார் பதிகள்
பலவும் பணிந்து போந்து
இனிய நினைவில் எய்தினார் இறைவர்
திருவா வடு துறையில். 62
விளங்கும் திருவாவடு துறையில் மேயார்
கோயில் புடைவலம் கொண்டு
உளம் கொண்டு உருகும் அன்பினுடன்
உள்புக்கு இறைஞ்சி ஏத்துவார்
வளம் கொள் பதிகம் மறையவன்
என்று எடுத்து வளவன் செங்கணான்
தளம் கொள் பிறப்பும் சிறப்பித்துத்
தமிழ்சொல் மாலை சாத்தினார். 63
சாத்தி அங்கு வைகு நாள்
தயங்கும் அன்பருடன் கூடப்
பேர்த்தும் இறைஞ்சி அருள் பெற்றுப்
பெண்ணோர் பாகத்து அண்ணலார்
தீர்த்தப் பொன்னித் தென் கரைமேல்
திகழும் பதிகள் பல பணிந்து
மூர்த்தியார் தம்இடை மருதை அடைந்தார்
முனைப் பாடித் தலைவர். 64
மன்னு மருதின் அமர்ந்த வரை
வணங்கி மதுரச்சொல் மலர்கள்
பன்னிப் புனைந்து பணிந்து ஏத்திப்
பரவிப்போந்து தொண்டர் உடன்
அந்நல் பதியில் இருந்து அகல்வார்
அரனார் திருநாகேச்சரத்தை
முன்னி புக்கு வலம் கொண்டு
முதல்வர் திருத்தாள் வணங்கினார். 65
பெருகும் பதிகம் பிறைஅணி வாள்
நுதலாள் பாடிப்பெயர்ந்து நிறை
திருவின் மலியும் சிவபுரத்துத் தேவர்
பெருமான் கழல் வணங்கி
உருகும் சிந்தை உடன் போந்தே
உமையோர் பாகர் தாம்மகிழ்ந்து
மருவும் பதிகள் பிறபணிந்து கலைய
நல்லூர் மருங்கு அணைந்தார். 66
செம்மை மறையோர் திருக்கலைய நல்லூர்
இறைவர் சேவடிக் கீழ்
மும்மை வணக்கம் பெற இறைஞ்சி
முன்பு பரவித்தொழுது எழுவார்
கொம்மை மருவு குரும்பை முலை
உமையாள் என்னும் திருப்பதிகம்
மெய்ம்மைப் புராணம் பலவும் மிகச்
சிறப்பித்து இசையின் விளம்பினார். 67
அங்கு நின்று திருக்குட மூக்கு
அணைந்து பணிந்து பாடிப்போய்
மங்கைப்பாகர் வலம் சுழியை மருவிப்
பெருகும் அன்பு உருகத்
தங்கு காதல் உடன் வணங்கித்
தமிழால் பரசி அரசினுக்குத்
திங்கள் முடியார் அடி அளித்த
திருநல்லூரைச் சென்று அணைந்தார். 68
நல்லூர் இறைவர் கழல் போற்றி
நவின்று நடுவர் நம்பர்பதி
எல்லாம் இறைஞ்சி ஏத்திப் போந்து
இசையால் பரவும் தம்உடைய
சொல்லூ தியமா அணிந்தவர் தம்
சோற்றுத்துறையின் மருங்கு எய்தி
அல்லூர் கண்டர் கோயிலின் உள்அடைந்து
வலம் கொண்டு அடிபணிவார். 69
அழல்நீர் ஒழுகி அனைய எனும்
அம்சொல் பதிகம் எடுத்துஅருளிக்
கழல் நீடிய அன்பினில் போற்றும்
காதல் கூரப் பரவியபின்
கெழு நீர்மையினில் அருள் பெற்றுப்
போந்து பரவையார் கேள்வர்
முழுநீறு அணிவார் அமர்ந்த பதி
பலவும் பணிந்து முன்னுவார். 70
தேவர் பெருமான் கண்டியூர் பணிந்து
திரு ஐயாறு அதனை
மேவி வணங்கிப் பூந்துருத்தி விமலர்
பாதம் தொழுது இறைஞ்சிச்
சேவில் வருவார் திருஆலம் பொழிலில்
சேர்ந்து தாழ்ந்து இரவு
பாவு சயனத்து அமர்ந்தருளிப்
பள்ளி கொள்ளக் கனவின்கண். 71
மழபாடியினில் வருவதற்கு நினைக்க
மறந் தாயோ என்று
குழகு ஆகியதம் கோலம் எதிர்காட்டி
அருளக் குறித்து உணர்ந்து
நிழலார் சோலைக் கரைப் பொன்னி
வடபால் ஏறி நெடுமாடம்
அழ கார் வீதி மழபாடி
அணைந்தார் நம்பி ஆரூரர். 72
அணைந்து திருக்கோபுரம் இறைஞ்சி அன்பர்
சூழ உடன் புகுந்து
பணம்கொள் அரவம் அணிந்தார் முன்பணிந்து
வீழ்ந்து பரம் கருணைக்
குணம்கொள் அருளின் திறம் போற்றிக்
கொண்ட புளகத்துடன் உருகிப்
புணர்ந்த இசையால் திருப்பதிகம் பொன்னார்
மேனி என்று எடுத்து. 73
அன்னே உன்னை அல்லல் யான்
ஆரை நினைக்கேன் என ஏத்தி
தன்னேர் இல்லாப் பதிக மலர்
சாத்தித் தொழுது புறம்பு அணைந்து
மன்னும் பதியில் சில நாள்கள்
வைகித் தொண்டர் உடன் மகிழ்ந்து
பொன்னிக் கரையின் இரு மருங்கும்
பணிந்து மேல் பால் போதுவார். 74
செய்ய சடையார் திரு ஆனைக்
காவில் அணைந்து திருத் தொண்டர்
எய்த முன் வந்து எதிர்
கொள்ள இறைஞ்சிக் கோயில் உள் புகுந்தே
ஐயர் கமலச் சேவடிக் கீழ்
ஆர்வம் பெருக விழுந்து எழுந்து
மெய்யும் முகிழ்ப்பக் கண் பொழி
நீர் வெள்ளம் பரப்ப விம்முவார். 75
மறைகளாய நான்கும் என மலர்ந்த
செம் சொல் தமிழ் பதிகம்
நிறையும் காதல் உடன் எடுத்து
நிலவும் அன்பர் தமை நோக்கி
இறையும் பணி வார் எம்மையும்
ஆள் உடையார் என்று ஏத்துவார்
உறையூர்ச் சோழன் மணி யாரம்
சாத்தும் திறத்தை உணர்ந்து அருளி. 76
வளவர் பெருமான் மணி யாரம்
சாத்திக் கொண்டு வரும் பொன்னிக்
கிளரும் திரை நீர் மூழ்
குதலும் வழுவிப் போகக் கேதமுற
அளவில் திருமஞ்சனக் குடத்துள் அது
புக்கு ஆட்ட அணிந்து அருளித்
தளரும் அவனுக்கு அருள் புரிந்த
தன்மை சிறக்கச் சாற் றினார். 77
சாற்றி அங்குத் தங்கு நாள்
தயங்கும் பவளத் திரு மேனி
நீற்றர் கோயில் எம் மருங்கும்
சென்று தாழ்ந்து நிறை விருப்பால்
போற்றி அங்கு நின்றும் போய்ப்
பொருவில் அன்பர் மருவிய தொண்டு
ஆற்றும் பெருமை திருப்பாச்சில்
ஆச்சிராமம் சென்று அடைந்தார். 78
சென்று திருக் கோபுரம் இறைஞ்சித்
தேவர் மலிந்த திருந்து மணி
முன்றில் வலம் கொண்டு உள்அணைந்து
முதல்வர் முன்னம் வீழ்ந்து இறைஞ்சி
நன்று பெருகும் பொருள் காதல்
நயப்புப் பெருக நாதர் எதிர்
நின்று பரவி நினைந்த பொருள்
அருளாது ஒழிய நேர் நின்று. 79
அன்பு நீங்கா அச்சம் உடன்
அடுத்த திருத்தோழமைப் பணியால்
பொன் பெறாத திருஉள்ளம் புழுங்க
அழுங்கிப் புறம்பு ஒருபால்
முன்பு நின்ற திருத்தொண்டர் முகப்பே
முறைப்பாடு உடையார்போல்
என்பு கரைந்து பிரானார் மற்று
இலையோ என்ன எடுக்கின்றார். 80
நித்தமும் நீங்கா நிலைமையின் நீங்கி
நிலத்து இடைப்புலம் கெழும் பிறப்பால்
உய்த்த காரணத்தை உணர்ந்து நொந்து
அடிமை ஒருமையாம் எழுமையும் உணர்த்தி
எத்தனை அருளாது ஒழியினும் பிரானார்
இவர் அலாது இல்லையோ என்பார்
வைத்தனன் தனக்கே தலையும் என்
நாவும் என வழுத்தினார் வழித்தொண்டர். 81
இவ்வகை பரவித் திருக்கடைக் காப்பும்
ஏசின வல்ல என்று இசைப்ப
மெய்வகை விரும்பு தம் பெருமானார்
விழுநிதிக் குவை அளித்து அருள
மைவளர் கண்டர் கருணையே பரவி
வணங்கி அப்பதி இடை வைகி
எவ்வகை மருங்கும் இறைவர் தம்பதிகள்
இறைஞ்சி அங்கு இருந்தனர் சிலநாள். 82
கண்டவர் கண்கள் காதல் நீர்
வெள்ளம் பொழிதரக்கை குவித்து இறைஞ்சி
வண்டறை குழலார் மனம் கவர்
பலிக்கு வரும் திருவடிவு கண்டவர்கள்
கொண்டதுஓர் மயலால் வினவு கூற்று
ஆகக் குலவுசொல் கார்உலாவிய என்று
அண்டர் நாயகரைப் பரவி ஆரணிய
விடங்கராம் அருந் தமிழ் புனைந்தார். 84
பரவி அப்பதிகத் திருக்கடைக் காப்புச்
சாத்தி முன்பணிந்து அருள் பெற்றுக்
கரவில் அன்பர்கள் தம்கூட்டமும் தொழுது
கலந்துஇனிது இருந்து போந்து அருளி
விரவிய ஈங்கோய் மலை முதல் ஆக விமலர் தம் பதி பல வணங்கிக்
குரவலர் சோலை அணி திருப் பாண்டிக் கொடு முடி அணைந்தனர் கொங்கில். 85
கொங்கினில் பொன்னித் தென் கரைக்கறையூர்க்
கொடுமுடிக் கோயில் முன் குறுகிச்
சங்கவெண் குழையார் உழை வலம்
செய்து சார்ந்துஅடி அன்பினில் தாழ்ந்து
பொங்கிய வேட்கை பெருகிடத் தொழுது
புனிதர் பொன் மேனியை நோக்கி
இங்கு இவர்தம்மை மறக்க ஒண்ணாது
என்று எழுந்த மெய்க்குறிப்பினில் எடுப்ப. 86
அண்ணலார் அடிகள் மறக்கினும் நாம
அஞ்சு எழுத்து அறியஎப் பொழுதும்
எண்ணிய நாவே இன்சுவை பெருக
இடைஅறாது இயம்பும் என்றும் இதனைத்
திண்ணிய உணர்வில் கொள்பவர் மற்றுப்
பற்றுஇலேன் எனச் செழும் தமிழால்
நண்ணிய அன்பில் பிணிப்பு உற
நவின்றார் நமச்சிவாயத் திருப் பதிகம். 87
உலகுஎலாம் உய்ய உறுதியாம் பதிகம்
உரைத்து மெய் உணர்வு அறாஒருமை
நிலவிய சிந்தை உடன் திருஅருளால்
நீங்குவார் பாங்கு நல் பதிகள்
பலவும் முன் பணிந்து பரமர்தாள்
போற்றிப் போந்து தண்பனி மலர்ப்படப்பைக்
குலவும் அக்கொங்கில் காஞ்சிவாய்ப் பேரூர்
குறு கினார் முறுகும் ஆதரவால். 88
அத் திருப்பதியை அணைந்து முன்
ஆண்டவர் கோயில் உள் புகுந்து
மெய்த்தவர் சூழ வலம் கொண்டு
முன்பு மேவுவார் தம்எதிர் விளங்க
நித்தனார் தில்லை மன்றுள் நின்று
ஆடல் நீடிய கோலம் நேர்காட்டக்
கைத்தலம் குவித்துக் கண்கள் ஆனந்தக்
கலுழி நீர் பொழிதரக் கண்டார். 89
காண்டலும் தொழுது வீழ்ந்து உடன் எழுந்து
கரைஇல் அன்பு என்பினை உருக்கப்
பூண்ட ஐம்புலனில் புலப்படா இன்பம்
புணர்ந்து மெய் உணர்வினில் பொங்கத்
தாண்டவம் புரியும் தம் பிரானாரைத்
தலைப்படக் கிடைத்த பின் சைவ
ஆண்தகையாருக்கு அடுத்த அந்நிலைமை
விளைவை யார்அளவு அறிந்து உரைப்பார். 90
அந் நிலை நிகழ்ந்த ஆரருள் பெற்ற
அன்பனார் இன்ப வெள்ளத்து
மன்னிய பாடல் மகிழ்ந்து உடன் பரவி
வளம்பதி அதன் இடை மருவி
பொன் மணி மன்றுள் எடுத்த சேவடியார்
புரி நடம் கும்பிடப் பெற்றால்
என் இனிப்புறம் போய் எய்துவது என்று
மீண்டு எழுந்து அருளுவதற்கு எழுவார். 91
ஆயிடை நீங்கி அருளினால் செல் வார்
அரு வரைச் சுரங்களும் பிறவும்
பாயும் நீர் நதியும் பலபல கடந்து
பரமர் தம் பதிபல பணிந்து
மேய வண் தமிழால் விருப் பொடும்
பரவி வெஞ்சமாக் கூடலும் பணிந்து
சேயிடை கழியப் போந்து வந்து அடைந்தார்
தென் திசை கற்குடி மலையில். 92
வீடு தரும் இக் கல் குடியில்
விழுமி யாரைப் பணிந்து இறைஞ்சி
நீடு விருப் பில் திருப் பதிகம்
நிறைந்த சிந்தை உடன் பாடிப்
பாடும் விருப்பில் தொண்ட ருடன் பதிகள்
பலவும் அணைந்து இறைஞ்சி
தேடும் இருவர் காண்ப அரியார் திரு
வாறை மேல் சென்று அணைந்தார். 93
செம்பொன் மேரு சிலை வளைத்த
சிவனார் ஆறைமேல் தளியில்
நம்பர்பாதம் பணிந்து இறைஞ்சி நாளும்
மகிழ்வார்க்கு அருள் கூட
உம்பர் போற்றும் தானங்கள் பலவும்
பணிந்து போந்து அணைவார்
இம்பர் வாழ இன் னம்பர்
நகரைச் சேர எய்தினார். 94
ஏரின் மருவும் இன்னம்பர் மகிழ்ந்த
ஈசர் கழல் வணங்கி
ஆரும் அன்பில் பணிந்து ஏத்தி
ஆராஅருளால் அங்கு அமர்வார்
போரின் மலியும் கரிஉரித்தார் மருவும்
புறம் பயம் போற்றச்
சேரும் உள்ளம் மிக்குஎழ மெய்ப்
பதிகம் பாடிச் செல்கின்றார். 95
அங்கம் ஓதி ஓர் ஆறை மேல்தளி
என்று எடுத்து அமர் காதலில்
பொங்கு செந் தமிழால் விரும்பு புறம்
பயந் தொழப் போதும் என்று
எங்கும் மன்னிய இன் இசை பதிகம்
புணைந்து உடன் எய் தினார்
திங்கள் சூடிய செல் வர் மேவும்
திருப் புறம் பயம் சேரவே. 96
அப் பதிக் கண் அமர்ந்த தொண்டரும்
அன்று வெண்ணெய் நல் ஊரினில்
ஒப் பரும் தனி வேதியன் பழ
ஓலை காட்டி நின்று ஆண்டவர்
இப்பதிக் கண் வந்து எய்த என்ன
தவங்கள் என்று எதிர் கொள்ளவே
முப் புரங்கள் எரித்த சேவகர் கோயில்
வாயி லின் முன் னினார். 97
நீடு கோபுரம் முன்பு இறைஞ்சி
நிலாவு தொண்ட ரொடுள்ளணைந்து
ஆடல் மேவிய அண்ணலார் அடி
போற்றி அஞ்சலி கோலிநின்று
ஏடுஉலாம் மலர்தூவி எட்டினொடு
ஐந்தும் ஆகும் உறுப்பினால்
பீடு நீடு நிலத்தின் மேல்
பெருகப் பணிந்து வணங்கினார். 98
அங்கு நீடு அருள்பெற்று உள் ஆர்வம்
மிகப்பொழிந்து எழும் அன்பினால்
பொங்கு நாள் மலர் பாதம் முன்பணிந்து
ஏத்தி மீண்டும் புறத்து அணைந்து
எங்கும் ஆகி நிறைந்து நின் றவர்
தாம் மகிழ்ந்த இடங் களில்
தங்கு கோலம் இறைஞ் சுவார் அருள்
தாவில் அன்பரோடு எய்தினார். 99
வம்பு நீடு அலங்கல் மார்பின்
வன்தொண்டர் வன்னி கொன்றை
தும்பை வெள் அடம்பு திங்கள்
தூயநீறு அணிந்த சென்னித்
தம்பிரான் அமர்ந்த தானம் பல
பல சார்ந்து தாழ்ந்து
கொம் பனார் ஆடல் நீடு
கூடலை யாற்றூர் சார. 100
செப்பரும் பதியில் சேரார்
திருமுது குன்றை நோக்கி
ஒப்பரும் புகழார் சொல்லும்
ஒரு வழி உமையாளோடு
மெய்ப்பரம் பொருளாய் உள்ளார்
வேதியர் ஆகி நின்றார்
முப்புரி நூலும் தாங்கி
நம்பி ஆரூரர் முன்பு. 101
நின்றவர் தம்மை நோக்கி நெகிழ்ந்த
சிந்தை யராய்த் தாழ்வார்
இன்றி யாம் முதுகுன்று எய்த
வழி எமக்கு இயம்பும்என்ன
குன்ற வில் லாளி யாரும்
கூடலை யாற்றூர் ஏறச்
சென்றது இவ் வழிதான் என்று
செல்வழித் துணையாய்ச் செல்ல. 102
கண்டவர் கைகள் கூப்பித் தொழுது
பின் தொடர்வார்க் காணார்
வண்டலர் கொன் றையாரை வடிவுடை
மழு என்று ஏத்தி
அண்டர் தம் பெருமான் போந்த
அதிசயம் அறியேன் என்று
கொண்டு எழும் விருப் பினோடும்
கூடலை யாற்றூர் புக்கார். 103
கூடலை ஆற்றூர் மேவும் கொன்றை
வார் சடை யினார்தம்
பீடு யர் கோயில் புக்குப்
பெருகிய ஆர்வம் பொங்க
ஆடகப் பொது வில் ஆடும்
அறைகழல் வணங்கிப் போற்றி
நீடு அருள் பெற்றுப் போந்து
திருமுது குன்றில் நேர்ந்தார். 104
தட நிலைக் கோபுரத்தைத் தாழ்ந்து
முன் இறைஞ்சிக் கோயில்
புடை வலம் கொண்டு புக்குப்
போற்றினர் தொழுது வீழ்ந்து
நடம் நவில்வாரை நஞ்சி இடை
எனும் செஞ்சொல்மாலைத்
தொடை நிகழ் பதிகம் பாடித்
தொழுதுகை சுமந்து நின்று. 105
நாதர்பால் பொருள் தாம் வேண்டி
நண்ணிய வண்ணம் எல்லாம்
கோதறு மனத்துள் கொண்ட குறிப்
பொடும் பரவும் போது
தாது அவிழ் கொன்றை வேய்ந்தார்
தரஅருள் பெறுவார் சைவ
வேதியர் தலைவர் மீண்டும் மெய்யில்
வெண் பொடியும் பாட. 106
பனி மதிச் சடையார் தாமும்
பன்னிரண் டாயிரம் பொன்
நனி அருள் கொடுக்கும் ஆற்றால்
நல்கிட உடைய நம்பி
தனி வரும் மகிழ்ச்சி பொங்கத்
தாழ்ந்து எழுந்து அருகுசென்று
கனி விடம் மிடற்றினார் முன்
பின்ஒன்று கழறல் உற்றார். 107
அருளும் இக் கனகம் எல்லாம்
அடியனேற்கு ஆரூர் உள்ளோர்
மருளுற வியப்ப அங்கே வரப்
பெற வேண்டும் என்னத்
தெருளுற எழுந்த வாக்கால் செழு
மணி முத்தாற்றில் இட்டிப்
பொருளினை முழுதும் ஆரூர்க் குளத்தில்
போய்க் கொள்க என்றார். 108
என்று தம்பிரானார் நல்கும் இன்
அருள் பெற்ற பின்னர்
வன்தொண்டர் மச்சம் வெட்டிக்கைக் கொண்டு
மணி முத்து ஆற்றில்
பொன் திரள் எடுத்து நீருள்
புகவிட்டுப் போது கின்றார்
அன்று எனை வலிந்து ஆட்கொண்ட
அருள் இதில் அறிவேன்என்று. 109
மேவிய காதல் தொண்டு விரவு
மெய் விருத்தி பெற்றார்
ஆவி யின் விருத்தி ஆன
அந்தணர் புலியூர் மன்றில்
காவியங் கண்டர் கூத்து கண்டு
கும்பி டுவது என்று
வாவி சூழ்தில்லை மூதூர் வழிக்
கொள்வான் வணங்கிப் போந்தார். 110
மாடுள பதிகள் சென்று வணங்கிப்
போய் மங்கை பாகர்
நீடிய கடம்பூர் போற்றி நிறைந்த
ஆனந் தக் கூத்தர்
ஆடிய தில்லை மூதூர் அணைந்து
அணி வாயில் புக்குச்
சேடுயர் மாடம் மன்னும் செழும்
திரு வீதி சார்ந்தார். 111
பொன் திரு வீதி தாழ்ந்து
புண்ணிய விளைவாய் ஓங்கும்
நல்திரு வாயில் நண்ணி நறை
மலி அலங்கல் மார்பர்
மற்றதன் முன்பு மண்மேல் வணங்கி
உள்புகுந்து பைம் பொன்
சுற்று மாளிகை சூழ்வந்து தொழுது
கை தலைமேல் கொள்வார். 112
ஆடிய திரு முன்பான
அம் பொனின் கோபுரத்தின்
ஊடுபுக்கு இறைஞ்சி ஓங்கும்
ஒளிவளர் கனக மன்றில்
நாடகச் செய்ய தாளை நண்
ணுற உள் நிறைந்து
நீடும் ஆனந்த வெள்ளக்
கண்கள் நீர் நிறைந்து பாய. 113
பரவுவாய் குளறிக் காதில் படி
திருப் படியைத் தாழ்ந்து
விரவு மெய் அங்கம் ஐந்தும்
எட்டினும் வணங்கி வேட்கை
உர னுறு திருக்கூத்து உள்ளம்
ஆர்தரப் பெருகி நெஞ்சில்
கரவு இலாத அவரைக் கண்ட
நிறைவு தம்கருத்தில் கொள்ள. 114
மடித்து ஆடும் அடிமைக்கண் என்று எடுத்து
மன்உயிர் கட்கு அருளும் ஆற்றல்
அடுத்து ஆற்று நல் நெறிக்கண் நின்றார்கள்
வழுவி நரகு அணையா வண்ணம்
தடுப் பானைப் பேரூரில் கண்ட நிலை
சிறப்பித்துத் தனிக்கூத்து என்றும்
நடிப் பானை நாம் மனமே பெற்றவாறு
எனும் களிப்பால் நயந்து பாடி. 115
மீளாத அருள் பெற்றுப் புறம் போந்து
திரு வீதி மேவித் தாழ்ந்தே
ஆளான வன் தொண்டர் அந்த ணர்கள்
தாம் போற்ற அமர்ந்து வைகி
மாளாத பேர் அன்பால் பொன் பதியை
வணங்கிப் போய் மறலி வீழத்
தாள் ஆண்மை கொண்டவர் தம் கருப்
பறியலூர் வணங்கிச் சென்று சார்ந்தார். 116
கண் நுதலார் விரும்பு கருப்பறியலூரைக் கை
தொழுது நீங்கிப் போய்க் கயல்கள் பாயும்
மண்ணி வளம்படிக் கரையை நண்ணி அங்கு
மாதுஒரு பாகத்தவர்தாள் வணங்கிப் போற்றி
எண்ணில் புகழ்ப் பதிகமும் முன்னவன் என்று
ஏத்தி ஏகுவார் வாழ்கொளிபுத்தூர் எய்தாது
புண்ணி யனார் போம் பொழுது நினைந்து
மீண்டுபுகுகின்றார் தலைக்கலன் என்று எடுத்துப்போற்றி. 118
திருப்பதிகம் பாடியே சென்று அங்கு எய்தித்
தேவர் பெருமானார் தம்கோயில் வாயில்
உருப் பொலியும் மயிர்ப்புளகம் விரவத் தாழ்ந்தே
உள்அணைந்து பணிந்து ஏத்திஉருகும் அன்பால்
பொருப்பரையன் மடப்பாவை இடப் பாலானைப் போற்றி
இசைத்துப் புறம்போந்து தங்கிப்பூ மென்
கருப்பு வயல் வாழ்கொளி புத்தூரை நீங்கிக்கான்
நாட்டு முள்ளூரில் கலந்த போது. 119
கான் நாட்டு முள்ளூரைச் சாரும் போது
கண்நுதலார் எதிர்காட்சி கொடுப்பக் கண்டு
தூநாண் மென்மலர்க் கொன்றைச் சடையார் செய்ய
துணைப் பாதமலர் கண்டு தொழுதேன்என்று
வான்ஆளும் திருப் பதிகம் வள்வாய் என்னும் வன்
தமிழின் தொடைமாலை மலரச் சாத்தித்
தேன்ஆரும் மலர்ச்சோலை மருங்கு சூழ்ந்த திரு
எதிர்கொள் பாடியினை எய்தச் செல்வார். 120
எத்திசையும் தொழுது ஏத்த மத்தயானை எடுத்து
எதிர்கொள் பாடியினை அடைவோம் என்னும்
சித்தநிலைத் திருப்பதிகம் பாடி வந்து செல்வம்மிகு
செழும் கோயில் இறைஞ்சி நண்ணி
அத்தர்தமை அடிவணங்கி அங்கு வைகி அருள்
பெற்றுத் திரு வேள்விக்குடியில் எய்தி
முத்திதரும் பெருமானைத் துருத்தி கூட மூப்பதிலை
எனும் பதிகம் மொழிந்து வாழ்ந்தார். 121
காட்டு நல் வேள்விக் கோலம்
கருத்துற வணங்கிக் காதல்
நாட்டிய உள்ளத் தோடு நம்பி
ஆரூ ரர் போற்றி
ஈட்டிய தவத்தோர் சூழ அங்கு
நின்று ஏகி அன்பு
பூட்டி ஆட் கொண்டார் மன்னும்
தானங்கள் இறைஞ்சிப் போந்து. 122
எஞ்சாத பேர் அன்பில் திருத்
தொண்டர் உடன் எய்தி
நஞ்சாரும் கறை மிடற்றார் இடம்
பலவும் நயந்து ஏத்தி
மஞ்சாரும் பொழில் உடுத்த மலர்த்
தடங்கள் புடை சூழும்
செஞ்சாலி வயல் மருதத் திருவா
ரூர் சென்று அடைந்தார். 123
செல்வ மலி திருவாரூர்த்
தேவரொடு முனிவர்களும்
மல்கு திருக் கோபுரத்து வந்து
இறைஞ்சி உள்புக்கு அங்கு
எல்லை இலாக்காதல் மிக எடுத்த
மலர்க் கை குவித்துப்
பல்கு திருத் தொண்டர் உடன்
பரமர் திருமுன் அணைந்தார். 124
மூவாத முதல் ஆகி நடு
வாகி முடி யாத
சே வாரும் கொடி யாரைத்
திரு மூலட் டானத்துள்
ஓவாத பெரும் காதல் உடன்
இறைஞ்சிப் புறம் போந்து
தாவாத புகழ்ப் பரவையார் திரு
மாளிகை சார்ந் தார். 125
பொங்கு பெரு விருப்பினொடு புரி
குழலார் பலர் போற்றப்
பங்கயக் கண் செங் கனிவாய்ப்
பரவையார் அடி வணங்கி
எங்களையும் நினைந்து அருளிற்று என
இயம்ப இனிது அளித்து
மங்கை நல்லார் அவரோடு மகிழ்ந்து
உறைந்து வைகும் நாள். 126
நாயனார் முது குன்றர் நமக்கு
அளித்த நல் நிதியம்
தூய மணி முத்தாற்றில் புக
விட்டேம் துணைவர் அவர்
கோயிலின் மாளிகை மேல் பாற்
குளத்தில் அவர் அருளாலே
போய் எடுத்துக் கொடு போதப்
போதுவாய் எனப்புகல. 127
என்ன அதிசயம் இது தான்
என் சொன்னவாறு என்று
மின்இடையார் சிறு முறுவல் உடன்
விளம்ப மெய் உணர்ந்தார்
நன் நுதலாய் என்னு டைய
நாதன் அருளால் குளத்தில்
பொன் அடைய எடுத்து உனக்குத்
தருவது பொய்யாது என்று. 128
ஆங்கு அவரும் உடன்போத அளவு
இறந்த விருப்பின் உடன்
பூங் கோயில் உள் மகிழ்ந்த
புராதனரைப் புக்கு இறைஞ்சி
ஓங்கு திருமாளிகையை வலம் வந்து
அங்கு உடன் மேலைப்
பாங்கு திருக் குளத்து அணைந்தார்
பரவையார் தனித் துணைவர். 129
மற்றதனில் வட கீழ்பால் கரை
மீது வந்து அருளி
முற்று இழையார் தமை நிறுத்தி
முனைப் பாடித் திருநாடர்
கற்றை வார் சடையாரைக் கை
தொழுது குளத்தில் இழிந்து
அற்றை நாள் இட்டு எடுப்பார்
போல் அங்குத் தடவுதலும். 130
நீற்றழகர் பாட்டு உவந்து திரு
விளை யாட்டினில் நின்று
மாற்றுறு செம் பொன் குளத்து
வருவியாது ஒழிந்து அருள
ஆற்றினில் இட்டுக் குளத்தில் தேடு
வீர் அருள் இதுவோ
சாற்றும் எனக்கோல் தொடியார் மொழிந்து
அருளத் தனித் தொண்டர். 131
முன்செய்த அருள் வழியே முருகு
அலர் பூங்குழல் பரவை
தன் செய்ய வாயில் நகை
தாராமே தாரும் என
மின்செய்த நூல் மார்பின் வேதியர்
தாம் முது குன்றில்
பொன் செய்த மேனி இனீர்
எனப் பதிகம் போற்றிசைத்து. 132
முட்ட இமை யோர் அறிய முது குன்றில் தந்த பொருள்
சட்ட நான் பெறாது ஒழிந்த தளர்வினால் கையறவாம்
இட்டளத்தை இவள் எதிரே கொடுத்து அருளும் எனும் திருப்பாட்டு
எட்டளவும் பொன் காட்டாது ஒழிந்து அருள ஏத்துவார். 133
ஏத்தாதே இருந்து அறியேன் எனும்
திருப்பாட்டு எவ்வுலகும்
காத்தாடும் அம்பலத்துக் கண்ணு
ளனாம் கண் நுதலைக்
கூத்தாதந்து அருள்வாய் இக்
கோமளத்தின் முன் என்று
நீத்தாரும் தொடர் அரியநெறி
நின்றார் பரவுதலும். 134
கொந்து அவிழ் பூங்கொன்றை
முடிக் கூத்தனார் திரு அருளால்
வந்து எழும் பொன்திரள் எடுத்து
வரன்முறையால் கரை ஏற்ற
அந்தரத்து மலர் மாரி
பொழிந்து இழிந்தது அவனியுளோர்
இந்த அதிசயம் என்னேயார்
பெறுவார் எனத் தொழுவார். 135
ஞாலம் வியப்பு எய்த வரும்
நல் கனக மிடை எடுத்து
மூலம் எனக் கொடு போந்த
ஆணியின் முன் உரைப்பிக்க
நீல மிடற்றவர் அருளால்
உரை தாழப் பின்னும் நெடு
மால் அயனுக்கு அரிய கழல்
வழுத் தினார் வன் தொண்டர். 136
மீட்டும் அவர் பரவுதலும் மெய்
அன்பர் அன்பில் வரும்
பாட்டு வந்து கூத்து உவந்தார்
படுவாசி முடிவு எய்தும்
ஓட்டறு செம்பொன் ஒக்க
ஒரு மாவும் குறையாமல்
காட் டுதலும் மகிழ்ந்து எடுத்துக்
கொண்டு கரை ஏறினார். 137
கரை ஏறிப் பரவையார் உடன்
கனகம் ஆனது எலாம்
நிரையே ஆளில் சுமத்தி நெடு
நிலை மாளிகை போக்கித்
திரை யேறும் புனல் சடிலத்
திரு மூலத் தானத்தார்
விரை யேறு மலர் பாதம்
தொழுது அணைந்தார் வீதியினில். 138
வந்து திரு மாளிகையின் உள்
புகுந்து மங்கல வாழ்த்து
அந்தமிலா வகை ஏத்தும் அளவு
இறந்தார் ஒலி சிறப்பச்
சிந்தை நிறை மகிழ்ச்சி உடன்
சேயிழை யாருடன் அமர்ந்தார்
கந்த மலி மலர்ச் சோலை
நாவலர் தம் காவலனார். 139
அணி ஆரூர் மணி புற்றின்
அமர்ந்தருளும் பரம் பொருளைப்
பணிவார் அங்கு ஒரு நாளில்
பாராட்டும் திருப் பதிகம்
தணி யாத ஆனந்தம் தலை
சிறப்பத் தொண்டர் உடன்
துணிவு ஆய பொருள் வினவித்
தொழுது ஆடிப் பாடுவார். 140
பண்ணி றையும் வகை பாறு
தாங்கி என எடுத்து அருளி
உண்ணி றையும் மனக் களிப்பால்
உறு புளகம் மயிர் முகிழ்ப்ப
கண்ணி றையும் புனல் பொழி
யக் கரை இகந்த ஆனந்தம்
எண்ணி றைந்த படி தோன்ற
ஏத்தி மகிழ்ந்து இன் புற்றார். 141
இன் புற்று அங்கு அமர்நாளில்
ஈறில் அரு மறை பரவும்
வன் புற்றின் அரவு அணிந்த
மன்ன வனார் அருள் பெற்றே
அன் புற்ற காதல் உடன்
அளவு இறந்த பிற பதியும்
பொன் புற்கு என்றிட ஒளிரும்
சடை யாரைத் தொழப் போவார். 142
பரிசன மும் உடன் போதப்
பாங்கு அமைந்த பதிகள் தொறும்
கரி யுரிவை புனைந்தார் தம்
கழல் தொழுது மகிழ்ந்து ஏத்தித்
துரிசறு நல் பெரும் தொண்டர்
நள் ளாறு தொழு வதற்குப்
புரிவுறு மெய்த் திருத்தொண்டர் எதிர்
கொள்ளப் புக்கு அணைந்தார். 143
விண் தடவு கோபுரத்தைப் பணிந்து
கரம் மேல் குவித்துக்
கொண்டு புகும் தண் ணலார்
கோயிலினை வலம் செய்து
மண்டிய பேர் அன்பி னொடு
மன்னும் திரு நள்ளாறர்
புண்டரிகச் சேவடிக் கீழ் பொருந்த
நிலம் மிசைப் பணிந்தார். 144
அங்கண் ணரைப் பணிந்து ஏத்தி
அருளினால் தொழுது போய்
மங்குல் அணி மணி மாடத்
திருக்கடவூர் வந்து எய்தித்
திங்கள் வளர் முடியார் தம்
திரு மயானமும் பணிந்து
பொங்கும் இசைப் பதிகம் மருவார்
கொன்றை எனப் போற்றி. 145
திரு வீரட் டானத்துத் தேவர்
பிரான் சினக் கூற்றின்
பொரு வீரந் தொலைத்த கழல்
பணிந்து பொடியார் மேனி
மருஈரத் தமிழ் மாலை புனைந்து
ஏத்தி மலை வளைத்த
பெருவீரர் வலம் புரத்துப் பெருகு
ஆர்வத் தொடும் சென்றார். 146
வரையோடு நிகர் புரிசை வலம்
புரத்தார் கழல் வணங்கி
உரை ஓசைப் பதிகம் எனக்கு
இனிஓதிப் போய்ச் சங்கம்
நிரையோடு துமித் தூப மணித்
தீபம் நித்திலப் பூம்
திரை ஓதம் கொண்டு இறைஞ்சும்
திருச் சாய்க்காடு எய்தினார். 147
தேவர் பெருமான் தன்னைத் திருச்
சாய்க் காட்டினில் பணிந்து
பாவலர் செம் தமிழ் மாலைத்
திருப் பதிகம் பாடிப்போய்
மேவலர் தம் புரம் எரித்தார்
வெண்காடு பணிந்து ஏத்தி
நாவலர் காவலர் அடைந்தார் நனி
பள்ளித் திரு நகரில். 148
நனிபள்ளி அமர்ந்த பிரான் கழல்
வணங்கி நல் தமிழின்
புனித நறும் தொடை புணைந்து
திருச்செம்பொன் பள்ளி முதல்
பனி மதிசேர் சடையார் தம்
பதிபலவும் பணிந்து போய்த்
தனி விடை மேல் வருவார்
தம் திருநின்றியூர் சார்ந்தார். 149
நின்றியூர் மேயாரை நேயத்தால்
புக்கு இறைஞ்சி
ஒன்றிய அன்பு உள்உருகப்
பாடுவார் உடையஅரசு
என்றும் உலகு இடர்
நீங்கப்பாடிய ஏழ்எழுநூறும்
அன்று சிறப்பித்து அம்சொல்
திருப்பதிகம் அருள் செய்தார். 150
அப்ப தியில் அன்பருடன் அமர்ந்து
அகல்வார் அகல் இடத்தில்
செப்ப அரிய புகழ் நீடூர்
பணியாது செல் பொழுதில்
ஒப்பஅரிய உணர்வினால் நினைந்து
அருளி தொழல் உறுவார்
மெய்ப்பொருள் வண் தமிழ் மலை
விளம்பியே மீண்டு அணைந்தார். 151
மடல் ஆரும் புனல் நீடூர்
மருவினர் தாள் வணங்காது
விடல் ஆமே எனும் காதல்
விருப்பு உறும் அத்திருப்பதிகம்
அடல் ஆர் சூலப் படையார்
தமைப் பாடி அடிவணங்கி
உடல்ஆரும் மயிர்ப் புளகம் மிகப்
பணிந்து அங்கு உறைகின்றார். 152
அம்கண் இனிது அமர்ந்து அருளால்
திருப்புன் கூர் அணைந்து இறைஞ்சிக்
கொங்கு அலரும் மலர்ச் சோலைத்
திருக் கோலக்கா அணையக்
கங்கை சடைக் கரந்தவர் தாம் எதிர் காட்சி கொடுத்து அருளப்
பொங்கு விருப்பால் தொழுது திருப்பதிகம் போற்றி இசைப்பார். 153
திருஞான சம்பந்தர் திருக்
கைகளால் ஒற்றிப்
பெருகுஆர்வத்துடன் பாட பிஞ்ஞ
கனார் கண்டுஇரங்கி
அருளாலே திருத்தாளம் அளித்
தபடி சிறப்பித்துப்
பொருள் மாலைத் திருப்பதிகம்
பாடியே போற்றிஇசைத்தார். 154
மூவாத முழு முதலார்
முதல் கோலக்கா அகன்று
தாவாதபுகழ் சண்பை வலம்
கொண்டு தாழ்ந்து இறைஞ்சி
நாவார் முத்தமிழ் விரகர்
நற்பதங்கள் பரவிப் போய்
மேவார் தம் புரம்
செற்றார் குருகாவூர் மேவுவார். 155
உண் நீரின் வேட்கை உடன்
உறுபசியால் மிக வருந்தி
பண்நீர்மை மொழிப் பரவையார்
கொழுநர் வரும் பாங்கர்க்
கண் நீடுதிரு நுதலார் காதல்
வரக் கருத்து அறிந்து
தண்ணீரும் பொதி சோறும்
கொண்டு வழிச் சார்கின்றார். 156
வேனில் உறுவெயில் வெம்மை தணிப்
பதற்கு விரைக் குளிர் மென்
பான் நல் மலர்த்தடம் போலும்
பந்தர் ஒருபால் அமைத்தே
ஆன மறை வேதியராய் அருள்
வேடம் கொண்டி ருந்தார்
மான் அமரும் திருக் கரத்தார்
வன்தொண்டர் தமைப் பார்த்து. 157
குருகாவூர் அமர்ந்து அருளும் குழகர்
வழி பார்த் திருப்பத்
திருவா ரூர்த் தம்பிரான் தோழர்
திருத் தொண்டர் உடன்
வருவார் அப்பந்தர் இடைப் புகுந்து
திரு மறைவர் பால்
பெருகு ஆர்வம் செல இருந்தார்
சிவாயநம எனப் பேசி. 158
ஆலநிழல் கீழ் இருந்தார் அவர்
தம்மை எதிர் நோக்கிச்
சால மிகப் பசித்தீர் இப்
பொதி சோறு தருகின்றேன்
காலம் இனித்தாழாமே கைக் கொண்டு
இங்கு இனிது அருந்தி
ஏல நறும்குளிர் தண்ணீர் குடித்து
இளைப்பு தீரும் என. 159
வன்தொண்டர் அது கேட்டு மறை
முனிவர் தரும் பொதி சோறு
இன்று நமக்கு எதிர் விலக்கல்
ஆகாது என்று இசைந்து அருளிப்
பொன் தயங்கு நூல் மார்பர்
தரும் பொதிசோறு அது வாங்கிச்
சென்று திருத் தொண்ட ருடன்
திரு அமுது செய்து அருளி. 160
எண் நிறைந்த பரிசனங்கள் எல்
லாரும் இனிது அருந்தப்
பண்ணியபின் அம் மருங்கு பசித்து
அணைந் தார்களும் அருந்த
உண்ணி றைந்த ஆர முதாய்
ஒரு காலும் உலவாதே
புண்ணி யனார் தாம் அளித்த
பொதி சோறு பொலிந்ததால். 161
சங்கரனார் திரு அருள் போல்
தண்ணீரின் சுவை ஆர்ந்து
பொங்கி வரும் ஆதரவால் அவர்
நாமம் புகழ்ந்து ஏத்தி
அங்கு அயர்வால் பள்ளி அமர்ந்துஅருகு
அணைந்தார் களும் துயிலக்
கங்கை சடைக் கரந்தார் அப்
பந்தரொடும் தாம் கரந்தார். 162
சித்த நிலை திரியாத திரு
நாவ லூர் மன்னர்
அத் தகுதி யினில் பள்ளி
உணர்ந் தவரை காணாமை
இத்த னையா மாற்றம் அறிந்
திலேன் என எடுத்து
மெய்த் தகைய திருப் பதிகம்
விளம்பியே சென்று அடைந்தார். 163
குரு காவூர் அமர்ந்து அருளும்
குழகனார் கோயி லினுக்கு
அருகார் பொன் கோபுரத்தை அணைந்து
இறைஞ்சி உள் புக்கு
வருகாதல் கூர வலம் கொண்டு
திரு முன் வணங்கிப்
பருகா இன் அமு தத்தைக்
கண் களால் பருகினார். 164
கண்ணார்ந்த இன் அமுதை கை
ஆரத் தொழுது இறைஞ்சிப்
பண் ணார்ந்த திருப் பதிகம்
பாடியே பணிந்து ஏத்தி
உண் ணாடும் பெரும் காதல்
உடையவர்தாம் புறத்து எய்தி
நண்ணும் ஆர்வத் தொண்டருடன் அங்கு
இனிது நயந்து இருந்தார். 165
அந் நாளில் தம் பெருமான்
அருள் கூடப் பணிந்து அகன்று
மின் னார் செஞ்சடை முடியார்
விரும்பும் இடம் பல வணங்கிக்
கன் னாடும் எயில் புடை
சூழ் கழிப்பாலை தொழுது ஏத்தி
தென் னாவலூர் மன்னர்
திருத் தில்லை வந்து அடைந்தார். 166
சீர்வளரும் திருத்தில்லைத் திரு
வீதி பணிந்து புகுந்து
ஏர்வலர் பொன் திரு மன்றுள்
எடுத்த சேவடி இறைஞ்சிப்
பார்வளர மறை வளர்க்கும் பதி
அதனில் பணிந்து உறைவார்
போர் வளர் மேருச்சிலையார் திருத்தினை
மா நகர் புகுந்தார். 167
திருத்தினை மாநகர் மேவும் சிவக்
கொழுந்தைப் பணிந்து போய்
நிருத்தனார் அமர்ந்து அருளும் நிறை
பதிகள் பல வணங்கிப்
பொருத்த மிகும் திருத் தொண்டர்
போற்று திரு நாவலூர்
கருத்தில் வரும் ஆதரவால் கை
தொழச் சென்று எய்தினார். 168
திருநாவலூர் மன்னர் சேர்கின்றார்
எனக் கேட்டுப்
பெரு நாமப் பதியோரும்
தொண்டர்களும் பெருவாழ்வு
வருநாள்என்று அலங்கரித்து வந்து
எதிர்கொண்டு உள்அணையச்
செருநாகத்து உரிபுனைந்தார் செழுங்கோயில்
உள் அணைந்தார். 169
மேவிய அத் தொண்டர் குழாம்
மிடைந்து அர என்று எழும் ஓசை
மூவு லகும் போய் ஒலிப்ப
முதல் வனார் முன்பு எய்தி
ஆவி யினும் அடைவு டையார்
அடிக் கமலத்து அருள் போற்றிக்
கோவலன் நான் முகன் எடுத்துப்
பாடியே கும் பிட்டார். 170
நலம் பெருகும் அப்பதியில்
நாடி அன்பொடு நயந்து
குலம் பெருகும் திருத்தொண்டர்
குழாத்தோடும் இனிது அமர்ந்து
சலம் பெருகும் சடைமுடியார்
தாள் வணங்கி அருள்பெற்றுப்
பொலம் புரிநூல் மணிமார்பர்
பிறபதியும் தொழப் போவார். 171
தண்டகமாந் திருநாட்டுத் தனி
விடையார் மகிழ்விடங்கள்
தொண்டர் எதிர்கொண்டு அணையத்
தொழுது போய்த்தூய நதி
வண்டறை பூம்புறவு மலை
வளமருதம் பலகடந்தே
எண்திசை யோர் பரவு
திருக்கழுக் குன்றை எய்தினார். 172
தேன் ஆர்ந்த மலர்ச் சோலை
திருக்கழுக் குன்றத்து அடியார்
ஆனாத விருப் பினொடும் எதிர்
கொள்ள அடைந்து அருளித்
தூநாள் வெண்மதி அணிந்த சுடர்க்
கொழுந் தைத் தொழுது இறைஞ்சி
பா நாடும் இன் இசை
யின் திருப் பதிகம் பாடினார். 173
பாடிய அப்பதியின் கண் இனிது
அமர்ந்து பணிந்து போய்
நாடிய நல்லுணர்வினொடும் திருக்
கச்சூர் தனை நண்ணி
ஆடக மாமதில் புடை சூழ்
ஆலக் கோயிலின் அமுதைக்
கூடிய மெய்அன்பு உருகக் கும்
பிட்டுப் புறத்து அணைந்தார். 174
வன்தொண்டர் பசி தீர்க்க மலையின்
மேல் மருந்து ஆனார்
மின்தங்கு வெண் தலையோடு ஒழிந்து
ஒரு வெற்றோடு ஏந்தி
அன்று அங்கு வாழ்வார் ஓர்
அந்த ணராய்ப் புறப்பட்டுச்
சென்று அன்பர் முகம் நோக்கி
அருள் கூறச் செப்புவார். 176
மெய்ப் பசியால் மிகவருந்தி இளைத்து
இருந்தீர் வேட் கைவிட
இப் பொழுதே சோறிரந்து இங்கு
யான் உமக்குக் கொணர்கின்றேன்
அப்புறம் நீர் அகலாதே சிறிது
பொழுது அமரும் எனச்
செப்பி அவர் கச்சூர் மனை
தோறும் சென்றிரப்பார். 177
வெண் திரு நீறு அணி திகழ
விளங்குநூல் ஒளி துளங்கக்
கண்டவர்கள் மனம் உருகக் கடும்
பகல்போது இடும் பலிக்குப்
புண்டரிகக் கழல் புவிமேல் பொருந்த
மனை தொறும் புக்குக்
கொண் டுதாம் விரும்பி ஆட்
கொண்டவர் முன் கொடுவந்தார். 178
இரந்து தாம் கொடு வந்த
இன் அடிசிலும் கறியும்
அரந்தை தரும் பசி தீர
அருந்துவீர் என அளிப்ப
பெருந்தகையார் மறையவர் தம் பேர்
அருளின் திறம் பேணி
நிரந்த பெரும் காத லினால்
நேர் தொழுது வாங்கினார். 179
வாங்கிய அத்திரு அமுது வன்
தொண்டர் மருங்கு அணைந்த
ஓங்கு தவத் தொண்டருடன் உண்டு
அருளி உவந்து இருப்ப
ஆங்கு அருகு நின்றார் போல் அவர்
தம்மை அறி யாமே
நீங் கினார் எப் பொருளும்
நீங்காத நிலைமை யினார். 180
திரு நாவலூ ராளி சிவ
யோகியார் நீங்க
வரு நாம மறைய வனார்
இறையவனார் என மதித்தே
பெரு நாதச்சிலம்பு அணி சேவடி
வருந்த பெரும்பகல் கண்
உருநாடி எழுந்து அருளிற்று என்
பொருட்டாம் என உருகி. 181
முதுவாயோரி என்று எடுத்து முதல்
வனார் தம் பெரும் கருணை
அதுவாம் இது என்று அதிசயம் வந்து
எய்தக் கண்ணீர் மழை அருவி
புதுவார் புனலின் மயிர்ப் புளகம்
புதையப் பதிகம் போற்றி இசைத்து
மதுவார் இதழி முடி யாரைப்
பாடி மகிழ்ந்து வணங் கினார். 182
வந்தித்து இறைவர் அருளால் போய்
மங்கை பாகர் மகிழ்ந்த இடம்
முந்தித் தொண்டர் எதிர் கொள்ளப்
புக்கு முக் கண் பெருமானைச்
சிந்தித்திட வந்து அருள் செய்
கழல் பணிந்து செஞ்சொல் தொடைபுனைந்தே
அந்திச் செக்கர்ப் பெருகு ஒளியார்
அமரும் காஞ்சி மருங்கு அணைந்தார். 183
அன்று வெண் ணெய் நல்லூரில்
அரியும் அயனும் தொடர் அரிய
வென்றி மழ வெள் விடை
உயர்த்தார் வேத முதல்வராய் வந்து
நின்று சபைமுன் வழக்கு உரைத்து
நேரே தொடர்ந்து ஆட்கொண்டவர் தாம்
இன்று இங்கு எய்தப் பெற்றோம்
என்று எயில்சூழ்காஞ்சி நகர் வாழ்வார். 184
மல்கு மகிழ்ச்சி மிகப் பெருக
மறுகு மணித் தோரணம் நாட்டி
அல்கு தீபம் நிறை குடங்கள்
அகிலின் தூபம் கொடி எடுத்துச்
செல்வ மனைகள் அலங் கரித்து
தெற்றி ஆடல் முழவு அதிரப்
பல்கு தொண்டருடன் கூடிப் பதியின்
புறம் போய் எதிர் கொண்டார். 185
ஆண்ட நம்பி எதிர் கொண்ட
அடி யார் வணங்க எதிர்வணங்கி
நீண்ட மதில் கோபுரம் கடந்து
நிறை மாளிகை வீதியில் போந்து
பூண்ட காதல் வாழ்த் தினுடன்
புனை மங்கல தூரியம் ஒலிப்ப
ஈண்டு தொண்டர் பெருகு திரு
ஏகாம் பரம் சென்று எய்தினார். 186
ஆழி நெடுமால் அயன் முதலாம்
அமரர் நெருங்கு கோபுரம் முன்
பூழியுற மண் மிசை மேனி
பொருந்த வணங்கிப் புகுந்து அருளிச்
சூழு மணி மாளிகை பலவும்
தொழுது வணங்கி வலம் கொண்டு
வாழி மணிப் பொன் கோயிலினுள்
வந்தார் அணுக்க வன் தொண்டர். 187
கைகள் கூப்பி முன் அணை
வார் கம்பை ஆறு பெருகிவர
ஐயர் தமக்கு மிக அஞ்சி
ஆரத் தழுவிக் கொண்டு இருந்த
மைஉலாவும் கரும் நெடும் கண்
மலை யாள் என்றும் வழிபடுபூஞ்
செய்ய கமலச் சேவடிக் கீழ்த்
திருந்து காத லுடன் வீழ்ந்தார். 188
வீழ்ந்து போற்றிப் பரவ சமாய்
விம்மி எழுந்து மெய்யன்பா ல்
வாழ்ந்த சிந்தை உடன் பாடிமாறா
விருப்பில் புறம் போந்து
சூழ்ந்த தொண்டருடன் மருவும்நாளில்
தொல்லைக் கச்சி நகர்த்
தாழ்ந்த சடை யார் ஆலயங்கள்
பலவும் சார்ந்து வணங்குவார். 189
சீரார் காஞ்சி மன்னும் திருக்
காமக் கோட்டம் சென்று இறைஞ்சி
நீரார் சடையார் அமர்ந்து அருளும்
நீடு திரு மேற்றளி மேவி
ஆரா அன்பில் பணிந்து ஏத்தும்
அளவில் நுந்தா ஒண் சுடராம்
பாரார் பெருமைத் திருப் பதிகம்
பாடி மகிழ்ந்து பர வினார். 190
ஓண காந்தன் தளி மேவும்
ஒருவர் தம்மை உரிமையுடன்
பேணி அமைந்த தோழமையால் பெருகும்
அடிமைத் திறம் பேசிக்
காண மோடு பொன்வேண்டி நெய்யும்
பாலும் கலை விளங்கும்
யாணர்ப்பதிகம் எடுத்து ஏத்தி எண்ணில்
நிதிபெற்று இனிது இருந்தார். 191
அங்கண் அமர்வார் அனே கதங்கா
வதத்தை எய்தி உள்ள ணைந்து
செங்கண் விடையார் தமைப் பணிந்து
தேன் நெய்புரிந்து என்று எடுத்ததமிழ்
தங்கும் இடமாம் எனப் பாடித்
தாழ்ந்து பிறவும் தானங்கள்
பொங்கு காத லுடன் போற்றிப்
புரிந்தபதியில் பொருந்து நாள். 192
பாடல் இசையும் பாணியினால் பாவைத்
தழுவக் குழைக் கம்பர்
ஆடல் மருவும் சேவடிகள்
பரவிப் பிரியாது அமர்கின்றார்
நீட மூதூர்ப் புறத்து இறைவர்
நிலவும் பதிகள் தொழவிருப்பால்
மாடம் நெருங்கு வன் பார்த்தான்
பனம்காட்டூரில் வந்து அடைந்தார். 193
செல்வம் மல்கு திருப்பனங் காட்டூரில்
செம் பொன் செழும் சுடரை
அல்லல் அறுக்கும் அரு மருந்தை
வணங்கி அன்பு பொழி கண்ணீர்
மல்க நின்று விடையின் மேல்
வருவான் எனும் வண்தமிழப் பதிகம்
நல்ல இசையின் உடன் பாடிப்
போந்து புறம்பு நண் ணுவார். 194
மன்னும் திருமால் பேறு அணைந்து
வணங்கிப் பரவித் திரு வல்லம்
தன்னுள் எய்தி இறைஞ்சிப் போய்ச்
சாரும் மேல் பால் சடைக்கற்றைப்
பின்னல் முடியார் இடம் பலவும்
பேணி வணங்கிப் பெரும் தொண்டர்
சென்னி முகில் தோய் தடம்
குவட்டுத் திருக் திருக்காளத்தி மலைசேர்ந்தார். 195
தடுக்கலாகாப் பெருங் காதல்
தலை நின்று அருளும் கண்ணப்பர்
இடுக்கண் களைந்து ஆட் கொண்டு
அருளும் இறைவர் மகிழ்ந்த காளத்தி
அடுக் கல் சேர அணைந்து
பணிந்து அருளால் ஏறி அன்பாறும்
அடுப்பத் திருமுன் சென்று எய்தி
மலை மேல் மருந்தை வணங்கினார். 196
வணங்கி உள்ளம் களி கூர
மகிழ்ந்து போற்றி மதுர இசை
அணங்கு செண் டாடு எனும்
பதிகம் பாடி அன்பால் கண்ணப்பர்
மணம் கொள் மலர்ச்சேவடி பணிந்து
வாழ்ந்து போந்து மன்னும் பதி
இணங்கு தொண்ட ருடன் கெழுமி
இன்புற்று இருக்கும் அந் நாளில். 197
வட மாதிரத்துப் பருப் பதம்
திருக் கேதார மலையும் முதல்
இடமா அரனார் தாம் உவந்த
எல்லாம் இங்கே இருந்து இறைஞ்சி
நடம் ஆடிய சேவடி யாரை
நண்ணி னார் போல் உள் நிறைந்து
திடமாம் கருத்தில் திருப் பதிகம்
பாடிக் காதல் சிறந்து இருந்தார். 198
அங்கு சிலநாள் வைகிய பின்
அருளால் போந்து பொரு விடையார்
தங்கும் இடங்கள் எனைப் பலவும்
சார்ந்து தாழ்ந்து தமிழ் பாடிப்
பொங்கு புணரிக் கரை மருங்கு
புவியுள் சிவ லோகம் போலத்
திங்கள் முடியார் அமர்ந்த திரு
ஒற்றி யூரைச் சென்று அடைந்தார். 199
அண்ணல் தொடர்ந்து ஆவணம் காட்டி
ஆண்ட நம்பி எழுந்து அருள
எண்ணில் பெருமை ஆதி புரி
இறைவர் அடியார் எதிர் கொள்வார்
வண்ண வீதி வாயில் தொறும்
வாழை கமுகு தோர ணங்கள்
சுண்ண நிறை பொன் குடம்
தூப தீபம் எடுத்துத் தொழ எழுங்கால். 200
வர மங்கல நல்லியம் முழங்க
வாச மாலை அணி அரங்கில்
புர மங்கையர்கள் நடம் ஆடப்
பொழியும் வெள்ளப் பூ மாரி
அர மங்கையரும் அமரர் களும்
வீச அன்பர் உடன் புகுந்தார்
பிரமன் தலையில் பலியு கந்த
பிரா னார் விரும்பும் தொண்டர். 201
ஒற்றி ஊரின் உமை யோடும்
கூட நின்றார் உயர் தவத்தின்
பற்று மிக்க திருத்தொண்டர் பரந்த
கடல் போல் வந்து ஈண்டிச்
சுற்றம் அணைந்து துதி செய்யத்
தொழுது தம் பிரான் அன்பர்
கொற்ற மழ வேறு உடையவர்
தம் கோயில் வாயில் எய்தினார். 202
வானை அளக்கும் கோபு ரத்தை
மகிழ்ந்து பணிந்து புகுந்து வளர்
கூனல் இளம் வெண்பிறைச் சடையார்
கோயில் வலம் கொண்டு எதிர்குறுகி
ஊனும் உயிரும் கரைந்து உருக
உச்சி குவித்த கையின் உடன்
ஆன காதல் உடன் வீழ்ந்
தார் ஆரா அன்பின் ஆரூரர். 203
ஏட்டு வரியில் ஒற்றியூர் நீங்கல்
என்ன எழுத்து அறியும்
நாட்ட மலரும் திருநுதலார் நறும்
பொன் கமலச் சேவடியில்
கூட்டும் உணர்வு கொண்டு எழுந்து
கோதில் அமுத இசை கூடப்
பாட்டும் பாடி பரவி எனும்
பதிகம் எடுத்துப் பாடினார். 204
பாடி அறிவு பரவசமாம் பரிவு
பற்றப் புறம் போந்து
நீடுவிருப்பில் பெரும் காதல் நிறைந்த
அன்பர் பலர் போற்றத்
தேடும் அயனும் திரு மாலும்
அறிதற்கு அரிய திருப்பாதம்
கூடும் காலங்களில் அணைந்து பரவிக்
கும்பிட்டு இனிது இருந்தார். 205
இந்த நிலமையார் இவர் இங்கு
இருந்தார் முன்பே இவர்க்காக
அந்தண் கயிலைமலை நீங்கி அருளால்
போந்த அநித் திதையார்
வந்து புவி மேல் அவதரித்து
வளர்ந்து பின்பு வன்தொண்டர்
சந்தவிரை சூழ் புயம் சேர்ந்த
பரிசு தெரியச் சாற்றுவாம். 206
நாலாம் குலத்தில் பெருகு நலம்
உடையார் வாழும் ஞாயிற்றின்
மேலாங் கொள்கை வேளாண்மை மிக்க
திரு ஞாயிறு கிழவர்
பாலாதரவு தரும் மகளார் ஆகிப்
பார் மேல் அவதரித்தார்
ஆலாலஞ் சேர் கறை மிடற்றார்
அருளால் முன்னை அநிந்திதையார். 207
மலையான் மடந்தை மலர்ப் பாதம்
மறவா அன்பால் வந்த நெறி
தலையாம் உணர்வு வந்து அணையத்
தாமே அரிந்த சங்கி லியார்
அலையார் வேல் கண் சிறு
மகளிர் ஆயத் தோடும் விளையாட்டு
நிலை யாயின அப் பருவங்கள்
தோறும் நிகழ நிரம் புவார். 208
சீர்கொள் மரபில் வரும் செயலே
அன்றித் தெய்வ நிகழ் தன்மை
பாரில் எவரும் அதி சயிக்கும்
பண்பில் வளரும் பைந் தொடியார்
வாரும் அணிய அணியவாம் வளர்
மென் முலைகள் இடை வருத்தச்
சாரும் பதத்தில் தந்தையார் தம்
கண் மனைவி யார்க்கு உரைப்பார். 209
வடிவும் குணமும் நம்முடைய மகட்கு
மண் உள் ளோர்க்கு இசையும்
படிவம் அன்றி மேல் பட்ட
பரி சாம் பான்மை அறிகிலோம்
கடிசேர் மணமும் இனி நிகழும்
காலம் என் னக் கற்புவளர்
கொடியே அனைய மனை வியார்
ஏற்கும் ஆற்றாக் கொடும் என்றார். 210
தாய ரோடு தந்தையார் பேசக்
கேட்ட சங்கி லியார்
ஏயு மாற்றம் அன்றி எம்
பெருமான் ஈசன் திரு அருளே
மேய ஒருவர்க்கு உரியது யான்வேறு என்
விளையும் என வெருவுற்(று)
ஆயஉணர்வு மயங்கி மிக அயர்ந்தே
அவனி மேல் விழுந்தார். 211
பாங்கு நின்ற தந்தையார் தாயார்
பதைத்துப் பரிந்து எடுத்தே
ஏங்கும் உள்ளத்தினர் ஆகி இவளுக்கு
என்னே உற்றது எனத்
தாங்கிச் சீத விரைப் பனி நீர்
தெளித்து தைவந்தது நீங்க
வாங்குசிலை நன்னுதலாரை வந்தது உனக்கு
இங்கு என்? என்றார். 212
என்று தம்மை ஈன்று எடுத்தார்
வினவ மறை விட்டு இயம்புவார்
இன்று என்திறத்து நீர் மொழிந்த
இது என் பரிசுக்கு இசையாது
வென்றி விடையார் அருள் செய்தார்
ஒருவர்க்கு உரியேன் யான் இனிமேல்
சென்று திரு ஒற்றியூர் அணைந்து
சிவனார் அருளில் செல்வன் என. 213
அந்த மாற்றம் கேட்டவர் தாம்
அயர்வும் பயமும் அதிசயமும்
வந்த உள்ளத்தினர் ஆகி மற்ற
மாற்றம் மறைத்து ஒழுகப்
பந்தம்நீடும் இவர் குலத்து நிகர்
ஆம் ஒருவன் பரிசு அறியான்
சிந்தை விரும்பி மகள்பேச விடுத்
தான் சிலரும் சென்று இசைத்தார். 214
தாதை யாரும் அது கேட்டுத் தன்மை
விளம்பத் தகாமை யினால்
ஏதம் எய்தாவகை மொழிந்து போக்க
அவர் ஆங்கு எய்தாமுன்
தீதுஅங்கு இழைத்தே இறந்தான் போல்
செல்ல விடுத்தார் உடன்சென்றான்
மாதராரைப் பெற்றார் மற்று அதனைக்
கேட்டு மனம் மருண்டார். 215
தையலார் சங்கிலியார் தம் திறத்துப்
பேசத் தகா வார்த்தை
உய்ய வேண்டும் நினைவு உடையார்
உரையார் என்றுஅங்கு உலகுஅறியச்
செய்த விதிபோல் இது நிகழச்
சிறந்தார்க்கு உள்ளபடி செப்பி
நையும் உள்ளத்துடன் அஞ்சி நங்கை
செயலே உடன் படுவார். 216
அணங்கே ஆகும் இவள் செய்கை
அறிந்தோர் பேச அஞ்சுவரால்
வணங்கும் ஈசர் திறம் அன்றி வார்த்தை
அறியாள் மற்று ஒன்றும்
குணங்கள் இவையாம் இனி இவள்தான்
குறித்த படியே ஒற்றிநகர்ப்
பணம் கொள் அரவச் சடை
யார் சடை யார்தம்
பால் கொண்டு அணை வோம்
எனப் பக ர்வார். 217
பண்ணார் மொழிச் சங்கிலியாரை நோக்கிப்
பயந்தா ரொடும் கிளைஞர்
தெண்ணீர் முடியார் திரு வொற்றியூரில்
சேர்ந்து செல் கதியும்
கண்ணார் நுதலார் திரு அருளால்
ஆகிக் கன்னி மாடத்துத்
தண்ணார் தடம்சூழ் அந்நகரில் தங்கிப்
புரிவீர் தவம் என்று. 218
பெற்ற தாதை சுற்றத்தார் பிறை
சேர் முடியார் விதியாலே
மற்றுச் செயல் ஒன்று அறியாது
மங்கையார் சங்கிலியார் தாம்
சொற்ற வண்ணம் செயத் துணிந்து
துதைந்த செல்வத்தொடும் புரங்கள்
செற்ற சிலையார் திருவொற்றியூரில்
கொண்டு சென்று அணைந்தார். 219
சென்னி வளர் வெண்பிறை அணிந்த
சிவனார் கோயிலுள் புகுந்து
துன்னும் சுற்றத் தொடும் பணிந்து
தொல்லைப் பதியோர் இசைவினால்
கன்னிமாடம் மருங்கு அமைத்துக் கடிசேர்
முறைமை காப்பு இயற்றி
மன்னும் செல்வம் தக வகுத்துத்
தந்தையார் வந்து அடிவணங்கி. 220
யாங்கள் உமக்குப் பணி செய்ய
ஈசற்கு ஏற்ற பணி விரும்பி
ஓங்கு கன்னி மாடத்தில் உறை
கின்றீர் என்று உரைக் கின்றார்
தாங் கற்கு அரிய கண்கள்
நீர்த் தாரை ஒழுகத் தரியாதே
ஏங்கு சுற்றத் தொடும் இறைஞ்
சிப் போனார் எயில் சூழ்தம்பதியில். 221
காதல் புரிந்து தவம் புரியும்
கன்னியார் அங்கு அமர்கின்றார்
பூத நாதர் கோயிலினில் காலம்
தோறும் புக்கு இறைஞ்சி
நீதி முறைமை வழுவாது தமக்கு
நேர்ந்த பணி செய்யச்
சீதமலர்ப் பூ மண்டபத்து திரைசூழ்
ஒருபால் சென்று இருந்து. 222
பண்டு கயிலைத் திருமலையில் செய்யும்
பணியின் பான்மை மனம்
கொண்ட உணர்வு தலை நிற்பக்
குலவு மலர்மென் கொடிஅனையார்
வண்டு மருவும் திரு மலர் மெல்
மாலை காலங்களுக்கு ஏற்ப
அண்டர் பெருமான் முடிச் சாத்த
அமைத்து வணங்கி அமரும்நாள். 223
அந்தி வண்ணத்து ஒருவர் திரு
அருளால் வந்த ஆரூரர்
கந்த மாலைச் சங்கிலியார் தம்மைக்
காதல் மணம் புணர
வந்த பருவம் ஆதலால் வகுத்த
தன்மை வழு வாத
முந்தை விதியால் வந்து ஒருநாள்
முதல்வர் கோயிலுள் புகுந்தார். 224
அண்டர் பெருமான் அந்த ணராய்
ஆண்ட நம்பி அங்கணரைப்
பண்டை முறைமை யால் பணிந்து
பாடிப் பரவிப் புறம்போந்து
தொண்டு செய்வார் திருத் தொழில்கள்
கண்டு தொழுது செல்கின்றார்
புண்டரீகத் தடம் நிகழ் பூந்திரு
மண்டபத் தின் உள்புகுந்தார். 225
அன்புநாரா அஞ்சு எழுத்து நெஞ்சு
தொடுக்க அலர் தொடுத்தே
என்பு உள் உருக்கும் அடியாரைத்
தொழுது நீங்கி வேறுஇடத்து
முன்பு போல திரைநீக்கி முதல்வர்
சாத்தும் பணி கொடுத்து
மின்போல் மறையும் சங்கிலியார் தம்மை
விதியால் கண் உற்றார். 226
கோவா முத்தும் சுரும்பு ஏறாக்கொழு
மென் முகையும் அனையாரைச்
சேவார் கொடியார் திருத் தொண்டர்
கண்டபோது சிந்தை நிறை
காவாதவர் பால் போய் விழத்
தம்பால் காமனார் துரந்த
பூ வாளிகள் வந்துற வீழத் தரியார்
புறமே போந்து உரைப்பார். 227
இன்னபரிசு என்று அறி அரிதால் ஈங்கு
ஓர் மருங்கு திரைக்கு உள்ளால்
பொன்னும் மணியும் மலர்ந்த ஒளி
அமுதில் அளா விப்பு தியமதி
தன்னுள் நீர் மையால் குழைத்துச்
சமைத்த மின்னுக் கொடி போல்வாள்
என்னை உள்ளம் திரிவித்தாள் யார்
கொல் என்று அங்கு இயம்புதலும். 228
அருகு நின்றார் விளம்புவார் அவர்
தாம் நங்கை சங்கிலியார்
பெருகும் தவத்தால் ஈசர் பணி
பேணும் கன்னியார் என்ன
இருவரால் இப்பிறவியை எம் பெருமான்
அருளால் எய்து வித்தார்
மருவும் பரவை ஒருத்தி இவள்
மற்றையவளாம் என மருண்டார். 229
மின்னார் சடையார் தமக்காளாம் விதியால்
வாழும் எனை வருத்தித்
தன்னார் அருளால் வரும்பேறு தவத்தால்
அணையா வகை தடுத்தே
என்னாருயிரும் எழில் மலரும் கூடப்
பிணைக்கும் இவள் தன்னைப்
பொன்னார் இதழி முடியார் முடியார்பால்
பெறுவேன் என்று போய்ப்புக்கார். 230
மலர்மேல் அயனும் நெடுமாலும் வானும்
நிலனும் கிளைத்து அறியா
நிலவு மலரும் திரு முடியும்
நீடும் கழலும் உடையாரை
உலகம் எலாம் தாம் உடையா
ராயும் ஓற்றியூர் அமர்ந்த
இலகு சோதி பரம்பொருளை இறைஞ்சி
முன் நின்று ஏத்துவார். 231
மங்கை ஒருபால் மகிழ்ந்ததுவும் அன்றி
மணிநீள் முடியின் கண்
கங்கை தன்னைக் கரந்து அருளும்
காதல் உடையீர் அடியேனுக்(கு)
இங்கு நுமக்குத் திருமாலை தொடுத்து
என்உள்ளத்து தொடை அவிழ்த்த
திங்கள் வதனச் சங்கிலியைத் தந்து
என்வருத்தம் தீரும் என. 232
அண்ணலார் முன் பலவும் அவர்
அறிய உணர்த்திப்புறத்து அணைந்தே
எண்ணம் எல்லாம் உமக்கு அடிமை
யாமாறு எண்ணும் என்நெஞ்சில்
திண்ணம் எல்லாம் உடை வித்தாள்
செய்வது ஒன்றும் அறியேன்யான்
தண்ணிலா மின் ஒளிர் பவளச்
சடையீர் அருளும் எனத்தளர்வார். 233
மதிவாண் முடியார் மகிழ் கோயில்
புறத்தோர் மருங்கு வந்து இருப்பக்
கதிரோன் மேலைக் கடல் காண
மாலைக் கடலைக் கண்டு அயர்வார்
முதிரா முலையார் தம்மை மணம்
புணர்க்க வேண்டி முளரி வளை
நிதியான் நண்பர் தமக்கு அருளும்
நண்பால் நினைந்து நினைந்து அழிய. 234
உம்பர் உய்ய உலகு உய்ய
ஓலவேலை விடம் உண்ட
தம்பிரான் ஆனார் வன் தொண்டர்
தம்பால் எய்திச் சங்கிலியை
இம்பர் உலகில் யாவருக்கும் எய்த
ஒண்ணா இரும் தவத்துக்
கொம்பை உனக்குத் தருகின்றோம்
கொண்ட கவலை ஒழிகஎன்ன. 235
அன்று வெண்ணெய் நல்லூரில் வலிய
ஆண்டு கொண்டு அருளி
ஒன்றும் அறியா நாயேனுக்குக் உறுதி
அளித்தீர் உயிர் காக்க
இன்றும் இவளை மணம் புணர்க்க ஏன்று
நின்றீர் எனப் போற்றி
மன்றல் மலர்ச்சேவடி இணைக்கீழ் வணங்கி
மகிழ்ந்தார் வன் தொண்டர். 236
ஆண்டு கொண்ட அந்தணனார் அவருக்கு
அருளிக் கருணை யினால்
நீண்ட கங்குல் யாமத்து நீங்கி
வானில் நிறை மதியம்
தீண்டு கன்னி மாடத்துச் சென்று
திகழ் சங்கிலி யாராம்
தூண்டு சோதி விளக்கு அனையார்
தம்பால் கனவில் தோன்றினார். 237
தோன்றும் பொழுதில் சங்கிலி யார்
தொழுது விழுந்து பரவசமாய்
ஆற்ற அன்பு பொங்கி எழுந்(து)அடியேன்
உய்ய எழுந்து அருளும்
பேற்றுக்கு என்யான் செய்வது எனப்பெரிய
கருணை பொழிந்து அனைய
நீற்றுக் கோல வேதியரும் நேர்
நின்று அருளிச் செய்கின்றார். 238
சாரும் தவத்துச் சங்கிலி! கேள்;சால
என்பால் அன்பு டையான்
மேரு வரையின் மேம் பட்ட
தவத்தான் வெண்ணெய் நல்லூரில்
யாரும் அறிய யான் ஆள
உரியான் உன்னை எனை இரந்தான்
வார்கொள் முலையாய்! நீஅவனை மனத்தால்
அணைவாய் மகிழ்ந்து என்றார். 239
ஆதிதேவர் முன் நின்று அங்கு
அருளிச்செய்த பொழுதின் கண்
மாதரார் சங்கிலியாரும் மாலும்
அயனும் அறிவு அரிய
சீத மலர் தாமரை அடிக்கீழ்
சேர்ந்து வீழ்ந்து செந்நின்று
வேத முதல்வர் முன் நடுக்கம்
எய்தித் தொழுது விளம்புவார். 240
எம்பிரானே! நீர் அருளிச் செய்
தார்க்கு உரியேன் யான் இமையோர்
தம் பிரானே அருள் தலைமேல்
கொண்டேன் தக்க விதி மணத்தால்
நம்பி ஆரூர ருக்கு என்னை
நல்கி அருளும் பொழுது இமயக்
கொம்பின் ஆகங் கொண்டீர்க்குக் கூறும்
திறம் ஒன்று உளது என்பார். 241
பின்னும் பின்னல் முடியார் முன்
பெருக நாணித் தொழுது உரைப்பார்
மன்னும் திருவா ரூரின் கண்
அவர் தாம் மிகவும் மகிழ்ந்து உறைவது
என்னும் தன்மை அரிந்து அருளும்
எம் பிராட்டி திருமுலை தோய்
மின்னும் புரிநூல் அணி மார்பீர்
என்றார் குன்றா விளக்கு அனையார். 242
மற்றவர் தம் உரைகொண்டு வன்
தொண்டர் நிலை மையினை
ஒற்றி நகர் அமர்ந்த பிரான்
உணர்ந்து அருளி உரைசெய்வார்
பொன் தொடியாய்! உனை இகந்து
போகா மைக்கு ஒரு சபதம்
அற்ற முறு நிலைமை யினால்
அவன் செய்வான் எனஅருளி. 243
வேய்அனைய தோளியார் பால்
நின்று மீண்டு அருளித்
தூயமனம் மகிழ்து இருந்த
தோழனார் பால் அணைந்து
நீஅவளை மணம் புணரும் நிலை
உரைத்தோம் அதற்கு அவள்பால்
ஆயதொரு குறை உன்னால் அமைப்
பதுள என்று அருள. 244
வன் தொண்டர் மனம் களித்து
வணங்கி அடியேன் செய்ய
நின்ற குறையாது என்ன நீ
அவளை மணம் புணர்தற்(கு)
ஒன்றி உடனே நிகழ்வது ஒரு
சபதம் அவள் முன்பு
சென்று கிடைத்து இவ்விரவே செய்க
என அருள் செய்தார். 245
என் செய்தால் இது முடியும் அது
செய்வன் யான் அதற்கு
மின்செய்த புரி சடையீர் அருள்
பெறுதல் வேண்டும் என
முன் செய்த முறுவலுடன் முதல்வர்
அவர் முகம் நோக்கி
உன்செய்கை தனக்கு இனிஎன் வேண்டுவது
என்று உரைத்து அருள. 246
வம்புஅணி மென் முலை அவர்க்கு
மனம் கொடுத்த வன்தொண்டர்
நம்பர் இவர் பிற பதியும்
நயந்த கோலம் சென்று
கும் பிடவே கடவேனுக்கு இது
விலக்காம் எனக் குறிப்பால்
தம் பெருமான் திருமுன்பு தாம்
வேண்டும் குறை இரப்பார். 247
சங்கரர் தாள் பணிந்து இருந்து
தமிழ் வேந்தர் மொழிகின்றார்
மங்கை அவள் தனைப் பிரியா
வகை சபதம் செய்வதனுக்(கு)
அங்கு அவளோடு யான் வந்தால்
அப்பொழுது கோயில் விடத்
தங்கும் இடம் திரு மகிழ்க் கீழ்க்
கொள வேண்டும் எனத்தாழ்ந்தார். 248
தம்பிரான் தோழர் அவர் தாம்
வேண்டிக் கொண்டு அருள
உம்பர் நாய கரும் அதற்கு
உடன் பாடு செய்வாராய்
நம்பி! நீ சொன்னபடி நாம்
செய்தும் என்று அருள
எம்பி ரானே! அரியது இனி
எனக்கு என்? எனஏத்தி. 249
அஞ்சலி சென்னியில் மன்ன அருள்
பெற்றுப் புறம் போதச்
செஞ்சடையார் அவர் மாட்டுத் திரு
விளையாட் டினை மகிழ்ந்தோ
வஞ்சி இடைச் சங்கிலியார் வழி
அடிமைப் பெரு மையோ?
துஞ்சிருள் மீளவும் அணைந் தார்
அவர்க்கு உறுதி சொல்லுவார். 250
சங்கிலியார் தம் மருங்கு முன்பு
போல் சார்ந்து அருளி
நங்கை உனக்கு ஆரூரன் நயந்து
சூள் உறக் கடவன்
அங்கு நமக்கு எதிர் செய்யும்
அதற்கு நீ இசையாதே
கொங்கலர் பூ மகிழின் கீழ்க் கொள்க
எனக் குறித்து அருள. 251
மற்றவரும் கை குவித்து மால்
அயனுக்கு அறிவரியீர்
அற்றம் எனக்கு அருள் புரிந்த
அதனில் அடியேன் ஆகப்
பெற்றது யான்எனக் கண்கள் பெரும்
தாரை பொழிந்து இழிய
வெற்றி மழ விடையார் தம்
சேவடிக்கீழ் வீழ்ந்து எழுந்தார். 252
தையலார் தமக்கு அருளிச் சடா
மகுடர் எழுந்து அருள
எய்திய போது அதிசயத்தால் உணர்ந்து
எழுந்த அவ்விரவின் கண்
செய்ய சடையார் அருளின் திறம்
நினைந்தே கண் துயிலார்
ஐயம் உடன் அருகு துயில்
சேடியரை அணைந்து எழுப்பி. 253
நீங்கு துயில் பாங்கியர்க்கு நீங்கல்
எழுத்து அறியும் அவர்
தாம் கனவில் எழுந்து அருளித்
தமக்கு அருளிச்செய்தது எலாம்
பாங்கு அறிய மொழிய அவர்
பயத்தின் உடன் அதிசயமும்
தாங்கு மகிழ்ச் சியும் எய்தச்
சங்கிலியார் தமைப் பணிந்தார். 254
சேயிழையார் திருப் பள்ளி எழுச்
சிக்கு மலர் தொடுக்கும்
தூய பணிப் பொழுது ஆகத்தொழில்
புரிவார் உடன் போதக்
கோயிலின் முன் காலம் அது
ஆகவே குரித்து அணைந்தார்
ஆய சபதம் செய்ய வரவு
பார்த்து ஆரூ ரர். 255
நின்றவர் அங்கு எதிர் வந்த
நேர்இழையார் தம் மருங்கு
சென்று அணைந்து தம் பெருமான்
திருஅருளின் திறம் கூற
மின்தயங்கு நுண் இடையார் விதி
உடன்பட்டு எதிர் விளம்பார்
ஒன்றிய நாணொடு மடவாருடன்
ஒதுங்கி உட் புகுந்தார். 256
அங்கு அவர் தம் பின்சென்ற
ஆரூ ரர் ஆயிழையீர்!
இங்கு நான் பிரியாமை உமக்கு
இசையும் படி இயம்பத்
திங்கள் முடியார் திரு முன்
போதுவீர் எனச் செப்பச்
சங்கி லியார் கனவு உரைப்பக்
கேட்ட தாதியர் மொழிவார். 257
எம் பெரு மான் இதற்காக
எழுந்து அருளி இமயவர்கள்
தம் பெருமான் திருமுன்பு
சாற்றுவது தகாது என்ன
நம் பெருமான் வன் தொண்டர்
நாதர் செயல் அறியாதே
கொம்பு அனையீர் யான் செய்வது
எங்கு என்று கூறுதலும். 258
மாதர் அவர் மகிழ்க் கீழே
அமையும் என மனமருள்வார்
ஈதலர் ஆகிலும் ஆகும் இவர்
சொன்ன படி மறுக்கில்
ஆதலினால் உடன் படவே அமையும்
எனத் துணிந்து ஆகில்
போதுவீர் என மகிழ்க்கீழ் அவர்
போதப் போய் அணைந்தார். 259
தாவாத பெருந் தவத்துச்
சங்கிலி யாரும் காண
மூவாத திரு மகிழை
முக்காலும் வலம் வந்து
மேவாது இங்குயான் அகலேன்
என நின்று விளம்பினார்
பூவார் தண் புனல் பொய்கை
முனைப் பாடிப் புரவலனார். 260
மேவிய சீர் ஆரூரர் மெய்ச்
சபதம் வினை முடிப்பக்
காவியினேர் கண்ணாரும் கண்டு
மிக மனம் கலங்கிப்
பாவியேன் இது கண்டேன்தம்
பிரான் பணியால் என்று
ஆவிசோர்ந்து அழிவார் அங்குஒரு
மருங்கு மறைந்து அயர்ந்தார். 261
திருநா வலூ ராளி தம்
உடைய செயல் முற்றிப்
பொரு நாகத்து உரி புனைந்தார்
கோயிலின் உள்புகுந்து இறைஞ்சி
அருள் நாளும் தர இருந்தீர்
செய்தவாறு அழகு இதுஎனப்
பெருநாமம் எடுத்து ஏத்திப் பெரு
மகிழ்ச்சி உடன் போந்தார். 262
வார் புனையும் வன முலையார்
வன் தொண்டர் போனதன் பின்
தார் புனையும் மண்ட பத்துத்
தம் உடைய பணி செய்து
கார் புனையும் மணி கண்டர்
செயல் கருத்தில் கொண்டு இறைஞ்சி
ஏர் புனையும் கன்னி மாடம்
புகுந் தார் இருள் புலர. 263
அன்று இரவே ஆதிபுரி ஒற்றி
கொண்டார் ஆட் கொண்ட
பொன் திகழ் பூண் வன்தொண்டர்
புரிந்த வினை முடித்துஅருள
நின்ற புகழ்த் திரு ஒற்றியூர்
நிலவு தொண் டர்க்கு
மன்றல் வினை செய்வதற்கு மனம் கொள்ள உணர்த்துவார். 264
நம்பி யாரூர னுக்கு
நங்கை சங்கிலி தன்னை
இம்பர் ஞாலத்து இடை நம்
ஏவலினால் மணவினை செய்து
உம்பர்வாழ் உலகு அறிய
அளிப்பீர் என்று உணர்த்துதலும்
தம்பிரான் திருத்தொண்டர் அருள்
தலைமேல் கொண்டு எழுவார். 265
மண்ணிறைந்த பெரும் செல்வத்து
திரு ஒற்றியூர் மன்னும்
எண்ணிறைந்த திருத் தொண்டர்
எழில்பதியோர் உடன் ஈண்டி
உண்ணி றைந்த மகிழ்ச்சியுடன்
உம்பர் பூமழை பொழியக்
கண்ணிறைந்த பெரும் சிறப்பில்
கலியாணம் செய்து அளித்தார். 266
பண்டு நிகழ் பான்மையினால்
பசுபதி தன் அருளாலே
வண்டமர் பூங்குழலாரை மணம்
புணர்ந்த வன் தொண்டர்
புண்டரிகத்து அவள் வனப்பைப்
புறம் கண்ட தூநலத்தைக்
கண்டுகேட்டு உண்டு உயிர்த்துஉற்று
அமர்ந்து இருந்தார் காதலினால். 267
யாழின் மொழி எழில் முறுவல்இரு
குழை மேல் கடைபிறழும்
மாழை விழிவன முலையார் மணி
அல்குல் துறை படிந்து
வீழும் அவர்க்கு இடைதோன்றி மிகும்
புலவி புணர்ச்சிக் கண்
ஊழியாம் ஒரு கணம் தான்
அவ்வூழி ஒருகணம் ஆம். 268
இந்நிலையில் பேர் இன்பம் இனிது
அமர்வார் இறை உறையும்
மன்னு புகழ் ஒற்றியூர் அதனில்
மகிழ் சிறப் பினால்
சென்னி மதிபுனைவார் தம் திருப்
பாதம் தொழுது இருந்தார்
முன்னிய காலங்கள் பல முறை
மையினால் வந்து அகல. 269
பொங்கு தமிழ்ப் பொதிய மலைப்
பிறந்து பூஞ் சந்தனத்தின்
கொங்கு அணைந்து குளிர்சாரல் இடை
வளர்ந்த கொழும் தென்றல்
அங்கு அணைய திருவாரூர் அணி
வீதி அழகர் அவர்
மங்கல நாள் வசந்தம் எதிர்கொண்டு
அருளும் வகை நினைந்தார். 270
வெண் மதியின் கொழுந்து அணிந்த
வீதி விடங்கப் பெருமான்
ஒண்ணு தலார் புடை பரந்த
ஓலக்கம் அதன் இடையே
பண் ணமரும் மொழிப் பரவையார்
பாடல் ஆடல் தனைக்
கண்ணுற முன் கண்டு கேட்
டார் போலக் கருதினார். 271
பூங்கோயில் அமர்ந் தாரை
புற்றிடங் கொண்டு இருந்தாரை
நீங்காத காதலினால் நினைந்
தாரை நினை வாரைப்
பாங்காகத் தாம்முன்பு பணிய
வரும் பயன் உணர்வார்
ஈங்குநான் மறந்தேன் என்று
ஏசறவால் மிக அழிவார். 272
மின் னொளிர் செஞ்சடையானை
வேத முதல் ஆனானை
மன்னு புகழ்த் திருவாரூர்
மகிழ்ந்தானை மிக நினைந்து
பன்னிய சொல் பத்திமையும்
அடிமையையும் கை விடுவான்
என்னும் இசைத் திருப்பதிகம்
எடுத்து இயம்பி இரங்கினார். 273
பின்ஒரு நாள் திருவாரூர் தனைப்
பெருக நினைந்து அருளி
உன்ன இனியார் கோயில் புகுந்து
இறைஞ்சி ஒற்றி நகர்
தன்னை அகலப் புக்கார் தாம்
செய்த சபதத் தால்
முன் அடிகள் தோன் றாது
கண் மறைய மூர்ச்சித்தார். 274
செய் வதனை அறியாது திகைத்து
அருளி நெடிது உயிர்ப்பார்
மைவிரவு கண்ணார் பால் சூல்
உறவு மறுத்த அதனால்
இவ்வினை வந்து எய்தியது ஆம்
என நினைந்து எம்பெருமானை
எய்திய இத் துயர் நீங்கப்
பாடுவேன் என நினைந்து. 275
அழுக்கு மெய் கொடு என்று எடுத்தசொல்
பதிகம் ஆதிநீள் புரி அண்ணலைஓதி
வழுத்து நெஞ்சொடு தாழ்ந்து நின்று உரைப்பார்
மாதோர் பாகனார் மலர்பதம் உன்னி
இழுக்கு நீக்கிட வேண்டும் என்று இரந்தே
எய்து வெம்துயர்க் கையற வினுக்கும்
பழிக்கும் வெள்கி நல்இசை கொடு பரவி
பணிந்து சாலவும் பலபல நினைவார். 276
அங்கு நாதர் செய்அருளது ஆக அங்கை
கூப்பி ஆரூர் தொழ நினைந்தே
பொங்கு காதல் மீளா நிலைமை யினால்
போதுவார் வழிகாட்ட முன் போந்து
திங்கள் வேணி யார் திரு முல்லைவாயில்
சென்று இறைஞ்சி நீடிய திருப்பதிகம்
சங்கி லிக்காக என் கணை மறைத்தீர்
என்று சாற்றிய தன்மையில் பாடி. 277
தொண்டை மானுக்கு அன்று அருள்கொடுத்து அருளும்
தொல்லை வண்புகழ் முல்லை நாயகரைக்
கொண்ட வெந்துயர் களை எனப்பரவிக் குறித்த
காதலின் நெறிக் கொள வருவார்
வண்டுலா மலர்ச் சோலைகள் சூழ்ந்து மாட
மாளிகை நீடு வெண் பாக்கம்
கண்ட தொண்டர்கள் எதிர் கொள வணங்கிக்
காயும் நாகத்தர் கோயிலை அடைந்தார். 278
அணைந்த தொண்டர்கள் உடன் வலமாக அங்கண்
நாயகர் கோயில் முன் எய்திக்
குணங்கள் ஏந்தியே பரவி அஞ்சலியால் குவித்த
கைத்தலை மேற் கொண்டு நின்று
வணங்கி நீர்மகிழ் கோயில் உளீரே என்ற
வன்தொண்டர்க்கு ஊன்று கோல் அருளி
இணங் கிலா மொழியால் உளோம் போகீர்
என்று இயம்பினார் ஏதிலார் போல. 279
பிழை உள்ளன பொறுத்திடுவர்
என்று எடுத்துப் பெண் பாகம்
விழைவடிவில் பெருமானை வெண்
பாக்கம் மகிழ்ந் தானை
இழைஎன மாசுணம் அணிந்த
இறை யானைப் பாடினார்
மழை தவழும் நெடும்
புரிசை நாவலூர் மன்னவனார். 280
முன் நின்று முறைப்பாடு
போல் மொழிந்த மொழிமாலைப்
பன்னும் இசைத் திருப்
பதிகம் பாடியபின் பற்றாய
என்னுடையபிரான் அருள் இங்கு
இத்தனை கொலாம் என்று
மன்னுபெரும் தொண்டர் உடன்
வணங்கியே வழிக் கொள்வார். 281
அங்கணர் தம்பதி அதனை அகன்று
போய் அன்பர் உடன்
பங்கயப் பூந்தடம் பணை சூழ்
பழையனூர் உழை எய்தித்
தங்குவார் அம்மைத் திருத் தலை
யாலே வலம் கொள்ளும்
திங்கள் முடியார் ஆடும் திரு
வாலங் காட்டின் அயல். 282
முன்நின்று தொழுது ஏத்தி முத்தா
என்று எடுத்து அருளிப்
பன்னும் இசைத் திருப்பதிகம் பாடி
மகிழ்ந்து ஏத்து வார்
அந் நின்று வணங்கிப் போய்த்
திருவூறல் அமர்ந்து இறைஞ்சிக்
கன்னிமதில் மணி மாடக் காஞ்சி
மா நகர் அணைந்தார். 283
தேன் நிலவு பொழில் கச்சித்
திருக்காமக் கோட் டத்தில்
ஊனில் வளர் உயிர்க்கு எல்லாம்
ஒழியாத கருணை யினால்
ஆனதிரு அறம் புரக்கும் அம்மை
திருக் கோயிலின் முன்
வானில் வளர் திருவாயில் வணங்
கினார் வன் தொண்டர். 284
தொழுது விழுந்து எழுந்து அருளால்
துதித்துப்போய் தொல் உலகம்
முழுதும் அளித்து அழித்து ஆக்கும் முதல்
வர் திரு ஏகம்பம்
பழுதில் அடியார் முன்பு புகப்
புக்குப் பணி கின்றார்
இழுதை யேன் திருமுன்பே என்
மொழிவேன் என்று இறைஞ்சி. 285
விண் ஆள்வார் அமுது உண்ண
மிக்கபெரும் விடம் உண்ட
கண் ணாளா கச்சி ஏகம்
பனே கடை யானேன்
எண்ணாத பிழை பொறுத்து இங்கு
யான் காண எழில்பவள
வண்ணா கண் அளித்து அருளாய்
என வீழ்ந்து வணங்கினார். 286
பங்கயச் செங்கைத் தளிரால் பனி
மலர் கொண்டு அருச்சித்துச்
செங் கயற் கண் மலைவல்லி
பணிந்த சேவடி நினைந்து
பொங்கிய அன்பொடு பரவிப்
போற்றிய ஆரூ ரருக்கு
மங்கைத் தழுவக் குழைந்தார் மறைந்த
இடக் கண் கொடுத்தார். 287
ஞாலந் தான் இடந்தவனும்
நளிர் விசும்பு கடந்தவனும்
மூலந்தான் அறிவரியார்
கண் அளித்து முலைச்சுவட்டுக்
கோலந்தான் காட்டுதலும் குறுகி விழுந்து எழுந்து களித்து
ஆலந்தான் உகந்தவன் என்று எடுத்து ஆடிப் பாடினார். 288
பாடி மிகப் பரவசமாய்ப் பணி
வார்க்குப் பாவை உடன்
நீடிய கோலம் காட்ட நிறைந்த
விருப் புடன் இறைஞ்சிச்
சூடிய அஞ்சலி யினராய்த் தொழுது
புறம் போந்து அன்பு
கூடிய மெய்த் தொண்டர் உடன்
கும்பிட்டு அங்கு இனிது அமர்வார். 289
மா மலையாள் முலைச்சுவடும் வளைத்
தழும்பும் அணிந்த மதிப்
பூ மலிவார் சடை யாரைப்
போற்றி அருளது ஆகத்
தே மலர்வார் பொழில் காஞ்சித்
திருநகரம் கடந்து அகல்வார்
பா மலர் மாலைப் பதிகம்
திருவாரூர் மேல் பரவி. 290
அந்தியும் நண்பகலும் என எடுத்து
ஆர்வத் துடன் நசையால்
எந்தை பிரான் திருவாரூர் என்று
கொல் எய்துவது என்று
சந்த இசை பாடிப் போய்த்
தாங்க அரிய ஆதரவு
வந்து அணைய அன்பர் உடன்
மகிழ்ந்து வழி கொள்கின்றார். 291
மன்னு திருப் பதிகள் தொறும்
வன்னி யொடு கூவிளமும்
சென்னிமிசை வைத்து உவந்தார் கோயிலின்
முன் சென்று இறைஞ்சிப்
பன்னு தமிழ்த் தொடை சாத்திப்
பரவியே போந்து அணைந்தார்
அன்ன மலி வயல் தடங்கள்
சூழ்ந்த திரு ஆமாத்தூர். 292
அங்கணரை ஆமாத்தூர் அழகர்
தமை அடி வணங்கித்
தங்கும் இசைத்திருப் பதிகம்
பாடிப் போய்த் தாரணிக்கு
மங்கலமாம் பெரும் தொண்டை
வளநாடு கடந்து அணைந்தார்
செங்கண் வளவன் பிறந்த
சீர்நாடு நீர் நாடு. 293
அந்நாட்டின் மருங்கு திரு அரத்
துறையைச் சென்று எய்தி
மின்னாரும் படை மழுவார் விரை
மலர்த்தாள் பணிந்து எழுந்து
சொன்மாலை மலர்க் கல்வாய் அகில்
என்னும் தொடை சாத்தி
மன்னார் வத்து திருத் தொண்டர்
உடன் மகிழ்ந்து வைகினார். 294
பரமர் திரு அரத் துறையைப்
பணிந்து போய்ப் பலபதிகள்
விரவி மழ விடை உயர்த்தார்
விரைமலர்த்தாள் தொழுது ஏத்தி
உரவு நீர்த் தடம் பொன்னி
அடைந்து அன்பருடன் ஆடி
அரவு அணிந்தார் அமர்ந்த திருவாவடு
தண் துறை அணைந்தார். 295
அங்கணைவார் தமை அடியார் எதிர்
கொள்ளப் புக்கு அருளிப்
பொங்கு திருக் கோயிலினைப் புடை
வலம் கொண்டுள் ளணைந்து
கங்கை வாழ் சடையாய் ஓர்
கண்ணிலேன் எனக் கவல்வார்
இங்கு எனக்கு ஆர்உறவு என்னும்
திருப்பதிகம் எடுத்து இசைத்தார். 296
திருப்பதிகம் கொடு பரவிப் பணிந்து
திரு அருளால் போய்
விருப்பி னொடும் திருத்துருத்தி தனை
மேவி விமலர் கழல்
அருத்தியினால் புக்கு இறைஞ்சி அடியேன்
மேல் உற்ற பிணி
வருத்தம் எனை ஒழித்து அருள
வேண்டும் என வணங்குவார். 297
பரவியே பணிந்த வர்க்குப் பரமர்
திரு அருள் புரிவார்
விரவிய இப் பிணி அடையத்
தவிப் பதற்கு வேறு ஆக
வரமலர் வண்டறை தீர்த்த வட
குளித்துக் குளி என்னக்
கரவில் திருத் தொண்டர் தாம்
கை தொழுது புறப்பட்டார். 298
மிக்க புனல் தீர்த்தத்தின் முன்
அணைந்து வேதம் எலாம்
தொக்க வடிவாய் இருந்த துருத்
தியார் தமைத் தொழுது
புக்கு அதனில் மூழ்குதலும் புதிய
பிணி அது நீங்கி
அக்கணமே மணி ஒளிசேர்
திரு மேனி ஆயினார். 299
கண்ட வர்கள் அதிசயிப்பக்
கரை யேறி உடைபுனைந்து
மண்டு பெரும் காதலினால்
கோயிலினை வந்து அடைந்து
தொண்டர் எதிர் மின்னுமா
மேகம் எனும் சொல்பதிகம்
எண் திசையும் அறிந்துய்ய
ஏழிசையால் எடுத்து இசைத்தார். 300
பண்ணிறைந்த தமிழ் பாடிப் பரமர்
திரு அருள் மறவாது
எண்ணிறைந்த தொண்டர் உடன் பணிந்து
அங்கண் உறைந் தேகி
உண்ணிறைந்த பதி பிறவும் உடையவர்
தாள் வணங்கிப் போய்
கண்ணி றைந்த திரு வாரூர் முன்
தோன்றக் காண் கின்றார். 301
அன்று திரு நோக்கு ஒன்றால்
ஆரக்கண்டு இன்பு உறார்
நின்று நிலமிசை வீழ்ந்து நெடிது
உயிர்த்து நேர் இறைஞ்சி
வன் தொண்டர் திருவா ரூர்
மயங்கு மாலையில் புகுந்து
துன்று சடைத் தூவாயர் தமை
முன்னம் தொழ அணைந்தார். 302
பொங்கு திருத் தொண்டருடன்
உள்ளணைந்து புக்கு இறைஞ்சி
துங்க இசைத் திருப்பதிகம்
தூவாயா என்று எடுத்தே
இங்கு எமது துயர்களைந்து
கண்காணக் காட்டாய் என்று
அம்கணர் தம்முன் நின்றுபாடி
அருந் தமிழ் புணைந்தார். 303
ஆற ணியுஞ் சடையாரைத் தொழுது
புறம் போந்து அங்கண்
வேறு இருந்து திருத் தொண்டர்
விரவுவார் உடன் கூடி
ஏறுயர்த் தார் திருமூலட்டாத்து
உள் இடை தெரிந்து
மாறில் திரு அத்தயா மத்து
இறைஞ்ச வந்து அணைந்தார். 304
ஆதிதிரு அன்பர் எதிர் அணைய
அவர் முகம் நோக்கிக்
கோதில் இசை யால் குருகுபாய
எனக் கோத்து எடுத்தே
ஏதி லார் போல் வினவி
ஏசற வால் திருப்பதிகம்
காதல் புரி கைக் கிளையால்
பாடியே கலந்து அணைவார். 305
சீர் பெருகும் திருத் தேவாசிரியன்
முன் சென்று இறைஞ்சிக்
கார் விரவு கோபுரத்தைக் கை
தொழுதே உள் புகுந்து
தார் பெருகு பூங்கோயில் தனை
வணங்கி சார்ந்து அணைவார்
ஆர்வம் மிகு பெரும் காதலால்
அவனி மேல் வீழ்ந்தார். 306
வீழ்ந்து எழுந்து கை தொழுது
முன் நின்று விம்மியே
வாழ்ந்த மலர்க் கண் ஒன்றால்
ஆராமல் மனம் அழிவார்
ஆழ்ந்த துயர்க்கடல் இடை நின்று
அடியேனை எடுத்து அருளித்
தாழ்ந்த கருத் தினை நிரப்பிக்
கண்தாரும் எனத் தாழ்ந்தார். 307
திரு நாவலூர் மன்னர் திரு
வாரூர் வீற்று இருந்த
பெரு மானைத் திரு மூலட்
டானம் சேர் பிஞ்ஞகனைப்
பருகா இன் அமுதைக் கண்
களால் பரு குதற்கு
மருவார் வத்துடன் மற் றைகண்
தாரீர் என வணங்கி. 308
மீளா அடிமைஎன எடுத்து மிக்க
தேவர் குலம் எல்லாம்
மாளமே நஞ்சு உண்டு அருளி
மன்னி இருந்த பெருமானைத்
தாளா தரிக்கும் மெய்அடியார் தமக்கு
ஆம்இடர் நீர்தரியீர் என்று
ஆளாம் திருத் தோழமைத் திறத்தால்
அஞ்சொல் பதிகம் பாடினார். 309
பூத முதல்வர் புற்றிடங் கொண்டு
இருந்த புனிதர் வன் தொண்டர்
காதல் புரிவேதனைக்கு இரங்கி கருணைத்
திரு நோக்கு அளித்து அருளிச்
சீதமலர்க் கண் கொடுத்து அருளச்
செவ்வே விழித்து முகம் மலர்ந்து
பாத மலர்கள் மேல் பணிந்து
வீழ்ந் தார் உள்ளம் பரவசமாய். 310
விழுந்தும் எழுந்தும் பல முறையால்
மேவிப் பணிந்து மிகப் பரவி
எழுந்த களிப் பினால் ஆடிப்
பாடி இன்ப வெள் ளத்தில்
அழுந்தி இரண்டு கண் ணாலும் அம்
பொன் புற்றின் இடை எழுந்த
செந்தண் பவளச் சிவக் கொழுந்தின்
அருளைப் பருகித் திளைக் கின்றார். 311
காலம் நிரம்பத் தொழுது ஏத்திக்
கனக மணி மாளிகை கோயில்
ஞாலம் உய்யவரும் நம்பி நலம்
கொள் விருப்பால் வலம் கொண்டு
மாலும் அயனும் முறை இருக்கும்
வாயில் கழியப் புறம் போந்து
சீலம் உடைய அன்பர் உடன்
தேவாசி ரியன் மருங்கு அணைந்தார். 312
நங்கை பரவையார் தம்மை நம்பி
பிரிந்து போன அதன் பின்
தங்கு மணி மாளிகையின் கண்
தனிமை கூரத் தளர் வார்க்குக்
கங்குல் பகலாய்ப் பகல் கங்கு
லாகிக் கழியா நாள் எல்லாம்
பொங்கு காதல் மீதூரப் புலர்வார்
சில நாள் போன அதன்பின். 313
செம்மை நெறி சேர் திரு
நாவலூரர் ஒற்றியூர் சேர்ந்து
கொம்மை முலையார் சங்கிலியார் தம்மைக்
குலவு மணம் புணர்ந்த
மெய்ம்மை வார்த்தை தாம் அவர்பால்
விட்டார்வந்து கட்டு உரைப்ப
தம்மை அறியா வெகுளியினால் தரியா
நெஞ்சி னொடும் தளர்வார். 314
மென் பூஞ் சயனத்து இடைத்துயிலும்
மேவார் விழித்தும் இனிது அமரார்
பொன் பூந்தவிசின் மிசை இனிஇரார்
நில்லார் செல்லார் புறம்பு ஒழியார்
மன்பூ வாளி மழை கழியார்
மறவார் நினையார் வாய் விள்ளார்
என்பூ டுருக்கும் புல வியோ
பிரிவோ இரண்டின் இடைப் பட்டார். 315
ஆன கவலைக் கை அறவால்
அழியும் நாளில் ஆரூரர்
கூனல்இளம் வெண் பிறைக் கண்ணி
முடியார் கோயில் முன்குறுகப்
பால் நல் விழியார் மாளிகையில்
பண்டு செல்லும் பரிசினால்
போன பெருமைப் பரிசனங்கள் புகுதப்
பெறாது புறம் நின்றார். 316
நின்ற நிலைமை அவர்கள் சிலர்
நிலவு திருவாரூரர் எதிர்
சென்று மொழிவார் திரு ஒற்றியூரில்
நிகழ்ந்த செய்கை எலாம்
ஒன்றும் ஒழியாவகை அறிந்து அங்கு
உள்ளார் தள்ள மாளிகையில்
இன்று புறமும் சென்று எய்தப்
பெற்றிலோம் என்று இறைஞ்சினார். 317
மற்ற மாற்றம் கேட்டு அழிந்த
மனத்தர் ஆகி வன்தொண்டர்
உற்றஇதனுக்கு இனி என்னோ செயல்
என்று உணர்வார் உலகுஇயல்பு
கற்ற மாந்தர் சிலர் தம்மைக்
காதல் பரவையார் கொண்ட
செற்ற நிலைமை அறிந்தவர்க்கு தீர்வு
சொல்லச் செல விட்டார். 318
நம்பி அருளால் சென்ற அவரும்
நங்கை பரவையார் தமது
பைம்பொன் மணி மாளிகை அணைந்து
பண்பு புரியும் பாங்கினால்
வெம்பு புலவிக் கடல் அழுந்தும்
மின்னேரிடையார் முன் எய்தி
எம் பிராட்டிக்கு இது தகுமோ
என்று பலவும் எடுத்துரைப்பார். 319
பேத நிலைமை நீதியினால் பின்னும்
பலவும் சொன்னவர் முன்
மாதர் அவரும் மறுத் துமனம்
கொண்ட செற்றம் மாற்றாராய்
ஏதம் மருவும் அவர்திறத்தில் இந்த
மாற்றம் இயம்பில் உயிர்
போதல் ஒழியாது என உரைத்தார்
அவரும் அஞ்சிப்புறம் போந்தார். 320
போந்து புகுந்த படி எல்லாம்
பூந்தண் பழன முனைப்பாடி
வேந்தர் தமக்கு விளம்புதலும் வெரு
வுற்று அயர்வார் துயர்வேலை
நீந்தும் புணையாம் துணை காணார்
நிகழ்ந்த சிந்தாகுலம் நெஞ்சில்
காந்த அழிந்து தோய்ந்து எழார்
கங்குல் இடையாமகக் கடலுள். 321
அருகு சூழ்ந்தார் துயின்று திரு
அந்தயாமம் பணி மடங்கிப்
பெருகு புவனம் சலிப்புஇன்றிப் பேயும்
உறங்கும் பிறங்கு இருள்வாய்
முருகு விரியும் மலர்க் கொன்றை
முடிமேல் அரவும் இளமதியும்
செருகும் ஒருவர் தோழர் தனி
வருந்தி இருந்து சிந்திப்பார். 322
முன்னை வினையால் இவ் வினைக்கு
மூலம் ஆனாள்பால் அணைய
என்னை உடையாய் நினைந்த அருளாய்
இந்தயாமத்து எழுந்து அருளி
அன்னம் அனையாள் புல வியினை
அகற்றில் உய்யலாம் அன்றிப்
பின்னை இல்லைச்செயல் என்று பெருமான்
அடிகள் தமை நினைந்தார். 323
அடியார் இடுக்கண் தரியாதார் ஆண்டு
கொண்ட தோழர் குறை
முடியாது இருக்க வல்லரே முற்றும்
அளித்தாள் பொற்றளிர்க் கைத்
தொடியார் தழும்பும் முலைச்சுவடும் உடையார்
தொண்டர் தாம் காணும்
படியால் அணைந்தார் நெடியோனும்
காணாஅடிகள் படி தோய. 324
தம்பிரானார் எழுந்து அருளத் தாங்
கற்கு அரிய மகிழ்ச்சியினால்
கம்பியா நின்ற அவயவங்கள் கலந்த
புளகம் மயிர் முகிழ்ப்ப
நம்பி ஆரூரரும் எதிரே நளின
மலர்க்கை தலைக் குவிய
அம்பிகா வல்லவர் செய்ய அடித்
தாமரையின் கீழ் விழுந்தார். 325
விழுந்து பரவி மிக்க பெரும்
விருப்பினோடும் எதிர் போற்றி
எழுந்த நண்பர் தமை நோக்கிஎன்
நீ உற்றது என்று அருள
தொழும் தம் குறையை விளம்புவார் யானே
தொடங்கும் துரிசு இடைப்பட்டு
அழுந்தும் என்னை இன்னம் எடுத்து
ஆளவேண்டும் உமக்கு என்று. 326
அடியேன் அங்குத் திருவொற் றியூரில்
நீரே அருள் செய்ய
வடிவேல் ஒண்கண் சங்கிலியை மணம்
செய்து அணைந்ததிறம் எல்லாம்
கொடியேர் இடையாள் பரவைதான் அறிந்து
தன்பால் யான் குறுகில்
முடிவேன் என்று துணிந்து இருந்தாள்என்
நான் செய்வது எனமொழிந்து. 327
நாயன்நீரே நான் உமக்கு இங்கு
அடியேன் ஆகில் நீர்எனக்குத்
தாயின் நல்ல தோழ ருமாம்
தம்பிர னாரே ஆகில்
ஆய அறிவும் இழந்து அழிவேன்
அயர்வு நோக்கி அவ்வளவும்
போய் இவ்விரவே பரவையுறு புலவி
தீர்த்துத் தாரும் என. 328
அன்பு வேண்டும் தம் பெருமான்
அடியார் வேண்டிற்றே வேண்டி
முன்பு நின்று விண்ணப்பம் செய்த
நம்பி முகம் நோக்கித்
துன்பம் ஒழிநீ யாம் உனக்கோர்
தூதன் ஆகி இப்பொழுதே
பொன்செய் மணிப்பூண் பரவைபால் போகின்றோம்
என்று அருள் செய்தார். 329
எல்லை இல்லாக் களிப்பினராய் இறைவர்
தாளில் விழுந்து எழுந்து
வல்லபரிசு எல்லாம் துதித்து வாழ்ந்து
நின்ற வன் தொண்டர்
முல்லை முகை வெண்ணகைப்பரவை முகில்
சேர் மாடத்து இடைசெல்ல
நில்லாது ஈண்ட எழுந்து அருளிநீக்கும்
புலவி எனத் தொழுதார். 330
அண்டர் வாழக் கருணை யினால்
ஆல காலம் அமுதாக
உண்ட நீலக் கோல மிடற்று
ஒருவர் இருவர்க்கு அறிவரியர்
வண்டு வாழும் மலர்க் கூந்தல்
பரவையார் மாளிகை நோக்கி
தொண்டனார் தம் துயர் நீக்க
தூதனாராய் எழுந்து அருள. 331
தேவா சிரியன் முறை இருக்கும்
தேவர் எல்லாம் சேவித்துப்
போவார் தம்மில் வேண்டுவார் போத
ஒழிந்தார் புறத்து ஒழிய
ஓவா அணுக்கச் சேவ கத்தில்
உள்ளோர் பூத கணநாதர்
மூவா முனிவர் யோகி களின்
முதல் ஆனார்கள் முன்போக. 332
அருகு பெரிய தேவ ருடன் அணைந்து
வரும் அவ்விருடிகளும்
மருவு நண்பின் நிதிக்கோனும் முதலாய்
உள்ளோர் மகிழ்ந்து ஏத்த
தெருவும் விசும்பும் நிறைந்து விரைச்செழும்
பூமாரி பொழிந்து அலையப்
பொருவில் அன்பர் விடும்தூதர் புனித
வீதியி னில் போத. 333
மாலும் அயனும் காணாதார் மலர்த்தாள்
பூண்டு வந்து இறைஞ்சும்
காலம்இது என்றுஅங்கு அவரை அழைத்தால்
என்னக் கடல் விளைத்த
ஆலம் இருண்ட கண்டத்தான் அடித்தாமரை
மேல் சிலம்பு ஒலிப்ப
நீல மலர்க்கண் பரவையார் திரு
மாளிகையை நேர் நோக்கி. 334
இறைவர் விரைவின் எழுந்து அருள
எய்தும் அவர்கள் பின் தொடர
அறை கொள் திரை நீர் தொடர்சடையில்
அரவு தொடர அரியஇளம்
பிறை கொள் அருகு நறைஇதழிப்
பிணையல் சுரும்பு தொடர உடன்
மறைகள் தொடர வன் தொண்டர்
மனமும் தொடர வரும் பொழுது. 335
பெரு வீரையினும் மிக முழங்கிப்
பிறங்கு மத குஞ்சரம் உரித்து
மருவீர் உரிவை புனைந்தவர் தம்
மருங்கு சூழ்வார் நெருங் குதலால்
திரு வீதியினில் அழகர் அவர்
மகிழும் செல்வத் திருவா ரூர்
ஒரு வீதியிலே சிவ லோகம்
முழு தும் காண உளதாமால். 336
ஞாலம் உய்ய எழுந்து அருளும்
நம்பி தூதர் பரவையார்
கோல மணி மாளிகை வாயில்
குறுகுவார் முன் கூடத்தம்
பாலங்கு அணைந்தார் புறம் நிற்பப்
பண்டே தம்மை அர்ச்சிக்கும்
சீலம் உடைய மறை முனிவர்ஆகித்
தனியே சென்று அணைந்தார். 337
சென்று மணி வாயில் கதவம்
செறிய அடைத்த அதன் முன்பு
நின்று பாவாய் திறவாய் என்று
அழைப்ப நெறி மென் குழலாகும்
ஒன்றும் துயிலாது உணர்ந்து அயர்வார்
உடைய பெருமான் பூசனை செய்
துன்றும் புரிநூல் மணி மார்பர்
போலும் அழைத்தார் எனத் துணிந்து. 338
பாதிமதி வாழ் முடியாரைப் பயில்
பூசனையின் பணி புரிவார்
பாதி இரவில் இங்கு அணைந்தது
என்னோ என்று பயம் எய்திப்
பாதி உமையாள் திரு வடிவில்
பரமர் ஆவது அறியாதே
பாதிமதி வாண் நுதலாரும் பதைத்து
வந்து கடை திறந்தார். 339
மன்னும் உரிமை வன் தொண்டர்
வாயில் தூதா வாயில் இடை
முன் நின்றாரைக் கண்டு இறைஞ்சி
முழுதும் உறங்கும் பொழுதின் கண்
என்னை ஆளும் பெரு மான்
இங்கு எய்தி அருளினார் என்ன
மின்னும் மணி நூல் அணிமார்பீர்
எய்த வேண்டிற்று என் என்றார். 340
கங்கைநீர் கரந்த வேணி கரந்
தவர் அருளிச் செய்வார்
நங்கைநீ மாறாது செய்யின் நான்
வந்து உரைப்பது என்ன
அங்கயல் விழியி னாரும் அதனை
நீர் அருளிச் செய்தால்
இங்கு எனக்கு இசையும் ஆகில்
இசையலாம் என்று சொல்லி. 341
என் நினைந்து அணைந்து என்பால்
இன்னது என்றுஅருளிச் செய்தால்
பின்னை அதியலும் ஆகில் ஆம்
எனப் பிரானார் தாமும்
மின்னிடை மடவாய் நம்பி வர
இங்கு வேண்டும் என்ன
நன் நுதலாரும் சால நன்று
நம் பெருமை என்பார். 342
பங்குனித் திருநாளுக்குப் பண்டு
போல் வருவார் ஆகி
இங்கு எனைப் பிரிந்து போகி
ஒற்றியூர் எய்தி அங்கே
சங்கிலித் தொடக்கு உண்டா ருக்கு
இங்கு ஒருசார்வு உண்டோநீர்
கங்கு லின் வந்து சொன்ன
காரியம் அழகிது என்றார். 343
நாதரும் அதனைக் கேட்டு நங்கை
நீ நம்பி செய்த
ஏதங்கள் மனத்துக் கொள் ளாது
எய்திய வெகுளி நீங்கி
நோதக ஒழித்தற்கு அன்றே நுன்னை
யான் வேண்டிக் கொண்டது
ஆதலின் மறுத்தல் செய்ய அடாது
என அருளிச் செய்தார். 344
அரு மறை முனிவரான ஐயரைத்
தைய லார் தாம்
கருமம் ஈதாக நீர்இக் கடைத்
தலை வருகை மற்(று)உம்
பெரு மைக்குத் தகுவது அன்றால்
ஒற்றியூர் உறுதி பெற்றார்
வருவதற்கு இசையேன் நீரும் போம்
என மறுத்துச் சொன்னார். 345
நம்பர் தாம் அதனைக் கேட்டு
நகையும் உட்கொண்டு மெய்ம்மைத்
தம்பரிசு அறியக் காட்டார் தனிப்
பெரும் தோழனார் தம்
வெம்புறு வேட்கை காணும் திரு
விளை யாட்டின் மேவி
வம்பலர் குழலினார் தாம் மறுத்
ததே கொண்டு மீண்டார். 346
தூதரைப் போக விட்டு வரவு
பார்த் திருந்த தொண்டர்
நாதரை அறி விலாதே நன்
நுதல் புலவி நீக்கிப்
போதரத் தொழுதேன் என்று புலம்
புவார் பரவை யாரைக்
காதலில் இசைவு கொண்டு வருவதே
கருத்து உட் கொள்வார். 347
போய் அவள் மனையில் நண்ணும்
புண்ணியர் என் செய்தாரோ
நாயனார் தம்மைக் கண்டால் நன்
நுதல் மறுக்குமோ தான்
ஆயஎன் அயர்வு தன்னை அறிந்து
எழுந்து அருளினார் தாம்
சேயிழை துனி நீர்த்து அன்றி
மீள்வது செய்யார் என்று. 348
வழி எதிர் கொள்ளச் செல்வர்
வரவு காணாது மீள்வர்
அழிவுற மயங்கி நிற்பர் அசை
வுடன் இருப்பர் நெற்றி
விழி யவர் தாழ்த்தார் என்று
மீளவும் எழுவர் மாரன்
பொழி மலர் மாரி வீழ
ஒதுங்குவார் புன்கண் உற்றார். 349
பரவை யார் தம்பால் நம்பி
தூதராம் பாங்கில் போன
அரவணி சடையார் மீண்டே அறியும்
மாறு அணையும் போதில்
இரவும்தான் பகலாய் தோன்ற எதிர்
எழுந்து அணையை விட்ட
உரவு நீர் வெள்ளம் போல
ஓங்கிய களிப்பில் சென்றார். 350
சென்று தம் பிரானைத் தாழ்ந்து
திருமுகம் முறுவல் செய்ய
ஒன்றிய விளையாட்டு ஓரார் உறுதி
செய்து அணைந்தார் என்றே
அன்று நீர் ஆண்டு கொண்ட
அதனுக்குத் தகவே செய்தீர்
இன்று இவள் வெகுளி எல்லாம்
தீர்த்து எழுந்து அருளிஎன்றார். 351
அம் மொழி விளம்பும் நம்பிக்கையர்
தாம் அருளிச் செய்வார்
நம்மை நீ சொல்ல நாம்போய்ப்
பரவைதம் இல்லம் நண்ணிக்
கொம்மை வெம் முலை யினாட்க்கு
உன்திறம் எலாம் கூறக் கொள்ளாள்
வெம்மை தான் சொல்லி நாமே
வேண்டவும் மறுத்தாள் என்றார். 352
அண் ணலார் அருளிச் செய்யக்
கேட்ட ஆரூரர் தாமும்
துண்ணென நடுக்கம் உற்றே தொழுது
நீர் அருளிச் செய்த
வண்ணமும் அடி யாள் ஆன
பரவையோ மறுப்பாள் நாங்கள்
எண்ண ஆர் அடிமைக்கு என்பது
இன்று அறிவித்தீர் என்று. 353
வானவர் உய்ய வேண்டி மறி
கடல் நஞ்சை உண்டீர்
தானவர் புரங்கள் வேவ மூவரைத்
தவிர்த்து ஆட் கொண்டீர்
நான் மறைச் சிறுவர்க்காக காலனைக் காய்ந்து நட்டீர்
யான் மிகை உமக்கு இன்று ஆனால் என் செய்வீர் போதா என்றார். 354
ஆவதே செய்தீர் இன்று என்
அடிமை வேண்டா விட்டால்
பாவி யேன் தன்னை அன்றுவலிய
ஆள் கொண்டபற்று என்
நோவும் என்அழிவும் கண்டீர் நுடங்கு
இடை அவள்பால் இன்று
மேவுதல் செய்யீர் ஆகில் விடும்
உயிர் என்று வீழ்ந்தார். 355
தம்பி ரான் அதனைக் கண்டு
தரியாது தளர்ந்து வீழ்ந்த
நம்பியை அருளால்நோக்கி நாம் இன்னம்
அவள் பால்போய் அக்
கொம் பினை இப்போதே நீ
குறுகுமா கூறு கின்றோம்
வெம்புறு துயர் நீங்கு என்றார்வினை
எல்லாம் விளைக்க வல்லார். 356
மயங்கிய நண்பர் உய்ய வாக்கு
எனும் மதுர வாய்மை
நயம் கிளர் அமுதம் நல்க
நாவலூர் மன்னர் தாமும்
முயங்கிய கலக்கம் நீக்கி உம்
அடித் தொழும்பன் ஏனைப்
பயம் கெடுத்து இவ்வாறு அன்றோபணி
கொள்வது என்று போற்ற. 357
அன்பர் மேல் கருணை கூர
ஆண்டவர் மீண்டும் செல்லப்
பின்பு சென்று இறைஞ்சி நம்பி
பேதுற வோடு மீண்டார்
முன்பு உடன் போதா தாரும்
முறைமையில் சேவித்து ஏகப்
பொன்புரி சடையார் மாதர் புனித
மாளி கையில் சென்றார். 358
மதி நுதல் பரவையார் தாம்
மறை யவர் போனபின்பு
முதிர் மறை முனியாய் வந்தார்
அருள்உடை முதல்வர் ஆகும்
அதி சயம் பலவும் தோன்ற
அறிவுற்றே அஞ்சிக் கெட்டேன்
எதிர்மொழி எம்பிரான் முன் என்
செய மறுத்தேன் என்பார். 359
கண்துயில் எய்தார் வெய்யகை யறவு
எய்தி ஈங்கு இன்று
அண்டர் தம்பி ரானார் தோழர்க்கு
ஆக அர்ச்சிப்பார் கோலம்
கொண்டு அணைந்த வரையான் உட்
கொண்டிலேன் பாவியேன் என்று
ஒண்சுடர் வாயிலே பார்த்து உழைய
ரோடு அழியும் போதில். 360
வெறி யுறு கொன்றை வேணி
விமலரும் தாமாம் தன்மை
அறிவுறு கோலத் தோடும் அளவில்
பல் பூத நாதர்
செறிவுறு தேவர் யோக முனி
வர்கள் சூழ்ந்து செல்ல
மறுவில் சீர் பரவையார் தம்
மாளிகை புகுந்தார் வந்து. 361
பாரிடத் தலைவர் முன்னாம் பல்
கண நாதர் தேவர்
நேர் வுறு முனிவர் சித்தர்
இயக் கர்கள் நிறைதலாலே
பேரரு ளாளர் எய்தப் பெற்ற
மாளி கைதான் தென்பால்
சீர் வளர் கயிலை வெள்ளித்
திருமலை போன்றது அன்றே. 362
ஐயர் அங்கு அணைந்த போதில்
அகில லோகத்து உள்ளாரும்
எய்தியே செறிந்து சூழ எதிர்
கொண்ட பரவையார் தாம்
மெய்யுறு நடுக்கத் தோடு மிக்கு
எழும் மகிழ்ச்சி பொங்கச்
செய்யதாள் இணை முன் சேர
விரைவினால் சென்று வீழ்ந்தார். 363
அரி அயற்கு அரியர் தாமும்
ஆயிழையாரை நோக்கி
உரிமையால் ஊரன் ஏவ மீளவும்
உன் பால் வந்தோம்
முருகலர் குழலாய் இன்னம் முன்பு
போல் மறாதே நின்பால்
பிரிவுற வருந்து கின்றான் வரப்
பெற வேண்டும் என்றார். 364
பெரும் தடம் கண்ணினாரும் பிரான்
முன்பு மிகவும் அஞ்சி
வருந்திய உள்ளத் தோடு மலர்க்கரம்
குழல் மேல் கொண்டே
அரும்திரு மறையோர் ஆகி அணைந்தீர்
முன் அடியேன் செய்த
இரும் தவப் பயனாம் என்ன
எய்திய நீரோ என்பார். 365
துளிவளர் கண்ணீர் வாரத் தொழுது
விண் ணப்பம் செய்வார்
ஒளிவளர் செய்ய பாதம் வருந்த
ஓர் இரவு மாறாது
அளி வரும் அன்பர்க்காக அங்கு
ஒடிங்கி உழல் வீராகி
எளி வருவீரும் ஆனால் என்செய்
கேன் இசையாது என்றார். 366
நங்கை நின் தன்மைக்கு ஏற்கும்
நன்மையே மொழிந்தாய் என்று
மங்கை யோர் பாகம் வைத்த
வள்ளலார் விரைந்து போக
திங்கள் வாள் நுதலினாரும் சென்று
பின்இறைஞ்சி மீண்டார்
எங்களை ஆளும் நம்பி தூதர்
மீண்டு ஏகு கின்றார். 367
ஆதியும் மேலும் மா லயன்
நாடற்கு அருளாதார்
தூதினில் ஏகித் தொண் டரை
ஆளும் தொழில் கண்டே
வீதியில் ஆடிப் பாடி
மகிழ்ந்தே மிடை கின்றார்
பூதியில் நீடும் பல் கண
நாதப் புகழ் வீரர். 368
அன் னவர் முன்னும் பின்னும்
மருங்கும் அணைவு எய்த
மின் இடையார் பால் அன்பரை
உய்க்கும் விரை வோடும்
சென் னியில் நீடும் கங்கை
ததும்ப திரு வாரூர்
மன்ன வனார் அம்மறைய வனார்
பால் வந் துற்றார். 369
அன் பரும் என்பால் ஆவி
அளிக்கும் படி போனார்
என் செய்து மீள்வார் இன்னமும்
என்றே இடர் கூரப்
பொன் புரி முந்நூல் மார்பினர்
செல்லப் பொலி வீதி
முன்புற நேரும் கண் இணை
தானும் முகி ழாரால். 370
அந் நிலைமைக் கண் மன்மதன்
வாளிக்கு அழிவார் தம்
மன் உயிர் நல்கும் தம்
பெருமானார் வந்து எய்த
முன் எதிர் சென்றே மூவுலகும்
சென்று அடையும் தாள்
சென்னியில் வைத்து என் சொல்
லுவார் என்றே தெளியாதார். 371
எம் பெருமான் நீர் என் உயிர்
காவாது இடர் செய்யும்
கொம்பு அனையாள் பால் என்
கொடுவந்தீர் குறை என்னத்
தம் பெருமானும் தாழ் குழல்
செற்றம் தணி வித்தோம்
நம்பி இனிப்போய் மற்று அவள்
தன்பால் நணுகு என்ன. 372
நந்தி பிரானார் வந்து அருள்
செய்ய நலம் எய்தும்
சிந்தையுள் ஆர்வம் கூர் களி
எய்தித் திகழ் கின்றார்
பந்தமும் வீடும் நீர் அருள்
செய்யும் படி செய்தீர்
எந்தை பிரானே என் இனி
என்பால் இடர் என்றார். 373
என்று அடி வீழும் நண்பர்தம்
அன்புக்கு எளிவந்தார்
சென்று அணை நீ அச்சேஇழை
பால் என்று அருள்செய்து
வென்று உயர் சேமேல் வீதி
விடங்கப் பெருமாள் தம்
பொன் திகழ் வாயில் கோயில்
புகுந்தார் புவி வாழ. 374
தம்பிரான் ஆனார்பின் சென்று தாழ்ந்து
எழுந்து அருளால் மீள்வார்
எம்பி ரான் வல்லவாறு என்று
எய்திய மகிழ்ச்சி யோடும்
வம் பலர் குழலார் செம்பொன்
மாளிகை வாயில் நோக்கி
நம்பி ஆரூரர் காதல் நயந்து
எழுந்து அருளும் போது. 375
முன் துயில் உணர்ந்து சூழ்ந்த
பரிசனம் மருங்கு மொய்ப்ப
மின் திகழ் பொலம் பூமாரி
விண்ணவர் பொழிந்து வாழ்த்த
மன்றல் செய் மதுர சீதம்
சீகரம் கொண்டு மந்தத்
தென்றலும் எதிர் கொண்டு எய்தும்
சேவகம் முன்பு காட்ட. 376
மாலை தண் கலவைச் சேறுமான்
மதச் சாந்து பொங்கும்
கோல நல் பசும் கர்ப்பூரம்
குங்குமம் முதலாய் உள்ள
சாலும் மெய்க் கலன்கள் கூடச்
சாத்தும் பூண் ஆடைவர்க்கம்
பால னம் பிறவும் ஏந்தும்
பரிசனம் முன்பு செல்ல. 377
இவ்வகை இவர் வந்து எய்த
எய்திய விருப் பினோடும்
மை வளர் நெடுங் கணாரும்
மாளிகை அடைய மன்னும்
செய்வினை அலங்காரத்துச் சிறப்பு
அணி பலவும் செய்து
நெய்வளர் விளக்குத் தூபம் நிறை
குடம் நிரைத்துப் பின்னும். 378
பூமலி நறும் பொன் தாமம்புனை
மணிக் கோவை நாற்றிக்
காமர் பொன் சுண்ணம் வீசிக்
கமழ்நறும் சாந்து நீவித்
தூ மலர் வீதி சூழ்ந்த
தோகையர் வாழ்த் தத்தாமும்
மாமணி வாயில் முன்பு வந்து
எதிர் ஏற்று நின்றார். 379
வண்டு லாம் குழலார் முன்பு
வன்தொண்டர் வந்து கூடக்
கண்ட போது உள்ளம் காதல்
வெள்ளத்தின் கரை காணாது
கொண்ட நாண் அச்சம் கூர
வணங்க அக் குரிசிலாரும்
தண் தளிர் செங்கை பற்றிக்
கொண்டு மாளிகையுள் சாந்தார். 380
இருவரும் தம் பிரானார் தாம்
இடை ஆடிச் செய்த
திரு அருள் கருணை வெள்ளத்
திறத்தினைப் போற்றிச் சிந்தை
மருவிய இன்ப வெள் ளத்து
அழுந்திய புணர்ச் சிவாய்ப்ப
ஒருவருள் ஒருவர் மேவும் நிலைமையில்
உயிர் ஒன்று ஆனார். 381
ஆரணக் கமலக் கோயில் மேவிப்
புற்றிடங் கொண்டு ஆண்ட
நீரணி வேணி யாரை நிரந்
தரம் பணிந்து போற்றி
பாரணி விளக்கும் செஞ் சொல்
பதிக மாலைகளும் சாத்தி
தாரணி மணிப்பூண் மார்பர் தாம்
மகிழ்ந்து இருந்த நாளில். 382
நம்பி ஆரூரர் நெஞ்சில் நடுக்கம்
ஒன்று இன்றி நின்று
தம் பிரானாரைத் தூது தையல்
பால் விட்டார் என்னும்
இம்பரின் மிக்க வார்த்தை ஏயர்
கோனார் தாம் கேட்டு
வெம்பினார் அதி சயித்தார் வெரு
வினார் விளம்பல் உற்றார். 383
நாயனை அடி யான் ஏவும்
காரியம் நன்று சால
ஏயும் என்று இதனைச் செய்வான்
தொண்டனாம் என்னே பாவம்
பேயனேன் பொறுக்க ஒண்ணாப் பிழை
யினைச் செவியால் கேட்பது
ஆயின பின்னும் மாயாது இருந்தது
என் ஆவி என்பார். 384
காரிகை தன் பால் செல்லும்
காதலால் ஒருவன் ஏவப்
பாரிடை நடந்து செய்ய பாத
தாம ரைகள் நோவத்
தேரணி வீதி யூடு செல்வது
வரு வது ஆகி
ஓரிரவு எல்லாம் தூதுக்கு உழல்
வராம் ஒருவர் என்று. 385
நம்பர் தாம் அடிமை ஆற்றார்
ஆகியே நண் ணினாரேல்
உம்பரார் கோனும் மாலும் அயனும்
நேர் உணர ஒண்ணா
எம் பிரான் இசைந்தால் ஏவப்
பெறுவதே இதனுக்கு உள்ளம்
கம்பியாது அவனை யான் முன்காணும்
நாள் எந்நாள் என்று. 386
அரிவை காரணத் தினாலே
ஆளுடைப் பரமர் தம்மை
இரவினில் தூது போக ஏவி
அங்கு இருந்தான் தன்னை
வரவுஎதிர் காண்பேன் ஆகில் வருவது
என்னாம் கொல் என்று
விரவிய செற்றம் பற்றி விள்ளும்
உள்ளத் தர் ஆகி. 387
ஈறிலாப் புகழின் ஓங்கும் ஏயர்
கோன்ஆர் தாம் எண்ணிப்
பேறிது பெற்றார் கேட்டுப் பிழை
உடன் படுவார் ஆகி
வேறினி இதற்குத் தீர்வு வேண்
டுவார் விரிபூங் கொன்றை
ஆறிடு சடைய னாருக்கு அதனை
விண் ணப்பம் செய்து. 388
நாள் தொறும் பணிந்து போற்ற
நாதரும் அதனை நோக்கி
நீடிய தொண்டர் தம் முள்
இருவரும் மேவும் நீர்மை
கூடுதல் புரிவார் ஏயர் குரி
சிலார் தம்பால் மேனி
வாடுறும் சூலை தன்னை அருளி
னார் வருந்தும் ஆற்றால். 389
ஏதமில் பெருமைச் செய்கை ஏயர்தம்
பெரு மான் பக்கல்
ஆதியார் ஏவும் சூலை அனல்செய்
வேல் குடைவது என்ன
வேதனை மேல் மேல் செய்ய மிக
அதற்கு உடைந்து வீழ்ந்து
பூதநாயகர் தம் பொன் தாள்
பற்றியே போற்று கின்றார். 390
சிந்தையால் வாக்கால் அன்பர் திருந்து
அடி போற்றி செய்ய
எந்தமை யாளும் ஏயர் காவலர்
தம் பால் ஈசர்
வந் துனை வருத்தும் சூலைவன்
தொண்டன் தீர்கில் அன்றி
முந்துற ஒழியாது என்று மொழிந்து
அருள் செய்யக் கேட்டு. 391
எம்பிரான் எந்தை தந்தை தந்தை
எங் கூட்டம் எல்லாம்
தம்பிரான் நீரே என்று வழி
வழி சார்ந்து வாழும்
இம்பரின் மிக்க வாழ்க்கை என்னை
நின்று ஈரும் சூலை
வம்பு என ஆண்டுக் கொண்டான்
ஒருவனே தீர்ப்பான் வந்து. 392
மற்றவன் தீர்க்கில் தீராது ஒழிந்து
எனை வருத்தல் நன்றால்
பெற்றம் மேல் உயர்த்தீர் செய்யும்
பெருமையை அறிந்தார் யாரே
உற் றவன் தொண்டற்கே ஆம்
உறுதியே செய்தீர் என்னக்
கற்றைவார் சடையார் தாமும் அவர்
முன்பு கரந்தார் அன்றே. 393
வன் தொண்டர் தம்பால் சென்று
வள்ளலார் அருளிச் செய்வார்
இன்று நம் ஏவலாலே ஏயர்
கோன் உற்ற சூலை
சென்று நீ தீர்ப்பாய் ஆகஎன்று
அருள் செயச் சிந்தையோடு
நன்று மெய்ம் மகிழ்ந்து போற்றி
வணங்கினார் நாவல் ஊரர். 394
அண் ணலார் அருளிச் செய்து
நீங்க ஆரூரர் தாமும்
விண்ணவர் தம்பிரான் ஆர் ஏவ
லால் விரைந்து செல்வார்
கண்ணிய மனத் தின் மேவும்
காதலால் கலிக் காமர்க்குத்
திண்ணிய சூலை தீர்க்க வரு
திறம் செப்பி விட்டார். 395
நாதர் தம் அருளால் நண்ணும்
சூலையும் அவர்பால் கேட்ட
கேதமும் வருத்த மீண்டும் வன்
தொண்டர் வரவும் கேட்டு
தூத னாய் எம்பிரானை ஏவி
னான் சூலை தீர்க்கும்
ஏதம் இங்கு எய்தஎய்தில் யான்
செய்வது என்னாம் என்பார். 396
மற்றவன் இங்கு வந்து தீர்பதன்
முன் நான் மாயப்
பற்றி நின்று என்னை நீங்காப்
பாதகச் சூலை தன்னை
உற்ற இவ் வயிற்றினோடும் கிழிப்பன்
என்று உடைவாள் தன்னால்
செற்றிட உயிரி னோடும் சூலையும்
தீர்ந் தது அன்றே. 397
கரு தரும் பெருமை நீர்மைக்
கலிக் காமர் தேவியாரும்
பொரு வரும் கணவரோடு போ
வது புரியும் காலை
மருவி இங்கு அணைந்தார் நம்பி
என்று முன்வந்தார் கூற
ஒருவரும் அழுதல் செய்யாது ஒழிக
என்று உரைத்துப் பின்னும். 398
கணவர் தம் செய்கை தன்னைக்
கரந்து காவலரை நம்பி
அணைவுறும் பொழுது சால அலங்கரித்து
எதிர் போம் என்னப்
புணர் நிலை வாயில் தீபம்
பூரண கும்பம் வைத்துத்
துணர் மலர் மாலை தூக்கித்தொழுது
எதிர் கொள்ளச் சென்றார். 399
செம்மை சேர்சிந்தை மாந்தர் சென்று
எதிர் கொண்டு போற்ற
நம்மை ஆளுடைய நம்பி நகை
முகம் அவர்க்கு நல்கி
மெய்மையாம் விருப்பின் னோடும் மேவி
உள் புகுந்து மிக்க
மொய்ம் மலர்த் தவிசின் மீது
முகம் மலர்ந்து இருந்தபோது. 400
பான்மை அர்ச் சனைகள் எல்லாம்
பண்பினில் வழாமை ஏய்ந்த
நான்மறை தொடர்ந்த வாய்மை நம்பி
ஆரூரர் கொண்டு இங்கு
யான் மிகவருந்து கின்றேன் ஏயர்
கோனார் தாம் உற்ற
ஊன வெஞ்சூலை நீங்கி உடன்
இருப் பதனுக்கு என்றார். 401
மாதர்தம் ஏவலாலே மனைத் தொழில்
மாக்கள் மற்று இங்கு
ஏதம் ஒன்று இல்லை உள்ளே
பள்ளி கொள்கின்றார் என்னத்
தீது அணைவில்லையேனும் என்
மனம் தெருளாது இன்னம்
ஆதலால் அவரைக் காண வேண்டும்
என்று அருளிச் செய்தார். 402
வன் தொண்டர் பின்னும் கூற
மற்றவர் தம்மைக் காட்டத்
துன்றிய குருதி சோரத் தொடர்
குடர் சொரிந்து உள்ளாவி
பொன் றியே கிடந்தார் தம்மைக்
கண்ட பின் புகுந்தவாறு
நன்றுஎன மொழிந்து நானும் நண்ணுவேன்
இவர் முன்பு என்பார். 403
கோளுறு மனத்தர் ஆகிக் குற்று
உடை வாளைப் பற்ற
ஆளுடைத் தம்பி ரானார் அருளி
னால் அவரும் உய்ந்து
கேளிரே ஆகிக் கெட்டேன் என
விரைந்து எழுந்து கையில்
வாளினைப் பிடித்துக் கொள்ள வன்
தொண்டர் வணங்கி வீழ்ந்தார். 404
மற்றவர் வணங்கி வீழ வா
ளினை மாற்றி ஏயர்
கொற்ற வனாரும் நம்பி குரை
கழல் பணிந்து வீழ்ந்தார்
அற்றை நாள் நிகழ்ந்த இந்த
அதிசயம் கண்டு வானோர்
பொன்தட மலரின் மாரி பொழிந்
தனர் புவனம் போற்ற. 405
இருவரும் எழுந்து புல்லி இடை
விடா நண்பினாலே
பொரு வரும் மகிழ்ச்சி பொங்கத்
திருபுன்கூர் புனிதர் பாதம்
மருவினர் போற்றி நின்று வன்
தொண்டர் தம்பி ரானார்
அருளினை நினைந்தே அந்த ணாளன்
என்று எடுத்து பாடி. 406
சிலபகல் கழிந்த பின்பு திரு
முனைப் பாடி நாடர்
மலர் புகழ்த் திருவாரூரில் மகிழ்ந்
துடன் வந்த ஏயர்
குல முதல் தலைவனாரும் கூடவே
குளிர் பூங் கோயில்
நிலவினார் தம்மைக் கும்பிட்டு உறைந்
தனர் நிறைந்த அன்பால். 407
அங்கு இனிது அமர்ந்து நம்பி
அருளினால் மீண்டும் போந்து
பொங்கிய திருவின் மிக்க தம்
பதி புகுந்து பொற்பில்
தங்கு நாள் ஏயர்கோனார் தமக்கு
ஏற்ற தொண்டு செய்தே
செங்கண் மால் விடையார் பாதம்
சேர்ந்தனர் சிறப் பினோடும். 408
நள்ளிருள் நாய னாரைத் தூது
விட்டு அவர்க்கே நண்பாம்
வள்ளலார் ஏயர் கோனார் மலர்
அடி வணங் கிப்புக்கேன்
உள்ளு ணர்வான ஞானம் முதலிய
ஒரு நான்கு உண்மை
தெள்ளு தீந்தமிழால் கூறும் திரு
மூலர் பெருமை செப்ப. 409
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : சேக்கிழார்
திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை
பண் :
நாடு :
தலம் :
சிறப்பு: திருத்தொண்டர் புராணம் - இரண்டாம் காண்டம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்