logo

|

Home >

hindu-hub >

temples

கடம்பந்துறை (கடம்பர் கோயில், குழித்தலை - குளித்தலை)

இறைவர் திருப்பெயர்: கடம்பவனேஸ்வரர், கடம்பவனநாதர்.

இறைவியார் திருப்பெயர்: பாலகுஜாம்பாள், முற்றிலாமுலையாள்.

தல மரம்:

தீர்த்தம் : காவிரி.

வழிபட்டோர்:அப்பர், சேக்கிழார் முதலியோர்

Sthala Puranam

 

kadambandturai temple

தற்போது மக்கள் வழக்கில் குழித்தலை, குளித்தலை என வழங்கப்படுகிறது. கல்வெட்டில் இவ்வூர் 'குளிர் தண்டலை ' என்று காணப்படுகிறது.

 

பொன்னியின் குளிர்ந்த அலைகள் கரையை மோதி நீர்த்திவிலைகளை காற்றில் மிதக்க விட்டு மேலும் குளிர்ச்சியை உண்டாக்குகின்றன. அதனால் இந்த இடத்திற்கு குளிர்தண்அலை என்றும், குழித்த சோலைகளை உடையதால் குழித்தண்டலை என்றும், கடம்ப மரங்கள் நிறைந்து இடமாக இருந்ததால் கடம்பந்துறை, கடம்பை, கடம்பவனம், கடம்பர்கோயில் என்றும், தமிழ்நாட்டில் காவிரிக் கரையில் வடக்கு பார்த்த சன்னதி கொண்ட ஒரே தலமான படியால் தக்ஷிணகாசி என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது.

  • கண்வ முனிவருக்கு இறைவன் கடம்ப மரத்தில் காட்சி தந்த தலம்.

 

  • சப்தகன்னிகைகளின் பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியான தலம்.

ஒரு நாள் சிவன் முருகனை அழைத்து, “குழந்தாய், அன்று பிரணவத்தின் பொருள் உரைத்தாயே, அதை யாரிடம் நீ கற்றாய்?” என்று கேட்கிறார். முருகன் பூர்வத்திலே சிவன் உமைக்கு பிரணவப் பொருள் உரைக்கும் பொழுது மறைந்து கேட்ட குற்றத்தை உணர்கிறார். உடனே மோனியாகி விடுகிறார். இம்மோனம் நீங்கி ஞானம் பெற்று, அம்மை அப்பனின் பிரியத்தைப் பெற்று அவர்கள் இடையே சோமாஸ்கந்தராக அமைதியுடன் அமருகிறார் இத்தலத்தில். இதன் காரணமாக இத்தலம் கந்தபுரி என்றும், ஞானோதயபுரி என்றும் பெயர் பெறுகிறது.

சோமகன் என்ற அரக்கன் நான்கு மறைகளையும் களவாடி பாதாளம் சென்று மறைகிறான். உலகோர் பிரார்த்தனைக் கிணங்கி நாராயணன் இத்தலத்தை அடைத்து இறைவனைப் பூசித்து அவனருளால் மச்சாவதாரம் எடுத்து, அரக்கனை வதைத்து, நான்மறைகளை மீட்டு, இத்தலத்து இறைவனடியில் சமர்ப்பித்து, மீண்டும் உலகோர்க்கு அளிக்கிறார். இது காரணமாக இத்தலம் சப்தபுரி என்றும் சதுர்வேதபுரி என்றும் பெயர் பெறுகிறது.

தேவசர்மா என்ற பாபி, தன் துன்பம் தாங்கமுடியாமல், இன்பம் பெறும்பொருட்டு, பல தலங்களைத் தரிசித்து இத்தலத்தை அடைந்து, இங்கு இறைவன் இறைவியைப் பூசித்து வந்த அகத்திய முனிவருக்கு பசுவைத் தானம் செய்கிறான். அப்பசுவின் பஞ்சகவ்யத்தால் இருவரும் இறைவனையும், இறைவியையும் அபிஷேகித்து, ஆராதனை செய்து இறைவனை நேரில் காண்கின்றனர். தேவசர்மா வேதசர்மாவாகிறான். அவன் பிரார்த்தனைக்கிணங்க இறைவனும், இறைவியும் மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கல்யாணக் காட்சியை அளிக்கின்றனர். இத்தலம் வடமதுரை என்ற பெயரைப் பெறுகிறது.

சப்தமாதர்களால் துரத்தப்பட்ட தூம்ரலோசனன் என்ற அரக்கன் காத்யாயன மகரிஷி ஆச்ரமமடைந்து மறைந்து கொள்கிறான். அங்கு தவம் செய்து கொண்டிருக்கும் காத்யாவன ரிஷியை அரக்கன் என்று நினைத்து, அவரை சப்தமாதர்கள் அழித்து விடுகின்றனர். இத்தவறினால் அவர்களை பிரும்மஹத்தி தோஷம் பீடிக்கிறது. இத்தோஷம் நீங்க, இத்தலத்தை அடைந்து, தினமும் காவிரியில் நீராடி, இறைவன், இறைவி பரிவார தேவதைகளை வணங்கி வழிபட்டு, பலன் பெறுகின்றனர். அன்று முதல் இன்றும் இறைவன் சன்னதியில் அவருக்குப்பின் நின்றுகொண்டு சதாகாலமும் அவரை வழிபடுவதைக் காணலாம் இது காரணமாக இத்தலம் சத்தியபுரியாகிறது.

பிரமன் தன் படைப்புத் தொழிலில் அலுப்புக்கொள்கிறான். அரனிடம் தனக்கு இனிப் பிறவா வரம் வேண்டுகிறான். அரனோ தான் பூவுலகில் அகண்ட காவிரிக் கரையில் ஒரு புறம் சத்துவடிவமான மலையாகவும், ஒரு புறம் சித்துவடிவான மலையாகவும், இடையில் காவிரியில் தென்கரையில் ஆனந்த வடிவமாக அருளாட்சி செய்யும் இடத்தில் தன்னை அடைந்து, காவிரி நீர்கொண்டு அபிஷேக ஆராதனை செய்ய ஆக்ஞாபிக்க, பிரமனும் இத்தலத்தை அடைந்து பூசனை புரிந்து, அரனுக்கும், அம்மைக்கும், பரிவார தெய்வங்களுக்கும் ஆலயம் எழுப்பி, அக்னி மூலையில் அக்னி தீர்த்தம் உண்டாக்கி, நித்திய பூசனைகளைச் செய்து இறைவனுடன் இரண்டறக் கலக்கிறான். அதனால் இத்தலம் பிரம்புரி என்ற பெயர் பெறுகிறது.

நைமிசாரண்யத்தில் சௌனகாதி ரிஷிகள் சத்திர யாகம் செய்து சிவபெருமானை நோக்கி அருந்தவம் செய்து கொண்டிருந்தனர்.அப்போது சூத முனிவர் அங்கு எழுந்தருளினார். அவரை வணங்கிய பிற முனிவர்கள், ஒப்பில்லாத கடம்பவன மகாத்மியத்தை எடுத்துரைக்குமாறு விண்ணப்பித்தனர். அதற்கிசைந்து, சூத முனிவரும் அதனைக் கூறலானார். முன்னம் ஒரு கற்ப காலத்தில், பிரம தேவனானவர் தான் ஓய்வின்றி சிருஷ்டித் தொழிலைச் செய்து வருதலால் மனம் வருந்தி, சிவபெருமானை வந்தித்துச் சிவானந்தப் பெரு வாழ்வு பெற வேண்டிக் கயிலை மலையை அடைந்து தனது உள்ளக் கருத்தைச் சிவபிரானிடம் விண்ணப்பித்தார். பிரமனது தோத்திரத்தால் மகிழ்ந்த இறைவன், பிரமனைத் தவம் செய்யுமாறு அருளவே, அதற்கான இடம் கடம்பந்துறை என்றும் திருவாய் மலர்ந்தருளினான். 

திருவருளை எண்ணி மகிழ்ந்த பிரமன், பல்வேறு தலங்களை வணங்கிப் பின் கடம்பவனத்தை அடைந்து, காவிரியில் நீராடி, கடம்ப மர  நிழலில் பல்லாண்டுகள் தவம் புரிந்தான் . அதன் பலனாக, கடம்பவனநாதன் பிரமனுக்குக் காட்சி அளித்து, தனது திருக் கரங்களை  அவனது முடி மேல் வைத்து, " காவிரியை நோக்கி வட திசை நோக்கி இருக்கும் மகாலிங்கத்தில் நாம் எழுந்தருளி, உமாதேவியுடன் ஐந்தொழில் நடனங்கள் செய்து வருவதால் இங்கு நம்மை வழிபடும் அனைவரும் தாம் விரும்பிய அனைத்தையும் பெறுவர். அக்கினித் திக்கில் உள்ள தீர்த்தத்தைச் சீர் செய்து, கிழக்கு நோக்கியவாறு ஒரு சன்னதியை உமா தேவிக்கும் அமைத்துச்  சித்திரை மாத சித்திரை நட்சத்திரத்தில் தீர்த்தோற்சவமும் செய்வித்துப் பின்னர் சாயுச்சிய பதவியை அடைவாயாக " என்று அருளி, அம்மகாலிங்கத்தில்  மறைந்தருளினார். அதன்படியே பிரமனும் திருவிழா நடத்திப் பின்பு சிவானந்தம் பெற்றான். 
 

முன்னொரு காலத்தில் தூம்ர லோசனன் என்ற அசுரன் துர்க்கா தேவியைப் போரிட்டு எதிர்த்தான். அசுரனது கணைகளால் தேவியானவள்  சோர்வுற்றபோது சப்த கன்னியர்கள் அசுரனைக் கோபாவேசத்துடன் போரிட்டனர். அவர்களை எதிர்க்க இயலாத அசுரன் புறம்காட்டி ஓடி, சூரியனை நோக்கித் தவம் புரியும் காத்யாயன முனிவரது ஆசிரமத்திற்குச் சென்று ஒளிந்திருந்தான். அரக்கனைத் தேடி வந்த சப்த மாதர் அங்குத் தவம் புரியும் முனிவரே அசுரனது மாயை எனக் கருதி, அவரைக் கொன்றனர். அதனால் அவர்களைப் பிரமஹத்தி தோஷம் பற்றியது. அதனைப் போக்கிக் கொள்ள வேண்டி அக்கன்னியர்கள் பல சிவத்தலங்களையும் தரிசித்து விட்டுக்  கடம்பவனத்தை அடைந்தவுடன்   அத்தோஷம் அவர்களை நீங்கியது. ஒருமுறை அகத்திய முனிவர் இங்குத் தவம் செய்வதைக் கண்ட மற்ற முனிவர்கள் அவரை வணங்கி, " இத் தலத்தைத் தரிசித்துக் கபிலைப் பசுவை தானம் செய்வது சிறப்பு " என்கிரார்களே, அதன் மகிமையைத்  தேவரீர் விளக்கி அருளவேண்டும் என்று வேண்ட,அகத்தியரும் கபிலை மான்மியத்தை எடுத்து உரைத்தார். 

கபிலைப் பசுவானது பருத்த கண்களும்,சிவந்த உரோமமும் கொண்டது. அக்னி சம்பந் தப்பட்டது. ஆகவே ஆக்னேயி எனப்பட்டது.  அதன் பால்,தயிர் போன்றவற்றை உட்கொள்ளலாகாது.ஆனால் பஞ்சகவ்யத்தை உண்டால் அஸ்வமேத யாக பலனைப் பெறலாம். இதனை வலம் வந்தால், பூமி முழுதும் வலம் வந்த பலன் கிடைக்கும். இதன் கொம்புகளைக் கழுவி, தண்ணீரைத் தலையில் தெளித்துக்கொண்டால் இஷ்டசித்திகள் யாவும் பெறலாம். தானங்களில் சிறந்தது கபிலைப் பசுவைத் தானம் செய்வதே ஆகும். இப்பசுவில் பத்து வண்ண வகைகள் உண்டு. அவற்றுள் பொன்னிறம் கொண்டதே உத்தமம் என்பர். இதனைப் புண்ணியத் தலங்களில் தானம் செய்தால் சிவனருளைப் பெறுவார்கள். 

கபிலையின் பெருமையைக்கேட்ட முனிவர்கள் அகத்தியரை வணங்கி, " முனிவர் பெருமானே, இங்கு தேவசர்மர் என்பவர் பல்வேறு பாவங்களால் பீடிக்கப்பட்டுச் செய்வதறியாது உழல்கிறார். அவர் ஒரு கபிலையத் தானம் செய்யச் சித்தமாக உள்ளார். அப்பசுவைப் பெறத் தகுதியானவர் தங்களைத் தவிர வேறு எவருமில்லை. எனவே தாங்கள் மனமிரங்கி அப் பசுவைப் பெற்றுக் கொண்டு தேவசர்மருக்கு அருள வேண்டும் " என்று வேண்டினார்கள். அகத்தியரும் அவ்வாறு தானம் பெற்றவுடன் தேவசர்மர் தனது பாவம் யாவும் நீங்கப்பெற்று, முனிவர்கள் சூழ, கடம்பவன நாதர் சன்னதியை அடைந்து துதித்தனர். தேவ சர்மரின் ப்ரார்த்தனைக்கிரங்கிய பெருமான், முனிவர்கள் அனைவருக்கும் தாம் முன்னர் மதுரையில் தடாதகைப் பிராட்டியை மணந்த திருக் கோலத்தைக் காட்டி அருளினார்.
 

முன்னொரு காலத்தில் சோமகன் என்ற அசுரன் ஒருவன் வேதங்கள் யாவற்றையும் கவர்ந்து கொண்டு பாதாள லோகம் சென்று விட்டான். இதனால் கலக்கமுற்ற விஷ்ணு முதலிய தேவர்கள் கடம்பவனத்தை அடைந்து பெருந்தவம் செய்தனர். அத்தவப்பலனாக விஷ்ணுவானவர் மச்சாவதாரம் எடுத்துப் பாதாளம் சென்று அசுரனை மாய்த்து, வேதங்களை மீண்டும் கொண்டு வந்து கடம்பவனத்தில் ஸ்தாபித்தருளியதால் இத்தலம் வேதபுரி எனப்பட்டது. கடம்பவனநாதரூக்குரிய மந்திரத்தைப்  புண்ணிய காலங்களில் ஜபித்தால் பெறுதற்கரிய பேறுகள் அனைத்தையும் இம்மையிலும் மறுமையிலும் பெறலாம் .
 

கயிலை மலையில் சிவபெருமான் உமாதேவியாருக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தபோது அதனை முறையாக உபதேசம் பெற்றுக் கேளாமல் மறைந்திருந்து முருகப்பெருமான் கேட்ட குற்றத்திற்காக ஊமை ஆயினார். பல்வேறு தலங்களிலும் வழிபட்ட முருகக்கடவுள் கடம்பந்துறையை அடைந்து தவம் செய்யவும், குற்றம் நீங்கப்பெற்றதோடு ,ஊமைத்தன்மையும் நீங்கப்பெற்றார்.  குமாரக்கடவுளின் துதிகளால் மகிழ்ந்த சர்வேசுவரனும் உமையன்னையோடு காட்சி அளித்து சுப்பிரமணிய மூர்த்தியைத் தனது மடி மீதிருத்தி ஞானோபதேசம் செய்தருளினார். அதனால் இத்தலம் ஞானோதயபுரி எனப்பட்டது. 

இங்கு எழுந்தருளியுள்ள சோமாஸ்கந்த மூர்த்தியைத் தரிசிப்போர் எல்லா நற்பலன்களையும் பெறுவர்.  சித்திரை வைகாசி மாதங்களில் பௌர்ணமி தினங்களில் வழிபடுவோர் பெறும் பலன் அளவிடற்கரியது. இங்கு அன்னதானம் செய்தால் பிற தலங்களில் செய்வதைக் காட்டிலும்  அதிக பலனைப் பெறலாம். 
 

இதுபோல வடக்கு நோக்கிய தலம் வாரணாசியாகும். இங்கு ஓடும் காவிரி ஆறு கங்கையை ஒக்கும். எனவே இதனைத் தக்ஷிண காசி எனப் பெரியோர் கூறுவார். இங்கு காவிரியில் நீராடி ஜபம் முதலிய அனுஷ்டானங்களைச் செய்து, கடம்பவனேசருக்கும், பாலகுசாம்பிகைக்கும்   அபிஷேகம் செய்து, நிவேதனம் சமர்ப்பித்தல், ஆலயத் திருப்பணி செய்தல் உற்சவங்கள் செய்தல் ஆகியவற்றால் சாயுச்சிய பதவியைப் பெறலாம். ஏழை ஆனாலும் சிறிதளவே பொருள் கொடுப்பவனும்  பாவ நிவர்த்தி பெறுகிறான். 
 

கிருத யுகத்தில் பிரமன் பூஜித்ததால் சுவாமிக்குப் பிரமேசுவரர் என்ற நாமம் ஏற்பட்டது. திரேதா யுகத்தில் சப்த கன்னிகைகள் பூசித்து நற்கதி பெற்றனர். துவாபரயுகத்தில் அகத்திய முனிவர் வழிபட்டுப் பேறு  பெற்றார். கலியுகத்தில் புண்ணிய மூர்த்தியாகிய ஆறு முகக் கடவுள் பூசித்தார்.  
 

யாத்திரை முறை: கொடிய பாவங்களையும்நீக்க வல்ல கடம்பந்துறையை முறைப்படி எவ்வாறு வழிபட வேண்டும் என்று சூத முனிவர் கூறலாயினர்: " விடியற்காலையில் காவிரியில் நீராடி நித்திய கர்மாக்களைச் செய்து விட்டு, மண்ம் மிக்க பூக்களை எடுத்துக் கொண்டு கடம்பவனேசரது ஆலயம் சென்று சுவாமி,அம்பாள் முதலிய மூர்த்திகளைத் தரிசிக்க  வேண்டும். அங்கு யாத்திரா சங்கல்பம் செய்து அந்தணர்க்கு இயன்ற அளவு தானம் செய்து, காவிரிக்குச் சென்று ஓர் குடத்தில் நீரை நிரப்பி, வாட்போக்கி (ஐயர் மலை)யை நோக்கித் தியானித்து விட்டு, ரத்னகிரிக்குச் (ஐயர் மலைக்குச்) சென்று மலை ஏறி அங்கு மேற்கு நோக்கியவாறு எழுந்தருளியுள்ள ரத்னகிரீசுவரரையும்,அராளகேசி அம்பிகையையும் (சுரும்பார் குழலி) தரிசித்து , கடம்ப வனத்திலிருந்து கொண்டு வந்த காவிரி நீரால் அபிஷேக ஆராதனைகள் செய்விக்க வேண்டும்.

 அங்கிருந்து காவிரியைக் கடந்து திரு ஈங்கோய் மலை என்னும் மரகதாசலத்தை அடைந்து, மலை ஏறி சுவாமி அம்பாளைத் தரிசித்து விட்டு மீண்டும் கடம்பந்துறையை அடைந்து அர்ச்சனை ஆராதனைகள் செய்விக்க வேண்டும். அன்றிரவு அத்  தலத்திலேயே தங்கி மறுநாள் காலை காவிரியில் ஸ்நானம் செய்து தானங்கள் செய்து விட்டு ஆலய தரிசனம் செய்து யாத்திரையைப் பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது நூறு முறை கங்கா யாத்திரை செய்வதற்கும், ஆயிரம்முறை சேது யாத்திரை செய்வதற்கும் சமம். இப்புராணத்தைப் படிப்போரும் கேட்போரும் அனைத்து சித்திகளையும் பெறுவார்கள் . இதனால் நாமும் புனிதர்கள் ஆயினோம் " என்று சூதர் நைமிசாரண்ய முனிவர்களிடம் அருளிச் செய்தார்.  

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்  :  அப்பர் - 1. முற்றி லாமுலை யாளிவ (5.18), பாடல்கள்   :  அப்பர் -    திரையார் (6.7.4),                             இடைமரு தீங்கோ (6.70.3),                             கயிலாயமலை (6.71.11);       ஐயடிகள் காடவர்கோன் - அழுகு திரிகுரம்பை
      சேக்கிழார் -   மற்றப் பதிகள் (12.21.303); தலப் பாடல்கள் :      -   கடம்பர் உலா.

 

 

தல மரம் : கடம்பு

 

Specialities

சப்தகன்னிகைகளின் பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியான தலமாதலின், மூலவர் பின்னால் சப்தகன்னிகைகளின் உருவங்கள் கல்லில் பிம்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன.

  • இங்கு விநாயகப் பெருமான் இடம்மாறி, மறுகோயில் உள்ளார்.                                      
  • இத்திருக்கோயிலில் இரு நடராஜ வடிவங்கள் உள்ளன. ஒன்றில் முயலகன் இருக்க, மற்றொன்றில் இல்லை.
  • தைப் பூசத்திருவிழாவும், மாசி பிரம்மோற்சவப்பெருவிழாவும் முக்கியமானவை. தைப்பூசத்தன்று கடம்பந்துறை முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேச்வரர், ரத்னகிரி கரும்பார் குழலி உடனுறை ரத்னகிரீச்வரர், ராஜேந்திரம் தேவ நாயகி உடனுறை மத்தியார்ச்சுனேச்வரர், பேட்டைவாய்த்தலை தேவநாயகி உடனுறை மத்தியார்ச்சுனேச்வரர். கருப்பத்தூர் சுகந்தகுந்தளாம்பாள் உடனுறை சிம்மபுரீச்வரர், திருஈங்கோய் மலை மரகதாம்பாள் உடனுறை மரகதாலேசுவரர், முசிறி கற்பூரவல்லி உடனுறை சந்திரமெளலீச்வரர், வெள்ளூர் சிவகாமியம்மை உடனுறை திருக்காமீச்வரர் ஆகிய எட்டு ஊர் இறைவன் இறைவிகள் காவிரிக்கரையில் முகாமிட்டு, தீர்த்தவாரி கொடுத்து, அன்று இரவு அவரவர்களுக்கு ஏற்பாடு செய்துள்ள அலங்காரப் பந்தலில் கொலுவீற்று ஆயிரக்கணக்கானவர்களுக்கு காட்சி கொடுத்து அடுத்த நாள் அவரவர்கள் ஆலயம் செல்லும் காட்சியை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
  • காலையில் கடம்பரையும், உச்சியில் சொக்களையும் (ரத்னகிரீச்வரர்), மாலையில் திருஈங்கோய் மரகதாசலேச்வரரையும் ஒரே நாளில் தரிசனம் செய்தால் சிறந்த பலன் கிட்டும் என்று தலபுராணமும்; இவர்களுடன் அர்த்த சாமத்தில் கருப்பத்தூர் சிம்மபுரீச்வரரையும் தரிசனம் செய்தால் அளவற்ற பலன் கிட்டும் என்று காவேரி ரஹஸ்ய புராணமும் கூறுகின்றன.

 

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருச்சி ஈரோடு பாதையில் உள்ளது இத்தலம். இது புகைவண்டி நிலையமும் கூட. தொடர்பு :- 04323 - 225228.

Related Content

திருக்குறும்பலா (குற்றாலம்) Thirukurumpala (thirukutralam su