logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

Tiruvarutpa of ramalinga atikal - part-II section 2 (verses 1007 - 1543)

Tiruvarutpa of ramalingka atikal
part-II section 2 (verses 1007 - 1543)

திருவருட்பா
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது
இரண்டாம் அருட்பா - இரண்டாம் பகுதி 
பாடல்கள் (1007 - 1543)


 


thiruvarutpaa

 


திருஅருட்பிரகாச வள்ளலார் இயற்றி அருளிய திருஅருட்பா

வெளியீடு அட்டவணை

2. 1 இரண்டாம் அருட்பா முதல் பகுதி ( 571-1007)மின்பதிப்பு நேரே செல்ல இங்கு தட்டுக. 
2.2. இரண்டாம் அருட்பா இரண்டாம் பகுதி (1007-1543)மின்பதிப்பு நேரே செல்ல இங்கு தட்டுக. 
2.3. இரண்டாம் அருட்பா மூன்றாம் பகுதி (1544-1958)இந்த மின்பதிப்பு 
3. மூன்றாம் அருட்பா (1959 - 2570)மின்பதிப்பு நேரே செல்ல இங்கு தட்டுக. 
4. நான்காம் அருட்பா (2571 - 3028)மின்பதிப்பு நேரே செல்ல இங்கு தட்டுக. 
5. ஐந்தாம் அருட்பா (3029 - 3266)மின்பதிப்பு நேரே செல்ல இங்கு தட்டுக. 
6.1 ஆறாம் அருட்பா - முதற் பகுதி (3267 -3580)மின்பதிப்பு நேரே செல்ல இங்கு தட்டுக. 
6.2 ஆறாம் அருட்பா - இரண்டாம் பகுதி (3872 - 4614)6.3 ஆறாம் அருட்பா - மூன்றாம் பகுதி (4615 - )மின்பதிப்பு நேரே செல்ல இங்கு தட்டுக.
7. திருஅருட்பா பல்வகைய தனிப் பாடல்கள் ( 163 )மின்பதிப்பு நேரே செல்ல இங்கு தட்டுக.  


இரண்டாம் அருட்பா - இரண்டாம் பகுதி 
பாடல்கள் (1007-1543)

  •  
    • உள்ளுறை
பதிகங்கள்பாடல்கள்
39. நெடுமொழி வஞ்சி (1007- 1016)மின்பதிப்பு
40. அவலத் தழுங்கல் (1017- 1026)மின்பதிப்பு
41. திருவிண்ணப்பம் (1027- 1036)மின்பதிப்பு 
42. நெஞ்சறிவுறூஉ (1037- 1046)மின்பதிப்பு
43. பிரசாத விண்ணப்பம் (1047- 1056)மின்பதிப்பு 
44. ஆடலமுதப் பத்து (1057- 1066)மின்பதிப்பு 
45.வழிமொழி விண்ணப்பம் (1067- 1076)மின்பதிப்பு
46. சிறுமை விண்ணப்பம் (1077- 1087)மின்பதிப்பு
47. ஆற்றா விண்ணப்பம் (1088- 1097)மின்பதிப்பு
48.சந்நிதி முறையீடு (1098- 1108)மின்பதிப்பு
49. இரங்கல் விண்ணப்பம் (1109- 1118)மின்பதிப்பு
50. நெஞ்சொடு நேர்தல் (1119- 1128)மின்பதிப்பு
51.சிவானந்தப் பத்து (1129- 1138)மின்பதிப்பு
52.காதல் விண்ணப்பம் (1139- 1148)மின்பதிப்பு
53. பொருள் விண்ணப்பம் (1149- 1158)மின்பதிப்பு
54. திருவண்ண விண்ணப்பம் (1159- 1170)மின்பதிப்பு
55. நாடக விண்ணப்பம் (1171- 1181))மின்பதிப்பு
56. கொடி விண்ணப்பம் (1182- 1192)மின்பதிப்பு
57. மருட்கை விண்ணப்பம் (1193- 1202)மின்பதிப்பு
58. கொடைமட விண்ணப்பம் (1203- 1212)மின்பதிப்பு
59. திருக்காட்சிக் கிரங்கல் (1213- 1222)மின்பதிப்பு
60. திரு அருட் கிரங்கல் (1223- 1232)மின்பதிப்பு
61. பழமொழிமேல் வைத்துப் பரிவுகூர்தல் (1233- 1242)மின்பதிப்பு
62. நெஞ்சு நிலைக் கிரங்கல் (1243- 1253)மின்பதிப்பு
63. எண்ணத் திரங்கல் (1254- 1263)மின்பதிப்பு
64.பிரசாதப் பதிகம் (1264- 1273)மின்பதிப்பு
65. நெஞ்சுறுத்த திருநேரிசை (1274- 1299)மின்பதிப்பு
66. தனிமைக் கிரங்கல் (1300- 1309)மின்பதிப்பு
67. கருணை பெறா திரங்கல் (1310- 1319)மின்பதிப்பு
68. அர்ப்பித் திரங்கல் (1320- 1329 )மின்பதிப்பு
69. கழிபகற் கிரங்கல் (1330- 1339)மின்பதிப்பு
70. தரிசனப் பதிகம் (1340- 1349)மின்பதிப்பு
71. முத்தி உபாயம் (1350- 1359)மின்பதிப்பு
72. தவத்திறம் போற்றல் (1360- 1369)மின்பதிப்பு
73. திருச்சாதனத் தெய்வத் திறம் (1370- 1379)மின்பதிப்பு
74. உள்ளப் பஞ்சகம் /1380- 1384)மின்பதிப்பு
75. வடிவுடை மாணிக்க மாலை (1385- 1486)மின்பதிப்பு
76. தனித் திருமாலை (1487- 1492)மின்பதிப்பு
77. தனித் திருமாலை (1493- 1502)மின்பதிப்பு
78. நாரையும் கிளியும் நாட்டுறு தூது (1503- 1512)மின்பதிப்பு
79. இரங்கன் மாலை (1513- 1543)மின்பதிப்பு
  
  • அடிக்குறிப்புகளில் காணப்படும் பதிப்பாசிரியர்களின் பெயர்ச் சுருக்க விரிவு

    1. தொ.வே --- தொழுவூர் வேலாயுத முதலியார்
    2. ஆ.பா --- ஆ.பாலகிருஷ்ண பிள்ளை
    3. ச.மு.க --- ச.மு.கந்தசாமி பிள்ளை
    4. பி.இ ரா --- பிருங்கிமாநகரம் இராமசாமி முதலியார்
    5. பொ.சு --- பொன்னேரி சுந்தரம் பிள்ளை
      

 

39. நெடுமொழி வஞ்சி

  • திருவொற்றியூர் 
    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1007

வார்க்கொண் மங்கையர் முலைமலைக் கேற்றி 

மறித்தும் அங்கவர் மடுவினில் தள்ளப் 
பார்க்கின் றாய்எனைக் கெடுப்பதில் உனக்குப் 

பாவ மேஅலால் பலன்சிறி துளதோ 
ஈர்க்கின் றாய்கடுங் காமமாம் புலையா 

இன்று சென்றுநான் ஏர்பெறும் ஒற்றி 
ஊர்க்குள் மேவிய சிவன்அருள் வாளால் 

உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.

1
1008.

கொடிய மாதர்கள் இடையுறும் நரகக் 

குழியில் என்தனைக் கொண்டுசென் றழுத்திக் 
கடிய வஞ்சனை யால்எனைக் கலக்கம் 

கண்ட பாவியே காமவேட் டுவனே 
இடிய நெஞ்சகம் இடர்உழந் திருந்தேன் 

இன்னும் என்னைநீ ஏன்இழுக் கின்றாய் 
ஒடிவில் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் 

உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.

2
1009.

பேதை மாதர்தம் மருங்கிடை ஆழ்ந்த 

பிலத்தில் என்தனைப் பிடித்தழ வீழ்த்தி 
வாதை உற்றிட வைத்தனை ஐயோ 

மதியில் காமமாம் வஞ்சக முறியா 
ஏதம் நீத்தருள் அடியர்தம் சார்வால் 

எழுகின் றேன்எனை இன்னும்நீ இழுக்கில் 
ஓதும் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் 

உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.

3
1010.

கோவம் என்னும்ஓர் கொலைப்புலைத் தலைமைக் 

கொடிய னேஎனைக் கூடிநீ நின்ற 
பாவ வன்மையால் பகைஅடுத் துயிர்மேல் 

பரிவி லாமலே பயன்இழந் தனன்காண் 
சாவ நீயில தேல்எனை விடுக 

சலஞ்செய் வாய்எனில் சதுர்மறை முழக்கம் 
ஓவில் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் 

உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.

4
1011.

சார்ந்த லோபமாம் தயையிலி ஏடா 

தாழ்ந்தி ரப்பவர் தமக்கணு அதனுள் 
ஈர்ந்த ஒன்றினை ஈயவும் ஒட்டாய் 

இரக்கின் றோர்தரின் அதுகொளற் கிசைவாய் 
சோர்ந்தி டாதுநான் துய்ப்பவும் செய்யாய் 

சுகமி லாதநீ தூரநில் இன்றேல் 
ஓர்ந்த ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் 

உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.

5
1012.

மோகம் என்னும்ஓர் மூடரில் சிறந்தோய் 

முடிவி லாத்துயர் மூலஇல் ஒழுக்கில் 
போகம் என்னும்ஓர் அளற்றிடை விழவும் 

போற்று மக்கள்பெண் டன்னைதந் தையராம் 
சோக வாரியில் அழுந்தவும் இயற்றிச் 

சூழ்கின் றாய்எனைத் தொடர்ந்திடேல் தொடரில் 
ஓகை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் 

உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.

6
1013.

மதம்எ னும்பெரு மத்தனே எனைநீ 

வருத்தல் ஓதினால் வாயினுக் கடங்கா 
சிதமெ னும்பரன் செயலினை அறியாய் 

தீங்கு செய்தனர் நன்மையாம் செய்தோம் 
இதம றிந்தனம் எமக்கினி ஒப்பார் 

யாவர் என்றெனை இழிச்சினை அடியார்க் 
குதவும் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் 

உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.

7
1014.

அமைவ றிந்திடா ஆணவப் பயலே 

அகில கோடியும் ஆட்டுகின் றவன்காண் 
எமைந டத்துவோன் ஈதுண ராமல் 

இன்று நாம்பரன் இணையடி தொழுதோம் 
கமைவின் ஏத்தினோம் அடியரும் ஆனோம் 

கனிகின் றோம்எனக் கருதிட மயக்கேல் 
உமையன் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் 

உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.

8
1015.

கருமை யாம்அகங் காரமர்க் கடவா 

கடைய னேஉனைக் கலந்தத னாலே 
அருமை யாகநாம் பாடினோம் கல்வி 

அறஅ றிந்தனம் அருளையும் அடைந்தோம் 
இருமை இன்பமும் பெற்றனம் என்றே 

எனைம தித்துநான் இழிவடைந் தனன்காண் 
ஒருமை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் 

உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.

9
1016.

வெண்மை சேர்அகங் காரமாம் வீணா 

விடுவி டென்றனை வித்தகம் உணராய் 
தண்மை இன்றிதற் கிதுஎனத் துணிந்தென் 

தனையும் சாய்ப்பது தகவென நினைத்தாய் 
அண்மை நின்றிடேல் சேய்மைசென் றழிநீ 

அன்றி நிற்றியேல் அரிமுதல் ஏத்தும் 
உண்மை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் 

உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.

10

  • திருச்சிற்றம்பலம் 
    Back 

 

40. அவலத் தழுங்கல்

  • திருவொற்றியூர் 
    எண்சீர்க்(26) கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

(26). அறுசீர் - தொ.வே. 1,2. எண்சீர் - ச.மு.க; ஆ.பா. 

1017

ஊதி யம்பெறா ஒதியினேன் மதிபோய் 

உழலும் பாவியேன் உண்மைஒன் றறியேன் 
வாதி யம்புறும் வஞ்சகர் உடனே 

வாய்இ ழுக்குற வன்மைகள் பேசி 
ஆதி எம்பெரு மான்உனை மறந்தேன் 

அன்பி லாதஎன் வன்பினை நினைக்கில் 
தீதி யம்பிய நஞ்சமும் கலங்கும் 

திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.

1
1018.

கல்இ கந்தவன் நெஞ்சகக் கொடியேன் 

கயவர் தங்களுள் கலந்துநாள் தோறும் 
மல்இ கந்தவாய் வாதமிட் டுலறி 

வருந்து கின்றதுன் மார்க்கத்தை நினைக்கில் 
இல்இ கந்தஎன் மீதெனக் கேதான் 

இகலும் கோபமும் இருக்கின்ற தானால் 
தில்லை யாய்உன்தன் உளத்துக்கென் னாமோ 

திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.

2
1019.

கைத வத்தர்தம் களிப்பினில் களித்தே 

காலம் போக்கினேன் களைகண்மற் றறியேன் 
செய்த வத்தர்தம் திறம்சிறி துணரேன் 

செய்வ தென்னைநின் திருவருள் பெறவே 
எய்த வத்திரு அருளெனக் கிரங்கி 

ஈயில் உண்டுமற் றின்றெனில் இன்றே 
செய்த வத்திரு மடந்தையர் நடனம் 

திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.

3
1020.

அழுத பிள்ளைக்கே பால்உண வளிப்பாள் 

அன்னை என்பர்கள் அழவலி இல்லாக் 
கொழுது நேர்சிறு குழவிக்கும் கொடுப்பாள் 

குற்றம் அன்றது மற்றவள் செயலே 
தொழுது நின்னடி துதிக்கின்றோர்க் கெனவே 

துட்ட னேனுக்கும் சூழ்ந்தருள் செயலாம் 
செழுது மாதவி மலர்திசை மணக்கத் 

திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.

4
1021.

உள்ளி யோஎன அலறிநின் றேத்தி 

உருகி நெக்கிலா உளத்தன்யான் எனினும் 
வள்ளி யோய்உனை மறக்கவும் மாட்டேன் 

மற்றைத் தேவரை மதிக்கவும் மாட்டேன் 
வெள்ளி யோவெனப் பொன்மகிழ் சிறக்க 

விரைந்து மும்மதில் வில்வளைத் தெரித்தோய் 
தெள்ளி யோர்புகழ்ந் தரகர என்னத் 

திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.

5
1022.

விருப்பி லேன்திரு மால்அயன் பதவி 

வேண்டிக் கொள்கென விளம்பினும் கொள்ளேன் 
மருப்பின் மாஉரி யாய்உன்தன் அடியார் 

மதிக்கும் வாழ்வையே மனங்கொடு நின்றேன் 
ஒருப்ப டாதஇவ் வென்னள வினிஉன் 

உள்ளம் எப்படி அப்படி அறியேன் 
திருப்பு யாசல மன்னர்மா தவத்தோர் 

திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.

6
1023.

நிலையி லாஉல கியல்படும் மனத்தை 

நிறுத்தி லேன்ஒரு நியமமும் அறியேன் 
விலையி லாமணி யேஉனை வாழ்த்தி

வீட்டு நன்னெறிக் கூட்டென விளம்பேன் 
அலையில் ஆர்ந்தெழும் துரும்பென அலைந்தேன் 

அற்ப னேன்திரு அருளடை வேனே 
சிலையில் ஆர்அழல் கணைதொடுத் தவனே 

திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.

7
1024.

காயம் என்பதா காயம்என் றறியேன் 

கலங்கி னேன்ஒரு களைகணும் இல்லேன் 
சேய நன்னெறி அணித்தெனக் காட்டும் 

தெய்வ நின்அருள் திறம்சிறி தடையேன் 
தூய நின்அடி யவருடன் கூடித் 

தொழும்பு செய்வதே சுகம்எனத் துணியேன் 
தீய னேன்தனை ஆள்வதெவ் வாறோ 

திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.

8
1025.

புன்னு னிப்படும் துளியினும் சிறிய 

போகம் வேட்டுநின் பொன்அடி மறந்தேன் 
என்னி னிப்படும் வண்ணம்அஃ தறியேன் 

என்செய் கேன்எனை என்செயப் புகுகேன் 
மின்னி னில்பொலி வேணியம் பெருமான் 

வேற லேன்எனை விரும்பல்உன் கடனே 
தென்ன னிப்படும் சோலைசூழ்ந் தோங்கித் 

திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.

9
1026.

அடிய னேன்அலன் என்னினும் அடியேன் 

ஆக நின்றனன் அம்மைஇம் மையினும் 
கடிய னேன்பிழை யாவையும் பொறுக்கக் 

கடன்உ னக்கலால் கண்டிலன் ஐயா 
பொடிகொள் மேனிஎம் புண்ணிய முதலே 

புன்னை யஞ்சடைப் புங்கவர் ஏறே 
செடியர் தேடுறாத் திவ்விய ஒளியே 

திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.

10

 


 

41. திருவிண்ணப்பம்

  • திருவொற்றியூர் 
    எண்சீர்க்(27) கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

(27). எழுசீர்- தொ.வே. 1,2. எண்சீர் - ச.மு.க; ஆ.பா. 

1027.

சழக்கி ருந்ததென் னிடத்தில்ஆ யினும்நீர் 

தந்தை ஆதலின் சார்ந்தநல் நெறியில் 
பழக்கி வைப்பது தேவரீர்க் குரிய 

பண்பன் றோஎனைப் பரிந்திலீர் ஆனால் 
வழக்கி ருப்பதிங் குமக்குமென் றனக்கும் 

வகுத்துக் கூறுதல் மரபுமற் றன்றால் 
புழைக்கை மாவுரி யீர்ஒற்றி உடையீர் 

பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.

1
1028. .

அழுது நெஞ்சயர்ந் துமைநினைக் கின்றேன் 

ஐய நீர்அறி யாததும் அன்றே 
கழுது துன்றிய காட்டகத் தாடும் 

கதியி லீர்எனக் கழறினன் அல்லால் 
பழுது பேசின தொன்றிலை ஒற்றிப் 

பதியில் வாழ்படம் பக்கநா யகரே 
பொழுது போகின்ற தென்செய்கேன் எனைநீர் 

பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.

2
1029. .

முன்னை மாதவ முயற்சிஒன் றில்லா 

மூட னேன்தனை முன்வர வழைத்துப் 
பிள்னை ஒன்றும்வாய்ப் பேச்சிலீ ரானால் 

பித்தர் என்றுமைப் பேசிட லாமே 
என்னை நான்பழித் திடுகின்ற தல்லால் 

இகழ்கி லேன்உமை எழில்ஒற்றி உடையீர் 
புன்னை அஞ்சடை யீர்எனை உடையீர் 

பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.

3
1030. .

வன்மை பேசிய வன்தொண்டர் பொருட்டாய் 

வழக்குப் பேசிய வள்ளல்நீர் அன்றோ 
இன்மை யாளர்போல் வலியவந் திடினும் 

ஏழை யாம்இவன் என்றொழித் திட்டால் 
தன்மை அன்றது தருமமும் அன்றால் 

தமிய னேன்இன்னும் சாற்றுவ தென்னே 
பொன்மை அஞ்சடை யீர்ஒற்றி உடையீர் 

பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.

4
1031. .

உறங்கு கின்றதும் விழிப்பதும் மகிழ்வாய் 

உண்ணு கின்றதும் உடுப்பதும் மயக்குள் 
இறங்கு கின்றதும் ஏறுகின் றதுமாய் 

எய்க்கின் றேன்மனம் என்னினும் அடியேன் 
அறங்கொள் நும்அடி அரண்என அடைந்தேன் 

அயர்வு தீர்த்தெனை ஆட்கொள நினையீர் 
புறங்கொள் காட்டகத் தீர்ஒற்றி உடையீர் 

பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.

5
1032. .

கரும்பின் கட்டியும் கனியையும் கொடுத்தால் 

கயவர் ஆயினும் கசக்கும்என் றுரையார் 
அரும்பின் கட்டிள முலைஉமை மகிழும் 

ஐய நீர்உம தருள்எனக் களிக்க 
இரும்பின் கட்டிநேர் நெஞ்சினேன் எனினும் 

ஏற்று வாங்கிடா திருந்ததுண் டேயோ 
பொரும்பின் கட்டுரி யீர்ஒற்றி உடையீர் 

பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.

6
1033. .

விருப்பு நின்றதும் பதமலர் மிசைஅவ் 

விருப்பை மாற்றுதல் விரகுமற் றன்றால் 
கருப்பு நேரினும் வள்ளியோர் கொடுக்கும் 

கடமை நீங்குறார் உடமையின் றேனும் 
நெருப்பு நும்உரு ஆயினும் அருகில் 

நிற்க அஞ்சுறேன் நீலனும் அன்றால் 
பொருப்பு வில்லுடை யீர்ஒற்றி உடையீர் 

பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.

7
1034. .

கொடிய நஞ்சமு தாக்கிய உமக்கிக் 

கொடிய னேனைஆட் கொள்ளுதல் அரிதோ 
அடியர் தம்பொருட் டடிபடு வீர்எம் 

ஐய நும்மடிக் காட்பட விரைந்தேன் 
நெடிய மால்அயன் காண்கில ரேனும் 

நின்று காண்குவல் என்றுளம் துணிந்தேன் 
பொடிய நீறணி வீர்ஒற்றி உடையீர் 

பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.

8
1035. .

வினையி னால்உடல் எடுத்தன னேனும் 

மேலை நாள்உமை விரும்பிய அடியேன் 
எனைஇன் னான்என அறிந்திலி ரோநீர் 

எழுமைச் செய்கையும் இற்றென அறிவீர் 
மனையி னால்வரும் துயர்கெட உமது 

மரபு வேண்டியே வந்துநிற் கின்றேன் 
புனையி னால்அமர்ந் தீர்ஒற்றி உடையீர் 

பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.

9
1036.

பிழைபு ரிந்தனன் ஆகிலும் உமது 

பெருமை நோக்கில்அப் பிழைசிறி தன்றோ 
மழைபு ரிந்திடும் வண்கையை மாற்ற 

மதிக்கின் றோர்எவர் மற்றிலை அதுபோல் 
உழைபு ரிந்தருள் வீர்எனில் தடுப்பார் 

உம்பர் இம்பரில் ஒருவரும் இலைகாண் 
புழைபு ரிந்தகை உலவொற்றி உடையீர் 

பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.

10

 


 

42. நெஞ்சறிவுறூஉ

  • திருவொற்றியூர் 
    எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1037.

என்ன தன்றுகாண் வாழ்க்கையுட் சார்ந்த 

இன்ப துன்பங்கள் இருவினைப் பயனால் 
மன்னும் மும்மல மடஞ்செறி மனனே 

வாழ்தி யோஇங்கு வல்வினைக் கிடமாய் 
உன்ன நல்அமு தாம்சிவ பெருமான் 

உற்று வாழ்ந்திடும் ஒற்றியூர்க் கின்றே 
இன்னல் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும் 

இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.

1
1038.

துன்ப வாழ்வினைச் சுகம்என மனனே 

சூழ்ந்து மாயையுள் ஆழ்ந்துநிற் கின்றாய் 
வன்ப தாகிய நீயும்என் னுடனே 

வருதி யோஅன்றி நிற்றியோ அறியேன் 
ஒன்ப தாகிய உருவுடைப் பெருமான் 

ஒருவன் வாழ்கின்ற ஒற்றியூர்க் கின்றே 
இன்ப வாழ்வுறச் செல்கின்றேன் உனக்கும் 

இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.

2
1039.

ஆட்டு கின்றதற் காகஅம் பலத்துள் 

ஆடு கின்றசே வடிமலர் நினையாய் 
வாட்டு கின்றனை வல்வினை மனனே 

வாழ்ந்து நீசுக மாய்இரு கண்டாய் 
கூட்டு கின்றநம் பரசிவன் மகிழ்வில் 

குலவும் ஒற்றியூர்க் கோயில்சூழ்ந் தின்பம் 
ஈட்டு கின்றதற் கேகின்றேன் உனக்கும் 

இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.

3
1040.

வஞ்ச வாழ்க்கையை விடுத்தனன் நீயே 

வாரிக் கொண்டிங்கு வாழ்ந்திரு மனனே 
நஞ்சம் ஆயினும் உண்குவை நீதான் 

நானும் அங்கதை நயப்பது நன்றோ 
தஞ்சம் என்றவர்க் கருள்தரும் பெருமான் 

தங்கும் ஒற்றியூர்த் தலத்தினுக் கின்றே 
எஞ்சல் இன்றிநான் செல்கின்றேன் உனக்கும் 

இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.

4
1041.

உண்மை ஓதினும் ஓர்ந்திலை மனனே 

உப்பி லிக்குவந் துண்ணுகின் றவர்போல் 
வெண்மை வாழ்க்கையின் நுகர்வினை விரும்பி 

வெளுக்கின் றாய்உனை வெறுப்பதில் என்னே 
தண்மை மேவிய சடையுடைப் பெருமான் 

சார்ந்த ஒற்றியந் தலத்தினுக் கின்றே 
எண்மை நீங்கிடச் செல்கின்றேன் உனக்கும் 

இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.

5
1042.

நீடும் ஐம்பொறி நெறிநடந் துலக 

நெறியில் கூடிநீ நினைப்பொடு மறப்பும் 
நாடும் மாயையில் கிடந்துழைக் கின்றாய் 

நன்று நின்செயல் நின்றிடு மனனே 
ஆடும் அம்பலக் கூத்தன்எம் பெருமான் 

அமர்ந்த ஒற்றியூர் ஆலயத் தின்றே 
ஈடு நீங்கிடச் செல்கின்றேன் உனக்கும் 

இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.

6
1043.

கூறும் ஓர்கணத் தெண்ணுறும் நினைவு 

கோடி கோடியாய்க் கொண்டதை மறந்து 
மாறு மாயையால் மயங்கிய மனனே 

வருதி அன்றெனில் நிற்றிஇவ் வளவில் 
ஆறு மேவிய வேணிஎம் பெருமான் 

அமர்ந்த ஒற்றியூர் ஆலயம் அதன்பால் 
ஈறில் இன்புறச் செல்கின்றேன் உனக்கும் 

இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.

7
1044.

யாது கண்டனை அதனிடத் தெல்லாம் 

அணைகின் றாய்அவ மாகநிற் கீந்த 
போது போக்கினை யேஇனி மனனே 

போதி போதிநீ போம்வழி எல்லாம் 
கோது நீக்கிநல் அருள்தரும் பெருமான் 

குலவும் ஒற்றியூர்க் கோயிலுக் கின்றே 
ஏதம் ஓடநான் செல்கின்றேன் உனக்கும் 

இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.

8
1045.

விச்சை வேண்டினை வினையுடை மனனே 

மேலை நாள்பட்ட வேதனை அறியாய் 
துச்சை நீபடும் துயர்உனக் கல்லால் 

சொல்லி றந்தநல் சுகம்பலித் திடுமோ 
பிச்சை எம்பெரு மான்என நினையேல் 

பிறங்கும் ஒற்றியம் பெருந்தகை அவன்பால் 
இச்சை கொண்டுநான் செல்கின்றேன் உனக்கும் 

இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே. 9

 
1046.

தூக்கம் உற்றிடும் சோம்புடை மனனே 

சொல்வ தென்னைஓர் சுகம்இது என்றே 
ஆக்கம் உற்றுநான் வாழநீ நரகில் 

ஆழ நேர்ந்திடும் அன்றுகண் டறிகாண் 
நீக்கம் உற்றிடா நின்மலன் அமர்ந்து 

நிகழும் ஒற்றியூர் நியமத்திற் கின்றே 
ஏக்கம் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும் 

இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.

10

43. பிரசாத விண்ணப்பம்

திருவொற்றியூர் 
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1047.

பசைஇலாக் கருங்கல் பாறைநேர் மனத்துப் 

பதகனேன் படிற்றுரு வகனேன் 
வசைஇலார்க் கருளும் மாணிக்க மணியே 

வள்ளலே நினைத்தொழல் மறந்து 
நசைஇலா மலம்உண் டோ டுறும் கொடிய 

நாய்என உணவுகொண் டுற்றேன் 
தசைஎலாம் நடுங்க ஒற்றியில் உன்னால் 

தண்டிக்கப் பட்டனன் அன்றே.

1
1048.

அன்னைபோன் றடியர்க் கருத்தியில் அருத்தும் 

அப்பநின் அடியினை காணா 
தென்னையோ மலம்உண் டுழன்றிடும் பன்றி 

என்னஉண் டுற்றனன் அதனால் 
புன்னைஅம் சடைஎம் புண்ணிய ஒளியே 

பூதநா யகஎன்றன் உடலம் 
தன்னைநீ அமர்ந்த ஒற்றியில் உன்னால் 

தண்டிக்கப் பட்டனன் அன்றே.

2
1049.

கண்ணினால் உனது கழற்பதம் காணும் 

கருத்தினை மறந்துபாழ் வயிற்றை 
மண்ணினால் நிறைத்தல் எனஉண வருந்தி 

மலம்பெற வந்தனன் அதனால் 
எண்ணினால் அடங்கா எண்குணக் குன்றே 

இறைவனே நீஅமர்ந் தருளும் 
தண்ணினால் ஓங்கும் ஒற்றியில் உன்னால் 

தண்டிக்கப் பட்டனன் அன்றே.

3
1050.

நின்முனம் நீல கண்டம்என் றோதும் 

நெறிமறந் துணவுகொண் டந்தோ 
பொன்முனம் நின்ற இரும்பென நின்றேன் 

புலையனேன் ஆதலால் இன்று 
மின்முனம் இலங்கும் வேணிஅம் கனியே 

விரிகடல் தானைசூழ் உலகம் 
தன்முனம் இலங்கும் ஒற்றியில் உன்னால் 

தண்டிக்கப் பட்டனன் அன்றே.

4
1051.

குழிக்குமண் அடைக்கும் கொள்கைபோல் பாழும் 

கும்பியை ஓம்பினன் அல்லால் 
செழிக்கும்உன் திருமுன் நீலகண் டந்தான் 

செப்புதல் மறந்தனன் அதனால் 
விழிக்குள்நின் றிலங்கும் விளங்கொளி மணியே 

மென்கரும் பீன்றவெண் முத்தம் 
தழிக்கொளும் வயல்சூழ் ஒற்றியில் உன்னால் 

தண்டிக்கப் பட்டனன் அன்றே.

5
1052.

கமரிடை மலநீர் கவிழ்த்தல்போல் வயிற்றுக் 

கடன்கழித் திட்டனன் அல்லால் 
அமரிடைப் புரமூன் றெரித்தருள் புரிந்த 

ஐயனே நினைத்தொழல் மறந்தேன் 
சமரிடை மனத்தேன் ஆதலால் முனிவர் 

சங்கர சிவசிவ என்றே 
தமரிடை ஓங்கும் ஒற்றியில் உன்னால் 

தண்டிக்கப் பட்டனன் அன்றே.

6
1053.

அருமருந் தனையாய் நின்திரு முன்போந் 

தரகர எனத்தொழல் மறந்தே 
இருளுறும் மனத்தேன் மலத்தினும் இழிந்த 

இயல்புற உண்டனன் அதனால் 
கருமருந் தனைய அஞ்செழுத் தோதும் 

கருத்தர்போல் திருத்தம தாகத் 
தருமநின் றோங்கும் ஒற்றியில் உன்னால் 

தண்டிக்கப் பட்டனன் அன்றே.

7
1054.

கண்நுதல் கரும்பே நின்முனம் நீல 

கண்டம்என் றோதுதல் மறந்தே 
உண்ணுதற் கிசைந்தே உண்டுபின் ஒதிபோல் 

உன்முனம் நின்றனன் அதனால் 
நண்ணுதல் பொருட்டோ ர் நான்முகன் மாயோன் 

நாடிட அடியர்தம்உள்ளத் 
தண்ணுதல் கலந்த ஒற்றியில் உன்னால் 

தண்டிக்கப் பட்டனன் அன்றே.

8
1055.

கற்றவர்க் கினிதாம் கதியருள் நீல 

கண்டம்என் றுன்திரு முன்னர் 
சொற்றிடல் மறந்தேன் சோற்றினை ஊத்தைத் 

துருத்தியில் அடைத்தனன் அதனால் 
செற்றமற் றுயர்ந்தோர் சிவசிவ சிவமா 

தேவஓம் அரகர எனும்சொல் 
சற்றும்விட் டகலா ஒற்றியில் உன்னால் 

தண்டிக்கப் பட்டனன் அன்றே.

9
1056.

முறைப்படி நினது முன்புநின் றேத்தி 

முன்னிய பின்னர்உண் ணாமல் 
சிறைப்படி வயிற்றில் பொறைப்பட ஒதிபோல் 

சென்றுநின் முன்னர்உற் றதனால் 
கறைப்பட ஓங்கும் கண்டனே எவர்க்கும் 

கருத்தனே ஒருத்தனே மிகுசீர் 
தறைப்படர்ந் தோங்கும் ஒற்றியில் உன்னால் 

தண்டிக்கப் பட்டனன் அன்றே.

10

Back


 

44. ஆடலமுதப் பத்து

திருவொற்றியூரும் திருத்தில்லையும்
எண்சீர்க்(28) கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

(28). எழுசீர் - தொ.வே. 1,2. எண்சீர் - ச.மு.க; ஆ.பா. 

1057.

சிந்தை நொந்துநொந் தயர்கின்றேன் சிவனே 

செய்வ தோர்ந்திலேன் தீக்குண முடையேன் 
வந்து நின்னடிக் காட்செய என்றால் 

வஞ்ச நெஞ்சம்என் வசம்நின்ற திலையே 
எந்தை நின்னருள் உண்டெனில் உய்வேன் 

இல்லை என்னில்நான் இல்லைஉய்ந் திடலே 
அந்தி வான்நிறத் தொற்றியூர் அரசே 

அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.

1
1058.

மாய நெஞ்சமோ நின்னடி வழுத்தா 

வண்ண மென்தனை வலிக்கின்ற ததனால் 
தீயன் ஆயினேன் என்செய்வேன் சிவனே 

திருவ ருட்குநான் சேயனும் ஆனேன் 
காய வாழ்க்கையில் காமமுண் டுள்ளம் 

கலங்கு கின்றனன் களைகண்மற் றறியேன் 
ஆய ஒற்றியூர் அண்ணலே தில்லை 

அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.

2
1059.

உன்னை உன்னிநெக் குருகிநின் றேத்த 

உள்ளம் என்வசம் உற்றதின் றேனும் 
என்னை ஆளுதல் உன்கடன் அன்றேல் 

இரக்கம் என்பதுன் னிடத்திலை அன்றோ 
முன்னை வல்வினை முடித்திடில் சிவனே 

மூட னேனுக்கு முன்னிற்ப தெவனோ 
அன்னை அப்பனே ஒற்றியூர் அரசே 

அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.

3
1060.

என்ன நான்சொலி நிறுத்தினும் நில்லா 

தேகு கின்றதிவ் ஏழையேன் மனந்தான் 
உன்ன தின்னருள் ஒருசிறி துண்டேல் 

ஒடுக்கி நிற்பனால் உண்மைமற் றின்றேல் 
இன்ன தென்றறி யாமல இருளில் 

இடர்கொள் வேன்அன்றி என்செய்வேன் சிவனே 
அன்ன துன்செயல் ஒற்றியூர் அரசே 

அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.

4
1061.

பாவி நெஞ்சம்என் பால்இரா தோடிப் 

பாவை யார்மயல் படிந்துழைப் பதனால் 
சேவி யாதஎன் பிழைபொறுத் தாளும் 

செய்கை நின்னதே செப்பலென் சிவனே 
காவி நேர்விழி மலைமகள் காணக் 

கடலின் நஞ்சுண்டு கண்ணன்ஆ தியர்கள் 
ஆவி ஈந்தருள் ஒற்றிஎம் இறையே 

அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.

5
1062.

மூட நெஞ்சம்என் மொழிவழி நில்லா 

மோக வாரியின் முழுகுகின் றதுகாண் 
தேட என்வசம் அன்றது சிவனே 

திருவ ருட்கடல் திவலைஒன் றுறுமேல் 
நாட நாடிய நலம்பெறும் அதனால் 

நானும் உய்குவேன் நல்கிடல் வேண்டும் 
ஆடல் ஒற்றியாய் பெரும்பற்றப் புலியூர் 

அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.

6
1063.

கலங்கு கின்றஎன் கண்உன தருள்ஓர் 

கடுகின் எல்லைதான் கலந்திடு மானால் 
விலங்கு கின்றஎன் நெஞ்சம்நின் றிடுமால் 

வேறு நான்பெறும் வேட்கையும் இன்றால் 
மலங்கு கின்றதை மாற்றுவன் உனது 

மலர்ப்பொன் தாளலால் மற்றிலன் சிவனே 
அலங்கு கின்றசீர் ஒற்றியூர் இறையே 

அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.

7
1064.

மறைவ தென்னையும் மறைப்பது பொல்லா 

வஞ்ச நெஞ்சமென் வசப்படல் இலைகாண் 
இறைவ நின்னருட் கென்செய்வோம் எனவே 

எண்ணி எண்ணிநான் ஏங்குகின் றனனால் 
உறைவ துன்னடி மலர்அன்றி மற்றொன் 

றுணர்ந்தி லேன்இஃ துண்மைநீ அறிதி 
அறைவ தென்னநான் ஒற்றியூர் அரசே 

அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.

8
1065.

ஒருக ணப்பொழு தேனுநின் அடியை 

உள்கி டாதுளம் ஓடுகின் றதனால் 
திருக ணப்பெறும் தீயனேன் செய்யும் 

திறம்அ றிந்திலேன் செப்பலென் சிவனே 
வருக ணத்துடல் நிற்குமோ விழுமோ 

மாயு மோஎன மயங்குவேன் தன்னை 
அருக ணைத்தருள் ஒற்றியூர் இறையே 

அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.

9
1066.

யாது நின்கருத் தறிந்திலேன் மனமோ 

என்வ சப்படா திருத்தலை உரைத்தேன் 
தீது செய்யினும் பொறுத்தெனைச் சிவனே 

தீய வல்வினைச் சேர்ந்திடா வண்ணம் 
பாது காப்பதுன் பரம்இன்றேல் பலவாய்ப் 

பகர்தல் என்னகாண் பழிவரும் உனக்கே 
ஆது காண்டிஎம் ஒற்றியூர் அரசே 

அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.

10

Back

 


 

45.வழிமொழி விண்ணப்பம்

திருவொற்றியூரும் திருத்தில்லையும்

1067.

நீல னேன்கொடும் பொய்யல துரையா 

நீசன் என்பதென் நெஞ்சறிந் ததுகாண் 
சால ஆயினும் நின்கழல் அடிக்கே 

சரண்பு குந்திடில் தள்ளுதல் வழக்கோ 
ஆலம் உண்டநின் தன்மைமா றுவதேல் 

அகில கோடியும் அழிந்திடும் அன்றே 
சீல மேவிய ஒற்றியம் பரனே 

தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே.

1
1068.

கண்ணுண் மாமணி யேஅருட் கரும்பே 

கற்ற நெஞ்சகம் கனிந்திடும் கனியே 
எண்ணுள் உட்படா இன்பமே என்றென் 

றெந்தை நின்றனை ஏத்திலன் எனினும் 
மண்ணுள் மற்றியான் வழிவழி அடியேன் 

மாய மன்றிதுன் மனம்அறிந் ததுவே 
திண்ணம் ஈந்தருள் ஒற்றியூர் அரசே 

தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே.

2
1069.

நல்லன் அல்லனான் ஆயினும் சிறியேன் 

நான்அ றிந்ததோ நாடறிந் ததுகாண் 
சொல்ல வாயிலை ஆயினும் எனைநீ 

தொழும்பு கொண்டிடில் துய்யனும் ஆவேன் 
வல்ல உன்கருத் தறிந்திலேன் மனமே 

மயங்கு கின்றதியான் வாடுகின் றனன்காண் 
செல்லல் நீக்கிய ஒற்றியூர் அரசே 

தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே.

3
1070.

இரக்கம் என்பதென் னிடத்திலை எனநீ 

இகழ்தி யேல்அஃதி யல்புமற் றடியேன் 
பரக்க நின்அருட் கிரக்கமே அடைந்தேன் 

பார்த்தி லாய்கொலோ பார்த்தனை எனில்நீ 
கரப்ப துன்றனக் கழகன்று கண்டாய் 

காள கண்டனே கங்கைநா யகனே 
திரக்கண் நெற்றியாய் ஒற்றியாய்த் தில்லைத் 

திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.

4
1071.

யாது நான்பிழை செய்யினும் பொறுப்பான் 

எந்தை எம்மிறை என்றுவந் தடைந்தேன் 
தீது நோக்கிநீ செயிர்த்திடில் அடியேன் 

செய்வ தென்னைநின் சித்தமிங் கறியேன் 
போது போகின்ற தன்றிஎன் மாயப் 

புணர்ச்சி யாதொன்றும் போகின்ற திலைகாண் 
சீத வார்பொழில் ஒற்றியம் பரனே 

திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.

5
1072.

தாய்க்கும் தந்தைக்கும் நிகரும்நின் இருதாள் 

சார்ந்த மேலவர் தமைத்தொழு தேத்தா 
நாய்க்கும் நாய்எனும் பாவியேன் பிழையை 

நாடி நல்லருள் நல்கிடா திருந்தால் 
ஏய்க்கும் மால்நிறக் காலன்வந் திடும்போ 

தென்கொ லாம்இந்த எண்ணம்என் மனத்தைத் 
தீய்க்கு தென்செய்வேன் ஒற்றியம் சிவனே 

தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே.

6
1073.

ஆட்டு கின்றநீ அறிந்திலை போலும் 

ஐவர் பக்கம்நான் ஆடுகின் றதனைக் 
காட்டு கின்றவான் கடலிடை எழுந்த 

காள முண்டஅக் கருணையை உலகில் 
நாட்டு கின்றனை ஆயில்இக் கொடிய 

நாய்க்கும் உன்னருள் நல்கிட வேண்டும் 
தீட்டு கின்றநல் புகழ்ஒற்றி அரசே 

திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.

7
1074.

உய்ய ஒன்றிலேன் பொய்யன்என் பதனை 

ஒளித்தி லேன்இந்த ஒதியனுக் கருள்நீ 
செய்ய வேண்டுவ தின்றெனில் சிவனே 

செய்வ தென்னைநான் திகைப்பதை அன்றி 
மையல் நெஞ்சினேன் ஆயினும் உன்னை 

மறந்தி லேன்இது வஞ்சமும் அன்றே 
செய்ய மேனிஎம் ஒற்றியூர் வாழ்வே 

திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.

8
1075.

வாடு கின்றனன் என்றனை இன்னும் 

வருந்த வைக்கினும் மறந்திடேன் உன்னைப் 
பாடு கின்றனன் பாவியேன் என்னைப் 

பாது காப்பதுன் பரம்அது கண்டாய் 
தேடு கின்றமால் நான்முகன் முதலாம் 

தேவர் யாவரும் தெரிவரும் பொருளே 
சேடு நின்றநல் ஒற்றியூர் வாழ்வே 

திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.

9
1076.

சிறியர் செய்பிழை பெரியவர் பொறுக்கும் 

சீல மென்பதுன் திருமொழி அன்றே 
வறிய னேன்பிழை யாவையும் உனது 

மனத்தில் கொள்ளுதல் வழக்கல இனிநீ 
இறையும் தாழ்க்கலை அடியனேன் தன்னை 

ஏன்று கொண்டருள் ஈந்திடல் வேண்டும் 
செறிய ஓங்கிய ஒற்றியம் பரமே 

திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.

10

Back


 

46. சிறுமை விண்ணப்பம்

திருவொற்றியூர் 
எண்சீர்க்(29) கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

(29). எண்சீர் - தொ.வே.1, ச.மு.க, ஆ.பா; எழுசீர் - தொ.வே.2, 

1077.

இன்று நின்றவர் நாளைநின் றிலரே 

என்செய் வோம்இதற் கென்றுளம் பதைத்துச் 
சென்று நின்றுசோர் கின்றனன் சிவனே 

செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் 
நன்று நின்துணை நாடக மலர்த்தாள் 

நண்ண என்றுநீ நயந்தருள் வாயோ 
பொன்றல் இன்றிய எழில்ஒற்றி அரசே 

போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.

1
1078.

மறுமை இம்மையும் வளம்பெற வேண்டேன் 

மருவும் நின்அருள் வாழ்வுற அடையாச் 
சிறுமை எண்ணியே திகைக்கின்றேன் சிவனே 

செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் 
வறுமை யாளனேன் வாட்டம்நீ அறியா 

வண்ணம் உண்டுகொல் மாணிக்க மலையே 
பொறுமை யாளனே ஒற்றிஅம் பரனே 

போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.

2
1079.

உய்ய வல்லனேல் உன்திரு அருளாம் 

உடைமை வேண்டும்அவ் உடைமையைத் தேடல் 
செய்ய வல்லனோ அல்லகாண் சிவனே 

செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் 
பெய்ய வல்லநின் திருவருள் நோக்கம் 

பெறவி ழைந்தனன் பிறஒன்றும் விரும்பேன் 
பொய்யி தல்லஎம் ஒற்றிஅம் பரனே 

போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.

3
1080.

வெல்லு கின்றனர் வினைப்புல வேடர் 

மெலிகின் றேன்இங்கு வீணினில் காலம் 
செல்லு கின்றன ஐயவோ சிவனே 

செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் 
சொல்லு கின்றனன் கேட்கின்றாய் கேட்டும் 

தூர நின்றனை ஈரமில் லார்போல் 
புல்லு கின்றசீர் ஒற்றிஅம் பரனே 

போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.

4
1081.

ஏறு கின்றிலேன் இழிகிலேன் நடுநின் 

றெய்க்கின் றேன்பவம் என்னும்அக் குழியில் 
தேறு கின்றிலேன் சிக்கெனச் சிவனே 

செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் 
கூறு கின்றதென் கடவுள்நீ அறியாக் 

கொள்கை ஒன்றிலை குன்றவில் லோனே 
பூறு வங்கொளும் ஒற்றிஅம் பரனே 

போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.

5
1082.

கந்த மும்மல ரும்என நின்றாய் 

கண்டு கொண்டிலேன் காமவாழ் வதனால் 
சிந்தை நொந்தயர் கின்றனன் சிவனே 

செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் 
எந்த நல்வழி யால்உனை அடைவேன் 

யாதுந் தேர்ந்திலேன் போதுபோ வதுகாண் 
புந்தி இன்பமே ஒற்றிஅம் பரனே 

போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.

6
1083.

அல்லல் என்னைவிட் டகன்றிட ஒற்றி 
அடுத்து நிற்கவோ அன்றிநற் புலியூர்த் 
தில்லை மேவவோ அறிந்திலேன் சிவனே 

செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் 
ஒல்லை இங்குவா என்றருள் புரியா 

தொழிதி யேல்உனை உறுவதெவ் வணமோ 
புல்லர் மேவிடா ஒற்றிஅம் பரனே 

போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.

7
1084.

ஞால வாழ்க்கையை நம்பிநின் றுழலும் 

நாய்க ளுக்கெலாம் நாயர சானேன் 
சீலம் ஒன்றிலேன் திகைக்கின்றேன் சிவனே 

செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் 
ஏல நின்அருள் ஈதியேல் உய்வேன் 

இல்லை யேல்எனக் கில்லைஉய் திறமே 
போல என்றுரை யாஒற்றி அரசே 

போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.

8
1085.

சுத்த நெஞ்சருள் சேர்க்கினும் அலது 

சோம்பல் நெஞ்சருள் சேர்க்கினும் நினது 
சித்தம் என்னள வன்றது சிவனே 

செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் 
நித்தம் நின்னடி அன்றிஒன் றேத்தேன் 

நித்த னேஅது நீஅறி யாயோ 
புத்த ருந்தமிழ் ஒற்றியூர் அரசே 

போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.

9
1086.

தத்து மத்திடைத் தயிரென வினையால் 

தளர்ந்து மூப்பினில் தண்டுகொண் டுழன்றே 
செத்து மீளவும் பிறப்பெனில் சிவனே 

செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் 
தொத்து வேண்டும்நின் திருவடிக் கெனையே 

துட்டன் என்றியேல் துணைபிறி தறியேன் 
புத்தை நீக்கிய ஒற்றிஅம் பரனே 

போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.

10
1087.

பரிந்தி லேன்அருட் பாங்குறும் பொருட்டாய்ப் 

பந்த பாசத்தைப் பறித்திடும் வழியைத் 
தெரிந்தி லேன்திகைப் புண்டனன் சிவனே 

செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் 
விரிந்த நெஞ்சமும் குவிந்தில இன்னும் 

வெய்ய மாயையில் கையற வடைந்தே 
புரிந்து சார்கின்ற தொற்றிஅம் பரனே 

போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.

11

Back

 


 

47. ஆற்றா விண்ணப்பம்

திருவொற்றியூர் 
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

1088.

அன்னையில் பெரிதும் இனியஎன் அரசே 

அம்பலத் தாடல்செய் அமுதே 
பொன்னைஒத் தொளிரும் புரிசடைக் கனியே 

போதமே ஒற்றிஎம் பொருளே 
உன்னைவிட் டயலார் உறவுகொண் டடையேன் 

உண்மைஎன் உள்ளம்நீ அறிவாய் 
என்னைவிட் டிடில்நான் என்செய்வேன் ஒதிபோல் 

இருக்கின்ற இவ்வெளி யேனே.

1
1089.

எளியனேன் மையல் மனத்தினால் உழன்றேன் 

என்செய்வேன் என்செய்வேன்பொல்லாக் 
களியனேன் வாட்டம் கண்டனை இன்னும் 

கருணைசெய் திலைஅருட் கரும்பே 
அளியனே திருச்சிற் றம்பலத் தொளியே 

அருமருந் தேவட வனத்துத் 
தனியனே ஒற்றித் தலத்தமர் மணியே 

தயையிலி போல்இருந் தனையே.

2
1090.

இருந்தனை எனது நெஞ்சினுள் எந்தாய் 

என்துயர் அறிந்திலை போலும் 
முருந்தனை முறுவல் மங்கையர் மலைநேர் 

முலைத்தலை உருண்டன னேனும் 
மருந்தனை யாய்உன் திருவடி மலரை 

மறந்திலேன் வழுத்துகின் றனன்காண் 
வருந்தனை யேல்என் றுரைத்திலை ஐயா 

வஞ்சகம் உனக்கும்உண் டேயோ.

3
1091.

உண்டநஞ் சின்னும் கண்டம்விட் டகலா 

துறைந்தது நாடொறும் அடியேன் 
கண்டனன் கருணைக் கடல்எனும் குறிப்பைக் 

கண்டுகண் டுளமது நெகவே 
விண்டனன் என்னைக் கைவிடில் சிவனே 

விடத்தினும் கொடியன்நான் அன்றோ 
அண்டர்கட் கரசே அம்பலத் தமுதே 

அலைகின்றேன் அறிந்திருந் தனையே.

4
1092.

தனையர்செய் பிழையைத் தந்தையர் குறித்துத் 

தள்ளுதல் வழக்கல என்பார் 
வினையனேன் பிழையை வினையிலி நீதான் 

விவகரித் தெண்ணுதல் அழகோ 
உனையலா திறந்தும் பிறந்தும்இவ் வுலகில் 

உழன்றிடுந் தேவரை மதியேன் 
எனையலா துனக்கிங் காளிலை யோஉண்

டென்னினும் ஏன்றுகொண் டருளே.

5
1093.

ஏன்றுகொண் டருள வேண்டும்இவ் எளியேன் 

இருக்கினும் இறக்கினும் பொதுவுள் 
ஊன்றுகொண் டருளும் நின்னடி யல்லால் 

உரைக்கும்மால் அயன்முதல் தேவர் 
நான்றுகொண் டிடுவ ரேனும்மற் றவர்மேல் 

நாஎழா துண்மையீ திதற்குச் 
சான்றுகொண் டருள நினைத்தியேல் என்னுள் 

சார்ந்தநின் சரண்இரண் டன்றே.

6
1094.

சரணவா ரிசம்என் தலைமிசை இன்னும் 

தரித்திலை தாழ்த்தனை அடியேன் 
கரணவா தனையும் கந்தவா தனையும் 

கலங்கிடக் கபமிழுத் துந்தும் 
மரணவா தனைக்கென் செய்குவம் என்றே 

வருந்துகின் றனன்மனம் மாழாந் 
தரணமூன் றெரிய நகைத்தஎம் இறையே 

அடியனை ஆள்வதுன் கடனே.

7
1095.

கடம்பொழி ஓங்கல் உரிஉடை உடுக்கும் 

கடவுளே கடவுளர் கோவே 
மடம்பொழி மனத்தேன் மலஞ்செறிந் தூறும் 

வாயில்ஓர் ஒன்பதில் வரும்இவ் 
உடம்பொழிந் திடுமேல் மீண்டுமீண் டெந்த

உடம்புகொண் டுழல்வனோஎன்று 
நடம்பொழி பதத்தாய் நடுங்குகின் றனன்காண் 

நான்செயும் வகைஎது நவிலே.

8
1096.

வகைஎது தெரிந்தேன் ஏழையேன் உய்வான் 

வள்ளலே வலிந்தெனை ஆளும் 
தகைஅது இன்றேல் என்செய்வேன் உலகர் 

சழக்குடைத் தமியன்நீ நின்ற 
திகைஎது என்றால் சொலஅறி யாது 

திகைத்திடும் சிறியனேன் தன்னைப் 
பகைஅது கருதா தாள்வதுன் பரங்காண் 

பவளமா நிறத்தகற் பகமே.

9
1097.

கற்பன அறிந்து கற்கிலேன் சழக்குக் 

கல்விகற் றுழன்றனன் கருணை 
சொற்பன மதிலும் காண்கிலேன் பொல்லாச் 

சூகரம் எனமலம் துய்த்தேன் 
விற்பனன் எனவே நிற்பது விழைந்தேன் 

வீணனேன் விரகிலா வெறியேன் 
அற்பனேன் தன்னை ஆண்டநின் அருளை 

ஆய்ந்திடில் அன்னையின் பெரிதே.

10

Back


 

48.சந்நிதி முறையீடு

திருவொற்றியூரும் திருத்தில்லையும் 
கலி விருத்தம்(30)

(30). வஞ்சி விருத்தம் - தொ. வே. 1, ச.மு.க; 
கலி விருத்தம் - தொ.வே. 2, ஆ.பா.

1098.ஒற்றி மேவிய உத்தம னேமணித் 
தெற்றி மேவிய தில்லையப் பாவிழி 
நெற்றி மேவிய நின்மல னேஉனைப் 
பற்றி மேவிய நெஞ்சம்உன் பாலதே.
1
1099.பாலின் நீற்றுப் பரஞ்சுட ரேமலர்க் 
காலின் ஈற்றுக் கதிபெற ஏழையேன் 
மாலின் ஈற்று மயக்கறல் என்றுகல் 
ஆலின் ஈற்றுப் பொருள்அருள் ஆதியே.
2
1100.ஆதி யேதில்லை அம்பலத் தாடல்செய் 
சோதி யேதிருத் தோணிபு ரத்தனே 
ஓதி யேதரும் ஒற்றிஅப் பாஇது 
நீதி யேஎனை நீமரு வாததே.
3
1101.வாதம் ஓதிய வஞ்சரைக் காணில்ஓர் 
காதம் ஓடும் கடியனை ஆள்வது 
நீத மோஅன்றி நேரும்அ நீதமோ 
ஓதம் ஓதொலி ஒற்றித்த லத்தனே.
4
1102.தலத்த னேதில்லைச் சங்கர னேதலைக் 
கலத்த னேநெற்றிக் கண்ணுடை யாளனே 
நலத்த னேஒற்றி நாயக னேஇந்த 
மலத்த னேனையும் வாழ்வித்தல் மாண்பதே.
5
1103.மாண்கொள் அம்பல மாணிக்க மேவிடம் 
ஊண்கொள் கண்டத்தெம் ஒற்றிஅப் பாஉன்தன் 
ஏண்கொள் சேவடி இன்புகழ் ஏத்திடாக் 
கோண்கொள் நெஞ்சக் கொடியனும் உய்வனே.
6
1104.உய்யும் வண்ணம்இங் குன்அருள் எய்தநான் 
செய்யும் வண்ணம்தெ ரிந்திலன் செல்வமே 
பெய்யும் வண்ணப்பெ ருமுகி லேபுரம் 
எய்யும் வண்ணம்எ ரித்தருள் எந்தையே.
7
1105.எந்தை யேதில்லை எம்இறை யேகுகன் 
தந்தை யேஒற்றித் தண்அமு தேஎன்தன் 
முந்தை ஏழ்பவ மூடம யக்கறச் 
சிந்தை ஏதம்தி ருந்தஅ ருள்வையே.
8
1106.திருந்த நான்மறைத் தில்லைச்சிற் றம்பலத் 
திருந்த ஞானஇ யல்ஒளி யேஒற்றிப் 
பொருந்த நின்றருள் புண்ணிய மேஇங்கு 
வருந்த என்தனை வைத்தத ழகதோ.
9
1107.வைத்த நின்அருள் வாழிய வாழிய 
மெய்த்த தில்லையின் மேவிய இன்பமே 
உய்த்த நல்அருள் ஒற்றிஅப் பாஎனைப் 
பொய்த்த சிந்தைவிட் டுன்தனைப் போற்றவே.
10
1108.போற்ற வைத்தனை புண்ணிய னேஎனைச் 
சாற்ற வைத்தனை நின்புகழ்த் தன்மையைத் 
தேற்ற வைத்தனை நெஞ்சைத்தெ ளிந்தன்பை 
ஊற்ற வைத்தனை உன்ஒற்றி மேவியே.
11

Back

 


 

49. இரங்கல் விண்ணப்பம்

திருவொற்றியூர் 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

1109.

பற்று நோக்கிய பாவியேன் தனக்குப் 

பரிந்து நீஅருட் பதம்அளித் திலையே 
மற்று நோக்கிய வல்வினை அதனால் 

வஞ்ச மாயையின் வாழ்க்கையின் மனத்தின் 
அற்று நோக்கிய நோய்களின் மூப்பின் 

அலைதந் திவ்வுல கம்படும் பாட்டை 
உற்று நோக்கினால் உருகுதென் உள்ளம் 

ஒற்றி மேவிய உலகுடை யோனே.

1
1110.

கொடிய நெஞ்சினேன் கோபமே அடைந்தேன் 

கோடி கோடியாம் குணப்பழு துடையேன் 
கடிய வஞ்சகக் கள்வனேன் தனக்குன் 

கருணை ஈந்திடா திருந்திடில் கடையேன் 
அடியன் ஆகுவ தெவ்வணம் என்றே 

ஐய ஐயநான் அலறிடு கின்றேன் 
ஒடிய மும்மலம் ஒருங்கறுத் தவர்சேர் 

ஒற்றி மேவிய உலகுடை யோனே.

2
1111.

காமம் என்பதோர் உருக்கொடிவ் வுலகில் 

கலங்கு கின்றஇக் கடையனேன் தனக்குச் 
சேமம் என்பதாம் நின்அருள் கிடையாச் 

சிறுமை யேஇன்னும் செறிந்திடு மானால் 
ஏம நெஞ்சினர் என்றனை நோக்கி 

ஏட நீகடை என்றிடில் அவர்முன் 
ஊமன் ஆகுவ தன்றிஎன் செய்வேன் 

ஒற்றி மேவிய உலகுடை யோனே.

3
1112.

மண்ணில் நின்றவர் வாழ்வதும் கணத்தில் 

வருந்தி மாய்வதும் மற்றிவை எல்லாம் 
கண்ணின் நேர்நிதங் கண்டும்இவ் வாழ்வில் 

காதல் நீங்கிலாக் கல்மனக் கொடியேன் 
எண்ணி நின்றஓர் எண்ணமும் முடியா 

தென்செய் கேன்வரும் இருவினைக் கயிற்றால் 
உண்ணி ரம்பநின் றாட்டுகின் றனைநீ 

ஒற்றி மேவிய உலகுடை யோனே.

4
1113.

வெருட்சி யேதரும் மலஇரா இன்னும் 

விடியக் கண்டிலேன் வினையினேன் உள்ளம் 
மருட்சி மேவிய தென்செய்கேன் உன்பால் 

வருவ தற்கொரு வழியும்இங் கறியேன் 
தெருட்சி யேதரும் நின்அருள் ஒளிதான் 

சேரில் உய்குவேன் சேர்ந்தில தானால் 
உருட்சி ஆழிஒத் துழல்வது மெய்காண் 

ஒற்றி மேவிய உலகுடை யோனே.

5
1114.

யாதும் உன்செய லாம்என அறிந்தும் 

ஐய வையமேல் அவர்இவர் ஒழியாத் 
தீது செய்தனர் நன்மைசெய் தனர்நாம் 

தெரிந்து செய்வதே திறம்என நினைத்துக் 
கோது செய்மலக் கோட்டையைக் காவல் 

கொண்டு வாழ்கிறேன் கண்டிட இனிநீ 
ஓது செய்வதொன் றென்னுயிர்த் துணையே 

ஒற்றி மேவிய உலகுடை யோனே.

6
1115.

பந்த மட்டின்ஆம் பாவிநெஞ் சகத்தால் 

பவப்பெ ருங்கடல் படிந்துழன் றயர்ந்தேன் 
இந்த மட்டில்நான் உழன்றதே அமையும் 

ஏற வேண்டும்உன் எண்ணமே தறியேன் 
அந்த மட்டினில் இருத்தியோ அன்றி 

அடிமை வேண்டிநின் அருட்பெரும் புணையை 
உந்த மட்டினால் தருதியோ உரையாய் 

ஒற்றி மேவிய உலகுடை யோனே.

7
1116.

ஞான மென்பதின் உறுபொருள் அறியேன் 

ஞானி அல்லன்நான் ஆயினும் கடையேன் 
ஆன போதிலும் எனக்குநின் அருள்ஓர் 

அணுவில் பாதியே ஆயினும் அடைந்தால் 
வான மேவிய அமரரும் அயனும் 

மாலும் என்முனம் வலியிலர் அன்றே 
ஊனம் நீக்கிநல் அருள்தரும் பொருளே 

ஒற்றி மேவிய உலகுடை யோனே.

8
1117.

அளிய நெஞ்சம்ஓர் அறிவுரு வாகும் 

அன்பர் தம்புடை அணுகிய அருள்போல் 
எளிய நெஞ்சினேற் கெய்திடா தேனும் 

எள்ளில் பாதிமட் டீந்தருள் வாயேல் 0
களிய மாமயல் காடற எறிந்தாங் 

கார வேரினைக் களைந்துமெய்ப் போத 
ஒளிய வித்தினால் போகமும் விளைப்பேன் 

ஒற்றி மேவிய உலகுடை யோனே.

9
1118.

நாக நாட்டதின் நலம்பெற வேண்டேன் 

நரகில் ஏகென நவிலினும் அமைவேன் 
ஆகம் நாட்டிடை விடுகெனில் விடுவேன் 

அல்லல் ஆம்பவம் அடைஎனில் அடைவேன் 
தாகம் நாட்டிய மயல்அற அருள்நீர் 

தருதல் இல்எனச் சாற்றிடில் தரியேன் 
ஓகை நாட்டிய யோகியர் பரவும் 

ஒற்றி மேவிய உலகுடை யோனே.

10

Back


 

50. நெஞ்சொடு நேர்தல்

கோயில் 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

1119.

அணிகொள் கோவணக் கந்தையே நமக்கிங் 

கடுத்த ஆடைஎன் றறிமட நெஞ்சே 
கணிகொள் மாமணிக் கலன்கள்நம் கடவுள் 

கண்ணுண் மாமணிக் கண்டிகை கண்டாய் 
பிணிகொள் வன்பவம் நீக்கும்வெண் ணீறே 

பெருமைச் சாந்தமாம் பிறங்கொளி மன்றில் 
திணிகொள் சங்கர சிவசிவ என்று 

சென்று வாழ்த்தலே செய்தொழி லாமே.

1
1120.

செய்த நன்றிமேல் தீங்கிழைப் பாரில் 

திருப்பும் என்தனைக் திருப்புகின் றனைநீ 
பெய்த பாலினைக் கமரிடைக் கவிழ்க்கும் 

பேதை யாதலில் பிறழ்ந்தனை உனைநான் 
வைத போதினும் வாழ்த்தென நினைத்து 

மறுத்து நீக்கிஅவ் வழிநடக் கின்றாய் 
கொய்த கோட்டினை நட்டனை வளர்ப்பாய் 

கொடிய நெஞ்சமே மடியகிற் றிலையே.

2
1121.

இலைஎ னாதணு வளவும்ஒன் றீய 

எண்ணு கின்றிலை என்பெறு வாயோ 
கொலைஇ னாதென அறிந்திலை நெஞ்சே 

கொல்லு கின்றஅக் கூற்றினும் கொடியாய் 
தலையின் மாலைதாழ் சடையுடைப் பெருமான் 

தாள்நி னைந்திலை ஊண்நினைந் துலகில் 
புலையி னார்கள்பால் போதியோ வீணில் 

போகப் போகஇப் போக்கினில் அழிந்தே.

3
1122.

அழிந்த வாழ்க்கையின் அவலமிங் கனைத்தும் 

ஐயம் இன்றிநீ அறிந்தனை நெஞ்சே 
கழிந்த எச்சிலை விழைந்திடு வார்போல் 

கலந்து மீட்டுநீ கலங்குகின் றனையே 
மொழிந்த முன்னையோர் பெறும்சிவ கதிக்கே 

முன்னு றாவகை என்னுறும் உன்னால் 
இழிந்த நாயினும் கடையனாய் நின்றேன் 

என்செய் வேன்உனை ஏன்அடுத் தேனே.

4
1123.

தேன்நெய் ஆடிய செஞ்சடைக் கனியைத் 

தேனை மெய்அருள் திருவினை அடியர் 
ஊனை நெக்கிட உருக்கிய ஒளியை 

உள்ளத் தோங்கிய உவப்பினை மூவர் 
கோனை ஆனந்தக் கொழுங்கடல் அமுதைக் 

கோம ளத்தினைக் குன்றவில் லியைஎம் 
மானை அம்பல வாணனை நினையாய் 
வஞ்ச நெஞ்சமே மாய்ந்திலை இனுமே.

5
1124.

இன்னும் எங்ஙனம் ஏகுகின் றனையோ 

ஏழை நெஞ்சமே இங்குமங் குந்தான் 
முன்னை நாம்பிறந் துழன்றஅத் துயரை 

முன்னில் என்குலை முறுக்குகின் றனகாண் 
என்னை நீஎனக் குறுதுணை அந்தோ 

என்சொல் ஏற்றிலை எழில்கொளும் பொதுவில் 
மன்னு நம்முடை வள்ளலை நினனத்தால் 

மற்று நாம்பிற வாவகை வருமே.

6
1125.

பிறந்து முன்னர்இவ் வுலகினாம் பெண்டு 

பிள்ளை ஆதிய பெருந்தொடக் குழந்தே 
இறந்து வீழ்கதி இடைவிழுந் துழன்றே 

இருந்த சேடத்தின் இத்தனை எல்லாம் 
மறந்து விட்டனை நெஞ்சமே நீதான் 

மதியி லாய்அது மறந்திலன் எளியேன் 
துறந்து நாம்பெறும் சுகத்தினை அடையச் 

சொல்லும் வண்ணம்நீ தொடங்கிடில் நன்றே.

7
1126.

நன்று செய்வதற் குடன்படு வாயேல் 

நல்ல நெஞ்சமே வல்லஇவ் வண்ணம் 
இன்று செய்திநீ நாளைஎன் பாயேல் 

இன்றி ருந்தவர் நாளைநின் றிலரே 
ஒன்று கேண்மதி சுகர்முதல் முனிவோர் 

உக்க அக்கணம் சிக்கெனத் துறந்தார் 
அன்று முன்னரே கடந்தனர் அன்றி 

அதற்கு முன்னரே அகன்றனர் அன்றே.

8
1127.

அன்றி னேர்கிலை நம்முடைப் பெருமான் 

அஞ்செ ழுத்தையும் அடிக்கடி மறந்தாய் 
ஒன்றி மேற்கதி உறவகை அந்தோ 

உணர்கி லாய்வயிற் றூண்பொருட் டயலோர் 
முன்றில் காத்தனை அவ்வள வேனும் 

முயன்று காத்திலை முன்னவன் கோயில் 
துன்றி நின்றநல் தொண்டர்தம் தொழும்பு 

தொடங்கு வானவர் தூயமுன் றிலையே.

9
1128.

தூய நெஞ்சமே சுகம்பெற வேண்டில் 

சொல்லு வாம்அது சொல்லள வன்றால் 
காய மாயமாம் கான்செறிந் துலவும் 

கள்வர் ஐவரைக் கைவிடுத் ததன்மேல் 
பாய ஆணவப் பகைகெட முருக்கிப் 

பகல்இ ராஇலாப் பாங்கரின் நின்றே 
ஆய வானந்தக் கூத்துடைப் பரமா 

காய சோதிகண் டமருதல் அணியே.

10

Back


 

51.சிவானந்தப் பத்து

திருவொற்றியூரும் திருத்தில்லையும் 
எண்சீர்க்(31) கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

(31). எழுசீர் - தொ.வே. 1,2; எண்சீர் - ச.மு.க; ஆ.பா.

1129.

இச்சை உண்டெனக் குன்திரு மலர்த்தாள் 

எய்தும் வண்ணம்இங் கென்செய வல்லேன் 
கொச்சை நெஞ்சம்என் குறிப்பில்நில் லாது 

குதிப்பில் நின்றது மதிப்பின்இவ் வுலகில் 
பிச்சை உண்டெனிற் பிச்சரிற் சீறும் 

பேய ருண்மனை நாயென உழைத்தேன் 
செச்சை மேனிஎம் திருவொற்றி அரசே 

தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

1
1130.

ஐய நின்னுடை அன்பர்கள் எல்லாம் 

அழிவில் இன்பமுற் றருகிருக் கின்றார் 
வெய்ய நெஞ்சகப் பாவியேன் கொடிய 

வீண னேன்இங்கு வீழ்கதிக் கிடமாய் 
வைய வாழ்க்கையின் மயங்குகின் றனன்மேல் 

வருவ தோர்ந்திலன் வாழ்வடை வேனோ 
செய்ய வண்ணனே ஒற்றியம் பொருளே 
தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

2
1131.

மடிகொள் நெஞ்சினால் வள்ளல்உன் மலர்த்தாள் 

மறந்து வஞ்சக வாழ்க்கையை மதித்தேன் 
துடிகொள் நேர்இடை மடவியர்க் குருகிச் 

சுழல்கின் றேன்அருள் சுகம்பெறு வேனோ 
வடிகொள் வேல்கரத் தண்ணலை ஈன்ற 

வள்ள லேஎன வாழ்த்துகின் றவர்தம் 
செடிகள் நீக்கிய ஒற்றியம் பரனே 

தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

3
1132.

இருக்க வாவுற உலகெலாம் உய்ய 

எடுத்த சேவடிக் கெள்ளள வேனும் 
உருக்கம் ஒன்றிலேன் ஒதியினில் பெரியேன் 

ஒண்மை எய்துதல் வெண்மைமற் றன்றே 
தருக்க நின்றஎன் தன்மையை நினைக்கில் 

தமிய னேனுக்கே தலைநடுக் குறுங்காண் 
திருக்கண் மூன்றுடை ஒற்றிஎம் பொருளே 

தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

4
1133.

எண்பெ றாவினைக் கேதுசெய் உடலை 

எடுத்த நாள்முதல் இந்தநாள் வரைக்கும் 
நண்பு றாப்பவம் இயற்றினன் அல்லால் 

நன்மை என்பதோர் நாளினும் அறியேன் 
வண்பெ றாவெனக் குன்திரு அருளாம் 

வாழ்வு நேர்ந்திடும் வகைஎந்த வகையோ 
திண்பெ றாநிற்க அருள்ஒற்றி அமுதே 

தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

5
1134.

பேதை நெஞ்சினேன் செய்பிழை எல்லாம் 

பேசி னால்பெரும் பிணக்கினுக் கிடமாம் 
தாதை நீஅவை எண்ணலை எளியேன் 

தனக்கு நின்திருத் தண்அளி புரிவாய் 
கோதை நீக்கிய முனிவர்கள் காணக் 

கூத்து கந்தருள் குணப்பெருங் குன்றே 
தீதை நீக்கிய ஒற்றிஎம் பெருமான் 

தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

6
1135.

வஞ்ச நெஞ்சர்தம் சேர்க்கையைத் துறந்து 

வள்ளல் உன்திரு மலரடி ஏத்தி 
விஞ்சு நெஞ்சர்தம் அடித்துணைக் கேவல் 

விரும்பி நிற்கும்அப் பெரும்பயன் பெறவே 
தஞ்சம் என்றருள் நின்திருக் கோயில் 

சார்ந்து நின்றனன் தருதல்மற் றின்றோ 
செஞ்சொல் ஓங்கிய ஒற்றிஎம் பெருமான் 

தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

7
1136.

புல்ல னேன்புவி நடையிடை அலையும் 

புலைய நெஞ்சினால் பொருந்திடும் கொடிய 
அல்லல் என்பதற் கெல்லைஒன் றறியேன் 

அருந்து கின்றனன் விருந்தினன் ஆகி 
ஒல்லை உன்திருக் கோயில்முன் அடுத்தேன் 

உத்த மாஉன்தன் உள்ளம்இங் கறியேன் 
செல்லல் நீக்கிய ஒற்றியம் பொருளே 

தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

8
1137.

எளிய னேன்பிழை இயற்றிய எல்லாம் 

எண்ணி னுட்படா வேனும்மற் றவையை 
அளிய நல்லருள் ஈந்திடும் பொருட்டால் 

ஆய்தல் நன்றல ஆதலின் ஈண்டே 
களிய நெஞ்சமாம் கருங்கலைக் கரைத்துக் 

கருணை ஈகுதல் கடன்உனக் கையா 
தெளிய ஓங்கிய ஒற்றிஎன் அமுதே 

தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

9
1138.

வெறிபி டிக்கினும் மகன்தனைப் பெற்றோர் 

விடுத்தி டார்அந்த வெறியது தீரும் 
நெறிபி டித்துநின் றாய்வரென் அரசே 

நீயும் அப்படி நீசனேன் தனக்குப் 
பொறிபி டித்தநல் போதகம் அருளிப் 

புன்மை யாவையும் போக்கிடல் வேண்டும் 
செறிபி டித்தவான் பொழில்ஒற்றி அமுதே 

தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

10

Back

 


 

52.காதல் விண்ணப்பம்

திருவொற்றியூர் 
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் 

1139.

வஞ்சக வினைக்கோர் கொள்கலம் அனைய 

மனத்தினேன் அனைத்தினும் கொடியேன் 
தஞ்சம்என் றடைந்தே நின்திருக் கோயில் 

சந்நிதி முன்னர்நிற் கின்றேன் 
எஞ்சலில் அடங்காப் பாவிஎன் றெனைநீ 

இகழ்ந்திடில் என்செய்வேன் சிவனே 
கஞ்சன்மால் புகழும் ஒற்றியங் கரும்பே 

கதிதரும் கருணையங் கடலே.

1
1140.

நிற்பது போன்று நிலைபடா உடலை 

நேசம்வைத் தோம்புறும் பொருட்டாய்ப் 
பொற்பது தவிரும் புலையர்தம் மனைவாய்ப் 

புந்திநொந் தயர்ந்தழு திளைத்தேன் 
சொற்பதங் கடந்த நின்திரு வடிக்குத் 

தொண்டுசெய் நாளும்ஒன் றுளதோ 
கற்பது கற்றோர் புகழ்திரு வொற்றிக் 

காவல்கொள் கருணையங் கடலே.

2
1141.

முன்னைவல் வினையால் வஞ்சக மடவார் 

முழுப்புலைக் குழிவிழுந் திளைத்தேன் 
என்னையோ கொடியேன் நின்திரு வருள்தான் 

எய்தில னேல்உயிர்க் குறுதிப் 
பின்னைஎவ் வணந்தான் எய்துவ தறியேன் 

பேதையில் பேதைநான் அன்றோ 
கன்னலே தேனே ஒற்றிஎம் அமுதே 

கடவுளே கருணையங் கடலே.

3
1142.

மண்ணினுள் மயங்கி வஞ்சக வினையால் 

மனந்தளர்ந் தழுங்கிநாள் தோறும் 
எண்ணினுள் அடங்காத் துயரொடும் புலையர் 

இல்லிடை மல்லிடு கின்றேன் 
விண்ணினுள் இலங்கும் சுடர்நிகர் உனது 

மெல்அடிக் கடிமைசெய் வேனோ 
கண்ணினுள் மணியே ஒற்றியங் கனியே 

கடவுளே கருணையங் கடலே.

4
1143.

அளவிலா உலகத் தனந்தகோ டிகளாம் 

ஆருயிர்த் தொகைக்குளும் எனைப்போல் 
இளகிலா வஞ்ச நெஞ்சகப் பாவி 

ஏழைகள் உண்டுகொல் இலைகாண் 
தளர்விலா துனது திருவடி எனும்பொற் 

றாமரைக் கணியனா குவனோ 
களவிலார்க் கினிய ஒற்றிஎம் மருந்தே 

கனந்தரும் கருணையங் கடலே.

5
1144.

ஞானம்என் பதிலோர் அணுத்துணை யேனும் 

நண்ணிலேன் புண்ணியம் அறியேன் 
ஈனம்என் பதனுக் கிறைஎனல் ஆனேன் 

எவ்வணம் உய்குவ தறியேன் 
வானநா டவரும் பெறற்கரு நினது 

மலரடித் தொழும்புசெய் வேனோ 
கானவேட் டுருவாம் ஒருவனே ஒற்றிக் 

கடவுளே கருணையங் கடலே.

6
1145.

ஞாலவாழ் வனைத்தும் கானல்நீர் எனவே 

நன்கறிந் துன்திரு அருளாம் 
சீலவாழ் வடையும் செல்வம்இப் பொல்லாச் 

சிறியனும் பெறுகுவ தேயோ 
நீலமா மிடற்றுப் பவளமா மலையே 

நின்மல ஆனந்த நிலையே 
காலன்நாண் அவிழ்க்கும் காலனே ஒற்றிக் 

கடவுளே கருணையங் கடலே.

7
1146.

மாலொடு நான்கு வதனனும் காணா 

மலரடிக் கடிமைசெய் தினிப்பாம் 
பாலொடு கலந்த தேன்என உன்சீர் 

பாடும்நாள் எந்தநாள் அறியேன் 
வேலொடு மயிலும் கொண்டிடுஞ் சுடரை 

விளைவித்த வித்தக விளக்கே 
காலொடு பூதம் ஐந்துமாம் ஒற்றிக் 

கடவுளே கருணையங் கடலே.

8
1147.

சற்றும்நற் குணந்தான் சார்ந்திடாக் கொடியார் 

தந்தலை வாயிலுள் குரைக்கும் 
வெற்றுநாய் தனக்கும் வேறுநா யாக 

மெலிகின்றேன் ஐம்புலச் சேட்டை 
அற்றுநின் றவர்க்கும் அரியநின் திருத்தாட் 

கடிமைசெய் தொழுகுவ னேயோ 
கற்றுமுற் றுணர்ந்தோர்க் கருள்தரும் ஒற்றிக் 

கடவுளே கருணையங்கடலே.

9
1148.

மறைகளும் இன்னும் தலைத்தலை மயங்க 

மறைந்துல குயிர்தொறும் ஒளித்த 
இறைவநின் திருத்தாட் கன்பிலாக் கொடியன் 

என்னினும் ஏழையேன் தனக்கு 
நிறைதரும் நினது திருவருள் அளிக்க 

நினைத்தலே நின்கடன் கண்டாய் 
கறைமணி மிடற்றுத் தெய்வமே ஒற்றிக் 

காவல்கொள் கருணையங் கடலே.

10

Back


 

53. பொருள் விண்ணப்பம்

திருவொற்றியூர் 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

1149.

உலக வாழ்க்கையின் உழலும்என் நெஞ்சம் 

ஒன்று கோடியாய்ச் சென்றுசென் றுலைந்தே 

கலக மாயையில் கவிழ்க்கின்ற தெளியேன் 

கலுழ்கின் றேன்செயக் கடவதொன் றறியேன் 
இலகும் அன்பர்தம் எய்ப்பினில் வைப்பே 

இன்ப வெள்ளமே என்னுடை உயிரே 
திலக மேதிரு ஒற்றிஎம் உறவே 

செல்வ மேபர சிவபரம் பொருளே.

1
1150.

எண்ணி லாநினைப் புற்றதின் வழியே 

இன்ப துன்பங்கள் எய்திஎன் நெஞ்சம் 
கண்ணி லாக்குரங் கெனஉழன் றதுகாண் 

கடைய னேன்செயக் கடவதொன் றறியேன் 
பெண்நி லாவிய பாகத்தெம் அமுதே 

பிரமன் ஆதியர் பேசரும் திறனே 
தெண்நி லாமுடி ஒற்றியங் கனியே 

செல்வ மேபர சிவபரம் பொருளே.

2
1151.

ஊண்உ றக்கமே பொருள்என நினைத்த 

ஒதிய னேன்மனம் ஒன்றிய தின்றாய்க் 
காணு றக்கருங் காமஞ்சான் றதுகாண் 

கடைய னேன்செயக் கடவதொன் றறியேன் 
மாணு றக்களங் கறுத்தசெம் மணியே 

வள்ள லேஎனை வாழ்விக்கும் மருந்தே 
சேணு றத்தரும் ஒற்றிநா யகமே 

செல்வ மேபர சிவபரம் பொருளே.

3
1152.

யாது சொல்லினும் கேட்பதின் றந்தோ 

யான்செய் தேன்என தென்னும்இவ் இருளில் 
காது கின்றதென் வஞ்சக நெஞ்சம் 

கடைய னேன்செயக் கடவதொன் றறியேன் 
ஓது மாமறை உபநிட தத்தின் 

உச்சி மேவிய வச்சிர மணியே 
தீது நீக்கிய ஒற்றியந் தேனே 

செல்வ மேபர சிவபரம் பொருளே.

4
1153.

சொல்லும் சொல்லள வன்றுகாண் நெஞ்சத் 

துடுக்க னைத்தும்இங் கொடுக்குவ தெவனோ 
கல்லும் பிற்படும் இரும்பினும் பெரிதால் 

கடைய னேன்செயக் கடவதொன் றறியேன் 
அல்லும் எல்லும்நின் றகங்குழைந் தேத்தும் 

அன்பருள் ஊறும் ஆனந்தப் பெருக்கே 
செல்லு லாம்பொழில் ஒற்றியங் கரும்பே 

செல்வ மேபர சிவபரம் பொருளே.

5
1154.

இம்மை இன்பமே வீடெனக் கருதி 

ஈனர் இல்லிடை இடர்மிக உழந்தே 
கைம்மை நெஞ்சம்என் றனைவலிப் பதுகாண் 

கடைய னேன்செயக் கடவதொன் றறியேன் 

முக்கண் மூர்த்தியே முத்தியின் முதலே 
செம்மை மேனிஎம் ஒற்றியூர் அரசே 

செல்வ மேபர சிவபரம் பொருளே.

6
1155.

நின்ன டிக்கண்ஓர் கணப்பொழு தேனும் 

நிற்ப தின்றியே நீசமங் கையர்தம் 
கன்ன வில்தனம் விழைந்தது மனம்காண் 

கடைய னேன்செயக் கடவதொன் றறியேன் 
அன்ன ஊர்தியும் மாலும்நின் றலற 

அடியர் தங்களுள் அமர்ந்தருள் அமுதே 
தென்இ சைப்பொழில் ஒற்றிஎம் வாழ்வே 

செல்வ மேபர சிவபரம் பொருளே.

7
1156.

புலைய மங்கையர் புணர்முலைக் குவட்டில் 

போந்து ருண்டெனைப் புலன்வழிப் படுத்திக் 
கலைய நின்றதிக் கல்லுறழ் மனந்தான் 

கடைய னேன்செயக் கடவதொன் றறியேன் 
விலையி லாஉயர் மாணிக்க மணியே 

வேத உச்சியில் விளங்கொளி விளக்கே 
சிலைவி லாக்கொளும் ஒற்றிஎம் மருந்தே 

செல்வ மேபர சிவபரம் பொருளே.

8
1157.

தந்தை தாய்மனை மக்கள்என் றுலகச் 

சழக்கி லேஇடர் உழக்கும்என் மனந்தான் 
கந்த வாதனை இயற்றுகின் றதுகாண் 

கடைய னேன்செயக் கடவதொன் றறியேன் 
எந்தை யேஎனை எழுமையும் தொடர்ந்த 

இன்ப வெள்ளமே என்உயிர்க் குயிரே 
சிந்தை ஓங்கிய ஒற்றிஎந் தேவே 

செல்வ மேபர சிவபரம் பொருளே.

9
1158.

கொடிய வஞ்சக நெஞ்சகம் எனும்ஓர் 

குரங்கிற் கென்உறு குறைபல உரைத்தும் 
கடிய தாதலின் கசிந்தில தினிஇக் 

கடைய னேன்செயக் கடவதொன் றறியேன் 
அடிய னேன்பிழை உளத்திடை நினையேல் 

அருளல் வேண்டும்என் ஆருயிர்த் துணையே 
செடிகள் நீக்கிய ஒற்றிஎம் உறவே 

செல்வ மேபர சிவபரம் பொருளே.

10

Back


 

54. திருவண்ண விண்ணப்பம்

திருவொற்றியூர் 
கொச்சகக் கலிப்பா

1159.கண்ணப்பா என்றருளும் காளத்தி அப்பாமுன் 
வண்ணப்பால் வேண்டும் மதலையைப்பால் வாரிதியை 
உண்ணப்பா என்றுரைத்த ஒற்றிஅப்பா வந்தருள 
எண்ணப்பா என்றழும்இவ் ஏழைமுகம் பாராயோ.
1
1160.மஞ்சுபடும் செஞ்சடில வள்ளலே உள்ளுகின்றோர் 
உஞ்சுபடும் வண்ணம்அருள் ஒற்றியூர் உத்தமனே 
நஞ்சுபடும் கண்டம்உடை நம்பரனே வன்துயரால் 
பஞ்சுபடும் பாடுபடும் பாவிமுகம் பாராயோ.
2
1161.கண்ணார் அமுதே கரும்பேஎன் கண்ணேஎன் 
அண்ணாஉன் பொன்னருள்தான் ஆர்ந்திடுமோ அல்லதென்றும் 
நண்ணாதோ யாது நணுகுமோ என்றுருகி 
எண்ணாதும் எண்ணும்இந்த எழைமுகம் பாராயோ.
3
1162.நாடியசீர் ஒற்றி நகர்உடையாய் நின்கோயில் 
நீடியநற் சந்நிதியில் நின்றுநின்று மால்அயனும் 
தேடிஅறி ஒண்ணாத் திருஉருவைக் கண்டுருகிப் 
பாடிஅழு தேங்கும்இந்தப் பாவிமுகம் பாராயோ.
4
1163.வாங்கிமலை வில்லாக்கும் மன்னவனே என்அரசே 
ஓங்கி வளந்தழுவும் ஒற்றியூர் உத்தமனே 
தூங்கிய துன்பச் சுமைசுமக்க மாட்டாது 
ஏங்கிஅழு கின்றஇந்த ஏழைமுகம் பாராயோ.
5
1164.தொண்டர்க் கருளும் துணையே இணையில்விடம் 
உண்டச் சுதற்கருளும் ஒற்றியூர் உத்தமனே 
சண்டப் பவநோயால் தாயிலாப் பிள்ளையெனப் 
பண்டைத் துயர்கொளும்இப் பாவிமுகம் பாராயோ.
6
1165.உட்டிகழ்ந்த மேலவனே ஒற்றியூர் உத்தமனே 
மட்டிலங்கும் உன்றன் மலரடியைப் போற்றாது 
தட்டிலங்கு நெஞ்சத்தால் சஞ்சலித்துன் சந்நிதிக்கண் 
எட்டிநின்று பார்க்கும்இந்த ஏழைமுகம் பாராயோ.
7
1166.நச்சை மிடற்றணிந்த நாயகனே ஓர்பாகம் 
பச்சைநிறம் கொண்ட பவளத் தனிமலையே 
மிச்சை தவிர்க்கும்ஒற்றி வித்தகனே நின்அருட்கே 
இச்சைகொடு வாடும்இந்த ஏழைமுகம் பாராயோ.
8
1167.மால்அயர்ந்தும் காணா மலரடியாய் வஞ்சவினைக் 
கால்அயர்ந்து வாடஅருட் கண்ணுடையாய் விண்உடையாய் 
சேல்அயர்ந்த கண்ணார் தியக்கத்தி னால்உன்அருட் 
பால்அயர்ந்து வாடும்இந்தப் பாவிமுகம் பாராயோ.
9
1168.சொந்தமுற எண்ணித் தொழுகின்ற மெய்யடியர் 
சந்தமுறும் நெஞ்சத் தலத்தமர்ந்த தத்துவனே 
நந்தவனஞ் சூழ்ஒற்றி நாயகனே வாழ்க்கைஎனும் 
பந்தமதில் வாடும்இந்தப் பாவிமுகம் பாராயோ.
10
1169.தில்லையிடை மேவும்எங்கள் செல்வப் பெருவாழ்வே 
ஒல்லைஅடி யார்க்கருளும் ஒற்றியூர் உத்தமனே 
அல்லை நிகர்க்கும் அளகத்தார் ஆசைதனக் 
கெல்லைஅறி யாதஇந்த ஏழைமுகம் பாராயோ.
11
1170.விதிஇழந்த வெண்தலைகொள் வித்தகனே வேதியனே 
மதிஇழந்தோர்க் கேலா வளர்ஒற்றி வானவனே 
நிதிஇழந்தோர் போல்அயர்ந்து நின்னுடைய வாழ்க்கைப் 
பதிவிரும்பி வாடும்இந்தப் பாவிமுகம் பாராயோ.
12

Back


 

55. நாடக விண்ணப்பம்

திருவொற்றியூர் 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

1171.

மடுக்கும் நீர்உடைப் பாழ்ங்கிண றதனுள்

வழுக்கி வீழ்ந்தவன் வருந்துறா வண்ணம் 
எடுக்கின் றோர்என இடையிற்கை விடுதல்

இரக்க முள்ளவர்க் கியல்பன்று கண்டீர் 
தடுக்கி லாதெனைச் சஞ்சல வாழ்வில்

தாழ்த்து கின்றது தருமம்அன் றுமக்கு 
நடுக்கி லார்தொழும் ஒற்றியூர் உடையீர்

ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.

1
1172.

வெண்மை நெஞ்சினேன் மெய்என்ப தறியேன்

விமல நும்மிடை வேட்கையும் உடையேன் 
உண்மை ஓதினேன் வஞ்சக வாழ்க்கை

உவரி வீழ்வனேல் உறுதிமற் றறியேன் 
கண்மை உள்ளவர் பாழ்ங்குழி வீழக்

கண்டி ருப்பது கற்றவர்க் கழகோ 
நண்மை ஒற்றியீர் திருச்சிற்றம் பலத்துள்

ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.

2
1173.

குற்ற மேபல இயற்றினும் எனைநீர்

கொடியன் என்பது குறிப்பல உமது 
பொற்றை நேர்புயத் தொளிர்திரு நீற்றைப்

பூசு கின்றனன் புனிதநும் அடிக்கண் 
உற்ற தோர்சிறி தன்பும்இவ் வகையால்

உறுதி ஈவதிங் குமக்கொரு கடன்காண் 
நற்ற வத்தர்வாழ் ஒற்றியூர் உடையீர்

ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.

3
1174.

உள்ள தோதினால் ஒறுக்கிலேம் என்பர்

உலகு ளோர்இந்த உறுதிகொண் டடியேன் 
கள்ளம் ஓதிலேன் நும்மடி அறியக்

காம வேட்கையில் கடலினும் பெரியேன் 
வள்ள லேஉம தருள்பெறச் சிறிது

வைத்த சிந்தையேன் மயக்கற அருள்வீர் 
நள்ளல் உற்றவர் வாழ்ஒற்றி உடையீர்

ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.

4
1175.

அரந்தை யோடொரு வழிச்செல்வோன் தனைஓர்

ஆற்று வெள்ளம்ஈர்த் தலைத்திட அவனும் 
பரந்த நீரிடை நின்றழு வானேல்

பகைவர் ஆயினும் பார்த்திருப் பாரோ 
கரந்தை அஞ்சடை அண்ணல்நீர் அடியேன்

கலங்கக் கண்டிருக் கின்றது கடனோ 
நரந்த மார்பொழில் ஒற்றியூர் உடையீர்

ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.

5
1176.

பிறவிக் கண்ணிலான் கைக்கொளும் கோலைப் 
பிடுங்கி வீசுதல் பெரியவர்க் கறமோ 
மறவிக் கையறை மனத்தினேன் உம்மேல்

வைக்கும் அன்பைநீர் மாற்றுதல் அழகோ 
உறஇக் கொள்கையை உள்ளிரேல் இதனை

ஓதிக் கொள்ளிடம் ஒன்றிலை கண்டீர் 
நறவிக் கோங்கிய ஒற்றியம் பதியீர்

ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.

6
1177.

வலிய வந்திடு விருந்தினை ஒழிக்கார்

வண்கை உள்ளவர் மற்றதுபோலக் 
கலிய நெஞ்சினேன் வஞ்சக வாழ்வில்

கலங்கி ஐயநுங் கருணையாம் அமுதை 
மலிய உண்டிட வருகின்றேன் வருமுன்

மாற்று கிற்பிரேல் வள்ளல்நீர் அன்றோ 
நலியல் நீக்கிடும் ஒற்றியம் பதியீர்

ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.

7
1178.

பொய்யன் ஆகிலும் போக்கிடம் அறியாப்

புலையன் ஆண்டவன் புகழ்உரைப் பானேல் 
உய்ய வைப்பன்ஈ துண்மைஇவ் வுலகில்

ஒதிய னேன்புகல் ஓரிடம் அறியேன் 
ஐய நும்மடிக் காட்செயல் உடையேன்

ஆண்ட நீர்எனை அகற்றுதல் அழகோ 
நையல் அற்றிட அருள்ஒற்றி உடையீர்

ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.

8
1179.

தந்தை ஆயவர் தனையரைக் கெடுக்கச்

சமைவர் என்பது சற்றும்இன் றுலகில் 
எந்தை நீர்எனை வஞ்சக வாழ்வில்

இருத்து வீர்எனில் யார்க்கிது புகல்வேன் 
பந்த மேலிட என்பரி தாபம்

பார்ப்பி ரோஅருட் பங்கய விழியீர் 
நந்த வொண்பணை ஒற்றியூர் உடையீர்

ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.

9
1180.

கல்வி வேண்டிய மகன்தனைப் பெற்றோர்

கடுத்தல் ஓர்சிறு கதையிலும் இலைகாண் 
செல்வம் வேண்டிலேன் திருவருள் விழைந்தேன்

சிறிய னேனைநீர் தியக்குதல் அழகோ 
பல்வி தங்களால் பணிசெயும் உரிமைப்

பாங்கு நல்கும்அப் பரம்உமக் கன்றே 
நல்வி தத்தினர் புகழ்ஒற்றி உடையீர்

ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.

10
1181.

மண்ணில் நல்லவன் நல்லவர் இடத்தோர்

வணக்கம் இன்மையன் வணங்குவன் ஆனால் 
எண்ணி நம்புடை இருஎன உரைப்பர்

ஏன்வ ணங்கினை என்றுரைப் பாரோ 
கண்ணின் நல்லநும் கழல்தொழ இசைந்தால்

கலக்கம் காண்பது கடன்அன்று கண்டீர் 
நண்ணி மாதவன் தொழும்ஒற்றி உடையீர்

ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.

11

Back


 

56. கொடி விண்ணப்பம்

திருவொற்றியூர் 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

1182.

மாலை ஒன்றுதோள் சுந்தரப் பெருமான் 

மணத்தில் சென்றவண் வழக்கிட்ட தெனவே 
ஓலை ஒன்றுநீர் காட்டுதல் வேண்டாம் 

உவந்து தொண்டன்என் றுரைப்பிரேல் என்னை 
வேலை ஒன்றல மிகப்பல எனினும் 

வெறுப்பி லாதுளம் வியந்துசெய் குவன்காண் 
சோலை ஒன்றுசீர் ஒற்றியூர் உடையீர் 

தூய மால்விடைத் துவசத்தி னீரே.

1
1183.

பூதம் நும்படை எனினும்நான் அஞ்சேன் 

புதிய பாம்பின்பூண் பூட்டவும் வெருவேன் 
பேதம் இன்றிஅம் பலந்தனில் தூக்கும் 

பெருமைச் சேவடி பிடிக்கவும் தளரேன் 
ஏதம் எண்ணிடா தென்னையும் தொழும்பன் 

என்று கொள்விரேல் எனக்கது சாலும் 
சூத ஒண்பொழில் ஒற்றியூர் உடையீர் 

தூய மால்விடைத் துவசத்தி னீரே.

2
1184.

உப்பி டாதகூழ் இடுகினும் உண்பேன் 

உவந்திவ் வேலையை உணர்ந்துசெய் எனநீர் 
செப்பி டாமுனம் தலையினால் நடந்து 

செய்ய வல்லன்யான் செய்யும்அப் பணிகள் 
தப்பி டாததில் தப்பிருந் தென்னைத் 

தண்டிப் பீர்எனில் சலித்துளம் வெருவேன் 
துப்பி டாஎனக் கருள்ஒற்றி உடையீர் 
தூய மால்விடைத் துவசத்தி னீரே.

3
1185.

கூலி என்பதோர் அணுத்துணை யேனும் 

குறித்தி லேன்அது கொடுக்கினும் கொள்ளேன் 
மாலி னோடயன் முதலியர்க் கேவல் 

மறந்தும் செய்திடேன் மன்உயிர்ப் பயிர்க்கே 
ஆலி அன்னதாம் தேவரீர் கடைக்கண் 

அருளை வேண்டினேன் அடிமைகொள் கிற்பீர் 

சூலி ஓர்புடை மகிழ்ஒற்றி உடையீர்

4
1186.

தேர்ந்து தேடினும் தேவர்போல் தலைமைத் 

தேவர் இல்லைஅத் தெளிவு கொண் டடியேன் 
ஆர்ந்து நும்அடிக் கடிமைசெய் திடப்பேர் 

ஆசை வைத்துமை அடுத்தனன் அடிகேள் 
ஓர்ந்திங் கென்றனைத் தொழும்புகொள் ளீரேல் 

உய்கி லேன்இஃ தும்பதம் காண்க 
சோர்ந்தி டார்புகழ் ஒற்றியூர் உடையீர் 

தூய மால்விடைத் துவசத்தி னீரே.

5
1187.

புதியன் என்றெனைப் போக்குதி ரோநீர் 

பூரு வத்தினும் பொன்னடிக் கடிமைப் 
பதிய வைத்தனன் ஆயினும் அந்தப் 

பழங்க ணக்கினைப் பார்ப்பதில் என்னே 
முதியன் அல்லன்யான் எப்பணி விடையும் 

முயன்று செய்குவேன் மூர்க்கனும் அல்லேன் 
துதிய தோங்கிய ஒற்றியூர் உடையீர் 

தூய மால்விடைத் துவசத்தி னீரே.

6
1188.

ஒழுக்கம் இல்லவன் ஓர் இடத் தடிமைக் 

குதவு வான்கொல்என் றுன்னுகிற் பீரேல் 
புழுக்க நெஞ்சினேன் உம்முடைச் சமுகம் 

போந்து நிற்பனேல் புண்ணியக் கனிகள் 
பழுக்க நின்றிடும் குணத்தரு வாவேன் 

பார்த்த பேரும்அப் பரிசினர் ஆவர் 
தொழுக்கன் என்னையாள் வீர்ஒற்றி உடையீர் 

தூய மால்விடைத் துவசத்தி னீரே.

7
1189.

பிச்சை ஏற்றுணும் பித்தர்என் றும்மைப் 

பேசு கின்றவர் பேச்சினைக் கேட்டும் 
இச்சை நிற்கின்ற தும்மடிக் கேவல் 

இயற்று வான்அந்த இச்சையை முடிப்பீர் 
செச்சை மேனியீர் திருவுளம் அறியேன் 

சிறிய னேன்மிகத் தியங்குகின் றனன்காண் 
துச்சை நீக்கினோர்க் கருள்ஒற்றி உடையீர் 

தூய மால்விடைத் துவசத்தி னீரே.

8
1190.

ஆலம் உண்டநீர் இன்னும்அவ் வானோர்க் 

கமுது வேண்டிமா லக்கடல் கடைய 
ஓல வெவ்விடம் வரில்அதை நீயே 

உண்கென் றாலும்நும் உரைப்படி உண்கேன் 
சாலம் செய்வது தகைஅன்று தருமத் 

தனிப்பொற் குன்றனீர் சராசரம் நடத்தும் 
சூல பாணியீர் திருவொற்றி நகரீர் 

தூய மால்விடைத் துவசத்தி னீரே.

9
1191.

முத்தி நேர்கிலாத் தேவர்கள் தமைநான் 

முந்து றேன்அவர் முற்பட வரினும் 
சுத்தி யாகிய சொல்லுடை அணுக்கத் 

தொண்டர் தம்முடன் சூழ்த்திடீர் எனினும் 
புத்தி சேர்புறத் தொண்டர்தம் முடனே 

பொருந்த வைக்கினும் போதும்மற் றதுவே 
துத்தி யார்பணி யீர்ஒற்றி உடையீர் 

தூய மால்விடைத் துவசத்தி னீரே.

10
1192.

என்ன நான்அடி யேன்பல பலகால் 

இயம்பி நிற்பதிங் கெம்பெரு மானீர் 
இன்னும் என்னைஓர் தொண்டன்என் றுளத்தில் 

ஏன்று கொள்ளிரேல் இருங்கடற் புவியோர் 
பன்ன என்உயிர் நும்பொருட் டாகப் 

பாற்றி நும்மிசைப் பழிசுமத் துவல்காண் 
துன்னு மாதவர் புகழ்ஒற்றி உடையீர் 

தூய மால்விடைத் துவசத்தி னீரே.

11

Back


 

57. மருட்கை விண்ணப்பம்

திருவொற்றியூர் 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

1193.

யாது செய்குவன் போதுபோ கின்ற 

தண்ண லேஉம தன்பருக் கடியேன் 
கோது செய்யினும் பொறுத்தருள் புரியும் 

கொள்கை யீர்எனைக் குறுகிய குறும்பர் 
வாது செய்கின்றார் மனந்தளர் கின்றேன் 

வலியி லேன்செயும் வகைஒன்றும் அறியேன் 
மாதர் செய்பொழில் ஒற்றியூர் உடையீர் 

வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.

1
1194.

எனக்கு நீர் இங்கோர் ஆண்டைஅல் லீரோ 

என்னை வஞ்சகர் யாவருங் கூடிக் 
கனக்கும் வன்பவக் கடலிடை வீழ்த்தக் 

கண்டி ருத்தலோ கடன்உமக் கெளியேன் 
தனக்கு மற்றொரு சார்பிருந் திடுமேல் 

தயவு செய்திடத் தக்கதன் றிலைகாண் 
மனக்கு நல்லவர் வாழ்ஒற்றி உடையீர் 

வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.

2
1195.

எஞ்சல் இல்லதோர் காமமாம் கடல்ஆழ்ந் 

திளைக்கின் றேன்இனி என்செய்வன் அடியேன் 
தஞ்சம் என்றும திணைமலர் அடிக்கே 

சரண்பு குந்தனன் தயவுசெய் யீரேல் 
வஞ்ச வாழ்க்கையாம் திமிங்கிலம் எனுமீன் 

வாரிக் கொண்டெனை வாய்மடுத் திடுங்காண் 
மஞ்ச ளாவிய பொழில்ஒற்றி உடையீர் 

வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.

3
1196.

என்பி றப்பினை யார்க்கெடுத் துரைப்பேன் 

என்செய் வேன்எனை என்செய நினைக்கேன் 
முன்பி றப்பிடை இருந்தசே டத்தால் 

மூட வாழ்க்கையாம் காடகத் தடைந்தே 
அன்பி றந்தவெங் காமவேட் டுவனால் 

அலைப்புண் டேன்உம தருள்பெற விழைந்தேன் 
வன்பி றந்தவர் புகழ்ஒற்றி உடையீர் 

வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.

4
1197.

காமம் என்னும்ஓர் காவலில் உழன்றே 

கலுழ்கின் றேன்ஒரு களைகணும் அறியேன் 
சேம நல்லருட் பதம்பெறுந் தொண்டர் 

சேர்ந்த நாட்டகம் சேர்வுற விழைந்தேன் 
ஏமம் உற்றிடும் எனைவிடு விப்பார் 

இல்லை என்செய்வன் யாரினும் சிறியேன் 
வாம மாதராள் மருவொற்றி உடையீர் 

வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.

5
1198.

இன்பம் என்பது விழைந்திடர் உழந்தேன் 

என்னை ஒத்தஓர் ஏழைஇங் கறியேன் 
துன்பம் என்பது பெருஞ்சுமை ஆகச் 

சுமக்கின் றேன்அருள் துணைசிறி தில்லேன் 
அன்பர் உள்ளகத் தமர்ந்திடுந் தேவர் 

அடிக்குற் றேவலுக் காட்படு வேனோ 
வன்பர் நாடுறா ஒற்றியூர் உடையீர் 

வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.

6
1199.

ஊழ்வி னைப்படி எப்படி அறியேன்

உஞற்று கின்றனன் உமதருள் பெறவே 
தாழ்வி னைத்தரும் காமமோ எனைக்கீழ்த் 

தள்ளு கின்றதே உள்ளுகின் றதுகாண் 
பாழ்வி னைக்கொளும் பாவியேன் செய்யும் 

பாங்க றிந்திலேன் ஏங்குகின் றனனால் 
வாழ்வி னைத்தரும் ஒற்றியூர் உடையீர் 

வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.

7
1200.

இறப்பி லார்தொழும் தேவரீர் பதத்தை 

எவ்வம் நீக்கியே எவ்விதத் தானும் 
மறப்பி லாதுளம் நினைத்திடில் காமம் 

வழிம றித்ததை மயக்குகின் றதுகாண் 
குறிப்பி லாதென்னால் கூடிய மட்டும் 

குறைத்தும் அங்கது குறைகில தந்தோ 
வறிப்பி லாவயல் ஒற்றியூர் உடையீர் 

வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.

8
1201.

சஞ்சி தந்தரும் காமம்என் றிடும்ஓர்

சலதி வீழ்ந்ததில் தலைமயக் குற்றே 
அஞ்சி அஞ்சிநான் அலைகின்றேன் என்னை 

அஞ்சல் என்பவர் யாரையும் அறியேன் 
துஞ்சி னால்பின்பு சுகம்பலித் திடுமோ 

துணையி லார்க்கொரு துணைஎன இருப்பீர் 
மஞ்சின் நீள்பொழில் ஒற்றியூர் உடையீர் 

வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.

9
1202.

அல்ல ஓதியர் இடைப்படும் கமருக் 

காசை வைத்தஎன் அறிவின்மை அளவைச் 
சொல்ல வோமுடி யாதெனை ஆளத் 

துணிவு கொள்விரோ தூயரை ஆளல் 
அல்ல வோஉம தியற்கைஆ யினும்நல் 

அருட்க ணீர்எனை ஆளலும் தகுங்காண் 
மல்லல் ஓங்கிய ஒற்றியூர் உடையீர் 

வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.

10

Back


 

58. கொடைமட விண்ணப்பம்

திருவொற்றியூர் 
கட்டளைக் கலித்துறை 

1203.நின்போன்ற தெய்வம்ஒன் றின்றென வேதம் நிகழ்த்தவும்நின் 
பொன்போன்ற ஞானப் புதுமலர்த் தாள்துணைப் போற்றுகிலேன் 
என்போன்ற ஏழையர் யாண்டுளர் அம்பலத் தேநடஞ்செய் 
மின்போன்ற வேணிய னேஒற்றி மேவிய வேதியனே.
1
1204.வேதிய னேவெள்ளி வெற்பிடை மேவிய வித்தகனே 
நீதிய னேமன்றில் நிட்கள ஆனந்த நிர்த்தமிடும் 
ஆதிய னேஎமை ஆண்டவ னேமலை யாள்மகிழும் 
பாதிய னேஎம் பராபர னேமுக்கட் பண்ணவனே.
2
1205.பண்ணவ னேபசு பாசத்தை நீக்கும் பரம்பரனே 
மண்ணவ னேனை மகிழ்ந்தவ னேமலம் மாற்றுகின்ற 
விண்ணவ னேவெள் விடையவ னேவெற்றி மேவுநெற்றிக் 
கண்ணவ னேஎனைக் காத்தவ னேஒற்றிக் காவலனே.
3
1206.காவல னேஅன்று மாணிக்குப் பொற்கிழிக் கட்டவிழ்த்த 
பாவல னேதொழும் பாணன் பரிசுறப் பாட்டளித்த 
நாவல னேதில்லை நாயக னேகடல் நஞ்சைஉண்ட 
மாவல னேமுக்கண் வானவ னேஒற்றி மன்னவனே.
4
1207.மன்னவ னேகொன்றை மாலைய னேதிரு மாலயற்கு 
முன்னவ னேஅன்று நால்வர்க்கும் யோக முறைஅறந்தான் 
சொன்னவ னேசிவ னேஒற்றி மேவிய தூயவனே 
என்னவ னேஐயம் ஏற்பவ னேஎனை ஈன்றவனே.
5
1208.ஈன்றவ னேஅன்பர் இன்னுயிர்க் கின்புறும் இன்னமுதம் 
போன்றவ னேசிவ ஞானிகள் உள்ளுறும் புண்ணியனே 
ஆன்றவ னேஎம துள்ளும் புறம்பும் அறிந்துநின்ற 
சான்றவ னேசிவ னேஒற்றி மேவிய சங்கரனே.
6
1209.சங்கர னேஅர னேபர னேநற் சராசரனே 
கங்கர னேமதிக் கண்ணிய னேநுதல் கண்ணினனே 
நங்கர மேவிய அங்கனி போன்றருள் நாயகனே 
செங்கர னேர்வண னேஒற்றி மேவிய சின்மயனே.
7
1210.சின்மய னேஅனல் செங்கையில் ஏந்திய சேவகனே 
நன்மைய னேமறை நான்முகன் மாலுக்கு நாடரிதாம் 
தன்மைய னேசிவ சங்கர னேஎஞ் சதாசிவனே 
பொன்மய னேமுப் புராந்தக னேஒற்றிப் புண்ணியனே.
8
1211.புண்ணிய னேஎமைப் போல்வார்க்கும் இன்பப் பொருள்அளிக்கும் 
திண்ணிய னேநற் சிவஞான நெஞ்சில் தெளிந்தஅருள் 
அண்ணிய னேகங்கை ஆறமர் வேணியில் ஆர்ந்தமதிக் 
கண்ணிய னேபற் பலவாகும் அண்டங்கள் கண்டவனே.
9
1212.கண்டவ னேசற்றும் நெஞ்சுரு காக்கொடுங் கள்வர்தமை 
விண்டவ னேகடல் வேம்படி பொங்கும் விடம்அனைத்தும் 
உண்டவ னேமற்றும் ஒப்பொன் றிலாத உயர்வுதனைக் 
கொண்டவ னேஒற்றிக் கோயிலின் மேவும் குருபரனே.
10

Back


 

59. திருக்காட்சிக் கிரங்கல்

திருவொற்றியூர் 
தரவு கொச்சகக் கலிப்பா 

1213.மண்ணேயும் வாழ்க்கையிடை மாழாந்து வன்பிணியால் 
புண்ணேயும் நெஞ்சம் புழுங்குகின்ற பொய்யவனேன் 
பண்ணேயும் இன்பப் பரஞ்சுடரே என்இரண்டு 
கண்ணேஉன் பொன்முகத்தைக் காணக் கிடைத்திலனே.
1
1214.மருள்ஆர்ந்த வல்வினையால் வன்பிணியால் வன்துயரால் 
இருள்ஆர்ந்த நெஞ்சால் இடியுண்ட ஏழையனேன் 
தெருள்ஆர்ந்த மெய்ஞ்ஞானச் செல்வச் சிவமேநின் 
அருள்ஆர்ந்த முக்கண் அழகுதனைக் கண்டிலனே.
2
1215.வல்லார் முலையார் மயல்உழந்த வஞ்சகனேன் 
பொல்லார் புரம்எரித்த புண்ணியனே பொய்மறுத்த 
நல்லார் தொழுந்தில்லை நாயகனே நன்றளித்த 
அல்லார் களத்தின் அழகுதனைக் கண்டிலனே.
3
1216.நோயால் மெலிந்துனருள் நோக்குகின்ற நொய்யவனேன் 
தாயா னவனேஎன் தந்தையே அன்பர்தமைச் 
சேயாய் வளர்க்கும் சிவனே சிவனேஎம் 
தூயாநின் பொற்றோளின் சுந்தரத்தைக் கண்டிலனே.
4
1217.வன்னேர் முலையார் மயல்உழந்த வன்மனத்தேன் 
அன்னேஎன் அப்பாஎன் ஐயாஎன் ஆரமுதே 
மன்னே மணியே மலையாள் மகிழ்உனது 
பொன்னேர் இதழிப் புயங்காணப் பெற்றிலனே.
5
1218.நண்ணும் வினையால் நலிகின்ற நாயடியேன் 
எண்ணும் சுகாதீத இன்பமே அன்புடையோர் 
கண்ணும் கருத்தும் களிக்கவரும் கற்பகமே 
பெண்ஒருபால் வாழும்உருப் பெற்றிதனைக் கண்டிலனே.
6
1219.தெவ்வண்ண மாயையிடைச் செம்மாந்த சிற்றடியேன் 
இவ்வண்ணம் என்றறிதற் கெட்டாத வான்பொருளே 
அவ்வண்ண மான அரசே அமுதேநின் 
செவ்வண்ண மேனித் திறங்காணப் பெற்றிலனே.
7
1220.அல்வைத்த நெஞ்சால் அழுங்குகின்ற நாயடியேன் 
சொல்வைத்த உண்மைத் துணையே இணைத்தோள்மேல் 
வில்வத் தொடைஅணிந்த வித்தகனே நின்னுடைய 
செல்வத் திருவடியின் சீர்காணப் பெற்றிலனே.
8
1221.பொத்தேர் மயலால் புழுங்குகின்ற பொய்யடியேன் 
கொத்தேர் செழுங்கொன்றைக் குன்றமே கோவாத 
முத்தே எவர்க்கும் முழுமுதலே முத்திக்கு 
வித்தேநின் பொன்னடிக்கீழ் மேவிநிற்க கண்டிலனே.
9
1222.நீதியிலார் வாயிலிடை நின்றலைந்த நெஞ்சகனேன் 
சோதிஎலாம் சூழ்ந்தபரஞ் சோதியே செஞ்சடைமேல் 
பாதிநிலா ஓங்கும் பரமேநீ ஒற்றிநகர் 
வீதிஉலா வந்தஎழில் மெய்குளிரக் கண்டிலனே.
10

Back


 

60. திரு அருட் கிரங்கல்

திருவொற்றியூர் 
கொச்சகக் கலிப்பா 

1223.ஒப்பாரும் இல்லாத உத்தமனே ஒற்றியில்என் 
அப்பாஉன் பொன்னடிக்கே அன்பிலேன் ஆனாலும் 
தப்பா தகமெலியச் சஞ்சலத்தால் ஏங்குகின்ற 
இப்பா தகத்தேற் கிரங்கினால் ஆகாதோ.
1
1224.எஞ்சா இடரால் இரும்பிணியால் ஏங்கிமனம் 
பஞ்சாக நொந்து பரதவிக்கும் நாயேனைச் 
செஞ்சாலி ஓங்கும் திருவொற்றி அப்பாநீ 
அஞ்சாதே என்றுன் அருள்கொடுத்தால் ஆகாதோ.
2
1225.பற்றும் செழுந்தமிழால் பாடுகின்றோர் செய்தபெருங் 
குற்றம் குணமாகக் கொள்ளும் குணக்கடலே 
மற்றங்கும் எண்தோள் மலையே மரகதமே 
பெற்றிங் கடியேன் பிணிகெடுத்தால் ஆகாதோ.
3
1226.எந்தையே என்பவர்தம் இன்னமுதே என்உரிமைத் 
தந்தையே தாயே தமரேஎன் சற்குருவே 
சிந்தையே ஓங்கும் திருவொற்றி ஐயாஎன் 
நிந்தையே நீங்க நிழல்அளித்தால் ஆகாதோ.
4
1227.உள்ளும் திருத்தொண்டர் உள்ளத் தெழுங்களிப்பே 
கொள்ளும் சிவானந்தக் கூத்தாஉன் சேவடியை 
நள்ளும் புகழுடைய நல்லோர்கள் எல்லாரும் 
எள்ளும் புலையேன் இழிவொழித்தால் ஆகாதோ.
5
1228.கோதைஓர் கூறுடைய குன்றமே மன்றமர்ந்த 
தாதையே ஒற்றித் தலத்தமர்ந்த சங்கரனே 
தீதையே நாள்தோறும் செய்தலைந்து வாடுமிந்தப் 
பேதையேன் செய்த பிழைபொறுத்தால் ஆகாதோ.
6
1229.முத்திக்கு வித்தே முழுமணியே முத்தர்உளம் 
தித்திக்கும் தேனே சிவமே செழுஞ்சுடரே 
சத்திக்கும் நாதத் தலங்கடந்த தத்துவனே 
எத்திக்கும் இல்லேன் இளைப்பொழித்தால் ஆகாதோ.
7
1230.வஞ்சமிலார் உள்ளம் மருவுகின்ற வான்சுடரே 
கஞ்சமுளான் போற்றும் கருணைப் பெருங்கடலே 
நஞ்சமுதாக் கொண்டருளும் நல்லவனே நின்அலதோர் 
தஞ்சமிலேன் துன்பச் சழக்கொழித்தால் ஆகாதோ.
8
1231.சேய்பிழையைத் தாய்அறிந்தும் சீறாள் பொறுப்பாள்இந் 
நாய்பிழையை நீபொறுக்க ஞாயமும்உண் டையாவே 
தேய்மதிபோல் நெஞ்சம் தியக்கம்உறச் சஞ்சலத்தால் 
வாய்அலறி வாடும்எனை வாஎன்றால் ஆகாதோ.
9
1232.கண்ணுள் மணிபோல் கருதுகின்ற நல்லோரை 
எண்ணும் கணமும்விடுத் தேகாத இன்னமுதே 
உண்ணும் உணவுக்கும் உடைக்கும்முயன் றோடுகின்ற 
மண்ணுலகத் தென்றன் மயக்கறுத்தால் ஆகாதோ.
10

Back


 

61. பழமொழிமேல் வைத்துப் பரிவுகூர்தல்

திருவொற்றியூர் 
எண்சீர்க்(32) கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

(32). அறுசீர்- தொ.வே. 1,2; எண்சீர்- ச.மு.க; ஆ பா.

1233.வானை நோக்கிமண் வழிநடப் பவன்போல் 
வயங்கும் நின்அருள் வழியிடை நடப்பான் 
ஊனை நோக்கினேன் ஆயினும் அடியேன் 
உய்யும் வண்ணம்நீ உவந்தருள் புரிவாய் 
மானை நோக்கிய நோக்குடை மலையாள் 
மகிழ மன்றிடை மாநடம் புரிவோய் 
தேனை நோக்கிய கொன்றையஞ் சடையோய் 
திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
1
1234.வாயி லான்பெரு வழக்குரைப் பதுபோல் 
வள்ளல் உன்னடி மலர்களுக் கன்பாம் 
தூயி லாதுநின் அருள்பெற விழைந்தேன் 
துட்ட னேன்அருள் சுகம்பெற நினைவாய் 
கோயி லாகநல் அன்பர்தம் உளத்தைக் 
கொண்ட மர்ந்திடும் குணப்பெருங் குன்றே 
தேயி லாதபல் வளஞ்செறிந் தோங்கித் 
திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
2
1235.வித்தை இன்றியே விளைத்திடு பவன்போல் 
மெய்ய நின்இரு மென்மலர்ப் பதத்தில் 
பத்தி இன்றியே முத்தியை விழைந்தேன் 
பாவி யேன்அருள் பண்புற நினைவாய் 
மித்தை இன்றியே விளங்கிய அடியார் 
விழைந்த யாவையும் தழைந்திட அருள்வோய் 
சித்தி வேண்டிய முனிவரர் பரவித் 
திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
3
1236.கலம்இ லாதுவான் கடல்கடப் பவன்போல் 
கடவுள் நின்அடிக் கமலங்கள் வழுத்தும் 
நலம்இ லாதுநின் அருள்பெற விழைந்த 
நாயி னேன்செயும் நவைபொறுத் தருள்வாய் 
மலம்இ லாதநல் வழியிடை நடப்போர் 
மனத்துள் மேவிய மாமணிச் சுடரே 
சிலம்இ லாஞ்சம்ஆ தியதருப் பொழில்கள் 
திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
4
1237.போர்க்கும் வெள்ளத்தில் பொன்புதைப் பவன்போல் 
புலைய நெஞ்சிடைப் புனிதநின் அடியைச் 
சேர்க்கும் வண்ணமே நினைக்கின்றேன் எனினும் 
சிறிய னேனுக்குன் திருவருள் புரிவாய் 
கூர்க்கும் நெட்டிலை வேற்படைக் கரங்கொள் 
குமரன் தந்தையே கொடியதீ வினையைத் 
தீர்க்கும் தெய்வமே சைவவை திகங்கள் 
திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
5
1238.ஓட உன்னியே உறங்குகின் றவன்போல் 
ஓங்கும் உத்தம உன்அருட் கடலில் 
ஆட உன்னியே மங்கையர் மயலில் 
அழுந்து கின்றஎற் கருள்செய நினைவாய் 
நாட உன்னியே மால்அயன் ஏங்க 
நாயி னேன்உளம் நண்ணிய பொருளே 
தேட உன்னிய மாதவ முனிவர் 
திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
6
1239.முதல்இ லாமல்ஊ தியம்பெற விழையும் 
மூடன் என்னநின் மொய்கழல் பதமேத் 
துதல்இ லாதுநின் அருள்பெற விழைந்தேன் 
துட்ட னேன்அருட் சுகம்பெறு வேனோ 
நுதலில் ஆர்அழல் கண்ணுடை யவனே 
நோக்கும் அன்பர்கள் தேக்கும்இன் அமுதே 
சிதல்இ லாவளம் ஓங்கிஎந் நாளும் 
திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
7
1240.கல்லை உந்திவான் நதிகடப் பவர்போல் 
காமம் உந்திய நாமநெஞ் சகத்தால் 
எல்லை உந்திய பவக்கடல் கடப்பான் 
எண்ணு கின்றனன் எனக்கருள் வாயோ 
அல்லை உந்திய ஒண்சுடர்க் குன்றே 
அகில கோடிகட் கருள்செயும் ஒன்றே 
தில்லை நின்றொளிர் மன்றிடை அமுதே 
திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
8
1241.நெய்யி னால்சுடு நெருப்பவிப் பவன்போல் 
நெடிய துன்பமாம் கொடியவை நிறைந்த 
பொய்யி னால்பவம் போக்கிட நினைத்தேன் 
புல்ல னேனுக்குன் நல்அருள் வருமோ 
கையி னால்தொழும் அன்பர்தம் உள்ளக் 
கமலம் மேவிய விமலவித் தகனே 
செய்யி னால்பொலிந் தோங்கிநல் வளங்கள் 
திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
9
1242.நீர்சொ ரிந்தொளி விளக்கெரிப் பவன்போல் 
நித்தம் நின்னிடை நேசம்வைத் திடுவான் 
பார்சொ ரிந்திடும் பவநெறி முயன்றேன் 
பாவி யேன்தனைக் கூவிநின் றாள்வாய் 
கார்சொ ரிந்தெனக் கருணைஈந் தன்பர் 
களித்த நெஞ்சிடை ஒளித்திருப் பவனே 
தேர்சொ ரிந்தமா மணித்திரு வீதித் 
திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
10

Back

 


 

62. நெஞ்சு நிலைக் கிரங்கல்

திருவொற்றியூர் 
கட்டளைக் கலித்துறை 

1243.ஆளாக நின்பொன் அடிக்கன்பு செய்திட ஐயநெடு 
நாளாக இச்சைஉண் டென்னைசெய் கேன்கொடு நங்கையர்தம் 
மாளா மயல்சண்ட மாருதத் தால்மன வாசிஎன்சொல் 
கேளா தலைகின்ற தால்ஒற்றி மேவும் கிளர்ஒளியே.
1
1244.ஒளியாய் ஒளிக்குள் ஒளிர்ஒளி யேஒற்றி உத்தமநீ 
அளியா விடில்இதற் கென்னைசெய் கேன்அணங் கன்னவர்தம் 
களியால் களித்துத் தலைதெரி யாது கயன்றுலவா 
வளியாய்ச் சுழன்றிவண் மாயா மனம்எனை வாதிப்பதே.
2
1245.மாயா மனம்எவ் வகைஉரைத் தாலும் மடந்தையர் பால் 
ஓயாது செல்கின்ற தென்னைசெய் கேன்தமை உற்றதொரு 
நாயாகி னும்கை விடார்உல கோர்உனை நான் அடுத்தேன் 
நீயாகி லுஞ்சற் றிரங்குகண் டாய்ஒற்றி நின்மலனே.
3
1246.மலஞ்சான்ற மங்கையர் கொங்கையி லேநசை வாய்த்துமனம் 
சலஞ்சான்ற தால்இதற் கென்னைசெய் கேன்நின் சரண்அன்றியே 
வலஞ்சான்ற நற்றுணை மற்றறி யேன்ஒற்றி வானவனே 
நலஞ்சான்ற ஞானத் தனிமுத லேதெய்வ நாயகனே.
4
1247.நாயினும் கீழ்ப்பட்ட என்நெஞ்சம் நன்கற்ற நங்கையர்பால் 
ஏயினும் செல்கின்ற தென்னைசெய் கேன்உனை ஏத்தியிடேன் 
ஆயினும் இங்கெனை ஆட்கொளல் வேண்டும்ஐ யாஉவந்த 
தாயினும் நல்லவ னேஒற்றி மேவும் தயாநிதியே.
5
1248.நிதியேநின் பொன்னடி ஏத்தாது நெஞ்சம் நிறைமயலாம் 
சதியே புரிகின்ற தென்னைசெய் கேன்உனைத் தாழலர்தம் 
விதியே எனக்கும் விதித்ததன் றோஅவ் விதியும்இள 
மதியேர் சடைஅண்ண லேஒற்றி யூர்ஒளி மாணிக்கமே.
6
1249.மாணாத என்நெஞ்சம் வல்நஞ் சனைய மடந்தையர்பால் 
நாணாது செல்கின்ற தென்னைசெய் கேன்சிவ ஞானியர்தம் 
கோணாத உள்ளத் திருக்கோயில் மேவிக் குலவும்ஒற்றி 
வாணாஎன் கண்ணினுண் மாமணி யேஎன்றன் வாழ்முதலே.
7
1250.வாழாத நெஞ்சம் எனைஅலைத் தோடி மடந்தையர்பால் 
வீழாத நாளில்லை என்னைசெய் கேன்உன் விரைமலர்த்தாள் 
தாழாத குற்றம் பொறுத்தடி யேன்தனைத் தாங்கிக்கொள்வாய் 
சூழா தவரிடம் சூழாத ஒற்றிச் சுடர்க்குன்றமே.
8
1251.குன்றேர் முலைச்சியர் வன்மல ஊத்தைக் குழியில்மனம் 
சென்றே விழுகின்ற தென்னைசெய் கேன்எம் சிவக்கொழுந்தே 
நன்றே சதானந்த நாயக மேமறை நான்கினுக்கும் 
ஒன்றே உயர்ஒளி யேஒற்றி யூர்எம் உயிர்த்துணையே.
9
1252.துணையாம்உன் பொன்னடி ஏத்தா மனமது தோகையர்கண் 
கணையால் இளைக்கின்ற தென்னைசெய் கேன்என்றன் கண்இரண்டின் 
இணையாம் பரஞ்சுட ரேஅழி யாநல மேஇன்பமே 
பணையார் திருவொற்றி யூர்அர சேஎம் பரம்பொருளே.
10
1253.பொருளேநின் பொன்னடி உன்னாதென் வன்மனம் பூவையர்தம் 
இருளே புரிகின்ற தென்னைசெய் கேன்அடி யேன்மயங்கும் 
மருளே தவிர்ந்துனை வாழ்த்தி வணங்கி மகிழ்ந்திடநீ 
அருளே அருட்கட லேஒற்றி மாநகர் ஆள்பவனே.
11

Back


 

63. எண்ணத் திரங்கல்

திருவொற்றியூர் 
கொச்சகக் கலிப்பா 

1254.எளியேன்நின் திருமுன்பே என்உரைக்கேன் பொல்லாத 
களியேன் கொடுங்காமக் கன்மனத்தேன் நன்மையிலா 
வெளியேன் வெறியேன்தன் மெய்ப்பிணியை ஒற்றியில்வாழ்
அளியோய்நீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
1
1255.முன்னேசெய் வெவ்வினைதான் மூண்டதுவோ அல்லதுநான் 
இன்னே பிழைதான் இயற்றியதுண் டோ அறியேன் 
பொன்னேர் புரிசடைஎம் புண்ணியனே என்நோயை 
அன்னேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
2
1256.இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை 
வெப்பார் உளத்தினர்போல் வெம்மைசெயும் வெம்பிணியை 
எப்பா லவர்க்கும் இறைவனாம் என்அருமை 
அப்பாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
3
1257.ஓவா மயல்செய் உலகநடைக் குள்துயரம் 
மேவா உழல்கின்ற வெண்மையேன் மெய்ந்நோயைச் 
சேவார் கொடிஎம் சிவனே சிவனேயோ 
ஆவாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
4
1258.பொய்யாம் மலஇருட்டுப் பொத்தரிடை வீழ்ந்துழலும் 
கையாம் நெறியேன் கலங்கவந்த வெம்பிணியை 
மையார் மிடற்றெம் மருந்தே மணியேஎன் 
ஐயாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
5
1259.இம்மா நிலத்தில் இடருழத்தல் போதாதே 
விம்மா அழுங்கஎன்றன் மெய்உடற்றும் வெம்பிணியைச் 
செம்மான் மழுக்கரங்கொள் செல்வச் சிவமேஎன் 
அம்மாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
6
1260.புரைசேரும் நெஞ்சப் புலையனேன் வன்காமத் 
தரைசேரும் துன்பத் தடங்கடலேன் வெம்பிணியை 
விரைசேரும் கொன்றை விரிசடையாய் விண்ணவர்தம் 
அரைசேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
7
1261.இத்தா ரணியில் எளியோரைக் கண்டுமிக 
வித்தாரம் பேசும் வெறியேன்தன் மெய்ப்பிணியைக் 
கொத்தார் குழலிஒரு கூறுடைய கோவேஎன் 
அத்தாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
8
1262.மறியேர் விழியார் மயக்கினிடை மாழாந்த 
சிறியேன் அடியேன் தியங்கவந்த வல்நோயைச் 
செறிவே பெறுந்தொண்டர் சிந்தை தனில்ஓங்கும் 
அறிவேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
9
263.துன்பே சுமையாச் சுமக்கின்ற நாயேனை 
வன்பேசெய் துள்ள மயக்கிநின்ற வன்நோயை 
இன்பே அருள்கின்ற என்ஆ ருயிரேஎன் 
அன்பேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
10

Back


 

64.பிரசாதப் பதிகம்

புள்ளிருக்குவேளூர் 
கலிவிருத்தம் 

1264.சரதத் தால்அன்பர் சார்ந்திடும் நின்திரு 
விரதத் தால்அன்றி வேறொன்றில் தீருமோ 
பரதத் தாண்டவ னேபரி திப்புரி 
வரதத் தாண்டவ னேஇவ்வ ருத்தமே.
1
1265.வேத னேனும்வி லக்குதற் பாலனோ 
தீத னேன்துயர் தீர்க்கும்வ யித்திய 
நாத னேஉன்றன் நல்லருள் இல்லையேல் 
நோதல் நேரும்வன் நோயில்சி றிதுமே.
2
1266.அருந்தி னால்அன்ப கங்குளிர் ஆனந்த 
விருந்தி னால்மகிழ் வித்தருள் அண்ணலே 
வருந்தி நாடவ ரும்பிணி நின்அருள் 
மருந்தி னால்அன்றி மற்றொன்றில் தீருமோ.
3
1267.மாலும் நான்குவ தனனும் மாமறை 
நாலும் நாடரு நம்பர னேஎவ 
ராலும் நீக்கஅ ரிதிவ்வ ருத்தம்நின் 
ஏலும் நல்லருள் இன்றெனில் சற்றுமே.
4
1268.தேவர் ஆயினும் தேவர்வ ணங்கும்ஓர் 
மூவர் ஆயினும் முக்கண நின்அருள் 
மேவு றாதுவி லக்கிடற் பாலரோ 
ஓவு றாதஉ டற்பிணி தன்னையே.
5
1269.வைய நாயக வானவர் நாயக 
தையல் நாயகி சார்ந்திடும் நாயக 
உய்ய நின்னருள் ஒன்றுவ தில்லையேல் 
வெய்ய நோய்கள்வி லகுவ தில்லையே.
6
1270.கல்லை வில்லில்க ணித்தருள் செய்ததோர் 
எல்லை இன்றிஎ ழும்இன்ப வெள்ளமே 
இல்லை இல்லைநின் இன்னருள் இல்லையேல் 
தொல்லை நோயின்தொ டக்கது நீங்கலே.
7
1271.நீதி மாதவர் நெஞ்சிடை நின்றொளிர் 
சோதி யேமுத்தொ ழிலுடை மூவர்க்கும் 
ஆதி யேநின்அ ருள் ஒன்றும் இல்லையேல் 
வாதி யாநிற்கும் வன்பிணி யாவுமே.
8
1272.பத்தர் நித்தம்ப யில்பரி திப்புரி 
உத்த மப்பொரு ளேஉன்அ ருள்தனைப் 
பெத்தம் அற்றிடப் பெற்றவர்க் கல்லது 
நித்தம் உற்றநெ டும்பிணி நீங்குமோ.
9
1273.சைவ சிற்குணர் தம்முளம் மன்னிய 
தெய்வ தற்பர னேசிவ னேஇங்கு 
உய்வ தற்குன்அ ருள்ஒன்றும் இல்லையேல் 
நைவ தற்குந ணுகுவ நோய்களே.
10

Back


 

65. நெஞ்சுறுத்த திருநேரிசை

திருவொற்றியூர் 
நேரிசை வெண்பா 

1274.பொன்னார் விடைக்கொடிஎம் புண்ணியனைப் புங்கவனை 
ஒன்னார் புரம்எரித்த உத்தமனை - மன்னாய 
அத்தனைநம் ஒற்றியூர் அப்பனைஎல் லாம்வல்ல 
சித்தனைநீ வாழ்த்துதிநெஞ் சே.
1
1275.நெஞ்சே உலக நெறிநின்று நீமயலால் 
அஞ்சேல்என் பின்வந் தருள்கண்டாய் - எஞ்சாத் 
தவக்கொழுந்தாம் சற்குணவர் தாழ்ந்தேத்தும் ஒற்றிச் 
சிவக்கொழுந்தை வாழ்த்துதும்நாம் சென்று. 2
 
1276.சென்றுசென்று நல்காத செல்வர்தலை வாயிலிலே 
நின்று நின்று வாடுகின்ற நெஞ்சமே - இன்றுதிரு 
ஒற்றியப்பன் தாண்மலரை உன்னுதியேல் காதலித்து 
மற்றிசைப்ப தெல்லாம் வரும்.
3
1277.வருநாள் உயிர்வாழும் மாண்பறியோம் நெஞ்சே 
ஒருநாளும் நீவேறொன் றுன்னேல் - திருநாளைப் 
போவான் தொழுமன்றில் புண்ணியனை ஒற்றியில்தாய் 
ஆவான் திருவடிஅல் லால்.
4
1278.அல்லாலம் உண்டமிடற் றாரமுதை அற்புதத்தைக் 
கல்லால நீழல்அமர் கற்பகத்தைச் - சொல்ஆர்ந்த 
விண்மணியை என்உயிரை மெய்ப்பொருளை ஒற்றியில்என் 
கண்மணியை நெஞ்சே கருது.
5
1279.கருதாயோ நெஞ்சே கதிகிடைக்க எங்கள் 
மருதா எழில்தில்லை மன்னா - எருதேறும் 
என்அருமைத் தெய்வதமே என்அருமைச் சற்குருவே 
என்அருமை அப்பாவே என்று.
6
1280.என்றும்உனக் காளாவேன் என்நெஞ்சே வன்நெஞ்சர் 
ஒன்றும் இடம் சென்றங் குழலாதே - நன்றுதரும் 
ஒற்றியப்பன் பொன்அடியை உன்னுகின்றோர் தம்பதத்தைப் 
பற்றிநிற்பை யாகில் பரிந்து.
7
1281.பரிந்துனக்குச் சொல்கின்றேன் பாவங்கள் எல்லாம் 
எரிந்துவிழ நாம்கதியில் ஏறத் - தெரிந்து 
விடையானை ஒற்றியூர் வித்தகனை மாதோர் 
புடையானை நெஞ்சமே போற்று.
8
1282.போற்றுதிஎன் நெஞ்சே புரம்நகையால் சுட்டவனை 
ஏற்றுகந்த பெம்மானை எம்மவனை - நீற்றொளிசேர் 
அவ்வண்ணத் தானை அணிபொழில்சூழ் ஒற்றியூர்ச் 
செவ்வண்ணத் தானைத் தெரிந்து.
9
1283.தெரிந்து நினக்கனந்தம் தெண்டன்இடு கின்றேன் 
விரிந்தநெஞ்சே ஒற்றியிடை மேவும் -பரிந்தநெற்றிக் 
கண்ணானை மாலயனும் காணப் படாதானை 
எண்ணாரை எண்ணாதே என்று.
10
1284.என்றென் றழுதாய் இலையேஎன் நெஞ்சமே 
ஒன்றென்று நின்ற உயர்வுடையான் - நன்றென்ற 
செம்மைத் தொழும்பர்தொழும் சீர்ஒற்றி யூர்அண்ணல் 
நம்மைத் தொழும்புகொள்ளும் நாள்.
11
1285.நாளாகு முன்எனது நன்நெஞ்சே ஒற்றியப்பன் 
தாளாகும் தாமரைப்பொன் தண்மலர்க்கே - ஆளாகும் 
தீர்த்தர் தமக்கடிமை செய்தவர்தம் சீர்ச்சமுகம் 
பார்த்துமகிழ் வாய்அதுவே பாங்கு.
12
1286.பாங்குடையார் மெய்யில் பலித்ததிரு நீறணியாத் 
தீங்குடையார் தீமனையில் செல்லாதே - ஓங்குடையாள் 
உற்றமர்ந்த பாகத்தெம் ஒற்றியப்பன் பொன்அருளைப் 
பெற்றமர்தி நெஞ்சே பெரிது.
13
1287.பெரியானை மாதர்ப் பிறைக்கண்ணி யானை 
அரியானை அங்கணனை ஆர்க்கும் - கரியானைத் 
தோலானைச் சீர்ஒற்றிச் சுண்ணவெண் நீற்றானை 
மேலானை நெஞ்சே விரும்பு.
14
1288.விரும்பித் திருமால் விலங்காய் நெடுநாள் 
அரும்பித் தளைந்துள் அயர்ந்தே - திரும்பிவிழி 
நீர்கொண்டும் காணாத நித்தன்ஒற்றி யூரன்அடிச் 
சீர்கொண்டு நெஞ்சே திகழ்.
15
1289.திகழ்கின்ற ஞானச் செழுஞ்சுடரை வானோர் 
புகழ்கின்ற தெய்வத்தைப் போதம் - நிகழ்கின்ற 
ஒற்றிக் கனியை உலகுடைய நாயகத்தை 
வெற்றித் துணையைநெஞ்சே வேண்டு.
16
1290.வேண்டாமை வேண்டுவது மேவாத் தவமுடையோர் 
தீண்டாமை யாததுநீ தீண்டாதே - ஈண்டாமை 
ஒன்றுவபோல் நெஞ்சேநீ ஒன்றிஒற்றி யூரன்பால் 
சென்றுதொழு கண்டாய் தினம்.
17
1291.தினந்தோறும் உள்ளுருகிச் சீர்பாடும் அன்பர் 
மனந்தோறும் ஓங்கும் மணியை - இனந்தோறும் 
வேதமலர் கின்ற வியன்பொழில்சூழ் ஒற்றிநகர்ப் 
போத மலரைநெஞ்சே போற்று.
18
1292.போற்றார் புரம்பொடித்த புண்ணியனை விண்ணவர்கள் 
ஆற்றாத நஞ்சமுண்ட ஆண்தகையைக் - கூற்றாவி 
கொள்ளும் கழற்கால் குருமணியை ஒற்றியிடம் 
கொள்ளும் பொருளைநெஞ்சே கூறு.
19
1293.கூறுமையாட் கீந்தருளும் கோமானைச் செஞ்சடையில் 
ஆறுமலர்க் கொன்றை அணிவோனைத் - தேறுமனம் 
உள்ளவர்கட் குள்ளபடி உள்ளவனை ஒற்றிஅமர் 
நள்ளவனை நெஞ்சமே நாடு.
20
1294.நாடும் சிவாய நமஎன்று நாடுகின்றோர் 
கூடும் தவநெறியில் கூடியே - நீடும்அன்பர் 
சித்தமனைத் தீபகமாம் சிற்பரனை ஒற்றியூர் 
உத்தமனை நெஞ்சமே ஓது.
21
1295.ஓதுநெறி ஒன்றுளதென் உள்ளமே ஓர்திஅது 
தீதுநெறி சேராச் சிவநெறியில் - போதுநெறி 
ஓதம் பிடிக்கும்வயல் ஒற்றியப்பன் தொண்டர்திருப் 
பாதம் பிடிக்கும் பயன்.
22
1296.பயன்அறியாய் நெஞ்சே பவஞ்சார்தி மாலோ 
டயன்அறியாச் சீருடைய அம்மான் - நயனறியார் 
உள்ளத் தடையான் உயர்ஒற்றி யூரவன்வாழ் 
உள்ளத் தவரை உறும்.
23
1297.தவராயி னும்தேவர் தாமாயி னும்மற் 
றெவரா யினும்நமக்கிங் கென்னாம் - கவராத 
நிந்தை அகன்றிடஎன் நெஞ்சமே ஒற்றியில்வாழ் 
எந்தை அடிவணங்கா ரேல்.
24
1298.ஏலக் குழலார் இடைக்கீழ்ப் படுங்கொடிய 
ஞாலக் கிடங்கரினை நம்பாதே - நீல 
மணிகண்டா என்றுவந்து வாழ்த்திநெஞ்சே நாளும் 
பணிகண்டாய் அன்னோன் பதம்.
25
1299.பதந்தருவான் செல்வப் பயன்தருவான் மன்னும் 
சதந்தருவான் யாவும் தருவான் - இதம்தரும்என் 
நெஞ்சம்என்கொல் வாடுகின்றாய் நின்மலா நின்அடியே 
தஞ்சமென்றால் ஒற்றியப்பன் தான்.
26

Back


 

66. தனிமைக் கிரங்கல்

திருவொற்றியூர் 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

1300.

ஆக்கல் ஆதிய ஐந்தொழில் நடத்த

அயன்முன் ஆகிய ஐவரை அளித்து 
நீக்கம் இன்றிஎவ் விடத்தினும் நிறைந்த

நித்த நீஎனும் நிச்சயம் அதனைத் 
தாக்க எண்ணியே தாமதப் பாவி

தலைப்பட் டான்அவன் தனைஅகற் றுதற்கே 
ஊக்கம் உற்றநின் திருவருள் வேண்டும்

ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.

1
1301.

கணத்தில் என்னைவிட் டேகுகின் றவன்போல்

காட்டு கின்றனன் மீட்டும்வந் தடுத்துப் 
பணத்தும் மண்ணினும் பாவைய ரிடத்தும்

பரவ நெஞ்சினை விரவுகின் றனன்காண் 
குணத்தி னில்கொடுந் தாமதன் எனும்இக்

கொடிய வஞ்சகன் ஒடியமெய்ப் போதம் 
உணர்த்து வார்இலை என்செய்கேன் எளியேன்

ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.

2
1302.

இமைக்கும் அவ்வள வேனும்நெஞ் சொடுங்கி

இருக்கக் கண்டிலேன் இழிவுகொள் மலத்தின் 
சுமைக்கு நொந்துநொந் தையவோ நாளும்

துயர்கின் றேன்அயர் கின்றஎன் துயரைக் 
குமைக்கும் வண்ணம்நின் திருவருள் இன்னும்

கூடப் பெற்றிலேன் கூறுவ தென்னே 
உமைக்கு நல்வரம் உதவிய தேவே

ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.

3
1303.

சென்ற நாளில்ஓர் இறைப்பொழு தேனும்

சிந்தை ஓர்வகை தெளிந்ததன் றதுபோய் 
நின்ற நாளினும் நிற்கின்ற திலைகாண்

நெடிய பாவியேன் நிகழ்த்துவ தென்னே 
என்றன் ஆருயிர்க் கொருபெருந் துணையாம்

எந்தை யேஎனை எழுமையும் காத்த 
உன்ற னால்இன்னும் உவகைகொள் கின்றேன்

ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.

4
1304.

கோடி நாவினும் கூறிட அடங்காக்

கொடிய மாயையின் நெடியவாழ்க் கையினை 
நாடி நெஞ்சகம் நலிகின்றேன் உனையோர்

நாளும் எண்ணிலேன் நன்கடை வேனே 
வாடி னேன்பிழை மனங்கொளல் அழியா

வாழ்வை ஏழையேன் வசஞ்செயல் வேண்டும் 
ஊடி னாலும்மெய் அடியரை இகவா

ஒற்றி மேவிய உத்தமப் பொருளே.

5
1305.

அன்ப தென்பதைக் கனவினும் காணேன்

ஆடு கின்றனன் அன்பரைப் போல 
வன்ப வத்தையும் மாய்த்திட நினைத்தேன்

வஞ்ச நெஞ்சினை வசப்படுக் கில்லேன் 
துன்ப வாழ்க்கையில் சுழல்கின்றேன் நின்னைத்

தொழுது வாழ்த்திநல் சுகம்பெறு வேனே 
ஒன்ப தாகிய உருவுடைப் பெரியோய்

ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.

6
1306.

முன்னை நான்செய்த வல்வினை இரண்டின்

முடிவு தேர்ந்திலன் வடிவெடுத் துலகில் 
என்னை நான்கண்ட தந்தநாள் தொடங்கி

இந்த நாள்மட்டும் இருள் என்ப தல்லால் 
பின்னை யாதொன்றும் பெற்றிலேன் இதனைப்

பேச என்னுளம் கூசுகின் றதுகாண் 
உன்னை நம்பினேன் நின்குறிப் புணரேன்

ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.

7
1307.

கண்ணி லான்சுடர் காணிய விழைந்த

கருத்தை ஒத்தஎன் கருத்தினை முடிப்பத் 
தெண்ணி லாமுடிச் சிவபரம் பொருள்நின்

சித்தம் எப்படி தெரிந்திலன் எளியேன் 
பண்ணி லாவிய பாடலந் தொடைநின்

பாத பங்கயம் பதிவுறப் புனைவோர் 
உண்ணி லாவிய ஆனந்தப் பெருக்கே

ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.

8
1308.

உண்மை நின்அருட் சுகம்பிற எல்லாம்

உண்மை அன்றென உணர்த்தியும் எனது 
பெண்மை நெஞ்சகம் வெண்மைகொண் டுலகப்

பித்தி லேஇன்னும் தொத்துகின் றதுகாண் 
வண்மை ஒன்றிலேன் எண்மையின் அந்தோ

வருந்து கின்றனன் வாழ்வடை வேனோ 
ஒண்மை அம்பலத் தொளிசெயும் சுடரே

ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.

9
1309.

நையு மாறெனைக் காமமா திகள்தாம்

நணுகி வஞ்சகம் நாட்டுகின் றதுநான் 
செய்யு மாறிதற் கறிந்திலன் எந்தாய்

திகைக்கின் றேன் அருள் திறம்பெறு வேனே 
வையு மாறிலா வண்கையர் உளத்தின்

மன்னி வாழ்கின்ற மாமணிக் குன்றே 
உய்யு மாறருள் அம்பலத் தமுதே

ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.

10

Back


 

67. கருணை பெறா திரங்கல்

பொது 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

1310.நன்றி ஒன்றிய நின்னடி யவர்க்கே 
நானும் இங்கொரு நாயடி யவன்காண் 
குன்றின் ஒன்றிய இடர்மிக உடையேன் 
குற்றம் நீக்கும்நல் குணமிலேன் எனினும் 
என்றின் ஒன்றிய சிவபரஞ் சுடரே 
இன்ப வாரியே என்னுயிர்த் துணையே 
ஒன்றின் ஒன்றிய உத்தமப் பொருளே 
உனைஅ லால்எனை உடையவர் எவரே.
1
1311.தீது செய்தனன் செய்கின்றேன் செய்வேன் 
தீய னேன்கொடுந் தீக்குண இயல்பே 
ஏது செய்தன னேனும்என் தன்னை 
ஏன்று கொள்வதெம் இறைவநின் இயல்பே 
ஈது செய்தனை என்னைவிட் டுலகில் 
இடர்கொண் டேங்கென இயம்பிடில் அடியேன் 
ஓது செய்வதொன் றென்னுயிர்த் துணையே 
உனைஅ லால்எனை உடையவர் எவரே.
2
1312.சென்ற நாளினும் செல்கின்ற நாளில் 
சிறிய னேன்மிகத் தியங்குறு கின்றேன் 
மன்ற நான்இவண் இவ்வகை ஆனால் 
வள்ள லேநினை வழுத்துமா றெதுவோ 
என்ற னால்இனி ஆவதொன் றிலைஉன் 
எண்ணம் எப்படி அப்படி இசைக 
உன்ற னால்களித் துவகைகொள் கின்றேன் 
உனைஅ லால்எனை உடையவர் எவரே.
3
1313.மையல் வாழ்க்கையில் நாள்தொறும் அடியேன் 
வருந்தி நெஞ்சகம் மாழ்குவ தெல்லாம் 
ஐய ஐயவோ கண்டிடா தவர்போல் 
அடம்பி டிப்பதுன் அருளினுக் கழகோ 
செய்ய மேல்ஒன்றும் அறிந்திலன் சிவனே 
தில்லை மன்றிடைத் தென்முக நோக்கி 
உய்ய வைத்ததாள் நம்பிநிற் கின்றேன் 
உனைஅ லால்எனை உடையவர் எவரே.
4
1314.மண்ண கச்சிறு வாழ்க்கையின் பொருட்டால் 
வருந்தி மற்றதன் வன்மைகள் எல்லாம் 
எண்ண எண்ணஎன் நெஞ்சகம் பதைப்புற் 
றேங்கி ஏங்கிநான் இளைப்புறு கின்றேன் 
அண்ணல் நின்திரு அருட்டுணை அடைந்தால் 
அமைந்து வாழ்குவன் அடைவகை அறியேன் 
உண்ண நல்அமு தனையஎம் பெருமான் 
உனைஅ லால்எனை உடையவர் எவரே.
5
1315.அன்னை அப்பனும் நீஎன மகிழ்ந்தே 
அகங்கு ளிர்ந்துநான் ஆதரித் திருந்தேன் 
என்னை இப்படி இடர்கொள விடுத்தால் 
என்செய் கேன் இதை யாரொடு புகல்கேன் 
பொன்னை ஒத்தநின் அடித்துணை மலரைப் 
போற்று வார்க்குநீ புரிகுவ திதுவோ 
உன்னை எப்படி ஆயினும் மறவேன் 
உனைஅ லால்எனை உடையவர் எவரே.
6
1316.நீலம் இட்டகண் மடவியர் மயக்கால் 
நெஞ்சம் ஓர்வழி நான்ஒரு வழியாய் 
ஞாலம் இட்ட இவ் வாழ்க்கையில் அடியேன் 
நடுங்கி உள்ளகம் நலியும்என் தன்மை 
ஆலம் இட்டருள் களத்தநீ அறிந்தும் 
அருள்அ ளித்திலை ஆகமற் றிதனை 
ஓலம் இட்டழு தரற்றிஎங் குரைப்பேன் 
உனைஅ லால்எனை உடையவர் எவரே.
7
1317.கொடிய பாவியேன் படும்பரி தாபம் 
குறித்துக் கண்டும்என் குறைஅகற் றாது 
நெடிய காலமும் தாழ்த்தனை நினது 
நெஞ்சும் வஞ்சகம் நேர்ந்ததுண் டேயோ 
அடியர் தந்துயர் கண்டிடில் தரியார் 
ஐயர் என்பர்என் அளவஃ திலையோ 
ஒடிய மாதுயர் நீக்கிடாய் என்னில் 
உனைஅ லால்எனை உடையவர் எவரே.
8
1318.என்என் றேழையேன் நாணம்விட் டுரைப்பேன் 
இறைவ நின்றனை இறைப்பொழு தேனும் 
உன்என் றால்என துரைமறுத் தெதிராய் 
உலக மாயையில் திலகமென் றுரைக்கும் 
மின்என் றால்இடை மடவியர் மயக்கில் 
வீழ்ந்தென் நெஞ்சகம் ஆழ்ந்துவிட் டதனால் 
உன்அன் பென்பதென் னிடத்திலை யேனும் 
உனைஅ லால்எனை உடையவர் எவரே.
9
1319.அடிய னேன்மிசை ஆண்டவ நினக்கோர் 
அன்பி ருந்ததென் றகங்கரித் திருந்தேன் 
கொடிய னேன்படும் இடர்முழு தறிந்தும் 
கூலி யாளனைப் போல்எனை நினைத்தே 
நெடிய இத்துணைப் போதும்ஓர் சிறிதும் 
நெஞ்சி ரங்கிலை சஞ்சலத் தறிவும் 
ஒடிய நின்றனன் என்செய்கேன் சிவனே 
உனைஅ லால்எனை உடையவர் எவரே.
10

Back


 

68. அர்ப்பித் திரங்கல்

பொது 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

1320.தம்பி ரான்தய விருக்கஇங் கெனக்கோர் 
தாழ்வுண் டோ எனத் தருக்கொடும் இருந்தேன் 
எம்பி ரான்நினக் கேழையேன் அளவில் 
இரக்கம் ஒன்றிலை என்என்ப தின்னும் 
நம்பி ரான்என நம்பிநிற் கின்றேன் 
நம்பும் என்றனை வெம்பிடச் செயினும் 
செம்பி ரான்அருள் அளிக்கினும் உனது 
சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
1
1321துட்ட நெஞ்சக வஞ்சகக் கொடியேன் 
சொல்வ தென்னைஎன் தொல்வினை வசத்தால் 
இட்ட நல்வழி அல்வழி எனவே 
எண்ணும் இவ்வழி இரண்டிடை எனைநீ 
விட்ட தெவ்வழி அவ்வழி அகன்றே 
வேறும் ஓர்வழி மேவிடப் படுமோ 
சிட்டர் உள்ளுறும் சிவபெரு மான்நின் 
சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
2
1322.ஊட்டு கின்றனை உண்ணுகின் றனன்மேல் 
உறக்கு கின்றனை உறங்குகின் றனன்பின் 
காட்டு கின்றனை காணுகின் றனன்நீ 
களிப்பிக் கின்றனை களிப்புறு கின்றேன் 
ஆட்டு கின்றனை ஆடுகின் றனன்இவ் 
அகில கோடியும் அவ்வகை யானால் 
தீட்டும் அன்பருக் கன்பநின் தனது 
சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
3
1323.கண்ணி லான்சுடர் காணஉன் னுதல்போல் 
கருத்தி லேனும்நின் கருணையை விழைந்தேன் 
எண்ணி லாஇடை யூறடுத் ததனால் 
இளைக்கின் றேன்எனை ஏன்றுகொள் வதற்கென் 
உண்ணி லாவிய உயிர்க்குயிர் அனையாய் 
உன்னை ஒத்ததோர் முன்னவர் இலைகாண் 
தெண்ணி லாமுடிச் சிவபரம் பொருள்நின் 
சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
4
1324.மெச்சு கின்றவர் வேண்டிய எல்லாம் 
விழிஇ மைக்குமுன் மேவல்கண் டுனைநான் 
நச்சு கின்றனன் நச்சினும் கொடியேன் 
நன்மை எய்தவோ வன்மையுற் றிடவோ 
இச்சை நன்றறி வாய்அருள் செய்யா 
திருக்கின் றாய் உனக் கியான்செய்த தென்னே 
செச்சை மேனிஎம் சிவபரஞ் சுடர்நின் 
சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
5
1325.நாடுந் தாயினும் நல்லவன் நமது 
நாதன் என்றுனை நாடும்அப் பொழுதே 
வாடு நெஞ்சம் தளிர்க்கின்றேன் மற்றை 
வைகற் போதெலாம் வாடுகின் றனன்காண் 
பாடுந் தொண்டர்கள் இடர்ப்படில் தரியாப் 
பண்பென் மட்டும்நின் பால்இலை போலும் 
தேடும் பத்தர்தம் உளத்தமர் வோய்நின் 
சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
6
1326.மருள்அ ளித்தெனை மயக்கிஇவ் உலகில் 
வருத்து கின்றனை மற்றெனக் குன்றன் 
அருள்அ ளிக்கிலை ஆயினும் நினக்கே 
அடிமை யாக்கிலை ஆயினும் வேற்றுப் 
பொருள்அ ளிக்கிலை ஆயினும் ஒருநின் 
பொன்மு கத்தைஓர் போது கண் டிடவே 
தெருள்அ ளித்திடில் போதும் இங் குனது 
சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
7
1327.மாறு கின்றனன் நெஞ்சகம் அஞ்சி 
வள்ளல் இத்துணை வந்திலன் இனிமேல் 
கூறு கின்றதென் என்றயர் கின்றேன் 
குலவித் தேற்றும்அக் கொள்கையர் இன்றி 
ஏறு கின்றனன் இரக்கமுள் ளவன்நம் 
இறைவன் இன்றருள் ஈகுவன் என்றே 
தேறு கின்றனன் என்செய்கேன் நினது 
சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
8
1328.தாயி னும்பெருந் தயவுடை யவன்நந் 
தலைவன் என்றுநான் தருக்கொடும் திரிந்தேன் 
நாயி னும்கடை யேன்படும் இடரை 
நாளும் கண்டனை நல்அருள் செய்யாய் 
ஆயி னும்திரு முகங்கண்டு மகிழும் 
அன்பர் தம்பணி ஆற்றிமற் றுடலம் 
தேயி னும்மிக நன்றெனக் கருள்உன் 
சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
9
1329.வானும் வையமும் அளிக்கினும் உன்பால் 
மனம்வைத் தோங்குவர் வள்ளல்நின் அடியார் 
நானும் அவ்வகை உலகியல் ஒழுக்கில் 
நாடி நின்னருள் நலம்பெற விழைதல் 
கூனும் ஓர்முடக் கண்ணிலி வானில் 
குலவும் ஒண்சுடர் குறித்திடல் போலும் 
தேனும் கைக்கும்நின் அருளுண்டேல் உண்டுன் 
சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
10

Back


 

69. கழிபகற் கிரங்கல்

பொது 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

1330.ஆண்ட துண்டுநீ என்றனை அடியேன் 
ஆக்கை ஒன்றுமே அசைமடற் பனைபோல் 
நீண்ட துண்டுமற் றுன்னடிக் கன்பே 
நீண்ட தில்லைவல் நெறிசெலும் ஒழுக்கம் 
பூண்ட துண்டுநின் புனிதநல் ஒழுக்கே 
பூண்ட தில்லைஎன் புன்மையை நோக்கி 
ஈண்ட வந்தரு ளாய்எனில் அந்தோ 
என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
1
1331.ஊழை யேமிக நொந்திடு வேனோ 
உளத்தை நோவனோ உலகிடை மயக்கும் 
பாழை யேபலன் தருவதென் றெண்ணிப் 
பாவி யேன்பெரும் படர்உழக் கின்றேன் 
மாழை யேர்திரு மேனிஎம் பெருமான் 
மனம்இ ரங்கிஎன் வல்வினை கெடவந் 
தேழை யேற்கரு ளாய்எனில் அந்தோ 
என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
2
1332.ஈன்று கொண்டஎன் தந்தையும் தாயும் 
யாவும் நீஎன எண்ணிய நாயேன் 
மான்று கொண்டஇவ் வஞ்சக வாழ்வின் 
மயக்கி னால்மிக வன்மைகள் செய்தேன் 
சான்று கொண்டது கண்டனை யேனும் 
தமிய னேன்மிசைத் தயவுகொண் டென்னை 
ஏன்று கொண்டரு ளாய்எனில் அந்தோ 
என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
3
1333.அம்மை அப்பன்என் ஆருயிர்த் துணைவன் 
அரசன் தேசிகன் அன்புடைத் தேவன் 
இம்மை யிற்பயன் அம்மையிற் பயன்மற் 
றியாவு நீஎன எண்ணிநிற் கின்றேன் 
செம்மை யிற்பெறும் அன்பருள் ளகஞ்சேர் 
செல்வ மேஎனைச் சேர்த்தரு ளாயேல் 
எம்மை யிற்பெறு வேன்சிறு நாயேன் 
என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
4
1334.தாய ராதியர் சலிப்புறு கிற்பார் 
தமரும் என்றனைத் தழுவுதல் ஒழிவார் 
நேய ராதியர் நேயம்விட் டகல்வார் 
நின்னை நம்பிஎன் நெஞ்சுவக் கின்றேன் 
தீய ராதியில் தீயன்என் றெனைநின் 
திருவு ளத்திடைச் சேர்த்திடா தொழித்தால் 
ஏயர் கோனுக்கன் றருளும்எம் பெருமான் 
என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
5
1335.முன்னை நான்செய்த வல்வினைச் சிமிழ்ப்பான் 
மோக வாரியின் மூழ்கின னேனும் 
அன்னை போலும்என் ஆருயிர்த் துணையாம் 
அப்ப நின்அருள் அம்பியை நம்பி 
தன்னை நேர்சிவ ஞானமென் கரையைச் 
சார்கு வேம்எனும் தருக்குடன் உழன்றேன் 
இன்னும் நின்அருள் ஈந்திலை அந்தோ 
என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
6
1336.உண்ணு கின்றதும் உறங்குகின் றதும்மேல் 
உடுத்து கின்றதும் உலவுகின் றதும்மால் 
நண்ணு கின்றதும் நங்கையர் வாழ்க்கை 
நாடு கின்றதும் நவையுடைத் தொழில்கள் 
பண்ணு கின்றதும் ஆனபின் உடலைப் 
பாடை மேலுறப் படுத்துகின் றதும்என் 
றெண்ணு கின்றதோ றுளம்பதைக் கின்றேன் 
என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
7
1337.கல்லை வெல்லவும் வல்லஎன் மனந்தான் 
கடவுள் நின்அடிக் கமலங்கள் நினைத்தல் 
இல்லை நல்லைநின் அருள்எனக் கதனால் 
இல்லை இல்லைநீ இரக்கம்இல் லாதான் 
அல்லை இல்லையால் அருள்தரா திருத்தல் 
அடிய னேன்அள வாயின்இங் கிடர்க்கே 
எல்லை இல்லைஎன் றுளம்பதைக் கின்றேன் 
என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
8
1338.பொங்கு மாயையின் புணர்ப்பினுக் குள்ளம் 
போக்கி நின்றதும் புலப்பகை வர்களால் 
இங்கு மால்அரி ஏற்றின்முன் கரிபோல் 
ஏங்கு கின்றதும் இடர்ப்பெருங் கடலில் 
தங்கும் ஆசையங் கராப்பிடித் தீர்க்கத் 
தவிப்பில் நின்றதும் தமியனேன் தனையும் 
எங்கும் ஆகிநின் றாய்அறிந் திலையோ 
என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
9
1339.அரக்கன் அல்லன்யான் அரக்கனே எனினும் 
அரக்க னுக்கும்முன் அருள்அளித் தனையே 
புரக்க என்னைநின் அருட்கடன் என்றே 
போற்று கின்றனன் புலையரிற் புலையேன் 
உரக்க இங்கிழைத் திடும்பிழை எல்லாம் 
உன்னல் ஐயநீ உன்னிஎன் அளவில் 
இரக்கம் நின்திரு உளத்திலை யானால் 
என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
10

Back


 

70. தரிசனப் பதிகம்

கோயில் 
அறுசீர்க்(33) கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

(33). எழுசீர் - தொ.வே 1,2. அறுசீர் - ச. மு. க., ஆ. பா.

1340.திருவார் பொன்னம் பலநடுவே தெள்ளார் அமுதத் திரள்அனைய 
உருவார் அறிவா னந்தநடம் உடையார் அடியார்க் குவகைநிலை 
தருவார் அவர்தம் திருமுகத்தே ததும்பும் இளவெண் ணகைகண்டேன் 
இருவா தனைஅற் றந்தோநான் இன்னும் ஒருகால் காண்பேனோ.
1
1341.பொன்நா யகனும் புரந்தரனும் பூவாழ் பவனும் புகழ்ந்தேத்த 
மின்னார் பொன்னம் பலநடுவே விளங்கும் கருணை விழிவழங்கும் 
அன்னார் அறிவா னந்தநடம் ஆடும் கழல்கண் டகங்குளிர்ந்தேன் 
என்நா யகனார் அவர்கழலை இன்னும் ஒருகால் காண்பேனோ.
2
1342.தாயிற் பெரிய கருணையினார் தலைமா லையினார் தாழ்சடையார் 
வாயிற் கினிய புகழுடைய வள்ளல் அவர்தந் திருஅழகைக் 
கோயிற் கருகே சென்றுமனம் குளிரக் கண்டேன் பிரிவுற்றேன் 
ஈயில் சிறியேன் அவர்அழகை இன்னும் ஒருகால் காண்பேனோ.
3
1343.புன்கண் அகற்றும் மெய்யடியார் போற்றும் பொன்னம் பலநடுவே 
வன்கண் அறியார் திருநடஞ்செய் வரதர் அமுதத் திருமுகத்தை 
முன்கண் உலகில் சிறியேன்செய் முழுமா தவத்தால் கண்டேன்நான் 
என்கண் அனையார் அவர்முகத்தை இன்னும் ஒருகால் காண்பேனோ. 4
 
1344.அன்புற் றடியார் தொழுதேத்த அணியார் மணிப்பொன் அம்பலத்தே 
வன்புற் றழியாப் பெருங்கருணை மலையார் தலையார் மாலையினார் 
மன்புற் றரவார் கச்சிடையின் வயங்க நடஞ்செய் வதுகண்டேன் 
இன்புற் றடியேன் அவர்நடத்தை இன்னும் ஒருகால் காண்பேனோ. 5
 
1345.இம்மா நிலத்தில் சிவபதமீ தென்னும் பொன்னம் பலநடுவே 
அம்மால் அறியா அடிகள்அடி அசைய நடஞ்செய் வதுகண்டேன் 
எம்மால் அறியப் படுவதல என்என் றுரைப்பேன் ஏழையன்யான் 
எம்மான் அவர்தந் திருநடத்தை இன்னும் ஒருகால் காண்பேனோ. 6
 
1346.சிறியேன் தவமோ எனைஈன்றாள் செய்த தவமோ யான்அறியேன் 
மறியேர் கரத்தார் அம்பலத்தே வாழும் சிவனார் தமைக்கண்டேன் 
பிறியேன் எனினும் பிரிந்தேன்நான் பேயேன் அந்தப் பிரிவினைக்கீழ் 
எறியேன் அந்தோ அவர்தம்மை இன்னும் ஒருகால் காண்பேனோ. 7
 
1347.அருளே வடிவாய் அம்பலத்தே ஆடும் பெருமான் அடிகள்தமைத் 
தெருளே வடிவாம் அடியவர்போல் சிறியேன் கண்டேன் சீர்உற்றேன் 
மருளே வடிவேன் ஆதலினால் மறந்தே பிரிந்தே மதிகெட்டேன் 
இருளேர் மனத்தேன் அவர்தமைநான் இன்னும் ஒருகால் காண்பேனோ. 8
 
1348.அன்னோ திருஅம் பலத்தேஎம் ஐயர் உருக்கண் டேன்அதுதான் 
பொன்னோ பவளப் பொருப்பதுவோ புதுமா ணிக்க மணித்திரளோ 
மின்னோ விளக்கோ விரிசுடரோ மேலை ஒளியோ என் உரைப்பேன் 
என்னோ அவர்தந் திருஉருவை இன்னும் ஒருகால் காண்பேனோ. 9
 
1349.பொன்என் றுரைக்கும் அம்பலத்தே புனித னார்தம் அழகியலை 
உன்என் றுரைப்பேன் என்னேஎன் உள்ளம் சிறிதும் உணர்ந்ததிலை 
மின்என் றுரைக்கும் படிமூன்று விளக்கும் மழுங்கும் எனில்அடியேன் 
என்என் றுரைப்பேன் அவர்அழகை இன்னும் ஒருகால் காண்பேனோ. 10
 

Back

 


 

71. முத்தி உபாயம்

திருவொற்றியூர் 
வஞ்சித்துறை 

1350.ஒற்றி ஊரனைப் 
பற்றி நெஞ்சமே 
நிற்றி நீஅருள் 
பெற்றி சேரவே.
1
1351.சேர நெஞ்சமே 
தூரம் அன்றுகாண் 
வாரம் வைத்தியேல் 
சாரும் முத்தியே.
2
1352.முத்தி வேண்டுமேல் 
பத்தி வேண்டுமால் 
சத்தி யம்இது 
புத்தி நெஞ்சமே.
3
1353.நெஞ்ச மேஇது 
வஞ்ச மேஅல 
பிஞ்ச கன்பதம் 
தஞ்சம் என்பதே.
4
1354.என்ப தேற்றவன் 
அன்ப தேற்றுநீ 
வன்பு மாற்றுதி 
இன்பம் ஊற்றவே.
5
1355.ஊற்றம் உற்றுவெண் 
நீற்றன் ஒற்றியூர் 
போற்ற நீங்குமால் 
ஆற்ற நோய்களே.
6
1356.நோய்கள் கொண்டிடும் 
பேய்கள் பற்பலர் 
தூய்தன் ஒற்றியூர்க் 
கேய்தல் இல்லையே.
7
1357.இல்லை இல்லைகாண் 
ஒல்லை ஒற்றியூர் 
எல்லை சேரவே 
அல்லல் என்பதே.
8
1358.அல்லல் என்பதேன் 
தொல்லை நெஞ்சமே 
மல்லல் ஒற்றியூர் 
எல்லை சென்றுமே.
9
1359.சென்று வாழ்த்துதி 
நன்று நெஞ்சமே 
என்றும் நல்வளம் 
ஒன்றும் ஒற்றியே.
10

Back


 

72. தவத்திறம் போற்றல்

திருவொற்றியூர் 
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

1360.வில்வத் தொடும்பொன் கொன்றைஅணி வேணிப் பெருமான் ஒற்றிநகர் 
செல்வப் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருஅழகைக் 
கல்வைப் புடைய மனம்களிக்கக் கண்கள் களிக்கக் கண்டுநின்றேன் 
இல்வைப் புடையேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
1
1361.கூடும் படிமுன் திருமாலும் கோல மாகிப் புவி இடந்து 
தேடும் திருத்தாள் சிவபெருமான் தியாகப் பெருமான் திருப்பவனி 
நாடும் புகழ்சேர் ஒற்றிநகர் நாடிப் புகுந்து கண்டேனால் 
ஈடும் அகன்றேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
2
1362.ஆர்க்கும் கடற்கண் அன்றெழுந்த ஆல காலம் அத்தனையும் 
சேர்க்கும் களத்தான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருநடத்தைக் 
கார்க்கண் பொழில்சூழ் ஒற்றியில்போய்க் கண்டேன் பிறவி கண்டிலனே 
யார்க்கென் றுரைப்பேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
3
1363.உள்ளும் புறமும் நிறைந்தடியார் உள்ளம் மதுரித் தூறுகின்ற 
தெள்ளும் அமுதாம் சிவபெருமான் தியாகப் பெருமான் திருமுகத்தைக் 
கள்ளம் தவிர்க்கும் ஒற்றியில்போய்க் கண்டேன் பசியைக் கண்டிலனே 
எள்ளல் இகந்தேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
4
1364.ஆவல் உடையார் உள்ளுடையார் அயன்மால் மகவான் ஆதியராம் 
தேவர் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருவடிவைக் 
காவம் பொழில்சூழ் ஒற்றியில்போய்க் கண்டேன் கண்ட காட்சிதனை 
யாவர் பெறுவார் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
5
1365.மறப்பை அகன்ற மனத்துரவோர் வாழ்த்த அவர்க்கு வான்கதியின் 
சிறப்பை அளிக்கும் சிவபெருமான் தியாகப் பெருமான் திருநடத்தைப் 
பிறப்பை அகற்றும் ஒற்றியில்போய்ப் பேரா னந்தம் பெறக்கண்டேன் 
இறப்பைத் தவிர்த்தேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
6
1366.வில்லாம் படிப்பொன் மேருவினை விரைய வாங்கும் வெற்றியினான் 
செல்லாம் கருணைச் சிவபெருமான் தியாகப் பெருமான் திருகூத்தைக் 
கல்லாம் கொடிய மனம்கரையக் கண்டேன் பண்டு காணாத 
எல்லாம் கண்டேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
7
1367.ஒல்லை எயில்மூன் றெரிகொளுவ உற்று நகைத்தோன் ஒற்றியுளான் 
தில்லை நகரான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருப்பவனி 
கல்லை அளியும் கனியாக்கக் கண்டேன் கொண்ட களிப்பினுக்கோர் 
எல்லை அறியேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
8
1368.துன்னும் சோம சுந்தரனார் தூய மதுரை நகர்அளித்த 
தென்னர் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருஅழகைப் 
பன்னும் ஒற்றி நகர்தன்னில் பார்த்தேன் வினைபோம் வழிபார்த்த 
என்னை மறந்தேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
9
1369.முன்னம் காழி வள்ளலுக்கு முத்துச் சிவிகை குடையொடுபொன் 
சின்னம் அளித்தோன் சிவபெருமான் தியாகப் பெருமான் திருவடியைக் 
கன்னின் றுருகா நெஞ்சுருகக் கண்டேன் கண்ட காட்சிதனை 
என்என் றுரைப்பேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
10

Back


 

73. திருச்சாதனத் தெய்வத் திறம்

பொது 
எண்சீர்க்(34)கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

( 34). எழுசீர்- தொ.வே. 1,2. எண்சீர்- ச.மு.க., ஆ.பா. 

1370.

உடையாய்உன் அடியவர்க்கும் அவர்மேல் பூண்ட

ஒண்மணியாம் கண்மணிக்கும் ஓங்கு சைவ 
அடையாளம் என்னஒளிர் வெண்ணீற் றுக்கும்

அன்பிலேன் அஞ்சாமல் அந்தோ அந்தோ 
நடையாய உடல் முழுதும் நாவாய் நின்று

நவில்கின்றேன் என்பாவி நாவைச் சற்றும் 
இடையாத கொடுந்தீயால் சுடினும் அன்றி

என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.

1
1371.கண்ணுதலே நின்அடியார் தமையும் நோக்கேன் 
கண்மணிமா லைக்கெனினும் கனிந்து நில்லேன் 
பண்ணுதல்சேர் திருநீற்றுக் கோலம் தன்னைப் 
பார்த்தேனும் அஞ்சுகிலேன் பயனி லாமே 
நண்ணுதல்சேர் உடம்பெல்லாம் நாவாய் நின்று 
நவில்கின்றேன் என்கொடிய நாவை அந்தோ 
எண்ணுதல்சேர் கொடுந்தீயால் சுடினும் அன்றி 
என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
2
1372.வஞ்சமிலார் நெஞ்சகத்தே மருவும் முக்கண் 
மாமணியே உனைநினையேன் வாளா நாளைக் 
கஞ்சமலர் முகத்தியர்க்கும் வாதில் தோன்றும் 
களிப்பினுக்கும் கழிக்கின்றேன் கடைய னேனை 
நஞ்சமுணக் கொடுத்துமடித் திடினும் வாளால் 
நசிப்புறவே துணித்திடினும் நலியத் தீயால் 
எஞ்சலுறச் சுடினும்அன்றி அந்தோ இன்னும் 
என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
3
1373.அருள்பழுக்கும் கற்பகமே அரசே முக்கண் 
ஆரமுதே நினைப்புகழேன் அந்தோ வஞ்ச 
மருள்பழுக்கும் நெஞ்சகத்தேன் வாளா நாளை 
வாதமிட்டுக் கழிக்கின்றேன் மதியி லேனை 
வெருள்பழுக்கும் கடுங்காட்டில் விடினும் ஆற்று 
வெள்ளத்தில் அடித்தேக விடினும் பொல்லா 
இருள்பழுக்கும் பிலஞ்சேர விடினும் அன்றி 
என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
4
1374.பெருங்கருணைக் கடலேஎன் குருவே முக்கண் 
பெருமானே நினைப்புகழேன் பேயேன் அந்தோ 
கருங்கல்மனக் குரங்காட்டி வாளா நாளைக் 
கழிக்கின்றேன் பயன்அறியாக் கடைய னேனை 
ஒருங்குருள உடல்பதைப்ப உறுங்குன் றேற்றி 
உருட்டுகினும் உயிர்நடுங்க உள்ளம் ஏங்க 
இருங்கழுவில் ஏற்றுகினும் அன்றி இன்னும் 
என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
5
1375.தொழுகின்றோர் உளத்தமர்ந்த சுடரே முக்கண் 
சுடர்க்கொழுந்தே நின்பதத்தைத் துதியேன் வாதில் 
விழுகின்றேன் நல்லோர்கள் வெறுப்பப் பேசி 
வெறித்துழலும் நாயனையேன் விழல னேனை 
உழுகின்ற நுகப்படைகொண் டுலையத் தள்ளி 
உழக்கினும்நெட் டுடல்நடுங்க உறுக்கி மேன்மேல் 
எழுகின்ற கடலிடைவீழ்த் திடினும் அன்றி 
என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
6
1376.விருப்பாகும் மதிச்சடையாய் விடையாய் என்றே 
மெய்யன்போ டுனைத்துதியேன் விரைந்து வஞ்சக் 
கருப்பாயும் விலங்கெனவே வளர்ந்தே நாளைக் 
கழிக்கின்றேன் கருநெஞ்சக் கள்வ னேனைப் 
பொருப்பாய யானையின் கால் இடினும் பொல்லாப் 
புழுத்தலையில் சோரிபுறம் பொழிய நீண்ட 
இருப்பாணி ஏற்றுகினும் அன்றி இன்னும் 
என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
7
1377.அக்கநுதல் பிறைச்சடையாய் நின்தாள் ஏத்தேன் 
ஆண்பனைபோல் மிகநீண்டேன் அறிவொன் றில்லேன் 
மிக்கஒதி போல்பருத்தேன் கருங்க டாப்போல் 
வீண்கருமத் துழல்கின்றேன் விழல னேனைச் 
செக்கிடைவைத் துடல்குழம்பிச் சிதைய அந்தோ 
திருப்பிடினும் இருப்பறைமுட் சேரச் சேர்த்து 
எக்கரிடை உருட்டுகினும் அன்றி இன்னும் 
என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
8
1378.அன்புடன்நின் பதம்புகழாப் பாவி நாவை 
அறத்துணியேன் நின்அழகை அமர்ந்து காணாத் 
துன்புறுகண் இரண்டினையும் சூன்றேன் நின்னைத் 
தொழாக்கையை வாளதனால் துண்ட மாக்கேன் 
வன்பறநின் தனைவணங்காத் தலையை அந்தோ 
மடித்திலேன் ஒதியேபோல் வளர்ந்தேன் என்னை 
இன்பறுவல் எரியிடைவீழ்த் திடினும் அன்றி 
என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
9
1379.

தேவேநின் அடிநினையா வஞ்ச நெஞ்சைத்

தீமூட்டிச் சிதைக்கறியேன் செதுக்கு கில்லேன் 
கோவேநின் அடியர்தமைக் கூடாப் பொய்மைக்

குடிகொண்டேன் புலைகொண்ட கொடியேன் அந்தோ 
நாவேற நினைத்துதியேன் நலமொன் றில்லேன்

நாய்க்கடைக்கும் கடைப்பட்டேன் நண்ணு கின்றோர்க் 
கீவேதும் அறியேன்இங் கென்னை யந்தோ

என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.

10

Back

 


 

74. உள்ளப் பஞ்சகம்

பொது 
கட்டளைக் கலித்துறை 

1380.நீரார் சடையது நீண்மால் விடையது நேர்கொள்கொன்றைத் 
தாரார் முடியது சீரார் அடியது தாழ்வகற்றும் 
பேரா யிரத்தது பேரா வரத்தது பேருலகம் 
ஒரா வளத்ததொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
1
1381.மட்டுப் படாதது மாமறை யாலும் மலப்பகையால் 
கட்டுப் படாதது மாலா தியர்தம் கருத்தினுக்கும் 
தட்டுப் படாதது பார்முதல் பூதத் தடைகளினால் 
ஒட்டுப் படாததொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
2
1382.பேதப் படாதது பற்பல கற்பங்கள் பேர்ந்திடினும் 
சேதப் படாதது நன்றிது தீதெனச் செய்கைகளால் 
ஏதப் படாததுள் எட்டப் படாததிங் கியாவர்கட்கும் 
ஓதப் படாததொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
3
1383.தண்ணார் அளியது விண்ணேர் ஒளியது சாற்றுமறைப் 
பண்ணார் முடிவது பெண்ணார் வடிவது பண்புயர்தீக் 
கண்ணார் நுதலது கண்ணார் மணியது கண்டுகொள்ள 
ஒண்ணா நிலையதொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
4
1384.பிறவா நெறியது பேசா நிலையது பேசில்என்றும் 
இறவா உருவதுள் ஏற்றால் வருவ திருள்அகன்றோர் 
மறவா துடையது மாதோர் புடையது வாழ்த்துகின்றோர் 
உறவாய் இருப்பதொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
5

Back


 

75. வடிவுடை மாணிக்க மாலை

காப்பு 
கட்டளைக் கலித்துறை 

1385.சீர்கொண்ட ஒற்றிப் பதியுடை யானிடம் சேர்ந்தமணி 
வார்கொண்ட கொங்கை வடிவாம் பிகைதன் மலரடிக்குத் 
தார்கொண்ட செந்தமிழ்ப் பாமாலை சாத்தத் தமியனுக்கே 
ஏர்கொண்ட நல்லருள் ஈயும் குணாலய ஏரம்பனே.
1
 கட்டளைக் கலித்துறை 
1386.கடலமு தேசெங் கரும்பே அருட்கற்ப கக்கனியே 
உடல்உயி ரேஉயிர்க் குள்உணர் வேஉணர் வுள்ஒளியே 
அடல்விடை யார்ஒற்றி யார்இடங் கொண்ட அருமருந்தே 
மடலவிழ் ஞான மலரே வடிவுடை மாணிக்கமே.
1
1387.அணியே அணிபெறும் ஒற்றித் தியாகர்தம் அன்புறுசற் 
குணியேஎம் வாழ்க்கைக் குலதெய்வ மேமலைக் கோன்தவமே 
பணியேன் பிழைபொறுத் தாட்கொண்ட தெய்வப் பதிகொள்சிந்தா 
மணியேஎன் கண்ணுண் மணியே வடிவுடை மாணிக்கமே.
2
1388.மானேர் விழிமலை மானேஎம் மானிடம் வாழ்மயிலே 
கானேர் அளகப் பசுங்குயி லேஅருட் கட்கரும்பே 
தேனே திருவொற்றி மாநகர் வாழும் சிவசத்தியே 
வானே கருணை வடிவே வடிவுடை மாணிக்கமே.
3
1389.பொருளே அடியர் புகலிட மேஒற்றிப் பூரணன்தண் 
அருளேஎம் ஆருயிர்க் காந்துணை யேவிண் ணவர்புகழும் 
தெருளேமெய்ஞ் ஞானத் தெளிவே மறைமுடிச் செம்பொருளே 
மருளேத நீக்கும் ஒளியே வடிவுடை மாணிக்கமே.
4
1390.திருமாலும் நான்முகத் தேவுமுன் னாள்மிகத் தேடிமனத் 
தருமா லுழக்க அனலுரு வாகி அமர்ந்தருளும் 
பெருமான்எம் மான்ஒற்றிப் பெம்மான்கைம் மான்கொளும் பித்தன்மலை 
மருமான் இடங்கொள்பெண் மானே வடிவுடை மாணிக்கமே.
5
1391.உன்னேர் அருள்தெய்வம் காணேன் மனத்தும் உரைக்கப்படாப் 
பொன்னேஅப் பொன்னற் புதஒளி யேமலர்ப் பொன்வணங்கும் 
அன்னே எம்ஆருயிர்க் கோர்உயி ரேஒற்றி யம்பதிவாழ் 
மன்னே ரிடம்வளர் மின்னே வடிவுடை மாணிக்கமே.
6
1392.கண்ணேஅக் கண்ணின் மணியே மணியில் கலந்தொளிசெய் 
விண்ணே வியன்ஒற்றி யூர்அண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும் 
பெண்ணே மலைபெறும் பெண்மணி யேதெய்வப் பெண்ணமுதே 
மண்நேயம் நீத்தவர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
7
1393.மலையான் தவஞ்செய்து பெற்றமுத் தேஒற்றி வாழ்கனகச் 
சிலையான் மணக்க மணக்குந்தெய் வீகத் திருமலரே 
அலையான் மலிகடல் பள்ளிகொண் டான்தொழும் ஆரமுதே 
வலையான் அருமை மகளே வடிவுடை மாணிக்கமே.
8
1394.காமம் படர்நெஞ் சுடையோர் கனவினும் காணப்படாச் 
சேமம் படர்செல்வப் பொன்னே மதுரச் செழுங்கனியே 
தாமம் படர்ஒற்றி யூர்வாழ் பவளத் தனிமலையின் 
வாமம் படர்பைங் கொடியே வடிவுடை மாணிக்கமே.
9
1395.கோடா அருட்குணக் குன்றே சிவத்தில் குறிப்பிலரை 
நாடாத ஆனந்த நட்பேமெய் யன்பர் நயக்கும் இன்பே 
பீடார் திருவொற்றிப் பெம்மான் இடஞ்செய் பெருந்தவமே 
வாடா மணிமலர்க் கொம்பே வடிவுடை மாணிக்கமே.
10
1396.நாலே எனுமறை அந்தங்கள் இன்னமும் நாடியெனைப் 
போலே வருந்த வெளிஒளி யாய்ஒற்றிப் புண்ணியர்தம் 
பாலே இருந்த நினைத்தங்கை யாகப் பகரப்பெற்ற 
மாலே தவத்தில் பெரியோன் வடிவுடை மாணிக்கமே.
11
1397.கங்கைகொண் டோ ன்ஒற்றி யூர்அண்ணல் வாமம் கலந்தருள்செய் 
நங்கைஎல் லாஉல குந்தந்த நின்னைஅந் நாரணற்குத் 
தங்கைஎன் கோஅன்றித் தாயர்என் கோசொல் தழைக்குமலை 
மங்கையங் கோமள மானே வடிவுடை மாணிக்கமே.
12
1398.சோலையிட் டார்வயல் ஊரொற்றி வைத்துத்தன் தொண்டரன்பின் 
வேலையிட் டால்செயும் பித்தனை மெய்யிடை மேவுகரித் 
தோலையிட் டாடும் தொழிலுடை யோனைத் துணிந்துமுன்னாள் 
மாலையிட் டாய்இஃதென்னே வடிவுடை மாணிக்கமே.
13
1399.தனையாள் பவரின்றி நிற்கும் பரமன் தனிஅருளாய் 
வினையாள் உயிர்மல நீக்கிமெய் வீட்டின் விடுத்திடுநீ 
எனையாள் அருளொற்றி யூர்வா ழவன்றன் னிடத்துமொரு 
மனையாள் எனநின்ற தென்னே வடிவுடை மாணிக்கமே.
14
1400.பின்னீன்ற பிள்ளையின் மேலார்வம் தாய்க்கெனப் பேசுவர்நீ 
முன்னீன்ற பிள்ளையின் மேலாசை யுள்ளவா மொய்யசுரர் 
கொன்னீன்ற போர்க்கிளம் பிள்ளையை ஏவக் கொடுத்ததென்னே 
மன்னீன்ற ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.
15
1401.பையாளும் அல்குல் சுரர்மட வார்கள் பலருளும்இச் 
செய்யாளும் வெண்ணிற மெய்யாளும் எத்தவம் செய்தனரோ 
கையாளும் நின்னடிக் குற்றேவல் செய்யக் கடைக்கணித்தாய் 
மையாளும் கண்ணொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
16
1402.இலையாற்று நீமலர்க் காலால் பணிக்குங்குற் றேவலெலாம் 
தலையால் செயும்பெண்கள் பல்லோரில் பூமகள் தன்னைத்தள்ளாய் 
நிலையால் பெரியநின் தொண்டர்தம் பக்க நிலாமையினான் 
மலையாற் கருளொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
17
1403.கலைமக ளோநின் பணியைஅன் போடும் கடைப்பிடித்தாள் 
அலைமக ளோஅன் பொடுபிடித் தாள்எற் கறைதிகண்டாய் 
தலைமக ளேஅருட் டாயேசெவ் வாய்க்கருந் தாழ்குழற்பொன் 
மலைமக ளேஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
18
1404.பொன்னோடு வாணிஎன் போரிரு வோரும் பொருணற்கல்வி 
தன்னோ டருளுந் திறநின்குற் றேவலைத் தாங்கிநின்ற 
பின்னோ அலததன் முன்னோ தெளிந்திடப் பேசுகநீ 
மன்னோ டெழிலொற்றி யூர்வாழ் வடிவுடை மாணிக்கமே.
19
1405.காமட் டலர்திரு வொற்றிநின் னாயகன் கந்தைசுற்றி 
யேமட் டரையொடு நிற்பது கண்டும் இரங்கலர்போல் 
நீமட்டு மேபட் டுடுக்கின் றனைஉன்றன் நேயம்என்னோ 
மாமட் டலர்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
20
1406.வீற்றார்நின் றன்மணத் தம்மியின் மேல்சிறு மெல்லனிச்சம் 
ஆற்றாநின் சிற்றடிப் போதினைத் தூக்கிவைத் தாரெனின்மால் 
ஏற்றார் திருவொற்றி யூரார் களக்கறுப் பேற்றவரே 
மாற்றா இயல்கொண் மயிலே வடிவுடை மாணிக்கமே.
21
1407.பொருப்புறு நீலியென் பார்நின்னை மெய்அது போலும்ஒற்றி 
விருப்புறு நாயகன் பாம்பா பரணமும் வெண்தலையும் 
நெருப்புறு கையும் கனல்மேனி யும்கண்டு நெஞ்சம்அஞ்சாய் 
மருப்புறு கொங்கை மயிலே வடிவுடை மாணிக்கமே.
22
1408.அனம்பொறுத் தான்புகழ் ஒற்றிநின் நாயகன் அங்குமிழித் 
தனம்பொறுத் தாள்ஒரு மாற்றாளைத் தன்முடி தன்னில்வைத்தே 
தினம்பொறுத் தான்அது கண்டும் சினமின்றிச் சேர்ந்தநின்போல் 
மனம்பொறுத் தார்எவர் கண்டாய் வடிவுடை மாணிக்கமே.
23
1409.ஓருரு வாய்ஒற்றி யூர்அமர்ந் தார்நின் னுடையவர்பெண் 
சீருரு வாகுநின் மாற்றாளை நீதெளி யாத்திறத்தில் 
நீருரு வாக்கிச் சுமந்தார் அதனை நினைந்திலையே 
வாருரு வார்கொங்கை நங்காய் வடிவுடை மாணிக்கமே.
24
1410.சார்ந்தேநின் பால்ஒற்றி யூர்வாழும் நாயகர் தாமகிழ்வு 
கூர்ந்தே குலாவும்அக் கொள்கையைக் காணில் கொதிப்பளென்று 
தேர்ந்தேஅக் கங்கையைச் செஞ்சடை மேல்சிறை செய்தனர்ஒண் 
வார்ந்தே குழைகொள் விழியாய் வடிவுடை மாணிக்கமே.
25
1411.நீயே எனது பிழைகுறிப் பாயெனில் நின்னடிமைப் 
பேயேன் செயும்வண்ணம் எவ்வண்ண மோஎனைப் பெற்றளிக்கும் 
தாயே கருணைத் தடங்கட லேஒற்றிச் சார்குமுத 
வாயேர் சவுந்தர(35) மானே வடிவுடை மாணிக்கமே.
26
 ( 35). சௌந்தரம் என்பது சவுந்தரம் எனப் போலியாயிற்று. தொ.வே. 
1412.முப்போதும் அன்பர்கள் வாழ்த்தொற்றி யூர்எம் முதல்வர்மகிழ் 
ஒப்போ தருமலைப் பெண்ணமு தேஎன்று வந்துநினை 
எப்போதும் சிந்தித் திடர்நீங்கி வாழ எனக்கருள்வாய் 
மைப்போ தனையகண் மானே வடிவுடை மாணிக்கமே.
27
1413.மீதலத் தோர்களுள் யார்வணங் காதவர் மேவுநடுப் 
பூதலத் தோர்களுள் யார்புக ழாதவர் போற்றிநிதம் 
பாதலத் தோர்களுள் யார்பணி யாதவர் பற்றிநின்றாள் 
மாதலத் தோங்கொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
28
1414.சேய்க்குற்றம் தாய்பொறுத் தேடா வருகெனச் செப்புவள்இந் 
நாய்க்குற்றம் நீபொறுத் தாளுதல் வேண்டும் நவின்மதியின் 
தேய்க்குற்ற மாற்றும் திருவொற்றி நாதர்தந் தேவிஅன்பர் 
வாய்க்குற்றம் நீக்கும் மயிலே வடிவுடை மாணிக்கமே.
29
1415.செங்கம லாசனன் தேவிபொன் நாணும் திருமுதலோர் 
சங்கம தாமிடற் றோங்குபொன் நாணும் தலைகுனித்துத் 
துங்கமு றாதுளம் நாணத் திருவொற்றித் தோன்றல்புனை 
மங்கல நாணுடை யாளே வடிவுடை மாணிக்கமே.
30
1416.சேடா ரியன்மணம் வீசச் செயன்மணம் சேர்ந்துபொங்க 
ஏடார் பொழிலொற்றி யூரண்ணல் நெஞ்சம் இருந்துவக்க 
வீடா இருளும் முகிலும்பின் னிட்டு வெருவவைத்த 
வாடா மலர்க்குழ லாளே வடிவுடை மாணிக்கமே.
31
1417.புரநோக்கி னால்பொடி தேக்கிய ஒற்றிப் புனிதர்களக் 
கரநோக்கி(36) நல்லமு தாக்கிநிற் போற்றுங் கருத்தினர்ஆ 
தரநோக்கி உள்ளிருள் நீக்கிமெய்ஞ் ஞானத் தனிச்சுகந்தான் 
வரநோக்கி ஆள்விழி மானே வடிவுடை மாணிக்கமே.
32
 (36). கரம்-விடம். தொ.வே. 
1418.உன்னும் திருவொற்றி யூருடை யார்நெஞ் சுவப்பஎழில் 
துன்னும் உயிர்ப்பயிர் எல்லாந் தழைக்கச் சுகக்கருணை 
என்னும் திருவமு தோயாமல் ஊற்றி எமதுளத்தின் 
மன்னும் கடைக்கண் மயிலே வடிவுடை மாணிக்கமே.
33
1419.வெள்ளம் குளிரும் சடைமுடி யோன்ஒற்றி வித்தகன்தன் 
உள்ளம் குளிரமெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்பத் 
தெள்ளம் குளிர்இன் அமுதே அளிக்கும்செவ் வாய்க்குமுத 
வள்ளம் குளிர்முத்த மானே வடிவுடை மாணிக்கமே.
34
1420.மாநந்த மார்வயல் காழிக் கவுணியர் மாமணிக்கன் 
றாநந்த இன்னமு தூற்றும் திருமுலை ஆரணங்கே 
காநந்த வோங்கும் எழிலொற்றி யார்உட் களித்தியலும் 
வாநந் தருமிடை மானே வடிவுடை மாணிக்கமே.
35
1421.வான்தேட நான்கு மறைதேட மாலுடன் வாரிசமே 
லான்தேட மற்றை அருந்தவர் தேடஎன் அன்பின்மையால் 
யான்தேட என்னுளம் சேர்ஒற்றி யூர்எம் இருநிதியே 
மான்தேடும் வாட்கண் மயிலே வடிவுடை மாணிக்கமே.
36
1422.முத்தேவர் விண்ணன்(37) முதல்தேவர் சித்தர் முனிவர்மற்றை 
எத்தே வருநின் அடிநினை வார்நினைக் கின்றிலர்தாம் 
செத்தே பிறக்கும் சிறியர்அன் றோஒற்றித் தேவர்நற்றா 
மத்தேவர் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே.
37
 (37). விண்ணன் -இந்திரன். தொ.வே. 
1423.திருநாள் நினைத்தொழும் நன்னாள் தொழாமல் செலுத்தியநாள் 
கருநாள் எனமறை எல்லாம் புகலும் கருத்தறிந்தே 
ஒருநா ளினுநின் றனைமற வார்அன்பர் ஒற்றியில்வாழ் 
மருநாண் மலர்க்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
38
1424.வாணாள் அடைவர் வறுமை யுறார்நன் மனைமக்கள்பொன் 
பூணாள் இடம்புகழ் போதம் பெறுவர்பின் புன்மைஒன்றும் 
காணார்நின் நாமம் கருதுகின் றோர்ஒற்றிக் கண்ணுதல்பால் 
மாணார்வம் உற்ற மயிலே வடிவுடை மாணிக்கமே.
39
1425.சீரறி வாய்த்திரு வொற்றிப் பரம சிவத்தைநினைப் 
போரறி வாய்அவ் அறிவாம் வெளிக்கப் புறத்துநின்றாய் 
யாரறி வார்நின்னை நாயேன்அறிவ தழகுடைத்தே 
வாரெறி பூண்முலை மானே வடிவுடை மாணிக்கமே.
40
1426.போற்றிடு வோர்தம் பிழைஆ யிரமும் பொறுத்தருள்செய் 
வீற்றொளிர் ஞான விளக்கே மரகத மென்கரும்பே 
ஏற்றொளிர் ஒற்றி யிடத்தார்இடத்தில் இலங்கும்உயர் 
மாற்றொளி ரும்பசும் பொன்னே வடிவுடை மாணிக்கமே
. 41
1427.ஆசைஉள் ளார்அயன் மால்ஆதி தேவர்கள் யாரும்நின் தாள் 
பூசையுள் ளார்எனில் எங்கே உலகர்செய் பூசைகொள்வார் 
தேசையுள் ளார்ஒற்றி யூருடை யார்இடஞ் சேர்மயிலே 
மாசையுள்(38) ளார்புகழ் மானே வடிவுடை மாணிக்கமே.
42
 (38). மாசை -பொன் தொ.வே. 
1428.அண்டாரை வென்றுல காண்டுமெய்ஞ் ஞானம் அடைந்துவிண்ணில் 
பண்டாரை சூழ்மதி போலிருப் போர்கள்நின் பத்தர்பதம் 
கண்டாரைக் கண்டவர் அன்றோ திருவொற்றிக் கண்ணுதல்சேர் 
வண்டாரை வேலன்ன மானே வடிவுடை மாணிக்கமே.
43
1429.அடியார் தொழுநின் அடிப்பொடி தான்சற் றணியப்பெற்ற 
முடியால் அடிக்குப் பெருமைபெற் றார்அம் முகுந்தன்சந்தக் 
கடியார் மலர்அயன் முன்னோர்தென் ஒற்றிக் கடவுட்செம்பால் 
வடியாக் கருணைக் கடலே வடிவுடை மாணிக்கமே.
44
1430.ஓவா தயன்முத லோர்முடி கோடி உறழ்ந்துபடில் 
ஆவா அனிச்சம் பொறாமலர்ச் சிற்றடி ஆற்றுங்கொலோ 
காவாய் இமயப்பொற் பாவாய் அருளொற்றிக் காமர்வல்லி 
வாவா எனும்அன்பர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
45
1431.இட்டார் மறைக்கும் உபநிட தத்திற்கும் இன்னுஞ்சற்றும் 
எட்டாநின் பொன்னடிப் போதெளி யேன்தலைக் கெட்டுங்கொலோ 
கட்டார் சடைமுடி ஒற்றிஎம் மான்நெஞ்ச கத்தமர்ந்த 
மட்டார் குழன்மட மானே வடிவுடை மாணிக்கமே.
46
1432.வெளியாய் வெளிக்குள் வெறுவெளி யாய்ச்சிவ மேநிறைந்த 
ஒளியாய் ஒளிக்குள் ஒளியாம் பரைநினை ஒப்பவரார் 
எளியார்க் கெளியர் திருவொற்றி யார்மெய் இனிதுபரி 
மளியாநின் றோங்கு மருவே வடிவுடை மாணிக்கமே.
47
1433.விணங்காத லன்பர்தம் அன்பிற்கும் நின்புல விக்கும்அன்றி 
வணங்கா மதிமுடி எங்கள் பிரான்ஒற்றி வாணனும்நின் 
குணங்கா தலித்துமெய்க் கூறுதந் தான்எனக் கூறுவர்உன் 
மணங்கா தலித்த தறியார் வடிவுடை மாணிக்கமே.
48
1434.பன்னும்பல் வேறண்டம் எல்லாம்அவ் அண்டப் பரப்பினின்று 
துன்னும் சராசரம் யாவையும் ஈன்றது சூழ்ந்தும்உன்னை 
இன்னும் இளந்தை அழியாத கன்னிகை என்பதென்னே 
மன்னும் சுகாநந்த வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
49
1435.சினங்கடந் தோர்உள்ளச் செந்தா மரையில் செழித்துமற்றை 
மனங்கடந் தோதும்அவ் வாக்கும் கடந்த மறைஅன்னமே 
தினங்கடந் தோர்புகழ் ஒற்றிஎம் மானிடம் சேரமுதே 
வனங்கடந் தோன்புகழ் மானே வடிவுடை மாணிக்கமே.
50
1436.வல்லாரும் வல்லவர் அல்லாரும் மற்றை மனிதர்முதல் 
எல்லாரும் நின்செயல் அல்லா தணுவும் இயக்கிலரேல் 
இல்லாமை யால்உழல் புல்லேன்செய் குற்றங்கள் ஏதுகண்டாய் 
மல்லார் வயல்ஒற்றி நல்லாய் வடிவுடை மாணிக்கமே.
51
1437.எழுதா எழில்உயிர்ச் சித்திர மேஇன் இசைப்பயனே 
தொழுதாடும் அன்பர்தம் உட்களிப் பேசிற் சுகக்கடலே 
செழுவார் மலர்ப்பொழில் ஒற்றிஎம் மான்தன் திருத்துணையே 
வழுவா மறையின் பொருளே வடிவுடை மாணிக்கமே.
52
1438.தெருட்பா லுறும்ஐங்கைச் செல்வர்க்கும் நல்லிளஞ் சேய்க்குமகிழ்ந் 
தருட்பால் அளிக்கும் தனத்தன மேஎம் அகங்கலந்த 
இருட்பால் அகற்றும் இருஞ்சுட ரேஒற்றி எந்தைஉள்ளம் 
மருட்பால் பயிலு மயிலே வடிவுடை மாணிக்கமே.
53
1439.அயிலேந்தும் பிள்ளைநற் றாயே திருவொற்றி ஐயர்மலர்க் 
கயிலேந்(39) தரும்பெறல் முத்தே இசையில் கனிந்தகுரல் 
குயிலே குயின்மென் குழற்பிடி யேமலைக் கோன்பயந்த 
மயிலே மதிமுக மானே வடிவுடை மாணிக்கமே.
54
 (39). கையிலேந்து எனற்பாலது கயிலேந்து எனப் போலியாயிற்று. தொ.வே. 
1440.செய்யகம் ஓங்கும் திருவொற்றி யூரில் சிவபெருமான் 
மெய்யகம் ஓங்குநல் அன்பேநின் பால்அன்பு மேவுகின்றோர் 
கையகம் ஓங்கும் கனியே தனிமெய்க் கதிநெறியே 
வையகம் ஓங்கு மருந்தே வடிவுடை மாணிக்கமே.
55
1441.தரும்பேர் அருளொற்றி யூருடை யான்இடஞ் சார்ந்தபசுங் 
கரும்பே இனியகற் கண்டே மதுரக் கனிநறவே 
இரும்பேய் மனத்தினர் பால்இசை யாத இளங்கிளியே 
வரும்பேர் ஒளிச்செஞ் சுடரே வடிவுடை மாணிக்கமே.
56
1442.சேலேர் விழியருள் தேனே அடியருள் தித்திக்கும்செம் 
பாலே மதுரச்செம் பாகேசொல் வேதப் பனுவல்முடி 
மேலே விளங்கும் விளக்கே அருளொற்றி வித்தகனார் 
மாலே கொளும்எழில் மானே வடிவுடை மாணிக்கமே.
57
1443.எம்பால் அருள்வைத் தெழிலொற்றி யூர்கொண் டிருக்கும் இறைச் 
செம்பால் கலந்தபைந் தேனே கதலிச் செழுங்கனியே 
வெம்பாலை நெஞ்சருள் மேவா மலர்ப்பத மென்கொடியே 
வம்பால் அணிமுலை மானே வடிவுடை மாணிக்கமே.
58
1444.ஏமமுய்ப் போர்எமக் கென்றே இளைக்கில் எடுக்கவைத்த 
சேமவைப் பேஅன்பர் தேடுமெய்ஞ் ஞானத் திரவியமே 
தாமமைக் கார்மலர்க் கூந்தல் பிடிமென் தனிநடையாய் 
வாமநற் சீர்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.
59
1445.மன்னேர் மலையன் மனையும்நற் காஞ்சன மாலையும்நீ 
அன்னே எனத்திரு வாயால் அழைக்கப்பெற் றார்அவர்தாம் 
முன்னே அருந்தவம் என்னே முயன்றனர் முன்னும் ஒற்றி 
வன்னேர் இளமுலை மின்னே வடிவுடை மாணிக்கமே.
60
1446.கணமொன்றி லேனும்என் உள்ளக் கவலைக் கடல்கடந்தே 
குணமொன்றி லேன்எது செய்கேன்நின் உள்ளக் குறிப்பறியேன் 
பணமொன்று பாம்பணி ஒற்றிஎம் மானிடப் பாலில்தெய்வ 
மணமொன்று பச்சைக் கொடியே வடிவுடை மாணிக்கமே.
61
1447.கருவே தனையற என்னெஞ் சகத்தில் களிப்பொடொற்றிக் 
குருவே எனும்நின் கணவனும் நீயும் குலவும்அந்தத் 
திருவே அருள்செந் திருவே முதற்பணி செய்யத் தந்த 
மருவே மருவு மலரே வடிவுடை மாணிக்கமே.
62
1448.எண்ணிய எண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக்குன்அருள் 
பண்ணிய உள்ளங்கொள் உள்ளும் புறம்பும் பரிமளிக்கும் 
புண்ணிய மல்லிகைப் போதே எழில்ஒற்றிப் பூரணர்பால் 
மண்ணிய பச்சை மணியே வடிவுடை மாணிக்கமே.
63
1449.தீதுசெய் தாலும்நின் அன்பர்கள் தம்முன் செருக்கிநின்று 
வாதுசெய் தாலும்நின் தாள்மறந் தாலும் மதியிலியேன் 
ஏதுசெய் தாலும் பொறுத்தருள் வாய்ஒற்றி யின்னிடைப்பூ 
மாதுசெய் தாழ்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
64
1450.மருந்தினின் றான்ஒற்றி யூர்வாழும் நின்றன் மகிழ்நன்முன்னும் 
திருந்திநின் றார்புகழ் நின்முன்னும் நல்லருள் தேன்விழைந்தே 
விருந்தினின் றேன்சற்றும் உள்ளிரங் காத விதத்தைக்கண்டு 
வருந்திநின் றேன்இது நன்றோ வடிவுடை மாணிக்கமே.
65
1451.என்போல் குணத்தில் இழிந்தவர் இல்லைஎப் போதும்எங்கும் 
நின்போல் அருளில் சிறந்தவர் இல்லைஇந் நீர்மையினால் 
பொன்போலும் நின்னருள் அன்னே எனக்கும் புரிதிகண்டாய் 
மன்போல் உயர்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
66
1452.துன்பே மிகும்இவ் அடியேன் மனத்தில்நின் துய்யஅருள் 
இன்பே மிகுவதெந் நாளோ எழிலொற்றி எந்தைஉயிர்க் 
கன்பேமெய்த் தொண்டர் அறிவே சிவநெறிக் கன்பிலர்பால் 
வன்பேமெய்ப் போத வடிவே வடிவுடை மாணிக்கமே.
67
1453.சற்றே யெனினும்என் நெஞ்சத் துயரம் தவிரவும்நின் 
பொற்றே மலர்ப்பதம் போற்றவும் உள்ளம் புரிதிகண்டாய் 
சொற்றேர் அறிஞர் புகழ்ஒற்றி மேவும் துணைவர்தஞ்செம் 
மற்றேர் புயத்தணை மானே வடிவுடை மாணிக்கமே.
68
1454.சந்தோட மாப்பிறர் எல்லாம் இருக்கவும் சஞ்சலத்தால் 
அந்தோ ஒருதமி யேன்மட்டும் வாடல் அருட்கழகோ 
நந்தோட நீக்கிய நங்காய் எனத்திரு நான்முகன்மால் 
வந்தோதும் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.
69
1455.அடியேன் மிசைஎப் பிழையிருந் தாலும் அவைபொறுத்துச் 
செடியேதம் நீக்கிநற் சீரருள் வாய்திகழ் தெய்வமறைக் 
கொடியே மரகதக் கொம்பே எழில்ஒற்றிக் கோமளமே 
வடியேர் அயில்விழி மானே வடிவுடை மாணிக்கமே.
70
1456.கண்ணப்பன் ஏத்துநற் காளத்தி யார்மங் கலங்கொள்ஒற்றி 
நண்ணப்பர் வேண்டும் நலமே பரானந்த நன்னறவே 
எண்ணப் படாஎழில் ஓவிய மேஎமை ஏன்றுகொண்ட 
வண்ணப் பசும்பொன் வடிவே வடிவுடை மாணிக்கமே.
71
1457.கற்பே விகற்பம் கடியும்ஒன் றேஎங்கள் கண்நிறைந்த 
பொற்பேமெய்த் தொண்டர்தம் புண்ணிய மேஅருட் போதஇன்பே 
சொற்பேர் அறிவுட் சுகப்பொரு ளேமெய்ச் சுயஞ்சுடரே 
மற்பேர் பெறும்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.
72
1458.மிகவே துயர்க்கடல் வீழ்ந்தேனை நீகை விடுதலருள் 
தகவே எனக்குநற் றாயே அகில சராசரமும் 
சுகவேலை மூழ்கத் திருவொற்றி யூரிடந் துன்னிப்பெற்ற 
மகவே எனப்புரக் கின்றோய் வடிவுடை மாணிக்கமே.
73
1459.வேதங்க ளாய்ஒற்றி மேவும் சிவத்தின் விளைவருளாய்ப் 
பூதங்க ளாய்ப்பொறி யாய்ப்புல னாகிப் புகல்கரண 
பேதங்க ளாய்உயிர் ஆகிய நின்னைஇப் பேதைஎன்வாய் 
வாதங்க ளால்அறி வேனோ வடிவுடை மாணிக்கமே.
74
1460.மதியே மதிமுக மானே அடியர் மனத்துவைத்த 
நிதியே கருணை நிறைவே சுகாநந்த நீள்நிலையே 
கதியே கதிவழி காட்டுங்கண் ணேஒற்றிக் காவலர்பால் 
வதியேர் இளமட மானே வடிவுடை மாணிக்கமே.
75
1461.ஆறாத் துயரத் தழுந்துகின் றேனைஇங் கஞ்சல்என்றே 
கூறாக் குறைஎன் குறையே இனிநின் குறிப்பறியேன் 
தேறாச் சிறியர்க் கரிதாம் திருவொற்றித் தேவர்மகிழ் 
மாறாக் கருணை மழையே வடிவுடை மாணிக்கமே.
76
1462.எற்றே நிலைஒன்றும் இல்லா துயங்கும் எனக்கருளச் 
சற்றேநின் உள்ளம் திரும்பிலை யான்செயத் தக்கதென்னே 
சொற்றேன் நிறைமறைக் கொம்பேமெய்ஞ் ஞானச் சுடர்க்கொழுந்தே 
மற்றேர் அணியொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
77
1463.செவ்வேலை வென்றகண் மின்னேநின் சித்தம் திரும்பிஎனக் 
கெவ்வேலை செய்என் றிடினும்அவ் வேலை இயற்றுவல்காண் 
தெவ்வேலை வற்றச்செய் அவ்வேலை யீன்றொற்றித் தேவர்நெஞ்சை 
வவ்வேல வார்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
78
1464.தாயே மிகவும் தயவுடை யாள்எனச் சாற்றுவர்இச் 
சேயேன் படுந்துயர் நீக்கஎன் னேஉளம் செய்திலையே 
நாயேன் பிழைஇனி நாடாது நல்லருள் நல்கவரு 
வாயேஎம் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.
79
1465.நானே நினைக்கடி யேன்என் பிழைகளை நாடியநீ 
தானே எனைவிடில் அந்தோ இனிஎவர் தாங்குகின்றோர் 
தேனேநல் வேதத் தெளிவே கதிக்குச் செலுநெறியே 
வானேர் பொழில்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.
80
1466.கல்லா ரிடத்தில்என் இல்லாமை சொல்லிக் கலங்கிஇடர் 
நல்லாண்மை உண்டருள் வல்லாண்மை உண்டெனின் நல்குவையோ 
வல்லார் எவர்கட்கும் வல்லார் திருவொற்றி வாணரொடு 
மல்லார் பொழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
81
1467.சுந்தர வாண்முகத் தோகாய் மறைகள் சொலும்பைங்கிள்ளாய் 
கந்தர வார்குழற் பூவாய் கருணைக் கடைக்கண்நங்காய் 
அந்தர நேரிடைப் பாவாய் அருள்ஒற்றி அண்ணல்மகிழ் 
மந்தர நேர்கொங்கை மங்காய் வடிவுடை மாணிக்கமே.
82
1468.பத்தர்தம் உள்ளத் திருக்கோயில் மேவும் பரம்பரையே 
சுத்தமெய்ஞ் ஞான ஒளிப்பிழம் பேசிற் சுகாநந்தமே 
நித்தநின் சீர்சொல எற்கருள் வாய்ஒற்றி நின்மலர்உன் 
மத்தர்தம் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே.
83
1469.பூவாய் மலர்க்குழல் பூவாய்மெய் அன்பர் புனைந்ததமிழ்ப் 
பாவாய் நிறைந்தபொற் பாவாய்செந் தேனிற் பகர்மொழியாய் 
காவாய் எனஅயன் காவாய் பவனும் கருதுமலர் 
மாவாய் எழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
84
1470.தாதா உணவுடை தாதா எனப்புல்லர் தம்மிடைப்போய் 
மாதாகம் உற்றவர் வன்நெஞ்சில் நின்அடி வைகுங்கொலோ 
காதார் நெடுங்கட் கரும்பேநல் ஒற்றிக் கருத்தர்நட 
வாதா ரிடம்வளர் மாதே வடிவுடை மாணிக்கமே.
85
1471.களந்திரும் பாஇக் கடையேனை ஆளக் கருணைகொண்டுன் 
உளந்திரும் பாமைக்கென் செய்கேன் துயர்க்கட லூடலைந்தேன் 
குளந்திரும் பாவிழிக் கோமா னொடுந்தொண்டர் கூட்டமுற 
வளந்திரும் பாஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
86
1472.ஆரணம் பூத்த அருட்கோ மளக்கொடி அந்தரிபூந் 
தோரணம் பூத்த எழில்ஒற்றி யூர்மகிழ் சுந்தரிசற் 
காரணம் பூத்த சிவைபார்ப் பதிநங் கவுரிஎன்னும் 
வாரணம் பூத்த தனத்தாய் வடிவுடை மாணிக்கமே.
87
1473.திருவல்லி ஏத்தும் அபிடேக வல்லிஎஞ் சென்னியிடை 
வருவல்லி கற்பக வல்லிஒண் பச்சை மணிவல்லிஎம் 
கருவல்லி நீக்கும் கருணாம் பகவல்லி கண்கொள்ஒற்றி 
மருவல்லி என்று மறைதேர் வடிவுடை மாணிக்கமே.
88
1474.உடையென்ன ஒண்புலித் தோல்உடை யார்கண் டுவக்குமிள 
நடையன்ன மேமலர்ப் பொன்முத லாம்பெண்கள் நாயகமே 
படையன்ன நீள்விழி மின்னேர் இடைப்பொற் பசுங்கிளியே 
மடைமன்னு நீர்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
89
1475.கற்பதும் கேட்பதும் எல்லாம்நின் அற்புதக் கஞ்சமலர்ப் 
பொற்பதம் காணும் பொருட்டென எண்ணுவர் புண்ணியரே 
சொற்பத மாய்அவைக் கப்புற மாய்நின்ற தூய்ச்சுடரே 
மற்பதம் சேரொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
90
1476.நின்னால் எனக்குள எல்லா நலனும் நினைஅடைந்த 
என்னால் உனக்குள தென்னைகண் டாய்எமை ஈன்றவளே 
முன்னால் வருக்கருள் ஒற்றிஎம் மான்கண் முழுமணியே 
மன்னான் மறையின் முடிவே வடிவுடை மாணிக்கமே.
91
1477.நன்றே சிவநெறி நாடுமெய்த் தொண்டர்க்கு நன்மைசெய்து 
நின்றேநின் சேவடிக் குற்றேவல் செய்ய நினைத்தனன் ஈ 
தென்றே முடிகுவ தின்றே முடியில் இனிதுகண்டாய் 
மன்றேர் எழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
92
1478.அத்தனை ஒற்றிக் கிறைவனை அம்பலத் தாடுகின்ற 
முத்தனைச் சேர்ந்தஒண் முத்தே மதிய முகவமுதே 
இத்தனை என்றள வேலாத குற்றம் இழைத்திடும்இம் 
மத்தனை ஆளல் வழக்கோ வடிவுடை மாணிக்கமே.
93
1479.கூறாத வாழ்க்கைச் சிறுமையை நோக்கிக் குறித்திடும்என் 
தேறாத விண்ணப்பம் சற்றேனும் நின்றன் திருச்செவியில் 
ஏறாத வண்ணம்என் ஒற்றித் தியாகர் இடப்புறத்தின் 
மாறா தமர்ந்த மயிலே வடிவுடை மாணிக்கமே.
94
1480.ஓயா இடர்கொண் டுலைவேனுக் கன்பர்க் குதவுதல்போல் 
ஈயா விடினும்ஓர் எள்ளள வேனும் இரங்குகண்டாய் 
சாயா அருள்தரும் தாயே எழில்ஒற்றித் தற்பரையே 
மாயா நலம்அருள் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
95
1481.பெரும்பேதை யேன்சிறு வாழ்க்கைத் துயர்எனும் பேரலையில் 
துரும்பே எனஅலை கின்றேன் புணைநின் துணைப்பதமே 
கரும்பே கருணைக் கடலே அருண்முக் கனிநறவே 
வரும்பேர் அருள்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
96
1482.காதர வால்உட் கலங்கிநின் றேன்நின் கடைக்கண்அருள் 
ஆதர வால்மகிழ் கின்றேன் இனிஉன் அடைக்கலமே 
சீதரன் ஏத்தும் திருவொற்றி நாதர்தம் தேவிஎழில் 
மாதர சேஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
97
1483.பொன்னுடை யார்அன்றிப் போற்றுநற் கல்விப் பொருளுடையார் 
என்னுடை யார்என ஏசுகின் றார்இஃ தென்னைஅன்னே 
மின்னுடை யாய்மின்னில் துன்னிடை யாய்ஒற்றி மேவுமுக்கண் 
மன்னுடை யாய்என் னுடையாய் வடிவுடை மாணிக்கமே.
98
1484.பொய்விட்டி டாதவன் நெஞ்சகத் தேனைப் புலம்பும்வண்ணம் 
கைவிட்டி டாதின்னும் காப்பாய் அதுநின் கடன்கரும்பே 
மெய்விட்டி டாருள் விளைஇன்ப மேஒற்றி வித்தகமே 
மைவிட்டி டாவிழி மானே வடிவுடை மாணிக்கமே.
99
1485.நேயானு கூல மனமுடை யாய்இனி நீயும்என்றன் 
தாயாகில் யான்உன் தனையனும் ஆகில்என் தன்உளத்தில் 
ஓயா துறுந்துயர் எல்லாம் தவிர்த்தருள் ஒற்றியில்செவ் 
வாயார் அமுத வடிவே வடிவுடை மாணிக்கமே.
100
1486.வாழிநின் சேவடி போற்றிநின் பூம்பத வாரிசங்கள் 
வாழிநின் தாண்மலர் போற்றிநின் தண்ணளி வாழிநின்சீர் 
வாழிஎன் உள்ளத்தில் நீயுநின் ஒற்றி மகிழ்நரும்நீ 
வாழிஎன் ஆருயிர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
101

Back


 

76. தனித் திருமாலை

கட்டளைக் கலித்துறை

1487.வன்மூட்டைப் பூச்சியும் புன்சீலைப் பேனும்தம் வாய்க்கொள்ளியால் 
என்மூட்டைத் தேகம் சுறுக்கிட வேசுட் டிராமுழுதும் 
தொன்மூட் டையினும் துணியினும் பாயினும் சூழ்கின்றதோர் 
பொன்மூட்டை வேண்டிஎன் செய்கேன் அருள்முக்கட் புண்ணியனே.
1
 நேரிசை வெண்பா 
1488.மான்முடிமே லும்கமலத் தான்முடிமே லும்தேவர் 
கோன்முடிமே லும்போய்க் குலாவுமே - வான்முடிநீர் 
ஊர்ந்துவலம் செய்தொழுகும் ஒற்றியூர்த் தியாகரைநாம் 
சார்ந்துவலம் செய்கால்கள் தாம்.
2
 குறள் வெண் செந்துறை(40) 
1489.சத்திமான் என்பர்நின் தன்னை ஐயனே 
பத்திமான் தனக்கலால் பகர்வ தெங்ஙனே.
3
 

(40). வஞ்சி விருத்தம்- ஆ.பா.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 
1490.

படியே அளந்த மாலவனும் 

பழைய மறைசொற் பண்ணவனும் 
முடியீ றறியா முதற்பொருளே 

மொழியும் ஒற்றி நகர்க்கிறையே 
அடியார் களுக்கே இரங்கிமுனம் 

அடுத்த சுரநோய் தடுத்ததுபோல் 
படிமீ தடியேற் குறுபிணிபோம் 

படிநீ கடைக்கண் பார்த்தருளே.

4
 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
1491.

மன்றாடும் மாமணியே நின்பொற் பாத 

மலர்த்துணையே துணையாக வாழ்கின் றோர்க்கு 
ஒன்றாலும் குறைவில்லை ஏழை யேன்யான் 

ஒன்றுமிலேன் இவ்வுலகில் உழலா நின்றேன் 
இன்றாக நாட்கழியில் என்னே செய்கேன் 

இணைமுலையார் மையலினால் இளைத்து நின்றேன் 
என்றாலும் சிறிதெளியேற் கிரங்கல் வேண்டும் 

எழில்ஆரும் ஒற்றியூர் இன்ப வாழ்வே.

5
1492.

சோறு வேண்டினும் துகிலணி முதலாம் 

சுகங்கள் வேண்டினும் சுகமலாச் சுகமாம் 
வேறு வேண்டினும் நினைஅடைந் தன்றி 

மேவொ ணாதெனும் மேலவர் உரைக்கோர் 
மாறு வேண்டிலேன் வந்துநிற் கின்றேன் 

வள்ளலே உன்றன் மனக்குறிப் பறியேன் 
சேறு வேண்டிய கயப்பணைக் கடற்சார் 

திகழும் ஒற்றியூர்ச் சிவபரஞ் சுடரே.

6

Back


 

77. திரு உலாப் பேறு 
தலைவி பாங்கியொடு கிளத்தல் திருவொற்றியூர்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1493.

சீரார் வளஞ்சேர் ஒற்றிநகர்த் 

தியாகப் பெருமான் பவனிதனை 
ஊரா ருடன்சென் றெனதுநெஞ்சம் 

உவகை ஓங்கப் பார்த்தனன்காண் 
வாரார் முலைகண் மலைகளென 

வளர்ந்த வளைகள் தளர்ந்தனவால் 
ஏரார் குழலாய் என்னடிநான் 

இச்சை மயமாய் நின்றதுவே.

1
1494.

சீர்த்தேன் பொழிலார் ஒற்றிநகர்த் 

தியாகப் பெருமான் பவனிவரப் 
பார்த்தேன் கண்கள் இமைத்திலகாண் 

பைம்பொன் வளைகள் அமைத்திலகாண் 
தார்த்தேன் குழலும் சரிந்தனகாண் 

தானை இடையிற் பிரிந்தனகாண் 
ஈர்த்தேன் குழலாய் என்னடிநான் 

இச்சை மயமாய் நின்றதுவே.

2
1495.

சீதப் புனல்சூழ் வயல்ஒற்றித் 

தியாகப் பெருமான் திருமாட 
வீதிப் பவனி வரக்கண்டேன் 

மென்பூந் துகில்வீழ்ந் ததுகாணேன் 
போதிற் றெனவும் உணர்ந்திலேன் 

பொன்ன னார்பின் போதுகிலேன் 
ஈதற் புதமே என்னடிநான் 

இச்சை மயமாய் நின்றதுவே.

3
1496.

தென்னார் சோலைத் திருஒற்றித் 

தியாகப் பெருமான் பவனிவரப் 
பொன்னார் வீதி தனிற்பார்த்தேன் 

புளகம் போர்த்தேன் மயல்பூத்தேன் 
மின்னார் பலர்க்கும் முன்னாக 

மேவி அவன்றன் எழில்வேட்டு 
என்னார் அணங்கே என்னடிநான் 

இச்சை மயமாய் நின்றதுவே.

4
1497.

சீலக் குணத்தோர் புகழ்ஒற்றித் 

தியாகப் பெருமான் பவனிஇராக் 
காலத் தடைந்து கண்டேன்என் 

கண்கள் இரண்டோ ஆயிரமோ 
ஞாலத் தவர்கள் அலர்தூற்ற 

நற்றூ சிடையில் நழுவிவிழ 
ஏலக் குழலாய் என்னடிநான் 

இச்சை மயமாய் நின்றதுவே.

5
1498.

சேயை அருளுந் திருஒற்றித் 

தியாகப் பெருமான் வீதிதனில் 
தூய பவனி வரக்கண்டேன் 

சூழ்ந்த மகளிர் தமைக்காணேன் 
தாயை மறந்தேன் அன்றியும்என் 

தனையும் மறந்தேன் தனிப்பட்டேன் 
ஏயென் தோழி என்னடிநான் 

இச்சை மயமாய் நின்றதுவே.

7
1499.

திங்கள் உலவும் பொழில்ஒற்றித் 

தியாகப் பெருமான் திருவீதி 
அங்கண் களிக்கப் பவனிவந்தான் 

அதுபோய்க் கண்டேன் தாயரெலாம் 
தங்கள் குலத்துக் கடாதென்றார் 

தம்மை விடுத்தேன் தனியாகி 
எங்கண் அனையாய் என்னடிநான் 

இச்சை மயமாய் நின்றதுவே.

8
1500.

தேசார் மணிசூழ் ஒற்றிநகர்த் 

தியாகப் பெருமான் பவனிவரக் 
கூசா தோடிக் கண்டரையில் 

கூறை இழந்தேன் கைவளைகள் 
வீசா நின்றேன் தாயரெலாம் 

வீட்டுக் கடங்காப் பெண்எனவே 
ஏசா நிற்க என்னடிநான் 

இச்சை மயமாய் நின்றதுவே.

9
1501.

தேடார்க் கரியான் ஒற்றிநகர்த் 

தியாகப் பெருமான் பவனிவரத் 
தோடார் பணைத்தோட் பெண்களொடும் 

சூழ்ந்து மகிழ்ந்து கண்டதன்றி 
வாடாக் காதல் கொண்டறியேன் 

வளையும் துகிலும் சோர்ந்ததுடன் 
ஏடார் கோதை என்னடிநான் 

இச்சை மயமாய் நின்றதுவே.

10
1502.

திருமாற் கரியான் ஒற்றிநகர்த் 

தியாகப் பெருமான் பவனிவரப் 
பெருமான் மனமு நானும்முன்னும் 

பின்னும் சென்று கண்டேமால் 
பொருமா நின்றேன் தாயரெலாம் 

போஎன் றீர்க்கப் போதுகிலேன் 
இருண்மாண் குழலாய் என்னடிநான் 

இச்சைமயமாய் நின்றதுவே.

11

Back


 

78. நாரையும் கிளியும் நாட்டுறு தூது
தலைவி பறவைமேல் வைத்துப் பையுளெய்தல் -- திருவொற்றியூர்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1503.

கண்ணன் நெடுநாள் மண்ணிடந்தும் 

காணக் கிடையாக் கழலுடையார் 
நண்ணும் ஒற்றி நகரார்க்கு 

நாராய் சென்று நவிற்றாயோ 
அண்ணல் உமது பவனிகண்ட 

அன்று முதலாய் இன்றளவும் 
உண்ணும் உணவோ டுறக்கமுநீத் 

துற்றாள் என்றிவ் வொருமொழியே.

1
1504.

மன்னுங் கருணை வழிவிழியார் 

மதுர மொழியார் ஒற்றிநகர்த் 
துன்னும் அவர்தந் திருமுன்போய்ச் 

சுகங்காள் நின்று சொல்லீரோ 
மின்னுந் தேவர் திருமுடிமேல் 

விளங்குஞ் சடையைக் கண்டவள்தன் 
பின்னுஞ் சடையை அவிழ்த்தொன்றும் 

பேசாள் எம்மைப் பிரிந்தென்றே.

2
1505.

வடிக்குந் தமிழ்த்தீந் தேன்என்ன 

வசனம் புகல்வார் ஒற்றிதனில் 
நடிக்குந் தியாகர் திருமுன்போய் 

நாராய் நின்று நவிற்றாயோ 
பிடிக்குங் கிடையா நடைஉடைய 

பெண்க ளெல்லாம் பிச்சிஎன 
நொடிக்கும் படிக்கு மிகுங்காம 

நோயால் வருந்தி நோவதுவே.

3
1506.

மாய மொழியார்க் கறிவரியார் 

வண்கை உடையார் மறைமணக்கும் 
தூய மொழியார் ஒற்றியிற்போய்ச் 

சுகங்காள் நின்று சொல்லீரோ 
நேய மொழியாள் பந்தாடாள் 

நில்லாள் வாச நீராடாள் 
ஏய மொழியாள் பாலனமும் 

ஏலாள் உம்மை எண்ணிஎன்றே.

4
1507.

ஒல்லார் புரமூன் றெரிசெய்தார் 

ஒற்றி அமர்ந்தார் எல்லார்க்கும் 
நல்லார் வல்லார் அவர்முன்போய் 

நாராய் நின்று நவிற்றுதியே 
அல்லார் குழலாள் கண்ணீராம் 

ஆற்றில் அலைந்தாள் அணங்கனையார் 
பல்லார் சூழ்ந்து பழிதூற்றப் 

படுத்தாள் விடுத்தாள் பாயல்என்றே.

5
1508.

ஓவா நிலையார் பொற்சிலையார் 

ஒற்றி நகரார் உண்மைசொலும் 
தூவாய் மொழியார் அவர்முன்போய்ச் 

சுகங்காள் நின்று சொல்லீரோ 
பூவார் முடியாள் பூமுடியாள் 

போவாள் வருவாள் பொருந்துகிலாள் 
ஆவா என்பாள் மகளிரொடும் 

ஆடாள் தேடாள் அனம்என்றே.

6
1509.

வட்ட மதிபோல் அழகொழுகும் 

வதன விடங்கர் ஒற்றிதனில் 
நட்ட நவில்வார் அவர்முன்போய் 

நாராய் நின்று நவிற்றாயோ 
கட்ட அவிழ்ந்த குழல்முடியாள் 

கடுகி விழுந்த கலைபுனையாள் 
முட்ட விலங்கு முலையினையும் 

மூடாள் மதனை முனிந்தென்றே.

7
1510.

வேலை விடத்தை மிடற்றணிந்த 

வெண்ணீற் றழகர் விண்ணளவும் 
சோலை மருவும் ஒற்றியிற்போய்ச் 

சுகங்காள் அவர்முன் சொல்லீரோ 
மாலை மனத்தாள் கற்பகப்பூ 

மாலை தரினும் வாங்குகிலாள் 
காலை அறியாள் பகல்அறியாள் 

கங்குல் அறியாள் கனிந்தென்றே.

8
1511.

மாண்காத் தளிர்க்கும் ஒற்றியினார் 

வான மகளிர் மங்கலப்பொன் 
நாண்காத் தளித்தார் அவர்முன்போய் 

நாராய் நின்று நவிற்றுதியோ 
பூண்காத் தளியாள் புலம்பிநின்றாள் 

புரண்டாள் அயன்மால் ஆதியராம் 
சேண்காத் தளிப்போர் தேற்றுகினும் 

தேறாள் மனது திறன்என்றே.

9
1512.

தேசு பூத்த வடிவழகர் 

திருவாழ் ஒற்றித் தேவர்புலித் 
தூசு பூத்த கீளுடையார் 

சுகங்காள் அவர்முன் சொல்லீரோ 
மாசு பூத்த மணிபோல 

வருந்தா நின்றாள் மங்கையர்வாய் 
ஏசு பூத்த அலர்க்கொடியாய் 

இளைத்தாள் உம்மை எண்ணிஎன்றே.

10

Back


 

79. இரங்கன் மாலை
தலைவி இரங்கல் -- திருவொற்றியூர்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

1513.

நன்று புரிவார் திருவொற்றி 
நாதர் எனது நாயகனார் 
மன்றுள் அமர்வார் மால்விடைமேல் 

வருவார் அவரை மாலையிட்ட 
அன்று முதலாய் இன்றளவும் 

அந்தோ சற்றும் அணைந்தறியேன் 
குன்று நிகர்பூண் முலையாய்என் 

குறையை எவர்க்குக் கூறுவனே.

1
1514.

தகைசேர் ஒற்றித் தலத்தமர்ந்தார் 

தரியார் புரங்கள் தழலாக்க 
நகைசேர்ந் தவரை மாலையிட்ட 

நாளே முதல்இந் நாள்அளவும் 
பகைசேர் மதன்பூச் சூடல்அன்றிப் 

பதப்பூச் சூடப் பார்த்தறியேன் 
குகைசேர் இருட்பூங் குழலாய்என் 

குறையை எவர்க்குக் கூறுவனே.

2
1515.

தோடார் குழையார் ஒற்றியினார் 

தூயர்க் கலது சுகம்அருள 
நாடார் அவர்க்கு மாலையிட்ட 

நாளே முதல்இந் நாள்அளவும் 
சூடா மலர்போல் இருந்ததல்லால் 

சுகமோர் அணுவுந் துய்த்தறியேன் 
கோடா ஒல்குங் கொடியேஎன் 

குறையை எவர்க்குக் கூறுவனே.

3
1516.

அண்டர் எவர்க்கும் அறிவொண்ணார் 

அணியார் ஒற்றி யார்நீல 
கண்டர் அவர்க்கு மாலையிட்ட 

கடனே அன்றி மற்றவரால் 
பண்டம் அறியேன் பலன்அறியேன் 

பரிவோ டணையப் பார்த்தறியேன் 
கொண்டன் மணக்குங் கோதாய்என் 

குறையை எவர்க்குக் கூறுவனே.

4
1517.

பாடல் கமழும் பதம்உடையார் 

பணைசேர் ஒற்றிப் பதிஉடையார் 
வாடல் எனவே மாலையிட்ட 

மாண்பே அன்றி மற்றவரால் 
ஆடல் அளிசூழ் குழலாய்உன் 

ஆணை ஒன்றும் அறியனடி 
கூடல் பெறவே வருந்துகின்றேன் 

குறையை எவர்க்குக் கூறுவனே.

5
1518.

துடிசேர் கரத்தார் ஒற்றியில்வாழ் 

சோதி வெண்ணீற் றழகர்அவர் 
கடிசேர்ந் தென்னை மாலையிட்ட 

கடனே அன்றி மற்றவரால் 
பிடிசேர் நடைநேர் பெண்களைப்போல் 

பின்னை யாதும் பெற்றறியேன் 
கொடிநேர் இடையாய் என்னடிஎன் 

குறையை எவர்க்குக் கூறுவனே.

6
1519.

ஒற்றி நகர்வாழ் உத்தமனார் 

உயர்மால் விடையார் உடையார்தாம் 
பற்றி என்னை மாலையிட்ட 

பரிசே அன்றிப் பகைதெரிந்து 
வெற்றி மதனன் வீறடங்க 

மேவி அணைந்தார் அல்லரடி 
குற்றம் அணுவும் செய்தறியேன் 

குறையை எவர்க்குக் கூறுவனே.

7
1520.

வானும் புவியும் புகழ்ஒற்றி 

வாணர் மலர்க்கை மழுவினொடு 
மானும் உடையார் என்றனக்கு 

மாலை யிட்ட தொன்றல்லால் 
நானும் அவருங் கூடியொரு 

நாளும் கலந்த தில்லையடி 
கோனுந் தியவேற் கண்ணாய்என் 

குறையை எவர்க்குக் கூறுவனே.

8
1521.

தெறித்து மணிகள் அலைசிறக்கும் 

திருவாழ் ஒற்றித் தேவர்எனை 
வறித்திங் கெளியேன் வருந்தாமல் 

மாலை யிட்ட நாள்அலது 
மறித்தும் ஒருநாள் வந்தென்னை 

மருவி அணைய நானறியேன் 
குறித்திங் குழன்றேன் மாதேஎன் 

குறையை எவர்க்குக் கூறுவனே.

9
1522.

மின்னோ டொக்கும் வேணியினார் 

விமலர் ஒற்றி வாணர்எனைத் 
தென்னோ டொக்க மாலையிட்டுச் 

சென்றார் பின்பு சேர்ந்தறியார் 
என்னோ டொத்த பெண்களெலாம் 

ஏசி நகைக்க இடருழந்தேன் 
கொன்னோ டொத்த கண்ணாய்என் 

குறையை எவர்க்குக் கூறுவனே.

10
1523.

உடுத்தும் அதளார் ஒற்றியினார் 

உலகம் புகழும் உத்தமனார் 
தொடுத்திங் கெனக்கு மாலையிட்ட 

சுகமே அன்றி என்னுடனே 
படுத்தும் அறியார் எனக்குரிய 

பரிவிற் பொருள்ஓர் எள்ளளவும் 
கொடுத்தும் அறியார் மாதேஎன் 

குறையை எவர்க்குக் கூறுவனே.

11
1524.

உழைஒன் றணிகைத் தலம்உடையார் 

ஒற்றி உடையார் என்றனக்கு 
மழைஒன் றலர்பூ மாலையிட்டார் 

மறித்தும் வந்தார் அல்லரடி 
பிழைஒன் றறியேன் பெண்களெலாம் 

பேசி நகைக்கப் பெற்றேன்காண் 
குழைஒன் றியகண் மாதேஎன் 

குறையை எவர்க்குக் கூறுவனே.

12
1525.

ஏடார் பொழில்சூழ் ஒற்றியினார் 

என்கண் அனையார் என்தலைவர் 
பீடார் மாலை இட்டதன்றிப் 

பின்னோர் சுகமும் பெற்றறியேன் 
வாடாக் காதற் பெண்களெலாம் 

வலது பேச நின்றனடி 
கோடார் கொங்கை மாதேஎன் 

குறையை எவர்க்குக் கூறுவனே.

13
1526.

கஞ்சன் அறியார் ஒற்றியினார் 

கண்மூன் றுடையார் கனவினிலும் 
வஞ்சம் அறியார் என்றனக்கு 

மாலைஇட்ட தொன்றல்லால் 
மஞ்சம் அதனில் என்னோடு 

மருவி இருக்க நான்அறியேன் 
கொஞ்சம் மதிநேர் நுதலாய்என் 

குறையை எவர்க்குக் கூறுவனே.

14
1527.

ஆலம் இருந்த களத்தழகர் 

அணிசேர் ஒற்றி ஆலயத்தார் 
சால எனக்கு மாலையிட்ட 

தன்மை ஒன்றே அல்லாது 
கால நிரம்ப அவர்புயத்தைக் 

கட்டி அணைந்த தில்லையடி 
கோல மதிவாண் முகத்தாய்என் 

குறையை எவர்க்குக் கூறுவனே.

15
1528.

நெய்தல் பணைசூழ் ஒற்றியினார் 

நிருத்தம் பயில்வார் மால்அயனும் 
எய்தற் கரியார் மாலையிட்டார் 

எனக்கென் றுரைக்கும் பெருமைஅல்லால் 
உய்தற் கடியேன் மனையின்கண் 

ஒருநா ளேனும் உற்றறியார் 
கொய்தற் கரிதாங் கொடியேஎன் 

குறையை எவர்க்குக் கூறுவனே.

16
1529.

போர்க்கும் உரியார் மால்பிரமன் 

போகி முதலாம் புங்கவர்கள் 
யார்க்கும் அரியார் எனக்கெளியர் 

ஆகி என்னை மாலையிட்டார் 
ஈர்க்கும் புகுதா முலைமதத்தை 

இன்னுந் தவிர்த்தார் அல்லரடி 
கூர்க்கும் நெடுவேற் கண்ணாய்என் 

குறையை எவர்க்குக் கூறுவனே.

17
1530.

இறையார் ஒற்றி யூரினிடை 

இருந்தார் இனியார் என்கணவர் 
மறையார் எனக்கு மாலையிட்டார் 

மருவார் என்னை வஞ்சனையோ 
பொறையார் இரக்கம் மிகவுடையார் 

பொய்ஒன் றுரையார் பொய்யலடி 
குறையா மதிவாண் முகத்தாய்என் 

குறையை எவர்க்குக் கூறுவனே.

18
1531.

உடுப்பார் கரித்தோல் ஒற்றிஎனும் 

ஊரார் என்னை உடையவனார் 
மடுப்பார் இன்ப மாலையிட்டார் 

மருவார் எனது பிழைஉரைத்துக் 
கெடுப்பார் இல்லை என்சொலினும் 

கேளார் எனது கேள்வர்அவர் 
கொடுப்பார் என்றோ மாதேஎன் 

குறையை எவர்க்குக் கூறுவனே.

19
1532.

எருதில் வருவார் ஒற்றியுளார் 

என்நா யகனார் எனக்கினியார் 
வருதி எனவே மாலையிட்டார் 

வந்தால் ஒன்றும் வாய்திறவார் 
கருதி அவர்தங் கட்டளையைக் 

கடந்து நடந்தேன் அல்லவடி 
குருகுண் கரத்தாய் என்னடிஎன் 

குறையை எவர்க்குக் கூறுவனே.

20
1533.

மாவென் றுரித்தார் மாலையிட்ட 

மணாளர் என்றே வந்தடைந்தால் 
வாவென் றுரையார் போஎன்னார் 

மௌனஞ் சாதித் திருந்தனர்காண் 
ஆவென் றலறிக் கண்ணீர்விட் 

டழுதால் துயரம் ஆறுமடி 
கோவென் றிருவேல் கொண்டாய்என் 

குறையை எவர்க்குக் கூறுவனே.

21
1534.

நாட்டும் புகழார் திருஒற்றி 

நகர்வாழ் சிவனார் நன்மையெலாம் 
காட்டும் படிக்கு மாலையிட்ட 

கணவர் எனஓர் காசளவில் 
கேட்டும் அறியேன் தந்தறியார் 

கேட்டால் என்ன விளையுமடி 
கோட்டு மணிப்பூண் முலையாய்என் 

குறையை எவர்க்குக் கூறுவனே.

22
1535.

வெற்பை வளைத்தார் திருஒற்றி 

மேவி அமர்ந்தார் அவர்எனது 
கற்பை அழித்தார் மாலையிட்டுக் 

கணவர் ஆனார் என்பதல்லால் 
சிற்ப மணிமே டையில்என்னைச் 

சேர்ந்தார் என்ப தில்லையடி 
கொற்பை அரவின் இடையாய்என் 

குறையை எவர்க்குக் கூறுவனே.

23
1536.

என்ன கொடுத்தும் கிடைப்பரியார் 

எழிலார் ஒற்றி நாதர்எனைச் 
சின்ன வயதில் மாலையிட்டுச் 

சென்றார் சென்ற திறன்அல்லால் 
இன்னும் மருவ வந்திலர்காண் 

யாதோ அவர்தம் எண்ணமது 
கொன்னுண் வடிவேற் கண்ணாய்என் 

குறையை எவர்க்குக் கூறுவனே.

24
1537.

கரும்பின் இனியார் கண்ணுதலார் 

கடிசேர் ஒற்றிக் காவலனார் 
இரும்பின் மனத்தேன் தனைமாலை 

இட்டார் இட்ட அன்றலது 
திரும்பி ஒருகால் வந்தென்னைச் 

சேர்ந்து மகிழ்ந்த தில்லையடி 
குரும்பை அனைய முலையாய்என் 

குறையை எவர்க்குக் கூறுவனே.

25
1538.

தீது தவிர்ப்பார் திருவொற்றித் 

தியாகர் அழியாத் திறத்தர்அவர் 
மாது மகிழ்தி எனஎன்னை 

மாலை யிட்டார் மாலையிட்ட 
போது கண்ட திருமுகத்தைப் 

போற்றி மறித்தும் கண்டறியேன் 
கோது கண்டேன் மாதேஎன் 

குறையை எவர்க்குக் கூறுவனே.

26
1539.

வென்றிக் கொடிமேல் விடைஉயர்த்தார் 

மேலார் ஒற்றி யூரர்என்பால் 
சென்றிக் குளிர்பூ மாலையிட்டார் 

சேர்ந்தார் அல்லர் யான்அவரை 
அன்றிப் பிறரை நாடினனோ 

அம்மா ஒன்றும் அறியனடி 
குன்றிற் றுயர்கொண் டழும்எனது 

குறையை எவர்க்குக் கூறுவனே.

27
1540.

தோளா மணிநேர் வடிவழகர் 

சோலை சூழ்ந்த ஒற்றியினார் 
மாளா நிலையர் என்றனக்கு 

மாலை இட்டார் மருவிலர்காண் 
கேளாய் மாதே என்னிடையே 

கெடுதி இருந்த தெனினும்அதைக் 
கோளார் உரைப்பார் என்னடிஎன் 

குறையை எவர்க்குக் கூறுவனே.

28
1541.

வாடா திருந்தேன் மழைபொழியும் 

மலர்க்கா வனஞ்சூழ் ஒற்றியினார் 
ஏடார் அணிபூ மாலைஎனக் 

கிட்டார் அவர்க்கு மாலையிட்டேன் 
தேடா திருந்தேன் அல்லடியான் 

தேடி அருகிற் சேர்ந்தும்எனைக் 
கூடா திருந்தார் என்னடிஎன் 

குறையை எவர்க்குக் கூறுவனே.

29
1542.

நலத்திற் சிறந்த ஒற்றிநகர் 

நண்ணும் எனது நாயகனார் 
வலத்திற் சிறந்தார் மாலையிட்டு 

மறித்தும் மருவார் வாராரேல் 
நிலத்திற் சிறந்த உறவினர்கள் 

நிந்தித் தையோ எனைத்தமது 
குலத்திற் சேரார் என்னடிஎன் 

குறையை எவர்க்குக் கூறுவனே.

30
1543.

ஈர்ந்தேன் அளிசூழ் ஒற்றிஉளார் 

என்கண் மணியார் என்கணவர் 
வார்ந்தேன் சடையார் மாலையிட்டும் 

வாழா தலைந்து மனமெலிந்து 
சோர்ந்தேன் பதைத்துத் துயர்க்கடலைச் 

சூழ்ந்தேன் இன்னும் துடிக்கின்றேன் 
கூர்ந்தேன் குழலாய் என்னடிஎன் 

குறையை எவர்க்குக் கூறுவனே.

31

Back

திருச்சிற்றம்பலம் 

 

Related Content

Ramalingam Swamigal

Thiruvarutpa of ramalinga adikal (aka vallalar) - Part-II (v

Thiruvarutpayan of Umapathisivam - G U Pope

Thiruvarutpayan Of Umapathisivam - English Explanation By Mr

Thiruvasagam Part-1 - Romanized version