logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருவருட்பா Tiruvarutpa of Ramalinga adikal - part -VI part I (verses 3267 -3871)

 


திரு அருட்பிரகாச வள்ளலார் இயற்றி அருளிய திருஅருட்பா
ஆறாம் அருட்பா - முதற் பகுதி பாடல்கள் (3267 -3871)

 

  • உள்ளுறை
1.பரசிவ வணக்கம்33267 - 3269
2.திருச்சிற்றம்பலத் தெய்வமணிமாலை133270 - 3282
3.ஆற்றாமை103283 - 3292
4.பிறப்பவம் பொறாது பேதுறல்103293 - 3302
5.மாயைவலிக் கழுங்கல்103303 - 3312
6.முறையீடு103313 - 3322
7.அடியார் பேறு203323 - 3342
8.ஆன்ம விசாரத் தழுங்கல்103343 - 3352
9.அவா அறுத்தல்133353 - 3365
10.தற் சுதந்தரம் இன்மை103366 - 3375
11.அத்துவித ஆனந்த அனுபவ இடையீடு103376 - 3385
12.பிள்ளைச் சிறு விண்ணப்பம்243386 - 3409
13.பிள்ளைப் பெரு விண்ணப்பம்1333410 - 3542
14.மாயையின் விளக்கம்103543 - 3552
15.அபயத் திறன்283553 - 3580
16.ஆற்றமாட்டாமை103581 - 3590
17.வாதனைக் கழிவு203591 - 3610
18.அபயம் இடுதல்103611 - 3620
19.பிறிவாற்றாமை103621 - 3630
20.இறை பொறுப்பியம்பல்103631 - 3640
21.கைம்மாறின்மை103641 - 3650
22.நடராபதி மாலை343651 - 3684
23.சற்குருமணி மாலை253685 - 3709
24.தற்போத இழப்பு103710 - 3719
25.திருமுன் விண்ணப்பம்103720 - 3729
26.இனித்த வாழ்வருள் எனல்103730 - 3739
27.திருவருள் விழைதல்203740 - 3759
28.திருக்கதவந் திறத்தல்103760 - 3769
29.சிற்சபை விளக்கம்103770 - 3779
30.திருவருட் பேறு103780 - 3789
31.உண்மை கூறல்103790 - 3799
32.பிரியேன் என்றல்113800 - 3810
33.சிவ தரிசனம்113811 - 3821
34.அனுபோக நிலயம்103822 - 3831
35.சிவயோக நிலை103832 - 3841
36.பெற்ற பேற்றினை வியத்தல்103842 - 3851
37.அழிவுறா அருள்வடிவப் பேறு103852 - 3861
38.பேரருள் வாய்மையை வியத்தல்103862 - 3871

அடிக்குறிப்புகளில் காணப்படும் பதிப்பாசிரியர்களின் பெயர்ச் சுருக்க விரிவு

  • 1. தொ.வே --- தொழுவூர் வேலாயுத முதலியார்
    2. ஆ.பா --- ஆ.பாலகிருஷ்ண பிள்ளை
    3. ச.மு.க --- ச.மு.கந்தசாமி பிள்ளை
    4. பி.இரா --- பிருங்கிமாநகரம் இராமசாமி முதலியார்
    5. பொ.சு --- பொ.சுந்தரம் பிள்ளை
  •  
  •  

திருச்சிற்றம்பலம்


 

ஆறாம் அருட்பா - முதற் பகுதி

 

1. பரசிவ வணக்கம்குறள்வெண்பா

3267

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே

எல்லாம்வல் லான்தனையே ஏத்து.197

1
 197. எல்லாம்வல் லான்தாளை ஏத்து - முதற்பதிப்பு, பொ. சு. பதிப்பு. 
 எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
3268

திருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச்

சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்
தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே

திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே
உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க

உலகமெலாம் விளங்கஅருள் உதவுபெருந் தாயாம்
மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க

வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே.198

2
 198. 2500 ஆம் பாடலின் உத்தரவடிவம். 
 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
3269அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே அன்புரு வாம்பர சிவமே.
3


திருச்சிற்றம்பலம்


2. திருச்சிற்றம்பலத் தெய்வமணிமாலை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3270

அகரநிலை விளங்குசத்தர் அனைவருக்கும் அவர்பால்

அமர்ந்தசத்தி மாரவர்கள் அனைவருக்கும் அவரால்
பகரவரும் அண்டவகை அனைத்தினுக்கும் பிண்டப்

பகுதிகள்அங் கனைத்தினுக்கும் பதங்கள்அனைத் தினுக்கும்
இகரமுறும் உயிர்எவைக்கும் கருவிகள்அங் கெவைக்கும்

எப்பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும்முத்தி எவைக்கும்
சிகரமுதல் சித்திவகை எவைக்கும்ஒளி வழங்கும்

திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம்ஒன்றே கண்டீர்.

1
3271

வண்ணமிகு பூதவெளி பகுதிவெளி முதலா

வகுக்குமடி வெளிகளெலாம் வயங்குவெளி யாகி
எண்ணமுறு மாமவுன வெளியாகி அதன்மேல்

இசைத்தபர வெளியாகி இயல்உபய வெளியாய்
அண்ணுறுசிற் பரவெளியாய்த் தற்பரமாம் வெளியாய்

அமர்ந்தபெரு வெளியாகி அருளின்ப வெளியாய்த்
திண்ணமுறும் தனிஇயற்கை உண்மைவெளி யான

திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம்ஒன்றே கண்டீர்.

2
3272

சார்பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம்

தத்துவங்கள் விளக்கமெலாந் தருவிளக்க மாகி
நேராதி விளக்கமதாய்ப் பரைவிளக்க மாகி

நிலைத்தபரா பரைவிளக்க மாகிஅகம் புறமும்
பேராசை விளக்கமதாய்ச் சுத்தவிளக் கமதாய்ப்

பெருவிளக்க மாகிஎலாம் பெற்றவிளக் கமதாய்ச்
சீராட விளங்குகின்ற இயற்கைவிளக் கமதாம்

திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம்ஒன்றே கண்டீர்.

3
3273

இடம்பெறும்இந் திரியஇன்பம் கரணஇன்பம் உலக

இன்பம்உயிர் இன்பம்முதல் எய்தும்இன்ப மாகித்
தடம்பெறும்ஓர் ஆன்மஇன்பம் தனித்தஅறி வின்பம்

சத்தியப்பே ரின்பம்முத்தி இன்பமுமாய் அதன்மேல்
நடம்பெறுமெய்ப் பொருள்இன்பம் நிரதிசய இன்பம்

ஞானசித்திப் பெரும்போக நாட்டரசின் பமுமாய்த்
திடம்பெறஓங் கியஇயற்கைத் தனிஇன்ப மயமாம்

திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம்ஒன்றே கண்டீர்.

4
3274

எல்லாந்தான் உடையதுவாய் எல்லாம்வல் லதுவாய்

எல்லாந்தான் ஆனதுவாய் எல்லாந்தான் அலதாய்ச்
சொல்லாலும் பொருளாலும் தோன்றும்அறி வாலும்

துணிந்தளக்க முடியாதாய்த் துரியவெளி கடந்த
வல்லாளர் அனுபவத்தே அதுஅதுவாய் அவரும்

மதித்திடுங்கால் அரியதுவாய்ப் பெரியதுவாய் அணுவும்
செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும்

திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம்ஒன்றே கண்டீர்.

5
3275

அயர்வறுபே ரறிவாகி அவ்வறிவுக் கறிவாய்

அறிவறிவுள் அறிவாய்ஆங் கதனுள்ளோர் அறிவாய்
மயர்வறும்ஓர் இயற்கைஉண்மைத் தனிஅறிவாய்ச் செயற்கை

மன்னும்அறி வனைத்தினுக்கும் வயங்கியதா ரகமாய்த்
துயரறுதா ரகமுதலாய் அம்முதற்கோர் முதலாய்த்

துரியநிலை கடந்ததன்மேல் சுத்தசிவ நிலையாய்
உயர்வுறுசிற் றம்பலத்தே எல்லாந்தா மாகி

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.

6
3276

அண்டம்எலாம் பிண்டம்எலாம் உயிர்கள்எலாம் பொருள்கள்

ஆனஎலாம் இடங்கள்எலாம் நீக்கமற நிறைந்தே
கொண்டஎலாங் கொண்டஎலாம் கொண்டுகொண்டு மேலும்

கொள்வதற்கே இடங்கொடுத்துக் கொண்டுசலிப் பின்றிக்
கண்டமெலாங் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும்

கடந்தவெளி யாய்அதுவும் கடந்ததனி வெளியாம்
ஒண்தகுசிற் றம்பலத்தே எல்லாம்வல் லவராய்

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.

7
3277

பாரொடுநீர் கனல்காற்றா காயம்எனும் பூதப்

பகுதிமுதல் பகர்நாதப் பகுதிவரை யான
ஏர்பெறுதத் துவஉருவாய்த் தத்துவகா ரணமாய்

இயம்பியகா ரணமுதலாய்க் காரணத்தின் முடிவாய்
நேருறும்அம் முடிவனைத்தும் நிகழ்ந்திடுபூ ரணமாய்

நித்தியமாய்ச் சத்தியமாய் நிற்குணசிற் குணமாய்
ஓர்தருசன் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.

8
3278

இரவிமதி உடுக்கள்முதல் கலைகள்எலாம் தம்மோர்

இலேசமதாய் எண்கடந்தே இலங்கியபிண் டாண்டம்
பரவுமற்றைப் பொருள்கள்உயிர்த் திரள்கள்முதல் எல்லாம்

பகர்அகத்தும் புறத்தும்அகப் புறத்துடன்அப் புறத்தும்
விரவிஎங்கும் நீக்கமற விளங்கிஅந்த மாதி

விளம்பரிய பேரொளியாய் அவ்வொளிப்பே ரொளியாய்
உரவுறுசின் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.

9
3279

ஆற்றுவிட யானந்தம் தத்துவா னந்தம்

அணியோகா னந்தம்மதிப் பருஞானா னந்தம்
பேற்றுறும்ஆன் மானந்தம் பரமானந் தஞ்சேர்

பிரமானந் தம்சாந்தப் பேரானந் தத்தோ
டேற்றிடும்ஏ கானந்தம் அத்துவிதா னந்தம்

இயன்றசச்சி தானந்தம் சுத்தசிவா னந்த
ஊற்றமதாம் சமரசஆ னந்தசபை தனிலே

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.

10
3280

வகுத்தஉயிர் முதற்பலவாம் பொருள்களுக்கும் வடிவம்

வண்ணநல முதற்பலவாங் குணங்களுக்கும் புகுதல்
புகுத்தலுறல் முதற்பலவாம் செயல்களுக்கும் தாமே

புகல்கரணம் உபகரணம் கருவிஉப கருவி
மிகுந்தஉறுப் பதிகரணம் காரணம்பல் காலம்

விதித்திடுமற் றவைமுழுதும் ஆகிஅல்லார் ஆகி
உகப்புறும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.

11
3281

இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்

ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்
செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்

திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்
வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்

மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய்
உயத்தரும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.

12
3282

ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்

உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்
அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்

ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ்சோ தியினார்
என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார்

யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்
ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.

13


திருச்சிற்றம்பலம்


3. ஆற்றாமை

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3283

எழுவினும் வலிய மனத்தினேன் மலஞ்சார்

ஈயினும் நாயினும் இழிந்தேன்
புழுவினும் சிறியேன்பொய்விழைந் துழல்வேன்

புன்மையேன் புலைத்தொழிற்கடையேன்
வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன்

மாண்பிலா வஞ்சக நெஞ்சக்
குழுவினும் பெரியேன் அம்பலக் கூத்தன் 

குறிப்பினுக் கென்கட வேனே.

1
3284

கற்றமே லவர்தம் உறவினைக் கருதேன் 

கலகர்தம் உறவினிற் களித்தேன்
உற்றமே தகவோர் உவட்டுற இருந்தேன் 

உலகியற் போகமே உவந்தேன்
செற்றமே விழையும் சிறுநெறி பிடித்தேன் 

தெய்வம்ஒன் றெனும்அறி வறியேன்
குற்றமே உடையேன் அம்பலக் கூத்தன் 

குறிப்பினுக் கென்கட வேனே.

2
3285

கடுமையேன் வஞ்சக் கருத்தினேன் பொல்லாக் 

கண்மனக் குரங்கனேன் கடையேன்
நெடுமைஆண் பனைபோல் நின்றவெற் றுடம்பேன் 

நீசனேன் பாசமே உடையேன்
நடுமைஒன் றறியேன் கெடுமையிற் கிளைத்த 

நச்சுமா மரம்எனக்கிளைத்தேன்
கொடுமையே குறித்தேன் அம்பலக் கூத்தன் 

குறிப்பினுக் கென்கட வேனே.

3
3286

நிலத்திலும்பணத்தும் நீள்விழிமடவார் 

நெருக்கிலும்பெருக்கிய நினைப்பேன்
புலத்திலும் புரைசேர் பொறியிலும் மனத்தைப் 

போக்கிவீண் போதுபோக் குறுவேன்
நலத்தில்ஓர் அணுவும் நண்ணிலேன் கடைய 

நாயினுங் கடையனேன் நவையேன்
குலத்திலும் கொடியேன் அம்பலக் கூத்தன் 

குறிப்பினுக் கென்கட வேனே.

4
3287

செடிமுடிந் தலையும்மனத்தினேன் துன்பச் 

செல்லினால்அரிப்புண்டசிறியேன்
அடிமுடி அறியும் ஆசைசற் றறியேன் 

அறிந்தவர் தங்களை அடையேன்
படிமுடி வழித்துக் கடிகொளும் கடையர்

பணத்திலும் கொடியனேன் வஞ்சக்
கொடிமுடிந் திடுவேன் அம்பலக் கூத்தன் 

குறிப்பினுக் கென்கட வேனே.

5
3288

அரங்கினிற் படைகொண் டுயிர்க்கொலை புரியும் 

அறக்கடை யவரினுங் கடையேன்
இரங்கில்ஓர் சிறிதும் இரக்கம்உற் றறியேன் 

இயலுறு நாசியுட் கிளைத்த
சிரங்கினிற் கொடியேன் சிவநெறி பிடியேன் 

சிறுநெறிச் சழக்கையே சிலுகுக்
குரங்கெனப் பிடித்தேன் அம்பலக் கூத்தன் 

குறிப்பினுக் கென்கட வேனே.

6
3289

வாட்டமே உடையார் தங்களைக் காணின் 

மனஞ்சிறிதிரக்கமுற் றறியேன்
கோட்டமே உடையேன் கொலையனேன் புலையேன் 

கூற்றினும் கொடியனேன் மாயை
ஆட்டமே புரிந்தேன் அறத்தொழில் புரியேன் 

அச்சமும் அவலமும் இயற்றும்
கூட்டமே விழைந்தேன் அம்பலக் கூத்தன் 

குறிப்பினுக் கென்கட வேனே.

7
3290

கலைத்தொழில் அறியேன் கள்உணுங் கொடியேன் 

கறிக்குழல் நாயினும் கடையேன்
விலைத்தொழில் உடையேன் மெய்எலாம் வாயாய் 

விளம்புறும் வீணனேன் அசுத்தப்
புலைத்தொழில் புரிவேன் பொய்யனேன் சீற்றம் 

பொங்கிய மனத்தினேன் பொல்லாக்
கொலைத்தொழில் புரிவேன் அம்பலக் கூத்தன் 

குறிப்பினுக் கென்கட வேனே.

8
3291

பணமிலார்க் கிடுக்கண் புரிந்துணுஞ் சோற்றுப் 

பணம்பறித் துழல்கின்ற படிறேன்
எணமிலா தடுத்தார்க் குறுபெருந்தீமை 

இயற்றுவேன் எட்டியே அனையேன்
மணமிலா மலரிற் பூத்தனன் இருகால் 

மாடெனத் திரிந்துழல் கின்றேன்
குணமிலாக் கொடியேன் அம்பலக் கூத்தன் 

குறிப்பினுக் கென்கட வேனே.

9
3292

கடியரில் கடியேன் கடையரில் கடையேன் 

கள்வரில் கள்வனேன் காமப்
பொடியரில் பொடியேன் புலையரில் புலையேன் 

பொய்யரில் பொய்யனேன் பொல்லாச்
செடியரில் செடியேன் சினத்தரில் சினத்தேன் 

தீயரில் தீயனேன் பாபக்
கொடியரில் கொடியேன் அம்பலக் கூத்தன் 

குறிப்பினுக் கென்கட வேனே.

10


திருச்சிற்றம்பலம்


4. பிறப்பவம் பொறாது பேதுறல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3293

குலத்திடையும் கொடியன்ஒரு குடித்தனத்தும் கொடியேன்

குறிகளிலும் கொடியன்அன்றிக் குணங்களிலும் கொடியேன்
மலத்திடையே புழுத்தசிறு புழுக்களிலும் கடையேன்

வன்மனத்துப் பெரும்பாவி வஞ்சநெஞ்சப் புலையேன்
நலத்திடைஓர் அணுஅளவும் நண்ணுகிலேன் பொல்லா

நாய்க்குநகை தோன்றநின்றேன் பேய்க்கும்மிக இழிந்தேன்
நிலத்திடைநான் ஏன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன்

நிர்க்குணனே நடராஜ நிபுணமணி விளக்கே.

1
3294

விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்துகிடந் தழுது

விம்முகின்ற குழவியினும் மிகப்பெரிதும் சிறியேன்
அளக்கறியாத் துயர்க்கடலில் விழுந்துநெடுங் காலம்

அலைந்தலைந்து மெலிந்ததுரும் பதனின்மிகத் துரும்பேன்
கிளக்கறியாக் கொடுமைஎலாம் கிளைத்தபழு மரத்தேன்

கெடுமதியேன் கடுமையினேன் கிறிபேசும் வெறியேன்
களக்கறியாப் புவியிடைநான் ஏன்பிறந்தேன் அந்தோ

கருணைநடத் தரசேநின் கருத்தைஅறி யேனே.

2
3295

அறியாத பொறியவர்க்கும் இழிந்ததொழி லவர்க்கும்

அதிகரித்துத் துன்மார்க்கத் தரசுசெயுங் கொடியேன்
குறியாத கொடும்பாவச் சுமைசுமக்கும் திறத்தேன்

கொல்லாமை என்பதைஓர் குறிப்பாலும் குறியேன்
செறியாத மனக்கடையேன் தீமையெலாம் உடையேன்

சினத்தாலும் மதத்தாலும் செறிந்தபுதல் அனையேன்
எறியாத புவியிடைநான் ஏன்பிறந்தேன் உன்றன்

இதயமறி யேன்மன்றில் இனித்தநடத் திறையே.

3
3296

இனித்தபழச் சாறுவிடுத் திழித்தமலங் கொளும்ஓர்

இழிவிலங்கில் இழிந்துநின்றேன் இரக்கம்ஒன்றும் இல்லேன்
அனித்தநெறி யிடைத்தொடர்ந்து மனித்தஉடம் பெடுத்த

அறக்கடையர் தமக்கெல்லாம் அறக்கடையன் ஆனேன்
பனித்தமனக் குரங்காட்டிப் பலிக்குழலும் கொடியேன்

பாதகமும் சூதகமும் பயின்றபெறும் படிறேன்
தனித்தகடுங் குணத்தேன்நான் ஏன்பிறந்தேன் நினது

தனிக்கருத்தை அறிந்திலேன் சபைக்கேற்றும் ஒளியே.

4
3297

ஏறுகின்றேம் எனமதித்தே இறங்குகின்ற கடையேன்

ஏதமெலாம் நிறைமனத்தேன் இரக்கமிலாப் புலையேன்
சீறுகின்ற புலியனையேன் சிறுதொழிலே புரிவேன்

செய்வகைஒன் றறியாத சிறியரினும் சிறியேன்
மாறுகின்ற குணப்பேதை மதியதனால் இழிந்தேன்

வஞ்சம்எலாம் குடிகொண்ட வாழ்க்கைமிக உடையேன்
வீறுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது

மெய்க்கருத்தை அறிந்திலேன் விளங்குநடத் தரசே.

5
3298

அரசர்எலாம் மதித்திடப்பே ராசையிலே அரசோ

டால்எனவே மிகக்கிளைத்தேன் அருளறியாக் கடையேன்
புரசமரம் போற்பருத்தேன் எட்டிஎனத் தழைத்தேன்

புங்கெனவும் புளிஎனவும் மங்கிஉதிர் கின்றேன்
பரசும்வகை தெரிந்துகொளேன் தெரிந்தாரைப் பணியேன்

பசைஅறியாக் கருங்கல்மனப் பாவிகளிற் சிறந்தேன்
விரசுநிலத் தேன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன்

வியக்குமணி மன்றோங்கி விளங்குபரம் பொருளே.

6
3299

பொருளறியேன் பொருளறிந்தார் போன்றுநடித் திங்கே

பொங்கிவழிந் துடைகின்றேன் பொய்யகத்தேன் புலையேன்
மருளறியாத் திருவாளர் உளங்கயக்கத் திரிவேன்

வையுண்டும் உழவுதவா மாடெனவே தடித்தேன்
வெருளறியாக் கொடுமனத்தேன் விழற்கிறைத்துக் களிப்பேன்

வீணர்களில் தலைநின்றேன் விலக்கனைத்தும் புரிவேன்
தெருளறியேன் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது

திருவுளத்தை அறிந்திலேன் தெய்வநடந் தவனே.

7
3300

தவம்புரியேன் தவம்புரிந்தார் தமைப்போல நடித்துத்

தருக்குகின்றேன் உணர்ச்சியிலாச் சடம்போல இருந்தேன்
பவம்புரிவேன் கமரினிடைப் பால்கவிழ்க்கும் கடையேன்

பயனறியா வஞ்சமனப் பாறைசுமந் துழல்வேன்
அவம்புரிவேன் அறிவறியேன் அன்பறியேன் அன்பால்

ஐயாநின் அடியடைந்தார்க் கணுத்துணையும் உதவேன்
நவம்புரியும் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது

நல்லதிரு வுளம்அறியேன் ஞானநடத் திறையே.

8
3301

இறைஅளவும் அறிவொழுக்கத் திச்சையிலேன் நரகில்

இருந்துழன்று வாடுகின்றோர் எல்லார்க்கும் இழிந்தேன்
பொறைஅளவோ நன்மைஎலாம் போக்கில்விட்டுத் தீமை

புரிகின்றேன் எரிகின்ற புதுநெருப்பிற் கொடியேன்
நிறைஅளவோ முறைஅளவோ நிலைஅளவுந் தவிர்ந்த

நெடுஞ்சால நெஞ்சகத்தேன் நீலவிடம் போல்வேன்
கறையளவா உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது

கருத்தறியேன் கருணைநடங் காட்டுகின்ற குருவே.

9
3302

காட்டுகின்ற உவர்க்கடல்போல் கலைகளிலும் செல்வக்

களிப்பினிலும் சிறந்துமிகக் களித்துநிறை கின்றேன்
நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன்

நெடுந்தூரம் ஆழ்ந்துதவாப் படுங்கிணறு போல்வேன்
ஆட்டுகின்ற அருட்பெருமை ஒருசிறிதும் தெரியேன்

அச்சமிலேன் நாணமிலேன் அடக்கம்ஒன்றும் இல்லேன்
கூட்டுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது

குறிப்பறியேன் மன்றில்நடங் குலவுகுல மணியே.

10


திருச்சிற்றம்பலம்


5. மாயைவலிக் கழுங்கல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3303

தாவு மான்எனக் குதித்துக்கொண் டோ டித்

தைய லார்முலைத் தடம்படுங் கடையேன்
கூவு காக்கைக்குச் சோற்றில்ஓர் பொருக்கும்

கொடுக்க நேர்ந்திடாக் கொடியரில் கொடியேன்
ஓவு றாதுழல் ஈஎனப் பலகால்

ஓடி ஓடியே தேடுறும் தொழிலேன்
சாவு றாவகைக் கென்செயக் கடவேன்

தந்தை யேஎனைத் தாங்கிக்கொண் டருளே.

1
3304

போக மாதியை விழைந்தனன் வீணில்

பொழுது போக்கிடும் இழுதையேன் அழியாத்
தேக மாதியைப் பெறமுயன் றறியேன்

சிரங்கு நெஞ்சகக் குரங்கொடும் உழல்வேன்
காக மாதிகள் அருந்தஓர் பொருக்கும்

காட்ட நேர்ந்திடாக் கடையரில் கடையேன்
ஆக மாதிசொல் அறிவறி வேனோ

அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.

2
3305

விழியைத் தூர்க்கின்ற வஞ்சரை விழைந்தேன்

விருந்தி லேஉண வருந்திஓர் வயிற்றுக்
குழியைத் தூர்க்கின்ற கொடியரில் கொடியேன்

கோப வெய்யனேன் பாபமே பயின்றேன்
வழியைத் தூர்ப்பவர்க் குளவுரைத் திடுவேன்

மாய மேபுரி பேயரில் பெரியேன்
பழியைத் தூர்ப்பதற் கென்செயக் கடவேன்

பரம னேஎனைப் பரிந்துகொண் டருளே.

3
3306

மதத்தி லேஅபி மானங்கொண் டுழல்வேன்

வாட்ட மேசெயும் கூட்டத்தில் பயில்வேன்
இதத்தி லேஒரு வார்த்தையும் புகலேன்

ஈயும் மொய்த்திடற் கிசைவுறா துண்பேன்
குதத்தி லேஇழி மலத்தினுங் கடையேன்

கோடை வெய்யலின் கொடுமையிற் கொடியேன்
சிதத்தி லேஉறற் கென்செயக் கடவேன்

தெய்வ மேஎனைச் சேர்த்துக்கொண் டருளே.

4
3307

கொடிய வெம்புலிக் குணத்தினேன் உதவாக்

கூவம் நேர்ந்துளேன் பாவமே பயின்றேன்
கடிய நெஞ்சினேன் குங்குமம் சுமந்த

கழுதை யேன்அவப் பொழுதையே கழிப்பேன்
விடியு முன்னரே எழுந்திடா துறங்கும்

வேட னேன்முழு மூடரில் பெரியேன்
அடிய னாவதற் கென்செயக் கடவேன்

அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.

5
3308

தூங்கு கின்றதே சுகம்என அறிந்தேன்

சோற தேபெறும் பேறதென் றுணர்ந்தேன்
ஏங்கு கின்றதே தொழிலெனப் பிடித்தேன்

இரக்கின் றோர்களே என்னினும் அவர்பால்
வாங்கு கின்றதே பொருள்என வலித்தேன்

வஞ்ச நெஞ்சினால் பஞ்செனப் பறந்தேன்
ஓங்கு கின்றதற் கென்செயக் கடவேன்

உடைய வாஎனை உவந்துகொண்ட ருளே.

6
3309

வருத்த நேர்பெரும் பாரமே சுமந்து

வாடும் ஓர்பொதி மாடென உழன்றேன்
பருத்த ஊனொடு மலம்உணத் திரியும்

பன்றி போன்றுளேன் நன்றியொன் றறியேன்
கருத்தி லாதயல் குரைத்தலுப் படைந்த

கடைய நாயினிற் கடையனேன் அருட்குப்
பொருத்தன் ஆவதற் கென்செயக் கடவேன்

புண்ணி யாஎனைப் புரிந்துகொண் டருளே.

7
3310

துருக்க லோகொடுங் கருங்கலோ வயிரச்

சூழ்க லோஎனக் காழ்கொளும் மனத்தேன்
தருக்கல் ஆணவக் கருக்கலோ டுழல்வேன்

சந்தை நாயெனப் பந்தமுற் றலைவேன்
திருக்கெ லாம்பெறு வெருக்கெனப்199 புகுவேன்

தீய னேன்பெரும் பேயனேன் உளந்தான்
உருக்கல் ஆகுதற் கென்செயக் கடவேன்

உடைய வாஎனை உவந்துகொண் டருளே.

8
 199. வெருக்கு - பூனை. ககரமெய் விரிக்கும் வழி விரித்தல். முதற்பதிப்பு 
3311

கான மேஉழல் விலங்கினிற் கடையேன்

காம மாதிகள் களைகணிற் பிடித்தேன்
மான மேலிடச் சாதியே மதமே

வாழ்க்கை யேஎன வாரிக்கொண் டலைந்தேன்
ஈன மேபொருள் எனக்களித் திருந்தேன்

இரக்கம் என்பதோர் எட்டுணை அறியேன்
ஞான மேவுதற் கென்செயக் கடவேன்

நாய காஎனை நயந்துகொண் டருளே.

9
3312

இருளை யேஒளி எனமதித் திருந்தேன்

இச்சை யேபெரு விச்சைஎன் றலந்தேன்
மருளை யேதரு மனக்குரங் கோடும்

வனமெ லாஞ்சுழன் றினம்எனத் திரிந்தேன்
பொருளை நாடுநற் புந்திசெய் தறியேன்

பொதுவி லேநடம் புரிகின்றோய் உன்றன்
அருளை மேவுதற் கென்செயக் கடவேன்

அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.

10


திருச்சிற்றம்பலம்


6. முறையீடு

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3313

மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம்ஒன் றறியேன்

மதிஅறியேன் விதிஅறியேன் வாழ்க்கைநிலை அறியேன்
திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்

செய்தறியேன் மனமடங்கும் திறத்தினில்ஓர் இடத்தே
இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்

எந்தைபிரான் மணிமன்றம் எய்தஅறி வேனோ
இருந்ததிசை சொலஅறியேன் எங்ஙனம்நான் புகுவேன்

யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

1
3314

அகங்காரக் கொடுங்கிழங்கை அகழ்ந்தெறிய அறியேன்

அறிவறிந்த அந்தணர்பால் செறியும்நெறி அறியேன்
நகங்கானம் உறுதவர்போல் நலம்புரிந்தும் அறியேன்

நச்சுமரக் கனிபோல இச்சைகனிந் துழல்வேன்
மகங்காணும் புலவரெலாம் வந்துதொழ நடிக்கும்

மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
இகங்காணத் திரிகின்றேன் எங்ஙனம்நான் புகுவேன்

யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

2
3315

கற்குமுறை கற்றறியேன் கற்பனகற் றறிந்த

கருத்தர்திருக் கூட்டத்தில் களித்திருக்க அறியேன்
நிற்குநிலை நின்றறியேன் நின்றாரின் நடித்தேன்

நெடுங்காமப் பெருங்கடலை நீந்தும்வகை அறியேன்
சிற்குணமா மணிமன்றில் திருநடனம் புரியும்

திருவடிஎன் சென்னிமிசைச் சேர்க்கஅறி வேனோ
இற்குணஞ்செய் துழல்கின்றேன் எங்ஙனம்நான் புகுவேன்

யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

3
3316

தேகமுறு பூதநிலைத் திறம்சிறிதும் அறியேன்

சித்தாந்த நிலைஅறியேன் சித்தநிலைஅறியேன்
யோகமுறு நிலைசிறிதும் உணர்ந்தறியேன் சிறியேன்

உலகநடை யிடைக்கிடந்தே உழைப்பாரில் கடையேன்
ஆகமுறு திருநீற்றின் ஒளிவிளங்க அசைந்தே

அம்பலத்தில் ஆடுகின்ற அடியைஅறி வேனோ
ஏகஅனு பவம்அறியேன் எங்ஙனம்நான் புகுவேன்

யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

4
3317

வேதாந்த நிலைநாடி விரைந்துமுயன் றறியேன்

மெய்வகையும் கைவகையும் செய்வகையும் அறியேன்
நாதாந்தத் திருவீதி நடந்திடுதற் கறியேன்

நான்ஆர்என் றறியேன்எங் கோன்ஆர்என் றறியேன்
போதாந்தத் திருநாடு புகஅறியேன் ஞான

பூரணா காயம்எனும் பொதுவைஅறி வேனோ
ஏதாந்தீ யேன்சரிதம் எங்ஙனம்நான் புகுவேன்

யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

5
3318

கலைமுடிவு கண்டறியேன் கரணமெலாம் அடக்கும்

கதிஅறியேன் கதிஅறிந்த கருத்தர்களை அறியேன்
கொலைபுலைகள் விடுத்தறியேன் கோபமறுத் தறியேன்

கொடுங்காமக் கடல்கடக்கும் குறிப்பறியேன் குணமாம்
மலைமிசைநின் றிடஅறியேன் ஞானநடம் புரியும்

மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
இலைஎனும்பொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்

யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

6
3319

சாதிமதம் சமயம்எனும் சங்கடம்விட் டறியேன்

சாத்திரச்சே றாடுகின்ற சஞ்சலம்விட் டறியேன்
ஆதிஅந்த நிலையறியேன் அலைஅறியாக் கடல்போல்

ஆனந்தப் பெரும்போகத் தமர்ந்திடவும் அறியேன்
நீதிநெறி நடந்தறியேன் சோதிமணிப் பொதுவில்

நிருத்தமிடும் ஒருத்தர்திருக் கருத்தைஅறி வேனோ
ஏதிலர்சார் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்

யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

7
3320

சாகாத தலைஅறியேன் வேகாத காலின்

தரம்அறியேன் போகாத தண்ணீரை அறியேன்
ஆகாய நிலைஅறியேன் மாகாய நிலையும்

அறியேன்மெய்ந் நெறிதனைஓர் அணுஅளவும் அறியேன்
மாகாத லுடையபெருந் திருவாளர் வழுத்தும்

மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
ஏகாய200 உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்

யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

8
 200. ஏகம் - முத்தி, ஈறுதொக்கு நின்றது, முதற்பதிப்பு. 
3321

தத்துவம்என் வசமாகத் தான்செலுத்த அறியேன்

சாகாத கல்விகற்கும் தரஞ்சிறிதும் அறியேன்
அத்தநிலை சத்தநிலை அறியேன்மெய் அறிவை

அறியேன்மெய் அறிந்தடங்கும் அறிஞரையும் அறியேன்
சுத்தசிவ சன்மார்க்கத் திருப்பொதுவி னிடத்தே

தூயநடம் புரிகின்ற ஞாயமறி வேனோ
எத்துணையும் குணமறியேன் எங்ஙனம்நான் புகுவேன்

யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

9
3322

வரைஅபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன்

மரணபயம் தவிர்த்திடுஞ்சன் மார்க்கமதை அறியேன்
திரையறுதண் கடலறியேன் அக்கடலைக் கடைந்தே

தெள்ளமுதம் உணவறியேன் சினமடக்க அறியேன்
உரைஉணர்வு கடந்ததிரு மணிமன்றந் தனிலே

ஒருமைநடம் புரிகின்றார் பெருமைஅறி வேனோ
இரையுறுபொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்

யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

10


திருச்சிற்றம்பலம்


7. அடியார் பேறு

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3323அடியார் வருத்தம் தனைக்கண்டு தரியார் இன்பம் அளித்திடுவார்
வடியாக் கருணைப் பெருங்கடலார் என்ற பெரியர் வார்த்தைஎலாம்
நெடியார்க் கரியாய் கொடியேன்என் ஒருவன் தனையும் நீக்கியதோ
கடியாக் கொடுமா பாதகன்முன் கண்ட பரிசுங் கண்டிலனே.
1
3324பையார் பாம்பு கொடியதெனப் பகர்வார் அதற்கும் பரிந்துமுன்னாள்
ஐயா கருணை அளித்தனைஎன் அளவில் இன்னும் அளித்திலையே
மையார் மிடற்றோய் ஆனந்த மன்றில் நடிப்போய் வல்வினையேன்
நையா நின்றேன் ஐயோநான் பாம்பிற் கொடியன் ஆனேனே.
2
3325பீழை புரிவான் வருந்துகின்ற பேய்க்கும் கருணை பெரிதளிப்பான்
ஊழை அகற்றும் பெருங்கருணை உடையான் என்பார் உனைஐயோ
மோழை மனத்தால் குரங்கெறிந்த விளங்கா யாகி மொத்துண்ணும்
ஏழை அடியேன் வருத்தங்கண் டிருத்தல் அழகோ எங்கோவே.
3
3326மருணா டுலகில் கொலைபுரிவார் மனமே கரையாக் கல்என்று
பொருணா டியநின் திருவாக்கே புகல அறிந்தேன் என்னளவில்
கருணா நிதிநின் திருவுளமுங் கல்என் றுரைக்க அறிந்திலனே
இருணா டியஇச் சிறியேனுக் கின்னும் இரங்கா திருந்தாயே.
4
3327முன்னுங் கொடுமை பலபுரிந்து முடுகிப் பின்னுங் கொடுமைசெய
உன்னுங் கொடியர் தமக்கும்அருள் உதவுங் கருணை உடையானே
மன்னும் பதமே துணைஎன்று மதித்து வருந்தும் சிறியேனுக்
கின்னுங் கருணை புரிந்திலைநான் என்ன கொடுமை செய்தேனோ.
5
3328அங்கே அடியர் தமக்கெல்லாம் அருளார் அமுதம் அளித்தையோ
இங்கே சிறியேன் ஒருவனுக்கும் இடர்தான் அளிக்க இசைந்தாயேல்
செங்கேழ் இதழிச் சடைக்கனியே201 சிவமே அடிமைச் சிறுநாயேன்
எங்கே புகுவேன் என்செய்வேன் எவர்என் முகம்பார்த் திடுவாரே.
6
 201. செங்கேழ் வண்ணத் தனிக்கனியே - முதற்பதிப்பு, பொ. சு; பி. இரா. பாடம். 
3329அளியே அன்பர் அன்பேநல் லமுதே சுத்த அறிவான
வெளியே வெளியில் இன்பநடம் புரியும் அரசே விதிஒன்றும்
தெளியேன் தீங்கு பிறர்செயினும் தீங்கு நினையாத் திருவுளந்தான்
எளியேன் அளவில் நினைக்கஒருப் படுமோ கருணை எந்தாயே.
7
3320தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை எனத்தெளிந்து
வாது நினைக்கும் மனக்கடையேன் மகிழ்வுற் றிருந்தேன் என்னளவில்
சூது நினைப்பாய் எனில்யார்க்குச் சொல்வேன் யாரைத் துணைகொள்வேன்
ஏது நினைப்பேன் ஐயோநான் பாவி உடம்பேன் எடுத்தேனே.
8
3331பொதுவென் றறிந்தும் இரங்காத சிலர்க்கும் கருணை புரிவதன்றிக்
கதுவென் றழுங்க நினையாநின் கருணை உளந்தான் அறிவென்ப
திதுவென் றறியா எனைவருத்த எந்த வகையால் துணிந்ததுவோ
எதுவென் றறிவேன் என்புரிவேன் ஐயோ புழுவில் இழிந்தேனே.
9
3332வெடிக்கப் பார்த்து நிற்கின்ற வெய்யர் தமையும் வினைத்துயர்கள்
பிடிக்கப் பார்க்கத் துணியாத பெருமான் நினது திருவுளந்தான்
நடிக்கப் பார்க்கும் உலகத்தே சிறியேன் மனது நவையாலே
துடிக்கப் பார்த்திங் கிருந்ததுகாண் ஐயோ இதற்குந் துணிந்ததுவோ.
10
3333கல்லுங் கனியத் திருநோக்கம் புரியும் கருணைக் கடலேநான்
அல்லும் பகலுந் திருக்குறிப்பை எதிர்பார்த் திங்கே அயர்கின்றேன்
கொல்லுங் கொடியார்க் குதவுகின்ற குறும்புத் தேவர் மனம்போலச்
சொல்லும் இரங்கா வன்மைகற்க எங்கே ஐயோ துணிந்தாயோ.
11
3334படிமேல் ஆசை பலவைத்துப் பணியும் அவர்க்கும் பரிந்துசுகக்
கொடிமேல் உறச்செய் தருள்கின்றாய் என்பால் இரக்கங் கொண்டிலையே
பொடிமேல் அணிநின் அருட்கிதுதான் அழகோ பொதுவில் நடிக்கும்உன்றன்
அடிமேல் ஆசை அல்லால்வே றாசை ஐயோ அறியேனே.
12
3335நாயேன் உலகில் அறிவுவந்த நாள்தொட் டிந்த நாள்வரையும்
ஏயேன் பிறிதி லுன்குறிப்பே எதிர்பார்த் திருந்தேன் என்னுடைய
தாயே பொதுவில் நடம்புரிஎந் தாயே தயவு தாராயேல்
மாயேன் ஐயோ எதுகொண்டு வாழ்ந்திங் கிருக்கத் துணிவேனே.
13
3336நயத்தால் உனது திருவருளை நண்ணாக் கொடியேன் நாய் உடம்பை
உயத்தான் வையேன் மடித்திடுவேன் மடித்தாற் பின்னர் உலகத்தே
வயத்தால் எந்த உடம்புறுமோ என்ன வருமோ என்கின்ற
பயத்தால் ஐயோ இவ்வுடம்பைச் சுமக்கின் றேன்எம் பரஞ்சுடரே.
14
3337இன்ப மடுத்துன் அடியர்எலாம் இழியா தேறி யிருக்கின்றார்
வன்ப ரிடத்தே பலகாற்சென் றவரோ டுறவு வழங்கிஉன்றன்
அன்பர் உறவை விடுத்துலகில் ஆடிப் பாடி அடுத்தவினைத்
துன்ப முடுகிச் சுடச்சுடவுஞ் சோறுண் டிருக்கத் துணிந்தேனே.
15
3338எந்நாள் கருணைத் தனிமுதல்நீ என்பால் இரங்கி அருளுதலோ
அந்நாள் இந்நாள் இந்நாள்என் றெண்ணி எண்ணி அலமந்தேன்
சென்னாள் களில்ஓர் நன்னாளுந் திருநா ளான திலைஐயோ
முன்னாள் என்னை ஆட்கொண்டாய் என்ன நாணம் முடுகுவதே.
16
3339எந்த வகைசெய் திடிற்கருணை எந்தாய் நீதான் இரங்குவையோ
அந்த வகையை நான்அறியேன் அறிவிப் பாரும் எனக்கில்லை
இந்த வகைஇங் கையோநான் இருந்தால் பின்னர் என்செய்வேன்202
பந்த வகைஅற் றவர்உளத்தே நடிக்கும் உண்மைப் பரம்பொருளே203.
17
 202. என்செய்கேன் - ச மு க. பதிப்பு.
203. பரஞ்சுடரே - படிவேறுபாடு. ஆ பா.
 
3340அடுக்குந் தொண்டர் தமக்கெல்லாம் அருளீந் திங்கே என்னளவில்
கொடுக்குந் தன்மை தனைஒளித்தால் ஒளிக்கப் படுமோ குணக்குன்றே
தடுக்குந் தடையும் வேறில்லை தமியேன் தனைஇத் தாழ்வகற்றி
எடுக்குந் துணையும் பிறிதில்லை ஐயோ இன்னும் இரங்கிலையே.
18
3341எல்லாம் உடையாய் நின்செயலே எல்லாம் என்றால் என்செயல்கள்
எல்லாம் நினது செயல்அன்றோ என்னே என்னைப் புறந்தள்ளல்
வல்லாய் என்னைப் புறம்விடுத்தால் புறத்தும் உன்றன் மயம்அன்றே
நல்லார் எங்கும் சிவமயம்என் றுரைப்பார் எங்கள் நாயகனே.
19
3342கூடுங் கருணைத் திருக்குறிப்பை இற்றைப் பொழுதே குறிப்பித்து
வாடுஞ் சிறியேன் வாட்டம்எலாந் தீர்த்து வாழ்வித் திடல்வேண்டும்
பாடும் புகழோய் நினைஅல்லால் துணைவே றில்லைப் பரவெளியில்
ஆடுஞ் செல்வத் திருவடிமேல் ஆணை முக்கால் ஆணையதே.
20


திருச்சிற்றம்பலம்


8. ஆன்ம விசாரத் தழுங்கல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3343

போகமே விழைந்தேன் புலைமனச் சிறியேன் 

பூப்பினும் புணர்ந்தவெம் பொறியேன்
ஏகமே பொருள்என் றறிந்திலேன் பொருளின் 

இச்சையால் எருதுநோ வறியாக்
காகமே எனப்போய்ப் பிறர்தமை வருத்திக்

களித்த பாதகத்தொழிற் கடையேன்
மோகமே உடையேன் என்னினும் எந்தாய் 

முனிந்திடேல் காத்தருள் எனையே.

1
3344

பூப்பினும் பலகால் மடந்தையர் தமைப்போய்ப்

புணர்ந்தவெம் புலையனேன் விடஞ்சார்
பாப்பினுங் கொடியர் உறவையே விழைந்த 

பள்ளனேன் கள்ளனேன் நெருக்கும்
ஆப்பினும் வலியேன் அறத்தொழில் புரியேன்

அன்பினால் அடுத்தவர் கரங்கள்
கூப்பினுங் கூப்பாக் கொடுங்கையேன் எனினும் 

கோபியேல் காத்தருள் எனையே.

2
3345

விழுத்தலை நெறியை விரும்பிலேன் கரும்பின் 

மிகஇனிக் கின்றநின் புகழ்கள்
வழுத்தலை அறியேன் மக்களே மனையே 

வாழ்க்கையே துணைஎன மதித்துக்
கொழுத்தலை மனத்துப் புழுத்தலைப் புலையேன் 

கொக்கனேன் செக்கினைப் பலகால்
இழுத்தலை எருதேன் உழத்தலே உடையேன் 

என்னினும் காத்தருள் எனையே.

3
3346

புலைவிலைக் கடையில் தலைகுனித் தலைந்து 

பொறுக்கிய சுணங்கனேன் புரத்தில்
தலைவிலை பிடித்துக் கடைவிலை படித்த 

தயவிலாச் சழக்கனேன் சழக்கர்
உலைவிலை எனவே வியக்கவெந் தொழிலில் 

உழன்றுழன் றழன்றதோர் உளத்தேன்
இலைவிலை எனக்கென் றகங்கரித் திருந்தேன் 

என்னினும் காத்தருள் எனையே.

4
3347

கொட்டிலை அடையாப் பட்டிமா டனையேன் 

கொட்டைகள் பரப்பிமேல் வனைந்த
கட்டிலை விரும்பி அடிக்கடி படுத்த 

கடையனேன் கங்குலும் பகலும்
அட்டிலை அடுத்த பூஞையேன் உணவை 

அறவுண்டு குப்பைமேற் போட்ட
நெட்டிலை அனையேன் என்னினும் வேறு 

நினைத்திடேல் காத்தருள் எனையே.

5
3348

நேரிழை யவர்தம் புணர்முலை நெருக்கில் 

நெருக்கிய மனத்தினேன் வீணில்
போரிழை வெறியர் புகழ்பெறு வெறியேன் 

புனைகலை இலர்க்கொரு கலையில்
ஓரிழை எனினும் கொடுத்திலேன் நீள 

உடுத்துடுத் தூர்தொறுந் திரிந்தேன்
ஏரிழை விழைந்து பூண்டுளங் களித்தேன் 

என்னினும் காத்தருள்எனையே.

6
3349

அளத்திலே படிந்த துரும்பினும் கடையேன்

அசடனேன் அறிவிலேன்உலகில்
குளத்திலே குளிப்பார் குளிக்கவெஞ் சிறுநீர்க் 

குழியிலே குளித்தவெங் கொடியேன்
வளத்திலே பொசித்துத் தளத்திலே படுக்க 

மனங்கொணட சிறியேனன் மாயைக்
களத்திலே பயின்ற உளத்திலே பெரியன் 

என்னினும் காத்தருள் எனையே.

7
3350

தொழுதெலாம் வல்ல கடவுளே நின்னைத் 

துதித்திலேன் தூய்மைஒன் றறியேன்
கழுதெலாம் அனையேன் இழுதெலாம் உணவில் 

கலந்துணக் கருதிய கருத்தேன்
பழுதெலாம் புரிந்து பொழுதெலாம் கழித்த 

பாவியேன் தீமைகள் சிறிதும்
எழுதலாம் படித்தன் றெனமிக உடையேன் 

என்னினும் காத்தருள் எனையே.

8
3351

வட்டியே பெருக்கிக் கொட்டியே ஏழை 

மனைகவர் கருத்தினேன் ஓட்டைச்
சட்டியே எனினும் பிறர்கொளத் தரியேன் 

தயவிலேன் சூதெலாம் அடைத்த
பெட்டியே நிகர்த்த மனத்தினேன் உலகில் 

பெரியவர் மனம்வெறுக் கச்செய்
எட்டியே மண்ணாங் கட்டியே அனையேன் 

என்னினும் காத்தருள் எனையே.

9
3352

உடுத்திலேம் சிறிதும் உண்டிலேம் எனவந் 

தோதிய வறிஞருக் கேதும்
கொடுத்திலேன் கொடுக்கும் குறிப்பிலேன் உலகில் 

குணம்பெரி துடையநல் லோரை
அடுத்திலேன் அடுத்தற் காசையும் இல்லேன் 

அவனிமேல் நல்லவன் எனப்பேர்
எடுத்திலேன் எனினும் தெய்வமே துணைஎன் 

றிருக்கின்றேன் காத்தருள் எனையே.

10


திருச்சிற்றம்பலம்


9. அவா அறுத்தல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3353

தாலவாழ்க் கையிலே சார்ந்தவர் எல்லாம் 

தக்கமுப் போதினும் தனித்தே
சீலமார் பூசைக் கடன்முடிக் கின்றார் 

சிறியனேன் தவஞ்செய்வான் போலே
ஞாலமே லவர்க்குக் காட்டிநான் தனித்தே 

நவிலும்இந் நாய்வயிற் றினுக்கே
காலையா தியமுப் போதினும் சோற்றுக் 

கடன்முடித் திருந்தனன் எந்தாய்.

1
3354

சோற்றிலே விருப்பஞ் சூழ்ந்திடில் ஒருவன் 

துன்னுநல் தவம்எலாஞ் சுருங்கி
ஆற்றிலே கரைத்த புளிஎனப் போம்என் 

றறிஞர்கள் உரைத்திடல் சிறிதும்
போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையில் 

பொருந்திய காரசா ரஞ்சேர்
சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை 

தங்கினேன் என்செய்வேன் எந்தாய்.

2
3355

விருப்பிலேன் போலக் காட்டினேன் அன்றி 

விளைவிலா தூண்எலாம் மறுத்த
கருப்பிலே எனினும் கஞ்சியா திகளைக் 

கருத்துவந் துண்ணுதற் கமையேன்
நெருப்பிலே உருக்கு நெய்யிலே சிறிதும் 

நீரிடாத் தயிரிலே நெகிழ்ந்த
பருப்பிலே சோற்றுப் பொருப்பிலே ஆசை 

பற்றினேன் என்செய்வேன் எந்தாய்.

3
3356

உறியிலே தயிரைத் திருடிஉண் டனன்என் 

றொருவனை உரைப்பதோர் வியப்போ
குறியிலே அமைத்த உணவெலாம் திருடிக் 

கொண்டுபோய் உண்டனன் பருப்புக்
கறியிலே பொரித்த கறியிலே கூட்டுக் 

கறியிலே கலந்தபே ராசை
வெறியிலே உனையும் மறந்தனன் வயிறு 

வீங்கிட உண்டனன் எந்தாய்.

4
3357

கீரையே விரும்பேன் பருப்பொடு கலந்த 

கீரையே விரும்பினேன் வெறுந்தண்
நீரையே விரும்பேன் தெங்கிளங் காயின் 

நீரையே விரும்பினேன் உணவில்
ஆரையே எனக்கு நிகர்எனப் புகல்வேன் 

அய்யகோ அடிச்சிறு நாயேன்
பேரையே உரைக்கில் தவம்எலாம் ஓட்டம் 

பிடிக்குமே என்செய்வேன் எந்தாய்.

5
3358

பாலிலே கலந்த சோறெனில் விரைந்தே 

பத்தியால் ஒருபெரு வயிற்றுச்
சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை 

தகுபலா மாமுதற் பழத்தின்
தோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும் 

சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன்
வாலிலேன் இருக்கில் வனத்திலே இருக்க 

வாய்ப்புளேன் என்செய்வேன் எந்தாய்.

6
3359

உடம்பொரு வயிறாய்ச் சருக்கரை கலந்த 

உண்டியே உண்டனன் பலகால்
கடம்பெறு புளிச்சோ றுண்டுளே களித்தேன் 

கட்டிநல் தயிரிலே கலந்த
தடம்பெறு சோற்றில் தருக்கினேன் எலுமிச் 

சம்பழச் சோற்றிலே தடித்தேன்
திடம்பெறும் மற்றைச் சித்திரச் சோற்றில் 

செருக்கினேன் என்செய்வேன் எந்தாய்.

7
3360

மிளகுமேன் மேலும் சேர்த்தபல் உணவில் 

விருப்பெலாம் வைத்தனன்உதவாச் 
சுளகினும் கடையேன் பருப்பிலே அமைத்த 

துவையலே சுவர்க்கம்என் றுண்டேன்
இளகிலா மனத்தேன் இனியபச் சடிசில் 

எவற்றிலும் இச்சைவைத் திசைத்தேன்
குளகுணும் விலங்கின் இலைக்கறிக் காசை 

கொண்டனன் என்செய்வேன்எந்தாய்.

8
3361

தண்டுகாய் கிழங்கு பூமுதல் ஒன்றும் 

தவறவிட் டிடுவதற் கமையேன்
கொண்டுபோய் வயிற்றுக் குழிஎலாம் நிரம்பக் 

கொட்டினேன் குணமிலாக் கொடியேன்
வண்டுபோல் விரைந்து வயல்எலாம் நிரம்ப 

மலங்கொட்ட ஓடிய புலையேன்
பண்டுபோல் பசித்தூண் வருவழி பார்த்த 

பாவியேன் என்செய்வேன் எந்தாய்.

9
3362

வறுத்தலே பொடித்து மலர்த்தலே புரட்டி

வைத்தலே துவட்டலில் சுவைகள்
உறுத்தலே முதலா உற்றபல் உணவை 

ஒருமல வயிற்றுப்பை உள்ளே
துறுத்தலே எனக்குத் தொழில்எனத் துணிந்தேன்

துணிந்தரைக் கணத்தும்வன் பசியைப் 
பொறுத்தலே அறியேன் மலப்புலைக் கூட்டைப்

பொறுத்தனன் என்செய்வேன் எந்தாய்.

10
3363

பருப்பிடி யரிவா லிடிகளா திகளால் 

பண்ணிய பண்ணிகா ரங்கள்
உருப்பிடி நிரம்ப வரவர எல்லாம் 

ஒருபெரு வயிற்றிலே அடைத்தேன்
கருப்பிடி உலகின் எருப்பிடி அனைய 

கடையரில் கடையனேன் உதவாத்
துருப்பிடி இருப்புத் துண்டுபோல் கிடந்து 

தூங்கினேன் என்செய்வேன் எந்தாய்.

11
3364

அடிக்கடி நுண்மை விழைந்துபோய் அவைகள் 

அடுக்கிய இடந்தொறும் அலைந்தே
தடிக்கடி நாய்போல் நுகர்ந்துவாய் சுவைத்துத் 

தவம்புரிந் தான்என நடித்தேன்
பொடிக்கடி நாசித் துளையிலே புகுத்திப் 

பொங்கினேன் அய்யகோ எனது
முடிக்கடி புனைய முயன்றிலேன் அறிவில்

மூடனேன் என்செய்வேன் எந்தாய்.

12
3365

உண்டியே விழைந்தேன் எனினும்என் தன்னை 

உடையவா அடியனேன் உனையே
அண்டியே இருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன் 

அப்பநின் ஆணைநின் தனக்கே
தொண்டுறா தவர்கைச் சோற்றினை விரும்பேன் 

தூயனே துணைநினை அல்லால்
கண்டிலேன் என்னைக் காப்பதுன் கடன்காண் 

கைவிடேல் கைவிடேல் எந்தாய்.

13


திருச்சிற்றம்பலம்


10. தற் சுதந்தரம் இன்மை

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3366

இப்பாரில் உடல்ஆவி பொருளும்உன்பாற் 

கொடுத்தேன்மற் றெனக்கென் றிங்கே 
எப்பாலும் சுதந்தரம்ஓர் இறையும்இலை 

அருட்சோதி இயற்கை என்னும் 
துப்பாய உடலாதி தருவாயோ 

இன்னும்எனைச் சோதிப் பாயோ 
அப்பாநின் திருவுளத்தை அறியேன்இவ் 

வடியேனால் ஆவ தென்னே.

1
3367

என்னேஎம் பெருமான்இங் கின்னும்அணைந் 

திலன்என்றே ஏங்கி ஏங்கி 
மன்னேஎன் மணியேகண் மணியேஎன் 

வாழ்வேநல் வரத்தாற் பெற்ற 
பொன்னேஅற் புதமேசெம் பொருளேஎன் 

புகலேமெய்ப் போத மேஎன் 
அன்னேஎன் அப்பாஎன் றழைத்தலன்றி 

அடியேனால் ஆவ தென்னே.

2
3368

பொடிஎடுக்கப் போய்அதனை மறந்துமடி 

எடுத்தரையில் புனைவேன் சில்லோர் 
தடிஎடுக்கக் காணில்அதற் குளங்கலங்கி 

ஓடுவனித் தரத்தேன் இங்கே 
முடிஎடுக்க வல்லேனோ இறைவாநின் 

அருள்இலதேல் முன்னே வைத்த 
அடிஎடுக்க முடியாதே அந்தோஇச் 

சிறியேனால் ஆவ தென்னே.

3
3369

பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால் 

பணிகின்றேன் பதியே நின்னைக் 
கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால் 

குழைகின்றேன் குறித்த ஊணை 
ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால் 

உறங்குகின்றேன் உறங்கா தென்றும் 
ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோஇச் 

சிறியேனால் ஆவ தென்னே.

4
3370

உடுப்பவனும் உண்பவனும் நானேஎன் 

னவும்நாணம் உறுவ தெந்தாய் 
தடுப்பவனும் தடைதீர்த்துக் கொடுப்பவனும் 

பிறப்பிறப்புத் தன்னை நீக்கி 
எடுப்பவனும் காப்பவனும் இன்பஅனு 

பவஉருவாய் என்னுள் ஓங்கி 
அடுப்பவனும் நீஎன்றால் அந்தோஇச் 

சிறியேனால் ஆவ தென்னே.

5
3371

சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்ற 

பெரும்பாவம் தன்னை எண்ணி 
நோவதின்று புதிதன்றே என்றும்உள 

தால்இந்த நோவை நீக்கி 
ஈவதுமன் றிடைநடிப்போய் நின்னாலே 

ஆகும்மற்றை இறைவ ராலே 
ஆவதொன்றும் இல்லைஎன்றால் அந்தோஇச் 

சிறியேனால் ஆவ தென்னே.

6
3372

இசைத்திடவும் நினைத்திடவும் பெரிதரிதாம் 

தனித்தலைமை இறைவா உன்றன் 
நசைத்திடுபே ரருட்செயலால் அசைவதன்றி 

ஐந்தொழில்செய் நாத ராலும் 
தசைத்திடுபுன் துரும்பினையும் அகங்கரித்துத் 

தங்கள்சுதந் தரத்தால் இங்கே 
அசைத்திடற்கு முடியாதேல் அந்தோஇச் 

சிறியேனால் ஆவ தென்னே.

7
3373

கல்லாய மனத்தையும்ஓர் கணத்தினிலே 

கனிவித்துக் கருணை யாலே 
பல்லாரும் அதிசயிக்கப் பக்குவந்தந் 

தருட்பதமும் பாலிக் கின்றோய் 
எல்லாஞ்செய் வல்லோய்சிற் றம்பலத்தே 

ஆடல்இடு கின்றோய் நின்னால் 
அல்லால்ஒன் றாகாதேல் அந்தோஇச் 

சிறியேனால் ஆவ தென்னே.

8
3374

கரைசேரப் புரிந்தாலும் கடையேன்செய் 

குற்றமெலாம் கருதி மாயைத் 
திரைசேரப் புரிந்தாலும் திருவுளமே 

துணைஎனநான் சிந்தித் திங்கே 
உரைசேர இருத்தல்அன்றி உடையாய்என் 

உறவேஎன் உயிரே என்றன் 
அரைசேஎன் அம்மேஎன் அப்பாஇச் 

சிறியேனால் ஆவ தென்னே.

9
3375

இன்பேநன் றருளிஅருள் இயற்கையிலே 

வைத்தாலும் இங்கே என்னைத் 
துன்பேசெய் வித்தாலும் என்செய்வேன் 

நின்னருளே துணைஎன் றந்தோ 
என்பேதை மனமடங்கி இருப்பதன்றி 

எல்லாங்கண் டிருக்கும் என்றன் 
அன்பேஎன் அம்மேஎன் அப்பாஇச் 

சிறியேனால் ஆவ தென்னே.

10


திருச்சிற்றம்பலம் 


11. அத்துவித ஆனந்த அனுபவ இடையீடு

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3376

திருத்தகுபொன் னம்பலத்தே திருநடஞ்செய் தருளும்

திருவடிகள் அடிச்சிறியேன் சென்னிமிசை வருமோ
உருத்தகுநா னிலத்திடைநீள் மலத்தடைபோய் ஞான

உருப்படிவம் அடைவேனோ ஒன்றிரண்டென் னாத
பொருத்தமுறு சுத்தசிவா னந்தவெள்ளம் ததும்பிப்

பொங்கிஅகம் புறங்காணா தெங்கு நிறைந்திடுமோ
அருத்தகும்அவ் வெள்ளத்தே நான்மூழ்கி நான்போய்

அதுவாகப் பெறுவேனோ அறிந்திலன்மேல் விளைவே.

1
3377

கரணமெலாம் கரைந்ததனிக் கரைகாண்ப துளதோ

கரைகண்ட பொழுதெனையுங் கண்டுதெளி வேனோ
அரணமெலாம் கடந்ததிரு வருள்வெளிநேர் படுமோ

அவ்வெளிக்குள் ஆனந்த அனுபவந்தான் உறுமோ
மரணமெலாம் தவிர்ந்துசிவ மயமாகி நிறைதல்

வாய்த்திடுமோ மூலமல வாதனையும் போமோ
சரணமெலாம் தரமன்றில் திருநடஞ்செய் பெருமான்

தனதுதிரு உளம்எதுவோ சற்றுமறிந் திலனே.

2
3378

நாதாந்தத் திருவீதி நடந்துகடப் பேனோ

ஞானவெளி நடுஇன்ப நடந்தரிசிப் பேனோ
போதாந்தத் திருவடிஎன் சென்னிபொருந் திடுமோ

புதுமையறச் சிவபோகம் பொங்கிநிறைந் திடுமோ
வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ

வெறுவெளியில் சுத்தசிவ வெளிமயந்தான் உறுமோ
பாதாந்த வரைநீறு மணக்கமன்றில் ஆடும்

பரமர்திரு உளம்எதுவோ பரமம்அறிந் திலனே.

3
3379

சிதம்பரத்தே ஆனந்த சித்தர்திரு நடந்தான்

சிறிதறிந்த படிஇன்னும் முழுதும்அறி வேனோ
பதம்பெறத்தேம் பழம்பிழிந்து பாலும்நறும் பாகும்

பசுநெய்யும் கலந்ததெனப் பாடிமகிழ் வேனோ
நிதம்பரவி ஆனந்த நித்திரைநீங் காத

நித்தர்பணி புரிந்தின்ப சித்திபெறு வேனோ
மதம்பரவு மலைச்செருக்கில் சிறந்தசிறி யேன்நான்

வள்ளல்குரு நாதர்திரு உள்ளம்அறி யேனே.

4
3380

களக்கமறப் பொதுநடம்நான் கண்டுகொண்ட தருணம்

கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்
விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பிஉதிர்ந் திடுமோ

வெம்பாது பழுக்கினும்என் கரத்தில்அகப் படுமோ
கொளக்கருது மலமாயைக் குரங்குகவர்ந் திடுமோ

குரங்குகவ ராதெனது குறிப்பில்அகப் படினும்
துளக்கமற உண்ணுவனோ தொண்டைவிக்கிக் கொளுமோ

ஜோதிதிரு உளம்எதுவோ ஏதும்அறிந் திலனே.

5
3381

திருப்பொதுவில் திருநடம்நான் சென்றுகண்ட தருணம்

சித்திஎனும் பெண்ணரசி எத்திஎன்கை பிடித்தாள்
கருப்பறியா தெனைஅதன்முன் கலந்தபுத்தி எனும்ஓர்

காரிகைதான் கண்டளவில் கனிந்துமகிழ்ந் திடுமோ
விருப்பமுறா தெனைமுனிந்து விடுத்திடுமோ நேயம்

விளைந்திடுமோ இவர்க்குநிதம் சண்டைவிளைந் திடுமோ
தருப்பொதுவில் இருவர்க்கும் சந்ததிஉண் டாமோ

தடைபடுமோ திருஉளந்தான் சற்றும்அறிந் திலனே.

6
3382

ஆனந்த நடம்பொதுவில் கண்டதரு ணத்தே

அருமருந்தொன் றென்கருத்தில் அடைந்தமர்ந்த ததுதான்
கானந்த மதத்தாலே காரமறை படுமோ

கடுங்கார மாகிஎன்றன் கருத்தில்உறைந் திடுமோ
ஊனந்த மறக்கொளும்போ தினிக்கரசம் தருமோ

உணக்கசந்து குமட்டிஎதிர் எடுத்திடநேர்ந் திடுமோ
நானந்த உளவறிந்து பிறர்க்கீய வருமோ

நல்லதிரு உளம்எதுவோ வல்லதறிந் திலனே.

7
3383

தாய்கொண்ட திருப்பொதுவில் எங்கள்குரு நாதன்

சந்நிதிபோய் வரவிடுத்த தனிக்கரணப் பூவை
காய்கொண்டு வந்திடுமோ பழங்கொண்டு வருமோ

கனிந்தபழங் கொண்டுவருங் காலதனை மதமாம்
பேய்கொண்டு போய்விடுமோ பிலத்திடைவீழ்ந் திடுமோ

பின்படுமோ முன்படுமோ பிணங்கிஒளித் திடுமோ
வாய்கொண்டு வென்றிடுமோ தோற்றிடுமோ என்னை

மறந்திடுமோ திருஉளத்தின் வண்ணம்அறிந் திலனே.

8
3384

தீட்டுமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டேத்தச்

செல்கின்றேன் சிறியேன்முன் சென்றவழி அறியேன்
காட்டுவழி கிடைத்திடுமோ நாட்டுவழி தருமோ

கால்இளைப்புக் கண்டிடுமோ காணாதோ களிப்பாம்
மேட்டினிடை விடுத்திடுமோ பள்ளத்தே விடுமோ

விவேகம்எனும் துணையுறுமோ வேடர்பயம் உறுமோ
ஈட்டுதிரு வடிச்சமுகம் காணவும்நேர்ந் திடுமோ

எப்படியோ திருஉளந்தான் ஏதும்அறிந் திலனே.

9
3385

ஞானமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டிடவே

நடக்கின்றேன் அந்தோமுன் நடந்தவழி அறியேன்
ஊனமிகும் ஆணவமாம் பாவிஎதிர்ப் படுமோ

உடைமைஎலாம் பறித்திடுமோ நடைமெலிந்து போமோ
ஈனமுறும் அகங்காரப் புலிகுறுக்கே வருமோ

இச்சைஎனும் இராக்கதப்பேய் எனைப்பிடித்துக் கொளுமோ
ஆனமலத் தடைநீக்க அருட்டுணைதான் உறுமோ

ஐயர்திரு உளம்எதுவோ யாதுமறிந் திலனே.

10


திருச்சிற்றம்பலம்


12. பிள்ளைச் சிறு விண்ணப்பம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3386

தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால் 

தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்
பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப் 

பேசிய தந்தையும் தாயும்
பொடித்திரு மேனி அம்பலத் தாடும் 

புனிதநீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் 

அம்மைஅப் பாஇனி ஆற்றேன்.

1
3387

பெற்றதம் பிள்ளைக் குணங்களை எல்லாம் 

பெற்றவர் அறிவரே அல்லால்
மற்றவர் அறியார் என்றனை ஈன்ற 

வள்ளலே மன்றிலே நடிக்கும்
கொற்றவ ஓர்எண் குணத்தவ நீதான்

குறிக்கொண்ட கொடியனேன் குணங்கள்
முற்றும்நன் கறிவாய் அறிந்தும்என் றனைநீ 

முனிவதென் முனிவுதீர்ந் தருளே.

2
3388

வெம்மதிக் கொடிய மகன்கொடுஞ் செய்கை 

விரும்பினும் அங்ஙனம் புரியச்
சம்மதிக் கின்றார் அவன்றனைப் பெற்ற 

தந்தைதாய் மகன்விருப் பாலே
இம்மதிச் சிறியேன் விழைந்ததொன் றிலைநீ 

என்றனை விழைவிக்க விழைந்தேன்
செம்மதிக் கருணைத் திருநெறி இதுநின் 

திருவுளம் அறியுமே எந்தாய்.

3
3389

பொய்பிழை அனந்தம் புகல்கின்றேன் அதில்ஓர் 

புல்முனை ஆயினும் பிறர்க்கு
நைபிழை உளதேல் நவின்றிடேன் பிறர்பால் 

நண்ணிய கருணையால் பலவே
கைபிழை யாமை கருதுகின் றேன்நின் 

கழற்பதம் விழைகின்றேன் அல்லால்
செய்பிழை வேறொன் றறிகிலேன் அந்தோ 

திருவுளம் அறியுமே எந்தாய்.

4
3390

அப்பணி முடி204என் அப்பனே மன்றில் 

ஆனந்த நடம்புரி அரசே
இப்புவி தனிலே அறிவுவந் ததுதொட் 

டிந்தநாள் வரையும்என் தனக்கே
எப்பணி இட்டாய் அப்பணி அலதென் 

இச்சையால் புரிந்ததொன் றிலையே
செப்புவ தென்நான் செய்தவை எல்லாம் 

திருவுளம் அறியுமே எந்தாய்.

5
 204. அப்பணிசடை - ச. மு. க. பதிப்பு. 
3391

முன்னொடு பின்னும் நீதரு மடவார் 

முயக்கினில் பொருந்தினேன் அதுவும்
பொன்னொடு விளங்கும் சபைநடத் தரசுன் 

புணர்ப்பலால் என்புணர்ப் பலவே
என்னொடும் இருந்திங் கறிகின்ற நினக்கே 

எந்தைவே றியம்புவ தென்னோ
சொன்னெடு வானத் தரம்பையர் எனினும் 

துரும்பெனக் காண்கின்றேன் தனித்தே.

6
3392

இன்னுமிங் கெனைநீ மடந்தையர் முயக்கில் 

எய்துவித் திடுதியேல் அதுவுன்
தன்னுளப் புணர்ப்பிங் கெனக்கொரு சிறிதும் 

சம்மதம் அன்றுநான் இதனைப்
பன்னுவ தென்னே இதில்அரு வருப்புப் 

பால்உணும் காலையே உளதால்
மன்னும்அம் பலத்தே நடம்புரி வோய்என் 

மதிப்பெலாம் திருவடி மலர்க்கே.

7
3393

அறிவிலாச் சிறிய பருவத்திற் றானே 

அருந்தலில் எனக்குள வெறுப்பைப்
பிறிவிலா தென்னுட் கலந்ததீ அறிதி 

இன்றுநான் பேசுவ தென்னே
செறிவிலாக் கடையேன் என்னினும் அடியேன் 

திருவருள் அமுதமே விழைந்தேன்
எறிவிலாச் சுவைவே றெவற்றினும் விழைவோர் 

எட்டுணை யேனும்இன் றெந்தாய்.

8
3394

இன்சுவை உணவு பலபல எனக்கிங் 

கெந்தைநீ கொடுப்பிக்கச் சிறியேன்
நின்சுவை உணவென் றுண்கின்றேன் இன்னும் 

நீதரு வித்திடில் அதுநின்
தன்சுதந் தரம்இங் கெனக்கதில் இறையும் 

சம்மதம் இல்லைநான் தானே
என்சுதந் தரத்தில் தேடுவேன் அல்லேன் 

தேடிய தும்இலை ஈண்டே.

9
3395

செறிவதில் மனத்தேன் காசிலே ஆசை 

செய்திலேன் இந்தநாள் அன்றி
அறிவதில் லாத சிறுபரு வத்தும் 

அடுத்தவர் கொடுத்தகா சவர்மேல்
எறிவதும் மேட்டில் எறிந்ததும் எனக்குள் 

இருக்கின்ற நீ அறிந் ததுவே
பிறிவதில் லாநின் அருட்பெரும் பொருளைப் 

பெற்றனன் பேசுவ தென்னே.

10
3396

பணத்திலே சிறிதும் ஆசைஒன் றிலைநான் 

படைத்தஅப் பணங்களைப் பலகால்
கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன் 

கேணியில் எறிந்தனன் எந்தாய்
குணத்திலே நீதான் கொடுக்கின்ற பொருளை 

எறிகலேன் கொடுக்கின்றேன் பிறர்க்கே
கணத்திலே எல்லாம் காட்டும்நின் அருளைக் 

கண்டனன் இனிச்சொல்வ தென்னே.

11
3397

கிளைத்தஇவ் வுடம்பில் ஆசைஎள் ளளவும் 

கிளைத்திலேன் பசிஅற உணவு
திளைத்திடுந் தோறும் வெறுப்பொடும் உண்டேன் 

இன்றுமே வெறுப்பில்உண் கின்றேன்
தளைத்திடு முடைஊன் உடம்பொரு சிறிதும் 

தடித்திட நினைத்திலேன் இன்றும்
இளைத்திட விழைகின் றேன்இது நான்தான் 

இயம்பல்என் நீஅறிந் ததுவே.

12
3398

இவ்வுல கதிலே இறைஅர சாட்சி 

இன்பத்தும் மற்றைஇன் பத்தும்
எவ்வள வெனினும் இச்சைஒன் றறியேன் 

எண்ணுதோ றருவருக் கின்றேன்
அவ்வுலக கதிலே இந்திரர் பிரமர் 

அரிமுத லோர்அடை கின்ற
கவ்வைஇன் பத்தும் ஆசைசற் றறியேன் 

எந்தைஎன் கருத்தறிந் ததுவே.

13
3399

சரியைஓர் நான்கும் கிரியைஓர் நான்கும் 

சாற்றிடும் யோகமோர் நான்கும்
புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது 

புந்தியில் ஆசைசற் றறியேன்
பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை 

பெற்றிலேன் முத்திபெற் றிடவும்
உறியதோர் இச்சை எனக்கிலை என்றன்

உள்ளம்நீ அறிந்ததே எந்தாய்.

14
3400

இறக்கவும் ஆசை இல்லைஇப் படிநான் 

இருக்கவும் ஆசைஇன் றினிநான்
பிறக்கவும் ஆசை இலைஉல கெல்லாம் 

பெரியவர் பெரியவர் எனவே
சிறக்கவும் ஆசை இலைவிசித் திரங்கள் 

செய்யவும் ஆசைஒன் றில்லை
துறக்கவும் ஆசை இலைதுயர் அடைந்து 

தூங்கவும் ஆசைஒன் றிலையே.

15
3401

சற்சபைக் குரியார் தம்மொடும் கூடித் 

தனித்தபே ரன்புமெய் அறிவும்
நற்சபைக் குரிய ஒழுக்கமும் அழியா 

நல்லமெய் வாழ்க்கையும் பெற்றே
சிற்சபை நடமும் பொற்சபை நடமும் 

தினந்தொறும் பாடிநின் றாடித்
தெற்சபை உலகத் துயிர்க்கெலாம் இன்பம் 

செய்வதென் இச்சையாம் எந்தாய்.

16
3402

உருமலி உலகில் உன்னைநான் கலந்தே 

ஊழிதோ றூழியும் பிரியா
தொருமையுற் றழியாப் பெருமைபெற் றடியேன் 

உன்னையே பாடி நின்றாடி
இருநிலத் தோங்கிக் களிக்கவும் பிறருக் 

கிடுக்கணுற் றால்அவை தவிர்த்தே
திருமணிப் பொதுவில் அன்புடை யவராச் 

செய்யவும் இச்சைகாண் எந்தாய்.

17
3403

எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனவே 

எண்ணிநல் இன்புறச் செயவும்
அவ்வுயிர் களுக்கு வரும்இடை யூற்றை 

அகற்றியே அச்சநீக் கிடவும்
செவ்வையுற் றுனது திருப்பதம் பாடிச் 

சிவசிவ என்றுகூத் தாடி
ஒவ்வுறு களிப்பால் அழிவுறா திங்கே 

ஓங்கவும் இச்சைகாண் எந்தாய்.

18
3404

உலகறி வெனக்கிங் குற்றநாள் தொடங்கி 

உன்அறி வடையும்நாள் வரையில்
இலகிஎன் னோடு பழகியும் எனைத்தான் 

எண்ணியும் நண்ணியும் பின்னர்
விலகிய மாந்தர் அனைவரும் இங்கே 

மெய்யுறக் கூடிநின் றுனையே
அலகில்பே ரன்பில் போற்றிவாழ்ந் திடவும் 

அடியனேற் கிச்சைகாண் எந்தாய்.

19
3405

திருவளர் திருச்சிற் றம்பலம் ஓங்கும் 

சிதம்பரம் எனும்பெருங் கோயில்
உருவளர் மறையும் ஆகமக் கலையும் 

உரைத்தவா றியல்பெறப் புதுக்கி
மருவளர் மலரின் விளக்கிநின் மேனி 

வண்ணங்கண் டுளங்களித் திடவும்
கருவளர் உலகில் திருவிழாக் காட்சி 

காணவும் இச்சைகாண் எந்தாய்.

20
3406

தங்கமே அனையார் கூடிய ஞான 

சமரச சுத்தசன் மார்க்கச்
சங்கமே கண்டு களிக்கவும் சங்கம் 

சார்திருக் கோயில்கண் டிடவும்205
துங்கமே பெறுஞ்சற் சங்கம்நீ டூழி 

துலங்கவும் சங்கத்தில் அடியேன்
அங்கமே குளிர நின்றனைப் பாடி 

ஆடவும் இச்சைகாண் எந்தாய்.

21
 205. சங்கம் சார்திருக்கோயில் - வடலூர் ஞானசபை. ச . மு. க. 
3407

கருணையே வடிவாய்ப் பிறர்களுக் கடுத்த 

கடுந்துயர் அச்சமா திகளைத்
தருணநின் அருளால் தவிர்த்தவர்க் கின்பம் 

தரவும்வன் புலைகொலை இரண்டும்
ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க 

உஞற்றவும் அம்பலந் தனிலே
மருவிய புகழை வழுத்தவும் நின்னை 

வாழ்த்தவும் இச்சைகாண்எந்தாய்.

22
3408

மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் 

வருத்தத்தை ஒருசிறி தெனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் 

கணமும்நான் சகித்திடமாட்டேன்
எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் 

இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்
நண்ணும்அவ் வருத்தம் தவிர்க்கும்நல் வரந்தான் 

நல்குதல் எனக்கிச்சை எந்தாய்.

23
3409

இவையலால் பிறிதோர் விடயத்தில் இச்சை 

எனக்கிலை இவைஎலாம் என்னுள்
சிவையொடும் அமர்ந்த பெருந்தயா நிதிநின் 

திருவுளத் தறிந்தது தானே
தவம்இலேன் எனினும் இச்சையின் படிநீ 

தருதலே வேண்டும்இவ் விச்சை
நவைஇலா இச்சை எனஅறி விக்க 

அறிந்தனன் நவின்றனன் எந்தாய்.

24


திருச்சிற்றம்பலம்


13. பிள்ளைப் பெரு விண்ணப்பம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3410

தனிப்பெருஞ் சோதித் தலைவனே எனது 

தந்தையே திருச்சிற்றம் பலத்தே
கனிப்பெருங் கருணைக் கடவுளே அடியேன்

கருதிநின் றுரைக்கும்விண் ணப்பம்
இனிப்புறும் நினது திருவுளத் தடைத்தே 

எனக்கருள் புரிகநீ விரைந்தே
இனிச்சிறு பொழுதும் தரித்திடேன் உன்றன் 

இணைமலர்ப் பொன்னடி ஆணை.

1
3411

திரிபிலாப் பொருளே திருச்சிற்றம் பலத்தே 

திகழ்கின்ற தெய்வமே அன்பர்
பரிவுறுந் தோறும் விரைந்துவந் தருளும் 

பண்பனே பரையிடப் பாகா
பெரியபொற் சபையில் நடம்புரி கின்ற 

பேரருட் சோதியே எனக்கே
உரியநல் தந்தை வள்ளலே அடியேன் 

உரைக்கின்றேன் கேட்டருள் இதுவே.

2
3412

தானலா திறையும் உயிர்க்கசை வில்லாத் 

தலைவனே திருச்சிற்றம் பலத்தே
வானலால் வேறொன் றிலைஎன உரைப்ப 

வயங்கிய மெய்யின்ப வாழ்வே
ஊனலால் உயிரும் உளமும்உள் உணர்வும் 

உவப்புற இனிக்குந்தெள் ளமுதே
ஞானநா டகஞ்செய் தந்தையே அடியேன் 

நவில்கின்றேன் கேட்டருள் இதுவே.

3
3413

என்னுயிர்க் குயிராம் தெய்வமே என்னை 

எழுமையும் காத்தருள் இறைவா
என்னுளத் தினிக்கும் தீஞ்சுவைக் கனியே 

எனக்கறி வுணர்த்திய குருவே
என்னுடை அன்பே திருச்சிற்றம் பலத்தே 

எனக்கருள் புரிந்தமெய் இன்பே
என்னைஈன் றெடுத்த தந்தையே அடியேன் 

இசைக்கின்றேன் கேட்கஇம் மொழியே.

4
3414

கருணையார் அமுதே என்னுயிர்க் குயிரே 

கனிந்தசிற் றம்பலக் கனியே
வருணமா மறையின் மெய்ப்பொருள் ஆகி 

வயங்கிய வள்ளலே அன்பர்
தெருள்நிறை உளத்தே திகழ்தனித் தலைமைத் 

தெய்வமே திருவருட் சிவமே
தருணம்என் ஒருமைத் தந்தையே தாயே 

தரித்தருள் திருச்செவிக் கிதுவே.

5
3415

என்னைஆண் டருளி என்பிழை பொறுத்த 

இறைவனே திருச்சிற்றம் பலத்தே
என்னைஆண் டஞ்சேல் உனக்குநல் அருளிங் 

கீகுதும் என்றஎன் குருவே
என்னைவே றெண்ணா துள்ளதே உணர்த்தி 

எனக்குளே விளங்குபே ரொளியே
என்னைஈன் றளித்த தந்தையே விரைந்திங் 

கேற்றருள் திருச்செவிக் கிதுவே.

6
3416

இரும்புநேர் மனத்தேன் பிழையெலாம் பொறுத்தென் 

இதயத்தில் எழுந்திருந் தருளி
விரும்புமெய்ப் பொருளாம் தன்னியல் எனக்கு 

விளங்கிட விளக்கியுட் கலந்தே
கரும்புமுக் கனிபால் அமுதொடு செழுந்தேன் 

கலந்தென இனிக்கின்றோய் பொதுவில்
அரும்பெருஞ் சோதி அப்பனே உளத்தே 

அடைத்தருள் என்மொழி இதுவே.

7
3417

மலத்திலே கிடந்தேன் தனையெடுத் தருளி 

மன்னிய வடிவளித் தறிஞர்
குலத்திலே பயிலுந் தரமுமிங் கெனக்குக் 

கொடுத்துளே விளங்குசற் குருவே
பலத்திலே சிற்றம் பலத்திலே பொன்னம் 

பலத்திலே அன்பர்தம் அறிவாம்
தலத்திலே ஓங்கும் தலைவனே எனது 

தந்தையே கேட்கஎன் மொழியே.

8
3418

விண்டபோ தகரும் அறிவரும் பொருளே 

மெய்யனே ஐயனே உலகில்
தொண்டனேன் தன்னை அடுத்தவர் நேயர் 

சூழ்ந்தவர் உறவினர் தாயர்
கொண்டுடன் பிறந்தோர் அயலவர் எனும்இக் 

குறிப்பினர் முகங்களில் இளைப்பைக்
கண்டபோ தெல்லாம் மயங்கிஎன் னுள்ளம் 

கலங்கிய கலக்கம்நீ அறிவாய்.

9
3419

சீர்த்தசிற் சபைஎன் அப்பனே எனது 

தெய்வமே என்பெருஞ் சிறப்பே
ஆர்த்தஇவ் வுலகில் அம்மையர் துணைவர் 

அடுத்தவர் உறவினர் நேயர்
வேர்த்தமற் றயலார் பசியினால் பிணியால் 

மெய்யுளம் வெதும்பிய வெதுப்பைப்
பார்த்தபோ தெல்லாம் பயந்தென துள்ளம் 

பதைத்ததுன் உளம்அறி யாதோ.

10
3420

பரைத்தனி வெளியில் நடம்புரிந் தருளும் 

பரமனே அரும்பெரும் பொருளே
தரைத்தலத் தியன்ற வாழ்க்கையில் வறுமைச் 

சங்கடப் பாவியால் வருந்தி
நரைத்தவர் இளைஞர் முதலினோர் எனையோர் 

நண்பன்என் றவரவர் குறைகள்
உரைத்தபோ தெல்லாம் நடுங்கிஎன் னுள்ளம் 

உடைந்ததுன் உளம்அறி யாதோ.

11
3421

அன்னையே அப்பா திருச்சிற்றம் பலத்தென் 

ஐயனே இவ்வுல கதிலே
பொன்னையே உடையார் வறியவர் மடவார் 

புகலும்ஆ டவர்இவர் களுக்குள்
தன்னையே அறியாப் பிணியினால் ஆவி 

தளர்கின்றார் தருணம்ஈ தெனவே
சொன்னபோ தெல்லாம் பயந்துநான் அடைந்த 

சோபத்தை நீஅறி யாயோ.

12
3422

உண்டதோ றெல்லாம் அமுதென இனிக்கும் 

ஒருவனே சிற்சபை உடையாய்
விண்டபே ருலகில் அம்மஇவ் வீதி 

மேவும்ஓர் அகத்திலே ஒருவர்
ஒண்டுயிர் மடிந்தார் அலறுகின் றார்என் 

றொருவரோ டொருவர்தாம் பேசிக்
கொண்டபோ தெல்லாம் கேட்டென துள்ளம் 

குலைநடுங் கியதறிந் திலையோ.

13
3423

காவிநேர் கண்ணாள் பங்கனே206 தலைமைக் 

கடவுளே சிற்சபை தனிலே
மேவிய ஒளியே இவ்வுல கதில்ஊர் 

வீதிஆ திகளிலே மனிதர்
ஆவிபோ னதுகொண் டுறவினர் அழுத 

அழுகுரல் கேட்டபோ தெல்லாம்
பாவியேன் உள்ளம் பகீர்என நடுங்கிப் 

பதைத்ததுன் உளம்அறி யாதோ.

14
 206. காவியல் கருணை வடிவனே - முதற் பதிப்பு, பொ. சு. பதிப்பு. 
3424

நாதனே என்னை நம்பிய மாந்தர் 

ஞாலத்தில் பிணிபல அடைந்தே
ஏதநேர்ந் திடக்கண் டையகோ அடியேன் 

எய்திய சோபமும் இளைப்பும்
ஓதநேர் உள்ள நடுக்கமும் திகைப்பும் 

உற்றபேர் ஏக்கமா திகளும்
தீதனேன் இன்று நினைத்திட உள்ளம் 

திடுக்கிடல் நீஅறிந் திலையோ.

15
3425

கற்றவர் உளத்தே கரும்பினில் இனிக்கும் 

கண்ணுதற் கடவுளே என்னைப்
பெற்றதாய் நேயர் உறவினர் துணைவர் 

பெருகிய பழக்கமிக் குடையோர்
மற்றவர் இங்கே தனித்தனி பிரிந்து 

மறைந்திட்ட தோறும்அப் பிரிவை
உற்றுநான் நினைக்குந் தோறும்உள் நடுங்கி 

உடைந்தனன் உடைகின்றேன் எந்தாய்.

16
3426

என்றும்நா டுறுவோர்க் கின்பமே புரியும் 

எந்தையே என்றனைச் சூழ்ந்தே
நன்றுநா டியநல் லோர்உயிர்ப் பிரிவை 

நாயினேன் கண்டுகேட் டுற்ற
அன்றுநான் அடைந்த நடுக்கமுந் துயரும் 

அளவிலை அளவிலை அறிவாய்
இன்றவர் பிரிவை நினைத்திடுந் தோறும் 

எய்திடும் துயரும்நீ அறிவாய்.

17
3427

நிலைபுரிந் தருளும் நித்தனே உலகில் 

நெறியலா நெறிகளில் சென்றே
கொலைபுரிந் திட்ட கொடியவர் இவர்என் 

றயலவர் குறித்தபோ தெல்லாம்
உலைபுரிந் திடுவெந் தீவயிற் றுள்ளே 

உற்றென நடுநடுக் குற்றே
துலைபுரிந்207 தோடிக் கண்களை மூடித் 

துயர்ந்ததும் நீஅறிந் ததுவே.

18
 207. தொலைபுரிந்து ஖ முதற்பதிப்பு, பொ.சு, ச.மு.க. 
3428

ஓர்ந்தஉள் ளகத்தே நிறைந்தொளிர் கின்ற 

ஒருவனே உலகியல் அதிலே
மாந்தர்கள் இறப்பைக் குறித்திடும் பறையின் 

வல்லொலி கேட்டபோ தெல்லாம்
காந்திஎன் உள்ளம் கலங்கிய கலக்கம் 

கடவுள்நீ யேஅறிந் திடுவாய்
ஏந்தும்இவ் வுலகில் இறப்பெனில் எந்தாய் 

என்னுளம் நடுங்குவ தியல்பே.

19
3429

மறைமுடி வயங்கும் ஒருதனித் தலைமை 

வள்ளலே உலகர சாள்வோர்
உறைமுடி208 வாள்கொண் டொருவரை ஒருவர் 

உயிரறச் செய்தனர் எனவே
தறையுறச் சிறியேன் கேட்டபோ தெல்லாம் 

தளர்ந்துள நடுங்கிநின் றயர்ந்தேன்
இறையும்இவ் வுலகில் கொலைஎனில் எந்தாய் 

என்னுளம் நடுங்குவ தியல்பே.

20
 208. உறைஉறு - முதற்பதிப்பு, பொ.சு., ச. மு. க. 
3430

தாய்மொழி குறித்தே கணக்கிலே மற்றோர் 

தாய்க்குநால் என்பதை இரண்டாய்
வாய்மொழி வஞ்சம் புகன்றனன் வரைந்தேன் 

நடுங்கினேன் நினைத்ததை மனத்தே
தூய்மொழி நேயர் நம்பினோர் இல்லில் 

சூழ்ந்தனன் நினைத்தது துயர்ந்தேன்
காய்மொழி புகன்றேன் பொய்மொழி புகன்றேன்

கலங்கினேன் அதுநினைத் தெந்தாய்.

21
3431

எட்டரும் பொருளே திருச்சிற்றம் பலத்தே 

இலகிய இறைவனே உலகில்
பட்டினி உற்றோர் பசித்தனர் களையால் 

பரதவிக் கின்றனர் என்றே
ஒட்டிய பிறரால் கேட்டபோ தெல்லாம் 

உளம்பகீர் எனநடுக் குற்றேன்
இட்டஇவ் வுலகில் பசிஎனில் எந்தாய் 

என்னுளம் நடுங்குவ தியல்பே.

22
3432

பல்லிகள் பலவா யிடத்தும்உச் சியினும் 

பகரும்நேர் முதற்பல வயினும்
சொல்லிய தோறும் பிறர்துயர் கேட்கச் 

சொல்கின் றவோஎனச் சூழ்ந்தே
மெல்லிய மனம்நொந் திளைத்தனன் கூகை 

வெங்குரல் செயுந்தொறும் எந்தாய்209
வல்லியக் குரல்கேட் டயர்பசுப் போல 

வருந்தினேன் எந்தைநீ அறிவாய்.

23
 209. எந்தாய் கூகை வெங்குரல் செயுந்தோறும் - முதற்பதிப்பு, பொ.சு.,பி. இரா. 
3433

காக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின் 

கடுங்குரல் கேட்டுளங் குலைந்தேன்
தாக்கிய ஆந்தை குரல்செயப் பயந்தேன் 

சாக்குரல் பறவையால் தளர்ந்தேன்
வீக்கிய வேறு கொடுஞ்சகு னஞ்செய் 

வீக்களால் மயங்கினேன் விடத்தில்210
ஊக்கிய பாம்பைக் கண்டபோ துள்ளம் 

ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய்.

24
 210. விடத்தின் - ச. மு. க. 
3434

வேறுபல் விடஞ்செய் உயிர்களைக் கண்டு 

வெருவினேன் வெய்யநாய்க் குழுவின்
சீறிய குரலோ டழுகுரல் கேட்டுத் 

தியங்கினேன் மற்றைவெஞ் சகுனக்
கூறதாம் விலங்கு பறவைஊர் வனவெங் 

கோள்செயும்211 ஆடவர் மடவார்
ஊறுசெய் கொடுஞ்சொல் இவைக்கெலாம் உள்ளம் 

உயங்கினேன் மயங்கினேன் எந்தாய்.

25
 211. செறும் - பி. இரா. பதிப்பு. 
3435

நிறமுறு விழிக்கீழ்ப் புறத்தொடு தோளும் 

நிறைஉடம் பிற்சில உறுப்பும்
உறவுதோல் தடித்துத் துடித்திடுந் தோறும் 

உன்னிமற் றவைகளை அந்தோ
பிறர்துயர் காட்டத் துடித்தவோ என்று 

பேதுற்று மயங்கிநெஞ் சுடைந்தேன்
நறுவிய துகிலில் கறைஉறக் கண்டே 

நடுங்கினேன் எந்தைநீ அறிவாய்.

26
3436

மங்கையர் எனைத்தாம் வலிந்துறுந் தோறும் 

மயங்கிநாம் இவரொடு முயங்கி
இங்குளங் களித்தால் களித்தவர்க் குடனே 

இன்னல்உற் றிடும்நமக் கின்னல்
தங்கிய பிறர்தம் துயர்தனைக்212 காண்டல் 

ஆகும்அத் துயருறத் தரியேம்
பங்கமீ தெனவே எண்ணிநான் உள்ளம் 

பயந்ததும் எந்தைநீ அறிவாய்.

27
 212. துயர்களை - ச. மு. க. 
3437

வலிந்தெனை அழைக்கும் மடந்தையர் தெருவில் 

மறைந்துவந் தடுத்தபின் நினைந்தே
மலிந்திவர் காணில் விடுவர்அன் றிவரால் 

மயங்கிஉள் மகிழ்ந்தனம் எனிலோ
நலிந்திடு பிறர்தந் துயர்தனைக் கண்டே 

நடுங்குற வரும்எனப் பயந்தே
மெலிந்துடன் ஒளித்து வீதிவே றொன்றின் 

மேவினேன் எந்தைநீ அறிவாய்.

28
3438

களிப்புறு சுகமாம் உணவினைக் கண்ட 

காலத்தும் உண்டகா லத்தும்
நெளிப்புறு மனத்தோ டஞ்சினேன் எனைத்தான் 

நேர்ந்தபல் சுபங்களில் நேயர்
அளிப்புறு விருந்துண் டமர்கஎன் றழைக்க 

அவர்களுக் கன்பினோ டாங்கே
ஒளிப்புறு வார்த்தை உரைத்தயல் ஒளித்தே 

பயத்தொடும் உற்றனன் எந்தாய்.

29
3439

இன்புறும் உணவு கொண்டபோ தெல்லாம் 

இச்சுகத் தால்இனி யாது
துன்புறுங் கொல்லோ என்றுளம் நடுங்கிச் 

சூழ்வெறு வயிற்றொடும் இருந்தேன்
அன்பிலே அன்பர் கொடுத்தவை எல்லாம்

ஐயகோ213 தெய்வமே இவற்றால்
வன்புறச் செய்யேல் என்றுளம் பயந்து 

வாங்கியுண் டிருந்தனன் எந்தாய்.

30
 213. ஐயவோ - படிவேறுபாடு. ஆ. பா. 
3440

உற்றதா ரணியில் எனக்குல குணர்ச்சி 

உற்றநாள் முதல்ஒரு சிலநாள்
பெற்றதாய் வாட்டம் பார்ப்பதற் கஞ்சிப் 

பேருண வுண்டனன் சிலநாள்
உற்றவர் நேயர் அன்புளார் வாட்டம் 

உறுவதற் கஞ்சினேன் உண்டேன்
மற்றிவை அல்லால் சுகஉணாக் கொள்ள 

மனநடுங் கியதுநீ அறிவாய்.

31
3441

தொழுந்தகை உடைய சோதியே அடியேன் 

சோம்பலால் வருந்திய தோறும்
அழுந்தஎன் உள்ளம் பயந்ததை என்னால் 

அளவிடற் கெய்துமோ பகலில்
விழுந்துறு தூக்கம் வரவது தடுத்தும் 

விட்டிடா வன்மையால் தூங்கி
எழுந்தபோ தெல்லாம் பயத்தொடும் எழுந்தேன் 

என்செய்வேன் என்செய்வேன் என்றே.

32
3442

அந்தமோ டாதி இல்லதோர் பொதுவில் 

அரும்பெருஞ் சோதியே அடியேன்
சொந்தமோ அறியேன் பகலிர வெல்லாம் 

தூக்கமே கண்டனன் தூக்கம்
வந்தபோ தெல்லாம் பயத்தொடு படுத்தேன் 

மற்றுநான் எழுந்தபோதெல்லாம்
தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம் 

தொலைவதெக் காலம்என் றெழுந்தேன்.

33
3443

உடையஅம் பலத்தில் ஒருவனே என்றன் 

உயிர்க்குயிர் ஆகிய ஒளியே
கடையன்நான் நனவில் நடுங்கிய நடுக்கம் 

கணக்கிலே சிறிதுறும் கனவில்
இடையுறு நடுக்கம் கருதவும் சொலவும் 

எண்ணவும் எழுதவும் படுமோ
நடையுறு சிறியேன் கனவுகண் டுள்ளம் 

நடுங்கிடா நாளும்ஒன் றுளதோ.

34
3444

பகலிர வடியேன் படுத்தபோ தெல்லாம் 

தூக்கமாம் பாவிவந் திடுமே
இகலுறு கனவாம் கொடியவெம் பாவி 

எய்துமே என்செய்வோம் என்றே
உகலுற உள்ளே நடுங்கிய நடுக்கம் 

உன்னுளம் அறியுமே எந்தாய்
நகலுறச் சிறியேன் கனவுகண் டுள்ளம் 

நடுங்கிடா நாளும்ஒன் றுளதோ.

35
3445

தொகுப்புறு சிறுவர் பயிலுங்கால் பயிற்றும் 

தொழிலிலே வந்தகோ பத்தில்
சகிப்பிலா மையினால் அடித்தனன் அடித்த 

தருணம்நான் கலங்கிய கலக்கம்
வகுப்புற நினது திருவுளம் அறியும் 

மற்றுஞ்சில் உயிர்களில் கோபம்
மிகப்புகுந் தடித்துப் பட்டபா டெல்லாம் 

மெய்யநீ அறிந்ததே அன்றோ.

36
3446

ஒடித்தஇவ் வுலகில் சிறுவர்பால் சிறிய 

உயிர்கள்பால் தீமைகண் டாங்கே
அடித்திடற் கஞ்சி உளைந்தனன் என்னால் 

ஆற்றிடாக் காலத்தில் சிறிதே
பொடித்துநான் பயந்த பயமெலாம் உனது 

புந்தியில் அறிந்ததே எந்தாய்
வெடித்தவெஞ் சினம்என் உளமுறக் கண்டே 

வெதும்பிய நடுக்கம்நீ214 அறிவாய்.

37
 214. நடுக்கமும் - படிவேறுபாடு. ஆ. பா. 
3447

கோபமே வருமோ காமமே வருமோ 

கொடியமோ கங்களே வருமோ
சாபமே அனைய தடைமதம் வருமோ 

தாமதப் பாவிவந் திடுமோ
பாபமே புரியும் லோபமே வருமோ 

பயனில்மாற் சரியம்வந் திடுமோ
தாபஆங் கார மேஉறு மோஎன் 

றையநான் தளர்ந்ததும் அறிவாய்.

38
3448

காமமா மதமாங் காரமா திகள்என் 

கருத்தினில் உற்றபோ தெல்லாம்
நாமம்ஆர் உளத்தோ டையவோ நான்தான் 

நடுங்கிய நடுக்கம்நீ அறிவாய்
சேமமார் உலகில் காமமா திகளைச் 

செறிந்தவர் தங்களைக் கண்டே
ஆமைபோல் ஒடுங்கி அடங்கினேன் அதுவும் 

ஐயநின் திருவுளம் அறியும்.

39
3449

கருத்துவே றாகிக் கோயிலில் புகுந்துன் 

காட்சியைக் கண்டபோ தெல்லாம்
வருத்தமே அடைந்தேன் பயத்தொடும் திரும்பி 

வந்துநொந் திளைத்தனன் எந்தாய்
நிருத்தனே நின்னைத் துதித்தபோ தெல்லாம் 

நெகிழ்ச்சிஇல் லாமையால் நடுங்கிப்
பருத்தஎன் உடம்பைப் பார்த்திடா தஞ்சிப் 

படுத்ததும் ஐயநீ அறிவாய்.

40
3450

புன்புலால் உடம்பின் அசுத்தமும் இதனில் 

புகுந்துநான் இருக்கின்ற புணர்ப்பும்
என்பொலா மணியே எண்ணிநான் எண்ணி 

ஏங்கிய ஏக்கம்நீ அறிவாய்
வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு 

மயங்கிஉள் நடுங்கிஆற் றாமல்
என்பெலாம் கருக இளைத்தனன் அந்த 

இளைப்பையும் ஐயநீ அறிவாய்.

41
3451

இந்தவிர் சடைஎம் இறைவனே என்னோ 

டியல்கலைத் தருக்கஞ்செய் திடவே
வந்தவர் தம்மைக் கண்டபோ தெல்லாம் 

மனம்மிக நடுங்கினேன் அறிவாய்
சந்தியுற் றொருகால் படித்தசாத் திரத்தைத் 

தமியனேன் மீளவுங் கண்டே
நொந்ததும் உலகப் படிப்பில்என் உள்ளம் 

நொந்ததும் ஐயநீ அறிவாய்.

42
3452

முனித்தவெவ் வினையோ நின்னருட் செயலோ 

தெரிந்திலேன் மோகமே லின்றித்
தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள் 

ஒருத்தியைக் கைதொடச் சார்ந்தேன்
குனித்தமற் றவரைத் தொட்டனன் அன்றிக் 

கலப்பிலேன் மற்றிது குறித்தே
பனித்தனன் நினைத்த தோறும்உள் உடைந்தேன் 

பகர்வதென் எந்தைநீ அறிவாய்.

43
3453

பதியனே பொதுவில் பரமநா டகஞ்செய் 

பண்பனே நண்பனே உலகில்
ஒதியனேன் பிறர்பால் உரத்தவார்த் தைகளால் 

ஒருசில வாதங்கள் புரிந்தே
மதியிலா மையினால் அகங்கரித் ததன்பின் 

வள்ளல்உன் அருளினால் அறிந்தே
விதியைநான் நொந்து நடுங்கிய தெல்லாம் 

மெய்யனே நீஅறிந் ததுவே.

44
3454

அருளினை அளிக்கும் அப்பனே உலகில் 

அன்புளார் வலிந்தெனக் கீந்த
பொருளினை வாங்கிப் போனபோ தெல்லாம் 

புழுங்கிய புழுக்கம்நீ அறிவாய்
மருளும்அப் பொருளைச் சாலகத் தெறிந்து 

மனமிக இளைத்ததும் பொருளால்
இருளுரும் எனநான் உளம்நடுங் கியதும் 

எந்தைநின் திருவுளம் அறியும்.

45
3455

பொருளிலே உலகம் இருப்பதா தலினால் 

புரிந்துநாம் ஒருவர்பால் பலகால்
மருவினால் பொருளின் இச்சையால் பலகால் 

மருவுகின் றான்எனக் கருதி
வெருவுவர் எனநான் அஞ்சிஎவ் விடத்தும் 

மேவிலேன் எந்தைநீ அறிவாய்
ஒருவும்அப் பொருளை நினைத்தபோ தெல்லாம்

உவட்டினேன் இதுவும்நீ அறிவாய்.

46
3456

தகைத்தபே ருலகில் ஐயனே அடியேன் 

தடித்தஉள் ளத்தொடு களித்தே
நகைத்தபோ தெல்லாம் நடுங்கினேன் இங்கே 

நல்லவா கனங்களில் ஏறி
உகைத்தபோ தெல்லாம் நடுங்கினேன் விரைந்தே 

ஓட்டிய போதெலாம் பயந்தேன்
பகைத்தபோ தயலார் பகைகளுக் கஞ்சிப் 

பதுங்கினேன் ஒதுங்கினேன் எந்தாய்.

47
3457

சகப்புற வாழ்வைப் பார்த்திடில் கேட்கில் 

சஞ்சலம் உறும்எனப் பயந்தே
நகர்புறத் திருக்குந் தோட்டங்கள் தோறும் 

நண்ணியும் பிறவிடத் தலைந்தும்
பகற்பொழு தெல்லாம் நாடொறுங் கழித்தேன் 

பகலன்றி இரவும்அப் படியே
மிகப்பல விடத்தும் திரிந்தனன் அடியேன் 

விளம்பலென் நீஅறிந் ததுவே.

48
3458

உருவுள மடவார் தங்களை நான்கண் 

ணுற்றபோ துளநடுக் குற்றேன்
ஒருவுளத் தவரே வலிந்திட வேறோர் 

உவளகத் தொளித்தயல் இருந்தேன்
கருவுளச் சண்டைக் கூக்குரல் கேட்ட 

காலத்தில் நான்உற்ற கலக்கம்
திருவுளம் அறியும் உரத்தசொல் எனது 

செவிபுகில் கனல்புகு வதுவே.

49
3459

பண்ணிகா ரங்கள் பொசித்தஅப் போதும் 

பராக்கிலே செலுத்திய போதும்
எண்ணிய மடவார் தங்களை விழைந்தே 

இசைந்தனு பவித்தஅப் போதும்
நண்ணிய தயிலம் முழுக்குற்ற போதும் 

நவின்றசங் கீதமும் நடமும்
கண்ணுறக் கண்டு கேட்டஅப் போதும் 

கலங்கிய கலக்கம்நீ அறிவாய்.

50
3460

நயந்தபொற் சரிகைத் துகில்எனக் கெனது 

நண்பினர் உடுத்திய போது
பயந்தஅப் பயத்தை அறிந்தவர் எல்லாம் 

பயந்தனர் வெய்யிலிற் கவிகை
வியந்துமேற் பிடித்த போதெலாம் உள்ளம் 

வெருவினேன் கைத்துகில் வீசி
அயந்தரு தெருவில் நடப்பதற் கஞ்சி 

அரைக்குமேல் வீக்கினன் எந்தாய்.

51
3461

கையுற வீசி நடப்பதை நாணிக் 

கைகளைக் கட்டியே நடந்தேன்
மெய்யுறக் காட்ட வெருவிவெண் துகிலால் 

மெய்எலாம் ஐயகோ215 மறைத்தேன்
வையமேல் பிறர்தங் கோலமும் நடையும் 

வண்ணமும் அண்ணலே சிறிதும்
பையநான் ஊன்றிப் பார்த்ததே இல்லைப் 

பார்ப்பனேல் பயமிகப் படைப்பேன்.

52
 215. ஐயவோ - படிவேறுபாடு. ஆ. பா 
3462

வைகிய நகரில் எழிலுடை மடவார் 

வலிந்தெனைக் கைபிடித் திழுத்தும்
சைகைவே றுரைத்தும் சரசவார்த் தைகளால் 

தனித்தெனைப் பலவிசை அறிந்தும்
பொய்கரைந் தாணை புகன்றுமேல் விழுந்தும் 

பொருள்முத லியகொடுத் திசைத்தும்
கைகலப் பறியேன் நடுங்கினேன் அவரைக் 

கடிந்ததும் இல்லைநீ அறிவாய்.

53
3463

எளியரை வலியார் அடித்தபோ தையோ 

என்மனம் கலங்கிய கலக்கம்
தெளியநான் உரைக்க வல்லவன் அல்லேன் 

திருவுளம் அறியுமே எந்தாய்216
களியரைக் கண்டு பயந்தஎன் பயந்தான் 

கடலினும் பெரியது கண்டாய்
அளியர்பால் கொடியர் செய்தவெங் கொடுமை 

அறிந்தஎன் நடுக்கம்ஆர் அறிவார்.

54
 216. அறியும் எந்தாயே - பி. இரா. பதிப்பு. 
3464

இரவிலே பிறர்தம் இடத்திலே இருந்த 

இருப்பெலாம் கள்ளர்கள் கூடிக்
கரவிலே கவர்ந்தார் கொள்ளைஎன் றெனது 

காதிலே விழுந்தபோ தெல்லாம்
விரவிலே217 நெருப்பை மெய்யிலே மூட்டி 

வெதுப்பல்போல் வெதும்பினேன் எந்தாய்
உரவிலே ஒருவர் திடுக்கென வரக்கண் 

டுளம்நடுக் குற்றனன் பலகால்.

55
 217. விரைவிலே - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா. பதிப்பு. 
3465

உரத்தொரு வருக்கங் கொருவர் பேசியபோ 

துள்ளகம் நடுங்கினேன் பலகால்
கரத்தினால் உரத்துக் கதவுதட் டியபோ 

தையவோ கலங்கினேன் கருத்தில்
புரத்திலே அம்மா அப்பனே ஐயோ 

எனப்பிறர் புகன்றசொல் புகுந்தே
தரத்தில்என் உளத்தைக் கலக்கிய கலக்கம் 

தந்தைநீ அறிந்தது தானே.

56
3466

மண்ணினீள் நடையில் வந்தவெந் துயரை 

மதித்துளம் வருந்திய பிறர்தம்
கண்ணினீர் விடக்கண் டையவோ நானும் 

கண்ணினீர் விட்டுளங் கவன்றேன்
நண்ணிநின் றொருவர் அசப்பிலே218 என்னை 

அழைத்தபோ தடியனேன் எண்ணா
தெண்ணியா துற்ற தோஎனக் கலங்கி 

ஏன்எனல் மறந்தனன் எந்தாய்.

57
 218. அசைப்பிலே - படிவேறுபாடு. ஆ. பா. 
3467

தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால் 

சிலுகுறும்219 என்றுளம் பயந்தே
நாட்டிலே சிறிய ஊர்ப்புறங் களிலே 

நண்ணினேன் ஊர்ப்புறம் அடுத்த
காட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய்க் 

களத்திலே திரிந்துற்ற இளைப்பை
ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள் 

எந்தைநீ அறிந்தது தானே.

58
 219. சிறுகுறும் - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு. க. பதிப்பு. 
3468

என்புடை வந்தார் தம்முகம் நோக்கி 

என்கொலோ என்கொலோ இவர்தாம்
துன்புடை யவரோ இன்புடை யவரோ 

சொல்லுவ தென்னையோ என்றே
வன்புடை மனது கலங்கிஅங் கவரை 

வாஎனல் மறந்தனன் எந்தாய்
அன்புடை220 யவரைக் கண்டபோ தெல்லாம் 

என்கொலோ என்றயர்ந் தேனே.

59
 220. இன்புடை - ச.மு க. பதிப்பு. 
3469

காணுறு பசுக்கள் கன்றுக ளாதி 

கதறிய போதெலாம் பயந்தேன்
ஏணுறு மாடு முதல்பல விருகம்221 

இளைத்தவை கண்டுளம் இளைத்தேன்
கோணுறு கோழி முதல்பல பறவை 

கூவுதல் கேட்டுளங் குலைந்தேன்
வீணுறு கொடியர் கையிலே வாளை 

திர்த்தல்கண் டென்என வெருண்டேன்.

60
 221. மிருகம் - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க., பி. இரா. பதிப்பு. 
3470

பிதிர்ந்தமண் உடம்பை மறைத்திட வலியார் 

பின்முன்நோக் காதுமேல் நோக்கி
அதிர்ந்திட நடந்த போதெலாம் பயந்தேன் 

அவர்புகன் றிட்டதீ மொழிகள்
பொதிந்திரு செவியில் புகுந்தொறும் பயந்தேன் 

புண்ணியா நின்துதி எனும்ஓர்
முதிர்ந்ததீங் கனியைக் கண்டிலேன் வேர்த்து 

முறிந்தகாய் கண்டுளம் தளர்ந்தேன்.

61
3471

வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் 

வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த 

வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் 

நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
ஈடின்மா222 னிகளாய் ஏழைக ளாய்நெஞ் 

சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.

62
 222. ஈடு - ஒப்பு, முதற் பதிப்பு. 
3472

நலிதரு சிறிய தெய்வமென் றையோ 

நாட்டிலே பலபெயர் நாட்டிப்
பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள் 

பலிக்கடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே 

புந்திநொந் துளநடுக் குற்றேன்
கலியுறு சிறிய தெய்வவெங் கோயில் 

கண்டகா லத்திலும் பயந்தேன்.

63
3473

துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத் 

தொடங்கிய போதெலாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக் 

கண்டகா லத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி 

வகைகளும் கண்டபோ தெல்லாம்
எண்ணிஎன் உள்ளம் நடுங்கிய நடுக்கம் 

எந்தைநின் திருவுளம்223 அறியும்.

64
 223. திருவருள் - முதற் பதிப்பு, பொ. சு. பதிப்பு. 
3474

நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை 

நண்ணிடா அரையரை நாளும்
கெடுநிலை நினைக்கும் சிற்றதி காரக் 

கேடரைப் பொய்யலால் கிளத்தாப்
படுநிலை யவரைப் பார்த்தபோ தெல்லாம் 

பயந்தனன் சுத்தசன் மார்க்கம்
விடுநிலை உலக நடைஎலாங் கண்டே 

வெருவினேன் வெருவினேன் எந்தாய்.

65
3475

ஓங்கிய திருச்சிற் றம்பல முடைய 

ஒருதனித் தலைவனே என்னைத்
தாங்கிய தாயே தந்தையே குருவே 

தயாநிதிக் கடவுளே நின்பால்
நீங்கிய மனத்தார் யாவரே எனினும் 

அவர்தமை நினைத்தபோ தெல்லாம்
தேங்கிய உள்ளம் பயந்தனன் அதுநின் 

திருவுளம் அறியுமே எந்தாய்.

66
3476

காட்டுயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன் 

காலின்மேல் கால்வைக்கப் பயந்தேன்
பாட்டயல் கேட்கப் பாடவும் பயந்தேன் 

பஞ்சணை படுக்கவும் பயந்தேன்
நாட்டிய உயர்ந்த திண்ணைமேல் இருந்து 

நன்குறக் களித்துக் கால்கீழே
நீட்டவும் பயந்தேன் நீட்டிப்பே சுதலை 

நினைக்கவும் பயந்தனன் எந்தாய்.

67
3477

தலைநெறி ஞான சுத்தசன் மார்க்கம் 

சார்ந்திட முயலுறா தந்தோ
கலைநெறி உலகக் கதியிலே கருத்தைக் 

கனிவுற வைத்தனர் ஆகிப்
புலைநெறி விரும்பி னார்உல குயிர்கள் 

பொதுஎனக் கண்டிரங் காது
கொலைநெறி நின்றார் தமக்குளம் பயந்தேன் 

எந்தைநான் கூறுவ தென்னே.

68
3478

இவ்வணஞ் சிறியேற் குலகியல் அறிவிங் 

கெய்திய நாளது தொடங்கி
நைவணம் இற்றைப் பகல்வரை அடைந்த 

நடுக்கமும் துன்பமும் உரைக்க
எவ்வணத் தவர்க்கும் அலகுறா224 தெனில்யான் 

இசைப்பதென் இசைத்ததே அமையும்
செவ்வணத் தருணம் இதுதலை வாநின் 

திருவுளம் அறிந்ததே எல்லாம்.

69
 224. அலகுறாது - குறைவுபடாது. முதற் பதிப்பு. 
3479

தரைத்தலத் தெனைநீ எழுமையும் பிரியாத் 

தம்பிரான் அல்லையோ மனத்தைக்
கரைத்துளே புகுந்தென் உயிரினுட் கலந்த 

கடவுள்நீ அல்லையோ எனைத்தான்
இரைத்திவ ணளித்தோர் சிற்சபை விளங்கும் 

எந்தைநீ அல்லையோ நின்பால்
உரைத்தல்என் ஒழுக்கம் ஆதலால் உரைத்தேன் 

நீஅறி யாததொன் றுண்டோ .

70
3480

கைதலத் தோங்கும் கனியின்225 என் னுள்ளே 

கனிந்தஎன் களைகண்நீ அலையோ
மெய்தலத் தகத்தும் புறத்தும்விட் டகலா 

மெய்யன்நீ அல்லையோ எனது
பைதல்தீர்த் தருளுந் தந்தைநீ அலையோ 

பரிந்துநின் திருமுன்விண் ணப்பம்
செய்தல்என் ஒழுக்கம் ஆதலால் செய்தேன் 

திருவுளம் தெரிந்ததே226 எல்லாம்.

71
 225. கனியில் - பி. இரா. பதிப்பு.
226. அறிந்ததே - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க. பதிப்பு.
 
3481

இன்னவா றடியேன் அச்சமுந் துயரும் 

எய்திநின் றிளைத்தனன் அந்தோ
துன்னஆ ணவமும் மாயையும் வினையும் 

சூழ்ந்திடும் மறைப்பும்இங் குனைத்தான்
உன்னவா சற்றே உரைக்கவா ஒட்டேம் 

என்பவால் என்செய்வேன் எனது
மன்னவா ஞான மன்றவா எல்லாம் 

வல்லவா இதுதகு மேயோ.

72
3482

எள்ளலாம் பயத்தால் துயரினால் அடைந்த 

இளைப்பெலாம் இங்குநான் ஆற்றிக்
கொள்ளவே அடுத்தேன் மாயையா திகள்என் 

கூடவே அடுத்ததென் அந்தோ
வள்ளலே எனது வாழ்முதற் பொருளே 

மன்னவா நின்னலால் அறியேன்
உள்ளல்வே றிலைஎன் உடல்பொருள்ஆவி 

உன்னதே என்னதன் றெந்தாய்.

73
3483

என்சுதந் தரம்ஓர் எட்டுணை யேனும் 

இல்லையே எந்தைஎல் லாம்உன்
தன்சுதந் தரமே அடுத்தஇத் தருணம் 

தமியனேன் தனைப்பல துயரும்
வன்சுமை மயக்கும் அச்சமும் மறைப்பும் 

மாயையும் வினையும்ஆ ணவமும்
இன்சுவைக் கனிபோல் உண்கின்ற தழகோ 

இவைக்கெலாம் நான்இலக் கலவே.

74
3484

அறிவொரு சிறிதிங் கறிந்தநாள் முதல்என் 

அப்பனே நினைமறந் தறியேன்
செறிவிலாச் சிறிய பருவத்தும் வேறு 

சிந்தைசெய் தறிந்திலேன் உலகில்
பிறிதொரு பிழையுஞ் செய்திலேன் அந்தோ 

பிழைத்தனன் ஆயினும்என்னைக்
குறியுறக் கொண்டே குலங்குறிப் பதுநின் 

குணப்பெருங் குன்றினுக் கழகோ.

75
3485

ஐயநான் ஆடும் பருவத்திற் றானே 

அடுத்தநன் னேயனோ டப்பா
பொய்யுல காசை எனக்கிலை உனக்கென் 

புகல்என அவனும்அங் கிசைந்தே
மெய்யுறத் துறப்போம் என்றுபோய் நினது 

மெய்யருள் மீட்டிட மீண்டேம்
துய்யநின் உள்ளம் அறிந்ததே எந்தாய் 

இன்றுநான் சொல்லுவ தென்னே.

76
3486

தேர்விலாச் சிறிய பருவத்திற் றானே 

தெய்வமே தெய்வமே எனநின்
சார்வுகொண் டெல்லாச் சார்வையும் விடுத்தேன் 

தந்தையும் குருவும்நீ என்றேன்
பேர்விலா துளத்தே வந்தவா பாடிப் 

பிதற்றினேன் பிறர்மதிப் பறியேன்
ஓர்விலாப் பிழைகள் ஒன்றையும் அறியேன் 

இன்றுநான் உரைப்பதிங் கென்னே.

77
3487

பொறித்துனைப் பதியாப் பெற்றநாள் அடிமை 

புரிந்தது போலவே இன்றும்
செறித்துநிற் கின்றேன் அன்றிஎன் உரிமைத் 

தெய்வமும் குருவும்மெய்ப் பொருளும்
நெறித்தநற் றாயுந் தந்தையும் இன்பும் 

நேயமும் நீஎனப் பெற்றே
குறித்தறிந் ததன்பின் எந்தைநான் ஏறிக் 

குதித்ததென் கூறுக நீயே.

78
3488

பரிந்துனைப் பதியாப் பெற்றநாள் அடிமை 

பணிபுரிந் தாங்கிது வரையில்
புரிந்துறு கின்றேன் அன்றிஎன் உயிரும் 

பொருளும்என் புணர்ப்பும்என் அறிவும்
விரிந்தஎன் சுகமும் தந்தையுங் குருவும் 

மெய்ம்மையும் யாவும்நீ என்றே
தெரிந்தபின் அந்தோ வேறுநான் செய்த 

செய்கைஎன் செப்புக நீயே.

79
3489

மைதவழ் விழிஎன் அம்மைஓர் புடைகொள்227 

வள்ளலே நின்னைஅன் பாலும்
வைதவர் தமைநான் மதித்திலேன் அன்பால் 

வாழ்த்துகின் றோர்தமை வாழ்த்தி
உய்தவர் இவர்என் றுறுகின்றேன் அல்லால் 

உன்அருள் அறியநான் வேறு
செய்ததொன் றிலையே செய்தனன் எனினும் 

திருவுளத் தடைத்திடல் அழகோ.

80
 227. மைதவழ் முகில்போன் றருள்பொழி கருணை - முதற் பதிப்பு, 
பொ. சு., ச. மு. க. 'மைதவழ் விழியென் னம்மையோர் புடைகொள் வள்ளலே' என்றும் பாடம் 
எனச் ச.மு.க. அடிக்குறிப்பிடுகிறார்.
 
3490

ஆரணம் உரைத்த வரைப்பெலாம் பலவாம் 

ஆகமம் உரைவரைப் பெல்லாம்
காரண நினது திருவருட் செங்கோல் 

கணிப்பருங் களிப்பிலே ஓங்கி
நாரணர் முதலோர் போற்றிட விளங்கி 

நடக்கின்ற பெருமைநான் அறிந்தும்
தாரணி யிடைஇத் துன்பமா திகளால் 

தனையனேன் தளருதல் அழகோ.

81
3491

பார்முதல் நாதப் பதிஎலாங் கடந்தப் 

பாலும்அப் பாலும்அப் பாலும்
ஓர்முதல் ஆகித் திருவருட் செங்கோல் 

உரைப்பரும் பெருமையின் ஓங்கிச்
சீர்பெற விளங்க நடத்திமெய்ப் பொதுவில் 

சிறந்தமெய்த் தந்தைநீ இருக்க
வார்கடல் உலகில் அச்சமா திகளால் 

மகன்மனம் வருந்துதல் அழகோ.

82
3492

ஆர்ந்தவே தாந்தப் பதிமுதல் யோகாந் 

தப்பதி வரையும்அப் பாலும்
தேர்ந்தருள் ஆணைத் திருநெறிச் செங்கோல் 

செல்லஓர் சிற்சபை இடத்தே
சார்ந்தபே ரின்பத் தனியர சியற்றும் 

தந்தையே தனிப்பெருந் தலைவா
பேர்ந்திடேன் எந்த விதத்திலும் நினக்கே 

பிள்ளைநான் வருந்துதல் அழகோ.

83
3493

சித்திகள் எல்லாம் வல்லதோர் ஞானத் 

திருச்சபை தன்னிலே திகழும்
சத்திகள் எல்லாம் சத்தர்கள் எல்லாம் 

தழைத்திடத் தனிஅருட் செங்கோல்
சத்திய ஞானம் விளக்கியே நடத்தும் 

தனிமுதல் தந்தையே தலைவா
பித்தியல் உடையேன் எனினும்நின் தனக்கே 

பிள்ளைநான் வாடுதல் அழகோ.

84
3494

சாற்றுபே ரண்டப் பகுதிகள் அனைத்தும் 

தனித்தனி அவற்றுளே நிரம்பித்
தோற்றுமா பிண்டப் பகுதிகள் அனைத்தும் 

சோதியால் விளக்கிஆ னந்த
ஆற்றிலே நனைத்து வளர்த்திடும் பொதுவில் 

அரும்பெருந் தந்தையே இன்பப்
பேற்றிலே விழைந்தேன் தலைவநின் தனக்கே 

பிள்ளைநான் பேதுறல் அழகோ.

85
3495

சிறந்ததத் துவங்கள் அனைத்துமாய் அலவாய்த் 

திகழ்ஒளி யாய்ஒளி எல்லாம்
பிறங்கிய வெளியாய் வெளிஎலாம் விளங்கும் 

பெருவெளி யாய்அதற் கப்பால்
நிறைந்தசிற் சபையில் அருளர சியற்றும் 

நீதிநல் தந்தையே இனிமேல்
பிறந்திடேன் இறவேன் நின்னைவிட் டகலேன் 

பிள்ளைநான் வாடுதல் அழகோ.

86
3496

எண்ணிய எல்லாம் வல்லபே ரருளாம் 

இணையிலாத் தனிநெடுஞ் செங்கோல்
நண்ணிய திருச்சிற் றம்பலத் தமர்ந்தே 

நடத்தும்ஓர் ஞானநா யகனே
தண்ணருள் அளிக்கும் தந்தையே உலகில் 

தனையன்நான் பயத்தினால் துயரால்
அண்ணிய மலங்கள் ஐந்தினால் இன்னும் 

ஐயகோ வாடுதல் அழகோ.

87
3497

கலைஎலாம் புகலும் கதிஎலாம் கதியில் 

காண்கின்ற காட்சிகள் எல்லாம்
நிலையெலாம் நிலையில் நேர்ந்தனு பவஞ்செய் 

நிறைவெலாம் விளங்கிடப் பொதுவில்
மலைவிலாச் சோதி அருட்பெருஞ் செங்கோல் 

வாய்மையான் நடத்தும்ஓர் தனிமைத்
தலைவனே எனது தந்தையே நினது 

தனையன்நான் தளருதல் அழகோ.

88
3498

ஆதியே நடுவே அந்தமே எனும்இவ் 

வடைவெலாம் இன்றிஒன் றான
சோதியே வடிவாய்த் திருச்சிற்றம் பலத்தே 

தூயபே ரருள்தனிச் செங்கோல்
நீதியே நடத்தும் தனிப்பெருந் தலைமை 

நிருத்தனே ஒருத்தனே நின்னை
ஓதியே வழுத்தும் தனையன்நான் இங்கே 

உறுகணால் தளருதல் அழகோ.

89
3499

அத்தனே திருச்சிற் றம்பலத் தரசே 

அரும்பெருஞ் சோதியே அடியார்
பித்தனே எனினும் பேயனே எனினும் 

பெரிதருள் புரிதனித் தலைமைச்
சித்தனே எல்லாம் செய்திட வல்ல 

செல்வனே சிறப்பனே சிவனே
சுத்தனே நினது தனையன்நான் மயங்கித் 

துயர்ந்துளம் வாடுதல் அழகோ.

90
3500

உற்றதோர் திருச்சிற் றம்பலத் தோங்கும் 

ஒருதனித் தந்தையே நின்பால்
குற்றம்நான் புரிந்திங் கறிந்திலேன் குற்றம் 

குயிற்றினேன் என்னில்அக் குற்றம்
இற்றென அறிவித் தறிவுதந் தென்னை 

இன்புறப் பயிற்றுதல் வேண்டும்
மற்றய லார்போன் றிருத்தலோ தந்தை 

வழக்கிது நீஅறி யாயோ.

91
3501

குற்றமோ குணமோ நான்அறி யேன்என் 

குறிப்பெலாம் திருச்சிற்றம் பலத்தே
உற்றதா தலினால் உலகியல் வழக்கில் 

உற்றன228 மற்றென தலவே
தெற்றென229 அருட்கே குற்றம்என் பதுநான் 

செய்திடில் திருத்தலே அன்றி
மற்றய லார்போன் றிருப்பதோ தந்தை 

மரபிது நீஅறி யாயோ.

92
 228. உற்றிடின் - முதற்பதிப்பு; பொ. சு., ச. மு. க. பதிப்பு.
229. தெற்றென - விரைந்து. முதற்பதிப்பு.
 
3502

மாயையால் வினையால் அரிபிர மாதி 

வானவர் மனமதி மயங்கித்
தீயகா ரியங்கள் செய்திடில் அந்தோ 

சிறியனேன் செய்வது புதிதோ
ஆயினும் தீய இவைஎன அறியேன் 

அறிவித்துத் திருத்துதல் அன்றி
நீயிவண் பிறர்போன் றிருப்பது தந்தை 

நெறிக்கழ கல்லவே எந்தாய்.

93
3503

கருணையும் சிவமே பொருள்எனக் காணும் 

காட்சியும் பெறுகமற் றெல்லாம்
மருள்நெறி எனநீ எனக்கறி வித்த 

வண்ணமே பெற்றிருக் கின்றேன்
இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம் 

எய்திய தென்செய்வேன் எந்தாய்
தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும் 

சிறுநெறி பிடித்ததொன் றிலையே.

94
3504

கலங்கிய போதும் திருச்சிற்றம் பலத்தில் 

கருணையங் கடவுளே நின்பால்
இலங்கிய நேயம் விலங்கிய திலையே 

எந்தைநின் உளம்அறி யாதோ
மலங்கிய மனத்தேன் புகல்வதென் வினையால் 

மாயையால் வரும்பிழை எல்லாம்
அலங்கும்என் பிழைகள் அல்லஎன் றுன்னோ 

டடிக்கடி அறைந்தனன் ஆண்டே.

95
3505

இரும்பினும் கொடிய மனஞ்செயும் பிழையும் 

என்பிழை அன்றெனப் பலகால்
விரும்பிநின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன் 

வேறுநான் செய்ததிங் கென்னே
அரும்பொனே திருச்சிற் றம்பலத் தமுதே 

அப்பனே என்றிருக் கின்றேன்
துரும்பினுஞ் சிறியேன் புகல்வதென் நினது 

தூயதாம் திருவுளம் அறியும்.

96
3506

வருமுயிர் இரக்கம் பற்றியே உலக 

வழக்கில்என் மனஞ்சென்ற தோறும்
வெருவிநின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன் 

விண்ணப்பஞ் செய்கின்றேன் இன்றும்
உருவஎன் உயிர்தான் உயிர்இரக் கந்தான் 

ஒன்றதே இரண்டிலை இரக்கம்
ஒருவில்என் உயிரும் ஒருவும்என் உள்ளத் 

தொருவனே நின்பதத் தாணை.

97
3507

தலைவர்கள் எல்லாம் தனித்தனி வணங்கும் 

தலைவனே இன்றும்என் உளமும்
மலைவில்என் அறிவும் நானும்இவ் வுலக 

வழக்கிலே உயிர்இரக் கத்தால்
இலகுகின் றனம்நான் என்செய்வேன் இரக்கம் 

என்னுயிர் என்னவே றிலையே
நிலைபெறும் இரக்கம் நீங்கில்என் உயிரும் 

நீங்கும்நின் திருவுளம் அறியும்.

98
3508

ஆதலால் இரக்கம் பற்றிநான் உலகில் 

ஆடலே அன்றிஓர் விடயக்
காதலால் ஆடல் கருதிலேன் விடயக் 

கருத்தெனக் கில்லைஎன் றிடல்இப்
போதலால் சிறிய போதும்உண் டதுநின் 

புந்தியில் அறிந்தது தானே
ஈதலால் வேறோர் தீதென திடத்தே 

இல்லைநான் இசைப்பதென் எந்தாய்.

99
3509

என்னையும் இரக்கந் தன்னையும் ஒன்றாய் 

இருக்கவே இசைவித் திவ்வுலகில்
மன்னிவாழ் வுறவே வருவித்த கருணை 

வள்ளல்நீ நினக்கிது விடயம்
பன்னல்என் அடியேன் ஆயினும் பிள்ளைப் 

பாங்கினால் உரைக்கின்றேன் எந்தாய்
இன்னவா றெனநீ சொன்னவா றியற்றா 

திருந்ததோர் இறையும்இங் கிலையே.

100
3510

உறுவினை தவிர்க்கும் ஒருவனே உலகில் 

ஓடியும் ஆடியும் உழன்றும்
சிறுவர்தாம் தந்தை வெறுப்பஆர்க் கின்றார் 

சிறியனேன் ஒருதின மேனும்
மறுகிநின் றாடி ஆர்த்ததிங் குண்டோ 

நின்பணி மதிப்பலால் எனக்குச்
சிறுவிளை யாட்டில் சிந்தையே இலைநின் 

திருவுளம் அறியுமே எந்தாய்.

101
3511

தந்தையர் வெறுப்ப மக்கள்தாம் பயனில் 

சழக்குரை யாடிவெங் காமச்
சிந்தைய ராகித் திரிகின்றார் அந்தோ 

சிறியனேன் ஒருதின மேனும்
எந்தைநின் உள்ளம் வெறுப்பநின் பணிவிட் 

டிவ்வுல கியலில்அவ் வாறு
தெந்தன என்றே திரிந்ததுண் டேயோ 

திருவுளம் அறியநான் அறியேன்.

102
3512

அம்புவி தனிலே தந்தையர் வெறுப்ப 

அடிக்கடி அயலவர் உடனே
வம்புறு சண்டை விளைக்கின்றார் சிறுவர் 

வள்ளலே நின்பணி விடுத்தே
இம்பர்இவ் வுலகில் ஒருதின மேனும் 

ஏழையேன் பிறரொடு வெகுண்டே
வெம்புறு சண்டை விளைத்ததுண் டேயோ 

மெய்யநின் ஆணைநான் அறியேன்.

103
3513

வள்ளல்இவ் வுலகில் தந்தையர் வெறுப்ப 

மக்கள்தாம் ஒழுக்கத்தை மறந்தே
கள்ளருந் துதல்சூ தாடுதல் காமக் 

கடைதொறும் மயங்குதல் பொய்யே
விள்ளுதல் புரிவார் ஐயகோ அடியேன் 

மெய்யநின் திருப்பணி விடுத்தே
எள்ளிஅவ் வாறுபுரிந்ததொன் றுண்டோ 

எந்தைநின் ஆணைநான் அறியேன்.

104
3514

மலைவிலாத் திருச்சிற் றம்பலத் தமர்ந்த 

வள்ளலே உலகினில் பெற்றோர்
குலைநடுக் குறவே கடுகடுத் தோடிக் 

கொடியதீ நெறியிலே மக்கள்
புலைகொலை களவே புரிகின்றார் அடியேன் 

புண்ணிய நின்பணி விடுத்தே
உலையஅவ் வாறு புரிந்ததொன் றுண்டோ 

உண்பதத் தாணைநான் அறியேன்.

105
3515

தனிப்பெருஞ் சோதித் தந்தையே உலகில் 

தந்தையர் பற்பல காலும்
இனிப்புறு மொழியால் அறிவுற மக்கட் 

கேற்கவே பயிற்றிடுந் தோறும்
பனிப்புற ஓடிப் பதுங்கிடு கின்றார் 

பண்பனே என்னைநீ பயிற்றத்
தினைத்தனை யேனும் பதுங்கிய துண்டோ 

திருவுளம் அறியநான் அறியேன்.

106
3516

தன்னைநே ரில்லாத் தந்தையே உலகில் 

தந்தையர் தங்களை அழைத்தே
சொன்னசொல் மறுத்தே மக்கள்தம் மனம்போம் 

சூழலே போகின்றார் அடியேன்
என்னைநீ உணர்த்தல் யாதது மலையின் 

இலக்கெனக் கொள்கின்றேன் அல்லால்
பின்னைஓர் இறையும் மறுத்ததொன் றுண்டோ 

பெரியநின் ஆணைநான் அறியேன்.

107
3517

போற்றுவார் போற்றும் புனிதனே மக்கள் 

பொருந்துதம் தந்தையர் தமையே
வேற்றுவாழ் வடைய வீடுதா பணந்தா 

மெல்லிய சரிகைவத் திரந்தா
ஏற்றஆ பரணந் தாஎனக் கேட்டே 

இரங்குவார் இவைகுறித் தடியேன்
தேற்றுவாய் நின்னைக் கேட்டதொன் றுண்டோ 

திருவுளம் அறியநான் அறியேன்.

108
3518

குணம்புரி எனது தந்தையே உலகில் 

கூடிய மக்கள்தந் தையரைப்
பணம்புரி காணி பூமிகள் புரிநற் 

பதிபுரி ஏற்றபெண் பார்த்தே
மணம்புரி எனவே வருத்துகின் றார்என் 

மனத்திலே ஒருசிறி தேனும்
எணம்புரிந் துனைநான் வருத்திய துண்டோ 

எந்தைநின் ஆணைநான் அறியேன்.

109
3519

இகத்திலே எனைவந் தாண்டமெய்ப் பொருளே 

என்னுயிர்த் தந்தையே இந்தச்
சகத்திலே மக்கள் தந்தையர் இடத்தே 

தாழ்ந்தவ ராய்ப்புறங் காட்டி
அகத்திலே வஞ்சம் வைத்திருக் கின்றார் 

ஐயவோ வஞ்சம்நின் அளவில்
முகத்திலே என்றன் அகத்திலே உண்டோ 

முதல்வநின் ஆணைநான் அறியேன்.

110
3520

தன்மைகாண் பரிய தலைவனே எனது 

தந்தையே சகத்திலே மக்கள்
வன்மைவார்த் தைகளால் தந்தையர் தம்மை 

வைகின்றார் வள்ளலே மருந்தே
என்மனக் கனிவே என்னிரு கண்ணே 

என்னுயிர்க் கிசைந்தமெய்த் துணையே
நின்மனம் வெறுப்பப் பேசிய துண்டோ 

நின்பதத் தாணைநான் அறியேன்.

111
3521

ஒப்பிலா மணிஎன் அப்பனே உலகில் 

உற்றிடு மக்கள்தந் தையரை
வைப்பில்வே றொருவர் வைதிடக் கேட்டு 

மனம்பொறுத் திருக்கின்றார் அடியேன்
தப்பிலாய்230 நினைவே றுரைத்திடக் கேட்டால் 

தரிப்பனோ தரித்திடேன் அன்றி
வெப்பில்என் உயிர்தான் தரிக்குமோ யாதாய் 

விளையுமோ அறிந்திலேன் எந்தாய்.

112
 230. தப்பிலா - முதற்பதிப்பு., பொ.சு., ச. மு. க. பதிப்பு. 
3522

இத்தகை உலகில் இங்ஙனம் சிறியேன் 

எந்தைநின் திருப்பணி விடுத்தே
சித்தம்வே றாகித் திரிந்ததே இலைநான் 

தெரிந்தநாள் முதல்இது வரையும்
அத்தனே அரசே ஐயனே அமுதே 

அப்பனே அம்பலத் தாடும்
சித்தனே சிவனே என்றென துளத்தே 

சிந்தித்தே இருக்கின்றேன் இன்றும்.

113
3523

பொய்வகை மனத்தேன் என்னினும் எந்தாய் 

பொய்யுல காசைசற் றறியேன்
நைவகை தவிரத் திருச்சிற்றம் பலத்தே 

நண்ணிய மெய்ப்பொருள் நமது
கைவகைப் படல்எக் கணத்திலோ எனநான் 

கருதினேன் கருத்தினை முடிக்கச்
செய்வகை அறியேன் என்செய்வேன் ஐயோ 

தெய்வமே என்றிருக் கின்றேன்.

114
3524

அன்னையே என்றன் அப்பனே திருச்சிற் 

றம்பலத் தமுதனே எனநான்
உன்னையே கருதி உன்பணி புரிந்திங் 

குலகிலே கருணைஎன் பதுதான்
என்னையே நிலையாய் இருத்தஉள் வருந்தி 

இருக்கின்றேன் என்உள மெலிவும்
மன்னும்என் உடம்பின் மெலிவும்நான் இருக்கும் 

வண்ணமும் திருவுளம் அறியும்.

115
3525

பொய்படாப் பயனே பொற்சபை நடஞ்செய் 

புண்ணியா கண்ணினுள் மணியே
கைபடாக் கனலே கறைபடா மதியே 

கணிப்பருங் கருணையங் கடலே
தெய்வமே எனநான் நின்னையே கருதித் 

திருப்பணி புரிந்திருக் கின்றேன்
மைபடா உள்ள மெலிவும்நான் இருக்கும் 

வண்ணமும் திருவுளம் அறியும்.

116
3526

தன்னிகர் அறியாத் தலைவனே தாயே 

தந்தையே தாங்குநற் றுணையே
என்னிறு கண்ணே என்னுயிர்க் குயிரே 

என்னுடை எய்ப்பினில் வைப்பே
உன்னுதற் கினிய வொருவனே எனநான் 

உன்னையே நினைத்திருக் கின்றேன்
மன்னும்என் உள்ள மெலிவும்நான் இருக்கும் 

வண்ணமும் திருவுளம் அறியும்.

117
3527

திருவளர் திருஅம் பலத்திலே அந்நாள் 

செப்பிய மெய்ம்மொழிப் பொருளும்
உருவளர் திருமந் திரத்திரு முறையால் 

உணர்த்திய மெய்ம்மொழிப் பொருளும்
கருவளர் அடியேன் உளத்திலே நின்று 

காட்டிய மெய்ம்மொழிப் பொருளும்
மருவிஎன் உளத்தே நம்பிநான் இருக்கும் 

வண்ணமும் திருவுளம் அறியும்.

118
3528

உவந்தென துளத்தே உணர்த்திய எல்லாம் 

உறுமலை இலக்கென நம்பி
நிவந்ததோள் பணைப்ப மிகஉளங் களிப்ப 

நின்றதும் நிலைத்தமெய்ப் பொருள்இப்
பவந்தனில் பெறுதல் சத்தியம் எனவே 

பற்பல குறிகளால் அறிந்தே
சிவந்தபொன் மலைபோல் இருந்ததும் இந்நாள் 

திகைப்பதும் திருவுளம் அறியும்.

119
3529

ஏய்ந்தபொன் மலைமேல் தம்பத்தில் ஏறி 

ஏகவும் ஏகவும் நுணுகித்
தேய்ந்தபோ தடியேன் பயந்தவெம் பயத்தைத் 

தீர்த்துமேல் ஏற்றிய திறத்தை
வாய்ந்துளே கருதி மலைஎனப் பணைத்தே 

மனங்களிப் புற்றுமெய் இன்பம்
தோய்ந்துநின் றாடிச்சுழன்றதும் இந்நாள் 

சுழல்வதும் திருவுளம் அறியும்.

120
3530

வாட்டமோ டிருந்த சிறியனேன் தனது 

வாட்டமும் மாயையா திகளின்
ஈட்டமும் தவிர்க்கத் திருவுளத் திரங்கி 

என்னைஓர் பொருள்என மதித்தே
தீட்டரும் புகழ்சேர் திருவடித் துணைகள் 

செலுத்திய திருச்சிலம் பொலிநான்
கேட்டபோ திருந்த கிளர்ச்சியும் இந்நாள் 

கிலேசமுந் திருவுளம் அறியும்.

121
3531

கற்றவர் கல்லார் பிறர்பிறர் குரல்என் 

காதிலே கிடைத்தபோ தெல்லாம்
மற்றவர் தமக்கென் உற்றதோ அவர்தம் 

மரபினர் உறவினர் தமக்குள்
உற்றதிங் கெதுவோ என்றுளம் நடுங்கி 

ஓடிப்பார்த் தோடிப்பார்த் திரவும்
எற்றரு பகலும் ஏங்கிநான் அடைந்த 

ஏக்கமுந் திருவுளம் அறியும்.

122
3532

கருணையம் பதிநங் கண்ணுள்மா மணிநம் 

கருத்திலே கலந்ததெள் ளமுதம்
மருள்நெறி தவிர்க்கும் மருந்தெலாம் வல்ல 

வள்ளல்சிற் றம்பலம் மன்னும்
பொருள்நிறை இன்பம் நம்மைஆண் டளித்த 

புண்ணியம் வருகின்ற தருணம்
தருணம்இப் போதென் றெண்ணிநான் இருக்கும் 

தன்மையும் திருவுளம் அறியும்.

123
3533

இமையவர் பிரமர் நாரணர் முதலோர் 

எய்துதற் கரியபே ரின்பம்
தமைஅறிந் தவருட் சார்ந்தபே ரொளிநம் 

தயாநிதி தனிப்பெருந் தந்தை
அமையும்நம் உயிர்க்குத் துணைதிருப் பொதுவில் 

ஐயர் தாம் வருகின்ற சமயம்
சமயம்இப் போதென் றெண்ணிநான் இருக்கும் 

தன்மையும் திருவுளம் அறியும்.

124
3534

அடியனேன் உள்ளம் திருச்சிற்றம் பலத்தென் 

அமுதநின் மேல்வைத்த காதல்
நெடியஏழ் கடலில் பெரிதெனக் கிந்நாள் 

நிகழ்கின்ற ஆவலும் விரைவும்
படியஎன் தன்னால் சொலமுடி யாது 

பார்ப்பறப் பார்த்திருக் கின்றேன்
செடியனேன் இருக்கும் வண்ணங்கள் எல்லாம் 

திருவுளங் கண்டதே எந்தாய்.

125
3535

பன்னிரண் டாண்டு தொடங்கிநான் இற்றைப் 

பகல்வரை அடைந்தவை எல்லாம்
உன்னிநின் றுரைத்தால் உலப்புறா ததனால் 

ஒருசில உரைத்தனன் எனினும்
என்னுளத் தகத்தும் புறத்தும்உட் புறத்தும் 

இயல்புறப் புறத்தினும் விளங்கி
மன்னிய சோதி யாவும்நீ அறிந்த 

வண்ணமே வகுப்பதென் நினக்கே.

126
3536

இதுவரை அடியேன் அடைந்தவெம் பயமும் 

இடர்களும் துன்பமும் எல்லாம்
பொதுவளர் பொருளே பிறர்பொருட் டல்லால் 

புலையனேன் பொருட்டல இதுநின்
மதுவளர் மலர்ப்பொற் பதத்துணை அறிய 

வகுத்தனன் அடியனேன் தனக்கே
எதிலும்ஓர் ஆசை இலைஇலை பயமும் 

இடரும்மற் றிலைஇலை எந்தாய்.

127
3537

என்னள விலையே என்னினும் பிறர்பால் 

எய்திய கருணையால் எந்தாய்
உன்னுறு பயமும் இடருமென் தன்னை 

உயிரொடும் தின்கின்ற தந்தோ
இன்னும்என் றனக்கிவ் விடரொடு பயமும் 

இருந்திடில்231 என்உயிர் தரியா
தன்னையும் குருவும் அப்பனும் ஆன 

அமுதனே அளித்தருள் எனையே.

128
 231. இருக்கில் - பி. இரா. பதிப்பு, 
3538

பயத்தொடு துயரும் மறைப்புமா மாயைப் 

பற்றொடு வினையும்ஆ ணவமும்
கயத்தவன் மயக்கும் மருட்சியும் எனது 

கருத்திலே இனிஒரு கணமும்
வியத்திடத் தரியேன் இவையெலாந் தவிர்த்துன் 

மெய்யருள் அளித்திடல் வேண்டும்
உயத்தரு வாயேல் இருக்கின்றேன் இலையேல் 

உயிர்விடு கின்றனன் இன்றே.

129
3539

ஐயநான் பயத்தால் துயரினால் அடைந்த 

அடைவைஉள் நினைத்திடுந் தோறும்
வெய்யதீ மூட்டி விடுதல்232 ஒப் பதுநான் 

மிகஇவற் றால்இளைத் திட்டேன்
வையமேல் இனிநான் இவைகளால் இளைக்க 

வசமிலேன் இவைஎலாம் தவிர்த்தே
உய்யவைப் பாயேல் இருக்கின்றேன் இலையேல் 

உயிர்விடு கின்றனன் இன்றே.

130
 232. விடுத்தல் - முதற்பதிப்பு, பொ. சு.,ச. மு. க., பி. இரா. பதிப்பு. 
3540

பயந்துயர் இடர்உள் மருட்சியா தியஇப் 

பகைஎலாம் பற்றறத் தவிர்த்தே
நயந்தநின் அருளார்233 அமுதளித் தடியேன் 

நாடிஈண் டெண்ணிய எல்லாம்
வியந்திடத் தருதல் வேண்டும்ஈ தெனது 

விண்ணப்பம் நின்திரு உளத்தே
வயந்தரக் கருதித் தயவுசெய் தருள்க 

வள்ளலே சிற்சபை வாழ்வே.

131
 233. அருளாம் - ச. மு. க. பதிப்பு. 
3541

என்னுயிர் காத்தல் கடன்உனக் கடியேன் 

இசைத்தவிண் ணப்பம்ஏற் றருளி
உன்னுமென் உள்ளத் துறும்பயம் இடர்கள் 

உறுகண்மற் றிவைஎலாம் ஒழித்தே
நின்னருள் அமுதம் அளித்தென தெண்ணம் 

நிரப்பியாட் கொள்ளுதல் வேண்டும்
மன்னுபொற் சபையில் வயங்கிய மணியே 

வள்ளலே சிற்சபை வாழ்வே.

132
3542

பரிக்கிலேன் பயமும் இடரும்வெந் துயரும் 

பற்றறத் தவிர்த்தருள் இனிநான்
தரிக்கிலேன் சிறிதும் தரிக்கிலேன் உள்ளம்

தரிக்கிலேன் தரிக்கிலேன் அந்தோ
புரிக்கிலே சத்தை அகற்றிஆட் கொள்ளும் 

பொற்சபை அண்ணலே கருணை
வரிக்கணேர் மடந்தை பாகனே சிவனே234 

வள்ளலே சிற்சபை வாழ்வே.

133
 234. வரிக்கணேர் இன்ப வல்லியை மணந்த - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க. பதிப்பு. 


திருச்சிற்றம்பலம் 


14. மாயையின் விளக்கம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3543

திடுக்கற எனைத்தான் வளர்த்திடப் பரையாம்

செவிலிபாற் சேர்த்தனை அவளோ
எடுக்கவும் நினையாள் படுக்கவும் ஒட்டாள்

என்செய்வேன் இன்னும்என் னிடைப்பால்
மடுக்கநற் றாயும் வந்திலள் நீயும்

வந்தெனைப் பார்த்திலை அந்தோ
தடுக்கருங் கருணைத் தந்தையே தளர்ந்தேன்

தனையனேன் தளர்ந்திடல் அழகோ.

1
3544

தளர்ந்திடேல் மகனே என்றெனை எடுத்தோர்

தாய்கையில் கொடுத்தனை அவளோ
வளர்ந்திடா வகையே நினைத்தனள் போன்று

மாயமே புரிந்திருக் கின்றாள்
கிளர்ந்திட எனைத்தான் பெற்றநற் றாயும்

கேட்பதற் கடைந்திலன் அந்தோ
உளந்தரு கருணைத் தந்தையே நீயும்

உற்றிலை பெற்றவர்க் கழகோ.

 
3545

தாங்கஎன் தனைஓர் தாய்கையில் கொடுத்தாய்

தாயவள் நான்தனித் துணர்ந்து
தூங்கவும் ஒட்டாள் எடுக்கவும் துணியாள்

சூதையே நினைத்திருக் கின்றாள்
ஓங்குநற் றாயும் வந்திலாள் அந்தோ

உளந்தளர் வுற்றனன் நீயும்
ஈங்குவந் திலையேல் என்செய்கேன் இதுதான்

எந்தைநின் திருவருட் கழகோ.

3
3546

அத்தநீ எனைஓர் தாய்கையில் கொடுத்தாய்

ஆங்கவள் மகள்கையில் கொடுத்தாள்
நித்திய மகள்ஓர் நீலிபாற் கொடுத்தாள்

நீலியோ தன்புடை ஆடும்
தத்துவ மடவார் தங்கையில் கொடுத்தாள்

தனித்தனி அவர்அவர் எடுத்தே
கத்தவெம் பயமே காட்டினர் நானும்

கலங்கினேன் கலங்கிடல் அழகோ.

4
3547

வாங்கிய செவிலி அறிவொடும் துயிற்ற

மகள்கையில் கொடுத்தனள் எனைத்தான்
ஈங்கிவள் கருத்தில் எதுநினைத் தனளோ

என்செய்வேன் என்னையே உணர்ந்து
தூங்கவும் ஒட்டாள் அடிக்கடி கிள்ளித்

தொட்டிலும் ஆட்டிடு கின்றாள்
ஏங்குறு கின்றேன் பிள்ளைதன் அருமை

ஈன்றவர் அறிவரே எந்தாய்.

5
3548

வலத்திலே செவிலி எடுத்திடச் சோம்பி

மக்கள்பால் காட்டிவிட் டிருந்தாள்
மலத்திலே உழைத்துக் கிடந்தழல் கேட்டும்

வந்தெனை எடுத்திலார் அவரும்
இலத்திலே கூடி ஆடுகின் றனர்நான்

என்செய்வேன் என்னுடை அருமை
நிலத்திலே அவர்கள் அறிந்திலார் பெற்றோய்

நீயும்இங் கறிந்திலை யேயோ.

6
3549

தும்மினேன் வெதும்பித் தொட்டிலிற் கிடந்தே

சோர்ந்தழு திளைத்துமென் குரலும்
கம்மினேன் செவிலி அம்மிபோல் அசையாள்

காதுறக் கேட்டிருக் கின்றாள்
செம்மியே மடவார் கொம்மியே பாடிச்

சிரித்திருக் கின்றனர் அந்தோ
இம்மியே எனினும் ஈந்திடார் போல

இருப்பதோ நீயும்எந் தாயே.

7
3550

துருவிலா வயிரத் தொட்டிலே தங்கத்

தொட்டிலே பலஇருந் திடவும்
திருவிலாப் பொத்தைத் தொட்டிலிற் செவிலி

சிறியனைக் கிடத்தினள் எந்தாய்
பிரிவிலாத் தனிமைத் தலைவநீ பெற்ற

பிள்ளைநான் எனக்கிது பெறுமோ
கருவிலாய் நீஇத் தருணம்வந் திதனைக்

கண்டிடில் சகிக்குமோ நினக்கே.

8
3551

காய்ந்திடு மனத்தாள் போன்றனள் சிறிதும்

னிவிலாள் காமமா திகளாம்
பாய்ந்திடு வேடப் பயல்களால் எனக்குப்

பயம்புரி வித்தனள் பலகால்
தேய்ந்திடு மதிஎன் றெண்ணினாள் குறையாத்

திருமதி எனநினைந் தறியாள்
சாய்ந்தஇச் செவிலி கையிலே என்னைத்

தந்தது சாலும்எந் தாயே.

9
3552

ஞானஆ னந்த வல்லியாம் பிரியா

நாயகி யுடன்எழுந் தருளி
ஈனம்ஆர் இடர்நீத் தெடுத்தெனை அணைத்தே

இன்னமு தனைத்தையும் அருத்தி
ஊனம்ஒன் றில்லா தோங்குமெய்த் தலத்தில்

உறப்புரிந் தெனைப்பிரி யாமல்
வானமும் புவியும் மதிக்கவாழ்ந் தருள்க

மாமணி மன்றில்எந் தாயே.

10


திருச்சிற்றம்பலம்


15. அபயத் திறன்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3553

ஆடக மணிப்பொற் குன்றமே என்னை

ஆண்டுகொண் டருளிய பொருளே
வீடகத் தேற்றும் விளக்கமே விளக்கின்

மெய்யொளிக் குள்ளொளி வியப்பே
வாடகச் சிறியேன் வாட்டங்கள் எல்லாம்

தவிர்த்தருள் வழங்கிய மன்றில்
நாடகக் கருணை நாதனே உன்னை

நம்பினேன் கைவிடேல் எனையே.

1
3554

வட்டவான் சுடரே வளரொளி விளக்கே

வயங்குசிற் சோதியே அடியேன்
இட்டமே இட்டத் தியைந்துளே கலந்த

இன்பமே என்பெரும் பொருளே
கட்டமே தவிர்த்திங் கென்னைவாழ் வித்த

கடவுளே கனகமன் றகத்தே
நட்டமே புரியும் பேரரு ளரசே

நம்பினேன் கைவிடேல் எனையே.

2
3555

புல்லவா மனத்தேன் என்னினும் சமயம்

புகுதவா பொய்ந்நெறி ஒழுக்கம்
சொல்லவா பிறரைத் துதிக்கவா சிறிதோர்

சொப்பனத் தாயினும் நினையேன்
கல்லவா மனத்தோர் உறவையுங் கருதேன்

கனகமா மன்றிலே நடிக்கும்
நல்லவா எல்லாம் வல்லவா உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

3
3556

புண்படா உடம்பும் புரைபடா மனமும்

பொய்படா ஒழுக்கமும் பொருந்திக்
கண்படா திரவும் பகலும்நின் தனையே

கருத்தில்வைத் தேத்துதற் கிசைந்தேன்
உண்பனே எனினும் உடுப்பனே எனினும்

உலகரை நம்பிலேன் எனது
நண்பனே நலஞ்சார் பண்பனே உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

4
3557

புண்ணிலே புகுந்த கோல்எனத் துயரம்

புகுந்தெனைக் கலக்கிய போதும்
கண்ணிலே எனது கருத்திலே கலந்த

கருத்தனே நின்றனை அல்லால்
மண்ணிலே வயங்கும் வானிலே பிறரை

மதித்திலேன் மதிக்கின்றார் தமையும்
நண்ணிலேன் வேறொன் றெண்ணிலேன் உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

5
3558

ஊன்பெறும் உயிரும் உணர்ச்சியும் அன்பும்

ஊக்கமும் உண்மையும் என்னைத்
தான்பெறு தாயும் தந்தையும் குருவும்

தனிப்பெருந் தெய்வமுந் தவமும்
வான்பெறு பொருளும் வாழ்வும்நற் றுணையும்

மக்களும் மனைவியும் உறவும்
நான்பெறு நண்பும் யாவும்நீ என்றே

நம்பினேன் கைவிடேல் எனையே.

6
3559

வாட்டமும் துயரும் அச்சமும் தவிர்த்தென்

வடிவமும் வண்ணமும் உயிரும்
தேட்டமும் நீயே கொண்டுநின் கருணைத்

தேகமும் உருவும்மெய்ச் சிவமும்
ஈட்டமும் எல்லாம் வல்லநின் னருட்பே

ரின்பமும் அன்பும்மெய்ஞ் ஞான
நாட்டமும் கொடுத்துக் காப்பதுன் கடன்நான்

நம்பினேன் கைவிடேல் எனையே.

7
3560

வம்பனேன் பிறர்போல் வையமும் வானும்

மற்றவும் மதித்திலேன் மதஞ்சார்
உம்பனேர் அகங்கா ரந்தவிர்ந் தெல்லா

உலகமும் வாழ்கவென் றிருந்தேன்
செம்பொனே கருணைத் தெய்வமே எல்லாம்

செயவல்ல சித்தனே சிவனே
நம்பனே ஞான நாதனே உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

8
3561

ஆயகால் இருந்தும் நடந்திட வலியில்

லாமையால் அழுங்குவார் எனஉண்
மேயகால் இருந்தும் திருவருள் உறஓர்

விருப்பிலா மையின்மிக மெலிந்தேன்
தீயகான் விலங்கைத் தூயமா னிடஞ்செய்

சித்தனே சத்திய சபைக்கு
நாயகா உயிர்க்கு நயகா உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

9
3562

அற்றமும் மறைக்கும் அறிவிலா தோடி

ஆடிய சிறுபரு வத்தே
குற்றமும் குணங்கொண் டென்னைஆட் கொண்ட

குணப்பெருங் குன்றமே குருவே
செற்றமும் விருப்பும் தீர்த்தமெய்த் தவர்தம்

சிந்தையில் இனிக்கின்ற தேனே
நற்றக வுடைய நாதனே உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

10
3563

படம்புரி பாம்பிற் கொடியனேன் கொடிய

பாவியிற் பாவியேன் தீமைக்
கிடம்புரி மனத்தேன் இரக்கம்ஒன் றில்லேன்

என்னினும் துணைஎந்த விதத்தும்
திடம்புரி நின்பொன் அடித்துணை எனவே

சிந்தனை செய்திருக் கின்றேன்
நடம்புரி கருணை நாயகா உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

11
3564

படித்தனன் உலகப் படிப்பெலாம் மெய்ந்நூல்

படித்தவர் தங்களைப் பார்த்து
நொடித்தனன் கடிந்து நோக்கினேன் காம

நோக்கினேன் பொய்யர்தம் உறவு
பிடித்தனன் உலகில் பேதையர் மயங்கப்

பெரியரில் பெரியர்போல் பேசி
நடித்தனன் எனினும் நின்னடித் துணையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

12
3565

பஞ்சுநேர் உலகப் பாட்டிலே மெலிந்த

பாவியேன் சாவியே போன
புஞ்செயே அனையேன் புழுத்தலைப் புலையேன்

பொய்யெலாம் பூரித்த வஞ்ச
நெஞ்சினேன் பாப நெறியினேன் சினத்தில்

நெடியனேன் கொடியனேன் காம
நஞ்சினேன் எனினும் அஞ்சினேன் உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

13
3566

கயந்துளே உவட்டும் காஞ்சிரங் காயில்

கடியனேன் காமமே கலந்து
வியந்துளே மகிழும் வீணனேன் கொடிய

வெகுளியேன் வெய்யனேன் வெறியேன்
மயர்ந்துளேன் உலக வாழ்க்கையை மனையை

மக்களை ஒக்கலை மதித்தே
நயந்துளேன் எனினும் பயந்துளேன் உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

14
3567

ஓடினேன் பெரும்பே ராசையால் உலகில்

ஊர்தொறும் உண்டியே உடையே
தேடினேன் காமச் சேற்றிலே விழுந்து

தியங்கினேன் மயங்கினேன் திகைத்து
வாடினேன் சிறிய வாரியான் மகிழ்ந்தேன்

வஞ்சமே பொருளென மதித்து
நாடினேன் எனினும் பாடினேன் உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

15
3568

காட்டிலே திரியும் விலங்கினிற் கடையேன்

கைவழக் கத்தினால் ஒடிந்த
ஓட்டிலே எனினும் ஆசைவிட் டறியேன்

உலுத்தனேன் ஒருசிறு துரும்பும்
ஏட்டிலே எழுதிக் கணக்கிட்ட கொடியேன்

எச்சிலும் உமிழ்ந்திடேன் நரக
நாட்டிலே பெரியேன் என்னினும் உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

16
3569

துனித்தவெம் மடவார் பகல்வந்த போது

துறவியின் கடுகடுத் திருந்தேன்
தனித்திர வதிலே வந்தபோ தோடித்

தழுவினேன் தடமுலை விழைந்தேன்
இனித்தசொல் புகன்றேன் என்பினைக் கறித்தே

இடர்ப்பட்ட நாயென இளைத்தேன்
நனித்தவ றுடையேன் என்னினும் உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

17
3570

தார்த்தட முலையார் நான்பல ரொடுஞ்சார்

தலத்திலே வந்தபோ தவரைப்
பார்த்திலேன் வார்த்தை பகர்ந்திலேன் தவசுப்

பாதகப் பூனைபோல் இருந்தேன்
பேர்த்துநான் தனித்த போதுபோய் வலிந்து

பேசினேன் வஞ்சரிற் பெரியேன்
நார்த்திடர் உளத்தேன் என்னினும் உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

18
3571

பெண்மையே விழைந்தேன் அவர்மனம் அறியேன்

பேய்எனப் பிடித்தனன் மடவார்க்
குண்மையே புகல்வான் போன்றவர் தமைத்தொட்

டுவந்தகங் களித்தபொய் யுளத்தேன்
தண்மையே அறியேன் வெம்மையே உடையேன்

சாத்திரம் புகன்றுவாய் தடித்தேன்
நண்மையே அடையேன் என்னினும் உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

19
3572

வன்மையில் பொருள்மேல் இச்சைஇல் லவன்போல்

வாதிபோல் வார்த்தைகள் வழங்கி
அன்மையில் பிறர்பால் உளவினால் பொருளை

அடிக்கடி வாங்கிய கொடியேன்
இன்மையுற் றவருக் குதவிலேன் பொருளை

எனைவிடக் கொடியருக் கீந்தேன்
நன்மையுற் றறியேன் என்னினும் உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

20
3573

கட்டமே அறியேன் அடுத்தவர் இடத்தே

காசிலே ஆசையில் லவன்போல்
பட்டமே காட்டிப் பணம்பறித் துழன்றேன்

பகல்எலாம் தவசிபோல் இருந்தேன்
இட்டமே இரவில் உண்டயல் புணர்ந்தே

இழுதையிற் றூங்கினேன் களித்து
நட்டமே புரிந்தேன் என்னினும் உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

21
3574

காணியே கருதும் கருத்தினைப் பிறர்க்குக்

காட்டிடா தம்பெலாம் அடங்கும்
தூணியே எனச்சார்ந் திருந்தனன் சோற்றுச்

சுகத்தினால் சோம்பினேன் உதவா
ஏணியே அனையேன் இரப்பவர்க் குமியும்

ஈந்திலேன் ஈந்தவன் எனவே
நாணிலேன் உரைத்தேன் என்னினும் உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

22
3575

அடுத்தவர் மயங்கி மதித்திட நினைத்தேன்

அடிக்கடி பொய்களே புனைந்தே
எடுத்தெடுத் துரைத்தேன் எனக்கெதிர் இலைஎன்

றிகழ்ந்தனன் அகங்கரித் திருந்தேன்
கொடுத்தவர் தமையே மிகவுப சரித்தேன்

கொடாதவர் தமைஇகழ்ந் துரைத்தேன்
நடுத்தய வறியேன் என்னினும் உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

23
3576

எளியவர் விளைத்த நிலமெலாங் கவரும்

எண்ணமே பெரிதுளேன் புன்செய்க்
களியுணும் மனையில் சர்க்கரை கலந்து

காய்ச்சுபால் கேட்டுண்ட கடையேன்
துளியவர்க் குதவேன் விருப்பிலான் போலச்

சுவைபெறச் சுவைத்தநாக் குடையேன்
நளிர்எனச் சுழன்றேன் என்னினும் உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

24
3577

கொலைபல புரிந்தே புலைநுகர்ந் திருந்தேன்

கோடுறு குரங்கினிற் குதித்தே
அலைதரு மனத்தேன் அறிவிலேன் எல்லாம்

அறிந்தவன் போல்பிறர்க் குரைத்தேன்
மலைவுறு சமய வலைஅகப் பட்டே

மயங்கிய மதியினேன் நல்லோர்
நலையல எனவே திரிந்தனன் எனினும்

நம்பினேன் கைவிடேல் எனையே.

25
3578

ஈயெனப் பறந்தேன் எறும்பென உழன்றேன்

எட்டியே எனமிகத் தழைத்தேன்
பேயெனச் சுழன்றேன் பித்தனே எனவாய்ப்

பிதற்றொடும் ஊர்தொறும் பெயர்ந்தேன்
காயெனக் காய்த்தேன் கடையென நடந்தேன்

கல்லெனக் கிடந்தனன் குரைக்கும்
நாயெனத் திரிந்தேன் என்னினும் உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

26
3579

ஒன்றியே உணவை உண்டுடல் பருத்த

ஊத்தையேன் நாத்தழும் புறவே
வென்றியே உரைத்து வினைகளே விளைத்த

வீணனேன் ஊர்தொறுஞ் சுழன்ற
பன்றியே அனையேன் கட்டுவார் அற்ற

பகடெனத் திரிகின்ற படிறேன்
நன்றியே அறியேன் என்னினும் உனையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

27
3580

கவையெலாந் தவிர்ந்த வெறுமரம் அனையேன்

கள்ளனேன் கள்ளுண்ட கடியேன்
சுவையெலாம் விரும்பிச் சுழன்றதோர் கடையேன்

துட்டனேன் தீதெலாந் துணிந்தேன்
இவையெலாம் அந்நாள் உடையனோ அலனோ

இந்தநாள் இறைவநின் அருளால்
நவையெலாம் தவிர்ந்தேன் தூயனாய் நினையே

நம்பினேன் கைவிடேல் எனையே.

28


திருச்சிற்றம்பலம்


16. ஆற்ற மாட்டாமை

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3581

இப்பார் முதல்எண் மூர்த்தமதாய் 

இலங்கும் கருணை எங்கோவே 
தப்பா யினதீர்த் தென்னையும்முன் 

தடுத்தாட் கொண்ட தயாநிதியே 
எப்பா லவரும் புகழ்ந்தேத்தும் 

இறைவா எல்லாம் வல்லோனே 
அப்பா அரசே இனிச்சிறிதும் 

ஆற்ற மாட்டேன் கண்டாயே.

1
3582

புரைசேர் துயரப் புணரிமுற்றும் 

கடத்தி ஞான பூரணமாம் 
கரைசேர்த் தருளி இன்னமுதக் 

கடலைக் குடிப்பித் திடல்வேண்டும் 
உரைசேர் மறையின் முடிவிளங்கும் 

ஒளிமா மணியே உடையானே 
அரைசே அப்பா இனிச்சிறிதும் 

ஆற்ற மாட்டேன் கண்டாயே.

2

3583

கண்ணார் அமுதக் கடலேஎன் 

கண்ணே கண்ணுட் கருமணியே 
தண்ணார் மதியே கதிர்பரப்பித் 

தழைத்த சுடரே தனிக்கனலே 
எண்ணா டரிய பெரியஅண்டம் 

எல்லாம் நிறைந்த அருட்சோதி 
அண்ணா அரசே இனிச்சிறிதும் 

ஆற்ற மாட்டேன் கண்டாயே.

3
3584

பொய்யா தென்றும் எனதுளத்தே 

பொருந்தும் மருந்தே புண்ணியனே 
கையார்ந் திலங்கு மணியேசெங் 

கரும்பே கனியே கடையேற்குச் 
செய்யா உதவி செய்தபெருந் 

தேவே மூவாத் தெள்ளமுதே 
ஐயா அரசே இனிச்சிறிதும் 

ஆற்ற மாட்டேன் கண்டாயே.

4
3585

இத்தா ரணியில் என்பிழைகள் 

எல்லாம் பொறுத்த என்குருவே 
நித்தா சிற்றம் பலத்தாடும் 

நிருத்தா எல்லாஞ் செயவல்ல 
சித்தா சித்தி புரத்தமர்ந்த 

தேவே சித்த சிகாமணியே 
அத்தா அரசே இனிச்சிறிதும் 

ஆற்ற மாட்டேன் கண்டாயே.

5
3586

எம்மே தகவும் உடையவர்தம் 

இதயத் தமர்ந்த இறையவனே 
இம்மே தினியில் எனைவருவித் 

திட்ட கருணை எம்மானே 
நம்மே லவர்க்கும் அறிவரிய 

நாதா என்னை நயந்தீன்ற 
அம்மே அப்பா இனிச்சிறிதும் 

ஆற்ற மாட்டேன்கண்டாயே.

6
3587

செப்பார் கலைகள் மொழிந்தபொருள் 

திறங்கள் அனைத்துந் தெரிந்துதெளிந் 
திப்பா ரிடைநின் புகழ்பாடு 

கின்ற பெரிய ரின்மொழிப்பாட் 
டொப்பாச் சிறியேன் புன்மொழிப்பாட் 

டெல்லாம் உவந்த உடையானே 
அப்பா அரசே இனிச்சிறிதும் 

ஆற்ற மாட்டேன் கண்டாயே.

7
3588

துப்பார் கனகப் பொதுவில்நடத் 

தொழிலால் உலகத் துயர்ஒழிக்கும் 
வைப்பாம் இறைவா சிவகாம 

வல்லிக் கிசைந்த மணவாளா 
ஒப்பார் உயர்ந்தார் இல்லாத 

ஒருவா எல்லாம் உடையானே 
அப்பா அரசே இனிச்சிறிதும் 

ஆற்ற மாட்டேன் கண்டாயே.

8
3589

ஒப்பா ருரைப்பார் நின்பெருமைக் 

கெனமா மறைகள் ஓலமிடும் 
துப்பார் வண்ணச் சுடரேமெய்ச் 

சோதிப் படிக வண்ணத்தாய் 
வெப்பா னவைதீர்த் தெனக்கமுத 

விருந்து புரிதல் வேண்டும்என்றன் 
அப்பா அரசே இனிச்சிறிதும் 

ஆற்ற மாட்டேன் கண்டாயே.

9
3590

வெப்பார் உள்ளக் கலக்கமெலாம் 

இற்றைப் பொழுதே விலக்கிஒழித் 
திப்பா ரிடைஎன் கருத்தின்வண்ணம் 

எல்லாம் விரைவின் ஈந்தருள்க 
ஒப்பால் உரைத்த தன்றுண்மை 

உரைத்தேன் கருணை உடையானே 
அப்பா அரசே இனிச்சிறிதும் 

ஆற்ற மாட்டேன் கண்டாயே.

10


திருச்சிற்றம்பலம் 


17. வாதனைக் கழிவு

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3591

பாழுது விடிந்த தினிச்சிறிதும் 

பொறுத்து முடியேன் எனநின்றே 
அழுது விழிகள் நீர்துளும்பக் 

கூவிக் கூவி அயர்கின்றேன் 
பழுது தவிர்க்கும் திருச்செவிக்குள் 

பட்ட திலையோ பலகாலும்235 
உழுது களைத்த மாடனையேன் 

துணைவே றறியேன் உடையானே.

1
 235. பலநாளும் - ச. மு. க. பதிப்பு. 
3592

உடையாய் திருஅம் பலத்தாடல் 

ஒருவா ஒருவா உலவாத 
கொடையாய் எனநான் நின்றனையே 

கூவிக் கூவி அயர்கின்றேன் 
தடையா யினதீர்த் தருளாதே 

தாழ்க்கில் அழகோ புலைநாயிற் 
கடையாய்த் திரிந்தேன் கலங்குதல்சம் 

மதமோ கருணைக் கருத்தினுக்கே.

2
3593

கருணைக் கருத்து மலர்ந்தெனது 

கலக்க மனைத்துந் தவிர்த்தேஇத் 
தருணத் தருளா விடில்அடியேன் 

தரியேன் தளர்வேன் தளர்வதுதான் 
அருணச் சுடரே நின்னருளுக் 

கழகோ அழகென் றிருப்பாயேல் 
தெருணற் பதஞ்சார் அன்பரெலாம்236 

சிரிப்பார் நானும் திகைப்பேனே.

3
 236. அடியரெலாம் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா. 
3594

திகைப்பார் திகைக்க நான்சிறிதும் 

திகையேன் எனநின் திருவடிக்கே 
வகைப்பா மாலை சூட்டுகின்றேன் 

மற்றொன் றறியேன் சிறியேற்குத் 
தகைப்பா ரிடைஇத் தருணத்தே 

தாராய் எனிலோ பிறரெல்லாம் 
நகைப்பார் நகைக்க உடம்பினைவைத் 

திருத்தல் அழகோ நாயகனே.

4
3595

நாயிற் கடையேன் கலக்கமெலாம் 

தவிர்த்து நினது நல்லருளை 
ஈயிற் கருணைப் பெருங்கடலே 

என்னே கெடுவ தியற்கையிலே 
தாயிற் பெரிதும்237 தயவுடையான் 

குற்றம் புரிந்தோன் தன்னையும்ஓர் 
சேயிற் கருதி அணைத்தான்என் 

றுரைப்பா ருனைத்தான் தெரிந்தோரே.

5
 237. தாயிற் பெரிய - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா. 
3596

தெரிந்த பெரியர்க் கருள்புரிதல் 

சிறப்பென் றுரைத்த தெய்வமறை 
திரிந்த சிறியர்க் கருள்புரிதல் 

சிறப்பிற் சிறப்பென் றுரைத்தனவே 
புரிந்தம் மறையைப் புகன்றவனும் 

நீயே என்றால் புண்ணியனே 
விரிந்த மனத்துச் சிறியேனுக் 

கிரங்கி அருளல் வேண்டாவோ.

6
3597

வேண்டார் உளரோ நின்னருளை 

மேலோ ரன்றிக் கீழோரும் 
ஈண்டார் வதற்கு வேண்டினரால் 

இன்று புதிதோ யான்வேண்டல் 
தூண்டா விளக்கே திருப்பொதுவிற் 

சோதி மணியே ஆறொடுமூன் 
றாண்டா வதிலே முன்னென்னை 

ஆண்டாய் கருணை அளித்தருளே.

7
3598

அருளே வடிவாம் அரசேநீ 

அருளா விடில்இவ் வடியேனுக் 
கிருளே தொலைய அருளளிப்பார் 

எவரே எல்லாம் வல்லோய்நின் 
பொருளேய் வடிவிற் கலைஒன்றே 

புறத்தும் அகத்தும் புணர்ந்தெங்குந் 
தெருளே யுறஎத் தலைவருக்குஞ் 

சிறந்த அருளாய்த் திகழ்வதுவே.

8
3599

திகழ்ந்தார் கின்ற திருப்பொதுவில் 

சிவமே நின்னைத் தெரிந்துகொண்டு
புகழ்ந்தார் தம்மைப் பொறுத்திடவும் 

புன்மை அறிவால் பொய்உரைத்தே 
இகழ்ந்தேன் தனைக்கீழ் வீழ்த்திடவும் 

என்னே புவிக்கிங் கிசைத்திலைநீ
அகழ்ந்தார் தமையும் பொறுக்கஎன 

அமைத்தாய் எல்லாம் அமைத்தாயே.

9
3600

எல்லாம் வகுத்தாய் எனக்கருளில் 

஡ரே தடுப்பார் எல்லாஞ்செய் 
வல்லான் வகுத்த வண்ணம்என 

மகிழ்வார் என்கண் மணியேஎன் 
சொல்லா னவையும் அணிந்துகொண்ட 

துரையே சோதித் திருப்பொதுவில் 
நல்லாய் கருணை நடத்தரசே 

தருணம் இதுநீ நயந்தருளே.

10
3601

நயந்த கருணை நடத்தரசே 

ஞான அமுதே நல்லோர்கள் 
வியந்த மணியே மெய்யறிவாம் 

விளக்கே என்னை விதித்தோனே 
கயந்த மனத்தேன் எனினும்மிகக் 

கலங்கி நரகக் கடுங்கடையில் 
பயந்த பொழுதும் தாழ்த்திருத்தல் 

அழகோ கடைக்கண் பார்த்தருளே.

11
3602

பார்த்தார் இரங்கச் சிறியேன்நான் 

பாவி மனத்தால் பட்டதுயர் 
தீர்த்தாய் அந்நாள் அதுதொடங்கித் 

தெய்வந் துணைஎன் றிருக்கின்றேன் 
சேர்த்தார்238 உலகில் இந்நாளில் 

சிறியேன் தனைவெந் துயர்ப்பாவி 
ஈர்த்தால் அதுகண் டிருப்பதுவோ 

கருணைக் கழகிங் கெந்தாயே.

12
 238. சேர்த்தாய் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா. 
3603

தாயே எனைத்தான் தந்தவனே 

தலைவா ஞான சபாபதியே 
பேயேன் செய்த பெருங்குற்றம் 

பொறுத்தாட் கொண்ட பெரியோனே 
நீயே இந்நாள் முகமறியார் 

நிலையில் இருந்தால் நீடுலகில் 
நாயே அனையேன் எவர்துணைஎன் 

றெங்கே புகுவேன் நவிலாயே.

13
3604

ஆயேன் வேதா கமங்களைநன் 

கறியேன் சிறியேன் அவலமிகும் 
பேயேன் எனினும் வலிந்தென்னைப் 

பெற்ற கருணைப் பெருமானே 
நீயே அருள நினைத்தாயேல் 

எல்லா நலமும் நிரம்புவன்நான் 
காயே எனினும் கனிஆகும் 

அன்றே நினது கருணைக்கே.

14
3605

கருணா நிதியே என்இரண்டு 

கண்ணே கண்ணிற் கலந்தொளிரும் 
தெருணா டொளியே வெளியேமெய்ச் 

சிவமே சித்த சிகாமணியே 
இருணா டுலகில் அறிவின்றி 

இருக்கத் தரியேன் இதுதருணம் 
தருணா அடியேற் கருட்சோதி 

தருவாய் என்முன் வருவாயே.

15
3606

வருவாய் என்கண் மணிநீஎன் 

மனத்திற் குறித்த வண்ணமெலாம் 
தருவாய் தருணம் இதுவேமெய்த் 

தலைவா ஞான சபாபதியே 
உருவாய்239 சிறிது தாழ்க்கில்உயிர் 

ஒருவும் உரைத்தேன் என்னுடைவாய் 
இருவாய் அலநின் திருவடிப்பாட் 

டிசைக்கும் ஒருவாய் இசைத்தேனே.

16
 239. ஒருவா - ச. மு. க. 
3607

தேனே திருச்சிற் றம்பலத்தில் 

தெள்ளா ரமுதே சிவஞான 
வானே ஞான சித்தசிகா 

மணியே என்கண் மணியேஎன் 
ஊனே புகுந்தென் உளங்கலந்த 

உடையாய் அடியேன் உவந்திடநீ 
தானே மகிழ்ந்து தந்தாய்இத் 

தருணம் கைம்மா றறியேனே.

17
3608

அறியேன் சிறியேன் செய்தபிழை 

அனைத்தும் பொறுத்தாய் அருட்சோதிக் 
குறியே குணமே பெறஎன்னைக் 

குறிக்கொண் டளித்தாய் சன்மார்க்க 
நெறியே விளங்க எனைக்கலந்து 

நிறைந்தாய் நின்னை ஒருகணமும் 
பிறியேன் பிறியேன் இறவாமை 

பெற்றேன் உற்றேன் பெருஞ்சுகமே.

18
3609

சுகமே நிரம்பப் பெருங்கருணைத் 

தொட்டில் இடத்தே எனைஅமர்த்தி 
அகமே விளங்கத் திருஅருளார் 

அமுதம் அளித்தே அணைத்தருளி 
முகமே மலர்த்திச் சித்திநிலை 

முழுதும் கொடுத்து மூவாமல் 
சகமேல்240 இருக்கப் புரிந்தாயே 

தாயே என்னைத் தந்தாயே.

19
 240. சகமே - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க. 
3610

தந்தாய் இன்றும் தருகின்றாய் 

தருவாய் மேலுந் தனித்தலைமை 
எந்தாய் நினது பெருங்கருணை 

என்என் றுரைப்பேன் இவ்வுலகில் 
சிந்தா குலந்தீர்த் தருள்எனநான் 

சிறிதே கூவு முன்என்பால் 
வந்தாய் கலந்து மகிழ்கின்றாய் 

எனது பொழுது வான்பொழுதே.

20


திருச்சிற்றம்பலம் 


18. அபயம் இடுதல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3611

உருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய் 

உலவா ஒருபேர் அருளார் அமுதம் 
தருவாய் இதுவே தருணம் தருணம் 

தரியேன் சிறிதுந் தரியேன் இனிநீ 
வருவாய் அலையேல் உயிர்வாழ் கலன்நான் 

மதிசேர் முடிஎம் பதியே அடியேன் 
குருவாய் முனமே மனமே இடமாக் 

குடிகொண் டவனே அபயம் அபயம்.

1
3612

என்னே செய்வேன் செய்வகை ஒன்றிங் 

கிதுஎன் றருள்வாய் இதுவே தருணம் 
மன்னே அயனும் திருமா லவனும் 

மதித்தற் கரிய பெரிய பொருளே 
அன்னே அப்பா ஐயா அரசே 

அன்பே அறிவே அமுதே அழியாப் 
பொன்னே மணியே பொருளே அருளே 

பொதுவாழ் புனிதா அபயம் அபயம்.

2
3613

கருணா நிதியே அபயம் அபயம் 

கனகா கரனே அபயம் அபயம் 
அருணா டகனே அபயம் அபயம் 

அழகா அமலா அபயம் அபயம் 
தருணா தவனே அபயம் அபயம் 

தனிநா யகனே அபயம் அபயம் 
தெருணா டுறுவாய் அபயம் அபயம் 

திருவம் பலவா அபயம் அபயம்.

3
3614

மருளும் துயரும் தவிரும் படிஎன் 

மனமன் றிடைநீ வருவாய் அபயம் 
இருளும் பவமும் பெறுவஞ் சகநெஞ் 

சினன்என் றிகழேல் அபயம் அபயம் 
வெருளும் கொடுவெம் புலையும் கொலையும் 

விடுமா றருள்வாய் அபயம் அபயம் 
அருளும் பொருளும் தெருளும் தருவாய் 

அபயம் அபயம் அபயம் அபயம்.

4
3615

இனிஓர் இறையும் தரியேன் அபயம் 

இதுநின் அருளே அறியும் அபயம் 
கனியேன் எனநீ நினையேல் அபயம் 

கனியே241 கருணைக் கடலே அபயம் 
தனியேன் துணைவே றறியேன் அபயம் 

தகுமோ தகுமோ தலைவா அபயம் 
துனியே அறவந் தருள்வாய் அபயம் 

சுகநா டகனே அபயம் அபயம்.

5
 241. களியே - படிவேறுபாடு. ஆ. பா. 
3616

அடியார் இதயாம் புயனே அபயம் 

அரசே அமுதே அபயம் அபயம் 
முடியா தினிநான் தரியேன் அபயம் 

முறையோ முறையோ முதல்வா அபயம் 
கடியேன் அலன்நான் அபயம் அபயம் 

கருணா கரனே அபயம் அபயம் 
தடியேல் அருள்வாய் அபயம் அபயம் 

தருணா தவனே அபயம் அபயம்.

6
3617

மலவா தனைதீர் கலவா அபயம் 

வலவா திருஅம் பலவா அபயம் 
உலவா நெறிநீ சொலவா அபயம் 

உறைவாய் உயிர்வாய் இறைவா அபயம் 
பலஆ குலம்நான் தரியேன் அபயம் 

பலவா பகவா பனவா அபயம் 
நலவா அடியேன் அலவா அபயம் 

நடநா யகனே அபயம் அபயம்.

7
3618

கொடியேன் பிழைநீ குறியேல் அபயம் 

கொலைதீர் நெறிஎன் குருவே அபயம் 
முடியேன் பிறவேன் எனநின் அடியே 

முயல்வேன் செயல்வே றறியேன் அபயம் 
படியே அறியும் படியே வருவாய் 

பதியே கதியே பரமே அபயம் 
அடியேன் இனிஓர் இறையும் தரியேன் 

அரசே அருள்வாய் அபயம் அபயம்.

8
3619

இடர்தீர் நெறியே அருள்வாய் அபயம் 

இனிநான் தரியேன் தரியேன் அபயம் 
விடர்போல் எனைநீ நினையேல் அபயம் 

விடுவேன் அலன்நான் அபயம் அபயம் 
உடலோ டுறுமா பொருள்ஆ வியும்இங் 

குனவே எனவே அலவே அபயம் 
சுடர்மா மணியே அபயம் அபயம் 

சுகநா டகனே அபயம் அபயம்.

9
3620

குற்றம் பலஆ யினும்நீ குறியேல் 

குணமே கொளும்என் குருவே அபயம் 
பற்றம் பலமே அலதோர் நெறியும் 

பதியே அறியேன் அடியேன் அபயம் 
சுற்றம் பலவும் உனவே எனவோ 

துணைவே றிலைநின் துணையே அபயம் 
சிற்றம் பலவா அருள்வாய் இனிநான் 

சிறிதுந் தரியேன் தரியேன் அபயம்.

10


திருச்சிற்றம்பலம் 


19. பிரிவாற்றாமை

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3621போக மாட்டேன் பிறரிடத்தே பொய்யிற் கிடந்து புலர்ந்துமனம் 
வேக மாட்டேன் பிறிதொன்றும் விரும்ப மாட்டேன் பொய்யுலகன் 
ஆக மாட்டேன் அரசேஎன் அப்பா என்றன் ஐயாநான் 
சாக மாட்டேன் உனைப்பிரிந்தால் தரிக்க மாட்டேன் கண்டாயே.
1
3622செல்ல மாட்டேன் பிறரிடத்தே சிறிதுந் தரியேன் தீமொழிகள் 
சொல்ல மாட்டேன் இனிக்கணமுந் துயர மாட்டேன் சோம்பன்மிடி 
புல்ல மாட்டேன் பொய்யொழுக்கம் பொருந்த மாட்டேன் பிறஉயிரைக்
கொல்ல மாட்டேன் உனைஅல்லால் குறிக்க மாட்டேன் கனவிலுமே242
2
 242. கண்டாயே - முதற்பதிப்பு, பொ. க., ச.மு.க. 
3623வெறுக்க மாட்டேன் நின்றனையே விரும்பிப் பிடித்தேன் துயர்சிறிதும் 
பொறுக்க மாட்டேன் உலகவர்போல் பொய்யிற் கிடந்து புரண்டினிநான்
சிறுக்க மாட்டேன் அரசேநின் திருத்தாள் ஆணை நின்ஆணை 
மறுக்க மாட்டேன் வழங்குவன எல்லாம் வழங்கி வாழியவே.
3
3624கருணைப் பெருக்கே ஆனந்தக் கனியே என்னுட் கலந்தொளிரும் 
தருணச் சுடரே எனைஈன்ற தாயே என்னைத் தந்தோனே 
வருணப் படிக மணிமலையே மன்றில் நடஞ்செய் வாழ்வேநற் 
பொருண்மெய்ப் பதியே இனித்துயரம் பொறுக்க மாட்டேன் கண்டாயே.
4
3625திண்ணம் பழுத்த சிந்தையிலே தித்தித் துலவாச் சுயஞ்சோதி 
வண்ணம் பழுத்த தனிப்பழமே மன்றில் விளங்கு மணிச்சுடரே 
தண்ணம் பழுத்த மதிஅமுதே தருவாய் இதுவே தருணம்என்றன் 
எண்ணம் பழுத்த தினிச்சிறியேன் இறையுந் தரியேன் தரியேனே.
5
3626நாட்டுக் கிசைந்த மணிமன்றில் ஞான வடிவாய் நடஞ்செயருள் 
ஆட்டுக் கிசைந்த பெருங்கருணை அப்பா என்றன் அரசேஎன் 
பாட்டுக் கிசைந்த பதியேஓர் பரமா னந்தப் பழமேமேல் 
வீட்டுக் கிசைந்த விளக்கேஎன் விவேகம் விளங்க விளக்குகவே.
6
3627வேதந் தலைமேற் கொளவிரும்பி வேண்டிப் பரவு நினதுமலர்ப் 
பாதந் தலைமேற் சூட்டிஎனைப் பணிசெய் திடவும் பணித்தனைநான் 
சாதந் தலைமேல் எடுத்தொருவர் தம்பின் செலவும் தரமில்லேன் 
ஏதந் தலைமேற் சுமந்தேனுக் கிச்சீர் கிடைத்த243 தெவ்வாறே.
7
 243. கொடுத்த - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா. ச.மு.க. 
3628பொய்விட் டகலாப் புலைக்கொடியேன் பொருட்டா இரவில் போந்தொருநின் 
கைவிட் டகலாப் பெரும்பொருள்என் கையிற் கொடுத்தே களிப்பித்தாய்
மைவிட் டகலா விழிஇன்ப வல்லி மகிழும் மணவாளா 
மெய்விட் டகலா மனத்தவர்க்கு வியப்பாம் உனது மெய்யருளே.
8
3629சாமத் திரவில் எழுந்தருளித் தமியேன் தூக்கந் தடுத்துமயல் 
காமக் கடலைக் கடத்திஅருட் கருணை அமுதங் களித்தளித்தாய் 
நாமத் தடிகொண் டடிபெயர்க்கும் நடையார் தமக்கும் கடையானேன் 
ஏமத் தருட்பே றடைந்தேன்நான் என்ன தவஞ்செய் திருந்தேனே.
9
3630பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட் 
சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய் 
நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை 
ஓதி முடியா தென்போல்இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.
10


திருச்சிற்றம்பலம்


20. இறை பொறுப் பியம்பல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3631

தேடிய துண்டு நினதுரு வுண்மை 

தெளிந்திடச் சிறிதுநின் னுடனே 
ஊடிய துண்டு பிறர்தமை அடுத்தே 

உரைத்ததும் உவந்ததும் உண்டோ 
ஆடிய பாதம் அறியநான் அறியேன் 

அம்பலத் தரும்பெருஞ் சோதி 
கூடிய நின்னைப் பிரிகிலேன் பிரிவைக் 

கூறவுங் கூசும்என் நாவே.

1
3632

மடம்புரி மனத்தாற் கலங்கிய துண்டு 

வள்ளலே நின்திரு வரவுக் 
கிடம்புரி சிறியேன் கலங்கினேன் எனினும் 

இறையும்வே றெண்ணிய துண்டோ 
நடம்புரி பாதம் அறியநான் அறியேன் 

நான்செயும் வகையினி நன்றே 
திடம்புரிந் தருளிக் காத்திடல் வேண்டும் 

சிறிதும் நான் பொறுக்கலேன் சிவனே.

2
3633

நீக்கிய மனம்பின் அடுத்தெனைக் கலக்கி 

நின்றதே அன்றிநின் அளவில் 
நோக்கிய நோக்கம் பிறவிட யத்தே 

நோக்கிய திறையும் இங்குண்டோ 
தூக்கிய பாதம் அறியநான் அறியேன் 

துயரினிப் பொறுக்கலேன் சிறிதும் 
தேக்கிய களிப்பில் சிறப்பவந் தென்னைத் 

தெளிவித்தல் நின்கடன் சிவனே.

3
3634

ஈன்றநற் றாயுந் தந்தையும் குருவும் 

என்னுயிர்க் கின்பமும் பொதுவில் 
ஆன்றமெய்ப் பொருளே என்றிருக் கின்றேன் 

அன்றிவே றெண்ணிய துண்டோ 
ஊன்றிய பாதம் அறியநான் அறியேன் 

உறுகணிங் காற்றலேன் சிறிதும் 
தோன்றிஎன் உளத்தே மயக்கெலாந் தவிர்த்துத் 

துலக்குதல் நின்கடன் துணையே.

4
3635

மாயையாற் கலங்கி வருந்திய போதும் 

வள்ளல்உன் தன்னையே மதித்துன் 
சாயையாப்244 பிறரைப் பார்த்ததே அல்லால் 

தலைவவே245 றெண்ணிய துண்டோ 
தூயபொற் பாதம் அறியநான் அறியேன் 

துயர்இனிச் சிறிதும்இங் காற்றேன் 
நாயகா எனது மயக்கெலாம் தவிர்த்தே 

நன்றருள் புரிவதுன் கடனே.

5
 244. சாயையாற் 
245. தலைவரென் - படிவேறுபாடுகள். ஆ. பா.
 
3636

வண்ணம் வேறெனினும் வடிவுவே றெனினும் 

மன்னிய உண்மை ஒன்றென்றே 
எண்ணிய தல்லால் சச்சிதா னந்தத் 

திறையும்வே றெண்ணிய துண்டோ 
அண்ணல்நின் பாதம் அறியநான் அறியேன் 

அஞர்இனிச் சிறிதும்இங் காற்றேன் 
திண்ணமே நின்மேல் ஆணைஎன் தன்னைத் 

தெளிவித்துக் காப்பதுன் கடனே.

6
3637

ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில் 

உற்றகற் பனைகளும் தவிர்ந்தேன் 
வாடல்செய் மனத்தால் கலங்கினேன் எனினும் 

மன்றினை மறந்ததிங் குண்டோ 
ஆடல்செய் பாதம் அறியநான் அறியேன் 

ஐயவோ சிறிதும்இங் காற்றேன் 
பாடல்செய் கின்றேன் படிக்கின்றேன் எனக்குப் 

பரிந்தருள் புரிவதுன் கடனே.

7
3638

உள்ளதே உள்ள திரண்டிலை எல்லாம் 

ஒருசிவ மயமென உணர்ந்தேன் 
கள்ளநேர் மனத்தால் கலங்கினேன் எனினும் 

கருத்தயல் கருதிய துண்டோ 
வள்ளலுன் பாதம் அறியநான் அறியேன் 

மயக்கினிச் சிறிதும்இங் காற்றேன் 
தெள்ளமு தருளி மயக்கெலாம் தவிர்த்தே 

தெளிவித்தல் நின்கடன் சிவனே.

8
3639

எம்மத நிலையும் நின்னருள் நிலையில் 

இலங்குதல் அறிந்தனன் எல்லாம் 
சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால் 

தனித்துவே றெண்ணிய துண்டோ 
செம்மலுன் பாதம் அறியநான் அறியேன் 

சிறிதும்இங் கினித்துயர் ஆற்றேன் 
இம்மதிக் கடியேன் குறித்தவா றுள்ள 

தியற்றுவ துன்கடன் எந்தாய்.

9
3640

அகம்புறம் மற்றை அகப்புறம் புறத்தே 

அடுத்திடும் புறப்புறம் நான்கில் 
இகந்ததும் இலைஓர் ஏகதே சத்தால் 

இறையும்இங் கெண்ணிய துண்டோ 
உகந்தநின் பாதம் அறியநான் அறியேன் 

உறுகணிங் கினிச்சிறி துந்தான் 
இகம்பெறல் ஆற்றேன் மயக்கெலாம் தவிர்த்திங் 

கென்னைஆண் டருள்வ துன்கடனே.

10


திருச்சிற்றம்பலம் 


21. கைம்மாறின்மை

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3641இழைஎலாம் விளங்கும் அம்மை இடங்கொள்நின் கருணை என்னும் 
மழைஎலாம் பொழிந்தென் உள்ள மயக்கெலாம் தவிர்த்து நான்செய் 
பிழைஎலாம் பொறுத்த உன்றன் பெருமைக்கென் புரிவேன் அந்தோ 
உழைஎலாம் இலங்குஞ் சோதி உயர்மணி மன்று ளானே.
1
3642போதுதான் வீணே போக்கிப் புலையனேன் புரிந்த பொல்லாத் 
தீதுதான் பொறுத்த உன்றன் திருவருட் பெருமைக் கந்தோ 
ஏதுதான் புரிவேன் ஓகோ என்என்று புகழ்வேன் ஞான 
மாதுதான் இடங்கொண் டோ ங்க வயங்குமா மன்று ளானே.
2
3643சிற்றறி வுடையன் ஆகித் தினந்தொறும் திரிந்து நான்செய் 
குற்றமும் குணமாக் கொண்ட குணப்பெருங் குன்றே என்னைப் 
பெற்றதா யுடனுற் றோங்கும் பெருமநின் பெருமை தன்னைக் 
கற்றறி வில்லேன் எந்தக் கணக்கறிந் துரைப்பேன் அந்தோ.
3
3644மையரி நெடுங்க ணார்தம் வாழ்க்கையின் மயங்கி இங்கே 
பொய்யறி வுடையேன் செய்த புன்மைகள் பொறுத்தாட் கொண்டாய் 
ஐயறி வுடையார் போற்றும் அம்பலத் தரசே நின்சீர் 
மெய்யறி வறியேன் எந்த விளைவறிந் துரைப்பேன் அந்தோ.
4
3645பேயினும் பெரியேன் செய்த பிழைகளுக் கெல்லை இல்லை 
ஆயினும் பொறுத்தாட் கொண்டாய் அம்பலத் தரசே என்றன் 
தாயினும் இனிய உன்றன் தண்அருட் பெருமை தன்னை 
நாயினுங் கடையேன் எந்த நலமறிந் துரைப்பேன் அந்தோ.
5
3646துரும்பினில் சிறியேன் வஞ்சம் சூழ்ந்தநெஞ் சகத்தேன் செய்த 
பெரும்பிழை அனைத்தும் அந்தோ பெருங்குண மாகக்கொண்டாய் 
அரும்பொருள் என்ன வேதம் ஆகமம் வழுத்து கின்ற 
கரும்பினில் இனியாய் உன்றன் கருணைஎன் என்பேன் அந்தோ.
6
3647வரைகடந் தடியேன் செய்த வன்பிழை பொறுத்தாட் கொண்டாய் 
திரைகடந் தண்ட பிண்டத் திசைஎலாம் கடந்தே அப்பால் 
கரைகடந் தோங்கும் உன்றன் கருணையங் கடற்சீர் உள்ளம் 
உரைகடந் ததுஎன் றால்யான் உணர்வதென் உரைப்ப தென்னே.
7
3648நனவினும் பிழையே செய்தேன் நாயினும் கடையேன் அந்தோ 
கனவினும் பிழையே செய்தேன் கருணைமா நிதியே நீதான் 
நினைவினும் குறியா தாண்டாய் நின்னருட் பெருமை தன்னை 
வினவினும் சொல்வார் காணேன் என்செய்வேன் வினைய னேனே.
8
3649வன்செயல் பொறுத்தாட் கொண்ட வள்ளலே அடிய னேன்றன் 
முன்செயல் அவைக ளோடு முடுகுபின் செயல்கள் எல்லாம் 
என்செயல் ஆகக் காணேன் எனைக்கலந் தொன்றாய் நின்றோய் 
நின்செயல் ஆகக் கண்டேன் கண்டபின் நிகழ்த்தல் என்னே.
9
3650இருமையும் ஒருமை தன்னில் ஈந்தனை எந்தாய் உன்றன் 
பெருமைஎன் என்று நான்தான் பேசுவேன் பேதம் இன்றி 
உரிமையால் யானும் நீயும் ஒன்றெனக் கலந்து கொண்ட 
ஒருமையை நினைக்கின் றேன்என் உள்ளகந் தழைக்கின் றேனே.
10


திருச்சிற்றம்பலம் 


22. நடராசபதி மாலை

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3651

அருள்நிலை விளங்குசிற் றம்பலம்எ னுஞ்சிவ சுகாதீத வெளிநடுவிலே 

அண்டபகி ரண்டகோ டிகளும் சராசரம் அனைத்தும்அவை ஆக்கல்முதலாம் 
பொருள்நிலைச் சத்தரொடு சத்திகள் அனந்தமும் பொற்பொடுவி ளங்கிஓங்கப் 

புறப்புறம் அகப்புறம் புறம்அகம் இவற்றின்மேல் பூரணா காரமாகித் 
தெருள்நிலைச் சச்சிதா னந்தகிர ணாதிகள் சிறப்பமுதல் அந்தம்இன்றித் 

திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்திஅனு பவநிலை தெளிந்திட வயங்குசுடரே 
சுருள்நிலைக் குழலம்மை ஆனந்த வல்லிசிவ சுந்தரிக் கினியதுணையே 

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.

1
3652

என்இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே இதயத்தி லேதயவிலே 

என்உயிரி லேஎன்றன் உயிரினுக் குயிரிலே என்இயற் குணம்அதனிலே 
இன்இயல்என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே என்செவிப் புலன்இசையிலே 

என்இருகண் மணியிலே என்கண்மணி ஒளியிலே என்அனு பவந்தன்னிலே 
தன்இயல்என் அறிவிலே அறிவினுக் கறிவிலே தானே கலந்துமுழுதும் 

தன்மயம தாக்கியே தித்தித்து மேன்மேல் ததும்பிநிறை கின்றஅமுதே 
துன்னிய பெருங்கருணை வெள்ளமே அழியாத சுகமே சுகாதீதமே 

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.

2
3653

உடல்எலாம் உயிர்எலாம் உளம்எலாம் உணர்வெலாம் உள்ளனஎ லாங்கலந்தே 

ஒளிமயம தாக்கிஇருள் நீக்கிஎக் காலத்தும் உதயாத்த மானம்இன்றி 
இடல்எலாம் வல்லசிவ சத்திகிர ணாங்கியாய் ஏகமாய் ஏகபோக 

இன்பநிலை என்னும்ஒரு சிற்சபையின் நடுவே இலங்கிநிறை கின்றசுடரே 
கடல்எலாம் புவிஎலாம் கனல்எலாம் வளிஎலாம் ககன்எலாம் கண்டபரமே 

காணாத பொருள்எனக் கலைஎலாம் புகலஎன் கண்காண வந்தபொருளே 
தொடல்எலாம் பெறஎனக் குள்ளும் புறத்தும்மெய்த் துணையாய் விளங்கும்அறிவே 

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.

3
3654

மெய்தழைய உள்ளங் குளிர்ந்துவகை மாறாது மேன்மேற் கலந்துபொங்க 

விச்சைஅறி வோங்கஎன் இச்சைஅறி வனுபவம் விளங்கஅறி வறிவதாகி 
உய்தழை வளித்தெலாம் வல்லசித் ததுதந் துவட்டாதுள் ஊறிஊறி 

ஊற்றெழுந் தென்னையும் தானாக்கி என்னுளே உள்ளபடி உள்ளஅமுதே 
கைதழைய வந்தவான் கனியே எலாங்கண்ட கண்ணே கலாந்தநடுவே 

கற்பனைஇ லாதோங்கு சிற்சபா மணியே கணிப்பருங் கருணைநிறைவே 
துய்தழை பரப்பித் தழைந்ததரு வேஅருட் சுகபோக யோகஉருவே 

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.

4
3655

எண்ணிலா அண்டபகி ரண்டத்தின் முதலிலே இடையிலே கடையிலேமேல் 

ஏற்றத்தி லேஅவையுள் ஊற்றத்தி லேதிர டெய்துவடி வந்தன்னிலே 
கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே கருவிலே தன்மைதனிலே 

கலையாதி நிலையிலே சத்திசத் தாகிக் கலந்தோங்கு கின்றபொருளே 
தெண்ணிலாக் காந்தமணி மேடைவாய்க் கோடைவாய்ச் சேர்ந்தனு பவித்தசுகமே 

சித்தெலாஞ் செயவல்ல தெய்வமே என்மனத் திருமாளி கைத்தீபமே 
துண்ணுறாச் சாந்தசிவ ஞானிகள் உளத்தே சுதந்தரித் தொளிசெய்ஒளியே 

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.

5
3656

அம்புவியி லேபுவியின் அடியிலே முடியிலே அம்மண்ட லந்தன்னிலே 

அகலத்தி லேபுவியின் அகிலத்தி லேஅவைக் கானவடி வாதிதனிலே 
விம்பமுற வேநிறைந் தாங்கவை நிகழ்ந்திட விளக்கும்அவை அவையாகியே 

மேலும்அவை அவையாகி அவைஅவைஅ லாததொரு மெய்ந்நிலையும் ஆனபொருளே 
தம்பமிசை எனைஏற்றி அமுதூற்றி அழியாத் தலத்திலுற வைத்தஅரசே 

சாகாத வித்தைக் கிலக்கண இலக்கியம் தானாய்இ ருந்தபரமே 
தொம்பதமும் உடனுற்ற தற்பதமும் அசிபதச் சுகமும்ஒன் றானசிவமே 

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.

6
3657

நீரிலே நீர்உற்ற நிறையிலே நிறைஉற்ற நிலையிலே நுண்மைதனிலே 

நிகழ்விலே நிகழ்வுற்ற திகழ்விலே நிழலிலே நெகிழிலே தண்மைதனிலே 
ஊரிலே அந்நீரின் உப்பிலே உப்பிலுறும் ஒண்சுவையி லேதிரையிலே 

உற்றநீர்க் கீழிலே மேலிலே நடுவிலே உற்றியல் உறுத்தும்ஒளியே 
காரிலே ஒருகோடி பொழியினும் துணைபெறாக் கருணைமழை பொழிமேகமே 

கனகசபை நடுநின்ற கடவுளே சிற்சபைக் கண்ணோங்கும் ஒருதெய்வமே 
தூரிலே பலமளித் தூரிலே வளர்கின்ற சுகசொருப மானதருவே 

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.

7
3658

ஒள்ளிய நெருப்பிலே உப்பிலே ஒப்பிலா ஒளியிலே சுடரிலேமேல் 

ஓட்டிலே சூட்டிலே உள்ளாடும் ஆட்டிலே உறும்ஆதி அந்தத்திலே 
தெள்ளிய நிறத்திலே அருவத்தி லேஎலாம் செயவல்ல செய்கைதனிலே 

சித்தாய் விளங்கிஉப சித்தாய சத்திகள் சிறக்கவளர் கின்றஒளியே 
வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத வானமே ஞானமயமே 

மணியேஎன் இருகண்ணுள் மணியேஎன் உயிரேஎன் வாழ்வேஎன் வாழ்க்கைவைப்பே 
துள்ளிய மனப்பேயை உள்ளுற அடக்கிமெய்ச் சுகம்எனக் கீந்ததுணையே 

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.

8
3659

அறைகின்ற காற்றிலே காற்றுப்பி லேகாற்றின் ஆதிநடு அந்தத்திலே 

ஆனபல பலகோடி சத்திகளின் உருவாகி ஆடும்அதன் ஆட்டத்திலே 
உறைகின்ற நிறைவிலே ஊக்கத்தி லேகாற்றின் உற்றபல பெற்றிதனிலே 

ஓங்கிஅவை தாங்கிமிகு பாங்கினுறு சத்தர்கட் குபகரித் தருளும்ஒளியே 
குறைகின்ற மதிநின்று கூசஓர் ஆயிரம் கோடிகிர ணங்கள்வீசிக் 

குலஅமுத மயமாகி எவ்வுயி ரிடத்தும் குலாவும்ஒரு தண்மதியமே 
துறைநின்று பொறைஒன்று தூயர்அறி வாற்கண்ட சொருபமே துரியபதமே 

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.

9
3660

வானிலே வானுற்ற வாய்ப்பிலே வானின்அரு வத்திலே வான்இயலிலே 

வான்அடியி லேவானின் நடுவிலே முடியிலே வண்ணத்தி லேகலையிலே 
மானிலே நித்திய வலத்திலே பூரண வரத்திலே மற்றையதிலே 

வளரனந் தானந்த சத்தர்சத் திகள்தம்மை வைத்தஅருள் உற்றஒளியே 
தேனிலே பாலிலே சர்க்கரையி லேகனித் திரளிலே தித்திக்கும்ஓர் 

தித்திப்பெ லாங்கூட்டி உண்டாலும் ஒப்பெனச் செப்பிடாத் தெள்ளமுதமே 
தூநிலா வண்ணத்தில் உள்ளோங்கும் ஆனந்த சொருபமே சொருபசுகமே 

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.

10
3661

என்றிரவி தன்னிலே இரவிசொரு பத்திலே இயல்உருவி லேஅருவிலே 

ஏறிட்ட சுடரிலே சுடரின்உட் சுடரிலே எறிஆத பத்திரளிலே 
ஒன்றிரவி ஒளியிலே ஓங்கொளியின் ஒளியிலே ஒளிஒளியின் ஒளிநடுவிலே 

ஒன்றாகி நன்றாகி நின்றாடு கின்றஅருள் ஒளியேஎன் உற்றதுணையே 
அன்றிரவில் வந்தெனக் கருள்ஒளி அளித்தஎன் அய்யனே அரசனேஎன் 

அறிவனே அமுதனே அன்பனே இன்பனே அப்பனே அருளாளனே 
துன்றியஎன் உயிரினுக் கினியனே தனியனே தூயனே என்நேயனே 

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.

11
3662

அணிமதியி லேமதியின் அருவிலே உருவிலே அவ்வுருவின் உருவத்திலே 

அமுதகிர ணத்திலே அக்கிரண ஒளியி஧ அவ்வொளியின் ஒளிதன்னிலே 
பணிமதியின் அமுதிலே அவ்வமு தினிப்பிலே பக்கநடு அடிமுடியிலே 

பாங்குபெற ஓங்கும்ஒரு சித்தேஎன் உள்ளே பலித்தபர மானந்தமே 
மணிஒளியில் ஆடும்அருள் ஒளியே நிலைத்தபெரு வாழ்வே நிறைந்தமகிழ்வே 

மன்னேஎன் அன்பான பொன்னேஎன் அன்னேஎன் வரமே வயங்குபரமே 
துணிமதியில் இன்பஅனு பவமாய் இருந்தகுரு துரியமே பெரியபொருளே 

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.

12
3663

அண்டஒரு மைப்பகுதி இருமையாம் பகுதிமேல் ஆங்காரி யப்பகுதியே 

ஆதிபல பகுதிகள் அனந்தகோ டிகளின்ந அடியினொடு முடியும்அவையில் 
கண்டபல வண்ணமுத லானஅக நிலையும் கணித்தபுற நிலையும்மேன்மேல் 

கண்டதிக ரிக்கின்ற கூட்டமும் விளங்கக் கலந்துநிறை கின்றஒளியே 
கொண்டபல கோலமே குணமே குணங்கொண்ட குறியே குறிக்கஒண்ணாக் 

குருதுரிய மேசுத்த சிவதுரிய மேஎலாம் கொண்டதனி ஞானவெளியே 
தொண்டர்இத யத்திலே கண்டென இனிக்கின்ற சுகயோக அனுபோகமே 

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.

13
3664

கரையிலாக் கடலிலே கடல்உப்பி லேகடற் கடையிலே கடல்இடையிலே 

கடல்முதலி லேகடல் திரையிலே நுரையி கடல்ஓசை அதன்நடுவிலே 
வரையிலா வெள்ளப் பெருக்கத்தி லேவட்ட வடிவிலே வண்ணம்அதிலே 

மற்றதன் வளத்திலே உற்றபல சத்தியுள் வயங்கிஅவை காக்கும் ஒளியே 
புரையிலா ஒருதெய்வ மணியேஎன் உள்ளே புகுந்தறி வளித்தபொருளே 

பொய்யாத செல்வமே நையாத கல்வியே புடம்வைத் திடாதபொன்னே 
மரையிலா வாழ்வே மறைப்பிலா வைப்பே மறுப்பிலா தருள்வள்ளலே 

மணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராசபதியே.

14
3665

உற்றியலும் அணுவாதி மலைஅந்த மானஉடல் உற்றகரு வாகிமுதலாய் 

உயிராய் உயிர்க்குள்உறும் உயிராகி உணர்வாகி உணர்வுள்உணர் வாகிஉணர்வுள் 
பற்றியலும் ஒளியாகி ஒளியின்ஒளி யாகிஅம் பரமாய்ச் சிதம்பரமுமாய்ப் 

பண்புறுசி தம்பரப் பொற்சபையு மாய்அதன் பாங்கோங்கு சிற்சபையுமாய்த் 
தெற்றியலும் அச்சபையின் நடுவில்நடம் இடுகின்ற சிவமாய் விளங்குபொருளே 

சித்தெலாம் செய்எனத் திருவாக் களித்தெனைத் தேற்றிஅருள் செய்தகுருவே 
மற்றியலும் ஆகிஎனை வாழ்வித்த மெய்ஞ்ஞான வாழ்வேஎன் வாழ்வின்வரமே 

மணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராசபதியே.

15
3666

எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய் எல்லாஞ்செய் வல்லதாகி 

இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய் இயற்கையே இன்பமாகி 
அவ்வையின் அனாதியே பாசமில தாய்ச்சுத்த அருளாகி அருள்வெளியிலே 

அருள்நெறி விளங்கவே அருள்நடம் செய்தருள் அருட்பெருஞ் சோதியாகிக் 
கவ்வைஅறு தனிமுதற் கடவுளாய் ஓங்குமெய்க் காட்சியே கருணைநிறைவே 

கண்ணேஎன் அன்பிற் கலந்தெனை வளர்க்கின்ற கதியே கனிந்தகனியே 
வெவ்வினை தவிர்த்தொரு விளக்கேற்றி என்னு வீற்றிருந் தருளும்அரசே 

மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே மேவுநட ராசபதியே.

16
3667

நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த நண்ணுறு கலாந்தம்உடனே 

நவில்கின்ற சித்தாந்தம் என்னும்ஆ றந்தத்தின் ஞானமெய்க் கொடிநாட்டியே 
மூதாண்ட கோடிக ளொடுஞ்சரா சரம்எலாம் முன்னிப் படைத்தல்முதலாம் 

முத்தொழிலும் இருதொழிலும் முன்னின் றியற்றிஐம் மூர்த்திகளும் ஏவல்கேட்ப 
வாதாந்தம் உற்றபல சத்திக ளொடுஞ்சத்தர் வாய்ந்துபணி செய்யஇன்ப 

மாராச்சி யத்திலே திருவருட் செங்கோல் வளத்தொடு செலுத்துமரசே 
சூதாண்ட நெஞ்சினில் தோயாத நேயமே துரியநடு நின்றசிவமே 

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே.

17
3668

ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே உன்னமுடி யாஅவற்றின் 

ஓராயி ரங்கோடி மால்அண்டம் அரன்அண்டம் உற்றகோ டாகோடியே 
திருகலறு பலகோடி ஈசன்அண் டம்சதா சிவஅண்டம் எண்ணிறந்த 

திகழ்கின்ற மற்றைப் பெருஞ்சத்தி சத்தர்தம் சீரண்டம் என்புகலுவேன் 
உறுவுறும்இவ் வண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில் உறுசிறு அணுக்களாக 

ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும் ஒருபெருங் கருணைஅரசே 
மருவிஎனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா வரந்தந்த மெய்த்தந்தையே 

மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராசபதியே.

18
3669

வரவுசெல வற்றபரி பூரணா காரசுக வாழ்க்கைமுத லாஎனக்கு 

வாய்த்தபொரு ளேஎன்கண் மணியேஎன் உள்ளே வயங்கிஒளிர் கின்றஒளியே 
இரவுபகல் அற்றஒரு தருணத்தில் உற்றபேர் இன்பமே அன்பின்விளைவே 

என்தந்தை யேஎனது குருவேஎன் நேயமே என்னாசை யேஎன் அறிவே 
கரவுநெறி செல்லாக் கருத்தினில் இனிக்கின்ற கருணைஅமு தேகரும்பே 

கனியே அருட்பெருங் கடலேஎ லாம்வல்ல கடவுளே கலைகள்எல்லாம் 
விரவிஉணர் வரியசிவ துரியஅனு பவமான மெய்ம்மையே சன்மார்க்கமா 

மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே மேவுநட ராசபதியே.

19
3670

பாராதி பூதமொடு பொறிபுலன் கரணமும் பகுதியும் காலம்முதலாப் 

பகர்கின்ற கருவியும் அவைக்குமேல் உறுசுத்த பரமாதி நாதம்வரையும் 
சீராய பரவிந்து பரநாத முந்தனது திகழங்கம் என்றுரைப்பத் 

திருவருட் பெருவெளியில் ஆனந்த நடனமிடு தெய்வமே என்றும்அழியா 
ஊராதி தந்தெனை வளர்க்கின்ற அன்னையே உயர்தந்தை யேஎன்உள்ளே 

உற்றதுணை யேஎன்றன் உறவேஎன் அன்பே உவப்பேஎன் னுடையஉயிரே 
ஆராலும் அறியாத உயர்நிலையில் எனைவைத்த அரசே அருட்சோதியே 

அகரநிலை முழுதுமாய் அப்பாலு மாகிநிறை அமுதநட ராசபதியே.

20
3671

உரைவிசுவம் உண்டவெளி உபசாந்த வெளிமேலை உறுமவுன வெளிவெளியின்மேல் 

ஓங்குமா மவுனவெளி யாதியுறும் அனுபவம் ஒருங்கநிறை உண்மைவெளியே 
திரையறு பெருங்கருணை வாரியே எல்லாஞ்செய் சித்தே எனக்குவாய்த்த 

செல்வமே ஒன்றான தெய்வமே உய்வகை தெரித்தெனை வளர்த்தசிவமே 
பரைநடு விளங்கும்ஒரு சோதியே எல்லாம் படைத்திடுக என்றெனக்கே 

பண்புற உரைத்தருட் பேரமுத ளித்தமெய்ப் பரமமே பரமஞான 
வரைநடு விளங்குசிற் சபைநடுவில் ஆனந்த வண்ணநடம் இடுவள்ளலே 

மாறாத சன்மார்க்க நிலைநீதி யேஎலாம் வல்லநட ராசபதியே.

21
3672

ஊழிதோ றூழிபல அண்டபகிர் அண்டத் துயிர்க்கெலாம் தரினும்அந்தோ 

ஒருசிறிதும் உலவாத நிறைவாகி அடியேற் குவப்பொடு கிடைத்தநிதியே 
வாழிநீ டூழியென வாய்மலர்ந் தழியா வரந்தந்த வள்ளலேஎன் 

மதியினிறை மதியே வயங்குமதி அமுதமே மதிஅமுதின் உற்றசுகமே 
ஏழினோ டேழுலகில் உள்ளவர்கள் எல்லாம்இ தென்னைஎன் றதிசயிப்ப 

இரவுபகல் இல்லாத பெருநிலையில் ஏற்றிஎனை இன்புறச் செய்தகுருவே 
ஆழியோ டணிஅளித் துயிரெலாம் காத்துவிளை யாடென் றுரைத்தஅரசே 

அகரநிலை முழுதுமாய் அப்பாலு மாகிஒளிர் அபயநட ராசபதியே.

22
3673

பூதமுத லாயபல கருவிகள் அனைத்தும்என் புகல்வழிப் பணிகள்கேட்பப் 

பொய்படாச் சத்திகள் அனந்தகோ டிகளும்மெய்ப் பொருள்கண்ட சத்தர்பலரும் 
ஏதமற என்னுளம் நினைத்தவை நினைத்தாங் கிசைந்தெடுத் துதவஎன்றும் 

இறவாத பெருநிலையில் இணைசொலா இன்புற் றிருக்கஎனை வைத்தகுருவே 
நாதமுதல் இருமூன்று வரையந்த நிலைகளும் நலம்பெறச் சன்மார்க்கமாம் 

ஞானநெறி ஓங்கஓர் திருவருட் செங்கோல் நடத்திவரு நல்லஅரசே 
வாதமிடு சமயமத வாதிகள் பெறற்கரிய மாமதியின் அமுதநிறைவே 

மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராசபதியே.

23
3674

வாட்டமொடு சிறியனேன் செய்வகையை அறியாது மனமிக மயங்கிஒருநாள் 

மண்ணிற் கிடந்தருளை உன்னிஉல கியலினை மறந்துதுயில் கின்றபோது 
நாட்டமுறு வைகறையில் என்அரு கணைந்தென்னை நன்றுற எழுப்பிமகனே 

நல்யோக ஞானம்எனி னும்புரிதல் இன்றிநீ நலிதல்அழ கோஎழுந்தே 
ஈட்டுகநின் எண்ணம் பலிக்கஅருள் அமுதம்உண் டின்புறுக என்றகுருவே 

என்ஆசை யேஎன்றன் அன்பே நிறைந்தபே ரின்பமே என்செல்வமே 
வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத வித்தையில் விளைந்தசுகமே 

மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே மேவுநட ராசபதியே.

24
3675

என்செய்வேன் சிறியனேன் என்செய்வேன் என்எண்ணம் ஏதாக முடியுமோஎன் 

றெண்ணிஇரு கண்ணினீர் காட்டிக் கலங்கிநின் றேங்கிய இராவில்ஒருநாள் 
மின்செய்மெய்ஞ் ஞானஉரு வாகிநான் காணவே வெளிநின் றணைத்தென்உள்ளே 

மேவிஎன் துன்பந் தவிர்த்தருளி அங்ஙனே வீற்றிருக் கின்றகுருவே 
நன்செய்வாய் இட்டவிளை வதுவிளைந் ததுகண்ட நல்குரவி னோன்அடைந்த 

நன்மகிழ்வின் ஒருகோடி பங்கதிகம் ஆகவே நான்கண்டு கொண்டமகிழ்வே 
வன்செய்வாய் வாதருக் கரியபொரு ளேஎன்னை வலியவந் தாண்டபரமே 

மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராசபதியே. 25

 
3676

துன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித் ததுநினைச் சூழ்ந்ததருள் ஒளிநிறைந்தே 

சுத்தசன் மார்க்கநிலை அனுபவம் நினக்கே சுதந்தரம தானதுலகில் 
வன்பெலாம் நீக்கிநல் வழியெலாம் ஆக்கிமெய் வாழ்வெலாம் பெற்றுமிகவும் 

மன்னுயிர் எலாம்களித் திடநினைத் தனைஉன்றன் மனநினைப் பின்படிக்கே 
அன்பநீ பெறுகஉல வாதுநீ டூழிவிளை யாடுக அருட்சோதியாம் 

ஆட்சிதந் தோம்உனைக் கைவிடோ ம் கைவிடோ ம் ஆணைநம் ஆணைஎன்றே 
இன்புறத் திருவாக் களித்தெனுள் ளேகலந் திசைவுடன் இருந்தகுருவே 

எல்லாஞ்செய் வல்லசித் தாகிமணி மன்றினில் இலங்குநட ராசபதியே. 26

 
3677

பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம் பேய்ப்பிடிப் புற்றபிச்சுப் 

பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல பேதமுற் றங்கும்இங்கும் 
போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண் போகாத படிவிரைந்தே 

புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப் பொருளினை உணர்த்திஎல்லாம் 
ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ என்பிள்ளை ஆதலாலே 

இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே றெண்ணற்க என்றகுருவே 
நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள் நிறைந்திருள் அகற்றும்ஒளியே 

நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு நீதிநட ராசபதியே. 27

 
3678

சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம் தான்என அறிந்தஅறிவே 

தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே தனித்தபூ ரணவல்லபம் 
வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும் விளையவிளை வித்ததொழிலே 

மெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே வியந்தடைந் துலகம்எல்லாம் 
மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை வானவர மேஇன்பமாம் 

மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின் மரபென் றுரைத்தகுருவே 
தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத் தேற்றிஅருள் செய்தசிவமே 

சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே தெய்வநட ராசபதியே. 28

 
3679

நீடுலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்ற நின்வார்த்தை யாவும்நமது 

நீள்வார்த்தை யாகும்இது உண்மைமக னேசற்றும் நெஞ்சம்அஞ் சேல் உனக்கே 
ஆடுறும் அருட்பெருஞ் சோதிஈந் தனம்என்றும் அழியாத நிலையின்நின்றே 

அன்பினால் எங்கெங்கும் எண்ணிய படிக்குநீ ஆடிவாழ் கென்றகுருவே 
நாடுநடு நாட்டத்தில் உற்றஅனு பவஞானம் நான்இளங் காலைஅடைய 

நல்கிய பெருங்கருணை அப்பனே அம்மையே நண்பனே துணைவனேஎன் 
ஊடுபிரி யாதுற்ற இன்பனே அன்பனே ஒருவனே அருவனேஉள் 

ஊறும்அமு தாகிஓர் ஆறின்முடி மீதிலே ஓங்குநட ராசபதியே.

29
3680

அந்நாளில் அம்பலத் திருவாயி லிடைஉனக் கன்புடன் உரைத்தபடியே 

அற்புதம்எ லாம்வல்ல நம்அருட் பேரொளி அளித்தனம் மகிழ்ந்துன்உள்ளே 
இந்நாள் தொடுத்துநீ எண்ணிய படிக்கே இயற்றிவிளை யாடிமகிழ்க 

என்றும்இற வாநிலையில் இன்பஅனு பவனாகி இயல்சுத்தம் ஆதிமூன்றும் 
எந்நாளும் உன்இச்சை வழிபெற்று வாழ்கயாம் எய்திநின் னுட்கலந்தேம் 

இனிஎந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மைஈ தெம்மாணை என்றகுருவே 
மன்னாகி என்பெரிய வாழ்வாகி அழியாத வரமாகி நின்றசிவமே 

மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராசபதியே.

30
3681

காய்எலாம் கனிஎனக் கனிவிக்கும் ஒருபெருங் கருணைஅமு தேஎனக்குக் 

கண்கண்ட தெய்வமே கலிகண்ட அற்புதக் காட்சியே கனகமலையே 
தாய்எலாம் அனையஎன் தந்தையே ஒருதனித் தலைவனே நின்பெருமையைச் 

சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திடச் சார்கின்ற தோறும்அந்தோ 
வாய்எலாந் தித்திக்கும் மனம்எலாந் தித்திக்கும் மதிஎலாந் தித்திக்கும்என் 

மன்னியமெய் அறிவெலாந் தித்திக்கும் என்னில்அதில் வரும்இன்பம் என்புகலுவேன் 
தூய்எலாம் பெற்றநிலை மேல்அருட் சுகம்எலாம் தோன்றிட விளங்குசுடரே 

துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட் சோதிநட ராசகுருவே.

31
3682

எய்ப்பற எனக்குக் கிடைத்தபெரு நிதியமே எல்லாஞ்செய் வல்லசித்தாய் 

என்கையில் அகப்பட்ட ஞானமணி யேஎன்னை எழுமையும் விடாதநட்பே 
கைப்பறஎன் உள்ளே இனிக்கின்ற சர்க்கரைக் கட்டியே கருணைஅமுதே 

கற்பக வனத்தே கனிந்தகனி யேஎனது கண்காண வந்தகதியே 
மெய்ப்பயன் அளிக்கின்ற தந்தையே தாயேஎன் வினைஎலாந் தீர்த்தபதியே 

மெய்யான தெய்வமே மெய்யான சிவபோக விளைவேஎன் மெய்ம்மைஉறவே 
துய்ப்புறும்என் அன்பான துணையேஎன் இன்பமே சுத்தசன் மார்க்கநிலையே 

துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட் சோதிநட ராசகுருவே.

32
3683

துன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணிநான் சோர்ந்தொரு புறம்படுத்துத் 

தூங்குதரு ணத்தென்றன் அருகிலுற் றன்பினால் தூயதிரு வாய்மலர்ந்தே 
இன்புறு முகத்திலே புன்னகை ததும்பவே இருகைமலர் கொண்டுதூக்கி 

என்றனை எடுத்தணைத் தாங்குமற் றோரிடத் தியலுற இருத்திமகிழ்வாய் 
வன்பறு பெருங்கருணை அமுதளித் திடர்நீக்கி வைத்தநின் தயவைஅந்தோ 

வள்ளலே உள்ளுதொறும் உள்ளக மெலாம்இன்ப வாரிஅமு தூறிஊறித் 
துன்பம்அற மேற்கொண்டு பொங்கித் ததும்பும்இச் சுகவண்ணம் என்புகலுவேன் 

துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட் சோதிநட ராசகுருவே.

33
3684

ஓங்கிய பெருங்கருணை பொழிகின்ற வானமே ஒருமைநிலை உறுஞானமே 

உபயபத சததளமும் எனதிதய சததளத் தோங்கநடு வோங்குசிவமே 
பாங்கியல் அளித்தென்னை அறியாத ஒருசிறிய பருவத்தில் ஆண்டபதியே 

பாசநெறி செல்லாத நேசர்தமை ஈசராம் படிவைக்க வல்லபரமே 
ஆங்கியல்வ தென்றுமற் றீங்கியல்வ தென்றும்வாய் ஆடுவோர்க் கரியசுகமே 

ஆனந்த மயமாகி அதுவுங் கடந்தவெளி ஆகிநிறை கின்றநிறைவே 
தூங்கிவிழு சிறியனைத் தாங்கிஎழு கென்றெனது தூக்கந் தொலைத்ததுணையே 

துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட் சோதிநட ராசகுருவே.

34


திருச்சிற்றம்பலம் 


23. சற்குருமணி மாலை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3685

மாற்றறி யாதசெ ழும்பசும் பொன்னே 

மாணிக்க மேசுடர் வண்ணக் கொழுந்தே 
கூற்றறி யாதபெ ருந்தவர் உள்ளக் 

கோயில் இருந்த குணப்பெருங் குன்றே 
வேற்றறி யாதசிற் றம்பலக் கனியே 

விச்சையில் வல்லவர் மெச்சுவி ருந்தே 
சாற்றறி யாதஎன் சாற்றுங் களித்தாய் 

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

1
3686

கற்கரை யும்படி கரைவிக்குங் கருத்தே 

கண்மணி யேமணி கலந்தகண் ஒளியே 
சொற்கரை யின்றிய ஒளியினுள் ஒளியே 

துரியமுங் கடந்திட்ட பெரியசெம் பொருளே 
சிற்கரை திரையறு திருவருட் கடலே 

தெள்ளமு தேகனி யேசெழும் பாகே 
சர்க்கரை யேஅது சார்ந்தசெந் தேனே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

2
3687

என்னுயி ரேஎன தின்னுயிர்க் குயிரே 

என்அறி வேஎன தறிவினுக் கறிவே 
அன்னையில் இனியஎன் அம்பலத் தமுதே 

அற்புத மேபத மேஎன தன்பே 
பொன்னிணை அடிமலர் முடிமிசை பொருந்தப் 

பொருத்திய தயவுடைப் புண்ணியப் பொருளே 
தன்னியல் அறிவருஞ் சத்திய நிலையே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

3
3688

காய்மனக் கடையனைக் காத்தமெய்ப் பொருளே 

கலைகளுங் கருதரும் ஒருபெரும் பதியே 
தேய்மதிச் சமயருக் கரியஒண் சுடரே 

சித்தெலாம் வல்லதோர் சத்திய முதலே 
ஆய்மதிப் பெரியருள் அமர்ந்தசிற் பரமே 

அம்பலத் தாடல்செய் செம்பதத் தரசே 
தாய்மதிப் பரியதோர் தயவுடைச் சிவமே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

4
3689

உருவமும் அருவமும் உபயமும் உளதாய் 

உளதில தாய்ஒளிர் ஒருதனி முதலே 
கருவினில் எனக்கருள் கனிந்தளித் தவனே 

கண்ணுடை யாய்பெருங் கடவுளர் பதியே 
திருநிலை பெறஎனை வளர்க்கின்ற பரமே 

சிவகுரு துரியத்தில் தெளிஅனு பவமே 
தருவளர் பொழிவடல் சபைநிறை ஒளியே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

5
3690

ஆறந்த நிலைகளின் அனுபவ நிறைவே 

அதுஅது வாய்ஒளிர் பொதுவுறு நிதியே 
கூறெந்த நிலைகளும் ஒருநிலை எனவே 

கூறிஎன் உள்ளத்தில் குலவிய களிப்பே 
பேறிந்த நெறிஎனக் காட்டிஎன் தனையே 

பெருநெறிக் கேற்றிய ஒருபெரும் பொருளே 
சாறெந்த நாள்களும் விளங்கும்ஓர் வடல்வாய்த் 

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

6
3691

சாகாத தலைஇது வேகாத காலாம் 

தரம்இது காண்எனத் தயவுசெய் துரைத்தே 
போகாத புனலையும் தெரிவித்தென் உளத்தே 

பொற்புற அமர்ந்ததோர் அற்புதச் சுடரே 
ஆகாத பேர்களுக் காகாத நினைவே 

ஆகிய எனக்கென்றும் ஆகிய சுகமே 
தாகாதல் எனத்தரும் தருமசத் திரமே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

7
3692

தத்துவ மசிநிலை இதுஇது தானே 

சத்தியம் காண்எனத் தனித்துரைத் தெனக்கே 
எத்துவந் தனைகளும் நீக்கிமெய்ந் நிலைக்கே 

ஏற்றிநான் இறவாத இயல்அளித் தருளால் 
சித்துவந் துலகங்கள் எவற்றினும் ஆடச் 

செய்வித்த பேரருட் சிவபரஞ் சுடரே 
சத்துவ நெறிதரு வடல்அருட் கடலே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

8
3693

இதுபதி இதுபொருள் இதுசுகம் அடைவாய் 

இதுவழி எனஎனக் கியல்புற உரைத்தே 
விதுஅமு தொடுசிவ அமுதமும் அளித்தே 

மேனிலைக் கேற்றிய மெய்நிலைச் சுடரே 
பொதுநடம் இடுகின்ற புண்ணியப் பொருளே 

புரையறும் உளத்திடைப் பொருந்திய மருந்தே 
சதுமறை முடிகளின் முடியுறு சிவமே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

9
3694

என்னிலை இதுவுறு நின்னிலை இதுவாம் 

இருநிலை களும்ஒரு நிலைஎன அறிவாய் 
முன்னிலை சிறிதுறல்246 இதுமயல் உறலாம் 

முன்னிலை பின்னிலை முழுநிலை உளவாம் 
இந்நிலை அறிந்தவண் எழுநிலை கடந்தே 

இயனிலை அடைகஎன் றியம்பிய பரமே 
தன்னிலை ஆகிய நன்னிலை அரசே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

10
 சிறிதுற - பி. இரா.பதிப்பு. சிறிதுறில் - படிவேறுபாடு. ஆ. பா. 
3695

காரணம் இதுபுரி காரியம் இதுமேல் 

காரண காரியக் கருவிது பலவாய் 
ஆரணம் ஆகமம் இவைவிரித் துரைத்தே 

அளந்திடும் நீஅவை அளந்திடன் மகனே 
பூரண நிலைஅனு பவமுறில் கணமாம் 

பொழுதினில் அறிதிஎப் பொருள்நிலை களுமே 
தாரணி தனில்என்ற தயவுடை அரசே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

11
3696

பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர் 

பவநெறி இதுவரை பரவிய திதனால் 
செந்நெறி247 அறிந்திலர் இறந்திறந் துலகோர் 

செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ 
புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான் 

புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத் 
தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

12
 247. சென்னெறி - முதற்பதிப்பு, பொ.,சு., பி. இரா., ச. மு. க. 
3697

அடிஇது முடிஇது நடுநிலை இதுமேல் 

அடிநடு முடியிலா ததுஇது மகனே 
படிமிசை அடிநடு முடிஅறிந் தனையே 

பதிஅடி முடியிலாப் பரிசையும் அறிவாய் 
செடியற உலகினில் அருள்நெறி இதுவே 

செயலுற முயலுக என்றசிற் பரமே 
தடிமுகில் எனஅருள் பொழிவடல் அரசே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

13
3698

நண்ணிய மதநெறி பலபல அவையே 

நன்றற நின்றன சென்றன சிலவே 
அண்ணிய உலகினர் அறிகிலர் நெடுநாள் 

அலைதரு கின்றனர் அலைவற மகனே 
புண்ணியம் உறுதிரு அருள்நெறி இதுவே 

பொதுநெறி எனஅறி வுறமுய லுதிநீ 
தண்ணிய அமுதுணத் தந்தனம் என்றாய் 

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

14
3699

அஞ்சலை நீஒரு சிறிதும்என் மகனே 

அருட்பெருஞ் சோதியை அளித்தனம் உனக்கே 
துஞ்சிய மாந்தரை எழுப்புக நலமே 

சூழ்ந்தசன் மார்க்கத்தில் செலுத்துக சுகமே 
விஞ்சுற மெய்ப்பொருள் மேனிலை தனிலே 

விஞ்சைகள் பலவுள விளக்குக என்றாய் 
தஞ்சம்என் றவர்க்கருள் சத்திய முதலே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

15
3700

வேதத்தின் முடிமிசை விளங்கும்ஓர் விளக்கே 

மெய்ப்பொருள் ஆகம வியன்முடிச் சுடரே 
நாதத்தின் முடிநடு நடமிடும் ஒளியே 

நவைஅறும் உளத்திடை நண்ணிய நலமே 
ஏதத்தின் நின்றெனை எடுத்தருள் நிலைக்கே 

ஏற்றிய கருணைஎன் இன்உயிர்த் துணையே 
தாதுற்ற உடம்பழி யாவகை புரிந்தாய் 

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

16
3701

சந்திர சூரியர் ஒளிபெற விளங்கும் 

தனிஅருட் பெருவெளித் தலத்தெழுஞ் சுடரே 
வந்திர விடைஎனக் கருளமு தளித்தே 

வாழ்கஎன் றருளிய வாழ்முதற் பொருளே 
மந்திர மேஎனை வளர்க்கின்ற மருந்தே 

மாநிலத் திடைஎனை வருவித்த பதியே 
தந்திரம் யாவையும் உடையமெய்ப் பொருளே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

17
3702

அமரரும் முனிவரும் அதிசயித் திடவே 

அருட்பெருஞ் சோதியை அன்புடன் அளித்தே 
கமமுறு சிவநெறிக் கேற்றிஎன் றனையே 

காத்தென துளத்தினில் கலந்தமெய்ப் பதியே 
எமன்எனும் அவன்இனி இலைஇலை மகனே 

எய்ப்பற வாழ்கஎன் றியம்பிய அரசே 
சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

18
3703

நன்மார்க்கத் தவர்உளம் நண்ணிய வரமே 

நடுவெளி நடுநின்று நடஞ்செயும் பரமே 
துன்மார்க்க வாதிகள் பெறற்கரு நிலையே 

சுத்தசி வானந்தப் புத்தமு துவப்பே 
என்மார்க்கம் எனக்களித் தெனையுமேல் ஏற்றி 

இறவாத பெருநலம் ஈந்தமெய்ப் பொருளே 
சன்மார்க்க சங்கத்தார் தழுவிய பதியே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

19
3704

ஆதியும் அந்தமும் இன்றிஒன் றாகி 

அகம்புறம் அகப்புறம் புறப்புறம் நிறைந்தே 
ஓதியும் உணர்ந்தும்இங் கறிவரும் பொருளே 

உளங்கொள்சிற் சபைநடு விளங்குமெய்ப் பதியே 
சோதியும் சோதியின் முதலுந்தான் ஆகிச் 

சூழ்ந்தெனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே 
சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

20
3705

கற்பனை முழுவதும் கடந்தவர் உளத்தே 

கலந்துகொண் டினிக்கின்ற கற்பகக் கனியே 
அற்பனை யாண்டுகொண் டறிவளித் தழியா 

அருள்நிலை தனில்உற அருளிய அமுதே 
பற்பல உலகமும் வியப்பஎன் தனக்கே 

பதமலர் முடிமிசைப் பதித்தமெய்ப் பதியே 
தற்பர பரம்பர சிதம்பர நிதியே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

21
3706

பவநெறி செலுமவர் கனவினும் அறியாப் 

பரம்பொரு ளாகிஎன் உளம்பெறும் ஒளியே 
நவநெறி கடந்ததோர் ஞானமெய்ச் சுகமே 

நான்அருள் நிலைபெற நல்கிய நலமே 
சிவநெறி யேசிவ நெறிதரு நிலையே 

சிவநிலை தனில்உறும் அனுபவ நிறைவே 
தவநெறி செலும்அவர்க் கினியநல் துணையே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

22
3707

அறியாமல் அறிகின்ற அறிவினுள் அறிவே 

அடையாமல் அடைகின்ற அடைவினுள் அடைவே 
செறியாமல் செறிகின்ற செறிவினுட் செறிவே 

திளையாமல் திளைக்கின்ற திளைப்புறு திளைப்பே 
பிரியாமல் என்னுளம் கலந்தமெய்க் கலப்பே 

பிறவாமல் இறவாமல் எனைவைத்த பெருக்கே 
தறியாகி உணர்வாரும் உணர்வரும் பொருளே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

23
3708

கருதாமல் கருதும்ஓர் கருத்தினுட் கருத்தே 

காணாமல் காணும்ஓர் காட்சியின் விளைவே 
எருதாகத் திரிந்தேனுக் கிகபரம் அளித்தே 

இறவாத வரமுந்தந் தருளிய ஒளியே 
வருதாகந் தவிர்த்திட வந்ததெள் அமுதே 

மாணிக்க மலைநடு மருவிய பரமே 
தருதான முணவெனச் சாற்றிய பதியே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

24
3709

ஏகாஅ னேகாஎன் றேத்திடு மறைக்கே 

எட்டாத நிலையேநான் எட்டிய மலையே 
ஓகாள மதங்களை முழுவதும் மாற்றி 

ஒருநிலை ஆக்கஎன் றுரைத்தமெய்ப் பரமே 
ஈகாதல் உடையவர்க் கிருநிதி அளித்தே 

இன்புறப் புரிகின்ற இயல்புடை இறையே 
சாகாத வரந்தந்திங் கெனைக்காத்த அரசே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே.

25


திருச்சிற்றம்பலம் 


24. தற்போத இழப்பு

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3710

அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர்சற் றெனினும் 

அறிந்தனம்ஓர் சிறிதுகுரு அருளாலே அந்தச் 
செவ்வண்ணம் பழுத்ததனித் திருவுருக்கண் டெவர்க்கும் 

தெரியாமல் இருப்பம்எனச் சிந்தனைசெய் திருந்தேன் 
இவ்வண்ணம் இருந்தஎனைப் பிறர்அறியத் தெருவில் 

இழுத்துவிடுத் ததுகடவுள் இயற்கைஅருட் செயலோ 
மவ்வண்ணப் பெருமாயை தன்செயலோ அறியேன் 

மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.

1
3711

கள்ளிருந்த மலர்இதழிச் சடைக்கனிநின் வடிவம் 

கண்டுகொண்டேன் சிறிதடியேன் கண்டுகொண்ட படியே 
நள்ளிருந்த வண்ணம்இன்னும் கண்டுகண்டு களித்தே 

நாடறியா திருப்பம்என்றே நன்றுநினைந் தொருசார் 
உள்ளிருந்த எனைத்தெருவில் இழுத்துவிடுத் ததுதான் 

உன்செயலோ பெருமாயை தன்செயெலோ அறியேன் 
வள்ளிருந்த குணக்கடையேன் இதைநினைக் குந்தோறும் 

மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.

2
3712

இகத்திருந்த வண்ணம்எலாம் மிகத்திருந்த அருட்பேர் 

இன்பவடி வம்சிறியேன் முன்புரிந்த தவத்தால் 
சகத்திருந்தார் காணாதே சிறிதுகண்டு கொண்ட 

தரம்நினைந்து பெரிதின்னும் தான்காண்பேம் என்றே 
அகத்திருந்த எனைப்புறத்தே இழுத்துவிடுத் ததுதான் 

ஆண்டவநின் அருட்செயலோ மருட்செயலோ அறியேன் 
மகத்திருந்தார் என்அளவில் என்நினைப்பார் அந்தோ 

மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.

3
3713

கருங்களிறு போல்மதத்தால் கண்செருக்கி வீணே 

காலம்எலாம் கழிக்கின்ற கடையர்கடைத் தலைவாய் 
ஒருங்குசிறி யேன்தனைமுன் வலிந்தருளே வடிவாய் 

உள்அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்திப் 
பெருங்கருணை யால்அளித்த பேறதனை இன்னும் 

பிறர்அறியா வகைபெரிதும் பெறுதும்என உள்ளே 
மருங்கிருந்த எனைவெளியில் இழுத்துவிட்ட தென்னோ 

மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.

4
3714

நாடுகின்ற மறைகள்எலாம் நாம்அறியோம் என்று 

நாணிஉரைத் தலமரவே நல்லமணி மன்றில் 
ஆடுகின்ற சேவடிகண் டானந்தக் கடலில் 

ஆடும்அன்பர் போல்நமக்கும் அருள்கிடைத்த தெனினும் 
வீடுகின்ற பிறர்சிறிதும் அறியாமல் இருக்க 

வேண்டும்என இருந்தஎன்னை வெளியில்இழுத் திட்டு 
வாடுகின்ற வகைபுரிந்த விதியைநினைந் தையோ 

மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.

5
3715

நதிகலந்த சடைஅசையத் திருமேனி விளங்க 

நல்லதிருக் கூத்தாட வல்லதிரு அடிகள் 
கதிகலந்து கொளச்சிறியேன் கருத்திடையே கலந்து 

கள்ளம்அற உள்ளபடி காட்டிடக்கண் டின்னும் 
பதிகலந்து கொளும்மட்டும் பிறர்அறியா திருக்கப் 

பரிந்துள்ளே இருந்தஎன்னை வெளியில் இழுத் திட்டு 
மதிகலந்து கலங்கவைத்த விதியைநினைந் தையோ 

மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.

6
3716

மஞ்சனைய குழலம்மை எங்கள்சிவ காம 

வல்லிமகிழ் திருமேனி வண்ணமது சிறிதே 
நஞ்சனைய கொடியேன்கண் டிடப்புரிந்த அருளை 

நாடறியா வகைஇன்னும் நீடநினைத் திருந்தேன் 
அஞ்சனைய பிறர்எல்லாம் அறிந்துபல பேசி 

அலர்தூற்ற அளியஎனை வெளியில்இழுத் திட்டு 
வஞ்சனைசெய் திடவந்த விதியைநினைந் தையோ 

மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.

7
3717

அரிபிரமர் உருத்திரரும் அறிந்துகொள மாட்டா 

தலமரவும் ஈதென்ன அதிசயமோ மலத்தில் 
புரிபுழுவில் இழிந்தேனைப் பொருளாக்கி அருளாம் 

பொருள்அளிக்கப் பெற்றனன்இப் புதுமைபிறர் அறியா 
துரிமைபெற இருப்பன்என உள்இருந்த என்னை 

உலகறிய வெளியில்இழுத் தலகில்விருத் தியினால் 
வரிதலையிட் டாட்டுகின்ற விதியைநினைந் தையோ 

மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில் நடத் தரசே.

8
3718

விழற்கிறைத்துக் களிக்கின்ற வீணர்களிற் சிறந்த 

வினைக்கொடியேம் பொருட்டாக விரும்பிஎழுந் தருளிக் 
கழற்கிசைந்த பொன்அடிநம் தலைமேலே அமைத்துக் 

கருணைசெயப் பெற்றனம்இக் கருணைநம்மை இன்னும் 
நிழற்கிசைத்த மேல்நிலையில் ஏற்றும்என மகிழ்ந்து 

நின்றஎன்னை வெளியில்இழுத் துலகவியா பார 
வழக்கில்வளைத் தலைக்கவந்த விதியைநினைந் தையோ 

மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.

9
3719

அடிபிடித்துத் திரிகின்ற மறைகள்எலாம் காணா 

அருள்வடிவைக் காட்டிநம்மை ஆண்டுகொண்ட கருணைக் 
கொடிபிடித்த குருமணியைக் கூடுமட்டும் வேறோர் 

குறிப்பின்றி இருப்பம்எனக் கொண்டகத்தே இருந்தேன் 
படிபிடித்த பலர்பலவும் பகர்ந்திடஇங் கெனைத்தான் 

படுவழக்கிட் டுலகியலாம் வெளியில்இழுத் தலைத்தே 
மடிபிடித்துப் பறிக்கவந்த விதியைநினைந் தையோ 

மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில் நடத் தரசே.

10


திருச்சிற்றம்பலம்


25. திருமுன் விண்ணப்பம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3720மாழை மாமணிப் பொதுநடம் புரிகின்ற வள்ளலே அளிகின்ற 
வாழை வான்பழச் சுவைஎனப் பத்தர்தம் மனத்துளே தித்திப்போய் 
ஏழை நாயினேன் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் செயல்வேண்டும் 
கோழை மானிடப் பிறப்பிதில் உன்னருட் குருஉருக் கொளும்ஆறே.
1
3721பொன்னின் மாமணிப் பொதுநடம் புரிகின்ற புண்ணியா கனிந்தோங்கி 
மன்னு வாழையின் பழச்சுவை எனப்பத்தர் மனத்துளே தித்திப்போய் 
சின்ன நாயினேன் விண்ணப்பம் திருச்செவி சேர்த்தருள் செயல்வேண்டும் 
இன்ன என்னுடைத் தேகம்நல் ஒளிபெறும் இயல்உருக் கொளும்ஆறே.
2
3722விஞ்சு பொன்னணி அம்பலத் தருள்நடம் விளைத்துயிர்க் குயிராகி 
எஞ்சு றாதபேர் இன்பருள் கின்றஎன் இறைவநின் அருள்இன்றி 
அஞ்சும் நாயினேன் விண்ணப்பம் திருச்செவி அமைத்தருள் செயல்வேண்டும் 
துஞ்சும் இவ்வுடல் இம்மையே துஞ்சிடாச் சுகஉடல் கொளும்ஆறே.
3
3723ஓங்கு பொன்அணி அம்பலத் தருள்நடம் உயிர்க்கெலாம் ஒளிவண்ணப் 
பாங்கு மேவநின் றாடல்செய் இறைவநின் பதமலர் பணிந்தேத்தாத் 
தீங்கு நாயினேன் விண்ணப்பம் திருச்செவி சேர்த்தருள் செயல்வேண்டும் 
ஈங்கு வீழுடல் இம்மையே வீழ்ந்திடா இயலுடல் உறும்ஆறே.
4
3724இலங்கு பொன்னணிப் பொதுநடம் புரிகின்ற இறைவஇவ் வுலகெல்லாம் 
துலங்கும் வண்ணநின் றருளுநின் திருவடித் துணைதுணை என்னாமல் 
கலங்கு நாயினேன் விண்ணப்பம் திருச்செவி கலந்தருள் செயல்வேண்டும் 
அலங்கும் இவ்வுடல் இம்மையே அழிவுறா அருள்உடல் உறும்ஆறே.
5
3725சிறந்த பொன்னணித் திருச்சிற்றம் பலத்திலே திருநடம் புரிகின்ற 
அறந்த வாதசே வடிமலர் முடிமிசை அணிந்தக மகிழ்ந்தேத்த 
மறந்த நாயினேன் விண்ணப்பம் திருச்செவி மடுத்தருள் செயல்வேண்டும்
பிறந்த இவ்வுடல் இம்மையே அழிவுறாப் பெருநலம் பெறும்ஆறே.
6
3726விளங்கு பொன்அணிப் பொதுநடம் புரிகின்ற விரைமலர்த் திருத்தாளை248 
உளங்கொள் அன்பர்தம் உளங்கொளும் இறைவநின் ஒப்பிலாப் பெருந்தன்மை 
களங்கொள் நாயினேன் விண்ணப்பம் திருச்செவி கலந்தருள் செயல்வேண்டும் 
துளங்கும் இவ்வுடல் இம்மையே அழிவுறாத் தொல்லுடல் உறும்ஆறே.
7
 விளங்கு பொன்னணித் திருச்சிற்றம் பலத்திலே விரைமலர்த் திருத்தாளை - முதற் பதிப்பு. 
3727வாய்ந்த பொன்அணிப் பொதுநடம் புரிகின்ற வள்ளலே மறைஎல்லாம் 
ஆய்ந்தும் இன்னஎன் றறிந்திலா நின்திரு அடிமலர் பணியாமல் 
சாய்ந்த நாயினேன் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் செயல்வேண்டும் 
ஏய்ந்த இவ்வுடல் இம்மையே திருவருள் இயல்உடல் உறும்ஆறே.
8
3728மாற்றி லாதபொன் அம்பலத் தருள்நடம் வயங்கநின் றொளிர்கின்ற 
பேற்றில் ஆருயிர்க் கின்பருள் இறைவநின் பெயற்கழல் கணிமாலை 
சாற்றி டாதஎன் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் செயல்வேண்டும் 
காற்றில் ஆகிய இவ்வுடல் இம்மையே கதியுடல் உறும்ஆறே..
9
3729தீட்டு பொன்அணி அம்பலத் தருள்நடம் செய்துயிர்த் திரட்கின்பம் 
காட்டு கின்றதோர் கருணையங் கடவுள்நின் கழலிணை கருதாதே 
நீட்டு கின்றஎன் விண்ணப்பம் திருச்செவி நேர்ந்தருள் செயல்வேண்டும் 
வாட்டும்249இவ்வுடல் இம்மையே அழிவுறா வளமடைந் திடும்ஆறே.
10
 249. ஆட்டும் - படிவேறுபாடு. ஆ. பா. 
   


திருச்சிற்றம்பலம் 


26. இனித்த வாழ்வருள் எனல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3730உரத்தவான் அகத்தே உரத்தவா ஞான ஒளியினால் ஓங்கும்ஓர் சித்தி 
புரத்தவா பெரியோர் புரத்தவா குற்றம் பொறுத்தடி யேன்தனக் களித்த 
வரத்தவா உண்மை வரத்தவா ஆக மங்களும் மறைகளும் காணாத் 
தரத்தவா அறிவா தரத்தவா பொதுவில் தனித்தவா இனித்தவாழ் வருளே.
1
3731முன்னவா திபர்க்கு முன்னவா வேத முடிமுடி மொழிகின்ற முதல்வா 
பின்னவா திபர்க்குப் பின்னவா எவர்க்கும் பெரியவா பெரியவர் மதிக்கும்
சின்னவா சிறந்த சின்னவா ஞான சிதம்பர வெளியிலே நடிக்கும் 
மன்னவா அமுதம் அன்னவா எல்லாம் வல்லவா நல்லவாழ் வருளே.
2
3732விடையவா தனைதீர் விடையவா சுத்த வித்தைமுன் சிவவரை கடந்த 
நடையவா ஞான நடையவா இன்ப நடம்புரிந் துயிர்க்கெலாம் உதவும் 
கொடையவா ஓவாக் கொடையவா எனையாட் கொண்டெனுள் அமர்ந்தரு ளியஎன் 
உடையவா எல்லாம் உடையவா உணர்ந்தோர்க் குரியவா பெரியவாழ் வருளே.
3
3733வலத்தவா நாத வலத்தவா சோதி மலையவா மனமுதல் கடந்த 
புலத்தவா எனது புலத்தவா தவிர்த்துப் பூரண ஞானநோக் களித்த 
நலத்தவா வரையா நலத்தவா மறைகள் நாடியும் காண்பதற் கரிதாம் 
பலத்தவா திருஅம் பலத்தவா எல்லாம் படைத்தவா படைத்தவாழ் வருளே.
4
3734உணர்ந்தவர் உளத்தை உகந்தவா இயற்கை உண்மையே உருவதாய் இன்பம் 
புணர்ந்திட எனைத்தான் புணர்ந்தவா ஞானப் பொதுவிலே பொதுநடம் புரிந்தெண் 
குணந்திகழ்ந் தோங்கும் குணத்தவா குணமும் குறிகளும் கோலமும் குலமும் 
தணந்தசன் மார்க்கத் தனிநிலை நிறுத்தும் தக்கவா மிக்கவாழ் வருளே.
5
3735தத்துவங் கடந்த தத்துவா ஞான சமரச சுத்தசன் மார்க்கச் 
சத்துவ நெறியில் நடத்திஎன் தனைமேல் தனிநிலை நிறுத்திய தலைவா 
சித்துவந் தாடும் சித்திமா புரத்தில் திகழ்ந்தவா திகழ்ந்தென துளத்தே 
ஒத்துநின் றோங்கும் உடையவா கருணை உளத்தவா வளத்தவாழ் வருளே.
6
3736மதம்புகல் முடிபு கடந்தமெய்ஞ் ஞான மன்றிலே வயங்கொள்நா டகஞ்செய் 
பதம்புகல் அடியேற் கருட்பெருஞ் சோதிப் பரிசுதந் திடுதும்என் றுளத்தே 
நிதம்புகல் கருணை நெறியவா இன்ப நிலையவா நித்தநிற் குணமாம் 
சிதம்புகல் வேத சிரத்தவா இனித்த தேனவா ஞானவாழ் வருளே.
7
3737மூவிரு முடிபும் கடந்ததோர் இயற்கை முடிபிலே முடிந்தென துடம்பும் 
ஆவியும் தனது மயம்பெறக் கிடைத்த அருட்பெருஞ் சோதிஅம் பலவா 
ஓவுரு முதலா உரைக்கும்மெய் உருவும் உணர்ச்சியும் ஒளிபெறு செயலும் 
மேவிநின் றவர்க்குள் மேவிய உணர்வுள் மேயவா தூயவாழ் வருளே.
8
3738பங்கமோர் அணுவும் பற்றிடா அறிவால் பற்றிய பெற்றியார் உளத்தே 
தங்கும்ஓர் சோதித் தனிப்பெருங் கருணைத் தரந்திகழ் சத்தியத் தலைவா 
துங்கம்உற் றழியா நிலைதரும் இயற்கைத் தொன்மையாம் சுத்தசன் மார்க்கச் 
சங்கநின் றேத்தும் சத்திய ஞான சபையவா அபயவாழ் வருளே.
9
3739இனித்தசெங் கரும்பில் எடுத்ததீஞ் சாற்றின் இளம்பதப் பாகொடு தேனும் 
கனித்ததீங் கனியின் இரதமும் கலந்து கருத்தெலாம் களித்திட உண்ட 
மனித்தரும் அமுத உணவுகொண் டருந்தும் வானநாட் டவர்களும் வியக்கத் 
தனித்தமெய்ஞ் ஞானஅமுதெனக் களித்த தனியவா இனியவாழ் வருளே.
10


திருச்சிற்றம்பலம் 


27. திருவருள் விழைதல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3740

செய்வகை அறியேன் மன்றுள்மா மணிநின் 

திருவுளக் குறிப்பையும் தெரியேன் 
உய்வகை அறியேன் உணர்விலேன் அந்தோ 

உறுகண்மேல் உறுங்கொல்என் றுலைந்தேன் 
மெய்வகை அடையேன் வேறெவர்க் குரைப்பேன்

வினையனேன் என்செய விரைகேன் 
பொய்வகை உடையேன் எங்ஙனம் புகுவேன் 

புலையனேன் புகல்அறி யேனே.

1
3741

அறிவிலேன் அறிந்தார்க் கடிப்பணி புரியேன் 

அச்சமும் அவலமும் உடையேன் 
செறிவிலேன் பொதுவாம் தெய்வம்நீ நினது 

திருவுளத் தெனைநினை யாயேல் 
எறிவிலேன் சிறியேன் எங்ஙனம் புகுவேன் 

என்செய்வேன் யார்துணை என்பேன் 
பிறிவிலேன் பிரிந்தால் உயிர்தரிக் கலன்என் 

பிழைபொறுத் தருள்வதுன் கடனே.

2
3742

உன்கடன் அடியேற் கருளல்என் றுணர்ந்தேன் 

உடல்பொருள் ஆவியும் உனக்கே 
பின்கடன் இன்றிக் கொடுத்தனன் கொடுத்த 

பின்னும்நான் தளருதல் அழகோ 
என்கடன் புரிவேன் யார்க்கெடுத் துரைப்பேன் 

என்செய்வேன் யார்துணை என்பேன் 
முன்கடன் பட்டார் போல்மனம் கலங்கி 

முறிதல்ஓர் கணம்தரி யேனே.

3
3743

தரித்திடேன் சிறிதும் தரித்திடேன் எனது 

தளர்ச்சியும் துன்பமும் தவிர்த்தே 
தெரித்திடல் அனைத்தும் தெரித்திடல் வேண்டும் 

தெரித்திடாய் எனில்இடர் எனைத்தான் 
எரித்திடும் அந்தோ என்செய்வேன் எங்கே 

எய்துகேன் யார்துணை என்பேன் 
திரித்தநெஞ் சகத்தேன் சரித்திரம் அனைத்தும் 

திருவுளம் தெரிந்தது தானே.

4
3744

தான்எனைப் புணரும் தருணம்ஈ தெனவே 

சத்தியம் உணர்ந்தனன் தனித்தே 
தேன்உறக் கருதி இருக்கின்றேன் இதுநின் 

திருவுளம் தெரிந்ததெந் தாயே 
ஆன்எனக் கூவி அணைந்திடல் வேண்டும் 

அரைக்கணம் ஆயினும் தாழ்க்கில் 
நான்இருப் பறியேன் திருச்சிற்றம் பலத்தே 

நடம்புரி ஞானநா டகனே.

5
3745

ஞானமும் அதனால் அடைஅனு பவமும் 

நாயினேன் உணர்ந்திட உணர்த்தி 
ஈனமும் இடரும் தவிர்த்தனை அந்நாள் 

இந்தநாள் அடியனேன் இங்கே 
ஊனம்ஒன் றில்லோய் நின்றனைக் கூவி 

உழைக்கின்றேன் ஒருசிறி தெனினும் 
ஏனென வினவா திருத்தலும் அழகோ 

இறையும்நான் தரிக்கலன் இனியே.

6
3746

இனியநற் றாயின் இனியஎன் அரசே 

என்னிரு கண்ணினுண் மணியே 
கனிஎன இனிக்கும் கருணைஆர் அமுதே 

கனகஅம் பலத்துறும் களிப்பே 
துனிஉறு மனமும் சோம்புறும் உணர்வும் 

சோர்வுறு முகமும்கொண் டடியேன் 
தனிஉளங் கலங்கல் அழகதோ எனைத்தான் 

தந்தநற் றந்தைநீ அலையோ.

7
3747

தந்தையும் தாயும் குருவும்யான் போற்றும் 

சாமியும் பூமியும் பொருளும் 
சொந்தநல் வாழ்வும் நேயமும் துணையும் 

சுற்றமும் முற்றும்நீ என்றே 
சிந்தையுற் றிங்கே இருக்கின்றேன் இதுநின் 

திருவுளம் தெரிந்ததே எந்தாய் 
நிந்தைசெய் உலகில் யான்உளம் கலங்கல் 

நீதியோ நின்அருட் கழகோ.

8
3748

அழகனே ஞான அமுதனே என்றன் 

அப்பனே அம்பலத் தரசே 
குழகனே இன்பக் கொடிஉளம் களிக்கும் 

கொழுநனே சுத்தசன் மார்க்கக் 
கழகநேர் நின்ற கருணைமா நிதியே 

கடவுளே கடவுளே எனநான் 
பழகநேர்ந் திட்டேன் இன்னும்இவ் வுலகில் 

பழங்கணால் அழுங்குதல் அழகோ.

9
3749

பழம்பிழி மதுரப் பாட்டல எனினும் 

பத்தரும் பித்தரும் பிதற்றும் 
கிழம்பெரும் பாட்டும் கேட்பதுன் உள்ளக் 

கிளர்ச்சிஎன் றறிந்தநாள் முதலாய் 
வழங்குநின் புகழே பாடுறு கின்றேன் 

மற்றொரு பற்றும்இங் கறியேன் 
சழங்குடை உலகில் தளருதல் அழகோ 

தந்தையுந் தாயும்நீ அலையோ.

10
3750

தாயும்என் ஒருமைத் தந்தையும் ஞான 

சபையிலே தனிநடம் புரியும் 
தூயநின் பாதத் துணைஎனப் பிடித்தேன் 

தூக்கமும் சோம்பலும் துயரும் 
மாயையும் வினையும் மறைப்பும்ஆ ணவமும் 

வளைத்தெனைப் பிடித்திடல் வழக்கோ 
நாயினேன் இனிஓர் கணந்தரிப் பறியேன் 

நல்அருட் சோதிதந் தருளே.

11
3751

சோதியேல் எனைநீ சோதனை தொடங்கில் 

சூழ்உயிர் விடத்தொடங் குவன்நான் 
நீதியே நிறைநின் திருவருள் அறிய 

நிகழ்த்தினேன் நிச்சயம் இதுவே 
ஓதியே உணர்தற் கரும்பெரும் பொருளே 

உயிர்க்குயிர் ஆகிய ஒளியே 
ஆதியே நடுவே அந்தமே ஆதி 

நடுஅந்தம் இல்லதோர் அறிவே.

12
3752

இல்லைஉண் டெணும்இவ் விருமையும் கடந்தோர் 

இயற்கையின் நிறைந்தபே ரின்பே 
அல்லைஉண் டெழுந்த தனிப்பெருஞ் சுடரே 

அம்பலத் தாடல்செய் அமுதே 
வல்லைஇன் றடியேன் துயர்எலாம் தவிர்த்து 

வழங்குக நின்அருள் வழங்கல் 
நல்லைஇன் றலது நாளைஎன் றிடிலோ 

நான்உயிர் தரிக்கலன் அரசே.

13
3753

அரைசெலாம் வழங்கும் தனிஅர சதுநின் 

அருளர செனஅறிந் தனன்பின் 
உரைசெய்நின் அருள்மேல் உற்றபே ராசை 

உளம்எலாம் இடங்கொண்ட தெந்தாய் 
வரைசெயா மேன்மேல் பொங்கிவாய் ததும்பி 

வழிகின்ற தென்வசங் கடந்தே 
இரைசெய்என் ஆவி தழைக்கஅவ் வருளை 

ஈந்தருள் இற்றைஇப் போதே.

14
3754

போதெலாம் வீணில் போக்கிஏ மாந்த 

புழுத்தலைப் புலையர்கள் புணர்க்கும் 
சூதெலாம் கேட்குந் தொறும்உனைப் பரவும் 

தூயர்கள் மனம்அது துளங்கித் 
தாதெலாம் கலங்கத் தளருதல் அழகோ 

தனிஅருட் சோதியால் அந்த 
வாதெலாம் தவிர்த்துச் சுத்தசன் மார்க்கம் 

வழங்குவித் தருளுக விரைந்தே.

15
3755

விரைந்துநின் அருளை ஈந்திடல் வேண்டும் 

விளம்பும்இத் தருணம்என் உளந்தான் 
கரைந்தது காதல் பெருகிமேல் பொங்கிக் 

கரைஎலாம் கடந்தது கண்டாய் 
வரைந்தெனை மணந்த வள்ளலே எல்லாம் 

வல்லவா அம்பல வாணா 
திரைந்தஎன் உடம்பைத் திருஉடம் பாக்கித் 

திகழ்வித்த சித்தனே சிவனே.

16
3756

சிவந்திகழ் கருணைத் திருநெறிச் சார்பும் 

தெய்வம்ஒன் றேஎனும் திறமும் 
நவந்தரு நிலைகள் சுதந்தரத் தியலும் 

நன்மையும் நரைதிரை முதலாம் 
துவந்துவம் தவிர்த்துச் சுத்தமா தியமுச் 

சுகவடி வம்பெறும் பேறும் 
தவந்திகழ் எல்லாம் வல்லசித் தியும்நீ 

தந்தருள் தருணம்ஈ தெனக்கே.

17
3757

தருணம்இஞ் ஞான்றே சுத்தசன் மார்க்கத் 

தனிநெறி உலகெலாம் தழைப்பக் 
கருணையும் சிவமே பொருள்எனக் கருதும் 

கருத்தும்உற் றெம்மனோர் களிப்பப் 
பொருள்நிறை ஓங்கத் தெருள்நிலை விளங்கப் 

புண்ணியம் பொற்புற வயங்க 
அருள்நயந் தருள்வாய் திருச்சிற்றம் பலத்தே 

அருட்பெருஞ் சோதிஎன் அரசே.

18
3758

என்உள வரைமேல் அருள்ஒளி ஓங்கிற் 

றிருள்இர வொழிந்தது முழுதும் 
மன்உறும் இதய மலர்மலர்ந் ததுநன் 

மங்கல முழங்குகின் றனசீர்ப் 
பொன்இயல் விளக்கம் பொலிந்தது சித்திப் 

பூவையர் புணர்ந்திடப் போந்தார் 
சொன்னநல் தருணம் அருட்பெருஞ் சோதி 

துலங்கவந் தருளுக விரைந்தே.

19
3759

வந்தருள் புரிக விரைந்திது தருணம் 

மாமணி மன்றிலே ஞான 
சுந்தர வடிவச் சோதியாய் விளங்கும் 

சுத்தசன் மார்க்கசற் குருவே 
தந்தருள் புரிக வரம்எலாம் வல்ல 

தனிஅருட் சோதியை எனது 
சிந்தையில் புணர்ப்பித் தென்னொடுங் கலந்தே 

செய்வித் தருள்கசெய் வகையே.

20


திருச்சிற்றம்பலம் 


28. திருக்கதவந் திறத்தல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3760

திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே 

திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ 
உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும் 

ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ 
கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே 

கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ 
செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே 

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

1
3761

மணிக்கதவம் திறவாயோ மறைப்பையெலாம் தவிர்த்தே 

மாற்றறியாப் பொன்னேநின் வடிவதுகாட் டாயோ 
கணிக்கறியாப் பெருநிலையில் என்னொடுநீ கலந்தே 

கரைகடந்த பெரும்போகம் கண்டிடச்செய் யாயோ 
தணிக்கறியாக் காதல்மிகப் பெருகுகின்ற தரசே 

தாங்கமுடி யாதினிஎன் தனித்தலைமைப் பதியே 
திணிக்கலையா தியஎல்லாம் பணிக்கவல்ல சிவமே 

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

2
3762

உரைகடந்த திருவருட்பே ரொளிவடிவைக் கலந்தே 

உவட்டாத பெரும்போகம் ஓங்கியுறும் பொருட்டே 
இரைகடந்தென் உள்ளகத்தே எழுந்துபொங்கித் ததும்பி 

என்காதல் பெருவெள்ளம் என்னைமுற்றும் விழுங்கிக் 
கரைகடந்து போனதினித் தாங்கமுடி யாது 

கண்டுகொள்வாய் நீயேஎன் கருத்தின்வண்ணம் அரசே 
திரைகடந்த குருமணியே சிவஞான மணியே 

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

3
3 763

உன்புடைநான் பிறர்போலே உடுக்கவிழைந் தேனோ 

உண்ணவிழைந் தேனோவே றுடைமைவிழைந் தேனோ 
அன்புடையாய் என்றனைநீ அணைந்திடவே விழைந்தேன் 

அந்தோஎன் ஆசைவெள்ளம் அணைகடந்த தரசே 
என்புடைவந் தணைகஎன இயம்புகின்றேன் உலகோர் 

என்சொலினும் சொல்லுகஎன் இலச்சைஎலாம் ஒழித்தேன் 
தென்புடையோர் முகநோக்கித் திருப்பொதுநிற் கின்றோய் 

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

4
3764

இறந்திறந்தே இளைத்ததெலாம் போதும்இந்த உடம்பே 

இயற்கைஉடம் பாகஅருள் இன்னமுதம் அளித்தென் 
புறந்தழுவி அகம்புணர்ந்தே கலந்துகொண்டெந் நாளும் 

பூரணமாம் சிவபோகம் பொங்கியிட விழைந்தேன் 
பிறந்திறந்து போய்க்கதியைப் பெறநினைந்தே மாந்த 

பேதையர்போல் எனைநினையேல் பெரியதிருக் கதவம் 
திறந்தருளி அணைந்திடுவாய் சிற்சபைவாழ் அரசே 

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

5
3765

பொய்யுடையார் விழைகின்ற புணர்ச்சிவிழைந் தேனோ 

பூணவிழைந் தேனோவான் காணவிழைந் தேனோ 
மெய்யுடையாய் என்னொடுநீ விளையாட விழைந்தேன் 

விளையாட்டென் பதுஞானம் விளையும்விளை யாட்டே 
பையுடைப்பாம் பனையரொடும் ஆடுகின்றோய் எனது 

பண்பறிந்தே நண்புவைத்த பண்புடையோய் இன்னே 
செய்யுடைஎன் னொடுகூடி ஆடஎழுந் தருள்வாய் 

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

6
3766

கூறுகின்ற சமயம்எலாம் மதங்கள்எலாம் பிடித்துக் 

கூவுகின்றார் பலன்ஒன்றும் கொண்டறியார் வீணே 
நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல் 

நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல் 
ஏறுகின்ற திறம்விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே 

இலங்குதிருக் கதவுதிறந் தின்னமுதம் அளித்தே 
தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்திஉறப் புரிவாய் 

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

7
3767

வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள் 

விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும் 
ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி 

உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே 
ஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர் 

எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடுநீ புணர்ந்தே 
தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய் 

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

8
3768

கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும் 

கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக 
மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம் 

வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே 
உலைவறும்இப் பொழுதேநல் தருணம்என நீயே 

உணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே 
சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய் 

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

9
3769

திருத்தகும்ஓர் தருணம்இதில் திருக்கதவம் திறந்தே 

திருவருட்பே ரொளிகாட்டித் திருஅமுதம் ஊட்டிக் 
கருத்துமகிழ்ந் தென்உடம்பில் கலந்துளத்தில் கலந்து 

கனிந்துயிரில் கலந்தறிவிற் கலந்துலகம் அனைத்தும் 
உருத்தகவே அடங்குகின்ற ஊழிதொறும் பிரியா 

தொன்றாகிக் காலவரை உரைப்பஎலாம் கடந்தே 
திருத்தியொடு விளங்கிஅருள் ஆடல்செய வேண்டும் 

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

10


திருச்சிற்றம்பலம் 


29. சிற்சபை விளக்கம்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3770

சோறு வேண்டினும் துகில்அணி முதலாம் 

சுகங்கள் வேண்டினும் சுகமலால் சுகமாம் 
வேறு வேண்டினும் நினைஅடைந் தன்றி 

மேவொ ணாதெனும் மேலவர் உரைக்கே 
மாறு வேண்டிலேன் வந்துநிற் கின்றேன் 

வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன் 
சாறு வேண்டிய பொழில்வடல் அரசே 

சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.250

1
 250. இஃது 1492 ஆம் பாடலின் உத்தர வடிவம். 
3771

எஞ்சல் இன்றிய துயரினால் இடரால் 

இடுக்குண் டையநின் இன்னருள் விரும்பி 
வஞ்ச நெஞ்சினேன் வந்துநிற் கின்றேன் 

வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன் 
அஞ்சல் என்றெனை ஆட்கொளல் வேண்டும் 

அப்ப நின்னலால் அறிகிலேன் ஒன்றும் 
தஞ்சம் என்றவர்க் கருள்வடல் அரசே 

சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.

2
3772

சூழ்வி லாதுழல் மனத்தினால் சுழலும் 

துட்ட னேன்அருட் சுகப்பெரும் பதிநின் 
வாழ்வு வேண்டினேன் வந்துநிற் கின்றேன் 

வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன் 
ஊழ்வி டாமையில் அரைக்கணம் எனினும் 

உன்னை விட்டயல் ஒன்றும்உற் றறியேன் 
தாழ்வி லாதசீர் தருவடல் அரசே 

சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.

3
3773

ஆட்டம் ஓய்கிலா வஞ்சக மனத்தால் 

அலைதந் தையவோ அயர்ந்துளம் மயர்ந்து 
வாட்ட மோடிவண் வந்துநிற் கின்றேன் 

வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன் 
நாட்டம் நின்புடை அன்றிமற் றறியேன் 

நாயி னேன்பிழை பொறுத்திது251 தருணம் 
தாட்ட லந்தரு வாய்வடல் அரசே 

சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.

4
 251. நயந்திது - படிவேறுபாடு. ஆ. பா. 
3774

கருணை ஒன்றிலாக் கல்மனக் குரங்கால் 

காடு மேடுழன் றுளம்மெலிந் தந்தோ 
வருண நின்புடை வந்துநிற் கின்றேன் 

வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன் 
அருணன் என்றெனை அகற்றிடு வாயேல் 

ஐய வோதுணை அறிந்திலன் இதுவே 
தருணம் எற்கருள் வாய்வடல் அரசே 

சத்தி யச்சபைத் தனிபெரும் பதியே.

5
3775

கரண வாதனை யால்மிக மயங்கிக் 

கலங்கி னேன்ஒரு களைகணும் அறியேன் 
மரணம் நீக்கிட வந்துநிற் கின்றேன் 

வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன் 
இரணன் என்றெனை எண்ணிடேல் பிறிதோர் 

இச்சை ஒன்றிலேன் எந்தைநின் உபய 
சரணம் ஈந்தருள் வாய்வடல் அரசே 

சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.

6
3776

தூய நெஞ்சினேன் அன்றுநின் கருணைச் 

சுகம்வி ழைந்திலேன் எனினும்பொய் உலக 
மாயம் வேண்டிலேன் வந்துநிற் கின்றேன் 

வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன் 
ஈய வாய்த்தநல் தருணம்ஈ தருள்க 

எந்தை நின்மலர் இணைஅடி அல்லால் 
தாயம் ஒன்றிலேன் தனிவடல் அரசே 

சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.

7
3777

சிரத்தை ஆதிய சுபகுணம் சிறிதும் 

சேர்ந்தி லேன்அருட் செயலிலேன் சாகா 
வரத்தை வேண்டினேன் வந்துநிற் கின்றேன் 

வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன் 
கரத்தை நேர்உளக் கடையன்என் றெனைநீ 

கைவி டேல்ஒரு கணம்இனி ஆற்றேன் 
தரத்தை ஈந்தருள் வாய்வடல் அரசே 

சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.

8
3778

பத்தி யஞ்சிறி துற்றிலேன் உன்பால் 

பத்தி ஒன்றிலேன் பரமநின் கருணை 
மத்தி யம்பெற வந்துநிற் கின்றேன் 

வள்ளலே உன்றன் மனக்குறிப் பறியேன் 
எத்தி அஞ்சலை எனஅரு ளாயேல் 

ஏழை யேன்உயிர் இழப்பன்உன் ஆணை 
சத்தி யம்புகன் றேன்வடல் அரசே 

சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.

9
3779

கயவு செய்மத கரிஎனச் செருக்கும் 

கருத்தி னேன்மனக் கரிசினால் அடைந்த 
மயர்வு நீக்கிட வந்துநிற் கின்றேன் 

வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன் 
உயவு வந்தருள் புரிந்திடாய் எனில்என் 

உயிர் தரித்திடா துன்அடி ஆணை 
தயவு செய்தருள் வாய்வடல் அரசே 

சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.

10


திருச்சிற்றம்பலம் 


30. திருவருட் பேறு

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3780

படிகள்எலாம் ஏற்றுவித்தீர் பரமநடம் புரியும் 

பதியைஅடை வித்தீர்அப் பதிநடுவே விளங்கும் 
கொடிகள்நிறை மணிமாடக் கோயிலையும் காட்டிக் 

கொடுத்தீர்அக் கோயிலிலே கோபுரவா யிலிலே 
செடிகள்இலாத் திருக்கதவம் திறப்பித்துக் காட்டித் 

திரும்பவும்நீர் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும் 
அடிகள்இது தருணம்இனி அரைக்கணமும் தரியேன் 

அம்பலத்தே நடம்புரிவீர் அளித்தருள்வீர் விரைந்தே.

1
3781

பெட்டிஇதில் உலவாத பெரும்பொருள்உண் டிதுநீ 

பெறுகஎன அதுதிறக்கும் பெருந்திறவுக் கோலும் 
எட்டிரண்டும் தெரியாதேன் என்கையிலே கொடுத்தீர் 

இதுதருணம் திறந்ததனை எடுக்கமுயல் கின்றேன் 
அட்டிசெய நினையாதீர் அரைக்கணமும் தரியேன் 

அரைக்கணத்துக் காயிரம்ஆ யிரங்கோடி ஆக 
வட்டிஇட்டு நும்மிடத்தே வாங்குவன்நும் ஆணை 

மணிமன்றில் நடம்புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே.

2
3782

கைக்கிசைந்த பொருள்எனக்கு வாய்க்கிசைந்துண் பதற்கே 

காலம்என்ன கணக்கென்ன கருதும்இடம் என்ன 
மெய்க்கிசைந்தன் றுரைத்ததுநீர் சத்தியம் சத்தியமே 

விடுவேனோ இன்றடியேன் விழற்கிறைத்தேன் அலவே 
செய்க்கிசைந்த சிவபோகம் விளைத்துணவே இறைத்தேன் 

தினந்தோறும் காத்திருந்தேன் திருவுளமே அறியும் 
மைக்கிசைந்த விழிஅம்மை சிவகாம வல்லி 

மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே.

3
3783

பரிகலத்தே திருஅமுதம் படைத்துணவே பணித்தீர் 

பணித்தபின்னோ என்னுடைய பக்குவம்பார்க் கின்றீர் 
இருநிலத்தே பசித்தவர்க்குப் பசிநீக்க வல்லார் 

இவர்பெரியர் இவர்சிறியர் என்னல்வழக் கலவே 
உரிமையுற்றேன் உமக்கேஎன் உள்ளம்அன்றே அறிந்தீர் 

உடல்பொருள்ஆ விகளைஎலாம் உம்மதெனக் கொண்டீர் 
திரிவகத்தே நான்வருந்தப் பார்த்திருத்தல் அழகோ 

சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகரே.

4
3784

பொய்கொடுத்த மனமாயைச் சேற்றில்விழா தெனக்கே 

பொன்மணிமே டையில்ஏறிப் புந்திமகிழ்ந் திருக்கக் 
கைகொடுத்தீர் உலகம்எலாம் களிக்கஉல வாத 

கால்இரண்டும் கொடுத்தீர்எக் காலும்அழி யாத 
மெய்கொடுக்க வேண்டும்உமை விடமாட்டேன் கண்டீர் 

மேல்ஏறி னேன்இனிக்கீழ் விழைந்திறங்கேன் என்றும் 
மைகொடுத்த விழிஅம்மை சிவகாம வல்லி 

மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே.

5
3785

மின்போலே வயங்குகின்ற விரிசடையீர் அடியேன் 

விளங்கும்உம திணைஅடிகள் மெய்அழுந்தப் பிடித்தேன் 
முன்போலே ஏமாந்து விடமாட்டேன் கண்டீர் 

முனிவறியீர் இனிஒளிக்க முடியாது நுமக்கே 
என்போலே இரக்கம்விட்டுப் பிடித்தவர்கள் இலையே 

என்பிடிக்குள் இசைந்ததுபோல் இசைந்ததிலை பிறர்க்கே 
பொன்போலே முயல்கின்ற மெய்த்தவர்க்கும் அரிதே 

பொய்தவனேன் செய்தவம்வான் வையகத்திற் பெரிதே.

6
3786

எதுதருணம் அதுதெரியேன் என்னினும்எம் மானே 

எல்லாஞ்செய் வல்லவனே என்தனிநா யகனே 
இதுதருணம் தவறும்எனில் என்உயிர்போய் விடும்இவ் 

வெளியேன்மேல் கருணைபுரிந் தெழுந்தருளல் வேண்டும் 
மதுதருண வாரிசமும் மலர்ந்ததருள் உதயம் 

வாய்த்ததுசிற் சபைவிளக்கம் வயங்குகின்ற துலகில் 
விதுதருண அமுதளித்தென் எண்ணம்எலாம் முடிக்கும் 

வேலைஇது காலைஎன விளம்பவும்வேண் டுவதோ.

7
3787

கோள்அறிந்த பெருந்தவர்தம் குறிப்பறிந்தே உதவும் 

கொடையாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா 
ஆள்அறிந்திங் கெனைஆண்ட அரசேஎன் அமுதே 

அம்பலத்தே நடம்புரியும் அரும்பெருஞ்சோ தியனே 
தாள்அறிந்தேன் நின்வரவு சத்தியம்சத் தியமே 

சந்தேகம் இல்லைஅந்தத் தனித்ததிரு வரவின் 
நாள்அறிந்து கொளல்வேண்டும் நவிலுகநீ எனது 

நனவிடையா யினும்அன்றிக் கனவிடையா யினுமே.

8
3788

அன்றெனக்கு நீஉரைத்த தருணம்இது எனவே 

அறிந்திருக்கின் றேன்அடியேன் ஆயினும்என் மனந்தான் 
கன்றெனச்சென் றடிக்கடிஉட் கலங்குகின்ற252 தரசே 

கண்ணுடைய கரும்பேஎன் கவலைமனக் கலக்கம் 
பொன்றிடப்பே ரின்பவெள்ளம் பொங்கிடஇவ் வுலகில் 

புண்ணியர்கள் உளங்களிப்புப் பொருந்திவிளங் கிடநீ 
இன்றெனக்கு வெளிப்படஎன் இதயமலர் மிசைநின்253 

றெழுந்தருளி அருள்வதெலாம் இனிதருள்க விரைந்தே.

9
 252. கலக்குகின்ற - ச. மு. க. பதிப்பு. 
253. மிசையின் - ச. மு. க. பதிப்பு.
 
3789

இதுதருணம் நமையாளற் கெழுந்தருளுந் தருணம் 

இனித்தடைஒன் றிலைகண்டாய் என்மனனே நீதான் 
மதுவிழுமோர் ஈப்போலே மயங்காதே கயங்கி 

வாடாதே மலங்காதே மலர்ந்துமகிழ்ந் திருப்பாய் 
குதுகலமே இதுதொடங்கிக் குறைவிலைகாண் நமது 

குருவாணை நமதுபெருங் குலதெய்வத் தாணை 
பொதுவில்நடம் புரிகின்ற புண்ணியனார் எனக்குள் 

புணர்ந்துரைத்த திருவார்த்தை பொன்வார்த்தை இதுவே.

10


திருச்சிற்றம்பலம் 


31. உண்மை கூறல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3790

தனிப்பெருந் தலைவரே தாயவ ரேஎன் 

தந்தைய ரேபெருந் தயவுடை யவரே 
பனிப்பறுத் தெனையாண்ட பரம்பர ரேஎம் 

பார்வதி புரஞானப் பதிசிதம் பரரே 
இனிச்சிறு பொழுதேனுந் தாழ்த்திடல் வேண்டா 

இறையவ ரேஉமை இங்குகண் டல்லால் 
அனிச்சய உலகினைப் பார்க்கவும் மாட்டேன் 

அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.

1
3791

பெறுவது நுமைஅன்றிப் பிறிதொன்றும் விரும்பேன் 

பேசல்நும் பேச்சன்றிப் பிறிதொன்றும் பேசேன் 
உறுவதுநும் அருள்அன்றிப் பிரிதொன்றும் உவவேன் 

உன்னல்உம் திறன்அன்றிப் பிரிதொன்றும் உன்னேன் 
மறுநெறி தீர்த்தெனை வாழ்வித்துக் கொண்டீர் 

வள்ளலே நும்திரு வரவுகண் டல்லால் 
அறுசுவை உண்டிகொண் டருந்தவும் மாட்டேன் 

அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.

2
3792

கரும்பிடை இரதமும் கனியில்இன் சுவையும் 

காட்டிஎன் உள்ளம் கலந்தினிக் கின்றீர் 
விரும்பிநும் பொன்னடிக் காட்பட்டு நின்றேன் 

மேல்விளை வறிகிலன் விச்சைஒன் றில்லேன் 
துரும்பினும் சிறியனை அன்றுவந் தாண்டீர் 

தூயநும் பேரருட் சோதிகண் டல்லால் 
அரும்பெறல் உண்டியை விரும்பவும் மாட்டேன் 

அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.

3
3793

தடுத்தெனை ஆட்கொண்ட தந்தைய ரேஎன் 

தனிப்பெருந் தலைவரே சபைநடத் தவரே 
தொடுத்தொன்று சொல்கிலேன் சொப்பனத் தேனும் 

தூயநும் திருவருள் நேயம்விட் டறியேன் 
விடுத்திடில் என்னைநீர் விடுப்பன்என் உயிரை 

வெருவுளக் கருத்தெல்லாம் திருவுளத் தறிவீர் 
அடுத்தினிப் பாயலில் படுக்கவும் மாட்டேன் 

அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.

4
3794

காசையும் பணத்தையும் கன்னியர் தமையும் 

காணியின் ஆட்சியும் கருதிலேன் கண்டீர் 
நேசநும் திருவருள் நேசம்ஒன் றல்லால் 

நேசம்மற் றிலைஇது நீர்அறி யீரோ 
ஏசறல் அகற்றிவந் தென்னைமுன் ஆண்டீர் 

இறையவ ரேஉமை இன்றுகண் டல்லால் 
ஆசையிற் பிறரொடு பேசவும் மாட்டேன் 

அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.

5
3795

என்பொருள் என்உடல் என்உயிர் எல்லாம் 

ஈந்தனன் உம்மிடத் தெம்பெரு மானீர் 
இன்பொடு வாங்கிக்கொண் டென்னையாட் கொண்டீர் 

என்செயல் ஒன்றிலை யாவும்நும் செயலே 
வன்பொடு நிற்கிலீர் என்பொடு கலந்தீர் 

வள்ளலே நும்திரு வரவுகண் டல்லால் 
அன்பொடு காண்பாரை முன்பிட மாட்டேன் 

அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.

6
3796

திருந்தும்என் உள்ளத் திருக்கோயில் ஞான 

சித்தி புரம்எனச் சத்தியம் கண்டேன் 
இருந்தருள் கின்றநீர் என்னிரு கண்கள் 

இன்புற அன்றுவந் தெழில்உருக் காட்டி 
வருந்தலை என்றெனைத் தேற்றிய வாறே 

வள்ளலே இன்றுநும் வரவுகண் டல்லால் 
அருந்தவர் நேரினும் பொருந்தவும் மாட்டேன் 

அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.

7
3797

கரைக்கணம் இன்றியே கடல்நிலை செய்தீர் 

கருணைக் கடற்குக் கரைக்கணஞ் செய்யீர் 
உரைக்கண வாத உயர்வுடை யீர்என் 

உரைக்கண விப்பல உதவிசெய் கின்றீர் 
வரைக்கண எண்குண மாநிதி ஆனீர் 

வாய்மையில் குறித்தநும் வரவுகண் டல்லால் 
அரைக்கணம் ஆயினும் தரித்திட மாட்டேன் 

அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.

8
3798

மடுக்கநும் பேரருள் தண்அமு தெனக்கே 

மாலையும் காலையும் மத்தியா னத்தும் 
கடுக்கும் இரவினும் யாமத்தும் விடியற் 

காலையி னுந்தந்தென் கடும்பசி தீர்த்து 
எடுக்குநற் றாயொடும் இணைந்துநிற் கின்றீர் 

இறையவ ரேஉம்மை இங்குகண் டல்லால் 
அடுக்கவீழ் கலைஎடுத் துடுக்கவும் மாட்டேன் 

அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.

9
3799

கறுத்துரைக் கின்றவர் களித்துரைக் கின்ற 

காலைஈ தென்றே கருத்துள் அறிந்தேன் 
நிறுத்துரைக் கின்றபல் நேர்மைகள் இன்றி 

நீடொளிப் பொற்பொது நாடகம் புரிவீர் 
செறுத்துரைக் கின்றவர் தேர்வதற் கரியீர் 

சிற்சபை யீர்எனைச் சேர்ந்திடல் வேண்டும் 
அறுத்துரைக் கின்றேன்நான் பொறுத்திட மாட்டேன் 

அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.

10


திருச்சிற்றம்பலம் 


32. பிரியேன் என்றல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3800

அப்பாநான் பற்பலகால் அறைவதென்னே அடியேன் 

அச்சம்எலாம் துன்பம்எலாம் அறுத்துவிரைந் துவந்தே 
இப்பாரில் இதுதருணம் என்னைஅடைந் தருளி 

எண்ணம்எலாம் முடித்தென்னை ஏன்றுகொளாய் எனிலோ 
தப்பாமல் உயிர்விடுவேன் சத்தியஞ்சத் தியம்நின் 

தாளிணைகள் அறிகஇது தயவுடையோய் எவர்க்கும் 
துப்பாகித் துணையாகித் துலங்கியமெய்த் துணையே 

சுத்தசிவா னந்தஅருட் சோதிநடத் தரசே.

1
3801

ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஐயா 

அரைக்கணமும் நினைப்பிரிந்தே இனித்தரிக்க மாட்டேன் 
கோணைநிலத் தவர்பேசக் கேட்டதுபோல் இன்னும் 

குறும்புமொழி செவிகள்உறக் கொண்டிடவும் மாட்டேன் 
ஊணைஉறக் கத்தையும்நான் விடுகின்றேன் நீதான் 

உவந்துவராய் எனில்என்றன் உயிரையும்விட் டிடுவேன் 
மாணைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்நீ எனது 

மனம்அறிவாய் இனம்உனக்கு வகுத்துரைப்ப தென்னே.

2
3802

படமுடியா தினித்துயரம் படமுடியா தரசே 

பட்டதெல்லாம் போதும்இந்தப் பயந்தீர்த்திப் பொழுதென் 
உடல்உயிரா தியஎல்லாம் நீஎடுத்துத் கொண்டுன் 

உடல்உயிரா தியஎல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய் 
வடலுறுசிற் றம்பலத்தே வாழ்வாய்என் கண்ணுள் 

மணியேஎன் குருமணியே மாணிக்க மணியே 
நடனசிகா மணியேஎன் நவமணியே ஞான 

நன்மணியே பொன்மணியே நடராஜ மணியே.

3
3803

வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட 

மரபினில்யான் ஒருவன்அன்றோ வகைஅறியேன் இந்த 
ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ 

இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ 
மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்யான் உனக்கு 

மகன்அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ 
கோழைஉல குயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன் 

கொடுத்தருள்நின் அருள்ஒளியைக் கொடுத்தருள்இப் பொழுதே.

4
3804

செய்வகைஎன் எனத்திகைத்தேன் திகையேல்என் றொருநாள் 

திருமேனி காட்டிஎனைத் தெளிவித்தாய் நீயே 
பொய்வகைஅன் றிதுநினது புந்திஅறிந் ததுவே 

பொன்னடியே துணைஎனநான் என்உயிர்வைத் திருந்தேன் 
எய்வகைஎன் நம்பெருமான் அருள்புரிவான் என்றே 

எந்தைவர வெதிர்பார்த்தே இன்னும்இருக் கின்றேன் 
ஐவகைஇவ் உயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன் 

அருட்சோதிப் பெரும்பொருளை அளித்தருள்இப் பொழுதே.

5
3805

முன்ஒருநாள் மயங்கினன்நீ மயங்கேல்என் றெனக்கு 

முன்னின்உருக் காட்டினைநான் முகமலர்ந்திங் கிருந்தேன் 
இன்னும்வரக் காணேன்நின் வரவைஎதிர் பார்த்தே 

எண்ணிஎண்ணி வருந்துகின்றேன் என்னசெய்வேன் அந்தோ 
அன்னையினும் தயவுடையாய் நின்தயவை நினைத்தே 

ஆருயிர்வைத் திருக்கின்றேன் ஆணைஇது கண்டாய் 
என்இருகண் மணியேஎன் அறிவேஎன் அன்பே 

என்னுயிர்க்குப் பெருந்துணையே என்னுயிர்நா யகனே.

6
3806

உன்னைமறந் திடுவேனோ மறப்பறியேன் மறந்தால் 

உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்ஆணை இதுநீ 
என்னைமறந் திடுவாயோ மறந்திடுவாய் எனில்யான் 

என்னசெய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய் 
அன்னையினும் தயவுடையாய் நீமறந்தாய் எனினும் 

அகிலம்எலாம் அளித்திடும்நின் அருள்மறவா தென்றே 
இன்னுமிகக் களித்திங்கே இருக்கின்றேன் மறவேல் 

இதுதருணம் அருட்சோதி எனக்குவிரைந் தருளே.

7
3807

நான்மறந்தேன் எனினும்எனைத் தான்மறவான் எனது 

நாயகன்என் றாடுகின்றேன் எனினும்இது வரையும் 
வான்மறந்தேன் வானவரை மறந்தேன்மால் அயனை 

மறந்தேன்நம் உருத்திரரை மறந்தேன்என் னுடைய 
ஊன்மறந்தேன் உயிர்மறந்தேன் உணர்ச்சிஎலாம் மறந்தேன் 

உலகம்எலாம் மறந்தேன்இங் குன்னைமறந் தறியேன் 
பான்மறந்த குழவியைப்போல் பாரேல்இங் கெனையே 

பரிந்துநின தருட்சோதி புரிந்துமகிழ்ந் தருளே.

8
3808

தெருவிடத்தே விளையாடித் திரிந்தஎனை வலிந்தே 

சிவமாலை அணிந்தனைஅச் சிறுவயதில் இந்த 
உருவிடத்தே நினக்கிருந்த ஆசைஎலாம் இந்நாள் 

ஓடியதோ புதியஒரு உருவுவிழைந் ததுவோ 
கருவிடத்தே எனைக்காத்த காவலனே உனது 

கால்பிடித்தேன் விடுவேனோ கைப்பிடிஅன் றதுதான் 
வெருவிடத்தென் உயிர்ப்பிடிகாண் உயிர்அகன்றால் அன்றி 

விடமாட்டேன் விடமாட்டேன் விடமாட்டேன் நானே.

9
3809

பெரியன்அருட் பெருஞ்சோதிப் பெருங்கருணைப் பெருமான் 

பெரும்புகழைப் பேசுதலே பெரும்பேறென் றுணர்ந்தே 
துரியநிலத் தவர்எல்லாம் துதிக்கின்றார் ஏழை 

துதித்தல்பெரி தலஇங்கே துதித்திடஎன் றெழுந்த 
அரியபெரும் பேராசைக் கடல்பெரிதே அதுஎன் 

அளவுகடந் திழுக்கின்ற தாதலினால் விரைந்தே 
உரியஅருள் அமுதளித்தே நினைத்துதிப்பித் தருள்வாய் 

உலகமெலாம் களித்தோங்க ஓங்குநடத் தரசே.

10
3810

கவலைஎலாம் தவிர்ந்துமிகக் களிப்பினொடு நினையே 

கைகுவித்துக் கண்களில்நீர் கனிந்துசுரந் திடவே 
சவலைமனச் சலனம்எலாம் தீர்ந்துசுக மயமாய்த் 

தானேதான் ஆகிஇன்பத் தனிநடஞ்செய் இணைத்தாள் 
தவலருஞ்சீர்ச் சொன்மாலை வனைந்துவனைந் தணிந்து 

தானாகி நானாடத் தருணம்இது தானே 
குவலையத்தார் அதிசயிக்க எழுந்தருளி வருவாய் 

குருவேஎன் குற்றமெலாம் குணமாக்கொண் டவனே.

11


திருச்சிற்றம்பலம் 


33. சிவ தரிசனம்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3811

திருஉடையாய் சிற்சபைவாழ் சிவபதியே எல்லாம் 

செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியே 
உருஉடைஎன் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே 

உன்னுதொறும் என்னுளத்தே ஊறுகின்ற அமுதே 
அருஉடைய பெருவெளியாய் அதுவிளங்கு வெளியாய் 

அப்பாலும் ஆய்நிறைந்த அருட்பெருஞ்சோ தியனே 
மருஉடையாள் சிவகாம வல்லிமண வாளா 

வந்தருள்க அருட்சோதி தந்தருள்க விரைந்தே.

1
3812

சொல்லவனே பொருளவனே துரியபதத் தவனே 

தூயவனே நேயவனே சோதிஉரு வவனே 
நல்லவனே நன்னிதியே ஞானசபா பதியே 

நாயகனே தாயகனே நண்பவனே அனைத்தும் 
அல்லவனே ஆனவனே அம்மைஅப்பா என்னை 

ஆண்டவனே தாண்டவனே அருட்குருவே எல்லாம் 
வல்லவனே சிவகாம வல்லிமண வாளா 

மன்னவனே என்னவனே வந்தருள்க விரைந்தே.

2
3813

துரியநிலை துணிந்தவரும் சொல்லரும்மெய்ப் பொருளே 

சுத்தசிவா னந்தசபைச் சித்தசிகா மணியே 
பெரியசிவ பதியேநின் பெருமைஅறிந் திடவே 

பேராசைப் படுகின்றேன் பித்தர்களில் பெரியேன் 
கரியமணித் திறத்தினையும் காணவல்லேன் அல்லேன் 

கண்மணியே நின்திறத்தைக் காணுதல்வல் லேனோ 
அரியபெரும் பொருளாம்உன் அருட்சோதி எனக்கே 

அளித்தனையேல் அறிந்துகொள்வேன் அளித்திடுக விரைந்தே.

3
3814

மறப்பறியாப் பேரறிவில் வாய்த்தபெருஞ் சுகமே 

மலைவறியா நிலைநிரம்ப வயங்கியசெம் பொருளே 
இறப்பறியாத் திருநெறியில்254 என்னைவளர்த் தருளும் 

என்னுடைய நற்றாயே எந்தாயே நினது 
சிறப்பறியா உலகமெலாம் சிறப்பறிந்து கொளவே 

சித்தசிகா மணியேநீ சித்திஎலாம் விளங்கப் 
பிறப்பறியாப் பெருந்தவரும் வியப்பவந்து தருவாய் 

பெருங்கருணை அரசேநீ தருந்தருணம் இதுவே.

4
 

254. திருநிலையில் - முதற் பதிப்பு, பொ. சு., பி. இரா. 

3815 
முன்னுழைப்பால் உறும்எனவே மொழிகின்றார் மொழியின் 

முடிவறியேன் எல்லாம்செய் முன்னவனே நீஎன் 
தன்னுழைப்பார்த் தருள்வாயேல் உண்டனைத்தும் ஒருநின் 

தனதுசுதந் தரமேஇங் கெனதுசுதந் தரமோ 
என்னுழைப்பால் என்பயனோ இரங்கிஅரு ளாயேல் 

யானார்என் அறிவெதுமேல் என்னைமதிப் பவரார் 
பொன்னுழைப்பால் பெறலும்அரி தருள்இலையேல் எல்லாம் 

பொதுநடஞ்செய் புண்ணியநீ எண்ணியவா றாமே.

5
3816

விழித்துவிழித் திமைத்தாலும் சுடர்உதயம் இலையேல் 

விழிகள்விழித் திளைப்பதலால் விளைவொன்றும் இலையே 
மொழித்திறஞ்செய் தடிக்கடிநான் முடுகிமுயன் றாலும் 

முன்னவநின் பெருங்கருணை முன்னிடல்இன் றெனிலோ 
செழித்துறுநற் பயன்எதுவோ திருவுளந்தான் இரங்கில் 

சிறுதுரும்போர் ஐந்தொழிலும் செய்திடல்சத் தியமே 
பழித்துரைப்பார் உரைக்கஎலாம் பசுபதிநின் செயலே 

பரிந்தெனையும் பாடுவித்துப் பரிசுமகிழ்ந் தருளே.

6
3817

மாநிருபா திபர்சூழ மணிமுடிதான் பொறுத்தே 

மண்ணாள வானாள மனத்தில்நினைத் தேனோ 
தேன்ஒருவா மொழிச்சியரைத் திளைக்கவிழைந் தேனோ 

தீஞ்சுவைகள் விரும்பினனோ தீமைகள்செய் தேனோ 
நானொருபா வமும்அறியேன் நன்னிதியே எனது 

நாயகனே பொதுவிளங்கும் நடராஜ பதியே 
ஏன்ஒருமை இலர்போல்நீ இருக்கின்றாய் அழகோ 

என்ஒருமை அறியாயோ யாவும்அறிந் தாயே.

7
3818

பாவிமனக் குரங்காட்டம் பார்க்கமுடி யாதே 

பதிவெறுத்தேன் நிதிவெறுத்தேன் பற்றனைத்தும் தவிர்ந்தேன் 
ஆவிஉடல் பொருளைஉன்பாற் கொடுத்தேன்உன் அருட்பேர் 

ஆசைமய மாகிஉனை அடுத்துமுயல் கின்றேன் 
கூவிஎனை ஆட்கொள்ள நினையாயோ நினது 

குறிப்பறியேன் பற்பலகால் கூறிஇளைக் கின்றேன் 
தேவிசிவ காமவல்லி மகிழும்மண வாளா 

தெருள்நிறைவான் அமுதளிக்கும் தருணம்இது தானே.

8
3819

கட்டவிழ்ந்த கமலம்எனக் கருத்தவிழ்ந்து நினையே 

கருதுகின்றேன் வேறொன்றும் கருதுகிலேன் இதுதான் 
சிட்டருளம் திகழ்கின்ற சிவபதியே நினது 

திருவுளமே அறிந்ததுநான் செப்புதல்என் புவிமேல் 
விட்டகுறை தொட்டகுறை இரண்டும்நிறைந் தனன்நீ 

விரைந்துவந்தே அருட்சோதி புரிந்தருளும் தருணம் 
தொட்டதுநான் துணிந்துரைத்தேன் நீஉணர்த்த உணர்ந்தே 

சொல்வதலால் என்அறிவால் சொல்லவல்லேன் அன்றே.

9
3820

காட்டைஎலாம் கடந்துவிட்டேன் நாட்டைஅடைந் துனது 

கடிநகர்ப்பொன் மதிற்காட்சி கண்குளிரக் கண்டேன் 
கோட்டைஎலாம் கொடிநாட்டிக் கோலமிடப் பார்த்தேன் 

கோயிலின்மேல் வாயிலிலே குறைகளெலாம் தவிர்ந்தேன் 
சேட்டைஅற்றுக் கருவிஎலாம் என்வசம்நின் றிடவே 

சித்திஎலாம் பெற்றேன்நான் திருச்சிற்றம் பலமேல் 
பாட்டைஎலாம் பாடுகின்றேன் இதுதருணம் பதியே 

பலந்தரும்என் உளந்தனிலே கலந்துநிறைந் தருளே.

10
3821

சித்திஎலாம் வல்லசிவ சித்தன்உளம் கலந்தான் 

செத்தாரை எழுப்புகின்ற திருநாள்கள் அடுத்த 
இத்தினமே தொடங்கிஅழி யாதநிலை அடைதற் 

கேற்றகுறி ஏற்றவிடத் திசைந்தியல்கின் றனநாம் 
சத்தியமே பெருவாழ்வில் பெருங்களிப்புற் றிடுதல் 

சந்தேகித் தலையாதே சாற்றியஎன் மொழியை 
நித்தியவான் மொழிஎன்ன நினைந்துமகிழ்ந் தமைவாய் 

நெஞ்சேநீ அஞ்சேல்உள் அஞ்சேல்அஞ் சேலே.

11


திருச்சிற்றம்பலம் 


34. அனுபோக நிலயம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3822

இனிப்பிரிந் திறையும் இருக்கலேன் பிரிவை 

எண்ணினும் ஐயவோ மயங்கிப் 
பனிப்பில்என் உடம்பும் உயிரும்உள் உணர்வும் 

பரதவிப் பதைஅறிந் திலையோ 
தனிப்படு ஞான வெளியிலே இன்பத் 

தனிநடம் புரிதனித் தலைவா 
கனிப்பயன் தருதற் கிதுதகு தருணம் 

கலந்தருள் கலந்தருள் எனையே.

1
3823

பிரிந்தினிச் சிறிதும் தரிக்கலேன் பிரிவைப் 

பேசினும் நெய்விடுந் தீப்போல் 
எரிந்துளங் கலங்கி255 மயங்கல்கண் டிலையோ 

எங்கணும் கண்ணுடை எந்தாய் 
புரிந்தசிற் பொதுவில் திருநடம் புரியும் 

புண்ணியா என்னுயிர்த் துணைவா 
கரந்திடா256 துறுதற் கிதுதகு தருணம் 

கலந்தருள் கலந்தருள் எனையே.

2
 255. கருகி - முதற் பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க. 
256. கரைந்திடாது - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க.
 
3824

மேலைஏ காந்த வெளியிலே நடஞ்செய் 

மெய்யனே ஐயனே எனக்கு 
மாலையே அணிந்த மகிழ்நனே எல்லாம் 

வல்லனே நல்லனே அருட்செங் 
கோலையே நடத்தும் இறைவனே ஓர்எண் 

குணத்தனே இனிச்சகிப் பறியேன் 
காலையே தருதற் கிதுதகு தருணம் 

கலந்தருள் கலந்தருள் எனையே.

3
3825

பண்டுகொண் டெனைத்தான் பிழைகுறி யாத 

பண்பனே திருச்சிற்றம் பலத்தே 
தொண்டுகொண் டடியர் களிக்கநின் றாடும் 

தூயனே நேயனே பிரமன் 
விண்டுகண் டறியா முடிஅடி எனக்கே 

விளங்குறக் காட்டிய விமலா 
கண்டுகொண் டுறுதற் கிதுதகு தருணம் 

கலந்தருள் கலந்தருள் எனையே.

4
3826

தனித்துணை எனும்என் தந்தையே தாயே 

தலைவனே சிற்சபை தனிலே 
இனித்ததெள் ளமுதே என்னுயிர்க் குயிரே 

என்னிரு கண்ணுள்மா மணியே 
அனித்தமே நீக்கி ஆண்டஎன் குருவே 

அண்ணலே இனிப்பிரி வாற்றேன் 
கனித்துணை தருதற் கிதுதகு தருணம் 

கலந்தருள் கலந்தருள் எனையே.

5
3827

துன்பெலாம் தவிர்க்கும் திருச்சிற்றம் பலத்தே 

சோதியுட் சோதியே அழியா 
இன்பெலாம் அளிக்கும் இறைவனே என்னை 

ஈன்றநல் தந்தையே தாயே 
அன்பெலாம் ஆகி நிறைந்ததோர் நிறைவே 

அண்ணலே இனிப்பிரி வாற்றேன் 
பொன்பதந் தருதற் கிதுதகு தருணம் 

புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.

6
3828

ஏதும்ஒன் றறியாப் பேதையாம் பருவத் 

தென்னைஆட் கொண்டெனை உவந்தே 
ஓதும்இன் மொழியால் பாடவே பணித்த 

ஒருவனே என்னுயிர்த் துணைவா 
வேதமும் பயனும் ஆகிய பொதுவில் 

விளங்கிய விமலனே ஞான 
போதகம் தருதற் கிதுதகு தருணம் 

புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.

7
3829

எண்ணிய எனதுள் எண்ணமே எண்ணத் 

திசைந்தபேர் இன்பமே யான்தான் 
பண்ணிய தவமே தவத்துறும் பலனே 

பலத்தினால் கிடைத்தஎன் பதியே 
தண்ணிய மதியே மதிமுடி அரசே 

தனித்தசிற் சபைநடத் தமுதே 
புண்ணியம் அளித்தற் கிதுதகு தருணம் 

புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.

8
3830

மலப்பகை தவிர்க்கும் தனிப்பொது மருந்தே 

மந்திர மேஒளிர் மணியே 
நிலைப்பட எனைஅன் றாண்டருள் அளித்த 

நேயனே தாயனை யவனே 
பலப்படு பொன்னம் பலத்திலே நடஞ்செய் 

பரமனே பரமசிற் சுகந்தான் 
புலப்படத் தருதற் கிதுதகு தருணம் 

புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.

9
3831

களிப்புறும் அடியேன் கையிலே கிடைத்த 

கற்பகத் தீஞ்சுவைக் கனியே 
வெளிப்புறத் தோங்கும் விளக்கமே அகத்தே 

விளங்கும்ஓர் விளக்கமே எனக்கே 
ஒளிப்பிலா தன்றே அளித்தசிற் பொதுவில் 

ஒருவனே இனிப்பிரி வாற்றேன் 
புளிப்பற இனித்தற் கிதுதகு தருணம் 

புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.

10


திருச்சிற்றம்பலம் 


35. சிவயோக நிலை

நேரிசை வெண்பா

3832மதிமண்ட லத்தமுதம் வாயார உண்டே 
பதிமண்ட லத்தரசு பண்ண - நிதிய 
நவநேய மாக்கும் நடராச னேயெஞ் 
சிவனே கதவைத் திற.
1
3833இந்தார் அருளமுதம் யானருந்தல் வேண்டுமிங்கே 
நந்தா மணிவிளக்கே ஞானசபை - எந்தாயே 
கோவே எனது குருவே எனையாண்ட 
தேவே கதவைத் திற.
2
3834சாகா அருளமுதம் தானருந்தி நான்களிக்க 
நாகா திபர்சூழ் நடராசா - ஏகா 
பவனே பரனே பராபரனே எங்கள் 
சிவனே கதவைத் திற.
3
3835அருளோங்கு தண்ணமுதம் அன்பால் அருந்தி 
மருள்நீங்கி நான்களித்து வாழப் - பொருளாந் 
தவநேயர் போற்றும் தயாநிதியே எங்கள் 
சிவனே கதவைத் திற.
4
3836வானோர்க் கரிதெனவே மாமறைகள் சாற்றுகின்ற 
ஞானோ தயஅமுதம் நானருந்த - ஆனாத் 
திறப்பா வலர்போற்றும் சிற்றம் பலவா 
சிறப்பா கதவைத் திற.
5

3837
எல்லாமும் வல்லசித்தென் றெல்லா மறைகளுஞ்சொல் 
நல்லார் அமுதமது நானருந்த - நல்லார்க்கு 
நல்வாழ் வளிக்கும் நடராயா மன்றோங்கு 
செல்வா கதவைத் திற.
6
3838ஏழ்நிலைக்கும் மேற்பால் இருக்கின்ற தண்ணமுதம் 
வாழ்நிலைக்க நானுண்டு மாண்புறவே - கேழ்நிலைக்க 
ஆவாஎன் றென்னைஉவந் தாண்டதிரு அம்பலமா 
தேவா கதவைத் திற.
7
3839ஈன உலகத் திடர்நீங்கி இன்புறவே 
ஞான அமுதமது நானருந்த - ஞான 
உருவே உணர்வே ஒளியே வெளியே 
திருவே கதவைத் திற.
8
3840திரையோ தசத்தே திகழ்கின்ற என்றே 
வரையோது தண்ணமுதம் வாய்ப்ப - உரைஓது 
வானேஎம் மானேபெம் மானே மணிமன்றில் 
தேனே கதவைத் திற.
9
3841சோதிமலை மேல்வீட்டில் தூய திருஅமுதம் 
மேதினிமேல் நான்உண்ண வேண்டினேன் - ஓதரிய 
ஏகா அனேகா எழிற்பொதுவில் வாழ்ஞான 
தேகா கதவைத் திற.
10


திருச்சிற்றம்பலம் 


36. பெற்ற பேற்றினை வியத்தல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3842

சீரிடம் பெறும்ஓர் திருச்சிற்றம் பலத்தே 

திகழ்தனித் தந்தையே நின்பால் 
சேரிடம் அறிந்தே சேர்ந்தனன்257 கருணை 

செய்தருள் செய்திடத் தாழ்க்கில் 
யாரிடம் புகுவேன் யார்துணை என்பேன் 

யார்க்கெடுத் தென்குறை இசைப்பேன் 
போரிட முடியா தினித்துய ரொடுநான் 

பொறுக்கலேன் அருள்கஇப் போதே.

1
 257. சேரிடம் அறிந்து சேர் - ஆத்திசூடி. 
3843

போதுதான் விரைந்து போகின்ற தருள்நீ 

புரிந்திடத் தாழ்த்தியேல் ஐயோ 
யாதுதான் புரிவேன் யாரிடம் புகுவேன் 

யார்க்கெடுத் தென்குறை இசைப்பேன் 
தீதுதான் புரிந்தேன் எனினும்நீ அதனைத் 

திருவுளத் தடைத்திடு வாயேல் 
ஈதுதான் தந்தை மரபினுக் கழகோ 

என்னுயிர்த் தந்தைநீ அலையோ.

2
3844

தந்தைநீ அலையோ தனயன்நான் அலனோ 

தமியனேன் தளர்ந்துளங் கலங்கி 
எந்தையே குருவே இறைவனே முறையோ 

என்றுநின் றோலிடு கின்றேன் 
சிந்தையே அறியார் போன்றிருந் தனையேல் 

சிறியனேன் என்செய்கேன் ஐயோ 
சந்தையே புகுந்த நாயினில் கடையேன் 

தளர்ச்சியைத் தவிர்ப்பவர் யாரே.

3
3845

யாரினும் கடையேன் யாரினும் சிறியேன் 

என்பிழை பொறுப்பவர் யாரே 
பாரினும் பெரிதாம் பொறுமையோய் நீயே 

பாவியேன் பிழைபொறுத் திலையேல் 
ஊரினும் புகுத ஒண்ணுமோ பாவி 

உடம்பைவைத் துலாவவும் படுமோ 
சேரினும் எனைத்தான் சேர்த்திடார் பொதுவாம் 

தெய்வத்துக் கடாதவன் என்றே.

4
3846

அடாதகா ரியங்கள் செய்தனன் எனினும் 

அப்பநீ அடியனேன் தன்னை 
விடாதவா றறிந்தே களித்திருக் கின்றேன் 

விடுதியோ விட்டிடு வாயேல் 
உடாதவெற் றரைநேர்ந் துயங்குவேன் ஐயோ 

உன்னருள் அடையநான் இங்கே 
படாதபா டெல்லாம் பட்டனன் அந்தப் 

பாடெலாம் நீஅறி யாயோ.

5
3847

அறிந்திலை யோஎன் பாடெலாம் என்றே 

அழைத்தனன் அப்பனே என்னை 
எறிந்திடா திந்தத் தருணமே வந்தாய் 

எடுத்தணைத் தஞ்சிடேல் மகனே 
பிறிந்திடேம் சிறிதும் பிறிந்திடேம் உலகில் 

பெருந்திறல் சித்திகள் எல்லாம் 
சிறந்திட உனக்கே தந்தனம் எனஎன் 

சென்னிதொட் டுரைத்தனை களித்தே.

6
3848

களித்தென துடம்பில் புகுந்தனை எனது 

கருத்திலே அமர்ந்தனை கனிந்தே 
தெளித்தஎன் அறிவில் விளங்கினை உயிரில் 

சிறப்பினால் கலந்தனை உள்ளம் 
தளிர்த்திடச் சாகா வரங்கொடுத் தென்றும் 

தடைபடாச் சித்திகள் எல்லாம் 
அளித்தனை எனக்கே நின்பெருங் கருணை 

அடியன்மேல் வைத்தவா றென்னே.

7
3849

என்நிகர் இல்லா இழிவினேன் தனைமேல் 

ஏற்றினை யாவரும் வியப்பப் 
பொன்இயல் வடிவும் புரைபடா உளமும் 

பூரண ஞானமும் பொருளும் 
உன்னிய எல்லாம் வல்லசித் தியும்பேர் 

உவகையும் உதவினை எனக்கே 
தன்னிகர் இல்லாத் தலைவனே நினது 

தயவைஎன் என்றுசாற் றுவனே.

8
3850

சாற்றுவேன் எனது தந்தையே தாயே 

சற்குரு நாதனே என்றே 
போற்றுவேன் திருச்சிற் றம்பலத் தாடும் 

பூரணா எனஉல கெல்லாம் 
தூற்றுவேன் அன்றி எனக்குநீ செய்த 

தூயபேர் உதவிக்கு நான்என் 
ஆற்றுவேன் ஆவி உடல்பொருள் எல்லாம் 

அப்பநின் சுதந்தரம் அன்றோ.

9
3851

சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது 

தூயநல் உடம்பினில் புகுந்தேம் 
இதந்தரும் உளத்தில் இருந்தனம் உனையே 

இன்புறக் கலந்தனம் அழியாப் 
பதந்தனில் வாழ்க அருட்பெருஞ் சோதிப் 

பரிசுபெற் றிடுகபொற் சபையும் 
சிதந்தரு சபையும் போற்றுக என்றாய் 

தெய்வமே வாழ்கநின் சீரே.

10


திருச்சிற்றம்பலம் 


37. அழிவுறா அருள்வடிவப் பேறு

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3852சிவங்க னிந்தசிற் றம்பலத் தருள்நடம் செய்கின்ற பெருவாழ்வே 
நவங்க னிந்தமேல் நிலைநடு விளங்கிய நண்பனே அடியேன்றன் 
தவங்க னிந்ததோர் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் புரிந்தாயே 
பவங்க னிந்தஇவ் வடிவமே அழிவுறாப் பதிவடி வாமாறே.
1
3853விளங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் விளைக்கின்ற பெருவாழ்வே 
களங்க மில்லதோர் உளநடு விளங்கிய கருத்தனே அடியேன்நான் 
விளம்பி நின்றதோர் விண்ணப்பம் திருச்செவி வியந்தருள் புரிந்தாயே 
உளங்கொள் இவ்வடி விம்மையே மந்திர ஒளிவடி வாமாறே.
2
3854விஞ்சு கின்றசிற் றம்பலத் தருள்நடம் விளைக்கின்ற பெருவாழ்வே 
எஞ்சல் அற்றமா மறைமுடி விளங்கிய என்னுயிர்த் துணையேநான் 
அஞ்சல் இன்றியே செய்தவிண் ணப்பம்ஏற் றகங்களித் தளித்தாயே 
துஞ்சும் இவ்வுடல் அழிவுறா தோங்குமெய்ச் சுகவடி வாமாறே.
3
3855ஓங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் ஒளிர்கின்ற பெருவாழ்வே 
தேங்கு லாவிய தெள்ளமு தேபெருஞ் செல்வமே சிவமேநின் 
பாங்க னேன்மொழி விண்ணப்பம் திருச்செவி பதித்தருள் புரிந்தாயே 
ஈங்கு வீழுடல் என்றும்வீ ழாதொளிர் இயல்வடி வாமாறே.
4
3856இலங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் இடுகின்ற பெருவாழ்வே 
துலங்கு பேரருட் சோதியே சோதியுள் துலங்கிய பொருளேஎன் 
புலங்கொள் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் புரிந்தனைஇஞ்ஞான்றே 
அலங்கும் இவ்வுடல் எற்றையும் அழிவுறா அருள்வடி வாமாறே.
5
3857சிறந்த பேரொளித் திருச்சிற்றம் பலத்திலே திகழ்கின்ற பெருவாழ்வே 
துறந்த பேருளத் தருட்பெருஞ் சோதியே சுகப்பெரு நிலையேநான் 
மறந்தி டாதுசெய் விண்ணப்பம் திருச்செவி மடுத்தருள் புரிந்தாயே 
பிறந்த இவ்வுடல் என்றும்இங் கழிவுறாப் பெருமைபெற் றிடுமாறே.
6
3858வயங்கு கின்றசிற் றம்பலந் தன்னிலே வளர்கின்ற பெருவாழ்வே 
மயங்கு றாதமெய் அறிவிலே விளங்கிய மாமணி விளக்கேஇங் 
கியங்கு சிற்றடி யேன்மொழி விண்ணப்பம் ஏற்றருள் புரிந்தாயே 
தயங்கும் இவ்வுடல் எற்றையும் அழிவுறாத் தனிவடி வாமாறே.
7
3859தீட்டு கின்றசிற் றம்பலந் தன்னிலே திகழ்கின்ற பெருவாழ்வே 
காட்டு கின்றதோர் கதிர்நடு விளங்கிய கடவுளே அடியேன்நான் 
நீட்டி நின்றதோர் விண்ணப்பம் திருச்செவி நிறைத்தருள் புரிந்தாயே 
பூட்டும் இவ்வுடல் எற்றையும் அழிவுறாப் பொன்வடி வாமாறே.
8
3860தடையி லாதசிற் றம்பலந் தன்னிலே தழைக்கின்ற பெருவாழ்வே 
கடையி லாப்பெருங் கதிர்நடு விளங்கும்ஓர் கடவுளே அடியேன்நான் 
இடைவு றாதுசெய் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் புரிந்தாயே 
புடையின் இவ்வுடல் எற்றையும் அழிவுறாப் பொன்வடி வாமாறே.
9
3861கையின் நெல்லிபோல் விளங்குசிற் றம்பலங் கலந்தருள் பெருவாழ்வே 
மெய்யி லேவிளைந் தோங்கிய போகமே மெய்ப்பெரும் பொருளேநான் 
ஐய மற்றுரைத் திட்டவிண் ணப்பம்ஏற் றளித்தனை இஞ்ஞான்றே 
செய்யும் இவ்வுடல் என்றுமிங் கழிவுறாச் சிவவடி வாமாறே.
10


திருச்சிற்றம்பலம்


38. பேரருள் வாய்மையை வியத்தல்

கட்டளைக் கலித்துறை

3862நன்றே தருந்திரு நாடகம் நாடொறும் ஞானமணி 
மன்றே விளங்கப் புரிகின்ற ஆனந்த வார்கழலோய் 
இன்றே அருட்பெருஞ் சோதிதந் தாண்டருள் எய்துகணம் 
ஒன்றே எனினும் பொறேன்அருள் ஆணை உரைத்தனனே.
1
3863தற்சோதி என்னுயிர்ச் சத்திய சோதி தனித்தலைமைச் 
சிற்சோதி மன்றொளிர் தீபக சோதிஎன் சித்தத்துள்ளே 
நற்சோதி ஞானநல் நாடக சோதி நலம்புரிந்த 
பொற்சோதி ஆனந்த பூரண சோதிஎம் புண்ணியனே.
2
3864திரைகண்ட மாயைக் கடல்கடந் தேன்அருட் சீர்விளங்கும் 
கரைகண் டடைந்தனன் அக்கரை மேல்சர்க் கரைகலந்த 
உரைகண்ட தெள்ளமு துண்டேன் அருளொளி ஓங்குகின்ற 
வரைகண்ட தன்மிசை உற்றேன் உலகம் மதித்திடவே.
3
3865மனக்கேத மாற்றிவெம் மாயையை நீக்கி மலிந்தவினை 
தனக்கே விடைகொடுத் தாணவம் தீர்த்தருள் தண்ணமுதம் 
எனக்கே மிகவும் அளித்தருட் சோதியும் ஈந்தழியா 
இனக்கேண்மை யுந்தந்தென் உட்கலந் தான்மன்றில் என்னப்பனே.
4
3866வாதித்த மாயை வினையா ணவம்எனும் வன்மலத்தைச் 
சேதித்தென் உள்ளம் திருக்கோயி லாக்கொண்டு சித்திஎலாம் 
போதித் துடம்பையும் பொன்னுடம் பாக்கிநற் புத்தமுதும் 
சாதித் தருளிய நின்னருட் கியான்செயத் தக்கதென்னே.
5
3867செத்தார் எழுகெனச் சிந்தைசெய் முன்னஞ் சிரித்தெழவே 
இத்தா ரணியில் அருட்பெருஞ் சோதி எனக்களித்தாய் 
எத்தாலும் என்றும் அழியா வடிவுதந் தென்னுள்நின்னை 
வைத்தாய் மணிமன்ற வாணநின் பேரருள் வாய்மையென்னே.
6
3868ஆக்கல்ஒன் றோதொழில் ஐந்தையும் தந்திந்த அண்டபிண்ட 
வீக்கம்எல் லாம்சென்றுன் இச்சையின் வண்ணம் விளங்குகநீ 
ஏக்கமு றேல்என் றுரைத்தருட் சோதியும் ஈந்தெனக்கே 
ஊக்கமெ லாம்உற உட்கலந் தான்என் உடையவனே.
7
3869என்னேஎன் மீதெம் பெருமான் கருணை இருந்தவண்ணம் 
தன்னேர் இலாத அருட்பெருஞ் சோதியைத் தந்துலகுக் 
கன்னே எனவிளை யாடுக என்றழி யாதசெழும் 
பொன்னேர் வடிவும் அளித்தென் உயிரில் புணர்ந்தனனே.
8
3870அச்சோ என்என்று புகல்வேன்என் ஆண்டவன் அம்பலத்தான் 
எச்சோ தனையும் இயற்றாதென் னுட்கலந் தின்னருளாம் 
மெய்ச்சோதி ஈந்தெனை மேனிலைக் கேற்றி விரைந்துடம்பை 
இச்சோதி ஆக்கிஅழியா நலந்தந்த விச்சையையே.
9
3871வாழிஎன் ஆண்டவன் வாழிஎங் கோன்அருள் வாய்மைஎன்றும் 
வாழிஎம் மான்புகழ் வாழிஎன் நாதன் மலர்ப்பதங்கள் 
வாழிமெய்ச் சுத்தசன் மார்க்கப் பெருநெறி மாண்புகொண்டு 
வாழிஇவ் வையமும் வானமும் மற்றவும் வாழியவே.
10


திருச்சிற்றம்பலம் 

Related Content

Ramalingam Swamigal

Thiruvarutpa of ramalinga adikal (aka vallalar) - Part-II (v

Thiruvarutpayan of Umapathisivam - G U Pope

Thiruvarutpayan Of Umapathisivam - English Explanation By Mr

Thiruvasagam Part-1 - Romanized version