logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

திருமாற்பேறு (திருமால்பூர்) தலவரலாறு

Om symbol

இறைவர் திருப்பெயர்: மணிகண்டேஸ்வரர், தயாநிதீஸ்வரர், பிரவாளேஸ்வரர், சாதரூபர், பவளமலையார், வாட்டந்தவிர்த்தார், மால்வணங்கீசர், தீண்டச் சிவந்தார், சாகிசனர்.

இறைவியார் திருப்பெயர்: அஞ்சனாட்சி, கருணாம்பிகை.

தல மரம்:

தீர்த்தம் : சக்கர தீர்த்தம் . பாலாறு

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், பட்டினத்துப் பிள்ளையார்,சேக்கிழார், திருமால், சந்திரன் முதலியோர்.

Loading map...

Sthala Puranam

  • மக்கள் வழக்கில் 'திருமால்பூர் ' என்று வழங்குகின்றது.
  • திருமால், இறைவனை வழிபட்டுப் பேறு பெற்ற தலம், ஆதலின் 'மாற்பேறு ' என்னும் பெயர் பெற்றது.
  • திருமால் வழிபட்டுச் சக்ராயுதம் பெற்ற தலமாதலின் இதற்கு 'ஹரிசக்ரபுரம் ' என்றும் பெயருண்டு.
  • இத்தலத்தில் இறைவனுக்கு பல திருநாமங்கள் இருப்பினும் 'மணிகண்டேஸ்வரர் ' என்னும் திருநாமமே வழக்கில் உள்ளது.
  • திருவீழிமிழலைக்குரிய வரலாறு இத்தலத்திற்கும் சொல்லப்படுகிறது. அதாவது, திருமால், நாடொறும் ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு அர்ச்சித்து வழிபட்டாரென்றும், ஒரு நாள் மலர் ஒன்று குறைய, தன் கண்ணையே பறித்து இறைவன் திருவடியில் சார்த்தி அர்ச்சித்தார்; கருணையே வடிவான இறைவன் திருமாலுக்கு பத்மாட்சன் என்ற நாமத்தை அருளி, அத்தலத்திற்கும் திருமாற்பேறு என்னும் நாமம் விளங்க அருள் செய்தார் என்பது தல வரலாறு. இவ்வாறு வழிபட்டுத் தம் சக்ராயுதமான 'சுதர்சனத்தை'த் திரும்பப் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. (இதை உறுதிப்படுத்தும் வகையில் திருமாலின் உற்சவத் திருமேனி ஒன்று, ஒரு கையில் தாமரை மலரும் மறு கையில் 'கண்'ணும் கொண்டு, நின்ற கோலத்தில் இருப்பதை இக்கோயிலில் காணலாம்.)

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்    :    சம்பந்தர்      - 1. ஊறி யார்தரு நஞ்சினை (1.55),                                         2. குருந்தவன் குருகவன் (1.114);                      அப்பர்        - 1. மாணிக் குயிர்பெறக் (4.108),                                         2. பொருமாற் றின்படை (5.59),                                         3. ஏது மொன்று மறிவில (5.60),                                         4. பாரானைப் பாரினது (6.80.); பாடல்கள்     :   சம்பந்தர்        -      மலையினார் (1.76.1);                     அப்பர்          -      திரையார் (6.07.4),                                             புலிவலம் (6.70.11),                                             வாரார்ந்த (6.81.5),                                             விலையிலா (6.82.8);           பட்டினத்துப் பிள்ளையார் -      சென்றேறி (11.30.63) திருஏகம்பமுடையார் திருவந்தாதி;                    சேக்கிழார்       -      அந்நகரில் (12.21.327) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                             அப்பதியில் (12.28.1002 & 1003) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities

  • மூலவர்; சிவலிங்கத் திருமேனி - தீண்டாத் திருமேனி. குவளை (கவசம்) சார்த்தியே அபிஷேகம் செய்யப்படுகிறது.
  • வாயிலின் வெளித் தூண்களில் பசுவொன்று சிவலிங்கத் திருமேனிக்கு பால்சுரந்து வழிபடும் சிற்பம் உள்ளது.
  • ஒருபுறம் வல்லபை விநாயகர் பத்துக் கரங்களுடன் காட்சித் தருவது; ஓர் அபூர்வ அமைப்பாகும்.
  • கூப்பிய கரங்களுடன் மூலவரைப் பார்த்தவாறு மகா விஷ்ணு காட்சி தருகிறார்.
  • சந்நிதி வாயிலை கடந்து, மண்டபத்து தூண்களில் அம்பாள் வில்வடிவில் பெருமானை வழிபடுவது முதலான அரிய சிற்பங்கள் உள்ளன.
  • துர்க்கையின் திருமேனி மிகவும் அழகு வாய்ந்தது - அஷ்டபுஜங்களுடன் சங்கு சக்கரம் ஏந்தி அழகாக காட்சித் தருகின்ற திருமேனி.
  • மூலவருக்கு எதிரில் உள்ள மகாவிஷ்ணுவுக்குத் தீபாராதனை முடிந்த பின்பு சடாரி சார்த்தி தீர்த்தம் தரும் மரபு உள்ளது.
  • ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. 
  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • நாடொறும் ஐந்து கால பூஜைகள் நடைபெறுகின்றது.
  • மாசி மாதம் 10 நாள் பிரமோற்சவம். மகத்தில் தீர்த்தவாரி.
  • ஜயங்கொண்ட சோழமண்டலத்திலுள்ள காமக்கோட்டத்தின் பகுதியான வல்ல நாட்டிலுள்ள திருமாற்பேறு(271 of 1906) என்று இராஜகேசரி வர்மன் திரிபுவனச்சக்ரவர்த்தி குலோத்துங்க சோழன்காலத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இறைவன் பெயர் கல்வெட்டுக்களில் திருமாற்பேறுடையார், ஆளுடையார், உத்தம சோழீசுவரமுடையார், அவிமுக்தீசுவரமுடையார் என்று வழங்கப்படுகின்றன. இத்தலத்தில் அக்கினீசுவரர் கோயில் ஒன்று தனியே இருந்திருக்கவேண்டும். இக்கோயிலுக்குக் கண்டராதித்தனால் ஐம்பெருங்குழு ஏற்படுத்தி நிலங்களைக் கவனிக்கவும், படையலுக்கு நெல்கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன(283 of 1906). இங்குள்ள விஷ்ணு கோயிலிலுள்ள இறைவன் பெயர் கோவிந்தபதியில் நின்றருளிய பெருமானடிகள் என்பது(303 of 1906). இது தண்டகநாட்டின் மாவட்டமான தர்மக்கோட்டத்தின் பிரிவான வல்ல நாட்டில் கோவிந்தபதியிலுள்ள கோயிலிலுள்ள நின்றருளிய பெருமான் ஆகும்(314 of 1906). மாற்பேறுடையார் கோயிலைக் கட்டவும், சுற்று மண்டபத்தை முற்றுப்பெறச் செய்யவும் விராட அரசன் அனையமான் என்கிற மண்டலாதித்யனால் தானம் கொடுக்கப்பட்டது(267 of 1906). உத்தம சோழீசுவரமுடையார் உருவம் தயார்செய்ய சேதிராயன் என்பவனால் நிலம் தானம் செய்யப்பட்டது(277 of 1906), உமாபத்தராகியார் (அதிசுந்தர தேவதேவியார்) உருவம் தயார்செய்ய சோழன் இராஜகேசரிவர்மனால் நிலம் தானம்செய்யப்பட்டது(284 of 1906). மணவாளப்பெருமாள் உருவம் செய்யவும், ஆபரணம் தயார்செய்யவும் பரகேசரிவர்மன் இராஜேந்திர சோழன் ஆட்சியில் ஆவனசெய்ததைத் தெரிவிக்கின்றது( 321 of 1906). கோயிலில் அனையமான் பரமண்டலாதித்தன் ஒரு மண்டபம் கட்டியுள்ளான்(323 of 1906). நம்மாழ்வார் திருவாய்மொழியின் வரிகள் கருப்பக்கிருகத்தின் மேற்குச் சுவரில் காணப்படுகின்றன(326 of 1906). மணவில் கோட்டத்தின் பகுதியான மேல்பழுங்கூர்நாட்டில் சிறியரூரில் கோவிந்தபதி ஆழ்வார் கோயில் ஒன்று உள்ளது(326 of 1906). தோழனார் தந்தையால் கோவிந்தபதி ஆழ்வார்மீது ஒரு திருப்பதியம் பாடப்பட்டுள்ளது(333 of 1906 ).
  • சோழன் இராஜகேசரிவர்மன் காலத்தில் வைஷ்ணவர்களில் 18 நாடு குறிக்கப்படுகின்றது. மேலும் வண்டல்படிந்த நிலங்களைப் பற்றியும் பாலாற்றில் வெள்ளம் வந்ததைப்பற்றியும், இதற்குச் செப்பனிட 1000 கூலிகள் நியமிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் 12 கோல் நிலம் கொடுக்கப்பட்டது பற்றியும் அறிவிக்கப்பெறுகின்றன(322 of 1906). மற்றைய கல்வெட்டுக்கள் விளக்கிற்கு, பிராமண உணவிற்கு, அபிடேகத்திற்குப் பொன், நிலம், பசுக்கள், குடங்கள் முதலியன கொடுக்கப்பட்டதைத் தெரிவிக்கின்றன.
முந்தைய தலம்<திருவல்லம் (திருவலம்)

 அடுத்த தலம்>திருவூறல் (தக்கோலம்)

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரத்திலிருந்து அடிக்கடி இத்தலத்திற்கு பேருந்து உள்ளது. அரக்கோணம் - காஞ்சிபுரம் இருப்புப் பாதையில் இத்தலம் உள்ளது. இந்நிலையத்திலிருந்து 5-கி. மீ. உள்ளே சென்றால் இத்தலத்தை அடையலாம். தொடர்பு : 04177 - 248220, 09345449339
Loading map...

Related Content

திருக்கச்சிநெறிக்காரைக்காடு (திருக்காலிமேடு) காஞ்சிபுரத்தில

திருக்குரங்கணில்முட்டம் தலவரலாறு

திருமாகறல்

திருவோத்தூர் (திருவத்திபுரம், செய்யாறு) கோயில் தலவரலாறு

திருவன்பார்த்தான் பனங்காட்டூர் (திருப்பனங்காடு)