logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

இடையாறு தலவரலாறு

Om symbol

இறைவர் திருப்பெயர்: மருதீஸ்வரர், இடையாற்றீசர், ஆதிமத்யார்ஜுனேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர்: ஞானாம்பிகை, சிற்றிடைநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : பெண்ணையாறு, சிற்றிடை தீர்த்தம்

வழிபட்டோர்:சுக முனிவர், பிரமன், அகத்தியர், சுந்தரர், மறைஞான சம்பந்தர்

Loading map...

Sthala Puranam

idaiyaru temple

  • சுக முனிவர் வழிபட்டது. சுகப்பிரம்ம மகரிஷி வழிபட்ட இத்தலத்தில் கிளிகள் பறந்து கொண்டு இருக்கும்.  கயிலையில் சிவபெருமான் உமாதேவியாருக்கு சிவ ரகசியத்தை உபதேசிக்கும் போது அவற்றைக் கிளி முகம் கொண்ட சுகப்பிரம்ம முனிவர் ஒட்டு கேட்டார். இதையறிந்த சிவன் முனிவரை பூமியில் பிறக்கும்படி சபித்தார். தவறை உணர்ந்த முனிவர் ஈசனிடம் சாப விமோசனம் கேட்டார். பூவுலகில் வேதவியாசருக்கு மகனாகப்பிறந்து பெண்ணை நதியின் தென்பகுதியில் அமைந்துள்ள இத்தலத்தில் இறைவனை பூஜித்து பூலோக வாழ்வு நீங்கப் பெற அவர் வரமளித்தார். சுகப்பிரம்ம முனிவரும் அவ்வாறே இத்தலம் வந்து மருத மரத்தின் கீழ் தவமிருந்து சாப விமோசனம் பெற்றார்.
  • அகத்தியர் இத்தலத்தில் லிங்கம் அமைத்து வழிபட்டார். இந்த லிங்கம் அகத்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறது. அகத்தியருக்கு தனி சிலையும் இங்குள்ளது. 
  • சப்தகன்னிகைகள் வழிபட்டு உய்ந்த தலம்.

 

திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள்  :  சுந்தரர்     -  1. முந்தையூர் முதுகுன்றங் (7.31); பாடல்கள்   : சேக்கிழார்   -     நலம் பெருகும் (12.29.171 & 172) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

 

 

Specialities

vimanam

  • மேற்கு நோக்கிய சந்நிதி. 
  • மாசி மாதம் 15,16 தேதிகளில் மாலை 5 மணி முதல் 5.15 வரை சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.
  • தைமாதம் ஆற்றுத் திருவிழா 
  • கோயிலில் கிடைத்த கல்வெட்டில் இவ்விறைவன் 'மருதந்துறை உடைய நாயனார் ' என்று குறிக்கப்படுகின்றார்.
  • இங்குள்ள முருகனின் (சண்முகர்) பெயரினை 'கலியுகராமப் பிள்ளையார் ' என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.
  • இத்திருக்கோயிலில், சோழமன்னர்களில் குலோத்துங்கசோழ தேவர், இராசகேசரி வர்மராகிய உடையார் இராசேந்திரசோழதேவர், இவர்கள் காலங்களிலும், பாண்டிய மன்னர்களில் திரிபுவனச் சக்கரவர்த்தி ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், மாறவர்மன் திரிபுவனச்சக்கரவர்த்தி விக்கிரம பாண்டியன், மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டியன், இவர்கள் காலங்களிலும், விசயநகர வேந்தர்களில் அச்சுததேவமகாராயர், சதாசிவமகாராயர், இராமதேவமகாராயர், முதலானோர் காலங்களிலும், சாளுவ மன்னரில் நரசிங்கதேவமகாராயர் காலத்திலும் செதுக்கிய கல்வெட்டுக்கள் இருக்கின்றன.
  • இக்கல்வெட்டுக்களில் இறைவர் திருமருதந்துறை உடைய நாயனார் என்னும் திருப்பெயரால் குறிக்கப்பட்டுள்ளார். இவ்வூர், இராஜராஜவளநாட்டு, திருமுனைப்பாடி இடையாற்று நாட்டு இடையாறு என்று குறிக்கப்பட்டுள்ளது.
idaiyaru temple
  • ஒரிசாதேசத்து கஜபதி மன்னனது படையெடுப்பால், திருமருதந்துறை உடையார்கோயில் அழிக்கப்பட்டு, பத்து ஆண்டுகள் பாலைவனம்போல் கிடந்தது. சாளுவநரசிம்மதேவனின் பிரதிநிதி ஒருவர் இக்கோயிலைக்கட்டி அதற்கு வழிபாட்டிற்கு ஜோடி, சூல வரிகளைக் கொடுத்துள்ளனர். இந்நிகழ்ச்சி இம்மன்னனது சகம் 1393 அதாவது கி.பி.1471 இல் ஏற்பட்ட கல்வெட்டால் அறியக் கிடக்கின்றது. எனவே கஜபதி மன்னரது படையெடுப்பு சகம் 1383 அதாவது கி.பி.1461 இல் ஏற்பட்டிருக்கவேண்டும்.
  • இதற்கு முன்னரே திருமருதந்துறை உடையார் கோயில் நான்கு ஆண்டுகள் பூசனையின்றிக் கிடந்தது. விசயநகர வேந்தரில் இரண்டாவது புக்கன் என்னும் மன்னனது மகனாகிய வீர பூபதி என்பவன் சகம் 1337 அதாவது கி.பி. 1415 இல் பண்டுபோல் பூசனை நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தான்.
  • இக்கோயிலில் உள்ள சுப்பிரமணியக் கடவுளின் பெயர் கலியுகராமப் பிள்ளையார் என்பதாகும். இவரை இக்கோயிலில் எழுந்தருளுவித்தவன் அனுமலுழான் கொங்கராயன் ஆவன். இப்பெருமானுக்கு நாள்வழிபாட்டிற்கு, திரிபுவனச்சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் சில நிலவரிகளைக் கொடுக்குமாறு உத்திரவிட்டுள்ளான்.
  • இக்கோயிலில் சிவதானீஸ்வரம் உடையாரை எழுந்தருளுவித்து வழிபாட்டிற்கு நில நிவந்தம் அளித்தவன் அனுமலுழான் வேளான் விளநாட்டரையன் திருமருதந்துறை உடையான் ஆவன். இச்செய்தி இங்குள்ள மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி விக்கிரமபாண்டியன் கல்வெட்டால் புலப்படுகின்றது.
idaiyaru temple
  • உத்தரன் பாக்கத்திலிருந்த சுத்தமல்லன் ஆட்கொண்டதேவன் கொங்கராயனின் தந்தையார், திரிபுவனச்சக்கரவர்த்தி வீரபாண்டிய தேவனின் 23 ஆம் ஆண்டில் திருமருதந்துறை உடையார் கோயிலுக்கு `பல்லவராயன் ஏந்தல்` என்னும் பெயருடைய நிலத்தைக் கொடுத்துள்ளான். இந்த மருதந்துறை உடையார் திருக்கோயிலின் நான்கு மதில்களும் அழிவுற்றிருந்ததை நரசிங்கதேவராயரின் பிரதிநிதி அண்ணமராசர் பழுது பார்த்தற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
முந்தைய தலம்<திருஅறையணிநல்லூர்

 அடுத்த தலம்>திருவெண்ணெய்நல்லூர்

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருக்கோயிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழியாக அரசூர் செல்லும் பாதையில் சித்தலிங்க மடத்தையத்து இடையாறு உள்ளது. தொடர்பு : 04146 - 216045, 9442423919
Loading map...

Related Content

திருவாட்போக்கி (ஐயர்மலை, ரத்னகிரி, சிவாயமலை)

திரிசிராப்பள்ளி (திருச்சிராப்பள்ளி)

திருப்பாற்றுறை (திருப்பாலத்துறை) ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்

திருக்கூடலையாற்றூர்

திருநாவலூர் தலவரலாறு