logo

|

Home >

hindu-hub >

temples

திருவல்லம் (திருவலம்) தலபுராணம்

இறைவர் திருப்பெயர்: வில்வநாதீஸ்வரர், வல்லநாதர்.

இறைவியார் திருப்பெயர்: தனுமத்யாம்பாள், வல்லாம்பிகை.

தல மரம்:

தீர்த்தம் : நிவா நதி, கௌரி தீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார், கௌரி, மஹாவிஷ்ணு, சனகமுனிவர் முதலியோர்.

Sthala Puranam

Vallam temple
திருவல்லம் திருக்கோயில் 
  •  விநாயகர் அம்மையப்பராக இருக்கின்ற பார்வதி பரமேஸ்வரர் உலகம் என அறிவித்து வலம் வந்து ஞானக்கனி  பெற்றதால் வலம் வந்த ஊர் திருவலம் என்பதாக பின்னர் திருவல்லமாக ஆயிற்று. தல விநாயகர் கனி வாங்கிய பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார்.
  • ஊருக்குள் 'நிவா' நதி ஓடுகிறது; நதியின் கரையிலேயே கோயில் உள்ளது. இறைவன், தீர்த்தத்தின் பொருட்டு, 'நீ, வா' என்றழைக்க, இந்நதி அருகில் ஓடிவந்து பாய்ந்ததால் இப்பெயர் பெற்றது. 'நீ வா ' நதி நாளடைவில் 'நிவா ' நதியாயிற்று என்கின்றனர். இன்று 'பொன்னை' ஆறு என்னும் பெயரும் கொண்டுள்ளது. இந்நதியிலிருந்து தான் பண்டை நாளில் சுவாமிக்குத் தீர்த்தம் கொண்டுவரப்பட்டது. (இப்போது கோயிலுள் கௌரி தீர்த்தமும் தீர்த்த கிணறும் உள்ளது.)
  • ஒரு காலத்தில் வில்வக்காடாக இப்பகுதி இருந்தமையால் இத்தலம் 'வில்வவனம்' - 'வில்வாரண்யம்' எனப்படுகிறது. அக்காட்டில் ஒரு பாம்புப் புற்றில் சிவலிங்கம் இருந்தது. நாடொறும் பசு ஒன்று வந்து, அச்சிவலிங்கத்தின்மீது பாலைச் சொரிந்து வழிபட்டது. அதனால் புற்றி சிறிது சிறிதாக கரைந்து நாளடைவில் சிவலிங்கம் வெளிப்படலாயிற்று என்று சொல்லப்படுகிறது.
  • தீக்காலி என்பான் பூசித்துப் பேறுபெற்றமையான் தீக்காலி வல்லம் எனவும் வழங்கும். 
  • இங்குள்ள அம்பாளுக்கு ஆதியில் 'தீக்காலி அம்பாள்' (ஜடாகலாபாம்பாள்) என்றே பெயரிருந்ததாகவும்; உக்கிர வடிவிலிருந்த இந்த அம்பாளை, ஆதி சங்கரர் சாந்தப்படுத்தினார் என்றும் சொல்லப்படுகிறது.
  • இங்குள்ள பெருமானை விஷ்ணு வழிபட்டதால், விஷ்ணுவின் பாதம் பத்மபீடத்தில் கொடிமரத்தின் முன்பு உள்ளது.
  • கொடிமரத்தின் பின்னால் உள்ள நந்தியும், மூலவர் சந்நிதியில் உள்ள நந்தியும் சுவாமியை நோக்கியிராமல் கிழக்கு நோக்கியுள்ளது. இதன் வரலாறு - இத்தலத்திலிருந்து 4 கி. மீ. தொலைவில் கஞ்சன்கிரி என்றொரு மலையுள்ளது. (அது தற்போது 'காஞ்சனகிரி' என்று வழங்குகின்றது.) இம்மலையில் கஞ்சன் என்னும் அசுரன் இருந்து வந்தான். இம்மலையிலிருந்துதான் மிகப்பழங்காலத்தில் சுவாமிக்கு தீர்த்தம் கொண்டுவரப்பட்டது. அவ்வாறு கொண்டுவருவதை 'கஞ்சன்' தடுத்தான். செய்வதறியாது உரியோர் இறைவனிடம் முறையிட, நந்தியம்பெருமான் சென்று கஞ்சனுடன் போரிட்டு அவனை அழித்தார். அவ்வாறு அழித்தபோது அவ்வசுரனின்; லலாடம் வீழ்ந்த இடம் தற்போது "லாலாபேட்டை" என்றும், சிரசு வீழ்ந்த இடம் "சீகராஜபுரம்" என்றும், வலக்கால் அறுபட்டு வீழ்ந்த இடம் "வடகால்" என்றும், தென்கால் (இடது கால்; - தென்கால் என்பது அவ்வசுரன் நின்று போரிட்ட திக்கிலிருந்து கையாளப்பட்ட வார்த்தையாக தெரிகிறது) வீழ்ந்த இடம் "தென்கால்" என்றும், மணிக்கட்டு வீழ்ந்த இடம் "மணியம்பட்டு" என்றும், மார்பு வீழ்ந்த இடம் "குகையநல்லூர் " என்றும் வழங்கப்படுகிறது. (இவ்வூர்களெல்லாம் திருவலத்திற்கு 3 கி.மீ. தொலைவில் உள்ளன.) இந்நிகழ்ச்சியை யொட்டியே நந்தி, காவலுக்காக கிழக்கு நோக்கியுள்ளார்.
  • காஞ்சனகிரியில் அசுரனின் குருதி பட்ட இத்திலெல்லாம் இறைவனருளால் அவ்விடத்தைப் புனிதப்படுத்த சிவலிங்கங்கள் உண்டாயின. (இன்றும் இம்மலையில், குளக்கரையில் எண்ணற்ற சிவலிங்கங்கள் இருப்பதையும் தோண்டினால் கிடைப்பதையும் நேரில் பார்க்கலாம்.)

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சம்பந்தர்    -    1. எரித்தவன் முப்புரம் (1.113); பாடல்கள்      :   சேக்கிழார்   -       திருமாற் பேறு உடையவர் (12.28.1003) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                           தீது நீங்கிடத் (12.19.30) திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம்,                                           மன்னும் திருமால் பேறு (12.29.195) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

Specialities

Vallam temple
  • மக்கள் வழக்கில் 'திருவலம்' என்று அழைக்கப்படுகிறது.
  • நிவா நதி வடக்கிலிருந்து தெற்காக ஓடிச்சென்று, பாலாற்றில் ஒன்றாகிறது.
  • பழைய கல்வெட்டில் இத்தலப் பெயர் 'தீக்காலி வல்லம்' என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
  • ஞானசம்பந்தர் பாடலில் 'திருவல்லம்' என்றும்; அருணகிரிநாதரின் திருப்புகழில் 'திருவலம்' என்றும் இத்தலம் குறிக்கப்படுகின்றது.
  • கௌரி, மஹாவிஷ்ணு, சனக முனிவர் முதலியோர் வழிபட்ட சிவலிங்கங்கள் கோயிலுள் உள்ளன.
  • கோயிலுள் நாகலிங்கப் பூக்கள் பூக்கும் நாகலிங்க மரம் உள்ளது; காணத்தக்கது.
  • மூன்று நிலைகளையுடைய உள் கோபுரம் கல் மண்டபத்தின் மீது கட்டப்பட்டதாகும்.
  • "ஆதிவில்வநாதேஸ்வரர் சந்நிதி" - தனிக் கோயிலாக உள்ளது; இதன் எதிரில் நெடுங்காலமாக இருந்து வரும் பலாமரம் ஒன்று உள்ளது.
  • இங்கு வழிபட்ட சனக முனிவரின் 'திருவோடு ' சுவாமிக்கு நேரே வெளியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
  • மூலவர் - சிவலிங்கத் திருமேனி, சுயம்பு; சதுரபீட ஆவுடையார்.
  • மூலவர் கருவறை அகழி அமைப்புடையது; கருவறைச் சுவர்களில் கல்வெட்டுக்கள் நிரம்ப உள்ளன.
  • கோயிலில் அறுபத்து மூவரின் உற்சவ, மூலத் திருமேனிகள் மேலும் கீழுமாக இருவரிசைகளில் வைக்கப்பட்டுள்ளன.
  • இடதுபுறம் பள்ளத்தில் 'பாதாளேஸ்வரர் ' சந்நிதி உள்ளது; பஞ்சம் நேரில், இப்பெருமானுக்கு ஒரு மண்டலகாலம் அபிஷேகம் செய்யின் மழை பெய்யும் என்று சொல்லப்படுகிறது.
  • பிரம்மோற்சவம் மாசி மாத பஞ்சமியில் தொடங்கி நடைபெறுகிறது
  • கஞ்சனுக்கு இறைவன் முத்தி தந்த ஐதீகம், திருவிழாவாக இன்றும் நடைபெறுகிறது; இதற்காக தை மாதம் பொங்கல் கழித்து 10-ம் நாள் சுவாமி இங்கிருந்து புறப்பட்டுக் காஞ்சனகிரிக்கு எழுந்தருளுகிறார். இம்மலையில் (காஞ்சனகிரியில்) சித்ரா பௌர்ணமியில் குளக்கரையிலிருந்து பார்த்தால் ஜோதியொன்று தோன்றிப் பின் மறைகின்றதாம்.
  • கோப்பரகேசரியான இராஜேந்திரசோழன் (கி.பி.1050-62) 3-ஆம் ஆண்டில் உத்தியோகஸ்தன் ஒருவனிடமிருந்து 25 கழஞ்சு பொன்வாங்கித் தீட்சிதரிடங் கொடுத்தான்(75 of 1889). அதேயாண்டில் வாணபுரத்திலுள்ள பேரவையோர் சங்கரதேவன் மகனான வைதும்ப சோமநாதனுக்கு 1000 குழி நிலம் விற்றதையும் அவர்கள் அதைத் திருவைய ஈசுவரருக்கு உரிமையாக்கியதையும் குறிக்கிறது(92 of 1889). 4-ஆம் ஆண்டில் முதல் இராஜராஜன் உத்தியோகத்தனான ஈராயிரவன் பல்லவராயனால் இராஜராஜேஸ்வரர் கருப்பக்கிரகம் கட்டப்பெற்றது. 2 விளக்கிற்காக 2000 குழி நிலமும் அளிக்கப்பெற்றது( 299 of 1897).
  • கோராஜகேசரி வர்மனான இராஜமகேந்திரன் காலத்து 2-ஆம் ஆண்டில் படைத்தலைவனொருவன் திருவல்லம் பேரவையிலிருந்து 800 குழி நிலம்பெற்று அதைக் கோயிலுக்குக் கொடுத்தான். அதன் விலை 64 காசு (22 கழஞ்சு 8 மஞ்சாடி)( 5 of 1890). குலோத்துங்கன் 23ஆம் ஆண்டில் ஒரு கங்கதலைவனால் வீரசோழன் மனைவியான தன்னுடைய மகளுக்கு நன்றுண்டாக விளக்குப் போடப்பெற்றது(300 of 1897). மூன்றாம் குலோத்துங்கன் 8ஆம் ஆண்டில் திரிசூலக்காசு கோயிலுக்கு அளிக்கப்பெற்றது(301of 1897). 34 ஆம் ஆண்டில் கங்க அரசியான அரியபிள்ளையால் இரண்டு விளக்கு தானம் செய்யப்பெற்றன(303 of 1897). கோராஜகேசரி வர்மன்-1, 7ஆம் ஆண்டில் இறைவி திருவுருவம் செய்யவும் ஒரு விளக்குக்கும் ஒரு பிராமணனால் 1700 குழி நிலமும் தூய்நாட்டில் மந்திரம் பேரவையினின்றும் 1700 குழி நிலமும் வாங்கப்பெற்றன(8 A of 1890). 26ஆம் ஆண்டில் 4ஆம் விக்கிரமாதித்தனிடமும் 3-ஆம் ஜயசிம்மனிடமும் வெற்றிபெற்றமையும், கோயிலுக்கு விளக்கு பொருத்தியமையும் தெரிகிறது.(9 of 1890) 7ஆம் ஆண்டில் மதுராந்தக கண்டராதித்தன் கோயிலுக்கு வந்தமையும் 1000 குடங்களால் அபிஷேகித்தமையும், வருமானத்தை ஆராய்ந்தமையும் குறிக்கப்பெற்றுள்ளன(10 of 1890).
  • கோராஜ இராஜகேசரிவர்மன்-1, 16 ஆம் ஆண்டில் 700 குழி நிலம் சங்கரதேவனுக்கு விற்றமையும் அவன் அதைத் திருவைய ஈசுவரருக்களித்தமையும் தெரிகிறது(11 of 1890). கோராசகேசரிவர்மன் இராஜ ராஜதேவன் 20ஆம் ஆண்டில் 90 ஆடுகள் தானம்செய்தான். 3ஆம் ஆண்டில் தூய்நாட்டிலுள்ள குக்கனூர் கிராமத்தின் வருவாய்களைத் திருவல்லம் கோயிலுக்குக் கொடுத்தான்( 1415 of 1890). மகாவலி வாணராயனது பொன்படுகுட்டத்திலுள்ள சில நிலங்களை ஒருவன் வாங்கி விளக்கிற்காகவும் படையலுக்காகவும் கொடுத்தான்(12 of 1890). வாண வித்தியாதரன் காலத்து விளக்கெரிக்க 20 கழஞ்சு பொன் கொடுக்கப் பெற்றது(298 of 1897). விக்கிரமாதித்தன்-1, வேண்டுகோளின்படி மூன்று கிராமங்கள் (விடேல் விடுகு விக்கிரமாதித்த சதுர்வேதிமங்கலம்) தானம் செய்யப்பட்டன(1A of 1890). வாணராயனது சகம் 810-ல் எட்கூரிலுள்ள ஒரு பார்ப்பனனால் காரநாட்டிலுள்ள வன்னிப்பேடு கிராமத்தாரிடம் 25 கழஞ்சு பொன் கொடுக்கப்பெற்று அதன் வட்டியிலிருந்து விளக்குப் போடப்பெற்றது(1B of 1890). சோழபூபன் மகனான வீரசம்பன் சகம் 1236 இல் அர்த்த மண்டபம் ஞானமூர்த்தி என்ற பெயருடைய துறவியாலும் பிருதா அரசனாலும் கட்டப்பெற்றது. மேலும் கருப்பக்கிருகமும் கட்டப்பெற்றது. ( 3 of 1890). வாணவித்தியாதர ராஜன் என்கிற வாணராயன் விளக்கிற்கு நெய்யிட 25 கழஞ்சு பொன் வழங்கினான் (77 of 1889). விசயகண்ட கோபாலதேவன் மூன்றாமாண்டில் அழகிய பல்லவன் காலத்து 3 ஆம் இராஜராஜன் நிலமணியக்காரர் 1.16 பாகவரியையும் 1.5 பாக வரியையும் தள்ளியமை தெரிகிறது(79 of 1889). ராஷ்டிரகுப்த அமோகவர்ஷனன்I மருமகன் காலத்து, பொற்கொல்லன் ஒருவன் கோயிலுக்கு நிலம் தானம் செய்தான்(76 of 1889).

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காட்பாடிக்கு அண்மையிலுள்ள இருப்புப்பாதை நிலையம். ஆற்காட்டிலிருந்து ராணிப்பேட்டை வழியாக காட்பாடி செல்லும் சாலையில் இத்தலம் உள்ளது. நகரப் பேருந்துகள் அடிக்கடி செல்கின்றன. தொடர்பு : 0416 - 2236088

Related Content

திருக்கச்சிநெறிக்காரைக்காடு (திருக்காலிமேடு) காஞ்சிபுரத்தில

திருக்குரங்கணில்முட்டம் தலவரலாறு

திருமாகறல்

திருவோத்தூர் கோயில் தலவரலாறு (திருவத்திபுரம், செய்யாறு)

திருவன்பார்த்தான் பனங்காட்டூர் (திருப்பனங்காடு)