இறைவர் திருப்பெயர்: | பிரணவ வியாக்ர புரீஸ்வரர், துயர்தீர்த்தநாதர், பிரணவபுரீஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | புஷ்பலதாம்பிகை, பூங்கொடி நாயகி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | கொள்ளிடம், கௌரிதீர்த்தம். |
வழிபட்டோர்: | சம்பந்தர், அப்பர், சேக்கிழார், வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்), அம்பிகை முதலியோர். |
புலிக்கால் முனிவரால் (வியாக்ரபாதர்) பூசிக்கப்பெற்றதால் புலியூர் என்றும், வேத ஓமங்களில் (வேள்விகளில்) சிறப்புற்றதால் ஓமம் புலியூர் எனப் பெயர் பெற்றது.
இவ்வூர் பிற புலியூர்களிலிருந்து வேறுபாடறியும் பொருட்டு ஓமம் ஆம்புலியூர் = ஓமமாம்புலியூர் எனப்பட்டது. (சம்பந்தர் பாடலில் ஓமமாம்புலியூர் என்றே வருகிறது. ஆனால் அப்பர் பாடலில் ஓமாம்புலியூர் என்று வருகிறது. இக்கோயில் வடதளி என்றும் பாடல்களில் குறிக்கப்பட்டுள்ளது.)
இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து உமாதேவிக்கு பிரணவப் பொருளை உபதேசித்தத் தலம். ஓமம் - வேள்வி, வேள்விச்சிறப்புடைய ஊர். பிரணவப் பொருளுபதேசம் நடந்த தலமாதலின் ஓம்-ஆம்-புலியூர் = ஓமாம்புலியூர் என்றாயிற்று என்றும் கூறுவர்.
ஊரின் பெயர் - ஓமாம் புலியூர்; கோயில் பெயர் - வடதளி.
திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. பூங்கொடி மடவாள் (3.122); அப்பர் - 1. ஆராரும் மூவிலைவேல் (6.88); பாடல்கள் : அப்பர் - நறையூரிற் (6.70.10), பிறையூருஞ் (6.71.4); சேக்கிழார் - வண்தமிழ் (12.21.155 & 179) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், ஆங்கணி சொன் மலர் (12.28.250) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
தல மரம் : இலந்தை
இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி சிறப்புடையது; குருமூர்த்தத் தலம். உபதேசம் செய்த தட்சிணாமூர்த்தி கோயிலுக்குள்ளேயே மூலமூர்த்தியாக உயர்ந்த பீடத்தில் சிலாரூபத்தில் காட்சித் தருகிறார்.
சந்நிதியின் ஒருபுறம் சலந்தரனை அழிக்கத் திருமாலுக்குச் சக்கரம் வழங்கிய சிற்பமும்; மறுபுறம் ஐந்து புலியூர்களில் வழிபடப்பட்ட ஐந்து சிவலிங்கங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
சோழர் காலக் கல்வெட்டு ஒன்றும், பல்லவர்கள் காலத்தவை ஐந்தும் ஆக ஆறு கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன.
மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டில் இத்தலம் 'வடகரை விருதராசபயங்கர வளநாட்டு மேற்கா நாட்டுப் பிரமதேயம் ஓமாம்புலியூராகிய உலகளந்த சோழசதுர்வேத மங்கலம் ' என்றும்; இறைவன் பெயர் 'வடதளி உடையார் ' என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சிதம்பரத்திலிருந்தும், காட்டுமன்னார்குடியிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளது. தொடர்பு : 04144 - 264845