இறைவர் திருப்பெயர்: | பிரமபுரீசுவரர், கோளிலிநாதர், கோளிலிநாதேஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | வண்டமர் பூங்குழலி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | பிரம தீர்த்தம். முத்தி நதியாகிய சந்திர நதி |
வழிபட்டோர்: | சம்பந்தர், அப்பர், சுந்தரர், பரணதேவ நாயனார், சேக்கிழார், பிரமன், திருமால், இந்திரன், அகத்தியர், முசுகுந்தன், பஞ்சபாண்டவர்கள், நவக்கிரகங்கள், ஹேமகாந்த மன்னன் முதலியோர். |
இத்தலம் மக்கள் வழக்கில் "திருக்குவளை" என்று வழங்கப்படுகிறது.
நவக்கிரகங்கள் முதலியோர்க்கு உண்டாய குற்றங்களை நீக்கி அருள் புரிந்தமையால் "கோளிலி" என்று பெயர் பெற்றது. "கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமான்" என்பது ஞானசம்பந்தர் வாக்கு.
பகாசூரனைக் கொன்றதனால் உண்டான பாவத்தை (பிரமகத்தித் தோஷம்) வீமன் இங்குப் போக்கிக் கொண்டான் என்பது வரலாறு.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. நாளாய போகாமே நஞ்சணியுங் (1.62); அப்பர் - 1. மைக்கொள் கண்ணுமை (5.56), 2. முன்ன மேநினை யாதொழிந் (5.57); சுந்தரர் - 1. நீள நினைந்தடி யேனுமை (7.20); பாடல்கள் : பரணதேவ நாயனார் - கரையேனு மாதர் (11.24.49) சிவபெருமான் திருவந்தாதி; சேக்கிழார் - மல்லல் நீடிய வலிவலம் கோளிலி (12.28.515) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், நீர் ஆரும் சடை முடியார் (12.21.228) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், ஆளிட வேண்டிக் (12.29.20) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் நெல்மலையை எடுத்துச் செல்ல ஆள்வேண்டிப் பாடிய சிறப்புக்குரியதாய் விளங்குவது இத்தலம்.
இத்தலத்திற்கு பிரமதபோவனம், கதகாரண்யம் (தேற்றாமரவனம்), புஷ்பவனம், தென்கயிலை எனப்பல பெயர்களுண்டு.
ஆலயத்திற்கு தென்மேற்கு மூலையில் சிவலோக விநாயகர் (ஹேமகாந்த மன்னனுக்குச் சிவலோகம் காட்டியவர்) உள்ளார்.
கல்வெட்டுக்களில் இறைவன் 'திருக்கோளிலி உடைய நாயனார் ' என்றும், தியாகேசர் 'அவனிவிடங்கத் தியாகர் ' என்றும் குறிக்கப்படுகிறார்.
திருக்குவளை ஸ்ரீ தியாகராஜசுவாமி உலா | சர்க்கரை இராமசாமிப் புலவர் |
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருவாரூர் - எட்டிக்குடி சாலையில் எட்டிக்குடிக்கு முன்னால் உள்ள தலம்; திருவாரூரிலிருந்து 19-கி. மீ. தொலைவில் உள்ளது. திருவாரூரிலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளது. தொடர்புக்கு :- 04366 - 245 412.