இறைவர் திருப்பெயர்: | வடாரண்யேசுவரர், தேவர்சிங்கப் பெருமான், ஆலங்காட்டுஅப்பர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | பிரம்மராளகாம்பாள், வண்டார்குழலி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | சென்றாடு தீர்த்தம் ' (செங்கச்ச உன்மத்ய மோக்ஷ புஷ்கரணி), முத்தி தீர்த்தம் முக்தி தீர்த்தம். |
வழிபட்டோர்: | கார்க்கோடகன், சுநந்த முனிவர் , சம்பந்தர் , அப்பர் , சுந்தரர், காரைக்கால் அம்மையார், பரணதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார் முதலியோர் |
இத்தலம் 'வடாரண்யம் ' எனவும் பெயர் பெற்றது.
காரைக்காலம்மையார் தலையால் நடந்து வந்து நடராசப் பெருமானின் திருவடிக் கீழிருந்து சிவானந்த இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் தலம்.
திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. துஞ்ச வருவாருந் (1.45); அப்பர் - 1. வெள்ளநீர்ச் சடையர் (4.68), 2. ஒன்றா வுலகனைத்து (6.78); சுந்தரர் - 1. முத்தா முத்தி தரவல்ல (7.52); காரைக்கால் அம்மையார் - 1. கொங்கை திரங்கி (11.2), 2. எட்டி இலவம் (11.3); பாடல்கள் : அப்பர் - மறைக்காட்டார் (6.51.7); பரணதேவ நாயனார் - குறியார் மணிமிடற்றுக் (11.24.50); பட்டினத்துப் பிள்ளையார் - ஆலையங் கார் (11.30.65); சேக்கிழார் - திரு ஆலங்காடு (12.21.342) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், ஆலங்காடு அதனில் (12.24.63) காரைக்கால் அம்மையார் புராணம், குன்ற நெடும் (12.28.1007) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், அங்கணர் தம்பதி (12.29.282 & 283) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
நடராசப்பெருமானின் ஊர்த்தவ தாண்டவத் தலமாகவும், பஞ்ச சபைகளுள் இரத்தினசபையாகவும் சிறப்புற்று விளங்குகிறது இத்தலம்.
மூன்று நிலைகளையுடைய உள் கோபுரத்தில் ஊர்த்தவ தாண்டவம், பிரம்மா, நந்தி மத்தளம் வாசித்தல், காரைக்காலம்மையார் பாடுதல், ரிஷபாரூடர், கஜசம்ஹாரமூர்த்தி, காரைக்காலம்மையார் வரலாறு முதலியவை சுதையில் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
இரத்தின சபையில் உள்ள நடராசர், அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமான் 'ரத்ன சபாபதி ' என்று அழைக்கப்படுகிறார்.
கோஷ்ட மூர்த்தங்களில் துர்க்கைக்கு பக்கத்தில் துர்க்கா பரமேஸ்வரர் உருவம் ஒன்று கோஷ்டமூர்த்தமாக உள்ளது.
பழையனூருக்குச் செல்லும் வழியில், திருவாலங்காட்டிலிருந்து ஒரு கி.மீ.-ல் பழையனூர் வேளாளர்கள் எழுபதுபேர் தீப்பாய்ந்து செட்டிப்பிள்ளைக்குத் தந்த வாக்குறுதியைக் காத்த 'தீப்பாய்ந்த மண்டபம் ' உள்ளது. இங்குள்ள தொட்டியின் உட்புறத்தில், யாகம் வளர்த்து இறங்குவதுபோல் இவர்கள் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிரில் 'சாட்சி பூதேஸ்வரர் ' சந்நிதியும், தீப்பாய்ந்த இடமும் உள்ளது.
தீப்பாய்ந்த வேளாளர்களின் மரவில் பழையனூரில் தற்போதுள்ளவர்கள் நாடொறும் திருவாலங்காடு வந்து இறைவனை தரிசித்துச் செல்லும் மரபை நெடுங்காலமாகக் கடைப்பிடித்து வருகின்றார்கள். சதாகாலமும் சேவைக்கு சந்து செல்லும் இவர்கள், இம்மரபை பிற்காலத்தோரும் அறியும் வகையில் "கூழாண்டார் கோத்திரம் சதாசேர்வை" என்று கல்லில் பொறித்து, அக்கல்லை, கோயிலின் முன் வாயிலில், உயர்ந்த படியைத் தாண்டியவுடன் முதற் படியாக வைத்துள்ளனர். இம்மரபினரின் கோத்திரமே 'கூழாண்டார்கோத்திரம்'. அதாவது தாங்கள் கூழ் உணவை உண்டு, விளைந்த நெல்லை இறைவனுக்கு சமர்ப்பித்தவர்கள் என்பது பொருளாம். சிவப்பற்றினை உணர்த்தும் இச்செய்தி நெஞ்சை நெகிழச் செய்கிறது.
பங்குனி உத்திரத்தன்றும், மார்கழித் திருவாதிரையன்றும் ஊர்த்துவதாண்டமுர்த்தி ஆண்டுக்கு இருமுறை திருவீதி எழுந்தருளி பழையனுர் சென்று வருகிறார்
கல்வெட்டில் நடராசப்பெருமானின் பெயர் 'அரங்கில் அண்டமுற நிமிர்ந்தருளிய நாயனார் என்று குறிக்கப்பட்டுள்ளது.
திருவாலங்காட்டுப் புராணச் சுருக்கம் திருஆலங்காட்டுப் புராணம் |
சபாபதி தேசிகர் தியாகராஜ கவிராஜர் |
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சென்னையிலிருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம் செல்லும் பேருந்துப் பாதையில் இத்தலம் உள்ளது. காஞ்சியிலிருந்தும், அரக்கோணத்திலிருந்தும், திருவள்ளூரிலிருந்தும் இவ்வூருக்குப் பேருந்துகள் உள்ளன.