logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-sandya-nrutta-murthi

ஸந்த்யாந்ருத்த மூர்த்தி

ஸந்த்யாந்ருத்த மூர்த்தி
ஸந்த்யாந்ருத்த மூர்த்தி

 தேவர்கள் சிவாக்கினை யின்றித் திருப்பாற்கடலை மதித்த பொழுது அதில் நாட்டிய மந்தரமலையாகிய மத்திற்குப் பூட்டப்பட்ட தாம்பாகிய வாசுகியென்னும் பாம்பு தன் தலைவால்களைப் பற்றியீர்க்குந் தேவாசுரர் வலிக்காற்றாமல் வாய்வழி நஞ்சுகக்கியது. அவ்விஷம் யாவரையு மெதிர்க்கத் திருமால் அதனை யெதிர்த்து உடல் கருகி உம்பர் குழுவுடன் வெள்ளிமலையை யடைந்து சிவபிரானுக்கு விண்ணப்பஞ் செய்து கொள்ள, அருள்வள்ளல் அதனை அமுது செய்தனர்.

[இதன் வித்தாரம் விஷாபஹரணத்திற் காண்க.]

ஆகமத்திரட்டு

''பொங்குங்கள் காதரன் காளமயின் றேயெரன்றும்
புகலாம லிருந்தனனோர் கணப்பொழுது புலவோர்
அங்கவனை யிடைவிடா தருச்சனைமுன் புரிந்தா
ரத்திதியே காதசியா மடுத்ததிதியதனிற்
புங்கவர்பா ரணம்புசித்தே பூர்த்தியுற்ற ரதன்மேற்
பொருந்துதிதி தனிலிமவான் பொற்கொடியைவைத்தே
சங்கான் கு லஞ்சுழற்றி நடித்தனனோர் யாமஞ்
சதுர்மறை லது பிரதோடம்மெனவே சாற்றும்.”

என்னும் பிரமாணத்தின்படியே,

சிவபெருமான் தேவர் துயர் தொலையும்படி விஷபானஞ்செய்த காலத்தில், அதனால் தாமொருதீமையு மடைந்தாரில்லையாயினும், ஓர் திருவிளையாடல் செயக்கருதி ஓர் க்ஷணப்பொழுது ஒன்றுங் கூறாராய் உமாதேவியார் தம்மை யுபசரிக்கும்படி மௌநமாய்ச் சயனித்திருந்தனர். அதுகண்ட அமரர் அரனை யருச்சித்தனர். அத்திதியை ஆன்றோர் ஏகாதசியென்பர். அற்றைய நாள் முற்றும் உணவில்லாது அன்றிரவெல்லாம் நித்திரையினின்று நீங்கி மறுநாளாகிய துவாதசி யிற் பண்ணவர் பாரணஞ்செய்தனர். அதன்மேற்பட்ட திதியாகிய திரயோதசியிற் சிவபிரான் மலையரசபுத்திரியாராகிய உமாதேவியாரை நிறுத்திச் சூலத்தைச் சுழற்றி, கையில் தமருகமேந்தி ஓர் ஜாமகாலம் நிருத்தஞ்செய்தனர். அக்காலத் தையே வேதசிவாகமங்கள் பிரதோஷமெனக் கூறும். இதுபற்றி, பதினைந்து தினங்கட் கோர்முறைவருந் திரயோதசியைப் பிரதோஷ மென்பதன்றி, தினந்தோறு மாலையு மிரவுங்கலக்கும் ஒருசாமப் பொழுதையும் பிரதோஷகாலமெனவும், வருடத்திற் கோர்முறையெய்தும் மகா சிவராத்திரியை வருடப்பிரதோஷமெனவுங் கூறா நிற்பர். ஒவ்வொரு தினமும் உதயாதி இருபத்தாறேகால் நாழிகை முதல் இரவு மூன்றே முக்கால் நாழிகைவரையும் நாழிகை ஏழரை. இதில் ரஜநிமுககாலத்திற் சம்பவிப்பது பிரதோஷமெனவும், மத்தியான முகூர்த்த மெட்டனுள் எழுகழித்து எஞ்சிய எட்டாவது முகூர்த்தமே பிரதோஷமெனவும் ஆகமங்கள் கூறும். இம்முறை பற்றி மாதப்பிரதோஷத்தை மாதசிவராத்திரி யென்பர்.

இதுநிற்க. சிவபிரான் நிருத்தஞ்செயக்கண்ட தேவர் களித்து இருகரங்களை யுஞ் சிரமேற்குவித்து மனதை மகாதேவன்பாற் பதித்து அரனே பரனெனமதித்து ஆநந்தக்கூத்தாடினர்; அன்புருகிப் பாடினர்; ஐயனைக் கொண்டாடினர்; அருளாளர் விடைபெற்றுத் தமதிடத்தைநாடினர். இத்தகையநிருத்தகாலத்தில் தேவர்கள் தத்தமக்கியைந்த வாச்சியங்களும், திருமால் மிருதங்கமும்வாசித்தனர்.

பெருமான் திருக்கயிலாயகிரியில் உமாதேவியார் முதலானார் காணப் பிரதோஷகாலத்தில் நடனஞ்செய்த அவசரம் ஸந்த்யாந் ருத்தமூர்த்தமெனப்படும்.

ப்ரஹ்மோத்தரகாண்டம்.

வாக்தேவீத்ருதவல்லகீஶதமகோவேணும்ததத்பத்மஜ:
ஸ்தாளோந்நித்ரகரோரமாபகவதீகேயப்ரயோகாஞ்சிதா
விஷ்ணுஸ்ஸாந்த்ரம்ருதங்கவாதநபடுர்தேவாஸ்ஸமந்தாத்ஸ்திதா:
ஸேவந்தேதமநுப்ரதோஷஸமயேதேவம்மருடாநீபதிம்.

ஸந்த்யாந்ருத்தமூர்த்தயே நம:

 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்
 

Related Content

Greatness of Pradhosha (Pradhosha Mahimai)

ப்ரதோஷ விரதம் (சாம்பசிவ பூஜை)

ஸதாந்ருத்த மூர்த்தி

சண்டதாண்டவ மூர்த்தி