logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

பேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்


Perur Puranam of Kachiyappa Munivar
part - I / verses 1 - 627
In tamil script, Unicode/UTF-8 format

 

சீலத்திரு கச்சியப்ப முனிவர் அருளிய 
"பேரூர்ப் புராணம்" - பாகம் - 1

0. கடவுள் வாழ்த்து, அவையடக்கம்1-20
1. திருநாட்டுப்படலம்21-95
2. திருநகரப்படலம்96-191
3. நைமிசப்படலம்192-209
4. புராண வரலாற்றுப்படலம்210-261
5. பதிகப்படலம்262-272
6. நாரதன் வழிபடு படலம்273-339
7. காலவன் வழிபடுபடலம்340-418
8. காமதேனு வழிபடுபடலம்419-503
9. குழகன் குளப்புச் சுவடுற்றபடலம்504-627



சிவமயம்

சீலத்திரு கச்சியப்ப முனிவர்
இயற்றிய "பேரூர்ப் புராணம்"
0. கடவுள் வாழ்த்து, அவையடக்கம் (1-20)

காப்பு (1)

 

1கங்கையும் பனிவெண் டிங்களும் விரைத்த கடுக்கையந் தொங்கலு மரவும்
தங்குபொற் சடையு முக்கணுந் தாதை தாணுவென் றுணர்த்தமென் மலர்க்கை
அங்குச பாச மணிந்துவெற் புயிர்த்த வாரணங் கன்னையென் றுணர்த்தி
வெங்கலி முழுதுந் துமித்தருள் பட்டிவிநாயகன் சேவடி பணிவாம்.
1

கடவுள் வாழ்த்து (2-14)

 

2பட்டீச்சர்
கடல்சூழ்ந்த வுலகுண்ட கனிவாய னிருந்தொழிலுங் கமழ்ந்த தெய்வ
மடல்சூழ்ந்த மலர்க்குரிசின் முதற்றொழிலு மவரொடு மடிக்கு ஞான்றவ்
அடல்சூழ்ந்த வரன்வழியே மீட்டும்வரப் பணித்தருளி யாவிக் கெல்லாம்
மிடல்சூழ்ந்த விருடணிக்கு மாதிநகர்ப் பட்டீசர் விரைத்தாள் போற்றி.
1
3அரசம்பலவாணர்
திருமார்பன் முதலான தேவருக்கெல் லாமறையோன் சிவனே யாமென்
றொருவாய்மை மறைகரைந்த துண்மையெனத் தெளிந்துலக முய்ய முத்தீ
மருவாருங் குழலுமைபத் தினிவளர்ப்ப விடக்கரத்து வயங்க வேந்திப்
பெருவாழ்வு தரவரசம் பலத்தாடும் பேரொளியைப் பேணி வாழ்வாம்
2
4மரகதவல்லியம்மை
கங்கைநதி சடைக்கரந்த கணவனா ருருக்கலந்த தனக்கே யல்லால் 
துங்கமணிக் கோடிரண்டா யிரம்படைத்த கரியெவர்க்குந் தூண்டன் முற்றாது
அங்கணெடும் புவனத்தென் றமைந்தனள்போற் பாசமொடங் குசங்கை
மங்கலமிக் கருள்பேரூர் மரகதவல் லியினிருதாள் வனசம் போற்றி.
3
5விநாயகக்கடவுள்
வேறு
கற்றை வெண்கதிர் மேருவி னொழுக்கிய காட்சியின் மணிமார்பின்
உற்ற முப்புரி நுல்கர டத்தினின் றுகுமதத் துருவேறாய்ப்
பொற்ற தாதைபோற் றேவர்தஞ் சிகைகொலோ பூண்டன ரிவரென்னும்
பெற்றி நித்தலும் விளைக்குமங் கரன்கழற் பிரசமா மலர்போற்றி.
4
6முருகக்கடவுள்
காமர் மல்கிய வுருவிஃ தன்றெனக் கருத்தின்முன் னுறத்தோற்றும்
காம னல்லுடல் பொடித்தகண் ணிடத்துமை கணவனார் நிகரில்லாக்
காமர் மல்கிய வுருவெனத் தோற்றிய காளையை யடியார்தங்
காம முற்றமிக் கருளுமங் குலிநகர்க் கந்தனைப் பணிவாமால்.
5
7திருநந்திதேவர்
உலகம் யாவையு மொருநொடிப் பொழுதினுண் டுமிழுஞ்சக் கரமாதி
மலர்கை யேந்திய நாரணன் முதலிய வானவர் குழாமெல்லாம்
அலகி லார்வமு மச்சமுந் தழீஇநிரை யாகநின் றனர்போற்ற
இலகு வேத்திரச் சிறியகோற் பணிபுரி யேந்தல்பூங் கழல்போற்றி
6
8சண்டீச நாயனார்
வேறு
விண்ணவ ரேனுஞ் சிவபிரான் பத்தி மேவில ராயினல் வினையும்
திண்ணிய பாவ மெனப்படு மென்று சிறுவிதி தெரிப்பவன் பினரேல்
மண்ணவ ரேனும் வெய்யபா தகமு மறுவினல் வினையெனப் படுமென்
றண்ணலம் புவியிற் றெரித்தசண் டீசரடிமலர் முடிமிசைப் புனைவாம்.
7
9திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
வேறு
தவந்த என்பினைப் பெண்ணெனப் படைத்துஞ்சார் மழவன்
உவந்த பெண்ணுயி ரளித்துமொட் டாதெதிர் புத்தன்
நிவந்த சென்னியை யுருட்டி முத்தொழி னிறுவிப்
பவந்த டுத்துயிர்க் கருளுஞ்சொற் பனவனைப் பணிவாம்.
8
10திருநாவுக்கரசு நாயனார்
விஞ்சை கற்பன வேறிலை விடையவன் பதங்கள்
அஞ்சு மேயென வறியவெவ் வுலகுங்கற் புணையா
நெஞ்சு துட்கெனு நெடும்புனல் வேலையும் பிறவி
வஞ்ச வேலையு நீந்திய மன்னனைப் பணிவாம்.
9
11சுந்தரமூர்த்தி நாயனார்
ஆடு பாம்பணிந் தம்பலத் தாடிய வழகற்
பாடு பாப்பல பகர்ந்துமற் றிம்மையின் பயனும்
கூடு மேலையிற் பயனுங்கோ தனைத்தையு மொருவும்
வீடும் வாங்கும்வா ணிகத்துறு விரகனை வியப்பாம்.
10
12மாணிக்கவாசகசுவாமிகள்
உள்ள மாகிய புலத்தினைப் பத்தியா லுழுது
தெள்ளு ஞானவித் துறுத்துநற் சிரத்தைநீர் பாய்த்திக்
கள்ள வான்பொறிக் களைகள்கட் டானந்தம் விளைத்துக்
கொள்ளை கூறுமா ணிக்கவா சகன்கழல் குறிப்பாம்.
11
13மற்றைய நாயன்மார்
அறத்தி னீடிய வகத்திடைச் சிவானந்தம் விளைய
உறத்த டாதுமுன் பாய்த்திய வொழுக்கநீர் முழுதும்
புறத்தி னேகுறக் கவிழ்த்ததே போன்மெனப் புனல்கண் 
நிறத்தின் வாக்குமெய் யன்பின ரெவரையு நினைப்பாம்.
12
14குருமரபு
வேறு 
அங்கணர்தங் கயிலைவரை நந்திநவின் றருளும்
      அருணூலை மொழிபெயர்த்த வாசிரியன் மரபில்
தங்குதுறை சையினமச்சி வாயர்மறை ஞானர்
      தயங்கியவம் பலவாண ருருத்திரகோ டியர்மா
மங்கலவே லப்பரிரு குமாரசா மிகண்மா
      சிலாமணியா ரிராமலிங்கர் வயங்கிருவே லப்பர்
இங்கணுயர் திருச்சிற்றம் பலவரிருள் துமித்திட்
      டெனையாளம் பலவாண ரிவர்களையேத் தெடுப்பாம்
13


கடவுள் வாழ்த்து முற்றிற்று
ஆகத் திருவிருத்தம் 14 
------------

அவையடக்கம் (15-20)

 

15வேறு 
சூழிமால் யானை சுமந்த நானிலத்துச் சூழ்ந்தவேழ் கடலையு மொருங்கு
நாழியா லளப்பப் புகுந்ததே போலா நான்முகன் மாலளந் தறியா
ஊழியான் கருணை ஊற்றெழ நடன முஞற்றுறும் பிப்பிலா ரணியப்
பாழிமான் மியங்கண் முழுவதுஞ் சிறியேன் பகருவான் புகுந்தது மாதோ.
1
16சித்திரம் பிறங்கச் செம்பொனிற் குன்றி செறிப்பினுஞ் செய்கையே விழைவார்
ஒத்ததின் றிதற்கென் றுவப்பராற் கூடத் தொளிர்மணி யழுத்தினு மணியின் 
உத்தமம் விழைவோ ரதனையே மதிப்ப ருரைத்தவென் கிளவியாற் சிலர்தாம்
கைத்தன ரேனும் பயனுறு மனத்தோர் கைக்கொள்வர் மான்மியச் சிறப்பால்.
2
17பண்டுகே வலத்திற் கிடந்தவா ருயிர்க்குப் பரிவினாற் றனதுப காரம்
கண்டரு ளிறைபோற் றாங்களே பிறர்தங் கவிதையிற் கரிசுதீர்த் தாள்கை
கொண்டவை யிருந்தோர் தம்மையா மிரப்பிற் கோதற விளங்கிய வவர்தம்
மண்டிய புகழுக் கியைவதன் றெனவா ளாதிருந் தனமவர் மாட்டு.
3
18அருவருப் புடைய துடலமென் றறிந்தும் அரும்பய னுறுநரு முறாரும்
ஒருவருந் திறத்தி னுரிமைமற் றதன்பா லுறுத்துவர் மதுரமென் கிளவி
மருவரி திதுவென் றறிந்துமென் பாடன் மாட்டுவை யகத்துளா ரெவரும்
பொருவருந் திறத்தி னுரிமைபூ ணுவராற் பொறியிலே னிடத்துறு மகிழ்வால்
4
19கடல்கடைந் தெடுத்தச் வமிழ்தமுஞ் சமழ்ப்பக் கதித்ததீஞ் சுவையெழாற் பாடல்
நடவின ரிருவர் சேக்கைபெற் றிருந்த நாயகன் செவியிடைத் துடிமான்
விடநிகர் குரைப்பு மேறலிற் றெளிந்தோர் விதியுளி யுஞற்றுசெந் தமிழ்கள்
படருமச் செவியிற் சிறியனேன் றொடையும் படருமா லுலகெலாம் பரவ.
5
20வேறு
கொன்றை மாலையுங் கூவிள மத்தமும் பிறையும்
துன்று வார்சடைப் பட்டிநா யகர்சுரர் போற்ற
மன்றி னாடல்செய் குடவயிற் சிதம்பரம் வயங்கு
கின்ற மேதகு கொங்குநாட் டணிகிளப் பாமால்.
6

அவையடக்கம் முற்றிற்று
ஆகத் திருவிருத்தம் 20 
-----------

1. திருநாட்டுப்படலம் (21-95)

 

21திங்களும் உரோணியுந் திகழ்ந்ததிற மென்ன
மங்கல வினைத்தொழிலு மங்கையரும் வேத
அங்கியும் வளர்க்குமறை யந்தணருங் காவும்
கொங்குமலி கின்றதொரு கொங்குவள நாடு.
1
22கோதைபயில் விற்கொடி குலாவிய புயத்தன்
கோதையர் விழிக்கணை குளிக்குமரு மத்தன்
கோதைகம ழுங்கவிகைக் கொங்கனென விள்ளுங்
கோதைநனி யாண்டதொரு கொங்குவள நாடு.
2
23பருதியொடு வெண்மதி பரிக்கவொளி நல்கும்
உருகெழு கனற்புதல்வ னாண்டவொரு சீரால்
இருசுட ருயிர்த்தவர்க ளாண்டவிரு நாட்டின்
குருவென விலங்கியது கொங்குவள நாடு.
3
24மலாடும்வளர் பாண்டியும் வழங்குபுன னாடு
நிலாவுதிறை யாகநிதி நிச்சமும் வழங்கி
விலாழிமத குஞ்சரமும் வெய்யபொருண் மற்றுங்
குலாவுசிறப் பெய்தியது கொங்குவள நாடு.
4
25இலவிதழி பாகனி லிழிந்தமலர்க் கைதை
கலவியது காரமிழ்து கான்றதொழி யாத
புலவுடைய தென்றுகடல் போக்கிநில மூன்றிற்
குலவிவள மெத்தியது கொங்குவள நாடு.
5
26குறிஞ்சி
வேறு 
கடலு வர்ப்பென நீக்கிய காமரிந் நாட்டின்
தடவு வண்மையை நோக்கியே சாகர முகந்த
படலை மென்முகில் பயிலுவர் முழுவது மகற்றிப்
புடவி யெங்கணும் பொழிந்துகண் படுப்பன வரைகள்.
6
27கருவி நீண்முகிற் கஞ்சுகம் போர்த்ததன் மேலால்
குருதி மாமணிக் கொழுநிற வானவிற் பைம்பூண்
மருமம் வீழ்தரப் பூண்டுபன் மணிகொழித் திழியும்
அருவி யாரமு மணிந்ததா லருவரை யடுக்கம்.
7
28குழவி வாண்மதி தவழ்வது கோடெனத் தோன்ற
முழவ மாமழை முழக்கெழ முகத்துமின் னோடை
தழுவ மாலைவெள் ளருவியஞ் சலசல மதநீர்
ஒழுக வோங்கல்க ளரசுவா வெனச்சிறந் தனவால்
8
29
கழைநி வந்ததண் சாரலிற் களகள முழங்கும்
மழையை வேற்றுவா வரவென மதமலை யெதிர்ந்து
புழைநெ டுங்கர நீட்டவாய் முழையெனப் புகுந்த
தழைம ழைக்குல நிமிர்வது தளைவிடு நாள்போல.
9
30தண்ட மெண்ணில காட்டுவ தாழ்வரைக் குலமும்
தொண்ட கப்பறை முழக்குநர் துவன்றுசீ றூரும்
கொண்ட சேவகங் காட்டுவ குலவரை முழையும்
மண்டு போர்பல வடுத்துழி மறவர்தம் புயமும்.
10
31சுடர்ம ணிக்குலந் துவன்றிய தடநெடுங் கோட்டுக்
கடகங் காட்டுவ கொடிச்சியர் கரங்களுங் காவும்
சுடர்ம ணிக்குலந் துவன்றிய தடநெடுங் கோட்டுக்
கடகங் காட்டுவ களித்தெழு களிறுங்கல் வரையும்.
11
32வேட்ட தற்பமே யாயினு மேவுமா முயல்வோர்
வீட்டு வார்விழை யாதன மேன்மைய வேனுஞ்
சேட்டு மாமணி பொடிபடச் செந்தழல் விரைக்கா
னூட்டி னார்தினை வித்தினா ருயர்மலை வாழ்நர்.
12
33செய்ய கோலினர் திசைதொறுஞ் செலுத்துசக் கரத்தார்
வெய்ய தண்டமு முடையவர் வெல்பெருங் கதையார்
ஐய நாளறி கணியின ரசலமந் திரஞ்சூழ்
மெய்யர் யாவரும் வெற்பமர் வாழ்க்கையா டவரே.
13
34முருந்து மூரலார் மொழியையு மியலையும் வேட்டு
வருந்து கிள்ளையு மஞ்ஞையும் வார்புனத் திதண்மேல்
இருந்து ளாரென வின்புறு மின்முகங் காணா
விருந்தி னாரென வெதும்புறும் விலகுகைக் கவணால்
14
35கிழங்கு செந்தினை யைவனந் தோரைகேழ் மதுவூன்
பழங்க னற்பசி கெடுப்பன படிவன வருவி
முழங்கு தண்சுனை கண்படுப் பனமுதிர் மான்றோல்
தழங்கி ரும்புகழ்ப் பொருப்பினர் வாழ்க்கைதாழ் விலதே.
15
36பிணிமு கத்தன புனங்களே பெரிதிரங் குவன
துணிபு னற்சுனைத் துடுமென விழுமரு விகளே
திணிப டும்வயி ரத்தன சிலம்புசூழ்தடமே
அணிப டுங்கொடுங் கோலின வழிமதக் களிறே.
16
37பெரும்ப யத்தன பிரசம்வார் பொதும்பரே யல்ல
சுரும்பு ழக்கமென் றோடவிழ் மலர்த்தடஞ் சுனையும்
கருங்க யத்தன கமழ்ந்தவச் சுனைகளே யல்ல
மருங்கு துன்றிய மழைதவழ் மணிவரைக் குலமும்.
17
38முல்லை
வேறு
அருவியம் புனங்களை யளிக்கு மேனலும்
இருவியு மாக்ககுந ரிருக்கை மால்வரை
மருவிய வுடையென மருங்கு வாங்கிய
திருவியல் கானகஞ் செல்வ மிக்கதே.
18
39புல்லமாய்ப் புரமடு மிறையைத் தாங்கினோன்
புல்லமார் நிரைகளைப்புரக்க முன்னுவோன்
புல்லமா யிருந்ததிப் புடவி யென்றுபல்
புல்லமார் நிரையெலாம் புணர்ந்த செவ்வித்தே.
19
40மந்திர வலியினான் வலைத்துக் கட்டிய
வெந்திற லுழுவையின் வெடிகொ ளோதையும்
சுந்தர மகளிர்கள் துவன்றி மத்தெறி
பைந்தயி ரோதையும் பகுக்கொ ணாதரோ.
20
41தொறுவியர் கற்பினான் மிகுந்த தோற்றத்தை
நிருவிய தென்பவே நிலத்தின் மங்கையர்
மறுவில்கற் புடையராய் வார்கு ழற்பெயும்
நறுவிரை முல்லையி னகைத்த கானமே.
21
42ஏற்றினா லிரலையா லிதழி யாத்தியும்
தோற்றலான் மாலொரு பாலிற் றுன்னலால்
ஆற்றநற் பான்முத லைந்து மாடலால்
நீற்றினன் திருவுரு நிகர்க்குங் கானகம்
22
43பெருகிய பாற்கடற் பள்ளி பெற்றவன்
பருகிய வமுதினான் பானெய் பற்றுமிக்
குருகிய காதலிற் கரந்துண் டானெனின்
வெருகுமங் குயர்ந்தன விருப்ப வுண்டியால்
23
44வேய்மணிக் குழலினும் வெய்ய மாலையில்
தாய்மணிக் குரையினுந் தழைக்குங் கன்றுதேர்
வாய்மணிக் குரையினும் வழங்கு தூதினும்
ஆய்மணி யனையவ ரகந்த ழைப்பரே.
24
45சயமுறு தன்னில வரகுஞ் சாமையும்
வயல்வளர் செந்நெலும் வணங்க மிக்குறு
பயனொடு தலைநிமிர் பரிசு பெற்றன
வியலுறு மிறுங்குகம் பாதி யெங்கணும்.
25
46காணமுந் திலமுநற் கடலைச் செல்வமும்
தூணுற ழரையின துவரைக் கானமும்
மாணுறு மவரையும் பயறு மற்றவும்
பேணிந ரையுறப் பெருக்கஞ் சான்றவே.
26
47விடுத்தவல் லேற்றினை விரகிற் பற்றினோர்க்
கடுத்தன எளிதினல் லணங்க னார்வடந்
தொடுத்தகுஞ் சரங்களுந் துளங்கு சிங்கமும்
கடுத்தவழ் கூற்றமுங் கைக்க டங்கியே.
27
48கோலொடுங் கயிற்றொடுங் குழலொ டும்பசுக்
காலொடும் பழகுவ பொதுவர் கைத்தலம்
பாலொடுந் தயிரொடும் நெய்யொடும் பைம்பொற்
சாலொடும் பழகுவ தைய லார்கரம்
28
49மருதம்
அந்தினுந் தெய்வ தமருந் தவத்தினால்
உந்தியி னொருமல ருயிர்த்த தாமென
நந்துயிர் முத்தினா னகக்கும் பங்கயச்
சுந்தரப் பணைவனத் தரூகு சூழ்ந்தவே.
29
50வேறு
ஒன்றுக ணரனுக் கீந்திட் டுவணத்தோன் கமலக் கண்ணன்
என்றுல கிசைப்பப் பெற்றான் இத்தகு பதுமஞ் சாலத்
துன்றுநம் மிறைவ னோடு சோர்வற்க என்று ஏகம்
நன்றுறை சிதறித் துஞ்சும் நனைமலர்க் காவு தோறும்.
30
51குழையொடு தோடு நாலக் கொடியிடை துடங்கக் கொங்கை
விழைதகக் காட்டிப் புள்ளின் வியத்தகு குரல்க டோற்றி
மழைமுகிற் கூந்தல் சோர மருங்குகண் மலர்கள் சேர்த்தித்
தழைமதுத் தெவிட்டிக் காமத் தையலர் புரையுஞ் சோலை.
31
52சிலம்புகா லணிந்து பாணி செறிந்தகற் கடகந் தோற்றி
வலம்புரி யுந்தி தாழ்ந்து மணிநிழற் காஞ்சி சூழ்ந்து
நலம்புரி யலர்க டோன்ற நாயகன் விழையத் துள்ளிப்
புலம்புகுத் தன்பின் மாதர் போன்றன வேரி யெல்லாம்.
32
53சுரும்பொடு ஞிமிருந் தேனுந் தும்பியும் பாண ராக அரும்பவிழ் கமல மெல்லாம் அரியலார் வள்ள மாக விரும்பிய விலைமூ தாட்டி யாயின விலக லின்றி இரும்புனற் றடங்க டோறு மிடையிடை விராய வன்னம்.33
54முள்ளரைக் கமல மேய மூரியம் புனிற்றுக் காரான்
உள்ளூறத் தவழ்ந்து கோட்டி னொழிந்துநீர் குறைந்த பொய்கை
துள்ளுமீன் செருத்தன் முட்ட துனைந்தவை பெயர்ந்து கொட்டுந்
தெள்ளீய நறும்பால் பாய்ந்து குறைவறத் தேக்கு மன்றே.
34
55வள்ளையுங் குவளைப் போதும் மயங்கிமேய் செங்கட் காரான்
நள்ளுறச் சொரிந்த தீம்பால் நசையின்வாய் மடுத்துங் கஞ்சப்
பள்ளியிற் பயின்று மாதர் படர்தொறு நடைகள் கற்றும்
ஒள்ளிய தெய்வ நாட்டை மறந்தன ஓதி மங்கள்
35
56பாவிரி புலவர் சாவாப் புலவரும் பழிச்சுந் தெய்வக்
காவிரி பவானி யாம்ப ராவதி கங்கை யென்னப்
பூவிரி காஞ்சி மாற்றும் பொங்கிவெண் டிரைகள் வீசித்
தாவிரி பழன மோம்பத் தலைதலை பரந்த மாதோ
36
57வரைவிழி யருவி யென்ன மணிகொழி கலுழி யென்ன
விரைதரு நதிக ளென்ன வியத்தகு நீத்த மொன்றே
பரைதனக் குரிய கேள்வன் படைத்தளித் தழிப்போர் பானின்
றுரைதரு மூவ ரென்னப் படுவதொத் துரைவே றெய்தும்.
37
58மலைபடு வயிரஞ் செம்பொன் மருப்புநித் திலஞ்சந் தாதி
அலையினிற் கவர்ந்து கொல்லை யாயர்தம் புறங்கண் டன்னோர்
விலையிழு தமுதந் துய்த்து மேற்செலப் பழன மள்ளர்
குலைதொறும் பறைக ளார்ப்பக் கொமென வெதிர்சென் றாரால்.
38
59மணித்தலைப் பாப்புக் கூட்டம் வைகிய நாக நாடிங்
கணித்தென வுடைப்பிற் றாழ்ந்த வவலெலா மலையின் பக்கந்
துணித்தவன் காவல் பூண்ட சோதிசூழ் நாக நாடுந் 
தணித்தன மென்னத் தூர்த்துத் தடாயவன் குலைகள் செய்தார்
39
60விலைமட மாதர் நெஞ்சின் வீற்றுவீற் றுடைப்பிற் சென்ற
அலைநெடும் புனல்கண் முற்றும் அகத்துற மறுத்த லோடுங்
குலைகளு ளடங்கி நல்ல குலம்வரு தெய்வக் கற்பின்
தலைவளர் மாதர் நெஞ்சி னொழுகின தடங்கால் தோறும்.
40
61கதுப்பிளந் தோகை நல்லார் கண்ணெனக் கயல்கள் பாய
மதுப்புனற் கமலம் பூத்த வளநெடு வயல்க ளெல்லாம்
புதுப்புனல் பாய வோகை பொங்கிய கருங்கை மள்ளர்
வெதுப்புறும் அரிய லார்ந்து வினைத்திறத் தூக்க மிக்கார்.
41
62வேறு
சீர்த்த வித்தொழி லாளர்க்குத் தென்றிசைப்
பார்த்தி வன்விரை யாக்கலி பாறுமென்
றோர்த்து ளங்கொள வன்னவ னூர்தியைக்
கார்த்த டங்கையி னாருழக் கட்டினார்.
42
63கமலக் கண்ணன்முன் றோன்றிய காளைகை 
யமருக் கேற்றவ லப்படை நம்மிரு
சமரக் கால்வழிச் சாருவ தாமெனத்
திமிரப் பூணிகள் செல்வ தருக்கியே.
43
64வெள்ளை கைப்படை வீற்றுற நந்தகோன்
பிள்ளை நீருட் பிறந்ததோற் றத்தினுள்
துள்ளு மொன்று துனைந்திரிந் தோடுமொன்
றள்ள லுட்படிந் தாங்கலைப் புண்ணுமே.
44
65ஏத மென்றறி யாதய லாரிடங்
காத லிற்கவர்ந் தார்முகங் காட்டிய
சீத வம்புயத் தேனொடுந் தாழ்வன
நீதி மன்முனவ் வானனம் நின்றென.
45
66நாய கன்கை நகம்படு மூற்றினால்
சாயன் மெல்லிய லார்கட ழைப்பபோல்
தேய லப்படை சென்றுறு மூற்றினால்
பாய பண்ணை பயப்பட நின்றவே.
46
67மெய்யி னூறு வெளிப்பட நாணிய
மையன் மாதர் மறைத்தவெண் டூசெனத்
தைய சால்கள் தமைமறைத் திட்டதாற்
கையி னாற்றுநர் பாய்த்திய காமர்நீர்.
47
68நாவ லங்கனி நேர்நறுஞ் சாற்றினை
மாவ லங்கொளு மள்ளர் மரம்படுத்
தாவ லங்கொட்ட ஆற்றுக்கா லாட்டியர்
மேவ லங்கிய வெண்முளை வித்தினார்.
48
69சேறு செய்குந ரோர்புறஞ் சேற்ரிடை
வீறு வெண்முளை வித்துந ரோர்புறம்
நாறு வாங்கி நடுகுந ரோர்புறம்
வேறு வேறு வினைத்திற மிக்கதே.
49
70ஏரி னுஞ்சிறப் பென்றெருப் பெய்தபின்
சீரி தென்று களையடச் செப்பினார்
நீரி னுசிறப் பாநெடுங் காவலென் 
றாரி னுஞ்சிறப் பெய்தவ ளிப்பவர்.
50
71வேறு
கருங்களமர் களையென்னச் செங்கயற்கட் கடைசியர்கள்
மருங்குனெடுங் கொடிநுடங்க வளர்தானை மீச்செல்ல
நெருங்கியகை வளையொலிப்ப நிரிறம தவயவத்துக்
கொருங்கிகலும் பகைமுடிப்ப வொளிர்நறும்பூம் பணையடுத்தார்.
51
72செய்யவாய்க் கருங்கயற்கண் வெண்முறுவற் பைந்தொடிக்கைப்
பையரா வகல்குற் காரன்னம் படர்தலொடும்
உய்யலாந் திசையாதென் றுய்யான மருங்கடுத்த
வெய்யபூம் பணைக்கமலம் விரவியவெள் ளோதிமங்கள்.
52
73மழைகாட்டும் விழிகாட்டும் மலர்க்குவளை மகரவாய்க்
குழைகாட்டுஞ் செவிகாட்டுங் கொடிவள்ளை துவர்ச்செவ்வாய்
கழைகாட்டு முகங்கரங்கால் கமழுந்தி முலைகாட்டிப்
பிழைகாட்டு நனியென்னாப் பெரிதுமடர்த் தார்கமலம்.
53
74கனிச்சந்த வாய்நிகர்த்த கயிரவத்தின் றவம்பாரார்
அனிச்சந்த மடிநிகர்த்த வருந்தவத்தின் றிறம்பாரார்
இனிச்சந்த மிலையென்ன விறுத்திறுத்துத் திடர்செய்தார்
பனிச்சந்த வனமுலையார் பகைத்தவம்பார்த் தொழிப்பவரார்.
54
75பஞ்சாயு மிளமுருந்து பனிநகையி னுயிர்ப்பதென
எஞ்சாது பறித்தெடுத்தா ரேனையவும் பறித்தெறிந்தார்
அஞ்சாமை யிறையேவ வடர்ப்பவர்க்குப் பகைநொதுமல்
துஞ்சாத வுறவிவற்றிற் சூழ்வதுசற் றுளதாமோ.
55
76தளையவிழ்பூங் குழனிகர்த்த சைவலங்க ளொறுக்கின்ற
விளையவர்தங் கானிகர்த்த வெமைவிடுத்தற் கிதுவாமென்
றளையழுந்து ஞெண்டுவரா லாமையகன் வயற்கிளைத்த
களைகளைய வுலாவுதொறுங் கான்மலர்மேல் விழுந்தெழுமால்.
56
77பட்டமிருந் தடம்பொய்கை பரந்தசெறு விவற்றெழுந்த
கொட்டியுநன் கிருந்தனவாற் குலத்தேவர் மணிமுடியில்
அட்டுமது மலரும்வய லவிந்தனவே யறிகிற்பிற்
சட்டவிடத் தாற்றழைத்துத் தபுவர்தணிந் துயர்ந்தோரும்.
57
78செழுக்கமல மதுமாந்தித் தெரிந்திதழ்மென் குழற்செருகி
விழுக்குவளை செவியேற்றி விரைத்தாது முலைக்கொட்டி
ஒழுக்குநறைக் கயிரவத்தின் ஒளிர்தண்டைச் சரணுறுத்துக்
குழுக்கொடுழத் தியர்மீண்டார் கொலைக்களத்தேல் சிறப்பினர்போல்.
58
79வேறு
குமிழ்தந் தொளிர்நா சியினார் குலனொன் றியவா டவருக்
கமிழ்துந் தனியா வியுமா யணிசெய் குவதற் புதமோ
இமிழ்தண் புனலீர்ம் பணையி னெழுபுன் பயிர்கைத் தொழிலால்
உமிழ்தந் தனவோங் கிவளர்ந் துலகின் புறலாங் கருவே.
59
80கரும்போ விஃதென் மர்கழைக் கரும்பித் துணையா வதுகொல்
அரும்பார் கதலித் துடவை யாமென் றுமறுத் தவர்தாஞ்
சுரும்பார் கதலிக் குலமித் துணையா வதுமுண் டுகொலோ
பெரும்பூ கமெனக் கொளவும் பெரிதும் விளைவா யினவால்.
60
81இருநா ழிநெலீந் தவரு மெண்ணான் கறமேற் றதனால்
ஒருவா துசெயுத் தமியு மொருநா ளுருமா றிமலர்
மருவார் பிறவா நெறியின் வயலிற் றொழில்செய் தனரேல்
பெருவாய் மையசெந் நெலெலாம் பெரிதீண் டுதலோர்புகழோ.
61
82வேறு
கண்ணுற நின்ற வாசான் கடவுளே யென்று முன்வே
றெண்ணின ரறிவு முற்ற விறைஞ்சிய வுண்மை காட்டும்
விண்ணினைப் பொருள தென்று வெண்மையி னிவந்த சாலி
மண்ணினைப் பொருள தென்று பசுமையின் வணங்கி யம்மா
62
83இறுதிவந் தடுத்த தோர்ந்தாங் கீண்டிய மணியும் பொன்னும்
நறுவிரைச் செழுநீ ரோடு நலத்தகு மடையிற் போக்கி
முறுகிய வன்பு பொங்க முதல்வன தடியிற் றாழ்ந்த
மறுவற விளைந்து சால வயங்கிய தெய்வச் சாலி
63
84முந்துற நிவந்த சென்னி மூப்புறச் சற்றே கோடிப்
பிந்துற முழுதுங் கூனிப் பெருநிலக் கிடக்கை மாந்தர்க்
கந்தியி னடுக்கு மாறுங் காட்டின நிவந்த சாலி
சந்தியின் வணங்கிக் கூனித் தரையிடைப் படுத்து மாதோ.
64
85விளைவினை நோக்குந் தோறும் விதுவினை மகவான் மெச்சுந்
தளைதொறும் பதடி யொவ்வொன் றிருந்தன தவத்தி னுள்ளந்
திளைதரு நல்லோர் மாட்டுஞ் சிதடர்சென் றுதிப்ப ரென்ன
வளைகட லிடத்துச் சான்றாய் வயங்கிய தோற்றம் போலாம்.
65
86பறவையும் விலங்கும் பல்வே றுறவியும் பசியிற் றிர
அறவினை நாளும் ஆற்றும் அகன்பணை விளைவு நோக்கி
நறவுணு மகிழ்ச்சி துள்ள நலத்தகு நாளான் மள்ளர்
மறவினைக் குயங்கை யேந்தி வளாவினர் வினையின் மூண்டார்.
66
87என்னணம் வளர்த்த யாமே யிறுத்துமென் றெண்ணல் வேண்டா
நன்னெறிப் படுத்து கென்னா நாடொறும் வணங்கி நின்ற
தன்னிகர் விளைவு கொய்து தலைத்தலை யிட்டுக் கட்டி
வன்னிலைக் களத்தி னுய்த்து வானுறப் போர்கள் செய்தார்.
67
88அலம்படு கழனி தோறு மரிந்திடுந் திரளிற் றப்பி
நிலம்படக் கிடந்த சூடு நித்தலும் பொறுக்கிச் சேர்த்தங்
கிலம்படு மாந்த ரெல்லாஞ் செல்வரா யிருப்ப ரென்னில்
நலம்பட விளைப்போர் செல்வ நவிற்றலாந் தகைமைத் தேயோ.
68
89போரென்றுஞ் சூடி தென்றும் பொருவில்பல் லறமு மற்றும்
பாரென்றுந் தழைய வாக்கும் பண்பினை யுடைய சாலிக்
கூரென்று மொழிவ தாமோ வவ்வுரை யொழித்து மென்னாக்
காரென்று கடுப்ப மள்ளர் கடாவிட லாயி னாரே.
69
90முன்னுற நடந்து முந்துந் தொழிலினை முடித்த பூணி
பின்னுற நடந்து பிந்துந் தொழிலையா முடித்தா மென்று
முன்னுறத் தோற்றஞ் சான்ற முதலினைப் பூணிக் காக்கிப்
பின்னுறத் தோற்று நெல்லைத் தமக்கெனப் பிரித்தார் மள்ளர்.
70
91பொங்கரித் திரளை யெல்லாம் பொள்ளென வாரிக் காற்றில்
தங்கிய பதடி யோடத் தலைத்தலை தூற்றிக் கூப்பிப்
பங்கமில் லரசற் குள்ள பகுதிதீர்த் தனைத்துங் கொண்டு
துங்கவண் கூட்டுட் பெய்து தொல்லறம் வழாமை யுய்ப்பார்.
71
92தழைக்குநெல் விளைவு வாய்த்த தளையினெண் மடங்கு சான்ற
கழைக்கருப் பினமும் பூகக் கானமுங் கதலிக் காடும்
மழைக்குலந் தவழுந் தெங்கு மதுநுகர் தேனி றால்கள்
இழைக்குநந் தனமு மஞ்ச ளிஞ்சியு மூர்க டோறும்.
72
93தண்ணடை யினங்க ளானுந் தழைத்திடும் பாடி யானும்
புண்ணுடைப் படைக்கை வேடர் பொருந்திய சீறூ ரானும்
மண்ணடை யுலகின் மிக்க வளம்பல தழுவி நாளும் 
விண்ணிடை யுலக நாண மிளிர்ந்தது கொங்கு நாடு.
73
94வேறு
மதியந் தவழுஞ் சையவரை வரைப்பிற் பிறந்த காவிரிநன்
நதியந் தனக்கு நேர்கிழக்கி னடத்த லொழிந்து தெனாதுதிசைக்
கதிகொண் டெழுந்த துயர்கொங்கு காணும் விழைவா லெனிலிந்தப்
பதிகொண் டமர்ந்த நாட்டின்வளம் பகர்த லெளிதோ பண்ணவர்க்கும்.
74
95கருங்கட் கமலை மணிமார்பன் கதிய வுலகும் அயனுலகும்
ஒருங்கு வரையின் சிறகரிந்தோ னுலகும் ஏனைச் சுரருலகும்
மருங்கு வளைந்த நகர்வெல்ல வயங்கிச் சிவலோ கத்தின்வளம்
நெருங்கும் பேரூர் வளஞ்சிறிது நிகழ்த்தி நிகழ்ந்த பிறப்பறுப்பாம்.
75

திருநாட்டுப் படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் - 95
-----------

2. திருநகரப்படலம் (96-191)

 

96உரைத்தநாற் பயனுட் பெரும்பய னாய தொள்ளிய வீடஃ துறலால்
தரைத்தலைப் பேரூ ரென்மர்கள் சிலரெத் தலத்தினுஞ் சாற்றுநாற் பயனும்
நிரைத்தலிற் பேரூ ரென்மர்கள் பலரே நீடிய வாதிமா நகரை
இரைத்தெழு கடல்போல் வளத்தினும் பேரூ ரென்மர்கள் பற்பலா யிரரே.
1
97முள்ளரைக் கமலத் தயனுநா ரணனு முதிரொளி மோலிவா சவனும்
ஒள்ளிய சுரரு மந்தரத் துறக்க மொழிந்துபன் னாளிடை விடுத்துண்டு
எள்ளுறு மியக்க மிரண்டையு மடக்கி யிருந்தவ முயலுவ தெல்லாந்
தெள்ளிய பேரூர் வளத்தினைக் காணுஞ் செய்தியைக் குரித்தல திலையே.
2
98புடைநகர்
செல்வம்வேட் டவர்பால் அளித்திடற் குரியதெய்வத மென்னுமா தர்களும்
கல்விவேட் டவர்பா லளித்திடற் குரிய கலையணங் கென்னுமா தர்களும்
வில்வளாய்க் கவினும் பதிவயிற் பல்லோர் விரசின ரென்றவர் தவிசாய்
எல்விரா யொளிரு மலர்பல வணிந்த இலஞ்சியும் பொய்கையுந் தெரிக்கும்.
3
99வேறு
கஞ்ச மீனி னங்க லாவு காமர் பொய்கை யோடைகள்
எஞ்சு றாத ணிந்து தேவர் நாடி ருப்ப தாயினும்
அஞ்சி லோதி யார்ந டைக்க வாவு நெஞ்சி றுத்தலால்
அஞ்சம் யாவு மாங்கு வாழ்தல் அன்றி யந்த ரத்துறா.
4
100ஆவி பொய்கை பண்ணை தோற லர்ந்த முண்ட கங்களுந்
தூவி யன்ன முங்க டுப்ப தொக்கு வேத ரெண்ணிலார்
ஓவி லின்ப மாந டத்தொ ருத்த னைதொ ழப்புகத்
தாவி லாத னங்க ளூர்தி தாம்பு றத்தி ருந்தன.
5
101காம னைக்க றுத்த கால கால னாடு மாநகர்
தாமு மெய்த லாலு றுந்த ருக்கெ னக்கி ளர்ந்தன
மாம யிற்கு லஞ்சு வாக தங்கள் பூவை வண்டுதேன்
நேமி யம்புண் மற்று நீண்ட சோலை தோறி சைப்பன.
6
102வன்னி கூவி ளங்க டுக்கை வாகை பாட லங்கடிக்
கன்னி கார மாத்தி சண்ப கங்கு ராம ராவிளாப்
புன்னை நாகம் வெட்சி நொச்சி பூங்கு ருந்து சந்தனம்
இன்ன வான நந்த னவ்வ னங்க ளீட்ட மெங்குமே.
7
103சாதி மௌளவன் முல்லை மாத விக்கு லங்கள் பந்தர்செய்
பாத வப்பொ தும்ப ருட்ப டர்ந்து சேவ கங்கொளும்
போத கங்கள் வெள்ளி பங்கள் போந்த வென்ற யிர்ப்புற
போத கங்கு டைந்து தும்பி தாது குப்ப போர்க்குமே.
8
104வேறு
கிம்புரிக் கோட்டின கேழ்த்த செங்கண
பைம்பொனின் ஓடைய பான கத்தின
உம்பரும் விழையவே ழுயர்ந்த போதகம்
பம்பிய கூடங்கள் பலவும் பாங்கெலாம்.
9
105விடுகணை பின்செல விசையிற் செல்வன
படுகளத் தொன்னலர் பனிப்பப் பாய்வன
கொடுமயிர்ச் சுவலின குரத்தெ ழுத்தின
வடுவறு பரியின்மந் திரங்க ளெண்ணில.
10
106ஆரடு குறட்டின வயம்பெய் சூட்டின
போரடு திறத்தன புரவி பூண்பன
தாரடு கொடியின சமைந்த வுள்ளின
தேரடுத் துயர்ந்தன சேக்கை எண்ணில. 11
11
107வாளொடு பரிசைகை வயங்கு மீளிகள்
தோளொடு தூணிவிற் றுதைந்த மள்ளர்கள்
நாளொடு வேல்கதை நயக்கும் வீரர்கள்
தாளொடு போர்பயில் சாலை யெண்ணில.
12
108கனைகுரல் வேழமுங் கவனக் கிள்ளையும்
புனைமணி யிரதமும் பொருவி றானையும்
இனையநாற் படையுறுப் பெனைத்து மாக்குறும்
வினைஞர்தஞ் சேரிவெவ் வேறு வாய்ந்தன
13
109வேறு 
கந்தடு கடக்கரி கடாவியமர் கற்குஞ்
சந்தணி புயத்தவர் தழங்குமிசை யானுஞ்
சுந்தர மணிப்படைக டோற்றுமொளி யானுங்
கந்தர முகைத்துடலு மிந்திரர் கடுத்தார்.
14
110தரங்கநிரை யன்றிஃது தாவிவரு கின்ற
துரங்கநிரை யென்னநனி தூண்டுபரி வீரர்
குரங்குளை மணிப்புரவி கொண்டம ருடற்றும்
அரங்கமலி கின்றவள கைக்கிறைவ ரொத்தார்.
15
111சடசட வொலிப்பவுருள் சக்கர மழுந்திப்
புடவிகுழி யக்கடவு போர்ச்சகட மள்ளர்
சுடரிரத மூர்ந்துபல சூரியர்க டம்முள்
அடலமர் குறித்தவரை யையென நிகர்த்தார்
16
112ஓச்சுநெடு வாளெறியி னுய்ந்தெதி ரெறிந்தும்
மீச்சென்மணி வேல்புடை விலக்கியெதி ருய்த்தும்
மேச்செறி வறுத்தெதிர் தொடுத்துமிகல் வெய்யோர்
பூச்செருகி விஞ்சையர் புகழ்ந்திட மலைப்பார்.
17
113அடையல ருளஞ்சுழல வாறுபடை யுஞ்சூழ்
புடைநகர் வளஞ்சிறிது பொற்புற மொழிந்தாம்
உடையவர்க ளும்பரென வுற்றுநல னாரும்
இடைநகர் வளஞ்சிறி தெடுத்தினி யுரைப்பாம்.
18
114இடைநகர்
வேறு
அளிதுன்றிய வுய்யானமு ம்வற்றூடலர் பம்பிக்
குளிர்தங்கிய தடமுங்குளிர் பொய்கைக்கரு கெல்லாம்
புளினங்களுஞ் செய்குன்றமும் புத்தேளிரு மேவும்
ஒளிபில்கிய மணிமேடையு முலப்பில்லன வுளவால்
19
115பஞ்சாடிய வடிகட்கிடை பனிமென்றளிர் தாங்கி
எஞ்சாதெழு முலைகட்கிடை யிணரும்படு தாரு
வஞ்சாதருள் பெறநின்றன வலர்பூந்தட மாடு
மஞ்சார்குழ லியர்நல்கிய மணிவானிழை சுமந்தே.
20
116இழையாலல திளையார்க்கழ கில்லென்றிறு மாந்த
குழையாடிய கொம்பேந்திய கொங்கைக்குல மடவார்
இழையாவணி யிழைதாங்கியு மிளிருற்றவர் நேராப்
பிழையாலுள நாணித்தலை பெரிதுங்குரங் கினவே.
21
117கணைவென்றகண் மடவார்புனல் கலவித்துளை தோறுந்
துணைமெல்லடி படியும்புனல் தோய்ந்தாமென நடையின்
பிணையன்னமு முலைதோய்புனல் பெற்றாமென முலையின்
இணையுன்னிய நேமிக்குரு கினமுங் களிகூறும்.
22
118இயலாலின மெனவோகுழ லிருள்கூர்கன மெனவோ
வியலாநடை பயிறற்கருள் விளையும்வகை குறித்தோ
செயன்மாண்டொளிர் மணிமேடையுஞ் செய்குன்றமும் விரசுங்
கயனீள்விழி யவர்காணிய களிமா மயிலாலும். .
23
119வெயில்பம்பிய பூணார்விளை யாடும்பொழி லிதனுட்
பயில்கின்றனம் அவரின்புறு பண்பேசெயன் முறையென்
றுயிரன்னதொர் பெடையோடளி யொண்கிள்ளைகள் பூவை
குயிலின்னன வமிழ்தத்திசை குயிலுஞ்செவி குளிர.
24
120சுணங்குக்கிணை யாகச்சுட ரழனின்றொளிர் பொன்னை
நுணங்கப்பொடி செயவோச்சுநுண் ணிடையார்கர முசல
மிணங்கத்தலை மற்றொன்றினௌ முலைநேரிள நீரை
உணங்கச்சித றுபுமாதரை யுவகைக்கட னிறுவும்.
25
121வேறு
சந்த ணிந்த பூண்முலை தம்மை நேர்வ தாமென
முந்து றுத்தொ றுப்பபோன் முகத்து முத்த ரும்புறக்
கந்த மாலை சோரவார் கதுப்பு யங்க மாதரார்
பந்த டிப்ப நோக்குவார் பதிந்த நெஞ்ச மீட்கலார்.
26
122பங்க யப்ப ரப்பிடைப் பமரம் வீழ்வ போன்றுலாஞ்
செங்கை யம்ம னைப்பினர்ச் செல்லு மாத ரார்விழி
அங்க வற்றி னூடுலா மாட வர்க ணோர்முறை
கொங்கை தோன்ற வங்கணே குளித்து நிற்கு மோர்முறை.
27
123செழும ணிக்கு தம்பைகள் செவியி னூச லாடுற
முழும டற்க முகிடை மூட்டி விட்ட வூசலைத்
தழுவி யாடு மாதரார் தம்மை யண்மி நோக்குறின்
வழுவி லார்கள் சிந்தையு மாலி னூச லாடுமே.
28
124கண்ணி னீரு றைத்துகக் கலாய்த்தி ரங்கு மந்நலார்
வண்ண வாடை கொண்கனார் வலிந்து வாங்க மாமணிச்
சுண்ணம் விட்டெ றிந்துநீள் சுடர விப்ப வப்பொடி
நண்ணொ ளிக ஞற்றலு நாணி யோதி தாழ்த்துவார்.
29
125கழற்று றாத காதலர் கலன்றொ றுந்த மதுரு
நிழற்ற நோக்கி மாற்றவர் நிரந்த ரித்து ளாரென
வழற்று ளத்தி னார்களை யவர்க லன்றொ றுந்தம
துழற்று ருச்சு வட்டினை யுணர்த்தி நக்க ணைப்பரால்.
30
126மாழை நோக்க ணங்கனார் மகிழ்நர் தம்மொ டாடிய
தாழை வாளு டையினான் றனாது நூற்சு வைத்திறம்
பூழை வைத்து வாண்முகம் பொற்ப நோக்கிக் கூட்டினுட்
கூழை நாக்கி ளிசொலக் கொம்பிற் பூவை கற்குமே.
31
127சாந்த மான்ம தங்களுந் தபனி யப்பொ டிகளுங்
காந்து பன்ம ணிகளுங் கமழ்ந்த தொங்க லீட்டமும்
பூந்து ணர்த்தி ரள்களும் பொற்ப மல்கு காட்சியான்
மாந்தர் வைகு மண்கொலென்று வானு ளார யிர்ப்பரே.
32
128இலங்கெ ழிற்று றக்கமு மிடைந கரெ னப்படத்
துலங்கெ ழிலி டைநகர்த் தோற்ற மீத றைந்தன
மலங்க னீர்க்கி டங்கு சூழ்ந்த ரற்ற நொச்சி யோங்கிய
நலங்கி ளர்ந்த வுண்ணகர் நன்மை தன்னங் கூறுவாம்.
33
129உண்ணகர்
வேறு
அவுணர் பேய்க்கண மவமர ணத்தவ ராரிரு ளிவையென்றுஞ்
சிவண வோர்புறத் திளிவரு நேமியஞ் சிலம்படுத் ததுநீங்கிப்
புவனம் போற்றுற நின்றதே போன்மதில் புறக்கட லிருண்ஞாலம்
துவர நீத்தத னுடங்கடுத் திருந்ததே சூழ்ந்ததண் கிடங்கம்மா.
34
130அடங்க லாருயிர் குடிப்பன தானையு மாடலம் பரிமாவுங்
கடங்க ளூற்றிய குஞ்சரத் திரள்களுங் கவின்றதேர் களுமல்ல
கிடங்கி னூடுலா மிடங்கருந் தாமரைக் கேழ்த்தமுள் ளரைத்தாளு
மடங்கு றாதமர் பற்பல புரிந்தடு மதிற்பொறிகளு மாதோ.
35
131பெருவ னப்பினாற் றுழனியாற் சுவையினாற் பெருகிய மணத்தாலெவ்
வுருவு மின்புறு மூற்றினான் மலர்க்கரங் கோடரித் தடங்கண்ணார்
பொருவ வைவகைப் பொறிகட்கு நுகர்ச்சியாய்ப் பூவைய ருளமேபோன்
மருவு வஞ்சமுங் கொடுமையு மாழமும் வரம்புறக் காட்டாதால்.
36
132போதி யம்பலத் திருநட மாலொடு போந்துகண் டிணர்த்தில்லைச்
சோதி யம்பலத் தாடலு மிருந்தவா தொழுதுகண் ணுறக்காண்பா
னோதி யம்புவி தாங்கினோ னுடல்வளைத் துயர்த்திய சிரமேபோன்
றாதி யம்புரி மதின்மிசைக் கோபுர மைதுவீற் றிருந்தன்றே.
37
133ஓங்குமா டத்தி னுயர்வற வுயர்ந்தகோ புரத்தின்மே னிலமெல்லாம்
தூங்கு வீங்கிருட் பிழம்புவாய் மடுத்துணுஞ் சுடர்மணி விளக்கங்கள்
ஆங்க வான்மிசை யுயர்த்திய சேடனா ரரித்தடந் தலைச்சூட்டின்
நீங்கு றாதொளி கஞற்றிய மாணிக்க நிரையென விறைகொள்ளும்.
38
134ஒளிநி லாவிய மதிள்மிசை யுயர்த்திய வொண்டுகிற் கொடியெல்லாம்
வளியி னாட்டயர் வனநெடுந் துறக்கமார் வளத்தினை யெதிர்நோக்கித்
தெளிநி லாவிய விந்நகர் வளத்தினைச் சிறிதுமொவ் வாதென்றே
குளிரு நீர்ப்புவி தெளிதர முடித்தலை குலைத்துநிற் பனபோன்ற.
39
135நாக வைப்பினைத் தலைப்படும் அகழியும் நாமவிஞ் சியுஞ்சொற்றாம்
தேக மற்றவன் கணைகளி னலிபவர் திருவெலா முறவாங்கி
யேக மற்றவெண் ணிரண்டுறுப் பினுளமு திருக்கையோர்ந் தினிதூட்டிப்
போக வைப்பெனப் புணர்பவர் சேரியின் பொற்பினி யுரைப்பாமால்.
40
136பரத்தையர்வீதி
வேறு
அடுத்தெதிர் நோக்கினா ரறவ ராயினும்
கடுத்தலைக் கொண்டெனக் காம மீக்கொள
வெடுத்தபித் திகைதொறு மிலேகித் திட்டனர்
வடுத்தபு கலைச்சுவை வயங்கச் சித்திரம்.
41
137தெள்ளிய கலைஞருஞ் சிறப்பென் றுட்கொள
வுள்ளுரு கமளியி னுஞற்று மொண்பொருள்
கிள்ளையும் பூவையுங் கிளந்து வாதுசெய்
பள்ளியு மைம்பொறி பறிக்கு மென்பவே.
42
138சுண்ணமும் நறுமணத் தொங்க லீட்டமுங்
கண்ணிய துகில்களுங் கலனும் வார்மது
நண்ணிய தண்டுநற் கலவைச் செப்புங்கொண்
டண்ணலம் வேதிகை யாவி மாய்க்குமே.
43
139முழாவொலி குழலொலி முறைசெ யாடலும்
எழாலிசை குரலிசை யெழுப்பு பாடலுந்
தழான்மனை யிரதியுந் தானுங் காமவேள் 
விழாவயர் களமென விளங்கும் வைகலும்.
44
140ஆவிவந் தஃதென தாவி வந்ததென்
றோவிய மனையவ ரொல்கிக் கொண்டுபுக்
கேவியல் விழிகளா லிளக்கி நெஞ்சகம் 
பூவிய லணைமிசைப் போக மூட்டுவார்.
45
141போதுக ளாடிய பொம்ம லோதியர்
சூதுக ளாடியுஞ் சுவைத்த காம நூல்
வாதுக ளாடியு மருவி யாடியும்
மாதுக ளாடவர் வாகை தீர்ப்பரால்.
46
142மனைவியை வெறுத்து மைந்தர் வளநில மனைத்து நல்கி
நினைவொடு வாக்குக் காய நித்தலுந் தம்பா லாக்கத்
தனைநிக ரில்லா வின்பந் தருதலாற் கணிகை மாதர்
வினைநிகர் புதல்வர்த் தாழ்த்தி வீடருள் குரவர் போன்றார்.
47
143உறுப்பினுட் குறைவு மின்றி யுரிமையொன் றேற்ற மாகத்
துறுத்தநெஞ் சுடைய வில்லிற் றுணைமுலை மாதர் தம்மை
வெறுத்தெறுழ் மைந்த ரெல்லாம் விழைதகு பால ரென்றால்
கறுத்தகட் கணிகை மாதர் காரிகை யுரைக்கற் பாற்றோ.
48
144காமவேள் கலையி னானுங் காரிகைத் திறத்தி னானும்
தூமமார் குழலி னார்க்குத் தோற்றுவிண் ணொளித்தா ரெல்லாம்
நாமளா மனத்த ராகி நானிலத் தின்று காறும்
வாமமார் மலர்மென் பாதம் வைத்தில ருருவுந் தோற்றார். 49
49
145ஒருவர்வா யடுத்த தம்ப லொளொர் பவள வாயின்
மருவிவா னமுதாய் மற்று மடுத்தவர் வாயிற் புக்குப்
பெருமகிழ் வுறுத்த லாலே பிறங்கிய வரைவின் மாதர்
பொருவின்மந் திரத்தி னாக்கும் புனிதவெந் தழலே யொத்தார்.
50
146செவ்வணிச் சேடி மாரும் வெள்ளணிச் சேடி மாரும்
கௌளவையம் பறைகளார்ப்பக் கடைத்தலை முற்ற வைகும்
வெவ்விழி மாத ரின்பம் விலைசெயுஞ் சேரி யீதால்
எவ்வமில் பொருள்கள் விற்கு மெழில்கொளா வணங்கி ளப்பாம். 51
51
147கடைவீதி
வேறு
பாட்டளி கெண்டிச் சுலவும் பன்மலர்த் தொங்கல்க ணாற்றிச்
சேட்டொளி வச்சிரச் சட்டந் திண்பவ ளத்திரள் காலில்
பூட்டியு யர்த்தி நிறுவிப் பூகமும் வாழையும் யாத்துத்
தோட்டலர் சிந்தி மெழுகித் தூமம் பயின்ற கடைகள்.
52
148நித்திலக் கோவைமா ணிக்க நெடுந்தொடை நீலத் தொடையல்
வித்துரு மத்தின் பிணையல் வில்லுமிழ் கோமே தகத்தின்
கொத்தும ரகத மாலை கோப்பமை புட்ப ராகங்கள்
வைத்தவ யிரமு மற்றும் வானவி னாணமுன் யாத்தார்.
53
149இருவினை யாலிருண் மூழ்கும் எண்ணி லுயிரும் பெருமான்
கருணையின் நல்கும் உடலிற் கதித்துவெவ் வேறுகன் மங்கண்
மருவிவ ளர்ப்பன போல வணிகர்கள் பொற்குவை கொண்டு
பொருள்கள் வெவேறு தமக்குப் பொருந்துவ வீட்டுவர் நாளும்.
54
150வரையிற் பொருள்பெரி தென்கோ வனத்திற் பொருள்பெரி தென்கோ
குரைபுனற் பூம்பணை மாட்டுக் கொண்ட பொருள்பெரி தென்கோ
திரைதவழ் வேலைத் துறையிற் றெவ்வும் பொருள்பெரி தென்கோ
நிரைநிரை யாக வளங்க ணிறுத்த நியமத்தின் மாதோ.
55
151தழைத்த கருமக் கியையத் தனுகர ணாதிய ளிக்கும்
குழைத்த கடுக்கைச் சடிலக் குழகன் றிருவருண் மான
இழைத்த குருமணி மாடத் தீண்டிய வெவ்வெப் பொருளும்
மழைத்தடந் தோளின் வணிகர் வருவிலைக் கேற்ப அளப்பார்.
56
152முன்னொன் றறைந்துபின் னொன்றா மொழியு மதங்கள்போ லாது
பின்னர்க் கிளப்பது முன்னர்ப் பேசுபொ ருட்குமா றின்றி
மன்னுறு சைவசித் தாந்த வாய்மை நிகர்ப்பப்பின் வேறு
சொன்னிகழ்த் தாமை விலையைத் துணிந்தறுப் பார்துலைக் கோலார்.
57
153செந்தமிழ் நாட்டுறை வோருஞ் சேர்ந்த கொடுந்தமிழ் நாட்டின்
வந்திடு பன்னிரு வோரு மற்றைய தேயத்துப் பாடை
தந்திடு மீரொன் பதின்மர் தாமுந் தலைமயக் குற்றாங்
கெந்தவு லகிது வென்ன யாரையு மையத் துறுத்தும்.
58
154வாரணம் விற்குந ரோர்பால் வாம்பரி விற்குந ரோர்பால்
தேரணி விற்குந ரோர்பால் செறிபடை விற்குந ரோர்பால்
தாரணி விற்குந ரோர்பால் சந்தனம் விற்குந ரோர்பால்
தோரண மல்கு நியமச் சுந்தரம் யார்சொல வல்லார்.
59
155பிண்டியு நோலைத் திரளும் பிட்டு மவலும் சுவைகண்
மண்டு களிநெய் மிதந்த வருக்கமும் பாகும் விராவிக்
கொண்ட வறையல் பலவுங் கொண்முத லான புழுக்குங்
கண்டிடு முன்மண நாசி கலாய்ப்புன னாவிடை யூறும்.
60
156வருக்கைச் சுளைமாங் கனிகள் வாழைப் பழமிவை முற்றும்
முருக்கொ ளிரோட்டத் தமுதின் மொய்ச்சுவை தோற்றவல் லாவென்
றொருக்கு விலைசெயு மாத ரொண்பொரு ளோடுரு நோக்கிச்
செருக்கிய மைந்த ருயிருந் தெவ்வுவர் பின்விடல் வல்லார்.
61
157பொன்னணி வெள்ளி யணிகள் போற்றவு லோகக் கலன்கள்
என்னவு மில்லையென் னாமே யீந்திடு மாவணஞ் சொற்றாம்
மன்னிய செல்வப் பெருக்கால் வானவர் வைகுபொன் னாடு
வெந்நிட வென்று விளங்கும் வீதியின் வண்ணம் விரிப்பாம்.
62
158மற்றைய வீதிகள்
வேறு
பனவர் மன்னவர் வணிகர்சூத் திரரிவர் பயின்றிடு மணிவீதி
அனகன் மந்திரத் தணிமதிற் புறத்தன வவற்றய லனநான்கென்
றினிது சொற்றசா திகடம்மு ளுயர்ந்தவுங் கலந்தீன்ற
புனித மில்லவர் தத்தம தொழுக்கொடு பொருந்திவாழ் மறுகன்றே.
63
159தென்ற லூடுவந் தசைதரு பந்தருஞ் செறிந்தபந் தரினுள்ளால்
துன்று மாமணி வேதிகை யொழுக்கமுஞ் சுடர்ந்தவே திகையெங்கும்
ஒன்று பூரண கும்பமும் வயின்வயி னுயர்த்திய கொடிக்காடும்
நின்ற வார்கொடி யருகெலாந் தோரண நிரைகளுந் தெருத்தோறும்.
64
160வழுவை வாம்பரி மணிநெடுந் தேர்சனம் வழங்கலி னெடுவீதி
புழுதி யாடுவ வொருமுறை யொருமுறை பொருகரி பரிதேர்பொன்
முழுது மாடவ ரளித்தளித் தொழுக்கிய முதுக்குறைந் தோர்செங்கை
யொழுகு தீம்புன லத்துக ளவிப்பன வொருதினம் போனாளும்.
65
161வேறு.
நச்சுறழ் விழியிற் றீட்டின ருகுத்த நலத்தகு மஞ்சனக் குழம்பும்
வெச்செனப் புலந்து சிதறிய கலனும் விராவிய வீதியி னவைதாம்
எச்சிலென் றறிந்தோ பிறர்மனை யவர்பா லிணங்கிய வவற்றையுந் தொடுதற்
கச்சம துற்றோ வறிந்தில மெவரு மடிக்கழல் தொடுத்தலால் வழங்கார்.
66
162செதுமகப் பயத்த லொருமகப் பயத்த றிலகவா ணுதலியர்ப் பயத்தல்
எதுவுமின் றாக விருத்தலென் றறிந்தோ ரியம்புநான் மலடுமங் கின்றிப்
புதுவதி னியற்ற வணிகல னணிந்து பூவையர் குதுகலந் தழுவ
வதுவைக ளயரு மதுரமங் கலமே வைகலும் வளமனை தோறும்.
67
163வருந்திய வேனில் வருபுனற் கெதிரு மள்ளரின் மனமகிந் தடுத்த
விருந்தெதிர் கொண்டு மலர்முகத் தினிமை விராவிய குளிர்மொழி கொடுத்துத்
திருந்தறு சுவையி னால்வகை யுண்டி தேக்கெறி தரநனி யூட்டிப்
பொருந்திய திருவிற் கியைவன பிறவும் புகன்றளிக் குநரவ ணெவரும்
68
164உரம்பெறு பிரம சரிவனத் துறைவோ ருலகனைத் தையுமற நீத்தோர்
பரம்பரன் றெனாது புலத்தவர் விருந்து பசையுடை யொக்கன்மன் றுறந்தோர்
அரம்புசெ யிலம்பாட் டினரிறந் தாரென் றையிரு வரையுநன் றோம்பி
வரம்பெறு தமைப்பி னோம்புந ரல்லா தவர்மனை யறத்தவ ணிலரே.
69
165பஃறிறத் தானு மழிதரு பொருளைப் பன்முறை யிரந்துகை யேற்றுச்
சிஃறிறத் தானு மழிதரா வுடலுந் திப்பிய கதிகளுஞ் செறிக்கும்
நஃறினத் தினரா லிவரிவர் போல நமக்குரி யாரெவ ரென்னா
விஃறிவள் பூணா ரிரப்பவர்க் கெனைத்தும் வீசலே விருதென வுடையார்.
70
166தங்குல தெய்வ மல்லது தேவ சாதியொன் றையும்பணிந் தறியார்
சிங்குத லறியா வன்பினாற் கணவன் சேவடி தொழுதெழு திறத்தார்
இங்குறை பவரென் றிறைஞ்சுதல் போல விரவியு மதியுந்தாழ்ந் திறப்பக்
கொங்குறை குழலார் பயிலுமே னிலையுங் கூடகோ புரமும்விண் ணிவந்த.
71
167குங்குமப் பனிநீர் சிவிறியின் வாங்கிக் குலவுத்தோ ளாடவர் குலமும்
மங்கையர் குலமும் பனித்தெதி ராட வயங்குமப் புனன்மணி வரன்றித்
துங்கமே னிலையின் மேடைநின் றிழிவ சுரர்தொழு மேருமால் வரைநின்
றிங்குலி கத்தின் விராய்மணி சிதறி யிழிதரு மருவிபோன் றனவே.
72
168வேறு
பளிக்கு மேனிலத் திற்பயின் மாதரார்
வெளிக்கண் நின்றவர் போன்று விளங்கலால்
களிக்கும் வானர மங்கையர் காண்கெனத்
தெளிக்க லுற்றன ராற்சில ரைச்சிலர்.
74
169தலைவர் தோள்புணர் தையலர் வாண்முக
மலரி னொள்ளொளி வௌளவுதற் கன்றுகொல்
கலைம திக்கதிர் காலத ரூடுபோய்
உலவி யல்லதப் பாலொழி வில்லதே.
74
170கற்பி னார்மழை பெய்வது காண்பவென்
றற்பி னாலவர் பாலண்மு சாதகம்
பொற்ப வோதிப் புயல்கண்டு போக்கொரீஇப்
பற்பல் காலமும் பாடுவ மாடெலாம்.
75
171துணைச்ச கோரஞ் சுதைகொளத் தன்னிடை
அணைத்தெஞ் சாம லவிர்மதிக் கோர்பெயர்
இணைக்க ணானன மென்றனர் விண்ணிற்போய்ப்
பணைத்த திங்களைப் பாற்றுதற் காய்ந்துளார்.
76
172செண்ண வஞ்சிலம் போசையுந் தீஞ்சொலால்
வண்ண மேகலை வாய்விடு மோசையும்
பண்ணை வண்டின் படர்குர லோசையும்
அண்ணன் மாடம் அறாவிர வத்துமே.
77
173பிழிம கிழ்ந்திடு பெய்வளைத் தோளியர்
கழிசி றப்புறக் கவற்றலிற் காமவேள்
ஒழிவு செய்தில னொண்கணை யேவிய
பழியி ராப்பக லுஞ்செய நிற்குமே.
78
174புகரி லாவற மும்பொரு ளாகமும்
பகலெ லாம்பல வாற்றினு மீட்டுவார்
மகர வார்குழை மைந்தரி ராவெலாம்
பகருங் காமப் பயன்பெரி தீட்டுவார்.
79
175ஆது லர்க்கும் அறுசம யத்தர்க்கும்
ஓது வார்க்கும் உணவு பெருக்கிய
ஏதி லாவன்ன சாலையு மேனைய
தீதில் சாலையுஞ் செப்பவொண் ணாதரோ.
80
176பாவ லர்பலர் சூழ்தரப் பண்பொடு
நாவ லர்க ணயந்துநன் னூறெரிந்து
ஓவி லின்ப வுததி படிதருந் 
தாவி லாக்கழ கந்தலை தோறுமே.
81
177ஊழ்விச் சாவன வோட மறையுளி
சூழ்விச் சைகலை வேதியர் துன்னுபு
வாழ்விச் சாதரர் வாழ்த்துமுத் தீவளர்
வேழ்விச் சாலை விளங்கு மிடந்தொறும்.
82
178சரியை யோரிரண் டுந்தவி ராதவர்
கிரியை யோரிரண் டுங்கெழு முற்றவர்
உரிய யோக மிரண்டுமு ஞற்றுநர்
மரிய தூய மடங்கள னந்தமே.
83
179மூன்று பாழுமு றையினி கழ்ந்தறத்
தோன்று மேலைசு கப்பெரும் பாழிடை
ஏன்ற வாழ்வினி தென்ன விருப்பவர்
ஆன்ற மாமட மும்பல வாங்கரோ.
84
180விண்ணு ளாரும் விளம்பவல் லேமெனும்
வண்ண வீதி வளஞ்சொலின் முற்றுமோ
எண்ணில் வீதியுஞ் சூழ்ந்திமை யோர்தொழும்
அண்ணல் கோயி லணிசில கூறுவாம்.
85
181திருக்கோயில்
வேறு
வேத நாடருந் தனிப்பொருள் விளங்குமிந் நகர்மேல்
ஏத மாம்வகை யேகன்மின் என்றிமை யாரைக்
காத லாற்புடை விலக்குவ போன்றுகற் கதிர்க்கும்
மாதர் வாண்மதில் வானுறப் பலநிவந் தனவால்
86
182மின்னு மாமதி விளங்கிய விமலர்தூ வியின்பாற்
பொன்னி னாலிர சதத்தினாற் புரையறு மணியான்
மன்னு மாடங்கள் தயங்குவ வயங்குமே ருவின்பால்
துன்னு நாலிரு குலகிரி துலங்குவ போன்ற.
87
183ஏக நாயகற் கினிதுறத் திருவமு தமைக்கும்
மேக மேற்றவழ் மடைப்பள்ளி வீங்குகுய்ப் புகையும்
யாக சாலையிற் புகையுமீண் டலினிரு நிலத்தோர்
மாகர் போலிமை யாதவ ராகலர் மாதோ.
88
184அரச சீயத்தின் குரலெழுந் திசையணு காமை
விரசு வேழங்கள் நீளிடை விலகியாங் கிறைவர்ப்
பரசு வார்வினை சேயிடை முழுவதும் பாற
முரச மார்ப்பன மூவிரு காலமு முகிலின்.
89
185விண்ணின் நின்றொளி ருடுவெலாம் வினைச்சமம் பிறந்து
மண்ணி மும்மலச் சேற்றினை மலரடித் துணைக்கீழ்
நண்ண வெம்பிரான் றிருமுன்னர் நண்ணிய தென்ன
எண்ணில் பன்மணி விளக்கிடை யறாதிமைப் பனவே.
90
186தரும மாற்றுநர்க் கல்லது சந்நிதிச் சார்விங்
கருமை யாமென வனைவரு மறிந்தன ருய்யத்
தரும மேயுரு வாகிய தனிவிடை யுயர்த்த
உருவ வார்கொடி திருமுன்னர் விசும்பறுத் தோங்கும்.
91
187உருவம் யாதெடுப் பினுமந்த வுருவினை யிருவர்
துருவ யாவது மறிகலான் றொழும்பிடைப் படுத்தல்
பொருள தாமெனப் புவியுளோர் தெளிந்துயச் சித்த
தருவி டாதிறை முடிமிசை மலர்பல சாத்தும்.
92
188பவளத் தூண்மிசைப் பசுமணி யுத்திரத் தொளிகள்
திவளப் பாய்த்திய வச்சிரப் பலகையிற் செறித்துத்
துவளத் தூக்கிய நவமணி மாலைகள் துலங்குந்
தவளத் தேசினற் றபனியக் கோயிலொப் பிலதே.
93
189தெனாது திக்கின னரசறத் தேவர்க டேவன்
தனாது விண்ணகந் தழைதரத் தரைமகிழ் சிறப்ப
மனாதி மூன்றினு மாதிசை வர்கள்வழி படமற்
றனாதி சைவர்வீற் றிருந்தன ரருட்கொடை வழங்கி.
94
190இனிது தேவர்கள் யாரையு முறுப்பிடை யடக்கிப்
புனிதம் யாவையுந் தருபொரு ளைந்தையும் பூக்கும்
முனிவி லானினங் கிடந்தருள் முழுப்பயிர் தழைக்கும்
மனிதர் தேவர்சூழ் பட்டியின் பெருமையார் வகுப்பார்.
95
191விமல நாயகன் விண்ணவர் நாயகன் விடைத்த
சமலர் காணருந் தத்துவ நாயகன் நடஞ்செய்
தமரு நாயக னருளினா லாங்கவன் பேரூர்க்
குமரி மான்மியங் கூறுவல் வினைப்பகை குமைப்பேன்.
96


திருநகரப்படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் 191 
================= 

3. நைமிசாரண்யப் படலம் (192-209)

192கடலமிழ் தெடுத்து மாந்துங் கடவுளர் குழாங்கள் நாளும்
உடனுறைந் தவியின் பாக முண்பது போலும் வையத்
திடர்தபத் தவங்க ளாற்றி யிருடிய ரின்னல் வாழ்க்கை
நடலைவே ரகழா நிற்கு நைமிசக் கான மன்றே.
1
193முறுகிய வன்பு பொங்க முறைமுறை வளர்க்கும் வேள்வி
நறுமணப் புகைகள் பொங்கி நாகர்வா ழுலகிற் கற்பத்
துறுசிறைச் சுரும்ப ரோப்பி யுலாவுதல் அறியா ரெல்லாம்
மறுவறு கற்ப கத்து மலரின்வண் டுறாதென் பாரால்
2
194பிழைதபு தேவர்க் கெல்லாம் பெரும்பசி தவிர்த்த லானும்
மழைவளஞ் சுரந்து மண்ணின் மன்னிய வுயிர்கட் கெல்லாம்
தழைபசி தவிர்த்த லானுஞ் சகமொரு மூன்றுங் காக்கும்
விழைதரு செவிலித் தாயின் மிளிர்வ தாலனைய கானம்.
3
195செருத்தலா னார்த்த யூபத் திரளினை நோக்கி யந்தோ
வருத்துவ திவற்றை விண்ணோர் வன்பசி தவிர்த்தற் கன்றே
உருத்தகு மனைய தேவர்க் கூட்டுதும் யாமு மென்னாக்
கருத்துற வடிசி லூட்டக் கற்றது காமதேனு.
4
196பறவைகள் யாத்த யூபம் பசுத்தகர் யாத்த யூபம்
உறமணிக் கமடம் யாத்த யூபமும் உம்ப ரூரும்
பறவையும் விலங்கு நீர்வாழ் சாதியும் பார்த்துப் பார்த்திவ்
வறவினை கிடைத்த தின்றே நமக்கென வகத்துட் கொள்ளும்.
5
197பராய்ப்பணி முனிவ ரானும் பண்ணவர் பயிற லானும்
இராப்பக லிறப்பத் தேவர் கலன்கதி ரெறித்த லானும்
விராய்புகை தவழ வண்டு விலக்கிய தருக்க ளானும்
உராய்ப்பொழி பசுந்தேன் கற்பத் துலகொடு பொருமக் காடு.
6
198திரைதவழ் மணிப்பூம் பொய்கைத் தீர்த்தங்க ளணிந்து பொன்னம்
வரைசிலை யாக வாங்கி மதிலொரு மூன்றும் வென்ற
அரையனுக் கிருக்கை யாகி யருந்தவர் கருத்து முற்ற
விரையநல் கிடுமக் கானப் பெருமையார் விளம்ப வல்லார்.
7
199உவாவள ரனைய கானத் துறுகலி யுகத்தை யஞ்சித்
துவாபர யுகவந் தத்திற் றொக்கனர் தவங்க ளாற்றும்
அவாவறு வசிட்டர் வச்ச ரகத்தியர் வாம தேவர்
தவாதநல் லொழுக்கஞ் சான்ற சவுனக ராதி யானோர்.
8
200பரவிய ஆண்டு நூற்றுப் பத்துற முடிவு செய்யும்
பிரமசத் திரயா கத்தைப்பேணிநர் வளர்க்க லுற்றார்
கரவறு மனைய யாகங் காணிய வாங்காங் குள்ள
வரமுறு முனிவர் தாமும் வந்தனர் தொக்கா ரன்றே.
9
201வேதங்க ளனைத்துந் தேர்ந்த வியாதமா முனிவன் பாங்கர்க்
கோதறு புராண மெல்லாங் குறைவற வுணர்ந்து முக்கண்
நாதனை யுளத்தி னாட்டி நாவினைந் தெழுத்துந் தீட்டும்
சூதமா முனியு மந்தத் தூத்தவக் கானம் புக்கான்.
10
202வேறு
புக்க சூதனை யிருந்தமா தவத்தோர் பொங்கு காதலி னெதிர்கொடு வணங்கித்
தக்க வாதனத் திருத்தினர் பூசை சால வாற்றினர் பழிச்சினர் மொழிவார்
மிக்க மாதவம் புரிந்தன மடிகேள் விளைத்த மாதவப் பயனதாய் வந்து
கைக்க ணாமல கக்கனி போலக் காட்சி தந்தனை கருணையா லெமக்கு.
11
203கருவி மாமழை யெழுந்துநீர் பொழியக் கலதி வேனிலி னுருப்பமங் குளதோ
பருதி நாயக னெழுந்தொளி கஞற்றப் பாயி ருட்படா மறாமையு முளதோ
பொருவில் வானமிழ் தெய்திடச் சாதல் போவ தல்லது புணர்வது முளதோ
மருவி நீதருங் காட்சியாற் கேள்வி வறுமை நீங்குறா திருப்பது முளதோ
12
204உரைத்த வொன்பதிற் றிருபுராணத்துள் உலப்பில் சீர்ப்பிர மாண்டத்திற் சிறப்ப
விரித்தி டுங்கெள மாரசங் கிதையில் விளக்க மாண்டநற் குமாரகண் டத்தில்
நிரைத்தி டுஞ்சிவ தலங்களின் மேலா நிகழ்த்து மாதிமா புரத்தின் மான்மியத்தைத்
தெரித்தல் செய்தனை முந்தொரு ஞான்று செம்ம லேதெரிந் திட்டன மேனும்.
13
205காதன் மங்கையர்ப் புணர்தொறும் புணர்ந்த காமு கர்க்குளம் அமைதரா விழைவங்
காத றிண்ணமற் றதுவெனப் பேரூ ரமல நாயகன் காதைகேள் வியினெம்
பேதை நெஞ்சக மமைந்தில வதனாற் பெரும வின்னுநீ பேசுதல் வேண்டும்
ஏத மற்றடி யேங்கதி யடைய வெனவி ரந்தடி தொழுதனர் மீட்டும்.
14
206முனிவர் தம்முளப் பரிவினை நோக்கி முகம லர்ந்தருள் சூதமா முனிவன்
இனிது கூறுவன் கயிலைவீற் றிருந்த வெம்பி ரான்சயி லாதியைத் தெளித்தான்
புனித நந்திவேற் குமரனுக் குரைப்பப் புலவு வேலவ னாரதற் களித்தான்
துனிவி லன்னதை வியாதமா முனிவன் சுரந்த பேரரு ளாலெனக் களித்தான்.
15
207தெள்ள வின்னமு தாகிய மேலைச் சிதம்ப ரேசர்த மான்மிய மிதனைக்
கள்ள வைம்பொறி கடந்தவர்க் கன்றிக் கரிசு ளார்க்குறு பொருண்முதல் கருதி
விள்ளின் விண்டவ ரோடுகேட் டவரும் வெய்ய தீக்குழி யிரவியின் வழக்கம் 
உள்ள காலமு மழுந்திமிக் கின்ன லுழப்பர் தீயருக் குரைப்பது தகாதால்.
16
208நீவி ரொள்ளறி வெனுமதம் வீறி நீடு முன்வினை நிகளங்கள் பரிய
ஓவில் வன்மல வெளின்முதல் முருக்கி யுடற்று மாயையுங் கருமமு மென்னும்
தாவில் பாகொடு தோட்டிகை விலக்கித் தயங்கு பேரருட் காட்டினை யடுத்தீர்
மூவி லிக்கதைக் கவளம்வாய் மடுத்தன் முறைமையா மெனச்சொலத் தொடங் கினனால்.
17
209ஆய காலையி லருந்தவ முனிவ ரடிக ணந்திபா லரித்தலைச் சுடர்வேல்
மேய பாணியன் பெற்றது மதனி வீணை மாமுனிக் களித்ததும் விளங்க
ஏயு மாறுமுன் னருளுக வென்ன விலங்கி ருந்துயர் வாழ்க்கைவல் வினைக்குச்
சேய னாகிய வியாதனைத் தொழுது தெரிக்க லுற்றனன் சூதமா முனிவன்.
18


நைமிசப் படலம் முற்றிற்று
ஆகத்திருவிருத்தம் - 209 
----- 

4. புராண வரலாற்றுப் படலம் (210-261)

210திங்கட் கொழுந்து தவழ்முடியிற் சினவா ளரவுந் திரைகொழிக்கும்
கங்கைப் புனலு மணிந்துமத கரியு மரியுங் கதப்புலியும்
அங்கத் துறுத்த வடையாளத் தவிருந் தவள நிறம்வாய்ந்து
துங்கச் சிவனை யவனுருவாய்ச் சுமக்கும் பெருமைத் துயர்கயிலை
1
211பொற்கோட் டிமய மகட்பயந்து புனல்வார்த் தமலற் களித்ததுவு
அற்கா தழியப் புரமூன்று மவிர்பொற் குவட்டு மேருவரை
சொற்கார் முகமா யிருந்ததுவுஞ் சுரர்மா முனிவர் தொழுதேத்தி
நற்கா மியங்கள் பெறக்கயிலை நவிர மிடமா னமைகண்டே.
2
212திரையுந் தரங்கக் கடலேழுந் தேங்கி யுயருங் கடைநாளின்
விரைய வண்ட முகட்டளவும் வீறி வளருங் கயிலாய
வரையை யுளத்தின் மதித்திறைஞ்சும் வரத்தா லன்றே வாமனனார்
புரையி னெடிய வுருவாகிப் புவன மளந்து தருக்கியதே.
3
213பறப்பைக் கொடியோ ரிருவோரும் பகைப்பக் கடைநாள் வெள்ளத்தின்
இறப்பக் கனலம் பிழம்பாகி யெழுந்து வளர்தன் முதல்வன்போல்
சிறப்பக் கடைநாள் வருந்தோறுந் தெண்ணீர்ப் பரப்பின் மிசைத்தோற்றும்
நறப்பைந் தருசூழ் கைலைவரை நலக்கும் பெருமை நவில்வாரார்.
4
214குயிலைப் பழித்த தீங்கிளவிக் குமரி யிடத்தின் வீற்றிருப்ப
வெயிலைப் பொடித்த நகைப்படையாற் கென்று மிடமா யிருப்பதிந்தக்
கயிலைப் பொருப்பென் றவனேயாங் கந்தற் கென்றுங் கிழமையுறச்
சயிலத் திரள்க ளிடமாகத் தலைமை படைத்த தனையவரை.
5
215அலையும் புனலு மலருமுறு மவரோ மெலியர் பகைதுமிக்குஞ்
சிலையுஞ் சிலையாச் சிலைவிடங்கொ டேவன் வலிய னெனக்கருதா
துலையும் புவன மென்னேயென் றுன்னி நகைத்த நகையெனலாம்
நிலையுங் கயிலை வரைகிளைத்து நிமிருங் கிரணத் தொளியினையே.
6
216தூய முனிவன் விழிக்கிளைத்தாஞ் சுவைப்பாற் கடலி னிடைமுளைத்தாம்
மேய விறைவன் முடிக்கங்கை வெள்ளத் துடனாய்ப் பயில்கின்றாம் 
ஆய வெமக்கு நிகராரென் றகஞ்செய் மதியி னொளிமழுங்கப்
பாய கிரண மிருள்சீப்பப் பகலு மிரவு மவணிலையே.
7
217காம னுடலம் பொடிபடுத்த கனற்க ணிறைவன் றிருவருளின்
ஏம முடைய ராய்ப்பழகி யிருப்பா ரன்றி யேனையோர்
தாம வொளிகால் கயிலைவரைச் சார லடுப்பி னவர்விழிக்கு
நாம விருளே பகல்கூகை நல்ல விழியி னிருளேபோல்.
8
218அயிரா வணமுந் தவளமே யடல்வெள் ளேறுந் தவளமே
பயில்பா ரிடமு மடியாரும் பரிக்குஞ் சாந்துந் தவளமெ
செயிர்தீர்த் தாங்குப் பயனருளுந் தீர்த்த மனைத்துந் தவளமே
வெயிலார் மணியின் கயிலாயம் வெள்ளென் றிருந்த பரிசானே.
9
219வேறு
மும்மதக் களிற்றின முழங்கு மால்வரை
செம்மணி தாழ்வரைத் தேத்தெ லாமொளி
விம்முற நாப்பணே விளங்கு காட்சிமற்
றம்மவெண் பாற்கலன் கனலிட் டன்னதே.
10
220தழற்றலை யிரசதச் சானி றைத்தபால்
அழற்றலின் வழிந்தென வருவி தூங்குவ
சுழற்றிய கனறபத் தோன்றி ருந்தைபோல்
நிழற்றொளி மணிநிரை நிரைத்தங் கோடுவ.
11
221மரம்பல தேனவண் மழையிற் சிந்துவ
வரம்பிறந் தெழுந்தபான் மடங்கத் தண்புனல்
நிரம்பமே லுறைத்தென நீடக் காலெழீஇ
அரம்பைக ளாற்றுவ போன்றங் காடுவ.
12
222இரவிக ளனந்தமங் கிருந்து நோற்றென
அரதனக் குவால்பல அவிரு மோர்புறம்
கிரணவொண் மதிக்குலங் கெழுமி நோற்றெனத்
தரளவெண் மணிக்குவா றயங்கு மோர்புறம்.
13
223கணங்கொடு கணங்கசி வுளத்தி னாட்டயர்
துணங்கையும் பாடலுந் துவன்று மோர்புறம்
வணங்கிடை வானர மகளி ராடலும்
இணங்கிசை முழவமு மியலு மோர்புறம்.
14
224தேவர்கள் சென்றுசென்றிறைக்குங் கற்பகப்
பூவயல் கிடப்பதிற் புகாவண் டன்பர்கள்
தூவிய மலர்தொறுந் துன்னு மேற்பவர்
ஈவில ரொழியவீ குநரைச் சேர்ந்தென.
15
225வேறு
அரந்தை தீர்த்திடு மத்தகு கயிலையின் மலநோய்
கரந்த தேசுடைக் கணங்கண நாதரே முதலா
நிரந்து ளார்க்கெலா நீடுறு தலைமையு மிறைவன்
பரந்த கோயிலின் வாய்தல்கா வலும்பரித் துள்ளான்.
16
226மறைக ளாகம புராணங்கள் கலைகள்மற் றெவையும்
நிறைய வெம்பிரா னருள்செய நிரப்பிய வுளத்தன்
முறைசெய் நூலெலா மருள்புரி முதற்குரு வானோன்
அறையு நந்தியென் றுயர்பெய ரடுத்தவ னனையான்.
17
227பண்டு நான்கொடைந் திரட்டியபுராணங்கள் பயில்கால்
அண்டர் நாதனை யடிதொழு தடிகளே கருணை
கொண்டு நீயமர் பதிபல குவலயத் துளவான்
மண்டு மேன்மையின் மன்னிய தவற்றுள்யா தென்றான்.
18
228நந்தி வாய்மொழி கேட்டலும் நங்கையோர் பாகன்
எந்த நாளுமெம் மிருக்கையா யிலஞ்செ யரங்காய்
மந்த ணத்ததா யெவற்றினு மேலதாய் வயங்குஞ்
சுந்த ரத்ததா லாதிமா புரியெனத் தொகுத்தான்.
19
229அற்றை நாண்முத லாதிமா புரியினை யனையான்
எற்றை நாளினு மிதயத்துத் தியானித்து வருவான்
ஒற்றை நாளுளத் துன்னியூற் றெழவிழி புளகம்
பெற்ற வாக்கையோ டவசமா யிருந்தனன் பெரிதும்.
20
230சிவம்பெ ருக்கிய வுளத்தினன் தேகத்தின் குறிகண்
டவம்பெ ருக்கிய வவுணரை யறுக்கும்வை வேலோன்
தவம்பெ ருக்கிய விளையரோ டாடலைத் தணந்து
நவம்பெ ருக்கிய செய்கைநா டுதுமென அடுத்தான்.
21
231அடுத்த தோர்ந்தெழு நந்தியை யிருத்தின னகத்துண்
மடுத்த தியாதெனக் குரையென வாய்மலர்ந் தனன்வெங்
கடுத்து ழாவிய கண்டர்முன் கரைந்தவா நந்தி
விடுத்துக் கூறலும் வியந்தன னாதிமா நகரை.
22
232உண்மை ஞானம்வந் தவர்க்கலா லுறாதவான் வீட்டை
எண்மை யாவுறற் பாலதிம் மான்மிய மிதனைத்
திண்மை நோயற விளக்குது மெனுமகிழ் சிறப்ப
வண்மை நாடிய வுளத்தொடும் வைகுநா ளொருநாள்
23
233வெள்ளி மால்வரை மணிமுடி கவித்தென விளங்குந்
தெள்ளு பேரொளிச் சிகரவண் கோயிலி னொருபால்
நள்ளு மாயிரங் கிரணமு நாற்றும்வெய் யவனேர்
கொள்ளு மாயிரந் தூணொளி கொழிக்குமண் டபத்தில்
24
234சண்ட பானுவு மதியமும் விடிற்சக முழுதும்
உண்டு தேக்குமென் றுருவுவேற் றுமைசெய்து தன்பால்
கொண்ட தாமெனக் கொழுஞ்சுடர்ப் பவளக்காற் கவிகை
மண்டு வாருடல் வெள்ளென வயங்கிமே னிழற்ற.
25
235கவள மால்களி றுரித்தவெங் கடவுடன் பகைக்குத்
திவளு நீகுடை யாவதென் னேயெனச் சினந்து
துவள வான்மதிக் கிரணங்க டுணித்தலைத் தாங்குத்
தவள மாமணிச் சாமரை சாரத ரீட்ட
26
236
விழையத் தக்கமென் மலரினை விடுத்தவே ளுடலம்
குழையத் தக்கதேற் குறுவ தன்றென வஞ்சும்
தழையத் தக்கநல் வளியினைச் சார்ந்துநீ யுருவின்
இழையத் தக்கதென் றெழுப்புசாந் தாற்றிக ளசைய
27
237உரகர் போற்றுவா னடுத்தவி ருருவிடை யணிந்த
வரவ நோக்கிய மகிழ்ச்சியா னாடுவா ரோடும்
விரவி வேற்றுமை தெரிப்பரி தாகவின் மணிசூழ்
பரவை யாலவட் டம்பல வும்பணி மாற.
28
238கலந்து போற்றுந ருளத்தெழு மானந்தக் கடனின்
றலர்ந்து வெண்டிரை யெழுந்தெழுந் தடங்குவ போல
மலர்ந்த வாண்முகத் தடியவர் வயின்வயின் வீசும்
பொலந்தொ டிக்கையின் வெள்ளைகண் முறைமுறை பொங்க
29
239குழலுந் தோற்பொலி முழவமுங் குரலிசைப் பாட்டும்
மழலை வாய்மொழி மங்கைய ராடலு மயங்க
நிழலு மேனியின் வனப்பட நெடியவன் முதலோர்
உழலு நெஞ்சினர் பெண்ணஆ யொதுங்கினர் வணங்க
30
240பாம்ப ணர்ந்தன கோட்டியாழ் பலர்கரந் தழுவி
ஏம்ப லோடுமென் னரம்புளர்ந் தெழுமிசை தேங்கச் 
சாம்ப வானவர் மேலடர் தழல்விடம் பருகி
ஓம்ப லாதியா விருதெடுத் துலப்பிலர் பரச.
31
241சமயப் பைம்பயிர் சாவிபோ கத்தனை யடைந்தோர்க்
கமையப் பொங்கிய வலர்முகக் கருணைவெள் ளத்துச்
சுமையப் பாவுழை யெனப்படுந் துணைவிழிக் கயல்பாய்
இமயப் பாவையெவ் வுலகுமீன் றவனிட மிருப்ப.
32
242கோத்தி ரங்குலந் தழுவினுங் கோதுமுற் றிரியச்
சாத்தி ரம்பல வுணரினுந் தம்பிரான் பணியில்
பாத்தி ரம்பிழை யாதெனப் பார்கொள நந்தி
வேத்தி ரங்கொடு பணிபுரிந் தடர்சனம் விலக்க.
33
243இரவி மண்டல மிந்துவின் மண்டல மெரியின்
பரவை மண்டல மடுத்தன பவளவா னிலத்து
விரவு சிங்கத்தின் பிடர்த்தலை மிளிர்தரப் படுத்த
அரவின் செம்மணி யாதனத் தமலன் வீற் றிருந்தான்.
34
244தேவர் தானவர் சித்தர்விச் சாதரர் கருடர்
மூவர் முப்பத்து மூவரும் யாவரும் வணங்கி
ஓவி லாததம் முளக்குறை யுரைத்தது நிரப்பி
ஏவ மீண்டுபோய்த் தத்தம திருக்கையெய் தினரால்.
35
245
அன்ன செவ்வியின் மாடக மகதியா ழமைத்துக்
கின்ன ரம்புடை விழத்தருக் கேழின ரீனக்
கன்ன கங்கரைந் திளகக்காந் தருவர்கை விதிர்ப்பப்
பன்ன லம்பட விசையெழூஉம் பாணிமா முனிவன்.
36
246இறைவன் வீற்றிருந் தருளிய சேவையு மெவரு
நிறைய வேட்டன வரம்பெறு நியதியு மற்றும்
கறையி னீங்குமிக் கயிலையி னல்லதை யில்லை
அறையி னீதுறழ் தலமுள தோவென அயிர்த்தான்
37
247ஐய நீங்குவா னமலனை வணங்கியெம் மடிகேள்
வைய மீதிலிம் மால்வரை நிகர்தல முளதோ
உய்ய வீங்கரு ளென்றன னுமையொரு பாகன்
செய்ய வேண்டுமுகம் பார்த்துநீ தெருட்டெனப் பணித்தான்.
38
248வியங்கொள் தம்பிரான் அருடலைக் கொண்டுவே லவனும்
தயங்கு தன்மணிக் கோயிலிச் சார்ந்து பேருரின்
வயங்குமான்மியம் விளக்குவன் இவணெனும் மகிழ்வாற்
புயங்கள் வீங்கமெல் லணைமிசைப் பொலிவொடும் இருந்தான்.
39
249வேறு
சாரதப் படைகள் சூழத் தலைவனுக் கொருசொ லோதிச்
சூரத மாக நின்ற தோன்றலே தெருட்டி வீட்டின்
சீரதர் காட்டு கென்னாச் சேவடி வணங்கி நின்ற
நாரத முனியை நோக்கி நகைமுகத் தருள லுற்றான்.
40
250உத்தர கயிலை யென்றுந் தக்கிண கயிலை யென்றும்
மத்தியிற் கயிலை யென்று வழங்கிடுங் கயிலை மூன்றாம்
உத்தர கயிலை சுத்தோ தகக்கடற் பால தாகு
மத்தியிற் கயிலை யீது மாடக வீணை வல்லோய்.
41
251தெக்கிண கயிலை கன்மஞ் செயத்தகு பரத கண்டத்
தெக்கட வுளரும் போற்ற எழில்வளர் கொங்கு நாட்டில்
தக்கமேற் றிசையின் எல்லை முடிவினிற் றயங்கா நிற்கும்
ஒக்குமிக் கயிலை மூன்றும் ஆயினும் உரைப்பக் கேட்டி.
42
252அருந்தவப் பேறு வாய்ந்த அமரர்கண் முனிவ ரன்றித்
திருந்தவெவ் வுயிரு மின்பந் தெவ்வுதற் கெளிய வல்ல 
விருந்திடு வடபாற் குன்று மிடைப்படு குன்றும் என்னாப்
பொருந்திய கருணை வெள்ளப் பூரணன் உளத்துட் கொண்டு
43
253வழுவறு மோலித் தேவர் மானுடர் விலங்கு புள்ளுத்
தழுவிநீர் உறைவ வூர்வ தருவென மறைகள் சாற்றும்
எழுவகைத் தோற்றத் துள்ள வெவ்வகை யுயிரும் உய்யக்
கொழுமணி யிமைக்கும் வெள்ளிக் குன்றமாய்த் தென்பால் நின்றான்.
44
254களத்துநஞ் சடக்கும் எந்தை கயிலையங் கிரியாய் நின்றோன்
உளத்திடை யன்பு பொங்க வுருமடி யார்கள் பூசை
விளைத்தலும் வேண்டி மேலால் விரிகதி ரெறிக்குந் தேசு
திளைக்குமைம் முகமும் ஐந்து சிவலிங்க மாகக் கொண்டான்.
45
255இவ்வரைத் தேத்தெவ் வாற்றின் இருக்குமவ் வாறே தென்பால்
அவ்வரைத் தேத்தும் வேறே யவயவ வுருவந் தாங்கித்
தெவ்வரை முருக்கும் எந்தை சினகரம் ஒருபாற் கொண்டு
முவ்வரை வயிற்றா ளோடு முழுதுல கேத்த வைகும்.
46
256அறைகழல் அமல மூர்த்தி அதோமுகம் என்னப் பட்ட
மறைதரு முகமும் அந்த மால்வரை வேராய்க் கீழ்போய்க்
குறைவில்பல் வளத்திற் சான்ற குணாதுசார் இலக்க ணங்கள்
நிறைசிவ லிங்க மாக நிலமிசை முளைத்த தன்றே.
47
257நாதனே யாகி நின்ற நளிர்வரைச் சிலம்பிற் கென்றும்
பூதகா ரணமா யைந்து பொறிகட்கும் அறிவு தோற்றும்
நீதியார் கருவி போன்று நிற்றலால் இலிங்கம் ஐந்தும்
ஓதுவார் பூத மைந்தின் உறுபெய ரோடுஞ் சேர்த்து.
48
258மன்னிய புலன்கண் மாட்டு மனமன்றிப் பொறிக ளைந்துந்
துன்னுத லின்மை யாலத் துலங்கிய பொறிகட் காதி
என்னுமம் மனமே போன்றங் கிருநிலத் தெழுந்து நின்ற
அன்னதோர் இலிங்க மாதி லிங்கமென் றாய தன்றே.
49
259பாரிடை முளைத்து நின்ற பலசிவ லிங்கங் கட்குச்
சீரிய முதன்மை யானுஞ் செப்புவ ரனைய நாமம்
ஆருமவ் வாதி லிங்கம் அமர்ந்தருள் கொழிக்கு மாற்றால்
ஓருமந் நகரை யாதி புரியென வுரையா நின்றார்.
50
260ஆதலிற் கயிலை மூன்றும் அடுத்திடு நாமத் தானும்
ஓதரு வளத்தி னானும் ஒக்குமற் றுலகம் போற்றும்
மேதகு பெருமையானும் விளைத்திடும் பயத்தி னானும்
காதர மிரிக்குந் தென்சார்க் கயிலையே மிக்க தாகும்.
51
261என்றுவேற் றடக்கை நம்பி யிறைஞ்சுநா ரதன்க ருத்தில்
நின்றவை யத்தைப் போக்கி நீடுமந் நகரின் மற்றுந்
துன்றிய பெருமை யோடு தூத்தகு கதைக ளெல்லாம்
நன்றமிழ் துகுத்தா லென்ன நவின்றனன் மோன முற்றான்.
52


புராண வரலாற்றுப் படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் - 261
.-------

5. பதிகப்படலம் (262-272)

262வரந்திகழ் தவத்துக் காசிப னுயிர்த்த மாதவன் காலவ னென்பான்
பரந்திகழ் வீடு வேட்டனன் அடுத்துப் பத்தியிற் பூசித்த வாறும்
உரந்திகழ் மலரோன் படைப்பற நோக்கி யுவணமேக் குயர்த்தவ னேவச்
சுரந்திழி செருத்தற் றேனுமா தவத்தாற் றொடர்ந்துபூ சனைசெய்த வாறும்.
1
263கடவுளான் கன்றின் கவையடிச் சுவடுங் கதிர்மணிக் கோட்டினல் லூறுஞ்
சுடர்மணி யுருவி னெம்பிரா னணிந்து சுரபிக்குப் படைப்பரு ளியதும்
நெடியவன் றெனாது கயிலையொன் றமைத்து நிமலனைப் பூசித்த வாறும்
கடிமலர்க் கடவுள் வடகயி லாயங் கண்டுபூ சனைசெய்தவாறும்.
2
264காலவ னெடியன் கமலனென் றிவர்க்குக் கண்ணுத னடம்புரிந் ததுவும்
ஆலமொத் தடர்க்குஞ் சூரனைப் பயந்த வமரர்க ணிர்ப்பயத் தினராய்ச்
சாலவை கியது மவர்தமக் கிரங்கிச் சண்முகன் சூரனைத் தடிந்து
ஞாலமுற் றிறைஞ்ச மீண்டுயர் மருத நளிர்வரை வீற்றிருந் ததுவும்.
3
265சுமதியென் றொருவ னந்தண னெடுநாட் டூர்த்தனாய்த் திரிந்துபா தகஞ்செய்
தமர்பதி தணந்து சுலாவுவா னெல்லை யடுத்திறந் தும்பரெய் தியதும்
நிமலனை மறவா முசுகுந்தன் விசும்பி னிசாசரர் குலனறுத் தமர்நாட்
குமரியங் கொருத்தி நகைத்தலுங் குறுகி நன்முகங் கொண்டுபோற் றியதும்
4
266கழைசுளி யயிரா வதப்பெரும் பாகன் கடுந்தவப் பிருகுபுத் திரியால்
தழைதரு மரக்க வுருவினை யாங்குத் தணந்துபத் திமைபுரிந் ததுவும்
குழைமுக மடவா ரெழுவரோ டடுத்துக் கொலைப்பெரும் பாதகந் துமிய
மழையுறழ் தடக்கை மணிமுடிக் கரிகால் வளவனன் கெய்திய வாறும்.
5
267ஏழைபாற் றூது விடுத்தவ னணுக வெம்பிரான் றிருவிளை யாட்டான்
மாழைநோக் குமையுந் தானும்வேற் றுருவாய் வயற்றொழி னடவிய வாறும்
ஊழைவா ரலைநீ யெனப்புடை நிறுவு முயர்கவி வன்றொண்ட னுரையாற்
பீழைதீர் தில்லை யந்தணர் போந்து பிஞ்ஞக னடங்கண்ட வாறும்.
6
268வீங்குநீர்க் காஞ்சி நதியொடு மங்கண் விலங்கிய தீர்த்தத்தின் சிறப்பும்
ஓங்குமால் வரையின் விம்மிதம் பலவு முயர்பரம் பிரமமா லென்று
தூங்குகை நிமிர்த்த வியாதன்பொய்த் துரிசு துடைத்ததுந் துணையின்மா தவங்கள்
தாங்கிய விசுவா மித்திரன் பணிந்து தணிவில்பல் வரம்பெற்ற வாறும்.
7
269காதியா ணவத்தை யுயிரெலா முத்தி கலத்தலிற் றென்திசைக் கடவுள்
கோதிலா வரசு குறைந்தமை நிரப்பக் குழகனைப் பூசித்த வாறும்
போதினான் றெளியப் பூரணன் றலத்தின் பொருவின்மான் மியமரு ளியதுந்
தீதினா னொருவ னங்கிர னென்பான் தேகநீத் தும்பரெய் தியதும்.
8
270இமவரை மாது தவம்புரிந் ததுவு மெம்பிரான் வரைந்துகொண் டதன்மேல்
குமரனுக் கிறைவன் வரைவினாற் றேவ சேனையைக் கூட்டிய வாறுஞ்
சமரவன் றடக்கை யான்குசத் துவசன் றவம்புரிந் தெச்சமெய் தியதும்
அமர்தரு குலசே கரனெனுஞ் சேரன் குட்டநோ யனுக்கிய வாறும்.
9
271வருந்திரி லோக சோழன்றுன் மதஞ்சேர் மாசறப் போற்றிய வாறும்
கருங்குழ லுமையாட் கெம்பிரான் வார்ந்த காமரு வேணிவெண் பூதி
திருந்துகண் மணிகூ விளமுப சாரந் தெரிதரத் தெருட்டிய வாறும்
பெருந்திரு வளிக்கும் பிரமகுண் டத்துப் பெருகிய பூதிமான் மியமும்.
10
272மின்னவிர் சடிலத் திளம்பிறை யணிந்த வேதியன் விரைமலர்க் கமலப் 
பொன்னடித் தலத்துப் புரிதரும் விசேட பூசனைக் குரியகா லமுஞ்சீர்
மன்னிய குமர நாயக னருள மகதியாழ் முனிவரன் கேட்டுத்
துன்னிய மகிழ்வி னாண்டரு ளிறைவன் றுணையடி தொழுதுவாழ்ந் தனனால்
11

பதிகப்படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் - 272
-------

6. நாரதன் வழிபடு படலம் (273-339)

273வாரணி பூண்முலை வள்ளி மணாளன்
போரணி வேலன் புகன்று தெளிந்த
காரணி தென்கயி லாயம் வணங்க
நாரணி நாரதன் நச்சியெ ழுந்தான் 1
1
274நொள்ளை படாதன வில்வமு நொச்சியும்
வள்ளையின் வார்செவிக் கங்கையும் தாங்கி
தள்ளையன் னான்றலம் நேர்ந்தன தாழ்ந்துளத்
தொள்ளையி லான்றுனைந் தான்வழிக் கொண்டு.
2
275தெங்கொடு பூகஞ் செறிந்து வளங்கள்
தங்கிய கொங்கு தலைப்பட லுற்றான்
மங்கல சின்மய மால்வரை கண்டான்
அங்கண் வணங்கின னன்பி னடுத்தான்.
3
276வாக்கிய கட்புனன் மார்ப நனைப்பத்
தேக்கிய வன்பு திளைத்தெழு சிந்தை
ஊக்கிய வன்மைகொண் டொள்ளிய பண்களின்
பாக்கிய மன்னான் பறம்பிவர் கின்றான்.
4
277வேறு
மூவர்கள் வணங்குமுத லென்றுவழி பட்டாங்
கேவரும் வியப்பவிணர் மாமர மிறைக்கும்
பூவமரர் தூவுபொலம் பூவொடு மயங்கி
மேவரும் வண்டினம் விலக்குவன கண்டான்
5
278வித்தக விலங்கலடி காணவிழை வுற்றுப்
பத்தியொடு நாரணர் பரித்தவுரு வென்னக்
கொத்தினொடு பன்றியொளிர் குன்றடி யகழ்ந்து 
மெத்துகிழங் காருவன வீணைமுனி கண்டான்.
6
279காலனுயிர் சாயவடை பாலனுயிர் காழ்ப்பச்
சாலவருள் செய்தவொரு சாமிவடி வேயாம்
மேலவரை சேர்ந்தவெமை யார்தளைவ ரென்றே 
கோலவிப மெண்ணில குறும்புசெயல் கண்டான்.
7
280எங்களைநி கர்ப்பவுயி ரோடிறைவன் மெய்யில்
தங்குவன வல்லவுரி தந்தவின மென்னா
அங்கெழு களிப்பினனை யார்ப்பவென மாடே
சிங்கமொடு தோல்புலி சிலைத்தெழுவ கண்டான்.
8
281
கையலது போதலறி யாதுகலை கால்விட்டு
உய்யவறி யாதுமுய லென்றுறு தருக்கால்
வெய்யவுளி யங்கடமை வீழ்கவய மற்றும்
மெய்முழுது மேவிவிளை யாடுவன கண்டான்.
9
282விலங்கலுரு வத்தும்வில காமைவிட நாக
அலங்கறழு விக்கவினி யாங்குவளர் சந்தின்
குலங்கதுவு சூழல்குடி கொண்டுசுடி கைக்கண்
இலங்குமணி நாகமினி தாடுவன கண்டான்.
10
283மேவிமு னணிந்தவியன் றோலணிக ளென்ன
ஆவியிகல் வேங்கையிபம் ஆடரி யிவற்றின்
தாவிலுரி யுந்தலைவெண் மாலிகைக ளென்ன
ஓவிலரு விக்குடிஞை யூர்வனவுங் கண்டான்.
11
284நால்புழை நெடுங்கையிப நன்றமர் உடற்றக்
கால்பொர வுடைந்தகழை நித்தில மணித்தூள்
பால்புரை விபூதிபல வச்சிர மணிக்கல்
சால்பின்வள ரென்பணி தகைத்தொளிர்வ கண்டான்.
12
285செஞ்செவி தமக்குரிய சேரியென வாழு
மஞ்சர்க ளெழுப்புமணி யாழிசை கடுப்பக்
கொஞ்சுகிளி மஞ்ஞைவிளை தோரைகள் கொரிக்கும்
வஞ்சநிமிர் சாரல்வளர் தேன்முரல்வ கண்டான்
13
286செங்கையி னமைந்தொளி திகழ்ந்ததழ லொப்பத்
துங்கவொளி கான்றுவளர் சோதிமர முங்கைத்
தங்குதுடி யின்னொலி தழங்குதல் கடுப்ப
அங்கணமர் வேடரெழு மாகுளியுங் கண்டான்.
14
287ஏட்டைதரு வன்பிறவி யென்னுமலை யேறும்
வாட்டமும் வயங்குவரை யேறவரு மெய்ப்பின்
நீட்டமு மொருங்கற நிரம்பு குளிர் வன்கால்
சேட்டருள் நிகர்ப்பவரு திட்டையெதிர் கண்டான்.
15
288வேதனை பிறப்பற விழைந்தருளின் நின்றோர்
காதலக னுள்ளொளியி னோடுகல வாமை
வாதனை மலம்விலங்கி யாங்குமலி மஞ்சு
மூதறிவி னான்சிகர மூடுவது கண்டான்
16
289ஆதி மல நீங்கவிடை யாவியருட் பின்னாய்ச்
சோதியிடை மூழ்கும்வகை சூழ்திரு வெழுத்தான்
மோதியிடை நின்றமல முற்றிரிவ தென்னக்
காதிவரு காற்றினது நீங்குவது கண்டான்.
17
290வேறு
இன்ன வாகிய வளம்பல கண்டுகண் டிவருநா ரதன்வாய்மை
மன்னும் யோகின ருள்ளமா தாரமூ விரண்டையு மரீஇயப்பால்
துன்னு மாயிரந் தொகுமிதழ்த் தாமரைச் சுடரினை யடுத்தாங்குக்
கொன்னு மால்வரை யாறையுங் கடந்துபோய்க் குடுமிமால் வரைசார்ந்தான்.
18
291கருத்த டங்கியோ கத்தினாற் சோதியைக் காண்பவர்க் கவணெந்தை
நிருத்த வண்சிலம் பொலியெழு வித்தென நெடுகிவிண் கிழித்தோங்கு
திருத்தன் வைகிய சிலம்பினை யடுத்தலுந் தேவதுந் துபியோடும்
அருத்தி மெய்யடி யார்சிவ முழக்கமு மடர்ந்தெழ மகிழ்கூர்ந்தான்
19
292அங்கி பாங்கரி னமைத்தலாற் றொடுவதற் கவனியு ளோரஞ்சும்
பொங்கு சீதளத் தாவயி னொழுகிய புதுமண நதிதீர்த்தம்
முங்கி நீறுடன் முழுவது மணிந்துசெய் முறைமைமுற் றுறவாற்றி
எங்க ணாயகன் றிருமலை யிவர்ந்தனன் இவர்ந்தயாழ் மணித்தோளான்.
20
293இமய மீன்றவ ளோதியு மைங்கர னிறும்புசூழ் தடங்குன்றுஞ்
சிமய மோங்கிய நான்முகன் விலங்கலுஞ் செங்கண்மால் வளர்வெற்பும்
அமைவி ராவிய வேலவன் பறம்புந்த னடிவரை யெனத்தாழ
உமையொ டாரண மறிகலா னிருப்பநீண் டொளிர்வரை முடிசேர்ந்தான்.
21
294சேர்ந்து சுற்றெலாம் நோக்குவான் அடித்தலை செறிந்தவெற் புகளெல்லாஞ்
சார்ந்த பீடமா யவற்றின்மீப் போகிய தனிவரை நலன்முற்றும்
ஆர்ந்த தோர்சிவ லிங்கமாய்த் தோற்றலும் அஞ்சியிம் முடிமீதும்
ஏர்ந்து போற்றவெவ் வேறுரு வெடுத்தன னெனத்தெளிந் தெதிர்போந்தான்.
22
295காந்த நேர்படும் ஊசியிற் சிவலிங்கக் கடவுடன் றிருமுன்னர்ப்
போந்த நாரதன் புந்திபோ யருண்மலை புகவிழிப் புனல்கார்போல்
ஏந்து மார்பக நனைப்பமெய்ப் புளகங்க ளெழமொழி தடுமாறச்
சேந்த வார்கழல் தாழ்ந்தனன் அன்பெனுந் திரைக்கட லிடைத்தாழ்ந்தான்.
23
296நெடிது போதுதண் டெனக்கிடந் தானந்த நிரப்புநெஞ் சகத்தோடும்
படியின் மீதெழுந் துச்சியி லிருகையும் பதித்துவெள் ளியங்குன்றின்
முடியின் வீற்றிருந் தருளிய பராபர முக்கண சயபோற்றி
அடிய னேற்கருள் புரிந்ததற் புதமென வறைந்துபூச னைசெய்தான்.
24
297அமரர் விஞ்சையர் சித்தர்சா ரணருந் தவத்தின ரிவர்நாளுந்
தமது வைப்பென வழிபடு மிரசத சயிலவுச் சியின்வேற்கைக்
குமர னைங்கர னுமையொடு மைந்துருக் கொண்டுவீற் றிருக்கின்ற
விமலன் முந்துற வீணையி னெழான்முறை வீக்கியேத் தினன்மாதோ.
25
298வேறு
கள்ளிவர் கோதை கரங்கொண்டு பூசித்து
வெள்ளி வரையை விழைந்தா ரிதுபிறப்பின்
உள்ளிய போக முழந்துமுள மாய்ந்து
தெள்ளுபே ரின்பந் திளைக்கின்றார் மன்னோ
26
299செம்பொரு ளார்ந்த செழுந்தீந் தமிழ்கொண்டு
நம்பன் கயிலை நயந்தேத்து நாவினோர்
இம்பர் நலியும் இடும்பையுடற் கிடந்தும்
உம்ப ரறியா வுருக்கிடந்தார் மன்னோ.
27
300காரோத வண்ணன் கசிந்தேத்துங் கண்ணுதறன்
பாரோதும் வெள்ளிப் பறம்புளத்திற் றீட்டினோர்
நீரோடு கண்ணின் நிலைதிரிந்தா ராயிடினும்
சீரோடு வைகுந் திருவுடையார் மன்னோ.
28
301வேறு
போற்று நாரதன் மீட்டும் பூரணர் பாதம் வணங்கிக்
கூற்றம் வென்றவை வேற்கட் கோமள வல்லி யன்னாளை
ஊற்றி ருங்கடத் தானை யும்பர்கள் வெஞ்சிறை மீட்ட
வேற்ற டக்கையி னானை வீழ்ந்து பழிச்சி யெழுந்தான்
29
302கட்டு பொற்சடை யொல்கக் காதணி குண்டல மாட
ஒட்டு வற்கலை தட்ப வுள்ள மெழுந்துமுன் செல்லச்
சட்ட வெற்பி னிழிந்து சாரலின் மேற்றிசைச் சூழல்
அட்டு நல்லொளிச் செம்பொன் ஆலயங் கண்டங் கடுத்தான்.
30
303வேறு
ஒழுகொளித் தரள நாற்கோட் டுவாப்பல மருங்கு சூழ
விழுகு மும்மத வெள்ளத்தி னிராயிரங் கோட்டு வேழம்
முழுகொளிப் புவனப் பொற்றேர் மூட்டிய கலினப் பாய்மா
மழுகுபொற் படியின் நீண்ட வாய்தலின் முன்னர் நிற்ப.
31
304கழுக்கடை பிண்டி பாலங் கப்பண முரல ஞாங்கர்
மழுக்கதை தண்டு நேமி வச்சிரங் சுரிகை சூலம்
எழுக்குயஞ் சிலைவாள் பாச மின்னபல் படையி னோடும்
அழுக்கடை யாத பூதர் ஆலய மருங்கு மொய்ப்ப.
32
305பணைதுடி படகந் தக்கை பணவந் திண்டிமந் தடாரி
கிணைகுளிர் பதலை மொந்தை சல்லரி பம்பை கேழ்மண்
கணைவளை கோடு பீலி காகளந் தாரை முற்றுந்
துணையறு கணங்க ளோர்பால் சுவையமிழ் தெனச்சே விப்ப.
33
306விராவுநை வளமுன் னெட்டும் விளக்கஞ்செய் குறிஞ்சி யாழும்
அராகமுன் னான வைந்தும் ஆக்குறும் பாலை யாழும்
பராவிவிண் ணவரும் போற்றும் படுமலைப் பாலை முன்னாம்
தராதலம் வியக்கு மெட்டுஞ் சார்ந்திடு மருத யாழும்.
34
307நேர்திற முதலா நான்கு நிகழ்த்திய முல்லை யாழுந்
தேர்தரு நெய்தற் கான திறனியாழ் விளரி யெல்லாம்
ஆர்தரு புலவ ரோர்பா லமைத்திசை யெழுப்ப வோர்பால்
வார்தரு குழலின் பேத மனைத்தும்வல் லவர்வா சிப்ப.
35
308வேறு
காந்தாரம் புறநீர்மை கௌளசிகங்குச் சரிநளுத்தை கவிடி நாட்டை
வாய்ந்தோதுஞ் சாதாரி கௌளவாணங் கொல்லிக் கௌளவாணங் காஞ்சி
ஆய்ந்தார்கொள் சாயரிபஞ் சுரம்பழம்பஞ் சுரங்குறண்டி யமிழ்தாய்க் காதிற்
போந்தேறு மலகரிநற் பயிரவியென் றிவைவல்லார் புகழ்ந்து பாட.
36
309கொடுகொட்டி பாண்டரங்கங் காபால மெனுமிறைவன் கூத்து மூன்றுங்
குடைகொட்டி யெனுங்குமர னாடலிரண் டுங்கனங்கொண் டொருபா லாடக்
குடமல்லு மரக்காலல் லியமென்னுந் தமக்குரிய கூத்து நான்கும்
குடம்வெல்லும் வளைக்கரத்தோ ரநேகரவ ணொருபாங்கர்க் கொண்டு போற்ற
37
310உருத்திகழைங் கணைக்கிழவ ரநேகர்தமக் குரியபே டுவந்து காட்டப்
பருத்தபுயத் தயிராணி கடயமிட மலர்மாது பரவை யாடச்
சுரித்தகுழற் குமரிமரக் காறழுவ வெழுமாதர் துடிகொண் டாட
வரித்தமுலை யரம்பையர்கள் கரணமுதற் பலகூத்து மருவி யாட.
38
311உறுவசிமே னகையரம்பை திலோத்தமையென் பவர்பலர்தா மொழுங்கி னின்று
நறுமலர்க்கை வழிவிழியும் விழிவழியுள் ளமுநடப்ப நடன மாடத்
தெறுவினையைத் தெறுமுனிவர் குணலைபயின் றாரணங்க டிகழ வோத
மறுவிகந்த தும்புருநா ரதர்பலர்வீ ணையினிருபால் வதிந்து போற்ற.
39
312இந்திரரெண் ணிலர்பிரம ரெண்ணிலார் பதினொருமூ வருமெண் ணில்லார்
சந்திரரெண் ணிலரேனை வானவரெண் ணிலர்நிசா சரரெண் ணில்லார்
கந்தருவர் விஞ்சையர்கள் கருடர்சாத் தியர்சித்தர் கரும தேவர்
அந்தரரென் பவர்பிறரு மநேகரகத் தினும்புறத்து மடர்ந்து போற்ற.
40
313ஆடிகுடை சாந்தாற்றி யால்வட்டங் கவரிகொடி யனைத்து மொய்ப்பக்
கோடிமணித் தூணிறுவிக் குயிற்றியபொன் மண்டபத்திற் குமர வேளும்
நீடியமும் மதக்களிறு மருகிருப்ப வுமையிடப்பா னிலவத் தேசு
கூடியபொற் றவிசினிடை வீற்றிருந்தான் மன்றுணடங் குயிற்றும் பெம்மான்.
41
314அத்தகைய கோயிலினை யடுத்தநா ரதமுனிவ னன்பு பொங்கப்
பைத்தமணி வாயிலிடைச் சடைசழங்க வுடைசழங்கப் பன்னு வீணை
கைத்தலத்தின் மேக்குயர்த்திச் சனநெருக்கி னூடேகிக் கடந்து வாய்தல்
சுத்தமருள் கோமாத ருடனிமிலே றிருந்தநெடுஞ் சூழல் புக்கான்.
42
315வேறு
ஆங்க ணெட்டினு மைந்தினும்
பாங்கி னாரப் பணிந்தனன்
ஓங்கு கையினை உச்சியில்
தாங்கி முன்னுறச் சார்ந்தனன்.
43
316அந்தில் வந்தடர் மாசனம்
பந்தி கொள்ளப் பணித்துலா
நந்தி கண்டிவ ணாரதா
முந்து கென்னலு முந்தினான்.
44
317அன்றி னார்புர மாரழற்
கொன்ற வூட்டிய உத்தமன்
என்று வந்தனை யோவென
இன்று வந்தன னென்றனன்.
45
318ஆல மார்ந்த மிடற்றினான்
கோல நோக்கிக் குளிர்ந்தனன்
சால வன்பு தழைத்தெழச்
சீல மார்துதி செப்புவான்
461
319வேறு
தண்ணார் மதியுந் தழல்வா ளரவும் சடிலத் தணியுந் தலைவா சரணம்
பண்ணா ரிசையும் பகைமான் குரலும் படர்செஞ் செவிநா யகனே சரணம்
பெண்ணா முமையும் நீயா ணுருவும் பிணையுந் திருமே னியனே சரணம்
விண்ணா டருமண் ணவரும் பணியும் வெள்ளிக் கிரிவே தியனே சரணம்.
47
320அண்டங் களனைத் துநொடிக் குமுன மடலைப் பொடியாக் குநுதற் சுடராற்
பண்டின் பமளிக் குமலர்க் கணைவேள் படவென் றருண்மீ ளீமையாய் சரணந்
தொண்டொன் றுமலா லறியா தவர்தஞ் சுரிகுஞ் சிமுடிக் கணியாஞ் சரணம்
மிண்டுந் தருமன் படிவத் துதவும் வெள்ளிக் கிரிவே தியனே சரணம்.
48
321தண்டா துலகோர்க் குவரம் பலவுந் தழையச் சொரியங் கையின்மும் மலமும்
அண்டா தடைவா ருடலும் பொருளு மணுவுந் தரவேற் றருள்வாய் சரணம்
கண்டா னலனென் றெவரும் பரவுங் கடியார் மலர்துன் றுபதத் திடைமண்
விண்டான் பதுமக் கண்ணீந் தருளும் வெளிக் கிரிவே தியனே சரணம்.
49
322மத்தக் கரியீ ருரிபோர்த் தருளும் வயவா வியவார்க் கருளாய் சரணம்
பத்திக் கமிழ்தா கியினித் தருளும் பரமா புரமாய்த் தவனே சரணம்
எத்திக் குமிறைஞ் சநடம் புரியு மிறைவா மறைவாய் மொழியாய் சரணம்
வித்தைக் கோருவைப் பெனவே திகழும் வெள்ளிக் கிரிவே தியனே சரணம்.
50
323அழலங் கையினாய் சரணஞ் சரணம் அரரிதங் கையினாய் சரணஞ் சரணம்
பழியென் பணியாய் சரணஞ் சரணம் பரவென் பணியாய் சரணஞ் சரணம்
குழவெண் மதியாய் சரணஞ் சரணம் குணவோர் மதியாய் சரணஞ் சரணம்
விழிமும் மையினாய் சரணஞ் சரணம் வெள்ளிக் கிரியாய் சரணஞ் சரணம்.
51
324செய்யா வுருவாய் சரணஞ் சரணம் செய்யாய் கரியாய் சரணஞ் சரணம்
நெய்யா வுடையாய் சரணஞ் சரணம் நெய்யார் படையாய் சரணஞ் சரணம்
பொய்யார்க் குரியாய் சரணஞ் சரணம் பொய்யார்க் கரியாய் சரணஞ் சரணம்
வெய்யாய் தணியாய் சரணஞ் சரணம் வெள்ளிக் கிரியாய் சரணஞ் சரணம்.
52
325வேறு..
எனநா ரதனேத் துதலும் பகவன்
பனவா விழைவோ துபணித் துமென
அனகா வுனதா ளுறுமன் படியேன்
மனமா ரவழங் குதிமா லறவே.
53
326காரார் தருதென் கயிலா யமிதின்
வாரார் முலையோ டுமகிழ்ந் தருளின்
சீரார் தருசே வையெந்நா ளுமெனக்
காரா வமுதே யருளென் றனனே.
54
327அவ்வா றிறைவன் வரமாங் கருளச்
செவ்வாய் மையினான் கொடுசே வடிதாழ்ந்
தொவ்வா மலமோ பியபோ திவனத் 
துவ்வா வமுதந் தொழமீண் டனனே. 55
55
328வேறு
கற்பக வேலி நீழற் கடவுளா னிரைகள் வைகப்
பொற்பிரு நிதிகள் கோடி பொலிந்தநீ ரோடை சூழ
விற்பொலி மணிச்செய் வைப்பின் வெள்ளிமேல் வேய்ந்திட் டுள்ளால்
அற்புதக் கவிகைப் பூங்க லழுத்துமம் பலமுங் கண்டான்.
56
329வெள்ளியம் பலமுன் தாழ்ந்து வியத்தகு நடமும் போற்றிச்
சுள்ளியின் வேலி சூழ்ந்த சுடர்மலை முகங்க ளான
தெள்ளொளி யிலிங்க மேலாற் செறிமணி மோலி யேயாம்
நள்ளொளிச் சிகரக் கோயி னளிவரை வலமாச் சென்றான்.
57
330கதிர்மணிக் குலமும் பொன்னுங் கையரிக் கொண்டு போதும்
அதிர்புனல் வழக்க றாத வற்புதக் காஞ்சி மாடே
முதிர்வளம் பலவும் நோக்கி முன்னிநீள் போதிக் கானத்
தெதிரறு துறைநீ ராடி யெம்பிரான் கோயில் சார்ந்தான்.
58
331கொழுந்தெழுங் கிரணக் கல்லிற் குயிற்றுகோ புரமுன் தாழ்ந்து
தொழுந்தலைக் கரத்தி னோடுந் துணைவிழி யுறைப்பப் போந்து
விழுந்தனன் ஏற்றின் முன்னர் விழுந்தன மலங்கள் மூன்றும்
எழுந்தனன் இன்ப வெள்ளம் எழுந்தாங் குடங்கு மாதோ.
59
332அயனரி யரனு மாகி அளித்தளித் தழித்து மற்றவ்
வயனரி யரனுக் கெட்டா ஆனந்தப் பொருளே யங்கண்
அயனரி யரனும் போற்ற முளைத்தரு ளாதி லிங்கம்
அயன்றரு குமர னான்ற தவத்தினால் கண்டு கொண்டான்.
60
333வறுமையுற் றவர்கள் சிந்தா மணியெதிர் கண்டா லென்ன
முறுகிய வன்பு பொங்க முதல்வனா ரருகு போந்து
மறுகிய பிறவி வேலை வறக்குமொள் ளமிழ்தைக்கண்ணான்
மொறுமொறுத் தமரர் நிற்ப முகந்துகொண் டருந்தி னானே.
61
334தேக்கிய வுளத்தா னந்தச் செழுங்கட லூற்றே யென்ன
வாக்கிய விழியி னீரு மயிர்தொறு மரும்பும் வேரும்
ஆக்கையை மண்ணுச் செய்ய வருட்புனற் குளித்தான் போன்று
நீக்கிய மலத்தா னாங்கு நெடிதுநின் றரிதி னீங்கி.
62
335இருள்குடி கொண்ட கூந்த லெழில்குடி கொண்ட பொற்றோள்
அருள்குடி கொண்ட வாட்க ணணிகுடி கொண்ட கொங்கை
பொருள்குடி கொண்ட செஞ்சொற் புகழ்குடி கொண்ட தாளு
மருள்குடி விலகி வைகு மரகத மயிலைத் தாழ்ந்தான்.
63
336ஒன்றெனப் பலவே யென்ன வுருவென வருவே யென்ன
அன்றென வாமீ தென்ன வணுவென மகத்தே யென்ன
நின்றவன் பரமா னந்த நிருத்தஞ்செய் போதி மன்றுள்
வென்றவைம் பொறியான் சென்று விம்மிதத் திறைஞ்சிப் போந்தான் .
64
337தவழ்புனற் காஞ்சி யாற்றுத் தடங்கரை மருங்கு முக்கட்
பவனருட் குறியொன் றன்பாற் பதிட்டைசெய் தாங்குப் பாங்கர்
நவமுறத் தீர்த்த மொன்று நலத்தக வாக்கி யந்தச்
சிவமலி நீரி னாட்டிச் செய்தனன் பூசை முற்றும்.
65
338அன்னதன் சிவலிங் கத்தி னருச்சனை முறையிற் செய்து
மன்னிய வாதி லிங்க வரதனைப் பணிந்தும் வெள்ளி 
நன்னகத் திறைவன் கோல நயத்தகக் கண்டும் வையத்
தென்னுமன் பிலாத தூய னின்னண மிருக்கின் றானால்.
66
339வேறு
இந்த மாநிலம் வழுத்துமெய்த் தவத்தீ ரிலங்கு வேற்படை வலக்கரத் தணிந்தோன்
நந்தி கூறிடக் கேட்டது மதனை நார தற்கவன் றெருட்டிய வாறும்
அந்திற் கேட்டநா ரதனதன் வழியே யடுத்து வந்தனை புரிந்தது மெல்லாம்
வந்த வாறினிக் காலவன் வாய்மை மரீஇய தோர்மினென் றறைதருஞ் சூதன்.
67


நாரதன் வழிபடு படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் 339
---------

7. காலவன் வழிபடுபடலம் (340-418)

340வரியளி மதுவுண்டு மதுரமெல் லிசைபாடும்
விரிமல ரயனீன்ற மேதகு காசிபனுக்
குரிமையின் மகன்வேத மோதிய செந்நாவன்
கரிசறு தவமாற்றுங் காலவ னெனும்பேரான்.
1
341நல்வினை யோவாமே நயந்துசெய் திடுநாளில்
அல்வளர் மலபாக மடுத்தருள் பதிவுற்றுத்
தொல்வினை யவைமாறத் தொகுதரு கருமந்தாம்
பல்வகை களுமொப்பாம் பரிசுற விவைநினைவான்.
2
342செய்திடு கருமத்தாற் சேர்பய னுலகத்து
மைதிக ழிருள்சீக்கும் வானவ னுலகாதி
பைதிகழ் மணிநாகப் பள்ளிய னுலகந்த
மைதம ருலகத்தி னார்வமொ டெய்துவதாம்.
3
343மேவுமவ் வுலகத்து மேதினி வரைப்பேபோல்
ஓவிலைம் பொறிகட்கு முறுபுல னுகர்வித்தே
போவன காலங்கள் புதுமையி னொருவாய்மை
ஆவதன் றண்டங்க ளனைத்துமவ் வியல்பினவே.
4
344வேறு
காரண மூன்றி னன்றிக் காரிய நிகழ்வ தின்றாங்
காரண மண்டங் கட்குக் கருதுறின் மாயை சத்தி
காரண மில்லா யீசன் முதற்றுணை நிமித்தங் காண்பர்
காரண மாயை நல்குங் காரிய தத்து வங்கள்.
5
345தத்துவக் குழுவின் செய்கை யல்லது சகல மில்லை
தத்துவஞ் சடமே யற்றேற் றத்துவச் செயற்கும் வேறே
தத்துவ மான சித்தின் சத்தியொன் றடுத்தல் வேண்டும்
தத்துவ நம்மை யென்றுந் தகைப்பது மில்லை யாமே.
6
346அத்தகு சித்து நானோ வன்றிவே றுண்டோ மற்றுந்
தத்துவ வுடலே நானாத் தருக்கினே னிந்நாள் காறும்
பொத்துதத் துவத்தை நாடிற் பொருந்துநான் வேறு மானேன்
சித்தினை நாட வென்னிற் சித்தும்வே றுண்டுபோலும்.
7
347அனைத்துமாய் மாயை நம்மை யடுத்தது கருமத் தாகும்
நினைத்திடு கருமத் தானு நிகழ்வதா ணவத்தி னாகும்
வினைத்திருக் கெய்த நிற்றல் வெய்யவா ணவவி ருட்டும்
எனைத்துயி ரினையும் வாட்டு மபக்குவ விரவி னாகும்.
8
348இத்தகு தொடர்க ளெய்தா தெவற்ரினு மேலாய் நின்ற
அத்தகு கடவு ளன்றி யறிவெழு பருவ மாதி
மிக்குற விளைத்து வீடு விளைப்பவ ரிலையத் தேவும்
தக்கவா வழிபா டாற்றிச் சார்தரார்க் கருளா தம்மா.
9
349அருவுரு விரண்டு மின்றி யடர்குணங் குறிக ளின்றித்
தெருளுநின் மலமா யொன்றாய்ச் சித்துமாய்ச் சத்துமாகிப்
பொருவில்பூ ரணமா யின்பாய்ப் போக்கொடு வரவு மில்லா
ஒருவனை வழிபா டாற்ற லொருவர்க்கு முடியா தேனும்
10
350மந்திர முலகிற் றீட்டும் வரிவடி வெழுத்தி னின்று
வெந்திறற் பூத மாதி விலக்குமா போல வெட்டா
எந்தையும் வடிவி னின்றே யிருண்மல மகற்றி வீடு
தந்திடு மருளா லெங்கோன் றங்கிய வடிவு தம்முள்
11
351வேறு
வண்டு முரல முறுக்கவிழு மலர்மே லவனைப் பணிகிற்பின்
அண்ட மடங்க வுயிரெல்லா மாக்கு மாற்ற றருகிற்கும்
விண்ட மலரி னறுந்துளப விண்டு மலர்த்தாள் வழிபாட்டின்
மண்டு முயிரைத் திதிப்படுத்து வளர்க்கு மாற்ற லுளதாமால்.
12
352புவன முழுது மொருநொடியிற் பொடிக்கு மரனை வணங்கினால்
புவன முழுது மொருநொடியிற் பொடிக்கு மாற்ற லினிதருளும்
மவுன முடைய ராயுமா மகேச ரடியைப் பூசிப்பின்
கவன மறுத்து விவாகத்திற் கருத்தை யுதவிப் புரப்பாரால்.
13
353அமரர் விழையுங் கலியாண வழகர் பாதம் பூசிப்பின்
கமலன் முதலோர் தலைதுளக்கக் கலியா ணத்தை முடித்தருள்வர்
உமைத னுருவுந் தமதுருவு மொற்றித் திருந்தார் தமைப்போற்றில்
சிமய முலையார் போகத்திற் சிறப்ப மோகங் கொடுப்பரால்
14
354தொல்லை யுலகம் போற்றெடுக்குஞ் சோமாக் கந்தர் தமைத்தாழின்
நல்ல மகவுஞ் சந்தானத் தொடர்பு மினிது நல்குவார்
மல்லற் றிகிரிப் படைமால்கை வழங்கி னாரை யருச்சிப்பின் 
அல்ல லிரியப் பெரும்போக மகிலம் வியப்ப வளிப்பாரால்
15
355வம்பார் தெய்வ வடவாலின் வதிந்தார் கமலத் தாளிறைஞ்சில்
தம்பால் விருப்புந் துயரிலங்குஞ் சகத்தில் வெறுப்புந் தழைப்பிப்பார்
பம்பா தரவிற் கடிஞைகொளும் பயிக்க வேடத் தரைப்பரசில்
கொம்பே ரிடையார் கரநெரிப்பக் கொள்ளும் போகம் வெறுப்பிப்பார்
16
356கையி லெடுத்த சூலத்துக் கங்கா ளரைப்பத் திமைபுரியின்
வைய முழுதும் பணிகேட்ப வயிராக் கியத்தை யளித்திடுவர்
எய்யு மதவே ளுருப்பொடித்த விறைவர் மலர்த்தா ளருச்சிப்பின்
பொய்யி லறிவுள் ளகத்தரும்பப் புணர்பக் குவத்தை வருவிப்பார்.
17
357எருமை யூர்தி யுயிர்குடித்த வெறுழ்த்தாட் புலவர் கழல்பழிச்சில்
பருவ முடையார்க் கிடர்பலவும் பாற்றி யபயங் கொடுத்தளிப்பர்
பொருவில் வலத்துச் சலந்தரனைப் புரட்டுங் கடவுள் பதமேத்தின்
வெருவில் யோக முழப்பவர்தம் வெகுளித் தழலை வீட்டுமால். 18
18
358பேணு மதில்க ளொருமூன்றும் பிழைப்பப் பொடித்தார் சரண்பரசில்
கோணை யுயிரை வயமாக்குங் குணமூன் றனையும் பேதிப்பார்
பூணு மதத்து நரமடங்கல் புரட்டுஞ் சரபத் தடிவழுத்தின்
மாணும் வினைமா யையின்வலிகள் வழுவக் கடைக்கண் புரியுமால் 19
19
359நெருப்புக் குளிரும் விடமுண்ட நீல கண்டர் சரண்டுதிப்பின்
இருப்புக் கிடனின் றெனமலநோ யிரியல் போகக் கடைக்கணிப்பர்
ஒருக்கி மனத்தை மூன்றுதா ளொருவர்க் கடிமை யுறச்செய்யின்
கருக்கை சரியை கிரியையோ கத்தி னுழக்குங் கடன்பணிப்பார். 20
20
360இருவ ரிருபாற் கிளைத்தெழுந்த வேக பாதர் தமைநாடில்
பொருவின் ஞான நிட்டையிவை புந்தி விழைய வருள்புரிவர்
தெருளு மறைகண் ஞாளியாய்ச் சிவணும் வடுகர்க் கன்புசெயின்
மருவுஞ் சங்க மனைத்தினையும் வழுக்கி முழுக்க வாழ்வரால். 21
21
361தரும விடையேற் றினிதுகந்த தம்பி ரானை விழைந்தடையில்
பருவ முடையார்க் கனுக்கிரகம் பரிந்து புரிந்து புரந்தருளும்
செருகு மிதழிச் செஞ்சடைச்சந் திரசே கரர்தாண் மனமுறுத்தின்
பெருகுஞ் சனன மரணத்திற் பெரிது மச்சந் தோற்றுவரால்.
22
362நின்று சபையி லானந்த நிருத்தம் புரிவார்க் காளாயின் 
வென்ற பொறியார்க் கானந்த வெள்ளம் பெருக விளைப்பரால்
துன்று சடையிற் றிரைக்கங்கை சுருக்கி னார்தங் கழலடையின் 
மன்ற வுயிர்க்கு நிரந்தரமா னந்த நிகழ வழங்குவரால்
23
363வேறு
மொழிந்த நாலிரு மூவர்க்கு மூலமாய்
ஒழிந்தி டாவரு வோடுரு வாய்மயல்
அழிந்த வாணொடு பெண்ணுரு வாகியும்
எழுந்த தாகு மிலிங்கநன் மூர்த்தியே.
24
364மாடு வேண்டினு மண்முழு தாளுறும் 
பாடு வேண்டினும் பண்ணவர் விண்ணமாள்
பீடு வேண்டினும் பேதுசெய் தியாவையும்
வீடு வேண்டினும் வெய்து முடிக்குமே.
25
365ஆத லாலிலிங் கத்தி னமர்ந்தருள்
வேத நாதனை மேதகு வைப்பிடை
ஏத நீங்க விறைஞ்சுது மென்றுளக் 
காதல் கைமிகக் காலவன் முன்னினான்.
26
366அண்டர் நாதனை யாங்கத் தலந்தொறும்
கொண்ட காதலிற் கும்பிட்டுப் போதுவான்
வண்டு பாட மதுப்பொழி பூம்பொழில்
விண்டு ழாவுறுங் கொங்கினை மேவினான்.
27
367ஆங்கு வைகு மமலன் பலதளி
தாங்கு காதலிற் றாழ்ந்தெழுந் தேகியே
ஓங்கு மாதி புரத்தினை யுற்றனன்
வீங்கு காஞ்சி நதிக்கரை மேயினான்.
28
368நலக்குங் காஞ்சி நதிக்கரை நண்ணலும்
வலக்க ணும்வலத் தோளுந் துடித்தன
அலக்க ணந்திக்கு மற்புத வைப்பிஃ
திலக்கம் பூசித்தற் கென்று மகிழ்ந்தனன்.
29
369மின்னொ ழுக்கி மிளிர்தர வைத்தெனப்
பொன்னொ ழுக்கிப் புகுநதிக் காஞ்சிநீர்
தன்னொ ழுக்கிற் றகப்புகுந் தாடினான்
மன்னொ ழுக்க மரபுளி முற்றினான்.
30
370வேறு 
அச்சு வத்திரட் கானகத் தூடுபோ யமரர்தம் மடவார்கள்
கச்சு வத்திரங் கலனொடும் வாழ்தரக் கருணைசெய் பெருமானை
விச்சு வத்திருப் பெயருடை விமலனை மெய்யடி யார்போற்றி
நச்சு வத்திர மைந்துடை நாதனை நனியிடத் தெதிர் கண்டான்.
31
371கண்ட கன்மல ருறுசிறப் பெய்திய காட்சியிற் புனற்றாரை
கொண்ட தண்ணன்முன் றாழ்ந்திடா துயர்தரு கொள்கையிற் கரம்வேணி
மண்டு சென்னிமேற் குவிந்தது கருணைமுன் மடிதரா தெழுந்தென்ன
மொண்டு கொண்டவே ரொடுமயிர் பொடித்தது முழுத்தவ னடிவீழ்ந்தான்
32
372புரண்டு மண்மிசை யெழுந்தனன் றொழுதனன் புரிசடை நறுந்தூளி
வரண்டி வன்னிலத் துழிதரத் தட்டமிட் டாடினான் வலம்வந்தான்
திரண்ட மாமறை பன்முறை பழிச்சினன் சென்றொரு மருங்கெய்தி
அரண்ட காதென வுலகுகை தொடுமுண வறமனுக் கணுத்திட்டான்.
33
373அற்றை நாளிர வுறங்கிலன் மற்றைநா ளலரிகீழ்த் திசைவேலை
உற்ற காலையி லெழுந்துகா லையிற்செயு முறுகடன் முறையாற்றி
வற்ற லோடுகை யேந்தினார் கோயிலின் வடகிழக் கினிற் காஞ்சிப்
பொற்ற நீர்நதிக் கரையினோர் சிவலிங்கம் புதிதுறத் தாபித்தான்.
34
374திருத்த மொன்றவ ணகழ்ந்தன னத்தடத் திருத்தமந் திரமோதிக்
கருத்தன் சென்னியி லாட்டியா ராதனைக் கடனெலா முடித்திட்டான்
வருத்தி யாக்கையைக் கனிபுனல் வளியுண்டு வரிசையி னவைநீக்கி
நிருத்த னைந்தெழுத் தயுதத்தை யாயிர நித்தலுங் கணித்தானால்
35
375ஆதி லிங்கரை யருள்பெறக் காலவ னடுத்துவந் தனையாற்றிச்
சோதி மல்கினா னெனப்பெயர் திசைதொறுஞ் சுலாவலி னாங்காங்கு
நீதி மல்குற வதிதரு மாதவர் நித்தலுங் மடுத்தேத்திக்
கோதி லத்தவன் குணங்கள் கொண்டா டுவர் குறுகுவர் தமதெல்லை.
36
376இசைப ரந்தெழ வின்னண மயுதமாண் டிவனருந் தவமாற்ற
மிசைப ரந்தெழு தேவரும் பூதரும் விரவியெங் கணுஞ்சூழ
நசைப ரந்தெழு சீர்த்திவெள் விடையின்மே னால்வகை யிசையெல்லாந்
திசைப ரந்தெழத் தேவர்க ணாயகன் சினகரத் தெதிர்நின்றான்.
37
377பஞ்ச துந்துபி முழக்கமுஞ் சிவகணம் பரந்தர கரவென்ன
விஞ்சு றுஞ்சிவ முழக்கமுஞ் செவித்துளை விரவமெய்ச் சிவயோகின்
நெஞ்ச முய்த்தவ னொய்யென விழித்தன னின்மலன் றனைக்கண்டான்
அஞ்சு முன்னமோ டெழுந்தனன் பணிந்தன னவசமாய்க் கிடக்கின்றான்
38
378வலக்க ணின்றநான் முகன்முக நோக்கினன் மழமத விடையூர்தி
கலக்க ணின்றன மெனவுள மகிழ்ந்தவ னடந்துதன் மருகனை
நிலக்க ணின்றெடுத் தொருகரந் தாங்கின னெடியவன் முகம்பார்த்தான்
அலக்க ணின்றிகந் தனமென மகிழ்ந்துசென் றவனொரு கரமீந்தான்.
39
379அருளிப் பாடிவண் வருகென விருவரு மறைந்துடன் புகுகாலை
இருளிப் பாடில தெனுங்குழ லுமைமுக மிறைவனோக் கினனன்னாள்
தெருளிப் பாடுற லறிந்துகொ லினியிவன் றிகழுநம் மோடொன்றாய்
மருளிப் பாடற வதிபவ னல்லனோ வெனவரு நகைகொண்டான்.
40
380தாதை தாதைமூ தாதைதன் றாதையுந் தடங்கரந் தரப்போந்த
மேதை மீட்டுமங் கிறைஞ்சின னெழுந்தனன் வியந்தனன் வலம்வந்தான்
பேதை பாகனை இமையவர்க் கிடர்புரி பேமதி லடுமேருக்
கோதை வார்சிலைக் கரத்தனை யுள்ளகங் குழைதரத் துதிசெய்வான்.
41
381வேறு
தேவர்கள் தேவ போற்றி செங்கண்மால் விடையாய் போற்றி
மூவர்கள் முதல்வ போற்றி முக்கணெம் பெருமான் போற்றி
மேவலர் புரமூன் றட்ட மேருவன் சிலையாய் போற்றி
பூவல ரிதழி மாலைப் புரிசடைப் புராண போற்றி
42
382மண்ணிடை யைந்தாய் நின்று மண்ணுமாய் வதிந்தாய் போற்றி
தண்ணிய புனலி னான்காய்ப் புனலுமாய்த் தவழ்ந்தாய் போற்றி
ஒண்ணிற வழலின் மூன்றா யழலுமா யொளிர்ந்தாய் போற்றி
திண்ணிய வளியி ரண்டாய் வளியுமாய் நவின்றாய் போற்றி
43
383வானிடை யேக மாகி வானுமாய் விரிந்தாய் போற்றி
பானுவுள் ளீடாய் நின்று பானுவு மானாய் போற்றி
தூநகை மதியுள் ளீடாய் மதியுமாய்ச் சூழ்ந்தாய் போற்றி
நானெனு முயிர்க்குள் ளீடா யுயிருமாய் நவின்றாய் போற்றி
44
384ஐம்புல வேடர் தாக்க வலைப்புண்டே னோல மோலம்
வெம்புடற் சிறையிற் பட்டு மெலிகின்றே னோல மோலம்
பம்பிரு வினையின் வல்லி பரிந்திட வறியே னோலம்
இம்பரித் தொடரி னின்று மெடுத்தரு ளிறைவா வோலம் 45
45
385பொறிவழி நடந்து கொட்கும் பொறியினைத் துடைப்பா யோலம்
நெறியெனக் குழியில்வீழ்த்து நிசியிரு ளறுப்பா யோலம்
அறிவென வறிவாய் நிற்கு மறிவக லறிவே யோலம்
செறிபொழிற் போதி நீழற் றிகழ்ந்தபே ரொளியே யோலம்.
46
386இருந்துதி முனிவன் கூற விமயவெற் புயிர்த்தா ளஞ்ச
வருந்துதிக் கையின் வேழ மலைத்தருண் முனைவன் கேளாத்
திருந்துதி கவலைச் சேற்றிற் சிக்கயாப் புண்ட நெஞ்சம்
பொருந்துதி யுவகை வேட்ட பொருளினி நுவறி யென்றான்.
47
387இத்தலத் திழிஞ ரேனு மிருந்தருந் தவங்க ளாற்றின்
அத்தமற் றவரு முத்தி யடைவது வேண்டு நின்பாற்
பத்திமை யடியேற் கென்றும் பணித்திட வேண்டும் வேட்ட
முத்தியீ தென்று தேற மொழிந்தஃ தீதல் வேண்டும்.
48
388என்றனன் முனிவர் கோமா னிமயவில் வாங்கி நொச்சி
வென்றவன் கருணை பொங்க வேட்டநல் வரங்க ளீந்து
துன்றிய குழுவை நோக்கத் தொழுதவை யகலப் போக 
நின்றவன் முடிகை வைத்து நிலையினை யுணர்த்தப் புக்கான்.
49
389வேறு
அகர மோடுறு மகரத்தின் வலிகெட வடுக்கும்
பகர மேவலும் பதிதன்ம முதலிய முறையால்
நிகழு மாவயி னீடருண் மலமற வுயிர்தான்
திகழு நானென வதனையே சிவமென்பர் தெளியார்.
50
390ஏக மேயெனு மிருக்கெனி னிருக்கினுட் பொருள்கேள்
ஏக மேபதி பலவல வெனுமது காண்டி
ஏக மேயெனச் சுட்டுவா னொருவனிங் குளனவ்
வேகன் போலல னிருண்மலத் தோடுள னிவனே
51
391மன்ற வேதமத் துவிதமென் றுரைத்திடு மரபால்
ஒன்ற லாற்பொரு ளிலையெனி னுணர்த்துதுந் தெளிதி
என்றும் வேறன்மை யுணர்த்துமிக் கிளவியே யிதனால்
நின்ற வாருயிர் பலவுந்தா னாய்நிற்கு நிமலன்.
52
392சொன்ன தத்துவ மசியெனுஞ் சுருதியின் மொழியும்
மன்னு காரணப் பதியுநா னெனவரும் பசுவும்
என்ன வேபொரு ளிருமைகண் டியைந்துவே றின்மை
தன்னை நாட்டிய தல்லது தனியென்ற தின்றே.
53
393ஈண்டு நாமுரைத் திட்டதே பொருள்பொரு ளேகம்
வேண்டி னாருரைத் திட்டது வெற்றபொய் யாதல்
காண்டி ஞாதிரு ஞானஞே யமுங்கரைந் தன்றால்
நீண்ட வேதமற் றொன்றென நிகழ்த்துமோ வதுதான்.
54
394சத்தி யாலுயிர்க் கிருளறத் தனுகர ணாதி
உய்த்து டங்குநின் றசைப்பதை யுணர்கிலார் பதியே
மெத்து மாயையிற் பிணிப்புண்டு வீற்றுவீற் றாகி
முத்தி யெய்துமென் பார்மொழி விரோதநீ தெரிதி.
55
395பொக்க மிக்கறப் புனலொடு புனல்கலந் தாங்குத்
தொக்கு நின்றிடு மறிவுட னறிவெனச் சொல்லின்
ஒக்கு நற்பதி யுயிரென லாமொத்த தென்னில்
தக்க சான்றுபா சத்துற லாதலிற் றவறே.
56
396ஆட்சி நற்கர ணங்கெட வாகுமுற் றுன்பங்
காட்சி யென்னக்கா ணாதமை முத்தியேன் மரண
மாட்சி நித்திரை மரத்துயி ராதியு முத்தி
மூட்சி பெற்றன வாமத னான்மொழி பிழையே.
57
397குளிகை தாக்கலுஞ் செம்புறு கோதுமுற் றழிய
ஒளிபெற் றாங்குறு மலமுயிர்க் கருளினா லொழியத்
தெளிவு சேர்வது முத்தியேற் செறிமலங் களிம்பின்
விளிவு றாதுநித் தியமத னாலிது வீணே.
58
398அருளெ டுத்தலு மெய்வகை யுணர்வுமைந் தொழிலும்
பெரிதெ டுத்திடு முயிரெனல் பிழைமறை பேசா
திருள டுத்தசிற் றறிவினுக் கைந்தொழி லெடாதாற்
பொருள டுத்ததண் புணரிநீர் முழுவது நாழி.
59
399மாட்டத் தங்கிய காட்டத்தி னங்கியின் மலத்தை 
ஓட்டித் தங்கலுஞ் சிவமுயி ரேகமா மென்னிற்
காட்டத் தின்மையங் கியினுறுங் கரையிரு பொருளும்
நீட்டித் தோர்ந்துபா ரேகமாய் நிற்குமோ நில்லா.
60
400வேனில் வெப்பிடை யுழன்றவர் மென்றரு நிழல்பெற்
றான வெப்பினைத் துடைத்தல்போ லரனடி நிழற்பெற்
றீன வல்வினை யிரித்துமென் பதும்பிழை மரம்போன்
ஞான வித்தக னவைநலந் தெரிதரா தவனோ.
61
401உலக மாய்ச்சிவம் பரினமித் துயிருமாய் வினையுண்
டிலகு பேரொளி யதீதத்திற் றருமென்ப ரிதுபொய்
உலகு காரண மாயையுண் ணான்வினை யமலன்
இலகு றாதொளி குருடனுக் கிருட்டறை யிடத்தே.
62
402
வினையொப் பெய்துழிக் கருவியு மலத்தையும் வீட்டி
முனைவ னல்கிய ஞானமு ஞானத்தின் முதலுந்
தனையு நோக்குறா தேகமாய்ச் சார்பய னுவப்பும்
புனைவ தின்றியே நிற்பது பொருளென்பர் சில்லோர்
63
403அருவ வல்வினை தொலைந்திலா தழியினுங் கருவி
மருவி நிற்பினும் வாய்மையெய் தாதவை யொன்றாய்ப்
பொருது மென்றிடி னபேதமாம் புணர்பய னுவப்பும்
ஒருவு மென்றிடி னென்பய னுரைத்தமுத் தியினால்.
64
404இன்ன பல்வகை யவரவ ரியம்புமா றெல்லாம்
நன்ன ரல்லன காட்டின நற்றவ வினிக்கேள்
முன்னும் வன்மலம் பசுபதி மூன்றுநித் தியமாய்
மன்னு மெங்கணு மாயினு மலமுயிர்ப் பதிவே.
65
405வேறு
சிற்றறிவாய்ச் சுதந்திரமின் மையுமா யன்றே
      செறிந்தவுயிர் கேவலத்தி னிருள்விழிபோற் கிடப்பப்
பற்றுபரு வத்திறைவன் பரிந்துடல விளக்குப் 
      பணிப்பவது வாய்வினையிற் படர்ந்துபுரி காலை
யுற்றமருந் துறுபித்துக் கறிவறியா மையினு
      மூட்டுதா யெனச்சிவபுண் ணியமுடனின் றுறுவித்
தற்றமிலா தியிற்பந்த மனாதியிற்பந் தமுமா
      யடர்ந்தமல மூன்றினையுங் கீழாக்கி யறுத்து.
66
406தத்துவத்தி னுருக்காட்சி சுத்தியுற லோடுந்
      தனைநோக்கி யுயிர்சிவமாத் தருக்கவிறை முன்னாய்
இத்தனைநாள் காறுமிடர்ப் பிறப்பிறப்பிற் படுநீ
      யிருஞ்சிவமன் றுனைக்காண வெடுத்தருளு முதறான்
சுத்தவரு ளெனக்காட்டக் கண்டருளாற் றொழில்க
      டோற்றுவலென் றெழவிரும்பி னெரிபோல அருளே
அத்தகைமை புரிவதுனக் கிலியெனத்த னுண்மை
      யறிந்தருளே முதலென்ன வருளாயே விடுமால்.
67
407அருளிதுமற் றனாதிமுத்தன் சத்தியவன் சத்தி
      மான்கிரண மலரியைப்போ லறிகஎன வறிந்து
பொருவில்சிவத் தினையருளுங் கழியவிழி கதிரைப்
      புணர்ந்ததென வொன்றாகா திரண்டாயும் படாமல்
பெருகுபர மானந்த வெள்ளமொன்றே திளைக்கும்
      பெற்றியிது முத்திநிலை பெற்றவுடல் பகலின்
மருவும்விளக் கெனமாயு மதற்கமைந்த வூழும்
      வதிந்திறைவன் றனதாக வேற்றிடுவன் காணே.
68
408சஞ்சிதமுன் பேயழிந்த தேறும்வினை யுளதேல்
      தயங்கருளி னிரியுமல மழியாது சத்தி
செஞ்சுடர்முன் னிருள்போலத் தேயுமுட லுலகில்
      திரிதருகால் வாதனையிற் றிறம்புவது முளதாம்
அஞ்செழுத்தை விதிப்படியுச் சரிக்கினது விலகு
      மாண்டருளுந் தனிமுதலை மூன்றிடத்தும் வழிபட்
டெஞ்சலிலாச் சீவன்முத்தி பரமுத்தி யிரண்டு
      மீண்டேபெற் றிடுவரிறை ஞானமுணர்ந் தோரே.
69
409வேறு
என்று காலவ முனிக்கிறைவன் முத்தி யருள
நன்று முத்திபெறு நற்றவன் மகிழ்ந்து தலைவா
ஒன்று வாதனையு மாக்கையொழி கிற்பி னிலையா
நின்ற விவ்வுடலு நீக்குகென வண்ண லருளும்.
70
410வெள்ளி யம்பல நமக்குளது வெள்ளி வரையில்
கள்ள வைம்பொறி கடந்துவரு கால வவதி
னுள்ளு மன்பர்வினை யோயவழி யாது தினமும்
கொள்ளு மின்பநட னங்குயிலு கின்ற னமரோ.
71
411போதி யம்பல மிதாமித னினும்பு ரையெலாம்
காதி யைந்தொழி னடித்துமது காண லரிதாம்
ஓதி யாய்ந்தவரு மாதலி னொரோவொ ருதினம்
பாதி மாதொடு பயின்றுபுரி தும்ப லர்தொழ.
72
412இன்ன தானவர சம்பல மிறைஞ்சி யிருநீ
நன்னர் மாலயர் தமக்குநட மாடு துமிவண்
அன்ன வேலைநட னந்தொழுதி யாக்கை யொழியும்
என்ன வோதினன் மறைந்தன னிலிங்க முதல்வன்.
73
413மும்மை வையகமு மேத்துமுதல் வன்ம றைதர
விம்மி னான்விழியி னீருக விழுந்த லறினான்
அம்ம வோவிறைவ னீங்கவுயிர் வாழ்க்கை யமரும்
எம்ம னோர்க்குமெளி வந்ததெவ னென்று கசிவான்
74
414வண்டு காளிறைவன் மாலைபுகு மின்ம துமிக
வுண்டு தேக்கெறிய லாகுநும துண்டி யொழிவில்
அண்ட வாணரறி யாயொரு மடந்தை யயர்வு
கண்டி டாமைகட னன்றெனுமி னென்று கரைவான்.
75
415இதழி வண்டெரிய னோற்றதிளி வந்த தலையென்
பதளு நோற்றன வராவினமு நோற்ற னகுறை
மதியு நோற்றது வயங்குருவி னின்ற விழியால்
பதியை நோக்குறவு நோற்றில னெனப் பரிவனால்.
76
416ஒன்ற வுள்ளகம் வரிக்குமொரு வன்படி யெலாம்
சென்று நோக்குதிசை தோறுமுரு வந்திகழ் தரக்
கன்றி னீங்குபசு விற்கடி தடுத்து நிலமேன்
மன்ற வீழ்ந்தெழும் வணங்குமிது மாய மெனுமால்
77
417அன்பெ லாமொரு பிழம்பென வடுத்த முனிவன்
இன்ப வெள்ளமினி தூறவதி வுற்றி றைவனார்
வன்பெ ரும்பழைய மாமல மிரித்த வடிவின்
முன்பு போலவழி பாடுகண் முடித்து வருமால்
78
418பள்ள மானபிற விப்பரவை நீத்த முனிவன்
தொள்ள மாகவருள் பெற்றமை தொகுத்துரை செய்தாம்
கள்ள வைம்பொறியி லீர்கடவு ளான்வ ழிபடல்
விள்ளு வாமென விலம்புமொரு சூத முனிவன்.
79


காலவன் வழிபடுபடலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் - 418
---------

8. காமதேனு வழிபடு படலம் (419-503)

419மைக்கி ளர்ந்த மணிமிடற் றண்ணலார்
முக்கு ணத்தினு மூவரைத் தோற்றினார்
அக்க டவுளர்க் காக்கம ளிப்பழிப்
பொக்க நல்க வுஞற்றுந ராயினார்.
1
420அன்ன மூவரு ளம்புய மேலவன்
மென்னு சாயம்பு மாமனுப் பட்டத்தில்
தன்னை நேருஞ் சகரனென் பானுல 
கின்ன றீர விருந்தர சாளுநாள்.
2
421படைக்க யோகிற் பயின்றிருந் தானவண்
விடைக்கு நித்திரை மேயது மேவலும்
படைப்பு நின்றது பார்த்தனர் வச்சிரப்
படைக்கை யானொடு பண்ணவர் யாவரும்
3
422அம்ம வோபக மேயய னித்திரை
விம்ம நின்ற விளைவிஃ தோர்ந்திடில்
செம்மை யன்றெனச் சிந்தை மருண்டனர்
இம்மெ னத்திருப் பாற்கட லெய்தினார்.
4
423இந்தி ரன்முத லோரிறுத் தாரென
வந்தில் வாயில்காப் பாள ரறைதலும்
மைந்த னித்திரை கேட்க மலர்விழித்
தந்தை நித்திரை யைந்தணந் தானரோ
5
424குரவப் பள்ளிக் குழலியோர் பாலுற
உரவப் பள்ளி யுகுமழை போலமர்
அரவப் பள்ளியி னான்றன தாரருள்
விரவப் பள்ளியுள் மேவிவ ணங்கினார்.
6
425அணங்கு வேல்வலத் தந்தர வாழ்க்கையீர்
உணங்கும் வாண்முகத் துற்றதிங் கென்னெனப்
பணங்கொள் பாயலி னான்வின வப்பணிந்
திணங்கு மன்பி னிமையவர் கூறுவார்.
7
426யாது காரண மோவறி கின்றிலோம்
பேதை யேம்பல காற்பிறப் பெய்துபு
சாத லெய்துழி யல்லது சார்தராக்
கோது நித்திரை கொண்டன னின்மகன்.
8
427படைப்பு நிற்பப் பணித்திடு மாயுளின்
தொடக்க முற்றிடுந் தொல்லுயி ரெல்லையீ
றொடுக்க முற்று மொடுங்கி னளிக்குநின்
நடைக்குத் தாழ்வு நணுகுவ தாகுமே.
9
428அன்ன வாறணு காமை யுலகெலா
மன்ன வாக்கம் வழங்குதல் வேண்டுமால்
கன்னி யந்துள வக்கடி மார்பினாய்
என்ன மீட்டு மிறைஞ்சின ரும்பரார்.
10
429வேறு
இலகொளிக் .கவுத்துவ மிமைக்கு மார்பினான்
அலமரு மமரர்த மார்வ நோக்கினான்
உலகுறு படைப்பொரு தேனு வாக்குமா
நலமுறச் செய்துநீர் நடமி னென்றனன்.
11
430விடைகொடுத் தருளலும் வியந்து துள்ளினார்
கடவுள ருடனுறை காம தேனுவங்
கடிமலர் முடிமிசை யணிந்த ராவின்மேல்
தடவிழி வளர்பவன் றனக்கி தோதுமால்.
12
431யானைமே லிடுமெழிற் பரும மில்லுறை
பூனைமே லிடுவது புகன்ற தொக்குமால்
கானுலா மலர்வரு கடவுள் செய்தொழில்
தேனுவா லாமெனச் செப்பு கின்றதே.
13
432அல்லதூஉ மடிகளுக் கசதி யாடுதற்
கொல்லுவ தாமொரு பேதை யேனிடைச்
சொல்லுலா நின்மகன் றோற்றத் தோன்றியான்
புல்லுறு பௌளத்திரி யான பொற்பினால்
14
433என்றுவான் சுரபியங் கியம்பக் கேட்டருள்
மன்றலந் துளவினான் மகிழ்ந்து நோக்குபு
நன்றுநன் றசதியா டிலந விற்றிய
தின்றுநீ யறிதிபட் டாங்கென் றேற்பவே.
15
434அத்தொழி லக்குதற் குரியை யல்லையேல்
உத்தமி யும்பர்முன் னுரியை யென்றுனை 
வைத்தியா முரைத்துமோ வசிக்கற் பாலைநீ
எத்திறம் வருமெனில் இயம்பக் கேடியால்
16
435அன்பினுக் கெளியவ னமல நாயகன்
வன்பினுக் கரியவன் மழவெள் ளேற்றினான்
தன்பதப் பணியினால் சகம ளித்திடல்
என்பணி யயன்பணி யெடுத்த லாகுமே.
17
436ஆங்கவன் பூசையா லணைவு றாப்பொருள்
ஓங்கிய வுலகினி லொன்று மில்லையால்
பாங்குற அவனடி பணிந்து போற்றுநின்
வீங்கிய சிருட்டிநீ விரைவின் மேவுதி.
18
437வழிபடற் குரியநல் வரைப்பொ ருத்தலின்
அழிமதக் கலுழியும் மலர்ந்த பூம்பொழில் 
பொழிமதக் கலுழியும் பொறிவண் டோம்புறும்
கழிசிறப் பிமவரை கடிதங் கேகென்றான்.
19
438மாயவ னருடலை வைத்துத் தாழ்ந்தெழூஉம்
பாயசீர்த் தேனுவின் படர்ச்சி நோக்கினார்
மேயவோ கையினுளம் விளங்கி விண்ணவர்
போயினா ரவரவர் புகலி டங்களின்.
20
439வேறு 
வழிக்கொளுங் காம தேனு மணியொடு கனகஞ் சிந்திச்
செழிக்கும்வெள் ளருவி யார்க்குஞ் சிமயஞ்சே ரிமய வெற்பின்
விழிக்கொளிர் சுடர்போ னிற்கும் விமலனை யுளத்தி லுன்னி
அழிக்குமைம் பொறிக ளோட வடுத்துமே லிவர்ந்த தன்றே.
21
440ஆங்கொரு சூழல் வைகி யரும்புனல் திருத்த மாடி
வீங்கிய வன்பு பொங்க வித்தகன் சரணம் பற்றி
நீங்கருந் தவங்க டேவ வருடமா யிரநி கழ்த்தத்
தேங்கிய கருணை வள்ளல் திருவுளக் கருணை கூர்ந்து
22
441மகதியாழ் முனிவ னீண்டு வருகென மதித்தா னன்னான்
பகவனா ரருள்கொண் டுய்ப்பப் படர்ந்தன னிமய வெற்பில்
தகவினாற் றவத்தி னின்ற தடமருப்பாவை நோக்கிப்
புகரிலா முனிவ னாங்குப் போந்தெதிர் நின்றா னன்றே.
23
442கண்டது காம தேனுக் கரையிலா மகிழ்ச்சி பொங்கக்
கொண்டல்கண் டெழுந்த மஞ்ஞைக் குலமென வெழுந்து தாழ்ந்து
கண்டிரண் முத்தஞ் சிந்தக் கசிந்துள முருகி நின்றங்
கண்டரும் வணங்கும் வீணை யருந்தவற் குரைக்கு மாதோ.
24
443வேறு
அருந்த வர்க்கு ளருந்தவ னாய வருந்தவா
திருந்து தாமரை மேய திசைமுக னானவன்
இருந்த யோகி னிடையே யிருந்துயின் மேவலின்
வருந்தி வானவர் மாயனை யண்மவம் மாயவன்
25
444படைக்க நீபனி மால்வரை மேவிப் பரமனார்
அடிக்க ணன்பு வழாமை யருந்தவ மாற்றென
விடுக்க விவ்வரை மேவி யிருந்தவ மேயினேன்
எடுக்குந் தேவ வருடமோ ராயி மேகின.
26
445இன்னு நாத னிருங்கரு ணைக்கிலக் காயிலேன்
என்ன வோகுறை யான்செய் தவத்தி னறிந்திலேன்
மன்னு பட்டிமை வல்லவ னாதலின் மாயவன்
சொன்ன தும்விளை யாடல்கொ லென்று துணிந்திலேன்
27
446கயிர வத்துரை கண்ண னுரைத்தன னாயிலும்
பயில ருந்தவர்க் கவ்வுழிப் பார்ப்பதி நாயகன்
செயிர றுத்துச்சிந் தித்தன யாவையுஞ் சேர்த்திடும்
புயனி கர்த்த கருணையு மென்னிடைப் பொய்க்குமோ.
28
447இன்ப மீதலிற் சங்கர னென்பரவ் வீசனார்
துன்ப மென்பாற் றுடைத்தில னாலெனச் சொல்லெழீஇ
அன்பி னாற்றொழு மாவினை நோக்கி யருந்தவன்
நின்பெ ருந்துயர் நீவுதி யென்று நிகழ்த்துமால்.
29
448தழுவி நீசெய் தவத்திற் குறையில தாயினும்
வழுவி லாக்குருக் காலமுந் தேயமும் வாலிதேல்
பழுதி லாத கருமம் விரைவிற் பயப்படும்
ஒழுக லாறிஃ தென்றலு மோதுஞ் சுரபியே.
30
449நின்னின் மிக்க குருவெனக் கில்லைநின் றாண்மலர்
தன்னை யான்றொழு கால மிதற்குச் சமமிலை
இன்ன வெற்பி னிடமிக்க துண்டெனி லவ்விடை
மன்னி யான்செயும் வாய்மை யருளெனத் தாழ்ந்ததே.
31
450தாழ்ந்த தேனுத் தழைப்பத் தவத்துயர் நாரதன்
வாழ்ந்த கண்ணருள் வைத்துத்தன் னெஞ்சிடை வள்ளியை
வீழ்ந்த கந்தனை யாதிபு ரேசனை மிக்குறீஇச்
சூழ்ந்து போற்றிச் சுதையென வோதத் தொடங்கினான்
32
451வேறு
சுரபி யைந்தெழுத் தேயெனத் தொல்லைமா நிலத்தில்
பரவு மந்தண மாய்ப்பயில் கின்றது பணிந்து
விரவு தேவரு மேன்மைநா டரிதுமே வினர்க்குப்
புரவு பூண்பதா லாதிமா புரியெனும் வைப்பு.
33
452சரத வந்நக ரெவ்வுழி யெனத்தள ரலைநீ
பரத கண்டத்திற் பசுந்தமிழ் நாட்டினிற் சைய
வரைத னக்குத்தென் றிசையினில் வளம்பயில் கொங்கென்
றுரைத னோடுய ரொருபெரு நாடுள ததனில்
34
453மதுவ னத்தின்மேற் றிசைப்பொறி வண்டுபண் பாடும்
புதும லர்த்திரள் சுழித்தெழும் பொங்குகா வேரி
நதித னக்குத்தென் றிசையினாம் பராவதி வடபால்
பதிவு கொண்டெழும் பவானியின் கீழ்த்திசை யுளதால்
35
454செப்பு மந்நக ரெல்லைக டிசைதொறு நாடின்
ஒப்பு மூன்றியோ சனையுள வும்பரார் சூழவ்
வைப்பின் மேற்றிசை முடிவினி லிரசத வரையாய்
முப்பு ரங்களை யெரித்தருண் முதல்வனே யிருந்தான்.
36
455அமல நாயகற் கேற்புற வவ்வரை வலப்பால்
விமல நாயகி விளங்குமே மாசல மானாள்
கமல னாரணன் கண்ணுதல் வலமிடம் வரலான்
நிமலன் பாலவர் தாமுநின் றார்நெடுங் கிரியாய்
37
456ஆர ணன்றனக் கருஞ்சிறை யிட்டவேற் கரத்தோன்
பூர ணன்றனக் கேற்புறத் தானுமோர் பொருப்பாய்
நார ணன்வரைக் கீழ்த்திசை நண்ணியவ் வரையில்
பார ணைந்தெழத் தனதிய லுருவொடும் பயின்றான்.
38
457குழைகி ழித்தெழு கொடுங்கணை விழியவ ளரவின்
இழைய ணிந்தவ னயன்புவி யிடந்தவ னிவருந்
தழையுந் தத்தம தோங்கலிற் சகமெலா மிறைஞ்சி
விழைய வேறுமாய்த் தமதிய லுருவின்வீற் றிருந்தார்.
39
458அந்த ரத்துளா ரனைவரு முனிவருஞ் சூரன்
வெந்தி றற்குளம் வெரீஇயர னருளினான் மேவித்
தந்தம் பேரினாற் றாபித்த சிவலிங்க மனேகம்
பந்த நீக்குமவ் விரசதப் பறப்பிடை யுளவால்.
40
459அவற்று ளொன்றனை யகனுறத் தொழினுநாற் பயனும்
நிவப்ப வெய்துறு நியுதம்பன் முறைகங்கை மூழ்கி
உவப்பின் விச்சுவ நாதனைத் தொழவுறும் பயன்கள்
தவப்பொ ருந்துமச் சயிலத்தை யொருமுறை காணின்.
41
460பண்டு நற்றவம் பயிற்றிய மாதவர்க் கன்றிக் 
கண்டி டப்படா தத்தகு கடவுண்மால் வரைதான்
அண்டர் நாயக னாகிய வவ்வரைப் பெருமை
கொண்டு ரைத்திடக் கூடுமோ வொருவர்க்குங் கூடா.
42
461அனைய வோங்கலைத் தன்னிடத் தணிந்துமூ வுலகும்
நினைவின் வந்தனை புரிதர நிமலனார்க் கிடமாய்த்
தனைநி கர்த்திடு மாதிமா புரியினைச் சார்ந்து
துனைய நின்விழை வெய்தெனச் சொற்றனன் மறைந்தான்.
43
462மகதி வீணையின் மாதவ னருளினை நோக்கிப்
புகலி லேற்கொரு புகலிடங் கிடைத்ததா லென்ன
அகம லர்ச்சியி னமரரா னருந்தவன் சரணந்
தகவ ணங்கியப் பனிவரை தணந்துசென் றன்றே.
44
463
உயர்ந்த சையமால் வரையினை யடுத்தவ ணொழிந்து
வியந்து விண்ணவர் போற்ருறும் வெள்ளியங் கிரியை
நயந்த டுத்தது நறும்பயஞ் செருத்தனின் றூறிப்
பயந்த கன்றினை யூட்டியுட் பரிவுசெய் சுரபி.
45
464வேறு
குருமலி நவமணியின் குவடுகள் பலநின்ற
மருவுசிந் தாமணியின் வளத்தன வுலமெல்லாம்
தருவென மரமெல்லாந் தழையொளி யிழைதருவ
கருவளர் கொடியெல்லாங் காமர்வல் லியின்வாய்ந்த.
46
465கற்சுனை நறும்போதுங் காமர்நீர் தவழ்வனவும்
விற்செறி யிருநிதியின் மேதக விளங்கினவால்
பொற்சிதர் ஞெமிர்சாரல் புல்லிய மிருகமெலாம்
நற்செயல் வளர்காம தேனுவி னண்ணினவே.
47
466எங்கணுந் தேவர்குழா மெங்கணு மரம்பையர்கள்
எங்கணு மிருடியர்க ளெங்கணு மகம்புரிதல்
எங்கணு விம்மிதங்க ளெங்கணும் பெருவளங்கள்
எங்கணு மெழிற்குகைக ளெங்கணு மினியனவே. 48
48
467அருவியின் குலமொருபா லலர்மடுத் திரளொருபால்
இருவியி னிலனொருபா லேனலின் புனமொருபால்
செருவினை வேடொருபால் தேன்முரல் வனவொருபால்
கருமுகில் தவழ்வொருபால் களிமயில் அகவொருபால்
49
468மும்மதக் களிவேழ மூடிய விருளத்துச்
செம்மணிக் குகையுள்ளால் சேவகங் கொண்டொழிந்து
சும்மைகொண் டொளிர்கிரணச் சோதியைத் தழலென்னா
இம்மென வீமனைப்போ லினத்தொடு மிரிவனவால்
50
469சோதிசெய் மரமந்தி துன்னுபு துயில்கூர்ந்து
பாதியி னிரவெல்லைப் பசுமயில் கண்மலர்ந்துக்
காதிய தழல்வந்து கதுவிய தெனவோடிப்
போதியல் சந்தானப் பொதும்பர்புக் குறைவனவே
51
470நஞ்சென வறியாது நளிர்மடுப் புனல்பருகித்
துஞ்சிய யூகத்தைத் துணையது விரையப்போய்
கஞ்சமொ டொளிர்கின்ற கற்சுனை யமிழ்தத்தைப்
பஞ்சியிற் றோய்த்தூட்டிப் பருவர லொழிவனவே
52
471பளிக்குக்குன் றருகண்மிப் பயிரவு மணைகில்லாக்
கிளிக்குறு துனிநீவக் கெழுமியங் குறுசேவல்
ஒளிக்கவி னிழனோக்கி யுதுவென முயங்குற்று
வெளிக்கணின் றதுநீங்க வேறுபட் டலமருமே
53
472இன்னன வளமெல்லா மிமையவர் பசுநோக்கித்
துன்னிய மகிழ்தூங்கித் தோடவி ழலருந்தி
முன்னுறு நதிக்காஞ்சி முரிதிரைப் புனலாடி
மன்னுறுகடனெல்லா மரபுளி முடித்தன்றே.
54
473வேறு
சீரேந்து தன்னிடத்தில் திகழ்ந்த வந்து பொருளோடும்
பாரேந்து பலபொருளும் பல்க வமைத்துக் கொண்டண்மி
நீரேந்து சடைமுடியி னிமல னாரை வழிபட்டுக்
காரேந்து மவ்வரையில் சிலநாள் கழிய வதிந்ததே.
55
474வேறு 
வரைநீ ளுச்சி தனின்முளைத்த மணிமா லிங்க மைந்தோடுங்
கரைநீர்க் காஞ்சி யிருமருங்குங் காழி லமரர் தாபித்த
புரைதீ ரிலிங்கம் பற்பலவும் பூசித் திருந்த கடவுளான்
தரைசேர் போதி வனத்திறைவன் தன்னைப் பணிய வெழுந்ததே.
56
475வேறு
மணிவாரிப் பொன்கொழித்து மலர்க ளுந்தித் தேன்விராய்
அணியாரத் தவழ்ந்தேகு மருநீர்க் காஞ்சி மருங்கூடு
தணியாத விழைவோடுஞ் சாருங் காம தேனுத்தான்
துணியார்சோ மன்வழிபட் டசோமே சரைப்பூ சித்ததே
57
476வேறு
என்ற வெல்லை சூதனை யிருந்த வர்வ ணங்குபு
நன்று சோமன் வார்குழ னங்கை பாக னார்தமைச்
சென்றுபூசை செய்தவேது செப்பு என்ன வன்னவன்
ஒன்று மன்பி னுள்ளக முவந்த வர்க்கு ரைக்குமால்.
58
477வேறு
முதலு கத்தினின் முளரி மேலவன்
புதல்வன் றக்கன்பூத் தனனைஞ் ஞூற்றுவர்
குதலை வாய்மொழிக் கொம்ப னார்களைச்
சுதைநி கர்த்தவத் தோகை மாரினுள்.
59
478எழுவர் கூடிய விருப தின்மரென்
றொழுகு தாரகை ஒண்க ணார்தமைக்
குழுமி விண்ணவர் குதுக லங்கொள
முழும திக்குநூன் முறையி னீந்தனன்.
60
479பங்க யத்தனும் பதினைந் தென்றுசொற்
பொங்கெ ழிற்றிதிப் பூவை மார்தமைத்
திங்க ளுக்குறச் சேர்த்தி னானவர்
தங்க ளன்பனாய்த் தருக்கி வாழுநாள்
61
480
மன்ற லங்குழன் மாது ரோகிணி
பொன்ற யங்குதோட் புணர்ச்சி யேவிழைந்
தொன்ற வேனையோ ரோர்ந்து தேய்கநீ
என்று சாபமங் கிறுத்திட் டாரரோ.
62
481அலங்கு பைங்கதி ரமர னத்திரி
நலங்கொள் சேவடி நண்ணித் தாழ்ந்தனன்
வலங்கொள் சாபத்தின் வரவு சொற்றனன்
இலங்க ருந்தவ னேவ வேகினான்
63
482குலிங்க ராதியோர் குறுகி யேத்துமப்
புலிங்கத் தீக்கையான் பொருப்பின் சாரலில்
இலிங்க நூன்முறை யிருவிப் போற்றினான்
கலிங்கத் தோலினான் கதழ்வின் முன்னுறீஇ.
64
483மாத ராரிடும் வலிய சாபமன்
போத முற்றுதல் புல்லு றாதுகாண்
ஆத லாலுட லல்கி மல்குகென்
றேத நீங்கவீர்ஞ் சடையி னேற்றினான்.
65
484அற்றந் தீர்தர வமல நாயகன்
கற்றைச் செஞ்சடை காணி பெற்றிடும்
வெற்ற வெண்மதி வெள்ளி வெற்பின்மேல்
உற்ற வேலையவ் வோங்கல் காண்பவர்.
66
485அலக்கண் முற்ருநீத் தாயுண் மல்குற
விலக்க ணத்தம ரினிய மாதரும்
நலக்கு மைந்தரு நவையில் செல்வமுங்
குலக்க டும்பொடுங் குழுமி வாழ்வரால்.
671
486தாம வான்மதி தாழ்ந்து போற்றிய
சோம நாதனார் மேன்மை சொற்றனம்
காம தேனுவக் கடவு ளார்தமை
ஏம மல்குற வினிது தாழ்ந்தபின். 8
68
487வேறு
கொங்கணே சுரரே யிராக்கதே சுரர்சீர் குலவனந் தேசுரர் வாய்மை
தங்கிய வாகீ சுரரகத் தீசர் தக்ககா ளீசுரர் தீர
எங்கணும் வளர்வேத் திரவனே சுரர்வீ ரேசரின் பருள்விசா கேசர்
துங்கமார் சாந்தா கேசுரர் தாலே சுரரையுந் தொழுதுதாழ்ந்ந் ததுவே.
69
488நயக்குமூ லேச ரிந்திரே சுரர்நா கேசுரர் காலவே சுரர்நோய்த்
துயக்கறும் வசிட்டே சுரர்வாம தேவே சுரர்காசி பேசர்தொல் வினையைப்
புயக்குநற் சனகே சுரர்புகழ் புலத்தி யேசர்பாற் கரேசர்புத் தேளிர்
வியக்கும்வண் பார்க்க வேசர்தம் பதமும் விதியுளி தொடர்ந்துபோற் றியதே.
70
489இடர்கெடுத் தருளு மங்கியீ சுரரே மேசுரர் நாரதே சுரர்நாற்
புடவியும் வணங்குந் தில்லைவ னேசர் பூங்கழற் பாதமு மேத்தி
விடபம்விண் டுழாவும் போதியங் கானின் விரிநிழ லகத்துற மேவி
அடர்பெரு வளமு மதிசயம் பலவு மவ்வயி னெடிதுநோக் கியதே.
71
490எங்கணு முப்பத் திரண்டிலக் கணத்தி னிலிங்கமோ பலவுள வெங்கும்
அங்கணர் பூசைக் குரியபல் லிடமு மமைந்துள வாதலின் யாங்குத்
தங்கிநா மெந்த விலிங்கத்தி லாரா தனைபுரி வாமென வயிர்த்துப்
புங்கவர் சுரபி நிற்பவா னூடு பொலிந்ததா லசரீரி வாக்கு.
72
491வேறு
விண்ணிடை வாழும் பசுவே நின்னையம் விடுதிகண்டாய்
ஒண்ணிற வாண்மதி சூடிய நாதற் குரிய தலம்
மண்ணிடை யீதன்றி வேறின்மை யோர்ந்துயர் மாதவரும்
எண்ணுறு தேவரு மென்று மிவணிருக் கின்றனறே.
73
492தணவாமை யீண்டு வதிதலை வேட்டுத்தண் மாமலரோன்
பணவா ளரவிற் றுயில்வோன் கணிச்சிப் படையவனும்
மணமாரும் போதி வனத்திடை யேவளர்ந் தண்டமளாய்
இணரா ரரச மரமா யிருந்தன ரின்புறவே.
74
493மூவரு மாகிய போதியின் மேற்றிசை மொய்கனக
மாவரை மேவிய நாவ லிறத்தன் மறுத்திருப்ப
மேவர வேற்றுரு வாயிருக் கின்றது வேதமொடு
தேவரு நாடருந் தேவன் றிருவருள் செய்திடவே.
75
494பாவலர் போற்ற வளர்பாரி சாதம் பலாமரந்தண்
பூவலர் மாவுஞ் சித்தே சமரமு மெனப்பொலியும்
நாவலர் போற்றிட நான்குகந் தம்மினு நாவலது
ஓவில தாகி யுகமொரு நான்கு முறுந்தொறுமே.
76
495கலியிடை யீசன் றிருவரு ளாற்சித்துக் கைக்கொளலான்
ஒலிமலர்ப் பன்னீர் மரமென வையக மோதுவது
நலிதலில் லாதசித் தேச மரமெனு நாமமுறு
ஞெலிதழன் மாதவர் நீக்க முறாவிந் நெடுவனத்தே.
77
496அன்னணம் வேற்றுரு வாகிய நாவற் கணியிடத்தே
மன்னிய பேரரு ளானாதி லிங்கம் வயங்கியதான்
முன்னொரு நாள்விந்த மால்வரை யண்ட முகட்டளவுந்
துன்னுத னோக்கி வடவரை நாணித் துளங்கியதே.
78
497இதனெக் கழுத்த மிறுப்பதெவ் வாறென் றினைந்துநிற்ப
மதனெக் கழுத்த மிறுத்த பிரான்மது வார்கமலப்
பதமிக் கழுத்துங் கருத்துடை நாரதன் பார்த்தணவி
யதனெக் கழுத்த மறுமா றுரைப்ப வெழுந்ததுவே.
79
498ஈண்டோர் கணத்தி லணைந்துவன் மீக மெனப்பொலிந்து
தூண்டா விளக்கன்ன சோதியைத் தன்னகத் தேநிறுவி
நீண்டானுங் காண்பரி தாகப் பொதிந்துநிற் கின்றதிதோ
காண்டாரை யாக நறும்பால் சொரிமடிக் காமர்பெண்ணே.
801
499இந்தவன் மீகத் திடைநறும் பால்பொழிந் தேத்துதிநீ
சிந்தையில் வேட்டது பொள்ளென முற்றுறுந் தேனுநின்பால்
வந்திடு மாறுமவ் வாறில் வருஞ்செந்நெ லாதியுங்கொண்
டந்தணர்க் கீந்துல கின்புறி னீயுய்தற் கையமுண்டே.
81
500வேறு
என்று வானி லெழுந்த வாக்கொ டிடக்க ணாட விரிச்சியும்
நன்றெ ழுந்தது நோக்கி நோக்கி நயந்து வாய்மை நவிற்றிய
வென்ற வைம்பொறி யானை யுன்னி வியந்து வாழ்ந்தன மென்றவண்
நின்ற தேனு நடந்து கஞ்சியி னீர்ப டிந்துப டர்ந்ததே.
82
501காத ரம்பல காவ தங்கள் கடந்தி ருப்பமுக் கண்ணனார்
ஆத ரம்பெரி துந்த னக்கணித்தாக வன்பு தழீஇக்கொடு
நாத னாருரு மூடு புற்றி னயந்து பான்முலை விம்முறப்
போத வாட்டி மகிழ்ந்து பூசை புரிந்த ருந்தவ மேயதே. 3
83
502நிச்ச நிச்சமிவ் வாறு பூசை நிகழ்த்தி யும்பர்த மாண்டுகள்
எச்ச மின்றியொ ராயி ரஞ்செல வெய்த ருந்தவ மேயதால்
பொச்ச மின்றி யெழுந்த வன்பு புகுந்து ருக்கநெ கிழ்ந்துள 
நச்சி நச்சி நறுங்க ணீருக நன்னெ றிப்படு தேனுவே.
84
503கற்ற கல்வியி னாம்ப யன்கரு தார்பு ரங்கன லூட்டிய
கொற்ற வில்லியை யேத்த லென்று குறித்த வாய்மையி னந்தணீர்
பெற்றம் வந்தனை செய்த வாறிது பிஞ்ஞ கன்குளப் புச்சுவ
டுற்ற வாறினி யோது வாமென் றுரைக்க லுற்றனன் சூதனே.
85

காமதேனு வழிபடு படலம் முற்றிற்று
ஆகத் திருவிருத்தம் – 503
------------------------------

9. குழகன் குளப்புச் சுவடுற்ற படலம் (504-627)

504கற்பக நீழல் வைகுங் காமரு தேனுப்
பொற்பகப் போதி நீழற் பூசிக்கு நாளி னோர்நாள்
முற்பகற் பூசை யாற்றி முதிர்தவத் திருந்த தாக
விற்பகற் கதிரோன் மேல்பால் வேலையைச் சாரச் சென்றான்
1
505தனதக மிருக்கை கொண்ட தம்பிரா னுருவ மெல்லாம்
கனலுறழ் நெய்த்தோர் தோய்ந்த காட்சியிற் பொலியு மாறு
முனமுல கனைத்து முன்னத் தறியுமுற் பனமே யென்னத்
தினகரச் செல்வன் மாதோ சேந்தன னுடலஞ் சால
2
506இரவெனுங் கால நண்ப னெய்துவ தோர்ந்து தென்பால்
பரவைமண் ணுலக மாது பசுமஞ்சள் குளித்த தேய்ப்ப
விரவிய வெப்ப நீங்கு மிளவெயின் மிளிர வேகி
அரதன மிமைக்கு மேல்பா லலைகடன் முகட்டைச் சார்ந்தான்.
3
507பகைகொளுங் கரிய நாக பற்றுபு பையப் பையத்
தகைகொள விழுங்கி யாங்குத் தரளமு மணியும் பொன்னும்
வகைவகை கரையி னெற்றும் வார்திரைக் கடலி னுள்ளால்
நகைகொளுங் கிரணக் கற்றை நாட்கதிர் குளித்த தன்றே.
4
508செம்மைசெய் யரசன் மாயத் திகழும்வெண் மதியார்க் கஞ்சி
விம்முறு தொழிலிற் பாங்கர் மேவிய மாந்த ரெல்லாம்
தம்முடை யிருக்கை யண்மித் தகவுற வடங்கி யாங்குக்
கொம்மெனப் பறவை யாதி குவிந்ததஞ் சேக்கை சார்ந்து
5
509உரியவ னொருவன் மாய வொக்கலு மயலுங் கூடிப்
பரிவொடு மவலித் தாங்குப் பகலவ னீங்க லோடும்
புரிமுறுக் கவிழ்ந்து பைந்தேன் பொழிமலர்ப் பொதும்பர் தோறும்
விரிசிறைத் தொழுதிப் புள்ளின் றுழனிமிக் கெழுந்த மாதோ.
6
510குடநிகர் செருத்தல் விம்மிக் குவிமுலை வீங்கித் தாங்காத்
தொடரிரு காலின் வாரச் சுவைப்பய மொழுகக் கற்றாப்
படுமணி யிரைப்ப வோடிப் பட்டிக டோறுஞ் சார்ந்தாங்
கடர்மனக் கனிவிற் கன்றை அழைத்திடுங் குரல்க ளெங்கும்.
7
511கலவிசெய் தவச மாகிக் காமரு சேக்கை யிட்ட
அலரணைப் படுக்கை நின்று மணங்கனார் தலைவ னீங்கத்
தலையெடுத் தெழுவ தென்னத் தழற்கதிர்க் கலவி நீத்த
மலர்மதுக் கமலத் தோடு வண்டலை நிமிரா நின்ற.
8
512உருகெழு பரிதித் தோன்ற லொண்கதிர்க் கரத்தா லள்ளிப்
பருகலிற் குறைந்த பொய்கைப் பனிப்புன னிரப்பு மாபோன்
மருண்மலி மாலைக் காலம் வருதலு மனஞ்சோ காந்து
பெருகிய கண்ணீர் வாரப் பேதுறு நேமிப் புள்ளு. 9
9
513பருதியங் கடவு ளென்னும் பற்றல னிரியல் போக
வருமதி யரசற் குற்ற மாலையஞ் செல்வ னன்னான்
பொருண்மலி தெனாது திக்கின் புடவியா மனையைச் சால
இருளெனுங் கதவஞ் சாத்தி யிருந்தனன் காவல் பூண்டு.
10
514ஒற்றையந் திகிரி யெங்கு முருட்டிவார் கிரண மென்னப்
பற்றிய செங்கோ லோச்சிப் பரிவுசெய் யிரவு நீக்கிக்
கொற்றவ னேக வாங்கே குறுநில மன்ன ரென்ன
முற்றிய மாலை நோக்கி முல்லைக ணகைத்த மாதோ.
11
515வெய்யவற் கொளிமை யாந்து வேறுபட் டிருந்த செந்தீ
உய்யவெண் மதிக்கீழ்ச்சில்ல தேயமுற் றாள்வ தொப்ப
மையணி விழியி னார்கள் வயக்குமொண் விளக்க மாகி
யையென மனைக டோறு மமர்ந்தொளி கஞற்று மாலோ. .
12
516அருவிமும் மதமால் வேழத் தகடுகீண் டயில்கொள் சூலத்
தொருவன்வந் தெழுந்த தேபோ லுலகெலாம் பொதிந்து நின்ற
இருணெடு வயிறு போழ்ந்திட் டெழுந்ததா லெறிநீர் வைப்பின்
மருவிய பைங்கூ ழெல்லாம் வளர்த்திடு முவவுத் திங்கள்.
13
517உரகமுண் டுமிழ்ந்த காலை யுட்டுளை யெயிற்றுக் காரி
விரவிய தென்ன நாப்பண் விளங்கிய களங்கத் திங்கள்
கிரணங்கள் கஞற்றிற் றெங்குங் கிளரிருட் கபாட நீக்கிப்
பரவுமிற் பொருளைக் கையிற் பரிசித்துப் பார்க்கு மாபோல்.
14
518வரையெலாம் வெள்ளி வெற்பின் மயங்கின மாயோன் பாயல்
திரைதவழ் கடலே யென்னத் திகழ்ந்தன கடல்களெல்லாம்
புரைதபு வெள்ளி தன்னாற் பொலிந்ததோ ருலகே யென்னத்
தரைவள ருலக முற்றுந் தயங்கின கிரணத் தம்மா.
15
519விழைதகு கருப்பு வில்லி வெண்மதிக் கவிகை முற்றும்
தழைதகத் தூக்கு முத்தின் றாமங்க ளரசங் காட்டுக்
குழைதகு சாகை தாக்கக் கொம்மெனச் சிதர்ந்து சுற்றின் 
உழையுழை கிடத்தன் மானு முடுக்களங் கொளிர்ந்த தோற்றம்.
16
520மைந்தர்க ளாக்கங் காண வயிறுவாய்ந் துயிர்த்த தாயர்
சிந்தையின் மகிழ்ச்சி மேன்மேற் றிளைத்தெழல் திண்ண மன்றே
சந்திர னெழுத லோடுந் தரங்கநீர்ப் புணரி பொங்கி
அந்தின்மிக் கெழுந்த தென்ப ஆரவா ரத்தினோடும்.
17
521மறைநெறிக் கஞ்சாத் திங்கள் வார்கதிர்க் கரங்க ணீட்டி
மிறைசெய வுள்ள மாழ்கி மெலிந்தென தகத்தின் மன்னு
நிறையினை யழித்த லென்னா ஞெரேலெனக் கும்பிட் டாங்குத்
துறைமலி கமலக் காடு தூமலர்க் கூப்பி நின்ற.
18
522பாங்குறு கமல மாதைப் பகலவன் கலவி யாற்ற
ஈங்கிது பார்த்த லொண்ணா தெனவளர் குவளை யெல்லாம்
தீங்கினுக் கஞ்சி மூடுஞ் செறிதிதழ் மலர்க டம்பால்
தாங்கிய வன்பர் காணத் தடந்தொறும் விழியா நின்ற.
19
523நீத்தனை யெம்மைச் சால நெருப்பென வுடற்றும் வெய்யோன்
பாய்த்திய மிறையிற் படுப் பருவர லுழந்தேம் பாராய்
காத்தினிக் கைக்கொ ளென்று கனிந்துசெவ் வாய்விண் டாங்கு
பூத்தன கயிர வங்கள் புதுநிலா வெறித்த லோடும்.
20
524தாமரைப் பொகுட்டின் மேவித் தண்ணறா நுகர்ந்த வண்டு
காமரு குமுத நீலங் கதுவித்தேன் பருகா நின்ற
தேமரு செல்வ மாயச் சேர்ந்தவர் தம்மை நீத்திட்
டேமரு மேதி லார்பா லிரும்பயன் றுய்ப்பார் மான. 1
21
525கணவர்தம் வதனத் திங்கட் கருணையஞ் சுதைகூட் டுண்டு
பணவர வல்குல் நல்லார் படர்விழிச் சகோரங் கொட்ப
உணவினை விழைந்து சூழ்ந்த வும்பருஞ் சகோரப் புள்ளும்
இணர்படு கிரணத் திங்க ளின்சுதை நுகரா நின்றார்.
22
526வேறு
பகலிற் றாக்கிய படர்சிறைக் காக்கையின் குழாங்கள்
உகலிற் சார்தரவொறுப்பன கூகையின் குலங்கள்
நகலிற் றீதரு நாமவே லரசர்நண் ணாரை
இகலிற் றீர்தரு காலம்பார்த் திறுப்பது தகைய.
23
527அரிய லாருந ரொருபுற மரிவையர் தமக்குத்
தெரியல் பூண்கலன் அணிகுந ரொருபுறந் திணிதோட்
பிரிக லாதவ ரொருபுறம் பிரிந்தவர்ப் பெறாமை
உரிய மாணல மிழக்குந ரொருபுற மானார்.
24
528திமிர வேழத்தைத் தேம்பொழிற் பாசறைத் தளைத்து
நிமிரும் வாண்மதிக் குடையெழ நிறைமணஞ் சீதம்
உமிழ்மென் கான்மணித் தேருடை யமரனு முடற்றுந்
துமிலப் போர்துறந் திரதிதோட் டொய்யிலிற் றோய்ந்தான்.
25
529மாத ராரிணை விழச்சுமா செனத்தெளிந் தகன்று 
காத லாரண மறிகலான் கழற்றுணை நிறுவி
ஏத மேதுமெய் யாதமெய் யிருடியர் தமக்கும்
போத மாதர்பாற் புகுவதற் கெழுந்ததவ் விரவு.
26
530உயிர்கள் யாவையு முவப்புறு முவாமதி யிரவில்
எயில்கண் மூன்றையு மெரித்தவர் பூசனை யியற்றிச்
செயிரெ லாந்தபு தேவரா னிருக்கையைச் சேர்ந்து
பயிலும் யோகத்தி னிருந்தது படர்பொறி யடக்கி.
27
531ஆய காலையி லறவனார் திருமுன்ன ரெல்லா
மேய வானிரைக் கன்றொடு மேவியாட் டயர்ந்து
தூய தேனுவின் கன்றிருந் ததுசுடர் மதியின்
பாய வாணிலா நோக்கியுட் படர்களி கூர்ந்து.
28
532மதியெ னுந்தனி மாமனு மகிழ்ச்சியி னோக்க
நிதிகு ரங்குற நோன்மைசால் வாலினை யெழுப்பிப்
பதிசெ வித்துணை நிமிர்தரப் பார்சித ளெடுப்பக்
கதிகொண் டோடிய துளர்தரு காலும்பின் னாக.
29
533ஓடிச் சேணிடை நிற்குஞ்சற் றொய்யென மீளும்
வாடி வேரொடு மிறும்புகள் குளம்புற்று மடிய
நீடி நின்றபைம் புதலினைக் குப்புறு நிமிறுங்
கூடி நின்றகன் றினத்துறுங் குறுகிமோந் தார்க்கும்.
30
534நிலங்க திர்த்தகோட் டினுநெடுந் தாளினு மகழும்
விலங்கி மேக்கெழீஇப் பின்னடி விதிர்ப்புற வோடுங்
கலங்கும் வன்றலை துளக்குங்கா சினிதுக ளாடி
இலங்க மண்டிலங் கொளுந்திசை திசையிரி தருமால்.
31
535நிருத்த மாட்டயர் நிருமலன் கன்றுரு வாகித்
திருத்த மேவரச் செய்திடு நடனமீ தொன்றோ
கருத்தி னாடரி தெனக்கட வுளர்விசும் பேறி
உருத்த வன்பொடு மிமைப்பிலா விழிப்பய னுற்றார்.
32
536சடச டென்றிரி தருந்தனி யோதையுந் தழங்கப்
படர்நெ டுங்குரல் பயிற்றுறு மோதையும் பரப்ப
அடர்வ னத்துறை பறவையு மிருகமு மஞ்சிக்
குடர்கு ழம்பவோட் டந்தன வூர்வன குமைந்த.
33
537கவைய டிப்படுங் கதிர்மணிக் குலங்களும் பொடிந்த
குவையி லைத்தருக் கோட்டிடைப் படுவன துமிந்த
இவையெ னத்தெரி யாவகை யிலதைகள் குழைந்த
அவையி ழைத்தலி னாங்குறை நிரைகளும் வெருண்ட.
34
538அன்ன கன்றுடை யுறுப்புறுப் பமர்தரு மமரர்
இன்னன் மிக்குழந் தெய்த்தன ரென்செய வல்லார்
வன்னி கொன்றையு மத்தமு மலைத்தவார் சடில
முன்ன வன்றனைக் காவென முறைமுறை பணிந்தார்.
35
539
அட்ட நாகமு மட்டதிக் கயங்களு மலைந்த
முட்டி லாதுமண் பரித்தமா சேடனார் முடிகள்
சட்ட வாற்றில வாயின தவிர்ந்துவா ழிடமாய்
விட்ட மாதிரத் தலைவரும் விதிர்விதிர்த் தனரே.
36
540அடிய ழுந்தமிக் கிடுந்தொறு மவனிகம் பிப்ப
நெடிய குன்றுக டுளங்கின துளும்பின நெடுநீர்க்
கடல்க ளூடிய காரிகை மடந்தையர் கணவர்
தடவு வார்புய மிறுகுறத் தழீயினர் தாமே.
37
541களிமி குந்தெழ வின்னண மாட்டயர் கன்று
நெளிய வன்னில ஞெரேலென நேருற வோடி
ஒளிசெ யாதிலிங் கத்தினை யுள்ளுறப் பொதிந்து
வெளியி னின்றவன் மீகத்தை மிதித்ததோ ரடியின்.
38
542நீட்டி யிட்டகா னிருமலன் சென்னியி லழுந்திப்
பூட்டி யிட்டெனப் புயக்கவந் துறாமையின் முகத்தைக்
கோட்டிக் கோட்டினாற் கோட்டுமண் கொண்டுபுற் றுடைத்துச்
சேட்டு மாமணி யுருவமுங் கீழ்ந்துசென் றதுவே.
39
543குளம்ப ழுந்திய வூற்றினுங் கோடுபுக் கெடுத்த
இளம்பு ணூற்றினு மெழுந்தநெய்த் தோர்பெரு கியதால்
களம்பு குந்துபுற் றுருவமாய்க் கரந்தமா மேரு
வளம்பொ லிந்ததன் னொளியினை வயக்கினான் மான.
40
544திண்மை மல்குமண் பொதிந்துபூ சனைபுரி திறனோர்ந்
தொண்மை மல்கிய வங்கியும் பூசனை யுஞற்ற
வண்மை மல்கிய திருவுரு வளைந்ததும் போலுந்
தண்மை மல்கிய செம்புனல் பெருகிய தயக்கம்.
41
545வேறு
இறைவனார் திருமேனி யிளங்கன்றி னிடருழந்த
மிறைதெரிந்து சோகத்தின் விழுந்ததுபோ லுயிர்த்தொகுதி
பொறிதவிர வருதுயிலிற் புணர்யாமங் கழிதரவை
கறையடுத்த துறுசோகங் கழிக்கவரு மருத்துவன்போல்.
42
546கனிவாயைத் திறவாது களத்தொலிகொண் டழுவார்போல்
கனிவாயி னிசைமிழற்றி நண்ணுவவண் டலர்தோறும்
பனிவாய்ந்த மலர்களின்வாழ் பண்ணவர்க்குப் பணிவார்கட்
கினியான்மெய் வடுப்பட்ட திசைத்திசைத்தே குவபோல.
43
547நிலவுமிழும் பணிக்கிரண நிரப்பவருங் குளிர்க்குடைந்திட்
டெலிமயிர்ச்செம் போர்வையழ கெறிக்குமுருப் போர்த்ததுபோல்
ஒலிகுருதி கொப்பளிக்கு மூறுதெறிந் தாற்றாமே
கலிகெழுவன் குரலெழுப்பிக் கரைவனகோ ழிக்குலங்கள். 4
44
548திரணமெடுத் திடைநாட்டித் தேவர்கடம் வலியழித்த
பரமரெறுழ்த் திருமேனி படுமூறு தெரிந்ததனால்
உரன்மலிந்து வரும்பாவ மொழிப்பமுயன் றனபோல
வரமலிந்த வலிகெழுவு மனுக்கணிப்ப கருங்குருவி.
45
549எட்டுருவி னோருருவா யிருந்தநா மெம்பிராற்
கிட்டமுறுந் திருமேனி யிடர்காணத் தகுமேயென்
றுட்டிகழும் வருத்தத்தா லொளிமழுங்கிற் றுவாமதியம்
அட்டுமொளி விளக்கழலு மவ்வாற்றின் மழுங்கிற்றே.
46
550உருத்திரனைச் சதாசிவனை யொளிர்விந்து நாதத்தைக்
கருத்திறந்த பேரொளியைக் கடப்பாட்டிற் றியானித்தார்
வருத்தமறுஞ் சரியைமுத னாற்பணியு மரீஇயினோர்
திருத்தனவ னுருச்செம்புண் தீரநினைப் பார்போல.
47
551கூகைவிழி யொளிவிளங்கக் குணிப்பரிய பலவிழிகட்
காகுமொளி யடக்கமுற வடுத்தவிர வினைநோக்கி
ஏகுதிகொ லெனவியம்பி யிழித்தலர்தூற் றுவபோலச்
சாகைதொறும் வளர்சேக்கைத் தடஞ்சிறைப்புள் சிலம்பினவே.
48
552கருமவுத யந்தழைத்துக் கழிகாலைக் கனலியந்தேர்
அருணவுத யஞ்சிறந்த தரசனென விருந்தவன்கன்
றுருவினிறைக் கிடர்செய்த தோர்ந்திலனென் றுயர்கணங்கண்
மருவுமவன் றிசைநகரம் வாளெரியூட் டியதென்ன.
49
553வேறு
பனியெனும் பருவந் தாக்கப் பங்கயப் பொய்கை முற்றும்
நனியழ கிழந்தா லென்ன நாயக னிறத்த லோடும்
வனிதைய ரணிநீத் தென்ன மதியொடு முடுக்கண் மாயத்
தனியொடு வான மாங்குத் தவ்வென விருந்த தம்மா.
50
554வேறு
கண்ணாக வுருவாக கைக்கொண்டோன் றிருமேனி
புண்ணாகத் தனதுருவும் புண்ணாதல் கற்பென்று
மண்ணாத மணியுருவம் வார்குருதி யெழப்புண்ணாய்
விண்ணார வெழுந்தான்போன் றெழுந்தனன்வெங் கதிர்க்குரிசில். 1
51
555வேறு
நெருங்கிவிண் ணமரர் சால நெடுமலை கொண்டு வாட்டத்
தருங்கதிர் மணியெ வர்க்கும் பயன்படத் தக்க தன்றென்
றிருங்கதிர் மணியை யாரு மின்புற வீன்ற தென்ப
கருங்கடன் மருங்கு சூழ்ந்த காமர்பாற் புணரி நாண
52
556நெருப்பிது சுடுமென் றஞ்சி நிறைபுன லள்ளி யோக்கி
விருப்பொடுந் தணிப்பார் மான வெஞ்சுட ரெழுத லோடுந்
தருப்பண மறையி னீதி தவறிலர் செய்யா நின்றார்
பொருப்பினை வணக்குந் திண்டோட் பூரணன் பாதம் போற்றி.
53
557வெய்யவ னுருவ நோக்கி வெருண்டுபைங் குவளைக் கானம்
ஒய்யென மலர்க்கண் மூடிற் றுவாமதிக் கலவிக் காலை
யையென வுறுத்தப் பட்ட வணியிதழ்க் குறியைக் காப்பச்
செய்யவாய் மூடிற் றோடைத் தேம்புனற் குமுதக் காடு.
54
558தணந்தவென் கணவன் வல்லே சார்தர வருளு கென்னாப்
பணந்தழை யரவ மாலைப் பகவனைக் கரங்கள் கூப்பும்
மணந்தவழ் கமல மென்றூழ் வருதலுந் தழுவி மார்பம்
புணர்ந்திடக் கூப்புங் கைகள் பொருக்கென விடுத்து நின்ற.
55
559ஆடவர் மணித்தோ ளார வணைந்திராப் பொழுது முற்றும்
பாடகத் தளிர்மென் பாதப் பாவையர் குவவுக் கொங்கை
பீடுமிக் குறுத னோக்கிப் பின்கொடுத் தினைந்தா லென்ன
வாடிய நேமிப் புட்கள் வயின்வயின் மகிழ்ச்சி கூர்ந்த.
56
560விளம்பிய காலைப் போதின் விரைகமழ் தீர்த்த மாடி
உளம்பொதி யன்புபொங்க வுருகட னாற்றித் தேனு
இளம்பனி மதிவெண் கோட்டின் எரிபுரை சடிலத் தேவை
நுளம்புறு வனத்திற் பூசை முடித்திட நோக்கிற் றன்றே.
57
561தீதுறு சகுனங் காட்டத் தெய்வதச் சூழ னீண்ட
பாதவங் கிடந்த வாறும் படர்துகள் பட்ட வாறும்
பூதலம் புழுதி பட்ட புதுமையு நோக்கி யென்னே
ஈதிவ ணிகழ்ந்த வாறென் றெண்ணியங் கேகுங் காலை.
58
562பாலினா லட்டப் பட்டுப் பளிக்கொளி காட்டும் புற்றின்
மேலெலாஞ் செந்நீ ராடி மிளிர்தலை நோக்கி யீது
மாலினார் பூசை யாற்றி மந்திரத் தருச்சித் திட்ட
சேலினார் தடத்துச் செந்தா மரைமல ராகு மன்றேல்.
59
563பத்தியிற் றனத னண்மிப் பதுமரா அகத்தின் குப்பை
மெத்துறச் சொரிந்து பூசை விளைத்ததொன் றாகு மன்றேல்
அத்துமற் றமரர் செஞ்சாந் தணிந்ததா மதுவு மன்றேற்
கொத்துறு மசுர ரன்பிற் கோடித்த செம்பட் டாமல்.
60
564என்றுசே யிடையே கண்ட விமையவ ருவக்குங் கற்றான்
மன்றவீ தெனத்தே றாத மனத்தொடு மனவே கத்திற் 
சென்றது தேவ தேவர் சிந்தையு நாடொணாத
கொன்றைவார் சடையான் வைகுங் குரூஉமணிப் புற்றின் பாங்கர்.
61
565பாயின குருதி நோக்கிப் பதைபதைத் தன்னோ வன்னோ
ஆயின செய்தி யென்னே யாரிது செய்ய வல்லார்
தாயினு மினியார்க் கீது சார்வதே யென்று தன்பான்
மேயின மழவுக் கன்றை விழியுறப் பார்த்துச் சோரும்.
62
566கோட்டொடு குளப்புக் கால்கள் குருதிதோய்ந் திருந்த கெட்டேன்
பாட்டளி முரலுங் கொன்றைப் பசுந்தொடைப் பரம னார்தந்
தீட்டிய புகழ்சான் மெய்யிற் செம்புனல் வெள்ளம் போர்ப்ப
வேட்டைவல் வினையச் சால வீட்டவோ வீண்டுப் போந்தேன்.
63
567பூவினா னுறங்க வாக்கம் பொய்த்ததும் புலவ ரீசர்க்
கேவினாற் கிசைத்த வாறு மேறுமா மவன்சொ னம்பித்
தாவிலாத் தவஞ்செய் தாய்ந்த தவத்தினான் கரைந்த வாறும்
மேவியா காய வாக்கு விரித்தது மிதற்கு மன்னோ.
64
568நன்னலம் பயப்ப துண்டேற் றீயவு நல்ல வாகுஞ்
செந்நல மிழப்ப துண்டே னல்லவுந் தீய வாகும்
இன்னவால் வினையி னாக்க மெனினிடை யேது வான
அன்னவர் தம்மை நோவ வழக்கிலை யந்தோ வந்தோ.
65
569நல்லுயிர் கோறல் செய்த நன்றியைக் கோற லாதி
புல்லுப பாத கத்துட் பொலிந்ததிண் வினைக ளாகுஞ்
சொல்லுமா பாத கங்க ளவற்றினுந் துயரஞ் செய்வ
வல்லதி பாத கங்க ளவற்றினும் வலிய வாமே.
66
570உறுமதி பாத கத்து ளொருவிழி நுதலிற் கொண்ட
மறுவிலிக் கிழைத்த குற்ற மாற்றுறு கழுவா யில்லை
தெறுவலிக் காலற் செற்றோன் சேவடிப் பிழைப்பி னுள்ளும்
பெறுமுரு வூறு செய்த பிழைக்குநேர் பிழையு மில்லை.
67
571அப்பிழை படைப்பு வேண்டி யருந்தவ மாற்றி நாயேன்
எப்புல வோருங் கூடி யின்னமு தெடுக்க முன்னி
ஒப்பின்மந் தரத்தை நாடி யுரகங்கொண் டலைத்து வேலை
வெப்புநஞ் சடப்பட் டாங்கு மேவினே னென்செய் கேனே.
68
572திருவடிப் பிழைத்தல் சற்றே செய்யினுஞ் செய்த பாவி
மருவிய குலத்து முன்னர் வந்திறந் தோரெல் லோரும்
பொருநின ரிருக்கின் றோரும் பொருந்தமேல் வருவோர் தாமும்
ஒருவரு நிரய முற்று மூழிகள் பலவுந் துய்ப்பார்.
69
573நன்குற நமக்கு நாடி யிருத்தலு நவையே யாகும்
மின்குடி கொண்ட மேனி விழுப்புணுக் காற்றே னாற்றேன்
என்குல மிறக்க வின்றே யானுமிங் கிறுக வென்னாத்
தன்குலக் கன்று மாழ்கத் தரையிடை விழுந்த தன்றே.
70
574
நாசியி னுதிரஞ் சோர நனிதலை நிலத்தின் மோதுங்
காசினி குழியக் கால்கள் கதுமென எடுத்துத் தாக்கும்
பூசிய நீற்றுத் தன்மெய் புண்கொளப் புரண்டு கொட்கும்
ஆசிடை யுயிர்ப்பு வீங்கி யடங்கமூர்ச் சித்த தம்ம.
71
575நெடிதுபோ தவச மாக நிலத்தெதிர் கிடந்த தாயைப்
படியின்மே னின்ற கன்று பரிவொடு நக்கா நின்ற
தடியினூ புரங்க ளார்ப்ப வாடிய வழக னோக்கி
நொடியின்வா னிடையே நின்றா னோன்மைசா லறவெள் ளேற்றின்
72
576வேறு
பாரிட நெருங்கமலர் பண்ணவ ரிறைப்ப
வாரண முழங்கவடர் பல்லிய மியம்ப
வாரணி முலைப்பெணிட மன்னின னிருப்ப
நீரணி வனத்தின்வெளி நின்றருளு நாதன்.
73
577ஓங்குமொலி யானுமிடை யும்பர்திர ளானுந்
தாங்கரு வெருட்கொடு தளர்ந்துவிழு தாயை
நீங்கியல மந்துநெடி தோடிய திளங்கன்
றாங்கதனை நோக்கியயன் மேல்விழி யளித்தான்.
74
578அந்தணன் வணங்கியரு கேமெல நடந்து
கொந்துபடு பாசறுகு கொய்துகர நீட்டிப்
பந்தமுற வங்கைவளர் பாசமிட றிட்டுத்
தந்தன னடத்தியொரு சாமிதிரு முன்னர்.
75
579அங்கணன் விழிக்கடை யளிப்பவரு ணந்தி
அங்கைகொடு தட்டியெழு கென்றறைய வூழி
அங்கியுமிழ் வேல்வல மணிந்தகும ரேசன்
அங்கணொழு கும்புன லகங்கைகொடு மாற்ற.
76
580ஐந்துகர னண்ணலருள் செய்யவுட லந்தை
வந்துபுழை வார்கையறன் மல்குதுளி யாக
வெந்துயரின் மூழ்குமதன் மெய்முழுது முய்த்தான்
நந்தியது சோகமுயிர் நந்தியது கற்றான்.
77
581சொறிந்தன னெழுந்தசுரை யானுடல் வலாரி
மறிந்துலவு காற்றினிறை வன்றுக டுடைத்தான்
செறிந்துபுன லாட்டிவரு ணன்செல முகுந்தன்
அறிந்திறைவர் தாளணிய தாகவுறு வித்தான்
78
582பண்டறிகி லாதபரமன் படிவ மாரக்
கண்டதுள நெக்கது கனற்கண்மெழு கென்ன
விண்டவிழி நீர்பொழிய மெய்ம்மயிர் பொடிப்ப
மண்டனில் விழுந்துவலம் வந்துதுதி செய்யும்.
79
583வேறு
தண்ணார் மதிசூ டியசங் கரனே
விண்ணோர் பணிகின் றவிழுத் துணையே
அண்ணா வருளே யமுதே யளியே
மண்ணா வினையேற் கெளிவந் தனையே. 80
80
5842ஆறா டியவாற் சடையந் தணனே
நீறா டியமே னியினின் மலனே
ஏறா டியநீள் கொடியெம் பெருமான்
மாறா வினையேற் கெளிவந் தனையே. 81
81
585ஏஎ யெனவேள் வியிறுத் திடுநாட்
காயா தபனார் பல்கழற் றினவா
வீயா தவிண்ணோர் தபவீட் டினவா
மாயா வினையேற் கெளிவந் தனையே. 82
82
586அடியா ரகமே குடியா மொளியே
படிநா டரிய பரதெய் வதமே
முடியா முடிவே முதலா முதலே
மடியா வினையேற் கெளிவந் தனையே. 83
83
587கங்கா ளமணிந் தகரும் புயனே
சிங்கா மலர்மெல் லணையான் சிரமொன்
றங்காந் துரையா டவறுத் தவனே
மங்கா வினையேற் கெளிவந் தனையே. 84
84
588அறிவா மமலே சனொடம் பிகையே
வெறியார் கடம்வீழ் கரடத் தவனே
பொறிமா மயிலூர் தருபுண் ணியனே
மறியா வினையேற் கெளிவந் தனிரே.
85
589வளிவந் துளர்போ திவனத் திடையே
களிவந் திலதான் கழிவுற் றதெனத்
தெளிவந் தவர்செப் பலுறா வகையே
எளிவந் தனைபொ லுமெனக் கிறைவா. 6
86
590அருண்மே னியளித் தவர்செய் தொழிலுள்
வெருளா துபடைப் புவிதிப் பலென
மருளான் மதியெண் ணிவலித் தமையால்
இருளார் பழிபா வமிணங் கினவே.
87
591கெட்டே னடிகேள் கிளர்பொன் னுருவம்
பட்டூ டுருவப் படர்காற் சுவடு
கெட்டூ சிநிகர்த் தமருப் புழவும்
ஒட்டா தவர்நே ரவுறுத் தினனே.
88
592கருணைக் கடலா தலினீ கடியா
திருமைக் குமளிப் பவெதிர்ந் தனையால்
அருமைத் திருமே னியணங் கவளெப்
பொருள்கொண் டுபொறுத் தனள்பூ ரணனே.
89
593கணவன் வழிகா ரிகையா ரதனால்
மணமென் குழன்மா துபொறுத் தலுமாம்
அணவுங் கணநா தர்முனா தவர்தாங்
குணம்யா வதுகொண் டுபொறுத் தனரே.
90
594தலைவன் வழியல் லதுசார்ந் தவரும்
உலைவொன் றுமுறுத் தல்செயா ரதனால்
நிலைநின் கருணைப் பெருநீர் மையறிந்
தலைசெய் திலரான் றகணத் தவரே.
91
595அன்னா பிழைசெய் துயிர்வாழ்க் கையுமிங்
கென்னா மதனா லெனையின் னருளால்
என்னா ருயிருள் ளளவுந் தழலுங்
கொன்னார் நிரயங் குடியாக் குதியால்.
92
596வேறு
நடுநடுத் தின்னண நவிற்று மாவினைக்
கடுமிடற் றிறைவர்கண் ணளித்துத் தேற்றுவார்
விடுவிடு கவலையை விதிர்ப்புற் றஞ்சலை
கொடுநெடும் பிழையினை யகத்திற் கொண்டிலேம்.
93
597மன்றநீ புரிந்திலை மறவி ளங்குழக்
கன்றறி யாமையிற் கண்டதிப்பிழை
ஒன்றுநின் பரிவினா லுளத்திற் கண்டிலம்
அன்றியு மடியவர் குற்றங் காண்கிலேம்
94
598குளப்படிச் சுவடும்வன் கோட்டி னேறுநம்
வளப்படு முடிக்கணி மதியி னாக்கினேம்
உளப்படு முமைமுலைச் சுவடொண் கைவளைத்
திளைப்புறு தழும்பும்போன் மகிழ்சி றத்தலின்.
95
599ஒள்ளிய விவ்வடை யாள மும்பர்சூழ்
வெள்ளியங் கிரிமிசை விளங்கி லிங்கத்து
நள்ளுற வணிந்தன நவிற்றி லிங்கங்கள்
தெள்ளிய வுலகம்வே றின்மை தேறவே. 96
96
600இவ்வடை யாளங்கண் டிறைஞ்சி யேத்தினார்
ஒளவிய மனத்தின ரேனு மன்னவர்
பௌளவமென் றயிர்ப்புறும் பவத்தி னீங்கிப்போய்ச்
செவ்விய முத்தியைச் சேர்வர் திண்ணமே.
97
601ஆதலி னின்பரி வகற்றிச் சூழலின்
மாதவ மாற்றிநீ வாடு கின்றனை
ஏதுளத் தெண்ணிய தியம்பு கென்னலுங்
காதலி னுரைத்திடுங் காம தேனுவே.
98
602வாழிநின் பொற்கழல் வாழி யென்பிழை
ஊழியு நிரயம்புக் குழந்துத் தீர்ப்பதோ
பாழிமால் விடத்தினைப் பருகி னாலென
ஏழையேற் கிரங்குநின் கருணை யீட்டமே.
99
603கடையனே னுய்ந்தனன் கன்று முய்ந்ததிங்
கிடையறா தென்குல மென்று முய்ந்ததால்
உடையவ பிழைபொறுத் துவத்தி மற்றினி
அடைவதுன் பாலெனக் கற்புச் செல்வமே.
100
604வானவர் சூழ்ச்சியின் மாலங் கேவலின்
ஆனமர் கொடியினா யகில மாக்கலும்
வானுற வருளுதி யெனலுந் தேனுவுக்
கேனவெண் கொம்பினா னியம்பு கின்றனன்.
101
605பத்தியு மளித்தனம் பலருங் காணிய
இத்தலத் திப்பொழு தெமது நாடகங்
கைதலக் கனியெனக் காட்டக் காணுதி
முத்தியும் வழங்குது முடிவிற் றேனுவே.
102
606வேறு. 
காம தேனுபுர மென்ன விந்நகரி காம மல்குபெயர் கொள்ளவும்
நீம னாதரவின் வைக லானரசி னீடு சூழலிது பட்டியென்
நாம மேவவு நமக்கு மப்பெயர்மு னாட்டி நாதனென வோதவும்
ஏம மாருலக முற்று மின்பமுற வீண்டு னக்குவர மாக்கினாம்.
103
607நேச மல்கிவழி பாடு செய்குநரை நீடு முத்தியி னிறுத்துநிர்ப்
பீச மாநகர மீதி தன்கணுயர் பெற்ற மேவிழைவு முற்றுறத்
தேசு லாவவுபொரு ளாதி நல்குவது செய்தி லேநகர முத்தியே
வீசு மென்பது விளக்க நின்றவொரு சான்று முண்டது விளம்புதும்.
104
608வடுக ரெண்மருள் வலம்பு ரிந்துமலி தோகை ஞாளியெனும் வாகனம்
விடுதி செய்தவொரு ஞான நல்வடுகன் மேவி யிந்நகரி காவல்பூண்
டிடுவ னீங்கினிது காண்டி யாதலி னிணர்த்த கோடுக ளொசிந்தெழக்
கடுவ னின்றுகளு மிவ்வ னத்துனது காம நல்குதல் கணித்திலம்.
105
609வரும்பி றப்பினல மெய்த நிற்குமறம் வந்த விப்பிறவி யின்னலந்
தரும்பெ ரும்பொருள் பரந்த காமமிவை தம்மை நாடிய தவங்களும்
அரும்பு மெய்யொளி யளிக்கு மிந்நகரி னைந்தி யோசனை தெனாதுற
விருந்து ணர்ப்பொழில் வராக நீள்வரை யிருந்த தானைமலை யென்பரே.
106
610தூம்பு றுங்கைமத வேழ மேய்ந்துபயில் சோலை சூழ்ந்தவத னுச்சியின்
ஆம்ப ரத்தினடி நின்றெ ழுந்தொழுகு மாம்ப ராவதி வடாதினில்
தேம்ப ழுத்துவரு காவி ரிக்குடதி சைக்க ணார்த்துலவு காஞ்சியென்
றோம்பு கின்றகுடி ஞைத்தெ னாதொருச பீச மாநகர முண்டரோ.
107
611வன்னி நீள்வன மிருத்த லானஃது வஞ்சி யென்றுபெயர் மேவிய
தன்ன மாநக ரடுத்து நம்முருவி னைது பூசைபுரி கிற்றியாங்
குன்ன வாவினை நிரப்பு துங்கடிதி னென்று ரைத்தருளி யும்பரார்
துன்னு சூழலிடை யார ணங்கடுதி செய்ய மாநடன மாடினான்.
108
612நந்தி மத்தள முழக்க வீணைகொடு நார தாதியிசை பாடநீள்
இந்து வென்றநுத லம்மை தாளமிசை யக்க ரத்தின்முறை யொத்திட
எந்தை போற்றிசய போற்றியென யாவ ருங்களி துளும்புற
அந்தி வண்ணனுயர் பிப்பி லப்பொதியி லாடல் கண்டதுயர் பெற்றமே.
109
613போதி யம்பல நடித்து நாதர்புனி தச்சி வக்குறியு ளாயினார்
சோதி மல்குநட னச்சுவைக்கட லழுந்து கின்றசுரர் கோதன
மாதி லிங்கமறை புற்று மற்றுமடி யோட கழ்ந்துவெளி கண்டது
கோதி லாதநிதி யஞ்ச னத்தவர் குறித்த கழ்ந்துவெளி கண்டென.
110
614இட்ட காற்சுவடு நீண்ட கோடுழுத வேறு நல்லவடை யாளமாம்
பட்டி நாயகர்வன் மீக நாதர்பக ராதி லிங்கமக லாதவர்க்
கொட்டு மன்புள மயற்பு றத்தொழி விசைந்தி லாமைசில நாளுற
முட்டி லாதவழி பாடு முன்னரின் முடித்தி ருந்திசைவு கொண்டபின்.
112
615பிப்பி லாரணியம் வெள்ளி மால்வரை பெருக்க றாதபிற வாநெறி
ஒப்பி லாதபிற வாநெ றித்தல மொளிர்ந்த பல்பொருளு மும்பரார்
எய்ப்பி லாதுபல கால மும்பணி யியற்றி லிங்கமொடு முள்ளகந்
தப்பி லாவகை யுறுத்தி றைஞ்சுபு தணந்த தாலமரர் கோதனம்.
112
616வேறு
மாடு போந்துறு மாதிர நோக்கி வணங்குபு
நீடு கின்ற வருச்சுன மால்வரை நேர்புகுந்
தோடு நீர்ச்சுனை தோய்ந்துமை யம்மை யுயிர்த்தருள்
நாடு செல்வத்தை நச்சி யிறைஞ்சி யெழுந்ததே.
113
617உச்சி யோங்க லிவர்ந்தத னூடுரு வப்புகுந்
தெச்ச மாக விருப்பன குன்றிடைத் தாழ்ந்துபோய்
எச்ச நாயக னாகிய வீசனிருந்தருள்
கச்ச மில்வள மல்கிய நாகங் கலந்ததே.
114
618அங்க ணாதன் முடித்தலத் தும்மடை யாளங்கண்
டெங்க ணாயக னின்னரு ளின்னண மோவெனப்
பொங்கு மார்வம் புறத்தெழ வன்பு புதுக்கிப்போய்ப்
பங்கி னாள்சிலை நண்ணி யவளைப் பணிந்ததே.
115
619அரிதி னங்ககன் றூடறுத் தேகி யயன்சிலம்
புரிதி னேத்தி யொழிந்து சென்றானை விலங்கலின்
வரிது ழாவிய வண்டுள ராம்பர மூலத்துப்
பெரிது மூற்றெழு தீர்த்தந் துளைந்தது பெற்றமே.
116
620ஆம்ப ராவதி யின்கரை யேநடந் தாங்கிடைத்
தோம்ப டாவகை சோமன் பணிந்தசோ மேசனைக்
கூம்பு றாதவன் பாற்குழைந் தேத்திகும் பிட்டுப்போய்
நாம்ப டாதரு ணல்கும்வஞ் சித்தல நண்ணிற்றே.
117
621அன்ன மாடு மகன்றுறைக் காவிரி யாற்றினும்
இன்ன றீர்த்திடு மாம்பர மாநதி யின்கணுந்
துன்னி யாடிச் சுருதிக ணாடருந் தோன்றலைப்
பன்னு நூன்முறைப் பூசனை யாற்றிப் பயின்றதே.
118
622கால காலன் கபாலங்கை யேந்திய கண்ணுதல்
ஏல வார்குழ லோடெதிர் தோன்றியெண் ணும்வரஞ்
சால வீசலுந் தாழ்ந்தது கொண்டு தணந்துபோய்
ஞால மாதி யுயிர்த்தொகை நன்று படைத்தவே.
119
623ஆன டுத்துயர் பூசனை யாற்றி யகிலமுந்
தான ளித்தலி னாற்கரு வூரெனத் தக்கது
வான டுத்தெழும் வஞ்சி பசுபதி யாயினோர்
பான நஞ்சினர் பாழியு மானிலை யாயிற்றே.
120
624கூர்க ழித்தலைக் கூம்பவிழ் நீலங்கண் ணீலந்தண்
கார்க ழித்த மிடற்றினர் காமர்பே ரூரின்விண்
ஊர்க ழித்துறு மானெதி ராட லுவந்தது
மார்க ழித்திரு வாதிரை நாளந்த மாண்பினால்
121
625ஆண்டு தோறுமந் நாள்வரும் போதங் கடுத்துயர்
தாண்ட வம்புரி தத்துவ நாதனைத் தாழ்பவர்
பூண்ட சோதி முடியடை யாளங்கள் போற்றுவோர்
நீண்ட மாலறி யாநிலை யெய்துவர் திண்ணமே
122
626அமிர்த மீன்ற வலைகடற் றோன்றிய வானுவந்
தமிர்த மாட்டி யருச்சனை சால வியற்றிய
அமிர்த லிங்கத் தமலர்த மிக்கதை கேட்டவர்
அமிர்த ராகுவர் செல்வரு மாகுவர் வாய்மையே.
123
627இது நாதன் முடிக்கடை யாள மியைத்தவா
றோதி னாமினி மாதவத் தீர்பொன் னுடையினான்
பூத நாதனைத் தென்கயி லாயத்துப் போற்ரிய
காதை கேண்மின்க ளென்றருட் சூதன் கரைவனால்.
124


குழகன் குளப்புச் சுவடுற்ற படலம் முற்றிற்று.
ஆகத் திருவிருத்தம் - 627 

 

பேரூர்ப் புராணம் - பகுதி-2


This file was last updated on 13 December 2008.
Feel free to send corrections to the webmaster.

Related Content

Sundaramurthy Swamigal - Thevaram - Thiruchchorruththurai

Sundaramurthy Swamigal - Thevaram - Thirukkazumalam

श्री दशिणामूर्ति स्तोत्रम - Shri daxinamurti stotram

ਸ਼੍ਰਿਇ ਕਾਲਭੈਰਵਾਸ਼੍ਹ੍ਟਕਂ - Kaalabhairavaashtakam

आर्तिहर स्तोत्रम - Artihara stotram