logo

|

Home >

puranas-stories-from-hindu-epics >

kandhapuranam-of-kachchiyappa-chivachariyar-tharakan-vathai-padalam

கந்தபுராணம் - உற்பத்தி காண்டம் - தாரகன் வதைப் படலம்

Kandhapuranam of kachchiyappa chivachariyar

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய

உற்பத்தி காண்டம் -  தாரகன் வதைப் படலம்


உ
செந்திலாண்டவன் துணை
திருச்சிற்றம்பலம்


20.  தாரகன் வதைப் படலம்

வெம்மை தீர்ந்திடும் அப்பெரு நெறியிடை விரைந்து
செம்மை சேர்தரு குமரவேள் படையொடு செல்ல
அம்ம சேர்ந்தது தாரகற் குறையுளாய் அடைந்தோர்
தம்மை வாட்டியே அமர்கிர வுஞ்சமாஞ் சைலம்.			1

விண்டு லாய்நிமிர் கிரவுஞ்ச கிரியினை விண்ணோர்
கண்டு ளம்பதை பதைத்தனர் மகபதி கலக்கங்
கொண்டு நின்றனன் நாரதன் அணுகியே குமரன்
புண்ட ரீகநேர் பதந்தொழு தின்னன புகல்வான்.			2

தூய நான்மறை அந்தணர் முனிவர்இச் சுரத்திற்
போய வெல்லையின் நெறியதாய் வரவரப் புணர்த்து
மாய்வு செய்துபின் குறுமுனி சூளின்இவ் வடிவாய்
ஏய தொல்பெயர்க் கிரவுஞ்ச மால்வரை இதுகாண்.			3

நேரில் இக்கிரிக் கொருபுடை மாயநீள் நகரில்
சூரெ னப்படும் அவுணனுக் கிளவலாந் துணைவன்
போரில் அச்சுதன நேமியை அணியதாப் புனைந்தோன்
தார கப்பெயர் வெய்யவன் வைகினன் சயத்தால்.			4

இன்ன வன்றனை அடுதியேல் எளிதுகாண் இனையோன்
முன்ன வன்றனை வென்றிட லெனமுனி மொழிய
மின்னு தண்சுடர் வேலவன் அவற்றினை வினவி
அன்ன வன்றனை முடிக்குதும் இவணென அறைந்தான்.		5

வேறு

சிறந்திடு முருகவேள் இனைய செப்பலும்
நிறைந்திடும் அமரரும் இறையும் நெஞ்சினில்
உறைந்திடு கவலொரீஇ உவகை எய்தினார்
இறந்தனன் தாரகன் இன்றொ டேயெனா.			6

ஐயர்கள் பெருமகிழ் வடைய ஆறிரு
கையுடை முருகன்அக் காலை தன்புடை
மெய்யருள் எய்திய வீர வாகுவாந்
துய்யனை நோக்கியே இனைய சொல்லுவான்.		7

உற்றவக் கிரிகிர வுஞ்ச மாகுமால்
மற்றத னொருபுடை மாய நொச்சியுட்
செற்றிய அசுரர்தஞ் சேனை தன்னுடன்
அற்றமில் தாரகன் அமர்தல் மேயினான்.			8

ஏயநின் துணைவர்கள் இலக்கத் தெண்மர்கள்
ஆயிர வௌ¢ளமாம் அடல்கொள் பூதர்கள்
சாய்வறு தலைவர்கள் தம்மொ டேகியே
நீயவன் பதியினை வளைத்தி நேரிலாய்.			9

தடுத்தெதிர் மலைந்திடும் அவுணர் தானையைப்
படுத்தனை தாரகப் பதகன் எய்துமேல்
அடுத்தமர் இயற்றுதி அரிய தேலியாம்
முடித்திட வருகுதும் முந்துபோ வென்றான்.			10

நலமிகு குமரவேள் நவில இன்னணம்
வலமிகு சிறப்புடை வாகு நன்றெனாத்
தலைமிசை கூப்பிய கரத்தன் தாழ்ந்துமுன்
நிலமிசை இறைஞ்சினன் நேர்ந்து நிற்பவே.			11

ஏந்தலந் துணைவராம் இலக்கத் தெண்மரை
ஆய்ந்திடு பூதரை யாதி நோக்கியே
வாய்ந்திடு பெருந்திறல் வாகு தன்னுடன் 
போந்திடும் அவுணரைப் பொரவென் றேவினான்.		12

ஏவலும் அனையவர் யாரும் எம்பிரான்
பூவடி வணங்கியே போதற் குன்னலும்
ஆவியுள் ஆவியாம் அமலன் பாங்குறுந்
தேவர்கள் கம்மியற் கிதனைச் செப்புவான்.			13

மேதகு பெருந்திறல் வீர வாகுவை
ஆதியர் தமக்கெலாம் அளிக்கும் பான்மையால்
ஏதமி லாதபல் லிரதம் நல்கெனா
ஓதினன் உலகெலாம் உதவுந் தொன்மையோன்.		14

அத்திறங் கேட்டதோர் அமரர் கம்மியன்
ஒத்ததோர் மாத்திரை ஒடுங்கு முன்னரே
சித்திர வயப்பரி சீயங் கூளிகள்
இத்திறம் பூண்டபல் லிரதம் நல்கினான்.			15

வேறு

அன்ன தேர்த்தொகை அதனை எம்பிரான்
மின்னு காலவேல் வீர வாகுவும்
பின்னர் எண்மரும் பிறருஞ் சாரத
மன்ன ரும்பெற வழங்கி னானரோ.				16

பாகர் தூண்டிடப் படருந் தேர்கள்மேல்
வாகை சேர்தரும் வாகு வேமுதல்
ஆகினோர் அடைந் தம்பொன் மால்வரைத்
தோகை மைந்தனைத் தொழுது போற்றினார்.			17

தொழுது வள்ளலைச் சூழ்ந்து மும்முறை
விழுமி தாகிய விடைபெற் றேகினார்
பழுதில் நீத்தமோர் பத்து நூறெனக்
குழுமிப் பாரிடங் குலவிச் செல்லவே.				18

பாய பூதர்தம் படைக்கு வேந்தராய்
ஏயி னார்க்குவீ றிலக்கத் தெண்மராய்
மேயி னார்க்கெலாம் வீர வாகுவோர்
நாய கம்பெறீஇ நடுவட் போயினான்.				19

அமர்வி ளைக்கமுந் தவனை யேவியே
தமர வேலையில் தானை சூழ்தர
இமைய வர்க்கிறை ஏனை யோர்தொழக்
குமர வேள்கடைக் கூழை யேகினான்.				20

வேறு

பிற்பட எம்பிரான் பெயர ஏவலால்
முற்படு வீரனை முயங்கிப் பாரிடச்
சொற்படை படர்வன தூமந் தன்னொடு
சிற்பரன் நகையழல் புரத்துச் சென்றபோல்.			21

அரிநிரை பூண்டதேர் அலகை பூண்டதேர்
பரிநிரை பூண்டதேர் படைக்குள் ஏகுவ
விரிகடல் வரைப்பினில் மேக ராசியுங்
கிரியுறழ் கலங்களுங் கெழுமிச் செல்வபோல்.			22

இடையகல் இரதமோ டிரதந் தாக்கிய
படையொடு படைவகை செறிந்த பல்வகைக்
கொடியொடு கொடிநிரை துதைந்த கூளியர்
அடுசமர் பயின்றிடும் அமைதி போலவே.			23

சங்கொடு பணைதுடி தடாரி காகளம்
பங்கமில் தண்ணுமை யாதிப் பல்லியம்
எங்கணும் இயம்பின எழுந்து பூழிபோய்ச்
செங்கம லத்தவன் பதத்தைச் செம்மிற்றே.			24

சாற்றுமிவ் வியல்புறத் தானை வீரருஞ்
சீற்றவெம் பூதருஞ் செல்ல வாகையான்
கோற்றொழில் அகற்றிய கோட்டு மாமுகன்
போற்றிய மாயமா புரியைச் சேர்ந்தனன்.			25

வேறு

சேர்ந்திடு மெல்லை பூதர் சேனைபோய் நகரம் புக்கு
நேர்ந்திடும் அவுண ரோடு நின்றமர் விளைத்து நின்றார்
ஓர்ந்தனர் அதனைத் தூத ரோடித்தங் கோயில் புக்குச்
சார்ந்திடு திருவில் வைகுந் தாரகற் றொழுது சொல்வார்.		26

எந்தைமற் றிதுகேள் நும்முன் இமையவர் தொகையை யிட்ட
வெந்துயர்ச் சிறையை நீக்க விரிசடைக் கடவுள் மைந்தன்
கந்தனென் றொருவன் வந்தான் அவுணரைக் கடக்கு மென்னா
அந்தர நெறிசெல் விண்ணோர் அறைந்திடக் கேட்டு மன்றே.		27

என்னிவர் மாற்ற மென்னா யாந்தெரி குற்றே மாக
அன்னவர் இயம்பி யாங்கே ஆயிரத் திரட்டி யென்னப்
பன்னுறு பூத வௌ¢ளம் படர்ந்திடக் குமரன் போந்தான்
முன்னுறு தூசி நந்தம் முதுநகர் அலைத்த தென்றார்.			28

என்றலும் வடவைத் தீயில் இழுதெனும் அளக்கர் வீழத்
துன்றிய எழுச்சி மானத் துண்ணெனச் செற்றந் தூண்டே
மின்றிகழ் அரிமான் ஏற்று வியன்றவி சிருக்கை நீங்கிக்
குன்றுறழ் மகுடம் அண்ட கோளகை தொடவெ ழுந்தான்.		29

எழுந்ததுதன் மருங்கு நின்ற ஒற்றை நோக்கி இந்தச்
செழுந்திரு நகர்மேல் வந்த சேனையை முளிபுற் கானில்
கொழுந்தழல் புகுந்த தென்னக் கொல்வன்நந் தானை முற்றும்
உழுந்துருள் கின்ற முன்னர் ஒல்லைதந் திடுதி ரென்றான்.		30

வேறு
	
அன்னபணி முறைபுரிவான் ஒற்றுவர்கள் போயிடலும் அவுணன் நின்ற,
கொன்னுறுவேற் பரிசனரைக் கொடுவருதிர் இரதமெனக் கூற லோடும், 
முன்னமொரு நொடிவரையில் தந்திடலும் அதனிடையே மொய்ம்பிற் புக்குப், 
பின்னர்வரும் அமைச்சர்கள் தந்தொகைபரவ மதர்ப்பினொடு பெயர்த லுற்றான்.   31

வீடுவான் போலுமினித் தாரகனென் றவன்சீர்த்தி விரைவில் வந்து, 
கூடியே புரள்வதுவும் அரற்றுவதுங் காப்பதுமாங் கொள்கைத் தென்ன, 
நீடுசா மரத்தொகுதி பலவிரட்ட வௌ¢ளொலியல் நிமிர்ந்து வீசப், 
பீடுசேர் தவளமதிக் குடைநிழற்ற வலம்புரிகள் பெரிதும் ஆர்ப்ப.	                   32

ஈமத்தே நடம்புரியுங் கண்ணுதலோன் எடாதசிலை யென்ன மாலோன், 
மாமத்தே யெனக்கிடந்த முழுவயிரத் தண்டமொன்று வயிரக் கண்டைத்,
தாமத்தேர் பெறுகின்ற மடஙகல்பல ஈர்த்துவருஞ் சகடத் திண்கால், 
சேமத்தேர் மிசைப்போத ஏனையபல் படைக்கலமுஞ் செறிந்து நண்ண.	     33

ஒற்றர்கூ வியவேலை ஏற்றெழுந்த அவுணர்கடல் ஒருங்கு செல்லக், 
கொற்றமால் கரிபரிதேர் இனத்தினொடு வந்தீண்டக் குழவித் திங்கட், 
கற்றைவார் சடைக்கடவுள் வாங்கியபொன் மால்வரையைக் காவ லாகச், 
சுற்றுமால் வரையென்னப் படைத்தலைவர் ப•றேரில் தவன்றிச் சூழ.              34

மொய்யமர்செய் கோலமொடு முப்புரமேல் நடந்தருளும் முக்கண் மூர்த்தி, 
பையரவின் தலைத்துஞ்சுங் கணைதூண்ட மூண்டதழல் பதகரானோர், 
மெய்யுடலம் முழுதுநுங்கத் தலைகொள்ளப் பெருந்தூம மிசைக்கொண் டென்னச், 
செய்யமுடி அவுணர்பெருங் கடலினிடை யெழும்பூழி சேட்சென் றோங்க.	    35

கார்க்குன்றம் அன்னதிறல் கரிமீதும் பரிமீதுங் கடிதில் தூண்டுந், 
தேர்க்குன்றம் அதன்மீதும் வயவர்கள்தங் கரங்களினுஞ் செறிப தாகை, 
ஆர்க்கின்ற ஆயர்ந்தோங்கி அசைகின்ற தெம்மருங்கும் அம்பொன் நாட்டில்,
தூர்க்கின்ற பூழியினைத் துடைக்கின்ற பரிசேபோல் துவன்றித் தோன்ற.	    36

வாகையுள பல்லியமும் இயம்பத்தன் நகர்நீங்கி மன்னர் மன்னன், 
ஏகியதோர் படிநோக்கி உவரிமிசைக் கங்கைகள்வந் தெய்து மாபோல், 
சாகையுள பன்மரனும் பல்படையுங் குன்றுகளுந் தடக்கையேந்திச், 
சேகுடைய பெருஞ்சீற்றப் பூதர்படை யார்த்தெதிர்ந்து சென்ற தன்றே.             37

எல்லோருந் தொழுதகைய குமரனடி இணைவழுத்தி இகல்வெம்பூதர், 
கல்லோடு மரனோடுங் கரையோடுங் கணிச்சியொடுங் கழுமுள் வீச, 
வில்லோடுங் கணையோடும் வேலோடும் புரையுமனத் 
தவுணர்படை எதிர்சிதறி அமர்செய் திட்டார்.  			  38

வேறு

எண்ணுறு படைகள் இவ்வா றெதிர்தழீஇ அடரும் வேலை
விண்ணுறு பூழி யென்னும் விரிதரு புகைமீச் செல்ல
மண்ணுறு குருதி யான வன்னியை மாற்று வார்போல்
கண்ணுறும் இமையோர் கண்கள் படிப்புனல் கான்ற அன்றே.		39

இரிந்திட லின்றி நேர்வந் தேற்றமர் புரித லாலே
சொரிந்திடு குருதி பொங்கத் தோளொடு சென்னி துள்ளச்
சரிந்திடுங் குடர்கள் சிந்தத் தானவர் பல்லோர் மாயப்
பொருந்திறல் வயத்தால் மேலாம் பூதருஞ் சிலவர் பட்டார்.		40

தேருடைத் தெறிந்து பாய்மாத் திறத்தினைச் சிதைத்து நீக்கி
ஆருடைத் திகிரிச் சில்லி அங்கையால் எடுத்துச் சுற்றிப்
போருடைத் திறலோர் தம்பால் பொம்மென நடாத்தும் பொற்பால்
காருடைப் பூதர் சில்லோர் கண்ணனே போன்றார் அன்றே.		41

தேர்பரித் தெழுந்து மண்ணில் செல்லுறாப் பவளச் செங்கால்
கார்பரித் தன்ன தோகைக் கவனவாம் புரவி யீட்டம்
போர்பரித் தொழுகு சீற்றப் பூதர்கள் புடைத்துச் சிந்திப்
பார்பரித் திடவே செய்தார் படிமகள் இடும்பை தீர்ப்பார்.		42

வாலுடைக் களிற்றின் ஈட்டம் வாரியே கரத்தா லெற்றிக்
காலுடைத் திகிரித் திண்டேர் கழல்களால் உருட்டிக் காமர்
பாலுடைப் புரவித் தானை பதங்களால் உழக்கிச் சென்றார்
வேலுடைத் தடக்கை அண்ணல் விடுத்தருள் வீர வீரர்.		43

வாருறு புரசை பூண்ட வன்களிற் றொருத்தல் யாவுஞ்
சூருறு நிலைய வாகித் துஞ்சிய தொகுதி சூழப்
பேருறு குருதி நீத்தம் பிறங்கழற் கதிர்கா ணாது
காருற வூர்கோள் தோன்றுங் காட்சியை யொத்த தன்றே.		44

கண்ணெதிர் நின்று போர்செய் கார்கெழும் அவுணர்ப் பற்றித்
துண்ணெனப் பூதர் வீசத் துளங்கிய கலன்க ளோடும்
விண்ணிடை யிறந்து நொய்தின் வீழ்வது விசும்பில் தப்பி
மண்ணிடை மின்னு வோடும் வருமுகில் போன்ற தன்றே.		45

ஆயிர வௌ¢ள மாகுங் கணவரும் ஆங்க ணுள்ள
பாயிருங் குன்ற மெல்லாம் பன்முறை பறித்து வீசி
மாயிருந் தகுவர் தானை வரம்பில படுத்து நின்றார்
ஏயென வுலகைச் சிந்தும் இறுதிநாள் எழிலி போல்வார்.		46

நிணங்கவர் ஞமலி யோர்சார் ஞெரேலெனக் குரைப்பப் புள்ளின்
கணங்களும் அலகை தானுங் கறங்கிடக் கானத் தோங்கிப்
பிணங்களின் அடுக்கல் ஈண்டிப் பேரமர் விலக்கி யார்க்கும்
அணங்குறு நிலைய வாகி அடுத்தன நடுவண் அம்மா.		47

தரைத்தடஞ் சிலைய தாகத் தறுகண்வெம் பூத ரானோர்
வரைத்துணை அன்ன தாளே வலிகெழு குழவி யாகத்
திரைத்திழி குருதி நீராத் தீர்ந்திடு திறலோர் யாக்கை
அரைத்தென நடப்ப ஏற்றார் அவுணரும் அடுபோர் செய்வார்.		48

தத்துறு புரவித் திண்டேர்த் தானவர் நிகளத் தந்தி
பத்துநூ றொன்றில் வீழப் பழுமரப் பணைகொண் டெற்றி
முத்தலை யெ•கம் வீசி முசலத்திற் புடைத்து மொய்ம்பால்
குத்திநின் றுழக்கிப் பாய்ந்து கொன்றனர் பூத வீரர்.			49

விழுந்தன படிவம் யாண்டும் விரிந்தன கவந்த மேன்மேல்
எழுந்தன குருதித் தாரை ஈர்த்தன நீத்த மாக
அழுந்திய இறந்தோர் யாக்கை ஆர்த்தன பறவை செய்ய
கொழுந்தசை மிசைந்து நின்று குரவை யாட் டயர்ந்த கூளி.		50

கண்டனன் இனைய தன்மை தாரகன் கடிய சீற்றங்
கொண்டனன் வையம் நீங்கிக் குவலய மிசைக்குப் புற்றுத்
தண்டமொன் றெடுத்துப் பூதப் படையினைத் தரையில் வீட்டி
அண்டமுங் குலுங்க ஆர்த்திட் டடிகளால் உழக்கிச் சென்றான்.	51

அல்லெனப் பட்டமேனி அவுணர்கட் கரசன் கையிற்
கல்லெனப் பட்ட தண்டாற் புடைத்தலுங் கரங்கள் சென்னி
பல்லெனப் பட்ட சிந்திப் பாய்புனல் ஒழுக்கிற் சாய்ந்த
புல்லெனப் பட்ட தம்மா பூதர்தஞ் சேனை யெல்லாம்.			52

பிடித்திடு வயிரத் தண்டம் பெருங்கடற் பூத வௌ¢ளம்
முடித்திடல் புகழோ அன்றால் தாரக மொய்ம்பின் மேலோன்
அடித்திடுங் காலை கீண்ட தம்புவி அடிப்பான் ஓங்கி
எடுத்திடுங் காலை கீண்ட தெண்டிசை அண்டச் சூழல்.		53

தாரிடங் கொண்ட மார்பத் தாரகன் வயிரத் தண்டம்
போரிடங் கொண்டோர் சென்னி புயமுரங் கரங்கள் சிந்திக்
காருடங் கண்ட பாந்தட் கணமெனத் துடிப்ப வீட்டிப்
பாரிடந் தன்னை யெல்லாம் பாரிடம் ஆக்கிற் றம்மா.			54

அன்றரி விடுத்த ஆழி ஆரமா வணிந்த தீயோன்
கொன்றனன் அனிக மென்னுங் கொள்கையும் அவன்மேற் செல்லும்
வன்றிறல் தம்பால் இல்லா வண்ணமும் மதித்து நோக்கி
நின்றிலர் பூதர் வேந்தர் நெஞ்சழிந் துடைந்து போனார்.		55

திண்கண நிரையின் வேந்தர் சிந்துழிச் சீற்றந் தூண்ட
எண்கண மாகி யுள்ள இலக்கருஞ் சிலைகா லூன்றி
மண்கணை முழவம் விம்ம வயிரெழுந் திசைப்ப வாங்கி
ஒண்கணை மாரி தூவி அவுணனை ஒல்லை சூழ்ந்தார்.		56

சூழ்ந்தனர் துரந்த வாளி தோன்முகத் தவுணன் யாக்கை
போழ்ந்தில ஊறதேனும் புணர்த்தில புன்மை யாகித்
தாழ்ந்திடு நிரப்பின் மேலோன் ஒருமகன் தலைமை தாங்கி
வாழ்ந்தவர் தமக்குச் சொல்லுஞ் சொல்லென வறிது மீண்ட.		57

தரைபடப் புகழ்வைத் துள்ள தாரகன் தடமார் பத்தைப்
புரைபடச் செய்தி டாது பொள்ளெனப் பட்டு மீண்டு
நிரைபடத் திறலோர் உய்த்த நெடுங்கணை யான வெல்லாம்
வரைபடச் சிதறுங் கல்லின் மாரிபோல் ஆன வன்றே.			58

விடுகணை மாரி யாவும் மீண்டிட வெகுண்டு விண்ணோர்
படைமுறை வழங்கி நிற்பப் பதகன்மேல் அவைகள் எய்தா
உடையதம் வலியுஞ்சிந்தி ஒல்லென மறிந்து செல்லக்
கடவுளர் அதனை நோக்கிக் கரங்குலைத் திரங்க லுற்றார்.		59

மற்றது காலை தன்னில் வலியினால் வயிரத் தண்டஞ்
சுற்றினன் தற்சூழ் கின்ற சுடர்மணிக் கடுமான் தேர்கள்
எற்றினன் புழைக்கை நீட்டி இலக்கர்தந் தொகையும் வாரிப்
பொற்றனு வோடும் வீழப் புணரியின் மீது விட்டான்.			60

துளும்பிய அளக்கர் தன்னில் சூழுற நின்ற தெங்கின்
வளம்படு பழுக்காய் வர்க்கம் மாருதம் எறியச் சிந்திக்
குளம்புகு தன்மை யென்ன வீழ்தரு கொற்ற வீரர்
இளமபிறை புரையும் வில்லோ டெழுந்தொரு புடையிற் போனார்.	61

கொற்றவில் உழவன் வீர கோளரி யதனை நோக்கிச்
செற்றமோ டேகிச் செவ்வேள் சேவடி மனத்துட் கொண்டு
பற்றிய தனுவை வாங்கிப் பகழிநூ றுய்த்துத் தீயோன்
பொற்றட மவுலி தள்ளிப் புணரியும் நாண ஆர்த்தான்.			62

ஆர்த்திடு மோதை கேளா அண்டர்கள் அனையன் மீது
தூர்த்தனர் மலரின் மாரி தோன்முகன் அதனைக் காணா
வேர்த்தனன் மான முன்றான் வீரகே சரிமேல் அங்கைத்
தார்த்தடந் தண்டம் உய்த்துத் தனதுமான் தேரிற் சென்றான்.		63

வேறு

சென்றொர் மாமுடி புனைவுழித் தண்டமத் திறலோன்
மன்றல் மார்பகம் படுதலும் வீழ்ந்தனன் மயங்கி
வென்றி மொய்ம்புடை ஆண்டகை யதுகண்டு வெகுண்டு
குன்றம் அன்னதோள் தாரக னொடுபொரக் குறித்தான்.		64

வேறு
		
குறித்தேவிறல் புயன்தாரகக் கொடியோன்எதிர் குறுகி
வெறித்தேன்மலர்த் தொடைதூங்குதன் விறற்கார்முகங் குனியாப்
பொறித்தேயுறு கனல்வாளிகள் பொழிந்தேயவன் புரத்தில்
செறித்தேயுற வளைத்தான்ஒரு சிலைதானவர் தலைவன்.		65

பொழிந்தான்சர மழைநம்மவன் புரமேலது பொழுதின்
இழிந்தான்சிலை யுயர்ந்தான்கணை ஈரெழுதொட் டிறுப்ப
அழிந்தாயெனை எதிர்ந்தாய்இதற் கையமிலை யென்னா
மொழிந்தான்ஒரு சூலந்தனை மொய்ம்பிற்செல வுய்த்தான்.		66

பொருமூவிலை வேலங்கவன் பொன்மார்புறப் பொருமிப்
பெருமோகமோ டேநின்றிடப் பின்னங்கது காணா
உருமேறென அதிர்தாரக னுடனேயவன் துணையாய்
வருமூவரும் ஒருநால்வரும் மாறுற்றமர் இழைத்தார்.			67

அமர்செய்திடும் எழுவீரரும் அவுணன்றனக் குடையக்
குமரன்பதந் தலைக்கொண்டிடுங் கோமானது காணா
எமர்மற்றிவர் எல்லோர்களும் இரிந்தார்பொரு தென்னாச்
சமர்முற்றிட வருதாரகத் தகுவன்முனம் அடைந்தான்.			68

ஒருகார்முகம் இருகால்வளை வுறவேகுனித் துகுதேன்
அருகாதொழு கியதன்மையின் அவிர்நாணொலி யெடுப்பத்
திருகாநெடு வரையானவுந் தெருமந்தன அவுணர்
இருகாதையும் நனிபொத்தினர் ஏங்குற்றனர் இரிவார்.			69

நாண்கொண்டிடும் ஒலிகேட்டலும் நடுங்காவெரு வுற்றார்
பூண்கொண்டிடு சிலைவாங்கலும் மகிழ்வுற்றிடு புலவோர்
சேண்கொண்டிடும் முகில்வேண்டினர் அதுவந்திடச் சிறந்தே
மாண்கொண்டதன் உருமுச்செல மயங்கித்தளர் வதுபோல்.		70

வேறு

மேதா வியர்க பரவுந்திறல் வீரவாகு
மாதாரு வன்ன சிலைதன்னை வளைத்து வாகைத்
தாதார் பிணையல் புனைதாரகன் றன்னை நோக்கித்
தீதாம் அழல்போல் வெகுண்டேயிது செப்பு கின்றான்.		71

பொன்றா வலிகொண் டமராடிய பூதர் தம்மை
வன்றாழ் சிலைகொண் டிடுவீரரை வன்மை தன்னால்
வென்றா மெனவுன் னினைபோலும் விரைந்து நின்னைக்
கொன்றாவி உண்பன் எனலுங்கொடி யோன்உ ரைப்பான்.	72

மாயன் றனைவென் றவன்நேமியை மாசில் கண்டத்
தேயும் படியே புனைந்தேன்வலி எண்ணு றாதே
நீயிங் கடுவா மெனக்கூறினை நீடு மாற்றஞ்
சீயந் தனையும் நரிவெல்வது திண்ண மாமோ.		73

சாருங் குறள்வெம் படையாவையுஞ் சாய்ந்த வீரர்
ஆருந் தொலைவுற் றனர்நீயும் அயர்ந்து நின்றார்
வீரம் புகல்வாய் விளிகின்ற விளக்கம் நேர்வாய்
பாரென் வலியால் உதாவி படுப்ப னென்றான்.			74

என்னுந் துணையில் சரமாயிரம் ஏந்தல் உய்ப்பத்
தன்னங் கையிலோர் சிலைவாங்கினன் தார கப்பேர்
மன்னன் கடிது கணையாயிரம் மாறு தூணடிச்
சின்னம் புரிந்து கணைநூறு செலுத்தி னானால்.		75

எவ்வக் கொடியோன் தொடுவாளியை ஏந்தல் காணா
அவ்வக் கணைகள் விடுத்தேயவை முற்று மாற்றக்
கைவிற் கொருவன் இவனாகுமிக் காளை தன்னைத்
தெய்வப் படையால் முடிப்பேனெனச் சிந்தை செய்தான்.	76

வேறு

வெங்கனற்படை தாரகன்விட வீரவாகு வெகுண்டுபின்
செங்கனற்படை யேவியன்னது சிந்தவேவரு ணப்படை
அங்கணுய்ததிட அவுணர்கோமகன் அடுபுனற்கிறை படையினைத்
துங்கமுற்றிய வீரனுய்த்தது துண்டமாம்வகை கண்டனன்.		77

இரவிதன்படை அவுணன்விட்டனன் இவனுமப்படை யேவியே
விரைவிலன்னது தொலைவுகண்டனன் வீரமேதகு தாரகன்
உரமிகுந்தனி ஊதைவெம்படை யுந்தினான் அது கந்தவேள்
அருள்மிகுந்தனி யடியன்மாற்றினன் அனையதொல்படை தனைவிடா.78

அனிலவெம்படை வீறழிந்திட அவுணர்கோமகன் அம்புயன்
அனதுதொல்படை ஏவினானது தணிவில்செற்றமொ டேகலும்
வனைகருங்கழல் வீரவாகுவும் மற்றவன்படை தூண்டியே
நினையுமுனனது தொலைவுசெய்தனன் நிகரில்வானவர் புகழவே.	79

ஆயதன்மைகள் கண்டுதாரகன் அற்புதத்தின னாகியே
மேயவானவர் படைகள் யாவையும் வீரன்மற்றிவன் வென்றனன்
மாயநீர்மையின் இங்கிவன்றிறல் வனமைகொள்ளுதும் இனியெனாத்
தீயபுந்தியில் இனையவாறு தெரிந்துசிந்தனை செய்துமேல்.		80

தொல்லைமாயையின் விஞ்சைதன்னை நவின்றுளங்கொடு துண்ணென
மல்லன்மேவரு தாரகாசுரன் வடிவமெண்ணில தாங்கியே
எல்லைதீர்தரு படைவழங்கினன் எங்குமாகி இருட்குழாம்
ஒல்லைவந்து பரந்தபோல்அவன் ஒருவன்நின்றமர் புரியவே.		81

கண்டுமற்றது வானுளோர்கள் கலங்கியேங்கினர் முன்னரே
விண்டுநீளிடை நின்றபூதர் வெருண்டுபின்னரும் ஓடினார்
மண்டுபேரமர் செய்தயர்ந்திடு மானவீரரும் அச்சமேல்
கொண்டுநின்றனர் முறுவல்செய்தனர் குணலையிட்டனர் அவுணரே.	82

வேறு

தார கப்பெயர் அவுணர்கோன் மாயையின் சமரும்
ஆரும் அச்சுறு கின்றதும் ஆடல்மொய்ம் புடையோன்
பேர ழற்பொறி கதுவுற நோக்கியே பிறங்கும்
வீர பத்திரன் நெடும்படை எடுத்தனன் விடுவான்.		83

துங்க வுக்கிரச் சிம்புள்மாப் படையினைத் தூயோன்
செங்கை பற்றலும் அன்னது தாரகன் செயலால்
அங்கண் நின்றிடு மாயைகண் டச்சமுற் றழுங்கிப் 
பொங்கு பானுமுன் இருளென முடிந்ததப் பொழுதே.		84

தன்பு ணர்ப்புறு மாயைதான் உடைதலுந் தமியாய்
முன்பு நின்றதோர் தாரகன் மொய்ம்புளான் றன்னைப்
பின்பு மாயையிற் படுத்தவோர் சூழ்ச்சியைப் பிடித்து
மின்பொ லிந்ததன் தேரைவிட் டோடினன் விரைவில்.		85

தார கன்தொலைந் தோடலுந் தனக்கிணை யில்லோன்
போர ழிந்துவென் னிட்டவன் றன்மிசைப் புத்தேள்
வீர வெம்படை விடுப்பது வீரமன் றென்னாச்
சீரி தாகிய தூணியுள் அன்னதைச் செறித்தான்.		86

அற்ற போர்வலித் தாரகன் பின்வரைந் தணுகிப்
பற்றி நாண்கொடு புயந்தனைப் பிணித்தெனைப் பணித்த
கொற்ற வேலன்முன் உய்க்குவன் யானெனக் குறித்து
மற்ற வன்றனைத் தொடர்ந்தனன் நெடுந்திறல் வாகு.		87

வேழ மாமுகற் கிளவலை உன்னியே வீரன்
ஆழி மால்கட லாமென ஆர்த்துவை தணுகச்
சூழு மாயையின் இருக்கையாந் தொல்கிர வுஞ்சப்
பாழி யொன்றுசென் றொளித்தனன் தாரகப் பதகன்.		88

முன்ன மாங்கவன் போகிய பூழையுள்  முடுகிப்
பொன்னின் வாகையந் தோளுடை யாண்டகை புகலும்
அன்ன தோர்வரை யகமெலாம் ஆயிரங் கதிரின்
மன்ன னேகுறா இருள்நிலம் போன்றுவை கியதே.		89

நீளு மாலிருள் படர்தலுஞ் சில்லிடை நெறியால்
தாளி னொற்றியே படர்ந்தனன் தாரகற் காணான்
ஆளி மொய்ம்புடை மேலையோன் அடுக்கலின் புணர்ப்பான்
மீளு கின்றதோர் நெறியையுங் கண்டிலன் வெகுண்டான்.	90

செற்ற மிக்கவன் மாயைஇவ் வரையெனச் சிந்தித்
துற்ற காலையில் அவுணனா கியகிர வுஞ்சப்
பொற்றை அன்னது கண்டுமோ கத்துயில் புரிந்து
மற்ற வன்றன துணர்வினை மையல்செய் ததுவே.		91

இயலி சைத்தமிழ் முனிவரன் இசைத்தசூள் இசைவால்
வியலு டைத்திறல் வாகுவை அவ்வரை மிகவும்
மயலு டைப்பெரு மாயம தியற்றலும் மயங்கித்
துயில லுற்றனன் தொல்லையின் உணர்வெலாந் துறந்தே.	92

அம்ம லைக்கணே முன்னவன் உறங்கலும் அனைய
செம்ம லுக்கிளை யோர்இரு நால்வருஞ் சிறந்த
தம்மி னத்தரோர் இலக்கருஞ் சாரதர் பலரும்
விம்ம லுற்றனர் சிறையிலாப் பறவையின் மெலிந்தார்.		93

உடைந்து போயின தாரகன் றன்னைநம் முரவோன்
தொடர்ந்து சென்றனன் மீண்டிலன் அவனொடுந் துன்னி
அடைந்து வெற்பினில் போர்புரி வான்கொலோ அங்கட்
படர்ந்து நாடுதும் யாமுமென் றெண்ணினர் பலரும்.		94

எண்ணி யேயிசைந் திளையரோ ரெண்மரும் இலக்கம்
நண்ணும் வீரரும் பாரிடந் தன்னுள்நா யகரும்
அண்ணல் வான்படை ஏந்தியே யாயிடை யகன்று 
விண்ணு லாவுறு கிரவுஞ்சம் எய்தினர் விரைவில்.		95

ஆய வெற்பினில் வீரவா குப்பெயர் அடலோன்
போய பூழையுள் மற்றவர் யாவரும் புகலுந்
தீய தொல்வரை முன்னவற் கிழைத்திடு திறம்போல்
மாயம் எண்ணில புரிதலும் மயங்கியே வதிந்தார்.		96

வெற்றி வீரவா குப்பெயர் அண்ணலும் வீரர்
மற்றி யாவரு மயங்கலுந் தாரகன் வாரா
உற்று நோக்கிநம் மாயையால் இவரெலா மொருங்கே
இற்று ளாரென மகிழ்ந்துமால் வரைமிசை எழுந்தான்.		97

அண்ட மீமிசை நின்றவா னவர்கள்இவ் வனைத்துங்
கண்டு கட்புனல் பனிவர அரற்றியே கலங்கிக்
கொண்ட துன்பொடு பதைபதைத் தோடினர் கூளித்
தண்டம் யாவையும் வெருவின தலைவர்இன் மையினால்.	98

மலையின் மீமிசை பெழுதரு தாரகன் மற்றோர்
தலைமை யாகிய விரதமேல் கொண்டுதா னவர்கள்
பலரும் வந்துவந் தார்த்தனர் சூழ்தரப் பைம்பொற்
சிலைய தொன்றினை வாங்கியே செருநிலஞ் சென்றான்.	99

நீடு தன்சிலை நாணொலி கொண்டுநீள் சரங்கள்
கோடி கோடிமற் றொருதொடை யாகவே கொளுவி
ஆடல் சேர்தரு பூதர்மேற் பொழிதலும் அலமந்
தோட லுற்றனர் திசையினும் விண்ணினும் உலைந்தே.	100

ஆன காலையின் நாரதன் இனையகண் டழுங்கி
மேனி துண்ணென வியர்ப்புற வழிக்கொடு விரைந்து
போன விண்ணவர் தம்மொடு சென்றுபுத் தேளிர்
சேனை காவலன் நின்றதோர் கடைக்கூழை சேர்ந்தான்.	101

அரிது மாதவம் புரிதரு நாரதன் அடலின்
விரவு மாயிரம் பூதவௌ¢ ளத்தொடு மேவுங்
கருணை சேரறு முகத்தனைக் கண்டுகண் களித்துச்
சுரர்க ளோடுபோய் இறைஞ்சியே இனையன சொல்வான்.	102

ஐய நின்படை வீரர்கள் பெருஞ்சம ராடி
வெய்ய தானவர் தானைகள் வரவர வீட்டிச்
செய்ய மந்திரித் தலைவரை அமைச்சரைச் செற்றுப்
பொய்யின் மொய்ம்புடைத் தாரகன் தன்னொடும் பொருதார்.	103

தலைக்க ணாகிய வீரனுந் தமிபியர் பிறரும்
இலக்க வீரரும் பாரிடத் தலைவர்கள் யாரும்
புலைக்கொ டுந்தொழில் தாரகன் றன்னொடும் பொரத்தன்
மலைக்கண் உய்த்தனன் அவர்தமைச் சூழ்ச்சியின் வலியால்.104

உய்த்த காலையில் அவுணனா கியகிர வுஞ்சம்
மெத்து மாயைகள் அனையவர்க் கிழைத்தலும் வெருவிப்
பித்த ராமென மயங்கினர் போலுமால் பின்னர்
இத்தி றந்தனை உயர்ந்தனன் தாரக னென்போன்.		105

தெரிந்து தாரகன் மகிழ்வொடு பறந்தலை சென்று 
துரந்து நம்பெருந் தானையைக் கணைமழை சொரிய
முரிந்து பேரீயின நிகழ்ச்சியீ துயிர்த்தொகை முற்றும்
இருந்த நாயக அறிதியே யாவையும் என்றான்.		106

என்ற காலையில் நாரதன் உள்ளமும் இமையோர்
நின்று தாமயர் கின்றதும் அமரர்கோன் நெஞ்சில்
துன்று சோகமும் நான்முக னாதியோர் துயரும்
ஒன்ற நோக்கியே அறுமுகப் பண்ணவன் உரைப்பான்.	107

வேறு

ஆருமிது  கேண்மின் அம ராடுகளன் ஏகித்
தாரகனை வேல்கொடு தடிந்தவுணர் வைகும்
ஓரரண மானகிர வுஞ்சகிரி செற்றே
வீரர்தமை யோரிறையின் மீட்டிடுவன் என்றான்.	108

எந்தையிவை கூறுதலும் யாருமவை தேர்ந்து
சிந்தையுறு கின்றதுயர் செற்றுமுடி வில்லா
அந்தமில் மகிழ்ச்சியுடன் ஆடியிசை பாடிக்
கந்தனடி வந்தனை புரிந்தனர் களிப்பால்.		109

கந்தமுரு கேசனது காலைமுது பாகாய்
வந்ததொரு வந்தினை மகிழ்ச்சியொடு நோக்கிச்
சிந்தைதனில் முந்தும்வகை தேரதனை வல்லே
உந்துதி விரைந்தென உரைத்தருள லோடும்.		110

என்னவினி தென்றுதொழு தேழெழுவ கைத்தாந்
தன்னினம தாகியவர் தாங்கள்புடை போதக்
கொன்னுனைய தாமுளவு கோல்கயிறு பற்றித்
துன்னுபரி மான்நிரைகள் தூண்டிமிக ஆர்த்தான்.	111

வேறு

ஆன காலைதனில் அண்டமும் வையந்
தானும் அங்குள தடங்கிரி யாவும்
ஏனை மாகடலும் எண்டிசை யுள்ள
மான வேழமும் நடுங்கின மன்னோ.			112

வாவு கின்றபல மாநிரை தூண்டத்
தேவர் தங்கள்சிறை தீரிய செல்வோன்
மேவு தொல்லிரதம் விண்ணெறி கொண்டே
ஏவ ரும்புகழ ஏகிய தன்றே.				113

ஆதி யங்குமரன் அவ்வழி பொற்றேர்
மீது செல்லுதலும் விண்முகில் பல்வே
றோதும் வண்ணமுடன் உற்றென வானில்
பூத சேனைபுடை போயின அன்றே.			114

போர ழிந்துபுற கிட்டெதிர் பூதர்
ஆரும் நேர்ந்துதொழு தாற்றலொ டெய்த
நார ணன்றனது நன்மரு கானோன்
தார கன்திகழ் சமர்க்களம் உற்றான்.			115

கவன மோடுபடர் காலினு முந்திச்
சிவன்ம கன்றனது சேனைய தானோர்
உவரி யாமென உறுந்திறம் நோக்கி
அவுணர் தானையை அணிந்தெதிர் சென்றார்.	116

சகந்து திக்கவரு சாரதர் தாமும்
அகந்தை யுற்றஅவு ணத்தொகை யோரும்
இகந்த வன்மையொ டெதிர்ந்திகல் எய்தி
வெகுண்டு பேரமர் விளைத்திட லுற்றார்.		117

கரங்கொள் நேமிகள் கணிச்சிகள் தீவாய்ச்
சரங்க ளாதியன தானவர் விடடார்
உரங்கொள் மால்வரைகள் ஓங்குமெ ழுக்கள்
மரங்கள் விட்டனர் மறங்கெழு பூதர்.			118

முரிந்த தேர்நிரை முடிந்தன மாக்கள்
நெரிந்த தானவர் நெடுந்தலை சோரி 
சொரிந்த பூதர்மெய் துணிந்தன வானில்
திரிந்த பாறுகள் செறிந்தன வன்றே.			119

நிறங்கொள் செங்குருதி நீத்தம தாகிக்
கறங்கி யோடின கவந்தமொர் கோடி
மறங்கொ டாடுவ வயின்தொறு மாகிப்
பிறங்கு கின்றன பிணங்கெழு குன்றம்.		120

அனைய வாறிவர் அருஞ்சம ராற்றப்
புனையல் வாகையுள பூதர்கள் தம்மால்
வினையம் வல்லவுணர் வெவ்வலி சிந்தி
இனைத லோடுமிரி குற்றனர் அன்றே.			121

தன்ப படைத்தொலைவு தாரகன் நோக்கிக்
கொன்ப டைத்தகுனி விற்குனி வித்தே
மின்ப டைத்தபல வெங்கணை தூவி
வன்ப படைக்கணம் வருந்த நடந்தான்.		122

நடந்தெ திர்ந்தகண நாதரை யெல்லாந்
தொடர்ந்து பல்கணை சொரிந்து துரந்தே
இடந்தி கழ்ந்தஇமை யத்திறை நல்கும்
மடந்தை தந்ததிரு மைந்தன்முன் உற்றான்.		123

உற்ற காலைதனில் ஒற்றரை நோக்கிச்
சற்று நீதியறு தாரக வெய்யோன்
செற்றம் என்னுமழல் சிந்தையின் மூள
மற்றி வன்கொல்அரன் மாமகன் என்றான்.		124

என்ன லுங்குமரன் இங்கிவ னேயாம்
மன்ன என்றிடலும் மற்றவன் ஏறுந்
துன்னு தேர்கடிது தூண்டி எவர்க்கும்
முன்ன வன்மதலை முன்னுற வந்தான்.		125

வேறு

முழுமதி யன்னஆறு முகங்களும் முந்நான் காகும்
விழிகளின் அருளும் வேலும் வேறுள படையின் சீரும்
அழகிய கரமீ ராறும் அணிமணித் தண்டை யார்க்குஞ்
செழுமல ரடியுங் கண்டான் அவன்தவஞ் செப்பற் பாற்றோ.	126

தற்பம துடைய சிந்தைத் தாரகன் இனைய வாற்றால்
சிற்பர மூர்த்தி கொண்ட திருவுரு வனைத்தும் நோக்கி
அற்புத மெய்தி நம்மேல் அமர்செய வந்தா னென்றால்
கற்பனை கடந்த ஆதிக் கடவுளே இவன்கொ லென்றான்.	127

இந்தவா றுன்னிப் பின்னர் யார்க்குமே லாகும் ஈசன்
தந்ததோர் வரமும் வீரத் தன்மையும் வன்மைப் பாடும்
முந்துதாம் பெற்ற சீரும் முழுவதும் நினைந்து சீறிக்
கந்தவேள் தன்னைநோக்கி இனையன கழற லுற்றான்.	128

நாரணன் றனக்கு மற்றை நான்முகன் றனக்கும் வௌ¢ளை
வாரணன் றனக்கு மல்லால் மதிமுடி அமல னுக்குந்
தாரணி தனல்எ மக்குஞ் சமரினை இழைப்ப இங்கோர்
காரண மில்லை மைந்தா வந்ததென் கழறு கென்றான்.	129

அறவினை புரிந்தே யார்க்கும் அருளொடு தண்டஞ் செய்யும்
இறையவ னாகும் ஈசன் இமையவர் தம்மை நீங்கள்
சிறையிடை வைத்த தன்மை திருவுளங் கொண்டு நுந்தம்
விறலொடு வன்மை சிந்த விடுத்தனன் எம்மை யென்றான்.	130

வேறு

கூரிய வேற்படைக் குமர நாயகன்
பேரருள் நிலைமையால் இனைய பேசலும்
போரினை இழைத்திடும் பூட்கை மாமுகத்
தாரக னென்பவன் சாற்றல் மேயினான்.		131

செந்திருத் திகழுமார் புடைய செங்கணான்
சுந்தரக் கலுழன்மேல் தோன்றிப் போர்செய்தே
அந்தரக் கதிர்புரை ஆழி உய்த்ததென்
கந்தரத் தணிந்தது காண்கி லாய்கொலோ.		132

இன்றுகக றெம்முடன் இகலிப் போர்செயச்
சென்றுளார் யாவருஞ் சிறிது போழ்தினுட்
பொன்றுவார் இரிந்தனர் போவ ரல்லது
வென்றுளார் இலையது வினவ லாய்கொலோ.		133

முட்டிவெஞ் சமரினை முயல முன்னம்நீ
விட்டிடு தலைவரை வென்று வெற்பினில்
பட்டிட இயற்றினன் பலக ணங்ளை
அட்டனன் அவற்றினை அறிந்தி லாய்கொலோ.	134

ஆகையால் எம்முடன் அமரி யற்றியே
சோகம தடையலை சூல பாணிபால்
ஏகுதி பாலநீ என்று கூறலும்
வாகையங் குமரவேள் மரபிற் கூறுவான்.		135

தாரணி மறையவன் ததீசி தன்மிசை
நாரணன் விடுத்ததோர் நலங்கொள் ஆழிதன்
கூரினை இழந்துபோய்க் குலாலன் சக்கர
நீர்மைய தானது வினவ லாய்கொல்நீ.			136

சூற்புயல் மேனியான் துங்கச் செங்கையின்
பாற்படு திகிரிபோற் பழியில் துஞ்சுமோ
வேற்புறு படைக்கெலாம் இறைவ னாகுநம்
வேற்படை நின்னுயிர் விரைவின் உண்ணுமால்.	137

உங்கள்பே ராற்றல்இவ் வுலகை வென்றன
இங்குநாம் வருதலும் இமைப்பின் மாய்ந்தன
அங்கண்மா ஞாலமுண் டமரும் ஆரிருள்
பொங்குபே ரொளிவர விளிந்து போனபோல்.		138

ஈட்டிய மாயைகள் எவையுந் தன்வழிக்
காட்டிய கிரியையுங் கள்வ நின்னையுந்
தீட்டிய வேல்கொடு செற்றுச் சேனையை
மீட்டிடு கின்றனன் விரைவி னாலென்றான்.		139

என்றலுஞ் சீறியே இகலித் தாரகன்
குன்றுறழ் தன்சிலை குனியக் கோட்டியே
மின்றிகழ் நாணொலி எடுப்ப விண்மிசைச்
சென்றிடும் அமரருந் தியக்க மெய்தினார்.		140

எய்திய காலையில் எந்தை கந்தவேள்
கைதனில் இருந்ததோர் கார்மு கந்தனை
மொய்தனில் வாங்கிநாண் முழக்கங் கோடலும்
ஐதென உலகெலாம் அழுங்கிற் றென்பவே.		141

நாரியின் பேரொலி நாதன் கோடலும்
ஆரணன் முதலினோர் தாமும் அஞ்சினார்
பேருல கெங்கணும் பேதுற் றேங்கின
தாரக முதல்வனுந் தலைது ளக்கினான்.		142

துளக்கிய தாரக சூரன் கைத்தலங்
கொளற்குரி வில்லுமிழ் கொள்கைத் தாலென
வளக்கதிர் நுனைகெழு வயிர வான்கணை
அளக்கரும் எண்ணில ஆர்த்துத் தூண்டினான்.	143

ஆயதோர் காலையில் ஆறு மாமுகன்
மீயுயர் சிலைதனில் விரைவில் ஆயிரஞ்
சாயகந் தூண்டியே தார காசுரன்
ஏயின பகழிக ளியாவுஞ் சிந்தினான்.			144

சிந்திய காலையில் செயிர்த்துத் தாரகன்
உந்தினன் பின்னரும் ஓராயி ரங்கணை
கந்தனும் அனையது கண்டு வல்லையின்
ஐந்திரு பகழிதொட் டவற்றை நீக்கினான்.		145

மீட்டுமத் தாரகன் விசிகம் வெஞ்சிலை
பூட்டிய வாங்கலும் புராரி காதலன்
ஈட்டமொ டொருகணை யேவி ஆங்கவன்
தோட்டுணை வில்லினைத் துண்ட மாக்கினான்.	146

வேறு
			
அங்கோர் சிலையைக் குனித்தானது காலை தன்னில்
எங்கோ முதல்வன் ஒருபாணியின் ஏந்து வில்லில்
செங்கோல் வகையா யிரம்பூட்டினன் செல்ல உய்த்தான்
வெங்கோல் நடாத்தி வருதாரக வெய்யன் மீதில்.		147

சேரார் பரவுந் திறல்வேலவன் செய்கை நோக்கித்
தாரார் முடித்தா ரகவீரன் தனது வில்லில்
ஓரா யிரம்வா ளிகள் பூட்டினன் ஒல்லை உய்த்து
நேராய் விரவுங் கணையாவையும் நீறு செய்தான்.		148

வெய்யான் அநந்தங் கணை தூண்ட விமலன் நல்குந்
துய்யான் அவைகள் அறுத்துக் கணைகோடி தூண்டி
மையார் அவுணர் புகழ்தாரக மான வேழம்
எய்யாகும் வண்ணஞ் செறித்தானவன் யாக்கை யெங்கும்.	149

ஒருகோடி வாளி உறலோடும் உருத்து நீசன்
இருகோடி வாளி விடஅன்னதை ஏவின் நீக்கி
இருகோ டியதார் அசுரேசன் முகங்கொள் கையும்
பொருகோடும் வீழ விடுத்தான்இரு புங்க வாளி.		150

வந்தங் கிரண்டு சரமும்பட மாயை மைந்தன்
தந்தங்கள் கையோ டிறலோடுந் தளர்ச்சி யெய்தி
முந்துங் கணைஆ யிரந்தன்னை முனிந்து தூண்டிக்
கந்தன் தடந்தேர்த் துவசந்துகள் கண்டு நின்றான்.		151

மல்லற் கொடியிற் றதுகண்டு மறங்கொள் வெய்யோன்
வில்லைக் கணைநான் கிரண்டால் நிலமீது வீட்டித்
தொல்லைக் கனலின் கணையாயிரந் தூண்டி யன்னோன்
செல்லுற்ற திண்டேர் பரிபாகொடு சிந்தி நின்றான்.		152

வேறங் கொருதேர் மிசையேறியொர் வில்லை வாங்கி
நூறைந் திருதீ விசிகந்தனை நொய்தின் ஏவி
மாறின்றி வைகும் பரமன்வடி வான செவ்வேள்
ஏறுந் தடந்தேர் வலவன்புயத் தெய்த உய்த்தான்.		153

வென்றோர் புகழுங் குமரன்வியன் தேர்க டாவிச்
சென்றோன் வருத்தந் தெரிந்தாயிரந் தீய வாளி
வன்றோன் முகத்தா ரகன்நெற்றியுள் மன்ன வுய்ப்பப்
பொன்றோய் தனது தடந்தேரில் புலம்பி வீழ்ந்தான்.		154

வீழுற் றிடலும் விழுசெம்புனல் வௌ¢ள மிக்கே
தாழுற்ற பாரிற் புகுந்தேபுடை சார்த லுற்ற
பாழிக் கடலிற் பரிமாமுகம் பட்ட செந்தீச்
சூழிக் களிற்றின் வதனத்தினுந் தோன்று மென்ன.		155

மன்னா கியதா ரகன்அங்கண் மயங்கி வீழ
அன்னான் றனது படைவீரர் அதனை நோக்கிக்
கொன்னார் சினங்கொண் டடுபோரைக் குறித்து நம்பன்
தொன்னான் உதவுந் திறல்மைந்தனைச் சூழ்ந்து கொண்டார்.156

சூலந் திகிரிப் படைதோமரந் துய்ய பிண்டி
பாலஞ் சுடர்வேல் எழுநாஞ்சில் பகழி தண்டம்
ஆலங் கணையங் குலிசாயுத மாதி யாக
வேலும் படைகள் பொழிந்தார்த்தனர் எங்கும் ஈண்டி.		157

கறுத்தான் அவர்தஞ் செயல்கண்டுதன் கார்மு கத்தை
நிறுத்தா வளையாக் கணைமாமழை நீட வுய்த்து
மறுத்தா னுடைய கொடுந்தானவர் வாகை சிந்தி
அறுத்தான் விடுதொல்படை யாவையும் ஆடல் வேலோன்.	158

வெய்தாகிய தீங்கணை மாரி விசாகன் மீட்டும்
பெய்தான் அவுணர் முடிதன்னைப் பிறங்கு மார்பைத்
துய்தா னுறும்வா யினையங்கையைத் தோளைத் தாளைக்
கொய்தான் குருதிக் கடலெங்கணுங் கொண்ட தன்றே.	159

வில்லோர் பரவுந் திறல்வேலவன் வெய்ய கோலால்
அல்லோ டியதீ மனத்தானவர் ஆயி னோரில்
பல்லோர் இறந்தார் குருதிக் கடல்பாய்ந்து நீந்திச்
சில்லோர் கள்தத்தம் உயிர்கொண்டு சிதைந்து போனார்.	160

மைக்கார் சிவந்த தெனுந்தாரகன் மையல் நீங்கி
அக்காலை தன்னில் எழுந்தே அயல்போற்றி நின்று
தொக்கார் அமையாரையுங் காண்கிலன் துன்ப மெய்தி
நக்கான் அவர்தஞ் செயல்கண்டு நவிறல் உற்றான்.		161

வேறு

செய்ய வார்சடை ஈசன் நல்கிய சிறுவன் இங்கொரு வன்பொரக்
கையி ழந்துமு கத்தி னூடு கவின்கொள் கோடுமி ழந்தனன்
மைய லெய்திவி ழுந்த னன்பொரும் வலிய தானையும் மாண்டன
ஐய வீங்கொரு தமியன் நின்றனன் அழகி தாலென தண்மையே.	162

தாவில் வெஞ்சிலை வன்மை கொண்டு சரங்கள் எண்ணில தூண்டியே
மேவ லானிவன் உயிர்கு டிப்பதும் வெல்லு கின்றதும் அரியதால்
தேவர் மாப்படை தொடுவ னிங்கினி யென்று சிந்தனை செய்துபின்
ஏவரும் புகழ் தார காசுரன் இனைய செய்கை இயற்றினான்.		163

வேறு

அடலரி நான்முக னாதி வானவப்
படையினை யாவையும் பவஞ்செய் தாரகன்
விடவிட வந்தவை வெருவி மேலையோன்
புடைதனில் ஒடுங்கியே போற்றி நின்றவே.		164

செங்கண்மா லயன்முதற் றேவர் மாப்படை
துங்கமொ டேகியே துளங்கி வேலுடைப்
புங்கவன் பாங்கரிற் போற்றி நிற்றலும்
அங்கது கண்டனன் அவுணர் மன்னவன்.		165

ஒருவினன் அகநதையை உள்ள மோரிறை
வெருவினன் விம்மிதம் மிகவு மெய்தினான்
எரிகலுழ் விழியினன் இவனை வென்றிடல்
அரியது போலுமென் றகத்தில் உன்னினான்.		166

பாங்கரின் மாதுடைப் பரமன் தொல்படை
ஈங்கினி விடுதுமென் றெண்ணி யப்படை 
வாங்கினன் அருச்சனை மனத்தி னாற்றினன்
ஓங்கிருஞ் சினமுடன் ஒல்லை யேவினான்.		167

சங்கரன் தொல்படை தறுகண் ஆலமும்
புங்கவர் படைகளும் பூத ராசியும்
அங்கத நிரைகளும் அளப்பில் சூலமும்
வெங்கனல் ஈட்டமும் விதித்துச் சென்றதே.		168

கலைகுலாம் பிறைமுடிக் கடவுள் மாப்படை
அலகிலா உயிர்களும் அண்டம் யாவையும்
உலைகுறா தலமர வுரத்துச் சேறலும்
இலைகுலாம் அயிலுடை எந்தை நோக்கினான்.	169

கந்தவேள் அனையது கண்டு தந்தையைச்
சிந்தையின் உன்னியோர் செங்கை நீட்டியே
அந்தவெம் படையினை அருளிற் பற்றினான்
தந்தவன் வாங்கிய தன்மை யென்னவே.		170

நெற்றியில் விழியுடை நிமலன் காதலன்
பற்றிய படையினைப் பாணி சேர்த்தினான்
மற்றது தாரக வலியன் கண்ணுறீஇ
இற்றது நந்திரு இனியென் றேங்கினான்.		171

தேவர்கள் தேவனார் தெய்வத் தொல்படை
ஏவினன் அதனையும் எதிர்ந்து பற்றினான்
மூவிரு முகமுடை முதல்வன் வன்மையை
நாவினி லொருவரால் நவிறற் பாலதோ.		172

ஆயினும் அரன்மகன் அறத்தின் போரலால்
தீயதோர் கைதவச் செருவ துன்னலான்
மாயைகள் ஆற்றியே மறைந்து நின்றுநான்
ஏயென இயற்றுவன் அமரென் றெண்ணினான்.	173

கையனும் இவ்வகை கருத்தி லுன்னியே
ஒய்யென வேகிர வுஞ்ச வெற்பின்முன்
வையமொ டேகிநீ வல்ல மாயைகள்
செய்குதி செய்குதி யென்று செப்பினான்.		174

வேறு

செப்பிய இறுவரை கிரவுஞ்சந் திகழ்வுறு மாயையின் நிகழ்வுன்னி
முப்புர வகைபல வெனநிற்ப முரணுறு தாரக முதல்வன்றான்
அப்புர நிருதர்க ளெனநின்றான் அகல்வரை பலபல முகிலாக
ஒப்பறு சூரன திளையோனும் உருமென அவையிடை உலவுற்றான்.	175

வேலைக ளுருவினை வரைகொள்ள விசயம துடையதொ ரசுரேசன்
காலம திறுதியில் உலகுண்ணுங் கனையொலி அனலிக ளெனநின்றான்
சீலமின் முதுகிரி நெடுநேமித் திருவரை சூழ்தரும் இருளாக
மால்கரி முகமுள அவுணன்றான் வரையறு பாரிட நிரையானான்.	176

இந்திரன் முதலுள சுரர்வைகும் ஏழுட னொருதிசை வேழம்போல்
அந்தநெ டுங்கிரி வரலோடும் அருகினில் உறுகுல கிரியாகித்
தந்தியின் முகமுள அவுணன்றான் சடசட முதிரொலி யுடன்வந்தான்
முந்திய தந்தம துருமாறி முறைமுறை நின்றதொர் திறனேபோல்.	177

வாயுவின் உருவென மலைசெல்ல மதகரி முகமுள பதகன்றான்
தேயுவின் உருவென வரலுற்றான் திரியவும் நெடுவரை விரைவோடுங்
காய்கனல் உகுஞெகி ழிகளாகிக் ககனம திடையுற மிடைகாலை
ஆயிர கோடிவெய் யவரேபோல் அலமர லுற்றனன் அறமில்லான்.	178

அவ்வகை தாரகன் வரையோடும் அளவறு மாயையின் வடிவெய்தி
எவ்விடை யுஞ்செறி தரலோடும் எம்பெரு மானவன் இவைகாணாத்
தெவ்வலி கொண்டுறும் இவனாவி சிந்துவன் என்றுள மிசைகொண்டே
கைவரு வேற்படை தனைநோக்கி இனையன சிலமொழி கழறுற்றான்.179

தாரகன் என்பதோர் பேரோனைச் சஞ்சல முறுகிர வுஞ்சத்தை
ஓரிறை செல்லுமுன் உடல்கீறி உள்ளுயி ருண்டுபு றத்தேகிப்
பாரிடர் தம்மை இலக்கத்தொன் பதின்மர்க ளாக உரைகின்ற
வீரரை மீட்டிவண் வருகென்றே வேற்படை தன்னை விடுத்திட்டான்.	180

சேயவன் விட்டிடு தனிவைவேல் செருமுயல் தாரகன் வரையோடும்
ஆயிடை செய்த புணர்ப்பெல்லாம் அகிலமும் அழிதரு பொழுதின்கண்
மாயையி னாகிய வுலகெங்கும் மலிதரு முயிர்களும் மதிசூடுந்
தூயவன் விழியழல் சுடுமாபோல் துண்ணென அட்டது சுரர்போற்ற.	181

வேறு

அரண்டரு கழற்கால் ஐயன் அறுமுகத் தெழுந்த சீற்றந்
திரண்டொரு வடிவின் வேறாய்ச் சென்றதே யெனவு நான்கு
முரண்டரு தடந்தோள் அண்ணல் முத்தலை படைத்த சூலம்
இரண்டொரு படையாய் வந்த தென்னவும் ஏகிற் றவ்வேல்.	182

முடித்திடல் அரிய மாய மூரிநீர்க் கடலை வற்றக்
குடித்திடு கின்ற செவ்வேற் கூற்றம்வந் திடுத லோடுந்
தடித்திடும் எயிற்றுப் பேழ்வாய்த் தாரகன் இதனைப் பற்றி
ஒடித்திடு கிற்பேன் என்னா ஒல்லென உருத்து வந்தான்.	183

அச்சமொர் சிறிதுமில்லா அவுணர்கோன் உவணன் மேற்செல்
நச்சர வென்னச் சீறி நணுகலும் அவன்மார் பென்னும்
வச்சிர வரையின் மீது வானுரும் ஏறுற் றென்னச்
செச்சையந் தெரியல் வீரன் செலுத்தும்வேல் பட்ட தன்றே.	184

தாரகன் மார்ப மென்னுந் தடம்பெரு வரையைக் கீண்டு
சீரிய கிரவுஞ் சத்திற் சேர்ந்துபட் டுருவிச் சென்று
வீரமும் புகழுங் கொண்டு விளங்கிய தென்ன அங்கட்
சோரியுந் துகளும் ஆடித் துண்ணென மீண்ட தன்றே.	185

மீண்டிடு சீற்ற வைவேல் வெற்பினுள் துஞ்சு கின்ற
ஆண்டகை வீரர்தம்மை ஆயிடை யெழுப்பி வான்போய்
மாண்டகு கங்கை தோய்ந்து வாலிய வடிவாய் ஐயன்
தூண்டிய கரத்தில் வந்து தொன்மைபோல் இருந்த தம்மா.	186

தண்டம தியற்றுங் கூர்வேல் தாரக வவுணன் மார்பும்
பண்டுள வரையும் பட்டுப் பறிந்தபே ரோசை கேளா
விண்டது ஞால மென்பார் வெடித்தது மேரு வென்பார்
அண்டம துடைந்த தென்பா ராயினர் அகிலத் துள்ளோர்.	187

வடித்ததை யன்ன கூர்வேல் மார்பையூ டறுத்துச் செல்லத்
தடித்திடு கின்ற யாக்கைத் தாரகன் அநந்த கோடி
இடித்தொகை யென்ன ஆர்த்திட் டிம்மென எழுந்து துள்ளிப்
படித்தலந் தன்னில் வீழ்ந்து பதைபதைத் தாவி விட்டான்.	188

தடவரை யனைய மொய்ம்பில் தாரகன் வேலாற் பட்டுப்
புடவியில் வீழா நின்றான் பொள்ளென வானில் துள்ளிக்
கடலுடைந் தென்ன ஆர்க்குங் காலையில் கலக்க மெய்தி
உடுகணம் உதிர்ந்த தஞ்சி யோடினன் இரவி யென்போன்.	189

தளர்ந்திடல் இல்லா வீரத் தாரகன் பட்டு வானில்
கிளர்ந்தனன் வீழு மெல்லைக் கீழுறு பிலமும் பாரு
பிளந்தன வரைகள் யாவும் பிதிர்ந்தன அதிர்ந்த தண்டம்
உளந்தடு மாறி யோலிட் டோடின திசையில் யானை.		190

தண்ணளி சிறிது மில்லாத் தாரகன் கிளர்ந்து வான்போய்
மண்ணிடை மறிந்த தன்மை வன்சிறை இழந்த நாளில்
திண்ணிய மேரு இன்னுஞ் செல்லலாங் கொல்லென் றுன்னி
விண்ணிடை யெழுந்து வல்லே வீழ்ந்ததே போலும் அன்றே.	191

வெற்றிய தாகுங் கூர்வேல் வெற்பினை அட்ட காலைச்
செற்றிய பூழி யீட்டஞ் சிதறிய பொறிக ளெங்கும்
பற்றிய புகையும் வந்து பரந்தன கரந்த தண்டம்
வற்றிய கடல்கள் வானிற் கங்கையும் வறந்த தன்றே.		192

சிறந்திடு மாய வெற்பைத் திருக்கைவேல் பொடித்த காலைப்
பிறந்திடு கின்ற தீயைத் தீயெனப் பேச லாமோ
அறிந்தவர் தெரியில் குன்றம் அவுணனா கையினான் மெய்யில்
உறைந்திடு குருதி துள்ளி உகுத்தவா றாகு மன்றே.		193

யானுற்ற குன்றந் தன்னை யெறிந்தனன் என்று செவ்வேள்
தானுற்ற நதியை வந்து தடிந்ததே என்ன வெற்பில்
ஊனுற்ற நெடுவேல் பாய உதித்திடும் பொறியின் ஈட்டம்
வானுற்ற கங்கை புக்கு வறந்திடு வித்த தன்றே.		194

திறலுடை நெடுவேல் அட்ட சிலம்பினில் சிதறித் தோன்றும்
பொறிகளும் துகளும் ஆர்ப்பும் பொள்ளெனச் செறிந்த தன்மை
மறிகடல் முழுதும் அங்கண் வடவையும் அடைந்தொன் றாகி
இறுதியில் உலகங் கொள்ள எழுந்தது போலும் மாதோ.	195

தந்தியின் வதனங் கொண்ட தாரக வவுணன் மார்வில்
சிந்துறு குருதச் செந்நீர் திரைபொரு தலைத்து வீசி
அந்தமில் நீத்த மாகி அயிற்படை அட்ட குன்றில்
வந்திடு பூழை* புக்கு மறிகடல் மடுத்த தன்றே.		196

( * பூழை - துவாரம்.)

விட்டவேல் மீண்டு கந்த வேள்கரத் திருப்பத் தீயோன்
பட்டதும் வெற்பு மாய்ந்த பான்மையும் அவுணர் யாருங்
கெட்டது நோக்கி மாலுங் கேழ்கிளர் கமலத் தேவும்
முட்டிலா மகத்தின் வேந்தும் முனிவருஞ் சுரரும் ஆர்த்தார்.	197

ஆடினர் குமரற் போற்றி அங்கைக ளுச்சி மீது
சூடினர் தண்பூ மாரி தூர்த்தனர் அவனைச் சூழ்ந்து
பாடினர் தொழுது முன்னம் பன்முறை பணிந்து நின்றார்
நீடிய வுவகை யென்னும் நெடுங்கடல் ஆழும் நீரார்.		198

ஆங்கது காலை தன்னில் அளப்பிலா மாயை வல்ல
ஓங்கல திறப்ப அங்கண் உறங்கிய வீர ரெல்லாந்
தீங்குறு மையல் நீங்கிக் கதுமெனச் சென்று செவ்வேள்
பூங்கழல் வணங்கி நின்று போற்றியே புடையின் நின்றார்.	199

வாருறு கழற்கால் வீர வாகுவே முதலா வுள்ள
வீரர்கள் தம்மை யெல்லாம் வேலுடைக் கடவுள் நோக்கித்
தாரகன் வரை**யுட் பட்டுத் தகுமுணர் வின்றி நீவிர்
ஆருநொந் தீர்கள் போலும் மாயையூ டழுந்தி யென்றான்.	200

( ** தாரகன்வரை - தாரகாசுரனது ஆட்சிக்குட்பட்ட மலை.)

செய்யவன் இனைய வாறு சீரருள் புரிய வீரர்
ஐயநின் னருளுண் டாக அடியம்ஊ றடைவ துண்டோ
மையலோ டுறங்கு வார்போல் மருவுமின் புற்ற தன்றி
வெய்யதோர் கிரிமா யத்தால் மெலிந்திலம் இறையு மென்றார்.	201

என்றலும் வீர மொய்ம்பின் ஏந்தலை விளித்துச் செவ்வேள்
வென்றிகொள் சூரன் பின்னோன் விட்டிடத் தான்முற் கொண்ட
வன்றிறற் படையின் வேந்தை*** மற்றவன் கரத்தின் நல்கி
நன்றிது போற்று கென்றே நவின்றுநல் லருள்பு ரிந்தான்.	202

( *** படையின் வேந்து - பாசுபதாஸ்திரம்.)

தாரகன் போரில் துஞ்சுஞ் சாரதர் தம்மை யெல்லாம்
ஆருநீர் எழுதிர் என்னா அவரெலாம் எழுவே செய்து
பாரிட வனிகஞ் சூழப் பண்ணவர் பரவல் செய்யச்
சீரிய வயவர் ஈண்டச் செருநிலம் அகன்றான் செவவேள்.	203

ஆகத் திருவிருத்தம் - 1531
     - - -


21.  தே வ கி ரி ப்  ப ட ல ம்

மாகவந் தங்கள் கூளி வாய்ப்பறை மிழற்ற ஆடும்
ஆகவந் தங்கு மெல்லை யகன்றுசெங் கதிர்வேல் அண்ணல்
சோகவந் தங்கொண் டுள்ள சுரருடன் அனிகஞ் சுற்றி
ஏகவந் தங்கண் நின்ற இமகிரி யெல்லை தீர்ந்தான்.			1

அரியயன் மகத்தின் தேவன் அமரர்கள் இலக்கத் தொன்பான்
பொருதிறல் வயவரேனைப் பூதர்கள் யாரும் போற்றத்
திருநெடு வேலோன் தென்பாற் செவ்விதின் நடந்து மேல்பால்
இரவியில் இரவி செல்ல இமையவர் சயிலஞ் சேர்ந்தான்.		2

ஒப்பறு சூர்பின் னோனை ஒருவன்வேல் அட்ட தன்மை
இப்புற வுலகின் உள்ளார் யாவரும் உணர்வர் இன்னே
அப்புற வுலகின் உள்ளார் அறிந்திட யானே சென்று
செப்புவ னென்பான் போலச் செங்கதிர் மறைந்து போனான்.		3

பானுவென் றுரைக்குமேலோன் பகற்பொழு தெலாங்கைக்கொண்டான்
ஏனைய மதியப் புத்தேள் இரவினுக் கரச னானான்
நானிவற் றிடையே சென்று நண்ணுவ னென்று செந்தீ
வானவன் போந்த தென்ன வந்தது மாலைச் செக்கர்.			4

வம்பவிழ் குமுத மெல்லா மலர்ந்திடு மாலை தன்னில்
வெம்படை பயிலத் தோன்றும் வேளுக்குத் தான்முன் வந்த
அம்புதி முருச மாயிற் றாகையால் தானும் வெற்றிக்
கொம்பென விளங்கிற் றென்ன எழுந்தது குழவித் திங்கள்.		5

ஏற்றெதிர் மலைந்து நின்ற இகலுடை யவுணர் தம்மேற்
காற்றெனத் தேர்க டாவிக் கடுஞ்சமர் புரிந்த வெய்யோன்
மாற்றருஞ் செம்பொன் மார்பில் வச்சிரப் பதக்கம் இற்று
மேற்றிசை வீழ்ந்த தென்ன இளம்பிறை வழங்கிற் றன்றே.		6

கானத்தின் ஏனம் ஒத்த கனையிருட் சூழல் மற்றவ்
வேனத்தின் எயிற்றை யொத்த திளம்பிறை அதனைப் பூண்ட
கோனொத்த தண்டம் அந்தக் கூரெயி றுகுத்த முத்தந்
தானொத்து விளங்கு கின்ற தாரகா கணங்க ளெல்லாம்.		7

அல்லிது போந்த காலை ஆரமா மாலை யென்னக்
கல்¢லென அருவி தூங்குங் கடவுள்வெற் பொ சா ரெய்தி
மெல்லிதழ் வனசத் தேவும் விண்டுவும் விண்ணின் தேவும்
பல்லிமை யோருஞ் செவ்வேள் பதமுறை தொழுது சொல்வார்.	8

வன்கணே யுடைய சூர்பின் வருத்திட இந்நாள் காறும்
புன்கணே யுழந்தே மன்னான் பொருப்பொடு முடியச் செற்றாய்
உன்கணே வழிபா டாற்ற உன்னினம் இன்ன வெற்பின்
தன்கணே இறுத்தல் வேண்டுந் தருதியிவ வரம தென்றார்.		9

பசைந்திடும் ஆர்வங் கொண்ட பண்ணவர் இனைய தன்மை
இசைந்தனர் வேண்டு மெல்லை எ•குடை அண்ணல் அங்கண்
அசைந்திடு தன்மை யுன்னி அருள்செய வதுகண் டன்னோர்
தசைந்துமெய் பொடிப்பத் துள்ளித் தணப்பில் பேருவகை பூத்தார்.	10

ஒண்ணில வுமிழும் வேலோன் ஒலிகழற் றானையோடுங்
கண்ணனை முதலா வுள்ள கடவுளர் குழுவி னோடும்
பண்ணவர் கிரிமேற் சென்று பாங்கரில் தொழுது போந்த
விண்ணவர் புனைவன் றன்னை விளித்திவை புகல லுற்றான்.	11

புகலுறுஞ் சூழ்ச்சி மிக்கோய் புங்கவ ராயு ளோருந்
தொகலுறு கணர்கள் யாருந் துணைவரும் யாமும் மேவ
அகலுறும் இனைய வெற்பின் அருங்கடி நகர மொன்றை
விகலம தின்றி இன்னே விதித்தியால் விரைவின் என்றான்.		12

வேறு

குழங்கல் வேட்டுவக் கோதையர் ஆடலுங்
கழங்கு நோக்கிக் களிப்பவன் மற்றிது
வழங்கு மெல்லை வகுப்பனென் றன்னவன்
தழங்கு நூபுரத் தாள்பணிந் தேகினான்.			13

மகர தோரணம் வாரியின் மல்கிய
சிகர மாளிகை செம்பொனின் சூளிகை
நிகரில் பற்பல ஞௌ¢ளல்கள் ஈண்டிய
நகர மொன்றினை யாயிடை நல்கினான்.			14

அவ்வ ரைக்கண் அகன்பெரு நொச்சியுட்
கைவல் வித்தகக் கம்மியர் மேலவன்
எவ்வெ வர்க்கும் இறைவன் இருந்திடத்
தெய்வ தக்குல மொன்றுசெய் தானரோ.			15

மாற்ற ரும்பொன் வரையுள் மணிக்கிரி
தோற்றி யென்னச் சுடர்கெழு மாழையின்
ஏற்ற கோட்டத் திழைத்தனன் கேசரி
ஆற்று கின்ற அரதனப் பீடிகை.				16

இனைய தன்மையும் ஏனவும் நல்கியே
மனுவின் தாதை வருதலும் மள்ளர்தம்
அனிக மோடும் அமரர்கள் தம்மொடும்
முனையின் மேற்படை மொய்ம்பன்அங் கேகினான்.		17

அறுமு கத்தவன் அந்நக ரேகியே
துறும லுற்றிடுந் தொல்பெருந் தானையை
இறுதி யற்ற இருக்கைகொள் ஆவணம்
நிறுவ லுற்று நிகேதனத் தெய்தினான்.				18

இரதம் விட்டங் கிழிந்துபொற் பாதுகை
சரணம் வைத்துத் தணப்பரும் வீரருஞ்
சுரரு முற்றுடன் சூழ்தரத் துங்கவேல்
ஒருவன் மற்றவ் வுறையுளின் ஏகினோன்.			19

ஊறில் வெய்யவர் யாரும் ஒரோவழிச்
சேற லெய்திச் செறிந்தென வில்விடு
மாறில் செஞ்சுடர் மாமணிப் பீடமேல்
ஏறி வைகினன் யாரினும் மேலையோன்.			20

பொழுது மற்றதிற் பூவினன் ஆதியாம்
விழுமை பெற்றிடும் விண்ணவர் யாவருங்
குழும லுற்றுக் குமரனை அவ்விடை
வழிப டத்தம் மனத்திடை உன்னினார்.			21

புங்க வன்விழி பொத்திய அம்மைதன்
செங்கை தன்னிற் சிறப்பொடு தோன்றிய
கங்கை தன்னைக் கடவுளர் உன்னலும்
அங்கண் வந்ததை அப்பெரு மாநதி.				22

சோதி மாண்கலன் தூயன பொற்றுகில்
போது சாந்தம் புகைமணி பூஞ்சுடர் 
ஆதியாக அருச்சனைக் கேற்றன
ஏதும் ஆயிடை எய்துவித் தாரரோ.				23

அண்டர் தொல்லை அமுத மிருத்திய
குண்ட முற்ற குடங்கர் கொணர்ந்திடா
மண்டு தெண்புனல் வானதி தன்னிடை
நொண்டு கொண்டனர் வேதம் நுவன்றுளார்.			24

அந்த வெல்லை அயன்முதற் றேவரும்
முந்து கின்ற முனிவருஞ் சண்முகத்
தெந்தை பாங்கரின் ஈண்டி யவன்பெயர்
மந்திரங் கொடு மஞ்சன மாட்டினார்.				25

வெய்ய வேற்படை விண்ணவற் கின்னணம்
ஐய மஞ்சனம் ஆட்டிமுன் சூழ்ந்திடுந்
துய்ய பொன்னந் துகிலினை நீக்கியே
நொய்ய ப•றுகில் நூதனஞ் சாத்தினார்.			26

வீற்றொர் சீய வியன்றவி சின்மிசை
ஏற்றி வேளை இருத்தி அவன்பெயர்
சாற்றி மாமலர் சாத்தித் தருவிடைத்
தோற்று பூவின் தொடையலுஞ் சூட்டினார்.			27

செய்ய சந்தனத் தேய்வைமுன் கொட்டினர்
ஐய பாளிதம் அப்பினர் நாவியுந்
துய்ய நானமுந் துன்னமட் டித்தனர்
மெய்யெ லாமணி மேவரச் சாத்தினார்.			28

சந்து காரகில் தண்ணென் கருப்புரங்
குந்து ருக்கமொண் குக்குலு வப்புகை
செந்த ழற்சுடர் சீர்மணி ஆர்ப்பொடு
தந்து பற்றித் தலைத்தலை சுற்றினார்.				29

இத்தி றத்தவும் ஏனவும் எ•கவேற்
கைத்த லத்துக் கடவுட்கு நல்கியே
பத்தி மைத்திற னாற்பணிந் தேத்தினர்
சித்தி சங்கற்பஞ் செய்திடுஞ் செய்கையோர்.			30

தேவு கொண்ட சிலம்பினில் பண்ணவர்
ஏவ ருங்குழீஇ யின்னணம் பூசனை
யாவ தாற்ற வதுகொண் டமர்ந்தனன்
மூவி ரண்டு முகனுடை மொய்ம்பினோன்.			31

அமரர் வெற்பில் அயிற்படை யேந்திய
விமல னுற்றது சொற்றனம் மேலினிச்
சமரி டைப்படு தாரகன் தந்திடு
குமரன் உற்றது மற்றதுங் கூறுகேம்.				32

ஆகத் திருவிருத்தம் - 1563
    - - - 


22.  அ சு ரே ந் தி ர ன்  ம கே ந் தி ர ஞ்  செ ல்  ப ட ல ம்

எந்தை குமரன் எறிந்ததனி மேற்படையாற்
தந்தி முகமுடைய தாரகன்றான் பட்டதனை
முந்துசில தூதர் மொழிய அவன்தேவி
அந்தமிலாக் கற்பிற் சவுரி அலக்கணுற்றான்.			1

வாழ்ந்த துணைவியர்கள் மற்றுள்ளோர் எல்லோருஞ்
சூழ்ந்து பதைத்திரங்கத் துன்பத் துடனேகி
ஆழ்ந்த கடல்படியும் அம்மென் மயிலென்ன
வீழ்ந்து கணவன் மிசையே புலம்புறுவாள்.			2

சங்குற் றிடுசெங்கைத் தண்டுளவோன் தன்பதமாம்
அங்குற் றனைஅன் றயன்பதஞ்செல் வாயன்று
கங்கைச் சடையான் கயிலையிற்சென் றாயல்லால்
எங்குற் றனைஅவ் விறைவன்அருள் பெற்றாயே.		3

உந்துதனி யாழி உனக்கணியாத் தந்தோனும்
இந்திரனும் ஏனை இமையவர்க ளெல்லோரும்
அந்தகனார் தாமும் அனைவர்களும் இன்றன்றோ
சிந்தைதனி லுள்ள கவலையெலாந் தீர்ந்தனரே.		4

பொன்னகரோர் யாரும் புலம்புற் றிடஅவுணர்
மன்னவரோ டென்பால் வரும்பவனி காணாதேன்
துன்னு பறவையினஞ் சூழத் துயிலுமுனை
இன்ன பரிசேயோ காண்பேனால் எம்பெருமான்.		5

புல்லா திருந்தனையான் புல்லுவது கண்டுமது
பல்லோருங் காணிற் பழியென் றொழிந்தாயேல்
மல்லாருந் தோளாய் மயக்குற்றேற் கோருரையுஞ்
சொல்லாய் வறிதே துயின்றாய் துனியுண்டோ.			6

மையோ டுறழும் மணிமிடற்றோன் தந்தவரம்
மெய்யா மெனவே வியந்திருந்தேன் இந்நாளும்
பொய்யாய் விளைந்ததுவோ பொன்றினையால் என்றுணைவா
ஐயோ இதற்கோ அருந்தவமுன் செய்தாயே.			7

தன்னோ டிணையின்றித் தானே தலையான
முன்னோன் அருள்புரிந்த முன்னோன் இளவல்வரின்
என்னொ அவனோ டெதிர்ந்தாய் இறந்தனையே
அன்னோ விதிவலியை யாரே கடந்தாரே.			8

சந்தார் தடம்புயத்துத் தானவர்கள் தற்சூழ
அந்தார் கமழும் அரியணைமேல் வைகியநீ
சிந்தா குலத்திற் செருநிலத்தில் துஞ்சினையால்
எந்தாய் புகலாய் இதுவுஞ் சிலநாளோ.				9

வென்றிமழு வேந்தும் விமலன் உனக்களித்த
துன்றும் வரத்தியலை யுன்னினையாற் சூழ்ச்சியினை
ஒன்று முணரா துயிருந் தொலைந்தனையே
என்று தமியேன் இனியுன்னைக் காண்பதுவே.		10

வன்னி விழியுடையான் மைந்தன் அமர்புரிய
முன்னைவலி தோற்று முடிந்தா யெனக்கேட்டுப்
பின்னுமிருந் தேனென்னிற் பேரன் புடையோர்யார்
என்னினியான் செய்கேன் எனவே இரங்குற்றாள்.		11

மற்றைத் துணைவியரும் வந்தீண்டி மன்னவனைச்
சுற்றிப் புலம்பித் துயருற் றிடும்வேலை
அற்றத் தனனாகி ஆசுரத்தின் பாற்போன
கொற்றப் புதல்வன் வினவிக் குறுகினனால்.			12

தண்டா விறல்சேருந் தன்றாதை வீந்ததனைக்
கண்டான் உயிர்த்தான் கலுழ்ந்தான் கரங்குலைத்தான்
அண்டாத சோகத் தழுங்கினான் வெய்யகனல்
உண்டா னெனவீழ்ந் தயர்ந்தான் உணர்ந்தனனே.		13

என்றுமுறா இன்ன லிடைப்பட் டவன்எழுந்து
சென்றுதன தன்னை திருத்தா ளிடைவீழா
உன்றலைவன் யாண்டையான் ஓதாய்அன் னேயென்று
நின்று புலம்பி நினைந்தினைய செய்கின்றான்.			14

அன்னைமுத லோரை அகல்வித் தொருசாரில்
துன்னுதிரென் றேவித தொலையாத தானவரில்
தன்னுழையோர் தம்மால்தழல்இந் தனமுதலாம்
மன்னு கருவி பலவும் வருவித்தான்.				15

வந்த பொழுதுதனில் வன்களத்தில் துஞ்சுகின்ற
தந்தைதனை முன்போல் தகவுபெற வொப்பித்தோர்
எந்திரத்தேர் மீதேற்றி ஈமத் திடையுய்த்துச்
சந்தனப்பூம் பள்ளி மிசையே தருவித்தான்.			16

ஈமக் கடன்கள் இயற்றித்தன் றாதைதனைத்
தாமக் கனலால் தகனம் புரிந்திடலுங்
காமுற் றனனென் கணவனுடன் செல்வதற்குத்
தீமுற் றருதி யெனஅன்னை சென்றுரைத்தாள்.		17

நற்றாய் மொழிந்ததனைக் கேட்டு நடுநடுங்கிப்
பொற்றாள் பணிந்தென்னைப் போற்றி யிருத்தியெனச்
சொற்றா னதுமறுத்துத் தோகை சுளித்துரைப்ப
அற்றாக வென்றான் அசுரேந் திரன்என்பான்.			18

ஏனைதோர் தாயர்களும் யாமுங் கணவனுடன்
வானகம்போய் எய்த வழங்கென் றிடவிசையா
ஆன படியே அழலமைக்க அன்னையராம்
மானனையார் எல்லோரும் வான்கனலி னுள்புக்கார்.		19

புக்கதொரு காலை புலம்பியே அந்நகரை
அக்கணமே நீங்கி அசுரேந் திரனென்போன்
தக்க கிளைஞர்சிலர் தற்சூழ வேயேகி
மைக்கடலுள் வைகும் மகேந்திரமூ தூர்உற்றான்.		20

வேறு
			
உளந்தளர் வெய்தித் தொல்லை ஔ¤முகன் இழந்து மேனி
தளர்ந்தனன் வறியன் போன்று தாரக முதல்வன் தந்த
இளந்தனி மைந்தன் வல்லே யேகலும் அனைய நீர்மை
வளந்திகழ் தொல்லை வீர மகேந்திரத் தவுணர் கண்டார்.		21

உரங்கிளர் அவுணர் காணூஉ ஒய்யெனத் துளங்கி யேங்கிக்
கரங்களை விதிர்த்துக் கண்ணீர் கானெறி படர்ந்து செல்லப்
பெருங்கட லுடைந்த தேபோல் பேதுற வெய்தி யாற்ற
இரங்கியிக் குமர னுற்ற தென்கொலென் றிசைக்க லுற்றார்.		22

வஞ்சமுங் கொலையுஞ் செய்யான் மற்றிவன் இதற்குத் தாதை
வெஞ்சினங் கொடுபோ கென்று விடுத்தனன் போலும் என்பார்
தஞ்சம தாகி யுள்ள தாரகன் கொடுமை நோக்கி
அஞ்சியே அவனை நீங்கி அடைந்தனன் கொல்லோ என்பார்.		23

சீரொடு துறக்கம் நீத்துத் தேவர்கோன் உருவ மாற்றிப்
பாரிடை யுழந்தான் என்பார் மற்றவன் பரனை வேண்டிப்
பேரிகல் மாயம் வன்மை பெற்றுவந் தடுபோர் செய்யத்
தாரகன் இறந்தான் கொல்லோ தளர்ந்திவன் வந்தான் என்பார்.	24

மாண்கிளர் தார கப்பேர் மன்னவன் பகைஞர் ஆற்றும்
ஏண்கிளர் சமரில் வீந்தான் என்பதற் கேது வுண்டால்
சேண்கிளர் நிவப்பா லெங்குந் தெரிகிர வுஞ்ச வெற்பில்
காண்கிலம் அவுணர் தம்மைப் பூழியே காண்டும் என்பார்.		25

பையர வணையில் துஞ்சும் பகவன தாழி தன்னை
ஐயபொன் னணிய தாக அணிந்திடும் அவுண னோடு
மொய்யமர் புரிவார் யாரே முரணொடு வெம்போர் சில்லோர்
செய்யினும் அவரால் அன்னோன் முடிகிலன் திண்ணம் என்பார்.	26

அங்கையை ஒருவன் வாளால் அறுத்திடப் புலம்பி நங்கோன்
தங்கைவந் தமரர் தம்மைச் சயந்தனைச் சிறைசெய் வித்தாள்
இங்கிவன் தானுந் துன்புற் றேகுவான் இன்றும் அற்றே
புங்கவர் தமக்கே இன்னல் புரிகுவன் போலும் என்பார்.		27

மணிகிளர் எழிலி வண்ணன் மற்றவ னொடுபோர் ஆற்றான்
அணியுல களித்த செம்மல் அமர்த்தொழில் சிறிதுந் தேறான்
தணிவறு செயிர்மீக் கொண்ட தாரக னொடுபோர் செய்யின்
இணைகல் ஈசன் அன்றி யாவரே வல்லர் என்பார்.			28

இமையவர் கருடர் நாகர் இயக்கர்கந் தருவ ரேனோர்
நமரிடு பணிகள் ஆற்றி நாடொறுந் திரிந்தார் அற்றால்
சமரெதிர் இழைப்பார் இன்றித் தளர்ந்தனம் இந்நாள் காறும்
அமரினி யுளது போலும் ஐயம தில்லை என்பார்.			29

சேயிவன் அலக்கண் எய்திச் செல்லுறு பரிசா லங்கண்
ஆயதோர் தீங்கு போலும் ஐயமின் றிதனை நாடி
நாயகன் விடுக்கு முன்னம் நம்பெருந் தானை யோடு
மாயமா புரிகா றேகி அறிந்தனம் வருதும் என்பார்.			30

எனைப்பல இனைய வாற்றா லியாவரும் அவுணர் ஈண்டி
மனப்படு பைத லோடும் வயின்வயின் உரையா நிற்ப
நினைப்பருந் திருமிக் குள்ள நெடுமகேந் திரத்திற் சென்று
வனைப்பெருங் கழற்காற் சூர மன்னவன் கோயில் போந்தான்.	31

போந்துதா ரகன்றன் மைந்தன் பொள்ளெனப் படர்த லோடும்
வாய்ந்தபே ரவைய மன்றில் வரம்பிலா அவுணர் போற்ற
ஏந்தெழில் அரிகள் தாங்கும் எரிமணித் தவிசின் மீக்கண்
வேந்தர்கள் வேந்தன் சூரன் மேவிவீற் றிருந்தான் மாதோ.		32

வீற்றிருந் தரசு போற்றும் வேந்தனை யெய்தி யன்னான்
காற்றுணை முன்னர் வீழ்ந்து கரங்களால் அவற்றைப் பற்றி
ஆற்றவும் அரற்றல் செய்ய அவுணர்கோர் அதுகண் டைய
சாற்றுதி புகுந்த தன்மை தளர்ந்தனை புலம்ப லென்றான்.		33

என்றலும் மைந்தன் சொல்வான் இந்திரன் புணர்ப்பால் ஈசன்
வன்றிறற் குமரன் பூத வயப்படை தன்னொ டேகி
உன்றன திளவல் தன்னை ஒண்கிர வுஞ்ச மென்னுங்
குன்றொடும் வேலாற் செற்றுக் குறுகினன் புவியி லென்றான்.		34

வெய்யசூர் அதனைக் கேளா விழுமிதென் றுருமின் நக்குச்
சையமாம் அவுண னோடு தாரக வலியோன் றன்னை
மையுறழ் கண்டத் தண்ணல் மைந்தனோ அடுதல் செய்வான்
பொய்யிது வெருவல் மைந்த உண்மையே புகறி என்றான்.		35

தாதைகேள் கரதம் ஈது தாரகத் தந்தை தன்னை
மேதகு கிரவுஞ் சத்தை வேல்கொடு பரமன் மைந்தன்
காதினன் சென்றான் ஈமக் கடன்முறை எந்தைக் காற்றி
மாதுயர் கொண்டு நின்பால் வந்தனன் என்றான் மைந்தன்.		36

வேறு

தோட்டுணைவ னாம்இளவல் துஞ்சினன் எனுஞ்சொல்
கேட்டலும் உளத்திடை கிளர்ந்தது சினத்தீ
நாட்டமெரி கால்வபுகை நண்ணுவன துண்டம்
ஈட்டுபொறி சிந்துவன யாக்கையுள் உரோமம்.			37

நெறித்தபுரு வத்துணைகள் நெற்றிமிசை சென்ற
கறித்தன எயிற்றினிரை கவ்விஅத ரத்தைச்
செறித்தன துடித்தன தெழித்தஇதழ் செவ்வாய்
குறித்தது மனங்ககன கூடமும் முடிக்க.			38

அவ்வகை சினத்தெரி யெழுந்துமிசை கொள்ள
அவ்வெரியின் ஆற்றலை யவித்ததது போழ்தில்
வெவ்வினைகொள் தாரகன் மிசைத்தொடரும் அன்பால்
தெவ்வர்புகழ் சூரனிடை சேர்ந்ததுயர் ஆழி.			39

துப்புநிகர் கண்புனல் சொரிந்தநதி யேபோல்
மெய்ப்புறம் வியர்த்தமுகம் வௌ¢ளமவை யீண்டி
அப்புணரி யானதுய ராழியது வென்றே
செப்புபொரு ளுண்மையது தேற்றியது போலும்.		40

பருவர லெனும்புணரி யூடுபடி வுற்றே
அரியணை மிசைத்தவறி அம்புவியில் வீழா
உருமென அரற்றினன் உணர்ந்ததனை யஞ்சி
நரலையொடு பாரகம் நடுங்கியதை யன்றே.			41

கூற்றுள நடுங்கிய குலைந்தது செழுந்தீக்
காற்றுவெரு வுற்றது கதிர்க்கடவுள் சோமன்
ஏற்றமிகு கோளுடு விரிந்தபுவி முற்றும் 
ஆற்றிய பணிக்கிறையும் அஞ்சிய தலைந்தே.			42

பாங்கருறு தானவர்கள் பாசறையின் மூழ்கி
ஏங்கினர் விழுந்தனர் இரங்கினர் தளர்ந்தார்
ஆங்கனைய போழ்துதனில் அந்நகர மெல்லாம்
ஓங்குதுயர் கொண்டுகலுழ் ஓசைமலிந் தன்றே.		43

ஆனபொழு தத்தினில் அழுங்கலுறு சூரன்
போனதொரு சீற்றவழல் புந்தியிடை மூள
மானமொடு நாணமட வல்லையில் எழுந்தே
தானுடைய ஏவலர் தமக்கிவை உரைப்பான்.			44

மன்னிளவல் ஆருயிரை மாற்றிவரு கந்தன்
தன்னிகல் கடந்துசய மெய்திவரல் வேண்டும்
என்னிரதம் வெம்படை இடுங்கவசம் யாவும்
உன்னுகணம் ஒன்றின்முனம் உய்த்திடுதி ரென்றான்.		45

இறையிவை புகன்றிடலும் ஏவலர்கள் யாரும்
முறையிலவை உய்த்திடுதல் முன்னினர்கள் போனார்
அறைகழ லுடைத்தகுவர் அன்னசெயல் நாடிக்
குறைவில்அனி கங்களொடு கொம்மென அணைந்தார்.	46

ஆயசெயல் காண்டலும் அமைச்சரில் அமோகன்
மாயைதரு சூரனடி வந்தனை புரிந்தே
ஏயதொரு மாற்றம திசைப்பல்அது கேண்மோ
தீயசின மெய்திட லெனாஇனைய செப்பும்.			47

வேறு

நஞ்சுறை படைகள் கற்று நவையுறா தொன்ன லாரை
வஞ்சினத் தெறியும் வீரர் வளநகர் அதனை மாற்றோர்
இஞ்சியைச் சூழ்ந்து போருக் கெய்தினும் எண்ணி யன்றி
வெஞ்சினத் தினைமேல் கொண்டு விரைந்தமர் இயற்றச் செல்லார்.	48

குலத்தினை வினவி உள்ளக் கோளினை வினவி வந்த
நிலத்தினை வினவித் தொல்லோர் நெறியினை வினவிக் கொணட
சலத்தினை வினவிப் போர்செய் தானையை வினவி அன்னோர்
வலத்தினை வினவி யல்லால் மற்றொன்று மனங்கொள் வாரோ.	49

வரத்தினில் வலியி னாரோ மாயையில் வலியி னாரோ
கரத்தினிற் படைக்க லத்தின் கல்வியில் வலியி னாரோ
உரத்தினில் வலியி னாரோ உணர்ச்சிசேர் ஊக்க மான
சிரத்தினில் வயியி னாரோ என்றிவை தேர்வ ரன்றே.			50

ஒற்றைரைத் தூண்டி அன்னோர் உறுவலி உணர்வ ரேனும்
மற்றுமோ ரொற்றின் அல்லால் அன்னது மனத்துட் கொள்ளார்
சுற்றுறும் அனிக மன்றி யொருபுடை துவன்றிச் சூழும்
பெற்றியும் உளதோ என்னாவேயொரீஇத் தேர்வர் பின்னும்.		51

வினையது விளைவை யென்றும் மெல்லிய என்கை வெ•கார்
அனிகமும் அனையர் தன்மை அதனையுஞ் சிறுமைத் தாக
நினைகிலர் தமக்கு மாற்றார் நேர்ந்தவ ராகின் மேலோர்
முனையுறு புலத்தி லாற்றும் மும்மையும் முன்னிச் செய்வார்.		52

மூவியல் மரபி னாலும் முற்றுறா தொழிந்த காலைக்
கோவியல் மரபுக் கேற்பக் கொடுஞ்சினந் திருகிக் கோட்புற்
றேவியல் படைஞ ரோடும் படையொடும் எதிர்ந்து சுற்றி
மேவலர் பான்மை யுன்னி வெற்றிகொண் டணைவர் அன்றே.		53

நேர்ந்திட வலியி லோரும் ஞாட்பிடை நேர்தி ரென்னாச்
சேர்ந்திடும் போழ்தும் வேந்தர் செருவினைக் குறித்துச் சென்று
சார்ந்திடல் பழிய தன்றோ வெல்லினுந் தானை தூண்டிப்
பேர்ந்திடச் செய்வர் அ•தே பெறலரும் புகழ தன்றே.			54

ஈதரோ உலகி லுள்ள இறைவர்தம் இயற்கை யாகும்
ஆதலார் நின்னொப் பாரில் அழிவிலா அகில மாள்வாய்
கூதமொன் றடையாய் வானோர் யாரையும் ஏவல் கொண்டாய்
போதனும் நெடுமா லோனும் வைகலும் புகழ வுற்றாய்.			55

இன்னதோர் மிடல்பெற் றுள்ள இறைவநீ அளிய னாகும்
பொன்னக ரவன்சொற் கேட்டுப் பூதமே படையா ஈசன்
நென்னலின் உதவும் பிள்ளை நேர்ந்திடின் அவனை வெல்ல
உன்னினை போதி யென்னின் உனக்கது வசைய தன்றோ.		56

மாற்றலர் வன்மை யோராய் மற்றவர் படைஞர் தங்கள்
ஆற்றலை யுணராய் நின்றன் அரும்பெருந் தலைமை யுன்னாய்
போற்றிடும் அமைச்ச ரோடும் புரிவன சூழாய் வாளா
சீற்றமங் கதுமேல் கொண்டு செல்லலுந் திறலின் பாற்றோ.		57

வீரமும் வலியும் மிக்கோ ராயினும் விதிவந் தெய்தில்
பாரிடை வலியி லோரும் படுத்திடப் படுவர் நின்போல்
பேருடல் அழியா ஆற்றல் பெறாமையால் இறுவா யெய்தத்
தாரகன் மழலை தேறாச் சிறுவனுந் தடியப் பட்டான்.			58

கலகல மிழற்றுந் தண்டைக் கழலடிச் சிறுவன் கைம்மாத்
தலையுடை இளவல் தன்னைத் தடிந்ததற் புதத்த தன்றால்
வலியரும் ஒருகா லத்தில் வன்மையை இழப்பர் ஆற்ற
மெலியரும் ஒருகா லத்தில் வீரராய்த் திகழ்வர் அன்றே.		59

யாருநே ரன்றி வைகும் இறைவநீ சிறுவன் றன்மேற்
போரினை முன்னி யேகல் புகழ்மைய தன்றால் அன்னான்
சீரொடு மதுகை யாவுந் தேர்ந்துபின் னவனில் தீர்ந்த
வீரரைப் படையொ டேவி வெற்றிகொண் டமர்தி யென்றான்.		60

அறிதரும்  அமைச்சர் தம்முள் அமோகன்இத் தன்மை தேற்ற
உறுதியீ தென்று சூரன் உள்ளுறு சினத்தை நீத்து
விறல்கெழும் அரிமான் ஏற்று விழுத்தகு தவிசின் ஏறிச்
செறிதரும் உழைஞர் தம்முட் சிலவரை நோக்கிச் சொல்வான்.	61

பகனொடு மயூரன் சேனன் பரிதியம் புள்ளின் பேரோன்
சுகனிவர் முதலா வுள்ள தூதரைத் தருதி ரென்னப்
புகழ்புனை சூர பன்மன் பொன்னடி இறைஞ்சி யேத்தித்
தகுவர்கள் தலைவர் மற்றச் சாரணர் தம்மை உய்த்தார்.		62

சாரணர் இஇனயர் போந்து தாள்முறை பணிந்து நிற்பச்
சூரனங் கவரை நோக்கித் துண்ணென நீவி ரேகிப்
பாரிடை வந்த கந்தன் பான்மையும் படைவெம் பூதர்
சேருறு தொகையும் யாவுந் தேர்ந்திவண் வருதி ரென்றான்.		63

ஒற்றுவர் உணர்ந்தந் நீர்மை உச்சிமேல் கொண்டு தங்கோன்
பொற்றடங் கழல்கள் தாழ்ந்து புடவியை நோக்கிச் சென்றார்
மற்றவர் போய பின்னர் மாறிலாச் சூர பன்மன்
வெற்றிகொள் அவுணர் போற்ற வீற்றிருந் தரசு செய்தான்.		64

ஏதமில் சூர பன்மன் இளவல்தன் முடிவு நேடி
மாதுயர் கொண்டு தேறி வைகிய தன்மை சொற்றாம்
ஆதியங் கடவுள் மைந்தன் அமரர்தங் கிரியை நீங்கிப்
பூதல மீது வந்த நெறியினைப் புகல லுற்றாம்.				65

ஆகத் திருவிருத்தம் - 1628
    - - -


23.  வ ழி ந டை ப்  ப ட ல ம்

குருமணி மகுடம் ஆறுங் குழைகளுந் திருவில் வீசத்
திருமணி வரையின் மேவுந் திருக்கைவேற் பெருமா னுககுக்
கருமணி யாழிப் புத்தேள் கையுறை யாக ஆங்கோர்
பருமணி நீட்டிற் றென்னப் பானுவந் துதயஞ் செய்தான்.		1

வேறு

மங்குல் வானமேல் வெய்யவன் கதிரென வழங்குஞ்
செங்கை கூப்பியே தொழுதிடு வானெனச் செல்ல
அங்கவ் வேலையில் அறுமுகன் கடவுள்வெற் பகன்று
பொங்கு தானையும் அமரருஞ் சூழதரப் போந்தான்.			2

தன்னை நீக்கியே சூழ்வுறுந் தவமுடைப் பிருங்கி
உன்னி நாடிய மறைகளின் முடிவினை யுணரா
என்னை யாளுடை யாளிடஞ் சேர்வன்என் றிமையக்
கன்னி பூசனை செய்தகே தாரமுன் கண்டான்.			3

பைய ராவின்மேற் கண்டுயில் பண்ணவன் றனக்குந்
தையல் பாதிய னேபரம் பொருளெனுந் தன்மை
மையல் மானுடர் உணர்ந்திட மறைமுனி யெடுத்த
கைய தேயுரைத் திட்டதோர் காசியைக் கண்டான்.			4

பருப்ப தப்பெயர்ச் சிலாதனற் பாலகன் பரமன்
இருப்ப வோர்வரை யாவனென் றருந்தவம் இயற்றிப்
பொருப்ப தாகியே ஈசனை முடியின்மேற் புனைந்த
திருப்ப ருப்பதத் தற்புதம் யாவையுந் தெரிந்தான்.			5

அண்டம் மன்னுயிர் ஈன்றவ ளுடன்முனி வாகித்
தொண்ட கங்கெழு சுவாமிதன் மால்வரை துறந்து
மண்டு பாதலத் தேகியே யோர்குகை வழியே
பண்டு தான்வரு வேங்கட கிரியையும் பார்த்தான்.			6

சிலந்தி மாசுணம் மும்மதக் கரிசிவ கோசன்
மலைந்தி டுஞ்சிலை வேட்டுவன் கீரனே மடவார்
பலந்த ரும்வழி பாட்டினால் பாட்டினாற் பரனைக்
கலந்து முத்திசேர் தென்பெருங் கயிலையுங் கண்டான்.		7

கொடிய வெஞ்சினக் காளியிக் குவலய முழுதும்
முடிவு செய்வன்என் றெழுந்தநாள் முளரியன் முதலோர்
அடைய அஞ்சலும் அவள்செருக் கழிவுற வழியாக்
கடவுள் ஆடலால் வென்றதோர் வடவனங் கண்டான்.		8

அம்பு ராசிகொள் பிரளயத் தினுமழி வின்றி
உம்பர் மாலயற் குறையுளாய்க் கயிலைபோ லொன்றாய்
எம்பி ரான்தனி மாநிழல் தன்னில்வீற் றிருக்குங்
கம்பை சூழ்தரு காஞ்சியந் திருநகர் கண்டான்.			9

ஏல வார்குழல் உமையவள் பூசைகொண் டிருந்த
மூல காரண மாகிய முதல்வன்ஆ லயமும்
மாலும் வேதனும் அமரரும் வழிபடு மற்றை
ஆல யங்களாய் உள்ளவுங் கண்டனன் ஐயன்.			10

வேறு

என்னிகர் எவரு மில்லென் றிருவரும் இகலும் எல்லை
அன்னவர் நடுவு தோன்றி அடிமுடி தெரியா தாகி
உன்னினர் தங்கட் கெல்லாம் ஒல்லையின் முத்தி நல்கித்
தன்னிகர் இன்றி நின்ற தழற்பெருஞ் சயிலங் கண்டான்.		11

மண்ணுல கிறைவன் செய்யும் மணந்தனை விலக்கி எண்டோள்
அண்ணலோர் விருத்தன் போல்வந் தாவண வோலை காட்டித்
துண்ணென வழக்கில் வென்று சுந்தரன் றனையாட் கொள்ளும்
பெண்ணையம் புனல்சூழ் வெண்ணெய்ப் பெரும்பதி தனையும் கண்டான்.
									12
தூசினால் அம்மை வீசத் தொடையின்மேற் கிடத்தித் துஞ்சும்
மாசிலா வுயிர்கட் கெல்லாம் அஞ்செழுத் தியல்பு கூறி
ஈசனே தனது கோலம் ஈந்திடு மியல்பால் அந்தக்
காசியின் விழுமி தான முதுகுன்ற வரையுங் கண்டான்.		13

விரிகனல் வேள்வி தன்னில் வியன்றலை அரிந்து வீட்டிப்
பொருவரு தவத்தை யாற்றும் பதஞ்சலி புலிக்கால் அண்ணல்
இருவரும் உணர்வாற் காண எல்லையில் அருளா லீசன்
திருநட வியற்கை காட்டுந் தில்லைமூ தூரைக் கண்டான்.		14

தண்டளிர்ச் சோலைத் தில்லைத் தபனிய மன்றி லென்றுந்
தொண்டையங் கனிவாய் மாது தொழச்சுராட் புருடன் உள்ளத்
தண்டரு மதிக்க லாற்றா அற்புதத் தனிக்கூத் தாடல்
கண்டனன் கசிவால் உள்ளங் களிப்புற வணங்கிப் போனான்.		15

குடமுனி கரத்தில் ஏந்துங் குண்டிகை இருந்து நீங்கிப்
படிதனில் வேறு வேறாய்ப் பற்பல நாமந் தாங்கிக்
கடல்கிளர்ந் தென்னச் செல்லுங் காவிரி யென்னு மாற்றின்
வடகரை மண்ணி யின்பால் வந்தனன் கருணை வள்ளல்.		16

ஆகத் திருவிருத்தம் - 1644
    - - -


24.  கு மா ர பு ரி ப்  ப ட ல ம்

அளவில் பூதவெம் படையொடு மண்ணியா றதன்கட்
குளகன் வந்துழி எழுந்திடு பூழிவான் குறுகி
ஔ¤ரும் வெய்யவன் கதிர்தனை மறைத்தலா லோடி
வளைநெ டுங்கடல் மூழ்குவான் புக்கென மறைந்தான்.		1

மறைந்த காலையில் தோன்றின மாலையும் நிசியுங்
குறைந்த திங்கள்வந் துதத்தது தாரகை குறுகி
நிறைந்தெ ழுந்தவோர் மன்னவன் இறந்துழி நீங்கா
துறைந்த ஒன்னலர் யாவருங் கிளர்ந்தவர் றொப்ப.			2

மிக்க தாருக வனத்தினை யொத்தது விசும்பில்
தொக்க பேரிருள் மாதரொத் தனஉடுத் தோற்றஞ்
செக்கர் ஈசனை யொத்ததொண் போனகஞ் செறிந்த
கைக்க பாலம தொத்தது கதிரிளம் பிறையே.				3

நிலவு லாவிய ககனமா நீடுபாற் கடலில்
குலவு கின்றதோர் பொருளெலாங் கொண்டுகொண் டேகி
உலகில் நல்குவான் முயலெனும் ஒருமகன் உய்ப்பச்
செலவு கொண்டதோர் தோணிபோன் றதுசிறு திங்கள்.		4

ஆன காலையில் அறுமுகப் புங்கவன் அமல
மேனி சேரொளி நிலவொடு கங்குலை வீட்டிப்
பானு மேவரு மெல்லெனச் செய்தலிற் பரமாம்
வான நாயகன் கயிலைபோன் றிருந்ததவ் வையம்.			5

வேறு

வீசு பேரொளி விறற்குகன் இவ்வா
றாசின் மண்ணியின் அகன்கரை நண்ண
ஈச னாம்அவனை எய்துபு வேதாக்
கேச வன்முதல்வர் இன்ன கிளப்பார்.				6

ஆண்ட இந்நதி யகன்கரை எல்லாம் 
மாண்ட வாலுகம் மலிந்தினி தாகும்
நீண்ட சோலைகள் நிரந்தன தோன்றி
ஈண்டி ஈண்டையின் இறுத்துள அன்றே.			7

பிறைபு னைந்திடு பெருந்தகை தானம்
இறுதி யில்லன இருந்தன வற்றால்
நறிய தாகுமிந் நதிக்கரை தன்னில்
இறைவ இவ்விடை இருந்தருள் என்றார்.			8

வனையும் மேனிஅயன் மால்முதல் வானோர்
இனைய செப்புதலும் யாரினும் மேலோன்
வினைய மெத்தவுள விச்சுவ கன்மப்
புனைவ னுக்கிது புகன்றிடு கின்றான்.				9

மெய்வி தித்தொழிலில் வேதன் நிகர்க்குங்
கைவ லோய்ஒரு கணம்படு முன்னர்
இவ்வி டத்தினில் எமக்கொரு மூதூர்
செவ்வி திற்புனைவு செய்குதி யென்றான்.			10

என்ன லோடும்அவ் விடந்தனில் எங்கோன்
துன்னு தொல்படை சுராதிப ரோடு
மன்ன அங்கணொரு மாநகர் நெஞ்சத்
துன்னி நல்கலும் உவந்தனர் யாரும்.				11

அப்பு ரத்தையறி வன்கடி தாற்றி
முப்பு ரத்தையடு முன்னவன் நல்கும்
மெய்ப்பு ரத்தவனை நோக்குபு மேலோய்
இப்பு ரத்திடை எழுந்தரு ளென்றான்.				12

என்ற லோடும்இர தத்தின் இழிந்தே
துன்றும் வானவர் சுராதிப ரானோர்
சென்ற பூதர்கள் செறிந்துடன் ஏக
மன்றல் மாநகரில் வள்ளல் புகுந்தான்.				13

செல்லு மாமுகில் செறிந்திடு காப்பின்
மல்லல் மாநகர் வளந்தனை நோக்கி
எல்லை யில்அறிவன் யாமுறை தற்கு
நல்ல மாநகரி தென்று நவின்றான்.				14

வீர வேளிது விளம்புத லோடும்
ஆரும் வானவர்கள் அம்மொழி கேளா
ஏரெ லாமுடைய இந்கர் சேய்ஞ
லூர தென்றுபெயர் ஓதினர் அன்றே.				15

ஆய காலையனி கப்படை சூழ
ஏய பின்னிளைஞர் இந்திரன் வேதா
மாயன் ஏனையர் வழுத்திட ஆண்டைக்
கோயில் செல்லுபு குமாரன் இருந்தான்.			16

வேறு

பன்னிரு புயத்தொகை படைத்தகும ரேசன்
தன்னருள் அடைந்துவிதி தன்னைமுத லானோர்
அன்னவன் விடுத்திட வகன்றுபுடை யேகித்
தொன்னிலை இருக்கைகள் தொறுந்தொறும் அடைந்தார்.	17

தானைகள் தமக்குரிய சாரதர் இலக்கர்
ஏனையர் வழுத்த எமை யாளுடைய வள்ளல்
கோனகர் இருக்கவிடை கொண்டுசெல் குழாத்துள்
வானவர் தமக்கிறை செயற்கையை வகுப்பாம்.		18

வேறு

தாங்கரும் பெருந்திறல் தார காசுரன்
பாங்கமர் குன்றொடும் பட்ட பான்மையால்
ஆங்கனம் புரந்தரன் அவலம் யாவதும்
நீங்கினன் உவகையால் நிறைந்த நெஞ்சினான்.		19

விருந்தியல் அமிர்தினை விழும மில்வழி
அருந்தின னாமென ஆகந் தண்ணெனப்
புரந்தரன் இருந்துழிப் புக்குத் தாழ்ந்ததால்
வரந்திகழ் சிரபுர வனத்தில் தெய்வதம்.			20

முகில்பொதி விண்ணகம் முதல்வன் பூண்களும்
நகில்பொதி சாந்துடை நங்கை பூண்களுந்
துகில்பொதி கிழியொடு தொல்லை வைத்தவை
அகில்பொதி காட்டகத் தடிகள் உய்த்ததே.			21

முந்துற உய்த்தபின் முதல்வ கேட்டிநீ
பைந்தொடி அணங்கொடு பரமன் காழியில்
வந்தனை நோற்றநாள் வைத்த பூணிது
தந்தனன் கொள்கெனச் சாற்றி நின்றதே.			22

நிற்புறு கின்றுழி நேமி அண்ணற்கு
முற்படு கின்றவன் முளரிப் பண்ணவன்
கிற்புறு செய்யபூண் கிழியை நோக்கினான்
கற்புடை யாள்விடுந் தூதின் காட்சிபோல்.			23

எரிமணி அணிகலன் இட்ட பூந்துகில்
விரிதரு பொதியினை விரலின் நீக்கினான்
திருமகள் அமர்தரு தெய்வத் தாமரை
வரியளி சூழ்வுற மலர்ந்த தென்னவே.				24

துண்ணெனக் கிழியதன் தொடர்பு நீக்கலும்
ஒண்ணுதற் றுணைவிபூண் உம்பர் தோன்றலுங்
கண்ணுறக் கண்டவட கருதி னானவேரா
எண்ணுதற் கரியதோர் இன்பந் துய்த்துளான்.			25

பூட்கையின் முலையுடைப் பொன்னங் கொம்பின்மேல்
வேட்கைய தாயினன் மிகவும் பிற்பகல்
வாட்கையின் றிருந்தது மனத்தின் முன்னினான்
காட்கொளுங் காமநோய்க் கவலை எய்தினான்.		26

நெய்ம்மலி தழலென நீடிக் காமநோய்
இம்மென மிசைக்கொள இரங்கி ஏங்கினான்
விம்மினன் வெதும்பினன் வெய்து யிர்த்தனன்
மைம்மலி சிந்தையன் மருட்கை எய்தினான்.			27

பசையற வுலர்வுறு பராரைப் பிண்டியின்
தசைமலி முழுதுடல் தளர்ந்து வாடினான்
இசைவரு கைவலோன் எழுது பாவைபோல்
அசைவிலன் இருந்தனன் அணங்குற் றென்னவே.		28

முருந்துறழ் எயிற்றினாள் முலைத்த டங்களில்
பொருந்துற மூஞ்கியே புணர்ந்து வைகலும்
இருந்திடு கின்றவன் இடர்ப்பட் டின்னணம்
பிரிந்திடின் வருந்துதல் பேசல் வேண்டுமோ.			29

மெய்ந்நனி அலசுற விரக மீக்கொள
இன்னணஞ் சசிபொருட் டினையும் நீர்மையோன்
பொன்னணி தன்னையும் புனைதல் வேண்டலன்
தன்னுழை யவர்தமை நோக்கிச் சாற்றுவான்.			30

இக்கிழி யொன்றினை ஏந்தி முந்துபோற்
சிக்குற வீக்கியே சேமித் துங்கள்பால்
வைக்குதிர் என்றலும் எணங்கி நன்றொனா
அக்கணம் அனையவர் அதனை யாற்றினார்.			31

அன்னதோர் அளவையில் அடவித் தேவினைக்
கொன்னுனை வச்சிரக் குரிசில் நோக்குறா
நின்னுழை அளித்திட நீசெல் கென்றலும்
மன்னவ நன்றென வங்கிப் போயதே.				32

போந்திடு காலையிற் புலோமசைப் பெயர்
ஏந்திழை காமநோய் எரியின் துப்பினாற்
காந்திய வுளத்தினன் கனலும் யாக்கையன்
ஓய்ந்தனன் தட்பமேல் உளம்வைத் தேகினான்.		33

ஔ¤யிழை உழத்தியர் ஔ¤மென் கூந்தலின்
அளியினம் நறவுதுய்த் தலரிற் கண்படு
நளியிருந் தண்டலை ஞாங்கர் பொங்கிய
புளினமொன் றதன்மிசை புக்கு வைகினான்.			34

தீந்தழல் வெங்கதிர் திளைத்த வாறென
நீத்தருங் கருங்குலின் நிலவுத் தீப்படப்
பூந்துணர் பரவிய புளினம் பொன்னகர்
வேந்தனுக் காற்றவும் வெம்மை செய்ததே.			35

சூற்புயல் மாறிய சுரத்தில் தொக்குறு
மாற்பரல் வரைபுரை மணலின் திட்டையின்
பாற்படு கின்றனன் பனிம திக்கர்
மேற்பட அசைந்தனன் வினையம் வேறிலான்.			36

திங்களும் வெங்கனல் சிதறிக் காய்ந்திடத்
துங்கவேள் படையுடன் பிறவுஞ் சூழ்ந்திட
மங்கிய உணர்ச்சியன் மயலின் வன்மையான்
புங்கவர் மன்னவன் புலம்பல் எய்தினான்.			37

மட்டமர் புரிகுழல் மடந்தை என்னுடல்
இட்டுயிர் வவ்வினள் இருந்த யாக்கையுஞ்
சுட்டிடு கிற்றியால் தூய திங்கள்நீ
பட்டவர் தம்மையும் படுப்ப ரோவென்பான்.			38

எஞ்சலில் அமுதினை யார்க்கும் நல்குநீ
நஞ்சினை யுகுத்திநண் ணலரில் தப்பியே
உஞ்சனன் இவனுயிர் ஒழிப்பன் யானெனா
வஞ்சினம் பிடித்தியோ மதிய மேயென்பான்.			39

நிற்றலும் வருதிநீ நீடு தண்ணளி
உற்றிடல் அன்றியே ஒறுத்தி லாய்மதி
அற்றமின் றுன்னிவந் தடுதி யாரிடைக்
கற்றனை இத்திறங் கள்வ நீயென்பான்.			40

பெண்ணிய லாரிடைப் பிறங்கு காமமும்
உண்ணிகழ் விரகமும் உனக்கும் உண்டதை
எண்ணலை யழல்சொரிந் தென்னைக் காய்தியால்
தண்ணளி மதிக்கிது தகுவ தோவென்பான்.			41

அரியநற் றவம்பல ஆற்றி இன்றுகா
றுரியதோர் என்பல தூனில் யாக்கையேன்
பரிவுறச் சுடுவதிற் பயனென் பாரிலிவ்
வொருவனை விடுகென உரைத்து வேண்டுவான்.		42

அண்டமேல் நின்றனை அவனி வானகம்
எண்டிசை எங்கணும் எளிது காண்டியல்
ஒண்டொடி யொருத்திஎன் னுயிர்கொண் டுற்றனள்
கண்டதுண் டோமதிக் கடவுள் நீயென்பான்.			43

யான்முதல் தோன்றினன் எனது பின்னவன்
கான்முளை யாகிய காம நீபல
பான்மையின் எனையடல் பழிய தேயலால்
மேன்மைய தாகுமோ விளம்பு வாயென்பான்.			44

பரேருள உனதுமெய் படுத்த கண்ணுதல்
ஞெரேலென உதவிய நிமலன் ஈண்டுளன்
ஒரேகணம் ஒடுங்குமுன் உயிரும் வாங்குமால்
பொரேலினி மதனநீ போகு போகென்பான்.			45

வானுழை திரிதரு மதியம் போக்கிய
தீநுழை புண்ணில்வேல் செறித்த தென்னவேள்
கோனுழை கின்றன அதனில் கூடளி
ஈநுழை கின்றன போலும் என்கின்றான்.			46

வன்றிறல் கொலைஞர்கள் மாலில் கூவிமான்
ஒன்றறக் கவர்தல்போல் உயிரென் காலினை
இன்றது போலவந் துள்புக் கீர்த்ததால்
தென்றலுக் கியான்செய்த தீதுண் டோவென்பான்.		47

வாகுலப் பரியதோர் மாதர் மாலெனும்
ஆகுலப் புணரியுள் அழுந்தி னோரையும்
வீகுலத் தொகையினுள் விட்டி சைத்திடுங்
கோகிலப் பறவையுங் கொல்லு மோவென்பான்.		48

நம்முரு வாயினன் நாகர் கோனெனாத்
தம்மன முன்னியே தளர்வு நீக்கில
கொம்மென அரற்றியுங் கூவ லின்றியும்
எம்முயிர் கொள்வன இருபுளா மென்பான்.			49

தண்டுதல் இன்றியே தானு நானுமாய்ப்
பண்டொரு வனிதை*யைப் பரிவிற் கூடினேம்
அண்டரும் அறிகுவர் அற்றை நாட்சினம்
உண்டுகொல் கதிரினம் உதிக்கி லானென்பான்.		50

(*பண்டொருவனிதை - பெண் வடிவங்கொண்ட அருணன.¢)

கோழிலை மடற்பனைக் குடம்பை சேர்தரு
மாழையம் பசலைவாய் மகன்றி லென்பவை
காழக வரிசிலைக் காமன் கோடுபோல்
ஊழியும் வீந்திடா தொலிக்கு மோவென்பான்.			51

துன்னல  ராகிய தொகையி னோர்தமைத்
தன்னிடை வைத்தெனைத் தளர்வு கண்டதால்
அன்னதும் அன்றியின் றாவி கொள்ளவும்
உன்னிய தோகடல் உறங்க லாதென்பான்.			52

இவ்வகை யாமினி யெல்லை முற்றவும்
வெவ்வழல் சுற்றிடும் விரக நோய்தெற
உய்வகை யொன்றிலன் உயங்கல் அல்லது 
செய்வது பிறிதிலன் தெருளில் சிந்தையான்.			53

வேறு

ஆக்கம் இத்திறம் அடைவுழிப் பத்துநூ றடுத்த
நோக்க முற்றவன் சசிபொருட் டுற்றநோய் அதனை
நீக்கு கின்றனன் யானெனா நினைந்துளான் என்ன
மாக்கள் பூண்டதேர் வெய்யவன் குணதிசை வந்தான்.		54

வெம்பு தொல்லிருள் அவுணர்தங் குழுவினை வீட்டி
உம்பர் மேற்செலும் மதியெனும் மடங்கலை உருத்துப்
பைம்பொன் வெஞ்சுடர்க் கரங்களால் அதன்வலி படுக்குஞ்
சிம்பு ளாமெனத் தோன்றினன் செங்கதிர்க் கடவுள்.			55

தொடர்ந்த ஞாயிறு விடுத்திடுங் கதிர்களாந் தூசி
படர்ந்த காலையில் நிலவெனும் அனிகமுன் பட்ட
அடைந்த மீனெனுந் துணைவரும் பொன்றினர் அமர்செய்
துடைந்த மன்னரில் போயினன் உடுபதிக் கடவுள்.			56

விரிந்த பல்கதிர் அனிகத்தை வெய்யவன் விடுப்பத்
துரந்த சோமனை அவன்புறங் காட்டினன் தொலைந்து
கரந்து போதலும் பின்னுறச் சென்றில களத்தில
இரிந்து ளோரையுந் தொடர்வரோ சூரர்தம் இனத்தோர்.		57

திங்கள் தன்குறை உணர்த்தவாய் திறந்தெனச் செய்ய
பங்க யங்கள்போ தவிழ்ந்தன குமுதங்கள் பலவுந்
தங்கள் நாயகன் உடைந்தது நோக்கியே தபனற்
கங்கை கூப்பிய திறனென ஒடுங்கிய அன்றே.			58

வனமெ ழுந்தன வனசமு மெழுந்தன வரியின்
இனமெ ழுந்தன மாக்களும் எழுந்தன எழில்சேர்
அனமெ ழுந்தன புள்ளெலாம் எழுந்தன அவற்றின்
மனமெ ழுந்தன எழுந்தன மக்களின் தொகையே.			59

ஞாயி றுற்றவவ் வளவையின் நனந்தலை உலகில்
ஏயெ னச்செறி இருளெலாம் மறைந்திருந் தென்னச்
சேய ரிக்கணி தந்திடு தௌ¤வில்கா மத்து
மாயி ருட்டொகை யொடுங்கிய திந்திரன் மனத்துள்.			60

கையி கந்துபோய்த் தன்னுயிர் அலைத்தகா மத்தீப்
பைய விந்திடு பாந்தள்போல் தணிதலும் பதைப்புற்
றொய்யெ னக்கடி தெழுநதனன் நகைத்து¦ளி குற்றான்
ஐய கோவிது வருவதே எனக்கென அறைந்தான்.			61

தீமை யுள்ளன யாவையுந் தந்திடுஞ் சிறப்புந்
தோமில் செல்வமுங் கெடுக்கும்நல் லுணர்வினைத் தொலைக்கும்
ஏம நன்னெறி தடுத்திருள் உய்த்திடும் இதனால்
காம மன்றியே ஒருபகை உண்டுகொல் கருதில்.			62

என்ப துன்னியே இந்திரன் ஆண்டைவைப் பிகந்து
தன்பு றந்தனிற் கடவுளர் குழுவெலாஞ் சார
அன்பொ டேபடர்ந் தறுமுகன் அடிகளை அடைந்து
முன்பு தாழ்ந்தனன் உரோமமுஞ் செங்கையும் முகிழ்ப்ப.		63

தொழுத கையினன் கோட்டிய மெய்யினன் துகிலத்
தெழுது பாவையில் ஆன்றமை புலத்தினன் இறைஞ்சிப்
புழுதி தோய்தரும் உறுப்பினன் சுருதியின் பொருண்மை
முழுதும் ஊறிய துதியின னாகிமுன் நின்றான்.			64

கரிய வன்றனைச் செய்யவன் கருணைசெய் தருளி
வருதி யென்றுகூய் மறைகளும் வரம்புகாண் கில்லா
அரன தாள்களை அருச்சனை புரிதுநாம் அதனுக்
குரிய வாயபல் பரணமுந் தருதியென் றுரைத்தான்.			65

உரைத்த வெல்லையில் தொழுதுபோய் உழையரில் பலரைக்
கரைத்து வீற்றுவீற் றேவியே கடிமலர்க் கண்ணி
திரைத்து கிற்படா நறும்புனல் அவிபுகை தீபம்
விரைத்த கந்தங்க ளேனவுந் தந்தனன் விரைவில்.			66

அவ்வக் காலையில் ஆறுமா முகனுடைய யடிகள்
தெய்வக் கம்மியற் கொண்டோரு சினகரம் இயற்றிச்
சைவத் தந்திர விதியுளி நாடியே தாதை
எவ்வெக் காலமும் நிலையதோர் உருவுசெய் திட்டான்.		67

தேவு சால்மணிப் பீடத்தில் ஈசனைச் சேர்த்தி
ஆவின் ஓரைந்தும் அமுதமும் வரிசையால் ஆட்டித்
தாவி லாததோர் வாலிதாம் அணித்துகில் சாத்திப்
பூவின் மாலிகை செய்யசாந் தத்தொடும் புனைந்தான்.		68

மருந்தி னாற்றவுஞ் சுவையன வாலுவ நூல்போய்த்
திருந்தி னார்களும் வியப்பன திறம்பல வாகிப்
பொருந்து கின்றன நிரல்அமை கருனையம் புழுக்கல்
சொரிந்து பொற்கலத் தருத்தினன் மந்திரத் தொடர்பால்.		69

கந்தம் வௌ¢ளிலை பூகநற் காயிவை கலந்து
தந்து பின்முறை அருத்தினன் புகைசுடர் தலையா
வந்த பான்மைக ளியாவையும் வரிசையா லுதவி
முந்து கைதொழூஉப் போற்றினன் மும்முறை வணங்கி.		70

வேறு

இருவரும் உணர்கிலா திருந்த தாள்களைச்
சரவண மிசைவரு தனயன் பூசனை
புரிதலும் உமையொரு புடையிற் சேர்தர
அருள்விடை மீமிசை அண்ணல் தோன்றினான்.		71

கார்த்திகை காதலன் கறைமி டற்றுடை
மூர்த்திநல் லருள்செய முன்னி வந்தது
பார்த்தனன் எழுந்தனன் பணிந்து சென்னிமேற்
சேர்த்திய கரத்தொடு சென்று போற்றினான்.			72

செயிர்ப்பறு நந்திதன் திறத்தில் வீரரும்
வியர்ப்பினில் வந்தெழு வீர ருங்குழீஇக்
கயற்புரை கண்ணுமை கணவற் காணுறீஇ
மயிர்ப்புறம் பொடிப்புற வணங்கி ஏத்தினார்.			73

முண்டகன் முதல்வரும் முரண்கொள் பூதருங்
கண்டனர் அனையது கரங்கள் கூப்பியே
மண்டனின் மும்முறை வணங்கி வானகம்
எண்டிசை செவிடுற ஏத்தல் மேயினார்.			74

வேறு

ஆயது காலை தன்னில் அருவுரு வாகும் அண்ணல்
சேயினை நோக்கி உன்றன் வழிபடற் குவகை செய்தேம்
நீயிது கோடி யென்னா நிரந்தபல் புவன முற்றும்
ஏயென முடிவு செய்யும் படைக்கலத் திறையை ஈந்தான்.		75

மற்றியது நம்பால் தோன்றும் வான்படை மாயன் வேதாப்
பெற்றுள தன்றி யார்இப் பெரும்படை பரிக்கும் நீரார்
முற்றுயிர் உண்ணும் வெஞ்சூர் முரட்படை தொலைப்பான் ஈது
பற்றுதி மைந்த என்னாப் பராபரன் அருளிப் போனான்.		76

கருணைசெய் பரமன் சேணிற் கரந்தனன் போன காலை
அருள்பெறு நெடுவேல் அண்ணல் அன்னவற் போற்றிப் பின்னை
விரவிய இலக்கத் தொன்பான் வீரரும் அயனும் ஏனைச்
சுரர்களும் வழுத்திச் செல்லத் தூயதன் தேரிற் புக்கான்.		77

சில்லியந் தேர்மேற் செவ்வேள் சேர்தலும் உலவை வேந்தன்
வல்லைதன் தமர்க ளோடும் வாம்பரி கடாவி உய்ப்ப
எல்லையிற் பரிதி தோன்ற எழுதரும் உயிர்க ளேபோல்
ஒல்லென எழுந்த தம்மா உருகெழு பூத வௌ¢ளம்.			78

சாரத நீத்த மெல்லாந் தரையின்நின் றெழுந்து சூழ்ந்து
போரணி யணிந்து போந்த புடைதனில் இலக்கத் தொன்பான்
வீரருஞ் சுரர்கள் யாரும் மேவினர் வந்தார் வான்றோய
தேர்மிசை அவர்க்கு நாப்பட் சென்றன் குமரச் செம்மல்.		79

மண்ணியங் கரையிற் றென்பால் வகுத்தசேய் ஞல்லூர் நீங்கி
எண்ணிய வுதவும்பொன்னியிகந் திடைமருதி னோடு
தண்ணியல் மஞ்ஞை யாடுந் தண்டுறை பறிய லூருங்
கண்ணுதல் இறைவன் தானம் ஏனவுங் கண்டு போனான்.		80

எழில்வளஞ் சுரக்குந் தொல்லை இலஞ்சியங் கானம் நோக்கி
மழவிடை இறைவன் பொற்றாள் வணங்கியே மலர்மென் பாவை
முழுதுள திருவும் என்றும் முடிவிம்மங் கலமும் எய்த
விழுமிதின் நோற்றுப் பெற்ற வியன்திரு வாரூர் கண்டான்.		81

ஆகத் திருவிருத்தம் - 1725
    - - -


25.  சு ர ம் பு கு  ப ட ல ம்

புற்றிடங் கொண்ட புத்தேள் புரந்தரற் கருள்செய் திட்ட
நற்றலந் தன்னைச் சேர்ந்த நகரமுள் ளனவுங் காணூஉக்
கொற்றவெங் கதிர்வேல் அண்ணல் கொல்லுலை அழலிற் செக்கர்
பற்றிய இரும்பு போலும் பாலையங் கானத் துற்றான்.			1

வேறு

ஏழு நேமியும் பெரும்புறக் கடலுமெண் டிசையுஞ்
சூழ அன்னதால் அழிவின்றித் தொன்மைபோ லாகி
ஆழி யுள்ளுறும் வடவையின் அவற்றினைப் பருகி
ஊழி தன்னினும் இருப்பதவ் வுயர்பெரும் பாலை.			2

அண்டர் நாயகன் உலகடும் மகந்தனக் காகும்
பண்ட மேசெறி பல்வளம் ஆருயிர் பசுக்கள்
மண்டு நேமிநெய் நிலங்கல மாயுற மலர்தீக்
குண்ட மாயது கள்ளிசூழ் கொடியவெம் பாலை.			3

வண்ண ஒண்சுதை மெய்யுடை வரநதி கேள்வன்
நண்ணு தொல்லுல காகியே நரலையுற் றென்னத்
தண்ணி லாவெழு நாத்தலை இரண்டுடைத் தழலின்
பண்ண வற்குல காயது முதுபெரும் பாலை.				4

உடைய தொல்குலக் கேண்மையால் அவ்வனத் துறையுங்
கொடிய வன்னிபாற் சென்றதோ வெப்பமேல் கொண்டு
நடுந டுங்கிவெம் புகையுமிழ்ந் தரற்றிநா வுலர்ந்து
கடல்ப டிந்துநீர் பருகுமால் வடவையங் கனலே.			5

கற்றை யங்கதிர்ப் பரிதியும் மதியுமக் கானஞ்
சுற்றி யேகுவ தல்லது மிசைபுகார் சுரரும்
மற்று ளார்களும் அனையரே எழிலியும் மருத்தும்
எற்றை வைகலும் அதன்புடை போகவும் இசையா.			6

சேனம் வெம்பணி ஒண்புறா விரலைமான் செந்நாய்
ஆனை யாதிகள் அவ்வனத்திருக்கவும் ஆவி
போன தில்லையால் அங்கியிற் றோங்கிய பொருள்கள்
மேனி கன்றுவ தன்றியே விளியுமோ அதனால்.			7

எண்ணி னுஞ்சுடும் பாலையங் கானிடை எழுந்த
கண்ண கன்புகை அழல்படு கின்றகாட் சியவே
விண்ணின் நீலமுஞ் செக்கரும் அவற்றினால் வெடித்த
புண்ணும் மொக்குளுங் கதிர்களும் உடுக்களும் போலாம்.		8

வேக வெய்யவன் புடையுறா தவ்வன மிசையே
போக வோரிறை எழுந்தழல் சுட்டது போலும்
ஏகு தேரொரு காலிலா திழந்ததால் இருகால்
பாகி ழந்தனன் அவனன்கதிர் அங்கிபட் டனவே.			9

தங்கள் தொல்பவம் அகன்றிலா விண்ணவர் தம்மைத்
துங்க முத்தியின் பொருட்டினால் அடைபவர் தொகைபோல்
அங்கம் நொந்துதம் போலவே வெப்பமுற் றயருங்
கங்கம் நாடியே நீழலும் கடைவன கலைகள்.				10

கோல வெங்கதிர் மதியிவர் வைகலுங் கொடிய
பாலை வெஞ்சுரத் தாரழல் வெம்மைபட் டனரோ
காலை தன்னினும் மாலையம் பொழுதினுங் கங்குல்
வேலை தன்னிலும் பிறவினும் வேலைநீர் படிவார்.			11

தொடரும் வானவர் யாவரும் ஐயைதாள் தொழுவார்
கொடிய பாலைமுன் னுணர்கிலா தணுகினர் கொல்லோ
அடிசி வந்தகம் வெம்பியே அமுதமுண் டதற்காப்
படியின் மேலென்றுஞ் செல்கிலர் விண்மிசைப் படர்வார்.		12

ஔ¢ளி தாகிய தலைமையிற் பிறந்துளோர் உலகம்
எள்ளும் நல்குர வெய்தலால் இழிந்தவர் கண்ணுங்
கொள்ளு மாரொரு பயன்குறித் தேகல் போற்கொடிய
கள்ளி தன்புடை நீழலுக் கொதுங்குவ கரிகள்.				13

இரவி கம்மியன் சுட்டுறு கோல்கதிர் எரிதீ
மருவு செந்தரை பொறிமணி கொள்கலம் வறுங்கான்
கரிக ளேகரி காற்குழல் துதிக்கைநீர் கானல்
புரித ரும்பணி வெந்திடும் பணிக்குலம் போலும்.			14

ஆன்ற வான்புவி நதிப்புனல் பாதலம் அதன்கண்
தோன்று நீத்தநீர் யாவையும் ஒருங்குறத் துற்றுச்
சான்ற பாலையஞ் செந்தழல் அப்புனல் தன்னைக்
கான்ற வாறெனக் கிளர்வன அந்நிலக் கானல்.			15

விஞ்சு கானல்வெண் டேரினை யாறென விரும்பி
நெஞ்சில் உன்னியே இரலைமான் மடப்பிடி நெடுந்தாட்
குஞ்ச ரந்திரிந் துலைவன கொடியவெம் பணிகால்
நஞ்சு தன்னையும் அருந்துவ ஞமலிநீர் நசையால்.			16

செய்ய மண்மகள் உலப்புறா உந்தியந் தீயாய்
வெய்ய வன்செலற் கரியவப் பாலைமே வுதலான்
மொயயில் வெம்பணி புகையழல் உமிழ்வன முரணும்
மையு றுங்கொடு நஞ்சொடு கான்றசெம் மணிகள்.			17

முளையின் அஞ்சொரி முத்தமும் முந்துசெம் பரலும்
அளவில் பாந்தளின் மணிகளும் ஈண்டியே அமர்தல்
விளிவில் அவ்வனத் தீச்சுடத் தனதுமெய் வெடித்தே
உளையும் மண்மகள் மொக்குளுற் றிடுதிறன் ஒக்கும்.			18

கள்ளி பட்டன பாலையுந் தீந்தன கரிந்து
முள்ளி பட்டன எரிந்தன குராமரம் முளிந்து
கொள்ளி பட்டன காரகில் அன்னதாற் கொடுந்தீப்
புள்ளி பட்டது போன்றது பாலையம் புவியே.				19

இன்ன தாகிய பாலையஞ் சுரத்திடை இறைவன்
தன்ன தாகிய தானைக ளொடுந்தலைப் படலும்
மின்னு மாமுகில் பொழிந்தபின் தண்ணளி மிக்கு 
மன்னு கின்றபூங் குறிஞ்சிபோ லாயதவ் வனமே.			20

ஆற்ற ருந்திறல் அங்கிதன் அரசியல் முறையை
மாற்றி எம்பிரான் வருணற்கு வழங்கினா னென்ன
ஏற்ற மாகிய வெம்மைபோய் நீங்கியே எவரும்
போற்று நீரொடு தண்ணளி பெற்றதப் புவியே.				21

காதல் நீங்கலா தலமரும் ஆருயிர்க் கரணம்
ஆதி ஈசன தருளினால் அவனதா கியபோல்
கூது நீரிலா தழல்படு வெய்யகான் இளையோன்
போத லாற்குளிர் கொண்டது நறுமலர்ப் பொழிலாய்.			22

புறநெ றிக்கணே வீழ்ந்துளோர் சிவனருள் புகுங்கால்
அறிவும் ஆற்றலுங் குறிகளும் வேறுபட் டனபோல்
வறிய செந்தழல் வெவ்வனம் வேலவன் வரலால்
நறிய தண்மலர்ச் சோலையாய் உவகைநல் கியதே.			23

வேறு
	
நீரறு முரம்பின் றன்மை நீங்குமச் சுரத்தின் தன்பால்
ஈரறு புயத்தன் செல்ல எழில்கெழு பரங்குன் றத்தில்
பாரறு தவம்பூண் டுள்ள பராசரன் சிறார்க ளாய
ஓரறு வகைமை யோரும் ஓதியால் அதனைக் கண்டார்.		24

தத்தனே அனந்தன் நந்தி சதுர்முகன் பரிதிப் பாணி
மெய்த்தவ மாலி என்ன மேவுமூ விருவர் தாமும்
அத்தன தருளை முன்னி அடுக்கலின் இருக்கை நீங்கி
உத்தர நடவை யெய்தி ஒய்யெனப் படர்த லுற்றார்.			25

ஆர்வல ராகும் மைந்தர் அறுவரும் அளகை நேடிப்
பார்¢வல்வந் தணையு மாபோல் பாலையென் றுரைக்கு மெல்லை
நேர்வரு கின்ற காலை நெடும்படை நீத்தஞ் சூழச்
சூர்வினை முடிப்பான் செல்லுந் தோன்றல்வந் தணிய னானான்.	26

அணிமையிற் சேயோன் நண்ண ஆறுமா முகமும் பன்னீர்
இணைதவிர் புயமுங் கையும் ஏந்தெழிற் படையின் சீரும்
மணியணி மார்புஞ் செங்கேழ் வான்றுகின் மருங்கும் பாதத்
துணையுமத் துணையிற் கண்டு தொழுதுகண் களிப்புக் கொண்டார்.27

மூவிரு திறத்தி னோரும் முற்றொருங் குணர்ந்த  ள்ளல்
பூவடி வணங்கித் தேனீப் புதுநறா அருந்தி யார்த்து
மேவருந் தன்மைத் தென்ன வியப்பொடு வழுத்தி நின்று
தேவர்கள் தேவ எம்பால் திருவருள் செய்தி யென்றார்.		28

என்றிவை இருமூ வோரும் இசைத்துழி உயிர்கட் கெல்லாம்
ஒன்றிய உயிரு மாகி உணர்வுமாய் இருந்த மூர்த்தி
தன்றிரு மலர்த்தாள் முன்னந் தலையளி யோடு தாழ்ந்து
நின்றுகை தொதிட் டன்னோர் நிலைமையை மகவான் கூறும்.	29

மறுவறு பராச ரன்றன் மதலைக ளாகு மின்னோர்
அறுவருஞ் சிறாரே யாகி ஆடுறு செவ்வி தன்னில்
நிறைதரு சரவ ணத்து நெடுந்தடம் புனலிற் பாய்ந்து
முறைமுறை புக்கு மூழ்கி முகேரென அலைக்க லுற்றார்.		30

உலைத்தலை உணர்ச்சி கொள்ள உள்ளுயிர் திரியுமாபோல்
நிலைத்தலை யின்றி யார்க்கும் நீந்தல்செய் குண்டு நீத்தம்
அலைத்தலை யடையும் எல்லை ஆயிடை வதிந்த மீன்கள்
தலைத்தலை யிரிய இன்னோர் தன்மையங் கதனைக் கண்டார்.	31

அங்கது தெரிந்து நின்றோர் ஆண்டுறு மீன்கள் பற்றித்
துங்கம துடைய கோட்டின் சூழலுய்த் துலவு மெல்லைச்
செங்கதி ருச்சி வேலைச் செய்கடன் நிரப்ப உன்னிப்
பங்கமில் நோன்மை பூண்ட பராசரன் அங்கண் வந்தான்.		32

வள்ளுறை கொண்ட தெய்வ வான்சர வணத்து வந்தோன்
பிள்ளைக ளாகும் இன்னோர் பிடித்தபுன் றொழிலை நோக்கித்
தள்ளருஞ் சினமேல் கொண்டு தனயர்காள் நீவிர் ஈண்டே
துள்ளுறு மீன மாகிச் சுலவுதி ரென்று சொற்றான்.			33

அவ்வுரை இறுக்கு முன்னர் அறுவரும் மேனாள் ஆற்றும்
வெவ்வினை யூழின் பாலால் மீனுரு வாகி அஞ்சி
எவ்வமி தகலு கின்ற தெப்கல் உரைத்தி யென்னச்
செவ்விதின் உணர்ந்து மேலைத் திருமனி புகலல் உற்றான்.		34

இத்தடந் தன்னில் மேனாள் இராறுதோ ளுடைய அண்ணல்
அத்தன தருளால் வைக அனையனை யெடுக்கும் அம்மை
மெய்த்தனம் உகுக்குந் தீம்பால் வௌ¢ளமாம் அதனை நீவிர்
துய்த்திடும் எல்லை தன்னில் தொல்லுரு வாதி ரென்றான்.		35

என்றிவை முனிவன் கூறி இரும்பகற் கடனை யாற்றிச்
சென்றனன் அதற்பின் மீனின் திருவுரு அமைந்த இன்னோர்
அன்றுதொட் டளப்பில் காலம் அலமரும் உணர்ச்சி யெய்தி
மன்றலஞ் சரவ ணத்து மாண்பெருந் தடாகத் துற்றார்.		36

ஐயநீ யனைய பொய்கை அமர்தலும் அவ்வை கண்டாங்
கொய்யென எடுப்பக் கொங்கை உகளநின் றிழிந்த தீம்பால்
துய்யதோர் நீத்த மாகித் துறுமலும் அதனைத் துய்த்து
மையல்நீங் குற்றுத் தொல்லை வாலிய வடிவம் பெற்றார்.		37

தொல்லுரு வடைந்த இன்னோர் தூமதி வேணி யண்ணல்
நல்லருள் அதனால் வந்து நவையகல் பரங்குன் றத்தின்
எல்லையில் விரதம் பூண்டாங் கிருந்தனர் எந்தை ஈண்டுச்
செல்லுவ துணர்ந்து போந்தார் என்றனன் தேவர் செம்மல்.		38

தம்மக வுரைக்குங் கூற்றந் தாதையர் வினவு மாபோல்
அம்மக பதிசொற் கேளா அருள்செய்து பராச ரன்றன்
செம்மல்கள் தம்மை நோக்கிச் செயிரறு குணத்து நீவிர்
எம்மொடு செல்வீ ரென்றான் யாவையும் உணர்ந்த பெம்மான்.	39

பராசரன் மைந்த ரன்ன பான்மையை வினவிச் செவ்வேற்
கராசரண் அடைந்தேம் என்று கட்டுரைத் திறைஞ்சிச் செல்லச்
சராசரம் யாவுந் தந்த சண்முகன் தழல்கட் கெல்லாம்
இராசர்தந் தன்மை எய்தும் இருஞ்சுரங் கடந்து போனான்.		40

ஆகத் திருவிருத்தம் - 1765
     - - - 


26.  தி ரு ச் செ ந் தி ப்  ப ட ல ம்

சுரமது கடந்து நீங்கிச் சோதிவே லுடைய வள்ளல்
விரிவுனல் சடலத் தண்ணல் மேவுசெங் குன்றூர் நோக்கிப்
பருமணி வயிர முத்தம் பலவளம் பிறவும் ஆழித்
திரையெறி யலைவா யாகுஞ் செந்திமா நகரம் புக்கான்.		1

அறுமுகன் அங்க ணேகி அகிலகம் மியனை நோக்கி
இறையிலோர் சினக ரத்தை இயற்றுதி ஈண்டை என்னத்
திறனுணர் புனைவர் செம்மல் சிந்தையின் நாடித் தேவர்
உறைதிரு நகரம் வெ•க ஒரதிருக் கோயில் செய்தான்.		2

பொன்னுறும் இரதம் நீங்கிப் புறனெலாந் தானை நண்ண
அந்நகர் அதனு ளேகி அரும்பெருந் துணைவர் பூதர்
மன்னவர் அயன்மா லாதி வானவர் யாரும் போற்ற
மின்னுபொற் பீடத் தையன் வீற்றிருந் தருளி னானே.			3

வேறு

பானிமிர் மென்குரற் பாற்படு நல்யாழ்
கானமி சைத்தனர் கந்தரு வத்தோர்
ஆனபல் சட்டுவம் அங்கைதொ றேந்தி
வானமிர் தைச்செவி வாக்குறு மாபோல்.			4

சுருதியெ லாமுணர் தூயவன் வானோர்
புரவலன் மாமுனி புங்கவர் யாரும்
மருமலர் மாரி வழுத்தினர் வீசி
இருபுடை தன்னினும் எய்தினர் ஈண்டி.			5

வாலிய தூயொளி வானதி யாவும்
பாலகன் மெய்யணி பார்த்தனர் ஆடி
ஏலுறு பாங்கரின் ஈண்டிய வாபோல்
காலினர் சாமரை கைக்கொ டசைத்தார்.			6

ஒண்ணிழல் மாமதி யோரிரு வடிவாய்
அண்ணல் முகத்தெழி லார்ந்திட நண்ணி
விண்ணிடை நின்றென வெங்கனல் வருணன்
தண்ணிழல் வெண்குடை தாங்கினர் நின்றார்.		7

கட்டழல் கான்றிடு காமரு நாகம்
எட்டும லாதன யாவையும் ஈண்டி
உட்டௌ¤ வாற்பணி உற்றென ஆல
வட்டம சைத்தனர் வானவர் பல்லோர்.				8

வானுயர் தோள்விறல் வாகெனும் அண்ணல்
தானுடை வாள்கொடு சார்ந்தபயல் நிற்ப
ஏனைய தம்பியர் எண்மர் இலக்கர்
ஆனவர் போற்றி அகன்கடை நின்றார்.			9

வேறு

பொருந்தி இன்னவர் புறத்துற அங்கண்
இருந்த ஞானமுதல் எல்லையில் காலம்
வருந்து கின்றமக வான்முகம் நோக்கித்
தெரிந்தி டாதவரின் இன்னன செப்பும்.			10

துறந்து நீதியமர் சூர்முத லானோர்
பிறந்த வாறுமவர் பேணிய நோன்பும்
இறந்த செய்யவரம் எய்திய வாறுஞ்
சிறந்து பின்னரசு செய்திடு மாறும்.				11

மற்ற வெய்யவர்தம் மாயமும் முற்கொள்
வெற்றி யும்வலியும் மேன்மையும் நும்பால்
இற்றை நாள்வரை இயற்றிய துன்பும்
முற்று மொன்றற் மொழிந்திடு கென்றான்.			12

கோக்கு மாரன்இவை கூற இசைந்தே
மீக்கொள் பொன்னுலக வேந்தயல் நின்ற
வாக்கின் வல்லகுர வன்றனை அன்பால்
நோக்கி நீயிவை நுவன்றருள் கென்றான்.			13

வச்சி ரங்கொள்கரன் மற்றது செப்ப
அச்செ னக்குரவன் அன்ன திசைந்தே
செச்சை மொய்ம்புடைய சேயிரு பொற்றான்
உச்சி கொண்டுதொழு தின்ன துரைப்பான்.			14

அறிதி எப்பொருளும் ஆவிக டோறுஞ்
செறிதி எங்கள்துயர் சிந்துதல் முன்னிக்
குறிய சேயுருவு கொண்டனை யார்க்கும்
இறைவ நின்செயலை யாருணர் கிற்பார்.			15

எல்லை யில்புவனம் யாவையும் யாண்டும்
ஒல்லு மூவரும் உயிர்தொகை யாவுந்
தொல்லை மேனிகொடு தோன்றினை யால்நீ
வல்ல மாயவியல் மற்றெவர் தேர்வார்.				16

வெய்யர் தன்மையை வினாவிய தன்மை
ஐய அன்னதை யறிந்திட அன்றே
கைய ரேந்துயர் களைந்துள மீதில்
செய்ய இன்புதவு சீரரு ளாமால்.				17

ஆகையால் அவுணர் தன்மைக ளெல்லாம்
போகு மெல்லைபுகல் கின்றனன் என்னா
வாகை சேர்குமர வள்ளலை நோக்கி
ஓகை யோடரசன் ஓதிடு கின்றான்.				18

      ஆகத் திருவிருத்தம் - 1783
             - - -

உற்பத்தி காண்டம் முற்றுப்பெற்றது

           * * *

 

முந்தையது : உற்பத்திக் காண்டம் - பகுதி - 3


 

அடுத்தது : அசுர காண்டம் - பகுதி - 1

Related Content

Discourse - The Great Vratas - Significance

Skanda Puranam Lectures

History of Thirumurai Composers - Drama-திருமுறை கண்ட புராணம

கந்தபுராணம் - பாயிரம்

கந்தபுராணம் - உற்பத்தி காண்டம் - திருக்கைலாசப்படலம்