இறைவர் திருப்பெயர்: | மதிமுத்தர், முத்தீசர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | பொற்கொடிநாயகி, சுவர்ணவல்லி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | தேவி தீர்த்தம், பிரம தீர்த்தம், சக்கர தீர்த்தம்,வசிஷ்ட தீர்த்தம், அரிசிலாறு, சந்திர தீர்த்தம் |
வழிபட்டோர்: | சம்பந்தர், சேக்கிழார், இராமர், இலட்சுமணர், சூரியன், சந்திரன், யானை, சிங்கம். |
தேவாரப் பாடல்கள் :
பதிகங்கள் : சம்பந்தர் - 1. பொடிகள்பூசிப் பலதொண்டர் (2.118);
பாடல்கள் : சேக்கிழார் - ஓங்கு புனல் பேணு (12.28.549) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
முன்னொருகாலத்தில் திருக்கைலாயமலையில் எல்லாத்தேவர்களும் சிவதரிசனம் செய்துகொண்டிருக்கையில், விதிவசத்தால் பிரமதேவன் தனது கவனத்தை ஊர்வசியின்பால் செலுத்தியதால் சிவபெருமானது சாபத்தால் பூமிக்கு வந்து அதனைப் போக்கிக்கொள்ளத் தவம் செய்யலானார். அவ்வாறு தவம் செய்த இடமே மந்தார வனமாகும்.அங்கிருந்த புற்றினை அகற்ற முயன்றபோது, பொன்மேனியளாக அம்பிகை காட்சி அளித்து அருளினாள். இதனால் பெருமகிழ்ச்சி அடைந்த பிரமன், அழகிய ஆலயம் ஒன்றை நிர்மாணித்தான். பிரமனது பக்திக்கு இரங்கிய பரமசிவனும் பார்வதி தேவியோடு ரிஷபவாகனத்தில் காட்சி அளித்தார். பிரமதீத்தத்தில் நீராடி, ரோகிணியன்று இங்கு வந்து தரிசிப்போர் எல்லா நலன்களும் பெற்று , இறுதியில் ஈசனது திருவடிப்பேற்றை அடையவேண்டும் என்று பிரமன் வரம் வேண்ட, இறைவனும் அவ்வாறே கொடுத்து அருளினான் என்று தல புராணம் கூறுகிறது.
இத்தலம் நான்கு யுகங்களிலும் முறையே, மந்தார வனம் என்றும், ஹரி க்ஷேத்திரம் என்றும், பிரம நாயகம் என்றும் திலதர்ப்பணபுரி என்றும் பெயர் பெற்றது.
வாலகில்லியர்கள் என்ற குறு வடிவம்கொண்டோர்கள் வைகுண்டம் சென்ற போது, அவர்களது வடிவைக்கண்ட லக்ஷ்மியானவர் நகைக்கவே, அவர்கள் கோபமுற்று, வைகுண்டத்திலிருந்து நீங்குவாயாக என்று சபித்தனர். பின்னர் அவர்களது சொற்படி, லக்ஷ்மிதேவி, தனது நாயகனாகிய மகாவிஷ்ணுவுடன் மந்தார வனத்தை அடைந்து,சக்ர தீர்த்தத்தை உண்டாக்கித் தன்பெயரால் வைகாசிப் பௌர்ணமியன்று சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, நியமப்படி பன்னிரண்டு ஆண்டுகள் பூசித்ததும் , முக்தீசப்பெருமானின் திருவருள் பெற்று, வைகுண்டம் திரும்பினர்.
அம்பிகையும் முன்னொருசமயம் தனது தந்தை தக்ஷன் செய்த யாகத்திற்குச் சென்ற பழி நீங்க மனதார வநேசனைப் பூசித்து, அப்பழி நீங்கப்பெற்றாள் .
இராம, இலட்சுமணர், தசரதருக்கும், ஜடாயுக்கும் திலதர்ப்பணம் (பிதிர்க் கடன்) செய்த பதியாதலின், இப்பெயர் பெற்றது.
வடநாட்டரசன் ஒருவன் இங்கு வந்து நாரதர் சொற்படி பிதிர் தர்ப்பணங்களை இங்கு செய்து தேவ வர்மேச லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பூசித்து நற்கதி பெற்றான். எனவே இத்தலத்தில் பித்ரு சிரார்த்தம், அடியார்களுக்கும் அந்தணர்களுக்கும் அன்ன தானம் ஆகிவற்றைச் செய்தால் பெறும் பலன் அளவிடமுடியாதது.
ஊர் - திலதர்ப்பணபுரி; கோவில் - மதிமுத்தம்; இடம் - கோயில்பத்து.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு பேரளம் இரயில் நிலையத்திற்குத் தென்மேற்கே 5கீ.மீ. தூரத்தில் (பூந்தோட்டத்திற்குத் தெற்கே 2கீ.மீ. தூரம்), அரிசிலியாற்றின் தென்கரையில் உள்ளது. மருவி செதலபதி என வழங்கப்படுகின்றது. தொடர்பு :04366 - 238818 , 239700 , 9442714055.