logo

|

Home >

hindu-hub >

temples

திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் தலவரலாறு (கடலூர் / திருப்பாப்புலியூர் )

இறைவர் திருப்பெயர்: தோன்றாத்துணைநாதர், பாடலீஸ்வரர், கன்னிவன நாதன், கடைஞாழலுடைய பெருமான், சிவக்கொழுந்தீசன், உத்தாரேசன், கரையேற்றும்பிரான்.

இறைவியார் திருப்பெயர்: பெரியநாயகி அம்மை, கோதைநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : கெடில நதி, சிவகர தீர்த்தம், பிரம தீர்த்தம்(கடல்), பாலோடை, தென்பெண்ணையாறு

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார், வியாக்ரபாதர், உபமன்யு முனிவர், அகத்தியர், கங்கை, அக்னி, மங்கண முனிவர்.

Sthala Puranam

patirippuliyur temple

  • இத்தலத்திற்கு; கடைஞாழல், கன்னிவனம், பாடலபுரம், ஆதிமாநகர், உத்தாரபுரம், பாதிரிப்பதி, புலிசை எனப்பல பெயர்களுண்டு. 'கடை ஞாழலூர்' என்பது மருவி 'கடலூர்' என்றாயிற்று என்பது இலக்கியவாணர் 
    கூறும் செய்தியாகும்.
  • பாதிரியைத் தலமரமாகக் கொண்டதாலும், புலிக்கால் முனிவர் (வியாக்ரபாதர்) வழிபட்டதாலும் (பாதிரி+புலியூர்), இப்பெயர் பெற்றது.
  • ஒரு முறை கைலாயத்தில் பரமனும், பார்வதியும் சொக்கட்டான் ஆடினர். பலமுறை ஆடியும் தோல்வி பெருமானுக்கே. ஆனால் வெற்றி தனக்கே எனக் கூறிய பெருமானின் திருக்கண்களை பார்வதி தன் திருக்கரங்களால் மூடினாள். இதனால் உலகம் இருண்டு அனைத்து செயல்களும் நின்று போயின. இதனைக் கண்ட இறைவி தன் செயலால் ஏற்பட்ட இன்னல்கள் கண்டு மனம் வருந்தி தனக்கு மன்னிப்பு வேண்டினாள். அதற்கு இறைவன் சிவபெருமான் இறைவியை பூலோகம் சென்று அங்குள்ள சிவ தலங்களை பூசிக்கும்படியும் அவ்வாறு பூசிக்கும் போது எந்த தலத்தில் இடது கண்ணும் இடது தோளும் துடிக்கின்றதோ அந்தத் தலத்தில் ஆட்கொள்வதாக கூறினார். அதுபோல் இறைவியும் பல தலங்களைத் தரிசித்துவிட்டு பாதிரி வனமாகத் திகழ்ந்த இத்தலத்திற்கு வந்தபோது இடது கண்ணும், இடது தோளும் துடித்ததால் இத்தலத்திலேயே தங்கி அரூபமாக (உருவமில்லாமல்) இறைவனை பூசித்து பேறு பெற்றாள்.
  • மத்யந்தின முனிவரின் மகன் சிவபெருமானின் வழிபாட்டிற்காக வண்டுகள் வருவதன் முன் பூப்பறிக்க புலியின் கண்களும் பாதங்களும் பெற்றுப் புலிக்கால் முனிவரான (வ்யாக்ரபாதர்) தலம்.
  • மங்கண முனிவர், பூசித்து, தான் பெற்ற முயல் வடிவ சாபம் நீங்கப்பெற்றத் தலம்.
  • திருநாவுக்கரசரை - அப்பரை, கல்லிற்பூட்டிக் கடலில் இட்ட போது, ''சொற்றுணை வேதியன்" பதிகம் பாடி - 'நமசிவாய - நற்றுணையாக', கல்லே தெப்பமாக, வருணன் தன் கைகளால் தாங்கித் திருப்பாதிரிப்புலியூரின் பக்கத்தே அவரைக் கொண்டுவந்து கரை சேர்த்தான். கரையேறிய அப்பர் 'ஈன்றாளுமாய் எனத் தொடங்கும் பதிகம் பாடி திருப்பாதிரிப்புலியூர் அரனைப் பணிந்தார். அப்பதிகத்தில் 'தோன்றாத்துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே', என்று குறிப்பிடுவதால் இப்பெருமான் 'தோன்றாத்துணை நாதர்' என்னும் பெயரும் பெற்றார்
  • சிதம்பரநாத முனிவர் இயற்றிய தலபுராணமும், தொல்காப்பியர் இயற்றிய கலம்பகமும் இருக்கின்றன.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சம்பந்தர்     - 1. முன்னம்நின்ற முடக்கால் (2.121);                       அப்பர்       - 1. ஈன்றாளு மாயெனக் (4.94); பாடல்கள்      :     அப்பர்       -       சிறையார் (6.07.3);                    சேக்கிழார்     -       வாய்ந்த சீர் வருணனே (12.21.131,132 & 133) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                            செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் (12.28.962) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities

  • patirippuliyur templeகஜலட்சுமி சந்நிதியை அடுத்து, துர்க்கை கோஷ்ட 
    மூர்த்தமுள்ள இடத்தில் அம்பிகை அருவ வடிவில் தவம் செய்த இடம் - அருந்தவநாயகி சந்நிதியாகப் போற்றப்பட்டு வருகின்றது. உருவமில்லை - பீடம் மட்டுமே காணப்படுகிறது.
  • அப்பர் கரையேறிய இடம் தற்போது 'கரையேறவிட்டகுப்பம்' - வண்டிப் பாளையம், என்று வழங்குகிறது ‘அப்பர்சாமி குளம்’ கரையில் ஒரு சிறிய நான்குகால் மண்டபமும் சாலையோரத்தில் உள்ளன. (குளத்திற்குப் பக்கத்திலுள்ள ஓடைதான் முன்பு கெடிலத்தின் தொடர்ச்சியாக இருந்திருக்கின்றது).
  • பள்ளியறை இறைவன் திருக்கோயிலில் அமைந்து, நாள் தோறும் இறைவியே பள்ளியறைக்கு எழுந்தருள்வது இத்தலத்தின் சிறப்பு.
  • அப்பர் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்.
  • விநாயகர் கரங்களில் யுத்தத்திற்கு பதிலாகப் பாதிரி மலர்க கொத்துகள் உள்ளன. 
  • வைகாசியில் பத்து நாள் பெருவிழா. 5ம் நாள் தெருவடைச்சான். 
  • சித்திரையில் வசந்தோற்சவமும் சிறப்பாக நடைபெறுகின்றது. 
  • மாசிமகக் கடலாட்டு நடைபெறுகின்றது.
  • அப்பர் சதயவிழா சித்திரை சதயத்தில் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. வெள்ளி ரிஷபத்தில் வீதியுலா, திருவையாறு கயிலைக் காட்சி, திருப்புகலூர் ஐக்கிய ஐதிகம் முதலியவை நடைபெறுகின்றன. 
    அ/மி பாடலேஸ்வரர் ஒரு நாள் வண்டிப்பாளையத்திற்கும் (சித்திரை. அனுஷம்) எழுந்தருளுகிறார். அன்று அப்பர்சாமி குளத்தில் தெப்பவிழா நடைபெறுகிறது.  
  • இத்தலத்தில், திருக்கோவலூர் ஆதீனத்தைச் சேர்ந்த வீர சைவமடம் உள்ளது.
  • இந்தக்கோயிலில் 21 கல்வெட்டுக்கள் படியெடுக்கப் பட்டுள்ளன. கல்வெட்டுக்கள் இரண்டைத் தவிர மற்றவை யெல்லாம் சோழர்களுடையனவே. இவை பத்தாம் நூற்றாண்டிலிருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டுவரையில் வெட்டுவிக்கப்பட்டவையாம். சோழமன்னர்களுள் மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன், இராஜராஜ ராஜகேசரிவர்மன் (முதலாம் இராஜராஜசோழன்), இராஜகேசரிவர்மனாகிய உடையார் வீர ராஜேந்திர தேவன், இராஜகேசரிவர்மனாகிய உடையார் இராஜ மகேந்திர தேவன், முதற்குலோத்துங்கன், விக்கிரமசோழதேவன் இவர்கள் காலங்களிலும், பாண்டியர்களில் பெருமாள் விக்கிரம பாண்டியன் காலத்திலும், விஜயநகரப் பரம்பரையினரில் வீரவிருப் பண்ண உடையார் காலத்திலும் செதுக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.
  • இக்கல்வெட்டுக்களில் இறைவர் திருக்கடைஞாழல் பெருமான் அடிகள், திருக்கடைஞாழல் ஆழ்வார், தோன்றாத்துணை ஆளுடையார், திருக்கடைஞாழல் உடையார் என்னும் பெயர்களால் குறிக்கப்பெற்றுள்ளனர்.
  • கோப்பரகேசரிவர்மன் காலத்தில் கி.பி. 969இல் சோமாசியார் 5 பிராமணர்களுக்குக் குடியிருக்க நிலம் தந்ததும், கி.பி.923இல் தாமோதக்கன் ஒற்றியூரான் ஒரு கமுகந்தோட்டம் கொடுத்ததும், நாராயணன் சேந்தன் திருவமிர்தத்திற்காக வேண்டும் முதல் கொடுத்ததும் கண்டிருக்கின்றன.
  • இராசகேசரி காலத்தில் (கி.பி.959) ஒரு நந்தா விளக்கிற்காக 96 ஆடுகள் கொடுக்கப்பட்டன. வீரராசேந்திரன் காலத்தில் (கி.பி.1057) மும்முடிச்சோழப் பேரியான் நுந்தாவிளக்கு வைத்ததும், காடன்தேவன் 80 கலம் நெல் தந்ததும் காண்கின்றன. 
  • குலோத்துங்கன் காலத்தில் கி.பி. 1076-ல் இராமேச்சுரமுடையான் நுந்தா விளக்கிற்காக 20 காசு தந்ததும் இதில் கண்டிருக்கிறது.
  • விக்கிரமசோழன் காலத்தில் (கி.பி. 1118, 1124,25) மூவேந்த வேளான் ஒரு விளக்கிற்காக 18 காசும் உலகளந்த மூவேந்த வேளான் 18 காசும் கொடுத்துள்ளார்கள்.
  •  மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1213) காலத்தில் தேவதானத்தில் எல்லை குறிக்கப்பட்டுள்ளது.
  • இவ்வூரை மதுரைகொண்ட கோப்பர கேசரிபன்மரின் கல்வெட்டு வடகரைதேவதானம் திருப்பாதிரிப் புலியூர் எனவும், இராஜகேசரிபன்மரான உடையார் இராஜமகேந்திர தேவர் கல்வெட்டு வடகரை இராஜேந்திரசோழ வளநாட்டு மேல்கால் நாட்டுப் பிர்மதேயம் திருப்பாதிரிப்புலியூர் எனவும், விக்கிரமசோழ தேவர் கல்வெட்டு இராஜராசவள நாட்டுப் பட்டான்பாக்கைநாட்டுத் திருப்பாதிரிப்புலியூர் எனவும், `வீரமே துணையாக` என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியையுடைய வீரராசேந்திரசோழதேவர் கல்வெட்டு இராஜேந்திரசோழ வளநாட்டுப் பவித்திரமாணிக்கவள நாட்டு பிர்மதேயம் பரநிருப பராக்கிரம சதுர்வேதிமங்கலம் எனவும் கூறுகின்றன.
  • மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன் கல்வெட்டு ``வடகரை தேவதானம் பாதிரிப்புலியூர் திருக்கடைஞாழல் பெருமான் அடிகளுக்கு`` எனவும், கோவிராசகேசரிபன்மரான உடையார் ஸ்ரீ இராசமகேந்திரதேவரின் கல்வெட்டு வடகரை இராசேந்திர சோழவள நாட்டு மேல்கால்நாட்டுப் பிர்மதேயம் பாதிரிப்புலியூரான பரநிருப பராக்கிரம சதுர்வேதி மங்கலத்து உடையார் திருக்கடை ஞாழலுடை யாருக்கு எனவும், முதற்குலோத்துங்க சோழன் கல்வெட்டு திருப்பாதிரிப்புலியூர்த் திருக்கடைஞாழல் உடைய பெருமான் அடிகள் எனவும் குறிப்பிடுகின்றன. ஆதலால் ஊரின் பெயர் பாதிரிப்புலியூர் ஆகவும் கோயிலின் பெயர் ஞாழற்கோயிலாகவும் கொள்ளவேண்டும். நாவுக்கரசு பெருந்தகையார் ``கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்`` என்று தாம் அருளிய அடைவுதிருத்தாண்டகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
  • இக்கோயில் கல்வெட்டுக்கள் நுந்தாவிளக்கினுக்கும், திருவமிர்துக்கும், பூந்தோட்டத்திற்கும் நிவந்தங்கள் கொடுத்த செய்திகளைக் குறிப்பிடுகின்றன. ``திருநட்டக்கணப்பெருமக்கள் வழி கொடுத்த தோட்டம்``, ``திருவுண்ணாழிகைப் பெருமக்களோம் திருவமிர்துக்கு வேண்டும் முதல் இவரிடைப்பெற்றோம்`` என்னும் கல்வெட்டுத் தொடர்கள் திருநட்டக்கணப் பெருமக்களும், திருவுண்ணாழிகைப் பெருமக்களும் இக்கோயில் நிர்வாகிகளில் சிலர் என்பதைக் குறிப்பனவாகும்.
  • இவ்வூர்க் கல்வெட்டுப் பாடலில் திருநாவுக்கரசுப் பெருந் தகையார் பரசமய கோளரி மாமுனிவர் என்னும் ஒருவரால் கூறப் பெற்றிருப்பதோடு அவர்மீது புராணம் இயற்றிய புலவர்க்கு இரண்டு மா நிலம் இறையிலியாகக் கொடுத்த செய்தி குறிப்பிடப் பெற்றுள்ளது.
  • கன்னி வன புராணமும், திருப்பாதிரிப்புலியூர் நாடகமும் புரசமய கோளரி மாமுனி என்பவரால் இயற்றப்பட்டவை. இச்செய்தி முதற் குலோத்துங்க சோழதேவரின் (கி.பி.1070 முதல் 1120 வரை) நாற்பத்தொன்பதாம் ஆண்டில் (கி.பி.1119,) இற்றைக்கு எண்ணூற்றெழுபத்தெட்டு ஆண்டிற்கு முன்னதான கல்வெட்டில், குறிப்பிடப்படுகிறது. மேலும் முதற்குலோத்துங்கசோழன் காலத்துக் கல்வெட்டுப் பாடல் ஒன்று இக் கோயிலுக்குக் கன்னிவன புராணமும், நாடகமும் பாடிய நாவலர் ஒருவர்க்கு நிவந்தம் அளித்ததையும் குறிப்பிடுகின்றது. 
  • வீர விருப்பண்ண உடையார் கல்வெட்டு இவ்வூரில் புஷ்பகிரிமடம் ஒன்று இருந்ததைப்பற்றித் தெரிவிக்கின்றது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இது, தற்பொழுது, கடலூர் எனப்படுகிறது. கோவில், திருப்பாதிரிப்புலியூர் இரயில் நிலையத்திற்கு அருகே உள்ளது. தமிழகத்தின் அனைத்து நகரங்களிருந்தும் கடலூருக்குப் பஸ் வசதி உள்ளது. தொடர்பு : 04142 - 236728.

Related Content

திருத்தினைநகர் (தீர்த்தனகிரி) தலவரலாறு

திருச்சோபுரம் (தியாகவல்லி) தலவரலாறு

திருஅதிகை வீரட்டானம் (திருவதிகை) தலவரலாறு

திருத்துறையூர் சிஷ்டகுருநாதர் கோயில் தலவரலாறு

திருமாணிகுழி