logo

|

Home >

hindu-hub >

temples

திருஅதிகை வீரட்டானம் (திருவதிகை) தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: வீரட்டேஸ்வரர், வீரட்டநாதர், அதிகைநாதர்.

இறைவியார் திருப்பெயர்: திரிபுரசுந்தரி.

தல மரம்:

தீர்த்தம் : கெடிலநதி (தென்கங்கை). ஆல கங்கை, சக்கரத் தீர்த்தம்.

வழிபட்டோர்:திலகவதியார், சம்பந்தர், அப்பர், சுந்தரர், கபிலதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, திருமூலர், சேக்கிழார் முதலியோர்

Sthala Puranam

thiruvadikai temple

  • அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாகத் திகழும் திருவதிகையில் தான் சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்தார். வித்யுந்மாலி, தாருகாட்சன், கம்லாட்சன் என்ற மூன்று அசுரர்கள் முறையே பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர். இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடங்களுக்குச் செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு இந்த அசுரர்கள் மக்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். தேவர்கள் அசுரகள் தொல்லை பொறுக்கமுடியாமல் சிவபெருமானிடம் முறையிட்டனர். மூன்று அசுரர்களையும் அழிக்க சிவபெருமான் பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்டார். இச்சமயம் ஒவ்வொரு தேவரும் தன்னால் தான் முப்புரங்களையும் சிவபெருமான் வெல்லப் போகிறார் என்று நினைத்து கர்வம் கொள்ளத் தொடங்கினர். இறைவன் இவ்வாறு ஒவ்வொருவரும் கர்வம் கொண்டிருப்பதைக் கண்டார். திருவருளின்றி இப்படையில் எந்த ஒரு பயனும் இல்லை என்று அவர்களுக்குப் புரிய வைக்க நினைத்து, தேவர்களின் செருக்கு அடங்கப் புன்னகையும், சிவபூஜை தவறாத திரிபுர அசுரர்கள் உய்யுமாறு தண்ணகையும், சிவபூஜை தவறிய முப்புரவாசிகள் மடியுமாறு வெந்நகையும் சிவபெருமான் செய்தார். அவர் சிரித்த உடனேயே கோட்டைகள் மூன்றும் பொடிப்பொடியாக பொசுங்கிப் போயின. இச்சம்பவம் நடந்த இடம் தான் திருவதிகை வீரட்டானம்.
  • அப்பரின் தமக்கையார் திலகவதியார் தங்கியிருந்து திருத்தொண்டு செய்து வந்த திருத்தலம். திலகவதியார் தன் தம்பியாகிய (அப்பர்) மருள்நீக்கியாரை நல்வழிப்படுத்துமாறு இறைவனை வேண்ட, இறைவன் "சூலை தந்து ஆட்கொள்வோம்" என்று பதிலுரைத்த பதி.
  • சூலை நோயின் துன்பம் தாளப்பெறாத அப்பர் பெருமான், யாருமறியாமல் பாடலிபுத்திரத்தை (திருப்பாதிரிப்புலியூர்) விட்டு நீங்கி, இங்கு வந்து, தமக்கையாரைக் கண்டு, தொழுது, திருவாளன் திருநீறு தரப் பெருவாழ்வு வந்ததென்று பணிந்து ஏற்று, உருவார அணிந்து, அவர்பின் சென்று, அதிகைப் பிரான் அடிமலர் வீழ்ந்து வணங்கி, "ஆற்றேன் அடியேன்" என்று "கூற்றாயினவாறு" பதிகம் பாடிச் சூலை நீங்கி "நாவுக்கரசு" என்ற பட்டம் பெற்ற அற்புதத்தலம்.
  • ஞானசம்பந்தருக்கு இறைவன் திருநடனம் காட்டிய தலம்.
  • திருநாவக்கரசர் உழவாரப்பணி செய்த இத்தலத்தை மிதிக்க அஞ்சி சுந்தரர் அருகிலிருந்த சித்தவடமடத்தில் தங்கி இத்தலப் பெருமானை வழிபட்டார். சுந்தரர் இரவு மடத்தில் தூங்கிக் கொண்டு இருந்த போது அவரின் மேல் யாரோ காலால் இடிப்பது தெரிந்து சுந்தரர் நகர்ந்து படுத்தார். மீண்டும் யாரோ அவர் தலையில் கால் படும்படி படுக்க, சுந்தரர் எழுந்து காலால் தலையை தீண்டியவரை கடுமையாகப் பேச, பின் இறைவன் தான் திருவடி தீட்சை அளித்துள்ளார் என்பதை உணர்ந்து புளகாங்கிதம் அடைந்து அவரைப் போற்றிப் பதிகம் பாடினார். 

திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள்  :  சம்பந்தர்   -   1. குண்டைக் குறட்பூதங் (1.46);                   அப்பர்   - 1. கூற்றாயின வாறு (4.1),                                 2. சுண்ணவெண் சந்தனச் (4.2),                                3. முளைக்கதிர் இளம்பிறை (4.10),                                 4. இரும்புகொப் பளித்த (4.24),                                 5. வெண்ணிலா மதியந் (4.25),                                 6. நம்பனே எங்கள் (4.26),                                 7. மடக்கினார் புலியின் (4.27),                                 8. முன்பெலாம் இளைய (4.28),                                 9. மாசிலொள் வாள்போல் (4.104),                                10. கோணன் மாமதி (5.53),                                11. எட்டு நாண்மலர் (5.54),                                12. வெறிவிரவு கூவிளநற் (6.3),                                13. சந்திரனை மாகங்கைத் (6.4),                                14. எல்லாஞ் சிவனென்ன (6.5),                                15. அரவணையான் சிந்தித் (6.6),                               16. செல்வப் புனற்கெடில (6.7);                  சுந்தரர்   - 1. தம்மானை அறியாத (7.38);                                   பாடல்கள்   :   அப்பர்    -       மதியங் கண்ணி (4.15.3),                                    பூதியணி பொன்னிறத்தர் (6.51.2),                                    திண்டீச்சரஞ் சேய்ஞலூர் (6.70.9),                                    ஆமயந்தீர்த் தடியேனை (6.96.1);                 சுந்தரர்   -        வஞ்சங்கொண்டார் (7.19.5);    கபிலதேவ நாயனார்    -        மதிமயங்கப் (11.22.12); பட்டினத்துப் பிள்ளையார் -        நினைவார்க் கருளும் (11.30.61);  நம்பியாண்டார் நம்பி   -        பதிகமே ழெழுநூறு (11.41.7);       சேக்கிழார்         -        மலை வளர் (12.5.82 & 88)  தடுத்தாட்கொண்ட புராணம்,                                    பேராத பாசப் பிணிப்பு (12.21.42,56,60,61,62,91,135,137,144,146,148 & 318) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                     வக்கரைப் பெருமான் (12.28.964) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                    நற்பதி அங்கு (12.30.6) திருமூல நாயனார் புராணம். 

 

Specialities

  • சைவத்துக்குத், திருத்தொண்டுக்கு உறைப்பான திருநாவுக்கரசரை வழங்கியருளிய பெருமைமிகு தலமிதுவே.
  • சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான 'உண்மை விளக்கம்' நூலை அருளிய 'மனவாசகங்கடந்தாரின்' அவதாரத் தலம்.
  • இத்தலத்தை மிதிக்க அஞ்சி சுந்தரர் அருகிலிருந்த சித்தவடமடத்தில் தங்கியதும் - திருவடி தீட்சை பெற்றதும் இத்தலமே.
  • பல்லவ மன்னனான மகேந்திரவர்மனின் மனத்தை மாற்றிச் சமண் பள்ளிகளை இடித்துக் குணபரவீச்சரம் எழுப்பச் செய்ததும் இத்தலத்தின் பெருமையை பறைசாற்றும் நிகழ்ச்சியாகும்.
  • அதிரைய மங்கலம், அதிராஜமங்கலம், அதிராஜமங்கலியாபுரம் என்னும் பெயர்கள் இத்தலத்திற்குரியனவாகக் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன.
  • மணவிற் கூத்தனான காலிங்கராயன் என்பவன் இக்கோயிலுக்குப் பொன்வேய்ந்து நூற்றுக்கால் மண்டபம், மடைப்பள்ளி, யாகசாலை ஆகியவற்றை அமைத்து, அம்பாள் கோயிலையும் கட்டுவித்தான் என்பது கல்வெட்டுச் செய்தி.
  • தென்கங்கை எனப்படும் கெடிலநதி (தல தீர்த்தம்) பக்கத்தில் ஓடுகிறது.
  • மிகப்பெரிய கோயில், சுவாமி கர்ப்பக்கிருகம் தேர்போலப் பதுமைகளால் அலங்கரிக்கப்பட்டு, நிழல் பூமியில் சாயாதபடிக் கட்டப்பட்டுள்ளது.
  • கோபுர வாயிலில் இருபுறங்களிலும் அளவற்ற சிற்பங்கள் உள்ளன; வலப்பக்கத்தில் சற்று உயரத்தில் திரிபுரமெரித்த கோலம் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது.
  • வாயிலின் இருபுறங்களிலும் நடனக்கலைச் சிற்பங்கள் (பரத சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள 108 கரணங்களை விளக்கும் சிற்பங்கள்) அளவிறந்துள்ளன.
  • கோயிலின் உட்புறத்திலுள்ள மற்றொரு பதினாறுகால் மண்டபத்தின் இரு தூண்களில் ஒன்றில் சுப்பிரமணியத் தம்பிரான் (அமர்ந்த நிலை) சிற்பமும், இதற்கு நேர் எதிர்த்தூணில் சிவஞானத் தம்பிரான் (நின்று கைகூப்பிய நிலை) சிற்பமும் உள்ளது. சுப்பிரமணியத் தம்பிரான் என்பவர்தான் இக்கோயிலைத் திருத்திச் செப்பம் செய்தவர் என்றும்; இவர் சீடரான சிவஞானத் தம்பிரான்தான் முதன்முதலில் இத்திருக்கோயிலில் அப்பர் பெருமானுக்குப் பத்து நாள்கள் விழா எடுத்துச் சிறப்பித்தார் என்பர்.
  • இக்கோயிலில் திகவதியாருக்கு சந்நிதி உள்ளது.
  • அப்பர் சந்நிதி - மூலமூர்த்தம் உள்ளது; அமர்ந்த திருக்கோலம் - சிரித்த முகம் - தலை மாலை, கையில் உழவாரப்படை தாங்கிய பேரழகு.
  • பிரகாரத்தில் பஞ்சமுக சிவலிங்கமும் (பசுபதிநாதர்), வரிசையாகப் பல சிவலிங்கத் திருமேனிகளும் உள்ளன.
  • மூலவர் பெரிய சிவலிங்கத் திருமேனி - பெரிய ஆவுடையார்; சிவலிங்கத் திருமேனி பதினாறு பட்டைகளுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. சிவலிங்கத் திருமேனிக்குப் பின்னால் அம்மையப்பர் திருவுருவம் உள்ளது.
  • கருவறை சுதையாலான பணி; இதன் முன் பகுதி வளர்த்துக் கற்றளியாகக் கட்டப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றிலும் குடவரைச் சிற்பங்கள். தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், துர்க்கை, சண்டேஸ்வரர், சரப மூர்த்தி, கல்யாணசுந்தரர், ஏகபாதர் முதலியன பேரழகு வாய்ந்தவை.
  • விமானத்தில் உள்ள சுதை வேலைப்பாடு சிறப்பானது. இவைகளில் பிரச்சித்தமான வடிவம் திரிபுராந்தகர் சிற்பம். 12 திருக்கரங்கள், சூலம் ஏந்திய கை ஒன்று, வில்லேந்திய கை ஒன்று, ஒரு கால் தேர்த்தட்டிலும், மற்றொரு காலை உயர்த்தியும் வில் வளைத்து நிற்கிறார்.
  • இத்தலத்திலிருந்து 1 கி.மீ. தொலைவு சென்றால் ஸ்ரீ சிதம்பரேஸவரர் கோயில் உள்ளது; இதுவே சித்த வட மடம் ஆகும். இப்பகுதி புதுப்பேட்டை என்று வழங்குகிறது. (சித்வடமடத்தைப் பிற்காலத்தில் சித்தாண்டிமடம், சித்தாத்த மடம் என்றெல்லாம் வழங்கினர். இப்போது இப்பகுதி கோடாலம்பாக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.)
  • பங்குனி மாதம் 10 நாட்கள் வசந்தோற்சவம்
  • சித்திரை சதயம் 10 நாட்கள்  அப்பர் மோட்சம்
  • வைகாசிப் பெருவிழா பிரம்மோற்சவம் 10 நாட்கள்
  • இங்கு திரிபுரதகன உத்ஸவம் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டத்தன்று நடக்கிறது .
  • மகேந்திரவர்ம பல்லவன் கட்டிய குணபரவீச்சரம் - "ஆதிமூல குணபரேச்சுரன் கோயில்" என்றழைக்கப்படுகிறது. இது கோயிலுக்குப் பக்கத்தில் மேற்கே பெரியரோடு கரையில் உள்ளது. சிறு கட்டிடமாக இடிந்த நிலையில், உடைந்துபோன படிமங்களுடன் காணப்படுகிறது. தற்போதுள்ள கோயில் பிற்காலத்தில் பாண்டியர்களால் எழுப்பப்பட்டது. இக்கோயில் மராட்டிய, ஆங்கிலேயர் காலத்தில் போர்க்கோட்டையாகவும் மாறி மாறிப் பயன்படுத்தப்பட்டதாக வரலாற்றில் அறிகிறோம்.
  • கோயிலில் கங்கபல்லவருள் நிருபதுங்கவர்மர், பல்லவர்களில் பரமேசுவரப்போத்தரையர், தெள்ளாறெறிந்த நந்திவர்மர், பிற்காலப் பல்லவர்களில் கோப்பெருஞ் சிங்கதேவர் என்பவர்கள் காலங்களிலும்; பிற்காலச் சோழமன்னர்களுள் இராஜகேசரிவர்மன், மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன், உத்தமசோழன், முதலாம் இராஜராஜசோழன், முதலாம் இராஜேந்திர சோழன், முதற் குலோத்துங்கசோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராஜாதிராஜன் என்பவர்கள் காலங்களிலும், பாண்டிய மன்னர்களுள் மாறவர்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் விக்கிரமபாண்டியதேவர், ஜடாவர்மன் சுந்தரபாண்டியதேவர், திரிபுவன சக்கரவர்த்தி வல்லபதேவர் என்பவர்கள் காலங்களிலும், கேரளவம்சத்தில் இரவிவர்ம மகாராசராகிய குலசேகரதேவர் காலத்திலும், சாளுவவம்சத்தில் மகா மண்டலேசுவரரான நரசிங்க தேவ மகாராயர் காலத்திலும், விசய நகர மன்னர்களுள் (பொக்கண்ண உடையார் மகன்) கம்பண்ண உடையார், அச்சுததேவ மகாராயர், ஸ்ரீரங்கதேவ மகாராயர், சதாசிவதேவ மகாராயர் என்பவர்கள் காலங்களிலும், தஞ்சை நாயக்க மன்னருள் சின்னப்ப நாயக்கர் காலத்திலும் செதுக்கப் பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன.
  • ஊரின் பெயர்: நிருபதுங்கப்பல்லவர் காலத்தில் இவ்வூர் அதியரைய மங்கலம் என்றும், முதலாம் இராஜேந்திரசோழன் காலத்தில் அதிராஜமங்கலம் என்றும், முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் அதிராசமங்கலியபுரம் என்றும், மணவிற் கூத்தனான காலிங்கராயனின் திருப்பணிகளைப்பற்றிக் கூறும் பாடல்களில் அதிகை என்றும் குறிக்கப்பெற்றுள்ளது.
  • இறைவர் திருப்பெயர்: இக்கல்வெட்டுக்களில் இறைவர் திருவீரட்டானமகாதேவர், திருவீரட்டானமுடையார், திரு வீரட்டானமுடையநாயனார், அதிகை நாயகர் என்னும் திருப்பெயர்களால் வழங்கப்பெற்றுள்ளனர்.
  • இக்கோயில் கல்வெட்டுப் பாடலில் இறைவியார் ``அதிகை வீரட்டத்து ஈசன் இடமருங்கில் ஏந்திழை``, ``அண்ணல் அதிகையான் ஆகம் பிரியாத பெண்ணின் நல்லாள்`` என்னும் தொடர்களால் பாராட்டப்பெற்றுள்ளனர்.
  • திருவீரட்டானமுடையார் கோயிலை நிருபதுங்கதேவரின் பதின்மூன்றாமாண்டில் புதுப்பித்தவர் முனைப்பாடி ஆமூர்ப் பெருங்குளத்தில் வாழ்ந்துவந்த முனைப் பேரரையர் மகன் முனையகோன் இளவரையர் ஆவர்.
  • இக்கோயிலின் வான்கயிலாயத் திருமாளிகையை ஸ்தூபி பரியந்தம் திருமஞ்சனம் பண்ணிப் புறச்சாருணைத் திருக்கல்லும் சாத்தி அருளியவர் கேரள வம்சத்து இரவிவர்ம மகாராஜரான பெருமாள் குலசேகர தேவராவர். இது நிகழ்ந்த காலம் கலியுகம் 4414. சகம் 1235. அதாவது கி. பி. 1313 ஆகும்.
  • திருக்காமக்கோட்டமென்பது இறைவியார் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலாகும். இக்கோயிலைக் கட்டியவர் முதற் குலோத்துங்சோழன் விக்கிரம சோழன் இவர்களின் படைத் தலைவராய் இருந்த தொண்டை மண்டலத்து மணவிற்கோட்டத்து மணவில் என்ற ஊரின் தலைவரான கூத்தர் காலிங்கராயர் ஆவர். இவர் இக்கோயிலைக் கட்டிய செய்தி இக்கோயிலில் பொறிக்கப் பெற்றுள்ள, ``அருமறைமா தாவி னறக்காமக் கோட்டந்
    திருவதிகைக் கேயமையச் செய்து - பெருவிபவங்
    கண்டா னெதிர்ந்தா ரவியத்தன் கைவேலைக்
    கொண்டானந் தொண்டையர் கோ.``
    என்னும் வெண்பாவால் விளங்கும்.
  • இக்கோயிலைப் பொன் வேய்ந்தவர் கூத்தர் காலிங்கராயர் ஆவர். இச்செய்தியை,``தென்னதிகை வீரட்டஞ் செம்பொனால் வேய்ந்திமையோ
    பொன்னுலகை மீளப் புதுக்கினான் - மன்னுணங்கு
    முற்றத்தான் முற்றுநீர் வையம் பொதுக்கடிந்த
    கொற்றத்தான் தொண்டையர் கோ." என்னும் வெண்பா உணர்த்தும்.
  • மணவில் கூத்தர் வீரட்டானமுடையார்க்குச் செய்த வேறு திருப்பணிகள்: அதிகை நாயகர்க்கு நூற்றுக்கால் மண்டபத்தை அமைத்தார். மடைப்பள்ளியைச் கல்லால் சமைத்தார். மண்டபம் மாளிகை. பெரிய திருச்சுற்று இவைகளைக் கட்டினார். யாக மண்டபத்தைச் செய்தார். ஆடல் அமர்ந்த பிரானுக்குக் கோயிலும் அரங்கும் அமைத்தார்.
  • வீரட்டானமுடையார் கோயிலில் எழுந்தருளியிருக்கும் பிள்ளையாரின் திருப்பெயர் மூத்தநயினார் என்பதாகும். இவரது கோயிலைச் சகம் 1399இல் வெண்ணெய்ப் பெருமாள் என்பவர் பழுதுபார்த்துள்ளனர்.
  • இக்கோயிலில் தை மாதத்திலும், வைகாசி மாதத்திலும் விழாக்கள் நடைபெற்று வந்தன. தை மாத விழாவில் தேர் இழுக்கப்படுவது உண்டு. நாற்பது ஆண்டுகள் இக்கோயிலில் தேர் இழுக்கப்படாமல் இருந்தது. அதன் பொருட்டுச் சாளுவ பரம்பரையைச் சேர்ந்த நரசிங்கதேவ மகாராயரது தளவாய் அறம் வளர்த்த நாயனார் சகம் 1400இல் அதாவது கி. பி. 1478இல் திருத்தேர் ஒன்றைச் செய்து வைத்துள்ளனர். வைகாசி மாதம் நடைபெறும் விழா வசந்த விழாவாகும். அதன்பொருட்டு, சாளுவப் பரம்பரையைச் சேர்ந்த நரசிங்கதேவ மகாராசர் காலத்தில் திம்மி நாயக்கர் என்பவர் திரிபுவன மாதேவிப் பட்டணத்தைச் சேர்ந்த முதுகுளத்தூரில் வசூலிக்கப்படும் வரிப் பணத்தைக் கொடுத்துள்ளார்.
  • வாகீசர் திருக்கோயிலைக் கட்டியவர், மணவில் கூத்தனான காலிங்கராயர் ஆவார். இச்செய்தி, "ஈசனதிகையில்வா கீசனெழுந்தருள
    மாசில் பெருங்கோயில் வந்தமைத்தான் - பூசல்
    விளைவித்த வேணாடும் வெற்பனைத்துஞ் செந்தீ
    வளைவித்தான் தொண்டையார் மன்." என்னும் வீரட்டானக்கோயில் கல்வெட்டுப் பாடலால் விளங்கும்.
  • இவ்வூரில் வாகீசர் திருப்பெயரால் மடம் ஒன்றிருந்தது. இதற்குத் திருமுனைப்பாடிக் கீழாமூர் நாட்டுக் கணிச்சப்பாக்கத்து ஊரார், தங்கள் ஊர்த் தலைப்பாடகத்தில் இராசேந்திரப்பேரேரி கீழ்கரைக்குக் கிழக்கும், வடக்கெல்லை இந்நாட்டுப் பனைப்பாக்கத்து எல்லைக்குத் தெற்கும், கிழக்கெல்லை மதனிபாக்கத்தெல்லைக்கு மேற்கும், தெற்கெல்லை உற்றடத்து உறவும் ஆக இந்நான்கு எல்லைக்கு நடுவுட்பட்ட நிலம் குழி இரண்டாயிரத்தைத் திருவீரட்டானமுடையார் வாகீசர் மடத்துக்கு மடப்புறமாக எட்டுக் காசுக்கு விற்றுக் கொடுத்திருந்தனர். இம்மடத்திற்கு மடப்புறமாகப் பனைப்பாக்கத்து ஊராரும் அரைவேலி நிலம் விட்டிருந்தனர். இது நிகழ்ந்தது முதலாம் குலோத்துங்க சோழதேவரின் 44ஆம் ஆண்டாகும்.
  • திருநாவுக்கரையதேவர் திருமடம் ஒன்றிருந்தது. இதில் உணவு அளித்தற் பொருட்டு அரும்பாக்கம் என்னும் ஊரின் தலைவனாகிய மதுராந்தகதேவன் பொன்னம்பலக்கூத்தன் திருவதிகையில் தனக்குச் சொந்தமாயிருந்த 4800 குழி புன்செய் நிலத்தை முதற் குலோத்துங்கனின் 48 ஆம் ஆண்டில் அளித்துள்ளனர்.
  • இவ்வூரிலுள்ள பிடாரி கோயிலின் வடபால் ஒரு காடு இருந்தது. அதை வெட்டி ஒரு புதிய தெருவை உண்டாக்கி அதற்குத் திருநாவுக்கரசர் திருவீதி என்று பெயர்வைத்துள்ளனர்.
  • திருவெண்ணெய்நல்லூர் அகோராஷ்டிர நயினார் திருமடம் ஒன்றும் இருந்தது. இதற்கு மடப்புறமாக அதியமங்கலத்திலிருந்து வேறு பிரிக்கப்பட்ட தென்னம் பட்டில் நிலத்தை வாங்கி அளித்தவர் ஈசுவரநாயக்கருடைய பிரதிநிதி யாகிய காமக்கோக்கிழாரான அறம்வளர்த்த நாயனார் ஆவர். இது நிகழ்ந்த காலம் சகம் 1400. அதாவது கி.பி. 1478ஆகும்.
  • இவ்வூர், முதலாம் இராஜேந்திரசோழன் கல்வெட்டில் சயங்கொண்ட சோழமண்டலத்து, திருமுனைப்பாடிநாட்டு அதிராச மங்கல்யபுரம் என்றும்; முதற் குலோத்துங்கசோழன் கல்வெட்டில் கங்கை கொண்ட வளநாட்டுத் திருமுனைப்பாடி ஆமூர்நாட்டு அதிராச மங்கல்யபுரம் என்றும்; இம் மன்னனுடைய 46ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டில், கங்கைகொண்ட சோழவளநாட்டுத் திருமுனைப்பாடிக் கீழாமூர் நாட்டு அதிராசமங்கல்யபுரம் என்றும்; ``பூமேவி வளர்பொன் மாது புணர`` எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியையுடைய இரண்டாங் குலோத்துங்க சோழ தேவரின் 13ஆவது ஆண்டுக் கல்வெட்டில், இராஜராஜ வளநாட்டுத் திருமுனைப் பாடிக் கீழாமூர் நாட்டு அதிராச மங்கல்யபுரம் என்றும், சகல புவனச் சக்கவர்த்தி கோப்பெருஞ்சிங்க தேவரின் மூன்றாமாண்டுக் கல்வெட்டில் இராஜாதிராஜ வள நாட்டுத் திருமுனைப்பாடிக்கீழாமூர் நாட்டு அதிராசமங்கல்யபுரம் என்று குறிக்கப்பெற்றுள்ளது.
  • திருவீரட்டானமுடைய மகாதேவர்க்கு, உச்சியம்போது சந்தியில், சாத்தியருள நாள் ஒன்றிற்குத் திருப்பள்ளித்தாமம் பதக்காகச் சந்திராதித்தவல் செலுத்தும் பொருட்டு, சோழமண்டலத்து, அருமொழித் தேவ வளநாட்டு வாஞ்சியூர், வாஞ்சியூர்க் கிழவன் நாராயணன் ராஜராஜன், பனையூர்நாட்டு, ஆரங்கூர்நாட்டு, காட்டுப் பாக்கத்தில் பதினாறுசாண் கோலால் நூறுகுழி கொண்டது ஒரு மாவாக நிலம் அரையே நான்மாவரை அரைக்காணிக் கீழ்க்கால் நிலத்தை முதலாம் இராஜேந்திரசோழ தேவரின் 23ஆம் ஆட்சி ஆண்டில் வாங்கி அளித்திருந்தான்.
  • திருவீரட்டானமுடையார். திருச்சிற்றம்பலமுடையார் திரு வெழுச்சிக்குப் பெருந்திருவமுதுக்குச் செந்நெலரிசி பதின்கலத்துக்கு நெல் இருபத்தைங்கலமும், பலவர்க்கத்துக் கறியமுது மூவாயிரப் பலத்துக்கு நெல் முக்கலமும், மிளகமுது நானாழிக்கு நெல் நாற்கலமும், தயிரமுது கலத்துக்கு நெல் கலமும், சர்க்கரையமுது நிறை நாலுக்கு நெல் நாற்கலமும், உப்பமுது தூணிக்கு நெல்கலமும், புளியமுது நிறை ஒன்றுக்கு நெல் கலமும், அடைக்காயமுதுக்குப் பாக்கு ஆயிரத்துக்கும் வெற்றிலைப்பற்று ஐம்பதுக்கும் திரமம் இரண்டுக்கும், நெல் ஆறு கலமும், சாத்தி அருளச் சாந்துக்கும் கற்பூரத்திற்கும் காசு ஒன்றுக்கு நெல் இருபது கலமும், செங்கழுநீர்த் திருப்பள்ளித்தாமம் இரண்டாயிரம் கொள்ளக்காசு அரைக்கு நெல் பதின்கலமும், சீதாரிக்கு நெல் இரு கலமும், வழக்கத்துக்குப் பலவர்க்கத்துப் பரிசட்ட உரு எண்பதுக்கு, காசு ஐந்துக்கு நெல் நூற்றுக்கலமும், தானம் பண்ணியருளப் பொன் அரைக் கழஞ்சுக்கு நெல் இருபதின் கலமும், திருக்காப்பு நாணுக்குப் பொன் அரைக்காலுக்கு நெல் இருகலனே தூணிப்பதக்கும் அடிக்கீழிட அரிசி பதக்குக்கு நெல் ஐங்குறுணியும் ஆக இந்நெல் இருநூற்றுக் கலனே இருதூணிக்கும், திருவீரட்டான முடையார் தேவதானமான கொழுந்தாழ்வார் ஏரிகரைக்குக் கிழக்கும், திருவீரட்டானமுடையான் வாய்க்காலுக்கு வடக்கும், குப்பை என்று பேர் கூவப்பட்ட நிலத்துக்கு மேற்கும், சத்திய பாவை என்று பேர் கூவப்பட்ட நிலத்துக்குத் தெற்கும் ஆக இந்நடுவுட்பட்ட ஒரு வேலி கொல்லை நிலத்தை, சோழ மண்டலத்து இராச நாராயண வளநாட்டு விளைநாட்டு அரசூர் சிவப் பிராமணன் பாலாசிரியனான கோழம்ப நாயகன் திருத்திக் கொடுத்துள்ளான்.
  • திருவீரட்டானமுடையார் திரு அர்த்தசாமத்துத் திருப்பள்ளிக் கட்டில் ஏறி அருளினால் அமுது செய்தருள அமுதுபடி, வெஞ்சனத்துக்குக் காலிங்கராயன் தன் பெயரால் கட்டின காலிங்கராயன் சந்திக்கு உத்திபற்றில் அதியனூர்பால் காலணை என்னும் நிலத்தைத் திரிபுவனச் சக்கிரவர்த்தி ஸ்ரீ வல்லபதேவ பாண்டியரின் 33ஆம் ஆண்டில் கொடுத்துள்ளான்.
  • ``இதன் பலிசையால் இரண்டு நந்தா விளக்குக்கு நாள்வாய் உரிநெய் அளந்து கொடுப்போமானோம் திருக்கோயிலுடையார் கையிலே நகரத்தோம். இவ்விளக்கு நந்தில் பன்மாகேஸ்வரர் கடை கூட்டப்பெற்றார்`` என்னும் பல்லவ அரசனாகிய நிருபதுங்க வர்மன் காலத்துக் கல்வெட்டுப் பகுதியாலும்; ``இதன் பலிசையால் யாண்டு பத்தாவது முதலாக நாள்வாய் நாழிநெய் அளந்துகொடுத்து இரண்டு நந்தாவிளக்கு எரிப்பேனானேன்`` - என்னும் தெள்ளாறெறிந்த நந்தி போத்தரையர் காலத்துக் கல்வெட்டுப் பகுதியாலும் நாள்வாய் என்னும் தூய தமிழ்ச் சொல் கிடைத்துள்ளது. இச்சொல் இக்காலத்தில் வழக்கத்தில் அருகியுள்ளது. கல்வெட்டுக்களில் பெரும்பான்மையும் நிசதம் என்ற வடசொல்தான் காணப்படுகிறது. நிசதம் என்பதற்கு நாடோறும் என்பது பொருள். நிசதம் என்பதற்கு முற்காலப் பல்லவர் காலங்களில் நாள்வாய் என்ற தமிழ்ச்சொல் இருந்தது கண்டு மகிழ்தற்கு உரியதாகும். முட்டில் (தடைப்படில்) என்ற பொருளில் நந்தில் என்ற சொல் வழங்கியிருப்பதும் நோக்கத்தகும். 
  • இத்திருவீரட்டானமுடையார் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சண்டேசுவரர் கலியுகச் சண்டேசுவரதேவர் என்னும் திருப்பெயரால் குறிக்கப்பெற்றுள்ளார். இத் திருக்கோயிலில் நாடக சாலை மண்டபம் ஒன்று இருந்ததை வாகன மண்டபத் தூணிலுள்ள உத்தமசோழ தேவரின் பதினான்காம் ஆண்டுக் கல்வெட்டு அறிவிக்கின்றது. அது பூங்குன்றம் அத்தமன் ஐயாறனாகிய கண்ட தோள் கண்டப்பையனால் கட்டப்பெற்றதாகும். இக்கோயிலுக்குப் பதியிலாரும் தேவரடியாரும் இருந்தனர்.
  • இக்கோயில் நூற்றுக்கால் மண்டபத்தில் முதலியார் நாடற்கரிய கூத்தரும், நாயகரும் ஏறி அருளினால், முற்பாடு திரை எடுத்தால் பதியிலார் ஆடவும், பிற்பாடு திரை எடுத்தால் தேவரடியார் ஆடவும் கடவதாக, கோமாறபன்மரான திரிபுவனச் சக்கவர்த்திகள் ஸ்ரீ விக்கிரம பாண்டியதேவர் திருவாய் மொழிந்தருளியிருந்ததை அவருடைய ஆறாம் ஆண்டுக் கல்வெட்டு உணர்த்துகின்றது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டியிலிருந்து 2-கி. மீ. தொலைவில் உள்ளது. சென்னை, கடலூர், விருத்தாசலம், விழுப்புரம், சிதம்பரம் முதலிய இடங்களிலிருந்து பண்ருட்டிக்குப் பேருந்து வசதி உள்ளது. பண்ருட்டி இருப்புப் பாதை நிலையம். தொடர்பு : 09443988779 09442780111 09841962089

Related Content

திருத்தினைநகர் (தீர்த்தனகிரி) தலவரலாறு

திருச்சோபுரம் (தியாகவல்லி) தலவரலாறு

திருக்கோவலூர் வீரட்டம் தலவரலாறு

திருத்துறையூர் சிஷ்டகுருநாதர் கோயில் தலவரலாறு

திருமாணிகுழி