இறைவர் திருப்பெயர்: | சுடர்க்கொழுந்தீசர், பிரளய காலேஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | ஆமோதனம்பாள், கடந்தை நாயகி, அழகிய காதலி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | கெடில நதி, வெள்ளாறு , கயிலைத்தீர்த்தம், பார்வதிதீர்த்தம் (பரமானந்ததீர்த்தம்), இந்திரதீர்த்தம், முக்குளம், வெள்ளாறு. |
வழிபட்டோர்: | சம்பந்தர், அப்பர், சேக்கிழார், தேவகன்னியர், காமதேனு, வெள்ளையானை, இந்திரன், பார்வதி ஆகியோர். |
இவ்வூரில் ஆறாயிரம் கடந்தையர்கள் (வீரமக்கள்) வாழ்ந்ததால் 'கடந்தை நகர் ' எனப் பெயர் பெற்றதென்பர்.
ஆழிபுரண்டக்கால் அசையாது அதிகார நந்தி மூலம் பிரளய கால வெள்ளத்தைத் தடுத்த பெருமானின் திருத்தலம்.
இந்திரனின் பூசைக்காக மலர்களைப் பறிக்க வந்த தேவகன்னியர் இத்தலத்து இறைவனைக் கண்டு மகிழ்ந்து வழிபாடியற்றி வாழ்ந்தனர். மலர் வராமைக் கண்ட இந்திரன் காமதேனுவை அனுப்ப அது வந்து, நிலையறிந்து, தானும் இறைவனை வழிபட்டு நின்றது. காமதேனுவை தேடிச்செல்லுமாறு இந்திரன் தன் வெள்ளையானையை அனுப்ப, அதுவும் வந்து, நிலைமை கண்டு, இறைவனை வணங்கி, அங்கேயே நின்றுவிட, ஒன்றும் புரியாத இந்திரன், தானே புறப்பட்டுத் தேடிவந்து, நிலைமையறிந்து, பெருமானை வழிபட்டான் என்பது வரலாறு. எனவே மேற்சொல்லிய மூவரும் (பெண் + ஆ + கடம்) வழிபட்டதலம் - பெண்ணாகடம் எனப் பெயர் பெற்றதென்பர்.
மூலஸ்தானத்திற்கு வடபால் கட்டு மலைமேல் சௌந்தரேஸ்வரர் (சிவலிங்கம்) சந்நிதி தனிக்கோபுரத்துடன் கூடிய கோயில் உள்ளது. இத்தலத்திற்கு அருகில் உள்ள சௌந்தர சோழபுரத்தில் வாழ்ந்த சௌந்தரவல்லி என்னும் தேவரடியார், பண்டம் மாற்ற இத்தலத்திற்கு வரும்போது, கடைவீதியிலிருந்தே வழிபடுவதற்கேற்ப இக்கோயில் கட்டப்பட்டதென்று ஒரு செய்தி சொல்லப்படுகிறது.
வெள்ளாற்றின் கரையில் உள்ள இத்தலத்தினை வழிபட வந்த சோழ மன்னன், ஆற்றில் வெள்ளம் வந்தமையால் அக்கரையில் இருந்தவாறே தவஞ்செய்ய, அவனுக்கு அருள்புரியவேண்டி, இறைவன் அவன் காணுமளவுக்கு உயர்ந்து காட்சி தந்தார்; அதுவே இம்மலைக் கோயிலாகும் என்ற செவிவழிச் செய்தியொன்றும் சொல்லப்படுகிறது.
அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரான கலிக்கம்ப நாயனார் சிவனடியார் பூசை
செய்து பேறுபெற்ற தலம். நாயனாரது அடியார் பூசையின் போது ஒரு நாள் முன்னாள் பணியாளர் ஒருவர் அடியார் வேடந்தாங்கிவர, அது கண்ட நாயனாரது மனைவியார் பாத பூசைக்கு நீர் வார்க்கச் சிறிது காலந்தாழ்க்க , அது பொறாத நாயனார் மனைவியாரது கரத்தினை வாளால் வெட்டித் தாமே நீர் கொண்டு அந்த அடியார் பாதம் விளக்கிப் பூசித்த செய்தியினைப் பெரிய புராணத்தில் காணலாம். இக்காரணம் பற்றியே 'கை தடிந்த வரிசிலையான் கலிக்கம்பன்' என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவரைத் தமது திருத்தொண்டத்தொகையில் பாடியுள்ளார். கலிக்கம்ப நாயனாரால் வெட்டுண்ட அவர் மனைவியின் கை மீண்டும் துளிர்க்க அருளிச் செய்த பிரான் ஆதலின் இறைவனுக்கு 'கைவழங்கீசர் ' என்ற பெயரும் உண்டு.
அப்பர் சுவாமிகள் இத்தலத்தில்தான் இறைவரைப் பிரார்த்தித்துத் தமது தோள்களில்
சூலமும் இடபமும் பொறிக்கப் பெற்றனர் என்ற வரலாறும் பெரியபுராணத்தில் காணலாம்.
தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சம்பந்தர் - 1. ஒடுங்கும் பிணிபிறவி (1.59); அப்பர் - 1. பொன்னார் திருவடிக்கு (4.109); பாடல்கள் : அப்பர் - சுடர்ப்பவளத் திருமேனி (6.33.5); சேக்கிழார் - கார் வளரும் (12.21.149 & 154) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், ஆங்கு நாதரைப் பணிந்து (12.28.184) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.
அவதாரத் தலம் : பெண்ணாகடம் (தூங்காணைமாடம்). வழிபாடு : சங்கம வழிபாடு. முத்தித் தலம் : பெண்ணாகடம். குருபூசை நாள் : தை - ரேவதி.
பணியாளே சிவனடியாராக வரக்கண்டு, நீர் வார்க்கத் தாமதித்த மனைவியின் கையை வெட்டிய கலிக்கம்ப நாயனார் வீடுபேறு பெற்றதலம்
இக்கோபுரவாயிலில் மேல்பக்கச் சுவரின் தென்பால் மெய்கண்டார் கோயில் உள்ளது. நேர் எதிரில் கலிக்கம்ப நாயனார் காட்சி தருகிறார்.
மூலவரின் - கர்ப்பக் கிருகத்தின் விமானம் ஐராவதம் வழிபட்டதற்கு அடையாளமாக யானை நிற்பதுபோல் (கஜப்ருஷ்ட அமைப்பு) அமைந்துள்ளது.
கர்ப்பக்கிருகத்தின் முன்வாயில் தவிர, ஏனைய மூன்று புறங்களிலும் இறைவனைக் கண்டு வணங்குமாறு சன்னல்கள் - பலகணிகள் அமைந்திருப்பது சிறப்புடையது.
இத்தலத்திற்கு, ஐராவதம் வழிபட்டதால் 'தயராசபதி' என்றும், ஆதிநாளில் மலர்வனமாக விளங்கியதால் 'புஷ்பவனம், புஷ்பாரண்யம்' என்றும் இந்திரன் வழிபட்டதால் 'மகேந்திரபுரி' என்றும், பார்வதி வழிபட்டதால் 'பார்வதிபுரம்' என்றும், நஞ்சுண்ட இறைவனின் களைப்பைத் தீர்த்த தலமாதலின் 'சோகநாசனம்' என்றும், சிவனுக்குகந்த பதியாதலின் 'சிவவாசம்' என்றும் வேறு பெயர்கள் உள்ளன.
சித்திரை சதய விழாவில் அப்பர் சுவாமிகள் சைவ சமயஞ்சார்ந்து, இறைவனை வேண்டி, சூலமும் இடபக்குறியும் பொறிக்குமாறு வேண்டிப்பெற்ற விழா கொண்டாடப்படுகிறது.
சைவ சித்தாந்த சந்தான குரவர்களில் முதல்வரான மெய்கண்ட தேவரின் தந்தையார் அச்சுதக்
களப்பாளர் வாழ்ந்த பதியும் மற்றொரு சந்தான குரவராகிய மறைஞானசம்பந்தர் அவதரித்த
பதியும் இதுவேதான் என்பது குறிப்பிடத்தக்கது. மறைஞான சம்பந்தர் பெயரில் தனி மடம் உள்ளது.
மெய்கண்டாரின் தந்தையான அச்சுத களப்பாளர் பெயரில் ஊருக்கு மேற்கில் 'களப்பாளர்மேடு' என்னும் இடமுள்ளது; அங்கு மெய்கண்டாருக்கு சிறிய கோயில் உள்ளது.
கோயிலின் பெயர் தூங்கானை மாடம் என்பதாம். இப்பெயர் கோயிலின் அமைப்பு பற்றி அமைந்ததாகும். ஒரு யானை படுத்திருப்பது போன்ற வடிவமாகக் கோயில் அமைந்துள்ளதைக் காணலாம். முன்புறம் யானையின் முகம் போல உயர்ந்தும், பின்புறம் யானையின் பின் பக்கம் போலப் பருத்து வட்ட வடிவமாகவும் அமைந்துள்ள இத்திருக்கோயிலின் அமைப்பு
வடமொழியில் கஜப்ருஷ்டம் என்று வழங்கப்படும்.
கருப்பக்கிரகத்தினைச் சுற்றி மூன்று சாளரங்கள் அமைந்துள்ளது இக்கோயிலுக்குரிய சிறப்பாகும்.
சோழர் காலக் கல்வெட்டுக்கள் பல இக்கோயிலில் உள்ளன. கல்வெட்டுக்களில் இத்தலத்து இறைவன் "தூங்கானைமாடமுடைய நாயனார்" என்று குறிப்பிடப்படுகின்றனர்.
அமைவிடம் அ/மி. பிரளயகாலேசுவரர் திருக்கோயில், பெண்ணாகடம் & அஞ்சல், விருத்தாச்சலம் வழி, திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம் - 608 105. மாநிலம் : தமிழ் நாடு விழுப்புரம் - திருச்சி பாதையில் விருத்தாச்சலத்திற்கு அருகிலுள்ள புகைவண்டி நிலையம். விருத்தாசலத்திலிருந்து திட்டக்குடி செல்லும் பாதையில் (விருத்தாசலத்திலிருந்த 17-கி. மீ. தொலைவில்) உள்ளது. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் தொழுதூரிலிருந்து 15-கி. மீ. தொலைவில் உள்ளது. தொடர்பு : 04143 - 222788, 098425 64768.