|
1267 |
மண்டுகங்கை சடையிற் கரந்தும் மதிசூடிமான்
கொண்டகையாற் புரம்மூன் றெரித்த குழகன்னிடம்
எண்டிசையும் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்
வண்டுகீதம் முரல்பொழில் சுலாய்நின்ற மாகாளமே. | 01 |
1268 | வேதவித்தாய வெள்ளைநீறு பூசி வினையாயின
கோதுவித்தாய நீறெழக் கொடிமா மதிலாயின
ஏதவித்தா யினதீர்க் கும்மிடம் மிரும்பைதனுள்
மாதவத்தோர் மறையோர் தொழநின்ற மாகாளமே. | 02
|
1269 | வெந்தநீறு மெலும்பும் மணிந்த விடையூர்தியான்
எந்தைபெம்மா னிடமெழில்கொள் சோலை இரும்பைதனுள்
கந்தமாய பலவின் கனிகள் கமழும்பொழில்
மந்தியேறிக் கொணர்ந்துண் டுகள்கின்ற மாகாளமே. | 03
|
1270 | நஞ்சுகண்டத் தடக்கி நடுங்கும் மலையான்மகள்
அஞ்சவேழம் உரித்த பெருமான் அமரும்மிடம்
எஞ்சலில்லாப் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்
மஞ்சிலோங்கும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே. | 04
|
1271 | பூசுமாசில் பொடியான் விடையான் பொருப்பன்மகள்
கூசஆனை உரித்த பெருமான் குறைவெண்மதி
ஈசனெங்கள் ளிறைவன் னிடம்போல் இரும்பைதனுள்
மாசிலோர்கண் மலர்கொண் டணிகின்ற மாகாளமே. | 05
|
1272 | குறைவதாய குளிர்திங்கள் சூடிக் குனித்தான்வினை
பறைவதாக்கும் பரமன் பகவன் பரந்தசடை
இறைவனெங்கள் பெருமான் இடம்போல் இரும்பைதனுள்
மறைகள்வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே. | 06
|
1273 | பொங்குசெங்கண் ணரவும் மதியும் புரிபுன்சடைத்
தங்கவைத்த பெருமா னெனநின் றவர்தாழ்விடம்
எங்குமிச்சை யமர்ந்தான் இடம்போல் இரும்பைதனுள்
மங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே. | 07
|
1274 | நட்டத்தோடு நரியாடு கானத் தெரியாடுவான்
அட்டமூர்த்தி அழல்போ லுருவன் னழகாகவே
இட்டமாக இருக்கும் மிடம்போல் இரும்பைதனுள்
வட்டஞ்சூழ்ந்து பணிவார் பிணிதீர்க்கும் மாகாளமே. | 08
|
1275 | அட்டகாலன் றனைவவ்வி னானவ் வரக்கன்முடி
எட்டுமற்றும் இருபத் திரண்டும் மிறவூன்றினான்
இட்டமாக விருப்பா னவன்போல் இரும்பைதனுள்
மட்டுவார்ந்த பொழில்சூழ்ந் தெழிலாரு மாகாளமே. | 09
|
1276 | அரவமார்த்தன் றனலங்கை யேந்தி யடியும்முடி
பிரமன்மாலும் மறியாமை நின்ற பெரியோனிடங்
குரவமாரும் பொழிற்குயில்கள் சேரும் மிரும்பைதனுள்
மருவிவானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே. | 10
|
1277 | எந்தைபெம்மா னிடமெழில்கொள் சோலை யிரும்பைதனுள்
மந்தமாய பொழில்சூழ்ந் தழகாரு மாகாளத்தில்
அந்தமில்லா அனலாடு வானை யணிஞானசம்
பந்தன்சொன்ன தமிழ்பாட வல்லார் பழிபோகுமே. | 11
|
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாகாளேசுவரர்,
தேவியார் - குயிலம்மை.