|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருப்பள்ளியின்முக்கூடல்
(திருப்பள்ளிமுக்கூடல், குருவிராமேஸ்வரம்) கோயில் தலவரலாறு
Sthala puranam of Thiruppalliyinmukkoodal Temple
இறைவர் திருப்பெயர் : முக்கோணநாதர், திரிநேத்ர சுவாமி, முக்கூடல்நாதர்.
இறைவியார் திருப்பெயர் : அஞ்சனாட்சி, மைம்மேவு கண்ணி.
தல மரம் :
தீர்த்தம் : முக்கூடல் தீர்த்தம். (இத்தீர்த்தம் திரிவேணி சங்கமத்திற்கு
ஒப்பாகச் சொல்லப்படுகிறது.)
வழிபட்டோர் : மூர்க்கரிஷி, ஜடாயு.
தேவாரப் பாடல்கள் : அப்பர் - ஆராத இன்னமுதை.
தல வரலாறு
பழைய சிவத்தலமஞ்சரி நூலில் இத்தலத்தின் பெயர் 'அரியான் பள்ளி ' என்று குறிக்கப்பட்டுள்ளது. (அரிக்கரியான் பள்ளி என்றும், அரியான்பள்ளி என்றும் அக்கால மக்கள் வழங்கி வந்தனராதலின் அரியான்பள்ளி என்று அந்நூலில் குறித்தனர்.) ஆனால் இன்று அப்பெயர் மாறி, 'திருப்பள்ளிமுக்கூடல் ' என்றே வழங்குகிறது.
இத்தல வரலாறு ஜடாயுவுடன் தொடர்புடையதாதலால் இத்தலத்தை இங்குள்ள மக்கள் "குரவிராமேஸ்வரம்" என்றும் கூறுகின்றனர்.
(இறைவன் பெயர், சமஸ்கிருதப் பெயரை நோக்கத் தமிழில் 'முக்கண்நாதர் ' என்றிருக்க வேண்டும். ஆனால் பேச்சு வழக்கில் சிதைவுற்று - தொடர்பே இல்லாமல் 'முக்கோணநாதர் ' என்று வழங்குகிறது.)
ஜடாயு இறைவனை நோக்கித் தவம் செய்து, "தனக்கு இறுதி எப்போது" என்று கேட்க; இறைவன் அவரைப் பார்த்து, "இராவணன் சீதையை கவர்ந்து வரும் வேளையில் நீ தடுப்பாய், அப்போது அவன் உன் சிறகுகளை வெட்ட நீ வீழ்ந்து இறப்பாய்" என்றாராம். அது கேட்ட ஜடாயு, "பெருமானே! அப்படியானால் நான் காசி, கங்கை, இராமேஸ்வரம், சேது முதலிய தீர்த்தங்களில் மூழ்கித் தீர்த்தப் பலனை அடையமுடியாமற்போகுமே என் செய்வேன்" என்று வேண்ட; இறைவன் முக்கூடல் தீர்த்தத்தை உண்டாக்கி அதில் மூழ்குமாறு பணிக்க அவரும் அவ்வாறே மூழ்கிப் பலனைப் பெற்றாராம். இவ்வரலாற்றையொட்டித்தான் மக்கள் பேச்சு வழக்கில் இப்பகுதியை 'குருவி ராமேஸ்வரம் ' என்று கூறுகின்றனர். இதனால் இத்தீர்த்தமும் திரிவேணி சங்கமத்திற்கு நிகராகவும்; இதில் மூழ்குவோர்க்குப் பதினாறு மடங்கு (கங்கை, சேது) தீர்த்த விசேஷப் பலனைத் தருவதால் இத்தீர்த்தம் "ஷோடசசேது" என்றும் சொல்லப்படுகிறது.
சிறப்புகள்
கோயிலின் முகப்பில் மேற்புறத்தில் இறைவன், இராமர், ஜடாயு, விநாயகர், சுப்பிரமணியர் சுதை உருவங்கள் அழகுற உள்ளன.
- கோயிலில் இத்தலப்பதிகக் கல்வெட்டுள்ளது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருவாரூரிலிருந்து 'கேக்கரை ' சாலையில் (ராமகே ரோடு) வந்து, கேக்கரையை அடைந்துது, அங்கிருந்து அதே சாலையில் 1-கி. மீ. சென்றால் வரும் சிறிய பாலத்தை கடந்து செல்லும்போது அங்கு இரண்டாகப் பிரியும் பாதையில் இடப் பக்கமாகச் செல்லும் பாதையில் 1-கி. மீ. சென்றால் ஊரை அடையலாம்.
|