logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருவாரூர்ப் பள்ளு - கமலை ஞானப்பிரகாசர்‌


சிவமயம்

காப்பு

1.  சீர்பரவு மாரூர்த் தியாகர்க்குச் செந்தமிழால் 
பார்புகழும் பள்ளேசல் பாடவே - வார்மருவுங் 
கொங்கையுமை யாள்பவனுங் குஞ்சரனும் வேலவனும் 
கங்கைசர சோதியுமே1 காப்பு.

[பிரதி பேதம் 1சரசுதியுங்]

வாதாவி விநாயகர்

2.  பூமாதொரு மாதவ முநி2துறை நீராடிய வாவியி னறைகமழ் 
 பூகாடவி மேவிய3பொழில்களும் எழில்வீறப்
பாமாதிசை வீறிய புகழ்பயில் அரூர்தி யாகர்த மனமகிழ் 
பாவானபள் ளேசலி னிசைவகை பலகூற

ஏமாசல மாகிய புயமிசை யாகாச மளாவிய பணமணி 
 யேகாசம தாமென வணிதரு மியலாளன் 
மாமால்மரு கேசன் முன் வருமொரு போர்மாமத வாரண முகமுள 
 வாதாவி விநாயக னிருபத மறவேனே.

[பிரதி பேதம் 2மினி. 3தாவிய]

முருகக் கடவுள்

3.  மேவு மைகண்டப்1 பெருமாள் புகழ் வீதி விடங்கப் பெருமாள் திரை 
வேலை விடம்புத் தமுதாமென விரும்பிய பெருமாள் 
தேவர கண்டப் பெருமாள் கறை தாவிய கண்டப் பெருமாள் மிசை 
சீர்பெற வுகந்த பள்ளே சலி னிசைபாட

வாவி நிறம்பொற்2 கலாப மயூர மெனுஞ்சொத் பரிமீதினில் 
வானவர் தம்பொற் பதிகாவல் செய் வடிவேலன் 
ஆவ லுடன்கைத் தழையே கொடு வேடுவர்மங் கைக்குயர்கா முக 
னாறு முகன்பொற் பதநா வினில் நவில்வேனே3

[பிரதி பேதம் 1மகண்ட, 2பெற்ற, 3மறவேனே.] 
கமலாலய அம்மை

4. சனகாதிகள்1 சேவடி யிணைதொழ வடதாருவி னீழலி லருமறை 
தனையோதிய தேசிக ரிமையவர் தமையாள்வார் 
அனமேனமுன் னாடுத லரியவர் அருளாளர் தியாகர்தம் மனமகிழ் 
அடைவானபள் ளேசலி னிசைவகை நசைகூர 
இனகோடியை நேர்தரு மெழிலினள் திரிசூலி மனோன்மணி திரிபுரை 
 யிமயாசல மேவிய வுமையவ ளெமையாள்வாள் 
கனகாசல மாய முலையினள் அருமாதவ மாகிய முலையினன் 
கமலாலய நாயகி யிருபத மறவேனே.

[பிரதி பேதம் 1சனகாதியர்.]

இன்னிசைக் கலிப்பா

5. தாளுஞ் சிலம்புந் தடவரையுங்1 கிண்கிணியுந் 
தோளுஞ் செவ்வந்தித் தோடுமற வாதருளீர் 
மூளுங் கருணை முகத்தா லடியவரை 
யாளும் பெருமாள் தென் னாரூர்ப் பெருமாளே.

[பிரதி பேதம் 1தடவரவக்.]


வன்மீகப்பள்ளி சீரங்கப்பள்ளிகளுடன்
வன்மீநநாதப் பள்ளன் வரவு - சிந்து

6. போரங்க மானகலை மாரன்கை மேவுசிலை 
 போலுந் திருநுதலில் வேர்வரும்ப 
கூரங்க வேல்விழிகள் நேரங்க மானதொரு 
குற்றிடைக்கொடி துவண்டு குலைந்தலைய 
தாரங்க மானகூழல் காரங்க மானவண்டு 
தந்தனதன னாவென்று1 தமிழ்பாட 
வாரங்க மானகொங்கை சீரங்கப் பள்ளியுடன் 
வன்மீக நாதப் பள்ளன் தோன்றினனே.

[பிரதி பேதம் 1தந்தனா தனனாவென்று.]

7. கச்சைகட்டிச் சுள்ளினோடு கள்ளுமிகப்  பருகிக் 
களித்தேப்ப மிட்டுவீறிக்1 கண்கள் சிவப்பு 
மெச்சுமிள நகைசெய்து மீசைதனை முறுக்கி 
வெண்ணீறு தனைமுக மீதி லணிந்து 
பச்சைமணித் தொண்டுகட்டிப் பவளத்தாழ் வடங்2கட்டிப் 
பருக்கச்செந் திரிக்கத்3 தொப் பாரமுங் கட்டி 
வச்சிரமணிக் கொட்டுமணித் தோளின்மிசை கொண்ட4 
வன்மீக நாதப்பள்ளன் றோன்றி னானே5.

[பிரதி பேதம் 1வெறி. 2தாவடங். 3சேந்திருக்க. 4தோன்ற. 5இப்பா குருகூர்ப் பள்ளு.]

வன்மீகப் பள்ளத்தி

8. பைங்கமலத் திருமுகம் வெயர்வெழ1 பாதமலர் பரிபுர மொலியெழ2 
படைவேல்விழிக் கடைபோர்செய மகரக்3 குழையசைய 
அங்கைமலர்ச் சரிவளை யசைதர அணிமுறுவற் சிறுநகை யொளிதர 
அளகாடவி நெகிழ்வுறவே யளியின மிசைபாடக்4 
கங்கைதனைச் சடையணி பெருமாள் காலனைக்கா லாலடர்த்திடு பெருமாள் 
கணைவேளுடல் பொடிபடவே5 செய்த கண்ணுதற்பெருமாள் 
தென்கமலைப்6 பதியுறை பெருமாள் தேவர கண்டப்பெரு மாள்தம் 
திருநாமம்பாடியாடும் பள்ளத்தி தோன்றினாளே7

[பிரதி பேதம் 1வெயர்வுற, 2சரிவளை யசைதர, 3மலரங். 4அளி மகிழின்னிசை பாட, 5வெரி செய், 6செங்கமலை, 7பள்ளத்திகள் தோன்றினாரே.]

9. குஞ்சரமேய் துணைமுலை யசையக் கோவைமணித் திரள்பல புரளக் 
கோலநுதற் சிந்துர மழகுறக் கொடியிடைதுவள 
அஞ்சனமைக் கயல்விழி யயல்பொர1 அமுதமொழிக் குமுத மலர்ந்திட 
அணியுமணிப் பணிபல வசைவுற வளிக்குழல் நெகிழக் 
கஞ்சமலர் கொடியிடைப்2 பெருமாள் காயாமலர் வண்ணப் பெருமாள் 
காவேரியின் நடுவிணைமிசை கண்டுயில் பெருமாள் 
செஞ்சிலைவேள் தனையருள் செய்த திருவரங்கப் பெருமாள் பெருமைத் 
திருநாமம்3 பாடியாடும் பள்ளிநானே4

[பிரதி பேதம் 1மேயகயல் விழி புரள, 2கொடிபடர், 3நாமங்கள், 4பள்ளத்திகள் தோன்றினாரே.]

வெண்பா

10. விரவு சிலைமதவேள் வெங்கால னென்னு 
மிரவுமொரு முப்பதுக மென்னும்  — பரவுங்1 
கறைக்கண்ட னேகமலைக் கண்ணுதலே யென்னும் 
பிறைக்கண்டனேருமொரு2 பெண்.

[பிரதி பேதம் 1பரவு, 2னேருநுதற்.]

11. பொன்பரப்பிய திருவீ தியிலே கணைபரப்பிய சிலைவேள் நிலேதரு1 
 புகழ்பரப்பிய கமலா லயமெனும் புரியுறைபெருமாள் 
அன்பருக்கெளி தாகிய பெருமாள் அருமைப் பெருமாள் கலைமானுறை 
 யனங்கைப் பெருமாள் மலைமானுறை யாகப்பெருமான் 
தென்புறத்திளந் தென்றலிழைத் திடுந் திருச்சாளர2 வரிசைப்பெரு மாள் 
சிங்காதன மழயெபெருமாள் தியாகப்பெருமாள்
வன்மீகப் பெருமாள்3 வீதிவிடங்கப்பெரு மாள்தன் பெருமைத் 
திருநாமம் பாடியாடும் பள்ளி நானே.

[பிரதி பேதம் 1தரும், 2திருச்சாலக, 3மின் பரப்பிய கடைமுடிப் பெருமாள்.]

12.  அண்டர்மனைக் கொடியிடைமட வியரளையற்றளை1 யப்படுதிரு மால்2 
அழகியமெய்க் குழையைக் குழைப்பித்திடு பெருமாள் 
மண்டலமுண் டெழுகடலுண் டெழு வரையுண்டெழு புவனமுமுண் டொரு 
வடபத்திர மிசைதுயில் வடிவுடைத் திருமால் 
கண்டக3 வெஞ் சமர்பொருநிரு தனை யொருபதுசிர மிருபதுகர மற 
கரதூடணர் முடிதூளெழ பொரு4 கணை தொடு திருமால்
தெண்டிரைவெண் சங்குமுழங் கிட5 திருக்காவிரி வளர்ந்திடவளந் தரு6 
திருவரங்கப் பெருமாள் பெருமை7 பாடியாடும் பள்ளி நானே.

[பிரதி பேதம் 1தயிர்ப்படு, 2அண்டர் மனைக்கொடியிடை மடவிய – ரளையத் தயிர்ப்படு மழகிய மெய்க்கலை பிடித்தழுதிடு திருமால் – மண்டல முண்டெழுவரை யுண்டெழுபுவன முண்டொரு வடபத்திர மிசைத்துயில் மதலையின் வடிவுள திருமால். 3கண்டகர, 4வொரு, 5முழங்கிய, 6வளைந்திடவளர்ந்தருள், 7திருமால் திருநாமம்.]
கட்டளைக் கலிப்பா

13. காலமு மந்தி படைபொருதல் பாரீர் காத லறித்து களபமுலை சேரீர் 
சீல மறிந்து பணிவிடைசெய் யேனோ சேவடி வந்து தினமும்வரு டேனோ 
ஒலிடு வண்டு குமுறுகுழ லாரே யோசை முழங்கு குயிலின்மொழி யாரே 
வேலை யடர்ந்த கலகவிழி யாரே வீதி விடங்கர் கமலையனை யாரே.

14. அன்பர்க் கெளிதாகிய பெருமாள் திருவந்திக் காப்பழகிய பெருமாள் 
ஆடுதண்டினிற் றோட சைந்திட வசைந்தாடும் பெருமாள் 
பைம்பொற் றோடழகி பெருமாள் செவ்வந்தித் தோடணி1 பெருமாள் 
பாலொத்திடு மொழியாளுறை யும்பாகப் பெருமாள் 
கம்பிக் காதழகிய பெருமாள் கனக வசந்தப் பெருமாளுயர் 
கங்காளப் பெருமாள் தேவரகண்டப் பெருமாள் 
செம்பொற் சிங்காதனப் பெருமாள்2 தியாக வினோதப் பெருமாள்தம்3 
பெருமைத் திருநாமம் பாடியாடும் பள்ளி நானே4  
[பிரதி பேதம் 1தொடையணி, 2அழகிய பெருமாள், 3தன், 4நாமே,]

15. முண்டக நாபிதனில் நான்முக வண்டிருக்து 
மூலமறை மொழிதன்னை முழங்க வைத்தோன் 
அண்டர் மகிழ்ந்திடவே மோகினியாக முன்ன 
மாரமுதம் பகுந்தளித்த வன்புடையோன் 
வண்டென வேயுகந்து வாவியில் வண்கழுவில் 
மாயமுட னுறைந்த மாயவனார் 
தெண்டிரை வாவிசூழும் சீரங்க ராசனார்தம் 
திருநாமம் பாடியாடும் பள்ளிநானே.

கடவுட்பராவல் - விருத்தம்

16. குயிலுக்கு நீணிலா1 வெயிலுக்கு மாரவேள் கொடுமைக்கு வாட லாமோ 
மயிலொத்த2 சாயலாள் மயலுற்றி டாமலே மருமத்தி லாளொ ணாதோ 
சயிலுற்ற நரதரே3 யரவுற்ற பாதரே4 தமிழ்விட்ட தூத னாரே 
கயிலைத்தி யாகரே கனகத்தி யாகரே கமலைத்தி யாக னாரே.

[பிரதி பேதம் 1நன்னிலா, 2மயிலுற்ற, 3பாகரே, 4நாதரே,]

ஆற்றுவரவு

17. கனத்த மேகக் குலங்கள் கூடிக் கலங்கி வேலை விலங்கயே1  
கருகி2 நீரைக் பருகி வானத் தருகி னேறிப் பெருகியே 
வனத்து மிகுத்த குடகிற் பொழிந்து வழிந்து கரையி லழுந்தியே3
வரகு டன்பயில் தேக்கு மாரமும் நூக்கி யேகரை தாக்கியே 
இனத்திற் குறவர் புனத்தி லிதணு மெடுத்த குடிலு மிதக்கவே 
இரைந் குமுறி விரைர்து மருவி யிருவிக் குருவி வெருவவே4
அனத்தை ரேர்தருல் குறத்தி காதலி லழுந்து வேள்பதம்5 வழுத்தியே 
அலருங் குறிஞ்சி மலரு மருவி யதிர்ந்து பாலை யெதிர்ந்ததே.

[பிரதி பேதம் 1விலங்கவே, 2கருகிய, 3லெழுந்துமேல், 4வெருவியே, 5பொற்பதம்,]

கலித்துறை

18. கழையேறு செஞ்சொ லுமைபாகர் வாழுல் கமலைவெற்பில் 
மழையேறு தண்டலை யேபுனமே வண்ட1 லாடிடமே 
உழையே வெறுங்கவ ணேயித ணேமெய் யுறவன்றியே 
பிழையேது செய்தன ரோவென்று2 மாதர் பிரிந்தனரே.

[பிரதி பேதம் 1வண்டல்க; இவ்வாறாயின் எழுத்துக்கூடுகிறது, 2வின்று.]

19. தேடிப் பாலை நிலத்திற் புகுந்து திரள்வெட்1 பாலை குரவுடன் 
திரட்டிப் பிடுங்கி யிலுப்பைக் குலங்கள் சேரச் சுழியில்2 வாரியே 
ஓடிப் பறந்து பருந்துங் கிளியுங்3 கழுகுஞ் சுழியில்4 முழுகவே 
உலக மெங்கு நிலைக லங்கி5 யுறுதி கொண்டு நிறுவியே 
சூடித் திகழுங் கமலைத் தியாகர் துங்கர் கங்கை பெருமைபோல் 
சூழத் திரியுங் கேழற் றிரளை தொடர்ந்த6 ஞாளி யடங்கவே 
நாடிப் பரவு மயிடன் சிரத்தில் நடித்த கன்னியை வழுத்தியே 
நல்ல வளமை முல்லை நிலத்தில் நடுங்க வேகரை புரண்டதே. 

[பிரதி பேதம் 1திரண்டுவெட், 2சேர்ச்சுழித்திரையில், 3புறவும், 4முகந்து, 5கலங்கி, 6துரந்து]

வெண்பா

20. தெண்ணீர் புனேகமலைச் சிற்பமமாம் வெற்பிலெதிர்1 
வெண்ணீறு தந்தம் விடைதந்தும்- வண்ணக் 
கரக்குவித்தா ரந்தோகைக் கார்மயிலன் னா ரின் 
றிரங்குவித்தா ரந்தோ2 வெமை.

[பிரதி பேதம் 1சிற்பரமர் வேற்பதனல், 2ரென்னோ,]

21. வாடுகின்றாள் நின்மாலை வாங்கக் கிளியொன்று 
தேடுகின்றா ளாரூர்த் தியாகரே - நாடி 
அனங்கனம்பு சொரியவந் தனலைமொண்டு வீசவெம்பி 
மனதுநொந்து கலையிழந்த மான்.

22. புரண்டு முல்லை நிலத்திற் புகுந்து பொதுவர் மனையிற் கதுவியே 
புதிய நெய்யும் பழைய தயிரும் பொருந்து பாலு மருந்தியே 
கரந்தை யணியும் பரந்த சடையர் கமலைத் தியாகர் விடையைப்போல் 
கள்ள மேகொடு வெள்ள மேவிய கான வாரண மோடவே 
துரந்து பயிலு முழையு முயலு மெழுந்து திரையி லழுந்தவே1 
தோன்றிக் குருந்துந் தான் றிப் படவுஞ்2 சுழியி னிடையி லழலவே 
பருந்தி ராசன் பொருந்து முபய பதங்கள் கருதி வணங்யே 
பரிந்து3 துளவுஞ் செருந்தி மீதினில் பாய்ந்து4 மருதங் கலந்ததே.

[பிரதி பேதம் 1லழுந்தவே, 2யடகுஞ், 3பரிந்த, 4பரிந்து,]

 

கலிப்பா

23. ஆர்வமிகுந் தன்பெடையை யணிசிறகா லருங்குளிர்க்குப் 
போர்வைசெய்து குடம்பைதனிற் புள்ளுறங்குங் கார்காலம்
சேர்வைதரும் புகழாரூர்த் தியாகர்வள நாட்டிலன்பர் 
கார்வரவில் வரவுபொய்க்கக் கலிகால மானதே.

24. கலந்து மருத நிலத்திற் புகுந்து கமுகச் சமுகங் குலையவே 
கருதி யேபல சுருதி மேவிய கரும்பிற் சுரும்பர் திரும்பவே1 
அலர்ந்த கமலத் தடங்க ளுழக்கி யணிவ ரால்கன் பணியவே 
யடுத்த வாழையி னெடுத்த தாறுக ளாறு நேர்மது வீறவே 
பலந்த ரும்பல வருக்கை நெருக்கிப் பற்றி மாங்கனி யெற்றியே 
 பயிலு மாதளை தனைவி டாமலே பவளக் கொம்பெனத் துவளவே 
இலங்கு குலிசப் புரந்த ரனையு மிணங்கு தாளை வணங்கியே 
யிஞ்சி மஞ்சள் வஞ்சி யஞ்சிட இடங்கொள் நெய்த லடைந்ததே.

[பிரதி பேதம் 1கரும்புள் கரும்பிற் றிரும்பவே.]

கலிப்பா

25. செங்கைக் குறிமறைத்த செஞ்சந்த னத்தையெங்கள் 
கொங்கைக் குறியைக் குறியாது செய்தனரோ1 
மங்கைக் கொருபாகம் வாழ்வாக வேயளித்த 
கங்கைச் சடையாரே கமலைவள நாடாரே.2

[பிரதி பேதம் 1செய்ததன்றோ, 2கடையர் கமலைவள நாடேர,]

26. அடைந்து நெய்த லிடங்க ளோடி யளவர் மனையி லளவியே 
அலையில் வாரும் வலையில் மீனை நிலையில் வாரிக் குலவியே 
உடைந்து திரையில் விடைந்து பணில முதறு மணிகள் சிதறவே 
உயர்ந்த தாழையும் விரிந்த1 ஞாழலு மொருமு கம்படப் படியவே 
படிந்த திமிலும் பலசம் பானும் பாரச் சோங்கு மிதக்கவே 
பாய்ந்து மகரம் வாய்ந்து மாயப் படகைக் குழிய2 முடுகியே 
வடிந்த தரளப் பவளத் தாலும் வருணன் பதத்திற் சாத்தியே 
மணிமுத் தாறு பெருகி வார3 வதிசயம் பாரும்4 பள்ளீரே.

[பிரதி பேதம் 1இழிந்த வாய்ந்து, 2படுவர் படகைக் கிழிய, 3வருகிற, 4வளமை பாரடி,]

 

வெண்பா

27. *பெருங்கடனஞ் சுண்ட பிரான்கமலை சூழும் 
கருங்கடலே நெய்தற் கழியே – நெருங்குமுதல்1 
புன்னாக மேதிரையே போனவர்தேர்2 மீண்டக்கா 
லென்னாக மேகரையே னே.3

* இச்செய்யுள் 28-ன் பின் சில பிரதிகளிற் காணப்படுகின்றது.

[பிரதி பேதம் 1நெருங்கு நிழல், 2போனவர், 3யேணான்,]

28. வாளை திருக்கை சுறவு தொழுத்தை வஞ்சி ரஞ்சிறு பஞ்சிரம்1 
மடவை யுல்ல மயிரை கெளிறு மகரங் குரவை மலங்குமீண்2
தேளி யுளுவை சன்ன மயறு3 திமிதி மிங்கலம் புரவிமீன்4
 சீளி கைத்தலை யானை மீனொடு தெள்ளிறா லொடு வெள்ளிறால் 
நாளும் புதிய கடலில் மீனும் நாட்டில்5 மீனுங் கூட்டமாய் 
 நளிகொள் தாலக் கனியை மோதி நறிய தாழை முறியவே 
ஆளை விலக்கிக் கலக்கிக் களித்திட் டலையக் குலைய முழுகியே6
யழுந்து தடத்தி லெழுந்து பாயு மதிசயம் பாரும் பள்ளீரே.

[பிரதி பேதம் 1வஞ்சனம் சிறும மஞ்சனம், 2மலங்கு மீன், 3மயறு சன்னை, 4பல புரவி மீன், 5நாட்டு, 6முடுகியே,]

குயில் கூவுதல்

29. புவிமீதிலே திங்கள் மும்மாரியும் பெய்து 
பொங்குகலி தீரவே கூவாய் குயிலே 
சிவகாரி யந்தனக் ககிதங்கள் செய்யுமவர் 
திநாகில் வீழவே கூவாய் குயிலே 
தவமேவு1 தானமும் பரிகலமு மாரூரர் 
சன்னிதியுந் தழைக்கவே கூவாய் குயிலே 
நவமாகத் தென்னாலைப் பூமியான் மகபூசை 
 நடத்துநெறி தழைக்கவே கூவாய் குயிலே.

[பிரதி பேதம் 1தவமெழு,]

30. ஊற்றமுள்ள முனியென முன்னாள் வகுத்தவயன் 
உள்ளதலையும் போகவே1 கூவாய் குயிலே 
நேற்றியற2 மடவாரைக் கூட்டுறவு செய்யுமவர் 
நீடூழி வாழவே கூவாய் குயிலே 
காற்றுள்ள போதிலே தூற்றுபவர்க்குத் தானாக 
கைப்பொரு ஞண்டாகவே கூவாய் குயிலே 
சாற்றுமட லூரவே யாரூரர் வளநாட்டில் 
தடம்பணைகள் விளங்கவே கூவாய் குயிலே

[பிரதி பேதம் 1ஒற்றமுள்ள ஏற்றமுள்ள போகக், 2நேற்றியூரும்,]

31. ஊரூர்கள் தோறுஞ்செவ்வி மழை1 பொழிந்தே 
யொருகோடி தேரைவாய்கள் ஒலி வீறவே2
சீரூரு மணிமுத்தாறு நீர்பாய்ந்தே3
சினந்தாவியே4 யெழுந்துகரை மோதவே
வேரூரும் கோரைகொண்ட கழனியெல்லாம் 
வெண்கார்கள் பாய்ந்துபுனல் மீளாமலே 
ஆரூரர் பண்ணைபார்க்கு5 மாண்டவர்தம்மை 
யணைகோல நாமழைக்க வாரும் பள்ளிரே.

[பிரதி பேதம் 1செவிமழைகள், 2ஒலிவீறவே, 3பரந்தே, 4திரை தாவியே, 5பண்ணை தொறும்,]

பண்ணைத் தலைவன் வரவு

32. வீக்கிய வெறும்பழுதை வாகுபுரி யழகும் 
வெந்தவீட்டுக்1 கரிக்கட்டை மேனி யழகும் 
தூக்கணான் குருவிக்கூட்டுத்2 தொப்பாரங் கட்டழகும் 
தூக்கிவைத்த வளைந்ததடிக் காலி னழகும் 
யீக்கடியுண் டிழையுண்ட கண்ணி னழகும் 
மிட்டவெத் தாப்புமிற மாப்பி னழகும்3 
பாக்கலைதின் றறியாத வாயினழகு 
பண்ணைக்கார னாரும்வந்து தோன்றி னாரே.

[பிரதி பேதம் 1வீட்டில், 2கூட்டில், 3போட்ட ஈத்தாப்பு மிறுமாப்பு மேற்ற வழகும்,]

33. இரவு தனையோ விகல்வேள் தனையோ 
சருவுகுயி லோசை தனையோ - மருவாமல் 
போனாரை யோபரமர் பூங்கமலை நன்னாட்டில் 
யானாரை யோநோவ தின்று.

34. பொற்கடக முன்கையேந்திக் கடக மேந்திப் 
பொன்னெழுத்துச் சேலைகட்டிப் பூங்குழல் கட்டித் 
தற்கமான வெற்றிவிழிக் கஞ்சன் மிட்டுச் 
சந்தனத்தைத் தனத்திலிட்டுத் தளப்ப மிட்டு 
நற்கமலை யாடரவக் கிண்கிணிக் காலன் 
நங்கைபங்கன் தென்கமலை நாடு தன்னில் 
வற்கமான பண்ணைபார்க்கு மாண்டவர் தம்மை 
மகிழ்வுடனே கண்டுதொழ வாரும் பள்ளீரே.

35. கறுத்தமெய் யழகரே கும்பிடுகிறேன் - கொழுக் 
கட்டைமூக் கழகரே கும்பிடுகிறேன் 
சொறித்தலை யழகரே கும்பிடுகிறேன் - கூறுஞ் 
சோனிவயிற் றழகரே கும்பிடுகிறேன் 
பறித்தகண் ணழகரே கும்பிடுகிறேன் - ஊசிப் 
பாசிப்பல் லழகரே கும்பிடுகிறேன் 
அறுத்தகா தழகரே கும்பிடுகிறேன் - பண்ணை 
யாண்டவரே யாண்டவரே கும்பிடுகிறேன்.

வெண்பா

36. கமலையுமென் கன்மனமுங் காதலித்த வாழும் 
அமலர்திரு முன்போ யங்னகாள் - -சமரமதன் 
துன்றுமிருந் தேன்பகழி தூற்றுமெனு மாருயிர்கொண் 
டென்று மிருந்தே னெனும்.

37. கோட்டை கட்டும் பலவிதை வர்க்கமுங் 
கொண்ட கொட்டக் கொழுவின் வகையும் 
பூட்டு நெட்டை நுகமுங் கயிறும் 
பொன்னின் மேழிக் கலப்பை வகையும் 
தீட்டு மெய்ப்புகழ் வீதி விடங்கத் 
தியாகர் பண்ணைவயலி லுழுத 
மாட்டு வர்க்கமு முள்ள படிதன்ணை 
வந்து சொல்லடா வன்மீகப் பள்ளா.

38. இளவி தைகார் பசான விதையி லெலியருந்தியது தொண்ணூறு கோட்டை 
வளவி விட்ட பட்டடையில் பட்டி மாடு தின்ற தெழுநூறு கோட்டை 
யளவு வாசி யறுநாறு கோட்டை யந்து தின்றதோ ரைஞ்ஞூறு கோட்டை 
களவு போனது நானூறு கோட்டை கண்ட கோட்டை முந்நூறே யாண்டே.

39. பலவ கைநின்ற மாட்டில் உருத்திரர்1 
பத்து மாடு பதினொரு மாடு 
கலக மாகிய காலணைச் சாடக் 
கலங்கி2யோடுங் கடா வொன் றுன் காணேன் 
உலக மெங்கு முழுத விடத்தி 
லுறங்கி நின்ற3 தொருபெருங் காளை 
நிலவ ணிந்தவ ராரூர்த்தி யாகர்க்கு
நின்ற குண்டை யொருகுண்டை யாண்டே.

[பிரதி பேதம் 1உருத்திரன், 2கடுகி, 3உறங்குகின்ற,]

40. புகழ்ப டைத்த தியாகர்க்குத் தென்னாலைப் 
பூமி யான்செய் திருப்பணி தன்னில் 
முகவ ணைக்கல்லுப் பூட்ட மிடத்தில் 
முறிந்து போன நுகமொரு கோடி 
அகலி டத்தை1 முழுது முழுத 
வருங்க லப்பை யனந்த மதுதனில் 
இகல் படைத்த2 பலபத் திரன்கையி 
லிருக்குங் கலப்பை யொன்றுண் டாண்டே.

[பிரதி பேதம் 1அகலிடத்து, 2பலபத்திரனிடத்தில்,]

41.  நாரி பங்கர் கமலையஞ் சாரலில் 
நயந்து நண்பு வியந்துற வாகியே 
காரி லங்கிய சந்தனச் சோலையில்
கலவி நீங்குங் கயல்விழி மாதரார்1 
சோரு மாடை தலைமாறிச் சூழ்ந்ததும் 
தொலைந்த நாண நினைந்தே யலைந்ததும்2
வாரி யங்3 கையிற் கூந்தல் முடித்தது
மனத்தி லொன்று மறக்க வொணாததே4

[பிரதி பேதம் 1மாதரீர், 2நினைந்தே நகைத்ததும், 3வாரியே, 4மறக்கவொணா தே,]

பள்ளி முறைப்பாடு

49. மெள்ள வேசென்று சீரங்கப் பள்ளியை 
வேட்டு நானூறு கோட்டை யளித்தான் 
பள்ள ராமுற வின்முறை யார்க்குப் 
பண்ணை மாட்டிலே பாதி கொடுத்தான் 
சுள்ளி னோடுறு கள்ளு மருந்திடத் 
தொண்ணூறு மாட்டையு மெண்ணி யவித்தான் 
கள்ளமே செய்யும் பள்ளனைக் காவலிற் 
 கட்டிடீர் பண்ணைக் காரனா ராண்டே.

 

கலிப்பா

43. சேண்மருவும் நான்முகனுஞ் செங்கண்மா லுந்தேடிக் 
காண்பதரிதாய் நின்றோன் கமலைவள நாடனையீர் 
நாண்முகமுஞ் சேண்முகமு நன்னிலா வீசுமிள 
வாணகையு மென்று மறவேன் மறவேனே.

சீரங்கப் பள்ளி முறையீடு

44. கொடுமை யே[னின் றுனைக்]கண் டமுகைக்கே 
குறைகள்1 செய்து சிறையி லிருந்தாய் 
தொடர வாதுசெய்2 வன்மீகப் பள்ளத்தி 
சொன்ன வாறது சூது3 முடித்தாள் 
அடிமை தன்னை யறியாம லேபண்ணை 
யாண்டை தானு மவள்வார்த்தை கேட்டார் 
விடவ ரா4வரங் கேசர் விதித்த 
விதியை யாரும் விலக்கவொண் ணாதே.

[பிரதி பேதம் 1கொடுமைகள், 2வந்து செய், 3சூளு, 4விடவரவிற் றுயிலரங் கேசர்,]

45. ஆலில் நின்றிடும் வீரன் றனக்கட்ட 
வாட்டி றைச்சியு மாக்கிய சுள்ளு 
மூலி யென்பதுங் கொண்டு வடித்தபின் 
மொந்தையிற் கொண்டு வந்த மதுவும் 
பாலில் வெந்து படைத்த வடிசிலும் 
பானை தன்னொடும் பாவிக்க வேண்டிக் 
காலி ரண்டுந் தொழுவி லிருக்கவே 
கையி ரண்டுந் தொழும் பள்ளீரே.

46. தொழுத போதி லிழுக்குள்ள தாகுமோ 
சொன்ன வார்த்தையி லென்ன மறுத்தேன் 
பழுது தானொரு கோடி செய்தாலும் 
பாரி யானவள் பாராட்ட லாமோ 
உழுத ஏருங் கலப்பை விதைவகை 
யுள்ள வாறெல்லா முத்தாரஞ் சொல்வேன் 
அழுதி டாமனீ வன்மீகப் பள்ளத்தி: 
 யாண்டைக்கே சொல்லி மீண்டுகொள் வாயே.

 

47. மேய சீரங்கப் பள்ளி யிடத்தில் 
வெறுப்பினா லன்று விண்ணப்பஞ் செய்தேன் 
ஆயி ரம்பிழை செய்யினு மெங்களை 
யாண்டையே1யன்றி யாரே பொறுப்பார் 
பாயு மாடும் விதையுந்2 தந்து 
பண்ணை சேரப் பயிர்செய்து தாரோம் 
நாய டியேன் பிணையாக வன்மீக 
நாதப் பள்ளனை3 விட்டிடு மாண்டே.

[பிரதி பேதம் 1ஆண்டை, 2மாட்டு வகையும், 3வன்மீகப் பள்ளனை,]

48. உரையெ டுத்த சதுர்வேத நாதனார் 
ஓவி லந்தரி1 மேவிய பாகனார் 
கரைய டுத்த வளர்முத் துதிர்ந்திடுங்2 
கழனி சூழுங் கமலைநன் னாட்டினிற் 
றிரையெ டுத்த திருப்பாற் கடலிலே 
செய்ய பத்மத் திருக்கோயில் வாழ்வீர் 
வரையெ டுத்த புதுமணச் சோலையில் 
வந்து நீர்நின்ற மாயமென் மாயமோ.

[பிரதி பேதம் 1ஒவியந்தனை, 2வளமுத்தி தந்திடுங்,]

மாட்டு வகை

49. முட்டிக்காலன் வெட்டக்கிடாய் மொட்டைக் கறுப்பன் 
மோழைக்காளை வீணைக்கொம்பன் யானைச் சொறியன் 
மட்டைக் கொம்பன்1 நெட்டைக்காலன் வட்டச்சரியன்2 
மணிகட்டி வெள்ளைககளை3குள்ளச் சிவப்பன் 
வெட்டுக்காலன் மொட்டைக்கண்ணன் மேகநிறத் தானே 
வெட்வொலன்4 தறிகொம்பன் வெள்ளைச் குளம்பன் 
கொட்டைப்பாக்கன் கூழைவாலன் கூடு கொம்பன் 
கொண்டபண்ணை மாட்டுவர்க்கம்5கூறினே னாண்டே.

[பிரதி பேதம் 1மட்டக் கொம்பன், 2வட்டக் குறியன், 3வெள்ளைக் காலன், 4 வெடி வாலன், 5மாட்டின் வகை,]

50. வச்கிரமா ணிக்கத் தாலே படைவாளும் 
வன்பவளக் கொம்பினாலே மேழிநுகமும் 
மெச்சியதங்1 கத்தினா லிழைத்த2 கொழுவும் 
மெல்லியவெண் பட்டுநூலால் விட்ட கயிறும் 
பச்சைவெட்டுச் சர்தனத் தாலுயர்3 காலும் 
பதுமராகத் தாலிழைத்த உழவு கோலும்4 
கச்சணிந்த கொங்கை பங்கன் தென்க மலைக்கே 
கலப்பையா யிரங்கொண்டு கட்டினே னாண்டே.

[பிரதி பேதம் 1உச்சிததங், 2வைத்த, 3சந்தனத்தாலேற்கும் ஏர்க்காலும், 4உழக்கோலும்,]

நெல்வர்க்கம்

51. அரிய நாயகங் குறுவை பொற்சாலி 
யருச்சுன மென்னு மரியா1 நுணங்கு 
திருவ ரங்க னழூய வாணன் 
தில்லை நாயகன் சீரகச் சம்பா 
இரண வாரிகர்ப் பூரம்பொற் பாளை 
யிரங்க மீட்டான்2 குறுவைக் ளையான்3 
சுருணை வாலன் கருவாலன் சம்பா4 
சொரிகு ரும்பை விதைவகை யாண்டே.

[பிரதி பேதம் 1யருச்சுனன் தியாதா, 2மாட்டான், 3கிணையான, 4செவ்வாலன்,]

விருத்தம்

52. மாயர் பாகனார் மாது பங்கனார் 
மத்த மாடரா வைத்த வேணியார் 
காயு மாரவேள் கணையை வென்றுளார் 
கமலைதன் னில்வாழ் கனக வல்லியார் 
சேய கூர்விழிக் கொப்பு வாளியே 
செவிய ணிந்தது கொப்பு வாளியை 
சாய லானதுங் கமலை போலுமே 
தாங்கு கொங்கையுங் கமலை போலுமே.

53. இந்நேரம் பூசமென்றார் பஞ்சமி யென்றார் 
 யேற்றசோம வாரமென்றார் சோபன மென்றார் 
நன்னேர மாகுமிந்த முகிழ்த்தந்1 தன்னில் 
நரையானும் வலமாக விரையச் சென்று 
பொரன்னேரைப் பூட்டிவயல் சேறு செய்தபின் 
போதவெருத் தழைபோட்டுப் பரம்ப டித்துத் 
தென்னேர்மொ ழிச்சிபங்கன் தென்க மலைக்குச் 
செந்நெல்2விதை தெளித்துவிடச்3 செல்லடாபள்ளா.


54. தெளியுஞ்செந் தமிழ்ச் சுந்தரற் காகத் 
தெருவிற் றூது பரவைக்குச் சென்றோன் 
களித ருஞ்சிறை வண்டிசை கொண்ட 
கடுக்கை யண்ணல் கமலை வயலில் 
மிளிர்த ரும்பனி நீரை விடுத்து 
விளைவயல் தனில்வெங் காரைப் பாய்ச்சி 
யொளிதரும் பொற்க லப்பையைப் பூட்டி 
யுழுகைக் கேகொழு தச்சுதே1 யாண்டே.

[பிரதி பேதம் 1தைத்த,]

55. இன்றுனையே1 கண்டமுசைக்கே பண்ணைக்காரன் 
எங்களைத்தான் சிங்கி கொள்ளுகிறான்
சென்றபோது சேரிப்பள்ளிகள் உன்னழகைச்2
சேரவே கண்ணூறு3 கொண்டதோ 
அன்றிளையா ளிட்டமருந்தோ அவளிடத் 
தாசை மோகந்தலைக் கொண்டதோ 
மன்றினின்ற வீரன்குற்றமோ மயங்கினாய் 
 வன்மீக நாதப் பள்ளனே.

[பிரதி பேதம் 1இன்றுணையைக், 2உன்னழகு, 3கண்ணீர்,]

56. தன்குழவி தன்னையும் பாராய் தன்னுடைய1 
 தாதை வர்க்கந் தன்னையும் பாராய்2 
என்கொடிய முன்னை வினையோ கைபிடித் 
 தென்னைக் கொண்ட நேர வாசியோ 
உன்கை பார்க்குமெங் களுக்கும் வேறொரு 
 தஞ்சமுன் னையன்றி வேறு3 முண்டோ 
வன்கமலை4 நாத னருளா லெழுர்திராய் 
 வன்மீக நாதப் பள்ளனே.

[பிரதி பேதம் 1என்னுடைய தாதை, 2காணாய், 3பின்னையு, 4செங்கமலத்,]

57. துங்கமலை நேர்வழியுந் தோளிணையு மொன்றாக 
சங்கமலைப் பாலால் தழும்பறா தெந்நாளும் 
பைங்கமலை வாவியிற் பணிலக்குழா முழக்குங் 
தென்கமலை வாழ்வே தியாகப் பெருமாளே.

58. தெளித்தேன் விதையுநீரும் வடியப் போட்டேன் 
 சேரவே முளைத்தபின்பு நீருங் கட்டினேன் 
அளித்தே னளிக்குலஞ்சூழ் தென்க மலையோர் 
அறிவு போலே கிளைத்துச் செறிவாகியே 
தளிர்த்தேறுஞ் செந்தமிழைக் கொண்ட வரசர் 
 தக்கபுகழ் போலே நாற்றுஞ் சமைந்ததிப்போ 
களித்தே பறித்துமுடி நடுவ தெல்லாங் 
 காணவர ண்டும்1 பண்ணைக்கார னாருமாண்டே.

[பிரதி பேதம் 1வரவேணும்,]

59. சேலை யழகா திருமார்பிற் செங்கழுநீர்1 
மாலையழ காதே வரகண்டா - மாலையந்திக்2 
காப்பழகா வென்று கணிந்துகனிந் தோதுதற்கு 
நரப்பழகா வென்3செய்வே னான்.

[பிரதி பேதம் 1செவ்வந்தி, 2வேலையந்தி, 3தென்,]

60. மங்கை யாடக் கமலைச் சடிலர் மருவு மாவு மாடவே1
மார்பிற் செங்கழு நீரும்மணிப் பொற்றோடு மாடவாடவே 
கங்கையாடத் திங்களாடக் கனகதண்டினி லாடுவார் 
 கமலைவாழு மமலர்மேவுங் கயலுலாவும் வயலுளே 
செங்கையாட வளைகளாடத் திரளிந்தரள மாடவே 
 சேலையாட மாலையாடச் சேலைநேர்விழி யாடவே 
கொங்கையாடக் குழைகளாடக் கொடியிடைதுவண்டாடவே 
 கொந்தளாடவி யாடவாடிக்2 கூடிநடவாரும்3 பள்ளீரே.

[பிரதி பேதம் 1மங்கையாடக் குடிலச் சடில மருவுதரள மாடவே, 2கொந்தளா டலி யாடவே, 3நடவா,]

61. தீத்தாளுடன் காத்தா ளுலகாள் திருவாளாட னிருவா ளிளையாள் 
சிவந்தாளுடன் வந்தாள் குளுந்தாள் சின்னாள் பெரியாள் 
கூத்தாளுட னெழுவாள் விழியாள்1 குழைஞ்சாளுடன் குளுந்தாள் தொடர்ந்தாள் 
குயிலாளுடன் மயிலாள் தையலாள் குரவைகளிடவே 
பூத்தாரணி சடைமுடி யசையப் பூங்கமலத் தாளிணை வருந்தப் 
புண்டரீகத் திருமுகம் வேர்வெழப் பொற்குழை யசைய 
நாத்தான்புகழ் நாவல னேவலின் நள்ளிருளிற் றூதென வீதியில் 
நடந்தோன் கமலாலயக் கழனியில் நடவாரும்2 பள்ளீரே.

[பிரதி பேதம் 1வழியாள், 2நடவா,]

62.  படித்த செந்தமிழ்க் கவிதைச் சுந்தரன் பரவைச் இரவில் நடக்கவே 
பாதஞ் சிவக்கத் தூது நடந்த பரமர் கமலை வயலுளே 
முடித்த குழலுஞ் சரியக் குரவை முழக்கி வயலி லுழக்கியே 
மொண்டுமதுவை யுண்டுமுடியைக் [முடியக்] கடுகி நடுகைக்கே 
வெடித்த கமல மடுத்த குவளை விரவிக் குமுத மருவியே 
மேவி யேயெதிர் தாவி யேநரை விரும்பிச் சுரும்பு திரும்பவே 
அடித்த போது வகன்றி டாம லகன்ற பூங்குழல் காட்டியே 
அளிக்கு லம்பல களித்தெ ழுந்திடு மதிசயம் பாரும் பள்ளிரே.

63. ஆலகந்தரர் கமலை நாயக ரடல்வேள் தன்னை யெரித்தவர் 
சூல கங்கணர் பாணி சங்கரர் துலங்கும் பண்ணை வயலுளே 
நீல கொந்தள மேக பந்திகள் நெடுகச் சரிய நடுகைக்கே 
கோலக் கொண்டையர் பரவைக் காயிரம் கொடுப்பர் பாரும்1 பள்ளிரே.

[பிரதி பேதம் 1கோலக்கொண்டையப் பார்வைச்கெண்டைகள் கூடிப் பாய்வது பாரும்,]

64. கந்த மருவும் கடுக்கைச் சடையர் கமலை சூழும் பயிரெல்லாம் 
தந்தை யணையுந் தனத்தைப்1 போலக் தளர்ச்சயே யன்றி வளர்ச்சியாய் 
முந்து2கருனை முனிவ ரிடத்தி3 லுருவம் போலக் கருவதாய் 
விந்தை பயிலும் நாலைப் பூமியான் விளங்கும் புகழ்போல் விளைந்ததே.

[பிரதி பேதம் 1யனையதாதை, 2உந்து, 3முனிவர் நினைவு,]

65. தெண்டிரைநஞ் சண்ட கண்டன் தேவார கண்டன் 
 தென்கமலை வாவி சூழு நங்க மலைக்கே 
கொண்ட.கதிர் சொன்னவாளிட் டறுத்தேற்றினேன் 
 கூலிப்பண்ணை மரக்காலால் கோலி யளந்தேன் 
அண்டமுக டளவாக மேருரிபோ 
 லாயிரம்போர் விதைப்போராய்ச் சேருங் கட்டினேன் 
கண்டபொலி தூற்றிமுதற் கண்டளக்கவே  
 கண்காணிக்க வேணும்பண்ணைக் காரனாராண்டே.

66. வளவினுஞ் சற்றுமிராள் சுற்றித் திரிவாள்
 வன்மீகப் பள்ளியென் வார்த்தையுங் கேளாள் 
தளராமற் சோறுமிடாள் கறியுமிடாள் 
 தாய்க்கொளித்த சூலுமுண்டோ தஞ்சம் வேறுண்டோ 
வளமாகக் கள்ளியவன்1 பண்டமும்பாராள் 
 யாருடன் முறைப்படுவே னாண்டவ ரல்லால் 
இளையாளைக் கொண்டவன்றே வன்பகையால் 
 இத்தனைநாளுஞ் சொல்லக்கூசியிருந்தேனாண்டே.

[பிரதி பேதம் 1அளவாய களியாட்டமாய்,]

67. மாயக்கள்ளி குள்ளியான சீரங்கப்பள்ளி 
 வந்தவன்றே பள்ளன்மிகச் சிந்தைவேறானான் 
காயப்போட்ட வயலுக்குத் தண்ணீரும் பாய்ச்சான் 
 கட்டுச்சூடு களப்பேறு1 விட்டதுந் தாரான் 
பாயிற்கிடை போலக்கள வரப்பிற்2 கிடப்பான் 
 படிபோட்டா லவளுக்குப் பாய்ச்சி யளப்பான் 
தாயத்தாரை வெல்வது முபாயத்தா லன்றோ3 
 தாறுமாறு யென்கொடுமை சாற்றினே னாண்டே4

[பிரதி பேதம் 1குள்ளியவள், 2பேற்றில், 3களவாகிக், 4உபாயத்தாலேலோல், 5சாற்றினோலைடே,]

68. 1. என்னையென்னை யாண்டைமுன்னே சொன்ன தென்னடி;
உன்னையேசிய பள்ளனோடு பேசொண்ணாதடி.

2. ஏசினாலும் பேசினாலுஞ் சீரங்கப்பள்ளி உன்மே 
 லிருந்த மருந்தாசை பாரி லுள்ளதோ 
பாரிலுள்ள மருந்சாசையினால் வன்மீகப் பள்ளி 
பள்ளனையும் வசமாக்கிக் கொள்ளொணாதடி.

3. வசமாக்க வுன்னைப்போல் மருந்தார் வல்லார் 
மருந்திட்டான் வானவர்க்கு மாய னல்லோடி 
மருந்திட்டான் மாயனென்றா யுங்க ளாண்டைபோல் 
வஞ்சநரி பரியாக மாயஞ் செய்தானோ.

4. குற்றிடை யிடைச்சியர்கள் கூறை கவர்ந்தே 
குருந்தேறினா னுங்கள் கொண்ட லல்லோடி 
நற்றவர்த மங்கையரைத் தாரு வனத்தே 
நாணழிவு செய்துதங்கள் தாணு வல்லோடி.

5. மாதினுரு வாகிவந்த சீ தன்னையு 
மாமியையுங் கொண்டா னுங்கள் மாய னல்லோடி 
காதலுமை பங்கிருக்கச் கங்கை சடைமேல் 
 காணவைத்தா னுங்கள் கறைக்கண்ட னல்லோடி.

6. ஏறுபுகழ் தேர்விசைய னேறு தேரின்மே 
 லிருந்துபரி தூண்டினா னுன்னாண்டை யல்லோடி 
மாறிலாத மாறனுக்குக் குதிரை யாளாய் 
 மதுரையிற் சென்றா னுங்கள்பதி யல்லோடி.

7. பாவல னொருவனுக்கு ஏவ லாளாகிப் 
பாயுஞ்சுமந் தானுங்கள் தாணு மல்லோடி 
தாவுபுகழ்ப் புலவர்க்கு மண்ணு மன்றியே 
சரணாகஞ் சுமந்தா னுங்கள் தாணு வல்லோடி.

8. தாடகைதன் பெண்பழியைச் சற்று மெண்ணாமல் 
தாண்டியாடல் செய்தானுங்க ளாண்டையல்லோடி 
வாடிமுகம் நாணவொரு மங்கை யுடனே 
 வாதுசெய்தா னுங்களுடை நாத னல்லோடி.

9. அந்தகன்றன் மைந்தரிடத்தே ஐவ ரேவவே 
அன்றுதூது சென்றானுங்க ளாண்டை யல்லோடி 
சுந்தரன் விடுத்தபோது அந்த யிரவிற் 
றூதுசென்றா னுங்களிட சோதி யல்லோடி.

10. கூச்சமறப் பேச்சிமுலைப் பாலு முயிருங் 
கொண்டவனு முங்கள்கருங் கொண்ட லல்லோடி 
ஏச்சென்றால் வாச்சுதென்று வேட னுதவும் 
எச்சில்தின்றா னுங்களுடை யீச னல்லோடி.

11. வீடதோறு மாய்ச்சியர்கள் காய்ச்சிய பாலும் 
வெண்ணையுந் திருடினா னுங்கள் கண்ண னல்லோடி; 
கூடுபுகழ் அமர்நீதி வீடு தனிலே 
கோவணந் திருடினானுன் னாண்டை யல்லோடி.

12. கற்றவரை வெற்றிசெயும் காம னார்தமைக் 
காற்றிலேற வைத்தானுங்கள் கண்ண னல்லோடி;
பெற்றகரி முகனுக் குற்ற பரியாகப் 
பெருச்சாளி யளித்தா னுன்பிரா னல்லோடி.

13. படுக்கவோர் பாயு மின்றிப் பாம்புதனிலே 
பள்ளிகொண்டா னுங்கள் கண்ண னல்லோடி; 
உடுக்கவொரு துகிலுமின்றி யன்று புலியி 
னுரியை யுடுத்தினா னன்னீச னல்லோடி.

14. மட்டுப்படாத் துட்டத் தனஞ்செய் தசோதைதன் 
மத்தடி பட்டானுங்கள் மத்த னல்லோடி; 
பிட்டுக்கு மண்சுமந்து பாண்டியன் கையிற் 
 பிரம்படி பட்டா னுங்கள்பீரா னல்லோடி.

15. ஆட்டுக்காலுக் காசையாகி மேட்டுப் பன்றியா 
யன் றுதேடிச் சென்றானுங்க ளாண்டை யல்லோடி; 
மோட்டுப்பன்றி யாயன்று குட்டி தனக்கு 
முலைகொடத்தா னுங்கள் முத்த னல்லோடி.

 

16. ஆனிரையைக் காத்தளிக்கக் கோனுங் கையுமாய் 
ஆயனா னானுங்கள் வள்ள லல்லோடி; 
மாநிலத்தில் வேடனாகு மீன மின்றியே 
வலையனு மானானுங்கள் மத்த னல்லோடி.

17. கறுத்தன்று கறைக்கண்டன் காமனைக் கொல்லக் 
கண்டிருந் தானுங்கள் விண்டு வல்லோடி; 
சிறுத்தொண்டர் மகன்றன் னையறுத் துண்ணவே 
சிந்தைமகிழ்ந் திட்டா னுங்கள்சிவ னல்லோடி.

18. வாவி தன்னில் மேவுமொருவன் கழுவின்மேல் 
வண்டுருவங் கொண்டா னுங்கள்விண்டு வல்லோடி; 
பூவிரியுந் தென்கமலைப் புற்றினிடத்தே செல்லாப் 
புக்கிருந்தா னுங்களுடை நக்க னல்லோடி.

19. வரமான மாவலிபால் வாம னாகியே 
மண்ணிறந்தா னுங்கள் மாய னல்லோடி; 
பிரமன் சிரந்தன்னைக் கரத்தி லேந்தியே 
பிச்சை யிரந்தா னுங்கள்பித்த னல்லோடி.

20. வைக்குமன்று தஞ்ச மான கஞ்சனாகிய 
மாமனையுங் கொன் றவ னுன்மாய னல்லோடி; 
தக்கனெனு மாமனைமுன் மிக்க வேள்வியில் 
தலையறுத் தானுங்கள்தாணு வல்லோடி.

21. கொட்டஞ்செயுங் குரக்குத் துட்ட சேனைதனைக் 
குறைவறப் படைத்தா லுன்னிறை யல்லோடி; 
நெட்டலகை புடைசூழச் சுட்ட சுடலை 
 நின்றுநடஞ் செய்தானுங்கள் நித்த னல்லோடி.

22. ஒருக்காலே யுமைபங்கன் அருக்கன் பல்லை 
யுதிர்த்தாற்போ லுன்பல்லை யுதிர்ப் பேனடி; 
தருக்காலே திருக்கேள்வன் தந்தி யின்றன் 
தந்தத்தைத் தகர்த்தாற்போ லுனையானுந் தகர்ப்பேனடி.

23. கிள்ளைமொழிப் பாகனன்று வன்புலி வாயைக் 
கிழித்தாற் போலுன் வாயைக் கிழிப்பேனடி; 
பிள்ளையுரு வாகிமாயன் புள்ளின் வாய்தன்னைப் 
பிளந்தாற் போலுன் வாயைப் பிளப்பேனடி.

24. பேசரிய வீசனன்று தக்கன் வயிற்றைப் 
பீறினாற் போலுன் வயிற்றைப் பீறுவேனடி; 
கேசவனன் றிரணியனைக் கூசும்படி யுகிராற் 
கீறினாற் போலுன் வயிற்றைக் கீறுவேனடி.

25. தோற்பதன்றி வென்றியரன் னரக்கி மூக்கினை 
துணித்தாற் போலுன் மூக்கைத் துணிப்பேனடி.; 
ஆற்பரவ மானமாயன் சூரன் றங்கைமூக் 
 கரிந்தாற் போலுன் மூக்கை யரிவேனடி.

26. பாழ்படவே பாற்கரன்கண்ணே வேள்வியி லெங்கோன் 
பறித்தாற் போலுன் கண்ணேக் கெடுப்பேனடி; 
கேழ்பரவு கேசவன்முன் சுக்கரன் கண்ணைக் 
கெடுத்தாற் போலுன் கண்ணைக் கெடுப்பேனடி.

27. அன்றுமுய லகன்மீதி னின்று பரமன் 
மிதித்தாற் போலுளை நானு மிதிப்பேனடி; 
துன்றுமுடி கன்றமாய னன்று கரணைத் 
துளைத்தாற் போலுளை யானுந் துளைப்பேனடி.

28. ஈசனன்று பாசமேறிக் காலனைக் காலால் 
எற்றினாற்போலுன் மார்பி லெற்றுவேனடி; 
ஓசைகொள் சகடுதன்னைக் கேசவன் முன்னா 
ளெற்தினாற் போலுன் மார்பி லெற்றுவேனடி.

69. ஆதார மானதிரு வாரூர ரேநீதி 
வேதா கமங்கள் விரும்பியே - காதல் 
விருதாது காமனையும் வெள்றநீர் மாதர்க் 
கொருதூது செல்லலா மோ.

70. கைத்தலங்கொள் திகிரி யெறிந்து 
கதிர்ம றைத்தவன் கண்ண னல்லோடி; 
பத்தர் சூழுங் கமலைப் பிரான்கைப் 
பணியின் வாய்க்கதுவும் பற்றுமோடி.

2. வழிபயின்ற கல்லைப் பெண்ணாக 
வகுத்தவ னெங்கள் மாய னல்லோடி; 
அழிதருமங் கத்தைப் பூம்பாவை 
யாக்கினா னெங்க ள1ண்ண லல்லோடி.

[பிரதி பேதம் 1ஞானசம்பந்தனல்லோடி,]

3. மாறுகொண்டொரு மீனமெனக் கடல் 
வந்தடைந்தவன் மாய னல்லோடி; 
கூறுமந்தப் பெருங்கடலு மெங்கள் 
குறுமுனி வன்குடித்தா னல்லோடி.

4. செங்கண் மாலன்று வேழ மளித்த1 
திருவருளைத் தெளிந்திதல்லை2யோடி; 
வெங்கரா முண்ட மைந்தனைச் சுந்தரன் 
 மீட்ட மேன்மையுங் கேட்டிலை யோடி.

[பிரதி பேதம் 1மழைத்த, 2தெளிந்திலை,]

5. எங்குமானிரை காக்க வரையை 
 யெடுத்துமாரி தடுத்தா னெங்க ளாண்டை; 
யோங்குமேரு நெடுங்கிரி யைக்கா 
புண்டரிகத் திலங்கக் கொண்டா னென்னாண்டை.

6.  இறுகு வச்சிர னாக்கிக்கெகொள் வேலை 
யிடத்தி லங்கையை யழித்தா னென்னாண்டை; 
முறு வலற்ப மரும்பிமரு வலர் 
 முப்புரங்க ளெரித்தா னெங்க ளாண்டை.

7. ஈண்டுவெம் பாரதஞ் செய்து மைவர்க்குயி 
ரீந்தா னென்னுடை யாண்டை; 
தாண்டவஞ்செய்து சூலமுமேந்திச் 
சர்வசங்காரஞ் செய்தா னென்னாண்டை.

8. முடிக வித்து விபீடணனுக் கன்று 
மூதி லங்கை யளித்தா னென்னாண்டை 
இடைதவிர்ந்த மறைவனந் தன்னில் 
எலிக்கு மூவுல கீந்தா னென்னாண்டை.

9. கேசவனை யேசுவதேது சொல்லடி 
 கிட்டிப் பார்க்கிலவர்க் கிவரிட்ட ரல்லோடி; 
ஈசனைநீ யேசுவதேது சொல்லடி 
 யிருவர்க்கு முறவன்றிப் பகையு முண்டோ.

10. அண்ணியெங்க ளண்ணனெங்கள் ௪ங்கரனாற்கே 
யடுத்த தங்கையை யன்று கொடுத்தானடி; 
மண்டலமகிழ் தென்கமலைத் தேவரகண்டன் 
மாலுக்கன்று செந்திருவைப் பாலித்தானடி.

 

11. வையமுண்ட வெங்களையன் வையம்பாகியே 
மாதேவன் பற்றலரை வதைத்தானடி; 
ஐயமின்றி யெங்களண்ண லுங்கள் மாலுக்கே 
 அக்காலத்திற் சக்கரமொன் றளித்தானடி.

12. ஈசனரு ளாகிடு யெங்கள் கேசவன் முன்னாள் 
ஏற்ற வொரு பாகந்தன்னி லேற்றினானடி; 
ஒசைமணிச் தேரின்மிசை யீசனார் தம்மை 
யோடி விடையாகி மாயன் தாங்கினானடி.

13. மறந்திடா யென்பிழையை யன்புகூரவே 
வன்மமாகநீ யெண்ணாதே வன்மீகப் பள்ளி 
சிறந்துநா மிருவருங் கூடி யாடியே 
சேர்ந்துவாழ வேணுங்காணுஞ் சீரங்கப்பள்ளி.

71. நற்கவிதை கொண்டபள்ளின் வர்க்க முரைத்த 
ஞானப்ரகா சன்வாழி நற்புவி வாழி 
விற்குலவுமா றன்மிகுமா னேந்து கையான் 
வித்தியாதி பதிமுதலி மெய்ப்புகம் வாழி 
நற்கமலை நகர்வாழி சாமந்தன் வாழி 
தானமும் பரிகலமும் தழைத்து வாழி 
மற்குலவு திண்புயத்தாண் மல்லைய பூபன் 
வாழிபூமி யானெந்நா ளும்வாழி வாழியே.

72. அண்ட புகழ்க்கமலை யத்தரே போர்விசயன் 
தண்டலை தாக்கப் பொறுத்தீர் - ஈண்டு 
வெறுப்பதுவே யானாலு மெய்யடியேன் புன்சொல் 
பொறுப்பதுமக் கன்றே புகழ். 
 

Related Content

Aroor Pathikam (Meela adimai)

Sundaramurthy Swamigal - Thevaram - Thiruvarur

Sundaramurthy Swamigal - Thevaram - Thiruvarur

Sundaramurthy Swamigal - Thevaram - Thiruvarur

Sundaramurthy Swamigal - Thevaram - Thiruvarur