logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

பிரபு லிங்கலீலை - பகுதி-2 - Prabulingaleelai - Part-II

 

முதல் பாகத்தின் "மாயை கோலாகல கதி" தொடர்கிறது...

அதைக்கண்டு மாதர்கள் வியப்படைதல்  

        இத்தனை ஆட்டம் எல்லாம் இவட்கித னாலென் றெண்ணி  

        மத்தளம் அதனை வீசிப் போகல்போல் வள்ளல் போகப்  

        பித்தடைந் தனன்கொல் என்று பித்துறீஇ மாத ரெல்லாம்  

        கைத்தளிர் விரன்மு டக்கிக் கடவுளடி வைத்து நின்றார்.                                          40 

 

 

                       தோழிகள் வருந்தல் 

 

        பறையடித் தின்று காறும் மறைத்தவிப் பாவை செய்கை  

        பறையுடைத் தொழிந்து காளை பாரெலாம் அறியச் செய்தான்  

        கறையடிக் களிநல் யானைக் கருங்கழற் சீற்றத் துப்பின்  

        இறைமகட் குயிர்நி லாதென் றிகுளையர் மனமு ளைந்தார்.                                       41 

 

 

                       மாயை வருந்துதல் 

 

        சிலைமதன் நின்று செய்யுஞ் செருவினுக் கன்றி வெள்ளி  

        மலைதனில் இயம்பு மாற்றம் வழுவிற்றென் றுளம ழிந்தாள்  

        கலவிசெய் தலைவன் நீங்கக் கைப்பொருட் கழுதி ரங்கும்  

        முலைவிலை மகளிர் போல முத்தவாள் நகைப்பொற் கொம்பு.                                    42 

 

 

            விமலை, அல்லம தேவரைத் தேடுவோம் என்றல் 

 

        மாலைவாய் மரையே போலும் மாயைவாள் முகத்தைக் கண்டு  

        வேலுலாங் கருங்கண் செவ்வாய் விமலைமா தவளு ளத்தில்  

        சாலுமார் அஞர றிந்து தடங்கணாய் தளரேல் நீநின்  

        சீலநா யகன்போந் தேத்தும் தேடிநாம் காண்போம் என்றாள்.                                       43 

 

 

               மாயை, அல்லமரைத் தேடிச்செல்லல் 

 

        சிலைநுதல் விமலை சொல்லால் தெளிந்துளம் இறையை நோக்கிக்  

        கலைதொடர் உழைபோல் மாயை காட்டினில் தொடர்ந்து போனாள்  

        மலர்தொடர் அளிகள் போல மாயையைத் தொடர்ந்து சென்றார்  

        கொலைபடும் அயில மர்த்துக் குழைபொரு தடங்கண் நல்லார்.                                    44 

 

 

               மாயையின் செயலைக்கண்டு மக்கள் இகழ்தல் 

 

        மெய்த்தவம் பயின்று பெற்று வேந்தர்க்குங் கொடாமல் முக்கண்  

        அத்தனுக் கென்று வாளா அரசன்வைத் திருந்த பாவை  

        மத்தளி கன்பின் போனாள் மகள்தனை அந்தோ ஆண்டு  

        பத்தின்மேல் வைத்தி ருத்தல் பாவமென் றிகழ்ந்தார் கண்டோர்.                                   45 

 

 

                       காமத்தின் சிறுமை 

 

        பாவமும் பழியும் நல்கும் பல்வகைப் புகழ றங்கள்  

        யாவையும் அழிக்கும் எய்தும் இன்பமும் அதனா லெய்தும்  

        நோவுநன் மரபுஞ் செய்யு நோன்புநல் லொழுக்கு மேன்மை  

        சாவுமெண் ணுறாமல் நிற்கும் தயங்குபுன் காமம் என்பார்.                                46 

 

 

                            (வேறு)

  

          மாயை, அல்லமரையே குறிக்கொண்டு செல்லல்  

 

        பஞ்சின் மேல்மிதிப் பினும்பதை பதைக்குமென் பதங்கள்  

        அஞ்சு றாள்பரல் மிதிப்பதை நீருண அவாவாள்  

        விஞ்சு ஞாயிறு முதிர்கதிர் வெதுப்பினை வெருவாள்  

        நெஞ்சி யோகிமேல் இருத்தியந் நிரைவளை சென்றாள்.                                   47 

 

 

        மாயையைப் பாலைநிலஞ் சுடாமைக்குக் காரணம் 

 

        காம வெந்தழ லாலுடல் வெந்துளங் கரிந்த  

        கோம டந்தைய லாலலை மேல்வரு குளிர்தண்  

        பூம டந்தையப் பாலையிற் போமெனிற் புனலில்  

        தாமி ளங்கயல் சுடுமணல் வீழ்ந்தெனத் தளரும்.                                         48 

 

 

             பாலைநிலத்தின் வெம்மை மிகுதி 

 

        பான லங்கருங் கண்ணிபோ கியகொடும் பாலை  

        யானை தன்புழைக் கைநிகர் துளியிடை விடாமல்  

        வான நின்றுபெய் யினுந்தழற் பட்டவல் இரும்பின்  

        மேன கந்தெறி திவலைபோற் சுவறுறும் விரைந்து.                                              49 

 

 

        திருமால் உலகை விழுங்கியபோது பாலையைக்  

                       கக்கினான் எனல் 

 

        மால ருந்திய போதுதன் வயிற்றிடை யிராதிப்  

        பாலை அன்றுடன் உமிழ்த்தில னாகின்மெய் பதைத்து  

        வேலை யின்றலை வீழ்ந்தத னாலுமுண் வெண்ணெ  

        யாலும் வெந்தழல் தணிந்துயிர் உய்குவ னலனே.                                               50 

 

 

        மாயையைத் தொடர்ந்து சென்ற மாதர்களின் வருத்தம் 

 

        நாயின் நாவினீர் சிறுமுயற் குருளைகள் நக்கும்  

        தீய பாலையில் தனைமறந் தவசத்திற் சென்ற  

        மாயை மாதுபின் தொடர்ந்துசெல் மலர்முக மாதர்  

        வாயின் நீரறீஇக் கண்கணீர் சுரந்தன வந்து.                                                     51 

 

 

        கானலை நீரென்று போய்க் களைத்து வருந்துதல் 

 

        கானல் நீரெனச் சிறிதிடங் கடிதுசென் றிளைப்பார்  

        மான னார்சிலர் வாய்க்கடை நாவினால் வருடித்  

        தானை ஓர்கர முகத்தெதிர் அசைத்துமெய் தளர்வார்  

        வேனில் ஆகொடி தென்றுதம் விதியினை வெறுப்பார்.                                           52 

 

 

            மாயைக்கு முன்னால் மான்கள் ஓடுதல் 

 

        மாதர் இவ்வணந் தொடர்ந்துபின் வரவெழில் மாயை  

        பாத தாமரை வருந்தின பாலையுள் நடந்தவ்  

        ஆதி நாயகன் தனைமறித் துதவிசெய் தறல்மேல்  

        ஓதி யோடுற வாவமென் றுழைகள்முன் னோடும்.                                       53 

 

 

                       மாயை வருதல் 

 

        கூந்தல் மேல்விரி முகில்தரக் கோபம்வாய் காட்ட  

        ஏந்து கொங்கையின் வடம்மலை அருவியை யேய்ப்பக்  

        காந்தள் அங்கைகள் தரவருங் காரெனக் கலாபம்  

        வாய்ந்த மஞ்ஞைகள் மகிழவந் தனள்பெரு வனத்தில்.                                           54 

 

 

           மாயைக்கு அஞ்சிய மாதவர் ஓட்டம் 

 

        சிங்க முங்கரி யும்பணி செயத்தவஞ் செய்யூ  

        அங்கு றுந்தவர் மாயைதன் முலையிடை ஆமா  

        தங்க முஞ்சிறு சிங்கமுங் கண்டுளந் தளர்ந்து  

        பொங்கு றுந்துய ரோடெழுந் திரிந்துபோ யினரால்.                                               55 

 

 

             அல்லம தேவர் அருள்செய்ய எண்ணுதல் 

 

        கொடிய வாள்வரி வேங்கையைக் கண்டமான் குழாம்போல்  

        நெடிய வார்சடை முனிவரர் கலங்குறு நிலையும்  

        தொடியு லாவுமென் தோள்மட வார்வரு துயரும்  

        முடியு மாறருள் செயநினைந் தனனருள் மூர்த்தி.                                        56 

 

 

        அல்லமர், முனிவர்கட்கருளி மாயை முன் வரல் 

 

        மாயை போகவோர் கணத்தினில் துரப்பனீர் மனத்தில்  

        நோயு றீரென ஒருமுனி போல்நின்று நுவன்று  

        தூய மாதவர்க் கருள்செய்து தொல்லைநல் உருவாய்த்  

        தேயும் நுண்மருங் கணங்கெதிர் தோன்றினன் சிரித்து.                                            57 

 

 

        அல்லமரைக் கண்ட மாதர்கள் வருத்தம் நீங்கி மகிழ்தல் 

 

        பொங்கும் ஆரழல் வெஞ்சுரம் புக்கபூ வையர்க்குக்  

        கங்கை யாறெதிர்ந் தாலெனக் கண்ணெதிர் தோன்றும்  

        எங்கள் நாயகன் திருவடித் தாமரை இணையைத்  

        தங்கள் ஆகுலம் தீர்ந்துமெய் குளிர்தரச் சார்ந்தார்.                                        58 

 

 

        ‘மாயையை ஏன், துறந்தாய்’ என அல்லமரைத்  

                       தோழியர் கேட்டல் 

 

        பெருக ளற்றினில் அழுந்தியங் கெழுபவன் பிடித்த  

        கரநெ கிழ்த்துவிட் டகல்பவன் போலிளங் காளாய்  

        விரைம லர்க்கணை பட்டுள நையுமெல் லியலை  

        அருள றத்துறந் தனையென்கொல் என்றனர் அவர்தாம்.                                          59 

 

 

        அல்லமர், ‘நீவிரே எம்மைத் துறந்தீர்’ எனல் 

 

        பற்றி ஆயிடை விடுத்தது நீயிரே பற்றி  

        இற்றை நாளுமை விடுத்திலேன் இதனையிவ் வுலகம்  

        முற்று மோதுறுந் தம்பிழை மொழிகுநர் உளரோ  

        குற்ற நாடியே திலரிடை கூறுநர் அல்லால்.                                                     60 

 

 

        இன்றுதான் நீ சினமடைந்தாய் எனல் 

 

        என்ன ஓதலும் அல்லமன் ஏந்திழை மடவார்  

        மன்னன் மாமகள் மனத்தெழு காமநோய் வளரும்  

        முன்னம் நீமுனி யாதிருந் தின்றுதான் முனிந்தாய்  

        என்னை ஏறவிட் டேணியை வாங்கினை என்றார்.                                               61 

 

 

        மாயை, அல்லமரைக் கபடிக் கூத்தாடி எனல் 

 

        தொல்லை நின்திரு மேனிபோல் உள்ளமும் தூய்தாய்  

        நல்லை என்றுனை நம்பினேன் வஞ்சக நடிப்பு  

        வல்லை என்பதை அறிந்திலேன் நானென வன்சொல்  

        சொல்லி நின்றனள் மாயையெம் பிரானிது சொல்லும்.                                           62 

 

 

        அக் கூத்தினைத் தேவர், முனிவர்களைக்  

                     கேட்டறிக எனல் 

 

        வஞ்ச நாடகம் நடிப்பது மாயைதன் செயலோ  

        தஞ்ச அல்லமன் தன்செய லோவெனத் தடங்கண்  

        பஞ்சின் மெல்லடி யாய்கட வுளரையும் படிறில்  

        நெஞ்ச மாதவர் தமையுங்கேட் டறிதிநீ என்றான்.                                         63 

 

 

                    மாயை பதிலுரைத்தல் 

 

        கள்ளன் மங்கையைக் களவுசெய் பொருளினைக் கண்டு  

        கொள்ளு நன்குறி புகல்விப்ப தொக்குமென் கூத்தைத்  

        தள்ள ருஞ்சுரர் முனிவராற் சொல்விக்குந் தகைமை  

        வள்ள லென்றுபுன் னகைகொளீஇ உரைக்குமம் மாயை.                                   64 

 

 

             மாயை, தன் பெருமையை உரைத்தல் 

 

        நெஞ்சம் யாதினால் எனையகன் றிடவரி நினைக்கும்  

        கஞ்சன் மாயையை இலனெனக் கழறவா யுண்டோ  

        விஞ்சும் வானிறை என்னையெம் மெய்யினால் விடுவான்  

        தஞ்ச மாயையென் றிகழ்தரத் தக்கசொற் கற்றோய்.                                              65 

 

 

        மாயை, என்னை யாரும் வெல்வது அரிதெனல் 

 

        என்னை அஞ்சிமா வழங்குகாட் டிருக்குமா தவரென்  

        தன்னை வென்றிட வல்லரோ வல்லரென் தன்னைப்  

        பின்னை வென்றிட வல்லரியார் பேசுதி யென்று  

        மின்னை வென்றநுண் இடைசொல அல்லமன் விளம்பும்.                                 66 

 

 

               அல்லம தேவர் பதிலுரைத்தல் 

 

        என்றன் ஆணையைக் கடப்பவர் இலையிலை யென்று  

        வென்றி கூறினை யேலவர் நிற்கவேல் விழயாய்  

        நின்ற ஆருயிர் முயற்சியால் நிகழ்த்திய மாற்றம்  

        அன்றி வாழ்மறை ஆகமத் தறிதியென் றறைந்தான்.                                             67 

 

 

        மாயை மீண்டும் செருக்கொடு புகலுதல் 

 

        நாலு வாக்குநீ பார்ப்பினும் நானவற் றினுக்கு  

        மூல காரணம் ஆகுவன் மொழிந்தஇம் மாற்றம்  

        நூலெ லாமுரைத் திடுமெனச் செருக்கொடு நுவன்றாள்  

        மாலெ லாம்பிறப் பதற்கிட மாகிய மாயை.                                                     68 

 

 

            அதற்கு அல்லம தேவர் கூறுதல் 

 

        ஆட்டு கிற்பனிவ் வகிலமும் என்றனை நின்னை  

        ஆட்டு கிற்பவர் ஆரென அறிந்திலை பேதாய்  

        கேட்டு நின்னையோர் பொருளென மூடரே கிளப்பார்  

        நாட்டும் என்னைநன் கறிந்துயர் ஞானிகள் நவில்வார்.                                            69 

 

 

            மாயை அல்லமரை வேண்டுதல் 

 

        ஆரை யாரிருந் தாட்டுவ ரோவதை அறியேம்  

        மார வேள்யும் நோய்மறித் ததன்பினென் வாதம்  

        பாரெ னாவியம் பினள்பசிக் கனமிடிற் பசிநோய்  

        தீரும் மாமருந் துதவுவன் என்பவர் சீர்போல்.                                                   70 

 

 

                    அல்லம தேவர் பதில் 

 

        காமி யாகிநீ அருச்சனை கடைப்பிடித் தமையால்  

        நாம வேல்நெடுங் கண்ணினாய் காமிபோல் நடித்தேன்  

        தீமை நெஞ்சினாற் சூள்நினைந் தனை நினைத் தீண்டேன்  

        போமி னாருடன் என்றனன் வன்சொல்லாற் புனிதன்.                                             71 

 

 

                               (வேறு)

  

                           மாயை வருந்தல்  

 

               மண்ணுலகில் இழிகுலமத் தளத்தொழிலோன்  

                       தனைவிரும்பி வறிதுமீண்டாள்  

               அண்ணல்மக ளெனும்பழியை மாளாமல்  

                       நிறுவிப்போய் அங்கை கொட்டி  

               விண்ணுலக நகைசெய்யச் சூள்முடியா  

                       தெவ்வாறு விமலன் பங்கில்  

               பெண்ணரசி தன்முகத்தில் விழிப்பலென  

                       மாயையுளம் பீழை உற்றாள்.                                          72 

 

 

        அல்லமர், நான் அன்புக்கு எளியன், வன்வுக்கு அரியன் எனல் 

 

               அன்பினால் அன்பர்பெறற் கெளியனாம்  

                       எனைச்சூளொன் றறைந்து வந்து  

               வன்பினாற் பெறவேண்டி நின் றழிந்தாய்  

                       இதுதகுமோ மாயை மாதே  

               முன்பினாக கடுவிதைத்துக் கரும்பாக  

                       வேண்டிமிக முயன்று நெஞ்சில்  

               துன்பராய்த் திரியுமவர் போலென்றான்  

                       மாயைதனைத் துரக்க வல்லான்.                                               73 

 

 

                  விமலை அல்லமரை வேண்டுதல் 

 

               கரைகுறுக வந்தகலங் கவிழ்ந்த நாய்  

                       கன்போலக் கலங்கிநின்ற  

               வரைபுரைமென் முலைமாயை தனைக்கண்டு  

                       விமலையுள மறுகி மாழ்கி  

               இரதமுறு களிம்புமலி செம்பினியல்  

                       நோக்குறா இயல்புபோல  

               அருள்புரிதி ஐயஇவள் குணநோக்கா  

                       தென்று தொழு தஞ்சிச் சொன்னாள்.                                            74 

 

 

                    அல்லமர் மறுமொழி கூறுதல் 

 

               இலங்கிலைவேல் மருட்டுமதர் விழிவிமலாய்  

                       வறியாவோ டிரதந் தன்னால்  

               நலங்கிளர்பொன் உருவாயில் என்னாலிம்  

                       மாயையின்பம் நாணுகும் என்று  

               புலங்களறி வரியபர மானந்த  

                       சிவயோகி புகல மாயை  

               கலங்கியளி பசும்புண்ணிற் செவ்வேல்பட்  

                       டெனவழுங்கிக் கழறு கின்றாள்.                                         75 

 

 

             மாயையும் அல்லமரும் வாதமிட்டு உரைத்தல் 

 

               நனவொருபுன் கனவாக மயங்கவெனைப்  

                       புணர் தலினால் நாளும் வென்றி  

               எனதெனநின் றுளஞ்செருக்கி மடமாயை  

                       கூறுதலும் எங்கள் கோமான்  

               கனவினுகர் வுறுமுணவு குறையுமோ  

                       பசியதனாற் களைவ துண்டோ  

               நினைவில்வரு கனவொன்று கண்டிறுமாந்  

                       தனைபேதாய் நீதான் என்றான்.                                         76 

 

 

                       மாயை வஞ்சினங் கூறல் 

 

               எவ்வண்ணம் உரைவன்மை கொண்டுநீ  

                       தள்ளினுநான் இன்று போகேன்  

               கைவண்ண மலர்ப்பகழி மதனனையாய்  

                       நினைத்தழுவிக் கட்டிக் கொண்டு  

               செவ்வண்ணன் அமர்கைலைக் கேகியென்சூள்  

                       முடிப்பலெனச் செருக்கிச் சொன்னாள்  

               மைவண்ண மலர்க்குழலாள் வான்திரட்டி  

                       விழுங்குவலென் மாற்றம் போல.                                               77 

 

 

                       அல்லமர் மறைதல் 

 

               முடிக்குமலர்க் குழல்மடவாள் சூள் முடிப்பல்  

                       எனுமொழிக்கு முறுவல்செய்து   

               பிடிக்கவலை யாயிலெனைப் பிடிநடையாய்  

                       பிடியென்று பிரான்ம மறந்தான்  

               மடக்கொடிதன் விழியினாற் காண்பதும்போய்  

                       மதிமயங்கி வறிது நின்றாள்  

               சுடர்த்தொடிமென் தோள்மடவார் இன்றிழந்தோம்  

                       இவளையெனத் துயரு ழந்தார்.                                         78 

 

 

             அல்லமர் அன்பருக்கன்றிப் பிறர்க்கு அரியர் எனல் 

 

               வெண்டிங்கள் நிலவுவா யிடைப் புகினும்  

                       சகோரமெனும் மென்புள் அன்றி  

               உண்டிங்கு வாழுமுயிர் உளதோ நம்  

                       அல்லமனாம் ஒருவன் தானும்  

               பண்டங்கு மொழிமாயை கைப்படினும்  

                       அவள்பிடிக்கப் படுவ னோதான்  

               தொண்டன்பின் வழிநின்று மனமாசு  

                       தீர்ந்தபெருந் தூயோர்க் கல்லால்.                                               79 

 

 

          முனிவர்கள் அல்லமரைப் போற்றித் தவஞ்செய்தல் 

 

               மாயைதனை வாதித்துத் தள்ளுபுதன்  

                       நிலைநின்று மாயா வாதி  

               ஆயினனல் வீரசைவ சித்தாந்த  

                       குலதீபம் ஆயி னோனென்  

               றேயுமன நிறுவியிறப் பெதிர்வுநிகழ்  

                       வெனுங்காலம் உணரும் ஆற்றல்  

               தூயமுனி வரரெல்லாம் அல்லமனைத்  

                       தொழுதுதவந் தொடங்கி வாழ்ந்தார்.                                            80 

 

 

ஏழாவது - மாயை கோலாகல கதி முடிந்தது

 

கதி 7 - க்குச் செய்யுள் - 436

 


 

8. வசவண்ணர் வந்த கதி

[இக் கதிக்கண், அல்லம தேவர் மறைந்தவுடன் மாயை வருந்துகிறாள். மாயையின் பெற்றவர்களும் மற்றவர்களும் மாயையைப் பின் தொடர்ந்து வருந்துகிறார்கள். மாயையின் நற்றாய் மோகினி, பல வகையாகப் புலம்புகிறாள். விமலை அரசனையும் அரசியையும் பார்த்து, ‘மாயை உங்கள் மகள் அல்லள்,’ என்கிறாள். மாயை தன் வரலாற்றைத் தாய் தந்தையர்கட்குத் தெரியப்படுத்திக் கைலையை அடைகிறாள். அரசன், செயலற்று நிற்கிறான். அரசி மேலும் பல வகையாக வருந்துகிறாள்; அசரனுடைய குருவாகிய ஆங்காரன் அரசன் முதலியோரைத் தேற்றுகிறான்.

கைலையை அடைந்த மாயை இறைவனையும் இறைவியையும் வணங்கி அருகில் நிற்கிறாள். இறைவன் இறைவியைப் பார்த்து, ‘உன்னுடைய சூள் வெற்றி பெற்றதா?’ என்று கேட்டு எள்ளி நகையாடுகிறார். உமாதேவியானவள் இறைவனைப் பார்த்துத் ‘தோல்வியால் வருந்திக்கொண்டிருக்கும் என்னைப் பார்த்து நீ மேலும் எள்ளி நகையாடுதல் மூக்கறையன் முகத்திற்கு நேரே கண்ணாடி காட்டுதலைப்போன்று இருக்கின்ற’ தென்கிறாள். இறைவியின் வருத்தத்தைத் கண்ட இறைவன், ‘ஆடுகளைக் கொல்லுந் தொழிலையுடைய ஒருவன் அரிமாவுக்கு முன் செல்லுதலே பெரிய வீரத் தன்மையாவது போல, மாயை அல்லம தேவருக்கு முன்சென்றதே பெருங் காரியம்’ என்கிறான். இறைவி, ‘அல்லம தேவரைக் கண்டு பிடித்தற்கு வழி யாது?’ என்று கேட்கிறாள். ‘சத்துவகுண மடந்தையை அனுப்பினால் அல்லமதேவரைக் கண்டுபிடிக்கலா’ மென்று இறைவன் பதிலுரைக்கிறான். இறைவி அவ்வாறே அனுப்புகிறாள். இறைவன் அல்லமதேவரை அறியுமாறு நந்திதேவரை உலகிற்கு அனுப்புகிறான். நந்திதேவர் இறைவன் மீது கொண்டுள்ள அன்புப்பெருக்கை அறிவதற்குச் சிவகணங்களையும் உலகிற்கு அனுப்புகிறார். சிவகணங்கள் பற்பல நற்பதிகளிலும் பிறக்கிறார்கள். இவர்களால் உலகிற்கு நன்மை விளையும் என்று தேவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள் என்னுஞ் செய்திகள் கூறப்பெறுகின்றன.]

 

 

                       நூலாசிரியர் கூறல் 

 

               அசைவில் அல்லமற் காயுமை நறகலை  

               வசவ தேவன் வலிய கணங்கள் தாம்  

               கசியும் அன்பிற் கயிலையின் நின்றுதென்  

               திசையில் வந்த திறமுரை செய்குவாம்.                                        1 

 

 

               அல்லமர் மறைந்தவுடன் மாயை வருந்துதல் 

 

               தீங்கு காணும் சிறுவிலை நாட்கடன்  

               வாங்கும் ஓர்பொருள் போக்கும் வறியர்போல்  

               நீங்க ஞான நெடுந்தகை மாயைநின்  

               றேங்கும் ஆவி இயக்கமும் இன்றியே.                                          2 

 

 

                 பெற்றவர் வருந்திப் பின்தொடருதல் 

 

               மத்த ளங்கொடு வந்தவன் தன்னொடு  

               பொய்த்த நுண்ணிடை போயினள் என்னவே  

               சித்த நாணும் துயரமும் தின்றிடப்  

               பித்தர் போல்பின் தொடர்ந்தனர் பெற்றவர்.                                              3 

 

 

                  அரசன் வருந்திப் பின்தொடருதல் 

 

               தக்க தந்தைதாய் சாயப் பழிசெயும்  

               மக்கள் இன்றி மலடர்தாம் ஆதலும்  

               மிக்க வன்பிணி மேவலும் நல்லவென்  

               றுக்க நெஞ்சுடன் ஓடினன் மன்னவன்.                                           4 

 

 

               மோகினி தன் மகளை நினைந்து  

                         வருந்துதல் 

 

               காய்ப சிக்குக் கவன்று தசைதின  

               வாய்ப தைக்கும் மறவர் வலையிடைப்  

               போய்வி ழக்குழக் கன்று புகுந்தவண்  

               தாய்ப தைப்பது தன்னெதிர் காணுமோ.                                         5 

 

 

                       இதுவும் அது 

 

               கண்டு வார்சிலைக் கானவர் பார்ப்பினைக்  

               கொண்டு போகக் குடம்பைகண் டேங்கியே  

               துண்ட மாரிரை சோரப் பறவைகள்  

               மண்டு நோயில் மறுகுதல் காணுமோ.                                          6 

 

 

                       இதுவும் அது 

 

               அரில்மி தித்திட் டதர்படப் பூம்பணை  

               மரமு றித்து மழைமதக் கைம்முக  

               உரல டிப்பிறை ஒண்மருப் பஞ்செவிக்  

               கரிந டப்பக் கலங்கி இரியுமோ.                                                7 

 

 

                       இதுவும் அது 

 

               பரற்கண் மென்பதம் வைத்துப் பதைக்குமோ  

               சுரத்து மேனி துவண்டு வெதும்பிநீர்  

               இரக்கு மோமகள் என்செயு மோஎனத்  

               தரிக்க ருந்துயர் தாயடைந் தேகினாள்.                                          8 

 

 

               அரசன் வருத்தங்கண்டு ஊரினர் வருந்துதல் 

 

               பொன்னை அன்ன புதல்வி பொருட்டிவண்  

               மன்னர் மன்னன் மனத்தில் வளர்ந்தெழும்  

               இன்னல் காணவும் ஊழொன் றிருந்ததென்  

               றுன்னி மாழ்கியவ் வூரர்பின் போயினார்.                                        9 

 

 

               மமகாரன் தன் மகளைக் கண்டு சொல்லுதல் 

 

               அயர்ந்து நிற்கும் அரிவையைக் கண்டுநான்  

               முயன்று மெய்த்தவம் முற்றும் பயின்றுனைப்  

               பயந்த தற்குப் பயனன் றுதவினை  

               நயந்தெ மக்கெனத் தந்தை நவின்றனன்.                                        10 

 

 

               ‘என்னை ஏன் பிரிந்து வந்தாய்?’ என்று  

                            தாய் அழுதல் 

 

               என்னை நீங்கி இழிதொழில் செய்பவன்  

               தன்னை நாடித் தலைமை இழந்தெனோ  

               கன்னி நீகொடுங் காட்டில்வந் தாயென  

               அன்னை யோவென் றரற்றி அழுதனள்.                                          11 

 

 

                    விமலை பதில் விளம்புதல் 

 

               மகனும் அல்லனவ் வல்லமன் மாயைநும் 

               மகளும் அல்லள் வரைபுரை தோளினாய்  

               இகலும் வாட்கண் அரசியும் நீயும்இங்  

                ககலும் என்று விமலை அறைகுவாள்.                                          12 

 

 

               வருந்துவது அறியாமையென விமலை  

                               கூறுதல் 

 

               வினைப்ப யன்கொள வேண்டுநர் ஓரிடம்  

               தனைப்பொ ருந்துறச் சம்பந்த மாத்திரத்  

               தெனக்கி னாரிவர் என்றபி மானமொன்  

               றனைப்பொ ருந்தி அழிவர் அறிவிலார்.                                         13 

 

 

               உலகத்தினர் அனைவரும் உறவினரே எனல் 

 

               தனையர் அகியுந் தந்தைதாய் ஆகியும்  

               உனையு றாத உயிரிலை ஆதலால்  

               இனையர் கேளிர் இனையர் அயலென  

               நினைவு றேல்மிளிர் நெட்டிலை வேலினாய்.                                             14 

 

 

               மாயை, தாய் தந்தையர்க்கு உரைத்தல் 

 

               வேனெ டுங்கண் விமலை இவைசொலப்  

               பான லங்கண் பனிமதி வாள்முகப்  

               பூந றுங்குழல் பொற்றொடி மாயைமுன்  

               தான டைந்தமை தந்தைக் குணர்த்தியே.                                        15 

 

 

               மாயை, தாய் தந்தையருக்குத் தேறுதல்  

                            உரைத்தல் 

 

               காவி யங்கண் கனியிதழ் மாதுமை  

               ஏவ வந்தஎன் எண்ணம் முடித்திலன்  

               போவன் அங்கிப் புரிகுழ லோடுநான்  

               நீவிர் நோவன்மின் என்னை நினைந்தெனா.                                             16 

 

 

                  மாயை, கயிலையை அடைதல் 

 

               விரைந்தெ ழுந்து விமலை அணங்கொடு  

               வருந்து செஞ்சக மாயைஅக் காட்டுளோர்  

               பிரிந்த ழுங்குரல் பின்தொடர்ந் தேகவே  

               பொருந்த ருங்கயி லைத்தடம் போயினாள்.                                              17 

 

 

                   அரசன் செயலற்று நிற்றல் 

 

               அழுது வாய்விட் டரற்றிலன் தன்னுடல்  

               புழுதி யாடப் புரண்டிலன் மன்னவன்  

               பழுதி லாததன் பாவைகா ணாமையால்  

               எழுதும் ஓவியம் என்னநின் றானரோ.                                           18 

 

 

                       மோகினி வருந்துதல் 

 

               விழுவள் மீள எழுவள் மெலிந்துநைந்  

               தழுவள் மேனி அசைந்து நிலங்கையால்  

               உழுவள் வாய்க்கொண் டுயிர்ப்பள் இறப்பரென்  

               றெழுவள் கைநெரித் தேங்குவள் அன்னையே.                                   19 

 

 

               மாயை இருந்த மாளிகை கண்டு  

                     மோகினி வருந்துதல் 

 

               பாடும் மாதரும் பந்தும் கழங்குநின்  

               றாடு மாதரும் ஆகும் அரிவைய  

               ரோடு மேவி ஒருமகள் வாழ்ந்தஅம்  

               மாடம் நாளினிக் கண்டுயிர் வாழ்வனோ.                                        20 

 

 

               மாயை மறைந்த வழி விளங்கவில்லை 

 

               துளிக்கும் வார்மதுச் சோலையும் வாவியும்  

               பளிக்கு மாடமும் பாழ்பட என்மகள்  

               களிக்கு மானிருங் காட்டினுள் எம்மைவிட்  

               டொளிக்கு மாறொரு சற்றும் உணர்ந்திலேன்.                                            21 

 

 

                மோகினியும் தோழியரும் கதறுதல் 

 

               என்னை நீவிட் டிருப்பினும் பொன்தொடி  

               உன்னை நான்விட் டுயிர்பிழை யேனென  

               அன்னை வாய்விட் டரற்றினள் ஆயிடை  

               மின்ன னாரும் கதறினர் வேலைபோல்.                                         22 

 

 

               ஆசிரியன் அனைவரையுந் தேற்றுதல் 

 

               வந்து வேந்தன் வழிமர பாரியன்  

               நுந்தம் மாமகள் நோன்மை நுமக்குநான்  

               முந்து கூறில னோதுயர் மூழ்கிநீர்  

               சிந்தை நோதல் தகாதெனச் செப்புவான்.                                         23 

 

 

                வருந்துவது அறியாமை எனல் 

 

               அருந்த வம்பல ஆற்றும் அறிஞரும்  

               பொருந்த ருங்கயி லைக்குமின் போனமை  

               தெரிந்து நெஞ்சம் தெளிய அறிந்துநீர்  

               வருந்தும் தன்மை மடமை மடமையே.                                         24 

 

 

               உமையின் கூறு உமக்கு மகளாகத்  

                       தோன்றிற்றெனல் 

 

               சிலைநு தற்பசுந் தேமொழி மாதுமை  

               கலைநு மக்குக் கவின்மக ளாகநீர்  

               தலைமை பெற்றது சாலும் உமையினி  

               உலகி னிற்பிறர் ஒப்பவர் இல்லையே.                                           25 

 

 

               மமகாரனும் மோகினியும் அரண்மனை  

                            அடைதல் 

 

               என்று கூறக் குரவன் இறைமகன்  

               மன்றல் வாழ்க்கை மனையொடு துன்பொரீஇச்  

               சென்று மாடத் திருநக ரிற்புகாக்  

               குன்ற மாமதிற் கோயிலின் நண்ணினான்.                                       26 

 

 

                               (வேறு)

  

          மாறை இறைவன், இறைவியை வணங்கி நிற்றல்  

         

        கயிலையில் விமலை யோடும் கவிர்இதழ் மாயை சென்று  

        வியனில மதனில் தன்னை விடுத்தஞான் றென்ன வானோர்  

        பயிலவை தன்னிற் புக்குப் பரனையும் இமயம் ஈன்ற  

        மயிலியல் தனையும வாழ்த்தி வணங்கியங் கருகு நின்றாள்.                                      27 

 

 

        நிலவுலகில் நிகழ்ந்தவைகளை மாயை குறிப்பாகக் கூறதல 

 

        பொலிவழி வதனங் கண்ட போதேயம் மாயை நெஞ்சின்  

        மெலிவினை அறிந்தும் அன்னை வினவலும் சூள்கொண் டேகி  

        மலர்தலை உதகில் தான்முன் மயங்கிய வாற னைத்தும்  

        நலியுநாண் அடவ ருந்தி நவின்றனள் குறிப்பின் தோன்ற.                                 28 

 

 

                   இறைவன் புன்னகை புரிதல் 

 

        நன்னக மகள்கேட் டுள்ளம் நாணுபு முகங்க விழ்ந்தாள்  

        பன்னக சயனன் ஆதி பண்ணவர் நெருங்க வைக்கண்  

        முன்னகை செய்து தீய முப்புரம் மாளச் சொய்தான்  

        புன்னகை புரிந்தான் பங்கின் புரிகுழல் செருக்கு மாள.                                    29 

 

 

                       இதுவும் அது 

 

        அளியனென் றுனக்கு நான்சொல் அல்லமன் அரிய னோமற்  

        றெளியனோ உரைத்தி நீயென் றிலங்கயில் எறித லேபோல்  

        வெளியபுன் முறுவல் செய்ய விமலன்வெண் மதியம் கண்ட  

        நளினமென் மலர்போல் என்தாய் நகைமுகம் ஒடுங்கி னாளால்.                                   30 

 

 

               அதுகண்ட இறைவி வருந்திக் கூறல் 

 

        போக்கரும் வலிபு கன்று போய்வரு மாயை சொன்ன  

        வாக்கினில் வருந்து வேனை வள்ளல்நீ நகைசெய் தெள்ளல்  

        மூக்கிலி முகத்தின் முன்னர் முகுரங்காட் டுதல்போன்ம் என்ன  

        மீக்கிளர் இமயம் ஈன்ற மெல்லியல் மெலிந்து சொன்னாள்.                                       31 

 

 

                       இறைவன் மறுமொழி 

 

        நடம்பயில் எந்தை மங்கை நாணினால் வருந்தி னாளென்  

        றடைந்தருள் சொல்வன் ஞாலம் அலைக்குமம் மாயை சூளால்  

        நெடுந்தகை முன்னஞ் சென்ற நிலையேநன் றாடு கொல்வோன்  

        மடங்கல்முன் வெல்வேன் என்று வருதலே ஆற்றல் அன்றோ.                                    32 

 

 

                           இதுவும் அது 

 

        அல்லமன் பெருமை எல்லாம் அனைவரும் அறிந்து கொள்ள  

        நல்லெழில் மலைம டந்தாய் நன்குணர்த் தினைநீ யென்று  

        சொல்லுநர் அன்றி நின்னை நிந்தனை சொல்ல வல்லார்  

        இல்லையென் றியம்ப யாவும் ஈன்றவள் இயம்பு கின்றாள்.                                       33 

 

 

             இறைவி, அல்லமதேவரை அறியும்வழி கேட்டல் 

 

        பொறியிலி யேன்செய் தீமை பொறுத்தருள் புரிந்து மெய்ம்மை  

        அறிவருள் குரவன் ஆகும் அல்லமன் தன்னைக் காணும்  

        நெறியருள் புரிதி யென்ன நிரைவளை வணங்கிக் கூற  

        மறிமழு அமர்ந்தி ருக்கும் மலர்க்கைவா னவனு ரைப்பான்.                                       34 

 

 

                    இறைவன் உரைத்தல் 

 

        மத்தம துறுகுணத்து மாயையை விடுத்த ஆற்றால்  

        நித்திய குரவன் தன்னை நீயறிந் திலைய ணங்கே  

        சத்துவ கலைம டந்தை தனையினி விடுத்தி ஆயின்  

        கைத்தல நெல்லி போலக் காண்குவை அவனை என்றான்.                                35 

 

 

             சத்துவ குணவடிவியை உலகிற்கு அனுப்புதல் 

 

        மிடியட இறப்பல் என்று மேவுமோர் இடத்தில் செம்பொன்  

        குடமொடு கண்ட வன்போல் கொலைசெய்நாண் துறந்து வந்து  

        துடியிடை உமையெம் மானைத் தொழுது சத்துவ அணங்கைப்  

        படிமிசை அலமற் காண்பான் செல்கெனப் பணித்தான் அன்றே.                                    36 

 

 

        அன்பினால் அல்லமதேவரை அறியலாமென்று  

                     நந்திதேவர் கூறுதல் 

 

        அப்பொழு தருகு நின்ற அருள்நந்தி தேவன் அன்னே  

        ஒப்பரும் பத்தி யென்னும் அஞ்சனம் ஒன்றுண் டாயின்  

        செப்பரு ஞானா னந்த அல்லம தேவன் என்னும்  

        வைப்பினை எளிது காண லாமென மகிழ்ந்து சொன்னான்.                                        37 

 

 

                இறைவன் நந்திதேவரைப் புகழ்தல் 

 

        அழிவரு நிதிய வைப்பை அஞ்சனம் கொண்டு காணும்  

        விழியுடை யவன்போல் ஞான மெய்க்குர வனைத்தான் கண்டு  

        கழிமயல் அன்பர் காணக் காட்டுவோன் இவனென் றெம்மை  

        வழிவழி அடிமை கொள்ளும் வள்ளல்நந் தியைப்பு கழ்ந்து.                                       38 

 

 

                    நந்திதேவர் பெருமை 

 

        சத்தியால் யான்பி ணித்த ததளதனைத் தனது தூய  

        பத்தியால் அவிழ்க்க வல்லோன் பார்க்கின்இந் நந்தி யேதான்  

        இத்தினால் விலங்கு பூட்டும் இறைவனோ விடுவிப் பானோ  

        மெய்த்தஆ ரருளி னோன்யார் விளம்புக என்று சொல்வான்.                                      39 

 

 

        நந்திதேவரை இறைவன் நிலவுலகிற் கனுப்புதல் 

 

        அல்லமன் என்னும் ஞான ஆனையை அகப்படுத்த  

        வல்லவொண் பார்வை நீயே ஆதலால் மண்ணிற் போகி  

        எல்லையில் அன்பர் நெஞ்சத் தின்பருள் நந்தி யென்று  

        சொல்லினன் உயிரில் தோன்றாத் துணையென இருக்கும் பெம்மான்.                              40 

 

 

        சிவகணங்கள் நந்தியால் அல்லமரைக் காண இயலாதெனல் 

 

        அந்திவண் ணத்தெங் கோமான் அருளினால் இன்ன கூறச்  

        சுந்தரி தனக்கும் எட்டாத் தூயவன் தன்னைக் காண  

        நந்திவல் லவனோ என்று நகைசெய்து கணங்கள் தம்முள்  

        வந்தொரு சிலரு ரைப்ப மங்கைபங் காளன் சொல்வான்.                                  41 

 

 

        இறைவன், நீங்கள் எம்மையும் நந்தியையும் அறியீர் எனல் 

 

        நந்தியென் தனையு ணர்ந்தான் நானவன் தனையு ணர்ந்தேன்  

        சிந்தைசெய் தெம்மை நீவிர் தெறிவுற அறிகி லீரென  

        றெந்தையெம் பெருமான் கூற இகழ்ந்துரை செய்தோர் எல்லாம்  

        வெந்துயர் கொண்டு நின்றார் மீளவும் விமலன் சொல்வான்.                                      42 

 

 

        சிவகணங்களை உலகிற் பிறக்குமாறு இறைவன் அருளல் 

 

        மாசறு நந்தி பத்தி வார்த்தையால் அறியீர் நீவிர்  

        காசினி யாதனிற் சென்று கண்களால் அமைக் கண்டு  

        பேசுதிர் பின்னர் என்று பெருந்தகை நந்தி தன்னோ  

        டீசனொண் கணங்கள் தம்மை ஏவினன் அருளி னானே.                                   43 

 

 

                    சிவகணங்கள் பிறத்தல் 

 

        கண்ணுதல் அருளால் ஏவுங் கணங்களுள் தலைமை பெற்றோர்  

        மண்ணுல கதனில் வேண்டும் வளம்பதி தோறும் வந்து  

        நண்ணினர் உலகர் கண்ணின் நரர்வடி வாகத் தோன்ற  

        எண்ணுறின் எழுநூற் றின்மேல் எழுபதென் றுரைக்கும் எண்ணார்.                          44 

 

 

          நந்திதேவர் முதலியோர் பிறப்பினால் நலம்  

           நலம் விளையுமெனத் தேவர்கள் மகிழல் 

 

        நந்தியென் கின்ற ஞான ஞாயிறு நிலத்து திப்பின்  

        முந்துறும் அமணர் என்னும் மூடுவல் இருள்கெட் டோடும்  

        சந்திர மௌலி சீர்வெண் தாமரை மலரும் என்னா  

        இந்திரன் முதலாய் உள்ள இமையவர் மனம கிழ்ந்தார்.                                   45 

 

 

எட்டாவது - வசவண்ணர் வந்த கதி முடிந்தது

 

கதி 8 - க்குச் செய்யுள் - 481

 


 

9. அக்கமாதேவி உற்பத்தி கதி

[இக் கதிக்கண், உடுதடை என்னும் பெயருடைய நகரின் கண் நிருமலன் சுமதி என்னும் பெயருடைய இருவருக்கு, இறைவியால் ஏவப்பெற்ற சத்துவ கலைமடந்தை மகளாகத் தோன்றுதல்; மாதேவி என்று பெயரிடப் பெறுதல்; நற்பண்புகளுடன் மாதேவி வளருதல்; காமன் கலங்குதல்; எங்கும் நன்மை இலங்குதல்; இறைவன் கட்டளைபெற்ற சிவகணங்கள் பலவிடங்களிலும் தோன்றித் தவம், கடவுள் வழிபாடு முதலியன செய்துகொண்டு துலங்குதல்; இங்குளாபுரி என்னும் நகரின் சிறப்பு; மாதரசன் மாதாம்பிகை என்னும் இருவரின் மாண்பு; மாதாம்பிகை வயிற்றில் நந்திதேவர் தோன்றுதல்; அந்நாளில் யாண்டும் நன்மை மிகுந்து விளங்குதல்; குழவியாகத் தோன்றிய நந்திதேவருக்கு இறைவன் திருநீறு பூசிச் சிவக்குறிகட்டி வசவன் என்று பெயரிடுதல்; வசவதேவர் கல்வி கற்றல்; விச்சலன் என்னும் வேந்தன் கலியாணபுரம் என்னும் நகரில் அரசு புரிந்திருத்தல்; வசவரும் அவருடன் கைலையிலிருந்து நிலவுலகில் தோன்றிய நாகாம்பையும் விச்சலபுரம் அடைதல்; விச்சலமன்னன் வசவரை எதிர்கொண்டழைத்துப் போற்றுதல்; வேந்தனும் வசவரும் அத்தாணியிலிருக்குங் காலையில் விண்ணிலிருந்து ஓர் ஓலைச்சுருள் அவையில் விழுதல்; அதைச் சிலர் எடுத்து அரசனுக்குக் கொடுக்க, அவன் வாங்கி வசவருக்குக் காட்டுதல்; அவ்வோலைச் செய்தியை வசவர் அரசனுக்குணர்த்திப் புதையலெடுத்துக் கொடுத்தல்; அரசன் வசவருக்கு அமைச்சுரிமை அளித்தல்; நாகாம்பை ஒரு புதல்வனைப் பெற்று வசவரென்று பெயரிடுதல்; உலகின் பல பகுதிகளிலுந் தோன்றியிருந்த சிவகணங்கள் கலியாணபுரத்தை யடைதல்; வசவர் சிவனடியார்களைப் போற்றுதல்; சிவனடியார்கள் பலவகைக் காரியங்களில் ஈடுபட்டிருத்தல்; வசவர் அல்லமதேவரின் வருகையை எதிர் பார்த்திருத்தல் ஆகிய செய்திகள் கூறப்பெறுகின்றன.]

 

 

                       ஆசிரியர் கூறல் 

 

               புரஞ்சுடு சிறுநகைப் புனிதன் பாலமர்  

               கருந்தடங் கண்ணிதன் கலையும் நந்தியும்  

               அருங்கண நாதரும் அகல்நி லத்திடை  

               வருந்திறம் அறிந்தவா வகுத்துக் கூறுவாம்.                                             1 

 

 

               உடுதடை என்னும் ஒரு நகர் உள்ளது எனல் 

 

               பெடையொடு சுரும்பினம் பெரிதி ரைந்திடக்  

               கடிதடம் அளவுவாய்க் காலின் ஓடியே  

               மடையுடை மதுமழை மலர்பெய் சோலைசூழ்  

               உடுதடை எனுநகர் ஒன்றுண் டாயிடை.                                         2 

 

 

               அந்நகரில் நிருமலன் என்பான் சிறந்தவன் எனல் 

 

               நன்மையென் பனஎலாம் உடையன் நான்மறைப்  

               புன்மையென் பனஎலாம் பொருந்து றானெனும்  

               தன்மைதன் பெயரினால் அறியத் தக்கவன்  

               நின்மலன் எனஒரு நிகரி லானுளன்.                                                    3 

 

 

               நிருமலன் மனைவியாகி சுமதியின் பிறப்பு 

 

               அவனெழில் மனையவள் ஆட கத்தினைச்  

               சுவணமென் குதலெனச் சுமதி யென்பவள்  

               தவநிலை தன்னினும் தலைமைத் தென்னவே  

               உவமையில் இல்லறத் தொழுகும் நீர்மையாள்.                                  4 

 

 

               இறைவியின் சத்துவகலை, அச் சுமதிக்கு  

                         மகளாகப் பிறத்தல் 

 

               தூநிரு மலனுக்கச் சுமதி தன்னிடைத்  

               தானொரு மகளெனச் சார்ந்து தோன்றினாள்  

               ஆனுயர் கொடியினோன் அங்கை தாங்குறா  

               மானுறழ் சத்துவ கலைம டந்தையே.                                          5 

 

 

               மகப்பேற்றால் தாய், தந்தையர் மகிழல் 

 

               மதிபெறு கடலென மகளை ஈன்றவர்  

               நதிபெறு சடைமுடி நம்பன் பாலுறு  

               கதிபெறு மதிநுதல் கரும்பைப் பெற்றுநல்  

               துதிபெறு மலையென மகிழ்ச்சி துன்னினார்.                                             6 

 

 

                   நீறுபூசிச் சிவக்குறி யணிதல் 

 

               நெறிமுறை நிருமலன் நீறு சாத்தியே  

               அறிவரும் அஞ்செழுத் தறைந்து மெய்யுணர்  

               குறியினைத் தரித்தனன் குழவி ஆகிய  

               பொறிநிகர் வுறுமொரு புதல்விக் கென்பவே.                                             7 

 

 

                    மாதேவி என்று பெயரிடுதல் 

 

               இந்துவார் சடையினோன் இடத்த ளேயெனும்  

               சிந்தையான் மகளைமா தேவி யென்றொரு  

               சந்தநா மங்கொடு தான ழைத்தனன்  

               தந்தையா தற்குநல் தவம்பு ரிந்தவன்.                                          8 

 

 

                       மாதேவி வளருதல் 

 

               அறிவருள் ஆதர வடக்கம் வாய்மைமெய்த்  

               துறவுநல் லொழுக்கமே தூய்மை என்றிவை  

               உறவொடு குழவியாய் உடன்வ ளர்ந்திட  

                மறுவறு சுமதிதன் மகள்வ ளர்ந்தனள்.                                          9 

 

 

                       காமன் கலங்குதல் 

 

               வாடிய மருங்குலம் மாயை தோன்றுநாள்  

               கோடிய சிலைகொடு தவங்கு லைப்பவே  

               ஓடிய மதனன்மா தேவி ஓங்குநாள்  

               வீடிய சிலையனாய் வீழ்ந்து மாழ்கினான்.                                               10 

 

 

                 தீமைகள் கெட்டு நன்மைகள் எங்குந்  

                               திகழ்தல் 

 

               விழுந்தன கொடியதீ வினைப்ப ரப்பெலாம்  

               எழுந்தன நல்லறம் யாவுந் திங்களங்  

               கொழுந்தென நிருமலன் குமரி ஓங்குநாள்  

               முழங்கின சிவாகமம் முற்றும் எங்குமே.                                        11 

 

 

                               (வேறு)

  

               சிவகணங்கள் உலகில் தோன்றிப் பற்பல  

                       பெயருடன் விளங்கல் 

 

               ஈங்குமா தேவி இன்னணம் இருப்ப 

                       எம்பிரான் ஏவிய கணங்கள்  

               தாங்கள்வேண் டியவொண் பதிதொறும் முன்செய்  

                       தவத்தர்பால் நன்மக வாகித்  

               தீங்கிலாச் சித்த ராமையன் மாச்சி  

                       தேவனென் றிடுபெயர் முதலா  

               ஓங்கு நா மங்கள் வேறுவே றுறக்கொண்  

                       டுற்றனர் நற்றவம் முயன்று.                                           12 

 

 

                    நந்திதேவர் தோன்றுதல் 

 

               பயக்குறும் இனிய சங்கர பூசை  

                       பல்வகை நெறிப்பட இயற்றிச்  

               செயற்கருஞ் செய்கை செய்தவர் இருந்தார்  

                       தென்றிசை கயிலைபோற் சிறக்க  

               மயக்குறும் அமண வல்லிருள் மெலிய  

                       வயிணவம் எனும்உடு மழுங்க  

               வியக்குறு சைவம் மலரநல் நந்தி  

                       வெய்யவன் உதித்தமை விரிப்பாம்.                                             13 

 

 

                  இங்குளாபுரி என்னும் எழில் நகர் 

 

               வாயின்மண் இட்டுக் கொண்டவன் தன்னை  

                       மதித்துநல் நுதலின்மண் இடாமல்  

               பாயும்வெண் திரையில் துயில்பவன் தனக்குப்  

                       பரிதியொன் றளித்தருள் முக்கண்  

               நாயகன் தனையே கருதிவெண் ணீற்றால்  

                       நன்னுதல் வீதியை அணியுந்  

               தூயநன் மறையோர் தமக்கிடம் ஆகும்  

                       துரிசிலா இங்குளா புரியே.                                             14 

 

 

                    அந்நகரின் அருஞ்சிறப்பு 

 

               கதிர்விளை செந்நெற் காடுசூழ் கரும்பு  

                       கரும்புசூழ் கதலியங் கதுசூழ்  

               புதுநறும் பாளைக் கமுகது சூழ்முப்  

                       புடைப்பசுங் காயதெங் கதுசூழ்  

               உதிர்கனித் தேமாந் தண்பொழில் பார்ப்பார்க்  

                       குயர்வுறு துயர்மிடி புகாமல்  

               அதிர்முர சியம்பும் வீதியந் நகரிற்  

                       கணிகள்வைத் திடுபடை காட்டும்.                                              15 

 

 

                         விருந்தோம்புதல் 

 

               விருந்தினுக் கிடுவார் அன்னமந் நகரின்  

                       வேதியர் மடந்தையர் எல்லாம்  

               பொருந்துமன் னத்திற் கிடுவன விருந்து  

                       புனல்வயற் செங்கம லங்கள்  

               வருந்துநுண் ணிடைநன் மாதர்கைம் மலர்க்கு  

                       வண்டினைக் கொடுப்பர் பேரின்பம்  

               தருந்தனி நகர்சூழ் தடங்கள் வண்டிற்குத்  

                       தாள்மலர் கொடுத்திடும் அன்றே.                                               16 

 

 

                       மறையவர் மாண்பு 

 

               இந்நகர் வாழும் மறையவர் செய்யும்  

                       யாகதூ மம்படிந் தன்றோ  

               பொன்னகர் வாழ்நர் நிறைந்தஆ யுளராய்ப்  

                       பொருந்துதல் இந்நகர் மறையோர்  

               உன்னரும் மனுவால் நெருப்பினை வளர்த்திட்  

                       டொழுகுநீர் காட்டுறின் அன்றிப்  

               பின்னொரு செயலாற் கலியுகந் தன்னிற்  

                       பெருகுநீர் காணுறப் படுமோ.                                           17 

 

 

               மாதரசன் என்னும் மறையவன் சிறப்பு 

 

               இனையமா நகரின் அந்தணர்க் கெல்லாம்  

                       இறைமைபூண் டுளனொரு மறையோன்  

               நினைவெலாம் அரன்றா ளினுமுரை எல்லாம்  

                       நிருமலன் துதியினுஞ் செய்யும்  

               வினையெலாம் அவன்பூ சனையினும் வைத்தோன்  

                       வேதமும் ஒழுக்கமும் வல்லான்  

               மனையுளான் எனினுந் துறந்தவர்க் கொப்பான்  

                       மற்றவன் நாமமா தரசன்.                                                     18 

 

 

                 மாதரசன் மனைவி மாதாம்பிகையின்  

                            கற்புச் சிறப்பு 

 

               திருந்திய அனையான் தேவிதன் நாமம்  

                       செப்பின்மா தாம்பிகை யென்பாள்  

               அருந்ததி முதலாங் கற்புடை யார்தம்  

                       அருநிலை ஊறின்றி முற்ற  

               நிரந்தரம் அவளைக் கைகுவித் திறைஞ்சி  

                       நினைந்துபின் பாயலிற் படுப்பார்  

               கருந்தடங் கயற்கண் பூண்கொடி அனையாள்  

                       கற்பினை யாவரே புகல்வார்.                                           19 

 

 

               நந்திதேவர் அவட்கு மகனாகத் தோன்றல் 

 

               பூங்கொடி அனமா தாம்பிகை பெருமை  

                       புனைந்துரை அன்றுபட் டாங்கே  

               ஓங்கிய அபர சிவனென வேதம்  

                       உரைத்திடும் அருணந்தி வந்தான்  

               தாங்குற அவள்தன் வயிற்றிடை அதனால்  

                       தக்கவர் தகவில ரென்ப  

               தாங்கவர் பயந்த புதல்வனால் தெளிய  

                       அறிமினென் றறைகுவர் பெரியோர்.                                             20 

 

 

                  மாதரசன், மாதாம்பிகைஆகிய இவர்  

                               பெருமை 

 

               ஐந்தொழில் ஒருவன் திருவுளம் மகிழும்  

                       அறுதொழி லாளன்மா தரசன்  

               பைந்தொடி கொழுநற் றொழுதெழு தொழிலாள்  

                       பரிந்துதீ வளர்ப்பவன் மறையோன்  

               செந்திரு அனையாள் விருந்தினர் வயிற்றின்  

                       தீயவிப் பவளிவர் பெருமை  

               நந்தெழின் மலரோன் சொன்மகள் இருக்கு  

                       நாவினும் புகன்றிடப் படாதே.                                          21 

 

 

                 நந்திதேவர் தோன்ற வானவர் மலர்மாரி  

                               பெய்தல் 

 

               இன்னமா தரசன் தேவிதன் வயிற்றின்  

                       இவ்வுல கெலாஞ் செய்புண் ணியத்தான்  

               மன்னுமார் அளிகள் விருந்துணக் காமர்  

                       வல்லியின் மலர்மலர் வதுபோல்  

               என்னையா ளுடைய நந்திவா னவன்றான்  

                       எய்திவந் துதித்தனன் அன்று  

               சென்னியால் அமரர் தொழுதுபூ மாரி  

                       சிந்தினர் துந்துமி முழங்க.                                                     22 

 

 

                    அமணர், வைணவர் உள்ளன்பு 

 

               எங்குரு நந்தி தோன்றுநாட் புதுமை  

                       யென்சொல்வாங் கண்டுமுட் டென்னும்  

               வெங்குண அமணர் உளத்தெறி மழுவோன்  

                       வேடங்கண் டஞ்சலி செய்ய  

               அங்கொரு நேயம் பிறந்தது திருமால்  

                       அடியவர் உளத்தினில் எங்கள்  

               சங்கரன் இறைவன் எனவொரு ஞானஞ்  

                       சார்ந்தது தமையறி யாமல்.                                                    23 

 

 

               நந்திதேவர் பிறந்ததும் உலகில் தீமைகள்  

                               மறைதல் 

 

               கொலைகள் வழுக்கா றவாவொடு வெகுளி  

                       கொடுஞ் சொல்பொய் பயனில கூறல்  

               நிலையழீஇ ஒருவன் செய்ந்நன்றி மறத்தல்  

                       நிந்தனை வஞ்சனை பிறர்தம்  

               சிலைநுதல் மடவார்க் கருதலென் றினைய  

                       தீமைக ளியாவும்போ யினவால்  

               நலமலி தரும மூர்த்தியா கியநல்  

                       நந்திவா னவன்புவி வருநாள்.                                          24 

 

 

                  நந்திதேவர்க்கு இறைவன் சிவக்குறி  

                               கட்டுதல் 

 

               தாடலை தந்திங் கெம்மையாள் நந்தி  

                       தாயகட் டினுநின்று தரைமேல்  

               ஏடவிழ் மலர்வாள் முகமது தோன்ற  

                       எழுந்தரு ளுதல்முனங் குருவாய்க்  

               கூடல சங்க மேசன் தாய்க் கொளித்துக்  

                       குறுகிநல் நுதலினீ றணிந்து  

               வீடருள் பரம சிற்கன லிங்க  

                       மெய்யுறத் தரித்தனன் அம்மா.                                         25 

 

 

                   வசவன் என்று பெயரிடுதல் 

 

               தரித்தபின் தனது மேனிதோன் றாமல்  

                       தாயெதிர் நின்றிட பப்பேர்  

               திரித்துநல் வசவன் என்றுபே ரிட்டுச்  

                       சென்றனன் சிவன்தனைக் குருவாய்  

               ஒருத்தர்தம் மிடத்திற் பாவனை செய்கென்  

                       றுரைப்பவர் உரைகெடத் தானே  

               அருட்குரு வடிவாய் வந்தருள் புரிந்த  

                       ஆலமார் சூலபா ணியனே.                                                     26 

 

 

               வசவரின், திருநீறு முதலியன கண்டவர்  

                               மகிழல் 

 

               பிறந்தமெய்ஞ் ஞானப் பிள்ளைநல் நுதலிற்  

                       பெருகொளி நீறுமொண் களத்தில்  

               சிறந்துள அமல லிங்கமுங் கண்டு  

                       செறிந்தவர் அனைவரும் வியந்து  

               மறைந்தரன் குருவாய் வந்திவை புனைந்து  

                       மகவினை வசவனென் றொருபேர்  

               அறைந்தனன் என்ன அறிந்தனர் அமலன்  

                       அறிவுள்நின் றறிவிக்க அன்றே.                                         27 

 

 

               அக்குழந்தை நந்நிதேவரே என யாவரும்  

                               உணரல் 

 

               குறில்வழி லகரந் தனிநிலை ஆயுங்  

                       கூடிய தகரமுன் எழுத்தென்  

               றறிகுறி வடிவந் திரிதல்போல் நந்தி  

                       அடல்விடை மெய்திரிந் துறினும்  

               நறுமலர் விழியிற் கண்டவர் எல்லாம்  

                       நந்தியே என்றுளம் மகிழ்ந்தார்  

               பெறுதவம் முயன்ற அன்னையும் பிதாவும்  

                       பெறுமுவ கையினையார் உரைப்பார்.                                   28 

 

 

                   வசவதேவர் கலையுணர்வடைதல் 

 

               ஈன்றநாள் தொடங்கிச் செய்கடன் முற்றும்  

                       இயற்றினன் மாதர சன்தான்  

               தோன்றுமோர் குழவிப் பதங்கடந் தெங்கோன்  

                       சோல்குரு முன்னுறுங் காலை  

               ஆன்றமா மறைகள் முதலவாய்த் தான்முன்  

                       அறிந்துள கலையெலாம அறிந்தான்  

               சான்றதா மதியம் இரவிவந் திறுப்பத்  

                       தன்கதிர் தானடை குதல்போல்.                                         29 

 

 

                  விச்சலன் என்னும் அமணவரசன் 

 

               பரமனை இகழ்ந்து நெறியலா நெறிபோம்  

                       பரமத யானையை அடக்க  

               அரமுறு கூர்மை அங்குசம் என்ன  

                       அரனடி யாரெனும் ஆவிற்  

               கொருமழ இளங்கன் றெனவருள் வசவன்  

                       ஒழுகுநாள் வளங்கொள் கல்யாண  

               புரமுற அமண குழாத்தொடு மிக்க  

                       புரவலன் விச்சலன் இருந்தான்.                                         30 

 

 

               வசவதேவர், நாகாம்பை கலியாணபுரம்  

                               சேர்தல் 

 

               படியில்கல் யாண புரமெனுந் தூசு  

                       பரசிவ பத்தியாய் விளர்ப்பக்  

               கொடியபுன் சமண மாசுவர் பிடித்தாங்  

                       குவலயத் திருந்திடும அந்நாள்  

               அடியவர செல்வம் எனும்வச வேசன்  

                       அங்குடன் வந்தநா காம்பை  

               உடன்வர வந்தவ் விச்சலன் நகரி  

                       உற்றனன் நற்றவர் நெருங்க.                                           31 

 

 

                   விச்சல மன்னன் வசவேசரை  

                       எதிர்கொண்டழைத்தல் 

 

               வந்தனன் வசவ தேவனென் றுரைப்ப  

                       மன்னவன் விச்சலன் அறிந்து  

               மந்திரி என்று மறைந்தஉட் பகையை  

                       மலிபொடி மூடிய தழலை  

               வெந்தழல் என்ன அறிந்திடா தெடுப்ப  

                       மென்கைதீண் டுதலென எதிர்போய்  

               உய்ந்திட அரிதாய்த் தன்மதம் அழிய  

                       உடன்கொடு கோயிலுட் புகுந்தான்.                                              32 

 

 

               அனைவரும் அரசிருக்கை மண்டபத்தமர்தல் 

 

               பொருந்துமத் தாணி யிடைத்தவி சொன்று  

                       புறமத கோளரிக் குதவி  

               இருந்திறற் சிங்கம் சுமந்தபூ வணைமேல்  

                       இருந்தனன் அரசனப் போதில்  

               அருந்திறல் தானை காவலர் வேந்தர்  

                       அமைச்சர்வெண் கவரிகொள் மாதர்  

               நெருங்கிநிற் கரிய பேரவை இடத்து  

                       நிகழ்ந்தமை ஒன்றெடுத் துரைப்பாம்.                                            33 

 

 

                               (வேறு)

  

          ஓர் ஓலை விண்ணில் நின்று அங்கே விழுதல்  

 

        இந்திரன் எதிர்நின் றாடும் ஏந்திழை காதிற் செம்பொன்  

        சுந்தர ஓலை ஒன்று சோர்ந்தெனச் சுருள்மு டங்கல்  

        அந்தர முகட்டி னின்றும் அரசன்பே ரவையிடத்து  

        வந்தெதிர் விழுந்த தொன்று மானிடர் மருண்டு நோக்க.                                  34 

 

 

          அவ்வோலையை வசவேசருக்கு அரசன் காட்டல் 

 

        நின்றவர் எடுத்து வந்து நெடுங்கையிற் கொடுப்ப வாங்கி  

        வென்றிகொள் மடங்கல் அன்னான் விரித்ததை எழுத்து நோக்கித்  

        தன்தலை யெழுத்தே யென்னத் தானுணர்ந் திலன்ம யங்கி  

        வன்திறல் அமண காலன் மலர்க்கையிற் கொடுத்தான் அன்றே.                                    35 

 

 

             அரசன் அரியணைக்கீழ்ப் புதையல் உண்டெனக்  

                    கூறி நிலத்தைத் தோண்டுதல் 

 

        வாங்கிய முடங்கல் நோக்கி வசவநா யகனிவ் வோலை  

        தாங்குநின் தவிசின் கீழோர் தமனிய வைப்புண் டென்ற  

        தோங்கிய தூண்செய் தோளாய் உனக்குநான் காட்டு வேனென்  

        றாங்கதை அகழ்வித் தானவ் வரசர்கோன் அதிச யிப்ப.                                   36 

 

 

          அரசன் அங்குப் பொற்புதையல் கண்டு மகிழல் 

 

        அகழ்ந்திட நிதிய வைப்பொன் றாடக மலைபி லத்தில்  

        புகுந்திவண் வந்து மெல்லப் புறப்படல் போலத் தோன்ற  

        மகிழ்ந்தனன் அரசர் கோமான் வசவனைக் கண்டபோதே  

        நிகழ்ந்தவொண் பயனு ணர்ந்து நெஞ்சகம் நனிவி யந்தான்.                                       37 

 

 

               அரசன் வசவதேவரைப் போற்றுதல் 

 

        பயிலுநல் வினையெ மக்குப் பயந்தவிவ் வசவ தேவன்  

        கயிலைநன் மலைக்கி ரண்டாங் கடவுளே யென்று சொல்லி  

        இயலுரை மடந்தை பொய்யாள் என்பதைப் புதுக்கி னானச்  

        செயலினை விழியிற் கண்டோர் தெளிந்துநெஞ் சகம கிழ்ந்தார்.                                   38 

 

 

            அரசன் வசவருக்கு அமைச்சுரிமை அளித்தல் 

 

        மந்திரிக் கிழமை நல்கி மரபுளி உரிமை ஆற்றி  

        மைந்தனைப் புரக்குந் தாய்போல் மற்றெனைப் புரத்தி என்று  

        சிந்தனை களிப்ப இன்சொற் செப்பியா யிடையி ருப்ப  

        நந்தியைத் தொடர்பு கொண்டான் நாந்தகத் தடக்கை வேந்தன்.                                     39 

 

 

        விச்சல மன்னன் வசவேசருக்குத் திருமணம் செய்வித்தல் 

 

        பெருந்தகை வசவ தேவன் பெருமைக்குத் தக்க வாறே  

        அருங்கடி மணஞ்செய் வித்தான் அலங்கல்வேல் முருகன் அன்னான்  

        திருந்திய அம்ம ணத்தின் சிறப்புநாம் விரிப்ப தென்கொல்  

        புரந்தனை அன்று தொட்டுப் புகன்றுகல் யாணம் என்றால்.                                 40 

 

 

               நாகாம்பை புதல்வனைப் பெறுதல் 

 

        இவ்வகை கல்யாணத்தின் இருப்பநா காம்பை என்னும்  

        தவ்வைநம் வசவ தேவன் தன்பிர சாதந் தன்னால்  

        எவ்வமில் முத்தி மெய்யோ டிருக்கையின் அளிக்கும் வீர  

        சைவநல் நெறிவ ளர்க்குந் தனையனை யீன்றாள் அம்மா.                                41 

 

 

             நாகாம்பை மைந்தனுக்குப் பெயரிடுதல் 

 

        மைந்தனை ஈன்று வந்து வசவநா மம்பு னைந்தாள்  

        நிந்தையில் கற்பு நங்கை நிகழ்திரு முகங்கள் ஆறும்  

        அந்தமில் தலங்கள் ஆறாய் அறிவித்தற் குலகில் வந்த  

        கந்தனென் றுன்ன அந்நா காம்பைதன் மகன்வ ளர்ந்தான்.                                 42 

 

 

               வசவர் மகவீன்று பெயரிடுதல் 

 

        வீரமா கேசர் என்னும் மென்பயிர் வளர்க்க வந்த  

        மாரிபோல் நிகரில் சென்ன வசவதே சிகனி ருப்ப  

        நேரிலா வசவ நாம நெடுந்தகை மகவொன் றீன்று  

        சீருலாஞ் சங்கமேச தேசிகன் பெயர்பு னைந்தான்.                                        43 

 

 

               வசவதேவர் அடியார்களைப் புரத்தல் 

 

        மொழியினால் நினைவால் வாக்கால் முக்கணான் அடியர் வேண்டிற்  

        றொழிவிலா துதவித் தாய்போல் ஓம்பினன் புறம தத்தோர்  

        வழியெலாம் வழக்கு மாற மலிபுகழ்ச் சைவம் என்னும்  

        பழியிலா வழிந டப்பப் பண்ணினன் வசவ தேவன்.                                              44 

 

 

        உலகில் தோன்றிய சிவகணங்கள் வசவேசர் புகழறிந்து வரல் 

 

        அரனடி யவர்க்குத் தேனு ஆகிய வசவன் சீர்த்தி  

        விரிநிலம் முழுதும் போர்ப்ப வெள்ளிவெற் பினைய கன்று  

        தரைமிசை வந்தி ருந்த தவரெலாம் உணர்ந்து சென்றார்  

        பொருவில்கல் யாணத் திற்குப் போதல்போற் கல்யா ணத்தில்.                                    45 

 

 

             வசவேசர் அடியார்களைப் போற்றுதல் 

 

        பலரொடு வரினும் எள்ளும் படிதனி வரினும் மிக்க  

        நலமொடு வரினும் மேனி நலமற வரினுஞ் சீர்சால்  

        மலைமகள் கணவன் தொண்டர் வரவுகண் ணுறின் எதிர்ந்து  

        நிலமிசை வணங்கி அஞ்சி நின்றுநன் றாற்று நந்தி.                                              46 

 

 

        வேறுபாடு கருதாது சினடியார்களைப் போற்றுதல் 

 

        சாதியும் குறியும் நீத்துச் சரணரைச் சிவனே என்று  

        பாதபங் கயம் இறைஞ்சிப் பத்திசெய் குவனந் நந்தி  

        தீதறு சுவைத்தீங் கண்டாற் செய்தசெங் கரும்பும் வேம்பும்  

        பேதமொன் றுறாமற் சாதி பெயர்விடுத் தறிதல் போல.                                   47 

 

 

                சிவனடியார்களின் பலவகை நிலை 

 

        மாதர்கள் தமைய கன்ற மலிதுற வினரெண் இல்லார்  

        கோதையர் உடன் இருந்துங் கொடுமயல் இலரெண் இல்லார்  

        மேதைகொள் அருச்ச னைக்கு வேண்டுவ முழுதுங் கொண்டு  

        போதுகள் வழாமல் ஈசன் பூசைசெய் பவரெண் இல்லார்.                                  48 

 

 

                    நோன்பு முதலிய நெறிகள் 

 

        விரதங்கள் வேறு வேறு மேவிநிற் பவரெண் இல்லார்  

        பரதஞ்செய் மதர ரிக்கட் பரத்தையர் மனைகள் தோறும்  

        சுரதஞ்செய் பவரெண் இல்லார் தூயநன் னந்தி நாம  

        வரதன் தன் அன்பின் வாழும் வழுவின்மா கேசர் அம்மா.                                 49 

 

 

                       வசவதேவர் செயல் 

 

        தீதுசெய் சமணர் முன்னர்ச் செயற்கருஞ் செய்கை காட்டி  

        வாதுசெய் தவர்செ ருக்கு மாய்வுசெய் திமயம் ஈன்ற  

        சூதுசெய் முலைம டந்தை துணைவனார் தொண்டர்க் கெல்லாம்  

        யாதுசெய் குவனென் றேவல் இயற்றுவன் வசவ தேவன்.                                 50 

 

 

          வசவதேவர் அல்லமதேவரை எதிர்பார்த்திருத்தல் 

 

        உளந்தெளி சரணர் தம்மோ டிம்முறை ஒழுகும் நாளின்  

        அளந்தறி வரிய சோதி அல்லமன் வரவு நோக்கி  

        வளங்கெழு திருக்கல் யாண வளநகர் தனில்வான் நோக்கும்  

        இளம்பயிர் போலி ருந்தான் எம்மையா ளுடைய நந்தி.                                   51 

 

 

ஒன்பதாவது - அக்கமாதேவி உற்பத்தி கதி முடிந்தது

 

கதி 9 - க்குச் செய்யுள் - 532

 


 

10. அக்கமாதேவி துறவு கதி

[இக் கதிக்கண், மாதேவி மங்கைப் பருவம் அடைகிறாள். மங்கைப் பருவமடைந்தும் இன்ப நினைவு சிறிதும் அற்று இறைவனையடைய முயலுகிறாள். கௌசிக மன்னன் திருவுலா வருகிறான். அவன் அழகைக் கண்டு நகரமாதர்கள் மையல்கொண்டு கலங்குகின்றார்கள். கௌசிக மன்னன் மாதேவியைக் காண்கிறான். மாதேவியின் பேரழகு மன்னனை மயக்குகின்றது. மாதேவி இன்னாள் என்பதை ஒருவர் மூலம் உணர்ந்து கொள்கிறான். அவளை எவ்வகையினும் அடைய வேண்டுமென்று முடிவு செய்கிறான். மாதருங் குருவும் வலிந்து பலங் காட்டினால் நன்மை செய்யார்கள்; நயத்தினாலேதான் காரியத்தை முடிக்க வேண்டுமென்று துணிகிறான். மாதர்கள் சிலரை நிருமலன்பாற் சென்று மாதேவியை மணம் பேசுமாறு அனுப்புகிறான். நிருமலன் தக்கவரல்லார்க்கு மகட் கொடை வழங்கல் தகுதியன்று என்று மறுத்துரைக்கின்றான். பின்னர் மாதேவியிடமே சென்று பேசுமாறு அனுப்பிவிடுகிறான். மாதேவி அரசன் ஒரு சூள் உரைக்க வேண்டும் என்கிறாள். மணம் பேசவந்த மாதர்கள் மாதேவியும் மன்னனிடம் காதல் கொண்டிருக்கிறாளென்று எண்ணி அரசனிடஞ் சென்று சொல்லுகிறார்கள். அரசன் மாதேவியிடம் வருகிறான். தன்னை வலிந்து தழுவாமலிருப்பதற்குச் சூள் உரைக்குமாறு மாதேவி கேட்கிறாள். அரசனும் அவ்வாறே சூண் மொழி புகலுகிறான். மாதேவி அரசனுடன் அரண்மனையை அடைகிறாள். தனியிடத்தில் மாதேவியைக் கண்ட அரசன் தன் எண்ணத்தை நிறைவேற்றுமாறு வேண்டுகிறான். மாதேவி சிவபூசை செய்த பிறகு தன்னன வந்து சேருமாறு கூறுகிறாள். அரசன் ‘நான் உங்கள் இறைவனை வழிபடேன்’ என்கிறான். ‘அப்படியானால் நான் உன் தோளைத்தொடேன்’ என்கிறாள் மாதேவி. பின் தன் ஆடையணிகளை நீக்கிவிட்டுத் துறவுக் கோலம் பூண்டு தெருவிற் செல்கிறாள். தாய் தந்தையர் வந்து பார்த்து நம் மகள் தக்கதே எண்ணினாள் என்று எண்ணிச் செல்லுகிறார்கள். நகர மாந்தர்கள் மாதேவி நிலை கண்டு வருந்துகிறார்கள். மாதேவி அல்லம தேவரைத் தேடிக்கொண்டு காடு மலை கடிநகர் முதலிய இடங்களிற் சுற்றுகிறாள் என்னுஞ் செய்திகள் விரிவாகக் கூறப் பெறுகின்றன.]

 

 

                            நூலாசிரியர் கூறல் 

 

               தன்னைக் காண வெள்கணை பாயத் தடுமாறும்  

               மன்னைக் காலுஞ் சோறென விட்டருள் மாதேவி  

               மின்னைப் போலும் அல்லம தேவன் விளையாடும்  

               கொன்னைக் கானில் தேடிஅ டைந்தமை கூறுற்றாம்.                                     1 

 

 

               மாதேவி மங்கைப் பருவம் அடைதல் 

 

        கொங்கைப் பொறையைக் கொண்டு மருங்குற் கொடிவாட  

        அங்கைக் குடநெய் பெய்தழல் என்ன அழகெய்தி  

        நங்கைக் கிணைகண் டிலமுல கெங்கணும் நாமென்ன  

        மங்கைப் பருவம் நண்ணினள் முற்றுணர் மாதேவி.                                             2 

 

 

             மாதேவி இறைவனையடைய முயலுதல் 

 

        வாதித் தொன்றோ டொன்றெழல் போல்முலை வந்துற்றும்  

        பேதைப் பெண்போற் காமம் உளத்திற் பிறவாமல்  

        பாதிப் பெண்மே னியனெனும் இன்பப் பதிதன்னைச்  

        சாதித் தெய்துஞ் சாதன மோடு தலைப்பட்டாள்.                                         3 

 

 

         மாதேவி இறைவனையடையும் பருவத்தினள்  

                            எனல் 

 

        தன்னை அறிந்திடை ஈடற முக்கண் தலைவன்பால்  

        பின்னம் அறும்படி மேவு பெரும்பரு வப்பெண்ணைக்  

        கன்னல் நெடுஞ்சிலை மன்மதன் வேரிக் கணைபாயும்  

        மன்னும் இளம்பரு வத்தினள் என்பர் மறைப்புற்றார்.                                             4 

 

 

          மாதேவி மாதவம் புரிந்துகொண்டிருத்தல் 

 

        வண்டு படாதலர் சண்பக மேயென மாறாகிப்  

        பண்டர னோடமர் செய்மதன் வண்டு படாமேனி  

        கண்டிடும் ஒண்சுட ரேயெனு மாறு கவின் பொங்க  

        ஒண்தவ நின்மலன் மாதமர் நாள்களின் ஓர்நாளில்.                                               5 

 

 

               கௌசிகமன்னன் உலாவருதல் 

 

        வீரங் குறைவில் மும்மத வேழம் மிசைகொண்டு  

        தாருந் தோளும் பொங்க மதிக்குடை தன்மேலா  

        மாரன் கரிமேல் வந்தனன் என்ன மணிப்பொற்றேர்  

        ஊருந் தெருவிற் கௌசிக மன்னன் உலாவந்தான்.                                               6 

 

 

                    உலாவருஞ் சிறப்பு 

 

        இயங்கள் தரங்க நெடுங்கடல் என்ன எழுந்தார்ப்ப  

        உயங்கு மருங்குல் மடந்தையர் பாடி உடன்போத  

        வயங்கள் இவர்ந்திள மைந்தர் மருங்கின் அடுத்தேகப்  

        புயங்கள் அலங்கல் இலங்க விசும்பிறை போல்வந்தான்.                                  7 

 

 

        கௌசிக மன்னனைக் கண்ட மங்கையர் காம  

                          மயக்கம் 

 

        மாணும் நெடுங்கரி மீது புரந்தனில் வந்தானைக்  

        காணும் மடந்தையர் ஏதும் உணர்ந்திலர் காமத்தால்  

        நாணும் இழந்தனர் தூசும் இழந்தனர் நன்றாகும்  

        பூணும் இழந்தனர் ஆவி இழந்திலர் போனார்கள்.                                        8 

 

 

           மாதர்கள் வண்டுகளை நோக்கிக் கூறல் 

 

        நல்ல மதந்தான் ஒண்கவு ளின்பால்நன் றுண்ணச்  

        செல்லு சுரும்பே வெங்கரி யின்தாழ் செவியூடு  

        மெல்ல நடந்தே போவென மெள்ள விளம்பென்று  

        சொல்லி மறங்கூர் வேலன கண்ணார் துயர்கின்றார்.                                              9 

 

 

          கௌசிகமன்னன் மாதேவியைக் காணுதல் 

 

        கோதையர் மாலால் இவ்வகை நோவக் கொடிமாட  

        வீதியின் ஊடு வருந்திறல் மன்னன் வினையில்லா  

        மாதவன் ஆகும் நின்மல னுக்கோர் மகளாகும்  

        காதொடு காதுங் கண்மட மாதைக் கண்டானே.                                           10 

 

 

         கௌசிகமன்னன் காமன் கணையால் கலங்குதல் 

 

        கண்டன னோஇலை யோஎனும் முன்னங் கழைவாங்கிக்  

        கொண்டனன் வாளி சொரிந்தனன் ஓடிக் கொடுமாரன்  

        உண்டிலை யோவென ஆவி தளர்ந்தே உம்பல்மேல்  

        மண்டலம் ஆளும் மன்னன் இருந்தான் வசமற்றே.                                              11 

 

 

           இம்மாது ‘யாரோ?’ என்று எண்ணுதல் 

 

        கொங்கைப் பாரத் தான்மலர் வாசங் கூடாமல்  

        இங்கிப் பாரிற் போது மலர்க்கண் எழில்மாவோ  

        மங்கைக் கோலங் கொண்டு நிலத்தில் வருமின்னோ  

        அங்கைக் காந்தட் பொற்றொடி யாரோ அறியேனே.                                               12 

 

 

           கௌசிகமன்னன் அடைந்த காமப்பெருக்கு 

 

        வஞ்சி நடந்தே என்னெதிர் வந்தே மயல்செய்தாள்  

        நெஞ்சு தளர்ந்தேன் மாலின் விழுந்தேன் நிலைகாணேன்  

        அஞ்சலை என்றே இன்றணை யாளேல் அனல்காணும்  

        பஞ்சு படும்பா டங்கசன் அம்பாற் படுவேனே.                                            13 

 

 

        ‘மாதேவி யார்?’ என அறிந்துவர ஒருவனை  

                       விடுத்தல் 

 

        என்ன நினைந்தே மன்னவன் வெந்தீ இழுதாகி  

        முன்னர் மருங்கே நின்ற ஒருத்தன் முகநோக்கிப்  

        பொன்னென வந்தவ் வாய்தலின் நின்று புறப்பட்ட  

        கன்னி அணங்கார் நீயறி கென்றான் காமுற்றே.                                          14 

 

 

          மன்னன் மாதேவியை அறிந்து ‘இவளை  

            எவ்வாற்றானும் கொள்வேன்’ எனல் 

 

        ஓடி அறிந்தே அன்னவன் வந்தங் குரைசெய்ய  

        வாடு மருங்குல் மங்கையை இன்னான் மகளென்று  

        நீடிய வெந்துயர் மன்னன் அறிந்தெந் நெறியாலும்  

        கூடுவன் இந்த அணங்கினை என்று குறித்தேகி.                                          15 

 

 

        மாதேவியைத் தூதினால் அடைய எண்ணுதல் 

 

        கோயிலின் மேவி இருந்துயர் ஞானக் குறிகூறும்  

        தூயவ ராகிய ஆரியர் தாமுஞ் சுடர்செம்பொன்  

        சேயிழை யாரும் வலிந்துறில் இன்பு செயாரென்று  

        வாயிலி னாலணை வேனென மன்னன் மனத்தெண்ணி.                                   16 

 

 

                            (வேறு)

  

               மன்னன் நிருமலனிடம் மணம் பேச  

                    மாதர்களை அனுப்பல்  

 

        தூது வல்லநன் முதுக்குறை மாதரைத் துணிந்து  

        நீதி வல்லவன் நிருமலன் மகள்தனை நீவிர்  

        தீதில் எம்மனைக் கிழத்தியாம் படியுரை செய்து  

        போது மின்களென் றேவினன் வியனிலம் புரப்பான்.                                              17 

 

 

            நிருமலன் பெண்கொடுக்க மறுத்தல் 

 

        ஐய அன்னதே செயகுவம் எனப்புகன் றகத்தில்  

        பைய வந்துநல் நிருமலன் திருமுகம் பார்த்து  

        வைய மன்னவன் கருத்தினை வகுத்தனர் மறுத்துத்  

        துய்ய மங்கைமர் எமக்கடா திதுவெனச் சொன்னான்.                                             18 

 

 

          ‘தானாக வந்த திருமகளை நீர் மறுக்கிறீர்’ 

                            எனல் 

 

        வேந்தன் மாமனை நும்மகள் ஆயினவ் வேந்தன்  

        சார்ந்த வாழ்வெலாம் நுமவென அறிகிலீர் தானே  

        போந்த ஓர்திரு மகள்வர வினைப்புறம் போக்கும்  

        மாந்தர் யாருளர் என்றுமங் கையர்சொல வகுப்பான்.                                             19 

 

 

        ‘தகுதியற்றார்க்குப் பெண்கொடுத்தல் தகா’ தெனல் 

 

        இம்மை சேர்பயன் கருதியே தகாதவர் இடத்தில்  

        கொம்மை வார்முலை மகட்கொடை நேர்ந்தவக் கொடியார்  

        அம்மை ஆழ்நிரை யத்திடை வீழ்ந்தனர் அழுந்தித்  

        தம்மை நோக்குநர் ஒருவரும் இன்றியே தளர்வார்.                                              20 

 

 

         தீயன செய்தலினும் உயிர்விடதல் நன்றெனல் 

 

        தமக்க டாதது செய்துயிர் வாழ்வது தன்னில்  

        சுமைக்க டாதமெய் விடுத்தலே நன்றெனச் சொல்வர்  

        எமக்க டாதது புகன்றனிர் மங்கைமீர் இச்சொல்  

        நுமக்க டாததென் றியம்பலும் மங்கையர் நுவல்வார்.                                             21 

 

 

               அரசன் ஏற்றல் தகாதெனல் 

 

        உறையில் வாளொடு மாவழங் குறுவனத் தோடி  

        மறவன் ஓர்பொருள் தருகென இரத்தலை மானும்  

        இறைவன் வாழ்குடி தன்னிலொன் றொருபொருள் இரத்தல்  

        அறவ னாகிய நீயிதை அறிந்திலை அந்தோ.                                                    22 

 

 

        நிருமலன் மாதர்களைத் தன் மகளிடம் அனுப்புதல் 

 

        என்று மாதரார் கூறலும் நிருமலன் எங்கள்  

        மன்றல் வார்குழல் பேதையோ வல்லள் நும்மனத்தைச்  

        சென்று கூறுமின் அவள்மனம் இசைந்துரை செய்யின்  

        நன்று போமினென் றியம்பினன் அவர்மனம் நயந்து.                                             23 

 

 

               மாதர்கள் மாதேவிபாற் கூறுதல் 

 

        மங்கை பாலடைந் தறைகுவர் மதன்வலி மாயக்  

        கொங்கை மாமுகிழ்ப் பூங்கொடி நீயருள் கூர்ந்தே  

        எங்கள் கோமகன் ஆருயிர் நிறுத்தினை என்னில்  

        அங்கண் மாநிலத் துயிர்க்கெலாம் அன்னையா குவையால்.                                24 

 

 

          அரசன் ஒரு சூள் உரைப்பின் நல்லது என்றல் 

 

        என்ன ஓதலும் நிருமலன் ஈன்றருள் என்தாய்  

        மன்ன னான்மனை துறக்குமோர் சூழ்ச்சியை மதித்துப்  

        பொன்ன னீர்அர செனக்கொரு சூளினைப் பொருந்திப்  

        பன்னு மாயினீர் பணித்தது நன்றெனப் பகர்ந்தாள்.                                               25 

 

 

         மாதர்கள், அரசனிடஞ் சென்று செய்தி கூறல் 

 

        தூது சென்றவர் பொற்கொடி சொல்லிய சொல்லால்  

        காதல் கொண்டனள் என்றுளந்  திரிந்துதாய் கருதி  

        மாது நின்பெருங் கருணைசெய் வதற்கெங்கள் மன்னன்  

        யாத றைந்தனை அதுசெயத் தக்கவன் என்று.                                                   26 

 

        (1 - [பாடம்] தெரிந்து.) 

 

 

            மன்னன் மாதேவியிடத்திற்கு வருதல் 

 

        உள்ளம் ஆர்வமோ டேகியம் மடந்தையர் உரைப்ப  

        வள்ளல் ஆகிய மன்னவன் மனம்நனி மகிழ்ந்து  

        தெள்ளும் ஆரமு தனையவள் இருந்துழிச் சென்றான்  

        எள்ளு காமநோய் கொண்டவன் என்செய இசையான்.                                            27 

 

 

             மாதேவியைக் கண்டு மன்னன் கருதுதல் 

 

        வல்லி கொங்கையைப் பொன்மலை என்னவே மதியான்  

        இல்லு றுங்குடம் ஆகவே எண்ணினன் நுதலை  

        வில்வெ னும்படி நினைத்தனன் வெண்பிறை என்னான்  

        சொல்லு வன்றனக் ககப்படு மடந்தையாய்த் துணிந்து .                                          28 

 

 

 

        அரசனை உறுதிமொழி கூறும்படி மாதேவி கேட்டல் 

 

        அருள்செய் தென்னைநீ அளித்திடும் அதற்குநான் செய்வ  

        துரைசெய் நானது செய்வனென் றரசர்கோன் உரைப்ப  

        வரைசெய் தோளினாய் என்னைநீ வலிந்துபுல் லாமைக்  

        கொருசொல் உண்மைசொல் என்றனள் ஒருவுடை ஓதுங்கி.                                       29 

 

 

           அரசன் உறுதிமொழி கூறத் தொடங்குதல் 

 

        நின்க ருத்திசை வாலன்றி நின்னையான் வலியேன்  

        என்ப தற்கொரு சூளுரைக் குவன்முகில் எழுந்த  

        மின்கொ டிச்சிறு மருங்குலாய் கேளென வெள்வேல்  

        புன்பு கர்க்கருங் கடாக்களிற் றரசர்கோன் புகல்வான்.                                              30 

 

 

                          (வேறு)

  

               விருந்தோம்பாதான் முதலியோர்  

 

        வந்தநல் விருந்தி ருப்ப மனையினுற் றருந்து வானும்  

        பந்தியின் உணவு வேறு பண்ணுபா தகனுந் தாயும்  

        தந்தையும் உணவுண்ணாத சழக்கனும் உச்சிப் போதின்  

        நொந்தவர் தமைநோக் காமல் நுகர்ந்திடு கொடியன் தானும்.                                      31 

 

 

           விலக்கப்பட்ட உணவுண்போன் முதலியோர் 

 

        நிந்தைசெய் உணவி னானும் நிருமலன் பூசை யின்றி  

        வந்துண வருந்து வானும் மறுத்தவூன் நுகர்விப் பானும்  

        தந்தநல் வினையாற் செல்வஞ் சார்ந்தவர் தம்மைக் கண்டு  

        சிந்தனை பொறாத ழுங்கித் தீர்வினுண் மகிழ்வான் தானும்.                                       32 

 

 

         கன்றுக்குப் பால் விடாமல் கறப்பவன் முதலியோர் 

 

        கன்றுண விடாமல் ஆன்பால் கறந்துகொள் பவனுஞ் செய்த  

        நன்றிகொல் பவனுங் கோடி நடுநிலை தவறு வானும்  

        கொன்றுயிர் பதைப்ப நோக்குங் கொடியனும் போர்க் களத்தில்  

        தன்தலை வனைவி டுத்துச் சாய்ந்துபோம் மடமை யானும்.                                      33 

 

 

        அடைக்கலம் புகுந்தோரைக் காப்பாற்றாதவன் முதலியோர் 

 

        அடைக்கலம் எனவந் தானை அளித்திடா தகற்று வானும்  

        கொடுக்குதும் எனவு ரைத்துக் கொடானுமொண் கொடைவி லக்கி  

        விடுக்குறு மவனும் பாவ வினையிடத் துதவி யாகி  

        நடக்குறு மவனுந் தேர்ந்து நட்டபின் வஞ்சிப் பானும்.                                            34 

 

 

          குரவர்மொழி தவறும் கொடியன் முதலியோர் 

 

        குரவர்தம் உரைக டக்குங் கொடியனுந் துறந்து ளார்தம்  

        வரவெதிர் கண்டெ ழாத மறவனும் அறிந்தான் போன்று  

        கரவினில் அருநூல் கற்குங் கயவனும் புதியர் ஆகி  

        இரவினில் வந்த நல்லோர்க் கிடங்கொடா தகற்று வானும்.                                35 

 

 

                    புறங்கூறுவோன் முதலியோர் 

 

        முன்புகழ்ந் துரைத்துப் பின்னர் முறுவல்செய் திகழ்வான் தானும்  

        தன்பெருங் கிளைதல் கூர்ந்து தளர்வுற வாழ்கின் றானும்  

        அன்புகொண் டொருவன் வைத்த அரும்பொருள் கவர்கின் றானும்  

        துன்புறுந் தொழில்செய் வித்துச் சொல்பொருள் இலையென்பானும்.                                36 

 

 

           கற்பிலா மனையாளுடன் வாழ்வோன் முதலியோர் 

 

        கற்பழி மனைவி யோடு கலந்திருப் பவனும் மற்றோர்  

        பொற்புடை மனைவி தன்னைப் புணர்வதற் கெண்ணு வானும்  

        சொற்பொருள் உணர்த்தி னானைத் தொழஉளம் நாணு வானும்  

        விற்பன அலாத விற்று மெய்வளர்த் தழிகு வானும்.                                             37 

 

 

           வயல் முதலிய இடங்களில் மலசலங் கழிப்போன்  

                            முதலியோர் 

 

        நலமலி வயலில் ஆற்றிற் நந்தனத் தால யத்தில்  

        சலமலம் ஒழிப்போன் தானும் தனிவழி விலக்கு வானும்  

        விலைமொழி பொய்த்து விற்கும் வெய்யவா ணிகனும் தாழ்ந்த  

        குலமிலி தன்குற் றேவல் கூலிகொண் டியற்று வானும்.                                          38 

 

 

        நட்புக்காலம் அறிந்த மறைபொருளைப் பகைக்காலம்  

                  வெளியிடுவோன் முதலியோர் 

 

        உறவுசெய் தறிந்த சொல்லை உவர்த்துழிக் கூறு வானும்  

        பிறர்பிழை தனையே நாடிப் பிறரொடு பேசு வானும்  

        முறைவழு வுறுகொ டுஞ்சொல் முனிவிடை மொழிகு வானும்  

        அறிவழி மனைவி சொல்லின் வழிநிற்கும் அறிவி லானும்.                                       39 

 

 

              நட்பினரைப் பிரிப்போன் முதலியோர் 

 

        கலந்தவர் தமைப்பி ரித்துக் கலகங்கண் டிடவல் லானும்  

        புலந்தரு நூலின் இல்லாப் பொருளினைக் கூறு வானும்  

        நலந்தனை அழுக்கா றெய்தி நகைத்திகழ கிற்போன் தானும்  

        மெலிந்தவர் இடத்து மிக்க வெகுளியைப் பெருக்கு வானும்.                                      40 

 

 

          பிறர் பொருளால் அறஞ்செய்வோன் முதலியோர் 

 

        புண்ணியம் பிறர்பொ ருட்குப் புரிபவன் தானும் இந்த  

        மண்ணிடை இன்பத் திற்கா மறுமைசெய் தொழில்வி டுக்கும்  

        தண்ணிய அறிவி லானும் தவத்தரை இகழ்கிற் பானும்  

        பண்ணிய வினையில் என்றும் பாவமே பயில்கின் றானும்.                                       41 

 

 

           இம்மொழி கேட்ட மாதேவி அரசனுடன் செல்ல  

                           உடன்படல் 

 

        ஆவனான் உண்மை நீயா தறைந்தனை அதுசெய் தன்றி  

        மேவுவேன் ஆயி னென்று வேள்விரும் பழகன் கூறக்  

        காவிநேர் விழிமா தேவி கருத்திசைந் தற்றே ஆயின்  

        போவம்வா என்று சொன்னாள் புரவலன் உவகை பூத்தான்.                                       42 

 

 

                மாதேவி அரண்மனையை அடைதல் 

 

        கோயிலின் முன்னர்ச் சென்றான் கொற்றவன் சிவிகை ஏற்றி  

        ஆயிழை மடந்தை நல்லார் அருகுசூழ் வுற்றுச் செல்லப்  

        போயினள் அரசர் கோமான் புக்குழிப் புக்காள் ஒள்வேல்  

        சேயரி நெடுங்கண் செவ்வாய்த் திலகவா ணுதல்மா தேவி.                                       43 

 

 

        மாதேவியைத் தனியே கண்ட மன்னன் வேண்டுதல் 

 

        மடந்தையைத் தனிக்கண் டங்கி மருவிய அரக்கே போல  

        உடைந்துநெக் குருகி ஆற்றா உள்ளமோ டிளம்பூங் கொம்பே  

        கடந்திடற் கரிய காமக் கடல்கடந் தேறக் கொங்கைக்  

        குடந்தரத் திருவு ளத்திற் கோடியென் றரசி றைஞ்ச.                                              44 

 

 

                       மாதேவி கூறல் 

 

        காவலன் காம மிக்க கழிபடர் கிளவி கண்டு  

        பாவைபுன் முறுவல் செய்து பண்பெனுந் தொடரால் யாப்புண்  

        டோவல்செய் யாது நிற்கும் ஒருகளி றனையாய் யான்சொல்  

        ஏவல்செய் திட்ட பின்னர் என்னொடு பேசு கென்றாள்.                                    45 

 

 

        மாதேவி அரசனைச் சிவபூசை செய்துவருமாறு கூறல் 

 

        ஏதுநான் செய்வ தன்ன தியற்றுவன் அறைதி என்ன  

        ஓதினான் அரசன் ஓத ஒண்தொடி அயன்மால் தேடும்  

        சோதிமா சிவலிங் கத்தைத் தூயையாய்க் கரபீ டத்தில்  

        போதினால் அருச்சித் தென்னைப் பொருந்துதி பின்னர் என்றாள்.                           46 

 

 

         மாதேவி கூறிய மொழி, பாலைநிலத்தில் நீருண்ணாது  

                       தடுத்ததை ஒக்கும் எனல் 

 

        எல்லையில் காமம் பொங்க இளமுலை ஞெமுங்கத் தோளால்  

        புல்லுவன் என்றெ ழுந்த புரவலன் தனைத்த டுத்துச்  

        சொல்லிய தன்னம் அன்னாள் சுரத்துள்நீர் முகந்து வாயில்  

        செல்லுமொண் கரத்தை ஓடிச் சென்றுபற் றுதலை ஒக்கும்.                                       47 

 

 

         அமண அரசன் உள்ளத்தில் சிவநேயம்வரல் அரிதெனல் 

 

        முகையிடை முருகுண் டாயின் முளையிடை விளைவுண் டாயின்  

        மகவிடை மதன இன்பம் வருவதுண் டாயின் சைவப்  

        பகையொடு மருவி நின்ற பார்த்திபன் தனது ளத்திள்  

        உகைவிடை அமலற் போற்றும் ஒழுக்கமும் வந்து நண்ணும்.                                     48 

 

 

        அரசன் ‘யாம் சிவபூசை செய்யோம்’ என, மாதேவி  

               ‘உம் தோள்களைத் தொடேம்’ எனல் 

 

        செப்புறுஞ் சூள்நி னைந்து தீண்டிலன் அரசன் இன்று  

        முப்புரஞ் சீறும் உங்கள் முதல்வன்பூ சனைதான் யாங்கள்  

        எப்பொழு துஞ்செய் தக்க தன்றென இணையி லாநின்  

        துப்புறு தோளும் யாங்கள் தொடுவதன் றெனப்பு கன்றாள்.                                 49 

 

 

        அரசன் சும்மா இருக்க, மாதேவி அவனைவிட்டு நீங்க  

                               எண்ணல் 

 

        மட்டவிழ் குழல்ம டந்தை வாயுரை கையும் வாயும்  

        கட்டிய தெனவ டங்கிக் காமமிந் தனமில் தீப்போல்  

        கெட்டிட வறிதி ருந்தான் கிளர்மணித் தூண்செய் தோளான்  

        நெட்டிலை அயில்வேற் கண்ணாள் நீத்தனள் போக எண்ணி.                                      50 

 

 

           மாதேவி, ஆடை அணிகளை நீக்கிக் கூந்தலை  

                          விரித்திருத்தல் 

 

        துளவெனும் அரசு நெஞ்சத் தொன்னகர் கொளவ வாவாம்  

        இறைவன தாணை எல்லாம் இரிதல்போற் பூண்கள் யாவும்  

        அறுவையும் அகற்றி ஓதி அவிழ்த்துவார் மைக்கு ழம்பின்  

        மறைவுறு மணிப்பொற் பாவை போலுடன் மறைய விட்டாள்.                                    51 

 

 

          மாதேவி அரண்மனை விட்டுத் தெருவிற் செல்லல் 

 

        மருளடைந் தனள்கொல் என்று மருண்டுமன் னவனி ருப்பத்  

        தெருளடைந் தங்கை கொண்ட சிவலிங்கத் தொடுநி னைந்த  

        பொருளடைந் தெனம கிழ்ச்சி பொங்கமன் னவனை நீங்கி  

        அருளடைந் தொழுகு கண்ணாள் அணிமறு கூடு சென்றாள்.                                      52 

 

 

        தாய் தந்தையர் வருந்த மாதேவி அவர்கட்கு உரைத்தல் 

 

        அன்னையும் பிதாவும் கேளா அருமகட் கடுத்த தென்னென்  

        றுன்னிவந் தழுங்க நீவிர் உம்மகள் என்று மாழ்கி  

        இன்னல்கொண் டிரங்கன் மின்போம் என்னைநான் அறியத் தேடித்  

        தன்னிருங் கருணை செய்யுஞ் சற்குர வனைச்சார் கிற்பேன்.                                      53 

 

 

         மாதேவி தக்கதே எண்ணினாள் என அவள்தாய்  

                       தந்தையர் கருதல் 

 

        என்றவள் அவரை நோக்கா தேதிலர் போல கன்று  

        சென்றனள் நிரும லப்பேர்ச் செல்வனுஞ் சுமதி தானும்  

        நன்றிவள் நினைந்த தென்று நம்முடை மரபிற் கெல்லாம்  

        நின்றிடும் புகழென் றெண்ணி நிறுவினர் தங்கள் நாமம்.                                  54 

 

 

                    நகர மாந்தர்கள் வருந்துதல் 

 

        கண்டவர் எல்லாம் நெஞ்சங் கரைந்துகக் கண்ணீர் மல்கத்  

        திண்திறல் அரசன் பின்னர்ச் சிவிகையூர்ந் தலர்பூங் கோயில்  

        ஒண்திரு மகள்போற் சென்ற ஒண்தொடி இப்பேய்க் கோலம்  

        கொண்டிவண் போகா நின்ற கொள்கையே தறியேம் என்பார்.                                      55 

 

 

        தாய் தந்தையர் எவ்வாறு எவ்வாறு வருந்துவரோ எனல் 

 

        மங்கையை இவணம் கண்டேம் வயிறெரி தவழ நின்றேம்  

        இங்கிவள் தன்னை ஈன்றார் என்படு வாரோ என்பார்  

        மங்கல வடிவங் கண்டு மகிழ்ந்தகண் இதுவுங் கண்டு  

        பொங்குறு துயரங் கூரப் புரிந்ததெப் பாவம் என்பார்.                                             56 

 

 

           மாதேவி அல்லமரைத் தேடிச் செல்லுதல் 

 

        இன்னணம் நகரம் எல்லாம் இரங்கமா தேவி யம்மை  

        கன்னலும் அமுதுந் தேனுங் கைப்பப்பே ரின்ப நல்கும்  

        தன்னிகர் குருகு கேசன் தன்னையே தேடிச் சென்றாள்  

        மென்னிழல் விரும்பி மிக்க வெயில்சுடச் செல்வார் போல.                               57 

 

 

          காடு மலை முதலிய இடங்களிலும் தேடிச் செல்லல் 

 

        அடவிகள் தொறும் அடைந்தும் அடுக்கல்கள் தொறுமி வர்ந்தும்  

        கடிநகர் தொறும்பு குந்தும் காமனை வென்ற வல்லி  

        மடிவறு மனத்தில் அன்பு வளர்தரக் கருணை யாலெம்  

        குடிமுழு தடிமை கொள்ளும் குரவனைத் தேடு கின்றாள்.                                 58 

 

 

பத்தாவது - அக்கமாதேவி துறவு கதி முடிந்தது

 

கதி 10 - க்குச் செய்யுள் - 590

 


 

11. கொக்கிதேவர் கதி

[இக் கதிக்கண், அல்லமதேவர் பலவிடங்களிலுஞ் சுற்றிக்கொண்டிருக் குங்கால் ஓரிடத்தில் ஒரு மலர்ப்பொழில் அருமையும் பெருமையுஞ் செறிந்ததாக அமைந்து விளங்குகின்றது. அம்மலர்ப் பொழிலைக் கொக்கிதேவர் என்பவர் காவல் புரிந்துகொண்டிருக்கிறார். அக் கொக்கிதேவருக்கு அல்லமதேவர் மெய்ப்பொருளை யுணர்த்த எண்ணுகிறார். கொக்கிதேவரும் அல்லமதேவரும் எதிர்ப்பட்டு உரையாடுகிறார்கள். அல்லமதேவர் வறிதே சுற்றிக்கொண்டிருக்கிறார் என்று எண்ணிய கொக்கிதேவர் அல்லமதேவருக்கு அறிவுரை கூறத் தொடங்குகிறார். அல்லமதேவர் கொக்கிதேவருக்கு மெய்ப்பொருளை யுணர்த்துகிறார். அல்லமதேவர் அருளுரைப்படி நிலத்தை யகழ்ந்த கொக்கிதேவர் ஆங்கொரு சிவயோகியைக் கண்ணுறுகிறார். அச்சிவயோகியின் கையிலிருந்த சிவக்குறி அல்லமதேவரின் கையை அடைகிறது. அல்லமதேவரைக் கொக்கிதேவர் மிகவும் புகழ்ந்து போற்றுகிறார். உலகத்தினர் அனைவருக்கும் மெய்யறிவு வழங்குமாறு வேண்டிக்கொள்ளுகிறார். தாம் சிவயோகத்தில் அமருகிறார். அல்லமதேவர் அவ்விடத்தை விட்டு நீங்கி வேறிடஞ் செல்லுகிறார் என்னுஞ் செய்திகள் கூறப்பெறுகின்றன.]

 

 

                            நூலாசிரியர் கூறல் 

 

               அருள்செயும் அல்லமன் அநிமி டப்பெயர்க்  

               குரவனை மெய்யொடு கலந்து கொண்டுதான்  

               பரவுறும் அடியர்தம் பவந்து றந்துபோய்த்  

               திரிதரு நிலையினைத் தெரிந்து செப்புவாம்.                                             1 

 

 

                 அல்லமதேவர் பலவிடங்களுக்குஞ்  

                               செல்லல் 

 

               சீர்நிலை அல்லம தேவன் சூல்கொளும்  

               கார்நினை மயிலெனக் கருதித் தன்னையே  

               பார்நில மிசையமர் பத்தர் தம்மையாள்  

               ஓர்நினை வொடுநடந் துலாவு நாள்களுள்.                                               2 

 

 

               அல்லமதேவர் செல்லும் வழியில் ஒரு  

                       பொழிலைக் காண்டல் 

 

               ஒன்றொரு நாளொரு திசையின் ஓங்கருள்  

               குன்றனை யானொரு கோலங் கொண்டுதான்  

               சென்றனன் அவனெதிர் சிறந்து தோன்றிற்று  

               மன்றல்மென் மலரிள வனமொன் றாயிடை.                                            3 

 

 

                 அம்மலர்ப் பொழில் சிறந்ததெனல் 

 

               சிறுபொழு தைந்தினும் திரிவி லாதபேர்  

               அறுபொழு தினுமிதழ் அவிழ்ந்து தேன்சொரி  

               நறுமலர் நிறையுமந் நந்த னத்தினைப்  

               பெறின் மக பதிவளம் பெறவு வந்திடார்.                                        4 

 

 

               அப்பொழிலில் வரும் தென்றற் காற்றின்  

                               சிறப்பு 

 

               படிமிசைத் தவம்பல பயின்று நொந்தவர்  

               வடதிசைக் கயிலையின் மருவ வேண்டலிக்  

               கடிமலர்ப் பொழில்மணங் கலந்த தென்றல்வந்  

               துடல்மிசைத் தவழ்தரல் ஒன்று முன்னியே.                                             5  

 

 

                  அப்பொழில் வண்டுகளின் சந்தை  

                               போன்றது 

 

               கண்ணிறை மலர்பல கண்டு கண்டுபோய்  

               உண்ணுறு நறுமது கொளவு ழன்றிடும்  

               எண்ணறும் அளியினம் இரையுந் தன்மையால்  

               தண்ணுறு நந்தனம் வண்டின் சந்தையே.                                        6 

 

 

               அப்பொழிலைக் காப்பவர் கொக்கிதேவர்  

                               எனல் 

 

               நறுமலர் நிறையுமந் நந்த னத்தினைக்  

               குறைவற அளிப்பவன் கொக்கி தேவனென்  

               றறைதரு பெயரினான் அனையன் ஆயிடைத்  

               திறமுறு செயலினைச் செய்து நின்றனன்.                                               7 

 

 

                       அல்லமர் கொக்கிதேவர்க்கு  

                   மெய்ப்பொருளுணர்த்த எண்ணல் 

 

               நின்றவன் தனையருள் நினைந்த நெஞ்சொடு  

               சென்றனன் அல்லம தேவன் கண்டிவன்  

               புன் தொழில் விடவகும் பொருளு ணர்த்துவன்  

               என்றரு கடைந்தைய சரணம் என்றனன்.                                        8 

 

 

                   கொக்கிதேவர் அல்லமரின் பெயர்  

                          முதலியன வினவல் 

 

               தானெதிர் நிமலனைச் சரணெ னத்தொழாத்  

               தேனலர் வனத்தனின் செயலி யாதுநின்  

               மேனியின் பெயரெது விளம்பு கென்றலும்  

               ஞானநல் விளக்கனான் நவிறன் மேயினான்.                                            9 

 

 

                இருவரும் தத்தம் பெயர்களைக் கூறுதல் 

 

               பத்தர்தம் மனைதொறும் பத்திப் பிச்சைகொண்  

               டெத்திற வினையுமின் றிருப்பன் அல்லமன்  

               உத்தம என்பெயர் பெயரு னக்கெனென்  

               றத்தனும் வினவத்தன் பெயர் அறைந்தனன்.                                            10 

 

 

                  கொக்கிதேவர் தொழிலற்றிருப்பவன்  

                             வீணன் எனல் 

 

               அருங்குரு லிங்கசங் கமத்திற் காகமெய்  

               வருந்துறு தொழிலற வறிதி ருப்பவன்  

               அருந்துறு பிணமென அறையும் மாற்றநீ  

               தெரிந்திலை யோவெனச் செப்பல் மேயினான்.                                   11 

 

 

                               (வேறு)

  

                  மறுமைப் பயன் தேடாத உடம்பால்  

                           பயனின்றெனல் 

 

               எய்தற் கரிய யாக்கைதனக்  

                       கெய்திற் றென்றால் அதுகொண்டு  

               செய்தற் கரிய அறங்கள் பல  

                       செய்து துயர்கூர் பிறவியினின்  

               றுய்தற் பொருமை பெறவொண்ணா  

                       துழல்வோன் உடம்பு பொற்கலத்தில்  

               பெய்தற் குரிய பால்கமரிற்  

                       பெய்த தொக்கும் என்பரால்.                                            12 

 

 

                  வறிதேயிருப்போர் மருளர் எனல் 

 

               மின்போல் அழியும் உடல்கொடுநல்  

                       வினைசெய் தழியா உடம்பெய்தி  

               இன்போ டமர்த லாயிருப்ப  

                       யாக்கை வருந்தும் என்றெண்ணி  

               அன்போ டறஞ்செய் திளையாமல்  

                       அருந்தி வாளா இருக்குமவன்  

               தன்போல் மருளர் இலையென்றான்  

                       தண்பூம் பொழில்வைத் தளிக்கின்றான்.                                  13 

 

 

                   அல்லமதேவர் மறுமொழி கூறல் 

 

               உரைத்த மொழியை அல்லமப்பே  

                       ருடையான் கேட்டுக் கைகுலைத்துச்  

               சிரித்து வினைநல் லனசெய்து  

                       சிதையா இன்பம் பெறுவானேல்  

               வருத்தல் உறுமும் மலங்களினோர்  

                       மலமா கியஆ ணவத்தாலும்  

               பொருத்த முறுபே ரின்பநாம்  

                       புணர லாமென் றியம்பியே.                                            14 

 

 

                  கொக்கிதேவரின் கொள்கையை  

                          மறுத்துரைத்தல் 

 

               தான்செய் வினையால் ஓருடம்பிற்  

                       சாரும் இன்பம் என்றனையவ்  

               வூன்சென் உடலம் ஒழியவுடன்  

                       ஒழியும் அம்மெய் அழியாமல்  

               வான்செய் பதத்தில் இருக்குமெனின்  

                       மாயை தந்ததன் றாகும்  

               கான்செய் மலர்நந் தனஞ்செய்து  

                       கருவைத் துடைப்ப எண்ணுவோய்.                                             15 

 

 

               இன்ப துன்பங்கள் மாறிமாறி வரும் எனல் 

 

        இன்ப நனிசெய் நல்வினையின் இறப்பின் இறப்ப உடம்பினிடைத்  

        துன்ப மதுசெய் தீயவினை தோன்றும் அத்தீ வினைமாய்வின்  

        முன்பு செயுநல் வினைவருமிம் முறையால் இரண்டும் மாறிவரும்  

        என்ப உலகில் ஒண்பகலும் இரவும் மாறி வருதல்போல்.                                  16 

 

 

                      விண்ணின்பம் வீட்டின்பத்தின்  

                               தன்மைகள் 

 

               புறத்துக் கருமம் பலசெய்து  

                       பொருப்பை அகழ்ந்திட் டெலிபிடித்தாங்  

               கிறப்பச் சிறிய விண்ணின்பம்  

                       எய்தும் அவனோ நோவாமல்  

               மறுத்துச் செயல்கள் அனைத்தினையும்  

                       வாளா இருந்து பேரின்பம்  

               பெறத்தக் கவனோ மருளன்யார்  

                       பேசு கென்றான் எம்பெருமான்.                                         17 

 

 

             உண்முக நாட்டத்தால் வீடுபேறு கிட்டும் எனல் 

 

        பொறியிற் புறத்து மனஞ்செல்லிற் புலனே தோன்றி இடுமகத்தில்  

        செறியக் கரணம் பரானந்த சிவமே தோன்றும் சிவந்தோன்ற  

        அறிவிற் பரந்த விடயமயம் ஆகும் உலகந் தோன்றாமல்  

        பிறவித் துயரக் கடல்கடந்து பேரின் பஞ்சார் குவரென்று.                                 18 

 

 

        அல்லமர் கூறியபடி கொக்கிதேவர் மண்ணைத் தோண்டுதல் 

 

        கண்ணாற் காணக் காட்டியிவன் கருத்தைத் திருத்து வேமென்ன  

        எண்ணாக் கருணைக் கடலனையான் இவணீ அகழ்தி என்றுரைப்ப  

        நண்ணாப் பெரும நன்றென்று நவின்ற நிலத்தை அகழ்கின்றான்  

        பண்ணாற் சிறந்த பொறிவண்டு பாடு மலர்ப்பூம் பொழிலுடையான்.                                19 

 

 

               கொக்கிதேவர் சிவயோகியைக் காண்டல் 

 

               தொடலுஞ் செம்பொற் சிகரமொன்று  

                       தோன்றச் செய்யுட் பொருள்போலக்  

               கடிதின் அகழ்ந்து புகுந்ததனுட்  

                       கண்டார் நிலத்தை அகழ்ந்திட்டு  

               மிடியன் கண்ட பொருள்போல  

                       விடயம் புறத்துக் காணாமல்  

               வடிவஞ் சிறிதும் அசையாமல்  

                       வசமற் றிருக்கும் யோகியையே.                                               20 

 

 

           ‘செயலற்ற சிவயோகியைக் காண்டாயோ?’ எனல் 

 

        கையிற் சிவலிங் கத்தின்மேற் கண்கள் வைத்திட் டெலும்பலால்  

        மெய்யில் தசையொன் றின்றியே மேவும் புனிதன் தனைநோக்கிச்  

        செய்ய செயலி லாதசெயற் சிவயோ கியைக்கண் டனையோவென்  

        றையத் தடைந்த அவனறிய அறிவித் துயரல் லமதேவன்.                                21 

 

 

               கொக்கிதேவர் சிவயோகியைப் போற்றுதல் 

 

        கடலின் விழுந்து துயர்பவர்க்குக் கலமொன் றருகு வந்ததெனக்  

        கெடலில் பரம குருவெனக்குக் கிடைத்த தாவா அற்புதமென்  

        றுடலம் விதிர்ப்பக் கண்கணீர் ஒழுக உருகித் தொழுதனனால்  

        விடலின் மரபிற் குருசீட விதியை விளக்க உளங்கொண்டு.                                       22  

 

 

        அச்சிவயோகி கையின் சிவக்குறி அல்லமரை அடைதல் 

 

        காந்தங் கண்ட இரும்புபோற் கண்ட பொழுதே அநிமிடன்றன்  

        ஏந்துஞ் செங்கைச் சிவலிங்கம் எங்கள் பெருமான் அங்கைமலர்  

        போந்தங் கிருந்த ததுபொழுதிற் புனிதன் சீவ கலைதானும்  

        சார்ந்தங் கிருந்த சிவலிங்கந் தன்னோ டவன்பாற் சார்ந்ததால்.                                     23 

 

 

                       கொக்கிதேவர் கூறுதல் 

 

        வந்து பரம சிவலிங்க மருவப் பெறுமல் லமன் றனையும்  

        அந்த விமல லிங்கமுடன் அடைந்த ஞானக் குரவனையும்  

        கந்த மலர்நல் வனமுடையான் கண்டு மகிழ்வுற் றிவர்பெருமை  

        சந்த மறைதேர் நான்முகனும் சாற்றற் கரிதென் றறைகுவான்.                                    24  

 

 

             கொக்கிதேவர் அல்லமதேவரைப் போற்றுதல் 

 

        நின்னாற் கண்டேன் சிவலிங்க நிட்டை ஞான யோகிதனை  

        முன்னாட் கருமம் அனைத்துமினி முடித்தேன் ஞான நிலைநின்றேன்  

        உன்னாற் செய்யப் படுமுதவிக் குதவி வேறு நெடுந்தகாய்  

        என்னாற் செய்வ தொன்றுளதோ எழிலிக் குதவி யார்செய்வார்.                                    25 

 

 

                 கொக்கிதேவர், ‘இன்று மெய்ப்பொருள்  

                          உணர்ந்தேன்’ எனல் 

 

               ஐய நினையும் நின்கரத்தின்  

                       அடைந்த சிவலிங் கத்தினையும்  

               பொய்யில் குரவன் தனையுமொரு  

                       பொருளென் றறிந்தேன் இன்றென்று  

               செய்ய கமலத் திருவடியிற்  

                       சென்று தொழுதல் லமனாம  

               மெய்யன் எதிர்நின் றன்பினால்  

                       விளம்பும் வனங்கா வலனன்றே.                                        26 

 

 

               எல்லோருக்கும் மெய்யறிவு அருள  

                          வேண்டுதல் 

 

               என்னை அறிவித் ததுபோலிவ்  

                       விட்ட லிங்கம் அகம்புறமும்  

               மன்னி யிருக்கு நெறியினைநின்  

                       மலர்த்தாள் பரவும் அடியார்க்குப்  

               பன்னி உணர்த்திச் சரமாகிப்  

                       பாரிற் சரிப்பா யெனத்தொழுதான்  

               தன்னில் நிலத்தின் நரரெல்லாம்  

                       தகும்பே ரின்பம் பெறநினைந்தான்.                                             27 

 

 

            கொக்கிதேவர்க்கு, அல்லமதேவர் அருள்புரிதல் 

 

        கொக்கி தேவன் இரந்தமொழி கொண்டு கிளரல் லமதேவன்  

        தக்க பெரியோர் தமக்கியல்பு தாம்பெற் றுள்ள பேறெல்லாம்  

        மிக்க உலகம் பெறுகவென வேண்டிக் கோடல் எனப்புகழ்ந்து 

        செக்கர் மலர்ப்பூங் கைகளால் தீண்டித் தழுவி அருள் செய்தான்.                                   28 

 

 

                 கொக்கிதேவர் சிவயோகத்திருத்தல் 

 

               அங்கைச் சிவலிங் கத்தினிடை  

                       அமைத்த நோக்கும் நெஞ்சகமும்  

               தங்கச் சிவயோ கத்தினையே  

                       சார்ந்தங் கிருந்தான் ஓவியம்போல்  

               மங்கைக் கிடந்தந் தருளினோன்  

                       மலர்த்தாட் கிடுபூ வனமாக்கிப்  

               பொங்கப் புரந்ததவத்தால்மெய்ப்  

                       பொருளா சிரியற் கண்ணுற்றான்.                                               29 

 

 

             அல்லமதேவர் அவ்விடம் விட்டுச் செல்லல் 

 

        அடியர் வேண்டிற் றேபுரியும் அல்ல மப்பேர் எம்பெருமான்  

        நெடிய விழிகள் அருள்சுரப்ப நிமல லிங்கங் கரத்தேந்திப்  

        படியில் அரிய தவஞ்செய்யும் பத்தர் உள்ளங் களிகூர  

        வடிய இளமாத் தழைப்பவரு மந்தா நிலம்போற் சரிக்கின்றான்.                                   30 

 

 

பதினோராவது - கொக்கிதேவர் கதி முடிந்தது

 

கதி 11 - க்குச் செய்யுள் - 620

 


 

12. முத்தாயி அம்மை கதி

[இக் கதிக்கண், அல்லமதேவர் பற்பல இடங்களினுஞ் சுற்றித் திரிந்து அடியார்கட்கு அருள் புரிந்து கொண்டிருக்கிறார். அசகணன் என்பவரது மறைவு கருதி அவருடைய உடன் பிறந்தாளாகிய முத்தாயி அம்மை பெரிதும் வருந்துகிறாள். அப்போது அல்லமதேவர் அங்கு அடைகிறார். முத்தாயி அம்மை அல்லமதேவரிடத்தில் வருந்திப் புலம்புகிறாள். ‘நீ அசகண்ணனுடைய உண்மையை உள்ளாறு உணரவில்லை; அழிவில்லாத அவன் அழிந்துபோனான் என்று மாறுபடக் கருதி நீ வீணாக வருந்துகின்றாய்; உண்மை வடிவத்தை நன்குணர்ந்தவர்கள் உடலை ஒரு பொருட்படுத்த மாட்டார்கள். அவர்களது உடல் நீக்கம் குடம் உடைந்தவுடன், குடவிண்ணும் பெருவிண்ணும் ஒன்றாவது போலப் பரம்பொருள் வடிவத்தோடு இரண்டறப் பொருந்துவதாகும்’ என்று கூறி, அல்லமதேவர் முத்தாயி அம்மையைத் தேற்றுகிறார். மேலும் முத்தாயி அம்மைக்கு உண்மைப் பொருளை யுரைத்து வீடுபேற்றையடையும் நெறியையும் உணர்த்துகிறார். முத்தாயி அம்மை தன்னை வலிந்தாட் கொண்ட அல்லம தேவரைப் போற்றி இன்புற்றிருக்கின்றாள் என்னுஞ் செய்திகள் விளக்கமாகக் கூறப்பெறுகின்றன.]

 

 

                       நூலாசிரியர் கூறல் 

 

               கண்டி லேன்அச கண்ணனை யென்றஞர்  

               கொண்டு வாடுங் கொடியிடை யாள்துயர்  

               விண்டு போக விரைந்துவந் தல்லமன்  

               பண்டு கூறும் பரிசு விளம்புவாம்.                                                      1 

 

 

                 அல்லமதேவர் வழக்கம்போல் எங்கும்  

                               செல்லல் 

 

               பொடிய ணிந்தெழில் பொங்குறும் அல்லமன்  

               அடியர் தங்கள் அகத்தில் துயரினை  

               உடையி ழந்த ஒருவன் கரமெனக்  

               கடித டைந்து களைந்தருள் செய்யுநாள்.                                         2 

 

 

                  அசகணன் வீடுபேறடைதல் 

 

               மறைத்தி ருந்த மலிசிவ பத்தியைப்  

               புறத்த றிந்த பொழுதே உடம்பினை  

               வெறுத்த கன்று வெளியுரு வாயினான்  

               அறுத்த பந்த அசகணன் என்பவே.                                                      3 

 

 

                  அசகணன் பிரிவுக்கு முத்தாயி  

                        அம்மை வருந்தல் 

 

               அறைந்த தூயவன் அங்க உபாதிபோய்  

               நிறைந்த நீர்மை நினைந்திலன் போயுயிர்  

               இறந்து போயினன் என்னத் தளர்ந்துடள்  

               பிறந்த மாது பெரிதுள மாழ்கியே.                                                      4 

 

 

               முத்தாயி அம்மை அல்லமரைக் காண்டல் 

 

               புலம்பி நைந்திருக் கின்றவப் போதினில்  

               இலிங்க முங்கர முந்திகழ் வெய்துற  

               நலங்கொள் அல்லமன் நண்ணினன் நண்ணலும்  

               கலங்கி நின்றவக் காரிகை கண்டனள்.                                          5 

 

 

                முத்தாயி அம்மை அல்லமரின் முன்  

                               அழுதல் 

 

               கண்ட போதச கண்ணனைக் காண்கிலாள்  

               கொண்ட பீழை குறைய அழுதடிப்  

               புண்ட ரீகப் புதுமலர் வீழ்ந்துகண்  

               மண்டு நீருக வாய்விட் டரற்றினாள்.                                            6 

 

 

                 அல்லமரை, ‘என் துன்பம் போக்க  

                      எழுந்தருளினை’ எனல் 

 

               பாவி யேன்முகம் பார்க்கஒண் ணாதென  

               ஆவி ஆமச கண்ணன் அகன்றுசெய்  

               நோவெ லாமிவண் நூக்க அருளினால்  

               மேவி னாயென மீண்டும் வணங்கினாள்.                                        7 

 

 

                 அல்லமர் முத்தாயி அம்மையைப்  

                          பார்த்துக் கூறல் 

 

               வணங்கு மாதின் மலர்முக நோக்கியே  

               அணங்க னாய்நல் அசகணன் தன்மையை  

               உணர்ந்தி டாமல் உளைதல் உணர்வுளார்க்  

               கிணங்கு றாததென் றெந்தை இயம்புவான்.                                              8 

 

 

                அல்லமர், ‘அசகணன் அழிவற்றவன்’ 

                               எனல் 

 

               அழிவி லானை அழிந்தனன் என்றுநீ  

               விழியி னான்மிகு வெள்ளம் பெருக்கினை  

               கழிவி லாதவா காயங் கழிந்ததென்  

               றொழிவி லாமல் உளமெலி வார்கள்போல்.                                              9 

 

 

                    தன்னையறிந்தோன் உடலை  

                          மதியான் எனல் 

 

               சச்சி தானந்த சங்கரன் ஆகவே  

               அச்ச நீங்குபு தன்னை அறிந்தவன்  

               துச்ச மாந்துயர் தோல்மலி யாக்கையை  

               இச்சி யானதை யானென எண்ணியே.                                           10 

 

 

                          இதுவும் அது 

 

               ஒண்த ரைக்கண் ஒழிவில் அருளுருக்  

               கொண்ட டுத்த குருவரு ளால்தனைக்  

               கண்ட மெய்த்தவன் காயந் தனையனம்  

               உண்ட நெட்டிலை ஒப்ப விடுப்பனால்.                                          11 

 

 

                மெய்யறிஞரின் உடல்நீக்கம் இத்தன்மை  

                               எனல் 

 

               படியில் வந்த பரம குரவனால்  

               தடைய றும்படி தன்னை அறிந்தவன்  

               உடல்வி டும்பொழுது தொன்றொரு மண்மயக்  

               கடமு டைந்த ஆகாயம் நிகர்ப்பனால்.                                           12 

 

 

               அவர் தம் உடலுக்கு வேறாயிருப்பர்  

                               எனல் 

 

               பந்த பாசம் முழுதும் பரிந்திட  

               நந்தும் ஓர்சிவ ஞானி நரர்வினை  

               சிந்து மாறு செறிந்த உடம்புதான்  

               வெந்த தூசின் விழியெதிர் தோன்றுமே.                                         13 

 

 

               அவர்க்கு உறவும் பகையும் இல்லை  

                               எனல் 

 

               யாவும் ஆகியும் இருக்கும் சிவத்தொடு  

               மேவு ஞான விழியுடை யான்தனக்  

               கோவும் ஆறில் உறவு பகையெனும்  

               பாவ மோஇலை யென்றறி பாவையே.                                          14 

 

 

               அறிவிலார் கூற்று இத்தன்மை எனல் 

 

               யாக்கை தாமென் றிருந்தழி கின்றவர்  

               ஊக்கி லாவறி வாகி உடம்பொடு  

               தாக்கி லாதவர் தம்மையுந் தாமென  

               நோக்கு வாரவர் உண்மையை நோக்குறார்.                                              15 

 

 

               மெய்யறிஞரின் உலகிற் பற்றற்றநிலையைத்  

                        தவத்தினர் அறிவர் எனல் 

 

               கூத்தன் நாடகக் கோல நடிப்பினைப்  

               பார்த்து வாய்மையென் றெண்ணிலர் பாருளார்  

               ஏத்து ஞானிதன் யாக்கை நடிப்பினை  

               ஓர்த்து மாதவர் உண்மையென் றுன்னுறார்.                                             16 

 

 

                அசகண்ணன் தன்மையை அறியாது  

                        வருந்தினை எனல் 

 

               அறிந்தி டாமல் அசகணன் தன்மையை  

               இறந்து ளானென் றிரங்கினை அன்னை நீ  

               மறந்தி டாயிம் மதியென் றணல்சொல  

               நிறைந்த ஞானமுத் தாயி நிகழத்துவாள்.                                        17 

 

 

               முத்தாயிஅம்மை, தன் அறியாமையைப்  

                       பொறுக்குமாறு வேண்டல் 

 

               அரவின் காலர வன்றி அறிபவர்  

               தரையின் இல்லை அசகணன் தன்னைநீ  

               தெரியின் அன்றிச் சிறியள் அறிவலோ  

               பெரும யான்செய் பிழைபொறுப் பாயென்று.                                            18 

 

 

                              (வேறு)

  

                 அல்லமதேவர் ஆண்டுப்போந்தது  

                     முன்னோர் தவமெனல்  

 

               பங்கன் இருந்த பதிக்கருள் செய்து   

               கங்கை அடைந்த கணக்கென என்பால்  

               இங்குற வந்தனை எங்குடி உள்ளார்  

               தங்கள் தவந்தரு தன்மையின் என்று.                                           19 

 

 

                  அல்லமரை, முத்தாயிஅம்மை  

                            வேண்டல் 

 

               வந்தனை செய்து வழுத்திமு னின்று  

               பந்தம் அகன்ற பதம்பெறும் வண்ணம்  

               எந்தை இயம்பி எனக்கருள் செய்யென்  

               றந்த மடந்தை அறைந்தனள் அன்றே.                                           20 

 

 

                    அல்லமதேவர் கூறுதல் 

 

               தேசிகன் அல்லம தேவன் மகிழ்ந்து  

               பாசம் அகன்று பரம்பொருள் காணும்  

               நேசம் அடைந்தனை நின்னை நிகர்ப்பார்  

               காசினி யின்மிசை கண்டிலம் என்று.                                            21 

 

 

                 புறத்தொழில்களால் வீடுபேறு  

                        கிட்டாதெனல் 

 

               பிறப்பொரு கோடி பிறந்து பிறந்து  

               புறக்கரு மங்கள் புரிந்திடி னும்பொய்  

               மறப்புறும் ஆணவ வல்லிருள் இன்றிச்  

               சிறப்புறு முத்தி செறிந்திடு வாரோ.                                                     22 

 

 

                  வெளிப்பற்றுக் கூடாதெனல் 

 

               மரிப்பொ டுதிப்பு மறிக்குதும் என்று  

               கருத்தை வெளிக்கரு மத்தின் விடுத்து  

               விரிக்குதல் நெய்யை விடுத்தெரி கின்ற  

               நெருப்பை அவிப்ப நினைப்பதை ஒக்கும்.                                               23 

 

 

                ஓடும் உள்ளத்தை ஓடாது நிறுத்த  

                        வேண்டும் எனல் 

 

               மட்டற வோடு மனத்தை நிறுத்திக்  

               கட்டுதல் வீடு விடுத்திடல் கட்டன்  

               றொட்டிய பண்பின் உரைத்தல மப்பேர்ச்  

               சிட்டன் அவற்கருள் செய்தனன் அன்றே.                                        24 

 

 

                முத்தாயி அம்மைக்கு வீடுபே றளித்தல் 

 

               தத்துவ முற்று மயக்குவ தள்ளி  

               மெய்த்த தனைப்பெற வேறு கொடுத்தான்  

               பொய்த்துறு குப்பை கிளைத்தொளி பொங்கும்  

               முத்தை அளித்தென முத்தை தனக்கு.                                          25 

 

 

                  முத்தாயிஅம்மை அல்லமரைப்  

                             புகழ்தல் 

 

               வீடு விரும்பி வெறுத்திலன் மெய்யைத்  

               தாடரும் ஒண்குர வன்றனை எங்கும்  

               நாடி உழன்றிலன் நானுய என்னைத்  

               தேடி அடைந்தருள் செய்தனை யென்று.                                         26 

 

 

                   முத்தாயிஅம்மை பேரின்பப்  

                           பேறடைதல் 

 

               அல்லமன் என்னும் அருட்குர வன்தாள்  

               புல்லி வணங்குபு பொற்கொடி அன்னாள்  

               செல்லல் அகன்று சிதம்பரம் எய்தி  

               எல்லையில் இன்பொ டிருந்தனள் அம்மா.                                       27 

 

 

பன்னிரண்டாவது - முத்தாயி அம்மை கதி முடிந்தது

 

கதி 12 - க்குச் செய்யுள் - 647

 


 

13. சித்தராமையர் கதி

[இக் கதிக்கண், அல்லமதேவர் சொன்னலாபுரம் என்னும் நன்னகரினைத் துன்னுகிறார். ஆண்டுச் சித்தராமர் என்னும் யோகியின் பணியாட்கள் தடாகமொன்றைத் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள். அல்லமதேவர் குளம் வெட்டிக் கொண்டிருந்த ஒட்டர்களைக் கிட்டி, ‘உங்களை இந்தப் பயனற்ற வேலையைச் செய்யுமாறு ஏவிய ஒட்டராமனுடைய கொள்கை யாது?’ என்று கேட்கிறார். அல்லமதேவரின் மொழி ஒட்டர்களுக்குச் சினத்தை யுண்டாக்குகிறது. அவ்வளவில் ஒட்டர்களுக்கும் அல்லமதேவருக்குஞ் சொற்போர் மூள்கிறது. அல்லமதேவர், ‘நான் கூறியவைகளை உங்களுடைய கற்றறி மூடன்பாற் சென்று சொல்லுங்கள்’ என்கிறார். சித்தராமரைக் ‘கற்றறி மூடன்’ என்று அல்லமதேவர் செப்பியது ஒட்டர்களுக்கு மட்டில்லாச் சினத்தை உண்டாக்குகிறது. கற்களைப் பொறுக்கி அல்லமதேவர்மீது வீசுகிறார்கள். அக்கற்கள் அல்லமதேவர் மீது படாமல் மலையாகக் குவிகிறது. அல்லமதேவர் அக்கல் மலைமீது நிற்கிறார்.

அல்லமதேவர் மீது கல் படாமையைக் கண்ணுறும் ஒட்டர்கள் வியப்படைகிறார்கள். இத்தகைய நிலையில் ஈங்கு நிற்கும் இவன் யாவன் என்று எண்ணுகிறார்கள். இவன் யாதோ சூழ்ச்சியால் கல் வீழ்ச்சியில் நின்றும் பிழைத்துக் கொண்டான் என்று எண்ணுகிறார்கள். அல்லமதேவரைப் பற்றிப் பிடித்து அடித்துக் கொல்ல நெருங்குகிறார்கள். அல்லமதேவரோ அந்நிலையிற் பல கோலங்கொண்டு நிற்கிறார். எந்தக் கோலத்தைப் பிடித்து அடித்துக் கொல்வது என்று அவர்களுக்கு விளங்கவில்லை. விரைந்தோடிச் சித்தராமரிடஞ் செய்தியை விளம்புகிறார்கள். சித்தராமருக்குச் சீற்றம் மிகுந்து பொங்கிவருகிறது. ‘என்னை இகழ்ந்தவன் யாவன்? அவனுடைய நாவை அரிந்து விடுகிறேன்’ என்று கூறிக்கொண்டு அல்லமதேவர் இருந்த இடத்தை அடைகிறார்.

அல்லமதேவர், சித்தராமர் சினத்துடன் வருதலையுணர்ந்து கொண்டு, குறிப்பாகவும் வெளிப்படையாகவும் இகழ்ந்து கூறுகிறார். சித்தராமர் அல்லமதேவரை எரித்துவிட நினைத்து நுதற்கண்ணைத் திறக்கிறார். அந்நுதல் தீ அல்லமதேவரின் தாளைப் பணிந்து வணங்கிச் சொன்னலாபுர நகரினையே சுட்டெரிக்கத் தொடங்குகிறது. பல பொருள்களும் எரிந்து தொலைகின்றன; நகரமக்கள் வருந்துகின்றனர்; அல்லமதேவர் அந்நகர மாந்தரின் அல்லலைப் போக்க எண்ணுகிறார்; தீ மறைகிறது; கொன்னலாபுரம் முன்னையினும் பன்படங்கு நன்னலஞ் சிறந்து திகழ்கின்றது; சித்தராமரின் செருக்கும் அழிகின்றது; அவருக்கு மெய்யறிவு தோன்றுகிறது; தம் பிழையைப் பொறுத்துப் தம்மையாட்கொள்ள வேண்டுமென்று அல்லமதேவரைப் பணிந்து வேண்டுகிறார்.

அடைக்கலம் புகுந்த சித்தராமரை அலலமதேவர் ஆட்கொள்ளுகிறார். சினம் தீதென்பதை விளக்கிக் கூறுகிறார். பொறிகளையடக்கலால் நேரும் பயனையும் மெய்ப்பொருளையும் விரித்துரைக்கிறார். மெய்யறிவு பெற்ற சித்தராமர் என்போல் நற்பேறு பெற்றோர் ஒருவருமிலர் என்று அல்லமதேவரைப் போற்றிப் புகழ்ந்து வணங்குகிறார். சித்தராமர் தமக்குப் பணிசெய்ய அல்லதேவர் சின்னாள் சொன்னலாபுரத்தில் எழுந்தருளியிருக்கிறார் என்னுஞ் செய்திகள் விரிவாகக் கூறப்பெறுகின்றன.]

 

 

                      நூலாசிரியர் கூறல் 

 

                       காமரு சித்த  

                       ராமன் இடத்தில்  

                       போமணல் சொற்ற  

                       சீர்மை உரைப்பாம்.                                                   1 

 

 

                    அல்லமதேவர் தன்மை 

 

                       செல்லல் களைந்து  

                       நல்லறி வின்பம்  

                       சொல்லுவன் என்னும்  

                       அல்லமன் என்பான்.                                                   2 

 

 

               அல்லமர் சொன்னலாபுரம் அடைதல் 

 

                       கரும யோகமும்  

                       கிரியை யாவையும்  

                       மருவி ராமன்வாழ்  

                       புரியை மேவினான்.                                                   3 

 

 

               சித்தராமனின் ஆட்கள் திருப்பணியைக்  

                               காணல் 

 

                       வாவி ஆலயம்  

                       காவி ராமனார்  

                       ஏவ லாளர்செய்  

                       தோவி லாமையை.                                                   4 

 

 

               சித்தராமர் செயல் பயனற்றதென எண்ணல் 

 

                       பார்த்தருள் அண்ணல்  

                       மூத்த இராமன்  

                       வார்த்தை அறிந்த  

                       கூத்தினன் என்றே.                                                    5 

 

 

               சித்தராமையருக்கு நல்லறிவு இல்லை  

                               எனல் 

 

                       பேரறி வின்னான்  

                       சார இருந்த  

                       ஊரினும் இல்லென்  

                       றார இகழ்ந்தே.                                                       6 

 

 

               சித்தராமையரின் செயல் இத்தன்மை  

                               எனல் 

 

                       இல்லம் அகன்றிவ்  

                       வல்லல் அடைந்தான்  

                       நல்ல பசும்பொன்  

                       வல்லி உவந்தான்.                                                    7 

 

 

               அல்லமர், தடாகந் தோண்டுவோரிடம்  

                           உரையாடுதல் 

 

                       என்று நினைந்து  

                       நன்றுற வாவி  

                       ஒன்றகழ் வார்பால்  

                       சென்றிது சொல்வான்.                                                 8 

 

 

                               (வேறு)

  

                        சித்தராமையரின் நோக்கம்  

                           யாதென்று கேட்டல்  

 

                       ஒட்ட ராமன் உத்தினில்  

                       இட்டம் யாதுகொல் இத்தொழில்  

                       முட்டி லாமல்முயன் றனன்  

                       கொ வீழுமி குத்தல்போல்.                                             9 

 

 

               பயனற்ற செயலில் உம்மை விட்டது யாதெனல் 

 

                       விழற்கி றைப்ப விடுத்தல்போல்  

                       தொழிற்குள் எய்த்துறு தொழில் நுமை  

                       இழைக்க விட்டதென் என்றிடர்  

                       ஒழிக்கல் உற்றவன் ஓதினான்.                                          10 

 

 

                 தொழிலாளர்கள் பொறுமையிழத்தல் 

 

                       சாந்தன் ஓதிய தாம்மொழி  

                       காய்ந்த வேலிரு காதினும்  

                       போந்த போன்று புகுந்தன  

                       மாந்தர் ஆகுலம் மன்னினார்.                                           11 

 

 

               ஒட்டர்கள் அல்லமதேவரை இகழ்ந்து சினத்தல் 

 

                       அறம் அழித்தனை அன்றியும்  

                       நெறிய றக்குரு நிந்த்னை  

                       பெறவு ரைத்தனை பித்தவென்  

                       றுறவு றுத்தனர் ஒட்டலர்.                                                      12 

 

 

                 சித்தராமையரை இகழ்ந்தது தகாதெனல் 

 

                       ஒட்டன் என்றனை உம்பரும்  

                       சிட்டன் என்றுகொள் சித்தனைத்  

                       துட்ட என்று சுளித்தனர்  

                       வெட்டி ருந்தடம் மேவினோர்.                                          13 

 

 

                               (வேறு)

  

               அல்லமதேவர் அதற்குக் காரணங் கூறுதல் 

                

               மெய்த்தடம் அகழ்பவர் வினையை அன்றியே  

               சித்தர்தஞ் செயலொரு சிறிதும் இன்மையான்  

               மத்தர்நுங் குரவனை மண்ணில் நும்மினும்  

               உத்தம ஒட்டனென் றுரைத்தும் என்றனன்.                                              14 

 

                       ஒட்டாகள் உரைத்தல் 

 

               நிகழ்ந்துல கிடைநிலை நிற்கு நல்லறம்  

               உகந்துசெய் பவன்றனை உம்ப னேயெனப்  

               புகழ்ந்தவர் புண்ணியர் பொறாமை யானிழித்  

               திகழ்ந்தவர் நரகரென் றிசைப்பர் நல்லவர்.                                               15 

 

 

               நீ நல்லோர் உறவு பெற்றோன் இல்லை  

                               எனல் 

 

               மறவினை உடையரை மாற்றித் தூயநல்  

               அறவினை உடையரை அறிந்திட் டன்னரோ  

               டுறவினை அடைந்திலை ஒப்பக் கண்டறத்  

               துறவினை உளையென ஒட்டர் சொல்லினார்.                                            16 

 

 

                அல்லமர், ‘நீர் என்னை உணரவில்லை’ 

                               எனல் 

 

               ஓங்கிரு வினைகளும் ஒப்பக் கண்டவர்  

               தாங்களென் றனையொரு தமரிற் பேணுவர்  

               ஆங்கை இரண்டையும் அடைந்து போயுழல்  

               நீங்களென் றனையுணர் நெறியிலீர் என்றான்.                                            17 

 

 

                  ஒட்டர்கள் மீண்டும் அல்லமரைச்  

                            சினத்தல் 

 

               எனக்கற வினையுமில் என்று கூறினாய்  

               உனக்கொரு கதியிலென் றுண்மை கூறியே  

               சினத்தனர் நிலனகழ் சிறியர் யாவரும்  

               தனக்கிணை தானெனும் தம்பி ரானையே.                                               18 

 

 

                சித்தராமையர்பால் அல்லமர் செப்புமாறு  

                               கூறுதல் 

 

               முற்றிய கல்வியின் மூடர் நீவிர்நும்  

               கற்றறி மூடனுக் கறைமின் அன்னவன்  

               உற்றனன் எனிலவன் உணர்வுஞ் சொல்லினால்  

               இற்றென உணர்வமென் றெந்தை கூறினான்.                                            19 

 

 

                ஒட்டர்கள் பெருஞசினங் கொள்ளுதல் 

 

               சேடனும் புகழவுறும் சித்த ராமனை  

               மூடனென் றுரைத்தவம் மொழிக யந்தொடாத்  

               தோடருங் கொட்டினோர் சீற்றத் துப்பெனும்  

               நீடுவெந் தழல்சொரி நெய்நி நகர்த்தால்.                                         20 

 

 

               ஒட்டர்கள் அல்லமரை அடிக்கக் கற்களைப்  

                             பொறுக்குதல் 

 

               இறுக்கினர் அழுக்குடை எயிறு மென்றனர்  

               உறுக்கினர் அதிர்த்தனர் உயிர்த்து மீசையை  

               முறுக்கினர் நகைத்தனர் முருட்டுக் கைகளால்  

               பெறுக்கினர்* சிலைகளைப் பெரு+சி னத்தராய்.                                   21 

 

               ( பாடம் = * பொறுக்கினர்,  + பொரும்) 

 

 

                 அல்லமதேவரைக் கல்லாற் கொல்லச்  

                              சூழுதல் 

 

               நங்குர வனையிகழ் நயமி லான்றனை  

               இங்கொரு சிலையினால் எறிந்து கொல்லுதல்  

               பொங்குறும் அறமொடு புகழும் ஆகுமென்  

               றெங்குர வனையவர் எதிர்ந்து சூழ்ந்தினர்.                                               22  

 

 

                  அல்லலலலக் கிட்டி நெருங்குதல் 

 

               கட்டுமின் அடிமினுங் கரத்திற் கொட்டினால்  

               வெட்டுமின் நிந்தைசொல் வாயின் வெண்பலைத்  

               தட்டுமின் எறிமின்வன் தலைகு மைந்திடக்  

               குட்டுமின் எனஉளங் கொதித்துக் கூடினார்.                                              23 

 

 

                    அல்லமதேவர் மீது கற்களை  

                        மழைபோற் சொரிதல் 

 

               என் இருளற எழுந்த அல்லமன்  

               மின்மலி வுறுதிரு மேனி மீதிடிச்  

               சொன்மலி ஒட்டலர் சூழ்ந்து கொண்டுவன்  

               கன்மழை சொரிந்தனர் கைச லிப்பவே.                                          24 

 

 

                    கல் தாக்காமையைப்பற்றி  

                       நூலாசிரியர் கூற்று 

 

               சாக்கிய னாரெறி தனிக்கல் அன்றிமெய்  

               நோக்கிலர் தாமொரு நூறு கோடிகல்  

               மீக்கிளர் சோதீதன் மீது வீசினும்  

               தாக்குறு மோவவை தாக்கு றாவரோ.                                           25 

 

 

                 ஒட்டர்கள் எறிந்த கற்குவியல்மீது  

                       அல்லமதேவர் நிற்றல் 

 

               கொடியவர் எறிந்தகல் குவியக் குன்றென  

               முடிமிசை நின்றனன் முத்தன் அல்லமன்  

               புடவியில் உடல்நிழல் புதைப்ப அந்நிழல்  

               கடிதினின் மீமிசை காணும் தன்மைபோல்.                                              26 

 

 

                  பொறுமையாற் சிறப்புறும் புங்கவர் 

 

               ஒறுப்பவன் இழிந்தவன் ஒருவன் செய்தநோய்  

               பொறுப்பவன் நடுவுளன் பொறுக்கு நெஞ்சமும்  

               மறப்பவன் உயர்ந்தவன் என்று வாய்மையால்  

               சிறப்பவர் இம்முறை செப்பு வாரரோ.                                           27 

 

 

                அல்லமரின் பொறுமையைக் கண்ட  

                       ஒட்டர்கள் வியத்தல் 

 

               தீங்கினை எதிர்நின்று செய்த போதினே  

               தாங்கிலன் முனிவினை மறந்து தாமரைத்  

               தேங்கமழ் மலரென முகஞ்சி றப்புறீஇ  

               ஈங்குநின் றிடுமிவன் யாண்டு ளான்கொலோ.                                            28 

 

 

                   பிழை செய்வாரிடத்தும் நன்மை  

                         செய்யும் பெருமை 

 

               மலர்மிசை வேதனோ மலர்க்கண் மாயனோ  

               பலர்புகழ் மழவிடைப் பாக னோவெனில்  

               அலனிவன் பிழைசெயும் அவரி டத்தினும்  

               நலனுளன் என்று கண் டவர்ந வின்றனர்.                                               29 

 

 

                 ஒட்டர்கள் அல்லமரைப் பிடித்துக்  

                       கொல்ல எண்ணுதல் 

 

               கல்லெறி படாமையைக் கண்ட ஒட்டலர்  

               சொல்லுறின் இவனொரு சூழ்ச்சி மந்திரம்  

               வல்லவன் இவன்தனை வலிந்து பற்றியே  

               கொல்லுவம் எனஎதிர் குறுகி னாரரோ.                                          30 

 

 

                 அல்லமதேவர் பல வடிவங்கொண்டு  

                               நிற்றல் 

 

               குறுகலும் அன்பல கோலங் கொண்டனன்  

               நிறைபுனற் கடந்தொறு நிலவு தோன்றல்போல்  

               மறுகினர் நிலனகழ் மனிதர் பற்றுதற் 

               கறிகிலர் இனையனென் றனையன் தன்னையே.                                  31 

 

 

                  ஒட்டர்கள் சித்தராமையரிடம் செய்தி  

                               கூறுதல் 

 

               மருண்டனர் சித்தரா மப்பெ ருந்தகை  

               இருந்தரு ளிடத்துமெய் இளைப்ப ஓடியே  

               திருந்திய அடிமிசைச் சென்று வீழந்தெழுந்  

               தரந்தையோ டனையவர் அறைதல் மேயினார்.                                   32 

 

 

                       அல்லமர் இகழ்ந்ததைச்  

                     சித்தராமையரிடம் கூறல் 

 

               யாந்தொழில் செயுமிடத் தேது இன்றியே  

               போந்தனன் ஒருமகன் புதியன் நின்புகழ்  

               ஓர்ந்திலன் உரைக்கொணா இழிபு ரைத்தனன்  

               மாய்ந்திலம் உடல்நசை மருவி யாங்களே.                                              33 

 

 

                  சித்தராமையர் சீற்றங் கொள்ளல் 

 

               என்றவர் அறைதலும் இராமன் சிந்தையில்  

               புன்தொழில் அகன்று மெய்ப் போதம் பெற்றிட  

               அன்றருள் அல்லமன் அடிகள் காட்டுறும்  

               ஒன்றொரு சீற்றம்வந் துதித்தெ ழுந்ததே.                                               34 

 

 

                  சித்தராமையர் வெகுண்டெழுதல் 

 

               யாவனென் தன்னையின் றிகழ்ந்து ளானவன்  

                நாவரிந் திடுவனான் எனவெ ழுந்தனன்  

               மேவுறும் தவமத வெகுளி தானினி  

               ஓவுறும் தரத்ததன் றொருவ ரானுமே.                                          35 

 

 

                          (வேறு)

  

          அல்லமர் சித்தராமையர் சினம் அறிந்துகொண்டு  

                           கூறுதல் 

 

        என்னை வைதவன் யாரவன் எனமுனிந் தெரிபோல்  

        முன்னர் எய்தினன் சித்தரா மப்பெயர் முதல்வன்  

        அன்னை அன்னநம் அல்லமன் அவன்சினம் அறிந்து  

        சென்னி ஒண்கரம் அசைத்துவெண் நகைசெய்து செப்பும்.                                 36 

 

 

        அல்லமர் சித்தராமையரைப் புகழ்வது போல இகழ்தல் 

 

        அகழ்கின் றார்தமைத் தாங்குறும் அகல்நிலம் என்ன  

        இகழ்கின் றார்தமைப் பொறுக்குமித் தன்மையெய் தலினால்  

        நிகழ்கின் றாருள்மா தவமுடை யோகிநீ யென்று  

        புகழ்கின் றானென இகழ்ந்தனன் பின்னரும் புகல்வான்.                                    37 

 

 

                      இதுவும் அது 

 

        சிறப்புப் பெற்றநல் யோகிதன் மனத்தெழு சினந்தன்  

        அறத்தைக் கொன்றிடு முன்புபஞ சியிற்புகும் அழல்போல்  

        ஒறுக்கப் பட்டவன் பவம்பினை ஒழித்திடும் அதனால்  

        பொறுத்தற் கொப்பிலை என்றுநன் றறிந்தனை போலும்.                                  38 

 

 

                      இதுவும் அது 

 

        காலன் நின்முனம் பொறையுளன் ஆகுவன் கடல்சேர்  

        ஆலம் நல்லமு தாகுமென் றவன்தவம் புகழ்வான்  

        போல வைதனன் கொடியவன் எனும்பொருள் தோன்றச்  

        சீல நல்குமோர் தொழில்செயும் அல்லம தேவன்.                                        39 

 

 

          சித்தராமையர் மறுமொழி பகரத் தொடங்கல் 

 

        பொறையு றும்படி அல்லமன் சூழ்ச்சியிற் புகலக்  

        குறையு றுஞ்சின மிகுந்தனன் நெருப்பெனக் கொதித்தே  

        அறையு றுந்திரள் பந்தெனச் சித்தரா மையன்  

        நிறையு றுந்திரு வருளுடைப் பிரானொடு நிகழ்த்தும்.                                            40 

 

 

            சித்தராமையர் அல்லமரை அழிப்பேன் எனல் 

 

        குறிப்பில் வைதனை வெளிப்படை இகழ்வினுங் கொடிதாய்  

        வெறுப்பு முன்செயா என்னை நீ ஈண்டிகழ்ந் தமையால்  

        பொறுப்பன் அல்லன்யான் நுதல்விழித் தீயிடைப் பொடிப்ப  

        வறுப்பன் என்றனன் இகழ்வினுக் காருளம் மறுகார்.                                              41 

 

 

           அல்லமர் மீண்டும் சித்தராமையரை இகழ்தல் 

 

        தன்னைக் கொல்லினும் தான்பிறி தொன்றினைக் கோறல்  

        பன்னிற் பாவமென் றறைகுவர் கற்றுணர் பழையோர்  

        நின்னைச் சொல்லிய அறத்தினை நிந்தையென் றெண்ணி  

        என்னைக் கொல்லுவன் என்றநீ அறவனே என்று.                                        42 

 

 

                      இதுவும் அது 

 

        சாத னங்களுள் நீறுமுந் தியதென்பர் சாற்றும்  

        மாத வங்களுள் உயிர்செகா மையுமற்று மதிப்பில்  

        பாத கங்களிற் கொலைசிறந் தன்றெனப் பார்த்து  

        நீதெரிந்திலை அரக்கனே என்றனன் நிமலன்.                                                    43 

 

 

         சித்தராமையர் நெற்றிக்கண்ணைத் திறத்தல் 

 

        செருக்கொ ழிந்திலை என்எதிர் செவிசுடு தீச்சொல்  

        உரைத்து நின்றனை உனைவிடு கிலனென உறுத்து  

        நெருப்பெ னுந்திரு நுதல்விழி திறந்தனன் நினைத்து  

        மரிப்பி னுந்தரு வேனுயிர் என்றிரா மன்றான்.                                           44 

 

 

           சித்தராமையரின் நெற்றித் தீ அல்லமர் அடி  

                       பணிதல் 

 

        நெற்றித் தீவிழி காமனை நீற்றுவ தன்றிப்  

        பற்றிக் காமமில் யோகியைப் படுத்திட வற்றோ  

        செற்றத் தான்நுதல் விழியழல் அல்லமதேவன்  

        வெற்றித் தாள்மலர்க் கீழ்ச்சென்று பணிந்தது விரைந்து.                                          45 

 

 

          சித்தராமரின் நெற்றித் தீ சொன்னலாபுரத்தைப்  

                           பற்றல் 

 

        பணிந்து மீளுமவ் வழலொரு வீரன்மேற் பாயத்  

        துணிந்து போயவன் ஆற்றல்கண் டுளவலி தொலைந்து  

        தணிந்து படிமேற் செல்லுமா றலைவன சரன்போல்  

        அணைந்தி ராமன்வாழ் நகரினிற் பற்றிய தன்றே.                                        46 

 

 

               நகரத்தின்மேற் பற்றி அழித்தல் 

 

        கங்கை வார்சடைக் கறைமிடற் றிறைநகைக் கனல்போய்த்  

        துங்க மாமதில் சூழ்தரு புரத்தினைச் சுடல்போல்  

        எங்கள் நாயகன் மேல்விடும் இரமன்நல் நுதற்கண்  

        அங்கி போகியந் நகரினைச் சுட்டதை அன்றே.                                           47 

 

 

           நகரில் யாவும் எரிய, கண்டவர்கள்  

                    வயிறும் எரிதல் 

 

        அணியெ ரிந்தன மென்துகில் எரிந்தன ஆரத்  

        துணிய ரிந்தன கலவைகள் எரிந்தன சுதையின்  

        பணியெ ரிந்தன மனைவளம் எரிந்தன பகரும்  

        மணியெ ரிந்தன எரிந்தன கண்டவர் வயிறு.                                                    48 

 

 

          தீயிடை அகப்பட்டுக் கொண்டவர்களின்  

                       செயல்கள் 

 

        சேயெ டுப்பவர் விருத்தரை ஈர்ப்பவர் சேமம்  

        போயெ டுப்பவர் புகரி தாகிமண் புரண்டு  

        வாய டிப்பவர் மனையெரி அவிப்பவர் மறுகிப்  

        பாய லைக்கடல் எனவழு திரங்கினர் பதைத்து.                                           49 

 

 

           அத்தீயால் விண்ணுலகத்துக் கங்கையுங்  

                         கொதித்தல் 

 

        உதித்த ஞாயிறு போன்றுசெம் மணியினம் ஒளிரப்  

        பதித்த மாளிகை மீதுபற் றியவழற் கொழுந்தால்  

        கதிர்த்த ஆடகச் செங்கம லத்துவான் கங்கை  

        கொதித்த தாயிடைக் கொதிபொறா தன்னங்கள் குழைய.                                  50 

 

 

             அல்லமதேவர் தீயினை அகற்றுதல் 

 

        அன்ன காலையில் அருட்கடல் அல்லம தேவன்  

        சொன்ன லாபுரத் தவர்துயர் அனைத்தையுந் தொலைப்ப  

        உன்னி ஓர்விழி அழலினைஅமைப்பினில் ஒழித்தான்  

        முன்னம் ஆலமுண் டமரரைக் காத்தருள் முறைபோல்.                                          51 

 

 

         தீப்பற்றிய சொன்னலாபுரம் முன்னையினும்  

                       சிறந்திருத்தல் 

 

        எந்தை அல்லமன் அருளினால் நுதல்விழி எரியால்  

        வெந்த அந்நகர் பண்டையின் மும்மடி விளக்கம்  

        வந்த பல்வள மொடுசிறந் ததுநரர் மகிழ  

        உந்து வெவ்வழல் இடைவெந்த ஆடகம் ஒத்து.                                          52 

 

 

            அந்நகர மக்களின் பன்னிரு மகிழ்ச்சி 

 

        ஒருத்தன் வந்தவா றாக்கிய பொற்பணி ஒன்றைத்  

        திருத்த வல்லவன் அழித்ததைச் சிறந்திடச் செயல்போல்  

        புரத்தை நன்றுற அல்லமன் புரிதலும் புரத்தோர்  

        கருத்தில் வந்தெழுந் தோங்கிய தார்வமா கடலே.                                        53 

 

 

            சித்தராமையர் செருக்கிழந்து எண்ணுதல் 

 

        ஒருகண் ஆற்றல்போய் ஒழிந்திட வலியறும் இராமன்  

        இருக ணாலுங்கண் டுளச்செருக் கென்பதொன் றின்றிப்  

        பெருகு நாணெனும் புனல்கொளப் பேரழல் விழுந்து  

        கருகு நாள்மலர் எனமுகங் கரிந்திது கருதும்.                                                   54 

 

 

                          (வேறு)

 

        இறைவனே ஆட்கொள வந்தானெனச் சித்தராமையர்  

                          கருதல் 

 

        என்னொரு நுதல்வி ழித்தீ இவன்தனை இறைஞ்ச லாலே  

        தன்னருள் அதனால் என்னைத் தடுத்துவந் தாள வேண்டிப்  

        பொன்னவிர் சுணங்கு பூத்த புணர்முலை மடந்தை பாகன்  

        இந்நில வரைப்பிற் கோலம் இதுகொடு வந்தான் என்று.                                   55 

 

 

          அல்லமரைச் சித்தராமையர் பணிந்து வேண்டுதல் 

 

        தீயனேன் அறிவி லாமற் செய்பிழை பொறுத்தாட் கோடி  

        பேயனான் ஒருவன் செய்த பிழையினை அவனை ஈன்ற  

        தாயலாற் பொறுப்பார் யாவர் தாணுவே என்றி ராமன்  

        போயெனார் அமுதின் செந்தாட் போதினைப் பற்றிவீழ்ந்தான்.                                     56 

 

 

          அல்லமர் சித்தராமையரின் பிழைபொறுக்க எண்ணல் 

 

        தன்னினம் ஆமி ராமன் சரண்புகில் அவன்செய் தீமை  

        உன்னுவன் அலனெங் கோமான் உடன்றுவந் திலங்கை காக்கம்  

        மன்னவன் கவின்கூர் வெள்ளி மலையெடுத் தலைத்து வந்து  

        பின்னவன் வணங்கி நிற்பப் பிழையுளங் கொண்ட துண்டோ.                                      57 

 

 

          அல்லமர், சித்தராமரைப் பார்த்து வெகுளியை நீக்கக்  

                               கூறல் 

 

        செய்யதாள் மலரின் வீழ்த்த சிந்தனை அருளால் நோக்கி  

        ஐயநீ எழுக நெஞ்சில் அஞ்சலை என்று கூறிக்  

        கையினால் எடுத்த ணைத்துக் கல்வியும் தவமும் மாய்க்கும்  

        வெய்யதாம் வெகுளி தன்னை விட்டிடென் றெந்தை சொல்வான்.                          58 

 

 

        மெலியோர் மேலெழும் வெகுளியே காத்தற்குரியது எனல் 

 

        வலியவன் இடத்தும் ஒத்தான் மாட்டினும் வெகுளி காத்தல்  

        பொலிவுசெய் அறம தென்னப் பொருந்துறா தனையர் தமபால்  

        நலிவுறு வெகுளி செல்லா தாதலால் நலியல் ஆற்றா  

        மெலியவன் இடத்திற் காக்கும் வெகுளியே அறம தென்பர்.                                       59 

 

 

        வீடுபேற்றினைக் கண்ட மெய்யறிவாளன் இத்தன்மையன்  

                               எனல் 

 

        வைதவன் தன்னை நன்று வாழ்த்தினன் எனவும் தீய  

        செய்தவன் தன்னை நல்ல செய்தவன் எனவும் கொள்வோன்  

        கைதவம் அகன்ற முத்தி கண்டவன் அவ்வா றுன்னான்  

        பொய்தவன் என்ப தென்று புகன்றனர் புலவர் அன்றே.                                    60 

 

 

               எவரிடத்தும் வெகுளி கூடாதெனல் 

 

        பெரியவர் தம்மைக் காய்ந்தான் பிறங்கல்கல் லியகோல் ஒப்பான்  

        புரிவன புரியப் பட்டுப் புலம்புவன் ஒத்தார்க் காய்ந்தான்  

        எரிநர கதனில் வீழ்வன் இழிந்தவர்க் காய்ந்தான் என்றால்  

        ஒருவர்தம் இடத்தும் சீற்றம் உறாமையே நன்று மாதோ.                                 61 

 

 

          தவத்தினர் வெகுளியை விடுதல் நன்றெனல் 

 

        யாவர்க்கும் ஒப்ப நன்றாம் என்னினும் சினமி லாமை  

        மூவர்க்கும் அரிய செய்யும் முனிவர்க்குஞ் சிறந்த தென்று  

        தேவர்க்கும் அரிய இன்பம் சித்தரா மப்பேர் அண்ணல்  

        மேவற்கு வடிவங் கொண்டு மேவிய விமலன் சொன்னான்.                                       62 

 

 

        சிறியேனை ஆட்கொண்டது சிறந்ததெனச் சித்தராமையர்  

                               கூறல் 

 

        அல்லமன் அறைந்த மாற்றம் அறிந்துநஞ் சித்த ராமன்  

        சொல்லுவன் முத்தி எய்தும் துணையசா தனங்கள் எல்லாம்  

        இல்லையென் னிடத்தி லேனும் என்னைநீ வலிந்தாட் கொள்ள  

        நல்லவன் ஆகச் செய்த நன்மையே நன்மை என்று.                                              63 

 

 

                      இதுவும் அது 

 

        கருத்தழி கடமி றங்கு கவுட்கரி வலிந்து பற்றித்  

        திருத்துபு தன்கால் ஏவும் செயல்செயக் கொள்வ தன்றி  

        ஒருத்தல்வந் தறிந்து தானே உறவுகொண் டிடுவ துண்டோ  

        தெரித்திடில் அடிய னேனின் திருவடிக் கத்தி றத்தேன்.                                    64 

 

 

                      இதுவும் அது 

 

        அடல்மலி வீரன் வீரம் அவனெதிர் மலைந்து நின்றோன்  

        படைமிசை கொண்டு காணப் படுமது போல உன்றன்  

        கடல்மலி அருளின் ஆற்றல் கண்டிடப் படுமிங் கென்றன்  

        கொடுமையின் மிகையால் என்று குடந்தம்பட் டழுங்கிக் கூறி.                                     65 

 

 

        சித்தராமையர் வீடுபேற்றிற்கு வழிகாட்ட வேண்டுமெனல் 

 

        என்குறை நினையா தெந்தாய் இனித்திரு வுளமி ரங்கி  

        நன்குறு முத்தி சேரும் நன்நெறி காட்டு கென்று  

        தன்குறை இரந்து ளைந்து தனைநிகர் சித்த ராமன்  

        முன்கரை இறந்த அன்பான் முதல்வனை வணங்கி னானால்.                                      66 

 

 

          அல்லமதேவர் சித்தராமையருக்கு அருளுரை கூறத்  

                          தொடங்கல் 

 

        வணங்கிய அவனை ஞான வாரிதி அருளால் நோக்கி  

        இணங்கிய பருவங் காணும் இவன் தனக் கின்ப முத்தி  

        அணைந்திடு நெறியீ தென்ன அறைவமென் றுளத்துட்கொண்டு  

        பிணங்குறு பிறவி என்னும் பிணிமருந் தனையான் சொல்வான்.                                  67 

 

 

          பொருளுக்காக மெய்ப்பொருளை உரைப்போன் பதர் எனல் 

 

        பருவமுற் றிலர்க்கு முக்கட் பகவனா கமத்தின் உண்மைப்  

        பெருமையைப் பொருளை எண்ணிப் பெருமிதத்து ரைப்பில் அன்னான்  

        குரவரிற் பதடி என்ப குறித்துநற் பருவ நோக்கி  

        அருள்செயிற் குரவர் சிங்கம் அவனெனா அறைவன் ஐயன்.                                       68 

 

 

          வீடுபேற்றிற்கு மெய்யறிவொன்றே காரணம் எனல் 

 

        உரைசெயிற் பரம ஞானம் ஒன்றுமே முதிக் கேது  

        சரியைநற் கிரியை யோகந் தாமொரு மூன்று ஞான  

        மருவுதற் கேது என்று மறைபுகன் றுரைக்கும் இந்தக்  

        கருவியைப் பொருளென் றெண்ணிக் களிப்பவர் கயவர் அன்றே.                           69 

 

 

         கருமமும் யோகமும் கரணத்தைப் புனிதமாக்கும்  

                               எனல் 

 

        கருமமும் யோகந் தானும் கரணத்தைப் புனிதம் ஆக்கிப்  

        பொருமிடர் வாயில் தோறும் புக்குழல் கறங்குபோலத்  

        தெருமரா துள்நிறுத்துத் தெளிந்தவக் கரணம் தன்னால்  

        நிருமலன் ஆகும் ஈசன் நித்தனென் றுணர்வு திக்கும்.                                            70 

 

 

            இறைவனை நினைதலால் குருவருள்பெற்று  

                       உண்மையுணர்வன் 

 

        நித்தியன் நிமலன் என்னும் நினைவுறின் அனித்தம் ஆகிப்  

        பொய்த்தழி உடம்பு டம்பைப் பொருந்திய பொருள்வெ றுத்து  

        மெய்த்தருள் குரவன் தன்னை விரும்பினன் சென்று சார்ந்து  

        தத்துவம் உதறி நின்ற தனியறி வினையே காணும்.                                             71 

 

 

         புலன்களை ஒழித்தால் மற்றவை தாமே விலகும் எனல் 

 

        புலன்களை ஒழித்த போதே பொறிகளும் பூதம் ஐந்தும்  

        கலங்குறு கரண நான்கும் கலாதியும் சுத்தம் ஐந்தும்  

        விலங்குறும் அடியில் வைத்த வெறுங்குடம் தள்ளின் மேல்மேல்  

        மலங்குற ஒருங்க டுக்கு மட்கலம் விழுத லேபோல்.                                             72 

 

 

          மனம் இறந்தால் மற்றவைகளெல்லாம் மாளும் 

 

        இந்தியம் ஓரொன் றாய்விட் டிடின்மற்றை ஒன்று சாரும்  

        முந்திய மனம் அழிப்ப முற்றும்போல் மணிய பாம்பின்,  

        ஐந்தலை களினுள் ஒன்றை அரிந்திடின் மற்றொன் றாலம்  

        சிந்திடும் மிடற ரிந்தால் தீர்ந்திடும் ஒருங்கு மாதோ.                                             73 

 

 

               சித்தராமையருக்கு அருள் புரிதல் 

 

        ஆதலான் மனம டங்கில் அங்கலிங் கங்கள் தம்முள்  

        பேதமோ அபேத மோவென் றழிவுறு பித்து நீங்கும்  

        தீதிலாய் என்றி யம்பிச் சித்தரா மற்கு நாவால்  

        ஓதொணா உணர்வின் உண்மை உணர்த்தினன் குருகு கேசன்.                                     74 

 

 

         பெரும் பேறுபெற்றேன் என்று சித்தராமையர் மகிழல் 

 

        மனிதருள் உரகர் சித்தர் வானவர் கணங்கள் தம்முள்  

        முனிவருள் என்போல் நின்றன் முழுதருள் பெற்றார் இல்லை  

        இனியெனை நிகர்வார் யாவர் என்றருட் குரவ னார்தம்  

        பனிமலர் அடியில் வீழ்ந்து பணிந்தனன் சித்த ராமன்.                                            75 

 

 

               அல்லமதேவர் சொன்னலாபுரத்தில்  

                     எழுந்தருளியிருத்தல் 

 

        இப்பரி சருளி னாலே இராமனுக் குபதே சித்துச்  

        செப்பரும் அவன்குற் றேவல் செய்யிய உளம கிழ்ந்து  

        கைப்படும் அமிர்தம் அன்ன கருணைவா ரிதியி ருந்நான்  

        துப்புர வமைந்து சீர்சால் சொன்னலா புரத்து மாதோ.                                             76 

 

 

பதின்மூன்றாவது - சித்தராமையர் கதி முடிந்தது

 

கதி 13 - க்குச் செய்யுள் - 723

 


 

14. வசவண்ணர் கதி

[இக் கதிக்கண், அல்லமதேவர் சித்தராமையருடன் சொன்னலாபுரத்தில் எழுந்தருயிருக்குங்கால் வசவண்ணருடைய புகழ் யாண்டும் பரவுகின்றது. வசவண்ணரைச் சித்தராமையருக்குக் காட்ட அல்லமதேவர் எண்ணுகிறார். சித்தராமையரையும் உடனழைத்துக்கொண்டு கலியாணபுரத்தை நோக்கி வருகிறார். கலியணபுரத்தை நோக்கி அடியவர் திருக்கூட்டஞ் செல்லுதலைக் கண்டு இருவரும் மகிழ்ச்சியடைகின்றனர். சித்தராமையருக்கு அல்லமதேவர் கலியாணபுர வளத்தினைத் தனித்தனியே யெடுத்துக் கூறுகிறார். பொழில் வயல் முதலிய பலவிடங்களையும் அவற்றின் சிறப்பையுந் தனித்தனியே எடுத்துக் கூறிச் செல்லுகிறார். இறுதியில் இருவரும் வசவருடைய வீட்டு முன்றிலையடைந்து நிற்கின்றனர். இவர்களுடைய வரவைக் கண்ட அப்பணதேவர் வசவண்ணர்க் குணர்த்துகின்றார். வசவண்ணர் இவர்களை உள்ளே அழைக்குமாறு அப்பணதேவருக்கு ஆணையிடுகிறார். அச்செய்தியை அப்பணதேவர் அல்லமதேவருக்குஞ் சித்தராமையருக்கும் அறிவிக்கிறார். வசவண்ணர் எதிர்வராமையைக் கண்ட அல்லமதேவர், ‘அரசியல் நடத்துகிறவர்கள்பால், ஐயமேற்றுண்பவர் வருவது முறைமையன்று, நீ செல்’ என்று பணிக்கின்றார். இச்செய்தியை அப்பணதேவர் வசவண்ணரிடஞ் சென்று கூறுகிறார். அடியார்கள் திருக்கூட்டத்தினுடன் வசவண்ணர் விரைந்தோடி வந்து தம் பிழையைப் பொறுத்தருள வேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறார். மாச்சிதேவன், கின்னரப் பிரமன், அடியார்கள் முதலியோரும் வசவண்ணர் பிழையைப் பொறுக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கின்றனர். அல்லமதேவர் பொய்ம்முனிவு கொண்டு, ‘நீங்கள் பேசுவதற்குக் கற்றிருக்கின்றீர்களே தவிரச் சொல்லுக்குத் தக்க நடத்தையைக் கற்கவில்லை. உங்களைப் பார்க்கினுந் கூத்தாடுந் தொழிலினர் சிறந்தவர்களாவர்’ என்று அன்பின் பெருமையை அவர்களுக்கு விரித்துரைக்கிறார். அடியார்களும் சித்தராமையரும் வசவண்ணர் பிழையைப் பொறுத்து அருள் புரியுமாறு வேண்டிக்கொள்கின்றனர். வசவண்ணர் தம் பிழையைப் பொறுத்தருள் புரியுமாறு மீண்டும் அல்லமதேவரைப் போற்றுகின்றார். அல்லமதேவர் எல்லார்க்குந் திருவருள் செய்து அடியார்களோடு திருமடத்திற்கு எழுந்தருளினார் என்னுஞ் செய்திகள் விரித்துரைக்கப் பெறுகின்றன.]

 

 

                    நூலாசிரியர் கூறல் 

 

        சித்த ராமனோ டாரியன் அல்லம தேவன்  

        பத்த ராகிய பயிர்செய்கல் யாணமாம் பழனத்  

        துய்த்த நீரெனும் வசவனை உழவரிற் கண்டு  

        மெய்த்தும் ஆர்வமங் கடைந்தமை யாமினி விரிப்பாம்.                                   1 

 

 

         அல்லமதேவர் சொன்னலாபுரத்தில் இருத்தல் 

 

        அன்னம் மீனுடன் நிகழ்வறக் கொண்டமை யாமல்  

        செந்நெல் ஆர்வயல் தீப்பசி ஆற்றுபு சிறந்த  

        சொன்ன லாபுரம் தவஞ்செய்த தென்றுவான் துதிப்ப  

        என்னை யாளுடை அல்லமன் இருந்தருள் நாளில்.                                               2 

 

 

          உலகத்தினர், வசவண்ணர் புகழையறிந்து  

                         மகிழ்தல் 

 

        சந்த மேலவுகல் யாணமா நந்தனந் தன்னில்  

        நந்தி நாள்மலப் புகழ்மண நயந்தசொல் வளியால்  

        வந்து காதெனும் நாசியிற் புகமிக மகிழ்ந்த  

        துந்து வார்திரைக் கருங்கடல் உடுத்தபே ருலகம்.                                        3 

 

 

               வசவண்ணர் புகழின் தன்மை 

 

        முக்கண் நாயகன் புகழெனும் மூரலுண் பதற்குத்  

        தக்க தீஞ்சுவைக் கறியெனச் சமைந்தது வசவன்  

        மிக்க வான்புகழ் அவற்றினை மாதவர் விரவித்  

        துய்க்கு நாவினில் துய்த்தனர் பவப்பசி தொலைய.                                               4 

 

 

           சித்தராமையருக்கு வசவண்ணரைக் காட்ட  

                         முற்படல் 

 

        விலக்கும் உற்பவச் சித்தரா மற்குமுன் விளம்பும்  

        இலக்க ணத்தினுக் கருணந்தி யெனுமிலக் கியத்தைக்  

        கலக்க மற்றறிந்  திடுவதற் குதாரணங் காட்ட  

        மலக்க மற்றநம் அல்லமன் திருவுளம் வலித்தான்.                                               5 

 

 

         அல்லமதேவரும் சித்தராமையரும் புறப்படல் 

 

        அடிய வர்க்கெளி யானெனும் அவனெம தகத்தில்  

        குடியி ருக்குமவ் விராமனை உடன்கொடு குறிலோர்  

        நெடில் அடுத்தநல் நிரையென அந்நகர் நீங்கிக்  

        கொடி மதிற்கலி யாணமா நகர்வழிக் கொண்டான்.                                               6 

 

 

          சிவனடியார் கூட்டத்தைக் கண்டு இருவரும்  

                          மகிழ்தல் 

 

        நறும்ப ழஞ்செறி தனியிடம் மொய்த்திட நண்ணும்  

        எறும்பொ ழுங்கென அரனடி யவர்திரள் எழுந்து  

        மறந்தும் வெஞ்சமண் குண்டரை இணங்குறா வசவன்  

        உறும்பு ரம்புகல் இருவரும் கண்டுளம் உவந்தார்.                                        7 

 

 

        அடியவர் வேண்டியன பெற்றுச் செல்லலைக்  

                          காணல் 

 

        தம்பி ரானருள் வசவனாக் கியவறச் சாலைக்  

        கும்ப வாசநீர் முதலிய வேண்டுவ கொண்டு  

        வம்பு லாமர் வனத்தயர் வுயிர்த்துநல் வழிசேர்ந்  

        தெம்பி ரானடி யவர்திரள் ஏகுதல் கண்டார்.                                                     8 

 

 

             இருவரும் கலியாணபுரம் சேர்தல் 

 

        பாண்டில் மாவளம் சிவிகையூர்ந் தேகுநர் பரிந்து  

        வேண்டு மாறுகொள் வேடத்தர் துறந்தவர் விரதர்  

        ஈண்டு மாறுகண் டுவந்துசென் றெழிலலங் கார  

        காண்டம ஆமெனும் மங்கல புரத்தினைக் கண்டார்.                                              9 

 

 

          அல்லமர் கலியாணபுரச் சிறப்பைக் கூறல் 

 

        கண்டு செல்லுமப் போதிலந் நகர்வளம் கருத்தில்  

        கொண்ட அல்லமன் திருவுளம் மிகக்களி கூர்ந்து  

        பண்டை நல்லிசைப் புலவர்சொல் இராமனைப் பார்த்து  

        மண்டு பல்வளம் காட்டுவன் தனித்தனி வகுத்து.                                         10 

 

 

            குளிர்ச்சி மிகுந்த பொழிலைக் காட்டுதல் 

 

        தனைவி ரும்பிவந் தடைந்தவர் தம்மைமுன் வெறுத்த  

        தினக ரன்கதிர் விரும்புறச் செய்தளித் திரள்கள்  

        நனிவி ருந்துணும் கடிமலர் சுமந்துபொன் னகரார்  

        கனிவி ரும்புதண் தொழில்நிகழ் வதையெதிர் காணாய்.                                   11 

 

 

              வண்டுகள் திரிதலைக் காட்டுதல் 

 

        பூவி னோடுசெந் தேன்மழை ஒழிவறப் பொழியும்  

        காவி னோடுவள் இதழவிழ்ந் தொழுகுதேங் கமல  

        வாவி யோடுநல் இசைபயில் அஞ்சிறை வண்டு  

        பாவி னோடுவண் குழலெனத் திரிதலைப் பாராய்.                                               12 

 

 

           கொக்குகள் மீன் கவர்தலைக் காட்டுதல் 

 

        கடிம லர்ப்பசுந் தேன்துளி பிலிற்றுபைங் காவைக்  

        குடியி ருக்குமவ் வளவெனக் கொண்டுவெண் குருகு  

        மடிய டுத்தவர் எனவிருந் திளங்கயல் வரலும்  

        நொடியி னிற்கவர் தண்பணை மருதமும் நோக்காய்.                                             13 

 

 

         நெற்கதிர்கள் வளைந்துநிற்பதைக் காட்டுதல் 

 

        குதிரை யங்கதிர் மணிக்குட நீர்குடிப் பதுபோல்  

        அதிரி ளங்கமஞ் சூல்வளை தவழ்வயல் அணிநெல்  

        கதிர்வ ளைந்துசெந் தாமரை வாயுறக் கவிழ்ந்து  

        நுதிபொ ருந்திய அழகையும் ஐயநீ நோக்காய்.                                           14 

 

 

               பொன்எயில் வட்டத்தைக் காட்டல் 

 

        இங்குத் தன்னுள்வாழ் பயிற்சியால் இறந்துயிர் போயும்  

        அங்குப் பொன்னெயில் வட்டத்துள் இருள்மனத் தமணர்  

        தங்கற் குன்னுமிப் பொன்னெயில் வட்டமும் சடைமேல்  

        கங்கைப் பெண்ணமர் பரனடிக் கன்பநீ காணாய்.                                          15 

 

 

             கோபுர வாயிற்படியைக் காட்டுதல் 

 

        திறந்து மூடுநின் நுதலிமை விழியெனச் சேர்ந்து  

        பிறந்து மாமணிக் கதவிரு புடையினும் பெற்றுச்  

        சிறந்த கோபுர வாய்தலும் மலர்மிசைத் தெய்வம்  

        பறந்து நாடிய முடியிறைக் கன்பநீ பாராய்.                                                      16 

 

 

           திருத்தெருவின் சிறப்பைக் காட்டுதல் 

 

        இலங்கு நீறெனும் கவசமிட் டக்கமென் றியம்பும்  

        அலங்கல் வாகைவேய்ந் தஞ்செழுத் தத்திரம் அடுத்த  

        நலங்கொள் வீரராம் பத்தர்தம் மறுகமண் நள்ளார்  

        கலங்கு பாசறை போன்றெதிர் நிகழ்வது காணாய்.                                               17 

 

 

           மாளிகைக் கொடிகளைக் காட்டுதல் 

 

        கட்டு வார்சடைக் கண்ணுதல் பூசனைக் கருமம்  

        அட்டு மாதவர் தீம்பசி ஆற்றுறும் அறமுள்  

        இட்டு மேற்புறம் கண்டவர் கொடியன என்னப்  

        பட்டு மாளிகை பற்பல நிகழ்வன பாராய்.                                                       18 

 

 

             கிளிகளின் மயக்க உணர்வைக் கூறுதல் 

 

        பொறித்த வாழையின் கனியினைக் கடைத்தலை பொருந்தக்  

        குறித்தி டாதுண வெனக்கறித் தலகுநோய் கொண்டு  

        நிறுத்து வாழையின் கனியுமச் செய்கையாய் நினைந்து  

        கறித்தி டாதமர் செம்முகப் பசுங்கிளி காணாய்.                                           19 

 

 

         கிள்ளைகள், வசவண்ணர் புகழ்கூறலைக் காட்டல் 

 

        வள்ளல் நல்வச வன்புகழ் வாயினால் வழுத்தா  

        தெள்ளும் வல்லமண் குண்டர்தம் பிறப்பினும் இழிப்பில்  

        புள்ளும் நல்லன எனஇளம் பூவையோ டிருந்து  

        கிள்ளை அவ்வச வன்புகழ் சொல்வது கேளாய்.                                          20 

 

 

           வசவண்ணர் மனைவாசலையடைதல் 

 

        என்று கூறியவ் விராமனை மகிழ்வுசெய் தின்ப  

        மன்றல் வீதியில் வசவநா யகன்திரு மனைமுன்  

        குன்று போலுயர் கோபுர வாய்தலைக் குறுகச்  

        சென்று மேவினன் எம்மையாள் அல்லம தேவன்.                                               21 

 

 

         வசவண்ணர் மனைமுன் மாதவர் குழாத்தைக் காணல் 

 

        தொடர்ந்து ளைக்கைவெண் மருப்புரற் காற்கருந் தோல்தோல்  

        உடுத்த மெய்ப்பரன் கொலைகுறித் தெடாமழு ஒப்ப  

        அடைத்த லைக்குறித் திடாதசெம் மணிக்கத வடுத்த  

        கடைத்த லைக்கண்மா தவர்குழாம் நெருங்குதல் கண்டார்.                                        22 

 

 

                            (வேறு)

  

               அடியார்களின் பலவகைச் செயல்கள் 

 

        அறுசுவை அடிசில் உண்பான் அடைகுவார் அடிசில் உண்டு  

        மறுகிடை வருவார் சான்றோர் வைகிய இடங்கள் நாடிக்  

        கறியொடு மருவு சோற்றுக் காவடி சுமந்து செல்வார்  

        நறுமலர் சுமந்து தண்ட நாதன்பூ சனைக்குப் போவார்.                                    23 

 

 

                   பற்றற்றோரும் பற்றுற்றோரும் 

 

        செஞ்சரண் இறைஞ்சி நல்கும் செழுந்துகில் கிழித்துக் கீள்கொண்  

        டெஞ்சிய மிகையென் றெண்ணி இட்டவண் அகன்று போவார்  

        அஞ்சுடர் மணிப்ப சும்பொன் அணிதுகில் அலங்கல் சாந்தம்  

        வஞ்சியர் தமக்க ளிப்பத் தருகென வாங்கிச் செல்வார்.                                    24 

 

 

          வசவண்ணரை அடியார்கள் காணும் காரணங்கள் 

 

        நிந்தைசெய் தெமையெ திர்ந்த நெறியிபுன் சமணர் தங்கள்  

        மைந்தினை அறியச் சொல்வம் வசவனுக் கென்று செல்வார்  

        நந்தியை வணங்க வேறு நகர்தொறு நின்று போந்து  

        சிந்துரம் வயமா அம்பொற் சிவிகைவிட் டிழிந்து செல்வார்.                                       25 

 

 

         அல்லமர், சித்தராமையர், அக்காட்சிகளைக் கண்டு  

                             நிற்றல் 

 

        சீர்கெழு வசவற் பாடத் திவவியாழ் கொண்டு செல்வார்  

        ஆகிவில் மதனை வென்றோன் அடியவர் குழநெ ருங்கும்  

        ஏர்கெழு மணிப்ப சும்பொன் இருங்கடை நோக்கி நின்றார்  

        ஓகையோ டலமன் நாமத் தொருவனும் இராமன் தானும்.                                26  

 

 

          அப்பணதேவர் என்பார், வசவண்ணரிடஞ் சென்று  

                               கூறல் 

 

        ஆயிடை நின்றோர் தம்மை அப்பணப் பெயரின் மிக்க  

        தூயவன் எதிர்கண் டோகை சொல்லுவல் ஐயற் கென்று  

        கோயிலுள் அமல பூசை குழாத்தொடு செய்யும் போதில்  

        போயினன் வசவ னோடு புகழ்ந்திது புகல லுற்றான்.                                             27 

 

 

             அடியார்கள் இருவர் வந்துள்ளார் எனல் 

 

        மாதவர் இருவர் ஐய மழைமதர் நெடுங்கண் மங்கை  

        பாதியன் உருவி ரண்டு படைத்துவந் தனனே என்னச்  

        சோதிய தரளக் கோவைத் தோரண வாய்தல் முன்னம்  

        வீதியில் நின்றார் என்று விளம்பினன் தவத்தின் மிக்கான்.                                28 

 

 

           வசவண்ணர் அவர்களை அழைத்துவரச் சொல்லல் 

 

        என்றவன் இயம்ப நந்தி எனும் பெயர்க் கருணைக் குன்றம்  

        கன்றினை நினைந்து நெஞ்சம் கரைந்துவந் தணையும் தாய்க்கிங்  

        கொன்றொரு தடையும் உண்டோ ஒல்லைநீ தருதி என்னச்  

        சென்றவன் அமல னோடு சித்தரா மனைவ ணங்கி.                                              29 

 

 

            அழைத்த அப்பணரை நோக்கி அல்லமர் கூறல் 

 

        பரசிவ லிங்க பூசை பண்ணிய பயனே உங்கள்  

        வரவென உளம கிழ்ந்தான் வசவனீர் வருக என்ன  

        வெருவொடும் உளமு ளைந்து மெய்த்தவன் விளம்ப எங்கள்  

        குருபரன் முனிவான் போலக் குறுநகை கொண்டு கூறும்.                                 30 

 

 

         அல்லமர் வதற் குடன்படாமையை அப்பணர் வசவர்க்குக்  

                               கூறல் 

 

        அரசியல் அடைந்தார் தம்பால் ஐயமேற் றருந்து கின்றோர்  

        வருசெயல் வரிசை அன்று மறித்துநீ போதி என்னா  

        உரைசெய அமலன் அப்பன் உளம்வெரீஇக் கடிது மீண்டு  

        வரைசெயும் வயிரத் திண்தோள் வசவநா யகற்குச் சொன்னான்.                                  31 

 

 

           அல்லமர் முன் சென்று போற்றாதது தவறென வசவர்  

                               வருந்தல் 

 

        அல்லமன் புகன்ற மாற்றம் அப்பணன் சென்று நின்று  

        சொல்லலுந் துணுக்கென் றுள்ளஞ் சொற்றளர்ந் துடல்வியர்த்துப்  

        புல்லவந் தணையும் தாய்முன் பொறாதுதும் பறுத்திட் டோடும்  

        நல்லிளங் கன்று போல்முன் நான்செலா திருந்தேன் என்று.                                       32 

 

 

           மாச்சிதேவர் என்பவர், அல்லமதேவரை எதிர்  

          சென்று போற்றாதிருந்தது தவறு என்று கூறல் 

 

        கரைந்துகு மனமுளைந்து கவலைகொண் டழுங்க நந்தி  

        பெருந்தகை மாச்சி தேவன் பெருங்கடற் பிறந்த சாவா  

        மருந்துதன் எதிர்கி டைத்து மற்றதை வாரிக் கையால்  

        அருந்துற அலசு வான்போல் ஆயினை நீயும் என்றான்.                                   33 

 

 

           வசவண்ணர், அல்லமர் இருந்த இடம் சேர்தல் 

 

        பெருந்தகை மாச்சி தேவன் பேசுசொல் விளக்குத் தூண்டும்  

        துரும்பென உதவச் செம்பொன் தூணெனும் தோளான் மாழ்கி  

        இருந்தவப் பிழையென் மேற்றே என்றடி இறைஞ்சி ஒய்யென்  

        றருந்தவ ரொடுபு றப்பட் டல்லமன் அருகு வந்தான்.                                             34 

 

 

             வசவண்ணர் தம் பிழையைப் பொறுக்குமாறு  

                             வேண்டுதல் 

 

        என்குண மறமே ஆகி யானதில் திரிதல் இல்லேன்  

        நின்குணம் அருளே என்றால் நீயதில் நிற்றி எந்தாய்  

        புன்குண மகவின் தீமை பொறுத்தருள் செய்கை என்னும்  

        தன்குணம் விடுத்தொ ழிக்கும் தாய்வியன் உலகில் உண்டோ.                                    35 

 

 

          அல்லமர் வசவண்ணருடைய திருவடி பணிதல் 

 

        சூத்திரப் பாவை யானச் சூத்திரி நீய ருட்கண்  

        பார்த்தெனைக் குறைய கற்றிப் பணிசெயக் கோடி என்று  

        வாய்த்தநற் குரவன் செந்தா மரையடி மிசைவி ழுந்தான்  

        ஏத்திமெய்ப் பத்தி நீத்தம் எனப்படும் வசவ தேவன்.                                              36 

 

 

               நீ சினங்கொள்ளின் விலக்கலரிதெனல் 

 

        நிலமகள் பொறாது தள்ளின் நிறுத்துநர் யாவர் ஓதை  

        மலிகடல் புரளும் ஆயின் மறிப்பவர் உளரோ எங்கள்  

        தலைவநீ முனிவை ஆயின் தடுப்பவர் உலகில் யாண்டும்  

        இலையிலை அருள்செய் எந்தாய் எனச்சென்ன வசவன் தாழ்ந்தான்.                               37 

 

 

              மாச்சிதேவன், அல்லமதேவரை வேண்டுதல் 

 

        சொற்றிடும் குதலைச் சொல்லில் சொற்றிறம் தெரிதல் போலிச்  

        சிற்றிளங் குமரன் அன்பு செயவடி யிடுமுன் நோக்கேல்  

        சற்றுநின் கடைக்கண் வைத்துத் தண்ணளி புரிக என்று  

        நற்றவ மாச்சி தேவன் நங்குர வனைப்ப ணிந்தான்.                                              38 

 

 

           கின்னரப்பிரமன், அல்லமதேவரை வேண்டுதல் 

 

        உரைமன மெய்யொ ருங்கி உன்பணி செய்ய வல்லோன்  

        தரைமிசை இவன லாது தானொரு வரையும் காணேம்  

        அருள்செய வேண்டும் என்ன அல்லமன் அடிப ணிந்தான்  

        கிரிமகள் கொழுநற் கன்பன் கின்னரப் பிரமன் அம்மா.                                    39 

 

 

               அடியார்கள் அனைவரும் வேண்டுதல் 

 

        எமையெலாம் அடிமை வேண்டின் இவன்பிழை பொறுத்தி என்னா  

        அமையுலாம் பணைமென் தோட்சேய் அரிமதர் மழைக்கண் செவ்வாய்  

        உமைமணா ளனையு வந்த ஒண்தவர் எலாம்ப ணிந்தார்  

        சமையுளார் உணரும் எங்கள் தம்பிரான் சாற்ற லுற்றான்.                                40 

 

 

                 வணங்கியேர்க்கு அல்லமர் கூறல் 

 

        சொல்லிய சொற்கள் கற்றீர் சொற்றவந் நெறியில் நிற்கும்  

        நல்லியல் இல்லை நும்பால் நவில்தரு மாற்றம் ஒன்று  

        புல்லிய செயலொன் றாகப் பெருந்துநர் நம்மில் ஆர்க்கும்  

        பல்லிய மொடுந டிக்கும் பரதரே பெரியர் ஆவார்.                                        41 

 

 

              அன்பின்றிச் செய்யும் அறம் பயனளிக்காதெனல் 

 

        ஆதர விலையேல் வேண்டும் அறத்தினிற் பொருளோர் செம்பொன்  

        பூதர வளவ ளித்தும் பொருளழி வளவே யாகும்  

        ஆதர வுளதேல் நல்கும் பொருளணு வளவென் றாலும்  

        பூதரம் எனவ ளர்ந்து புண்ணியப் பொருள ளிக்கும்.                                              42 

 

 

           அன்பில்லையேல் ஒன்றுமே இல்லை எனல் 

 

        துறவறம் மனைய றஞ்சீர் தூய்மைநற் கல்வி நல்லோர்  

        உறவொடு மகங்கள் தானம் ஒண்தவம் விரதம் பூசை  

        அறிவிவை அனைத்தும் இல்லை ஆதர வில்லை ஆயில்  

        பெறுவன மெய்வ ருத்தம் பெரும்பொருள் அழிவு மாதோ.                                43 

 

 

               அன்பின் அரும்பெருஞ் சிறப்பு 

 

        ஆதர வுடையான் செய்யும் அல்லவும் நல்ல ஆகும்  

        ஆதர விலாதான் செய்யும் நல்லவும் அல்ல ஆகும்  

        ஆதர வதனால் ஆவிக் குருந்துணை இன்ப முத்தி  

        ஆதர வலாது வேறொன் றளித்திடக் கண்ட துண்டோ.                                    44 

 

 

              அடியார்கள் அல்லமரைப் புகழ்ந்து தொழுதல் 

 

        ஆதலால் அன்பி னுஞ்சொல் அகமகிழ் வினைச்செ யாவென்  

        றோதினான் அடியர் தீமை ஒழித்தருள் தொழிலில் நின்றோன்  

        காதலால் வணங்கி னோர்நின் கருணையால் அன்றி யாங்கள்  

        ஏதினால் நல்லர் ஆவேம் என்றடி தொழுது நின்றார்.                                             45 

 

 

              சித்தராமையர் அல்லமதேவரை வேண்டல் 

 

        காஞ்சிரங் கனிதின் றாங்குக் கடையனேன் பிழைபொ றுத்தாய்  

        தீஞ்சுவை அமிர்தம் அன்ன திவ்விய கறியிற் குற்றம்  

        ஆஞ்சுவை அறைதல் போலிவ் வன்பனைச் சீறேல் என்று  

        பூஞ்சரண் மிசைவ ணங்கிப் போற்றினன் சித்த ராமன்.                                    46 

 

 

            அல்லமரை வசவண்ணர் மீண்டும் தொழுதல் 

 

        அடைக்கலம் என்னை ஆளாய் அண்ணலே என்று நந்தி  

        கடிக்கம லங்கள் வென்ற கால்மிசை மீண்டும் தாழ்ந்தான்  

        விடுத்திடேல் என்று சென்ன வசவனும் வீழ்ந்தி றைஞ்சித்  

        தொடிக்கரந் தொழுதான் அன்பர் துதித்தனர் சூழ்ந்து கொண்டு.                                     47 

 

 

           அல்லமர், வசவண்ணருக் கருள்செய்து திருமத்தில்  

                               இருத்தல் 

 

        அல்லமன் எனுமெங் கோமான் அருட்கடைக் கண்வைத் தைய  

        சொல்லுவன் எழுதி என்று துணைக்கையால் எடுத்த ணைத்து  

        நல்லருள் புரிந்து தண்ட நாயகன் திரும டத்துள்  

        எல்லையில் அடியர் சூழ இனிதெழுந் தருளி னானால்.                                    48 

 

 

பதினான்காவது - வசவண்ணர் கதி முடிந்தது

 

கதி 14 - க்குச் செய்யுள் - 771

 

பிரபுலிங்க லீலை : முதல் பாகம்

பிரபுலிங்க லீலை : மூன்றாம் பாகம்

 

Related Content

Eclectic Vedantism By The Rev. Thomas Foulkes

The Virasaiva Religion

இட்டலிங்க அபிடேக மாலை - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

இட்டலிங்க அகவல் - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

குறுங்கழிநெடில் - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்