Hindu Shaiva Devotional Video
(Shaiva Video Gallery)

aum namaH shivAya

Welcome to the Spiritual Video Gallery from the www.shaivam.org.

Dance


திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளியெழுச்சி
   திருவெம்பாவை - (சக்தியை வியந்தது)

திருச்சிற்றம்பலம்

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக்கேட்டேயும் வாள்தடங்கள்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன்வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். 1

பாசம் பரஞ்சோதிக்கு அன்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போ(து) இப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குத்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய். 2

முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். 3

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ
எண்ணிக்கொண்டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விருப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டொம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். 4

மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலாறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். 5

மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய். 6

அன்னே இவையுஞ் சிலவோ பலவமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்
என்னானை என்அரையன் இன்னமுதுஎன்று எல்லாமும்
சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய். 7

கோழி சிலம்புச் சிலம்பும் குருகுஎங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்குஎங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய். 8

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் போத்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்தோம்
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம்ஏலார் எம்பாவாய். 9

பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்று அல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டர்உளன்
கோதில் குலத்தான் றன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆர்உற்றார் ஆர்அயலார்
ஏதவரைப் பாடும் பரிசேலார் எம்பாவாய். 10

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
கையாற் குடைந்து குடைந்துஉன் கழல்பாடி
ஐயா வழியடி யோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல்போற்
செய்யா வெண்ணீறாடி செல்வ சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளர்
ஐயாநீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந் தோங்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். 11

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன் நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ்வானும் குவலயமும் எல்லாமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துஉடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய். 12

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம்கழுவு வார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த
பொங்கும் மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப்
கொங்கைகள் பொங்கப் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். 13

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்
சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதித்திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வதைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய். 14

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையான் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும்
ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 15

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துஉடையான்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையான் இட்டிடையின்
மின்னப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி யவன்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய். 16

செங்க ணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்
எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குஉண் சுருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கள் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 17

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகித்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 18

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கென்று உரைப்போம் கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய். 19

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய். 20


திருப்பள்ளியெழுச்சி - (திரோதான சுத்தி)

போற்றியென் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறை உறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 1

அருணண்இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருனையின் சூரியன் எழவெழ நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம்
திரள்நிரை அருள்பதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே. 2

கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளியொளி உதயத்து
ஓருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 3

இன்னிசை வீணையார் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் துவள்கையர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண்டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 4

பூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்அரியாய் எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 5

பப்பற விட்டிருந்து உணரும்நின் அடியுaர்
பந்தனை வந்தறுத் தார் அவர் பலரும்
மைப்பறு கண்ணியர் மானுடத் தியல்பின்
வணங்குகின்றார் அணங் கின்மண வாளா
செப்புறு கமலங்கண் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 6

அது பழச்சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொணடு இங் கெழுந்தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தர கோச
மங்கையுள்ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்
எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே. 7

முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின்னடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டிவந் தாண்டாய்
ஆரமுதே பள்ளி யெழுந்தருள்யே. 8

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தேகரும் பேவிரும் படியார்
எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே. 9

புவனியில் போய்ப்பிற வாமையின் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேஇந்தப்பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அவர்தம்மெய்க்கருணையும் நீயும்
அவணியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி யெழுந்தருளாயே. 10

திருச்சிற்றம்பலம்


திருவெண்பா பரதநாட்டியம்
   திருவெண்பா - (அணைந்தோர் தன்மை)

திருச்சிற்றம்பலம்

வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்
பொய்யும் பொடியாகா தென்செய்கேன் செய்ய
திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ
மருவா திருந்தேன் மனத்து. 1

ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ
பார்க்கோ பரம்பரனே என்செய்தேன் தீர்ப்பரிய
ஆனந்த மாலேற்றும் அத்தன் பெருந்துறையான்
தானென்பர் ஆரொருவர் தாழ்ந்து. 2

செய்த பிழையறியேன் சேவடியே கைதொழுதே
உய்யும் வகையின் உயிர்ப்பறியேன் வையத்
திருந்துறையுள் வேல்மடுத்தன் சிந்தனைக்கே கோத்தான்
பெருந்துறையில் மேய பிரான். 3

முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான்
பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன் தென்னன்
பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன்
வருந்துயரந் தீர்க்கும் மருந்து. 4

அறையோ அறிவார்க் கனைத்துலகும் ஈன்ற
மறையோனும் மாலுமால் கொள்ளும் இறையோன்
பெருந்துறையும் மேய பெருமான் பிரியா
திருந்துறையும் என்னெஞ்சத் தின்று. 5

பித்தென்னை ஏற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம்
மத்தமே யாக்கும் வந்தென்மனத்தை அத்தன்
பெருந்துறையாள் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும்
மருந்திறவாப் பேரின்பம் வந்து. 6

வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி
ஆரா அமுதாய் அமைந்தன்றே சீரார்
திருத்தென் பெருந்துறையான் என்சிந்தை மேய
ஒருத்தன் பெருக்கும் ஒளி. 7

யாவார்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்
யாவர்க்கும் கீழாம் அடியேனை யாவரும்
பெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க்கென் எம்பெருமான்
மற்றறியேன் செய்யும் வகை. 8

மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த
தேவரும் காணாச் சிவபெருமான் மாவேறி
வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க
மெய்யகத்தே இன்பம் மிகும். 9

இருந்தென்னை ஆண்டான் இணையடியே சிந்தித்
திருந்திரந்து கொள்நெஞ்சே எல்லாம் தருங்காண்
பெருந்துறையின் மேய பெருங்கருணை யாளன்
மருந்துருவாய் என்மனத்தே வந்து. 10

இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும்
துன்பந் தொடர்வறுத்துச் சோதியாய் அன்பமைத்துச்
சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே
ஊராகக் கொண்டான் உவந்து. 11

திருச்சிற்றம்பலம்


திருக்கோவையார் பரதநாட்டியம்
   திருக்கோவையார் எனும் 
திருச்சிற்றம்பலக் கோவையார் 

திருச்சிற்றம்பலம்

வளைபயில் கீழ்கடல் நின்றிட மேல்கடல் வான்நுகத்தின்
துளைவழி நேர்கழி கோத்தெனத் தில்லைத்தொல் 
				லோன்கயிலைக்
கிளைவயின் நீக்கிஇக் கொண்டைஅங் கண்ணியைக் 
				கொண்டுதந்த
விளைவயல் வால்விய வேன்நய வேன்தெய்வம் 
			மிக்கனவே. .. 6

சிறைவான் புனல்தில்லைச் சிற்றம் பலத்தும்என் 
			சிந்தையுள்ளும்
உறைவான் உயர்மதில் கூடலின் ஆய்ந்தஒண் தீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனை யோஅன்றி ஏழிசைச் சூழல்புக்கோ
இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந்(து) 
			எய்தியதே. 20

சிலம்பணி கொண்டசேர் சீறடி பங்கன்தன் சீரடியார்
குலம்பணி கொள்ள எனைக்கொடுத் தோன்கொண்டு 
				தான்அணியும்
கலம்பணி கொண்டிடம் அம்பலம் கொண்டவன் 
				கார்க்கயிலைச்
சிலம்பணி கொண்டநும் சீறூர்க்(கு) உரைமின்கள் 
			செல்நெறியே. .. 54

பிழைகொண்(டு) ஒருவிக் கெடா(து)அன்பு செய்யின் 
			பிறவியென்னும்
முழைகொண்(டு) ஒருவன்செல் லாமைநின்(று) 
		அம்பலத்(து) ஆடுமுன்னோன்
உழைகொண்(டு) ஒருங்(கு)இரு நோக்கம் பயின்றஎம் 
			ஒண்ணுதல்மாந்
தழைகொண்(டு) ஒருவன்என் னாமுன்னம் உள்ளம் 
				ச்தழைத்திடுமே. .. 65

மைவார் கருங்கண்ணி செங்கரம் கூப்பு மறந்துமற்றப்
பொய்வா னவரிற் புகாதுதன் பொற்கழற் கேயடியேன்
உய்வான் புகவொளிர் தில்லைநின் றோன்சடை 
				மேல(து)ஒத்துச்
செவ்வான் அடைந்த பசுங்கதிர் வெள்ளைச் 
			சிறுபிறைக்கே. .. 67

சங்கம் தருமுத்தி யாம்பெற வான்வழி தான்கெழுமிப்
பொங்கும் புனற்கங்கை தாங்கிப் பொலிகழிப் பாறுலவு
துங்க மலிதலை யேந்தலின் ஏந்திழை தொல்லைப்பன்மா
வங்கம் மலிகலி நீர்தில்லை வானவன் நேர்வருமே. .. 85

ஈசற்(கு) யான்வைத்த அன்பின் அகன்றவன் வாங்கியஎன்
பாசத்தின் காரென்(று) அவன்தில்லை யின்ஒளி 
				போன்றவன்தோள்
பூ(க)அத் திருநீ(று) எனவெளுத்(து) அங்கவன் 
				பூங்கழல்யாம்
பே(சு)அத் திருவார்த்தை யிற்பெரு நீளம் 
			பெருங்கண்களே. .. 109

காரணி கற்பகம் கற்றவர் நற்றுணை பாணர்ஒக்கல்
சீரணி சிந்தா மணியணி தில்லைச் சிவனடிக்குத்
தாரணி கொன்றையன் தக்கோர்தம் சங்க நிதிவிதிசேர்
ஊருணி உற்றவர்க்(கு) ஊரன்மற்(று) யாவர்க்கும் 
				ஊதியமே. ... 400

திருச்சிற்றம்பலம்


கோயில் திருப்பதிகம் (திருவாசக நடனம்)
கோயில் திருப்பதிகம் 

திருச்சிற்றம்பலம்

 1. மாறிநின்றென்னை மயங்கிடும் வஞ்சப்
    புலனைந்தின் வழியடைத் தமுதே
    ஊறிநின்றென்னுள் எழுபரஞ்சோதி
    உள்ளவா காணவந்தருளாய்
    தேறலின் தெளிவே சிவபெருமானே
    திருப்பெருந்துறையுறை சிவனே
    ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த
    இன்பமே என்னுடை அன்பே. 

    2. அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை
    ஆனந்த மாய்க் கசிந்துருக
    என்பாம் அல்லா இன்னருள் தந்தாய்
    யானிதற் கிலனொர்கைம்மாறு
    முன்புமாய்ப் பின்னும் முழுதுமாய்ப்
    பரந்த முத்தனே முடிவிலா முதலே
    தென்பெருந்துறையாய் சிவபெருமானே
    சீருடைச் சிவபுரத்தரைசே. 

    3. அரைசனே அன்பர்க் கடியனே னுடைய
    அப்பனே ஆவியோ டாக்கை
    புரைபுரை கனியப் புகுந்துநின்றுருக்கிப்
    பொய்யிருள் கடிந்த மெய்ச்சுடரே
    திரைபொரா மன்னும் அமுதத் தெண்கடலே
    திருப்பெருந்துறையுறை சிவனே
    உரையுணர் விறந்துநின்றுணர்வதோர் உணர்வே
    யானுன்னை உரைக்குமா றுணர்த்தே. 

    4. உணர்ந்த மாமுனிவர் உம்பரோ டொழிந்தார்
    உணர்வுக்குந் தெரிவரும் பொருளே
    இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே
    எனைப் பிறப் பறுக்கும் எம்மருந்தே
    திணிந்ததோர் இருளில் தெளிந்ததூ வெளியே
    திருப்பெருந்துறையுறை சிவனே
    குணங்கள் தாமில்லா இன்பமே உன்னைக்
    குறுகினேற் கினியென்ன குறையே. 

    5. குறைவிலா நிறைவே கோதிலா அமுதே
    ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே
    மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தேன்
    மனத்திடை மின்னிய மன்னே
    சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப்பாயும்
    திருப்பெருந்துறையுறை சிவனே
    இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய்
    இனியுன்னை யென்னிரக் கேனே. 

    6. இரந்திரந் துருக என்மனத் துள்ளே
    ஏகின்ற சோதியே இமையோர்
    சிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய்
    திருப்பெருந்துறையுறை சிவனே
    நிரந்தஆகாயம் நீர்நிலம் தீகால்
    ஆயவை அல்லையாய் ஆங்கே
    கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக்
    கண்ணுறங் கண்டுகொண்டின்றே. 

    7. இன்றெனக் கருளி இருள்கடிந்துள்ளக்
    தெழுகின்ற ஞாயிறே போன்று
    நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்
    நீயலால் பிறிது மற்றின்மை
    சென்றுசென்றுணுவாய்த் தேய்ந்துதேய்ந்தொன்றாம்
    திருப்பெருந்துறையுறை சிவனே
    ஒன்றும் நீயல்லை அன்றியொன் றில்லை
    யாருன்னை அறியகிற்பாரே. 

    8. பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்
    பரந்ததோர் படரொளிப் பரப்பே
    நீருறு தீயே நினைவதேல் அரிய
    நின்மலா நின்னருள் வெள்ளச்
    சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே
    திருப்பெருந்துறையுறை சிவனே
    ஆருற வெனக்கிய காரய லுள்ளார்
    ஆனந்தம் ஆக்குமென் சோதி. 

    9. சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம்
    ஒருவனே சொல்லுதற் கரிய
    ஆதியே நடுவே அந்தமே பந்தம்
    அறுக்கும் ஆனந்தமா கடலே
    தீதிலா நன்மைத் திருவருட்குன்றே
    திருப்பெருந்துறையுறை சிவனே
    யாதுநீ போவதோர் வகையெனக்கருளாய்
    வந்துநின் இணையடி தந்தே. 

    10. தந்ததுன் தன்னைக் கொண்டதென் றன்னைச்
    சங்கரா ஆர்கொலோ சதுரர்
    அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்
    யாதுநீ பெற்றதொன் றென்பால்
    சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்
    திருப்பெருந்துறையுறை சிவனே
    எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்
    யான் இதற் கிலன்ஓர்கைம் மாறே.

திருச்சிற்றம்பலம்


திருச்சிற்றம்பலக் கோவையார் (திருக்கோவையார்) பரதநாட்டியம்
திருச்சிற்றம்பலக் கோவையார் 

திருச்சிற்றம்பலம்

வளைபயில் கீழ்கடல் நின்றிட மேல்கடல் வான்நுகத்தின்
துளைவழி நேர்கழி கோத்தெனத் தில்லைத்தொல் 
				லோன்கயிலைக்
கிளைவயின் நீக்கிஇக் கொண்டைஅங் கண்ணியைக் 
				கொண்டுதந்த
விளைவயல் வால்விய வேன்நய வேன்தெய்வம் 
			மிக்கனவே. .. 6

சிறைவான் புனல்தில்லைச் சிற்றம் பலத்தும்என் 
			சிந்தையுள்ளும்
உறைவான் உயர்மதில் கூடலின் ஆய்ந்தஒண் தீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனை யோஅன்றி ஏழிசைச் சூழல்புக்கோ
இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந்(து) 
			எய்தியதே. 20

சிலம்பணி கொண்டசேர் சீறடி பங்கன்தன் சீரடியார்
குலம்பணி கொள்ள எனைக்கொடுத் தோன்கொண்டு 
				தான்அணியும்
கலம்பணி கொண்டிடம் அம்பலம் கொண்டவன் 
				கார்க்கயிலைச்
சிலம்பணி கொண்டநும் சீறூர்க்(கு) உரைமின்கள் 
			செல்நெறியே. .. 54

பிழைகொண்(டு) ஒருவிக் கெடா(து)அன்பு செய்யின் 
			பிறவியென்னும்
முழைகொண்(டு) ஒருவன்செல் லாமைநின்(று) 
		அம்பலத்(து) ஆடுமுன்னோன்
உழைகொண்(டு) ஒருங்(கு)இரு நோக்கம் பயின்றஎம் 
			ஒண்ணுதல்மாந்
தழைகொண்(டு) ஒருவன்என் னாமுன்னம் உள்ளம் 
				ச்தழைத்திடுமே. .. 65

மைவார் கருங்கண்ணி செங்கரம் கூப்பு மறந்துமற்றப்
பொய்வா னவரிற் புகாதுதன் பொற்கழற் கேயடியேன்
உய்வான் புகவொளிர் தில்லைநின் றோன்சடை 
				மேல(து)ஒத்துச்
செவ்வான் அடைந்த பசுங்கதிர் வெள்ளைச் 
			சிறுபிறைக்கே. .. 67

சங்கம் தருமுத்தி யாம்பெற வான்வழி தான்கெழுமிப்
பொங்கும் புனற்கங்கை தாங்கிப் பொலிகழிப் பாறுலவு
துங்க மலிதலை யேந்தலின் ஏந்திழை தொல்லைப்பன்மா
வங்கம் மலிகலி நீர்தில்லை வானவன் நேர்வருமே. .. 85

ஈசற்(கு) யான்வைத்த அன்பின் அகன்றவன் வாங்கியஎன்
பாசத்தின் காரென்(று) அவன்தில்லை யின்ஒளி 
				போன்றவன்தோள்
பூ(க)அத் திருநீ(று) எனவெளுத்(து) அங்கவன் 
				பூங்கழல்யாம்
பே(சு)அத் திருவார்த்தை யிற்பெரு நீளம் 
			பெருங்கண்களே. .. 109

காரணி கற்பகம் கற்றவர் நற்றுணை பாணர்ஒக்கல்
சீரணி சிந்தா மணியணி தில்லைச் சிவனடிக்குத்
தாரணி கொன்றையன் தக்கோர்தம் சங்க நிதிவிதிசேர்
ஊருணி உற்றவர்க்(கு) ஊரன்மற்(று) யாவர்க்கும் 
				ஊதியமே. ... 400

திருச்சிற்றம்பலம்


Dance: achappaththu - thiruvasakam
A 5:29 minute clip - Bharathanatyam by the children - Puja, Sarayu (Mangayarkarasi) and Sindhu to the tune of Achapathu from thiruvasagam. Recorded on 30-Jun-2010 Anniversary function of Murugan pugaz pAdum sabhai, Bangalore.
அச்சப் பத்து

திருச்சிற்றம்பலம்

புற்றில்வா ளரவும் அஞ்சேன்
	பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல்
	கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை
	உண்டென நினைந்தெம் பெம்மாற்
கற்றிலா தவரைக் கண்டால்
	அம்மநாம் அஞ்சு மாறே. 1

வெருவரேன் வேட்கை வந்தால்
	வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா
	எம்பிரான் தம்பி ரானாம்
திருவுரு அன்றி மற்றோர்
	தேவர்எத் தேவ ரென்ன
அருவரா தவரைக் கண்டால்
	அம்மநாம் அஞ்சு மாறே.2

வன்புலால் வேலும் அஞ்சேன்
	வளைக்கையார் கடைக்க ணஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி
	அம்பலத் தாடு கின்ற
என்பொலா மணியை ஏத்தி
	இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால்
	அம்மநாம் அஞ்சு மாறே. 3

கிளியனார் கிளவி அஞ்சேன்
	அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடும் மேனி
	வேதியன் பாதம் நண்ணித்
துளியுலாம் கண்ண ராகித்
	தொழுதழு துள்ளம் நெக்கிங்
களியிலா தவரைக் கண்டால்
	அம்மநாம் அஞ்சு மாறே.  4

பிணியெலாம் வரினும் அஞ்சேன்
	பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியி னான்றன்
	தொழும்ப ரோடழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச்
	சேவடி பரவி வெண்ணீ
றணிகிலா தவரைக் கண்டால்
	அம்மநாம் அஞ்சு மாறே. 5

வாளுலாம் எரியும் அஞ்சேன்
	வரைபுரண் டிடினும் அஞ்சேன்
தோளுலாம் நீற்றன் ஏற்றன்
	சொற்பதம் கடந்த அப்பன்
தாளதா மரைக ளேத்தித்
	தடமலர் புனைந்து நையும்
ஆளலா தவரைக் கண்டால்
	அம்மநாம் அஞ்சு மாறே. 6

தகைவிலாப் பழியும் அஞ்சேன்
	சாதலை முன்னம் அஞ்சேன்
புகைமுகந் தெரிகை வீசிப்
	பொலிந்தஅம் பலத்து ளாடும்
முகைநகைக் கொன்றை மாலை
	முன்னவன் பாத மேத்தி
அகம்நெகா தவரைக் கண்டால்
	அம்மநாம் அஞ்சு மாறே. 7

தறிசெறி களிறும் அஞ்சேன்
	தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன்
	விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்க ளேத்திச்
	சிறந்தினி திருக்க மாட்டா
அறிவிலா தவரைக் கண்டால்
	அம்மநாம் அஞ்சு மாறே.  8

மஞ்சுலாம் உருமும் அஞ்சேன்
	மன்னரோ டுறவும் அஞ்சேன்
நஞ்சமே அமுத மாக்கும்
	நம்பிரான் எம்பி ரானாய்ச்
செஞ்செவே ஆண்டு கொண்டான்
	திருமுண்டம் தீட்ட மாட்டா
தஞ்சுவா ரவரைக் கண்டால்
	அம்மநாம் அஞ்சு மாறே. 9

கோணிலா வாளி அஞ்சேன்
	கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியி னானை
	நினைந்துநைந் துருகி நெக்கு
வாணிலாங் கண்கள் சோர
	வாழ்த்திநின் றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால்
	அம்மநாம் அஞ்சு மாறே. 10

திருச்சிற்றம்பலம்


பரதநாட்டியம் - தோடுடைய செவியன்
பண்: நட்டபாடை 

திருச்சிற்றம்பலம்

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. 1

முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவைபூண்டு
வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் 
				தொழுதேத்தப்
பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. 2

நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதிசூடி
ஏர்பரந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்
ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிதுவென்னப்
பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. 3

விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலையோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர்கள்வன்
மண்மகிழ்ந்தவர வம்மலர்க்கொன்றை மலிந்தவரைமார்பில்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. 4

ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை 
				யூரும்மிவனென்ன
அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப்
பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. 5

மறைகலந்தவொலி பாடலோடாடல ராகிமழுவேந்தி
இறைகலந்தவின வெள்வளைசோரவென் 
				னுள்ளங்கவர்கள்வன்
கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர்சிந்தப்
பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. 6

சடைமுயங்குபுன லன்அனலன்னெரி வீசிச்சதிர்வெய்த
உடைமுயங்குமர வோடுழிதந்தென துள்ளங்கவர்கள்வன்
கடன்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிறகன்னம்
பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. 7

வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளைவித்த
உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர்கள்வன்
துயரிலங்கும்முல கிற்பலவூழிகள் தோன்றும்பொழுதெல்லாம்
பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. 8

தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும்
நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன்
வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவரேத்தப்
பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. 9

புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறிநில்லா
ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயம்மிதுவென்னப்
பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. 10

அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர்மேய
பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன்றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரைசெய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளிதாமே. 11

திருச்சிற்றம்பலம்


Dance: Thiruporchunnam - thiruvasagam
A 13 minute clip - Nattiyam by the devotees at Anniversary function of Murugan pugaz pAdum sabhai, Anda Arasu Shivalaya Seva Sanga Bangalore.
 திருப்பொற்சுண்ணம் 

திருச்சிற்றம்பலம்

முத்துநல் தாமம்பூ மாலை தூக்கி
	முளைக்குடம் தூபம்நல் தீபம் வைம்மின்
சத்தியும் சோமியும் பார்மகளும்
	நாமக ளோடுபல் லாண்டி சைமின்
சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும்
	கங்கையும் வந்து கவரி கொண்மின்
அத்தன்ஐ யாறன்அம் மானைப் பாடி
	ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே. 1

பூவியல் வார்சடை எம்பி ராற்குப்
	பொற்றிருச் சுண்ணம் இடிக்க வேண்டும்
மாவின் வடுவகி ரன்ன கண்ணீர்
	வம்மின்கள் வந்துடன் பாடு மின்கள்
கூவுமின் தொண்டர் புறம்நி லாமே
	குனிமின் தொழுமின்எம் கோனெங் கூத்தன்
தேவியுங் தானும்வந் தெம்மை யாளச்
	செம்பொன்செய் சுண்ணம் இடித்தும் நாமே. 2

சுந்தர நீறணிந் தும்மெழுகித்
	தூயபொன் சிந்தி நிதிப ரப்பி
இந்திரன் கற்பகம் நாட்டி எங்கும்
	எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின்
அந்தரர் கோன்அயன் றன்பெருமான்
	ஆழியான் நாதன்நல் வேலன் தாதை
எந்தரம் ஆள்உமை யாள்கொழுநற்
	கேய்ந்தபொற் சுண்ணம் இடித்தும் நாமே 3

காசணி மின்கள் உலக்கை யெல்லாங்
	காம்பணி மின்கள் கறையுரலை
நேச முடைய அடிய வர்கள்
	நின்று நிலாவுக என்று வாழ்த்தித்
தேசமெல் லாம்புகழ்ந் தாடுங் கச்சித்
	திருவேகம் பன்செம்பொற் கோயில் பாடிப்
பாச வினையைப் பறித்து நின்று
	பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே. 4

அறுகெடுப் பார்அய னும்மரியும்
	அன்றிமற் றிந்திர னோடமரர்
நறுமுறு தேவர் கணங்க ளெல்லாம்
	நம்மிற்பின் பல்ல தெடுக்க வொட்டோம்
செறிவுடை மும்மதில் எய்த வில்லி
	திருவேகம் பன்செம்பொற் கோயில் பாடி
முறுவற்செவ் வாயினீர் முக்க ணப்பற்
	காடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே. 5

உலக்கை பலஓச்சு வார்பெரியர்
	உலகமெ லாம்உரல் போதா தென்றே
கலக்க அடியவர் வந்து நின்றார்
	காண உலகங்கள் போதா தென்றே
நலக்க அடியோமை ஆண்டு கொண்டு
	நாண்மலர்ப் பாதங்கள் சூடத் தந்த
மலைக்கு மருகனைப் பாடிப் பாடி
	மகிழ்ந்து பொற்சுண்ணம் இடித்தும் நாமே. 6

சூடகந் தோள்வளை ஆர்ப்ப ஆர்ப்பத்
	தொண்டர் குழாமெழுந் தார்ப்ப ஆர்ப்ப
நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
	நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்பப்
பாடகம் மெல்லடி ஆர்க்கும் மங்கை
	பங்கினன் எங்கள் பராபரனுக்
காடக மாமலை அன்ன கோவுக்
	காடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே. 7

வாட்டடங் கண்மட மங்கை நல்லீர்
	வரிவளை ஆர்ப்பவண் கொங்கை பொங்கத்
தோட்டிரு முண்டந் துதைந்தி லங்கச்
	சோத்தெம்பி ரானென்று சொல்லிச் சொல்லி
நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங் காட்டி
	நாயிற் கடைப்பட்ட நம்மை இம்மை
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப் பாடி
	ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே. 8

வையகம் எல்லாம் உரல தாக
	மாமேரு என்னும் உலக்கை நாட்டி
மெய்யெனும் மஞ்சள் நிறைய அட்டி
	மேதகு தென்னன் பெருந்துறையான்
செய்ய திருவடி பாடிப் பாடிச்
	செம்பொன் உலக்கை வலக்கை பற்றி
ஐயன் அணிதில்லை வாண னுக்கே
	ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே. 9

முத்தணி கொங்கைகள் ஆட ஆட
	மொய்குழல் வண்டினம் ஆட ஆடச்
சித்தஞ் சிவனொடும் ஆட ஆடச்
	செங்கயற் கண்பனி ஆட ஆடப்
பித்தெம் பிரானொடும் ஆட ஆடப்
	பிறவி பிறரொடும் ஆட ஆட
அத்தன் கருணையொ டாட ஆட
	ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே. 10

மாடு நகைவாள் நிலாஎ றிப்ப
	வாய்திறந் தம்பவ ளந்து டிப்பப்
பாடுமின் நந்தம்மை ஆண்ட வாறும்
	பணிகொண்ட வண்ணமும் பாடிப் பாடித்
தேடுமின் எம்பெரு மானைத் தேடிச்
	சித்தங் களிப்பத் திகைத்துத் தேறி
ஆடுமின் அம்பலத் தாடி னானுக்
	காடப் பொற் சுண்ணம் இடித்தும் நாமே. 11

மையமர் கண்டனை வான நாடர்
	மருந்தினை மாணிக்கக் கூத்தன் றன்னை
ஐயனை ஐயர்பி ரானை நம்மை
	அகப்படுத் தாட்கொண் டருமை காட்டும்
பொய்யர்தம் பொய்யனை மெய்யர் மெய்யைப்
	போதரிக் கண்ணிணைப் பொற்றொ டித்தோள்
பையர வல்குல் மடந்தை நல்லீர்
	பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே. 12

மின்னிடைச் செந்துவர் வாய்க்க ருங்கண்
	வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீர்
என்னுடை ஆரமு தெங்க ளப்பன்
	எம்பெரு மான்இம வான்ம கட்குத்
தன்னுடைக் கேள்வன் மகன்த கப்பன்
	தமையன்எம் ஐயன் தாள்கள் பாடிப்
பொன்னுடைப் பூண்முலை மங்கை நல்லீர்
	பொற்றிருச் சுண்ணம் இடித்தும் நாமே. 13

சங்கம் அரற்றச் சிலம்பொ லிப்பத்
	தாழ்குழல் சூழ்தரு மாலை யாடச்
செங்கனி வாயித ழுந்து டிப்பச்
	சேயிழை யீர்சிவ லோகம் பாடிக்
கங்கை இரைப்ப அராஇ ரைக்குங்
	கற்றைச் சடைமுடி யான்க ழற்கே
பொங்கிய காதலிற் கொங்கை பொங்கப்
	பொற்றிருச் சுண்ணம் இடித்தும் நாமே. 14

ஞானக் கரும்பின் தெளிவைப் பாகை
	நாடற் கரிய நலத்தை நந்தாத்
தேனைப் பழச்சுவை ஆயி னானைச்
	சித்தம் புகுந்துதித் திக்க வல்ல
கோனைப் பிறப்பறுத் தாண்டு கொண்ட
	கூத்தனை நாத்தழும் பேற வாழ்த்திப்
பானற் றடங்கண் மடந்தை நல்லீர்
	பாடிப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே. 15

ஆவகை நாமும்வந் தன்பர் தம்மோ
	டாட்செயும் வண்ணங்கள் பாடி விண்மேல்
தேவர் கனாவிலுங் கண்டறியாச்
	செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ் செல்வச்
சேவகம் ஏந்திய வெல்கொடியான்
	சிவபெரு மான்புரஞ் செற்ற கொற்றச்
சேவகன் நாமங்கள் பாடிப் பாடிச்
	செம்பொன்செய் சுண்ணம் இடித்தும் நாமே.16

தேனக மாமலர்க் கொன்றைபாடிச்
	சிவபுரம் பாடித் திருச்ச டைமேல்
வானக மாமதிப் பிள்ளை பாடி
	மால்விடை பாடி வலக்கை யேந்தும்
ஊனக மாமழுச் சூலம் பாடி
	உம்பரும் இம்பரும் உய்ய அன்று
போனக மாகநஞ் சுண்டல் பாடிப்
	பொற்றிருச் சுண்ணம் இடித்தும் நாமே. 17

அயன்தலை கொண்டுசெண் டாடல் பாடி
	அருக்கன் எயிறு பறித்தல் பாடிக்
கயந்தனைக் கொன்றுரி போர்த்தல் பாடிக்
	காலனைக் காலால் உதைத்தல் பாடி
இயைந்தன முப்புரம் எய்தல் பாடி
	ஏழை அடியோமை ஆண்டு கொண்ட
நயந்தனைப் பாடிநின் றாடி யாடி
	நாதற்குச் சுண்ணம் இடித்தும் நாமே.18

வட்ட மலர்க்கொன்றை மாலை பாடி
	மத்தமும் பாடி மதியும் பாடிச்
சிட்டர்கள் வாழுந்தென் தில்லை பாடிச்
	சிற்றம் பலத்தெங்கள் செல்வம் பாடிக்
கட்டிய மாசுணக் கச்சை பாடிக்
	கங்கணம் பாடிக் கவித்த கைம்மேல்
இட்டுநின் றாடும் அரவம் பாடி
	ஈசற்குச் சுண்ணம் இடித்தும் நாமே. 19

வேதமும் வேள்வியும் ஆயி னார்க்கு
	மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயி னார்க்குச்
சோதியு மாய்இருள் ஆயி னார்க்குத்
	துன்பமு மாய்இன்பம் ஆயி னார்க்குப்
பாதியு மாய்முற்றும் ஆயி னார்க்குப்
	பந்தமு மாய்வீடும் ஆயி னாருக்
காதியும் அந்தமும் ஆயி னாருக்
	காடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே. 20

திருச்சிற்றம்பலம்


Dance: Mayiladuthurai - Thevaram
A 12 minute clip - Peacock dance by the devotees at Anniversary function of Murugan pugaz pAdum sabhai, Anda Arasu Shivalaya Seva Sanga Bangalore.
 பண்: சாதாரி

திருச்சிற்றம்பலம்

ஏனவெயி றாடரவொ டென்புவரி 
	யாமையிவை பூண்டிளைஞராய்க்
கானவரி நீடுழுவை யதளுடைய 
	படர்சடையர் காணியெனலாம்
ஆனபுகழ் வேதியர்க ளாகுதியின் 
	மீதுபுகை போகியழகார்
வானமுறு சோலைமிசை மாசுபட 
	மூசுமயி லாடுதுறையே. 1

அந்தண்மதி செஞ்சடைய ரங்கணெழில் 
	கொன்றையொ டணிந்தழகராம்
எந்தமடி கட்கினிய தானமது 
	வேண்டிலெழி லார்பதியதாம்
கந்தமலி சந்தினொடு காரகிலும் 
	வாரிவரு காவிரியுளால்
வந்ததிரை யுந்தியெதிர் மந்திமலர் 
	சிந்துமயி லாடுதுறையே. 2

தோளின்மிசை வரியரவ நஞ்சழல 
	வீக்கிமிகு நோக்கரியராய்
மூளைபடு வெண்டலையி லுண்டுமுது 
	காடுறையு முதல்வரிடமாம்
பாளைபடு பைங்கமுகு செங்கனி 
	யுதிர்த்திட நிரந்துகமழ்பூ
வாளைகுதி கொள்ளமடல் விரியமண 
	நாறுமயி 	லாடுதுறையே. 3

ஏதமில ரரியமறை மலையர்மக 
	ளாகியவி லங்குநுதலொண்
பேதைதட மார்பதிட மாகவுறை 
	கின்றபெரு மானதிடமாம்
காதன்மிகு கவ்வையொடு மவ்வலவை 
	கூடிவரு காவிரியுளால்
மாதர்மறி திரைகள்புக வெறியவெறி 
	கமழுமயி லாடுதுறையே. 4

பூவிரி கதுப்பின்மட மங்கையர 
	கந்தொறு நடந்துபலிதேர்
பாவிரி யிசைக்குரிய பாடல்பயி 
	லும்பரமர் பழமையெனலாம்
காவிரி நுரைத்திரு கரைக்குமணி 
	சிந்தவரி வண்டுகவர
மாவிரி மதுக்கிழிய மந்திகுதி 
	கொள்ளுமயி லாடுதுறையே. 5

கடந்திகழ் கருங்களி றுரித்துமையு 
	மஞ்சமிக நோக்கரியராய்
விடந்திகழு மூவிலைநல் வேலுடைய 
	வேதியர் 	விரும்புமிடமாம்
தொடர்ந்தொளிர் கிடந்ததொரு சோதிமிகு 
	தொண்டையெழில் 	கொண்டதுவர்வாய்
மடந்தையர் குடைந்தபுனல் வாசமிக 
	நாறுமயி லாடுதுறையே. 6

அவ்வதிசை யாருமடி யாருமுள 
	ராகவருள் செய்தவர்கண்மேல்
எவ்வமற வைகலு மிரங்கியெரி 
	யாடுமெம தீசனிடமாம்
கவ்வையொடு காவிரி கலந்துவரு 
	தென்கரை நிரந்துகமழ்பூ
மவ்வலொடு மாதவி மயங்கிமண 
	நாறுமயி லாடுதுறையே. 7

இலங்கைநகர் மன்னன்முடி யொருபதினொ 
	டிருபதுதொ ணெரியவிரலால்
விலங்கலி லடர்த்தருள் புரிந்தவ 
	ரிருந்தவிடம் வினவுதிர்களேல்
கலங்கனுரை யுந்தியெதிர் வந்தகய 
	மூழ்கிமலர் கொண்டுமகிழா
மலங்கிவரு காவிரி நிரந்துபொழி 
	கின்றமயி லாடுதுறையே. 8

ஒண்டிறலி னான்முகனு மாலுமிக 
	நேடியுண ராதவகையால்
அண்டமுற வங்கியுரு வாகிமிக 
	நீண்டவர னாரதிடமாம்
கெண்டையிரை கொண்டுகெளி றாருட 
	னிருந்துகிளர் வாயறுதல்சேர்
வண்டன்மணல் கெண்டிமட நாரைவிளை 
	யாடுமயி லாடுதுறையே. 9

மிண்டுதிற லமணரொடு சாக்கியரு 
	மலர்தூற்ற மிக்கதிறலோன்
இண்டைகுடி கொண்டசடை யெங்கள்பெரு 
	மானதிட மென்பரெழிலார்
தெண்டிரை பரந்தொழுகு காவிரிய 
	தென்கரை நிரந்துகமழ்பூ
வண்டவை திளைக்கமது வந்தொழுகு 
	சோலைமயி லாடுதுறையே. 10

நிணந்தரு மயானநில வானமதி 
	யாததொரு சூலமொடுபேய்க்
கணந்தொழு கபாலிகழ லேத்திமிக 
	வாய்த்ததொரு காதன்மையினால்
மணந்தண்மலி காழிமறை ஞானசம் 
	பந்தன்மயி லாடுதுறையைப்
புணர்ந்ததமிழ் பத்துமிசை யாலுரைசெய் 
	வார்பெறுவர் பொன்னுலகமே. 11

திருச்சிற்றம்பலம்


Folk Dance: Thiruchazal
திருச்சாழல்

திருச்சிற்றம்பலம்

பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை
ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ.  1

என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந் தான்ஈ சன்
துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ
மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத்
தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ. 2

கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணேடீ
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினுங்
காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ.3

அயனை அநங்கனை அந்தகனைச் சந்திரனை
வயனங்கண் மாயா வடுச்செய்தான் காணேடீ
நயனங்கள் மூன்றுடைய நாயகனே தண்டித்தால்
சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ. 4

தக்கனையும் எச்சனையுந் தலையறுத்துத் தேவர்கணம்
தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ
தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்தருளி 
			அருள்கொடுத்தங்
கெச்சனுக்கு மிகைத்தலைமற் றருளினன்காண் சாழலோ. 5

அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய்
நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடீ
நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம்
சலமுகத்தால் ஆங்காரந் தவிரார்காண் சாழலோ. 6

மலைமகளை யொருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி
சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னேடீ
சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் 
				தரணியெல்லாம்
பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ. 7

கோலால மாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த
ஆலாலம் உண்டான் அவன்சதுர்தான் என்னேடீ
ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட
மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ. 8

தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன்
பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடீ
பெண்பா லுகந்திலனேற் பேதாய் இருநிலத்தோர்
விண்பா லியோகெய்தி வீடுவர்காண் சாழலோ.  9

தானந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் காணேடீ
ஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள்
வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ. 10

நங்காய் இதென்னதவம் நரம்போ டெலும்பணிந்து
கங்காளம் தோள்மேலே காதலித்தான் காணேடீ
கங்காளம் ஆமாகேள் காலாந்த ரத்திருவர்
தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ. 11

கானார் புலித்தோல் உடைதலைஊண் காடுபதி
ஆனால் அவனுக்கிங் காட்படுவார் ஆரேடீ
ஆனாலுங் கேளாய் அயனுந் திருமாலும்
வானாடர் கோவும் வழியடியார் சாழலோ.  12

மலையரையன் பொற்பாவை வாள்நுதலாள் பெண்திருவை
உலகறியத் தீவேட்டான் என்னுமது என்னேடீ
உலகறியத் தீவேளா தொழிந்தனனேல் உலகனைத்துங்
கலைநவின்ற பொருள்களெல்லாங் கலங்கிடுங்காண் 
				சாழலோ.  13

தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ
தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம்
ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ.14

கடகரியும் பரிமாவும் தேரும்உகந் தேறாதே
இடபம்உகந் தேறியவா றெனக்கறிய இயம்பேடீ
தடமதில்கள் அவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ.  15

நன்றாக நால்வர்க்கு நான்மறையின் உட்பொருளை
அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடீ
அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் ஆயிடினும்
கொன்றான்காண் புரமூன்றுங் கூட்டோடே சாழலோ. 16

அம்பலத்தே கூத்தாடி அமுது செயப் பலிதிரியும்
நம்பனையுந் தேவனென்று நண்ணுமது என்னேடீ
நம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியா
எம்பெருமான் ஈசாவென் றேத்தினகாண் சாழலோ.  17

சலமுடைய சலந்தரன்றன் உடல்தடிந்த நல்லாழி
நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ
நலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தரனடிக்கீழ்
அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ. 18

அம்பரமாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம்
எம்பெருமான் உண்டசதுர் எனக்கறிய இயம்பேடீ
எம்பெருமான் ஏதுடுத்தங் கேதமுது செய்திடினும்
தம்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ. 19

அருந்தவருக் காலின்கீழ் அறமுதலா நான்கனையும்
இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ
அருந்தவருக் கறமுதல்நான் கன்றருளிச் செய்திலனேல்
திருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ. 20

திருச்சிற்றம்பலம்


Folk Dance: அன்னைப் பத்து, திருவுந்தியார்
அன்னைப் பத்து

திருச்சிற்றம்பலம்

வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர்
நாதப் பறையினர் அன்னே என்னும்
நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும்
நாதர்இந் நாதனார் அன்னே என்னும். 1

கண்ணஞ் சனத்தர் கருணைக் கடலினர்
உண்ணின் றுருக்குவர் அன்னே என்னும்
உண்ணின் றுருக்கி உலப்பிலா ஆனந்தக்
கண்ணீர் தருவரால் அன்னே என்னும்.  2

நித்த மணாளர் நிரம்ப அழகியர்
சித்தத் திருப்பரால் அன்னே என்னும்
சித்தத் திருப்பவர் தென்னன் பெருந்துறை
அத்தர்ஆ னந்தரால் அன்னே என்னும்.  3

ஆடரப் பூணுடைத் தோல்பொடிப் பூசிற்றோர்
வேடம் இருந்தவா றன்னே என்னும்
வேடம் இருந்தவா கண்டுகண் டென்னுள்ளம்
வாடும் இதுஎன்னே அன்னே என்னும். 4

நீண்ட கரத்தர் நெறிதரு குஞ்சியர்
பாண்டிநன் னாடரால் அன்னே என்னும்
பாண்டிநன் னாடர் பரந்தெழு சிந்தையை
ஆண்டன்பு செய்வரால் அன்னே என்னும். 5

உன்னற் கரியசீர் உத்தர மங்கையர்
மன்னுவ தென்நெஞ்சில் அன்னே என்னும்
மன்னுவ தென்நெஞ்சில் மாலயன் காண்கிலார்
என்ன அதிசயம் அன்னே என்னும். 6

வெள்ளைக் கலிங்கத்தர் வெண்டிரு முண்டத்தர்
பள்ளிக்குப் பாயத்தர் அன்னே என்னும்
பள்ளிக்குப் பாயத்தர் பாய்பரி மேற்கொண்டென்
உள்ளங் கவர்வரால் அன்னே என்னும். 7

தாளி அறுகினர் சந்தனச் சாந்தினர்
ஆளெம்மை ஆள்வரால் அன்னே என்னும்
ஆளெம்மை ஆளும் அடிகளார் தங்கையில்
தாள மிருந்தவா றன்னே என்னும். 8

தையலோர் பங்கினர் தாபத வேடத்தர்
ஐயம் புகுவரால் அன்னே என்னும்
ஐயம் புகுந்தவர் போதலும் என்னுள்ளம்
நையும்இது என்னே அன்னே என்னும். 9

கொன்றை மதியமுங் கூவிள மத்தமும்
துன்றிய சென்னியர் அன்னே என்னும்
துன்றிய சென்னியின் மத்தம்உன் மத்தமே
இன்றெனக் கானவா றன்னே என்னும். 10

திருச்சிற்றம்பலம்

திருவுந்தியார்

திருச்சிற்றம்பலம்

வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
	ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற. 1

ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீபற
	ஒன்றும் பெருமிகை உந்தீபற. 2

தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும்
அச்சு முறிந்ததென் றுந்தீபற
	அழிந்தன முப்புரம் உந்தீபற. 3

உய்யவல் லாரொரு மூவரைக் காவல்கொண்
டெய்யவல் லானுக்கே உந்தீபற
	இளமுலை பங்கனென் றுந்தீபற. 4

சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடிய வாபாடி உந்தீபற
	உருத்திர நாதனுக் குந்தீபற.  5

ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று
சாவா திருந்தானென் றுந்தீபற
	சதுர்முகன் தாதையென் றுந்தீபற. 6

வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய
கையைத் தறித்தானென் றுந்தீபற
	கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற. 7

பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப்
பார்ப்பதென் னேஏடி யுந்தீபற
	பணைமுலை பாகனுக் குந்தீபற. 8

புரந்தர னாரொரு பூங்குயி லாகி
மரந்தனி லேறினார் உந்தீபற
	வானவர் கோனென்றே உந்தீபற. 9

வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
துஞ்சின வாபாடி உந்தீபற
	தொடர்ந்த பிறப்பற உந்தீபற. 10

ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீபற
	கொங்கை குலுங்கநின் றுந்தீபற. 11

உண்ணப் புகுந்த பகனொளித் தோடாமே
கண்ணைப் பறித்தவா றுந்தீபற
	கருக்கெட நாமெலாம் உந்தீபற.  12

நாமகள்நாசி சிரம்பிர மன்படச்
சோமன் முகன்னெரித் துந்தீபற
	தொல்லை வினைகெட உந்தீபற.  13

நான்மறை யோனு மகத்திய மான்படப்
போம்வழி தேடுமா றுந்தீபற
	புரந்தரன் வேள்வியில் உந்தீபற.  14

சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்தவா றுந்தீபற
	மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற. 15

தக்கனார் அன்றே தலையிழந் தார்தக்கன்
மக்களைச் சூழநின் றுந்தீபற
	மடிந்தது வேள்வியென் றுந்தீபற. 16

பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே யுந்தீபற
	குமரன்தன் தாதைக்கே உந்தீபற. 17

நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை
ஒல்லை யரிந்ததென் றுந்தீபற
	உகிரால் அரிந்ததென் றுந்தீபற. 18

தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம்
ஈரைந்தும் இற்றவா றுந்தீபற
	இருபதும் இற்றதென் றுந்தீபற.  19

ஏகாச மிட்ட இருடிகள் போகாமல்
ஆகாசங் காவலென் றுந்தீபற
	அதற் கப்பாலுங் காவலென் றுந்தீபற. 20

திருச்சிற்றம்பலம்


For comments contact.

Back to the Shaivam Galleries

This Page is associated with Shaivam Home Page