உ
செந்திலாண்டவன் துணை
திருச்சிற்றம்பலம்
2. அ சு ர கா ண் ட ம்
27. கா வி ரி நீ ங் கு ப ட ல ம்
செங்கை தூங்கிய தீர்த்த நீரொடுங்
கொங்கின் பாற்செலக் குறிய மாமுனி
மங்கு கின்றஅம் மைந்தர் நேருறா
அங்கண் மேவினார் அருந்த வத்தர்போல். 1
நேரு மைந்தர்கள் இருவர் நீனிறக்
காரின் மேனியர் கறங்கு கண்ணினர்
தீரர் ஆற்றவுஞ் சினத்தர் ஒல்லென
ஆர வாரஞ்செய் தணுகி னாரரோ. 2
அண்மை யாகுவர் அகல்வர் மாமுனி
கண்முன் எய்துவர் கரந்து காண்கிலார்
விண்மு கிற்குளே மேவி ஆர்ப்பரால்
மண்மி சைப்பினும் வருவர் சூழ்வரே. 3
கோதில் ஆற்றல்சேர் கும்ப மாமுனி
ஈது நோக்கியே இவரை முன்னமே
காதி னாம்நமைக் கருதி வந்தனர்
மாத வத்தினோன் மைந்தர் ஆதலால். 4
பேர்கி லாதஇப் பிரம கத்திநோய்
தீரு மாற்றினால் சிவன தாள்களை
ஆர்வ மோடிவண் அருச்சிப் பாமெனா
நேரின் மாமுனி நினைந்து நின்றரோ. 5
ஆசில் கொங்கினுக் கணித்தின் ஓரிடை
வாச மீதென மகிழ்ந்து வீற்றிரீஇ
ஈச னார்தமை இலிங்க மேயில்
நேச நெஞ்சினான் நினைந்து தாபித்தான். 6
தூய குண்டிகைத் தோயம் அன்றியே
சேய மாமலர் தீபந் தீம்புகை
ஆய போனகம் ஆதி யானவை
ஏயு மாற்றினால் இனிது தேடினான். 7
விழுமி தாகிய விரதர் வீயவே
வழியி ருந்திடும் வஞ்சர் ஆவிகொள்
பழிய கன்றிடப் பரமன் தாள்மிசை
அழிவில் அன்பொடே அருச்சித் தானரோ. 8
மங்கை பாகனை மற்றும் பற்பகல்
சிங்கல் இன்றியே சிறந்த பூசைசெய்
தங்கண் மேவினான் அவன்க ணாகிய
துங்க வெம்பவந் தொலைந்து போயதே. 9
அனைய காலையில் அரிய தீந்தமிழ்
முனிவ ரன்செயல் முற்றும் நாடியே
துனியல் நாரதன் தொல்லை வானவர்க்
கினிய கோமகன் இருக்கை எய்தினான். 10
தாணு வின்பதந் தன்னை உன்னியே
வேணு வாகியே மெய்த்த வஞ்செயுஞ்
சேணின் மன்னவன் செல்லு நாரதற்
காணும் எல்லையிற் கழல்வ ணங்கினான். 11
எழுதி மன்னவெண் றெடுத்து மார்புறத்
தழுவி நன்றிவட் சார்தி யோவெனா
உழுவ லன்பினால் உரைப்ப வாசவன்
தொழுத கையினான் இனைய சொல்லுவான். 12
இன்று காறுநின் னருளின் யானிவண்
நன்று மேவினன் நாதன் பூசனைக்
கொன்ற துண்டுதீங் குரைப்பன் கேட்டியால்
குன்ற மன்னதோர் குணத்தின் மேலையோய். 13
கோதின் மாமல்ர் குழுவு தண்டலைக்
கேது நீரிலை இறந்து வாடுமால்
போதும் இல்லையால் பூசை செய்வதற்
கீத ரோகுறை யென்றி யம்பினான். 14
வேறு
இன்னவை பலவுங் கூறி இந்திரன் தவிசொன் றிட்டு
முன்னுற இருத்தித் தானும் முனிவரன் பணியால் வைக
அன்னதோர் அறிஞன் நின்னூர் அரசியல் பிறவும் ஈசன்
தன்னருள் அதனால் மேனாள் வருவது தளரேல் மன்னோ. 15
ஆறணி சடையி னானுக் கருச்சனை புரிதற் கிங்கோர்
ஊறுள தென்றே ஐய உரைத்தனை அதுவும் வல்லே
மாறிடுங் காலம் ஈண்டு வந்ததப் பரிசை யெல்லாங்
கூறுவன் கேட்டி யென்னாக் கோமகற் குரைக்க லுற்றான். 16
தன்னிகர் இலாத முக்கண் சங்கரன் பொதிய வெற்பின்
முன்னுறை கென்று விதும்ப முனிவனை விடுத்த வாறும்
அன்னவன் விந்தந் தன்னை அகன்பிலத் திட்ட வாறும்
துன்னெறி புரிந்த வெஞ்சூர் மருகரைத் தொலைத்த வாறும். 17
அப்பழி தீரு மாற்றால் ஐதெனக் கொங்கின் நண்ணி
முப்புர மெரித்த தொல்லை முதல்வனை அருச்சித் தேத்தி
மெய்ப்பரி வாகி அங்கன் மேவிய திறனும் முற்றச்
செப்பினன் பின்னும் ஆங்கோர் செய்கையை உணர்த்த லுற்றான். 18
அருந்தவ முனிவன் கொங்கின் அமலனை அருச்சித் தங்கண்
இருந்திடு கின்றான் நாடி ஏகினன் அவன்வா லாகப்
பொருந்துகுண் டிகையின் மன்னும் பொன்னியா றதனை இங்கே
வரும்பரி சியற்றின் உன்றன் மனக்குறை தீரு மென்றான். 19
குரவன்ஈ துரைத்த லோடுங் குறுமுனி கொணர்ந்து வைத்த
வரநதி தனையிக் காவில் வரவியற் றிடுமா றென்கொல்
பெருமநீ யுரைத்தி யென்னப் பேரமு தருத்தி யேத்திக்
கரிமுகத் தேவை வேண்டில் கவிழ்த்திடும் அதனை என்றான். 20
குணப்பெருங் குன்ற மன்ன கோதிலா அறிவன் இன்ன
புணர்ப்பினை இரைதத லோடும் புரந்தான் பொருமல் நீங்கிக்
கணிப்பிலா மகிழ்ச்சி யெய்திக் காசிபன் சிறுவர் கொண்ட
அணிப்பெருந் திருவும் நாடும் அடைந்தனல் போன்று சொல்வான். 21
எந்தைநீ இனைய எல்லாம் இயம்பினை அதனால் யானும்
உய்ந்தனன் கவலை யாவும் ஒருவினன் முனிவன் பாங்கர்
வந்திடு மாறும் ஈண்டு வரவுன தருளால் இன்னே
தந்திமா முகற்குப் பூசை புரிகுவன் தக்கோய் என்றான். 22
அருள்முனி இதனைக் கேளா அன்னதே கருமம் வல்லே
புரிகரி முகவற் கைய பூசனை யென்று கூறிப்
பரவிய இமையோர் கோனைப் பார்மிசை நிறுவிப் போந்து
சுரரெலாம் பரவு கின்ற தொல்லையம் பதத்தி லுற்றான். 23
சேறலும் புணர்ப்பு வல்லோன் திங்களும் அரவுங் கங்கை
யாறொடு முடித்த அண்ணல் அருள்புரி முதல்வன் றன்னை
மாறகல் மேனி கொண்டு வரன்முறை தாபித் தன்னான்
சீறடி அமரர் கோமான் அருச்சனை செய்து பின்னர். 24
இக்கொடு தென்னங் காயும் ஏனலின் இடியுந் தேனும்
முக்கனி பலவும் பாகும் மோதக முதல முற்றுந்
தொக்குறு மதுர மூலத் தொடக்கமுஞ் சுவைத்தீம் பாலும்
மிக்கபண் ணியமு மாக விருப்புற நிவேதித் தானால். 25
இவ்வகை நிவேதித் தேபின் எம்பிரான் றன்னை ஏத்த
மைவரை யனைய மேனி மதகரி முகத்துத் தோன்றல்
கவ்வையோ டனந்த கோடி கணநிரை துவன்றிச் சூழ
அவ்விடை விரைவால் தோன்ற அஞ்சினன் அமரர் கோமான். 26
அஞ்சலை மகவா னென்ன ஐங்கரக் கடவுள் கூற
நெஞ்சகந் துணுக்கம் நீங்கி நிறைந்தபே ருவகை யெய்தி
உஞ்சன னென்று வள்ளல் உபயமா மலர்த்தாள் மீது
செஞ்செவே சென்னி தீண்டச் சென்றுமுன் வணக்கஞ் செய்தான். 27
பூண்டிகழ் அலங்கல் மார்பில் பொன்னகர்க் கிறைவன் முக்கண்
ஆண்டகை சிறுவன் தாள்மேல் அன்பொடு பணிந்து போற்ற
நீண்டதோர் அருளால் நோக்கி நின்பெரும் பூசை கொண்டாம்
வேண்டிய பரிசென் என்றான் வேழமா முகனை வென்றான். 28
இந்திரன் அதுகேட் டைய எம்பிராற் காக ஈண்டோர்
நந்தன வனத்தை வைத்தேன் அன்னது நாரம் இன்றிச்
செந்தழ லுற்றா லென்னத் தினகரன் சுடரால் மாய்ந்து
வெந்துக ளான தண்ணல் மேலடு புரமே யென்ன. 29
என்னலும் ஏந்தல் கேளா ஏழ்பெருந் தலத்தின் நீரும்
முன்னுறத் தருகோ வான முழுப்பெருங் கங்கை தானும்
பன்னதி பிறவும் இங்ஙன் விளித்திடோ பரவை யாவுந்
துன்னுறு விக்கோ ஒன்று சொல்லுதி வேண்டிற் றென்றான். 30
ஐங்கரக் கடவுள் இவ்வா றறைதலும் அனைத்தும் நல்கும்
பங்கயத் தயனு மாலும் பரவுறு பழையோய் இங்ஙன்
அங்கவற் றொன்றும் வேண்டேன் அதுநினக் கரிதோ யானொன்
றிங்குனைக் கேட்ப னென்னா இனையன இசைக்க லுற்றான். 31
சகத்துயர் வடபொன் மேருச் சாரலின் நின்றும் போந்து
மிகத்துயர் எவர்க்குஞ் செய்யும் வெய்யள் சிறுவர்ச் செற்று
மகத்துயர் விதியின் சேய்க்கு வருவித்த நிமலன் பொற்றாள்
அகத்தியன் கொங்கின் பால்வந் தருச்சனை புரிந்து மேவும். 32
அன்னவன் தனது மாட்டோர் அணிகமண் டலத்தி னூடே
பொன்னியென் றுரைக்குந் தீர்த்தம் பொருந்தியேஇருந்த தெந்தாய்
நன்னதி யதனை நீபோய் ஞாலமேற் கவிழ்த்து விட்டால்
இன்னதோர் வனத்தின் நண்ணும் என்குறை தீரு மென்றான். 33
பாகசா தனன்இம் மாற்றம் பகர்தலும் பிறைசேர் சென்னி
மாகயா னனத்து வள்ளல் மற்றித செய்து மென்னா
ஓகையால் அவனை அங்கண் நிறுவிப்போய் ஒல்லை தன்னில்
காகமாய் முனிபா லான கமண்டல மிசைக்கண் உற்றான். 34
கொங்குறு முனிவன் பாங்கர்க் குண்டிகை மிதிற் பொன்னி
சங்கரன் அருளின் வந்த தன்மையும் புணர்ப்பு முன்னி
ஐங்கரன் கொடியாய் நண்ண அகத்தியன் அவனென் றோரான்
இங்கொரு பறவை கொல்லாம் எய்திய தென்று கண்டான். 35
கண்டனன் பிள்ளை செல்லக் கரதல மெடாநின் றோச்ச
அண்டருக் கலக்கண் செய்த கயமுகத் தவுணற் செற்றேன்
குண்டிகை அதனைத் தள்ளிக் குளிர்புனற் கன்னி யன்னான்
பண்டையில் இசைவு செய்தான் பாரில்நீ படர்தி என்றான். 36
என்னலுங் காஞ்சி தன்னில் எம்பிரான் உலகம் ஈன்ற
அன்னைதன் அன்பு காட்ட அழைத்திட வந்த கம்பை
நன்னதி போல விண்ணும் ஞாலமும்நடுங்க ஆர்த்துப்
பொன்னியா றுலகந் தன்னில் பொள்ளெனப் பெயர்ந்த தன்றே. 37
பெயர்தலும் உமைதன் பிள்ளை பிள்ளையின் உருவம் நீத்துப்
பயிறரு மறைநூல் வல்ல பார்ப்பன மகன்போற் செல்லச்
சயமிகு தவத்தின் மேலோன் தன்மையங் கதனை நோக்கி
உயிர்முழு தடவே தோன்றும் ஒருவன்போல் உருத்து நின்றான். 38
தேவனோ அவுணன் தானோ அரக்கனோ திறலின் மேலோன்
யாவனோ அறிதல் தேற்றேன் ஈண்டுறு நதியைச் சிந்திப்
போவனோ சிறிது மெண்ணா அகந்தையன் போலும் அம்மா
யாவனோ வன்மை தன்னை அறிகுவன் விரைவின் என்றான். 39
விரைந்தன பின்ன ரேக மெய்வழி பாடு செய்வோர்
அரந்தையை நீக்கும் எங்கோன் அச்சுறு நீரன் போல
இரிந்தனன் போத லோடும் இருகையுங் கவித்த மாக்கித்
துரந்தனன் முனிவன் சென்னி துளக்குறத் தாக்க உன்னி. 40
குட்டுவான் துணிந்து செல்லுங் குறுமுனிக் கணிய னாகிக்
கிட்டுவான் விசும்பி னூடு கிளருவான் திசைக டோறும்
முட்டுவான் பின்பு பாரின் முடுகுவான் அனையன் கைக்கும்
எட்டுவான் சேய னாகி ஏகுவான் எவர்க்கும் மேலோன். 41
இப்படி முனிவன் சீற்றத் தலமர யாண்டு மேகித்
தப்பினன் திரித லோடுஞ் சாலவுந் தளர்ச்சி யெய்திச்
செப்பரி திவன்றன் மாயஞ் செய்வதென் இனியா னென்னா
ஒப்பருந் தவத்தோன் உன்ன எந்தைய• துணர்ந்தான் அன்றே. 42
ஓட்டமோ டுலவு முன்னோன் ஒல்லையில் தனது மேனி
காட்டினன் முனிவன் காணாக் கதுமெனக் கலங்கி அந்தோ
கோட்டிப முகனோ ஈண்டுக் குறுகினன் அவனை யானோ
ஈட்டொடு துரந்தேன் கொல்லென் றேங்கினன் இரங்கு கின்றான். 43
இரங்கிய முனிவன் முன்னம் ஏந்தலைப் புடைப்பான் கொண்ட
கரங்களை எடுத்து வானில் காருரும் ஏறு வெற்பின்
உரங்கிழி தரவே நீங்கா துரப்பினில் வீழ்வ தேபோல்
வரங்கெழு தனாது நெற்றி வருந்துறத் தாக்கல் உற்றான். 44
தாக்குதல் புரிந்த காலைத் தாரகப் பிரம மான
மாக்கய முகத்து வள்ளல் வரம்பிலா அருளி னோடு
நோக்கியுன் செய்கை என்னை நுவலுதி குறியோய் என்னத்
தேக்குறு தமிழ்தேர் வள்ளல் இனையது செப்பு கின்றான். 45
அந்தண குமரன் என்றே ஐயநின் சிரமேல் தாக்கச்
சிந்தனை புரிந்தேன் யாதுந் தௌ¤விலேன் அதற்குத் தீர்வு
முந்தினன் இயற்று கின்றேன் என்றலும் முறுவல் செய்து
தந்தியின் முகத்து வள்ளல் அலமரல் தவிர்தி யென்றான். 46
என்றலுந் தவிர்ந்து முன்னோன் இணையடி மிசையே பல்கால்
சென்றுசென்றிறைஞ்சி யன்னோன் சீர்த்திய தெவையும் போற்றி
உன்றிறம் உணரேன் செய்த தவற்றினை உளத்திற் கொள்ளேல்
நன்றருள் புரிதி என்ன நாயகன் அருளிச் செய்வான். 47
புரந்தரன் எந்தை பூசை புரிதரு பொருட்டால் ஈண்டோர்
வரந்தரு காமர் தண்கா வைத்தனன் அதுநீ ரின்றி
விரைந்தது பொலிவு மாழ்கி வெறுந்துகள் ஆத லோடும்
இரந்தனன் புனல்வேட் டெம்மை இயல்புடன் வழிபட் டிந்நாள். 48
ஆதலின் கோடிபோல் யாமுன் னரும்புனற் குடிகை மீது
காதலித் திருந்து மெல்லக் கவிழத்தனம் அதனை ஈண்டுப்
போதலுற் றிடவுஞ் சொற்றாம் பொறாதுநீ செய்த வற்றில்
யாதுமுட் கொள்ளேம் அவ்வா றினிதென மகிழ்தும் அன்றே. 49
ஈண்டுநீ புரிந்த தெல்லாம் எமக்கிதோ ராட லென்றே
காண்டுமா லன்றி நின்பால் காய்சினங் கொண்டேம் அல்லேம்
நீண்டசெஞ் சடையெம் மையன் நேயன்நீ எமக்கும் அற்றே
வேண்டிய வரங்கள் ஈதுங் கேண்மதி விரைவின் என்றான். 50
வேறு
என்னா இதுசெப் பலும்எம் பெருமான்
முன்னா கியதோர் முனிவன் பணியா
உன்ன ரருள்எய் தலின்உய்ந் தனன்யான்
நன்னா யகனே எனவே நவில்வான். 51
நின்பா லினும்அந நெடுமா லுணரான்
தன்பா லினுமே தமியேன் மிகவும்
அன்பா வதொர்தன் மையளித் தருள்நீ
இன்பால் அதுவெ• குவன்எப் பொழுதும். 52
இன்னே தமியேன் எனவே இனிநின்
முன்னே நுதலின் முறையால் இருகை
கொன்னே கொடுதாக் குநர்தங் குறைதீர்த்¢
தன்னே யெனவந் தருள்செய் யெனவே. 53
முத்தண் டமிழ்தேர் முனிஈ தறைய
அத்தன் குமரன் அவைநல் கினமால்
இத்தன் மையவே அலதின் னமும்நீ
சித்தந் தனில்வேண் டியசெப் பெனவே. 54
கொள்ளப் படுகுண் டிகையிற் குடிஞை
வௌ¢ளப் பெருநீர் மிசையுற் றடிகள்
தள்ளக் கவிழ்வுற் றதுதா ரணிமேல்
எள்ளிற் சிறிதும் இலதென் றிடவே. 55
ஊனாய் உயிராய் உலகாய்* உறைவோன்
மேனாள் அருள்செய் வியன்மா நதிதான்
போனா லதுபோற் புனலொன் றுளதோ
நானா டிடவே நலமா னதுவே. 56
( * சிவஞானிகள், “மரத்தை மறைத்தது மாமத யானை” என்று
திருமூலர் கூறியதுபோல் உலகாதிகளையும் சிவபெரு-
மானாகவே காண்கின்றார்கள். அல்லாதவர்கள் உலகாதி-
களாகவே காண்கின்றார்கள்; ஆதலின் உலகாய் என்றார். )
அந்நீர் மையினால் அடியேற் கிவண்நீ
நன்னீர் நவையற் றதுநல் கெனவே
கைந்நீர் மையினாற் கடுகின் துணையாம்
முந்நீர் அயிலும் முனிவன் மொழிய. 57
காகத் தியல்கொண் டுகவிழ்த் திடமுன்
போகுற் றபுதுப் புனலாற் றிடையே
மாகைத் தலநீட் டினன்வா னுலவும்
மேகத் திறைமால் கடல்வீழ்ந் தெனவே. 58
அள்ளிச் சிறிதே புனலம் முனிவன்
கொள்ளப் படுகுண் டிகையுய்த் திடலும்
உள்ளத் தைநிரப் பியொழிந் ததெலாம்
வௌ¢ளத் தொடுபார் மிசைமே வியதே. 59
முன்னுற் றதுபோல் முனிகுண் டிகைநீர்
துன்னுற் றதுமேல் தொலையா வகையால்
என்னிப் புதுமை யெனநோக் கினனால்
தன்னுற் றமனத் தவமா முனியே. 60
பேருற் றிடுமிப் பெருநீர் அதனில்
வாரிச் சிறிதே வருகுண் டிகையில்
பாரித் தனன்இப் படிமுற் றுறுவான்
ஆரிப் படிவல் லவரா யினுமே. 61
அந்தத் திருமால் அயனே முதலோர்
வந்தித் திடவே வரமீந் தருளி
முந்துற் றிடுமூ லமொழிப் பொருளாம்
எந்தைக் கரிதோ இதுபோல் வதுவே. 62
என்றே நினையா இபமா முகவற்
சென்றே பணியாச் சிறியேன் குறையா
ஒன்றே துமிலேன் உதவுற் றனைநீ
நன்றே கவிழும் நதிநீ ரையுமே. 63
முந்தே முதல்வா முழுதுன் னருளால்
அந்தே யளவும் அளியில் சிறியேன்
உய்ந்தேன் இனியும் முனையுன் னுழிநீ
வந்தே அருள்கூர் மறவேல் எனவே. 64
அற்றா கவென அருள்செய் தயலே
சுற்றா வருதொல் படையோ டுமெழாப்
பற்றா னவர்நா டுபரம் பொருள்சேய்
மற்றா ரும்பியப் பமறைந் தனனே. 65
வேறு
மறைகின்ற எல்லைதனில் குறுமுனிவிம் மிதமாய்மன் னுயிர்கள் எங்கும்,
உறைகின்ற தனிமுதல்வன் புதல்வன்றன் கோலத்தை உணர்ந்து போற்றி,
அறைகின்ற காவிரியைக் கண்ணுற்று நகைத்து வெகுண் டருள்கை நாடி,
உறைகின்ற கொங்குதனை ஒருவித்தென் றிசைநோக்கி யொல்லை சென்றான். 66
ஆகத் திருவிருத்தம் - 1333
- - -
28. தி ரு க் கு ற் றா ல ப் ப ட ல ம்
செற்றாலம் உயிரனைத்தும் உண்டிடவே நிமிர்ந்தெழலுஞ் சிந்தை மேற்கொள்,
பற்றாலங் கதுநுகர்ந்து நான்முகனே முதலோர்தம் பாவை மார்கள்,
பொற்றாலி தனையளித்தோன் புகழ்போற்றி முகின் மேனிப் புத்தேள் வைகுங்,
குற்றாலம் ஆவதொரு வளநகரைக் குறுமுனிவன் குறுகி னானால். 1
அப்பதியில் அச்சுதனுக் காலயமொன் றுளதம்மா அவனி மீதில்
ஒப்பிலதோர் திருமுற்றம் அ•தென்பர் இம்பரெலாம் உம்பர் தாமுஞ்
செப்புவரா யிடைதன்னில் அந்தணர்கள் அளப்பில்லோர் செறிவர் அன்னார்,
மெய்ப்படுநூல் முறைகண்டு மோகத்தால் தமதுமத மேற்கொண் டுள்ளார். 2
அன்னவர்கள் எம்பெருமான் தன்னடியார் தமைக்காணின் அழன்று பொங்கி,
மூன்னுறுதொல் பகைஞரென மிகஇகழந்து மற்றவர்தம் முகநோக் காராய்த்,
துன்னெறியே மேற்கொண்டு மறைபயில்வோர் என்பதொரு சொல்லே தாங்கித்,
தந்நெறியும் புரியாதங் கிருந்தனரால் அ•துணர்ந்தான் தமிழ்நர் கோமான். 3
குறுமுனிவன் ஆங்கவர்தஞ் செயலுணர்ந்து குற்றால மென்னும் மூதூர்,
மறுகினிடை யேநடந்து மாயவன்தன் ஆலயமுன் வருத லோடும்
நெறிவருமவ் வாலயத்திற் செறிகின்ற வைணவர்கள் நெடிது நோக்கிச்,
செறுநர்தமைக் கண்டுபதை பதைப்பார்போல் வெய்துயிர்த்துச் செயிர்த்துச் சொல்வார். 4
ஒல்லாத கண்டிகையும் நீறும்அணிந் தனையதனால் உலகில் தேவர்,
எல்லாரும் அறியவைய மேற்றோனுக் கடியவன்நீ ஈண்டு செல்லச்,
செல்லாது கைத்தலத்தில் ஒருகோலுங் கொண்டனையாற் சிறியை போலும்,
நில்லாயெம் பெருமான்றன் மாநரம் அணுகாது நீங்கு கென்றார். 5
என்றிடலும் வெகுளாது நகைசெய்து மறைநெறியை யிகந்து நின்றீர்,
துன்றியிவண் உறைகின்ற துணரேன்இத் திறமெவருஞ் சொன்னார் இல்லை,
நன்றுநெறி யென்றுவந்தேன் நும்பான்மை உணர்வேனேல், நான்இம் மூதூர்,
சென்றிடவும் நினையேனால் முனியற்க யான்மீண்டு செல்வே னென்றான். 6
பொதியமலை தனிலேகும் முனிவன்இது புகன்றிடலும் பொறாது நீயிப்,
பதியதனில் வருவதுவும் பாவமாம் ஈண்டுநீ படர்தி யென்ன,
இதுசரதம் மொழிந்தீர்கள் தொல்லோர்தம் நூன்முறையும் ஈதேயென்னா,
விதியருளுந் தக்கனார் வழிமுறையோர் தமைநீங்கி மீண்டு செல்வான். 7
சிட்டர்புகழ் கயிலைமலை காத்தருளுந் திருநந்தி தேவன் செங்கேழ்,
மட்டுறுபங் கயத்துறையும் நான்முகத்தோன் துருவாசன் மறைநூல் யாவுந்,
தட்டறவே உணர்பிருகு கவுதமன்கண் ணுவமுனிவன் ததீசி இன்னோர்,
இட்ட பெருஞ் சாபமெலாம் பொய்த்திடுமோ எனவுன்னி ஏக லற்றான். 8
ஏகலுறு குறுமுனிவன் உயிர்க்குயிராய் நின்றோனை இகழ்வார் தங்கண்,
மோகமுறும் அகந்தையினை முதலோடுங் களைவனென முன்னி முன்னாட்,
போகியதன் மாயையினால் இரதத்தின் ஆவிபடு பொன்னே போலப்,
பாகவத மாகுவதோர் உருக்கொண்டான் கருணையினாற் பரவை போல்வான். 9
ஆளுடைய நாயகன்பால் அன்புடையான் மாயவன்றன் அடியனேபோல்,
கோளுடைய மாயத்தான் மேனிகொண்டு மீண்டுமங்கட் குறுக லோடும்,
நீளிடையில் வரக்கண்ட வயிணவர்கள் எதிர்சென்று நெடிது போற்றித்,
தாளிடையில் வீழ்ந்திடலும் நாரணனுக் காகவெனச் சாற்றி நின்றான். 10
அடிமுறையின் வணங்கியெழும் வேதியர்தங் களைநோக்கி அரிபால் அன்பு,
முடிவிலைநும் பாலென்று மொழிந்தனர்அங் கதுகாண முன்னி வந்தாம்,
படியதனில் உமக்குநிகர் யாருமிலை நுமைக்கண்ட பரிசால் யாமுந்,
தொடர்வரிய பேருணர்வு பெற்றெனமென் றேபின்னுஞ் சொல்லல் உற்றான். 11
முத்திதரு பேரழகர் திருமலையி னிடையுற்றோம் முன்னம் இன்னே,
அத்திகிரி தனிலிருப்பச் செல்கின்றோம் நமபெருமான் அமருங் கோயில்,
இத்தல மேல் உளதென்பர் அதுபாவும் விருப்புடையோம் என்ன அன்னோர்,
கைத்தலத்தோர் விரற்சுட்டி அதுதிருமால் இருக்கையெனக் காட்டலுற்றார். 12
காட்டுதலுங் கைதொழுது மாலுறையும் மந்திரத்தைக் கடிது நண்ணி,
ஈட்டமுடன் வலஞ்செய்து கண்ணபிரான் அடியிணையை இறைஞ்சி யேத்திப்,
பாட்டிலுறு தொல்லடியார் தமைநோக்கி இவரை வழி படுதற் குள்ளம்,
வேட்டனமால் மஞ்சனமே முதலியன கொணர் மின்கள் விரைவின் என்றான். 13
நன்றெனவே சிலரேகித் தூயதிரு மஞ்சனமும் நறுமென் போதும்,
மன்றலுறு செஞ்சாந்தும் அணித்துகிலும் ஏனையவும் மரபிற் கொண்டு
சென்றுமுனி வரன்முன்னம் உய்த்திடலும் அனையவர்தந் திறத்தை நோக்கி,
இன்றிவரை யருச்சனைசெய் விதிமுறையைப பார்த்திடுங்கள் யாரு மென்றே. 14
அறுகுமதி நதிபுனையுஞ் செஞ்சடையெம் பெருமானை அகத்துட் கொண்டு,
சிறுகுமுரு வுடையமுனி நாரணனார் திருமுடிமேற் செங்கை யோச்சிக்,
குறுகுகுறு கெனஇருத்தி ஔளரக்கிற் புனைபாவை கோல மீதும்,
அறுகுதழல் உற்றென்னக் குழைவித்தோர் சிவலிங்க வடிவஞ் செய்தான். 15
அல்லிமலர்ப் பங்கயனும் நாரணனும் எந்நாளும் அறியொணாத்,
எல்லையிலாப் பரம்பொருளைத் தாபித்து மந்திரங்க ளெடுத்தக் கூறித்,
தொல்லையுருக் கொண்டுமலர் மஞ்சனமே முதலியன தூய ஆக்கி,
ஒல்லைதனில் அருச்சிப்பக் காண்டலும்அவ் வந்தணர்கள் உருத்துச் சொல்வார். 16
காயத்தான் மிகச்சிறியன் முப்புரத்தை நீறாக்குங் கடவுட் காற்ற,
நேயத்தான் இவ்விடையே முன்வந்தான் யாமிகழ நில்லா தேகி,
ஆயத்தான் பாகவத வடிவாய்வந் திச்சமயம் அழித்தான் அந்தோ,
மாயத்தான் பற்றுமினோ கடிதென்று குறுமுனியை வளைந்து கொண்டார். 17
பற்றிடுவான் வளைகின்றோர் தமைநோக்கி எரிவிழித்துப் பரவை தன்பால்,
உற்றவிடம விடுத்ததென முனிவனறன் வெகுளித்தீ உய்த்த லோடுஞ,
சுற்றியது சுற்றியவர் தமைப்பின்னும் பொறிபடுத்தித் துரந்து செல்ல,
மற்றவர்கள் இரிந்தேதம் பதியிழந்து சிதறினரால் மண்மே லெங்கும். 18
அன்னோர்கள் போயிடலும் இன்றுமுதல் சிவன்இடமீ தாயிற்றென்று,
முன்னோனை அருச்சித்துப் பணிந்துவிடை கொண்டுதென்பால் முன்னிச் சென்று,
பொன்னோடு மணிவரன்றி அருவியிழி தருபொதியப் பொருப்பில் நண்ணி,
மன்னோமெய்த் தவம்புரிந்து வீற்றிருந்தான் அப்பரமன் மலர்ந்தான் உன்னி. 19
வேறு
பூவிரி கின்ற காமர் பொதும்பர்சேர் பொதிய வெற்பில்
தாவிரி கும்பத் தண்ணல் வந்திடு தன்மை சொற்றாம்
மாவிரி கின்ற சாதி வனத்திடை மலர்ப்பூங் காவில்
காவிரி போந்த வாறும் ஏனவும் கழறு கின்றோம். 20
ஆகத் திருவிருத்தம் - 1353
- - -
29. இ ந் தி ர ன் அ ரு ச் ச னை ப் ப ட ல ம்
கொடியுருக் கொண்டு முன்னங் குண்டிகை இருந்த பிள்ளை
படிமிசை அதனைத் தள்ளப் படர்ந்தகா விரியின் றன்மை
விடலருந் தளையின் நீக்கி வியனெறிப் படுத்த லோடும்
அடிகளின் அருளாற் செல்லும் ஆருயிர் போன்ற தன்றே. 1
பண்டொரு தந்தி யானோன் படர்சிறைப் புள்ளாய்த் தள்ளக்
குண்டிகை இருந்த நீத்தங் குவலயம் படர்ந்த பான்மை
எண்டருந் தடையால் வல்லோன் இருங்கடத் திட்ட பாந்தாள்
மண்டலத் தொருவன் நீப்ப வழிக்கொளல் போன்ற தன்றே. 2
ஏதத்தின் ஒழுக்கு நீக்கும் இறைவனூல் ஒழுக்குந் தொல்லை
வேதத்தின் ஒழுக்கும் நோற்று வீட்டினை அடையும் நீரார்
போதத்தின் ஒழுக்கும் எங்கோன் புரிதரு கருணை யென்னும்
ஓதத்தின் ஒழுக்கு மென்னக் காவிரி யோடிற் றன்றே. 3
தள்ளரும் பரவை ஏழுந் தரணியைச் சூழ்ந்து நின்ற
உள்ளுறு தொடர்பு நாடி யாவையும் ஒருங்கு நண்ணிப்
பொள்ளெனப் புகுந்த தென்னப் புவியெலாம் பரவி ஆர்த்துத்
தௌ¢ளிதிற் கலங்கி நீத்தந் தௌ¤கிலா தொழுகிற் றாமால். 4
தெண்டிரைப் புணரி யெல்லாந் தினைத்துணை யாக வாரி
உண்டருள் முனிவன் தீர்த்தம் ஒன்றினை வேண்டு மெல்லை
அண்டர்தம் பெருமான் நல்க அன்னவன் கரத்தி லேந்துங்
குண்டிகைப் புனற்கு நேராக் கூறுதற் குவமை உண்டோ. 5
தொல்லையிற் குறியோன் வந்தான் துய்க்குமோ இன்னு மென்னா
வல்லையில் தழைகள் பற்றி வாரிதி கூவிப் பாரின்
எல்லையிற் படர்ந்த தென்ன இலைசெறி பொதும்பர் ஈட்டம்
ஒல்லையிற் பரித்து மேல்கொண் டோடிய தொலிகொள் நீத்தம். 6
சந்தமும் அகிலுஞ் சங்குந் தரளமுங் கவரி தானுஞ்
சிந்துரத் தெயிறும் பொன்னும் மணிகளுந் திரைமேற் கொண்டு
வந்திழி நதியின் தன்மை வருணன்இப் பொருள்க ளெல்லாம்
இந்திரன் தன்பால் ஒச்ச ஏகுதல் போன்ற மாதோ. 7
வரையெனுந் தடம்பொற் றேரும் மதகரித் தொகையும் மாந்தர்
நிரைகளுந் தரங்க மாவும் நெறிக்கொடு மகவான் தன்பால்
விரைவொடு சேறல் சூரன் விண்ணவர்க் கரசன் மீது
பொரவிடு தானை வௌ¢ளம் போவன போன்ற தன்றே. 8
ஆவதோர் இனைய வாற்றால் அலையினால் அகல்வான் முட்டிக்
காவதம் பலவாய் ஆன்று காசினி அளந்து கீழ்பாற்
போவதோர் பொன்னி நீத்தம் புரந்தரன் இருந்து நோற்குந்
தாவறு வனத்திற் போதார் தண்டலை புகுந்த தன்றே. 9
ஓடுநீர் நீத்தப் பொன்னி யொல்லையிற் காமர் காவில்
பீடுற வருத லோடும் பேதுறு மகவான் காணா
ஆடினான் நகைத்தான் எங்கோன் அருச்சனை முடிந்த தென்று
பாடினான் முதல்வன் றாளைப் பரவினான் படர்ச்சி தீர்ந்தான். 10
சீரினை யகற்றி நீங்காத் திருவினை மாற்றித் தொல்பேர்
ஊரினைக் கவர்ந்து தன்னோர் உயிருக்கும் இறுதி நாடுஞ்
சூரனை வென்றால் என்னத் தொலைவிலா மதர்ப்பு மிக்கான்
ஆரவன் உளத்திற் கொண்ட உவகையை அறைதற் பாலார். 11
பாடுறு பொன்னி நீத்தம் பாய்தலும் மகவா னேபோல்
வாடுறு கின்ற தண்கா வல்லையிற் கிளர்ச்சி யெய்தி
ஆடுறு பசிநோ யுற்றோர் அரும்பெறல் அமிர்தம் வந்து
கூடுற நுகர்ந்தால் என்னக் குளிர்ப்பொடு தளிர்த்த தன்னே. 12
வானிறை கின்ற கொண்மூ வார்துளி தலைஇய பின்றைக்
கானிறை மரனும் பூடும் வல்லியுங் கவின்றா லென்ன
மேனியுறை அடைகள் மல்கி விரிதரு சினையும் போதுந்
தானிறை கின்ற தம்மா சதமகன் வளர்த்த பூங்கா. 13
வேறு
வானில மளவிட வளர்ந்த புன்னைகள்
ஆனவை முழுவதும் அரும்பு கின்றன
தூநகை நித்திலத் தொடையல் மெய்யுடை
நீனிற மாயவன் இலைஇய தொக்குமால். 14
தண்ணுறு பாசடை தயங்கு புன்னைகள்
கண்ணுறு வியன்சினை கவினப் பூத்தன
எண்ணுறு தாரகை ஈண்டி மொய்த்திட
எண்ணுற முகிலினம் விளங்கிற் றென்னவே. 15
பண்படும் அளியினம் பயிலு றாதன
சண்பக அணிமரந் தயங்கிப் பூத்தன
எண்படு தபனியத் தியன்ற போதினை
விண்படு தருக்கொடு மேவல் போன்றவே. 16
புயற்பட லந்தொடும் புதுமென் பாடலம்
வியற்பட மலர்ந்தபூ விழுமென் வண்டினம்
அயற்பட வூதுவான் வயந்தக் கம்மியன்
செயற்படு மணிச்சிறு சின்னம் போலுமால். 17
விண்டொடர் மதிகதிர் மிளிருந் தாரகை
கண்டிட வைகலுங் கணிப்பில் கண்ணடி
மண்டல நிரைத்துமண் மாது வைத்தெனக்
கொண்டலை யளவிய கோங்கு பூத்தவே. 18
மாமலர்க் கொன்றையும் மணிமென் பூவையுந்
தாமிரு புடையுறத் தளிர்த்த செய்யமா
ஏமுறு மாலயன் இடையில் வந்தெழு
தோமறு பரஞ்சுடர்த் தோற்றம் போன்றவே. 19
ஆதவன் மீதுபோய் அசையுந் தாழைகள்
மேதகு பாளைகள் மிசைதந் துற்றன
பூதலம் அணங்கினார் புனைய நீட்டிய
கோதறு நித்திலக் கோவை போன்றவை. 20
வச்சிர மேனிய வரைகொள் காட்சிய
பச்சிளம் பூகம்வெண் பாளை கான்றன
நச்சுறு சோலையா நங்கைக் கெண்ணிலார்
எச்சமில் சாமரை இரட்ட ஏந்தல்போல். 21
மேற்றிகழ் செங்கர வீர மானவை
ஆற்றவுஞ் சினைதொறும் அரும்பு கின்றன
நாற்றடம் புயமுடை நாதற் கிந்திரன்
ஏற்றிய மணிச்சுட ரென்ன லாயதே. 22
அல்லிடை யனறியே அலர்ந்த மாலதி
வல்லிகள் தருவெனும் மகிழ்நர் தங்களைப்
புல்லுவ பகலினும் பொருந்து மோவெனா
முல்லைகள் மலர்ந்தன முறுவல் செய்வபோல். 23
ஆசறு வாவியில் அலர்ந்த காவிகள்
பாசடை யிடையிடை பரவு கின்றன
தேசுறு தருநிழல் திருவில் துஞ்சிய
வாசவன் விழிகளின் மல்கு கின்றவே. 24
தொல்லையின் முறைநெறி யொருவித் தோயமேல்
வல்லையில் அங்கிகள் வந்துற் றாலென
அல்லியுஞ் சேயன அரத்த ஆம்பலும்
புல்லிய கிடங்கினிற் பொலிந்து பூத்தவே. 25
பாயிரும் புனற்கயம் பரந்த பாசடை
ஆயின இடையிடை அவிழ்ந்த பங்கயச்
சேயலர் வண்டினந் திளைப்பச் சேர்வன
காயெரி புகையொடு கானம் புக்கபோல். 26
எண்ணுமித் தருக்களுங் கொடியும் ஏனவுங்
கண்ணுற மலர்வதும் அரும்புங் காட்சியும்
வண்ணம தெற்றெனின் மாலைச் செக்கரும்
விண்ணுறும் உடுக்களும் விரவிற் றொக்குமால். 27
இந்திரன் மகிழ்வுற இனைய பான்மையால்
நந்தன வனமெலாம் நன்று பூத்தலும்
அந்தநன் மலர்கொடே யாதிக் கன்பினால்
முந்துறு பூசனை முயல முன்னினான். 28
விடியல்வை கறை* தனின் மேவி வண்டுதேன்
புடையுறு முன்னரே புரையி லாததோர்
கடிமலர் கொய்தனன் கொணர்ந்து கண்ணுதல்
அடிகளில் விதிமுறை அருச்சித் தானரோ. 29
( * விடியல்வைகறை - மிக விடியற் காலம். )
அப்பெரு நாண்முதல் ஆதி அண்ணலை
இப்படி அருச்சனை இயற்றி வைகலும்
ஒப்பற நோற்றரோ உம்பர் கோமகன்
வைப்புறு சண்பக வனத்தின் வைகினான். 30
ஆகத் திருவிருத்தம் - 1383
- - -
30. தே வ ர் பு ல ம் பு று ப ட ல ம்
அந்நாள் அதனில் அவுணர்க் கிறைஏவல்
தன்னான் மிகவுந் தளர்ந்து சிலதேவர்
எந்நாள்இப் புன்மை எமைநீங்கும் என்றிரங்கிப்
பொன்னாடு விட்டுப் புவிதன்னிற் போந்தனரே. 1
தீந்துமிழின் வைப்பான தெக்கிண தேயநண்ணி
மாந்தர்புகழ் காழி வனம்போந்து வானவர்தம்
வேந்துதனைக் கண்டு விரைநாண் மலரடிக்கீழ்ப்
போந்து பணிந்து புகழ்ந்து புகல்கின்றார். 2
ஒன்றே தருமம் ஒழிந்து புவனமெலாஞ்
சென்றே அடுகின்ற தியவுணர் தந்துடக்கில்
அன்றே எமைவிட் டகன்றாய் உனக்கிதுவும்
நன்றே எமையாளும் நாயகனும் நீயன்றோ. 3
கோட்டுக் களிற்றோடுங் கோளரியோ டும்புவியை
வாட்டுற் றிடுஞ்சூர வல்லியத்தின் வன்சிறையில்
ஈட்டுற்ற தேவர் எனும்பசுக்கள் தம்மையெலாங்
காட்டிக் கொடுத்துக் கரந்ததென்கொல் காவலனே. 4
ஏனம் பசுமான் இரலை மரைபடுத்த
ஊனும் வடியும் ஒலிகடலின் உள்ளபல
மீனுஞ் சுமந்து விறலசுரர்க் கேவல்செய்து
மானங் குலைந்து மறந்தோம் மறைகளுமே. 5
மையார் களத்தார் வரம்பெற்ற சூரனுக்குச்
செய்யாத ஏவலேலாஞ் செய்தோம் நெறிநீதி
எய்யாத மான மிவையெல்லாந் தானிழந்தோம்
ஐயா மிகவும் அலுத்தோம் அலுத்தோமே. 6
முந்நாளுந் தந்தி முகத்தவுணன் ஏவல்செய்து
பன்னாள் உழன்றோம் பரமர் அதுதீர்த்தார்
பின்னாளுஞ் சூரன் பெயர்த்தும் எமைவருத்த
இந்நாடி ரிந்தோம் இனித்தான் முடியாதே. 7
எந்நாளும் உன்னைப் புகலென் றிருந்தவியாந்
துன்னா அவுணராற் சோர்ந்து துயருழப்ப
உன்னா ருயிர்காத் தொளித்திங் கிருந்தனையால்
மன்னா உனக்குத் தகுமோ வசையன்றோ. 8
சூரன் முதலாச் சொலப்பட்ட வெவ்வசுரர்
வீரங் குலைந்து விளிவதற்கும் இவ்வுலகில்
ஆரும் பழிக்கத் திரிகின்றோம் ஆகுலங்கள்
தீரும் படிக்குஞ் செயலொன்று செய்வாயே. 9
என்னாப் பலவும் இயம்பி இரங்குதலும்
மன்னா கியமகவான் மாற்றம் அவைகேளா
அன்னார் மனங்கொண்ட ஆகுலத்தைக் கண்டுநெடி
துன்னா அயரா உயரா உரைக்கின்றான். 10
மாயை உதவ வருகின்ற வெஞ்சூரன்
தீய பெருவேள்வி செய்யத் தொடங்குமன்றே
போய நமதுரிமை பொன்னாடுந் தோற்றனமென்
றோயு முணர்வால் உமக்கங் குரைத்திலனோ. 11
அற்றே மகஞ்செய் தமலன் தருவரங்கள்
பெற்றே நமது பெரும்பதமுங் கைக்கொண்டு
சற்றேனும் அன்பில்லாத் தானவர்கோன் தாழ்வான
குற்றே வலைநம்பாற் கொண்டான் குவலயத்தே. 12
நீள்வா ரிதியின் நெடுமீன் பலசுமந்து
தாழ்வாம் பணிபிறவுஞ் செய்துந் தளர்ந்துலகில்
வாழ்வா மெனவே மதித்திருந்தோம் மற்றதன்றிச்
சூழ்வால் ஒருதீமை சூரபன்மன் உன்னினனே. 13
என்னே அத்தீமை யெனவே வினவுங்காற்
பொன்னே அனைய புலோமசையைப் பற்றுதற்குங்
கொன்னே எனையுங் கொடுஞ்சிறையில் வைப்பதற்கு
முன்னே நினைந்தான் முறியில்லாத் தீயோனே. 14
ஆன செயலுன்னி அனிகந் தனைநம்பால்
வானுலகில் உய்ப்ப மதியால் அ•துணர்ந்து
நானும் இவளும் நடுநடுங்கி அச்சுற்று
மேனி கரந்து விரைந்துவிண்ணை நீங்கினமால். 15
மீனும் வடியும் வியன்தசையுந் தான்சுமந்த
ஈன மதுவன்றி ஈதோர் பழிசுமக்கின்
மானம் அழிய வருமே அதுவன்றித்
தீன முறுசிறையுந் தீராது வந்திடுமே. 16
வெய்யவர்தம் வன்சிறையின் வீழின் முடிவில்லா
ஐயன் அடிகள் அருச்சித் தியாமெல்லாம்
உய்ய அவுணர் உயிரிழப்ப மாதவத்தைச்
செய்யும் நெறியுண்டோ வெனச்சிந்தை செய்தனனே. 17
சிந்தை அதனில் இனைய செயலுன்னி
அந்த மறுதுயரத் தாழும் நுமைவிட்டு
வந்து புவியின் மறைந்துதவஞ் செய்துமுக்கன்
எந்தை அடிகள் அருச்சித் திருந்தனனே. 18
அல்லல் புரியும் அவுணர்பணி யால்வருந்தித்
தொல்லையுள மேன்மையெலாந் தோற்றனமே மற்றினிநாம்
எல்லவரும் வௌ¢ளி மலைக்கேகி இறைவனுக்குச்
சொல்லி நமது துயரகற்றிக் கொள்வோமே. 19
வம்மின் எனவுரைப்ப வானோர் அதுகேளா
வெம்மி னதுகண்ட வியன்கண் டகியெனவும்
அம்மென் மயிலெனவும் ஆடி நகைசெய்து
தம்மின் மகிழ்ந்து மதர்ப்பினொடு சாற்றலுற்றார். 20
கோவுநீ எங்கள் குரவனுநீ தேசிகன்நீ
தேவுநீ மேலாந் திருவுநீ செய்தவநீ
ஆவிநீ மற்றை அறிவுநீ இன்பதுன்பம்
யாவுநீ யாகில் எமக்கோர் குறையுண்டோ. 21
பார்த்துப் பணித்த பணிசெய்து நின்றன்னை
ஏத்தித் திரிதல் எமக்குக் கடனாகும்
நீத்துத் துயர நெறியுறுத்தி எம்மையென்றுங்
காத்துப் புரத்தல் உனக்குக் கடன்ஐயா. 22
தேரா அவுணர் திறந்தன்னை முன்தடிந்தாய்
சூரா தியருயிருங் கொள்ளுநெறி சூழ்கின்றாய்
பாராள் பவர்க்கும் பலமுனிவர்க் குஞ்சுரர்க்கும்
ஆராயின் நீயன்றி யாரே துணையாவார். 23
ஆதலால் எங்கள் அலக்கண் அகற்றிடுவான்
காதலாய் அத்தன் கயிலைக் கெமைக்கொண்டு
போதுநீ யென்னப் புரந்தரனும் நன்றென்று
கோதிலா உள்ளத் தொருசூழ்ச்சி கொண்டனனே. 24
ஆவ தொருகாலை அமரர்கோன் தானெழுந்து
தேவர் தமைநோக்கிச் சிறிதிங் கிருத்திரென
ஏவரையும் அங்கண் இருத்தியொரு தானேகிப்
பாவை அயிராணி பாங்கர் அணுகினனே. 25
ஆகத் திருவிருத்தம் - 1408
- - -
31. அ யி ரா ணி சோ க ப் ப ட ல ம்
அன்னம் பொருவு நடையாள் அவன்வரலும்
முன்னங் கெதிரா முறையாற் பலமுறையும்
பொன்னங் கழலிணையைப் பூண்டு வணங்கியெழீஇ
என்னிங்கொ ரெண்ணமுடன் ஏகிற் றிறையென்றான். 1
அம்மொழியைக் கேளா அரசன் உரைசெய்வான்
வெம்மைபுரி சூரன் வியன்பணியா லேவருந்தி
எம்மை யடைந்தார் இனையசில தேவர்
தம்முன் இடர்பலவுஞ் சாற்றி இரங்கினரே. 2
அன்னார் மனங்கொண்ட ஆகுலமும் நந்துயரும்
பொன்னார் சடைமுடியெம் புண்ணியற்குத் தாம்புகலின்
இந்நாள் அவுணர்க் கிறுவாய் தனைப்புரிந்து
தொன்னான் உரிமை யளிப்பன்எனுந் துணிவால். 3
ஆகின்ற துன்பத் தழலாற் பதைபதைத்து
வேகின்ற சிந்தை வியன்அமரர் தம்முடன்யான்
பாகொன்று தீஞ்சொல் உமைபாகன் பணிவரைக்குப்
போகின்றேன் இது புகலுதற்கு வந்தனனே. 4
என்னும் பொழுதில் இடருற் றிகல்வாளி
தன்னங்கம் மூழ்கத் தளர்ந்துவீழ் மஞ்ஞையென
அன்னம் பொருவு நடையாள் அயிராணி
மன்னன் திருமுன் மயங்குற்று வீழ்ந்தனளே. 5
வீழ்ந்தாள் தரிக்கரிதாம் வெய்ய துயர்க்கடலில்
ஆழ்ந்தாள் தனதறிவும் அற்றாள் பிரியாது
வாழ்ந்தாளென் செய்வாள் மகவான் அதுகண்டு
தாழ்ந்தா குலத்தோ டெடுத்தான் தடக்கையால். 6
ஆர்வமொடு கையால் அணைத்தே அவளைத்தன்
ஊருமிசை யேற்றி உணர்ச்சிவரும் பான்மையெலாஞ்
சேரவொருங் காற்றச் சிறிதே தௌ¤வுற்றாள்
காரின் மலிகின்ற மின்போலுங் காட்சியினாள். 7
சிந்தை மயக்கஞ் சிறிதகன்று தேற்றம்வர
முந்தை இடர்வந்து முற்றுந் தனைச்சூழ்ந்த
வந்த மடமான் அதுபோழ்தில் தன்னுள்ளம்
நொந்து நடுங்கி இனைய நுவல்கின்றாள். 8
பொன்னாடு விட்டுப் புவியின் வனத்திருந்து
முன்னார் அருள்கொண் டுவப்புற்று மேவினனால்
என்னா ருயிரே எனைநீ பிரிவாயேல
பின்னர் துணையான் பிழைக்கும் நெறியுண்டோ. 9
வாகத்து நேமிக்கும் வான்பாடு புள்ளினுக்கும்
மேகத் திறமும் வியன்மதியு மாவதுபோல்
நாகத் துறைவோர்க்கு நாயகமே நீயலதென்
சோகத்தை நீக்கித் துணையாவார் வேறுண்டோ. 10
அன்றி யுனைப்பிரிந்தும் ஆவிதனைத் தாங்கவல்லேன்
என்றிடினும் யானொருத்தி யாருந் துணையில்லை
ஒன்றுநெறி நீதி உணராத தீயவுணர்
சென்றிடுவர் நாளும் அவர்கண்டால் தீங்கன்றோ. 11
நீடு புகழ்சேர் நிருதர்கோன் சூழ்ச்சியினால
தேடரிய பொன்னுலகச் செல்வத்தை விட்டிந்தக்
காடுதனில் வந்து கரந்து தவம்புரிந்து
பாடுபடு மாறும் பழிக்கஞ்சி யேயன்றோ. 12
தீய அவுணர் திரிவர் அவர்சிறியர்
மாயை பலபலவும் வல்லார் பவமல்லால்
ஆய தருமம் அறியார் பழிக்கஞ்சார்
நீயும் அ•துணராய் அன்றே நெடுந்தகையே. 13
உன்னன் புடைய வொருமகனும் இங்கில்லை
துன்னுஞ் சுரருமில்லை தொல்களிற்றின் வேந்துமில்லை
பின்னிங் கொருமா தருமில்லை பெண்ணொருத்தி
தன்னந் தனியிருக்க அஞ்சேனோ தக்கோனே. 14
பல்லா றொழுகிப் பவஞ்செய் அவுணரெனும்
ஒல்லார் எனைக்காணின் ஓடிவந்து பற்றினர்போய்
அல்லா தனபுரிவ ரானால் அனையபழி
எல்லாமுன் பாலன்றி யார்கண்ணே சென்றிடுமே. 15
மன்னே இதுவோர் துணிவுரைப்பன் மன்னுயிர்கொண்
டின்னே தமியேன் இரேன்உலகில் யாவரையும்
முன்னே படைத்தளிக்கும் முக்கணர்தம் வெற்பினுக்குன்
பின்னே வருவேன் பெயர்வா யெனவுரையா. 16
பின்றாழ் குழலி பெருந்துயரத் தோடெழுந்து
நின்றாள் இறையுன்னி நேயத் தொடுநோக்கி
நன்றால் உனது திறனென்று நாகரிறை
சென்றார்வ மோடவளைப் புல்லியிது செப்புகின்றான். 17
வாராய் சசியே வருந்தேல் அமரருடன்
காரார் களத்தோன் கயிலைக் கியான்போனால்
ஆராய்ந்து நின்னை அளிப்பவர்அற் றாலன்றோ
பேரார்வ மோடெனது பின்நீ வருவதுவே. 18
செய்ய சடைமேற் சிறந்தமதிக் கோடுபுனை
துய்யவனும் வேலைத் துயின்றோனுஞ் சேர்ந்தளித்த
ஐயன் எமக்கோர் அரணாகி யேயிருக்க
நையல் முறையாமோ நங்காய் நவிலுதியால். 19
ஏவென்ற கண்மடவாய் ஈசனருள் அன்னோனை
வாவென் றளியால் வழுத்திமனத் துன்னின்இங்கே
மேவுங் கயிலையில்யான் மீண்டு வருந்துணையுங்
காவென் றுனைஅவன்பாற் கையடையா நல்குவனால். 20
ஆற்றல் பெரிதுடைய ஐயனே நின்றன்னைப்
போறறியருள் செய்யும் பொருந்துதியால் ஈண்டேன்று
தேற்றுதலும் அன்னான் சிறப்பெவன்கொல் செப்புகெனக்
கோற்றொடிகேள் என்னா அமரேசன் கூறுகின்றான். 21
ஆகத் திருவிருத்தம் - 1429
- - -
32. ம கா சா த் தா ப் ப ட ல ம்
முன்னம் பரமன் அருளின்றி முகுந்த னாதி
மன்னுஞ் சுரர்தானவர் வேலை மதித்த வேலைக்
கன்னங் கரிய விடம்வந்துழிக் காரி னங்கள்
துன்னும் பொழுதிற் குயில்போல் துணுக்குற் றிரிந்தார். 1
அண்ணற் கயிலைக் கிரிதன்னில் அடைந்து செந்தீ
வண்ணத் தமலன் அடிபோற்ற வருந்தல் என்றே
உண்ணற் கரிய பெருநஞ்சினை உண்டு காத்துக்
கண்ணற்கும் ஏனை யவர்க்கும்மிவை கட்டு ரைப்பான். 2
இன்னுங் கடைமின் அமுதம் மெழுமென்று கூற
அந்நின் றவர்பாற் கடலின்கண் அடைந்து முன்போற்
பின்னுங் கடைந்தார் இபமாமுகப் பிள்ளை தன்னை
முன்னம் வழிபட் டிலர்வந்து முடிவ தோரார். 3
என்னா யகற்கு வழியா டியற்றாத நீராற்
கொன்னார் கடலின் நடுமத்தங் குலைந்து வீழ்ந்து
பன்னாகர் வைகும் இடஞ்செல்லஅப் பான்மை நோக்கி
அன்னானை அர்ச்சித் தனர்அச்சுத னாதி யானோர். 4
ஆரா தனைசெய்துழி மந்தர மாதி மைந்தன்
பேரா அருளால் பிலம்நின்று பெயர்ந்து முன்போல்
வாரா நிலைபெற் றிடலோடு மகிழ்ந்து போற்றிக்
காரார் திருமால் முதலோர் கடலைக் கடைந்தார். 5
கடைகின்றுழிச் செம்மதி யாமெனக் காமர் செம்பொன்
அடைகின்ற கும்பத் தெழுந்திட்ட தமுத மங்கண்
மிடைகின்ற தொல்லைச் சுரர்தானவர் யாரும் வெ•கி
உடைகின்ற வேலையென ஆர்த்தனர் ஒல்லை சூழ்ந்தார். 6
எம்மால் இதுவந் துளதால் எமக்கேயி தென்றே
தம்மா சையினாற் சுரர்தானவர் தம்மின் மாறாய்த்
தெம்மா னமுடன் பொரவுன்னலுந் தீர்வு நோக்கி
அம்மால் விரைவின் ஒருமோகினி ஆயி னானே. 7
மூலம் பிறந்த விடம்போல் அழன்மூண் டிடாமல்
நீலம் பிறந்து பிறர்அச்சுற நேர்ந்தி டாமல்
ஞாலம் பிறந்தோர் சுரர்தானவர் நச்ச ஆங்கோர்
ஆலம் பிறந்த தெனமோகினி யாகி நின்றான். 8
சேணார் உலகிற் புவிதன்னில் திசையி லெங்குங்
காணாத வப்பெண் ணுருக்கண்டனர் காதல் கைமிக்
கூணார் அமுதந் தனைவிட்டு முன்னொன்று கண்டோர்
மாணா கியபல் பொருள்கண்டென வந்து சூழ்ந்தார். 9
மெய்த்தா மரையே முதலாய விசிக நான்கும்
உய்த்தான் மதவேள் அதுகாலை உலப்பில் காமப்
பித்தாய் உணர்வு பிழையாகிப் பெரிது மாலாய்
அத்தா ருகமா முனிவோரினும் ஆர்வ மிக்கார். 10
எண்ணா அவுணர் தொகையல்லதை எந்தை மாயம்
உண்ணாடு வானோர் களும்பெண்மயல் உற்று நின்றார்
மண்ணாசை தன்னிற் பொருளாசையின் மாய வாழ்க்கைப்
பெண்ணாசை நீங்கல் எளிதோ பெரியோர் தமக்கும். 11
பூண்டுற்ற கொங்கைப் பொலன்மோகினி யான புத்தேள்
ஆண்டுற் றவர்தங் களைநோக்கி அமரை நீங்கும்
ஈண்டுற் றனன்யான் அமுதும் முளதேது நீவிர்
வேண்டுற்ற தும்பால் உறக்கொண்மின் விரைவின் என்றான். 12
மாலா னவன்அங் கதுகூற மனந்தி ரிந்து
நோலா மையினால் இறக்கின்றவர் நோக்கி யெங்கள்
பாலா வதுநீ யெனமுன்வரும் பான்மை நாடி
மேலாம் அமுதே எமக்கென்றனர் விண்ணு ளோர்கள். 13
வானா டவர்நல் லமுதங்கொடு மாயை நீங்கிப்
போனார் ஒருசார் அவரோடு பொருத தீயோர்
தேனார் மொழிமோ கினியாகிய செங்கண் மாலை
ஆனா விருப்பிற் கொடுபோயினர் ஆங்கொர் சாரில். 14
கொண்டே கியதா னவர்தங்கள் குழுவை நோக்கித்
தண்டேன் மலர்ப்பா யலின்என்னைத் தழுவ வல்லான்
உண்டே இதனில் ஒருவீரன் உவனை இன்னங்
கண்டேன் இலையென்றனன் பெண்ணுருக் கொண்ட கள்வன்.15
ஈறாம் அவுணர் பலரும்மிது கேட்டெ னக்கு
மாறாய் ஒருவர் இலையாரினும் வன்மை பெற்றேன்
வீறா கியவீ ரனும்யானென வீற்று வீற்றுக்
கூறா எனையே புணரென்று குழீஇயி னாரே. 16
கொம்மைத் துணைமென் முலையண்ணலைக் கூடயாரும்
வெம்மைப் படலால் இகல்கொண்டனர் வேறு வேறு
தம்மிற் பொருது முடிந்தார் கிளைதம்மி லுற்ற
செம்மைக் கனலால் முடிவுற்றிடுஞ் செய்கை யேபோல். 17
அன்னார் தொகையில் இருவோர்அரி மாயை யுன்னி
என்னாம் இவரோ டிறக்கிறனம் என்று நீங்கித்
தொன்னாள் உருவந் தனைமாற்றிச் சுரர்கள் போலாய்ப்
பொன்னா டவர்தங் குழுவோடு புகுந்து நின்றார். 18
மாண்டார் அவுணர் அதுநோக்கி வரம்பின் மாயம்
பூண்டாரும் வெ•க மடமாதெனப் போந்த கள்வன்
மீண்டான் அமரர் பலரும் விருப்புற்று மேவ
ஈண்டாழி தன்னில் அமுதந்தனை ஈத லுற்றான். 19
ஈயும் பொழுதின் இமையோர்கள் இனத்தி னூடு
போயங் கிருந்த இருகள்வரும் பொற்பு மிக்க
மாயன் பகிரும் அமிர்த்ந்தனை மந்தி ரத்தால்
ஆயும் படிகொண் டிலர்வல்லையின் ஆர்த லுற்றார். 20
தண்டா மரைக்குப் பகைநண்பெனச சாரும் நீரார்
கண்டார் புடையுற் றவரிங்கிவர் கள்வ ரேயாம்
உண்டார் அமுதங் கடிதென் றுளத்துன்னி யங்கண்
விண்டான் அவற்குக் குறிப்பால் விழிகாட்டி னரால். 21
காட்டுற் றிடலும் அரிநோக்கியிக் கள்வ ரேயோ
வீட்டுற்ற வானோ ருடன்உண்குவ ரென்று தன்கை
நீட்டுற் றிடுசட் டுவங்கொண்டு நிருதர் சென்னி
வீட்டிச் சுரருக் கமுதூட்டி விருந்து செய்தான். 22
அண்டத் தவர்முன் னருந்துற்ற அமுத மன்னார்
கண்டத் திடையே வருமுன்னது கண்டு மாயன்
துண்டித்த சென்னி யழிவற்ற துணிந்த யாக்கை
முண்டத் துடனே துணிபட்டு முடிந்த வன்றே. 23
மாளாத சென்னி யுடைத்தானவர் மாண்பு நோக்கி
நீளார் அமுதுண்டவர் விண்ணிடை நிற்ப ரென்னாத்
தாளால் உலகம் அளந்தோன் அவர்தங் களுக்குக்
கோளா நிலையை இறையோன் அருள்கொண்டு நல்க. 24
புன்னாகம் நாக மணிவான் அடிபோற்றி நோற்றுச்
செந்நாக மோடு கருநாகத்தின் செய்கை பெற்றுப்
பின்னாக முன்னந் தமைக்காட்டிய பெற்றி யோரை
அந்நாக மீது மறைப்பார் அமுதுண்ட கள்வர். 25
வேறு
கெழிய ராகுவுங் கேதுவு மேயென
மொழிய நின்ற முதற்பெயர் தாங்கியே
விழுமி தாகிய வெய்யவ னாதியாம்
எழுவர் தம்மொ டிருவரும் ஈண்டினார். 26
ஈது நிற்கமுன் இன்னமு தந்தனை
ஆத ரத்தொ டயின்றவிண் ணோர்தொழ
ஓத வேலை யொருபுடை யாகவே
மாது ருக்கொண்ட மாதவன் வைகவே. 27
நால்வ கைப்பட நண்ணிய சத்தியுள்
மாலும் ஆதலின் மற்றது காட்டுவான்
ஆல கண்டத்தன் அச்சுதன் அச்சுறுங்
கோல மெய்திக் குறுகினன் அவ்விடை. 28
தண்டு ழாய்முடி யான்தனி நாயகற்
கண்டு வெ•கக் கறைமிடற் றெம்பிரான்
உண்டெ மக்கு முனைப்புணர் காதல்நீ
கொண்ட வேடம் இனிதென்று கூறினான். 29
ஆணின் நீங்கிய அச்சுதன் ஆற்றவும்
நாணி இவ்வுரு நல்கிய தன்மையாள்
காணி யாயுனைக் காதலித் துற்றனள்
பேணி நிற்பதெ னென்னைப் பெருமநீ. 30
ஆதி காலத் தயன்செயல் முற்றிட
மாதை மேவிட வந்துனை வேண்டினங்
காத லோவன்று காரண னாகையின்
மீது சேர்தரும் வீரியன் அல்லையோ. 31
நெற்றி யங்கண் நிமல உனக்கிகல்
பற்ற தில்லையெப் பான்மையர் கண்ணினும்
அற்ற தாக என்னாகந் தழுவுவான்
உற்ற காதலும் உண்மைய தன்றரோ. 32
என்ன காரணம் எண்ணிக்கொல் ஏகினை
அன்ன பான்மை யறிகிலன் எம்பிரான்
இன்ன தாடலை நீயல்ல தேவரே
பின்னை நாடி யறிவுறும் பெற்றியோர். 33
அன்பில் ஆடவர் ஆடவ ரோடுசேர்ந்
தின்ப மெய்தி யிருந்தனர் இல்லையால்
முன்பு கேட்டது மன்று முதல்வநீ
வன்பொ டென்னைப் புணர்வது மாட்சியோ. 34
என்று மாயன் இசைத்தலும் எம்பிரான்
அன்று நீம் நமக்கொரு சத்திகாண்
அன்று தாருகத் தந்தணர் பாங்குறச்
சென்ற போழ்தினுஞ் சேயிழை யாயினாய். 35
முன்னை வேதன் முடிந்தனன் போதலும்
உன்னொ டேவந் துவப்பொடு கூடினோம்
பின்னர் இந்தப் பிரமனை யுந்தியால்
அன்னை யாகி அளித்தனை அல்லையோ. 36
ஆகை யாலுன் அணிநலந் துய்த்திட
ஓகை யால்இவண் உற்றனன் செல்கென
மாகை யாரப் பிடிப்ப வருதலும்
போகை யுன்னிப் பொருக்கென ஓடினான். 37
நாணி ஓடிய நாரண னைப்பிறை
வேணி யண்ணல் விரைவுட னேகியே
பாணி யாலவன் பாணியைப் பற்றினான்
சேணி னின்று திசைமுகன் போற்றவே. 38
பற்றி யேகிப் படிமிசை நாவலாற்
பெற்ற தீவிற் பெருங்கடற் சார்பினின்
மற்று நேரில் வடதிசை வைப்பினில்
உற்ற சாலத்தின் ஒண்ணிழல் நண்ணினான். 39
நண்ணி யேதனி நாயகன் அவ்விடைப்
பெண்ணின் நீர்மையைப் பெற்றிடு நாரணன்
உண்ணெ கிழ்ந்து மயக்குற் றுருகியே
எண்ணில் இன்புறக் கூடினன் என்பவே. 40
மூன்று கண்ணன் முகுந்தன் இருவரும்
ஏன்று கூடிய வெல்லையில் அன்னவர்
கான்று மிர்ந்த புனல்கண்டகி யென
ஆன்ற தோர்நதி யாகிஅ கன்றதே. 41
அந்த நீரின் அகம்புறம் ஆழிகள்
தந்து வச்சிர தந்தி யெனப்படும்
முந்து கீட முறைமுறை யாகவே
வந்து தோன்றின மாழையின் வண்ணமாய். 42
ஆய மண்ணில் அகங்கெழு பஞ்சர
மேயெ னத்தந் திருந்து சிலபகல்
மாயும் அவ்வுயிர் மாய்ந்தபிற் கூடுகள்
தூய நேமிக் குறிகொடு தோன்றுமால். 43
நீர்த்த ரங்க நிரல்பட வீசியே
ஆர்த்தி ரங்கி அணைவுறு கண்டகித்
தீர்த்தி கைப்புனல் சென்றக் குடம்பைகள்
ஈர்த்து வந்திடும் இம்பர்கொண் டெய்தவே. 44
அன்ன கீடம் அமர்ந்த குடம்பையை
இந்நி லத்தர்கொண் டேகி அகத்துறை
பொன்னை வாங்கிப் பொறியினை நோக்கியே
இன்ன மூர்த்தம் இ•தென நாடுவார். 45
நாடி யேயவை நாரண னாகவே
கூடும் அன்பிற் குவலயத் தேசிலர்
தேடி அர்ச்சனை செய்வர் அதன்பெயர்
கேடில் சானக் கிராமம் தென்பரால். 46
மாலும் எந்தையும் மாண்பொடு கூடியே
சால மேவு தனிநக ரேயிதன்
மூல காரணம் ஆகையின் முந்தையோர்
மேலை நாமம் அதற்கு விதித்தனர். 47
இந்த வண்ணம் இருக்க முராரியும்
அந்தி வண்ணத் தமலனு மாகியே
முந்து கூடி முயங்கிய வெல்லையில்
வந்த னன்னெமை வாழ்விக்கும் ஐயனே. 48
மைக்க ருங்கடல் மேனியும் வானுலாஞ்
செக்கர் வேணியுஞ் செண்டுறு கையுமாய்
உக்கி ரத்துடன் ஓர்மகன் சேர்தலும்
முக்கண் எந்தை முயக்கினை நீங்கினான். 49
அத்த குந்திரு மைந்தற் கரிகர
புத்தி ரன்எனும் நாமம் புனைந்துபின்
ஒத்த பான்மை உருத்திரர் தம்மொடும்
வைத்து மிக்க வரம்பல நல்கியே. 50
புவனம் ஈந்து புவனத் திறையென
அவனை நல்கி அமரரும் மாதவர்
எவரும் ஏத்திடும் ஏற்றமும் நல்கினான்
சிவன தின்னருள் செப்புதற் பாலதோ. 51
முச்ச கத்தை முழுதருள் மேனிகொண்
டச்சு தன்றொழ அச்சுதன் போற்றிட
மெச்சி யேயவ ருக்கு விடைகொடுத்
தெச்ச மில்சிவன் ஏகினன் என்பவே. 52
நாய கன்செல நான்முகத் தோனைமுன்
தாயெ னத்தருந் தாமரைக் கண்ணினான்
சேய வைகுண்டஞ் சேர்ந்தனன் ஐயனும்
போயி னான்றன் புவனத் தரசினில். 53
அங்கண் மேவி அரிகர புத்திரன்
சங்கை யில்பெருஞ் சாரதர் தம்மொடும்
எங்கு மாகி இருந்தெவ் வுலகையுங்
கங்கு லும்பகல் எல்லையுங் காப்பனால். 54
மண்ண கத்தரும் வானவ ரும்மலர்
அண்ண லுந்தினம் அர்ச்சிக்கும் நீர்மையான்
கண்ண னும்புக ழப்படு காட்சியான்
எண்ணின் அங்கவ னுக்கெதிர் இல்லையே. 55
அன்ன நீர்மையன் காணென தன்பினால்
உன்னை வந்திக் காத்தருள் உத்தமன்
என்ன லோடும் இசைந்துநின் றாளரோ
பொன்னி னாடு தணந்த புலோமசை. 56
வேறு
இந்திரன் மங்கை இசைந்தது காணா
நந்தமர் கையனும் நம்பனும் நல்கு
மைந்தனை உன்னி வழுத்துத லோடும்
அந்தமி லாவெம தையன் அறிந்தான். 57
காருறழ் வெய்ய களிற்றிடை யாகிப்
பாரிடர் எண்ணிலர் பாங்குற நண்ணப்
பூரணை புட்கலை பூம்புற மேவ
வாரணம் ஊர்பவன் முன்னுற வந்தான். 58
முன்னுற மேவலும் மூவுல கோர்க்கு
மன்னவ னாகிய வாசவன் ஐயன்
பொன்னடி தாழ்ந்து புகழ்ந்தனன் நிற்ப
என்னிவண் வேண்டும் இயம்புதி யென்றான். 59
கேட்டலும் இன்ன கிளத்தினன் மாயை
மாட்டுறு சூரன் வருத்துத லாற்பொன்
நாட்டினை விட்டனன் நானிவ ளோடுங்
காட்டுறு வேயென வேகர வுற்றே. 60
நோற்றிவண் மேவினன் நோதகும் வானோர்
ஆற்றரி தாவவு னன்செயும் இன்னல்
சாற்றினர் வந்து தளர்ந்தனம் எம்மைப்
போற்றுதி யென்று புலம்பின ரன்றே. 61
தள்ளரும் வானவர் தம்மொடு முக்கண்
வள்ளல் தனக்கெம் வரத்த முரைக்க
வௌ¢ளி மலைக்கு விரைந்துசெல் கின்றேன்
எள்ளரி தாகிய இல்லினை வைத்தே. 62
தஞ்சமி லாது தனித்திவ் வனத்தே
பஞ்சுறழ் செய்ய பதத்தியை வைத்தால்
வஞ்சகர் கண்டிடின் வௌவுவர் என்றே
அஞ்சினள் உன்றன் அடைக்கலம் ஐயா. 63
ஆத்தன் அமர்ந்த அகன்கிரி நண்ணி
வாய்த்திடும் இவ்விடை வந்திடு காறும்
பூத்திடு காமர் புலோமசை தன்னைக்
காத்தருள் என்றிது கட்டுரை செய்ய. 64
மேதகு செண்டுள வீரன் இசைப்பான்
ஏதமு றாதநின் ஏந்திழை தன்னைத்
தீதடை யாது சிறப்பொடு காப்பன்
நீதனி யென்று நினைந்திடல் கண்டாய். 65
இல்லுறு நங்கையை இங்ஙனம் வைத்தே
அல்லுறழ் கண்டன் அருங்கயி லைக்குச்
செல்லுதி யென்றருள் செய்து திரும்பித்
தொல்லையெம மையனொர் சூழலின் உற்றான். 66
வாளமர் நீந்தி வயந்தனின் மிக்க
காளனெ னப்படு கட்டுரை யோனை
ஆளுடை அண்ணல் அருட்கொடு நோக்கிக்
கேளிவை யென்று கிளத்திடு கின்றான். 67
மூவரின் முந்திய மூர்த்தி வரைக்குப்
போவது முன்னினன் பொன்னகர் மன்னன்
தேவியி ருந்தனள் தீங்கு வராமே
காவல் கொள்நீ யெனக் கற்பனை செய்தான். 68
ஆகத் திருவிருத்தம் - 1497
- - -
33. இ ந் தி ர ன் க யி லை செ ல் ப ட ல ம்
அத்துணை தன்னில் அருந்துணை இல்லான்
மெய்த்துணை யாகிய மின்னினை நோக்கி
எய்த்திடல் ஐயன் அளிக்குவன் ஈண்டே
சித்தம் வருந்தல் எனத்தௌ¤ வித்தான். 1
மாதினை அவ்விடை மன்னுற வைத்தே
பேதுறு வானவர் பேரவை நண்ணிப்
போதுமெ னக்கொடு போந்து விரைந்தே
நாதன் அகன்கிரி நண்ணினன் அன்றே. 2
அந்தர வைப்பில் அமர்ந்தவர் தம்மோடு
இந்திரன் அக்கயி லைக்கிரி யெய்தி
நந்திபி ரானுறை நன்கடை சேரா
வந்தனை செய்து வழுத்தினன் நின்றான். 3
நிற்றலும் வந்ததென் நீபுகல் என்னச்
சொற்றனன் அங்கது தொன்மையின் நாடி
இற்றில கொல்லுன் இருந்துய ரென்னா
நற்றவர் காணுறு நந்தி யுரைப்பான். 4
நால்வர் உணர்ந்திட நாயகன் ஞான
மூல வியோக முதற்பொருள் காட்டி
ஏல இருந்தனன் யாவரும் ஏகக்
கால மிதன்றென வேகழ றுற்றான். 5
தேறுத வஞ்செய்சி லாதனன் மைந்தன்
கூறிய வாய்மை குறிக்கொள ஓர்ந்து
மாறியீ ழிந்திடு வல்விட மற்றும்
ஏறிய தென்ன இடர்க்கட லுற்றான். 6
இம்பரின் வாசவன் இன்னல் உழப்ப
உம்பர்கள் தாமும் உடல்தளர் வுற்றார்
தம்பம தான தடம்புணை தாழ
அம்புதி தன்னில் அழுந்திடு வார்போல். 7
செல்லல் உழந்து தியங்கிய தேவர்
எல்லவர் தம்மொடும் இந்திர னென்போன்
நல்லருள் செய்திடு நந்திபி ரான்றன்
மெல்லடி போற்றி விளம்புதல் செய்வான். 8
தூய்நெறி நீங்கிய சூரபன் மாவுக்
காயுவொ டாற்றல் அளப்பில செல்வம்
ஏயவை யாவும் இருந்தவ நீரால்
நாயகன் முந்துற நல்கினன் அன்றே. 9
நாங்கள் புரிந்திடு நல்வினை நீங்கித்
தீங்கு குறித்தெழு தீவினை சேர
ஆங்கவன் ஏவலின் அல்லலு ழந்தேம்
ஈங்கிது வும்மிறை வன்செயல் ஐயா. 10
சூனா¢ இயற்கை சுரர்க்கருள் செய்யும்
மாநிரு தர்க்கிறை வன்புரி துன்பம்
ஆன துணர்த்தி அடைந்தனம் என்னில்
தானது போழ்து தவிர்த்திடல் வேண்டும். 11
நீர்த்திரை போல நெறிப்பட யாங்கொள்
ஆர்த்திய கற்றி அறந்தவிர் சூரன்
மூர்த்திகொள் ஆவியும் மொய்ம்பொடு சீருந்
தீர்த்திடு கின்ற திறஞ்செயல் வேண்டும். 12
அன்னது செய்திடின் அன்பறு சூரன்
முன்னர் அருந்தவ முற்றிய காலைச்
சொன்ன வரந்தொலை யுந்தொலை வானாற்
பின்னர் அவன்சொல் பிழைத்தனன் என்பார். 13
அல்லª¦மி மல்லல் அகற்றிலன் என்னில்
நல்லரு ளுக்கொரு நாயகன் என்றே
எல்லவ ரும்புகழ் ஏற்றமும் இன்றாம்
தொல்லை மறைப்படி யுந்தொலை வாமால். 14
ஆகையின் இவ்வகை ஆய்ந்தெமை யாளும்
பாக நினைந்து பரம்பொரு ளானோன்
மோகமி லார்பெற மோனக ஞான
யோகியல் காட்டி யுறைந்துள னேகொல். 15
ஈங்கிவன் அல்லதை இத்திற மாகுந்
தீங்கினை நீக்கவொர் தேவரும் இல்லை
ஓங்கிய மாலவ ரோடமர் செய்தே
ஆங்கவன் நேமியும் அற்றனன் ஐயா. 16
மூவரின் முந்திய மூர்த்தி செயற்கை
யாவதும் ஈதென அண்டரும் யானும்
பூவுல கத்திடை போந்திடின் இன்னே
தீவினை யார்சிறை செய்வது திண்ணம். 17
ஆதலின் ஆயிடை அண்டரும் யானும்
போத லிலைப்புனி தன்கழல் காணத்
தீதறு வேலை தனைத்தெரி வுற்றான்
வாய்தலின் ஓர்புடை வைகுவன் என்றான். 18
பேர்பெறு நந்திபி ரானது கேளா
ஆர்வுறும் இன்னல் அகன்றிவண் நீவிர்
சேர்வுறு மென்றருள் செய்திட ஆங்கே
ஓர்புடை வாசவன் அண்டரொ டுற்றான். 19
வானவர் கோனரன் மால்வரை தன்னிற்
போனதும் உற்றதும் ஈண்டு புகன்றாம்
மானபு லோமசை செய்கையும் அல்லா
ஏனையர் செய்கையும் யாவும் இசைப்பாம். 20
ஆகத் திருவிருத்தம் - 1517
- - -
34. அ ச மு கி ப் ப ட ல ம்
நீங்காதுறை தனிநாயகன் நெடுமாலயன் உணரா
ஓங்காரமு தற்பண்ணவன் உறையுங்கிரி செல்லப்
பாங்காயணங் கினர்போற்றிடப் பயிழ்காழிவ னத்திற்
பூங்காவனந் தனிலேச்சி இருந்தேதவம் புரிந்தாள். 1
சேணாடுபு ரக்கின்றவன் சிந்தித்திடு கின்ற
மாணாகிய வினைமுற்றுற வருவான்றவம் புரிவாள்
காணாளவன் வருகின்றது காலம்பல தொலைய
நாணாடொறுந் தன்மேனியின் நலமாழ்குற மெலிவாள். 2
கொளையாரிசை அளிபாடிய குழலிந்திரன் பிரிவால்
உளையாமனம் பதையாத்தவத் துறைகின்றதொ ரளவில்
வளையார்கலி உலகந்தனில் வாழ்சூரபன் மாவுக்
கிளையாள்பலர் இளையார்புணர்ந் தாலுஞ்சிறி திளையாள். 3
கழிகின்றதொர் கடலேபுரை காமந்தெறு நோயால்
அழிகின்றவள் எவர்தம்மையும் வலிதேபிடித் தணையும்
இழிகின்றதொ ரியல்பாள்முகில் இனம்வாய்திறந் தெனவே
மொழிகின்றதொர் கடியாள்அச முகியென்பதொர் கொடியாள். 4
பொறையில்லவள் அருளில்லவள் புகழில்லவள் சிறிதும்
நிறையில்லவள் நாணில்லவள் நிற்கின்றதொ ரறத்தின்
முறையில்லவள் வடிவில்லவள் முடிவில்லதொர் கற்பின்
சிறையில்லவள் உலகோர்க்கொரு சிறையாமெனத் திரிவாள். 5
கீழுற்றிடும் உலகெத்தனை யவையாவையுங் கிளர்ந்தோர்
வாழுற்றிடும் உலகெத்தனை அவையாவையு மாடே
சூழுற்றிடும் உலகெத்தனை அவையாவையுஞ் சுற்றா
ஊழுற்றிடு தன்னூர்தனில் ஒருநாழியில் வருவாள். 6
பொய்யுற்றவள் களவுற்றவள் புரையுற்றிடு சுரையூன்
துய்யுற்றவள் களியுற்றவள் சோர்வுற்றவள் கொலைசெய்
கையுற்றவள் விழியாலழல் காலுற்றவள் பவத்தின்
மொய்யுற்றவள் படிறுற்றவள் முனிவுற்றவள் மனத்தின். 7
பொங்குஞ்சிகை அழல்மைத்தலை புகுந்தாலென ஔ¤ருஞ்
செங்குஞ்சிய துடையாளெவர் செருச்செய்யினும் இடையாள்
துங்கங்கெழு தூணத்திடை தோன்றிக்கன கனைமுன்
பங்கம்படுத் துயிருண்டெழு பகுவாயரி நிகர்வாள். 8
சீயப்பெரு முகன்தாரகன் நிகராகிய திறலாள்
மாயத்தொழில் பயில்கின்றவள் மணிமால்வரை புரையுங்
காயத்தவள் அடற்கூற்றையுங் கடக்கின்றதொர் வலியாள்
தோயப்புண ரிகளேழுமொர் துணையிற்கடந் திடுவாள். 9
மாலுற்றிட வாழ்சூரபன் மாவின்கிளை முழுதும்
மூலத்தொடு முடிவித்திடு முறையூழ்வினை யென்னச்
சூலத்தினை யேந்தித்தனி தொடர்துன்முகி யுடனே
ஆலத்தின துருவாமென ஆங்குற்றனள் அன்றே. 10
கானின்றுள பொழிலேர்தனைக் காணாநனி சேனாள்
ஆநன்றென வியவாப்புவி அமர்சோலையி தன்றால்
வானின்றுள வனத்தைக்கொடு வந்தேயிவண் மகவான்
தானின்றுவைத் தானிங்கிது தப்பாதென நிற்பாள். 11
ஏலாவிது காணாயென ஈர்ந்தண்பொழில் எழிலை
ஆலாலம தெனவேவரும் அசமாமுகி யென்பாள்
பாலானதுன் முகிதன்னொடு பகராவது காட்டித்
கோலாலம துடனேயது குறுகும்படி வந்தாள். 12
மட்டுற்றிடு தண்காவினை வருடைத்தனி முகத்தாள்
கிட்டிச்சினை நனைமாமலர் கிளையாவையும் நோக்கித்
தட்டற்றிவண் உறைகின்றவர் தமைநோக்குவ லென்னா
எட்டுத்திசை யினும்நாடுதற் கிடையுற்றனள் கடிதின். 13
அதுகண்டனன் அவண்நின்றதொ ரையன்படைத் தலைவன்
முதுகண்டகி இவளாம்அச முகியென்பதொர் கொடியாள்
எதுகண்டிவண் வருகின்றனள் என்னோகருத் திவள்தன்
கதிகண்டனன் நிற்பேனெனைக் காணாநெறி யதனில். 14
மற்றிங்கிவள் செயல்யாவையும் வரலாற்றொடு காணாத்
தெற்றென்றவண் மீள்கின்றுழிச் செவ்வேயெதிர் போந்து
குற்றந்தனக் கிசையுந்திறம் முடிப்பேனெனக் கொலைசெய்
விற்றங்கிய புயவேடரில் வேறோரிடை நின்றான். 15
நின்றானவன் அதுகண்டிலன் நெஞ்சிற்களி தூங்கக்
குன்றாமலை அசமாமுகக் கொடியாள்அவ ளுடனே
சென்றாள்மலர்க் காவெங்கணுந் திரிந்தாள்திரிந் தளவில்
பொன்றாழ்முலைச் சசிமாதவம் புரிகின்றது கண்டாள். 16
அந்தாவிவள் அயிராணிநம் மரசன்றனக் கஞ்சி
நந்தாவளந் தனைப்பெற்றபொன் னகரத்தைவிட் டிங்கே
வந்தாளிவள் தன்னைக்கொடு வருவீரென எங்கோன்
முந்தாதர முடனுய்த்தனன் முடிவற்றதன் படையே. 17
இங்குற்றதை உணராமையின் இமையோர்புரம் நாடி
அங்குற்றிலள் அயிராணியென் றரசன்தனக் குரைப்ப
வெங்கட்டழ லெனச்சீறினன் மீண்டுஞ்சிலர் தமையித்
திங்கட்புரை முகத்தாள்தனைத் தேடும்படி விடுத்தான். 18
வானெங்கணும் பிலமெங்கணும் வரையெங்கணும் பரவை
தானெங்கணுந் திசை யெங்கணுந் தரையெங்கணுந் தரையிற்
கானெங்கணும் நமர்தேடினர் காணாரிவள் தன்னை
ஊனெங்கணும் வருந்தத்திரிந் துழன்றாரிது வுணரார். 19
தண்டேனமர் குளிர்பூங்குழற் சசியென்பவள் தனைநான்
கண்டேனினி இவள்மையலிற் கவலாதொழி கென்றே
வண்டொலிடு தொடைமன்னவன் மகிழ்வெய்தமுன் னுய்ப்பக்
கொண்டேகுவன் யானேயிவள் தனையென்றுகு றித்தாள். 20
இத்தேமொழி தனைஇந்திரன் ஈண்டேதனி யாக
வைத்தேகினன் இவள்தன்னை வருந்தாதளித் திடவோர்
புத்தேளிரும் இலரிங்கிது பொழுதாமவன் புகுமுன்
கொத்தேமலர்க் குழலாள்தனைக் கொடுபோவனென் றடைவாள். 21
தீனக்குற் கடுஞ்சொல்லெனும் உருமேறு தொழிப்பக்
கூனற்பிறை எயிறாகிய மின்னுப்புடை குவலக்
காணக்கரும் படிவத்தொடு கால்கொண்டேழு விசையால்
வானப்புயல் வழுவிப்புவி வந்தாலேன வந்தான். 22
ஊற்றங்கொடு வருதுன்முகி யுடனேயச முகிதான்
தோற்றங்கிளர் மணிவெற்பெனத் துண்ணென்றவண் வரலும்
ஏற்றம்பெற நோற்றேதனி இருந்தாளது காணாக்
கூற்றந்தனைக் கண்டாலெனக் குலைந்தாள்வலி குறைந்தாள். 23
நீரோதமி சைத்தங்கிய நிருதக்ககுல மகளோ
பாரோர்மயக் குறுபேய்மக ளோபாரிடத் தணங்கோ
சூரொடுறு தனிக்கொற்றவை தொழில்செய்பவள் தானோ
ஆரோவிவள் அறியேனென அஞ்சிக்கடி தெழுந்தாள். 24
எழுகின்றவள் தனைநில்லென இசைத்தேயெதிர் எய்தி
மொழிகின்றனள் அயிராணிநின் முதிராவிள நலனும்
பழியில்லதொர் பெருங்காமரும் பயனற்றிவண் வறிதே
கழிவெய்திடத் தவம்பூண்டிடல் கடனோஇது விடுநீ. 25
ஆரொப்புனக் குலகந்தனில் அருளாழியம் பகவன்
மார்பத்துறை திருமங்கையும் மற்றிங்குனக் கொவ்வாள்
பாரிற்கரந் திருந்தேதவம் பயில்வாயிதென் உன்னைச்
சேரத்தவம் புரிகின்றனன் திறற்சூரபன் மாவே. 26
இந்நாள்வரை உனைநண்ணிய இமையோர்க்கிறை உனது
நன்னாயகன் நாகப்பெரு நலனுற்றவன் அன்றே
தன்னாலுணர் வரிதென்பர்கள் தன்பேரழ கதனாற்
பன்னாள்அவ னுடன்மேவினை பாகிற்படு கரிபோல். 27
தவறுஞ்சுரர் உலகொன்றுளன் சதவேள்வியன் எம்முன்
புவனம்பல அண்டம்பல புரக்குந்திரு வுளனால்
இவனங்கவன் பணியேபுரிந் திளைத்தேகரந் துழல்வான்
அவனிங்கிவன் றனையேவல்கொண் டகிலந்தனி யாள்வான். 28
அழிவில்லவன் அவனிங்கிவன் அழியும்பரி சுடையான்
பழியில்லவன் அவனிங்கிவன் பழிவேலையில் திளைப்பான்
கழியும்படர் உழந்தானிவன் களிப்புற்றுளன் அவனே
தொழுவன்பல ரையுமிங்கிவன் தொழுமோவவன் சிலரை. 29
அந்நேரில னொடுமேவுவ தறிகின்றிலை அனையான்
தனனேவலின் ஒழுகித்திரி தமியோன்றனைத் துணையென்
றின்னேமெலிந் தனையீதுனக் கியல்போநின தெழிலுங்
கொன்னேகழிந் தனபற்பகல் குறியாயிது குணனோ. 30
எத்தேவரும் முகிலூர்தியும் இகல்மேவரும் அவுணக்
கொத்தேவரும் அணங்கோருமுன் குற்றேவல்செய் திடவே
முத்தேவரும் புகழப்படும் மொய்ம்புற்றிடு சூர்முன்
உய்த்தேயவ னொடுகூட்டுவன் உலகாண்டுடன் இருக்க. 31
பொன்னோடிகல் பங்கேருகப் பூங்கோமளை தனையும்
அன்னோன்வெறுத் திடுவன்பிறர் அனைவோரையும் அ•தே
உன்னோடள வறுகாதலின் உறுமிங்கிது சரதம்
என்னோடினி வருவாய்கடி தென்றாள்அறங் கொன்றாள். 32
ஆகத் திருவிருத்தம் - 1549
- - -
35. இ ந் தி ரா ணி ம று த லை ப் ப ட ல ம்
தக்க வேழகத் தலையள் கூறிய
அக்கொ டுஞ்சொலை அணங்கு கேட்டலுந்
தொக்க தன்செவித் துளையில் அங்கிவேல்
புக்க தேயெனப் பொருமி விம்மினாள். 1
கைம்ம லர்க்கொடே கடிதில் தன்செவி
செம்மி வல்வினைத் தீர்வு நாடியே
விம்மி யங்குறும் வெய்யள் கேட்டிட
இம்மெ னச்சில இசைத்தல் மேயினாள். 2
ஏடி நீயிவண் இசைத்த தீமொழி
நேடி ஓர்ந்துளார் நிரய மாநெறி
யூடு சேர்வரால் உரைத்த நிற்குமேற்
கூடு தீமையார் குறிக்கற் பாலரே. 3
வேதம் யாவையும் விதித்த நான்முகன்
காத லன்தருங் கடவுள் மங்கைநீ
நீதி யில்லதோர் நெறியின் வாய்மையைப்
பேதை யாரெனப் பேச லாகுமோ. 4
தீங்கி யாவர்க்குஞ் செய்தி டாதவர்
தாங்கள் துன்புறார் தமக்கு வேண்டினோர்
ஆங்கெ வர்க்குமுன் அல்லல் செய்வரால்
ஈங்கு நீயிவை எண்ண லாய்கொலோ. 5
தருமம் பார்த்திலை தக்க மாதவக்
கருமம் பார்த்திலை கற்பும் பார்த்திலை
பெருமை பார்த்திலை பிறப்பும் பார்த்திலை
உரிமை பார்த்திலை உறவும் பார்த்திலை. 6
பழியும் பார்த்திலை படியி கழ்ந்திடு
மொழியும் பார்த்திலை முறையும் பார்த்திலை
வழியும் பார்த்திலை வருவ பார்த்திலை
இழியுந் தீயசொல் லியம்பற் பாலையோ. 7
ஆன்ற தொல்வளன் ஆற்றல் ஆயுள்பின்
ஊன்று சீர்த்திகள் ஒருவுற் றோர்க்கிது
தோன்று நீயிவை துணியல் வாழிகேள்
சான்று நின்குலத் தகுவர் யாவரும். 8
இந்தி ற்கலால் ஏவர் பாலினுஞ்
சிந்தை வைத்திடேன் தீதில் கற்பினேன்
வந்தெ னக்கிது வகுத்தி நின்கிளை
உய்ந்தி டத்தகும் உரைய தன்றிதே. 9
நூன்மை யாவையும் நுனித்து நாடிச்செங்
கோன்மை யன்றியே கொடுமை செய்துள
மேன்மை மன்னரும் வேறு ளார்களும்
பான்மை யாற்பிலம் படுவர் திண்ணமே. 10
மீளில் வெந்துயர் வேலை சார்ந்துளான்
நாளும் நாதனென் றறைதி யார்கணுங்
கோளும் நல்லவுங் கறுகும் அல்லலும்
நாளை உங்கள்பால் நணுகு றாதவோ. 11
நீதி யாகிய நெறியி லாதவள்
ஆத லான்மிக அறிவு மாழ்கியே
தீது கூறினாய் செல்வி தன்றரோ
மாது நீயிது மறத்தி யுய்யவே. 12
ஏவ ரென்றனை எய்தற் பாலினோர்
தேவர் சூழ்தரக் காப்பர் சிந்தையென்
ஆவி ஐம்புலம் அளிக்கும் எங்கணுங்
காவ லுண்டுநீ கடிதிற் போகென்றாள். 13
என்ற காலையில் எயிறு தீயுகக்
கன்று சேயிதழ் கறித்து வெய்துயிர்த்
தொன்றொ டொன்றுகை உருமிற் றாக்கியே
நன்று நன்றெனா நகைத்துச் சீறினாள். 14
மறுவில் வாசவன் மனைவி கூறிய
உறுதி வெய்யவட் கூற்றஞ் செய்தில
அறிவில் பேதையாய் அலகை தேறலால்
வெறிகொள் பித்தனுக் குரைத்த மெய்மைபோல். 15
ஆன காலையில் அசமு கத்தினாள்
ஊன வெந்துயர் உழக்கும் பெற்றியால்
வான வர்க்கிறை மாதை நோக்கியே
தானு ரைத்தனள் இனைய தன்மையே. 16
கிட்டி நல்லன கிளத்தி னேனெனை
ஒட்டி வந்திலை உரைத்தி மாறுனை
அட்டு நுங்குவன் அண்ணற் காகவே
விட்ட னன்இது மெய்மை யாகுமால். 17
ஆர்த்தி யாவுநீ அகல வென்னுடைச்
சீர்த்தி அண்ணர்பாற் சேறல் சிந்தியாய்
பேர்த்தி டாதுனைப் பிடித்து வன்மையால்
ஈத்துப் போகின்றேன் சரத மீதரோ. 18
முடிவில் ஆற்றலார் மூவர் யாவருந்
தடைசெய் கிற்பினுஞ் சமரின் ஏற்பினும்
விடுவன் அல்லன்யான் விரைவி னிற்கொடே
படர்வன் அன்னது பார்த்தி மேலெனா. 19
வெய்யள் அவ்வயி ராணி மென்கரங்
கையிற் பற்றியே கடிதின் ஈர்த்துராய்
மொய்யிற் போயினாள் முரணி லாதவள்
ஐய கோவெனா அரற்றல் மேயினாள். 20
பாவி தீண்டலும் புலம்பிப் பைந்தொடி
ஆவி போந்தென அவச மாகியே
ஓவி லாததொல் லுணர்வு மாய்ந்தனள்
காவி யொண்கணீர் கலுழத் தேம்பினாள். 21
ஐயர் கையில்வந் தவுண ரைச்செறுந்
துய்ய தீம்படை* தோகை கண்ணுறா
வெய்ய சூர்கிளை வீட்ட வந்தென
மையு லாயகண் வாரி மிக்கதே. 22
( * ஐயர் - அந்தணர்கள். அவுணர் - இங்குச் சந்தியா
காலத்தில் இடையூறு புரியும் மாந்தேயர் என்னும் அசுரர்கள்.
தீம்படை - இங்கு வருணாஸ்திரங்கள். )
காசி பன்தருங் கலதி கூற்றுவன்
பாச மன்னகைப் பட்டு விம்மினாள்
வாச வன்றனி மனைவி வெங்கொலைப்
பூசை வாய்ப்படும் புள்ளின் பேடைபோல். 23
நாரி லாதவள் நலிந்து கொண்டனள்
பேரும் எல்லையில் பேதுற் றேயுளஞ்
சோரு கின்றவள் சுற்று நோக்கியே
யாருங் காண்கிலள் அரற்றல் மேயினாள். 24
ஆகத் திருவிருத்தம் - 1573
- - -
36. ம கா கா ள ர் வ ரு ப ட ல ம்
பையரா அமளி யானும் பரம்பொருள் முதலும் நல்கும்
ஐயனே யோலம் விண்ணோர்க் காதியே யோலம் செண்டார்
கையனே யோலம் எங்கள் கடவுளே யோலம் மெய்யர்
மெய்யனே யோலம் தொல்சீர் வீரனே யோலம் ஓலம். 1
ஆரணச் சுருதி யோர்சார் அடலுருத் திரனென் றேத்துங்
காரணக் கடவுள் ஓலம் கடல்நிறத் தெந்தாய் ஓலம்
பூரணைக் கிறைவா வோலம் புட்கலை கணவா வோலம்
வாரணத் திறைமேற் கொண்டு வரும்பிரான் ஓலம் என்றாள். 2
ஒய்யெனச் சசியிவ் வாற்றால் ஓலிட அதுகேட் டெங்கள்
ஐயனைக் குறித்துக் கூவி அரற்றுவாள் போலு மென்னா
மையினைத் தடுத்துச் சிந்து மருத்தென வந்தா னென்ப
வெய்யரிற் பெரிதும் வெய்யோன் வீரமா காளன் என்போன். 3
சாத்தன தருளின் நிற்குந் தானையந் தலைவன் வானோர்
வேத்தவை யான வெல்லாம் வியத்தகு வீரன் உந்தி
பூத்தவன் முதலோர் யாரும் புகழவெவ் விடத்தை யுண்டு
காத்தவன் நாமம் பெற்றோன் காலற்குங் காலன் போல்வான். 4
இருபிறை ஞெலிந்திட் டன்ன இலங்கெழில் எயிற்றன் ஞாலம்
வருமுகில் தடிந்தா லென்ன வாள்கொடு விதிர்க்குங் கையன்
உருமிடிக் குரல்போல் ஆர்க்கும் ஓதையன் உரப்புஞ் சொல்லன்
கரவிழைத் தெங்ஙன் போதி நில்லெனக் கழறி வந்தான். 5
கொம்மென வந்த வீரன் கூவிய சசியை நோக்கி
அம்மனை அழுங்கல் வாழி அசமுகி யெனும் வெய்யாட்
கிம்மியின் துணையும் அஞ்சேல் ஈண்டுனைத் தீண்டு கின்ற
கைம்முறை தடிந்து வல்லே விடுவிப்பன் காண்டி யென்றான். 6
வீரன துரையைக் கேளா மெல்லியல் அணங்கின் நல்லாள்
பேரிடர் சிறிது நீத்துப் பெயலுறு துவலை தூங்கு
மாரியின் செலவு கண்ட வளவயற் வைங்கூழ் போல
ஆருயிர் பெற்றாள் மற்றை அசமுகி அவனைக் கண்டாள். 7
ஓவரும் புவனம் யாவும் ஒருங்குமுத் தொழிலும் ஆற்றும்
மூவருந் துறக்கம் வைகும் முதல்வனுந் திசைகாப் பாளர்
யாவரும் என்முன் நில்லார் ஈண்டெனை இகழ்ந்து சீறித்
தேவர்தங் குழுவி னுள்ளான் ஒருவனோ செல்வ னென்றாள். 8
வெறித்திடு கண்ணில் நோக்கி வெவ்விதழ் அதுக்கி வல்லே
கறித்தனள் வயிற்றின் மாலை கறகற கலிப்ப ஆர்த்தது
முறித்திவன் தன்னை யுண்டு முரண்வலி தொலைப்ப னென்னாக்
குறித்தச முகத்தி நிற்பக் குறுகினன் திறல்சேர் வீரன். 9
தட்டறு நோன்மை பூண்ட சசிதனைத் தமிய ளென்றே
பட்டிமை நெறியாற் பற்றிப் படருதி இவளை யின்னே
விட்டனை போதி செய்த வியன்பிழை பொறுப்பன் நின்னை
அட்டிடு கின்ற தில்லை அஞ்சலை அரிவை யென்றான். 10
கேட்டலும் உருத்திவ் வார்த்தை கிளத்தினை நின்னை யாரே
ஈட்டுடன் இவளைப் போற்றென் றிப்பணி தலைதந் துள்ளார்
வேட்டனன் அவரைக் கேட்ப விளம்புதி யென்றாள் முந்தூழ்
மாட்டுறு கனலி யென்னத் தன்குலம் முடிப்பான் வந்தாள். 11
தாரணி முதல மூன்றுந் தலையளி புரிந்து காப்பான்
காரணி செறிந்துற் றன்ன கரியவன் கடவுள் வௌ¢ளை
வாரண முடைய ஐயன் மற்றிது பணித்தான் என்பேர்
வீரரில் வீரனான வீரமா காளன் என்றான். 12
என்றலும் அனைய வாய்மை இந்திரன் தனக்கும் ஈசன்
பொன்றிரண் மார்பன் நல்கும் புதல்வற்கும் பொதுமைத் தாகி
நின்றது வாகத் தேவர் நிருதரால் வருந்தும் ஊழாற்
சென்றவன் மகவான் ஏவ லாளெனச் சிந்தை செய்தாள். 13
புந்தியில் இதனை யுன்னிப் பொள்ளெனச் சினமீக் கொள்ள
இந்திரன் தொழுவன் கொல்லாம் எனையிடை தடுக்கு நீரான்
சிந்துவன் இவனை யென்னாச் செங்கையிற் சூலந் தன்னை
உந்தினள் அதுபோய் வீரன் உரனெதிர் குறுகிற் றன்றே. 14
குறுகிமுன் வருத லோடுங் குரூஉச்சுடர் அங்கி மூன்றும்
முறையினோ ரிடையுற் றன்ன முத்தலைப் படையைக் காணூஉ
அறைகழல் வீரன் தொன்னாள் அங்கியை அட்ட தேபோல்
எறிகதிர் வாளால் மைந்தன் இருதுணி படுத்தி னானே. 15
படுத்தலும் மணிகள் நீலப் பையரா உமிழ்ந்த தென்னக்
கடித்திடும் எயிற்றுப் பேழ்வாய்க் கருங்கணம் அழல்கான் றென்ன
விடித்திடு கொண்மூ வின்பால் எழுந்தமின் னென்ன அன்னாள்
விடுத்திடு சூல வைவேல் வெவ்வழல் பொழிந்த தன்றே. 16
காலத்தின் உலகம் உண்ணக் கடலுறு வடவை தானே
ஆலத்தை மீது பூசி அசமுகி கரத்திற் கொள்ளச்
சூலத்தின் அமைந்த தம்மா சோதனை கொடுப்ப னென்னாச்
சீலத்தின் மிக்கோன் கூர்வாள் செந்தழல் பொழிவித் தன்றே. 17
சூளினார்த் தெறியும் வீரன் சுடர்கொள்முத் தலைவேல் தன்னை
வாளினால் தடித லோடும் மறிமுகத் தணங்கு சீறிக்
கேளினால் தனது பாங்கிற் கிடைத்ததுன் முகிகைச் சூலங்
கோளினாற் கடிது வாங்கிக் கூற்றனும் உட்க ஆர்த்தாள். 18
வசிகெழு சூலம்பற்றி மருத்துவன் துணைவி யான
சசிதனை இகுளை யாகுந் தையல்தன் கரத்திற் சேர்த்தி
நிசியின் பாந்த ளோடு நெடுங்கதிர் நேர்புக் கென்ன
விசையொடு கொடியள் சென்றாள் வீரமா காளன் தன்மேல். 19
ஒற்றைமுத் தலைவேல் தன்னை ஒப்பிலான் மரும மீது
குற்றிய முன்னி நீட்டிக் குறுகினள் அமர்செய் போழ்திற்
கற்றையஞ் சுடர்க்கூர் வாளாற் காவலன் எறித லோடும்
இற்றது சூலங் கண்ட அசமுகி இடைந்து போனாள். 20
இடைந்தனள் ஏகி ஆண்டோர் இருங்கிரி பறித்திட் டின்னே
முடிந்தனை போலு மென்னா மொய்ம்புடன் அவன்மேல் ஓசசத்
தடிந்தனன் தடித லோடுந் தாரைவாட் படையும் வல்லே
ஒடிந்தது கொடியள் காணா ஒல்லொலிக் கடல்போல் ஆர்த்தாள். 21
வீரமம காள கேண்மோ வேதனே ஆதி விண்ணோர்
ஆரும்வந் தாசி கூற அகிலமும் ஆளு கின்ற
சூரனாம் எமது முன்னோன் தோளிடை உய்ப்பக் கொண்டு
பேருவன் இவளை யோராய் விலக்கினை பேதை நீராய். 22
தடுத்திடல் முறைய தன்றால் தாரகன் தானை வீரர்
அடுத்திடிற் படுப்பர் கண்டாய் அன்றியும் யானே நின்னை
எடுத்தனன் மிசைவன் துய்க்கின் இரும்பசி யுலவா தென்னா
விடுத்தனன் உய்ந்து போதி விளிவுறேல் எளியை யென்றாள். 23
பாதகி இனைய மாற்றம் பகர்தலும் வீரன் கேளா
வேதியின் நினது சூலப் படையிற எறிந்தேன் நின்னை
மாதென அடாது நின்றேன் மற்றிதை உணர்ந்து வல்லே
போதியால் இவளை விட்டுப் போக்கலை கரத்தை யென்றான். 24
என்றலுங் கொடியள் கேளா ஈங்கிவன் வாளு மின்றி
நின்றனன் இவனொ டேபோர் நேருதல் நெறிய தன்றால்
அன்றியும் இவனை வெல்லல் அரிதினிச் சசியைக் கொண்டு
சென்றிடல் துணிபா மென்னாத் திரும்பினள் சேடி தன்பால். 25
துன்முகி யாகி நின்ற துணைவிதன் சிறைப்பட் டுள்ள
பொன்மிகும் யாணர் மேனிப் புலோமசை தனைத்தான் பற்றிக்
கொன்மலி அம்பொன் மேருக் குவட்டினைக் கொடுபோங் காலின்
வன்மையி னோடு கொண்டு மறிமுகத் தணங்கு போனால். 26
போகலும் அதனை ஐயன் பொருநரில் தலைவன் பாரா
ஏகுதி போலும் நில்லென் றெய்தியே உடைவாள் வாங்கிச்
சேகுறு மனத்தாள் கூந்தல் செங்கையாற் பற்றி யீர்த்துத்
தோகையைத் தொட்ட கையைத் துணித்தனன் விண்ணோர் துள்ள. 27
இருட்டுறு பிலத்துற் றோரை எடுத்துவௌ¢ ளிடையிட் டென்ன
மருட்டுறு மதிய ளாகி வருந்திய சசியென் பாளை
அருட்டிறத் தோடு வீடு செய்துபின் அவுண மாதை
உருட்டினன் றனது தாளால் உருமென உதைத்துத் தள்ளி. 28
அயமுகி வீழ்த லோடும் அழுங்கியே அயலின் நின்ற
வயமிகு துன்மு கத்து மங்கைதன் கரத்தி லொன்றைச்
செயிரறு சசியை நீயுந் தீண்டினை போலு மென்னாத்
துயல்வரு தொடையல் வீரன் துணித்தனன் சோரி பொங்க. 29
வேறு
மதர்த்திடு துன்முகி வன்கை வாளினாற்
சிதைத்திடு மொய்ம்புடைச் சேனை காவலன்
உதைத்தனன் அனையளும் ஓவென் றேயுளம்
பதைத்தனள் புலம்பியே படியில் வீழவே. 30
ஆகத் திருவிருத்தம் - 1603
- - -
· முந்தையது : அசுர காண்டம் - பகுதி 3...
· அடுத்தது : அசுர காண்டம் - பகுதி 5...