logo

|

Home >

to-know >

guru-vakkiyam

குரு வாக்கியம்

கணபதி துணை

 

யாழ்ப்பாணத்து நல்லூர்

ஆறுமுகநாவலரவர்கள்

செய்தது.

 

இது

மேற்படியார் மருகரும், மாணாக்கரும்,

வித்துவசிரோமணியுமாகிய

ந. ச. பொன்னம்பலபிள்ளையவர்கள்

 

மாணாக்கர்

சுவாமிநாதபண்டிதரால்

சென்னபட்டணம்

 

தமது

சைவவித்தியாநுபாலனயந்திரசாலையில்

அச்சிற்பதிப்பிக்கப்பட்டது.

 

பிலவங்க௵ கார்த்திகை௴

1907

 

 

 

குருவாக்கியம்

 

      இது ஆசாரியர் சிஷ்யருக்குச் சமயதீக்ஷை செய்யும் போது போதிக்கத்தக்கது.

      அன்பர்களே!

      1.     ஆன்மாக்களுக்கு, எந்தச்சரீரத்திலும் மனிதசரீரங் கிடைப்பது மிக அரிது; மனிதசரீரங்கிடைத்தாலும், சைவசமயம் வழங்குந் தேசத்திலே பிறக்க்க் கிடைப்பது அதினும் மிக அரிது; சைவசமயம் வழங்குந்தேசத்திலே பிறக்கக் கிடைத்தாலும், சைவசமயத்திலே பிரவேசிக்கக் கிடைப்பது அதினும் மிக அரிது. சைவ சமயத்தை அநுட்டித்து முத்தியின்பம் பெறும்பொருட்டே மனிதசரீரங் கிடைத்தது.

      2.     சைவசமயம் என்பதற்குப் பொருள் சிவபெருமானை வழிபடு மார்க்கம். சிவபெருமான் பிறப்பிறப்பின்றி என்றும் உள்ளவர், எங்கும் நிறைந்தவர், இயல்பாகவே எல்லாம் அறிபவர், எல்லாஞ் செய்ய வல்ல்வர், தமது அனுபத்தின் பொருட்டுப் பிறிதொன்றையும் வேண்டாதவர், பிறர் வசத்தினராகாது தம்வசத்தினராயே உள்ளவர், பசுக்களாகிய உயிர்களிடத்துள்ள இரக்கமே திருமேனியாக உடையவர். இவ்விலக்கணங்களெல்லாம் உடையவர் சிவபெருமான் ஒருவரேயன்றி வேறில்லை. ஆதலாற் சிவபெருமான் ஒருவரே பசுக்களுக்குப் பதி. சிவபெருமானிலும் உயர்ந்தவர் உண்டென்றவது சிவபெருமானுக்குச் சமத்துவம் உடையவர் உண்டென்றாவது கொள்வது சிவநிந்தை. இவ்வுணமியெல்லாம் அறிந்து சிவபெருமான் ஒருவரையே வழிபடுஞ் சமயம் சைவசமயம்.

      3.     பசுபதியாகிய சிவபெருமானை வழிபடுநெறியையும், சிவபெருமானுடைய ஏவல்வழி ஒழுகும் பசுக்களாகிய தேவர்களை வழிபடு நெறியையும் அறிவிக்கும் பொது நூல் வேதம்; சிவபெருமானை வழிபடுநெறியையே விரித்து அறிவிக்குஞ் சிறப்பு நூல் சிவாகமம்; சிவபெருமானை வழிபடுதற்கு யோக்கியதையைப் பிறப்பிப்பது சிவாகமத்தில் விதித்த சிவதீக்ஷை; சிவபெருமானுடைய அடையாளங்கள் விபூதி உருத்திராக்ஷம்; சிவபெருமானுடைய மூலமந்திரம் ஶ்ரீ பஞ்சாக்ஷரம்; சிவபெருமானை மிக மகிழ்விக்குந் தோத்திரங்கள் தேவார திருவாசகம்; சிவபெருமானை வழிபடும் இடங்கள் குரு லிங்க சங்கமம். குரு என்றது தீக்ஷை செய்யுங் குருவையும், சைவசமயத்தைப் போதிக்குங் குருவையும், சைவசமய நூலைப் படிப்பிக்குங் குருவையும், லிங்கம் என்றது சிவஞானிகளுடைய பாவனையுற்றுத் திருக்கோயிலுள்ளிருக்குந் திருவுருவங்களை. சங்கமம் என்றது சிவதீக்ஷை பெற்று விபூதி உருத்திராக்ஷந் தரித்துச் சிவாலயத்தொண்டு சிவபூசை சிவசாத்திரம் படித்தல் முதலியன செய்யுஞ் சிவனடியார்களை.

      அன்பர்களே!

      4.     உங்களுக்கு மனிதசரீரங் கிடைத்தது. அம்மட்டோ! சைவசமயம் வழங்குந் தேசத்திலே பிறக்கவுங் கிடைத்தது. சிவபெருமான் உங்களுக்கு அனுக்கிரகிக்கும் பொருட்டு இங்கே இந்தக் கும்பத்திலும் இந்த மண்டலத்திலும் இந்த அக்கினியிலும் நம்மாலே ஆவாகித்துப் பூசிக்கப்பட்டு உங்களுக்குத் தீக்ஷையாகிய அநுக்கிரகத்தைச் செய்யும் பொருட்டு இடங்கொண்டு மறைந்து நின்று செலுத்துங் குருவடிவம் நாம், நாம் இங்கே இப்பொழுது உங்களுக்குச் சமயதீக்ஷை செய்யப் பெற்றீர்கள். இந்தச் சமயதீக்ஷை வாயிலாக நீங்கள் சைவசமயத்திலே பிரவேசித்தீர்கள். விபூதியை மந்திரத்தோடு தரிக்கப்ப பெற்றீர்கள். ஶ்ரீ பஞ்சாக்ஷரத்தை நாம் உபதேசிக்கப் பெற்றீர்கள். தேவார திருவாசகம் ஓத அதிகாரம் பெற்றீர்கள். குருலிங்க சங்கமங்களுக்குத் தொண்டு செய்ய உரிமை பெற்றீர்கள். எல்லா வகையாலும் பசுபதியாகிய சிவபெருமானுக்கே அடிமை பூண்டீர்கள்.

      5.     இனி மரணபரியந்தம் அநுட்டிக்கலாகாத கருமங்கள் எவை அநுட்டிக்கத்தக்க கருமங்கள் எவை என்று நீங்கள் நன்றாக ஆராய்ந்து அறிந்து கொள்ளல் வேண்டும். அநுட்டிக்கலாகாத கருமங்களை மரணபரியந்தம் விலக்கி விடல் வேண்டும். அநுட்டிக்கத்தக்க கருமங்களை மரணபரியந்தம் அநுட்டித்தல் வேண்டும்.

      6.     பெரும்பான்மையும் எல்லாச் சமயத்தாரும் விலக்கத்தக்க பாதகங்கள் உயிர்க்கொலை, களவு, கள்ளுணல், மற்சமாமிசம் புசித்தல், பொய், வியபிசாரம் முதலியவைகள். இவைகளை நீங்கள் ஒரு பொழுதுஞ் செய்யலாகாது.

      7.     பிதா மாதா முதலிய பெரியோர்களை ஒரு சிறிதும் அவமதியாது எந்நாளும் மிக்க மரியாதை செய்து பாதுகாத்து நடத்தல் வேண்டும். வறியவர்களாயுந் தொழில் செய்து சீவனஞ் செய்ய வல்லமை இல்லாதவர்களாயும் உள்ள கூனர் குருடர் முடவர் வியாதியாளர் கிழவர் இவர்களுக்குச் சமயம் வாய்க்கும் பொழுது உங்களாலே கூடிய உதவி செய்தல் வேண்டும். உங்களுக்குத் தீமை செய்தவர்களுக்கும் நீங்கள் நன்மையே செய்தல் வேண்டும். இவையெல்லாம் எல்லாச் சமயத்தாருக்கும் வேண்டப்படுந் தருமங்கள்.

      8.     சிவநிந்தை, குருநிந்தை, சிவனடியார் நிந்தை, சிவசாத்திர நிந்தை, சிவத்திரவியத்தைக் குருத்திரவியத்தை உபயோகித்தல் முதலாயின அதிபாதகங்களாகிய சிவத்துரோகங்கள். இவைகளை நீங்கள் மறந்துஞ் செய்யாது மரணபரியந்தஞ் சாவதானமாக இருத்தல் வேண்டும்.

      9.     நியமமாக நாடோறும் அநுட்டானஞ் செய்து சிவபெருமானைத் தியானித்து ஶ்ரீ பஞ்சாக்ஷரத்தில் இயன்ற உருச்செபித்துச் சிவபெருமானைத் தோத்திரஞ் செய்தல் வேண்டும். பெண்கள் வீட்டுக்கு விலக்கானால் மூன்று நாளும் ஶ்ரீ பஞ்சாக்ஷரத்தை மனசினாலே சிந்தித்தல் வேண்டும். நாலா நாள் ஸ்நானஞ் செய்தபின் அநுட்டானம் பண்ணலாம்.

      10.    விபூதி நெற்றியில் எப்பொழுதுந் தரித்துக்கொள்ளல் வேண்டும். கீழே சிந்தா வண்ணம் அண்ணாந்து “சிவசிவ” என்று சொல்லி வலக்கையின் நடுவிரல் மூன்றினாலுந் தரித்தல் வேண்டும். விபூதி தரியாத முகம் சுடுகாட்டுக்குச் சமம். ஆதலால் விபூதி தரித்துக் கொண்டே புறத்திற் புறப்படல் வேண்டும்.

      11.    தினந்தோறுமாவது புண்ணியகாலங்களிலாவது திருக்கோயிலுக்குப் போய்ச் சிவலிங்கப்பெருமானைத் தரிசித்து வணங்கி வலம் வந்து துதித்தல் வேண்டும். உங்களாலே கூடியபொழுது திருக்கோயிலிலே சுகந்த தூபமிடுங்கள்; திருவிளக்கேற்றுங்கள்; திருவலகிடுங்கள்; திருமெழுக்கிடுங்கள்; திருநந்தவனம் வையுங்கள்; சுசியோடு புஷ்பமெடுத்துத் திருமாலை கட்டிக் கொடுங்கள்; திரு வீதியில் உள்ள புல்லைச் செதுக்குங்கள்.

      12.    குருவையுஞ் சிவனடியார்களையுங் கண்டால் உடனே இருக்கை விட்டெழுந்து கும்பிட்டு நமஸ்காரஞ் செய்யுங்கள்; அவர்களெதிரே இருக்கு முறையறிந்து இருங்கள்; பேசு முறையறிந்து பேசுங்கள்; அவர்களை எவராயினுங் குற்றம் பேசினால் உடனே காதைப்பொத்திக்கொண்டு அவ்விடத்தினின்றும் போய்விடுங்கள்.

      13.    சிவபெருமானின் வேறாகாத திருவருள் என்கின்ற சிவசத்தியே பார்வதி தேவியார். ஆதலால் அவரை வழிபடுவது சிவபெருமானை வழிபடுவதேயாம். புண்ணியஞ் செய்தவர்களுக்கு அநுக்கிரகமும் பாவஞ் செய்தவர்களுக்கு நிக்கிரகமுஞ் செய்யும் பொருட்டுச் சிவபெருமான் கருணையினாலே கொண்டருளிய மூர்த்தங்கள் அவருடைய திருக்குமாரர்கள் எனப்படுகிற விநாயகக்கடவுள் சுப்பிரமணியக்கடவுள் வைரவக்கடவுள் வீரபத்திர்ரக்கடவுள். ஆதலால் அவர்களை வழிபடுவதுஞ் சிவபெருமானை வழிபடுவதேயாம். குருவினிடத்தும் சிவனடியார்களிடத்தும் சிவசின்னமும் சிவ மந்திரமும் சிவநாமமும் சிவமகிமையும் சிவசாத்திரமும் விளங்கக் காண்டலினால் அவர்களை வழிபடுவதுஞ் சிவபெருமானை வழிபடுவதேயாம். இப்படியன்றி, உயிர்ப்பலியேற்குந் துட்ட்தேவதைகளையும் வீரன் மாடன் கறுப்பன் முதலிய பிசாசுகளையும் வணங்கலாகாது. வணங்குவீர்களானால், சிவபெருமானுடைய சாபம் உங்களுக்குத் தப்பாது கிடைக்கும்.

      14.    தேவார திருவாசகத் திருமுறையையும் சிவபுராணத் திருமுறையையும் மடியிலாவது நிலத்திலாவது ஆசனத்திலாவது சயனத்திலாவது வைக்கலாகாது. பீட்த்திலாவது பட்டுப்பரிவட்டத்திலாவது காவிப்பரிவட்டத்திலாவது வைத்தல் வேண்டும்.

      15.    திருக்கோயிலி லாவது திருமடத்திலாவது தேவார திருவாசகம் ஒதப்ப்டும் பொழுதும், சைவப்பிரசங்கஞ் செய்யப்படும் பொழுதும், சிவபுராணம் படிக்கப்படும் பொழுதும், நீங்கள் போய்ச் சிரத்தையோடு கேட்டல் வேண்டும்.

      16.    நீங்கள் ஓரோர் காலத்து அறிந்தேனும் அறியாதேனும் அநுட்டிக்கலாகாத கருமங்களை அநுட்டித்தாலும், அநுட்டிக்கத்தக்க கருமங்களை அநுட்டியாதொழிந்தாலும் மனம் பதைபதைத்துக் குருவை அடைந்து விண்ணப்பஞ் செய்து குரு முன்னிலையாகப் பிராயச்சித்தஞ் செய்து கொள்ளல் வேண்டும். பிராயச்சித்தமாவது செய்த பாவத்தைப் போக்கும் வாயில்.

      17.    பெறுதற்கரிய மனித சரீரமும் சைவ சமய தேசப்பிறப்பும் சைவசமயப் பிரவேசமும் பெற்ற நீங்கள், இவை வீண் போகா வண்ணம் நாம் இங்கே போதித்தபடி ஒழுகிச் சிவபெருமானுடைய திருவருளைப் பெற்று வாழக்கடவீர்கள்.

குருவாக்கியம்

முற்றிற்று.

Related Content