பூத்த பங்கயப் பொகுட்டின்
மேல் பொருகயல் உகளும்
காய்த்த செந் நெலின் காடு
சூழ் காவிரி நாட்டுச்
சாத்த மங்கை என்று
உலகெலாம் புகழ்வுறும் தகைத்தால்
வாய்த்த மங்கல மறையவர்
முதற்பதி வனப்பு. 1
நன்மை சாலும் அப்பதியிடை
நறு நுதல் மடவார்
மென் மலர்த் தடம்
படிய மற்றவருடன் விரவி
அன்னம் ஒண்துறை
ஆடுவ பாடுவ சாமம்
பன் மறைக் கிடையுடன்
பயிற்றுவ பல பூவை. 2
ஆய்ந்த மெய்ப் பொருள் நீறு
என வளர்க்கும் அக் காப்பில்
ஏய்ந்த மூன்று தீ
வளர்த்துளார் இரு பிறப்பாளர்
நீந்து நல் அறம்
நீர்மையின் வளர்க்கும் அத்தீயை
வாய்ந்த கற்புடன் நான்கு என
வளர்ப்பர் கண் மடவார். 3
சீலம் உய்த்த அத்
திருமறையோர் செழு மூதூர்
ஞாலம் மிக்க நான் மறைப்
பொருள் விளக்கிய நலத்தார்
ஆலம் வைத்த கண்டத்தவர்
தொண்டராம் அன்பர்
நீல நக்கனார் என்பவர்
நிகழ்ந்துளார் ஆனார். 4
வேத உள்ளுறை ஆவன
விரிபுனல் வேணி
நாதர் தம்மையும் அவர்
அடியாரையும் நயந்து
பாதம் அர்ச்சனை புரிவதும்
பணிவதும் என்றே
காதலால் அவை இரண்டுமே
செய் கருத்து உடையார். 5
மெய்த்த ஆகம விதி
வழி வேத காரணரை
நித்தல் பூசனை புரிந்து
எழு நியமும் செய்தே
அத்தர் அன்பருக்கு அமுது
செய்விப்பது முதலா
எத் திறத்தன பணிகளும்
ஏற்று எதிர் செய்வார். 6
ஆய செய் கையில் அமரும்
நாள் ஆதிரை நாளில்
மேய பூசனை நியதியை
விதியினால் முடித்துத்
தூய தொண்டனார் தொல்லை
நீடு அயவந்தி அமர்ந்த
நாயனாரையும் அருச்சனை
புரிந்திட நயந்தார். 7
உறையுள் ஆகிய மனை
நின்றும் ஒருமை அன்புற்ற
முறைமையால் வரு பூசைக்கு
முற்ற வேண்டுவன
குறைவறக் கொண்டு மனைவியார்
தம்மொடும் கூட
இறைவர் கோயில் வந்து
எய்தினர் எல்லையில் தவத்தோர். 8
அணைய வந்து புக்கு
அயவந்தி மேவிய அமுதின்
துணை மலர்க் கழல் தொழுது
பூசனை செயத் தொடங்கி
இணைய நின்று அங்கு
வேண்டுவ மனைவியார் ஏந்த
உணர்வின் மிக்கவர் உயர்ந்த
அர்ச்சனை முறை உய்த்தார். 9
நீடு பூசனை நிரம்பியும்
அன்பினால் நிரம்பார்
மாடு சூழ் புடை வலம்
கொண்டு வணங்கி முன் வழுத்தித்
தேடு மா மறைப்
பொருளினைத் தெளிவுற நோக்கி
நாடும் அஞ்செழுத்து உணர்வுற
இருந்து முன் நவின்றார். 10
தொலைவில் செய் தவத்
தொண்டனார் சுருதியே முதலாம்
கலையின் உண்மையாம் எழுத்து
அஞ்சும் கணிக்கின்ற காலை
நிலையின் நின்று முன் வழுவிட
நீண்ட பொன் மேருச்
சிலையினார் திருமேனி மேல்
விழுந்தது ஓர் சிலம்பி. 11
விழுந்த போதில் அங்கு அயல்
நின்ற மனைவியார் விரைவுற்று
எழுந்த அச்சமோடு இளம்
குழவியில் விழும் சிலம்பி
ஒழிந்து நீங்கிட ஊதி
முன் துமிப்பவர் போலப்
பொழிந்த அன்பினால் ஊதி
மேல் துமிந்தனர் போக. 12
பதைத்த செய்கையால் மனைவியார்
முன்செயப் பந்தம்
சிதைக்கு மாதவத் திரு மறையவர்
கண்டு தம் கண்
புதைத்து மற்றிது செய்தது என்
பொறி இலாய் என்னச்
சுதைச் சிலம்பி மேல் விழ
ஊதித் துமிந்தனன் என்றார். 13
மனைவியார் செய்த அன்பினை
மனத்தினில் கொள்ளார்
புனையும் நூல் மணி மார்பர்
தம் பூசனைத் திறத்தில்
இனைய செய்கை இங்கு
அநுசிதமாம் என எண்ணும்
நினைவினால் அவர் தம்மை
விட்டு அகன்றிட நீப்பார். 14
மின் நெடுஞ்சடை விமலர் மேல்
விழுந்த நூல் சிலம்பி
தன்னை வேறு ஒரு
பரிசினால் தவிர்ப்பது தவிர
முன் அணைந்து வந்து ஊதி
வாய் நீர்ப் பட முயன்றாய்
உன்னை யான் இனித் துறந்தனன்
ஈங்கு என உரைத்தார். 15
அஞ்சும் உள்ளமோடு அவர்
மருங்கு அணைவுற மாட்டார்
நஞ்சம் உண்டவர் கோயிலில்
நங்கையார் இருந்தார்
செஞ்சொல் நான்மறைத் திருநீல
நக்கர்தாம் இரவு
பஞ்சின் மெல் அணைப்
பள்ளியில் பள்ளி கொள்கின்றார். 17
பள்ளி கொள் பொழுது அயவந்திப்
பரமர் தாம் கனவில்
வெள்ள நீர்ச் சடையொடு
நின்று மேனியைக் காட்டி
உள்ளம் வைத்து எமை ஊதி
முன் துமிந்த பால் ஒழியக்
கொள்ளும் இப் புறம் சிலம்பியின்
கொப்புள் என்று அருள. 18
கண்ட அப்பெரும் கனவினை
நனவு எனக் கருதிக்
கொண்ட அச்சமோடு அஞ்சலி
குவித்து உடன் விழித்துத்
தொண்டனார் தொழுது ஆடினார்
பாடினார் துதித்தார்
அண்டர் நாயகர் கருணையைப்
போற்றி நின்று அழுதார். 19
போது போய் இருள் புலர்ந்திடக்
கோயில் உள் புகுந்தே
ஆதி நாயகர் அயவந்தி
அமர்ந்த அங்கணர்தம்
பாத மூலங்கள் பணிந்து வீழ்ந்து
எழுந்து முன் பரவி
மாதராரையும் கொண்டு தம்
மனையில் மீண்டு அணைந்தார். 20
பின்பு முன்னையில் பெருகிய
மகிழ்ச்சி வந்துஎய்த
இன்புறும் திறத்து எல்லையில்
பூசனை இயற்றி
அன்பு மேம் படும் அடியவர்
மிக அணை வார்க்கு
முன்பு போல் அவர் வேண்டுவ
விருப்புடன் முடிப்பார். 21
அன்ன தன்மையில் அமர்ந்து
இனிது ஒழுகும் அந்நாளில்
மன்னு பூந்தராய் வரு
மறைப் பிள்ளையார் பெருமை
பன்னி வையகம் போற்றிட
மற்று அவர் பாதம்
சென்னி வைத்து உடன்
சேர்வுறும் விருப்பினிற் சிறந்தார். 22
பண்பு மேம்படு நிலைமையார்
பயிலும் அப்பருவம்
மண் பெரும் தவப் பயன்
பெற மருவு நற்பதிகள்
விண் பிறங்கு நீர் வேணியார்
தமைத் தொழ அணைவார்
சண்பை மன்னரும் சாத்த
மங்கையில் வந்து சார்ந்தார். 23
நீடு சீர்த் திரு
நீலகண்டப் பெரும் பாணர்
தோடுலாங் குழல் விறலியார்
உடன் வரத் தொண்டர்
கூடும் அப் பெரும்
குழாத்தொடும் புகலியர் பெருமான்
மாடு வந்தமை கேட்டு உளம்
மகிழ் நீல நக்கர். 24
கேட்ட அப் பொழுதே
பெரு மகிழ்ச்சியில் கிளர்ந்து
தோட்டலங்கலும் கொடிகளும் புனைந்து
தோரணங்கள்
நாட்டி நீள் நடைக் காவணம்
இட்டு நல் சுற்றத்து
ஈட்டமும் கொடு தாமும் முன்
எதிர் கொள எழுந்தார். 25
சென்று பிள்ளையார் எழுந்தருளும்
திருக் கூட்டம்
ஒன்றி அங்கு எதிர் கொண்டு
தம் களிப்பினால் ஒருவாறு
அன்றி ஆடியும் பாடியும்
தொழுது எழுந்து அணைவார்**
பொன் தயங்கு நீள் மனையிடை
உடன் கொடு புகுந்தார்.
( ** அயர்வார் என்றும் பாடம் ) 26
பிள்ளையார் எழுந்து அருளிய
பெருமைக்குத் தக்க
வெள்ளம் ஆகிய அடியவர்
கூட்டமும் விரும்ப
உள்ளம் ஆதரவு ஓங்கிட
ஓங்கு சீ(ர்க்)காழி
வள்ளலாரைத் தம் மனையிடை
அமுது செய்வித்தார். 27
அமுது செய்த பின் பகலவன்
மேல் கடல் அணையக்
குமுத வாவியில் குளிர் மதிக்
கதிர் அணை போதில்
இமய மங்கை தன் திருமுலை
அமுது உண்டார் இரவும்
தமது சீர் மனைத்
தங்கிட வேண்டுவ சமைத்தார். 28
சீல மெய்த் திருத்
தொண்டரோடு அமுது செய்தருளி
ஞாலம் உய்ந்திட நாயகியுடன்
நம்பர் நண்ணும்
காலம் முற்பெற அழுதவர்
அழைத்திடக் கடிது
நீல நக்கனார் வந்து அடி
பணிந்து முன் நின்றார். 29
நின்ற அன்பரை நீல
கண்டப் பெரும் பாணர்க்கு
இன்று தங்க ஓர் இடம்
கொடுத்து அருளுவீர் என்ன
நன்றும் இன்புற்று நடு
மனை வேதியின் பாங்கர்ச்
சென்று மற்று அவர்க்கு
இடம் கொடுத்தனர் திருமறையோர். 30
ஆங்கு வேதியில் அறாத செம்
தீ வலம் சுழிவுற்று
ஓங்கி முன்னையில் ஒரு
படித்து அன்றியே ஒளிர
தாங்கு நூலவர் மகிழ்வுறச்
சகோட யாழ்த் தலைவர்
பாங்கு பாணியாருடன் அருளால்
பள்ளி கொண்டார். 31
கங்குலில் பள்ளி கொண்ட
பின் கவுணியர் தலைவர்
அங்கு நின்று எழுந்தருளுவார்
அயவந்தி அமர்ந்த
திங்கள் சூடியை நீல
நக்கரைச் சிறப்பித்தே
பொங்கு செந்தமிழ் திருப்பதிகத்
தொடை புனைந்தார். 32
பதிக நாண் மலர் கொண்டு
தம்பிரான் கழல் பரவி
அதிக நண்பினை நீல
நக்கருக்கு அளித்தருளி
எதிர் கொளும் பதிகளில்
எழுந்து அருளினார் என்றும்
புதிய செந்தமிழ்ப் பழ
மறை மொழிந்த பூசுரனார். 33
பிள்ளையார் எழுந்தருள அத்தொண்டர்
தாம் பின்பு
தள்ளும் அன்புடன் கேண்மையும்
தவிர்ப்பில எனினும்
வள்ளலார் திருவருளினை
வலிய மாட்டாமை
உள்ளம் அங்கு உடன் போக்கி
மீண்டு ஒரு வகை இருந்தார். 34
மேவு நாளில் அவ் வேதியர்
முன்பு போல் விரும்பும்
தாவில் பூசனை முதற்
செய்கை தலைத்தலை சிறப்பச்
சேவின் மேலவர் மைந்தராம்
திரு மறைச் சிறுவர்
பூவடித் தலம் பொருந்திய
உணர்வொடும்** பயின்றார்.
( ** அறிவொடும் என்றும் பாடம் ) 35
சண்பையாளியார் தாம்
எழுந்தருளும் எப் பதியும்
நண்பு மேம்பட நாளிடைச்
செலவிட்டு நண்ணி
வண் பெரும் புகழவர் உடன்
பயின்று வந்து உறைந்தார்
திண் பெரும் தொண்டர்
ஆகிய திரு நீலநக்கர். 36
பெருகு காதலில் பின் நெடு
நாள் முறை பிறங்க
வருபெரும் தவ மறையவர்
வாழி சீகாழி
ஒருவர் தம் திருக்
கல்லியாணத்தினில் உடனே
திருமணத் திறம் சேவித்து
நம்பர் தாள் சேர்ந்தார். 37
தரு தொழில் திரு மறையவர்
சாத்த மங்கையினில்
வருமுதல் பெரும் திருநீல
நக்கர் தாள் வணங்கி
இரு பிறப்புடை அந்தணர்
ஏறுயர்த்தவர் பால்
ஒருமை உய்த்துணர் நமி
நந்தியார் தொழில் உரைப்பாம். 38
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : சேக்கிழார்
திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை
பண் :
நாடு :
தலம் :
சிறப்பு: திருத்தொண்டர் புராணம் - முதற் காண்டம் - திருநின்ற சருக்கம் - திருநீலநக்க நாயனார் புராணம்