நிலத்தின் ஓங்கிய நிவந்தெழும்
பெரும் புனல் நீத்தம்
மலர்த் தடம் பணை வயல்
புகு பொன்னி நன்னாட்டுக்
குலத்தின் ஓங்கிய குறைவு இலா
நிறை குடி குழுமித்
தலத்தின் மேம் படு நலத்தது
பெருந் திருத் தலையூர். 1
அங்கண் மா நகர் அதன்
இடை அருமறை வாய்மைத்
துங்க வேதியர் குலத்தினில் தோன்றிய தூயோர்
செங்கண் மால் விடையார் செழும்
பொன் மலை வல்லி
பங்கனார் அடிமைத் திறம் புரி பசுபதியார். 3
ஆய அந்தணர் அருமறை உருத்திரம் கொண்டு
மாயனார் அறியா மலர்ச்
சேவடி வழுத்தும்
தூய அன்பொடு தொடர்பினில் இடையறாச் சுருதி
நேய நெஞ்சினர் ஆகி அத்
தொழில் தலை நின்றார். 4
கரையில் கம்பலை புள்
ஒலி கறங்கிட மருங்கு
பிரச மென் சுரும்பு அறைந்திடக்
கரு வரால் பிறழும்
நிரை நெடுங் கயல் நீரிடை
நெருப்பு எழுந்தது அனைய
விரை நெகிழ்ந்த செங் கமலமென்
பொய்கையுள் மேவி. 5
தெள்ளு தண் புனல் கழுத்தளவு ஆயிடைச் செறிய
உள்ளுறப் புக்கு நின்று கை உச்சி மேல் குவித்துத்
தள்ளு வெண்டிரைக் கங்கை நீர் ததும்பிய சடையார்
கொள்ளும் அன்பினில் உருத்திரம் குறிப்பொடு பயின்றார். 6
அரு மறைப் பயன் ஆகிய உருத்திரம் அதனை
வரு முறைப் பெரும் பகலும் எல்லியும் வழுவாமே
திருமலர்ப் பொகுட்டு இருந்தவன் அனையவர் சில நாள்
ஒருமை உய்த்திட உமை இடம் மகிழ்ந்தவர் உவந்தார். 7
காதல் அன்பர் தம் அரும் தவப் பெருமையும் கலந்த
வேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பி
ஆதி நாயகர் அமர்ந்து அருள் செய்ய மற்றவர் தாம்
தீது இலா நிலைச் சிவபுரி எல்லையில் சேர்ந்தார்.**
( ** சென்றார் எனவும் பாடம் ) 8