பூதநாயகர் புற்று இடம் கொண்டவர்
ஆதிதேவர் அமர்ந்த பூங் கோயிலிற்
சோதிமாமணி நீள்சுடர் முன்றில் சூழ்
மூதெயில் திரு வாயில் முன்னாயது. 1
பூவார் திசைமுகன் இந்திரன் பூமிசை
மாவாழ் அகலத்து மால்முதல் வானவர்
ஓவாது எவரும் நிறைந்துறைந் துள்ளது
தேவா சிரியன் எனுந் திருக்காவணம். 2
அரந்தை தீர்க்கும் அடியவர் மேனிமேல்
நிரந்த நீற்று ஒளியால்நிறை தூய்மையால்
புரந்த அஞ்சு எழுத்துஓசை பொலிதலால்
பரந்த ஆயிரம் பாற்கடல் போல்வது. 3
அகில காரணர்தாள் பணிவார்கள் தாம்
அகில லோகமும் ஆளற்கு உரியர்என்று
அகில லோகத்து உளார்கள் அடைதலின்
அகில லோகமும் போல்வத தனிடை. 4
அத்தர் வேண்டிமுன் ஆண்டவர் அன்பினால்
மெய்த் தழைந்து விதிர்ப்புறு சிந்தையார்
கைத் திருத்தொண்டு செய்கடப் பாட்டினார்
இத்தி றத்தவர் அன்றியும் எண்ணிலார். 5
மாசிலாத மணி திகழ் மேனிமேல்
பூசுநீறு போல் உள்ளும் புனிதர்கள்
தேசினால் எத்தி சையும் விளக்கினார்
பேசஒண் ணாப் பெருமை பிறங்கினார். 6
பூதம் ஐந்தும் நிலையிற் கலங்கினும்
மாதோர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார்
ஓதுகாதல் உறைப்பின் நெறி நின்றார்
கோதிலாத குணப் பெருங் குன்றனார். 7
கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார். 8
ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே
பாரம் ஈசன்பணி அலதுஒன்று இலார்
ஈர அன்பினர் யாதுங்குறைவு இலார்
வீரம் என்னால் விளம்பும் தகையதோ. 9
வேண்டு மாறு விருப்புறும் வேடத்தர்
தாண்டவப் பெருமான் தனித் தொண்டர்கள்
நீண்ட தொல்புகழார் தம் நிலைமையை
ஈண்டு வாழ்த்துகேன் என்னறிந்து ஏத்துகேன். 10
இந்த மாதவர் கூட்டத்தை எம்பிரான்
அந்தம் இல்புகழ் ஆலால சுந்தரன்
சுந்தரத் திருத்தொண்டத் தொகைத் தமிழ்
வந்து பாடிய வண்ணம் உரைசெய்வாம். 11
திருச்சிற்றம்பலம்