11 பத்தராய்ப் பணிவார் சருக்கம்
திருச்சிற்றம்பலம்
58 பத்தாராய்ப் பணிவார் புராணம்
1. ஈசருக்கே அன்பு ஆனார் யாவரையும் தாம் கண்டால் 4147-1
கூசி மிகக் குது குதுத்துக் கொண்டாடி மனம் மகிழ்வுற்று 4147-2
ஆசையினால் ஆவின்பின் கன்று அணைந்தால் போல் அணைந்து 4147-3
பேசுவன பணிந்த மொழி இனியனவே பேசுவார் 4147-4
2. தாவரிய அன்பினால் சம்பு வினை எவ்விடத்தும் 4148-1
யாவர்களும் அர்ச்சிக்கும் படி கண்டால் இனிது உவந்து 4148-2
பாவனையால் நோக்கினால் பலர் காணப் பயன் பெறுவார் 4148-3
மேவரிய அன்பினால் மேலவர்க்கும் மேல் ஆனார் 4148-4
3. அங்கணனை அடியாரை ஆராத காதலினால் 4149-1
பொங்கிவரும் உவகையுடன் தாம் விரும்பிப் பூசிப்பார் 4149-2
பங்கய மா மலர் மேலான் பாம்பு அணையான் என்று இவர்கள் 4149-3
தங்களுக்கும் சார்வரிய சரண் சாரும் தவம் உடையார் 4149-4
4. யாதானும் இவ் உடம்பால் செய்வினைகள் ஏறுயர்த்தார் 4150-1
பாதார விந்தத்தின் பால் ஆக எனும் பரிவால் 4150-2
காதார் வெண் குழையவர்க்காம் பணி செய்வார் கருக்குழியில் 4150-3
போதார்கள் அவர் புகழ்க்குப் புவனம் எல்லாம் போதாவால் 4150-4
5. சங்கரனைச் சார்ந்த கதை தான் கேட்கும் தன்மையராய் 4151-1
அங்கணனை மிக விரும்பி அயல் அறியா அன்பினால் 4151-2
கங்கை நதி மதி இதழி காதலிக்கும் திருமுடியார் 4151-3
செங்கமல மலர்ப் பாதம் சேர்வதனுக்கு உரியார்கள் 4151-4
6. ஈசனையே பணிந்து உருகி இன்பம் மிகக் களிப்பு எய்தி 4152-1
பேசினவாய் தழுதழுப்பக் கண்ணீரின் பெருந் தாரை 4152-2
மாசிலா நீறு இழித்து அங்கு அருவி தர மயிர் சிலிப்பக் 4152-3
கூசியே உடல் கம்பித்திடுவார் மெய்க் குணம் மிக்கார் 4152-4
7. நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் 4153-1
மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும் 4153-2
மன்றாடும் மலர்ப்பாதம் ஒரு காலும் மறவாமை 4153-3
குன்றாத உணர்வு உடையார் தொண்டராம் குணம் மிக்கார் 4153-4
8. சங்கரனுக்காளான தவம் காட்டித் தாம் அதனால் 4154-1
பங்கம் அறப் பயன் துய்யார் படி விளக்கும் பெருமையினார் 4154-2
அங்கணனைத் திருவாரூர் ஆள்வானை அடிவணங்கிப் 4154-3
பொங்கி எழும் சித்தம் உடன் பத்தராய்ப் போற்றுவார் 4154-4
59 பரமனையே பாடுவார் புராணம்
1. புரம் மூன்றும் செற்றானைப் பூணாகம் அணிந்தானை 4155-1
உரனில் வரும் ஒரு பொருளை உலகு அனைத்தும் ஆனானைக் 4155-2
கரணங்கள் காணாமல் கண் ஆர்ந்து நிறைந்தானை 4155-3
பரமனையே பாடுவார் தம் பெருமை பாடுவாம் 4155-4
2. தென் தமிழும் வட கலையும் தேசிகமும் பேசுவன 4156-1
மன்றின் இடை நடம் புரியும் வள்ளலையே பொருள் ஆக 4156-2
ஒன்றிய மெய் உணர் வோடும் உள் உருகிப் பாடுவார் 4156-3
பன்றியுடன் புட்காணாப் பரமனையே பாடுவார் 4156-4
60 சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம்
1. காரண பங்கயம் ஐந்தின் கடவுளர் தம் பதம் கடந்து 4157-1
பூரண மெய்ப் பரஞ்சோதி பொலிந்து இலங்கு நாதாந்தத்து 4157-2
ஆரணையால் சிவத்து அடைந்த சித்தத்தார் தனி மன்றுள் 4157-3
ஆரண காரணக் கூத்தர் அடித்தொண்டின் வழி அடைந்தார் 4157-4
61 திருவாரூர் பிறந்தார் புராணம்
1. அருவாகி உருவாகி அனைத்துமாய் நின்ற பிரான் 4158-1
மருவாருங் குழல் உமையாள் மணவாளன் மகிழ்ந்து அருளும் 4158-2
திருவாரூர்ப் பிறந்தார்கள் திருத் தொண்டு தெரிந்து உணர 4158-3
ஒரு வாயால் சிறியேனால் உரைக்கலாம் தகைமை அதோ 4158-4
2. திருக் கயிலை வீற்று இருந்த சிவபெருமான் திருக் கணத்தார் 4159-1
பெருக்கிய சீர்த் திருவாரூர்ப் பிறந்தார்கள் ஆதலினால் 4159-2
தருக்கிய ஐம் பொறி அடக்கி மற்றவர்தந் தாள் வணங்கி 4159-3
ஒருக்கிய நெஞ்சு உடையவர்க்கே அணித்து ஆகும் உயர் நெறியே 4159-4
62 முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம்
1. எப்போதும் இனிய பிரான் இன் அருளால் அதி கரித்து 4160-1
மெய்ப் போத நெறி வந்த விதி முறைமை வழுவாமே 4160-2
அப்போதைக்கு அப்போதும் ஆர்வம் மிகும் அன்பினராய் 4160-3
முப்போதும் அர்ச்சிப்பார் முதல் சைவராம் முனிவர் 4160-4
2. தெரிந்து உணரின் முப்போதும் செல் காலம் நிகழ் காலம் 4161-1
வருங்காலம் ஆனவற்றின் வழிவழியே திருத்தொண்டின் 4161-2
விரும்பிய அர்ச்சனைகள் சிவ வேதியர்க்கே உரியன அப் 4161-3
பெரும் தகையார் குலப் பெருமை ஆம் புகழும் பெற்றியதோ 4161-4
3. நாரணர்க்கும் நான் முகர்க்கும் அறிய ஒண்ணா நாதனை எம் பெருமானை ஞானம் ஆன 4162-1
ஆரணத்தின் உள்பொருள்கள் அனைத்தும் ஆகும் அண்ணலை எண்ணிய காலம் மூன்றும் அன்பின் 4162-2
காரணத்தால் அர்ச்சிக்கும் மறையோர் தங்கள் கமல மலர்க் கழல் வணங்கிக் கசிந்து சிந்தைப் 4162-3
பூரணத்தால் முழு நீறு பூசி வாழும் புனிதர் செயல் அறிந்தவாறு புகலல் உற்றேன் 4162-4
63 முழுநீறு பூசிய முனிவர் புராணம்
1. ஆதாரமாய் அனைத்தும் ஆகி நின்ற அங்கணன் எம் பெருமான் நீர் அணிந்த வேணிக் 4163-1
காதார் வெண் திருக் குழையான் அருளிச் செய்த கற்பம் அநு கற்பம் உப கற்பம் தான் ஆம் 4163-2
ஆகாது என்று அங்கு உரைத்த அகற்பம் நீக்கி ஆமென்று முன் மொழிந்த மூன்று பேதம் 4163-3
மோகாதி குற்றங்கள் அறுக்கும் நீற்றை மொழிவது நம் இரு வினைகள் கழிவதாக 4163-4
2. அம்பலத்தே உலகுய்ய ஆடும் அண்ணல் உவந்து ஆடும் அஞ்சினையும் அளித்த ஆக்கள் 4164-1
இம்பர் மிசை அநா மயமாய் இருந்த போதில் ஈன்று அணிய கோமய மந்திரத்தினால் ஏற்று 4164-2
உம்பர் தொழ எழும் சிவ மந்திர ஓமத்தால் உற்பவித்த சிவாங்கிதனில் உணர்வுக்கு எட்டா 4164-3
எம்பெருமான் கழல் நினைந்து அங்கிட்ட தூ நீறு இது கற்பம் என்று எடுத்து இங்கு ஏத்தல் ஆகும் 4164-4
3. ஆறணியத்து உலர்ந்த கோமயத்தை கைக்கொண்டு அழகு உற நுண் பொடி ஆக்கி ஆவின் சுத்த 4165-1
நீரணிவித்து தந்திர மந்திரத்தினாலே நிசயம் உறப் பிடித்து ஓம நெருப்பில் இட்டுச் 4165-2
சீரணியும்படி வெந்து கொண்ட செல்வத் திருநீறாம் அநு கற்பம் தில்லை மன்றுள் 4165-3
வாரணியும் முலை உமையாள் காண ஆடும் மாணிக்கக் கூத்தர் மொழி வாய்மை யாலே 4165-4
4. அடவி படும் அங்கியினில் வெந்த நீறும் ஆனிலைகள் அனல் தொடக்க வெந்த நீறும் 4166-1
இட வகைகள் எரி கொளுவ வெந்த நீறும் இட்டி கைகள் சுட்ட எரி பட்ட நீறும் 4166-2
உடன் அன்றி வெவ்வேறே ஆவின் நீரால் உரை திகழும் மந்திரம் கொண்டு உண்டையாக்கி 4166-3
மடம் அதனில் பொலிந்து இருந்த சிவ அங்கி தன்னால் வெந்தது மற்று உபகற்பம் மரபின் ஆகும் 4166-4
5. இந்த வகையால் அமைத்த நீறு கொண்டே இரு திறமும் சுத்தி வரத் தெறித்த பின்னர் 4167-1
அந்தம் இலா அரன் அங்கி ஆறு மெய்ம்மை அறிவித்த குரு நன்மை அல்லாப் பூமி 4167-2
முந்த எதிர் அணியாதே அணியும் போது முழுவதும் மெய்ப் புண்டரம் சந்திரனில் பாதி 4167-3
நந்தி எரி தீபம் நிகழ் வட்டம் ஆக நாதர் அடியார் அணிவர் நன்மையாலே 4167-4
6. சாதியினில் தலை ஆன தரும சீலர் தத்துவத்தின் நெறி உணர்ந்தோர் தங்கள் கொள்கை 4168-1
நீதியினில் பிழையாது நெறியில் நிற்போர் நித்த நியமத்து நிகழ் அங்கி தன்னில் 4168-2
பூதியினைப் புதிய ஆசனத்துக் கொண்டு புலி அதளின் உடையானைப் போற்றி நீற்றை 4168-3
ஆதிவரும் மும்மலமும் அறுத்த வாய்மை அரு முனிவர் முழுவதும் மெய் அணிவர் அன்றே 4168-4
64 அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம்
1. மூவேந்தர் தமிழ் வழங்கு நாட்டுக்கு அப்பால் முதல்வனார் அடிச்சார்ந்த முறைமை யோரும் 4169-1
நா வேய்ந்த திருத்தொண்டத் தொகையில் கூறும் நல் தொண்டர் காலத்து முன்னும் பின்னும் 4169-2
பூ வேய்ந்த நெடும் சடை மேல் அடம்பு தும்பை புதிய மதி நதி இதழி பொருந்த வைத்த 4169-3
சேவேந்து வெல் கொடியான் அடிச்சார்ந்தாரும் செப்பிய அப்பாலும் அடிச் சார்ந்தார் தாமே 4169-4
சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
1. செற்றார் தம் புரம் எரித்த சிலையார் செல்வத் திருமுருகன் பூண்டியினில் செல்லும் போதில் 4170-1
சுற்றாரும் சிலை வேடர் கவர்ந்து கொண்டதொகு நிதியின் பரப்பு எல்லாம் சுமந்து கொண்டு 4170-2
முற்றாத முலை உமையாள் பாகன் பூத முதல் கணமே உடன் செல்ல முடியாப் பேறு 4170-3
பெற்றார் தம் கழல் பரவ அடியேன் முன்னைப் பிறவியினில் செய்த தவம் பெரியவாமே 4170-4
திருச்சிற்றம்பலம்
பத்தராய்ப் பணிவார் சருக்கம் முற்றிற்று.
This webpage was last updated on 13 July 2004
See Also:
1. Stories of the nAyanmAr in English with Pictures