ஈசருக்கே அன்பு ஆனார்
யாவரையும் தாம் கண்டால்
கூசி மிகக் குது குதுத்துக்
கொண்டாடி மனம் மகிழ்வுற்று
ஆசையினால் ஆவின்பின் கன்று
அணைந்தால் போல் அணைந்து
பேசுவன பணிந்த மொழி
இனியனவே பேசுவார் 1
தாவரிய அன்பினால்
சம்புவினை எவ்விடத்தும்
யாவர்களும் அர்ச்சிக்கும் படி
கண்டால் இனிது உவந்து
பாவனையால் நோக்கினால் பலர்
காணப் பயன் பெறுவார்
மேவரிய அன்பினால் மேலவர்க்கும்
மேல் ஆனார் 2
அங்கணனை அடியாரை
ஆராத காதலினால்
பொங்கிவரும் உவகையுடன் தாம்
விரும்பிப் பூசிப்பார்
பங்கய மா மலர் மேலான்
பாம்பணையான் என்று இவர்கள்
தங்களுக்கும் சார்வரிய சரண்
சாரும் தவம் உடையார் 3
யாதானும் இவ்வுடம்பால்
செய்வினைகள் ஏறுயர்த்தார்
பாதார விந்தத்தின் பால்
ஆக எனும் பரிவால்
காதார் வெண் குழையவர்க்காம்
பணி செய்வார் கருக்குழியில்
போதார்கள் அவர் புகழ்க்குப்
புவனம் எல்லாம் போதாவால் 4
சங்கரனைச் சார்ந்த கதை
தான் கேட்கும் தன்மையராய்
அங்கணனை மிக விரும்பி
அயல் அறியா அன்பினால்
கங்கை நதி மதி
இதழி காதலிக்கும் திருமுடியார்
செங்கமல மலர்ப் பாதம்
சேர்வதனுக்கு உரியார்கள் 5
ஈசனையே பணிந்து உருகி இன்பம்
மிகக் களிப்பு எய்திப்
பேசினவாய் தழுதழுப்பக் கண்ணீரின்
பெருந் தாரை
மாசிலா நீறழித்து அங்கு அருவி
தர மயிர் சிலிப்பக்
கூசியே உடல் கம்பித்திடுவார்
மெய்க் குணம் மிக்கார் 6
நின்றாலும் இருந்தாலும்
கிடந்தாலும் நடந்தாலும்
மென்றாலும் துயின்றாலும்
விழித்தாலும் இமைத்தாலும்
மன்றாடும் மலர்ப்பாதம் ஒரு
காலும் மறவாமை
குன்றாத உணர்வு உடையார்
தொண்டராம் குணம் மிக்கார் 7
சங்கரனுக்காளான தவம் காட்டித்
தாம் அதனால்
பங்கமறப் பயன் துய்யார்
படி விளக்கும் பெருமையினார்
அங்கணனைத் திருவாரூர்
ஆள்வானை அடிவணங்கிப்
பொங்கி எழும் சித்தம் உடன்
பத்தராய்ப் போற்றுவார் 8