செருவிலிபுத்தூர் மன்னும் சிவ
மறையோர் திருக்குலத்தார்
அருவரை வில்லாளி தனக்கு
அகத்து அடிமையாம் அதனுக்கு
ஒருவர் தமை நிகர் இல்லார்
உலகத்துப் பரந்து ஓங்கிப்
பொருவரிய புகழ் நீடு
புகழ்த்துணையார் எனும் பெயரார். 1
தம் கோனைத் தவத்தாலே
தத்துவத்தின் வழிபடு நாள்
பொங்கோத ஞாலத்து வற்கடமாய்ப்
பசி புரிந்தும்
எம் கோமான் தனை விடுவேன் அல்லேன்
என்று இராப் பகலும்
கொங்கார் பன் மலர் கொண்டு
குளிர் புனல் கொண்டு அர்ச்சிப்பார். 2
மால் அயனுக்கு அரியானை
மஞ்சனம் ஆட்டும் பொழுது
சாலவுறு பசிப்பிணியால் வருந்தி
நிலை தளர்வு எய்திக்
கோல நிறை புனல் தாங்கு
குடம் தாங்க மாட்டாமை
ஆலமணி கண்டத்தார் முடி
மீது வீழ்த்து அயர்வார். 3
சங்கரன் தன் அருளால் ஓர்
துயில் வந்து தமை அடைய
அங்கணனும் களவின்கண் அருள்
புரிவான் அருந்தும் உணவு
மங்கிய நாள் கழிவளவும் வைப்பது
நித்தமும் ஒரு காசு
இங்கு உனக்கு நாம் என்ன
இடர் நீங்கி எழுந்திருந்தார். 4
பெற்றம் உகந்து ஏறுவார் பீடத்தின்
கீழ் ஒரு காசு
அற்றம் அடங்கிட அளிப்ப அன்பரும்
மற்று அது கைக்கொண்டு
உற்ற பெரும் பசி அதனால்
உணங்கும் உடம்புடன் உவந்து
முற்றுணர்வு தலை நிரம்ப முகம்
மலர்ந்து களி கூர்ந்தார். 5
அந்நாள் போல் எந்நாளும் அளித்த
காசு அது கொண்டே
இன்னாத பசிப் பிணி வந்து இறுத்த
நாள் நீங்கிய பின்
மின்னார் செஞ்சடையார்க்கு
மெய்யடிமைத்தொழில் செய்து
பொன்னாட்டின் அமரர் தொழப்
புனிதர் அடிநிழல் சேர்ந்தார். 6
பந்தணையும் மெல் விரலாள்
பாகத்தார் திருப் பாதம்
வந்தணையும் மனத் துணையார்
புகழ்த்துணையார் கழல் வாழ்த்திச்
சந்தணியும் மணிப் புயத்துத்
தனிவீரராம் தலைவர்
கொந்தணையும் மலர் அலங்கல்
கோட்புலியார் செயல் உரைப்பாம். 7
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : சேக்கிழார்
திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை
பண் :
நாடு :
தலம் :
சிறப்பு: திருத்தொண்டர் புராணம் - இரண்டாம் காண்டம் - கடல் சூழ்ந்த சருக்கம் - புகழ்த்துணை நாயனார் புராணம்