மாறு கடிந்து மண்காத்த வளவர்
பொன்னித் திரு நாட்டு
நாறு விரைப்பூஞ் சோலைகளின் நனைவாய்
திறந்து பொழி செழுந்தேன்
ஆறு பெருகி வெள்ளம் இடும்
அள்ளல் வயலின் மள்ளர் உழும்
சேறு நறுவாசம் கமழும்
செல்வ நீடூர் திருநீடூர். 1
விளங்கும் வண்மைத் திருநீடூர்
வேளாண் தலைமைக்குடி முதல்வர்
களம் கொள் மிடற்றுக் கண் நுதலார்
கழலில் செறிந்த காதல் மிகும்
உளம் கொள் திருத்தொண்டு உரிமையினில்
உள்ளார் நள்ளார் முனை எறிந்த
வளம் கொண்டு இறைவர் அடியார்க்கு
மாறாது அளிக்கும் வாய்மையார். 2
மாற்றார்க்கு அமரில் அழிந்துள்ளோர்
வந்து தம்பால் மாநிதியம்
ஆற்றும் பரிசு பேசினால் அதன்
நடுவு நிலை வைத்துக்
கூற்றும் ஒதுங்கும் ஆள்வினையால்
கூலி ஏற்றுச் சென்று எறிந்து
போற்றும் வென்றி கொண்டு இசைந்த
பொன்னும் கொண்டு மன்னுவார். 3
இன்ன வகையால் பெற்ற நிதி
எல்லாம் ஈசன் அடியார்கள்
சொன்ன சொன்ன படி நிரம்பக்
கொடுத்துத் தூய போனகமும்
கன்னல் நறு நெய் கறி தயிர்
பால் கனியுள்ளுறுத்த கலந்து அளித்து
மன்னும் அன்பின் நெறி பிறழா
வழித் தொண்டு ஆற்றி வைகினார். 4
மற்றிந் நிலை பன்னெடுநாள் வையம்
நிகழச் செய்து வழி
உற்ற அன்பின் செந்நெறியால்
உமையாள் கணவன் திருவருளால்
பெற்ற சிவலோகத்து அமர்ந்து
பிரியா உரிமை மருவினார்
முற்ற உழந்த முனையடுவார்
என்னும் நாமம் முன்னுடையார். 5
யாவர் எனினும் இகல் எறிந்தே
ஈசன் அடியார் தமக்கு இன்பம்
மேவ அளிக்கும் முனையடுவார் விரைப்
பூங் கமலக் கழல் வணங்கித்
தேவர் பெருமான் சைவநெறி
விளங்கச் செம்கோல் முறை புரியும்
காவல் பூண்ட கழற் சிங்கர்
தொண்டின் நிலைமை கட்டுரைப்பாம். 6
பதிக வகை: சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
செறிவுண்டு என்று திருத்தொண்டில்
சிந்தை செல்லும் பயனுக்கும்
குறியுண்டு ஒன்றாகிலும் குறை ஒன்று
இல்லோம் நிறை கருணையினால்
வெறியுண் சோலைத் திருமுருகன்
பூண்டி வேடர் வழிபறிக்க
பறியுண்டவர் எம்பழவினை வேர்
பறிப்பார் என்னும் பற்றாலே. 7
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : சேக்கிழார்
திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை
பண் :
நாடு :
தலம் :
சிறப்பு: திருத்தொண்டர் புராணம் - இரண்டாம் காண்டம் - கறைக் கண்டன் சருக்கம் - முனையடுவார் நாயனார் புராணம்