தடுமாறும் நெறி அதனைத் தவம்
என்று தம் உடலை
அடுமாறு செய்து ஒழுகும்
அமண் வலையில் அகப்பட்டு
விடுமாறு தமிழ் விரகர் வினை
மாறும் கழல் அடைந்த
நெடுமாறனார் பெருமை உலகு
ஏழும் நிகழ்ந்ததால். 1
அந்நாளில் ஆளுடைய
பிள்ளையார் அருளாலே
தென்னாடு சிவம் பெருகச் செங்கோல்
உய்த்து அறம் அளித்து
சொன்னாம நெறிபோற்றிச் சுரர்
நகர்க்கோன் தனைக் கொண்ட
பொன்னாரம் அணி மார்பில்
புரவலனார் பொலி கின்றார். 2
ஆய அரசு அளிப்பார் பால்
அமர் வேண்டி வந்து ஏற்ற
சேய புலத் தெவ்வர் எதிர்
நெல்வேலிச் செருக் களத்துப்
பாய படைக் கடல் முடுகும்
பரிமாவின் பெரு வெள்ளம்
காயும் மதக் களிற்றின் நிரை
பரப்பி அமர் நடக்கின்றார். 3
எடுத்துடன்ற முனைஞாட்பின் இருபடையில்
பொரு படைஞர்
படுத்த நெடுங் கரித்துணியும் பாய்
மாவின் அறு குறையும்
அடுத்து அமர் செய் வயவர் கருந்
தலையும் மலையும் அலை செந்நீர்
மடுத்த கடல் மீளவும் தாம்
வடிவேல் வாங்கிடப் பெருக. 4
வயப்பரியின் களிப்பு ஒலியும்
மறவர் படைக்கல ஒலியும்
கயப் பொருப்பின் முழக்கு ஒலியும்
கலந்து எழு பல்லிய ஒலியும்
வியக்குமுகக் கடை நாளின் மேக
முழக்கு என மீளச்
சயத்தொடர் வல்லியும் இன்று தாம்
விடுக்கும் படி தயங்க. 5
தீயுமிழும் படை வழங்கும்
செருக்களத்து முருக்கும் உடல்
தோயும் நெடும் குறுதி மடுக்
குளித்து நிணம் துய்த்து ஆடி
போய பருவம் பணிகொள்
பூதங்களே அன்றிப்
பேயும் அரும் பணி செய்ய
உணவு அளித்தது எனப் பிறங்க. 6
இனைய கடுஞ் சமர்
விளைய இகலுழந்த பறந்தலையில்
பனை நெடுங்கை மதயானைப்
பஞ்சவனார் படைக் குடைந்து
முனை அழிந்த வடபுலத்து
முதல் மன்னர் படைசரியப்
புனையும் நறும் தொடை வாகை
பூழியர் வேம்புடன் புனைந்து. 7
வளவர் பிரான் திருமகளார்
மங்கையருக்கு அரசியார்
களப மணி முலை
திளைக்கும் தடமார்பில் கவுரியனார்
இளவள வெண் பிறை அணிந்தார்க்கு
ஏற்ற திருத்தொண்டு எல்லாம்
அளவில் புகழ் பெற விளங்கி
அருள் பெருக அரசு அளித்தார். 8
திரை செய் கடல் உலகின்
கண் திருநீற்றின் நெறி விளங்க
உரைசெய் பெரும்புகழ் விளக்கி
ஓங்கு நெடு மாறனார்
அரசு உரிமை நெடும் காலம்
அளித்து இறைவர் அருளாலே
பரசு பெரும் சிவலோகத்தில் இன்
புற்று பணிந்து இருந்தார். 9
பொன் மதில் சூழ் புகலி
காவலர் அடிக்கீழ்ப் புனிதராந்
தென்மதுரை மாறனார் செங்
கமலக் கழல் வணங்கிப்
பன்மணிகள் திரை ஓதம் பரப்பு
நெடும் கடல் படப்பைத்
தொல் மயிலை வாயிலார்
திருத்தொண்டின் நிலைதொழுவாம். 10
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : சேக்கிழார்
திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை
பண் :
நாடு :
தலம் :
சிறப்பு: திருத்தொண்டர் புராணம் - இரண்டாம் காண்டம் - கறைக் கண்டன் சருக்கம் - நின்ற சீர் நெடுமாற நாயனார் புராணம்