மறையாளர் திருக்கடவூர் வந்து
உதித்து வண் தமிழின்
துறை ஆன பயன் தெரிந்து
சொல் விளங்கிப் பொருள் மறையக்
குறையாத தமிழ்க் கோவை தம்
பெயரால் குலவும் வகை
முறையாலே தொகுத்து அமைத்து
மூவேந்தர் பால் பயில்வார். 1
அங்கு அவர் தாம் மகிழும்
வகை அடுத்தவுரை நயம் ஆக்கி
கொங்கலர்தார் மன்னவர் பால் பெற்ற
நிதிக் குவை கொண்டு
வெம் கண் அராவொடு கிடந்து
விளங்கும் இளம் பிறைச் சென்னிச்
சங்கரனார் இனிது அமரும்
தானங்கள் பல சமைத்தார். 2
யாவர்க்கும் மனம் உவக்கும் இன்ப
மொழிப் பயன் இயம்பித்
தேவர்க்கு முதல்தேவர் சீர்
அடியார் எல்லார்க்கும்
மேவுற்ற இருநிதியம் மிக
அளித்து விடையவர்தம்
காவுற்ற திருக்கயிலை
மறவாத கருத்தினராய். 3
ஏய்ந்த கடல் சூழ் உலகில்
எங்கும் தம் இசை நிறுத்தி
ஆய்ந்த உணர்விடை அறா
அன்பினராய் அணி கங்கை
தோய்ந்த நெடும் சடையார்தம்
அருள் பெற்ற தொடர்பினால்
வாய்ந்த மனம் போலும் உடம்பும்
வடகயிலை மலை சேர்ந்தார். 4
வேரியார் மலர்க் கொன்றை
வேணியார் அடிபேணும்
காரியார் கழல் வணங்கி
அவர் அளித்த கருணையினால்
வாரியார் மதயானை வழுதியர்
தம் மதி மரபில்
சீரியார் நெடுமாறர்
திருத்தொண்டு செப்புவாம். 5