திருக்கிளர் சீர் மாடங்கள்
திருந்து பெருங்குடி நெருங்கிப்
பெருக்கு வட வெள்ளாற்றுத் தென்
கரைப்பால் பிறங்கு பொழில்
வருக்கை நெடுஞ்சுளை பொழிதேன் மடு
நிறைத்து வயல் விளைக்கும்
இருக்கு வேளூர் என்பது
இவ்வுலகில் விளங்கு பதி. 1
அப்பதியில் குடி முதல்வர்க்கு
அதிபராய் அளவிறந்த
எப்பொருளும் முடிவு அறியா
எய்து பெருஞ் செல்வத்தார்
ஒப்பில் பெருங்குணத்தினால் உலகில்
மேற்பட எழுந்தார்
மெய் பொருளாவன ஈசர் கழல்
என்னும் விருப்பு உடையார். 2
தாவாத பெருஞ் செல்வம் தலை
நின்ற பயன் இது என்று
ஓவாத ஒளிவிளக்குச் சிவன்
கோயிலுள் எரித்து
நாவாரப் பரவுவார் நல்குரவு
வந்து எய்தத்
தேவதி தேவர்பிரான் திருத்தில்லை
சென்று அடைந்தார். 3
தில்லை நகர் மணி
மன்றுள் ஆடுகின்ற சேவடிகள்
அல்கிய அன்புடன் இறைஞ்சி
அமர்கின்றார் புரம் எரித்த
வில்லியார் திருப் புலீச் சரத்தின்
கண் விளக்கு எரிக்க
இல்லிடை உள்ளன மாறி
எரித்துவரும் அந்நாளில். 4
ஆய செயல் மாண்டதற்பின் அயல்
அவர் பால் இரப்பஞ்சி
காய முயற்சியில் அரிந்த கணம்
புல்லுக் கொடு வந்து
மேய விலைக்குக் கொடுத்து
விலைப் பொருளால் நெய்மாறித்
தூயதிரு விளக்கு எரித்தார்
துளக்கறு மெய்த் தொண்டனார். 5
இவ்வகையால் திருந்து விளக்கு எரித்து
வர அங்கு ஒரு நாள்
மெய் வருந்தி அரிந்து
எடுத்துக் கொடுவந்து விற்கும்புல்
எவ்விடத்தும் விலை போகாது
ஒழியவும் இப்பணி ஒழியார்
அவ்வரிபுல் லினைமாட்டி அணி
விளக்காயிட எரிப்பார். 6
முன்பு திருவிளக்கு எரிக்கும்
முறையாமம் குறையாமல்
மென் புல்லும் விளக்கு
எரிக்கப் போதாமை மெய்யான
அன்பு புரிவார் அடுத்த
விளக்குத் தம் திருமுடியை
என்புருக மடுத்து எரித்தார்
இருவினையின் தொடக்கு எரித்தார். 7
தங்கள் பிரான் திரு உள்ளம்
செய்து தலைத் திருவிளக்குப்
பொங்கிய அன்புடன் எரித்த
பொருவில் திருத்தொண்டருக்கு
மங்கலமாம் பெரும் கருணை
வைத்து அருளச் சிவலோகத்து
எங்கள் பிரான் கணம் புல்லர்
இனிது இறைஞ்சி அமர்ந்திருந்தார். 8
மூரியார் கலி உலகின்
முடி இட்ட திருவிளக்குப்
பேரியாறு அணிந்தாருக்கு எரித்தார்
தம் கழல் பேணி
வேரியார் மலர்ச் சோலை
விளங்கு திருக்கடவூரில்
காரியார் தாம் செய்த
திருத்தொண்டு கட்டுரைப்பாம். 9