கோடாத நெறி விளக்கும்
குலமரபின் அரசு அளித்து
மாடாக மணி கண்டர்
திருநீறே மனம் கொள்வார்
தேடாத பெருவளத்தில் சிறந்த
திருமுனைப் பாடி
நாடாளும் காவலனார் நரசிங்க
முனையரையர். 1
இம்முனையர் பெருந்தகையார் இருந்து
அரசு புரந்து போய்த்
தெம் முனைகள் பல கடந்து
தீங்கு நெறிப் பாங்கு அகல
மும்முனை நீள் இலைச் சூல
முதற்படையார் தொண்டுபுரி
அம் முனைவர் அடி அடைவே அரும்
பெரும் பேறு என அடைவார். 2
சின விடையார் கோயில் தொறுந்
திருச் செல்வம் பெருக்குநெறி
அனவிடை ஆருயிர் துறக்க வரும்
எனினும் அவை காத்து
மனவிடையாமைத் தொடையல்
அணிமார்பர் வழித்தொண்டு
கனவிடை ஆகிலும் வழுவாக்
கடன் ஆற்றிச் செல்கின்றார். 3
ஆறு அணிந்த சடை முடியார்க்கு
ஆதிரை நாள் தொறும் என்றும்
வேறு நிறை வழிபாடு
விளங்கிய பூசனை மேவி
நீறு அணியும் தொண்டர் அணைந்தார்க்கு
எல்லாம் நிகழ் பசும் பொன்
நூறு குறையாமல் அளித்து
இன் அமுது நுகர்விப்பார். 4
ஆன செயல் முறை புரிவார்
ஒரு திருவாதிரை நாளில்
மேன்மை நெறித் தொண்டர்க்கு விளங்கிய
பொன் இடும் பொழுதில்
மான நிலை அழிதன்மை
வரும் காமக்குறி மலர்ந்த
ஊனம் நிகழ் மேனியராய் ஒருவர்
நீறு அணிந்து அணைந்தார். 5
மற்று அவர் தம் வடிவு
இருந்த படி கண்டு மருங்குள்ளார்
உற்ற இகழ்ச்சியராக ஒதுங்குவார்
தமைக் கண்டு
கொற்றவனார் எதிர் சென்று
கைகுவித்துக் கொடு போந்தப்
பெற்றியினார் தமை மிகவும்
கொண்டாடிப் பேணுவார். 6
சீலம் இலரே எனினும்
திருநீறு சேர்ந்தாரை
ஞாலம் இகழ்ந்து அருநரகம்
நண்ணாமல் எண்ணுவார்
பாலணைந்தார் தமக்கு அளித்தபடி
இரட்டிப் பொன் கொடுத்து
மேலவரைத் தொழுது இனிய மொழி
விளம்பி விடை கொடுத்தார். 7
இவ்வகையே திருத் தொண்டின்
அருமை நெறி எந்நாளும்
செவ்விய அன்பினில் ஆற்றித்
திருந்திய சிந்தையர் ஆகிப்
பை வளர் வாள் அரவு
அணிந்தார் பாதமலர் நிழல் சேர்ந்து
மெய் வகைய வழி அன்பின்
மீளாத நிலை பெற்றார். 8
விட நாகம் அணிந்த பிரான்
மெய்த்தொண்டு விளைந்த நிலை
உடனாகும் நரசிங்க முனையர்
பிரான் கழல் ஏத்தித்
தடநாகம் மதம் சொரியத் தனம்
சொரியும் கலம் சேரும்
கடனாகை அதிபத்தர் கடனாகைக்
கவின் உரைப்பாம். 9
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : சேக்கிழார்
திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை
பண் :
நாடு :
தலம் :
சிறப்பு: திருத்தொண்டர் புராணம் - இரண்டாம் காண்டம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - நரசிங்க முனையரைய நாயனார் புராணம்