திருச்சிற்றம்பலம்
பரசுபாணியர் பாடல்வீணையர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தரசுபேணி நின்றார் இவர்தன்மை யறிவாரார் 1
பட்டநெற்றியர் நட்டமாடுவர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
திட்ட மாயிருப்பார் இவர்தன்மை யறிவாரார். 2
பவளமேனியர் திகழும் நீற்றினர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தழகரா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார். 3
பண்ணில்யாழினர் பயிலும்மொந்தையர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தண்ணலா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார். 4
பல்லிலோட்டினர் பலிகொண்டுண்பவர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தெல்லி யாட்டுகந்தார் இவர்தன்மை யறிவாரார். 5
பச்சைமேனியர் பிச்சை கொள்பவர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
திச்சையா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார். 6
பைங்கண் ஏற்றினர் திங்கள்சூடுவர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தெங்குமா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார். 7
பாதங் கைதொழ வேதமோதுவர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தாதியா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார். 8
படிகொள்மேனியர் கடிகொள் கொன்றையர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
தடிகளா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார். 9
பறைகொள் பாணியர் பிறைகொள் சென்னியர்
பட்டினத்துறை பல்லவனீச்சரத்
திறைவரா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார். 10
வானமாள்வதற் கூனமொன்றிலை மாதர்
பல்லவனீச் சரத்தானை
ஞானசம்பந்தன் நற்றமிழ் சொல்லவல்லவர் நல்லரே.
சுவாமி : பல்லவனேஸ்வரர்; அம்பாள் : சௌந்தர நாயகி. 11
திருச்சிற்றம்பலம்