முரசதிர்ந் தெழுதரு முதுகுன்ற மேவிய
பரசமர் படையுடை யீரே
பரசமர் படையுடை யீருமைப் பரவுவார்
அரசர்கள் உலகில்ஆ வாரே. 1
மொய்குழ லாளொடு முதுகுன்ற மேவிய
பையர வம்மசைத் தீரே
பையர வம்மசைத் தீருமைப் பாடுவார்
நைவிலர் நாடொறும் நலமே. 2
முழவமர் பொழிலணி முதுகுன்ற மேவிய
மழவிடை யதுவுடை யீரே
மழவிடை யதுவுடை யீருமை வாழ்த்துவார்
பழியொடு பகையிலர் தாமே. 3
முருகமர் பொழிலணி முதுகுன்ற மேவிய
உருவமர் சடைமுடி யீரே
உருவமர் சடைமுடி யீருமை யோதுவார்
திருவொடு தேசினர் தாமே. 4
இப்பதிகத்தில் 5ம் செய்யுள் மறைந்து போயின. 5
இப்பதிகத்தில் 6ம் செய்யுள் மறைந்து போயின. 6
இப்பதிகத்தில் 7ம் செய்யுள் மறைந்து போயின. 7
முத்தி தருமுயர் முதுகுன்ற மேவிய
பத்து முடியடர்த் தீரே
பத்து முடியடர்த் தீருமைப் பாடுவார்
சித்தநல் லவ்வடி யாரே. 8
முயன்றவர் அருள்பெறு முதுகுன்ற மேவியன்
றியன்றவ ரறிவரி யீரே
இயன்றவ ரறிவரி யீருமை யேத்துவார்
பயன்றலை நிற்பவர் தாமே. 9
மொட்டலர் பொழிலணி முதுகுன்ற மேவிய
கட்டமண் தேரைக்காய்ந் தீரே
கட்டமண் தேரைக்காய்ந் தீருமைக் கருதுவார்
சிட்டர்கள் சீர்பெறு வாரே. 10
மூடிய சோலைசூழ் முதுகுன்றத் தீசனை
நாடிய ஞானசம் பந்தன்
நாடிய ஞானசம் பந்தன செந்தமிழ்
பாடிய அவர்பழி யிலரே.
இப்பதிகத்தில்5,6,7-ம்செய்யுட்கள்மறைந்து போயின.
சுவாமி : பழமலைநாதர்; அம்பாள் : பெரியநாயகி. 11
திருச்சிற்றம்பலம்