தொற்பத விசுவன் றைசதன் பிராஞ்ஞன்
நற்பத விராட்டன்பொன் கெற்பனவ் யாகிர்தன்
பிற்பதஞ் சொலிதையன் பிரசா பத்தியன்
பொற்புவி சாந்தன் பொருதபி மானியே. 1
நவமாம் அவத்தை நனவாதி பற்றிற்
பவமா மலங்குணம் பற்றற்றுப் பற்றாத்
தவமான சத்திய ஞானப் பொதுவிற்
றுவமார் துரியஞ் சொருபம தாமே. 2
சிவமான சிந்தையிற் சீவன் சிதைய
பவமான மும்மலம் பாறிப் பறிய
நவமான அந்தத்தின் நற்சிவ போதந்
தவமான மவையாகித் தானல்ல வாகுமே. 3
முன்சொன்ன வொன்பானின் முன்னுறு தத்துவந்
தன்சொல்லில் எண்ணத்தகாவொன்பான் வேறுள
பின்சொல்ல லாகுமிவ் வீரொன்பான் பேர்த்திட்டுத்
தன்செய்த வாண்டவன் றான்சிறந் தானே. 4
உகந்த ஒன்பதும் ஐந்தும் உலகம்
பகர்ந்த பிரானென்னும் பண்பினை நாடி
அகந்தெம் பிரானென்பன் அல்லும் பகலும்
இகந்தன வல்வினை யோடறுத் தானே. 5
நலம்பல காலந் தொகுத்தன நீளங்
குலம்பல வண்ணங் குறிப்பொடுங் கூடும்
பலம்பல பன்னிரு கால நினையும்
நிலம்பல வாறினன் நீர்மையன் றானே. 6
ஆதி பராபர மாகும் பராபரை
சோதி பரமுயிர் சொல்லுநற் றத்துவம்
ஓதுங் கமைமாயே யோரிரண் டோர்முத்தி
நீதியாம் பேதமொன் பானுடன் ஆதியே. 7
தேராத சிந்தை தெளியத் தெளிவித்து
வேறாத நரக சுவர்க்கமும் மேதினி
ஆறாப் பிறப்பும் உயிர்க்கரு ளால்வைத்தான்
வேறாத் தெளியார் வினையுயிர் பெற்றதே. 8
ஒன்பான் அவத்தையுள் ஒன்பான் அபிமானி
நன்பாற் பயிலு நவதத் துவமாதி
ஒன்பானில் நிற்பதோர் முத்துரி யத்துறச்
செம்பாற் சிவமாதல் சித்தாந்த சித்தியே. 9
திருச்சிற்றம்பலம்