ககராதி யோரைந்துங் காணிய பொன்மை
அகராதி யோரா றரத்தமே போலும்
சகராதி யோர் நான்குந் தான்சுத்த வெண்மை
ககராதி மூவித்தை காமிய முத்தியே. 1
ஓரில் இதுவே உரையும்இத் தெய்வத்தைத்
தேரிற் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள்
வாரித் திரிகோண மாவின்ப முத்தியுந்
தேரில் அறியுஞ் சிவகாயந் தானே. 2
ஏக பராசத்தி ஈசற்காம் அங்கமே
யாகம் பராவித்தை யாமுத்தி சித்தியே
ஏகம் பராசத்தி யாகச் சிவகுரு
யோகம் பராசத்தி உண்மைஎட்டாமே. 3
எட்டா கிய சத்தி1 எட்டாகும் யோகத்துக்
கட்டாகு2 நாதாந்தத் தெட்டுங் கலப்பித்த
தொட்டாத விந்துவுந் தானற் றொழிந்தது
கிட்டா தொழிந்தது கீழான மூடர்க்கே.
பா-ம் : 1சித்தி 2கட்டாதி 4
ஏதும் பலமா மியந்திரா சன்னடி
ஓதிக் குருவின் உபதேசம் உட்கொண்டு
நீதங்கும் அங்க நியாசந் தனைப் பண்ணிச்
சாதங் கெடச் செம்பிற் சட்கோணந் தானிடே. 5
சட்கோணந் தன்னில் ஸ்ரீம் ஹிரீம் தானிட்டு
அக்கோண மாறின் தலையில்ரீங் காரமிட்
டெக்கோண முஞ்சூழ எழில்வட்டம் இட்டுப்பின்
மிக்கீரெட் டக்கர மம்முதன் மேலிடே. 6
இட்ட இதழ்கள் இடையந் தரத்திலே
அட்டஹவ் விட்டிட்டதின் மேலே உவ்விட்டுக்
கிட்ட இதழ்களின் மேலே கிரோம்சிரோம்
இட்டுவா மத்தாங் கிரோங்கென்று மேவிடே. 7
மேவிய சக்கர மீது வலத்திலே
கோவையடைவே குரோங்சிரோங் கென்றிட்டுத்
தாவில்ரீங் காரத்தாற் சக்கரஞ் சூழ்ந்து
பூவைப் புவனா பதியைப்பின் பூசியே. 8
பூசிக்கும் போது புவனா பதிதன்னை
ஆசற் றகத்தினில் ஆவா கனம் பண்ணிப்
பேசிய பிராணப் பிரதிட்டை யதுசெய்து
தேசுற் றிடவே தியான மதுசெய்யே. 9
செய்ய திருமேனி செம்பட் டுடைதானுங்
கையிற் படையங் குசபாசத் தோடபயம்
மெய்யில் அணிகலன் இரத்தின மாமேனி
துய்ய முடியும் அவயவத் தோற்றமே. 10
தோற்போர்வை நீக்கித் துதித்தடைவிற் பூசித்துப்
பாற்போ னகமந் திரத்தாற் பயின் றேத்தி
நாற்பால நாரதா யைசுவா காஎன்று
சீர்ப்பாகச் சேடத்தை மாற்றிப்பின் சேவியே. 11
சேவிப் பதன்முன்னே தேவியையுத் வாகனத்தாற்
பாவித் திதய கமலம் பதிவித்தங்
கியாவர்க்கும் எட்டா இயந்திர ராசனை
நீவைத்துச் சேமி நினைத்தது தருமே. 12
திருச்சிற்றம்பலம்