சாம்பவி மண்டலச் சக்கரஞ் சொல்லிடில்
ஆம்பதம் எட்டாக விட்டிடின் மேல்தாங்
காண்பதந் தத்துவ நாலுள் நயனமும்
நாம்பதங் கண்டபின் நாடறிந் தோமே. 1
நாடறி மண்டலம் நல்லவிக் குண்டத்துக்
கோடற வீதியுங் கொணர்ந்துள் இரண்டழி
பாடறி பத்துடன் ஆறு நடுவீதி
எடற நாலைந் திடவகை யாமே. 2
நாலைந் திடவகை யுள்ளதோர் மண்டலம்
நாலுநல் வீதியுள் நல்ல இலிங்கமாய்
நாலுநற் கோணமும் நந்நா லிலிங்கமாய்
நாலுநற் பூநடு நண்ணலவ் வாறே. 3
ஆறிரு பத்துநா லஞ்செழுத் தஞ்சையும்
வேறுரு வாக விளைந்து கிடந்தது
தேறி நிருமல சிவாய நமவென்று
கூறுமின் கூறிற் குறைகளும் இல்லையே. 4
குறைவதும் இல்லை குரைகழற் கூடு
மறைவது மாரண மவ்வெழுத் தாகித்
திறமது வாகத் தெளியவல் லார்க்கு
இறவில்லை என்றென் றியம்பினர் காணே. 5
காணும் பொருளுங் கருதிய தெய்வமும்
பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும்
ஊணும் உணர்வும் உறக்கமுந் தானாகக்
காணுங் கனகமுங் காரிகை யாமே. 6
ஆமே எழுத்தஞ்சு மாம்வழி யேயாகப்
போமே யதுதானும் போம்வழி யேபோனால்
நாமே நினைத்தன செய்யலு மாகும்
பார்மேல் ஒருவர் பகையில்லை தானே. 7
பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால்
நகையில்லை நாணாளும் நண்மைக ளாகும்
வினையில்லை என்றும் விருத்தமும் இல்லை
தகையில்லை தானுஞ் சலமது வாமே. 8
ஆரும் உரைசெய்ய லாமஞ் செழுத்தாலே
யாரும் அறியாத ஆனந்த ரூபமாம்
பாரும் விசும்பும் பகலும் மதியதி
ஊனும்1 உயிரும் உணர்வது வாமே.
பா-ம் : 1 ஊரும் 9
உணர்ந்தெழு மந்திரம் ஓமெனும் உள்ளே
அணைந்தெழு மாங்கத னாதிய தாகுங்
குணர்ந்தெழு சூதனுஞ் சூதியங் கூடிக்
கணந் தெழுங் காணுமக் காமுகை யாலே. 10
திருச்சிற்றம்பலம்