அறிந்த பிரதமையோ டாறு மறிஞ்சு
அறிந்தவச் சத்தமி மேலிவை குற்றம்
அறிந்தவை யொன்றுவிட் டொன்றுபத் தாக
அறிந்த வலமது வாக நடவே. 1
நடந்த வயிரவன் சூல கபாலி
கடந்த பகைவனைக் கண்ணது போக்கித்
தொடர்ந்த வுயிரது வுண்ணும் பொழுது
படர்ந்த வுடல்கொடு பந்தாட லாமே. 2
ஆமேவப் பூண்டரு ளாதி வயிரவன்
ஆமே கபாலமுஞ் சூலமுங் கைகொண்டங்
காமே தமருக பாசமுங் கையது
வாமே சிரத்தொடு வாளது கையே. 3
கையவை யாருங் கருத்துற நோக்கிடு
மெய்யது செம்மை விளங்கு வயிரவன்
துய்யரு ளத்தில் துளங்குமெய் யுற்றதாய்ப்
பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே. 4
பூசனை செய்யப் பொருந்தியோ ராயிரம்
பூசனை செய்ய மதுவுட னாடுமால்
பூசனை சாந்து சவாது புழுகுநெய்
பூசனை செய்துநீர் பூசலை வேண்டுமே. 5
வேண்டிய வாறு கலகமு மாயிடும்
வேண்டிய ஆறிணுண் மெய்யது பெற்றபின்
வேண்டிய வாறு வரும்வழி நீநட
வேண்டிய வாறது வாகுங் கருத்தே. 6
திருச்சிற்றம்பலம்