திருச்சிற்றம்பலம்
விடையா ருங்கொடியாய்
வெறியார்மலர்க் கொன்றையினாய்
படையார் வெண்மழுவா
பரமாய பரம்பரனே
கடியார் பூம்பொழில்சூழ்
திருக்கற்குடி மன்னிநின்ற
அடிகேள் எம்பெருமான்
அடியேனையும் அஞ்சலென்னே. 1
மறையோர் வானவருந்
தொழுதேத்தி வணங்கநின்ற
இறைவா எம்பெருமான்
எனக்கின்னமு தாயவனே
கறையார் சோலைகள்சூழ்
திருக்கற்குடி மன்னிநின்ற
அறவா அங்கணனே
அடியேனையும் அஞ்சலென்னே. 2
சிலையால் முப்புரங்கள்
பொடியாகச் சிதைத்தவனே
மலைமேல் மாமருந்தே
மடமாதிடங் கொண்டவனே
கலைசேர் கையினனே
திருக்கற்குடி மன்னிநின்ற
அலைசேர் செஞ்சடையாய்
அடியேனையும் அஞ்சலென்னே. 3
செய்யார் மேனியனே
திருநீல மிடற்றினனே
மையார் கண்ணிபங்கா
மதயானை உரித்தவனே
கையார் சூலத்தினாய்
திருக்கற்குடி மன்னிநின்ற
ஐயா எம்பெருமான்
அடியேனையும் அஞ்சலென்னே. 4
சந்தார் வெண்குழையாய்
சரிகோவண ஆடையனே
பந்தா ரும்விரலாள்
ஒருபாகம் அமர்ந்தவனே
கந்தார் சோலைகள்சூழ்
திருக்கற்குடி மன்னிநின்ற
எந்தாய் எம்பெருமான்
அடியேனையும் ஏன்றுகொள்ளே. 5
அரையார்* கீளொடுகோ
வணமும் அரைக்கசைத்து
விரையார் கொன்றையுடன்
விளங்கும்பிறை மேலுடையாய்
கரையா ரும்வயல்சூழ்
திருக்கற்குடி மன்னிநின்ற
அரையா எம்பெருமான்
அடியேனையும் அஞ்சலென்னே.
(*அரையார் கீளோடு கோவணமும் அரவும் அசைத்து என்றும் பாடம்.) 6
பாரார் விண்ணவரும்
பரவிப்பணிந் தேத்தநின்ற
சீரார் மேனியனே
திகழ்நீல மிடற்றினனே
காரார் பூம்பொழில்சூழ்
திருக்கற்குடி மன்னிநின்ற
ஆரா இன்னமுதே
அடியேனையும் அஞ்சலென்னே. 7
நிலனே நீர்வளிதீ
நெடுவானக மாகிநின்ற
புலனே புண்டரிகத்
தயன்மாலவன் போற்றிசெய்யுங்
கனலே கற்பகமே
திருக்கற்குடி மன்னிநின்ற
அனல்சேர் கையினனே
அடியேனையும் அஞ்சலென்னே. 8
வருங்கா லன்னுயிரை
மடியத்திரு மெல்விரலாற்
பெரும்பா லன்றனக்காய்ப்
பிரிவித்த பெருந்தகையே
கரும்பா ரும்வயல்சூழ்
திருக்கற்குடி மன்னிநின்ற
விரும்பா எம்பெருமான்
அடியேனையும் வேண்டுதியே. 9
அலையார் தண்புனல்சூழ்ந்
தழகாகி விழவமருங்
கலையார் மாதவர்சேர்
திருக்கற்குடிக் கற்பகத்தைச்
சிலையார் வாணுதலாள்
நல்லசிங்கடி யப்பன்உரை
விலையார் மாலைவல்லார்
வியன்மூவுல காள்பவரே. 10
திருச்சிற்றம்பலம்