பவளமால் வரையைப் பனிபடர்ந்(து)
அனையதோர் படரொளிதரு திருநீறும்
குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும்
துன்றுபொற் குழல்திருச் சடையும்
திவள மாளிகை சூழ்தரு
தில்லையுள்திரு நடம்புரி கின்ற
தவள வண்ணனை நினைதொறும்
என்மனம் தழல்மெழு(கு)ஒக் கின்றதே. 1
ஒக்க ஒட்டந்த அந்தியும்
மதியமும் அலைகடல் ஒலியோடு
நெக்கு வீழ்தரு நெஞ்சினைப்
பாய்தலும் நிறையழிந்(து) இருப்பேனைச்
செக்கர் மாளிகை சூழ்தரு
தில்லையுள் திருநடம் வகையாலே
பக்கம் ஒட்டந்த மன்மதன்
மலர்க்கணை படுந்தொறும் அலந்தேனே. 2
அலந்து போயினேன் அம்பலக்
கூத்தனே அணிதில்லை நகராளீ
சிலந்தியை அரசாள்க என்(று)
அருள்செய்த தேவதே வீசனே
உலந்தமார்க் கண்டிக் காகிஅக்
காலனை உயிர்செக வுதைகொண்ட
மலர்ந்த பாதங்கள் வனமுலை
மேலொற்ற வந்தருள் செய்யாயே. 3
அருள்செய்(து) ஆடுநல் அம்பலக்
கூத்தனே ! அணிதில்லை நகராளீ
மருள்செய்(து) என்றனை வனமுலை
பொன்பயப் பிப்பது வழக்கமோ
திரளும் நீள்மணிக் கங்கையைத்
திருச்சடைச் சேர்த்திஅச் செய்யாளுக்(கு)
உருவம் பாகமும் ஈந்துநல்
அந்தியை ஒண்ணுதல் வைத்தோனே. 4
வைத்த பாதங்கள் மாலவன்
காண்கிலன் மலரவன் முடிதேடி
எய்த்து வந்திழிந்(து) இன்னமும்
துதிக்கின்றார் எழில்மறை அவற்றாலே
செய்த்தலைக் கமலம் மலர்ந்தோங்கிய
தில்லை அம்பலத் தானைப்
பத்தியாற் சென்று கண்டிட
என்மனம் பதைபதைப்(பு) ஒழியாதே. 5
தேய்ந்து மெய்வெளுத்(து) அகம் வளைந்து
அரவினை அஞ்சித்தான் இருந்தேயும்
காய்ந்து வந்துவந்(து) என்றனை
வலிசெய்து கதிர்நிலா எரிதூவும்
ஆய்ந்த நான்மறை அந்தணர்
தில்லையுள் அம்பலத்(து) அரன்ஆடல்
வாய்ந்த மாமலர்ப் பாதங்கள்
காண்பதோர் மனத்தினை உடையேற்கே. 6
உடையும் பாய்புலித் தோலும்நல்
அரவமும் உண்பதும் பலிதேர்ந்து
விடைய(து) ஊர்வதும் மேவிடங்
கொடுவரை, ஆகிலும் என்நெஞ்சம்
மடைகொள் வாளைகள் குதிகொளும்
வயல்தில்லை அம்பலத்து அனலாடும்
உடைய கோவினை அன்றிமற்று
ஆரையும் உள்ளுவது அறியேனே. 7
அறிவும் மிக்கநல் நாணமும்
நிறைமையும் ஆசையும் இங்குள்ள
உறவும் பெற்றநற் றாயொடு
தந்தையும் உடன்பிறந் தவரோடும்
பிறிய விட்டுனை அடைந்தனன்
ஏன்றுகொள் பெரும்பற்றப் புலியூரின்
மறைகள் நான்கும்கொண் டந்தணர்
ஏத்தநன் மாநடம் மகிழ்வானே. 8
வான நாடுடை மைந்தனே !
ஓஎன்பன் வந்தரு ளாய் என்பன்
பால்நெய் ஐந்துடன் ஆடிய
படர்சடைப் பால்வண்ணனேஎன்பன்
தேனமர் பொழில் சூழ்தரு
தில்லையுள் திருநடம் புரிகின்ற
ஏன மாமணிப் பூணணி
மார்பனே ! எனக்கருள் புரியாயே. 9
புரியும் பொன்மதில் சூழ்தரு
தில்லையுள் பூசுரர் பலர்போற்ற
எரிய(து) ஆடும்எம் ஈசனைக்
காதலித்(து) இனைபவள் மொழியாக
வரைசெய் மாமதில் மயிலையர்
மன்னவன் மறைவல திருவாலி
பரவல் பத்திவை வல்லவர்
பரமன(து) அடியிணை பணிவாரே. 10
திருச்சிற்றம்பலம்