துச்சான செய்திடினும்
பொறுப்பரன்றே ஆளுகப்பார்
கைச்சாலும் சிறுகதலி
இலைவேம்பும் கறிகொள்வார்
எச்சார்வும் இல்லாமை
நீயறிந்தும் எனதுபணி
நச்சாய்காண்; திருத்தில்லை
நடம்பயிலும் நம்பானே! 1
தம்பானை சாய்ப்பற்றார்
என்னும் முதுசொல்லும்
எம்போல்வார்க்(கு) இல்லாமை
என்னளவே அறிந்தொழிந்தேன்
வம்பானார் பணிஉகத்தி
வழியடியேன் தொழிலிறையும்
நம்பாய்காண் திருத்தில்லை
நடம்பயிலும் நம்பானே ! 2
பொசியாதோ கீழ்க்கொம்பு
நிறைகுளம்என் றதுபோலத்
திசைநோக்கிப் பேழ்கணித்துச்
சிவபெருமான் ஓஎனினும்
இசையானால் என்திறத்தும்
எனையுடையாள் உரையாடாள்
நசையானேன் திருத்தில்லை
நடம்பயிலும் நம்பானே ! 3
ஆயாத சமயங்கள்
அவரவர்கள் முன்பென்னை
நோயோடு பிணிநலிய
இருக்கின்ற அதனாலே
பேயாஇத் தொழும்பனைத்தம்
பிரான்இகழும் என்பித்தாய்
நாயேனைத் திருத்தில்லை
நடம்பயிலும் நம்பானே. 4
நின்றுநினைந்(து) இருந்துகிடந்து
எழுந்துதொழும் தொழும்பனேன்
ஒன்றிஒரு கால்நினையா(து)
இருந்தாலும் இருக்கவொட்டாய்
கன்றுபிரி கற்றாப்போல்
கதறுவித்தி வரவுநில்லாய்
நன்றிதுவோ திருத்தில்லை
நடம்பயிலும் நம்பானே. 5
படுமதமும் மிடவயிறும்
உடையகளி றுடையபிரான்
அடியறிய உணர்த்துவதும்
அகத்தியனுக்(கு) ஓத்தன்றே
இடுவதுபுல் ஓர்எருதுக்(கு)
ஒன்றினுக்கு வையிடுதல்
நடுஇதுவோ திருத்தில்லை
நடம்பயிலும் நம்பானே. 6
மண்ணோடு விண்ணளவும்
மனிதரொடு வானவர்க்கும்
கண்ணாவாய் கண்ணாகா(து)
ஒழிதலும்நான் மிகக்கலங்கி
அண்ணாவோ என்றண்ணாந்(து)
அலமந்து விளித்தாலும்
நண்ணாயால் திருத்தில்லை
நடம்பயிலும் நம்பானே. 7
வாடாவாய் நாப்பிதற்றி
உனைநினைந்து நெஞ்சுருகி
வீடாஞ்செய் குற்றேவல்
எற்றேமற் றிதுபொய்யில்
கூடாமே கைவந்து
குறுகுமா(று) யான்உன்னை
நாடாயால் திருத்தில்லை
நடம்பயிலும் நம்பானே. 8
வாளாமால் அயன்வீழ்ந்து
காண்பரிய மாண்பிதனைத்
தோளாரக் கையாரத்
துணையாரத் தொழுதாலும்
ஆளோநீ உடையதுவும்
அடியேன்உன் தாள்சேரும்
நாளேதோ திருத்தில்லை
நடம்பயிலும் நம்பானே. 9
பாவார்ந்த தமிழ்மாலை
பத்தரடித் தொண்டனெடுத்(து)
ஓவாதே அழைக்கின்றான்
என்றருளின் நன்றுமிகத்
தேவேதென் திருத்தில்லைக்
கூத்தாடீ நாயடியேன்
சாவாயும் நினைக்காண்டல்
இனியுனக்குத் தடுப்பரிதே. 10
திருச்சிற்றம்பலம்