முத்து வயிரமணி
மாணிக்க மாலைகண்மேல்
தொத்து மிளிர்வனபோல்
தூண்டு விளக்கேய்ப்ப
எத்திசையும் வானவர்கள்
ஏத்தும் எழில்தில்லை
அத்தனுக்கும் அம்பலமே
ஆடரங்கம் ஆயிற்றே. 1
கடியார் கணம்புல்லர்
கண்ணப்பர் என்றுன்
அடியார் அமருலகம்
ஆளநீ ஆளாதே
முடியாமுத் தீவேள்வி
மூவாயி ரவரொடும்
குடிவாழ்க்கை கொண்டுநீ
குலாவிக் கூத் தாடினையே. 2
அல்லியம் பூம்பழனத்(து)
ஆமூர்நா வுக்கரசைச்
செல்ல நெறிவகுத்த
சேவகனே ! தென்தில்லைக்
கொல்லை விடையேறி
கூத்தா(டு) அரங்காகச்
செல்வம் நிறைந்தசிற்
றம்பலமே சேர்ந்தனையே. 3
எம்பந்த வல்வினை நோய்
தீர்த்திட்(டு) எமையாளும்
சம்பந்தன் காழியர்கோன்
தன்னையும் ஆட் கொண்டருளி
அம்புந்து கண்ணாளும்
தானும் அணிதில்லைச்
செம்பொன்செய் அம்பலமே
சேர்ந்திருக்கை ஆயிற்றே. 4
களையா உடலோடு
சேரமான் ஆருரன்
விளையா மதமாறா
வெள்ளானை மேல்கொள்ள
முளையா மதிசூடி
மூவா யிரவரொடும்
அளையா விளையாடும்
அம்பலம்நின் ஆடரங்கே. 5
அகலோக மெல்லாம்
அடியவர்கள் தற்சூழப்
புகலோகம் உண்டென்று
புகுமிடம்நீ தேடாதே
புவலோக நெறிபடைத்த
புண்ணியங்கள் நண்ணியசீர்ச்
சிவலோகம் ஆவதுவும்
தில்லைச் சிற் றம்பலமே. 6
களகமணி மாடம்
சூளிகைசூழ் மாளிகைமேல்
அளகமதி நுதலார்
ஆயிழையார் போற்றிசைப்ப
ஒளிகொண்ட மாமணிகள்
ஓங்கிருளை ஆங்ககற்றும்
தெளிகொண்ட தில்லைச்
சிற் றம்பலமே சேர்ந்தனையே. 7
பாடகமும் நூபுரமும்
பல்சிலம்பும் பேர்ந்தொலிப்பச்
சூடகக்கை நல்லார்
தொழுதேத்தத் தொல்லுலகில்
நாடகத்தின் கூத்தை
நவிற்றுமவர் நாடோறும்
ஆடகத்தால் மேய்ந்தமைந்த
அம்பலம்நின் ஆடரங்கே. 8
உருவத்(து) எரியுருவாய்
ஊழிதோ றெத்தனையும்
பரவிக் கிடந்தயனும்
மாலும் பணிந்தேத்த
இரவிக்கு நேராகி
ஏய்ந்திலங்கு மாளிகைசூழ்ந்(து)
அரவிக்கும் அம்பலமே
ஆடரங்கம் ஆயிற்றே. 9
சேடர் உறைதில்லைச்
சிற்றம் பலத்தான்தன்
ஆடல் அதிசயத்தை
ஆங்கறித்து பூந்துருத்திக்
காடன் தமிழ் மாலை
பத்தும் கருத்தறிந்து
பாடும் இவைவல்லார்
பற்றுநிலை பற்றுவரே. 10
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : பூந்துருத்திநம்பி காடநம்பி
திருமுறை : ஒன்பதாம் திருமுறை
பண் : சாளரபாணி
நாடு : சோழநாடு காவிரி வடகரை
தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)
சிறப்பு: பூந்துருத்திநம்பி காடநம்பி அருளிய கோயில் - முத்து வயிரமணி திருவிசைப்பா