தொகுப்பு பற்றிய குறிப்புகள்
திருஞானசம்பந்தர்
(பெரியபுராணத்தில் திருஞானசம்பந்தர் பாடல் எண். / திருஞானசம்பந்தர் தேவாரப் பக்க எண்)
76 - 79 / 38
திருப்பிரமபுரம் பண் - நட்டபாடை
செம்மைபெற எடுத்ததிருத் "தோடுடைய செவியன்" எனும்
மெய்ம்மைமொழித் திருப்பதிகம் பிரமபுர மேவினார்
தம்மைஅடையா ளங்களுடன் சாற்றித் தாதையார்க்(கு)
"எம்மையிது செய்தபிரான் இவனன்றே" எனஇசைத்தார்.
மண் உலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின்
கண் நுதலான் பெரும் கருணை கைக் கொள்ளும் எனக்காட்ட
எண்ணம் இலா வல் அரக்கன் எடுத்து முறிந்து இசைபாட
அண்ணல் அவற்கு அருள் புரிந்த ஆக்கப்பாடு அருள் செய்தார்
தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத் தொழார்
வழுவான மனத்தாலே மாலாய மால் அயனும்
இழிவாகும் கருவிலங்கும் பறவையுமாய் எய்தாமை
விழுவார்கள் அஞ்செழுத்தும் துதித்து உய்ந்த படி விரித்தார்
வேத காரணராய வெண் பிறை சேர் செய்ய சடை
நாதன் நெறி அறிந்து உய்யார் தம்மிலே நலம் கொள்ளும்
போதம் இலாச் சமண் கையர் புத்தர் வழியாக்கும்
ஏதமே என மொழிந்தார் எங்கள் பிரான் சம்பந்தர்
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவ னன்றே.
வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த
உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன்
துயரிலங்குமுல கில்பலவூழிகள் தோன்றும்பொழு தெல்லாம்
பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும்
நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்
வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவ ரேத்தப்
பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா
ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயமிது வென்னப்
பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
102 / 167
திருக்கோலக்கா பண் - தக்கராகம்
மெய்ந்நிறைந்த செம்பொருளாம் வேதத்தின் விழுப்பொருளை வேணிமீது
பைந்நிறைந்த அரவுடனே பசுங்குழவித் திங்கள்பரித் தருளுவானை
மைந்நிறைந்த மிடற்றானை "மடையில்வா ளைகள்பாய" என்னும் வாக்கால்,
கைந்நிறைந்த ஒத்தறுத்துக் கலைப்பதிகம் கவுணியர்கோன் பாடுங் காலை.
மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்
உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ.
107 / 100
சீர்காழி பண் - தக்கராகம்
திருப்பெருகு பெருங்கோயில் சூழவலங் கொண்டருளித் திருமுன் னின்றே
அருட்பெருகு திருப்பதிகம் எட்டொருகட் டளையாக்கி அவற்றுள் ஒன்று
விருப்புறுபொற் றிருத்தோணி வீற்றிருந்தார் தமைப்பாட மேவு காதல்
பொருத்தமுற அருள்பெற்றுப் போற்றிஎடுத் தருளினார் "பூவார் கொன்றை".
பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசா
காவா யெனநின் றேத்துங் காழியார்
மேவார் புரமூன் றட்டா ரவர்போலாம்
பாவா ரின்சொற் பயிலும் பரமரே.
115 / 335
திருநனிபள்ளி பண் - பியந்தைக் காந்தாரம்
"காரைகள் கூகை முல்லை" எனநிகழ் கலைசேர் வாய்மைச்
சீரியற் பதிகம் பாடித் திருக்கடைக் காப்புத் தன்னில்
"நாரியோர் பாகர் வைகும் நனிபள்ளி உள்கு வார்தம்
பேரிடர் கெடுதற் காணை நம"தெனும் பெருமை வைத்தார்.
காரைகள் கூகைமுல்லை களவாகை யீகை
படர்தொடரி கள்ளி கவினிச்
சூரைகள் பம்மிவிம்மு சுடுகாட மர்ந்த
சிவன்மேய சோலை நகர்தான்
தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை
குதிகொள்ள வள்ளை துவள
நாரைக ளாரல்வாரி வயன்மேதி வைகும்
நனிபள்ளி போலும் நமர்காள்.
120 / 356
திருவலம்புரம் பண் - பழம்பஞ்சுரம்
கறையணி கண்டர் கோயில் காதலால் பணிந்து பாடி
மறையவர் போற்ற வந்துதிருவலம் புரத்து மன்னும்
இறைவரைத் தொழுது பாடும் "கொடியுடை" ஏத்திப் போந்து
நிறைபுனல் திருச்சாய்க் காடு தொழுதற்கு நினைந்து செல்வார்.
கொடியுடை மும்மதி லூடுருவக் குனிவெஞ் சிலைதாங்கி
இடிபட எய்த அமரர்பிரான் அடியார் இசைந்தேத்தத்
துடியிடை யாளையொர் பாகமாகத் துதைந்தா ரிடம்போலும்
வடிவுடை மேதி வயல்படியும் வலம்புர நன்னகரே.
122 / 23
திருச்சாய்க்காடு பண் - சீகாமரம்
வானள வுயர்ந்த வாயிலுள்வலங் கொண்டு புக்குத்
தேனலர் கொன்றை யார்தந் திருமுன்பு சென்று தாழ்ந்து
மானிடந் தரித்தார் தம்மைப் போற்றுவார் "மண்புகார்" என்(று)
ஊனெலாம் உருக ஏத்தி உச்சிமேற் குவித்தார் செங்கை.
மண்புகார் வான்புகுவர் மனமிளையார் பசியாலுங்
கண்புகார் பிணியறியார் கற்றாருங் கேட்டாரும்
விண்புகா ரெனவேண்டா வெண்மாட நெடுவீதித்
தண்புகார்ச் சாய்க்காட்டெந் தலைவன்தாள் சார்ந்தாரே
126 / 29
திருவெண்காடு பண் - சீகாமரம்
மெய்ப்பொரு ளாயி னாரை வெண்காடு மெவி னாரைச்
செப்பரும் பதிக மாலை "கண்காட்டு நுதல்" முன் சேர்த்தி
முப்புரஞ் செற்றார் பாதம் சேருமுக் குளமும் பாடி
ஒப்பரு ஞானம் உண்டார் உளமகிழ்ந் தேத்தி வாழ்ந்தார்.
கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே.
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே.
சக்கரம்மாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய
மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே.
162 / 1
கோயில் பண் - குறிஞ்சி
ஊழி முதல்வர்க் குரிமைத் தொழிற்சிறப்பால்
வாழிதிருத் தில்லைவாழ் அந்தணரை முன்வைத்தே
ஏழிசையும் ஓங்க எடுத்தார் எமையாளும்
காழியர்தங் காவலனார் "கற்றாங் கெரியோம்பி".
கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.
174 / 3
கோயில் பண் - காந்தார பஞ்சமம்
"ஆடினாய்நறு நெய்யொடு பால்தயிர்" என்றெடுத் தார்வத்தால்
பாடி னார்பின்னும் அப்பதி கத்தினிற் பரவியபாட் டொன்றில்
நீடு வாழ்தில்லை நான்மறை யோர்தமைக் கண்டஅந் நிலைஎல்லாம்
கூறு மறுகோத்(து) "அவர்தொழு தேத்துசிற் றம்பலம்" எனக்கூறி.
ஆடினாய்நறு நெய்யொடு பால்தயிர் அந்தணர்பிரி யாதசிற் றம்பலம்
நாடினாயிடமா நறுங்கொன்றை நயந்தவனே
பாடினாய்மறை யோடுபல் கீதமும் பல்சடைப்பனி கால்கதிர் வெண்திங்கள்
சூடினாயருளாய் சுருங்கஎம தொல்வினையே.
181 / 627
திருமுதுகுன்றம் பண் - நட்டபாடை
மொய் கொள் மா மணி கொழித்து முத்தாறு சூழ் முது குன்றை அடைவோம் என்று
எய்து சொல் மலர் மாலை வண் பதிகத்தை இசையொடும் புனைந்து ஏத்திச்
செய் தவத் திரு முனிவரும் தேவரும் திசையெலாம் நெருங்கப் புக்கு
ஐயர் சேவடி பணியும் அப் பொருப்பினில் ஆதரவுடன் சென்றார்
மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விடம் உண்ட
தொத்தார்தரு மணிநீள்முடிச் சுடர்வண்ணன திடமாம்
கொத்தார்மலர் குளிர்சந்தகில் ஒளிர்குங்குமங் கொண்டு
முத்தாறுவந் தடிவீழ்தரு முதுகுன்றடை வோமே.
183 / 638
திருமுதுகுன்றம் பண் - சாதாரி
தாழ்ந் தெழுந்துமுன் "முரசதிர்ந் தெழும்" எனுந் தண்டமிழ்த் தொடைசாத்தி,
வாழ்ந்து போந்தங்கண் வளம்பதி அதனிடை வைகுவார் மணிவெற்புச்
சூழ்ந்த தண்புனல் சுலவுமுத் தாறொடு தொடுத்தசொல் தொடைமாலை
வீழ்ந்த காதலாற் பலமுறை விளம்பியே மேவினார் சிலநாள்கள்.
முரசதிர்ந் தெழுதரு முதுகுன்ற மேவிய
பரசமர் படையுடை யீரே
பரசமர் படையுடை யீருமைப் பரவுவார்
அரசர்கள் உலகில்ஆ வாரே.
184 / 619
திருத்தூங்கானை மாடம் பண் - பழந்தக்கராகம்
ஆங்கு நாதரைப் பணிந்துபெண் ணாகடம் அணைந்தரு மறையோசை
ஓங்கு தூங்கானை மாடத்துள் அமர்கின்ற ஒருதனிப் பரஞ்சோதிப்
பாங்க ணைந்துமுன் வலங்கொண்டு பணிவுற்றுப் பரவுசொல் தமிழ்மாலை
"தீங்கு நீங்குவீர் தொழுமின்கள்" எனும்இசைப் பதிகமும் தெரிவித்தார்.
ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்
அடங்கும் மிடங்கருதி நின்றீ ரெல்லாம் அடிக ளடிநிழற்கீ ழாளாம் வண்ணம்
கிடங்கும் மதிலுஞ் சுலாவி யெங்கும் கெழுமனைகள் தோறும் மறையின்னொலி
தொடங்குங் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே.
214 / 617
திருநெல்வாயில் அரத்துறை பண் - பியந்தைக் காந்தாரம்
"எந்தை ஈசன்" எனஎடுத்(து) "இவ்வருள்
வந்த வாறுமற் றெவ்வண மோ?" என்று
சிந்தை செய்யுந் திருப்பதி கத்திசை
புந்தி யாரப் புகன்றெதிர் போற்றுவார்.
பொடி அணிந்த புராணன் அரத்துறை
அடிகள் தம் அருளே இதுவாம் எனப்
படி இலாத சொல் மாலைகள் பாடியே
நெடிது போற்றிப் பதிகம் நிரப்பினார்
எந்தை யீசனெம் பெருமான் ஏறமர் கடவுளென் றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லாற் சென்றுகை கூடுவ தன்றால்
கந்த மாமல ருந்திக் கடும்புனல் நிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலைநெல் வாயில் அரத்துறை யடிகள்தம் அருளே.
237 / 249
திருப்பழுவூர் பண் - இந்தளம்
மண்ணினில் பொலி குலமலையர் தாம் தொழுது
எண் இல் சீர்ப் பணிகள் செய்து ஏத்தும் தன்மையில்
நண்ணிய வகை சிறப்பித்து நாதரைப்
பண்ணினில் திகழ் திருப்பதிகம் பாடினார்
அந்தணர்க ளானமலை யாளரவ ரேத்தும்
பந்தமலி கின்றபழு வூரரனை யாரச்
சந்தமிகு ஞானசம் பந்தனுரை பேணி
வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே.
239 / 220
திருவிசயமங்கை பண் - காந்தார பஞ்சமம்
அந்தணர் விசய மங்கையினில் அங்கணர்
தம் தனி ஆலயம் சூழ்ந்து தாழ்ந்து முன்
வந்தனை செய்து கோ தனத்தை மன்னிய
செந்தமிழ் மாலையில் சிறப்பித்து ஏத்தினார்
கீதமுன் இசைதரக் கிளரும் வீணையர்
பூதமுன் இயல்புடைப் புனிதர் பொன்னகர்
கோதனம் வழிபடக் குலவு நான்மறை
வேதியர் தொழுதெழு விசய மங்கையே.
248 / 212
திருச்சேய்ஞலூர் பண் - பழந்தக்கராகம்
வேதியர் சேய்ஞலூர் விமலர் தம் கழல்
காதலில் பணிந்தவர் கருணை போற்றுவார்
தாதை தாள் தடிந்த சண்டீசப் பிள்ளையார்
பாதகப் பயன் பெறும் பரிசு பாடினார்
பீரடைந்த பாலதாட்டப் பேணா தவன்தாதை
வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந் தான்றனக்குத்
தாரடைந்த மாலைசூட்டித் தலைமை வகுத்ததென்னே
சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே.
266 / 746
பொது (பஞ்சாக்கரத் திருப்பதிகம்) பண் - காந்தார பஞ்சமம்
மந்திரங்க ளானஎலாம் அருளிக் செய்து மற்றவற்றின் வைதிக நூற்சடங்கின் வந்த
சிந்தைமயக் குறும்ஐயந் தெளிய எல்லாம் செழுமறையோர்க் கருளிஅவர் தெருளும் ஆற்றால்
முந்தைமுதன் மந்திரங்கள் எல்லாந் தோன்று முதலாகும் முதல்வனார் எழுத்தஞ்(க) என்பார்
அந்தியினுள் மந்திரம்அஞ் செழுத்து மே"என் றஞ்செழுத்தின் திருப்பதிகம் அருளிச் செய்தார்.
மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்
கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.
286 / 169
திருப்புள்ளிருக்குவேளூர் பண் - சீகாமரம்
போற்றிய காதல் பெருக புள்ளிருக்கும் திருவேளூர்
நால் தடம் தோளுடை மூன்று நயனப் பிரான் கோயில் நண்ணி
ஏற்ற அன்பு எய்த வணங்கி இருவர் புள் வேந்தர் இறைஞ்சி
ஆற்றிய பூசனை சாற்றி அஞ்சொற் பதிகம் அணிந்தார்
கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம்
உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானார் உறையுமிடந்
தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே.
291 / 180
திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும் பண் - சாதாரி
செழுந்திரு வேள்விக் குடியில் திகழ் மணவாள நற்கோலம்
பொழிந்த புனல் பொன்னி மேவும் புனிதத் துருத்தி இரவில்
தழும்பிய தன்னைமையும் கூடத் தண் தமிழ் மாலையில் பாடிக்
கொழுந்து வெண் திங்கள் அணிந்தார் கோடிக் காவிற் சென்றடைந்தார்
ஓங்கிமேல் உழிதரும் ஒலிபுனற் கங்கையை ஒருசடைமேற்
தாங்கினார் இடுபலி தலைகலனாக்கொண்ட தம்மடிகள்
பாங்கினால் உமையொடும் பகலிடம் புகலிடம் பைம்பொழில்சூழ்
வீங்குநீர்த் துருத்தியார் இரவிடத் துறைவர்வேள் விக்குடியே.
295 / 213
திருந்துதேவன்குடி பண் - கொல்லி
திருந்துதே வன்குடி மன்னுஞ் சிவபெருமான் கோயில் எய்திப்
பொருந்திய காதலிற் புக்குப் போற்றிவ ணங்கிப் புரிவார்
"மருந்தொடு மந்திரமாகி மற்றும்இ வர்வேட மாம்"என்று
அருந்தமிழ் மாலைபு னைந்தார் அளவில்ஞா னத்தமு துண்டார்.
மருந்துவேண் டில்லிலை மந்திரங் கள்ளிவை
புரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்ளிவை
திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய
அருந்தவத் தோர்தொழும் அடிகள்வே டங்களே.
298 / 224
திருவடகுரங்காடுதுறை பண் - சாதாரி
வட குரங்காடுதுறையில் வாலியார் தாம் வழிபட்ட
அடைவும் திருப்பதிகத்தில் அறிய சிறப்பித்து அருளிப்
புடை கொண்டு இறைஞ்சினர் போந்து புறத்துள்ள தானங்கள் போற்றி
படை கொண்ட மூவிலை வேலர் பழனம் திருப்பதி சார்ந்தார்
கோலமா மலரொடு தூபமுஞ் சாந்தமுங் கொண்டுபோற்றி
வாலியார் வழிபடப் பொருந்தினார் திருந்துமாங் கனிகளுந்தி
ஆலுமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
நீலமா மணிமிடற் றடிகளை நினையவல் வினைகள்வீடே.
301 / 231
திருவையாறு பண் - மேகராகக்குறிஞ்சி
வந்தணைந்த திருத்தொண்டர் மருங்குவர மான்ஏந்து கையர் தம்பால்
நந்திதிரு வருள்பெற்ற நன்னகரை முன்இறைஞ்சி நண்ணும் போதில்
"ஐந்துபுலன் நிலைகலங்கும் இடத்தஞ்சல் என்பார்தம் ஐயா(று)" என்று
புந்திநிறை செந்தமிழின் சந்தஇசை போற்றிசைத்தார் புகலி வேந்தர்.
புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மே லுந்தி
அலமந்த போதாக அஞ்சேலென் றருள் செய்வான் அமருங் கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென் றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவை யாறே.
303 / 234
திருவையாறு பண் - இந்தளம்
"கோடல்கோங் கங்குளிர்கூ விளம்" என்னுந் திருப்பதிகக் குலவுமாலை
நீடிபெருந் திருக்கூத்து நிறைந்த திருஉள்ளத்து நிலைமை தோன்ற
ஆடுமா றதுவல்லான் ஐயாற்றெம் ஐயனே" என்று நின்று
பாடினார் ஆடினார் பண்பினொடுங் கண்பொழிநீர் பரந்து பாய.
கோடல் கோங்கங் குளிர்கூ விளமாலை குலாயசீர்
ஓடு கங்கை ஒளிவெண் பிறைசூடும் ஒருவனார்
பாடல் வீணைமுழ வங்குழல் மொந்தைபண் ணாகவே
ஆடு மாறுவல் லானும் ஐயாறுடை ஐயனே.
306 / 245
திருமழபாடி பண் - கௌசிகம்
செங்கைமான் மறியார்தந் திருமழபா டிப்புறத்துச் சேரச் செல்வார்
"அங்கையார் அழல்" என்னும் திருப்பதிகம் எடுத்தருளி அணைந்த போழ்தில்
மங்கைவாழ் பாகத்தார் மழபாடி தலையினா வணங்கு வார்கள்
பொங்குமா தவமுடையார்" எனத்தொழுது போற்றிசைத்தே கோயில் புக்கார்.
அங்கை யாரழ லன்னழ கார்சடைக்
கங்கை யான்கட வுள்ளிட மேவிய
மங்கை யானுறை யும்மழ பாடியைத்
தங்கை யால்தொழு வார்தக வாளரே.
309 / 253
திருமாந்துறை பண் - நட்டராகம்
சென்று திரு மாந்துறையில் திகழ்ந்து உறையும் துறை நதி வாழ் சென்னியார் தம்
முன்றில் பணிந்து அணி நெடு மாளிகை வலம் செய்து உள்புக்கு முன்பு தாழ்ந்து
துன்று கதிர்ப் பரிதிமதி மருந்துக்கள் தொழுது வழிபாடு செய்ய
நின்ற நிலை சிறப்பித்து நிறை தமிழில் சொல் மாலை நிகழப் பாடி
பெருகு சந்தனங் காரகில் பீலியும்
பெருமரம் நிமிர்ந்துந்திப்
பொருது காவிரி வடகரை மாந்துறைப்
புனிதனெம் பெருமானைப்
பரிவி னாலிருந் திரவியும் மதியமும்
பார்மன்னர் பணிந்தேத்த
மருத வானவர் வழிபடு மலரடி
வணங்குதல் செய்வோமே.
318 / 264
திருப்பாச்சில் ஆச்சிராமம் பண் - தக்கராகம்
அணிகிளர்தா ரவன்சொன்ன மாற்றம்அரு ளொடுங்கேட்டந் நிலையின் நின்றே
பணிவளர்செஞ் சடைப்பாச்சின்மேய பரம் பொருளாயி னாரைப்பணிந்து
"மணிவளர்கண் டரோமங்கையைவாட மயல்செய்வ தோஇவர் மாண்ப"தென்று
தணிவில் பிணிதவிர்க் கும்பதிகத் தண்டமிழ் பாடினார் சண்பை நாதர்
துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச்
சுடர்ச்சடை சுற்றிமு டித்துப்
பணிவளர் கொள்கையர் பாரிடஞ் சூழ
வாரிட மும்பலி தேர்வர்
அணிவளர் கோலமே லாஞ்செய்து பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
மணிவளர் கண்டரோ மங்கையை வாட
மயல்செய்வ தோஇவர் மாண்பே.
335 / 738
பொது (திருநீலகண்டப் பதிகம்) பண் - வியாழக் குறிஞ்சி
"அவ்வினைக் கிவ்வினை" என்றெடுத்து "ஐயர் அமுதுசெய்த
வெவ்விடம் முன்தடுத் தெம்மிடர் நீக்கிய வெற்றியினால்
எவ்விடத் தும்அடியார் இடர் காப்பது கண்டம்" என்றே
"செய்வினை தீண்டா திருநீல கண்டம்" எனச்செப்பினார்.
அவ்வினை கிவ்வினை யாமென்றும் சொல்லு ம தறிவீர்
உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழ்ல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம்.
345 / 257
திருவானைக்கா பண் - இந்தளம்
விண்ணவர் போற்றி செய் ஆனைக் காவில் வெண் நாவல் மேவிய மெய்ப் பொருளை
நண்ணி இறைஞ்சி முன் வீழ்ந்து எழுந்து நால் கோட்டு நாகம் பணிந்ததுவும்
அண்ணல் கோச் செங்கண் அரசன்செய்த அடிமையும் அஞ்சொல் தொடையில் வைத்துப்
பண் உறு செந்தமிழ் மாலைப் பாடி பரவி நின்று ஏத்தினர் பான்மையினால்
செங்கட் பெயர்கொண் டவன்செம் பியர்கோன்
அங்கட் கருணை பெரிதா யவனே
வெங்கண் விடையா யெம்வெண்நா வலுளாய்
அங்கத் தயர்வா யினள்ஆ யிழையே.
346 / 260
திருவானைக்கா (கூடற்சதுக்கம்) பண் - பழம்பஞ்சுரம்
நாரணன் நான்முகன் காணா உண்மை வெண் நாவல் உண்மை மயேந்திரமும்
சீரணி நீடு திருக்கயிலை செல்வத் திருவாரூர் மேய பண்பும்
ஆரணத்து உட் பொருள் ஆயினாரை ஆனைக் காவின் கண் புகழ்ந்து பாடி
ஏர் அணியும் பொழில் சூழ்ந்த சண்பை ஏந்தலார் எல்லை இல் இன்பம் உற்றார்
மண்ணது வுண்டரி மலரோன்காணா
வெண்ணாவல் விரும்பும யேந்திரருங்
கண்ணது வோங்கிய கயிலையாரும்
அண்ணல்ஆ ரூராதி யானைக்காவே.
349 / 276
திருநெடுங்களம் பண் - பழந்தக்கராகம்
நெடுங்களத் தாதியை அன்பால்"நின்பால் நெஞ்சம் செலாவகை நேர்விலக்கும்
இடும்பைகள் தீர்த்தருள் செய்வாய்" என்றும் இன்னிசை மாலைகொண் டேத்தி ஏகி
அடும்பணிச் செஞ்சடை யார்பதிகள் அணைந்து பணிந்து நியமம்போற்றிக்
கடுங்கைவரைஉரித் தார்மகிழ்ந்த காட்டுப்பள் ளிப்பதி கைதொழுவார்.
மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்
குறையுடையார் குற்றம்ஓராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.
350 / 278
மேலைத் திருக்காட்டுப்பள்ளி பண் - கொல்லி
சென்று திகழ்திருக் காட்டுப்பள்ளிச் செஞ்சடை நம்பர்தங் கோயில் எய்தி
முன்றில் வலங்கொண் டிறைஞ்சிவீழ்ந்து மொய்கழற் சேவடி கைதொழுவார்
கன்றணை ஆவின் கருத்துவாய்ப்பக் கண்ணுதலாரைமுன் போற்றிசெய்து
மன்றுள்நின் றாடல் மனத்துள் வைப்பார் "வாருமன் னும்முலை" பாடி வாழ்ந்தார்.
வாருமன் னும்முலை மங்கையோர் பங்கினன்
ஊருமன் னும்பலி யுண்பதும் வெண்டலை
காருமன் னும்பொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
நீருமன் னுஞ்சடை நிமலர்தந் நீர்மையே.
352,353 / 280
திருக்கண்டியூர்வீரட்டம் - வினாவுரை பண் - கொல்லி
வினவி எடுத்த திருப் பதிகம் மேவு திருக்கடைக் காப்பு தன்னில்
அனைய நினைவு அரியேன் செயலை அடியாரைக் கேட்டு மகிழ்ந்த தன்மை
புனைவுறு பாடலில் போற்றி செய்து போந்து புகலிக் கவுணியனார்
துனை புனல் பொன்னித் திரை வலம் கொள் சோற்றுத் துறை தொழச் சென்று அடைவார்
வினவினேன்அறி யாமையில்லுரை செய்ம்மினீரருள் வேண்டுவீர்
கனைவிலார்புனற் காவிரிக்கரை மேயகண்டியூர் வீரட்டன்
தனமுனேதனக் கின்மையோதம ராயினாரண்ட மாளத்தான்
வனனில்வாழ்க்கைகொண் டாடிப்பாடியிவ் வையமாப்பலி தேர்ந்ததே.
கருத்தனைப்பொழில் சூழுங்கண்டியூர் வீரட்டத்துறை கள்வனை
அருத்தனைத்திறம் அடியர்பால்மிகக் கேட்டுகந்த வினாவுரை
திருத்தமாந்திகழ் காழிஞானசம் பந்தன்செப்பிய செந்தமிழ்
ஒருத்தராகிலும் பலர்களாகிலும் உரைசெய்வா ருயர்ந்தார்களே.
354 / 283
திருச்சோற்றுத்துறை பண் - தக்கராகம்
அப்பர் சோற்றுத் துறை சென்று அடைவோம் என்று
ஒப்பில் வண் தமிழ் மாலை ஒருமையால்
செப்பியே சென்று சேர்ந்தனர் சேர்விலார்
முப்புரம் செற்ற முன்னவர் கோயில் முன்
செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்
துப்ப னென்னா தருளே துணையாக
ஒப்ப ரொப்பர் பெருமான் ஒளிவெண்ணீற்
றப்பர் சோற்றுத் துறைசென் றடைவோமே.
372 / 292
திருக்கருகாவூர் பண் - கௌசிகம்
வந்து பந்தர்மா தவிமணங் கமழ்கரு காவூர்ச்
சந்த மாமறை தந்தவர் கழலிணை தாழ்ந்தே
"அந்தம் இல்லவர் வண்ணம்ஆ ரழல் வண்ணம்" என்று
சிந்தை இன்புறப் பாடினார் செழுந்தமிழ்ப் பதிகம்.
முத்தி லங்குமுறு வல்லுமை யஞ்சவே
மத்த யானைமறு கவ்வுரி வாங்கியக்
கத்தை போர்த்தகட வுள்கரு காவூரெம்
அத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
373,374 / 507
திருஅவளிவணல்லூர் - திருவிராகம் பண் - சாதாரி
மன்னும் அப்பதி வானவர் போற்றவும் மகிழ்ந்த
தன்மையார் பயில் கோயில் உள் தம்பரிசு உடையார்
என்னும் நாமமும் நிகழ்ந்திட ஏத்தி முன் இறைஞ்சிப்
பன்னு சீர்ப் பதி பலவும் அப்பால் சென்று பணிவார்
கொம்பிரிய வண்டுலவு கொன்றைபுரி நூலொடு குலாவித்
தம்பரிசி னோடுசுடு நீறுதட வந்திடப மேறிக்
கம்பரிய செம்பொனெடு மாடமதில் கல்வரைவி லாக
அம்பெரிய வெய்தபெரு மானுறைவ தவளிவண லூரே.
382 / 305
திருவலஞ்சுழி (வினாவுரை) பண் - இந்தளம்
ஞான போனகர் நம்பர் முன் தொழுது எழும் விருப்பால்
ஆன காதலில் அங்கணவர் தமை வினவும்
ஊனமில் இசையுடன் விளங்கிய திருப்பதிகம்
பான் அலார் மணிகண்டரைப் பாடினார் பரவி
விண்டெ லாமல ரவ்விரை நாறுதண் டேன்விம்மி
வண்டெ லாம்நசை யாலிசை பாடும் வலஞ்சுழித்
தொண்டெ லாம்பர வுஞ்சுடர் போலொளி யீர்சொலீர்
பண்டெ லாம்பலி தேர்ந்தொலி பாடல் பயின்றதே.
402 / 504
திருவிரும்பூளை (வினாவுரை) பண் - இந்தளம்
நிகர் இலா மேருவரை அணுவாக நீண்டானை
நுகர்கின்ற தொண்டர் தமக்கு அமுதாகி நொய்யானை
தகவு ஒன்ற அடியார்கள் தமை வினவித் தமிழ் விரகர்
பகர்கின்ற அருமறையின் பொருள் விரியப் பாடினார்
சீரார் கழலே தொழுவீ ரிதுசெப்பீர்
வாரார் முலைமங்கை யொடும் முடனாகி
ஏரா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
காரார் கடல்நஞ் சமுதுண்ட கருத்தே.
407 / 311
திருக்குடமூக்கு பண் - பஞ்சமம்
திருஞான சம்பந்தர் திருக்குட மூக்கினைச் சேர
வருவார் தம் பெருமானை வண் தமிழின் திருப்பதிகம்
உருகா நின்று உளம் மகிழ்க் குட மூக்கை உவந்து இருந்த
பெருமான் எம் இறை என்று பெருகு இசையால் பரவினார்
அரவிரி கோடனீட லணிகாவிரி யாற்றயலே
மரவிரி போதுமௌவல் மணமல்லிகை கள்ளவிழுங்
குரவிரி சோலைசூழ்ந்த குழகன்குட மூக்கிடமா
இரவிரி திங்கள்சூடி யிருந்தானவன் எம்மிறையே.
413 / 318
திருவிடைமருதூர் பண் - தக்கராகம்
ஓங்குதிருப் பதிகம், "ஓ டேகலன்"என் றெடுத்தருளித்
தாங்கரிய பெருமகிழ்ச்சி தலைசிறக்குந் தன்மையினால்
"ஈங்கெனைஆ ளுடையபிரான் இடைமருதீ தோ"என்று
பாங்குடைய இன்னிசையாற் பாடிஎழுந் தருளினார்.
ஓடேகலன் உண்பதும் ஊரிடு பிச்சை
காடேயிட மாவது கல்லால் நிழற்கீழ்
வாடாமுலை மங்கையுந் தானும் மகிழ்ந்து
ஈடாவுறை கின்ற இடைமரு தீதோ.
424, 425 / 335
திருவாவடுதுறை பண் - காந்தார பஞ்சமம்
சென்று தேவர் தம்பிரான் மகிழ் கோயில் முன்பு எய்தி
நின்று போற்றுவார் நீள் நிதி வேண்டினார்க்கு ஈவது
ஒன்றும் மற்றிலேன் உன்னடி அல்லது ஒன்று அறியேன்
என்று பேர் அருள் வினவிய செந்தமிழ் எடுத்தார்
இடரினுந் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உன்கழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆடுவதுறை யரனே.
436 / 338
திருத்துருத்தி பண் - நட்டராகம்
திரைத்த டம்புரற் பொன்னிசூழ் திருத்துருந் தியினில்
"வரைத்த லைப்பசும் பொன்"எனும் வண்தமிழ்ப் பதிகம்
உரைத்து மெய்யுறப் பணிந்துபோந் துலவும்அந் நதியின்
கரைக்கண் மூவலூர்க் கண்ணுத லார்கழல் பணிந்தார்.
வரைத்தலைப் பசும்பொனோ டருங்கலன்கள் உந்திவந்
திரைத்தலைச் சுமந்துகொண் டெறிந்திலங்கு காவிரிக்
கரைத்தலைத் துருத்திபுக் கிருப்பதே கருத்தினாய்
உரைத்தலைப் பொலிந்துனக் குணர்த்துமாறு வல்லமே.
447 / 370
திருத்தருமபுரம் யாழ்மூரி
வேதநெறி வளர்ப்பவரும் விடையவர்முன் தொழுதுதிருப்பதிகத் துண்மை
பூதலத்தோர் கண்டத்தும் கலத்தினிலும் நிலத்துநூல் புகன்ற பேத
நாதஇசை முயற்சிகளால் அடங்காத வகைகாட்ட நாட்டுகின்றார்
"மாதர்மடப் பிடி"பாடி வணங்கினார் வானவரும் வணங்கி ஏத்த.
மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னதோர்
நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
பூதஇ னப்படைநின் றிசை பாடவும் ஆடுவர்
அவர் படர் சடைந் நெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசைபா டுவ ராழ்கடல் வெண்டிரை
யிரைந் நுரை கரை பொரு துவிம்மிநின் றயலே
தாதவிழ் புன்னைதயங் கும லர்ச்சிறை வண்டறை
யெழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.
456 / 376
திருநள்ளாறு பண் - பழந்தக்கராகம்
உருகியஅன் புறுகாதல் உள்ளுருகி நனைஈரம் பெற்றாற்போல
மருவுதிரு மேனிஎலாம் முகிழ்த்தெழுந்த மயிர்ப்புளகம் வளர்க்கு நீரால்
அருவிசொரி திருநயனத் தானந்த வெள்ளம்இழிந் தலைய நின்று
பொருவில்பதி கம்"போக மார்த்தபூண் முலையாள்"என் றெடுத்துப் போற்றி.
போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே.
464 / 471
திருச்சாத்தமங்கை பண் - பஞ்சமம்
கோது இலா ஆர் அமுதைக் கோமளக் கொம்புடன் கூடக் கும்பிட்டு ஏத்தி
ஆதி ஆம் மறைப் பொருளால் அரும் தமிழின் திருப்பதிகம் அருளிச் செய்வார்
நீதியால் நிகழ்கின்ற நீல நக்கர் தம் பெரும் சீர் நிகழ வைத்துப்
பூதி சாதனர் பரவும் புனித இயல் இசைப் பதிகம் போற்றி செய்தார்
மறையினார் மல்குகாழித் தமிழ்ஞானசம் பந்தன்மன்னும்
நிறையினார் நீலநக்கன் நெடுமாநக ரென்றுதொண்டர்
அறையுமூர் சாத்தமங்கை அயவந்திமே லாய்ந்தபத்தும்
முறைமையா லேத்தவல்லார் இமையோரிலும் முந்துவரே.
470 / 463
திருச்செங்காட்டங்குடி பண் - பஞ்சமம்
அங்கு அணைந்து கோயில் வலம் கொண்டு அருளி அரவு அணிந்தார் அடிக் கீழ் வீழ்ந்து
செங்கண் அருவிகள் பொழியத் திருமுன்பு பணிந்து எழுந்து செங்கை கூப்பித்
தங்கள் பெரும் தகையாரைச் சிறுத் தொண்டர் தொழ இருந்த தன்மை போற்றிப்
பொங்கி எழும் இசைபாடிப் போற்றி இசைத்து அங்கு ஒரு பரிசு புறம்பு போந்தார்
பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய
வெங்காட்டுள் அனலேந்தி விளையாடும் பெருமானே.
482 / 468
திருமருகல் பண் - இந்தளம்
சடையானை எவ்வுயிர்க்கும் தாயானானை சங்கரனை சசி கண்ட மவுலியானை
விடையானை வேதியனை வெண் நீற்றானை விரவாதார் புரம் மூன்றும் எரியச் செற்ற
படையானைப் பங்கயத்து மேவினானும் பாம்பு அணையில் துயின்றானும் பரவும் கோலம்
உடையானை உடையானே தகுமோ இந்த ஒள்ளிழையார் உள் மெலிவு என்று எடுத்துப் பாட
சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்
விடையா யெனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே.
486 / 465
திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும் பண் - நட்டபாடை
மருகல் அமர்ந்து நிறைந்த கோலம் மல்கு செங் காட்டங் குடியின் மன்னிப்
பெருகு கணபதி ஈச்சரத்தார் பீடு உடைக் கோலமே ஆகித் தோன்ற
உருகிய காதலும் மீது பொங்க உலகர் முன் கொள்ளும் உணர்வு நீட
அருவி கண் வார் உறப் பாடலுற்றார் அங்கமும் வேதமும் என்று எடுத்து
அங்கமும் வேதமும் ஓதுநாவர்
அந்தணர் நாளும் அடிபரவ
மங்குல் மதிதவழ் மாடவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செங்கய லார்புனற் செல்வமல்கு
சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே.
491 / 459
திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் பண் - பியந்தைக் காந்தாரம்
ஆங்கு அவர் போற்றும் சிறப்பின் மேவி அப் பதி தன்னில் அமரு நாளில்
வாங்கு மலைச் சிலையார் மகிழ்ந்த வர்த்த மானீச்சரம் தான் வணங்கி
ஓங்கிய அன்பின் முருகனார் தம் உயர் திருத்தொண்டு சிறப்பித்து ஓங்கும்
பாங்கு உடை வண்தமிழ் பாடி நாளும் பரமர் தம் பாதம் பணிந்து இருந்தார்
தொண்டர் தண்கயம் மூழ்கித் துணையலுஞ் சாந்தமும் புகையுங்
கொண்டு கொண்டடி பரவிக் குறிப்பறி முருகன் செய்கோலங்
கண்டு கண்டுகண் குளிரக் களிபரந் தொளிமல்கு கள்ளார்
வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே.
497 & 498 / 485
திருவாரூர் பண் - வியாழக்குறிஞ்சி
சொல் பெரு வேந்தரும் தோணி மூதூர் தோன்றல் பின் காதல் தொடத் தாமும்
பொன் புகலூர் தொழச் சென்று அணைந்தார் புகலிப் பிரானும் புரிந்த சிந்தை
விற்குடி வீரட்டம் சென்று மேவி விடையவர் பாதம் பணிந்து போற்றிப்
பற்பல ஆயிரம் தொண்டரோடும் பாடலன் நான் மறைப் பாடிப் போந்தார்
துணர் இணர்ச் சோலையும் சாலி வேலித் துறை நீர்ப் பழனமும் சூழ் கரும்பின்
மண மலி கானமும் ஞானமும் உண்டார் மருங்கு உற நோக்கி மகிழ்ந்து அருளி
அணைபவர் அள்ளல் கழனி ஆரூர் அடைவோம் என மொழிந்து அன்பு பொங்கப்
புணர் இசைச் செந்தமிழ் கொண்டு போற்றிப் பொன் மதில் ஆரூர்ப் புறத்து அணைந்தார்
பாடலன் நான்மறையன் படிபட்ட கோலத்தன் திங்கள்
சூடலன் மூவிலைய சூலம் வலனேந்திக்
கூடலர் மூவெயிலும் எரியுண்ணக் கூரெரிகொண் டெல்லி
ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே.
உள்ளமோர் இச்சையினால் உகந்தேத்தித் தொழுமின்தொண்டீர் மெய்யே
கள்ளம் ஒழிந்திடுமின் கரவா திருபொழுதும்
வெள்ளமோர் வார்சடைமேற் கரந்திட்ட வெள்ளேற்றான் மேய
அள்ளல் அகன்கழனி ஆரூர் அடைவோமே.
499 / 488
திருவாரூர் பண் - நட்டராகம்
வான் உயர் செங்கதிர் மண்டலத்து மருங்கு அணையும் கொடி மன்னும் ஆரூர்
தான் ஒரு பொன் உலகு என்னத் தோன்றும் தயங்கு ஒளி முன் கண்டு சண்பை வந்த
பால் நிற நீற்றர் பருக்கையானைப் பதிகத் தமிழ் இசைபாடி ஆடித்
தேனொடு வண்டுமுரலும் சோலைத் திருப்பதி மற்று அதன் எல்லை சேர்ந்தார்
பருக்கையானை மத்தகத் தரிக்குலத் துகிர்ப்புக
நெருக்கிவாய நித்திலந் நிரக்குநீள் பொருப்பனூர்
கருக்கொள்சோலை சூழநீடு மாடமாளி கைக்கொடி
அருக்கன்மண்ட லத்தணாவும் அந்தணாரூ ரென்பதே.
507 / 490
திருவாரூர் பண் - கௌசிகம்
வந்து இறைஞ்சும் மெய்த் தொண்டர் தம் குழாத்து எதிர் வணங்கிச்
சந்த முத்தமிழ் விரகராம் சண்பையர் தலைவர்
அந்தமாய் உலகு ஆதியாம் பதிகம் அங்கு எடுத்தே
எந்தை தான் எனை என்று கொள்ளும் கொல் என்று இசைத்தார்
அந்த மாயுல காதியு மாயினான்
வெந்த வெண்பொடிப் பூசிய வேதியன்
சிந்தை யேபுகுந் தான்திரு வாரூரெம்
எந்தை தானெனை யேன்றுகொ ளுங்கொலோ.
518 / 487
திருவாரூர் பண் - காந்தாரம்
புவன ஆரூரினில் புறம் போந்து அதனையே நோக்கி நின்றே
அவம் இலா நெஞ்சமே அஞ்சல் நீ உய்யும் ஆறு அறிதி அன்றே
சிவனது ஆரூர் தொழாய் நீ மறவாது என்று செங்கை கூப்பி
பவனமாய்ச் சோடையாய் எனும் திருப்பதிகம் முன் பாடினாரே
பவனமாய்ச் சோடையாய் நாவெழாப்
பஞ்சுதோய்ச் சட்ட வுண்டு
சிவனதாட் சிந்தியாப் பேதைமார்
போலநீ வெள்கி னாயே
கவனமாய்ப் பாய்வதோர் ஏறுகந்
தேறிய காள கண்டன்
அவனதா ரூர்தொழு துய்யலாம்
மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.
524 / 455
திருப்புகலூர் பண் - நட்டபாடை
கும்பிடும் கொள்கையில் குறி கலந்து இசை எனும் பதிக முன் ஆன பாடல்
தம் பெரும் தலைமையால் நிலைமை சால் பதிய தன் பெருமை சால்புற விளம்பி
உம்பரும் பரவுதற்கு உரிய சொல் பிள்ளையார் உள்ளம் மெய்க் காதல் கூர
நம்பர் தம் பதிகள் ஆயின ஏனைப் பலவும் முன் நண்ணியே தொழ நயந்தார்
குறிகலந்தஇசை பாடலினான்நசை யாலிவ்வுல கெல்லாம்
நெறிகலந்ததொரு நீர்மையனாயெரு தேறும்பலி பேணி
முறிகலந்ததொரு தோலரைமேலுடை யானிடம்மொய்ம் மலரின்
பொறிகலந்தபொழில் சூழ்ந்தயலேபுய லாரும்புக லூரே.
532 / 389, 386
திருஅம்பர்மாகாளம் பண் - நட்டராகம்
பொருவு இலாத சொல் புல்கு பொன் நிறம் முதல் பதிகங்களால் போற்றித்
திருவின் ஆர்ந்த கோச் செங்கணான் அந்நகர் செய்த கோயிலைச் சேர்ந்து
மருவு வாய்மை வண் தமிழ் மாலை அவ்வளவனைச் சிறப்பித்துப்
பெருகு காதலில் பணிந்து முன் பரவினார் பேணிய உணர்வோடும்
புல்கு பொன்னிறம் புரிசடை நெடுமுடிப்
போழிள மதிசூடிப்
பில்கு தேனுடை நறுமலர்க் கொன்றையும்
பிணையல்செய் தவர்மேய
மல்கு தண்டுறை அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
அல்லும் நண்பக லுந்தொழும் அடியவர்க்
கருவினை அடையாவே.
திருஅம்பர்ப் பெர்ருந்திருக்கோயில் பண் - காந்தார பஞ்சமம்
எரிதர அனல்கையில் ஏந்தி எல்லியில்
நரிதிரி கானிடை நட்டம் ஆடுவர்
அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க்
குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே.
534 / 362
திருக்கடவூர் வீரட்டம் பண் - காந்தார பஞ்சமம்
மற்ற வண் பதி அணைந்து வீர அட்டத்து மழவிடையார் கோயில்
சுற்று மாளிகை வலம் கொண்டு காலனை உதைத்து உருட்டிய செய்ய
பொன் சிலம்பு அணி தாமரை வணங்கிமுன் போற்றி உய்ந்து எதிர் நின்று
பற்று அறுப்பவர் சடை உடையான் எனும் பதிக இன் இசை பாடி
சடையுடை யானும்நெய் யாடலா னுஞ்சரி கோவண
உடையுடை யானுமை ஆர்ந்தவொண் கண்ணுமை கேள்வனுங்
கடையுடை நன்னெடு மாடமோங் குங்கட வூர்தனுள்
விடையுடை யண்ணலும் வீரட்டா னத்தர னல்லனே.
542 / 405
திருவீழிமிழலை பண் - தக்கராகம்
அப்போது அரையார் விரிகோவண ஆடை
ஒப்பு ஓதரும் பதிகத்து ஓங்கும் இசைபாடி
மெய்ப் போதப் போது அமர்ந்தார் தம் கோயில் மேவினார்
கைப் போது சென்னியின் மேல் கொண்டு கவுணியர்
அரையார் விரிகோ வணஆடை
நரையார் விடையூர் திநயந்தான்
விரையார் பொழில்வீ ழிம்மிழலை
உரையால் உணர்வார் உயர்வாரே.
545 / 401
திருவீழிமிழலை பண் - நட்டபாடை
போற்றிச் சடையார் புனல் உடையான் என்று எடுத்து
சாற்றிப் பதிகத் தமிழ் மாலை சந்த இசை
ஆற்ற மிகப் பாடி ஆனந்த வெள்ளத்தில்
நீற்றழகர் சேவடிக் கீழ் நின்று அலைந்து நீடினார்
சடையார்புன லுடையானொரு சரிகோவண முடையான்
படையார்மழு வுடையான்பல பூதப்படை யுடையான்
மடமான்விழி யுமைமாதிடம் உடையானெனை யுடையான்
விடையார்கொடி யுடையானிடம் வீழிம்மிழ லையே.
557 / 66
திருப்புகலியும் திருவீழிமிழலையும் பண் - நட்டபாடை
மைம் மரு பூங்குழல் என்று எடுத்து மாறில் பெரும் திருத்தோணி தன் மேல்
கொம்மை முலையினாள் கூட நீடு கோலம் குலாவு மிழலை தன்னுள்
செம்மை தரு விண் இழிந்த கோயில் திகழ்ந்தபடி இது என் கொல் என்று
மெய்ம்மை விளங்கும் திருப்பதிகம் பாடி மகிழ்ந்தனர் வேதவாயர்
மைம்மரு பூங்குழல் கற்றைதுற்ற
வாணுதல் மான்விழி மங்கையோடும்
பொய்ம்மொழி யாமறை யோர்களேத்தப்
புகலி நிலாவிய புண்ணியனே
எம்மிறை யேயிமை யாதமுக்கண்
ஈசவென்நேச விதென்கொல் சொல்லாய்
மெய்ம்மொழி நான்மறை யோர்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.
570 / 408
திருவீழிமிழலை பண் - குறிஞ்சி
மற்றை நாள் தம்பிரான் கோயில் புக்கு வாசி தீர்த்து அருளும் எனப் பதிகம் பாடிப்
பெற்றபடி நல் காசு கொண்டு மாந்தர் பெயர்ந்து போய் ஆவண வீதியினில் காட்ட
நல் தவத்தீர் இக் காசு சால நன்று வேண்டுவன நாம் தருவோம் என்று நல்க
அற்றை நாள் தொடங்கி நாள் கூறு தன்னில் அடியவரை அமுது செய்வித்து ஆர்வம் மிக்கார்
வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே.
587 / 551
திருமறைக்காடு - கதவடைக்கப்பாடியபதிகம் பண் - இந்தளம்
அன்று அரசு அருளிச் செய்ய அருமறைப் பிள்ளையாரும்
வென்றி வெள் விடையார் தம்மை விருப்பினால் சதுரம் என்னும்
இன் தமிழ்ப் பதிகப் பாடல் இசைத்திட இரண்டு பாலும்
நின்ற அக் கதவு காப்பு நிரம்பிட அடைத்தது அன்றே
சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்
மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
இதுநன் கிறைவைத் தருள்செய்க எனக்குன்
கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே
596 / 547
திருவாய்மூர் பண் - நட்டராகம்
அந்நிலை அணைந்த போதில் அம்பிகை உடனே கூட
மன்னிய ஆடல் காட்டத் தளர் இளவள ரும் பாடிச்
சென்னியால் வணங்கி வாய்மூர் அரசொடும் சென்று புக்கு அங்கு
இன் இயல்பு உற முன் கூடி இருவரும் போற்றி செய்தார்
தளிரிள வளரென உமைபாடத் தாள மிடவோர் கழல்வீசிக்
கிளரிள மணியர வரையார்த் தாடும் வேடக் கிறிமையார்
விளரிள முலையவர்க் கருள்நல்கி வெண்ணீ றணிந்தோர் சென்னியின்மேல்
வளரிள மதியமொ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.
616 / 743
பொது (கோளறு திருப்பதிகம்) பண் - பியந்தைக்காந்தாரம்
அரசர் அருளிச் செய்கிறார் பிள்ளாய் அந்த அமண் கையர் வஞ்சனைக்கு ஓர் அவதி இல்லை
உரை செய்வது உளது உறு கோள் தானும் தீய எழுந்து அருள உடன்படுவது ஒண்ணாது என்ன
பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால் பழுது அணையாது எனப் பகர்ந்து பரமர் செய்ய
விரை செய் மலர்த்தாள் போற்றி புகலி வேந்தர் வேய் உறு தோளியை எடுத்து விளம்பினாரே
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
663 / 580
திருஆலவாய் பண் - புறநீர்மை
தொண்டர்தாம் போற்றிக் காட்டிடக் கண்டு துணைமலர்க் கரம் குவித்து அருளி
மண்டு பேரன்பால் மண்மிசைப் பணிந்து மங்கையர்க்கரசி என்று எடுத்தே
எண் திசையும் பரவும் ஆலவாய் ஆவது இதுவே என்று இருவர் தம் பணியும்
கொண்டமை சிறப்பித்து அருளி நல் பதிகம் பாடினார் குவலயம் போற்ற
மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழ லுருவன் பூதநா யகனால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே.
667 / 566
திருஆலவாய் பண் - குறிஞ்சி
நீல மா மிடற்று ஆலவாயான் என நிலவும்
மூலம் ஆகிய திரு இருக்குக் குறள் மொழிந்து
சீல மாதவத் திருத் தொண்டர் தம் ஒடும் திளைத்தார்
சாலும் மேன்மையில் தலைச்சங்கப் புலவனார் தம்முன்
நீல மாமிடற், றால வாயிலான்
பால தாயினார், ஞாலம் ஆள்வரே.
704,705 / 572
திருவாலவாய் பண் - கௌசிகம்
வெய்ய தீங்கு இது வேந்தன் மேற்று எனும் விதி முறையால்
செய்யனே திரு ஆலவாய் எனும் திருப்பதிகம்
சைவர் வாழ் மடத்து அமணர்கள் இட்ட தீத் தழல் போய்ப்
பையவே சென்று பாண்டியற்கு ஆக எனப் பணித்தார்
பாண்டிமா தேவியார் தமது பொற்பில் பயிலும் நெடு மங்கல நாண் பாதுகாத்தும்
ஆண் தகையார் குலச் சிறையார் அன்பினாலும் அரசன் பால் அபராதம் உறுதலாலும்
மீண்டும் சிவ நெறி அடையும் விதியினாலும் வெண்ணீறு வெப்பு அகலப் புகலி வேந்தர்
தீண்டி இடப் பேறு உடையன் ஆதலாலும் தீப்பிணி பையவே செல்க என்றார்
செய்ய னேதிரு ஆலவாய் மேவிய
ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப்
பொய்ய ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
பைய வேசென்று பாண்டியற் காகவே.
739,740 / 570,575
கான் இடை ஆடுவாரைக் காட்டு மா உரி முன் பாடித்
தேன் அலர் கொன்றையார் தம் திருவுளம் நோக்கிப் பின்னும்
ஊனமில் வேத வேள்வி என்று எடுத்துத் துரையின் மாலை
மானமில் அமணர் தம்மை வாதில் வென்று அழிக்கப்பாடி
ஆலமே அமுதம் ஆக உண்டு வானவர்க்கு அளித்துக்
காலனை மார்க் கண்டர்க்காக் காய்ந்தனை அடியேற்கு இன்று
ஞாலம் நின் புகழே ஆக வேண்டும் நான் மறைகள் ஏத்தும்
சீலமே ஆலவாயில் சிவ பெருமானே என்றார்
திருஆலவாய் பண் - கௌசிகம்
காட்டு மாவ துரித்துரி போர்த்துடல்
நாட்ட மூன்றுடை யாயுரை செய்வனான்
வேட்டு வேள்விசெய் யாவமண் கையரை
ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே.
திருஆலவாய் பண் - பழம்பஞ்சுரம்
வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லி அமணொடு தேரரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
பாதி மாதுட னாய பரமனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
754 / 151
திருப்பிரமபுரம் - திருச்சக்கரமாற்று பண் - காந்தாரம்
பொன்னி வளம் தரு நாட்டுப் புனல் பழனப் புறம் பணை சூழ்
கன்னி மதில் கழுமலம் நாம் கருதும் ஊர் எனச் சிறந்த
பன்னிரண்டு பெயர் பற்றும் பரவிய சொல் திருப்பதிகம்
தென்னவன் முன்பு அருள் செய்தார் திருஞான சம்பந்தர்
பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குருப் பெருநீர்த் தோணி
புரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் புறவஞ் சண்பை
அரன்மன்னு தண்காழி கொச்சை வயமுள்ளிட் டங்காதி யாய
பரமனூர் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமலம் நாம்பரவு மூரே
760 / 569
திருஆலவாய் பண் - கொல்லி
ஞான ஆரமுதம் உண்டார் நல்தவத் திருவை நோக்கி
மானினேர் விழியினாய் கேள் மற்று எனைப் பாலன் என்று
நீ நனி அஞ்ச வேண்டாம் நிலை அமணர்க்கு என்றும்
யான் எளியேன் அலேன் என்று எழும் திருப்பதிகம்பாடி
மானின்நேர்விழி மாதராய்வழு
திக்குமாபெருந் தேவிகேள்
பானல்வாயொரு பாலனீங்கிவன்
என்றுநீபரி வெய்திடேல்
ஆனைமாமலை ஆதியாய
இடங்களிற்பல அல்லல்சேர்
ஈனர்கட்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே.
764 / 567
திருஆலவாய் - திருநீற்றுப்பதிகம் பண் - காந்தாரம்
தென்னவன் நோக்கம் கண்டு திருக்கழு மலத்தார் செல்வர்
அன்னவன் வலப்பால் வெப்பை ஆலவாய் அண்ணல் நீறே
மன்னும் மந்திரமும் ஆகி மருந்துமாய் தீர்ப்பது என்று
பன்னிய மறைகள் ஏத்திப் பகர் திருப்பதிகம் பாடி
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே.
782 / 376
திருநள்ளாறு (பச்சைத்திருப்பதிகம்) பண் - பழந்தக்கராகம்
சாற்றும் மெய்ப் பொருள் தரும் திருமுறையினைத் தாமே
நீற்று வண்கையால் மறித்தலும் வந்து நேர்ந்து உளதால்
நால்தடம் புயத்து அண்ணலார் மருவு நள்ளாறு
போற்றும் அப்பதிகம் போகம் ஆர்த்த பூண் முலையாள்
போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே.
784 / 379
திருநள்ளாறு - திருவிராகம் பண் - சாதாரி
நன்மை உய்க்கும் மெய்ப் பதிகத்தின் நாதன் என்று எடுத்தும்
என்னை ஆள் உடை ஈசன் தன் நாமமே என்றும்
மன்னும் மெய்ப் பொருளாம் எனக் காட்டிட வன்னி
தன்னில் ஆக எனத் தளிர் இள வளர் ஒளி பாடி
தளிரிள வளரொளி தனதெழில் தருதிகழ் மலைமகள்
குளிரிள வளரொளி வனமுலை யிணையவை குலவலின்
நளிரிள வளரொளி மருவுநள் ளாறர்தம் நாமமே
மிளிரிள வளரெரி யிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.
818 / 844
பொது (திருப்பாசுரம்) பண் - கௌசிகம்
மாசு சேர் அமணர் எல்லாம் மதியினில் மயங்கிக் கூற
ஆசிலா நெறியில் சேர்ந்த அரசனும் அவரை விட்டுத்
தேசு உடைப் பிள்ளையார் தம் திருக்குறிப்பு அதனை நோக்கப்
பாசுரம் பாடல் உற்றார் பர சமயங்கள் பாற
தென்னவன் மாறன் தானும் சிரபுரத்துத் தலைவர் தீண்டிப்
பொன் நவில் கொன்றையார் தம் திருநீறு பூசப் பெற்று
முன்னை வல் வினையும் நீங்க முதல்வனை அறியும் தன்மை
உன்னினான் வினைகள் ஒத்துத் துலை என நிற்றலாலே
உலகியல் வேத நூல் ஒழுக்கம் என்பதும்
நிலவு மெய்ந் நெறி சிவ நெறியது என்பதும்
கலதி வாய் அமணர் காண்கிலார்கள் ஆயினும்
பலர் புகழ் தென்னவன் அறியும் பான்மையால்
அந்தணர் தேவர் ஆன் இனங்கள் வாழ்க என்று
இந்த மெய்ம் மொழிப் பயன் உலகம் இன்பு உறச்
சந்த வேள்விகள் முதல் சங்கரர்க்கு முன்
வந்த அர்ச்சனை வழிபாடும் அன்னவாம்
வேள்வி நல் பயன் வீழ் புனல் ஆவது
நாளும் அர்ச்சனை நல் உறுப்பு ஆதலால்
ஆளும் மன்னனை வாழ்த்தியது அர்ச்சனை
மூளும் மற்று இவை காக்கும் முறைமையால்
ஆழ்க தீயது என்று ஓதிற்று அயல் நெறி
வீழ்க என்றது வேறு எல்லாம் அரன் பெயர்
சூழ்க என்றது தொல் உயிர் யாவையும்
வாழி அஞ்சு எழுத்து ஓதி வளர்கவே
சொன்ன வையகமும் துயர் தீர்கவே
என்னும் நீர்மை இக பரத்தில் உயர்
மன்னி வாழும் உலகத்தவர் மாற்றிட
முன்னர் ஞான சம்பந்தர் மொழிந்தனர்
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே. 01
அரிய காட்சியர் என்பது அவ் வாதியைத்
தெரியலாம் நிலையால் தெரியார் என
உரிய அன்பினில் காண்பவர்க்கு உண்மையாம்
பெரிய நல் அடையாளங்கள் பேசினார்
ஆயினும் பெரியார் அவர் என்பது
மேய இவ் இயல்பே அன்றி விண் முதல்
பாய பூதங்கள் பல் உயிர் அண்டங்கள்
ஏயும் யாவும் இவர் வடிவு என்பதாம்
பின்பும் ஆர் அறிவார் அவர் பெற்றியே
என்பது யார் உணர்வான் எனும் சென்று எட்ட ஒணா
மன்பெரும் தன்மையார் என வாழ்த்தினார்
அன்பு சூழ் சண்பை ஆண் தகையார் அவர்
அரிய காட்சிய ராய்த்தம தங்கைசேர்
எரியர் ஏறுகந் தேறுவர் கண்டமுங்
கரியர் காடுறை வாழ்க்கைய ராயினும்
பெரிய ராரறி வாரவர் பெற்றியே. 02
வெந்த சாம்பல் விரை என்பது தமது
அந்தம் இல் ஒளி அல்லா ஒளி எலாம்
வந்து வெம் தற மற்றப் பொடி அணி
சந்த மாக் கொண்ட வண்ணமும் சாற்றினார்
தமக்குத் தந்தையர் தாய் இலர் என்பதும்
அமைத்து இங்கு யாவையும் ஆங்கு அவை வீந்த போது
இமைத்த சோதி அடங்கிப் பின் ஈதலால்
எமக்கு நாதர் பிறப்பு இலர் என்றதாம்
தம்மையே சிந்தியார் எனும் தம்மை தான்
மெய்ம்மை ஆகி விளங்கு ஒளி தாம் என
இம்மையே நினைவார் தம் இருவினைப்
பொய்ம்மை வல் இருள் போக்குவர் என்றதாம்
எந்தையார் அவர் எவ்வகையார் கொல் என்று
இந்த வாய்மை மற்ற எப்பொருள் கூற்றினும்
முந்தையோரை எக் கூற்றின் மொழிவது என்று
அந்தண் பூந்தராய் வேந்தர் அருளினார்
வெந்த சாம்பல் விரையெனப் பூசியே
தந்தை யாரொடு தாயிலர் தம்மையே
சிந்தி யாஎழு வார்வினை தீர்ப்பரால்
எந்தை யாரவர் எவ்வகை யார்கொலோ. 03
ஆதி ஆட்பால் அவர்க்கு அருளும் திறம்
நாதன் மாட்சிமை கேட்க நவிலுங் கால்
ஓதும் எல்லை உலப்பில ஆதலின்
யாதும் ஆராய்ச்சி இல்லையாம் என்றதாம்
அன்ன ஆதலில் ஆதியார் தாள் அடைந்து
இன்ன கேட்கவே ஏற்ற கோள் பலவும்
முன்னை வல் வினையும் முடிவு எய்தும் அத்
தன்மையார்க்கு என்றனர் சண்பை காவலர்
ஆட்பா லவர்க் கருளும் வண்ணமும் ஆதிமாண்புங்
கேட்பான் புகில்அள வில்லை கிளக்க வேண்டா
கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை
தாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்க தக்கார். 04
மன்னும் ஏதுக்களால் எனும் வாய்மைதான்
அன்னது ஒப்பு வேறு இன்மையில் சங்கரன்
இன்ன தன்மையை ஏது எடுத்துக் காட்டு
அன்ன ஆற்றால் அளப்பு இலன் என்றதாம்
தோன்று காட்சி சுடர் விட்டு உளன் என்பது
ஆன்ற அங்கிப் புறத்து ஒளியாய் அன்பில்
ஊன்ற உள் எழும் சோதியாய் நின்றனன்
ஏன்று காண்பார்க்கு இது பொருள் என்ற தாம்
மாதுக்கம் நீக்கல் உறுவீர் மனம் பற்றும் என்பது
ஆதிச் சுடர்ச் சோதியை அன்பின் அகத்துள் ஆக்கிப்
போதித்த நோக்கு உற்று ஒழியாமல் பொருந்தி வாழ்ந்து
போதித்த பந்தப் பிறப்பின் நெறி பேர்மின் என்றாம்
ஈண்டு சாதுக்கள் என்று எடுத்து ஓதிற்று
வேண்டும் வேட்கைய எல்லாம் விமலர்தாள்
பூண்ட அன்பினில் போற்றுவீர் சார்மின் என்று
ஆண்ட சண்பை அரசர் அருளினார்
ஏதுக்க ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர்விட் டுளன் எங்கள்சோதி
மாதுக்கம் நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே. 05
ஆடும் எனவாம் திருப்பாட்டின் அமைத்த மூன்றும்
நீடும் புகழோ பிறர் துன்பம் நீத்தற்கோ என்று
தேடும் உணர்வீர் உலகுக்கு இவை செய்த ஈசர்
கூடும் கருணைத் திறம் என்றனர் கொள்கை மேலோர்
ஆடும் மெனவும் அருங்கூற்றம் உதைத்து வேதம்
பாடும் மெனவும் புகழல்லது பாவம் நீங்கக்
கேடும் பிறப்பும் அறுக்கும் மெனக்கேட்டீ ராகில்
நாடுந் திறத்தார்க் கருளல்லது நாட்ட லாமே. 06
கருதும் கடிசேர்ந்த என்னும் திருப் பாட்டில் ஈசர்
மருவும் பெரும் பூசை மறுத்தவர்க் கோறல் முத்தி
தரு தன்மையது ஆதல் சண்ணீசர் தம் செய்கை தக்கோர்
பெரிதும் சொலக் கேட்டனம் என்றனர் பிள்ளையார் தாம்
கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல
படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு
முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்தி
அடிசேர்ந்த வண்ணம் அறிவார் சொலக்கேட்டு மன்றே. 07
வேத முதல்வன் எனும் மெய்த் திருப்பாட்டினினேர்
ஆதி உலகோர் இடர் நீங்கிட ஏத்த ஆடும்
பாதம் முதலாம் பதிணெண் புராணங்கள் என்றே
ஓது என்று உரை செய்தனர் யாவும் ஓதாது உணர்ந்தோர்
வேத முதல்வன் முதலாக விளங்கி வையம்
ஏதப் படாமை யுலகத்தவர் ஏத்தல் செய்யப்
பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த
சூதன் ஒலிமாலை யென்றே கலிக்கோவை சொல்லே. 08
பாவுற்ற பார் ஆழி வட்டத் திருப்பாட்டின் உண்மை
காவல் தொழிலான் எனும் கண்ணனும் காவல் பெற்றது
யாவர்க்கும் மேல் ஆய ஈசன் அருள் ஆழி பெற்று
மேவுற்ற சீர் உற்றது என்றனர் வேத வாயர்
பாராழி வட்டம் பகையால் நலிந்தாட்ட ஆடிப்
பேராழி யானதிடர் கண்டருள் செய்தல் பேணி
நீராழி விட்டேறி நெஞ்சிடங் கொண்ட வர்க்குப்
போராழி யீந்த புகழும் புகழுற்ற தன்றே. 09
மாலா யவன் என்ன வரும் திருப்பாட்டில் மாலும்
தோலா மறை நான்முகனும் தொடர்வாம் அமரர்
ஏலா வகை சுட்ட நஞ்சு உண்டு இறவாமை காத்த
மேலாம் கருணைத் திறம் வெம் குருவேந்தர் வைத்தார்
மாலா யவனும் மறைவல்ல நான் முகனும்
பாலாய தேவர்பக ரில்லமு தூட்டல் பேணிக்
காலாய முந்நீர் கடைந்தார்க் கரிதா யெழுந்த
ஆலாலம் உண்டங்கம ரர்க்கருள் செய்த தாமே. 10
ஆன அற்று அன்றி என்ற அத்திருப் பாட்டில் கூடல்
மா நகரத்துச் சங்கம் வைத்தவன் தேற்றத் தேறா
ஈனர்கள் எல்லைக் கிட்ட ஏடு நீர் எதிர்ந்து செல்லில்
ஞானம் ஈசன் பால் அன்பே என்றனர் ஞானம் உண்டார்
அற்றன்றி அந்தண் மதுரைத் தொகை யாக்கினானுந்
தெற்றென்று தெய்வந் தெளியார் கரைக்கோலை தெண்ணீர்ப்
பற்றின்றிப் பாங்கெதிர் வினூரவும் பண்பு நோக்கில்
பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே. 11
வெறியார் பொழில் சண்பையர் வேந்தர் மெய்ப் பாசுரத்தைக்
குறி ஏறிய எல்லை அறிந்து கும்பிட்டேன் அல்லேன்
சிறியேன் அறிவுக்கு அவர் தந்து திருப்பாதம் தந்த
நெறியே சிறிது யான் அறி நீர்மை கும்பிட்டேன் அன்பால்
நல்லார்கள் சேர்புகலி ஞானசம் பந்தன் நல்ல
எல்லார் களும்பரவும் ஈசனை யேத்து பாடல்
பல்லார் களும்மதிக்கப் பாசுரஞ் சொன்ன பத்தும்
வல்லார்கள் வானோ ருலகாளவும் வல்ல ரன்றே. 12
850 / 587
திருவேடகம் பண் - கொல்லி
ஏடகம் பிள்ளையார் தாம் வன்னி என்று எடுத்துப் பாடக்
கூடிய நீரில் ஏடு குலச்சிறை யாரும் கூடிக்
காடு இடமாக ஆடுங்கண்ணுதல் கோயில்மாடு
சீர் நடவுட் புக்கு நின்ற ஏடு எடுத்துக் கொண்டார்
வன்னியும் மத்தமும் மதிபொதி சடையினன்
பொன்னியல் திருவடி புதுமல ரவைகொடு
மன்னிய மறையவர் வழிபட அடியவர்
இன்னிசை பாடலர் ஏடகத் தொருவனே.
865,866 / 574
திருவாலவாய் பண் - கௌசிகம்
கைகளும் தலை மீது ஏறக் கண்ணில் ஆனந்த வெள்ளம்
மெய் எலாம் பொழிய வேத முதல்வரைப் பணிந்து போற்றி
ஐயனே அடியனேனை அஞ்சல் என்று அருள வல்ல
மெய்யனே என்று வீடல் ஆலவாய் விளம்பல் உற்றார்
ஒன்று வேறு உணர்வும் இல்லேன் ஒழிவற நிறைந்த கோலம்
மன்றில் நான் மறைகள் ஏத்த மானுடர் உய்ய வேண்டி
நின்று நீ ஆடல் செய்கை நினைப்பதே நியமம் ஆகும்
என்று பூம் புகலி மன்னர் இன் தமிழ்ப் பதிகம் பாட
வீடலால வாயிலாய் விழுமியார்கள் நின்கழல்
பாடலால வாயிலாய் பரவநின்ற பண்பனே
காடலால வாயிலாய் கபாலிநீள் கடிம்மதில்
கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே.
பொன்தயங் கிலங்கொளிந் நலங்குளிர்ந்த புன்சடை
பின்தயங்க ஆடுவாய் பிஞ்ஞகா பிறப்பிலீ
கொன்றையம் முடியினாய் கூடல்ஆல வாயிலாய்
நின்றயங்கி யாடலே நினைப்பதே நியமமே.
880,881 / 138
திருக்கழுமலம் பண் - கொல்லி
இருந்தவத்தோர் அவர் முன்னே இணை மலர்க்கை குவித்து அருளி
அரும் தவத்தீர் எனை அறியாப் பருவத்தே எடுத்து ஆண்ட
பெரும் தகை எம் பெருமாட்டி உடன் இருந்ததே என்று
பொருந்து புகழ்ப் புகலியின் மேல் திருப் பதிகம் போற்றி இசைத்தார்
மண்ணின் நல்ல என்று எடுத்து மனத்து எழுந்த பெரு மகிழ்ச்சி
உள் நிறைந்த காதலினால் கண் அருவி பாய்ந்து ஒழுக
அண்ணலார் தமைவினவித் திருப்பதிகம் அருள் செய்தார்
தண் நறும்பூஞ் செங்கமலத்தார் அணிந்த தமிழ் விரகர்
மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலைக்
கண்ணின்நல் லகதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணின்நல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே.
898 / 531
திருக்கொள்ளம் பூதூர் பண் - காந்தார பஞ்சமம்
தேவர் பிரான் அமர்ந்த திருக்கொள்ளம் பூதூர் எதிர் தோன்றத் திரு உள்ளம் பணியச் சென்று
மேவுதலால் ஓடங்கள் விடுவார் இன்றி ஒழிந்திடவும் மிக்கதோர் விரைவால் சண்பைக்
காவனார் ஓடத்தின் கட்டு அவிழ்த்துக் கண் நுதலான் திருத்தொண்டர் தம்மை ஏற்றி
நாவலமே கோலாக அதன் மேல் நின்று நம்பர் தமைக் கொட்டம் என நவின்று பாட
கொட்ட மேகமழுங் கொள்ளம் பூதூர்
நட்டம் ஆடிய நம்பனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.
902 / 373
திருநள்ளாறும் திருவாலவாயும் பண் - நட்டபாடை
நீடு திருத் தொண்டர் புடை சூழ அம்கண் நித்தில யானத்து இடை நின்று இழிந்து சென்று
பீடு உடைய திருவாயில் பணிந்து புக்குப் பிறை அணிந்த சென்னியர் மன்னும் கோயில்
மாடு வலம் கொண்டு உள்ளால் மகிழ்ந்து புக்கு மலர்க் கரங்கள் குவித்து இறைஞ்சி வள்ளலாரைப்
பாடக மெல் அடி எடுத்துப் பாடி நின்று பரவினார் கண் அருவி பரந்து பாய
பாடக மெல்லடிப் பாவையோடும்
படுபிணக் காடிடம் பற்றிநின்று
நாடக மாடுநள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
சூடக முன்கை மடந்தைமார்கள்
துணைவரொ டுந்தொழு தேத்திவாழ்த்த
ஆடக மாடம் நெருங்குகூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
954 / 164
திருப்பிரமபுரம் பண் - பழம்பஞ்சுரம்
முற்றும் மெய் எலாம் புளகங்கள் முகிழ்த்து எழ முகந்து கண் களிகூரப்
பற்றும் உள்ளம் உள் அலைத்து எழும் ஆனந்தம் பொழிதரப் பணிந்து ஏத்தி
உற்றுமை சேர்வது எனும் திருவியமகம் உவகையால் எடுத்து ஓதி
வெற்றியாக மீனவன் அவை எதிர் நதி மிசை வருகரன் என்பார்
உற்றுமை சேர்வது மெய்யினையே உணர்வது நின்னருள் மெய்யினையே
கற்றவர் காய்வது காமனையே கனல்விழி காய்வது காமனையே
அற்றம் மறைப்பதும் உன்பணியே அமரர்கள் செய்வதும் உன்பணியே
பெற்று முகந்தது கந்தனையே பிரம புரத்தை யுகந்தனையே.
பருமதில் மதுரைமன் அவையெதிரே பதிகம தெழுதிலை யவையெதிரே
வருநதி யிடைமிசை வருகரனே வசையொடு மலர்கெட வருகரனே
கருதலில் இசைமுரல் தருமருளே கழுமலம் அமரிறை தருமருளே
மருவிய தமிழ்விர கனமொழியே வல்லவர் தம்மிடர் திடமொழியே.
963 / 650
திருப்பாதிரிப்புலியூர் பண் - செவ்வழி
கன்னி மாவனம் காப்பு என இருந்தவர் கழல் இணை பணிந்து அங்கு
முன்ன மா முடக்கு கான் முயற்கு அருள் செய்த வண்ணமும் மொழிந்து ஏத்தி
மன்னுவார் பொழில் திரு வடுகூரினை வந்து எய்தி வணங்கிப்போய்
பின்னுவார் சடையார் திருவக்கரை பிள்ளையார் அணைவுற்றார்
முன்னம்நின்ற முடக்கால் முயற்கருள் செய்துநீள்
புன்னைநின்று கமழ்பா திரிப்புலி யூருளான்
தன்னைநின்று வணங்குந் தனைத்தவ மில்லிகள்
பின்னைநின்ற பிணியாக் கையைப் பெறுவார்களே.
965 / 625
திருவதிகை வீரட்டம் பண் - தக்கராகம்
ஆதி தேவர் அங்கு அமர்ந்த வீரட்டானம் சென்று அணைபவர் முன்னே
பூதம் பாட நின்று ஆடுவார் திரு நடம் புலப்படும் படி காட்ட
வேத பாலகர் பணிந்து மெய் உணர்வுடன் உருகிய விருப்போடும்
கோது இலா இசை குலவு குண்டைக்குறள் பூதம் என்று எடுத்து ஏத்தி
குண்டைக் குறட்பூதங் குழும அனலேந்திக்
கெண்டைப் பிறழ்தெண்ணீர்க் கெடில வடபக்கம்
வண்டு மருள்பாட வளர்பொன் விரிகொன்றை
விண்ட தொடையலா னாடும்வீரட் டானத்தே.
967 / 656
திருவாமாத்தூர் பண் - சீகாமரம்
சென்று அணைந்து சிந்தையின் மகிழ் விருப்பொடு திகழ் திருவாமாத்தூர்ப்
பொன்ற அங்கு பூங்கொன்றையும் வன்னியும் புனைந்தவர் அடி போற்றிக்
குன்ற வார் சிலை எனும் திருப்பதிகம் மெய் குலவிய இசை பாடி
நன்றும் இன்புறப் பணிந்து செல்வார் திருக்கோவலூர் நகர் சேர்ந்தார்
குன்ற வார்சிலை நாண ராவரி
வாளி கூரெரி காற்றின் மும்மதில்
வென்றவா றெங்ஙனே விடையேறும் வேதியனே
தென்ற லார்மணி மாட மாளிகை
சூளிகைக் கெதிர் நீண்ட பெண்ணைமேல்
அன்றில் வந்தணையும் ஆமாத்தூர் அம்மானே.
970 / 658
திருவண்ணாமலை பண் - நட்டபாடை
அண்ணாமலை அங்கு அமரர்பிரான் வடிவு போன்று தோன்றுதலும்
கண்ணால் பருகிக் கை தொழுது கலந்து போற்றும் காதலினால்
உண்ணா முலையாள் எனும் பதிகம் பாடி தொண்டருடன் போந்து
தெண்ணீர் முடியார் திருவண்ணாமலைச் சென்று சேர்வுற்றார்
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.
972 / 660
திருவண்ணமலை பண் - தக்கேசி
ஆதி மூர்த்தி கழல் வணங்கி அங்கண் இனிதின் அமரும் நாள்
பூத நாதர் அவர் தம்மைப் பூவார் மலரால் போற்றி இசைத்து
காதலால் அத் திருமலையில் சில நாள் வைகிக் கமழ் கொன்றை
வேத கீதர் திருப்பதிகள் பிறவும் பணியும் விருப்புறுவார்
பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார்வானோர்கள்
மூவார்புரங்கள் எரித்தஅன்று மூவர்க்கருள்செய்தார்
தூமாமழைநின் றதிரவெருவித் தொறுவின்நிரையோடும்
ஆமாம்பிணைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.
980 / 676
திருவோத்தூர் பண் - பழந்தக்கராகம்
விரும்பு மேன்மைத் திருக் கடைக் காப்பு அதனில் விமலர் அருளாலே
குரும்பை ஆண்பனை ஈனும் என்னும் வாய்மை குலவு தலால்
நெருங்கும் ஏற்றுப் பனை எல்லாம் நிறைந்த குலைகளாய்க் குரும்பை
அரும்பு பெண்ணை ஆகி இடக் கண்டோ ர் எல்லாம் அதிசயித்தார்
குரும்பை யாண்பனை யின்குலை யோத்தூர்
அரும்பு கொன்றை யடிகளைப்
பெரும்பு கலியுள் ஞானசம் பந்தன்சொல்
விரும்பு வார்வினை வீடே.
995 / 663
திருக்கச்சி ஏகம்பம் பண் - இந்தளம்
பல முறையும் பணிந்து எழுந்து பங்கயச் செங்கை முகிழ்ப்ப
மலரும் முகம் அளித்த திரு மணிவாயால் மறையான் என்று
உலகுய்ய எடுத்து அருளி உருகிய அன்பு என்பு உருக்க
நிலவு மிசை முதற்று ஆளம் நிரம்பிய நீர்மையில் நிகழ
மறையானை மாசிலாப் புன்சடை மல்குவெண்
பிறையானைப் பெண்ணொடா ணாகிய பெம்மானை
இறையானை யேர்கொள்கச் சித்திரு வேகம்பத்
துறைவானை யல்லதுள் காதென துள்ளமே.
1010 / 689
திருவாலங்காடு பண் - தக்கராகம்
துஞ்ச வருவார் என்றே எடுத்த ஓசைச் சுருதி முறை வழுவாமல் தொடுத்த பாடல்
எஞ்சல் இலா வகை முறையே பழையன் ஊரார் இயம்பு மொழி காத்த கதை சிறப்பித்து ஏத்தி
அஞ்சன மா கரி உரித்தார் அருளாம் என்றே அருளும் வகை திருக்கடைக் காப்பு அமையச்சாத்திப்
பஞ்சுரமாம் பழைய திறம் கிழமை கொள்ளப் பாடினார் பார் எல்லாம் உய்ய வந்தார்
துஞ்ச வருவாருந் தொழுவிப்பாரும் வழுவிப்போய்
நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப்பாரும் முனைநட்பாய்
வஞ்சப் படுத்தொருத்தி வாழ்நாள்கொள்ளும் வகைகேட்
டஞ்சும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.
1012 / 691
திருப்பாசூர் பண் - காந்தாரம்
திருப்பாசூர் அணைந்து அருளி அங்கு மற்றச் செழும் பதியோர் எதிர் கொள்ளச் சென்று புக்குப்
பொருப்பு அரையன் மடப்பாவை இடப் பாகத்துப் புராதனர் வேய் இடம் கொண்ட புனிதர் கோயில்
விருப்பின் உடன் வலம் கொண்டு புக்குத் தாழ்ந்து வீழ்ந்து எழுந்து மேனி எல்லாம் முகிழ்ப்ப நின்றே
அருள் கருணைத் திருவாளன் நாமம் சிந்தை இடையார் என்று இசைப் பதிகம் அருளிச் செய்தார்
சிந்தை யிடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார்
வந்து மாலை வைகும் போழ்தென் மனத்துள்ளார்
மைந்தர் மணாளர் என்ன மகிழ்வா ரூர்போலும்
பைந்தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே.
1020 / 696
திருக்காளத்தி பண் - சாதாரி
வந்து அணைந்த மாதவத்தோர் வணங்கித் தாழ்ந்து மறைவாழ்வே சைவ சிகாமணியேதோன்றும்
இந்த மலை காளனோடு அத்தி தம்மில் இகலி வழிபாடு செய இறைவர் மேவும்
அந்தமில் சீர் காளத்தி மலையாம் என்ன அவனிமேல் பணிந்து எழுந்து அஞ்சலி மேல் கொண்டு
சிந்தை களி மகிழ்ச்சி வரத் திரு விராகம் வானவர்கள் தானவர் என்று எடுத்துச் செல்வார்
வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்ததொரு மாகடல்விடந்
தானமுது செய்தருள் புரிந்தசிவன் மேவுமலை தன்னைவினவில்
ஏனமின மானினொடு கிள்ளைதினை கொள்ளஎழி லார்க்கவணினாற்
கானவர்தம் மாமகளிர் கனகமணி விலகுகா ளத்திமலையே.
1028 / 695
திருக்காளத்தி பண் - கொல்லி
தென் திசையில் கயிலை எனும் திருக்காளத்தி போற்றி இனிது அமர்கின்றார் திரை சூழ் வேலை
ஒன்று திரு ஒற்றியூர் உறைவர் தம்மை இறைஞ்சுவது திரு உள்ளத்து உன்னி அங்கண்
இன் தமிழின் விரகர் அருள் பெற்று மீள்வார் எந்தையார் இணை அடி என் மனத்த என்று
பொன் தரளம் கொழித்து இழி பொன் முகலி கூடப் புனைந்த திருப்பதிக இசை போற்றிப் போந்தார்
சந்தமார் அகிலொடு சாதிதேக் கம்மரம்
உந்துமா முகலியின் கரையினில் உமையொடும்
மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி
எந்தையார் இணையடி யென்மனத் துள்ளவே.
1031 / 699
திருவொற்றியூர் பண் - பஞ்சமம்
மிக்க திருத் தொண்டர் தொழுது அணையத் தாமும் தொழுது இழிந்து விடையவன் என்று எடுத்துப் பாடி
மைக் குலவு கண்டத்தார் மகிழும் கோயில் மன்னு திருக் கோபுரத்து வந்து தாழ்ந்து
தக்க திருக் கடைக் காப்புச் சாற்றித் தேவர் தம் பெருமான் திருவாயில் ஊடு சென்று
புக்கருளி வலம் கொண்டு புனிதர் முன்பு போற்று எடுத்துப் படியின் மேல் பொருந்த வீழ்ந்தார்
விடையவன் விண்ணுமண்ணுந் தொழநின்றவன் வெண்மழுவாட்
படையவன் பாய்புலித்தோல் உடைகோவணம் பல்கரந்தைச்
சடையவன் சாமவேதன் சசிதங்கிய சங்கவெண்தோ
டுடையவன் ஊனமில்லி யுறையும்மிடம் ஒற்றியூரே.
1088, 1090 / 704
திருமயிலாப்பூர் பண் - சீகாமரம்
மன்னுவார் சடையாரை முன் தொழுது மட்டு இட்ட
என்னும் நல் பதிகத்தினில் போதியோ என்னும்
அன்ன மெய்த் திருவாக்கு எனும் அமுதம் அவ்வங்கம்
துன்ன வந்து வந்து உருவமாய்த் தொக்கது அக்குடத்துள்
தேற்றமில் சமண் சாக்கியத் திண்ணரிச் செய்கை
ஏற்றது அன்று என எடுத்து உரைப்பார் என்ற போது
கோல் தொடிச் செங்கை தோற்றிடக் குடம் உடைந்து எழுவாள்
போற்று தாமரைப் போது அவிழ்ந்து எழுந்தனள் போன்றாள்
மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.
உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப் போர்க்கும்
இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான்
பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்.
1128 / 710
திருவிடைச்சுரம் பண் - குறிஞ்சி
இருந்த இடைச் சுரம் மேவும் இவர் வண்ணம் என்னே என்று
அரும் தமிழின் திருப்பதிகத்து அலர் மாலை கொடு பரவித்
திருந்து மனம் கரைந்து உருகத் திருக்கடைக் காப்புச் சாத்திப்
பெரும் தனி வாழ்வினைப் பெற்றார் பேர் உலகின் பேறு ஆனார்
வரிவள ரவிரொளி யரவரை தாழ
வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக்
கரிவளர் தருகழல் கால்வல னேந்திக்
கனலெரி யாடுவர் காடரங் காக
விரிவளர் தருபொழில் இனமயி லால
வெண்ணிறத் தருவிகள் திண்ணென வீழும்
எரிவள ரினமணி புனமணி சாரல்
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.
1131 / 713
திருக்கழுக்குன்று பண் - குறிஞ்சி
திருக்கழுக் குன்று அமர்ந்த செங்கனகத் தனிக் குன்றைப்
பெருக்க வளர் காதலினால் பணிந்து எழுந்து பேராத
கருத்தின் உடன் காதல் செயும் கோயில் கழுக்குன்று என்று
திருப்பதிகம் புனைந்து அருளிச் சிந்தை நிறை மகிழ் உற்றார்
தோடுடையானொரு காதில்தூய குழைதாழ
ஏடுடையான் தலைகலனாக இரந்துண்ணும்
நாடுடையான் நள்ளிருள்ஏம நடமாடுங்
காடுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
1133 / 714
திருஅச்சிறுபாக்கம் பண் - குறிஞ்சி
ஆதி முதல் வரை வணங்கி ஆட்சி கொண்டார் என மொழியும்
கோயில் திருப்பதிக இசை குலாவிய பாடலில் போற்றி
மாதவத்து முனிவருடன் வணங்கி மகிழ்ந்து இன்புற்றுத்
தீது அகற்றும் செய்கையினார் சில நாள் அமர்ந்து அருளி
பொன்றிரண் டன்ன புரிசடை புரள
பொருகடற் பவளமொ டழல்நிறம் புரையக்
குன்றிரண் டன்ன தோளுடை யகலங்
குலாயவெண் ணூலொடு கொழும்பொடி யணிவர்
மின்றிரண் டன்ன நுண்ணிடை யரிவை
மெல்லிய லாளையோர் பாகமாப் பேணி
அன்றிரண் டுருவ மாயவெம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.
1147 / 47
திருவேணுபுரம் பண் - நட்டபாடை
மன்னும் இசை மொழி வண்டார் குழல் அரிவை என்று எடுத்து
மின்னு சுடர் மாளிகை விண் தாங்குவ போல் வேணுபுரம்
என்னும் இசைச் சொல் மாலை எடுத்து இயம்பி எழுந்து அருளிப்
புன்னை மணம் கமழ் புறவப் புறம்பு அணையில் வந்து அணைந்தார்
வண்டார்குழ லரிவையொடும் பிரியாவகை பாகம்
பெண்டான்மிக ஆனான்பிறைச் சென்னிப்பெரு மானூர்
தண்டாமரை மலராளுறை தவளந்நெடு மாடம்
விண்டாங்குவ போலும்மிகு வேணுபுர மதுவே.
1245 / 13
திருநல்லூர்ப் பெருமணம் பண் - அந்தாளிக் குறிஞ்சி
காதல் மெய்ப் பதிகம் கல்லூர்ப் பெருமணம் எடுத்துக் கண்டோ ர்
தீதுறு பிறவிப் பாசம் தீர்த்தல் செம் பொருளாகக் கொண்டு
நாதனே நல்லூர் மேவும் பெரு மண நம்பனே உன்
பாத மெய்ந் நீழல் சேரும் பருவம் ஈது என்று பாட
கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில
சொல்லூர்ப் பெருமணஞ் சூடல ரேதொண்டர்
நல்லூர்ப் பெருமணம் மேயநம் பானே.
1248 / 749
பொது (நமச்சிவாயத் திருப்பதிகம்) பண் - கௌசிகம்
ஞான மெய்ந் நெறி தான் யார்க்கும் நமச்சிவாய அச் சொலாம் என்று
ஆன சீர் நமச்சிவாயத் திருப்பதிகத்தை அங்கண்
வானமும் நிலமும் கேட்க அருள் செய்து இம் மணத்தில் வந்தோர்
ஈனமாம் பிறவி தீர யாவரும் புகுக என்ன
காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.
திருநாவுக்கரசர்
(பெரியபுராணத்தில் திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் பாடல் எண் / திருநாவுக்கரசர் தேவாரம் பக்க எண்)
70, 75 / 376
திருவதிகைவீரட்டானம் பண் - கொல்லி
நீற்றால் நிறைவாகிய மேனியுடன் நிறைஅன்புறு சிந்தையில் நேசமிக
மாற்றார்புரம் மாற்றிய வேதியர் மருளும்பிணி மாயை அறுத்திடுவான்,
"கூற்றாயின வாறுவிலக்ககிலீர்" எனநீடிய கோதில் திருப் பதிகம்,
போற்றாலுல கேழின் வருந்துயரும் போமாறெதிர் நின்று புகன்றனரால்.
கூற்றாயின வாறுவி லக்ககிலீர்
கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.
போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல்
புறங்காடரங் காநட மாடவல்லாய்
ஆர்த்தானரக் கன்றனை மால்வரைக்கீழ்
அடர்த்திட்டருள் செய்த வதுகருதாய்
வேர்த்தும்புரண் டும்விழுந் தும்மெழுந்தால்
என்வேதனை யான விலக்கியிடாய்
ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.
93 / 532
பொது (மறுமாற்றத் திருத்தாண்டகம்) திருத்தாண்டகம்
"நாமார்க்கும் குடியல்லோம்" என்றெடுத்து நான்மறையின்
கோமானை நதியினுடன் குளிர்மதிவாழ் சடையானைத்
தேமாலைச் செந்தமிழின் செழுந்திருத்தாண் டகம்பாடி
"ஆமாறு நீரழைக்கும் அடைவிலம்" என் றருள் செய்தார்.
நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்திலிடர்ப்படோ ம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளு ந்துன்ப மில்லை,
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான சங்கரன்நற்
சங்கவெண் குழையோர் காதிற் கோமற்கே
நாமென்றும் மீளா ஆளாய்க் கொய்ம் மலர்ச்சே
வடியிணையே குறுகி னோமே.
98 / 498
பொது திருக்குறுந்தொகை
வெய்யநீற் றறையதுதான் வீங்கிளவே னிற்பருவம்
தைவருதண் தெண்றல்அணை தண்கழு நீர் தடம்போன்று
மொய்யொளிவெண் ணிலவளர்ந்து முரன்றயாழ் ஒலியினதாய்
ஐயர்திரு வடிநீழல் அருளாகிக் குளிர்ந்ததே
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.
104 / 213
திருநனிபள்ளி திருநேரிசை
நஞ்சும் அமுது ஆம் எங்கள் நாதன் அடியார்க்கு என்று
வஞ்சம் மிகு நெஞ்சு உடையார் வஞ்சனையாம் படி அறிந்தே
செஞ்சடையார் சீர் விளக்கும் திறல் உடையார் தீ விடத்தால்
வெஞ்சமணர் இடுவித்த பால் அடிசில் மிசைந்து இருந்தார்
துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந் திராதே
அஞ்செழுத் தோதின் நாளும் அரனடிக் கன்ப தாகும்
வஞ்சனைப் பால்சோ றாக்கி வழக்கிலா அமணர் தந்த
நஞ்சமு தாக்கு வித்தார் நனிபள்ளி அடிக ளாரே.
115, 116 / 378
திருவதிகை வீரட்டானம் பண் - காந்தாரம்
அண்ணல் அருந்தவ வேந்தர் ஆனைதம் மேல்வரக் கண்டு
விண்ணவர் தம்பெரு மானை விடையுகந் தேறும் பிரானைச்
"சுண்ணவெண் சந்தனச் சாந்து" தொடுத்த திருப்பதி கத்தை
மண்ணுல குய்ய எடுத்து மகிழ்வுட னேபாடு கின்றார்.
வஞ்சகர் விட்ட சினப் போர் மதவெங் களிற்றினை நோக்கிச்
செஞ்சடை நீள் முடிக் கூத்தர் தேவர்க்கும் தேவர் பிரானார்
வெஞ்சுடர் மூவிலைச் சூல வீரட்டர் தம் அடியோம் நாம்
அஞ்சுவது இல்லை என்று என்றே அருந்தமிழ் பாடி உறைந்தார்
சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும்
வண்ண உரிவை யுடையும் வளரும் பவள நிறமும்
அண்ணல் அரண்முர ணேறும் அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலும் உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.
126 / 473
பொது (நமச்சிவாயத் திருப்பதிகம்) பண் - காந்தார பஞ்சமம்
"சொற்றுணை வேதியன்" என்னுந் தூய்மொழி
நற்றமிழ் மாலையா "நமச்சி வாய" என்(று)
அற்றமுன் காக்கும்அஞ் செழுத்தை அன்பொடு
பற்றிய உணர்வினால் பதிகம் பாடினார்.
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதோழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
134 / 408
திருப்பாதிரிப் புலியூர் திருநேரிசை
"ஈன்றாளு மாயெனக் கெநந்தையு மாகி" எனஎடுத்துத்
"தோன்றாத் துணையாய் இருந்தனன் தன்அடி யோங்கட்(கு)" என்று
வான்தாழ் புனற்கங்கை வாழ்சடை யானைமற் றெவ்வுயிர்க்கும்
சான்றாம் ஒருவனைத் தண்டமிழ் மாலைகள் சாத்தினரே.
ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் தோன்றினராய்
மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க
ஏன்றான் இமையவர்க் கன்பன் திருப்பா திரிப்புலியூர்த்
தோன்றாத் துணையா யிருந்தனன் தன்னடி யோங்களுக்கே
143 / 393
திருவதிகை வீரட்டானம் ஏழைத் திருத்தாண்டகம்
உம்பர்தங் கோனைஉடைய பிரானைஉள் புக்கிறைஞ்சி
நம்புறும் அன்பின் நயப்புறு காதலி னால்திளைத்தே
எம்பெரு மான்தனை ஏழையேன் நான்பண் டிகழ்ந்த"தென்று
தம்பரி வால்திருத் தாண்டகச் செந்தமிழ் சாற்றிவாழ்ந்தார்.
வெறிவிரவு கூவிளனல் தொங்க வானை
வீரட்டத் தானை வெள்ளேற்றி னைப்,
பொறியரவி னானைப்புள் ளூர்தி யானைப்
பொன்னிறத்தி னானைப் புகழ்தக் கானை,
அறிதற் கரியசீ ரம்மான் தன்னை
அதியரைய மங்கை அமர்ந்தான் தன்னை,
எறிகெடிலத்தானை இறைவன் தன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.
151 / 375
திருத்தூங்கானை மாடம் திருவிருத்தம்
"பொன்னார்ந்த திருவடிக்கென் விண்ணப்பம்" என்றெடுத்து
முன்னாகி எப்பொருட்கும் முடிவாகி நின்றானைத்
தன்னாகத் துமைபாகங் கொண்டானைச் சங்கரனை
நன்னாமத் திருவிருத்தம் நலஞ்சிறக்கப் பாடுதலும்.
பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும்
என்னாவி காப்பதற் கிச்சையுண் டேலிருங் கூற்றகல
மின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவுகொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே
168 / 9
கோயில் திருவிருத்தம்
இத்தன் மையர்பல முறையுந் தொழுதெழ "என்றெய்தினை" எனமன்றாடும்,
அத்தன் திருவருள் பொழியுங் கருணையின் அருள்பெற்றிடவரும் ஆனந்தம்,
மெய்த்தன்மையினில் விருத்தத் திருமொழி பாடிப் பின்னையும் மேன்மேலும்,
சித்தம் பெருகிய பரிவால் இன்புறு திருநே ரிசைமொழி பகர்கின்றார்.
ஒன்றி யிருந்து நினைமின்கள் உந்தமக் கூனமில்லைக்
கன்றிய காலனைக் காலாற் கடிந்தான் அடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லயுட் சிற்றம் பலத்துநட்டம்
என்றுவந் தாய்என்னும் எம்பெரு மான்றன் திருக்குறிப்பே
169 / 6
கோயில் திருநேரிசை
"பத்தனாய்ப் பாட மாட்டேன்" என்றுமுன் னெடுத்துப் பண்ணால்
"அத்தா! உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த வா"றென்(று)
இத்திறம் போற்றி நின்றே இன்றமிழ் மாலை பாடிக்
கைத்திருத் தொண்டு செய்யுங் காதலிற் பணிந்து போந்தார்.
பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனெ பரம யோகி
எத்தினாற் பத்தி செய்கேன் என்னைநீ இகழ வேண்டாம்
முத்தனே முதல்வா தில்லை அம்பலத் தாடு கின்ற
அத்தாவுன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த வாறே
171 / 1
கோயில் திருக்குறுந்தொகை
அருட்பெரு மகிழ்ச்சிபொங்க "அன்னம்பா லிக்கும்" என்னும்,
திருக்குறுந் தொகைகள் பாடித்திருவுழ வாரங்கொண்டு,
பெருத்தெழு காதலொடும் பெருந்திருத்தொண்டு செய்து,
விருப்புறு மேனி கண்ணீர் வெண்ணீற்று வண்டலாட.
அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே
173 / 16
திருக்கழிப்பாலை பண் - காந்தாரம்
சினவிடையே றுகைத்தேறும் மணவாள நம்பிகழல் சென்று தாழ்ந்து
வனபவள வாய்திறந்து வானவர்க்குந் தானவனே! என்கின்றாள்" என்
றனையதிருப் பதிகமுடன் அன்புறுவண்டமிழ்பாடி அங்குவைகி
நினைவரியார் தமைப்போற்றி நீடுதிருப் புலியூரை நினைந்து மீள்வார்.
வனபவள வாய்திறந்து வானவர்க்குந் தானவனே என்கின்றாளா
சினபவளத் திண்தோள்மேற் சேர்ந்திலங்கு வெண்ணீற்றன் என்கின் றாளால்,
அனபவள மேகலையோ டப்பாலைக் கப்பாலான் என்கின்றாளால்,
கனபவளஞ் சிந்துங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
174 / 3
கோயில் திருக்குறுந்தொகை
மனைப்படப்பிற் கடற்கொழு ந்து வளைசொரியுங் கழிப்பாலை மருங்குநீங்கி,
நனைச்சினைமென் குளிர்ஞாழற் பொழிலூடு வழிக்கொண்டு நண்ணும் போதில்,
"நினைப்பவர்தம் மனங்கோயில் கொண்டருளும் அம்பலத்து நிருத்த னாரைத்,
தினைத்தனையாம் பொழுதுமறந் துய்வனோ" எனப்பாடித் தில்லை சார்ந்தார்.
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன்
அனைத்தும் வேடமாம் அம்பலத் கூத்தனைத்
தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ.
175 / 10
கோயில் பெரிய திருத்தாண்டகம்
"அரியானை" என்றெடுத்தே அடியவருக் கெளியானை அவர்தஞ் சிந்தை,
பிரியாத பெரியதிருத் தாண்டகச்செந் தமிழ்பாடிப் பிறங்குசோதி,
விரியாநின் றெவ்வுலகும் விளங்கியபொன்னம்பலத்து மேவி ஆடல்,
புரியாநின் றவர்தம்மைப் பணிந்துதமிழாற்பின்னும் போற்றல் செய்வார்.
அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்,
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்,
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நளெல்லாம் பிறவா நாளே.
176 / 4
கோயில் திருநேரிசை
"செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா எறிக்கும்" எனுஞ்சிறந்த வாய்மை,
அருஞ்சொல்வளத் தமிழ்மாலை அதிசயமாம் படிபாடி அன்பு சூழ்ந்த,
நெஞ்சுருகப் பொழிபுனல்வார் கண்ணிணையும் பரவிய சொல் நிறைந்த வாயும்,
தஞ்செயலின் ஒழியாத திருப்பணியும் மாறாது சாரும் நாளில்.
செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா எறிக்குஞ் சென்னி
நஞ்சடை கண்ட னாரைக் காணலா நறவ நாறும்
மஞ்சடை சோலைத் தில்லை மல்குசிற்றம்ப லத்தே
துஞ்சடை இருள்கிழியத் துளங்கெரி யாடு மாறே.
187 / 32
திருக்கழுமலம் திருவிருத்தம்
பெரியபெரு மாட்டியுடன் தோணி மீது பேணிவீற்றிருந்தருளும் பிரான்முன் நின்று
பரிவுறுசெந் தமிழ்மாலை பத்தியோடும் "பார்கொண்டு மூடி"எனுப் பதிகம் போற்றி
அரியவகை புறம்போந்து பிள்ளை யார்தம் திருமடத்தில் எழுந்தருளி அமுது செய்து
மருவியநண் புருவியநண் புறுகேண்மை அற்றை நாள்போல் வளர்ந்தோங்க உடன்பலநாள் வைகும் நாளில்.
பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட ஞான்றுநின் பாதமெல்லாம்
நாலஞ்சு புள்ளினம் ஏந்தின என்பர் நளிர்மதியம்
கால்கொண்ட வண்கைச் சடைவிரித் தாடுங் கழுமலவர்க்
காளன்றி மற்றுமுண் டோ அந்த ணாழி அகலிடமே.
191 / 201
திருவாவடுதுறை திருத்தாண்டகம்
"ஆவடுதண் டுறையாரை அடைந்துய்ந் தேன்"என் றளவில் திருத்தாண்டகமுன் அருளிச்செய்து,
மேவுதிருக் குறுந்தோகைநே ரிசையுஞ் சந்த விருத்தங்க ளானவையும் வேறு வேறு,
பாவலர்செந் தமிழ்த் தொடையாற் பள்ளித் தாமம் பலசாத்தி மிக்கெழுந்த பரிவினோடும்,
பூவலயத் தவர்பரவப் பலநாள் தங்கிப் புரிவுறுகைத் திருத்தோண்டு போற்றிச் செய்வார்.
நம்பனை நால்வேதங் கரைகண் டானை
ஞானப் பெருங்கடலை நன்மை தன்னைக்
கம்பனைக் கல்லா லிருந்தான் தன்னைக்
கற்பகமா யடியார்கட் கருள்செய் வானைச்,
செம்பொன்னைப் பவளத்தைத் திரளு முத்தைத்
திங்களை ஞாயிற்றைத் தீயை நீரை,
அம்பொன்னை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடை ந்துய்ந் தேனே.
194 / 167
திருச்சத்திமுற்றம் திருவிருத்தம்
"கோவாய் முடுகி" என்றெடுத்துக் "கூற்றம் வந்து குமைப்பதன்முன்
பூவா ரடிகள் என்றலைமேல் பொறித்து வைப்பாய்" எனப்புகன்று
நாவார் பதிகம் பாடுதலும் நாதன் தானும் "நல்லூரில்
வாவா" என்றே அருள்செய்ய வணங்கி மகிழ்ந்து வாகீசர்.
கோவாய் முடுகி யடுதிறற் கூற்றங் குமைப்பதன்முன்
பூவா ரடிச்சுவ டென்மேற் பொறித்துவை போகவிடில்
மூவா முழுப்பழி மூடுங்கண் டாய்முழுங் குந்தழற்கைத்
தேவா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.
196 / 165
திருநல்லூர் திருத்தாண்டகம்
"நனைந்தனைய திருவடிஎன் தலைமேல்வைத் தார்"என்று
புனைந்ததிருத் தாண்டகத்தால் போற்றிசைத்துப் புனிதரருள்
நினைந்துருகி விழுந்தெழுந்து நிறைந்துமலர்ந்(து) ஒழியாத
தனம்பெரிதும் பெற்றுவந்த வறியோன்போல் மனந்தழைத்தார்.
நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்,
சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்
செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்,
இனந்துருவி மணிமுகுடத் தேறத் துற்ற
இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி,
நனைந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறெ.
208 / 479
பொது (விடந்தீர்த்த திருப்பதிகம்) பண் - இந்தளம்
அன்றவர்கள் மறைத்தனுக் களவிறந்த கருணையராய்க்
கொன்றைநறுஞ் சடையார்தம் கோயிலின்முன் கொணர்வித்தே
"ஒன்றுகொலாம்" எனப்பதிகம் எடுத்துடையான் சீர்பாடப்
பின்றைவிடம் போய்நீங்கிப் பிள்ளையுணர்ந் தெழுந்திருந்தான்.
ஓன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை
ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர்
ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது
ஒன்றுகொ லாமவர் ஊர்வது தானே.
211 / 80
திருப்பழனம் பண் - பழந்தக்கராகம்
புடைமாலை மதிக்கண்ணிப் புரிசடையார் பொற்கழற்கீழ்
அடைமாலைச் சீலமுடை அப்பூதி அடிகள்தமை
நடைமாணச் சிறப்பித்து நன்மைபுரி தீந்தமிழின்
தொடைமாலைத் திருப்பதிகச் "சொன்மாலை" பாடினார்.
சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே
பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான்
முன்மாலை நகுதிங்கள் முகிழ்விளங்கு முடிச்சென்னிப்
பொன்மாலை மார்பன்என் புதுநலமுண் டிகழ்வானோ.
வஞ்சித்தென் வளைகவர்ந்தான் வாரானே யாயிடினும்
பஞ்சிக்காற் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான்
அஞ்சிப்போய்க் கலிமெலிய அழலோம்பும் அப்பூதி
குஞ்சிப்பூ வாய்நின்ற சேவடியாய் கோடியையே.
220 / 293
திருவாரூர் திருவிருத்தம்
பற்றொன் றிலாவரும் பாதக ராகும் அமணர்தம்பால்
உற்ற பிணியொழிந் துய்யப்போந் தேன்பெற லாவ(து)ஒன்றே?
புற்றிடங் கொண்டான்தன் தொண்டர்க்துத் தோண்டராம் புண்ணிய"மென்று
உற்ற உணர்வொடும் ஆரூர்த் திருவீதி உள்ளணைந்தார்.
குலம்பலம் பாவரு குண்டர்முன் னேநமக் குண்டுகொலோ
அலம்பலம் பாவரு தண்புனல் ஆரூர் அவிர்சடையான்
சிலம்பலம் பாவரு சேவடி யான்திரு மூலட்டானம்
புலம்பலம் பாவரு தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே
222 /316
திருவாரூர் போற்றித் திருத்தாண்டகம்
கண்டு தொழுது விழுந்து கரசர ணாதி அங்கம்
கொண்ட புளகங்க ளாக எழுந்தன்பு கூரக்கண்கள்
தண்டுளி மாரி பொழியத் திருமூலட் டானர்தம்மைப்
புண்டரி கக்கழல் போற்றித் திருத்தாண் டகம்புனைந்து.
கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி
கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி
அற்றவர்கட் காரமுத மானாய் போற்றி
அல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவ ரொப்பில்லா மைந்தா போற்றி
வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.
223 / 287
திருவாரூர் பண் - சீகாமரம்
"காண்ட லேகருத் தாய் நினைந்(து)" என்னுங் கலைப்பதிகம்-
தூண்டா விளக்கன்ன சோதிமுன் நின்று துதித்துருகி
ஈண்டு மணிக்கோயில் சூழ வலஞ்செய் திறைஞ்சி அன்பு
பூண்ட மனத்தொடு நீள்திரு வாயிற் புறத்தணைந்தார்.
காண்டலேகருத் தாய் நினைந்திருந் தேன்மனம்புகுந் தாய்கழலடி
பூண்டுகொண் டொழிந்தேன் புறம்போயி னாலறையோ,
ஈண்டுமாடங்கள் நீண்டமாளிகை மேலெழுகொடி வானிளம்மதி,
தீண்டிவந் துலவுந் திருவாரூ ரம்மானே.
224 / 283
திருவாரூர் (பழமொழி) பண் - காந்தாரம்
செய்யமா மணிஒளிசூழ் திருமுன்றில் முன்தேவா சிரியன் சார்ந்து,
"கொய்யுமா மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலும் ஆரூரரைக்,
கையினால் தொழாதொழிந்து கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேன்" என்று,
எய்தரிய கையறவால் திருப்பதிகம் அருள்செய்தங் கிருந்தார் அன்றே.
மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியான் தாள் தொழாதே,
உய்யலா மென்றெண்ணி உறிதூக்கி யுழிதந்தென் உள்ளம் விட்டுக்,
கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலும் ஆரூரரைக்,
கையினால் தொழாதொழிந்து கனியிருக்கக் காய்கவர்ந்தகள்வ னேனே.
226 / 282
திருவாரூர் பண் - காந்தாரம்
நீடுபுகழ்த் திருவாரூர் நிலவுமணிப் புற்றிடங்கொள் நிருத்தர் தம்மைக்,
கூடியஅன் பொடுகாலங் களில்அணைந்து கும்பிட்டுக் கோதில் வாய்மைப்,
"பாடிளம் பூதத்தினான்" எனும்பதிகம் முதலான பலவும் பாடி,
நாடியஆர் வம்பெருக நைந்துமனங் கரைந்துருகி நயந்து செல்வார்.
பாடிளம் பூதத்தி னானும் பவளச்செவ் வாய்வண்ணத் தானும்
கூடிள மென்முலை யாளைக் கூடிய கோலத்தி னானும்
ஓடிள வெண்பிறை யானும் ஒளிதிகழ் சூலத்தி னானும்
ஆடிளம் பாம்பசைத் தானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே.
227 / 295
திருவாரூர் திருவிருத்தம்
நான்மறைநூற் பெருவாய்மை நமிநந்தி அடிகள்திருத் தொண்டின் நன்மைப்,
பான்மைனிலை யால் அவரைப் பரமர்திரு விருத்தத்துள் வைத்துப் பாடித்,
தேன்மருவும் கொன்றையார் திருவாரூர் அரனெறியில் திகழுந் தன்மை,
ஆனதிற மும்போற்றி அணிவீதிப் பணிசெய்தங் கமரும் நாளில்.
ஆராய்ந் தடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்தடக்கிப்
பாரூர் பரிப்பத்தம் பங்குனி உத்திரம் பாற்படுத்தா
னாரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பிநந்தி
நீரால் திருவிளக் கிட்டமை நீணா டறியுமன்றே.
235 / 288
திருவாரூர் பண் - குறிஞ்சி
சித்தம் நிலாவும் தென் திரு ஆரூர் நகராளும்
மைத் தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ் செல்வம்
இத் தகைமைத்து என்று என் மொழிகேன்? என்று அருள் செய்தார்
முத்து விதான மணிப் பொன் கவரி மொழி மாலை
முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலே
பத்தர்க ளோடு பாவையர் சூழப் பலிப்பின்னே
வித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள்
அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
253 / 238
திருவீழிமிழலை திருத்தாண்டகம்
கைகள் குவித்துக் கழல்போற்றிக் கலந்த அன்பு கரைந்துருக
மெய்யில் வழியுங் கண்ணருவி விரவப் பரவுஞ் சொன்மாலை
"செய்ய சடையார் தமைச்சேரார் தீங்கு நெறிசேர் கின்றார்" என்(று)
உய்யு நெறித்தாண் டகமொழிந்தங் கொழியாக் காதல் சிறந்தோங்க.
போரானை ஈருரிவைப் போர்வை யானைப்
புலியதளே யுடையாடை போற்றி னானைப்
பாரானை மதியானைப் பகலானானைப்
பல்லுயிராய் நெடுவெளியாய்ப் பரந்து நின்ற,
நீரானைக் காற்றானைத் தீயா னானை
நினையாதார் புரமெரிய நினைந்த தெய்வத்
தேரானை திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரெ.
278 / 357
திருமறைக்காடு திருக்குறுந்தொகை
உண்ணீர்மையினால் பிள்ளையார் உரை செய்து அருள அதனாலே
பண்ணினேரு மொழியாள் என்று எடுத்துப் பாடப் பயன் துய்ப்பான்
தெண்ணீர் அணிந்தார் திருக்காப்பு நீக்கத் தாழ்க்கத் திருக் கடைக்காப்பு
எண்ணீர் இரக்கம் ஒன்று இல்லீர் என்று பாடி இறைஞ்சுதலும்
பண்ணின் நேர்மொழி யாளுமை பங்கரொ
மண்ணி னார்வலஞ் செய்ம்மறைக் காடரோ
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே.
அரக்க னைவிர லாலடர்த் திட்டநீர்
இரக்க மொன்றிலீர் எம்பெரு மானிரே
சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ
சரக்க இக்கத வந்திறப் பிம்மினே.
277 & 279 / 348
திருவாய்மூர் திருக்குறுந்தொகை
போதம் நிகழ வா என்று போனார் என் கொல் எனப் பாடி
ஈது எம்பெருமான் அருளாகில் யானும் போவேன் என்று எழுந்து
வேத வனத்தைப் புறகிட்டு விரைந்து போக அவர் முன்னே
ஆதி மூர்த்தி முன் காட்டும் அவ் வேடத்தால் எழுந்து அருள
அழைத்துக் கொடு போந்து அணியார் போல் காட்டி மறைந்தார் என அயர்ந்து
பிழைத்துச் செவ்வி அறியாதே திறப்பித் தேனுக்கே அல்லால்
உழைத்தாம் ஒளித்தால் கதவம் தொண்டு உறைக்கப் பாடி அடைப்பித்த
தழைத்த மொழியார் உப்பாலார் தாம் இங்கு எப்பால் மறைவது என
எங்கே யென்னை இருந்திடந் தேடிக்கொண்
டங்கே வந்தடை யாளம் அருளினார்
தெங்கே தோன்றுந் திருவாய்மூர்ச் செல்வனார்
அங்கே வாவென்று போனார தென்கொலோ.
திறக்கப் பாடிய என்னினுஞ் செந்தமிழ்
உறைப்புப் பாடி அடைப்பித்தார் உண்ணின்றார்
மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப்
பிறைக்கொள் செஞ்சடை யாரிவர் பித்தரே.
281 / 350
திருவாய்மூர் திருத்தாண்டகம்
மாட நீடு திருப்புகலி மன்னர் அவர்க்கு மால் அயனும்
நேடி இன்னங் காணாதார் நேரே காட்சி கொடுத்து அருள
ஆடல் கண்டு பணிந்து ஏத்தி அரசும் காணக் காட்டுதலும்
பாட அடியார் என்று எடுத்துப் பரமர் தம்மைப் பாடினார்
பாட வடியார் பரவக் கண்டேன்
பத்தர் கணங்கண்டேன் மொய்த்த பூதம்
ஆடல் முழவம் அதிரக் கண்டேன்
அங்கை அனல்கண்டேன் கங்கை யாளைக்
கோட லரவார் சடையிற் கண்டேன்
கொக்கி னிதழ்கண்டேன் கொன்றை கண்டேன்
வாடல் தலையொன்று கையிற் கண்டேன்
வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
293 / 197
திருவாவடுதுறை திருநேரிசை
பூவில் பொலியும் புனல் பொன்னிக் கரை போய்ப் பணிவார் பொற்பு அமைந்த
ஆவுக்கு அருளும் ஆவடு தண் துறையார் பாதம் அணைந்து இறைஞ்சி
நாவுக் கரசர் ஞானப் போன கர்க்குச் செம் பொன் ஆயிரமும்
பாவுக்கு அளித்த திறம் போற்றிப் போந்து பிறவும் பணிகின்றார்
மாயிரு ஞால மெல்லாம் மலரடி வணங்கும் போலும்
பாயிருங் கங்கை யாளைப் படர்சடை வைப்பர் போலுங்
காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல வூரர்க் கம்பொன்
ஆயிரங் கொடுப்பர் போலும் ஆவடு துறைய னாரே.
300 / 169
திருப்பழையாறை வடதளி திருக்குறுந்தொகை
தலையின் மயிரைப் பறித்து உண்ணூம் சாதி அமணர் மறைத்தாலும்
நிலை இலாதார் நிலைமையினால் மறைக்க ஒண்ணுமோ என்னும்
விலை இல் வாய்மைக்குறும் தொகைகள் விளம்பிப் புறம் போந்து அங்கு அமர்ந்தே
இலை கொள் சூலப் படையார் சேர் இடங்கள் பிறவும் தொழ அணைவார்
தலையெ லாம்பறிக் குஞ்சமண் கையருள்
நிலையி னான்மறைத் தான்மறைக் கொண்ணுமே
அலையி னார்பொழி லாறை வடதளி
நிலையி னானடி யேநினைந் துய்ம்மினே.
324 / 420
திருக்கச்சி ஏகம்பம் பண் - காந்தாரம்
கரவாடும் வன் நெஞ்சர்க்கு அரியானை என்று எடுத்துப்
பரவாய சொல் மாலைத் திருப் பதிகம் பாடிய பின்
விரிவார் தம் புரம் எரித்த விடையவனார் வெள் எயிற்றின்
அரவு ஆரம் புனைந்தவர் தம் திருமுன்றில் புறத்து அணைந்தார்
கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால்
விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை
அரவாடச் சடைதாழ அங்கையினில் அனலேந்தி
இரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.
328 / 428
திருக்கச்சி ஏகம்பம் திருத்தாண்டகம்
ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தான் எனப் போற்றிப்
பாகம் பெண் உருவானைப் பைங் கண் விடை உயர்த்தானை
நாகம் பூண் உகந்தானை நலம் பெருகும் திரு நீற்றின்
ஆகந்தோய் அணியானை அணைந்து பணிந்து இன்புற்றார்
கூற்றுவன்காண் கூற்றுவனைக் குமைத்த கோன்காண்
குவலயன்காண் குவலயத்தின் நீரா னான்காண்
காற்றவன்காண் கனலவன்காண் கலிக்கும் மின்காண்
கனபவளச் செம்மேனி கலந்த வெள்ளை
நீற்றவன்காண் நிலாவூருஞ் சென்னி யான்காண்
நிறையார்ந்த புனற்கங்கை நிமிர்ச டைமேல்
ஏற்றவன்காண் எழிலாறும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
336 / 445
திருவொற்றியூர் திருத்தாண்டகம்
வண்டு ஓங்கும் செங் கமலம் என எடுத்து மனம் உருகப்
பண் தோய்ந்த சொல் திருத் தாண்டகம் பாடிப் பரவுவார்
விண் தோய்ந்த புனல் கங்கை வேணியார் திரு உருவம்
கண்டு ஓங்கு களிச் சிறப்பக் கை தொழுது புறத்து அணைந்தார்
வண்டோ ங்கு செங்கமலக் கழுநீர் மல்கு
மதமத்தஞ் சேர்சடைமேல் மதியஞ் சூடித்
திண்டோ ள்க ளாயிரமும் வீசி நின்று
திசைசேர நடமாடிச் சிவலோ கனார்
உண்டார்நஞ் சுலகுக்கோ ருறுதி வேண்டி
ஒற்றியூர் மேய ஒளிவண் ணனார்
கண்டேன்நான் கனவகத்திற் கண்டேற் கென்றன்
கடும்பிணியுஞ் சுடுதொழிலுங் கைவிட் டவே.
340 / 443
திருப்பாசூர் திருக்குறுந்தொகை
மூவெயில் எய்த முதல்வனார் என எடுத்துச்
சிந்தை கரைந்து உருகு திருக் குறுந் தொகையும் தாண்டகமும்
சந்தம் நிறை நேர் இசையும் முதலான தமிழ் பாடி
எந்தையார் திரு அருள் பெற்று ஏகுவார் வாகீசர்
முந்தி மூவெயி லெய்த முதல்வனார்
சிந்திப் பார்வினை தீர்த்திடுஞ் செல்வனார்
அந்திக் கோன்றனக் கேயருள் செய்தவர்
பந்திச் செஞ்சடைப் பாசூ ரடிகளே.
342 / 441
திருவாலங்காடு திருத்தாண்டகம்
திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாம் எனச் சிறப்பின்
ஒருவாத பெரும் திருத் தாண்டகம் முதலாம் ஓங்கு தமிழ்ப்
பெரு வாய்மைத் தொடை மாலை பல பாடிப் பிற பதியும்
மருஆர்வம் பெற வணங்கி வடதிசை மேல் வழிக் கொள்வார்
ஒன்றா வுலகனைத்து மானார் தாமே
ஊழிதோ றூழி உயர்ந்தார் தாமே
நின்றாகி யெங்கும் நிமிர்ந்தார் தாமே
நீர்வளிதீ யாகாச மானார் தாமே
கொன்றாடுங் கூற்றை யுதைத்தார் தாமே
கோலப் பழனை யுடையார் தாமே
சென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
345 / 447
திருக்காளத்தி திருத்தாண்டகம்
காதணி வெண் குழையானைக் காளத்தி மலைக் கொழுந்தை
வேத மொழி மூலத்தை விழுந்து இறைஞ்சி எழுந்து பெரும்
காதல் புரி மனம் களிப்பக் கண் களிப்பப் பரவசமாய்
நாதனை என்கண்ணுளான் என்னும் திருத்தாண்டகம் நவின்றார்
விற்றூணொன் றில்லாத நல்கூர்ந் தான்காண்
வியன்கச்சிக் கம்பன்காண் பிச்சை யல்லால்
மற்றூணொன் றில்லாத மாசது ரன்காண்
மயானத்து மைந்தன்காண் மாசொன் றில்லாப்
பொற்றூண்காண் மாமணிநற் குன்றொப் பான்காண்
பொய்யாது பொழிலேழுந் தாங்கி நின்ற
கற்றூண்காண் காளத்தி காணப் பட்ட
கணநாதன் காணவனென் கண்ணு ளானே.
370 / 105
திருக்கயிலாயம் திருத்தாண்டகம்
ஏற்றினார் அருள் தலை மிசைக் கொண்டு எழுந்து இறைஞ்சி
வேற்றும் ஆகி விண் ஆகி நின்றார் மொழி விரும்பி
ஆற்றல் பெற்ற அவ் அண்ணலார் அஞ்சு எழுத்து ஓதிப்
பால் தடம் புனல் பொய்கையில் மூழ்கினார் பணியால்
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத் தொலியே போற்றி
ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
384 / 385
திருவையாறு பண் - காந்தாரம்
மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் என்னும்
கோதறு தண் தமிழ்ச் சொல்லால் குலவு திருப்பதிகங்கள்
வேத முதல்வர் ஐயாற்றில் விரவும் சராசரம் எல்லாம்
காதல் துணை ஒடும் கூடக் கண்டேன் எனப் பாடி நின்றார்
கண்டு தொழுது வணங்கிக் கண் நுதலார் தமைப் போற்றிக்
கொண்ட திருத் தாண்டகங்கள் குறுந்தொகை நேரிசை அன்பின்
மண்டு விருத்தங்கள் பாடி வணங்கித் திருத்தொண்டு செய்தே
அண்டர் பிரான் திருவையாறு அமர்ந்தனர் நாவுக்கு அரசர்
மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.
388 / 147, 144
திருப்பூந் துருத்தி அமர்ந்த செஞ்சடையானை ஆன் ஏற்றுப்
பொருப்பு ஊர்ந்து அருளும் பிரானைப் பொய்யிலியைக் கண்டேன் என்று
விருப்புறு தாண்டகத்தோடு மேவிய காதல் விளைப்ப
இருப்போம் திருவடிக்கீழ் நாம் என்னும் குறுந் தொகை பாடி
திருப்பூந்துருத்தி திருத்தாண்டகம்
எனக்கென்று மினியானை எம்மான் றன்னை
எழிலாரு மேகம்பம் மேயான் றன்னை
மனக்கென்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில்
நில்லானை நின்றியூர் மேயான் றன்னைத்
தனக்கென்றும் அடியேனை யாளாக் கொண்ட
சங்கரனைச் சங்கவார் குழையான் றன்னைப்
புனக்கொன்றைத் தாரணிந்த புனிதன் றன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே
திருப்பூந்துருத்தி திருக்குறுந்தொகை
கொடிகொள் செல்வ விழாக்குண லையறாக்
கடிகொள் பூம்பொழிற் கச்சிஏ கம்பனார்
பொடிகள் பூசிய பூந்துருத் திந்நகர்
அடிகள் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
389 / 145
திருப்பூந்துருத்தி திருவிருத்தம்
அங்கு உறையும் தன்மை வேண்டி நாம் அடி போற்றுவது என்று
பொங்கு தமிழ்ச் சொல் விருத்தம் போற்றிய பாடல் புரிந்து
தங்கித் திருத் தொண்டு செய்வார் தம்பிரானார் அருள் பெற்றுத்
திங்களும் ஞாயிறும் தோயும் திரு மடம் ஆங்கு ஒன்று செய்தார்
மாலினை மாலுற நின்றான் மலைமகள் தன்னுடைய
பாலனைப் பால்மதி சூடியைப் பண்புண ரார்மதின்மேற்
போலனைப் போர்விடை யேறியைப் பூந்துருத் திமகிழும்
ஆலனை ஆதிபு ராணனை நானடி போற்றுவதே.
404 / 363
திருவாலவாய் திருத்தாண்டகம்
எய்திய பேர் ஆனந்த இன்பத்தின் இடை அழுந்தி
மொய் திகழும் சடையானை முளைத்தானை என்று எடுத்துச்
செய் தவத்தோர் தாண்டகச் செந்தமிழ் பாடிப் புறத்து அணைவார்
கை தொழுது பணிந்து ஏத்தித் திரு உள்ளம் களி சிறந்தார்
முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி
முதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் டிங்கள்
வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும்
வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத்
துளைத்தானைச் சுடுசரத்தாற் றுவள நீறாத்
தூமுத்த வெண்முறுவல் உமையோ டாடித்
திளைத்தானைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
407 / 369
திருப்பூவணம் திருத்தாண்டகம்
கொடி மாடம் நிலவு திருப் பூவணத்துக் கோயிலின் உள்
நெடியானுக்கு அறிய அரியார் நேர் தோன்ற கண்டு இறைஞ்சி
வடிவேறு திரிசூலத் தாண்டகத்தால் வழுத்திப் போய்ப்
பொடி நீடு திருமேனிப் புனிதர் பதி பிற பணிவார்
வடிவேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும்
வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந்தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங்
காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழில்திகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
423 / 269
திருவாரூர் திருத்தாண்டகம்
இம் மாயப் பவத் தொடக்காம் இருவினைகள் தமை நோக்கி
உம்மால் இங்கு என்ன குறை உடையேன் யான் திருவாரூர்
அம்மானுக்கு ஆள் ஆனேன் அலையேன் மின் நீர் என்று
பொய்ம் மாயப் பெருங் கடலுள் எனும் திருத் தாண்டகம் புகன்றார்
பொய்ம்மாயப் பெருங்கடலிற் புலம்பா நின்ற
புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள்
இம்மாயப் பெருங்கடலை அரித்துத் தின்பீர்க்
கில்லையே கிடந்துதான் யானேல் வானோர்
தம்மானைத் தலைமகனைத் தண்ண லாரூர்த்
தடங்கடலைத் தொடர்ந்தோரை யடங்கச் செய்யும்
எம்மான்ற னடித்தொடர்வான் உழிதர் கின்றேன்
இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே
426 / 260
திருப்புகலூர் திருவிருத்தம்
மன்னிய அந்தக் கரணம் மருவுதலைப் பாட்டினால்
தன்னுடைய சரண் ஆன தமியேனைப் புகலூரன்
என்னை இனிச் சேவடிக்கீழ் இருத்திடும் என்று எழுகின்ற
முன் உணர்வின் முயற்சியினால் திருவிருத்தம் பல மொழிந்தார்
தன்னைச் சரணென்று தாளடைந் தேன்றன் அடியடையப்
புன்னைப் பொழிற்புக லூரண்ணல் செய்வன கேண்மின்களோ
என்னைப் பிறப்பறுத் தென்வினை கட்டறுத் தேழ்நரகத்
தென்னைக் கிடக்கலொட் டான்சிவ லோகத் திருத்திடுமே.
427 / 263
திருப்புகலூர் திருத்தாண்டகம்
மண் முதலாம் உலகு ஏத்த மன்னு திருத் தாண்டகத்தைப்
புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் எனப் புகன்று
நண்ணரிய சிவ ஆனந்த ஞான வடிவே ஆகி
அண்ணலார் சேவடிக் கீழ் ஆண்ட அரசு அமர்ந்து இருந்தார்
எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ
எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லாற்
கண்ணிலேன் மற்றோர் களைக ணில்லேன்
கழலடியே கைதொழுது காணி னல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
சுந்தரர்
{பெரியபுராணத்தில் தடுத்தாட்கொண்ட புராணம் பாடல் எண் / சுந்தரர் தேவாரம் பக்க எண்}
74 / 221
திருவெண்ணெய்நல்லூர் பண் ஆ- இந்தளம்
கொத்தார்மலர்க் குழலாளொரு கூறாய்அடி யவர்பால்
மெய்த்தாயினும் ஆஇனியானைஅவ் வியன் நாவலர் பெருமான்
"பித்தாபிறை சூடி எனப் பெரிதாந்திருப் பதிகம்
ஆஇத்தாரணி முதலாம்உல கெல்லாம்உ(ய்)ய எடுத்தார்.
பித்தாபிறை சூடிபெரு மானே அருளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
அத்தாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே.
79 / 224
திருத்துறையூர் பண் - தக்கராகம்
சிவனுறையுந் திருத்துறையூர் சென்றணைந்து "தீவினையால்
அவனெறியிற் செல்லாமே தடுத்தாண்டாய் அடியேற்குத்
தவநெறிதந் தருள்" என்று தம்பிரான் முன்னின்று
பவநெறிக்கு விலக்காகுந் திருப்பதிகம் பாடினார்.
மலையார் அருவித் திரள்மா மணிஉந்திக்
குலையாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
கலையார் அல்குற்கன் னியர் ஆடும் துறையூர்த்
தலைவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
88 / 204
திருவதிகைவீரட்டானம் பண் - கொல்லிக்கௌவாணம்
செம்மாந்திங் கியானறியா தென்செய்தேன் எனத்தெளிந்து
தம்மானை அறியாத சாதியார் உளரேஎன்(று)
அம்மானை திருவதிகை வீரட்டா னத்தமர்ந்த
கைம்மாவின் உரியானைக் கழல்பணிந்து பாடினார்.
தம்மானை அறியாத சாதியார் உளரெ
சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன்
கைம்மாவின் உரியானைக் கரிகாட்டில் ஆடல்
உடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத்
தெம்மான்றன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடும்என்னும்
ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்
எம்மானை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை ஆஇறைபோது மிகழ்வன்போ லியானே.
113/11
திருக்கழுமலம் பண் - தக்கேசி
மண்டிய பேரன்பினால் வன்தொண்டர் நின்று இறைஞ்சித்
தெண் திரை வேலையில் மிதந்த திருத் தேணி புரத் தாரைக்
கண்டு கொண்டேன் கயிலையினில் வீற்று ஆஇருந்த படி என்று
பண்டரும் ஆஇன்னிசை பயின்ற திருப் பதிகம் பாடினார்
சாதலும் பிறத்தலும் தவிர்த்தெனை வகுத்துத்
தன்அருள் தந்தஎம் தலைவனை மலையின்
மாதினை மதித்தங்கொர் பால்கொண்ட மணியை
வருபுனல் சடையிடை வைத்தஎம் மானை
ஏதிலென் மனத்துக்கோர் ஆஇரும்புண்ட நீரை
எண்வகை ஒருவனை எங்கள்பி ரானைக்
காதில்வெண் குழையனைக் கடல்கொள மிதந்த
கழுமல வளநகர்க் கண்டுகொண்டேனே.
123 / 143
திருவாரூர் பண் - காந்தாரம்
வந்தெதிர் கொண்டு வணங்கு வார்முன் வன்றொண்டர் அஞசலி கூப்பிவந்து
சிந்தை களிப்புற வீதியூடு செல்வார் திருத்தொண்டர் தம்மை நோக்கி
"எந்தை இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்" என்னும்
சந்த இசைப்பதிகங்கள் பாடித் தம்பெருமான் திருவாயில் சார்ந்தார்.
கரையுங் கடலும் மலையுங் காலையும் மாலையும் எல்லாம்
உரையில் விரவி வருவான் ஒருவன் உருத்திர லோகன்
வரையின் மடமகள் கேள்வன் வானவர் தானவர்க் கெல்லாம்
அரையனி ருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோகேளீர்.
199 / 133
திருத்தொண்டத்தொகை பண் - கொல்லிக்கௌவாணம்
தொல்லைமால் வரைபயந்த தூயாள் திருப்பாகன்
அல்லல்தீர்ந் துலகுய்ய மறையளித்த திருவாக்கால்
"தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்"என்று
"எல்லையில்வண் புகழாரை எடுத்திசைப்பா மொழி"என்றார்.
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே.
{ பெரியபுராணத்தில் ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் பாடல் எண் / சுந்தரர் தேவாரம் பக்க எண்}
20 / 160
திருக்கோளிலி பண் - நட்டராகம்
ஆளிடவேண் டிக்கொள்வார் அருகுதிருப் பதியான
கோளிலியில் தம்பெருமான் கோயிலினை வந்தெய்தி
"வாளன கண்மடவாள் வருந்தாமே" எனும்பதிகம்
மூளவருங் காதலுடன் முன்தொழுது பாடுதலும்.
நீள நினைந்தடியேன் உமை நித்தலும் கைதொழுவேன்
வாளன கண்மடவாள் அவள் வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே.
41 / 154
திருநாட்டியத்தான்குடி பண் - தக்கராகம்
வென்றி வெள்ளே றுயர்த்தருளும் விமலர் திருக்கோ புரம்இறைஞ்சி
ஒன்றும் உள்ளத் தொடும்அன்பால் உச்சி குவித்த கரத்தோடும்
சென்று புக்குப் பணிந்துதிருப் பதிகம் "பூணாண்" என்றெடுத்துக்
கொன்றை முடியார் அருளுரிமை சிறப்பித் தார்கோட் புலியாரை.
பூணான் ஆவதொர் அரவங்கண் டஞ்சேன்
புறங்காட் டாடல்கண் டிகழேன்
பேணீ ராகிலும் பெருமையை உணர்வேன்
பிறவே னாகிலும் மறவேன்
காணீ ராகிலுங் காண்பனென் மனத்தால்
கருதீ ராகிலுங் கருதி
நானே லும்மடி பாடுதல் ஒழியேன்
நாட்டியத் தான்குடி நம்பீ
43 / 157
திருவலிவலம் பண் - தக்கேசி
அங்கு நின்றும் எழுந்தருளி அளவில் அன்பின் உள்மகிழ்ச்
செங்கண் நுதலார் மேவுதிரு வலிவ லத்தைச் சேர்ந்திறைஞ்சி
மங்கை பாகர் தமைப்பதிகம் "வலிவ லத்துக் கண்டேன்"என்(று)
எங்கும் நிகழ்ந்த தமிழ்மாலை எடுத்துத் தொடுத்த இசைபுனைவார்.
ஊனங் கத்துபயிர் பாய்உல கெல்லாம்
ஓங்கா ரத்துரு ஆகிநின் றானை
வானங்கத் தவர்க் கும்அளப் பரிய
வள்ள லைஅடி யார்கள்தம் உள்ளத்
தேனங் கத்தமு தாகிஉள் ளூறும்
தேச னைத்திளைத் தற்கினி யானை
மானங் கைத்தலத் தேந்தவல் லானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
51 / 121
திருப்புகலூர் பண் - கொல்லி
தொண்டர் உணரமகிழிந்தெழுந்து துணைக்கைக் கமலமுகைதலைமேல்
கொண்டு கோயிலுட்புக்குக் குறிப்பில் அடங்காப் பேரன்பு
மண்டு காதலுறவணங்கி வாய்த்த மதுர மொழிமாலை
பண்டங் கிசையில் "தம்மையே புகழ்ந்" தென் றெடுத்துப் பாடினார்.
தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினும்
சார்வி னுந் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடாதே எந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மை யேதரும் சோறுங் கூறையும்
ஏத்த லாம்இடர் கெடலுமாம்
அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே
53 / 118
திருப்பனையூர் பண் - சீகாமரம்
செய்ய சடையார் திருப்பனையூர்ப் புறத்துத் திருக்கூத் தொடுங்காட்சி
எய்த அருள எதிர்சென்றங் கெழுந்த விருப்பால் விழுந்திறைஞ்சி
ஐயர் தம்மை "அரங்காட வல்லார் அவரே அழகியர்" என்(று)
உய்ய உலகு பெரும்பதிகம் பாடி அருள்பெற் றுடன்போந்தார்.
மாடமாளிகை கோபுரத்தொடு மண்டபம்வள ரும்வளர்பொழில்
பாடல் வண்டறையும் பழனத் திருப்பனையூர்த்
தோடுபெய்தொரு காதினிற்குழை தூங்கத்தொண்டர்கள் துள்ளிப்பாடநின்(று)
ஆடு மாறுவல்லார் அவரே அழகியரே.
56 / 114
திருநன்னிலத்துப்பெருங்கோயில் பண் - பஞ்சமம்
பலநாள் அமர்வார் பரமர்திரு அருளால் அங்கு நின்றும்போய்ச்
சிலைமா மேரு வீரனார் திருநன் னிலத்துச் சென்றெய்தி
வலமா வந்து கோயிலினுள் வணங்கி மகிழ்ந்து பாடினார்
தலமார்கின்ற "தண்ணியல்வெம் மையினான்" என்னுந் தமிழ்மாலை.
தண்ணியல் வெம்மையினான் தலையிற்கடை தோறும்பலி
பண்ணியல் மென்மொழியார் இடக் கொண்டுழல் பண்டரங்கன்
புண்ணிய நான்மறையோர் முறையால்அடி போற்றிசைப்ப
நண்ணிய நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.
59 / 99
திருவீழிமிழலை பண் - சீகாமரம்
படங்கொள் அரவில் துயில்வோனும் பதுமத் தோனும் பரவரிய
விடங்கன் விண்ணோர் பெருமானை விரவும் புளக முடன்பரவி
"அடங்கல் வீழி கொண்டிருந்தீர் அடியே னுக்கும் அருளும்" எனத்
தடங்கொள் செஞ்சொற் றமிழ்மாலை சாத்தி அங்குச் சாருநாள்.
நம்பினார்க்கருள் செய்யு மந்தணர் நான்ம றைக்கிட மாயவேள்வியுள்
செம்பொ னேர்மட வாரணி பெற்ற திருமிழலை
உம்ப ரார்தொழு தேத்த மாமலை யாளோடும் முடனே உறைவிடம்
அம்பொன் வீழிகொண் டீர்அடி யேற்கும் அருளுதிரே.
60 / 111
திருவாஞ்சியம் பண் - பியந்தைக்காந்தாரம்
வாசி யறிந்து காசளிக்க வல்ல மிழலை வாணர்பால்
தேசு மிக்க திருவருள்முன் பெற்றுத் திருவாஞ் சியத்தடிகள்
பாச மறுத்தாட் கொள்ளுந்தாள் பணிந்து "பொருவ னார்" என்னும்
மாசில் பதிகம் பாடிஅமர்ந் தரிசிற் கரைப்புத் தூரணைந்தார்.
பொருவ னார்புரி நூலர் புணர்முலை உமையவளோடு
மருவ னார்மரு வார்பால் வருவதும் இல்லைநம் அடிகள்
திருவ னார்பணிந் தேத்தும் திகழ்திரு வாஞ்சியத் துறையும்
ஒருவ னார் அடியாரை ஊழ்வினை நலியஒட் டாரே.
63 / 80
திருவாவடுதுறை பண் - தக்கேசி
விளங்குந் திருவா வடுதுறையில் மேயார்கோயில் புடைவலங்கொண்(டு)
உளங்கொண் டுருகும் அன்பினுடன் உள்புக் கிறைஞ்சி ஏத்துவார்
வளங்கொள் பதிகம் "மறையவன்"என் றெடுத்து வளவன் செங்கணான்
தளங்கொள் பிறப்புஞ் சிறப்பித்துத் தமிழ்ச்சொன் மாலை சாத்தினார்.
மறைய வனொரு மாணிவந் தடைய வார மாய்அவன் ஆருயிர் நிறுத்தக்
கறைகொள் வேலுடைக் காலனைக் காலாற் கடந்த காரணங் கண்டுகண் டடியேன்
இறைவன் எம்பெரு மான் என்றெப் போதும் ஏத்தி ஏத்திநின் றஞ்சலி செய்துன்
அறைகொள் சேவடிக் கன்பொடும் அடைந்தேன் ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
66 / 73
திருநாகேச்சரம் பண் - பஞ்சமம்
பெருகும் பதிகம் "பிறையணிவாள் நுதலாள்" பாடிப் பெயர்ந்துநிறை
திருவின் மலியுஞ் சிவபுரத்துத் தேவர் பெருமான் கழல்வணங்கி
உருகுஞ் சிந்தை யுடன்போந்தே உமையோர் பாகர் தாம்மகிழ்ந்து
மருவும் பதிகள் பிறபணிந்து கலைய நல்லூர் மருங்கணைந்தார்.
பிறையணி வாள்நுதளாள் உமையாளவள் பேழ்கணிக்க
நிறைபணி நெஞ்சனுங்க நீலமால்விடம் உண்டதென்னே
குறைபணி குல்லைமுல்லை அளைந்துகுளிர் மாதவிமேல்
சிறைபணி வண்டுகள்சேர் திருநாகேச் சரத்தானே.
67 / 108
திருக்கலயநல்லூர் பண் - தக்கராகம்
செம்மை மறையோர் திருக்கலைய நல்லூர் இறைவர் சேவடிக்கீழ்
மும்மை வணக்கம் பெறஇறைஞ்சி முன்பு பரவித் தொழுதெழுவார்
கொம்மை மருவு "குரும்பைமுலை உமையாள்" என்னுந் திருப்பதிகம்
மெய்ம்மைப் புராணம் பலவுமிகச் சிறப்பித்(து) இசையின் விளம்பினார்.
குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங் கண்டு
குறிப்பினொடுஞ் சென்றவள்தன் குணத்தினைநன் கறிந்து
விரும்புவரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த
விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியவூர் வினவில்
அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட
அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூழ் அயலின்
கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனிக்
கமலங்கள் முகமலரும் கலயநல்லூர் காணே.
70 / 72
திருச்சோற்றுத்துறை பண் - கௌசிகம்
"அழல்நீர் ஒழுகி அனைய" எனும் அஞ்சொற் பதிகம் எடுத்தருளிக்
கழல்நீ டியஅன் பினிற்போற்றுங் காதல் கூரப் பரவியபின்
கெழுநீர் மையினில் அருள்பெற்றுப் போந்து பரவை யார்கேள்வர்
முழுநீ றணிவார் அமர்ந்தபதி பலவும் பணிந்து முன்னுவார்
அழல்நீர் ஒழுகி அனைய சடையும்
உழையீர் உரியும் உடையான் இடமாம்
கழைநீர் முத்துங் கனகக் குவையும்
சுழல்நீர்ப் பொன்னிச் சோற்றுத் துறையே.
73 / 58
திருமழபாடி பண் - நட்டராகம்
அணைந்து திருக்கோ புரம்இறைஞ்சி அன்பர் சூழ உடன்புகுந்து
பணங்கொள் அரவம் அணிந்தார்முன் பணிந்து வீழ்ந்து பரங்கருணைக்
குணங்கொள் அருளின் திறம்போற்றிக் கொண்டபுளகத் துடனுருகிப்
புணர்ந்த இசையால் திருப்பதிகம் "பொன்னார் மேனி" என்றெடுத்து.
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னெ உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
76/59
திருவானைக்கா பண் - காந்தாரம்
மறைகளாய நான்கும் என மலர்ந்த செம் சொல் தமிழ் பதிகம்
நிறையும் காதல் உடன் எடுத்து நிலவும் அன்பர் தமை நோக்கி
இறையும் பணிவார் எம்மையும் ஆள் உடையார் என்று ஏத்துவார்
உறையூர்ச் சோழன் மணியாரம் சாத்தும் திறத்தை உணர்ந்து அருளி
மறைகள் ஆயின நான்கும் மற்றுள பொருள்களு மெல்லாந்
துறையுந் தோத்திரத் திறையுந் தொன்மையும் நன்மையு மாய
அறையும் பூம்புனல் ஆனைக் காவுடை ஆதியை நாளும்
இறைவன் என்றடி சேர்வார் எம்மையும் ஆளுடை யாரே.
81/66
திருப்பாச்சிலாச்சிராமம் பண் - தக்கராகம்
நித்தமும் நீங்கா நிலைமையின் நீங்கி நிலத்து இடைப் புலம் கெழும் பிறப்பால்
உய்த்த காரணத்தை உணர்ந்து நொந்து அடிமை ஒருமையாம் எழுமையும் உணர்த்தி
எத்தனை அருளாது ஒழியினும் பிரானார் இவர் அலாது இலையோ என்பார்
வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் என வழுத்தினார் தொண்டர்
வைத்தனன் தனக்கே தலையுமென் னாவும் நெஞ்சமும் வஞ்சமொன் றின்றி
உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமை உரைத்தக்கால் உவமனே ஒக்கும்
பைத்தபாம் பார்த்தோர் கோவணத் தோடு பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பித்தரே யொத்தோர் நச்சில ராகில் இவரலா தில்லையோ பிரானார்.
இவ் வகை பரவித் திருக்கடைக் காப்பும் ஏசின வல்ல என்று இசைப்ப
மெய் வகை விரும்பு தம் பெருமானார் விழுநிதிக் குவை அளித்து அருள
மை வளர் கண்டர் கருணையே பரவி வணங்கி அப்பதி இடை வைகி
எவ் வகை மருங்கும் இறைவர் தம் பதிகள் இறைஞ்சி அங்கு இருந்தனர் சில நாள்
ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல எம்பெரு மானென்றெப் போதும்
பாயின புகழான் பாச்சிலாச் சிராமத்தடிகளை அடிதொழப் பன்னாள்
வாயினாற் கூறி மனத்தினால் நினைவான் வளவயல் நாவலா ரூரன்
பேசின பேச்சைப் பொறுக்கில ராகில் ஆவரலா தில்லையோ பிரானார்.
84/62
திருப்பைஞ்ஞீலி பண் - கொல்லி
கண்டவர் கண்கள் காதல் நீர் வெள்ளம் பொழிதரக் கை குவித்து இறைஞ்சி
வண்டறை குழலார் மனம் கவர் பலிக்கு திரு வடிவு கண்டவர்கள்
கொண்டது ஓர் மயலால் வினவு கூற்று ஆகக் குலவு சொல் கார் உலாவிய என்று
அண்டர் நாயகரைப் பரவி ஆரணிய விடங்கராம் அருந் தமிழ் புனைந்தார்
காருலாவிய நஞ்சையுண்டிருள் கண்டவெண்டலை யோடுகொண்
டூரெலாந்திரிந் தென்செய்வீர்பலிஓரிடத்திலே கொள்ளும்நீர்
பாரெலாம்பணிந் தும்மையேபரவிப்பணியும்பைஞ் ஞீலியீர்
ஆரமாவது நாகமோசொல்லும் ஆரணீய விடங்கரே.
87/193
திருப்பாண்டிக்கொடுமுடி பண் - பழம்பஞ்சுரம்
அண்ணலார் அடிகள் மறக்கினும் நாம அஞ்சு எழுத்து அறிய எப் பொழுதும்
எண்ணிய நாவே இன் சுவை பெருக இடை அறாது இயம்பும் என்றும் இதனைத்
திண்ணிய உணர்வில் கொள்பவர் மற்றுப் பற்றுஇலேன் எனச் செழும் தமிழால்
நண்ணிய அன்பில் பிணிப்பு உற நவின்றார் நமச்சிவாயத் திருப் பதிகம்
மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிறந் தேனி னிப்பிறவாத தன்மைவந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறையூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ்சொல்லும் நாநமச்சி வாயவே.
96/51
திருப்புறம்பயம் பண் - கொல்லி
அங்கம் ஓதி ஓர் ஆறை மேல் தளி என்று எடுத்து அமர் காதலில்
பொங்கு செந்தமிழால் விரும்பு புறம் பயந்து தொழப் போதும் என்று
எங்கும் மன்னிய இன் இசை பதிகம் புனைந்து உடன் எய்தினார்
திங்கள் சூடிய செல்வர் மேவும் திருப் புறம் பயம் சேரவே
அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளிநின்றும்போந்துவந் தின்னம்பர்த்
தங்கினோமையும் இன்னதென்றிலர் ஈசனாரெழு நெஞ்சமே
கங்குல்ஏமங்கள் கொண்டுதேவர்கள் ஏத்திவானவர் தாந்தொழும்
பொங்குமால்விடை யேறிசெல்வப்புறம்பயந்தொழப் போதுமே.
103/199
திருக்கூடலையாற்றூர் பண் - புறநீர்மை
கண்டவர் கைகள் கூப்பித் தொழுது பின் தொடர்வார்க் காணார்
வண்டலர் கொன்றையாரை வடிவுடை மழு என்று ஏத்தி
அண்டர் தம் பெருமான் போந்த அதிசயம் அறியேன் என்று
கொண்டு எழும் விருப்பினேடும் கூடலை யாற்றூர் புக்கார்
வடிவுடை மழுவேந்தி மதகரி உரிபோர்த்துப்
பொடியணி திருமேனிப் புரிகுழல் உமையோடுங்
கொடியணி நெடுமாடக் கூடலை யாற்றூரில்
அடிகளிவ் வழிப்போந்த அதிசயம் அறியேனே.
105/214
திருமுதுகுன்றம் பண் - கொல்லிக்கௌவாணம்
தட நிலைக் கோபுரத்தைத் தாழ்ந்து முன் இறைஞ்சிக் கோயில்
புடைவலம் கொண்டு புக்குப் போற்றினர் தொழுது வீழ்ந்து
நடம் நவில்வாரை நஞ்சி இடை எனும் செம் சொல்மாலைத்
தொடை நிகழ் பதிகம் பாடித் தொழுது கை சுமந்து நின்று
நஞ்சி யிடையின்று நாளை யென்றும்மை நச்சுவார்
துஞ்சி யிட்டாற்பின்னைச் செய்வ தென்னடி கேள்சொலீர்
பஞ்சி யிடப்புட்டில் கீறு மோபணி யீரருள்
முஞ்சி யிடைச்சங்க மார்க்குஞ் சீர்முது குன்றரே.
106/216
நம்பி என்ற திருப்பதிகம் பண் - தக்கேசி
நாதர் பால் பொருள் தாம் வேண்டி நண்ணிய வண்ணம் எல்லாம்
கோதறு மனத்துள் கொண்ட குறிப் பொடும் பரவும் போது
தாது அவிழ் கொன்றை வேய்ந்தார் தர அருள் பெறுவார் சைவ
வேதியர் தலைவர் மீண்டும் மெய்யில் வெண் பொடியும் பாட
மெய்யைமுற் றப்பொடிப் பூசியோர் நம்பி
வேதம்நான் கும்விரித் தோதியோர் நம்பி
கையிலோர் வெண்மழு ஏந்தியோர் நம்பி
கண்ணு மூன்றுடை யாயொரு நம்பி
செய்யநம் பிசிறு செஞ்சடை நம்பி
திரிபுரந் தீயெழச் செற்றதோர் வில்லால்
எய்தநம் பியென்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
115/1
கோயில் பண் - குறிஞ்சி
மடித்து ஆடும் அடிமைக்கண் என்று எடுத்து மன் உயிர் கட்கு அருளும் ஆற்றல்
அடுத்து ஆற்று நல் நெறிக்கண் நின்றார்கள் வழுவி நரகு அணையா வண்ணம்
தடுப்பானைப் பேரூரில் கண்ட நிலை சிறப்பித்துத் தனிக் கூத்து என்றும்
நடிப்பானை நாம் மனமே பெற்றவாறு எனும் களிப்பால் நயந்து பாடி
மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனேநீ வாழும் நாளுந்
தடுத்தாட்டித் தருமனார் தமர்செக்கில் ஆடும்போது தடுத்தாட் கொள்வான்
கடுத்தாடுங் கரதலத்திற் றமருகமும் எரிஅகலுங் கரியபாம்பும்
பிடித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.
117/37
திருக்கருப்பறியலூர் பண் - நட்டராகம்
கூற்று உதைத்தார் திருக் கொகுடிக் கோயில் நண்ணிக் கோபுரத்தைத் தொழுது புகுந்து அன்பர் சூழ
ஏற்ற பெரு காதலினால் இறைஞ்சி ஏத்தி எல்லை இலாப் பெரு மகிழ்ச்சி மனத்தில் எய்தப்
போற்றிசைத்துப் புறத்து அணைந்தப் பதியில் வைகிப் புனிதர் அவர் தமை நினையும் இன்பம் கூறி
சாற்றிய மெய்த் திருப் பதிகம் சிம்மாந்து என்னும் தமிழ் மாலை புனைந்து ஆங்குச் சாரும் நாளில்
சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில் வைத்துகந்து திறம்பா வண்ணங்
கைம்மாவின் உரிவைபோர்த் துமைவெருவக் கண்டானைக் கருப்ப றியலூர்க்
கொய்ம்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாட மயிலாடுங் கொகுடிக் கோயில்
எம்மானை மனத்தினால் நினைந்தபோதவர்நமக் கினிய வாறே.
கண் நுதலார் விரும்பு கருப் பறியலூரைக் கை தொழுது நீங்கிப் போய்க் கயல்கள் பாயும்
மண்ணி வளம் படிக் கரையை நண்ணி அங்கு மாது ஒரு பாகத்தவர் தாள் வணங்கிப் போற்றி
எண்ணில் புகழ்ப் பதிகமும் முன்னவன் என்று ஏத்தி ஏகுவார் வாழ் கொளி புத்தூர் எய்தாது
புண்ணியனார் போம் பொழுது நினைந்து மீண்டு புகுகின்றார் தலைக்கலன் என்று எடுத்துப் போற்றி
118/44
திருப்பழமண்ணிப்படிக்கரை பண் - நட்டராகம்
முன்னவன் எங்கள்பிரான் முதற்காண்பரி தாயபிரான்
சென்னியில் எங்கள்பிரான் திருநீலமி டற்றெம்பிரான்
மன்னிய எங்கள்பிரான் மறைநான்குங்கல் லால்நிழற்கீழ்ப்
பன்னிய எங்கள்பிரான் பழமண்ணிப் படிக்கரையே.
118/41
திருவாழ்கொளிபுத்தூர் பண் - தக்கேசி
தலைக்க லன்றலை மேல்தரித் தானைத்
தன்னைஎன் னைநினைக் கத்தரு வானைக்
கொலைக்கை யானைஉரி போர்த்துகந் தானைக்
கூற்றுதைத் தகுரை சேர்கழ லானை
அலைத்த செங்கண்விடை ஏறவல் லானை
ஆணை யால்அடி யேன்அடி நாயேன்
மலைத்தசெந் நெல்வயல் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
120/47
திருக்கானாட்டுமுள்ளூர் பண் - கொல்லிக்கௌவாணம்
கான் நாட்டு முள்ளூரைச் சாரும் போது கண் நுதலார் எதிர் காட்சி கொடுப்பக் கண்டு
தூ நாண் மென் மலர்க் கொன்றைச் சடையார் செய்ய துணைப் பாத மலர் கண்டு தொழுதேன் என்று
வான் ஆளும் திருப் பதிகம் வள்வாய் என்னும் வன் தமிழின் தொடைமாலை மலரச் சாத்தித்
தேன் ஆரும் மலர்ச் சோலை மருங்கு சூழ்ந்த திருஎதிர் கொள் பாடியினை எய்தச் செல்வார்
வள்வாய மதிமிளிரும் வளர்சடையி னானை
மறையவனை வாய்மொழியை வானவர்தங் கோனைப்
புள்வாயைக் கீண்டுலகம் விழுங்கியுமிழ்ந் தானைப்
பொன்னிறத்தின் முப்புரிநூல் நான்முகத்தி னானை
முள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்று
மொட்டலர்ந்து விரைநாறும் முருகுவிரி பொழில்சூழ்
கள்வாய கருங்குவளை கண்வளருங் கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.
எத்திசையும் தொழுது ஏத்த மத்த யானை எடுத்து எதிர் கொள் பாடியினை அடைவோம் என்னும்
சித்த நிலைத் திருப்பதிகம் பாடி வந்து செல்வம் மிகு செழும் கோயில் இறைஞ்சி நண்ணி
அத்தர் தமை அடி வணங்கி அங்கு வைகி அருள் பெற்றுத் திரு வேள்விக் குடியில் எய்தி
முத்தி தரும் பெருமானைத் துருத்தி கூட மூப்பதிலை எனும் பதிகம் மொழிந்து வாழ்ந்தார்
121/34
திருஎதிர்கொள்பாடி பண் - இந்தளம்
மத்த யானை ஏறி மன்னர் சூழவரு வீர்காள்
செத்த போதில் ஆரும் இல்லை சிந்தையுள் வைம்மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே.
121/31
திருவேள்விக்குடி பண் - நட்டராகம்
மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை இறப்பதில்லை
சேர்ப்பது காட்டகத் தூரினுமாகச்சிந் திக்கினல்லாற்
காப்பது வேள்விக் குடிதண்டுருத்தியெங் கோன்அரைமேல்
ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல்நாமிவர்க் காட்படோ மே.
132, 134 /211
திருமுதுகுன்றம் பண் - நட்டராகம்
முன் செய்த அருள் வழியே முருகு அலர் பூங்குழல் பரவை
தன் செய்ய வாயில் நகை தாராமே தாரும் என
மின் செய்த நூல் மார்பின் வேதியர் தாம் முது குன்றில்
பொன் செய்த மேனியினீர் எனப் பதிகம் போற்றிசைத்து
பொன்செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கசைத்தீர்
முன்செய்த மூவெயிலும் எரித்தீர்முது குன்றமர்ந்தீர்
மின்செய்த நுண்ணிடையாள் பரவையிவள் தன்முகப்பே
என்செய்த வாறடிகேள் அடியேனிட் டளங்கெடவே.
ஏத்தாதே இருந்து அறியேன் எனும் திருப்பாட்டு எவ்வுலகும்
காத்தாடும் அம்பலத்துக் கண்ணுளனாம் கண் நுதலைக்
கூத்தாதந்து அருள்வாய் இக் கோமளத்தின் முன் என்று
நீத்தாரும் தொடர் அரிய நெறி நின்றார் பரவுதலும்
ஏத்தா திருந்தறியேன் இமையோர்தனி நாயகனே
மூத்தாய் உலகுக்கெல்லாம் முதுகுன்ற மமர்ந்தவனே
பூத்தா ருங்குழலாள் பரவையிவள் தன்முகப்பே
கூத்தா தந்தருளாய் கொடியேனிட் டளங்கெடவே.
141/271
நமக்கடிகளாகிய - அடிகள் பண் - கொல்லி
பண்ணிறையும் வகை பாறு தாங்கி என எடுத்து அருளி
உண்ணிறையும் மனக் களிப்பால் உறு புளகம் மயிர் முகிழ்ப்ப
கண்ணிறையும் புனல் பொழியக் கரை இகந்த ஆனந்தம்
எண்ணிறைந்த படி தோன்ற ஏத்தி மகிழ்ந்து இன்புற்றார்
பாறுதாங்கிய காடரோபடுதலையரோமலைப் பாவையோர்
கூறுதாங்கிய குழகரோகுழைக்காதரோகுறுங் கோட்டிள
ஏறுதாங்கிய கொடியரோசுடுபொடியரோ இலங் கும்பிறை
ஆறுதாங்கிய சடையரோநமக்கடிகளாகிய அடிகளே.
145/93
திருக்கடவூர் மயானம் பண் - பழம்பஞ்சுரம்
அங்கண்ணரைப் பணிந்து ஏத்தி அருளினால் தொழுது போய்
மங்குல் அணி மணி மாடத் திருக் கடவூர் வந்து எய்தித்
திங்கள் வளர் முடியார் தம் திருமயானமும் பணிந்து
பொங்கும் இசைப் பதிகம் மருவார் கொன்றை எனப் போற்றி
மருவார் கொன்றை மதிசூடி மாணிக் கத்தின் மலைபோல
வருவார் விடைமேல் மாதோடு மகிழ்ந்து பூதப் படைசூழத்
திருமால் பிரமன் இந்திரற்குந்தேவர் நாகர் தானவர்க்கும்
பெருமான் கடவூர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
146/90
திருக்கடவூர்வீரட்டம் பண் - நட்டராகம்
திரு வீரட்டானத்துத் தேவர் பிரான் சினக் கூற்றின்
பொரு வீரந்தொலைத்த கழல் பணிந்து பொடியார் மேனி
மருஈரத் தமிழ் மாலை புனைந்து ஏத்தி மலை வளர்த்த
பெரு வீரர் வலம் புரத்துப் பெருகு ஆர்வத் தொடும் சென்றார்
பொடியார் மேனியனே புரிநூலொரு பாற்பொருந்த
வடியார் மூவிலைவேல் வளர்கங்கையின் மங்கையொடுங்
கடியார் கொன்றையனே கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என்னமுதே எனக்கார்துணை நீயலதே.
147/89
திருவலம்புரம் பண் - காந்தாரம்
வரையோடு நிகர் புரிசை வலம் புரத்தார் கழல் வணங்கி
உரை ஓசைப் பதிகம் எனக்கு இனி ஓதிப் போய்ச் சங்கம்
நிரையோடு துமித் தூப மணித் தீபம் நித்திலப் பூம்
திரை ஓதம் கொண்டு இறைஞ்சும் திருச்சாய்க்காடு எய்தினார்
எனக்கினித் தினைத்தனைப் புகலிடம் அறிந்தேன்
பனைக்கனிப் பழம்படும் பரவையின் கரைமேல்
எனக்கினி யவன்தமர்க் கினியவன் எழுமையும்
மனக்கினி யவன்றன திடம்வலம் புரமே.
150/19
திருநின்றியூர் பண் - தக்கேசி
நின்றியூர் மேயாரை நேயத்தால் புக்கு இறைஞ்சி
ஒன்றிய அன்பு உள் உருகப் பாடுவார் உடைய அரசு
என்றும் உலகு இடர் நீங்கப் பாடிய ஏழ் எழுநூறும்
அன்று சிறப்பித்து அம் சொல் திருப் பதிகம் அருள் செய்தார்
திருவும் வண்மையுந் திண்டிறல் அரசுஞ்
சிலந்தி யார்செய்த செய்பணி கண்டு
மருவு கோச்செங்க ணான்றனக் களித்த
வார்த்தை கேட்டுநுன் மலரடி அடைந்தேன்
பெருகு பொன்னிவந் துந்துபன் மணியைப்
பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் நண்ணித்
தெருவுந் தெற்றியும் முற்றமும் பற்றித்
திரட்டுந் தென்றிரு நின்றியூ ரானே.
அணிகொள் ஆடையம் பூண்அணி மாலை
அமுது செய்தமு தம்பெறு சண்டி
இணைகொள் ஏழெழு நூறிரு பனுவல்
ஈன்ற வன்றிரு நாவினுக் கரையன்
கணைகொள் கண்ணப்பன் என்றிவர் பெற்ற
காத லின்னருள் ஆதரித் தடைந்தேன்
திணைகொள் செந்தமிழ் பைங்கிளி தெரியுஞ்
செல்வத் தென்றிரு நின்றியூ ரானே.
152/24
திருநீடூர் பண் - தக்கேசி
மடல் ஆரும் புனல் நீடூர் மருவினர் தாள் வணங்காது
விடல் ஆமே எனும் காதல் விருப்பு உறும் அத்திருப்பதிகம்
அடல் ஆர் சூலப் படையார் தமைப் பாடி அடிவணங்கி
உடல் ஆரும் மயிர்ப் புளகம் மிகப் பணிந்து அங்கு உறைகின்றார்
ஊர்வ தோர்விடை ஒன்றுடை யானை
ஒண்ணு தல்தனிக் கண்ணுத லானைக்
கார தார்கறை மாமிடற் றானைக்
கருத லார்புரம் மூன்றெரித் தானை
நீரில் வாளை வரால்குதி கொள்ளும்
நிறைபு னற்கழ னிச்செல்வ நீடூர்ப்
பாரு ளார்பர வித்தொழ நின்ற
பரம னைப்பணி யாவிட லாமே.
154/14
திருக்கோலக்கா பண் - தக்கேசி
திருஞான சம்பந்தர் திருக்கைகளால் ஒற்றிப்
பெருகு ஆர்வத்துடன் பாட பிஞ்ஞகனார் கண்டு இரங்கி
அருளாலே திருத்தாளம் அளித்தபடி சிறப்பித்துப்
பொருள் மாலைத் திருப்பதிகம் பாடியே போற்றி இசைத்தார்
புற்றில் வாளர வார்த்த பிரானைப்
பூத நாதனைப் பாதமே தொழுவார்
பற்று வான்துணை எனக்கெளி வந்த
பாவ நாசனை மேவரி யானை
முற்ற லார்திரி புரமொரு மூன்றும்
பொன்ற வென்றிமால் வரைஅரி அம்பாக்
கொற்ற வில்லங்கை ஏந்திய கோனைக்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
நாளும் இன்னிசை யாற்றமிழ் பரப்பும்
ஞான சம்பந்த னுக்குல கவர்முன்
தாளம் ஈந்தவன் பாடலுக் கிரங்குந்
தன்மை யாளனை என்மனக் கருத்தை
ஆளும் பூதங்கள் பாடநின் றாடும்
அங்க ணன்றனை எண்கணம் இறைஞ்சுங்
கோளி லிப்பெருங் கோயிலுள் ளானைக்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
163/9
திருக்குருகாவூர் பண் - நட்டராகம்
சித்த நிலை திரியாத திரு நாவலுர் மன்னர்
அத்தகுதி யினில் பள்ளி உணர்ந்தவரை காணாமை
இத்தனையா மாற்றம் அறிந்திலேன் என எடுத்து
மெய்த் தகைய திருப்பதிகம் விளம்பியே சென்று அடைந்தார்
இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான்
பித்தரே என்றும்மைப் பேசுவார் பிறரெல்லாம்
முத்தினை மணிதன்னை மாணிக்கம் முளைத்தெழுந்த
வித்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
170/207
திருநாவலூர் பண் - நட்டராகம்
மேவிய அத் தொண்ட குழாம் மிடைந்து அர என்று எழும் ஓசை
மூவுலகும் போய் ஒலிப்ப முதல் வனார் முன்பு எய்தி
ஆவியினும் அடைவுடையார் அடிக் கமலத்து அருள் போற்றிக்
கோவலன் நான்முகன் எடுத்துப் பாடியே கும்பிட்டார்
கோவலன் நான்முகன் வானவர் கோனுங்குற் றேவல்செய்ய
மேவலர் முப்புரம் தீயெழு வித்தவன் ஓரம்பினால்
ஏவல னார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட
நாவல னார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே.
182/258
திருக்கச்சூர் ஆலக்கோயில் பண் - கொல்லிக்கௌவாணம்
முதுவாயோரி என்று எடுத்து முதல்வனார் தம் பெரும் கருணை
அதுவாம் என்றுஅதிசயம் வந்து எய்தக் கண்ணீர் மழை அருவி
புதுவார் புனலின் மயிர் புளகம் புதையப் பதிகம் போற்றி இசைத்து
மதுவார் இதழி முடியாரைப் பாடி மகிழ்ந்து வணங்கினார்
முதுவாய் ஓரி கதற முதுகாட்டெரிகொண் டாடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும்மலையான் மகள்தன் மணவாளா
கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்கண்டால் அடியார் கவலாரே
அதுவே ஆமா றிதுவோ கச்சூர்ஆலக் கோயில் அம்மானே.
190/233
திருக்கச்சிமேற்றளி பண் - நட்டராகம்
சீரார் காஞ்சி மன்னும் திருக் காமக் கோட்டம் சென்று இறைஞ்சி
நீரார் சடையார் அமர்ந்து அருளும் நீடு திரு மேற்றளி மேவி
ஆரா அன்பில் பணிந்து ஏத்தும் அளவில் நுந்தா ஒண்சுடராம்
பாரார் பெருமைத் திருப் பதிகம் பாடி மகிழ்ந்து பரவினார்
நொந்தா ஒண்சுடரே நுனையே நினைந்திருந்தேன்
வந்தாய் போயறியாய் மனமே புகுந்துநின்ற
சிந்தாய் எந்தைபிரான் திருமேற் றளியுறையும்
எந்தாய் உன்னையல்லால் இனியேத்த மாட்டேனே.
191/235
திருஓணகாந்தன்றளி பண் - இந்தளம்
ஓணகாந்தன் தளி மேவும் ஒருவர் தம்மை உரிமையுடன்
பேணி அமைந்த தோழமையால் பெருகும் அடிமைத் திறம் பேசிக்
காண மோடு பொன் வேண்டி நெய்யும் பாலும் கலை விளங்கும்
யாணர்ப் பதிகம் எடுத்து ஏத்தி எண்ணில் நிதி பெற்று இனிது இருந்தார்
நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு
நித்தல் பூசனை செய்ய லுற்றார்
கையி லொன்றுங் காண மில்லைக்
கழல டிதொழு துய்யி னல்லால்
ஐவர் கொண்டிங் காட்ட ஆடி
ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக்
குய்யு மாறொன் றருளிச் செய்யீர்
ஓண காந்தன் றளியு ளீரே.
192/238
திருக்கச்சிஅனேகதங்காவதம் பண் - ஆஇந்தளம்
அங்கண் அமர்வார் அனே கதங்கா பதத்தை எய்தி உள்ளணைந்து
செங்கண் விடையார் தமைப் பணிந்து தேன் நெய் புரிந்து என்று எடுத்ததமிழ்
தங்கும் இடமாம் எனப்பாடித் தாழ்ந்து பிறவும் தானங்கள்
பொங்கு காதலுடன் போற்றிப் புரிந்த பதியில் பொருந்தும் நாள்
தேனெய் புரிந்துழல் செஞ்சடை யெம்பெருமானதி டந்திகழ் ஐங்கணையக்
கோனை யெரித்தெரி யாடி ஆடங்குலவான திடங்குறை யாமறையாம்
மானை இடத்ததோர் கையனி டம்மதமாறு படப்பொழி யும்மலைபோல்
யானை யுரித்த பிரான திடங்கலிக்கச்சி அனேகதங் காவதமே.
194/241
திருவன்பார்த்தான்பனங்காட்டூர் பண் - சீகாமரம்
செல்வம் மல்கு திருப் பனங் காட்டூரில் செம் பொன் செழும் சுடரை
அல்லல் அறுக்கும் அரு மருந்தை வணங்கி அன்புபொழி கண்ணீர்
மல்க நின்று விடையின் மேல் வருவான் எனும் வண் தமிழப் பதிகம்
நல்ல இசையின் உடன் பாடிப் போந்து புறம்பு நண்ணுவார்
விடையின்மேல் வருவானை வேதத்தின் பொருளானை
அடையில்அன் புடையானையாவர்க்கும் அறியொண்ணா
மடையில்வா ளைகள்பாயும் வன்பார்த்தான் பனங்காட்டூர்ச்
சடையிற்கங்கை தரித்தானைச்சாராதார் சார்பென்னே.
197/ 248
திருக்காளத்தி பண் - நட்டராகம்
வணங்கி உள்ளம் களி கூர மகிழ்ந்து போற்றி மதுர இசை
அணங்கு செண்டாடு எனும் பதிகம் பாடி அன்பால் கண்ணப்பர்
மணம் கொள் மலர்ச் சேவடி பணிந்து வாழ்ந்து போந்து மன்னும் பதி
இணங்கும் தொண்டருடன் கெழுமி இன்புற்று இருக்கும் அந்நாளில்
செண்டா டும்விடையாய் சிவனேயென் செழுஞ்சுடரே
வண்டாருங் குழலா ளுமைபாகம் மகிழ்ந்தவனே
கண்டார் காதலிக்குங் கணநாதனெங் காளத்தியாய்
அண்டா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.
204/136
திருவொற்றியூர் பண் - குறிஞ்சி
ஏட்டு வரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்து அறியும்
நாட்ட மலரும் திரு நுதலார் நறும் பொன் கமலச் சேவடியில்
கூட்டும் உணர்வு கொண்டு எழுந்து கோதில் இசை கூடப்
பாட்டும் பாடி பரவி எனும் பதிகம் எடுத்துப் பாடினார்
பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்
காட்டுங் கலமுந் திமிலுங் கரைக்கே
ஓட்டுந் திரைவாய் ஒற்றி யூரே.
273/136
திருவாரூர் பண் - பழம்பஞ்சுரம்
மின்னொளிர் செஞ்சடையானை வேத முதல் ஆனானை
மன்னு புகழ்த் திருவாரூர் மகிழ்ந்தானை மிக நினைந்து
பன்னிய சொல் பத்திமையும் அடிமையையும் கைவிடுவான்
என்னும் இசைத் திருப்பதிகம் எடுத்து இயம்பி இரங்கினார்
பத்திமையும் அடிமையையுங் கைவிடுவான் பாவியேன்
பொத்தினநோ யதுவிதனைப்பொருளறிந்தேன் போய்த்தொழுவேன்
முத்தினைமா மணிதன்னை வயிரத்தை மூர்க்கனேன்
எத்தனைநாட் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.
276/249
திருவொற்றியூர் பண் - தக்கேசி
அழுக்கு மெய் கொடு என்று எடுத்த சொல் பதிகம் ஆதி நீள் புரி அண்ணலை ஓதி
வழுத்து நெஞ்சொடு தாழ்ந்து நின்று உரைப்பார் மாதோர் பாகனார் மலர்ப்பதம் உன்னி
இழுக்கு நீக்கிட வேண்டும் என்று இரந்தே எய்து வெம் துயர்க் கையற வினுக்கும்
பழிக்கும் வெள்கி நல் இசை கொடு பரவி பணிந்து சாலவும் பல பல நினைவார்
அழுக்கு மெய்கொடுன் றிருவடி அடைந்தேன்
அதுவும் நான்படப் பாலதொன் றானாற்
பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்
பிழைப்பன் ஆகிலுந் திருவடிப் பிழையேன்
வழுக்கி வீழினுந் திருப்பெய ரல்லால்
மற்று நான்அறி யேன்மறு மாற்றம்
ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
277/254
வடதிருமுல்லைவாயில் பண் - தக்கேசி
அங்கு நாதர் செய் அருளது ஆக அங்கை கூப்பி ஆரூர் தொழ நினைந்தே
பொங்கு காதல் மீளா நிலைமையினால் போதுவார் வழி காட்ட முன் போந்து
திங்கள் வேணியார் திரு முல்லைவாயில் சென்று இறைஞ்சி நீடிய திருப்பதிகம்
சங்கிலிக்காக என் கணை மறைத்தீர் என்று சாற்றிய தன்மையில் பாடி
திருவுமெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன்
சீருடைக் கழல்களென் றெண்ணி
ஒருவரை மதியா துறாமைகள் செய்து
மூடியும் உறைப்பனாய்த் திரிவேன்
முருகமர் சோலை சூழ்திரு முல்லை
வாயிலாய் வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.
280/246
திருவெண்பாக்கம் பண் - சீகாமரம்
பிழை உள்ளன பொறுத்திடுவர் என்று எடுத்துப் பெண் பாகம்
விழைவடிவில் பெருமானை வெண்பாக்கம் மகிழ்ந்தானை
இழை என மாசுணம் அணிந்த இறையானைப் பாடினார்
மழை தவழும் நெடும் புரிசை நாவலூர் மன்னவனார்
பிழையுளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்காற்
பழியதனைப் பாராதே படலமென்கண் மறைப்பித்தாய்
குழைவிரவு வடிகாதா கோயிலுளா யோயென்ன
உழையுடையான் உள்ளிருந்து உளோம்போகீர் என்றானே.
283/244
திருவாலங்காடு பண் - பழம்பஞ்சுரம்
முன் நின்று தொழுது ஏத்தி முத்தா என்று எடுத்து அருளிப்
பன்னும் இசைத் திருப்பதிகம் பாடி மகிழ்ந்து ஏத்துவார்
அந் நின்று வணங்கிப் போய்த் திருவூறல் அமர்ந்து இறைஞ்சிக்
கன்னி மதில் மணி மாடக் காஞ்சி மா நகர் அணைந்தார்
முத்தா முத்தி தரவல்ல முகிழ்மென் முலையா ளுமைபங்கா
சித்தா சித்தித் திறங்காட்டுஞ் சிவனே தேவர் சிங்கமே
பத்தா பத்தர் பலர்போற்றும் பரமா பழைய னூர்மேய
அத்தா ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே.
288/229
திருவேகம்பம் பண் - தக்கேசி
ஞாலந்தான் இடந்தவனும் நளிர் விசும்பு கடந்தவனும்
மூலந்தான் அறிய அரியார் கண் அளித்து முலைச்சுவட்டுக்
கோலந்தான் காட்டுதலும் குறுகி விழுந்து எழுந்து களித்து
ஆலந்தான் உகந்தவன் என்று எடுத்து ஆடிப் பாடினார்
ஆலந் தானுகந் தமுதுசெய் தானை
ஆதி யைஅம ரர்தொழு தேத்துஞ்
சீலந் தான்பெரி தும்முடை யானைச்
சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
291/147
திருவாரூர் பண் - புறநீர்மை
அந்தியும் நண் பகலும் என எடுத்து ஆர்வத்துடன் நசைவால்
எந்தை பிரான் திருவாரூர் என்று கொல் எய்துவது என்று
சந்த இசை பாடிப் போய்த் தாங்க அரிய ஆதரவு
வந்து அணைய அன்பர் உடன் மகிழ்ந்து வழி கொள்கின்றார்
அந்தியும் நண்பகலும் அஞ்சுப தஞ்சொல்லி
முந்தி எழும்பழைய வல்வினை மூடாமுன்
சிந்தை பராமரியாத் தென்றிரு வாரூர்புக்
கெந்தை பிரானாரை யென்றுகொல் எய்துவதே.
294/196
திருநெல்வாயில் அரத்துறை பண் - இந்தளம்
அந் நாட்டின் மருங்கு திரு அரத் துறையைச் சென்று எய்தி
மின்னாரும் படை மழுவார் விரை மலர்த்தாள் பணிந்து எழுந்து
சொன்மாலை மலர்க் கல் வாய் அகில் என்னும் தொடை சாத்தி
மன்னார்வத்து திருத்தொண்டர் உடன் மகிழ்ந்து வைகினார்
கல்வாய் அகிலுங் கதிர்மா மணியுங்
கலந்துந் திவருந் நிவவின் கரைமேல்
நெல்வா யில்அரத் துறைநீ டுறையும்
நிலவெண் மதிசூ டியநின் மலனே
நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்
நரைத்தார் இறந்தா ரென்றுநா னிலத்திற்
சொல்லாய்க் கழிகின் றதறிந் தடியேன்
தொடர்ந்தேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
296/82
திருவாவடுதுறை பண் - தக்கேசி
அங்கணைவார் தமை அடியார் எதிர் கொள்ளப் புக்கு அருளிப்
பொங்கு திருக் கோயிலினைப் புடைவலம் கொண்டுள்ளணைந்து
கங்கை வாழ் சடையாய் ஓர் கண்ணிலேன் எனக் கவல்வார்
இங்கு எனக்கு ஆர் உறவு என்னும் திருப்பதிகம் எடுத்து இசைத்தார்
கங்கை வார்சடை யாய்கண நாதா
கால காலனே காமனுக் கனலே
பொங்கு மாகடல் விடமிடற் றானே
பூத நாதனே புண்ணியா புனிதா
செங்கண் மால்விடை யாய்தெளி தேனே
தீர்த்த னேதிரு வாவடு துறையுள்
அங்க ணாஎனை அஞ்சலென் றருளாய்
ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
300/27
திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் பண் - காந்தாரம்
கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடைபுனைந்து
மண்டு பெரும் காதலினால் கோயிலினை வந்து அடைந்து
தொண்டர் எதிர் மின்னு மா மேகம் எனும் சொல் பதிகம்
எண்திசையும் அறிந்துய்ய ஏழிசையால் எடுத்து இசைத்தார்
மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி
வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும்
அன்னமாங் காவிரி அகன்கரை உறைவார்
அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார்
சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை
என்னுடம் படும்பிணி இடர்கெடுத் தானை.
303/152
திருவாரூர்ப்பரவையுண்மண்டளி பண் - பஞ்சமம்
பொங்கு திருத்தொண்டருடன் உள்ளணைந்து புக்கு இறைஞ்சி
துங்க இசைத் திருப்பதிகம் தூவாயா என்று எடுத்தே
இங்கு எமது துயர் களைந்து கண் காணக் காட்டாய் என்று
அம் கணர் தம் முன் நின்று பாடி அருந்தமிழ் புணைந்தார்
தூவாயா தொண்டுசெய் வார்படு துக்கங்கள்
காவாயே கண்டுகொண் டார்ஐவர் காக்கிலும்
நாவாயால் உன்னையே நல்லன சொல்லுவேற்
காவாவென் பரவையுண் மண்டளி யம்மானே.
305/131
திருவாரூர் பண் - கொல்லி
ஆதி திரு அன்பர் எதிர் அணைய அவர் முகம் நோக்கிக்
கோதில் இசையால் குருகுபாய எனக் கோத்து எடுத்தே
ஏதிலார் போல் வினவி ஏசறவால் திருப்பதிகம்
காதல் புரி கைக்கிளையால் பாடியே கலந்து அணைவார்
குருகுபா யக்கொழுங் கரும்புகள் நெரிந்தசா
றருகுபா யும்வயல் அந்தணா ரூரரைப்
பருகுமா றும்பணிந் தேத்துமா றுந்நினைந்
துருகுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.
309/149
திருவாரூர் பண் - செந்துருத்தி
மீளா அடிமை என எடுத்து மிக்க தேவர் குலம் எல்லாம்
மாளமே நஞ்சு உண்டு அருளி மன்னி இருந்த பெருமானைத்
தாளா தரிக்கும் மெய் அடியார் தமக்கு ஆம் இடர் நீர் தரியீர் என்று
ஆளாம் திருத் தோழமைத் திறத்தால் அஞ்சொல் பதிகம் பாடினார்
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்றுமுகத்தால் மிகவாடி
ஆளா யிருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே.
406/21
திருப்புன்கூர் பண் - தக்கேசி
இருவரும் எழுந்து புல்லி இடைவிடா நண்பினாலே
பொருவரும் மகிழ்ச்சி பொங்கத் திருபுன் கூர் புனிதர் பாதம்
மருவினர் போற்றி நின்று வன் தொண்டர் தம்பிரானார்
அருளினை நினைந்தே அந்தணாளன் என்று எடுத்து பாடி
அந்த ணாளன்உன் அடைக்கலம் புகுத
அவனைக் காப்பது காரண மாக
வந்த காலன்றன் ஆருயி ரதனை
வவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன்
எந்தை நீயெனை நமன்றமர் நலியின்
இவன்மற் றென்னடி யானென விலக்குஞ்
சிந்தை யால்வந்துன் றிருவடி அடைந்தேன்
செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.
{ பெரியபுராணத்தில் கழறிற்றறிவார் நாயனார் புராணம் பாடல் எண் / சுந்தரர் தேவாரம் பக்க எண்}
63/124
திருநாகைக்காரோணம் பண் - கொல்லிக்கௌவாணம்
நம்பி தாமும் அந் நாள் போய் நாகைக் காரோணம் பாடி
அம் பொன் மணிப்பூண் நவமணிகள் ஆடை சாந்தம் அடல் பரிமா
பைம் பொன் சுரிகை முதலான பெற்று மற்றும் பல பதியில்
தம்பிரானைப் பணிந்து ஏத்தித் திருவாரூரில் சார்ந்து இருந்தார்
பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்
பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்
செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்
செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநாளிரங்கீர்
முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை
அவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறுங்
கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
87/164
திருமறைக்காடு பண் - காந்தாரம்
நிறைந்த மறைகள் அர்ச்சித்த நீடு மறைக்காட்டு அருமணியை
இறைஞ்சி வீழ்ந்து பணிந்து எழுந்து போற்றி யாழைப் பழித்து என்னும்
அறைந்த பதிகத் தமிழ் மாலை நம்பி சாத்த அருள் சேரர்
சிறந்த அந்தாதியில் சிறப்பித்து அனவே ஓதித் திளைத்து எழுந்தார்
யாழைப்பழித் தன்னமொழி மங்கையொரு பங்கன்
பேழைச்சடை முடிமேற்பிறை வைத்தான் இடம் பேணில்
தாழைப்பொழி லூடேசென்று பூழைத்தலை நுழைந்து
வாழைக்கனி கூழைக்குரங் குண்ணும்மறைக் காடே.
89/167
திருக்கோடிக்குழகர் பண் - கொல்லி
கோடிக் குழகர் கோயில் அயல் குடிகள் ஒன்றும் புறத்து எங்கும்
நாடிக் காணாது உள்புக்கு நம்பர் பாதம் தொழுது உள்ளம்
வாடிக் கடிதாய்க் கடல் காற்று என்று எடுத்து மலர்க் கண்ணீர் வாரப்
பாடிக் காடு காள் புணர்ந்த பரிசும் பதிகத்து இடை வைத்தார்
கடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேற்
குடிதான் அயலே இருந் தாற்குற்ற மாமோ
கொடியேன் கண்கள்கண் டனகோடிக் குழகீர்
அடிகேள் உமக்கார் துணையாக ஆருந்தீரே.
98/179
திருப்பூவணம் பண் - ஆஇந்தளம்
நீடு திருப் பூவணத்துக் கணித்தாக நேர் செல்ல
மாடு வரும் திருத்தொண்டர் மன்னிய அப் பதிகாட்டத்
தேடு மறைக்கு அரியாரைத் திருவுடையார் என்று எடுத்துப்
பாடி இசையில் பூவணம் மீதோ என்று பணிந்து அணைவார்
திருவுடை யார்திரு மாலய னாலும்
உருவுடை யார்உமை யாளையோர் பாகம்
பரிவுடை யார்அடை வார்வினை தீர்க்கும்
புரிவுடை யார்உறை பூவணம் ஈதோ.
103/171
திருப்பரங்குன்றம் பண் - இந்தளம்
கோத்திட்டை என்று எடுத்துக் கோதில் திருப்பதிக இசை
மூர்த்தியார் தமை வணங்கி முக்கோக்கள் உடன் முன்பே
ஏத்திய வண் தமிழ் மாலை இன் இசைப் பாடிப் பரவி
சாத்தினார் சங்கரனார் தங்கு திருப்பரங்குன்றில்
கோத்திட்டையுங் கோவலுங் கோயில்கொண் டீருமைக்
கொண்டுழல் கின்றதோர் கொல்லைச் சில்லைச்
சேத்திட்டுக் குத்தித் தெருவே திரியுஞ்
சில்பூத மும்நீ ருந்திசை திசையன
சோத்திட்டு விண்ணோர் பலருந் தொழநும்
அரைக்கோ வணத்தோ டொருதோல் புடைசூழ்ந்
தார்த்திட்ட தும்பாம்பு கைக்கொண்ட தும்பாம்
படிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமென்
றமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி
முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே
மொழிந்தாறு மோர்நான்கு மோரொன் றினையும்
படியா இவைகற் றுவல்ல அடியார்
பரங்குன்ற மேய பரமன் அடிக்கே
குடியாகி வானோர்க்கு மோர்கோவு மாகிக்
குலவேந்த ராய்விண் முழுதாள் பவரே.
111/180
திருச்சுழியல் பண் - நட்டபாடை
திருச்சுழியல் இடம் கொண்ட செம்பொன் மலைச் சிலையாரைக்
கருச்சுழியில் வீழாமைக் காப்பாரைக் கடல் விடத்தின்
இருள் சுழியும் மிடற்றாரை இறைஞ்சி எதிர் இதழி மலர்ப்
பருச் சுழியத்துடன் ஊனாய் உயிர் எனும் பா மலர் புனைந்தார்
ஊனாய்உயிர் புகலாய்அக லிடமாய் முகில்பொழியும்
வானாய்வரு மதியாய்விதி வருவானிடம் பொழிலின்
தேனாதரித் திசைவண்டினம் மிழற்றுந்திருச் சுழியல்
நானாவிதம் நினைவார்தமை நலியார்நமன் தமரே.
114/176
திருக்கானப்பேர் பண் - புறநீர்மை
கண்டு அருளும் படி கழறிற்றறிவார்க்கு மொழிந்து அருளிப்
புண்டரிகப் புனல் சுழியல் புனிதர் கழல் வணங்கிப் போய்
அண்டர் பிரான் திருக்கானப்பேர் அணைவார் ஆரூரர்
தொண்டர் அடித் தொழலும் எனும் சொல் பதிகத் தொடை புனைவார்
தொண்ட ரடித்தொழலுஞ் சோதி ஆளம்பிறையுஞ்
சூதன மென்முலையாள் பாகமு மாகிவரும்
புண்டரி கப்பரிசாம் மேனியும் வானவர்கள்
பூச லிடக்கடல்நஞ் சுண்ட கருத்தமருங்
கொண்ட லெனத்திகழுங் கண்டமும் எண்டோ ளுங்
கோல நறுஞ்சடைமேல் வண்ணமுங் கண்குளிரக்
கண்டு தொழப்பெறுவ தென்றுகொ லோஅடியேன்
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.
118/174
திருப்புனவாயில் பண் - பழம்பஞ்சுரம்
புனல் வாயில் பதி அமர்ந்த புனிதர் ஆலயம் புக்கு
மனம் ஆர்வம் உறச் சித்த நீ நினை என்னொடு என்றே
வின வான தமிழ் பாடி வீழ்ந்து இறைஞ்சி அப்பதியில்
சினயானை உரித்து அணிந்தார் திருப்பாதம் தொழுது இருந்தார்
சித்தம் நீநினை என்னொடு சூளறும் வைகலும்
மத்த யானையின் ஈருரி போர்த்த மணாளனூர்
பத்தர் தாம்பலர் பாடிநின் றாடும் பழம்பதி
பொத்தில் ஆந்தைகள் பாட்ட றாப்புன வாயிலே.
134/54
திருவையாறு பண் - காந்தாரபஞ்சமம்
பரவும் பரிசு ஒன்று எடுத்து அருளிப் பாடும் திருப்பாட்டின் முடிவில்
அரவம் புனைவார் தமை ஐயாறு உடைய அடிகளோ என்று
விரவும் வேட்கை உடன் அழைத்து விளங்கும் பெருமைத் திருப்பதிகம்
நிரவும் இசையில் வன்தொண்டர் நின்று தொழுது பாடுதலும்
பரவும் பரிசொன் றறியேன்நான்
பண்டே உம்மைப் பயிலாதேன்
இரவும் பகலும் நினைந்தாலும்
எய்த நினைய மாட்டேன்நான்
கரவில் அருவி கமுகுண்ணத்
தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலை
அரவந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகளோ.
146/274
முடிப்பதுகங்கை பண் - கொல்லிக்கௌவாணம்
இறைவர் கோயில் மணி முன்றில் வலம் கொண்டு இறைஞ்சி எதிர்புக்கு
நிறையும் காதல் உடன் வீழ்ந்து பணிந்து நேர் நின்று ஆரூரர்
முறையில் விளம்பும் திருப்பதிகம் முடிப்பது கங்கை என்று எடுத்துப்
பிறை கொள் முடியார் தமைப்பாடி பரவிப் பெருமாளுடன் தொழுதார்
முடிப்பது கங்கையுந் திங்களுஞ் செற்றது மூவெயில்
நொடிப்பது மாத்திரை நீறெ ழக்கணை நூறினார்
கடிப்பது மேறுமென் றஞ்சு வன்றிருக் கைகளாற்
பிடிப்பது பாம்பன்றி ஆல்லை யோவெம் பிரானுக்கே.
156/140
திருவாரூர் பண் - தக்கேசி
நாவலர் தம் பெருமானும் திருவாரூர் நகர் ஆளும்
தேவர் பிரான் கழல் ஒரு நாள் மிக நினைந்த சிந்தையராய்
ஆவியை ஆரூரானை மறக்கலுமாமே என்னும்
மேவிய சொல் திருப்பதிகம் பாடியே வெருவுற்றார்
பொன்னும் மெய்ப்பொரு ளுந்தரு வானைப்
போக முந்திரு வும்புணர்ப் பானைப்
பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்
பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை
இன்ன தன்மையன் என்றறி வொண்ணா
எம்மா னைஎளி வந்தபி ரானை
அன்னம் வைகும் வயற்பழ னத்தணி
ஆரூ ரானை மறக்கலு மாமே.
170/187
திருமுருகன்பூண்டி பண் - பழம்பஞ்சுரம்
உருகிய அன்பொடு கைகள் குவித்து விழுந்து உமைபாகம்
மருவிய தம் பெருமான் முன் வன்தொண்டர் பாடினார்
வெருவுறவேடுவர் பறிக்கும் வெஞ்சுரத்தில் எத்துக்கு இங்கு
அருகு இருந்தீர் எனக்கு கொடுகு வெஞ்சிலை அஞ்சொற்பதிகம்
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவ லாமை சொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்டாற லைக்கு மிடம்
முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன் பூண்டி மாநகர் வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும்எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
{ பெரியபுராணத்தில் வெள்ளானைச் சருக்கம் பாடல் எண் / சுந்தரர் தேவாரம் பக்க எண்}
11/135
திருப்புக்கொளியூர் அவிநாசி பண் - குறிஞ்சி
உரைப்பார் உரை என்று எடுத்த திருப்பாட்டு முடியாமுன் உயர்ந்த
வரைப் பான்மையில் நீள் தடம்புயத்து மறலி மைந்தன் உயிர் கொணர்ந்து
திரைப்பாய் புனலின் முதலைவாயில் உடலில்சென்ற ஆண்டுகளும்
தரைப்பால் வளர்ந்தது என நிரம்ப முதலை வாயில் தருவித்தான்
எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெரு மானையே
உற்றாயென் றுன்னையே உள்குகின் றேனுணர்ந் துள்ளத்தாற்
புற்றா டரவா புக்கொளி யூரவி நாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதி யேபர மேட்டியே.
உரைப்பார் உரையுகந் துள்கவல் லார்தங்கள் உச்சியாய்
அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளி யூரவி நாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.
29/182
திருஅஞ்சைக்களம் பண் - ஆஇந்தளம்
கரிய கண்டர் தம் கோயிலை வலம் கொண்டு காதலால் பெருகு அன்பு
புரியும் உள்ளத்தர் உள்ளணைந்து இறைவர் தம் பூம் கழல் இணை போற்றி
அரிய செய்கையில் அவனியில் விழுந்து எழுந்து அலைப்புறும் மனை வாழ்க்கை
சரியவே தலைக்குத் தலை மாலை என்று எடுத்தனர் தமிழ் மாலை
தலைக்குத் தலைமாலை அணிந்த தென்னே
சடைமேற்கங் கைவெள்ளந் தரித்த தென்னே
அலைக்கும் புலித்தோல்கொண் டசைத்த தென்னே
அதன்மேற் கதநாகக் கச்சார்த்த தென்னே
மலைக்குந் நிகரொப் பனவன் றிரைகள்
வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்
டலைக்குங் கடலங் கரைமேல் மகோதை
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
39/266
திருநொடித்தான்மலை பண் - பஞ்சமம்
யானை மேல் கொண்டு செல்கின்ற பொழுதினில் இமையவர் குழாம் என்னும்
தானை முன் செலத் தானெனை முன் படைத்தான் எனும் தமிழ் மாலை
மானவன் தொண்டர் பாடி முன் அணைந்தனரர் மதி நதி பொதி வேணித்
தேன் அலம்பு தண் கொன்றையார் திருமலைத் தென்திசைத் திருவாயில்
தானெனை முன்படைத் தானதறிந்துதன் பொன்னடிக்கே
நானென பாடலந் தோநாயி னேனைப் பொருட்படுத்து
வானெனை வந்தெதிர் கொள்ளமத்தயானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய் தான்நொடித் தான்மலை உத்தமனே.
நன்றி: ஆண்ட அரசு உழவாரப்பணிக்குழு, பெங்களூர்.